Wednesday, October 20, 2021

மந்திரம்

இரு மொழிகளிலும் சிறந்த புலமை பெற்ற சிவாச்சாரியார்களையும், பட்டர்களையும் விண்ணவ ஆச்சாரியார்களையும் உள்ளடக்கிய தென் இந்திய அருச்சகர் சங்கம் வெளியிட்ட சிவாகம விளக்கவுரை நூலிலிருந்து எடுக்கப் பட்டதாக ஒரு மடற்குழுவில் மந்திரமென்ற சொல்லுக்கு 

-------------------------------

சமசுகிரதத்தில் ‘மந்திரம்’ என்னும் சொல் மநநம் + த்திராணம் எனும் இரு சொற்களின் புணர்ச்சியால் ஏற்பட்டதாகும். இச்சொல் வாசகம் வாச்யமென்று இரண்டாக விரியும். அதாவது தான் நினைத்த பொருளைப் பிறர்க்குத் தெரிவித்தலும், பிறர் தெரிவித்ததைத் தாம் உள்ளுணர்தலுமாகும்

------------------------------

என்று விளக்கம் சொல்லப்பட்டது. படித்து வியந்துபோனேன். என் குறைப்பட்ட மொழியியலறிவில் நான் புரிந்து கொண்டபடி, மநநம்+த்ராணம் என்பது ஒரு நாளும் மந்திரமாகாது. புணர்ச்சியில் அது மநந்த்ராணம் என்றே திரியும். கண்ட மேனிக்குச் சங்கத இலக்கணம் வேலை செய்யாது. இது போன்ற “பௌராணிக விளக்கங்களை” வைத்துப் பொருள் கொள்வோருக்கு என்ன சொல்ல முடியும்?. மோனியர் வில்லியம்சைப் பாருங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும். பௌராணிகர்களைப் பார்த்தால் தடுமாறத் தான் வேண்டும். மந்திரத்தின் தாதுவாக ”மந்” என்பதையே மோனியர் வில்லியம்சு அகரமுதலி சொல்லும். அத் தாது, ஆத்மனே பாதத்தில் சொல்லப்பட்டதில், 8.4 ஆம் வகையைச் சேர்ந்ததாம். பாணினியின் தாதுபாடப் படி, அது xxx, 9; xxv, 670 என வகைப்படுத்தப் படும். 

இதன் அடிப்பொருள் to think, believe, imagine, suppose, conjecture என்பதே. இதன் அடி வழி வந்த சங்கதச் சொற்கள் பல. மந, மநந, மநஸ், மநு, மநுஷ், மநோ, மந்த்து, மந்த்ர, மந்த்ரி போன்றவையும் பிறவும் ஆகும். இவையெல்லாம் ஒழுங்கான சங்கத இலக்கண வழி வந்த சொற்கள். ”சூ, மந்திரக்காளி, ஓடிவா, ஓடிவா” என்ற படி, மநந்த்ராணம் என்ற சொல் திரிந்து மந்த்ரம் ஆகி விடாது. மந்த்ர என்பதற்கு instrument of thought, speech, sacred text or speech, a prayer or song of praise என்று பொருள் சொல்வர். இதன் படி “சிவசிவ, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணா, ஓம் மணிபத்மே ஹூம், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்.......” போன்வையும் இன்னும் பலவும் மந்திரங்களே. அவற்றைச் சொல்வதில் ஒரு விதமான எழுச்சி, நிறைவு, அமைதி போன்றவை ஒருவருக்குக் கிடைக்குமானால் அம் மந்திரங்களுக்குப் பயனுண்டு தான். இவை மனம் தொடர்பானவை. 

மந் எனும் தாதுவுக்கும் முந்தையதாய் முல்*>முன்>மன் எனும் வேரைத் (முன்னு-தல் வினையைத்) தமிழ்ச் சொற்பிறப்பியல் சொல்லும். (”வேறு பல முன்னிய விரகறி பொருந - பொருநராற்றுப் படை 3) கன்னடத்திலும் இது முந்நு என அமையும். ஞாவகம் கொள்ளுங்கள். மொழியீற்றில் னகரம் என்பது நகரத்தின் போலி. சொல் முடிவில் வெரிந் என்ற சொல் தவிர்த்து மற்ற சொற்களில் னகரமே ஈற்றாகும். பொதுவாக முன்னுதல் என்பது பொருந்தல் பொருளையே உணர்த்தும். மு- வும் நு வும் பல சொற்தொடக்கங்களில் அமையும் போலிகள்.’ மன்>மன்னு, மனம், மனசு, மனனம், மன்>மான்>மாந்து, மாந்தன், மந்திரம், மந்திரி என்ற சொற்களைத் தமிழென்றுஞ் சொல்லலாம். மன்னுந் திரம்(>திறம்) தமிழில் மந்திரமாகும். இதற்குச் சங்கதத்தைத் துணைக்கு அழைக்கத் தேவையில்லை. 

அன்றாடம் நாம் காணும் காட்சிகளை, பட்டறிந்தவைகளை, ஏதோ சிலவற்றோடு நாம் பொருத்துகிறோம். அப்பொருத்தல்களே நம் மூளையில் பதிகின்றன. பின் நினைவாகின்றன. முன்> நுன்> நின்> நினை என்பதும் முன்னுதலின் இன்னொரு வடிவு தான். இதே போல் முன்> உன்> உன்னு என்பதும் இன்னொரு வடிவு. உல்> உள்> உள்ளம் என்பதும் மனத்தின் இன்னொரு சொல். உள்> உர்> ஒர்> ஓர்> ஓர்தல்= பொருந்தல். கருதல், கண்ணுதல் என்ற சொற்களும் பொருந்தல் தொடர்புள்ளவை செ> செத்து> சித்து> சிந்து> சிந்தனை என்பதும் கருதல் தொடர்பானது. முன், நினை, உன், உள், ஓர், கண், கருது, சித்து என்பவற்றின் அடியிலும் பல நூறு தமிழ்ச் சொற்கள் உள்ளன. எல்லாவற்றையும் சங்கதப்படுத்திப் பார்ப்பது நம்மை அடிமைத்தனத்திற்கே  இட்டுச் செல்லும். வழக்கம் போல் ஒரு சிலர் எது முந்தி என்பதில் குடுமிப் பிடிச் சண்டையும் போடலாம். அது வேறு கதை. 

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப 

என்று வரையறை தருவார் தொல்காப்பியர் (செய்யுளியல் 178). இதை விடச் சிறப்பான வேறு வரையறையை மந்திரத்திற்கு நான் கண்டேனில்லை. மேலே சொன்ன “சிவ சிவ, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணா, ஓம் மணி பத்மே ஹூம், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு .......” என்பன வெல்லாமும் நிறைமொழி மாந்தரின் ஆணையில் கிளைந்தவையே. மந்திரம் என்பது வாய்மொழி எனவுஞ் சொல்லப்படும். திருமூலர் அருளிய திருமந்திரமும், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியுங் கூட மந்திர வகையைச் சேர்ந்தவை தான். வாய்மொழி என்பதை சிவவாக்கியர் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் ஒரு பாட்டில் சொல்வார்:

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து முணமுணன்று சொல்லு மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதனுள்ளி ருக்கையில்

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?   

முள்ளுதல்> மொள்ளுதல் என்பது வாய்க்குள் நாவை உருட்டி ஒலி எழுப்புவது. மொள்> மொழு> மொழி என்பதும் அதே பொருள் தான். முள்> முழங்கு = சத்தமாய் ஒலியெழுப்புவது. முள்>  முழு>  முணு> முணுமுணுப்பு = காதில் கேட்காத அளவிற்கு மென்குரலில் சொல்வது., பலரும் மந்திரம் சொல்லும் போது சத்தமிட்டுச் சொல்ல மாட்டார். முணுமுணுத்தே சொல்வார். மந்திரம் என்றால் என்னவென்று புரியச் சிவவாக்கியரின் மேலுள்ள வாக்கும் தேவைதான்.  .   

அன்புடன்,

இராம.கி.


    


No comments: