Sunday, November 30, 2008

ஒட்டியாணம் - 4

”யா! ஒருவேர்ச்சொல் விளக்கம்” என்ற தலைப்பில், தமிழ்ச்சொற்களின் பிறப்பு பற்றி அறிய விழையும் பலரும் படிக்க வேண்டியதொரு பொத்தகமே எழுதினார் சொல்லாய்வறிஞர் அருளி. யா - என்னும் வேர்ச்சொல்லுக்கு கருமைப் பொருளும், பொருந்தற் பொருளும், வினாப் பொருளும் சொல்லி அந்தப் பொருட்பாடுகளை உணர்த்தும் பல்வேறு சொற்பிறப்புகளையும் அதில் தருக்கித்து நிறுவியிருப்பார். கூடவே பல சொற்களில் யா>ஞா>நா என்ற ஒலித்திரிவு
நடந்திருப்பதையும் பெருஞ்சான்றுகளோடு அவர் எடுத்துக் காட்டியிருப்பார். அந்தப் பொத்தகத்தின் வீச்சு மிக அருமையானது; தெளிவு தரக்கூடியது.

அவர் கூற்றுப்படி, இய் என்னும் அடிவேரில் இருந்து யா என்னும் பெரு வேர் பொருந்தற் கருத்தில் உருவாகுமாம். இயைதல்>இசைதல், இயைதல்>இழைதல், யாத்தல், யாக்கை, யாழ், ஆப்பு, ஆவம், ஆவித்தல், ஆவல்,
ஆவணம், ஆசு, ஆசை, நார், நரம்பு, ஆத்தி, ஆணி, யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம், ஆணை, ஆம், யாண் (=கவின், அழகு), யாணர், யானம் (=ஊர்தி), ஆடை, ஆம்பல், ஆமை போன்ற சொற்களையும், இவற்றோடு
சேர்ந்த மற்ற சொற்களையும் அந்தப் பொத்தகத்தில் அருளி விவரித்திருப்பார். இங்கு நாம் காண விழைவது பொருந்தற் கருத்து மட்டுமே என்பதால், அவர் பொத்தகத்தில் இருந்து ஆணி, யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம் என்ற
சொற்களின் பிறப்புக்களை மட்டுமே இங்கு விவரிக்க முற்படுகிறேன். [பெரும்பாலும் அவருடைய வாசகங்களையே இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். சில இடங்களில் என்னுடைய வாசகங்களும் இடையிடையே உண்டு.]

யா - த்தல் என்னும் வினை பொருத்துதல், சேர்த்தல், கட்டுதல், தைத்தல் என்று பலவாறாய் விரிந்த பொருட்பாடுகளைக் காட்டும். தமிழ் இலக்கணத்தில் யாப்பு என்று சொல்கிறோமே, அதுகூட ஒரு கட்டுத் தான். சொற்கட்டு; அடிக்கட்டு; பாக் கட்டு எனப் பல்வேறு அணிகளை அது காட்டும். இனி விளக்கங்களுக்கு வருவோம்.

யாத்தல் என்னும் வினையின் கீழ்ப் பிறக்கும் சொல் யாணி>ஆணி. இது யா>யாஅண்> யாண்> யாண்+இ> யாணி> ஆணி என்று உருவாகும். இரு பொருள்களை இறுகப் பிணைப்பதற்காக அடிக்கப் பெறும் தைப்புப் பொருள் ஆணியாகும். ஆணி தைத்தல் என்னும் வழக்கு, இரு பொருள்களை ஒன்றுடனொன்று பொருத்துதற்கான
ஆணியடித்தலைக் குறிப்பதாகும். மரப்பலகைகளை ஒன்றோடு ஒன்றாகப் பொருந்தச் செய்வதற்குப் பயன்பெற்ற செறிப்புறுப்பு (யாண்>) யாணி என்னப் பெற்று, பின் ஆணி என்றவாறு செப்ப வடிவுற்றது. மரப்பலகைகளை ஒன்றோடொன்றாகப் பிணித்துக் கட்டில் முதலியவற்றை உருவாக்கும் தச்சர் “யாணர்” என்று அழைக்கப்
பெற்றமையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.

ஆணியின் பிறப்பைத் தெரிவித்து, பின் அதன் வழிப்பொருள்களான இரும்பாணி, சுள்ளாணி, கடையாணி, யாழின் உறுப்பாகிய மரவாணி, எழுத்தாணி, பொன்னின் மாற்று அறியக் கட்டளைக் கல்லில் உரைத்துப் பார்க்கப் பயன்பெறும் உரையாணி, தீயைத் தூண்டப் பயன்படும் சூட்டுக்கோல் ஆணி, நுகத்தின் நடுவில் அமையும் பகலாணி, துலையாணி, முறுக்காணி, உரலாணி (=உலக்கை), திருகாணி, வரிச்சாணி, வரிச்சலாணி, வலிச்சலாணி, கட்டாணி, வேம்பாணி, கையாணி, குடையாணி, சடையாணி, குமிழாணி, கூராணி எனப் பல ஆணிகளை திரு. அருளி விவரித்திருப்பார். கூடவே
ஆணி என்ற பயன்பாடு சங்கதம், பாலி, ஒரியா, மராத்தியில் அப்படியே இருப்பதையும், ஆனி என்று வங்காளியில் புழங்குவதையும், அவர் காட்டியிருப்பார்.

அவர் காட்டும் அடுத்த சொல் யா> யாஅண்> யாண்> ஞாண் ஆகும். இது கட்டுக்கயிறு என்னும் பொருளில் “திண்ஞாண் எழினி வாங்கிய” [முல்லை: 63] என்ற பயன்பாட்டிலும், வில்லின் நாண் என்ற பொருளில் “சாப நோன் ஞாண்” [புறம் 1:49] என்ற பயன்பாட்டிலும் வருவதை எடுத்துக் காட்டுவார். இனி, அரைஞாண் என்பது அரையில் கட்டுங் கயிறு, அரையணி [பிங்] என்று புழங்குவதைக் கூறி அரைஞாண் கயிறு என்னுங் கூட்டுச் சொல் “அண்ணாக் கயிறு” என்னும் வடிவில், கடுங்கொச்சைத் தொகுத்தல் திரிபாக இக்காலப் பேச்சு வழக்கில் பயிலப் பெறுவதையும் சுட்டுவார்.

{அரைஞாண் என்பதும் உடைஞாண்/ஒட்டியாண் என்பதும் மிக நெருங்கிய பொருட்பாடு கொண்ட சொற்கள். ஒன்று கயிறு, இன்னொன்று அணிகலன். அவ்வளவுதான் வேறுபாடு. -இராம.கி}

ஞாண்>நாண் என்னும் திரிவில் கயிறு என்னும் பொருளில் “மரப்பாவை நாணால் உயிர் மருட்டிற்று” - குறள் 1020” என்று வருவதையும், வில்லின் நாண் என்னும் பொருளில் “வஞ்சிலை வல்விற் புரிநாண் புடையின் - கலி: 15:2 என்று
வருவதையும் நோக்கலாம். தவிர, அரைஞாண் பொருளில் “நாணும் அரைத்தொடரும்” என்ற வகையில் திவ்யப் பெரியாழ்வார் 1,2,4 - -இலும், மங்கலக் கயிறு என்னும் பொருளில் “ உன் கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாணாம் என்றான்” - கம்பர். நகர் நீங்கு:49 - இலும், நாண்>நாணி என்ற திரிவில வில்லின் நாண் என்னும் பொருளில் ”நாணியிற் கோலொன்றினால் - தேவா: 616:4” - இலும் வருகின்றன. தமிழிய மொழிகள் சிலவற்றில் ஞாண் (மலையாளம்), நூணி (=கயிறு; பெட்ட குருள), நொண் (தோடா), நேணு (கன்னடம்), நேண, நேணு (துளு),
நோனே (கோண்டி), நானு (a sort of necklace, தெலுங்கு), நோணொ (குவி) என்று இந்தச் சொல் அமைந்திருக்கிறது.

ஞாணுக்கு அடுத்த சொல் ஞாண்+அல்>ஞாணல்>நாணல் என்று அமையும் சொல். இது கட்டுக்கயிறு போன்ற தோற்றமுடைய புல், நாணற் புல், நாணற் கோரை என்ற பயன்பாடுகளையும், நாணல் (மலையாளம், கன்னடம்), நாஞ்சி (=Bambusa arundinacea, கோண்டி) என்ற பயன்பாடுகள் மற்ற தமிழிய மொழிகளில இருப்பதையும் நோக்கலாம். [நாணலைப் பற்றியும், அதை வைத்துத் தெப்பம் படகு கட்டியதையும் பின்னால் எழுத வேண்டும். அது ஒரு பெரிய ஆய்வு. எகிப்திய, சுமேரிய, சிந்து வெளி நாகரிகங்கள் ஆகிய எல்லாமே இந்த நாணற் படகில் இருந்தே தங்கள் நீர்வழிப் போக்குவரத்துகளைத் தொடங்கியிருக்கிறார்கள். நார்வேக்காரரான தோர் அயர்தால் இது பற்றிய விவரிப்பு நூல்களை
எழுதியிருக்கிறார்.]

அடுத்த சொற்கள் சாணம், சாணான், சணல் போன்றவையாகும்.

யாண்> யாண்+அம்> யாணம்> சாணம் [யகர - சகரத் திரிபு]; சாணம் = நாரால் ஆகிய
பொருள் [நன்னூல்: 266, மயிலைநாதர்], கட்டுக் கயிறு
சாணம் = சணற் கயிறு “ இறுக்கிய சாணமும் கட்டின கச்சும்” [ திவ்யப். திருநெடுந்: 21 வியாக்: பக்:170]
யாண்+அன்>யாணன்>சாணன் = கயிறு அல்லது நாரினைக் கொண்டு மரமேறிக கள்ளிறக்குநன்.
சாணன்>சாணான் [உயிரிசைவு மாற்றம்]

[குறிப்பு: தமிழகத் தொழிற் குலங்களுக்கிடையில் உயர்வு - தாழ்வு கற்பித்துக் கொண்டு இயங்கிய இடைக்கால மடத்தனப் போக்குக்கு எதிராகத் தம் தொழிற்குலப் பெயருக்கு ஏற்றம் தந்து கொள்ளும் முயற்சியாகவே அத்தொழில்
வகுப்பினர் “சான்றான் = (பண்பு நலங்கள் நிறைந்தோன்)” என்றவாறு ஒரு போன்மை ஒலிப்பீட்டினைக் கொண்டு தம்மைக் குறித்துக் கொள்வாராயினர் [காண்க: சான்றார் = சாணார் “சான்றான் மாட்டு மேனிப் பொன்னும்” - T.A.S. II, 67] [சான்றான் என்னும் சொல் சாணான் என்றவாறு திரிபடையவே அடையாது. இரண்டும் தனித்தனிச் சொற்கள். சாணார் என்றவாறு அத்தொழிற் குலத்தவரைக் குறிப்பிடுகையில் அக்குறிப்பீட்டை இழிவாகக் கருதுபவரும், அல்லது
பயன்படுத்துபவரும், அவர் எவராயினும் அன்னார் குமுக நல எதிரியரும், இழிஞரும், மாந்த நேயமற்ற மடையருமே ஆவர்.]

இனிச் சணல் என்னும் வளர்ச்சியைப் பார்ப்போம்.

யாண்> யாண்+அல்> யாணல்> சாணல்> சணல் = நார்ச்செடி வகை (sunn - hemp, Crotalaria juncea), அந்த நார்ச்செடியினின்று பிரிந்தெடுத்த கயிறு.
யாணம்> சாணம்> சணம் [நெடுமுதற் குறுகல்] = சணல் (மூலிகை அக.)
சணம் + பு = சணம்பு = சணல் “சணம்போடு பருத்தி” (காசிகண்டம் - பிரமச: 14)
சணம்பு> சணப்பு = சணல் (பதார்த்த. குண. 250)
சணப்பு + ஐ > சணப்பை = சணல்,
சணப்பை + நார் = சணப்பைநார் = சணல்நார் (Janapanaara - தெலுங்கு)
சணப்பு + அன் = சணப்பன் = சணலினின்று நாரெடுக்கும் தொழிற் குலத்தான் "சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண்டது” என்பது ஒரு தமிழ்ச் சொலவடை; பழமொழி!
சணம்> (Sanskrit) s'aNa = சணல்; s'aNaka = சணல்

சணல் என்னும் சணப்ப நாரைக் குறித்து மக்கள் வழங்கிய சொல், பொருந்துதற் கருத்து வேர் வழியில் தோன்றியமைக்குச் சான்றாகச் சணலைக் குறித்து ஆங்கிலத்தில் வழங்கும் Jute என்னும் சொல்லின் தோற்ற வரலாற்றையும் ஓர் ஒப்பு நோக்குக்காகக் காணுதலும் இவ்விடத்தில் தெளிவுக்கு வழி வகுப்பதாகும்.

அடு> அடு+ஐ> அடை = பொருந்து, சேர், சேர்ந்திறுகு
அடை> சடை = கற்றை, செறிவு, கற்றையாக அமைந்த மயிர்முடி, அடர்ந்த மயிர் “விரிசடைப் பொறையூழ்ந்து” பரிபா: 9:5, பின்னிய கூந்தல் (பிங்) சடை + முடி > சடை முடி = முடியாகப் புனைந்த சடைமயிர் “புன்மயிர்ச்
சடைமுடிப் புலரா உடுக்கை” [சிலம்பு:25:126] சடை> (Sanskrit) Jataa = matted hair

சடை என்னும் தூய செந்தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் Jataa என்றவாறு திரிபெய்தி நிலைத்தபின் Juuta என்றவொரு வடிவம் புடை கொண்டது. பதப்படுத்தி அடித்துப் பிரிக்கும் நிலையில் சடை போன்ற தோற்ற அமைப்பில் இருந்த சணல்
நார்க் கற்றையை வங்காளியர் Jhoota என்றவாறு குறிக்கத் தொடங்கினர். இச்சொல் Juuta என்ற சமற்கிருதச் சொல்லினின்று தோன்றியதாகும். இது பின் Jute என்ற திரிப்பமைப்பில் ஆங்கில மொழிக்கண் உலகெங்கணும் பரவியது. இவ்வனைத்திற்கும் அடிப்படை தமிழ்ச்சொல்லாகிய சடை என்பதுவே. [Jute = fibre from bark of East Indian plants of genus Corchorus used for sacking, mats, cords etc.. f. Bengali Jhoto, fr.Skr.Juuta = Jataa = braid of
hair} C.O.D.

அடுத்த சொல் யாணம். இது யா> யாஅண்> யாண்> யாண்+அம்> யாணம் என்று விரியும். பின்னால் யாணம்>ஆணம் என்றும் விரியும்.உள்ளக்கட்டு, அன்பு, விருப்பம் [”ஆணம் சான்ற அறிவர்” - தொல்.பொருள்:491 இளம், “ஆணமில் பொருள் எமக்கு” - கலி: கடவுள்:17, “ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்கு” - நாலடி:374, “புரிவு ஆணம்
நேயமும் பேர்” - சூடா.நி. 8:33] என்ற பொருளையும், பற்றுக்கோடு [”தேவரை ஆணமென்று அடைந்து” - திருமழிசை - திருச்சந்: 69] என்ற பொருளையும், அரணம், காப்பு [என் மம்மர் வெந்நோய்க்கு ஆணமாகிய ஆயிழை” - பெருங்: 3,22, 57-58 என்ற பொருளையும், கூட்டு, குழம்பு [”ஆணம் குழம்பு ஆம்” - பிங்.நி:1124, ஆமை அவியல் ஆணம் கண்டறியோம்” - திருவ. சித்து:66] என்ற பொருளையும் இன்னும் கஞ்சி, மணமுள்ள கூட்டுப்பொருள், காட்டுக் கறி என்ற பொருள்களையும்
காட்டுவார்.

{சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெந்தாணம்>வெந்தணம்>வெஞ்சணம் என்ற சொல்லால் கூட்டு, அவியல், பொரியல் எனச் சோற்றோடு சேர்த்துச் சாப்பிடும் மரக்கறி உணவைக் குறிப்பார்கள். “இன்றையச் சாப்பாட்டுக்கு வெஞ்சணம் என்ன?” - இராம.கி.}

அடுத்தது கட்டு என்னும் பொருள் கொண்ட யாணம். யா> யாஅண்> யாண்> யாண்+அம்> யாணம் = கட்டு

கலி + யாணம்> கலியாணம் = ஆரவாரத்தோடு கூடிய புதிய மண இணையரைக் கட்டுவிக்கும் மங்கல நிகழ்வு விழா.

{நான் இந்தச் சொல்லில் அருளியிடம் இருந்து வேறுபடுவேன். கலித்தல் = கூடுதல், புணருதல். கலவி என்ற சொல் ஆண், பெண் புணர்ச்சியைக் குறிக்கும் சொல். குலவு>கலவு>களவு என்ற சொல்லும் அதைக் குறிப்பதே. களவு என்பது
பெற்றோர் அறியாமல் கள்ளத்தனமாகக் காதலிப்பது என்று பலரும் பொருள கொள்ளுகிறார்கள். அதைக் காட்டிலும் கூடுதல் பொருள் மிகச் சரியாகப் பொருந்தும். கலியாணம் = கலிப்பதற்காக ஏற்படும் கட்டு என்பதே நான் கொள்ளும்
சொற்பிறப்பு. கலிகட்டு என்னும் சொல் திரிந்து கால்கட்டு என்று இன்றையப பேச்சு வழக்கில் இருப்பதைப் புரிந்து கொண்டால் கலியாணம் முற்றிலும் தமிழே என்பதை உணர்ந்து கொள்ளலாம். கலித்தல், யாத்தல் என்ற இரு வினைச்சொற்கள் இந்தக் கூட்டுச் சொல்லின் உள்ளே இருக்கின்றன. ”கல்யாண” என்ற சொல்லுக்குத் திருமணம் என்ற பொருள் மோனியர் வில்லியம்சு வடமொழி அகராதியில் கிடையாது. “கல்யாண குணங்கள்” என்ற பயன்பாட்டில் வரும் “நல்ல” என்றே பொருளே அதில் கூறப்பட்டிருக்கிறது. எனவே வடமொழிக் கல்யாணம் என்பது வேறு, தமிழ்க் கலியாணம் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொண்டு “கலியாணம்” வடமொழிச்சொல் என்றே புரிந்து கொண்டு தொங்குகிறவர்களை என்ன சொல்வது, போங்கள்? அந்தளவிற்கு நம்மிடையே வடமொழித் தாக்கம் இருக்கிறது என்று மட்டுமே சொல்லுகிறேன். கால்கட்டு என்ற திரிவுச் சொல்லைப் பார்த்த பிறகாவது கலியாணம் தமிழ் என்று புரிய வேண்டாமா? - இராம.கி.}

அடுத்து ஒட்டியாணம் என்ற சொல்லை ”இடையை உள்ளொடுங்குமாறு ஒட்டிக் காட்டும் அரைவளை, அரையணி ஒட்டியாணம்” என்று அருளியார் எடுத்துக் காட்டுவார். அது பற்றி இந்தக் கட்டுரைத் தொடர் நெடுகிலும் நான் பேசியாகிவிட்டது. ஒட்டி யாணம் என்னும் கூட்டுச் சொல் முற்றிலும் தமிழ் என்பதே சரி. இதை வடசொல்
என்று சொல்லுகிறவர்கள் மேலோட்டமாய்ச் சொல்லுகிறார்கள். கேள்வி கேட்பவரில்லாமல், நாட்டுப்புறங்களில் “இன்னார் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்” என்று என்று அமைந்து விடுவது போல எத்தனை காலம் தாம் மற்றோர் அடங்கி நிற்பது? என்றோ ஒரு நாள் எழுந்து நின்று மறுக்க முற்பட்டால், நீண்ட கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் பாடுபட வேண்டியிருக்கும் போது, சலித்துப் போகிறது. அந்தளவிற்கு அடிமைத்தனம் நம்மிடையே ஊறிக் கிடக்கிறது. இப்பொழுது ஒட்டியாணம், இன்னும் அடுத்துக் குடும்பம்...... இப்படி நீண்டு கொண்டே போகும். நல்ல பிழைப்புப் போங்கள் :-).

அன்புடன்,
இராம.கி.

Monday, November 24, 2008

ஒட்டியாணம் - 3.

[ஓட்டியாணம் என்ற இக்கட்டுரைத் தொடரை ஒட்டி மின்தமிழ்க் குழுமத்தில் எழுந்த பின்னூட்டுக்களில், ஓட்டக்கூத்தரைப் பற்றிய பேச்சும் எழுந்தது. தமிழில் பெரும்பாலான புலவர் பெயர்கள் இயற்பெயர்களாய் இல்லாமல் காரணப்பெயர்களாகவே காட்சியளிக்கின்றன. ஒட்டக்கூத்தர் பெயரும் அப்படியிருக்க வாய்ப்புண்டு. அது 3 வகையால் ஏற்பட்டிருக்கலாம். ஒன்று, அவர் ஒட்டநாட்டின் கூத்தராய் இருந்திருக்கலாம். [ஒட்ட நாடு = ஒரிசா. இது கடற்கரையை ஓட்டிய ஒடுங்கிய நாடு. அதன் வடமேற்கில் காடுகளே மிகுத்து இருந்ததால், மக்கள்கூட்டம் ஒடுங்கிய பகுதியிலேயே வாழ்ந்தது. ஒட்டு என்று சிறு குன்றுகளையும் அழைப்பதுண்டு. சிறுகுன்றுகளால் ஆனநாடு, ஒட்ட நாடு என்று சொல்லப்பட்டிருக்கலாம். அதேபொழுது, சோழநாட்டுக்காரர் என்று பொதுவாக அறியப்படும் ஒட்டக் கூத்தர் ஒட்ட நாட்டாராய் இருக்க வாய்ப்புக் குறைவு.] இரண்டாவது பட்டுமை(possibility)யில், ஓட்டக் கூத்து, ஒட்ட நாட்டுக் கூத்தாக இருக்கலாம். ஒருவேளை இக்கால ஒட்டியக்கூத்து> ஒடியக்கூத்து>ஒடிசிக்கூத்து பேரரசுச் சோழர் காலத்தில் ஒட்டக் கூத்தாக அறியப் பட்டிருக்கலாம். ஒட்டக் கூத்து அறிந்தவர், அல்லது ஒட்டக் கூத்துக் கலையில் வல்லவரின் கொடிவழியில் வந்தவர் ஒட்டக் கூத்தர் என்று பொருள் கொள்ளலாம். மூன்றாம் வகையில் வேறுமாதிரிப் பொருள் கொள்ளலாம். ஒட்டு என்ற சொல்லிற்கு ஆணை, சூள், பந்தயம் என்ற பொருளுமுண்டு, ஒட்டேற்றுதல் என்பது சூளுரைத்தலைக் குறிக்கும். பலர்முன் ஒட்டேற்றி (சூளுரைத்துப்) பாடிவெல்லும் கூத்தராய் ஒட்டக்கூத்தர் இருந்திருக்கலாம். பலரோடும் புலமைப் பந்தயத்தில் இறங்கி அதில் தோற்றோர் காதுமடல்ளை ஒட்டக் கூத்தர் பறித்ததாகத் தொன்மக் கதைகள் உலவுகின்றன. 3 பட்டுமைகளுள் எது இங்கு சரியென என்னால் கூற முடியவில்லை. மேலும் பல தரவுகளைக் கொண்டு மற்ற ஆய்வாளர் ஆழ்ந்து நோக்கலாம்.]

இனி ஒட்டுதல் சொல்லுக்கு வருவோம். இச்சொல்லிற்கு ”ஒன்று சேரல், உடன் வரல்” என்ற பொருட்பாடுகள் உண்டெனினும், [அதேபோல் பந்தயப் பொருள் சொல்லப் பட்டுள்ளதெனினும்] அவற்றை ஒதுக்கி, முன்சொன்னது போல், ஒடுங்கற்பொருளை மட்டும் பார்ப்போம். ஏனெனில், ஓட்டியாணப் பொருள் புரிந்து கொள்ள ஒடுங்கற்பொருளே அடிப்படையாகும். மேற்சொன்ன ஒடுங்கும் பொருளை ஆழமாய் உணரும் வகையில் ஒட்டு என்ற சொல்லின் பொருளையும் மற்ற சொற்களையும் பார்க்கலாம்.

ஓட்ட = இறுக “ஓட்டக் கட்டு”
ஒட்டகம் = பாலைவனப் பயணத்தில் உதவும், நீண்டநாள் உண்ணாதிருக்கும்  விலங்கு; ஓட்டு = பட்டினி. ஒட்டகம் = பட்டினி கிடக்கவல்ல விலங்கு, அதாவது ஒடுங்கவல்ல விலங்கு.. ஒட்டுதல் = ஒடுங்குதல், பட்டினி கிடக்கையில் வயிறு ஒடுங்கிப் போகும். வயிற்றை இறுகக் கட்டுவதும் பட்டினியே. (ஒட்டகம் அவற்றோடு ஒருவழி நிலையும் - தொல்.பொரு.56. ஓங்குநிலை ஓட்டகம் துயில் மடிந்தன்ன - சிறுபாண் 154.)
இனி, அதுபோல் ஒருவிலங்கு நீள்கழுத்துப் பெற்றதனால், ஒப்புநோக்கி, நீண்ட கழுத்துப் பெற்ற நெருப்புக் கோழி ஒட்டகக் கோழி என வழிப்பொருளால் சொல்லப்பெறும். ஒட்டகப்பறவை, ஓட்டகச்சிவிங்கி என்ற சொல்லாட்சிகளும் இப்படி வழிப்பொருளில் அமைந்தவையே.
ஒட்டப் பிடித்தல் = இழுத்துப் பிடித்தல் (வின்சுலோ அகராதி)
ஓட்டப் போடுதல் = பட்டினிகிடக்கச் செய்தல் (வின்சுலோ அகராதி), மெலிய வைத்தல். ஓட்டிய வயிறு என்ற சொல்லாட்சியைக் கவனியுங்கள். வயிறும் இடுப்பும் ஒன்றோடு ஒன்றாகத்தான் அமைகின்றன.
ஒட்டற் காது = குறுகிய காது. (வின்சுலோ அகராதி)
ஒட்டறுதல் = வற்றுதல்
ஒட்டிப் போகுதல் = வற்றுதல் (கன்னம் ஒட்டிப் போயிருக்கிறது.)
ஒட்டு = சிறுமை (அற்பம்; சூடாமணி), ஓரம் (அந்தக் குழந்தை ஒட்டிலேயே இருக்கிறது.)
ஒட்டுக் காயம் = பட்டினி கிடக்கை (திருநெல்வேலி வழக்கு)
ஒட்டுக் குஞ்சு = சிறு குஞ்சு (வின்சுலோ அகராதி)
ஒட்டுக் குடித்தனம் = ஒட்டிய குடித்தனம், சிறு குடித்தனம்
ஒட்டுக் குடுமி = தலை உச்சியில் இருக்கும் சிறு குடுமி
ஒட்டுக் கை = துண்டுக் கை மரம்.
ஒட்டுத் திண்ணை = பெருந்திண்ணைக்குச் சார்பாகக் கீழ்ப்புறம் கட்டப்படும் சிறு திண்ணை; வாசலுக்கும் பக்கத்துச் சுவருக்கும் இடையில் உள்ள மிகச் சிறிய தெருத் திண்ணை. (சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இது இல்லாது ஒரு பெருந்தன வீடு இருக்காது.)
ஒடியல்>ஒடிசல் = ஒல்லி
ஓட்டியன்>ஒடியன் = ஆமை
ஒடியிடை = ஒடுங்கிய இடுப்பு
ஒடிவான் = அற்பன்
ஒடிவு = குறைவு “ஒடிவில் பொற்கிழி நல்கி” (திருவிளை. இரசவா. 10)
ஒடுக்கு எடுத்தல் = நெளிவு எடுத்தல் (ஒடுக்கு = நெளிவு)
ஒட்டியம் = ஓட்டியாணம்
ஒட்டில் = சிறுமை.

வின்சுலோ அகராதியைப் பார்ப்பவர் ஒருங்கு சேரப் பார்க்கவேண்டும். ஒரு சொல்லை மட்டும் பார்க்கக்கூடாது. இதேபோலக் கலைக்களஞ்சியம், சென்னைப் பல்கலைக் கழக அகராதி போன்று பார்ப்பவரும் ”ஆழ்ந்து பாருங்கள்” என்று நான் சொல்வேன்.

இனி அகராதிகளுக்கு முன்னிருந்த நிகண்டுகளுக்குப் போகலாம். திவாகரம், பிங்கலாம் எல்லாம் 8,9 ஆம் நூற்றாண்டு நிகண்டுகள். அண்மைக் கால (14 ஆம் நூற்றாண்டு) நிகண்டாய், சூடாமணி நிகண்டைச் சொல்ல முடியும். அதிலும் கூட எல்லா இடுப்புச் சொற்களும் பதிவு செய்யப்படவில்லை. இடை (waist) பற்றிய சொற்களாய், சூடாமணி நிகண்டு "நடு, நுசுப்பு, மருங்கு, மத்திமம், உக்கம்" என்ற 5 சொற்களையும், மருங்கின் பக்கத்துப் பெயராய் ஒக்கலையையும் (hip) காட்டும். [இதுபோக அரை, குறுக்கென்ற சொற்களை இடுப்பிற்கு மாற்றாய்ப் புலவோர் சொல்வார். சில ஆண்டுகளுக்கு முன் வைரமுத்தும் ஒரு திரையிசைப் பாடலில் “குறுக்குச் சிறுத்தவளே” என்றார்.]

இவற்றில் நடு என்பது உடம்பின் நடுப்பாகத்தைக் குறிக்கும். நடுவம்> நடுமம் என்பது நடுவிலிருந்து எழுந்த பெயர்ச்சொல்லாகும். வடக்கே போகக் போக, டகரம் அழுத்தி ஒலிக்கப்பட்டு, நகரியின் இரண்டாம் டகரமாகிப் ( நடுமம்>நட்டுமம்; அழுத்தி ஒலிக்கும்போது டகரம் இரட்டிப்பது தமிழிலும் உள்ள பழக்கமே; நட்ட நடு என்று சொல்லுகிறோமே, அதை இங்கு எண்ணிப் பாருங்கள்.) பின் வடபுலப் பேச்சுத்திரிவில் நட்டுமம் “நத்துமம்” ஆக ஒலிக்கப் படும்.  நகர, மகரப் போலிகள் தமிழில் மிகுதியும் உண்டு. நம் பேச்சில் நுடம் முடம் ஆகும், நுதல் முதல் ஆகும், நுப்பது/முப்பது, நுனி/முனி, நுணுத்தல்/முணுத்தல் போன்ற திரிவுகளும் தமிழில் பலவாறாக ஏற்படும். இதில் என்ன வியப்பென்றால், நகர/மகர தமிழியச் சொற்களில், இந்தையிரோப்பியத்தில் பொதுவாக இணை காட்டும் சொற்கள் மகர ஒலிப்பிலேயே அமையும். இவ்வகையில் நத்துமம்>மத்திமம் ஆகும். (குற்றியலுகரம் குற்றியல் இகரமாகப் பலுக்கப் படுவதும் இயல்பான திரிவே.) இதே போல, நட்டம்>  நட்யம்> நத்யம்> மத்யம்> மத்தியம்> median, நுணுத்து>minute போன்ற மாற்றங்களையும் பார்க்கமுடியும். பின்னால் நடு என்னும் தமிழ்ச் சொல்லின் வளர்ச்சியான மத்திமம் என்ற வடசொல் மீண்டும் இடைக்காலத் தமிழில் கடன்வாங்கப் பட்டு உடம்பின் நடுப்பாகத்தைக் குறித்திருக்கிறது. நடுமம் என்று சொல்ல நாம்தான் தடுமாறுகிறோம்.

அடுத்து இடை எனும் பாகம், நுணுகிய (=சிறுத்த) பகுதியாதலால், நுணுகலின் வேரான நுல்லிலிருந்து நுல்>நுரு>நுருங்கு>நருங்கு என்ற வளர்ச்சியும், நுள்>நுறு>நுறுங்கு>நறுங்கு என்ற வளர்ச்சியும் ஏற்பட்டு உடம்பின் நுணுகிய/ஒல்லிய பகுதியைக் குறிக்கும். ஒல்லியாய் இருக்கும் பெண்ணைச் சிவகங்கைப் பக்கம் “என்னது இந்தப் பொண்ணு கொஞ்சம் நருங்குனாப்/நறுங்குனாப் போல ஒடிசலா இருக்கு, பார்த்தா வாட்ட சாட்டமா இருக்க வேணாமா?” என்று சொல்வார். நருங்கு/நறுங்கு என்பது ஒடுங்கிய நிலை குறிக்கும் சொல். வழக்கம்போல மகர நகரப் போலியில் நருங்கு மருங்கு ஆகும். மருங்கு மருங்குல் என்றும் புடைத்து நிற்கும்.

இனி நுள்>நுசு>நுசுப்பு என்பதும் நுணுகிய மகளிர் இடையையே குறிக்கும். [பொதுவாகப் பேச்சுவழக்கில், ளகரவொலி யகரமாய்த் திரிந்து பின் சகரமாய் மாறும். வாழைப்பழம் வாயப்பயமென வட ஆர்க்காட்டாரால் ஒலிக்கப்படுவதை நோக்குக.]

இதேபோல, உக்கம், ஒக்கல், ஒக்கலை, ஆகியவற்றைப் பற்றி இத்தொடரின் முதற் பகுதியிலும், இடை, இடுப்பு ஆகியவற்றை இரண்டாம் பகுதியிலும் பார்த்தோம்.

அதேபொழுது, முன்சொன்னது போல், ஒடு, இடு என்பவற்றிற்கு அடிச்சொல் உடு என்பதே. இடுப்பு எனும் பொருள்கொண்ட இச்சொல் உடு>உடை, ஒடு>ஒடு என்று தமிழிலும், உடு>ஒடி எனத் தெலுங்கிலும், கன்னடத்திலும் திரியும். ஒடி = இடுப்பு. ஒடி என்பது வடபுல அழுத்தத்தில் ஒட்டி என்று பலுக்கப் படும். ஒட்டியாணத்தின் பழந்தமிழ்ப்பெயர் உடு யாண் / உடு ஞாண் / உடு நாண். உடு நாண்>ஒட்டு நாண் என்றும் திரியும். இதை உடை நாண் என்றும் சொல்லுவார் உண்டு. ”உடுத்த பஞ்சிமேற் கிடந்து உடைஞாண் பதைத்து இலங்க” - சீவக 2240. சீவக சிந்தாமணி இல்லையெனில் இச்சொல்லாட்சியை அறிந்திருப்போமோ? இடு>இடை என்பதுபோல உடு>உடை என்பதும் இடுப்பையே குறித்தது. மலையாளத்தில் உடஞாண், ஒட்டியாண், ஒட்டிஞாண் என்றும், கன்னடத்தில் உடேநேண், உடெ நூல், ஒட்ட்யாண, ஒட்யாணை என்றும், தெலுங்கில் ஒட்டாணமு, ஒட்யாணமு, ஒட்யாண்டு என்றும், துளுவில் ஒட்யாண என்றும் சொல்லப் படுகிறது. பலரும் புரட்டிப் பார்க்கும் பர்ரோவின் Dravidian Etymological Dictionary இதைத் திராவிடச்சொல் என்றே பதிந்திருக்கிறது.

அதேபொழுது வடமொழிச்சொல் என்று சொல்வது, அறியாமல் சொல்வது என்று மோனியர் வில்லியம்சின் Sanskrit English Dictionary பார்த்தால் புலப்படும். ஒட்டியாண(ம்) என்ற சொல்லை நான் பார்த்தவரை அங்குகாண முடிய வில்லை. நான் தவறாய்ச்சொன்னால் என்னைத் தெளிவுபடுத்துங்கள். [வடமொழியில் ஒகரம் கிடையாது, ஓகாரம் மட்டுமேயுண்டு. ஓகார வரிசையில் இச்சொல்லைக் காணோம். இச்சொல் உகரவரிசையிலும் பதிவு செய்யப் படவில்லை. அந்நிலையில் லலிதா சஹஸ்ரமநாமத்தில் எடுத்தாளப் படுகிறதெனில் அதன் கடன் வாங்கியதென்றே பொருள். வடசொல் என்பவருக்கு நான் மீள உரைப்பது: “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர உசாவுவதே மெய்”.

இனி, உடைஞாணைப் போலவே, உடை தாரம் என்ற சொல்லும் தமிழிலுண்டு. அது அரையில் அணியும் வகையைக் குறிக்கும். இதே போல், உடை மணி = குழந்தைகளின் அரையணி, மேகலை. நம் எல்லோருக்கும் தெரிந்த இற்றைத் தமிழில் உள்ள உடைவாள் என்றசொல் உடையில் (இடுப்பில்) செருகும் வாளைக் குறிப்பதே. உடைவாளுக்கும் உடை ஞாணுக்கும் உள்ள நெருக்கம் கூடவா நமக்குத் தெரியாமற் போயிற்று? அப்புறம் எப்படி ஒட்டியாணை (உடையாண்/உடை ஞாணின் திரிவு தானே?) தமிழில்லை என்கிறோம்? [ஒட்டுஞாண் என்பது மலையாளத்தில் உள்ள பலுக்கல்.]

ஒட்டியாணம் என்பது முனிவர்கள் அணியும் ஓகப் பட்டையையும், மாதர் இடையில் அணியும் அணிகளில் ஒன்றையும் குறிக்கும். கிடைத்தவற்றுள் பழமையான குறிப்பு திருமந்திரத்திலேயே இருக்கிறது. திருமந்திரம் 811 ஆம் பாடல் கேசரியோகம், சகஸ்ராரத் தியானம் பகுதியில்

மண்டலத்துள்ளே மன ஒட்டியாணத்தைக்
கண்டு, அகத்து அங்கே கருதியே கீழ்க் கட்டி,
பண்டு அகத்துள்ளே பகலே ஒளி ஆகக்
குண்டலக் காதனும் கூத்து ஒழிந்தானே!

என்றுவரும். மன ஒட்டியாணக் கருத்திற்குள் நான்போக முற்படவில்லை. ஆனால் ஒட்டியாணச் சொல்லாட்சி தெளிவாக இடுப்புப் பட்டையையே குறிக்கிறது. இனி யாணத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம். அது ஒரு தெரிதல்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, November 23, 2008

ஒட்டியாணம் -2

உகரச் சொற்கள் பலுக்கற் திரிவில் இகரச் சொற்களாய் மாறுவது இயல்பு. அதேபொழுது ஒடுக்கம், சிறுமை, நெருக்கம் என்ற அடிப்படைப் பொருட்பாடுகளைச் சுட்டியே அவை தம் அடையாளம் காட்டும். ஒடுக்கம் என்பது உடலின் ஒடுக்கம், வெளியின் ஒடுக்கம், உட்கொள்ளும தன்மை, மற்றவற்றைப் பார்க்கச் சிறுக்கும் தன்மை ஆகியவை மேலே காட்டிய சொற்களிலும், இனி வரப்போகும் சொற்களிலும் பொருள் காட்டி நிற்கும். ஒடுக்கத்தின் வழிப்பொருள்கள் நெருக்கமும் செறிவும் ஆகும்.

உடு>இடு>இடை = உடலிலுள்ள ஒடுங்கிய அல்லது சிறுத்த உறுப்பு. [36-24-36 என்று சொல்கிறார் இல்லையா? அந்த 24 இதுதான்.]
இடு>இடுப்பு = இடையின் பக்கம் [இக்காலத்தில் இடையையே இடுப்பு என்கிறோம்.]
இடு>இடுகுதல் = ஒடுங்குதல், சிறுத்தல்
இடுகு>இடுக்கு>இடுக்கல் = ஒடுங்கிய இடைவெளி
இடுக்கு>இடுக்கி = ஒடுக்கி (அல்லது நெருங்கிப் பிடிக்கும்) கருவி [இன்றும் நாட்டுப்புறங்களிலுள்ள சொல்]
இடுக்கு என்பது இதுக்கு/இசுக்கு என்றும் தென்மாவட்டங்களில் ஒலிக்கப் பெறும். ”இதுக்குனோண்டு/இசுக்குனோண்டு/இத்துனோண்டு இடமிருக்கு”
[ஓப்பு நோக்குக குடவன்>குசவன், பிடி>பிசி (பொய்)]
இடுக்கம் = நெருக்கம், இடைவெளியொடுக்கம்
இட்டளம் = நெருக்கம், தளர்வு (”பரம பதத்தில் இட்டளமுந் தீர்ந்தது” ஈடு 3:8:2)
இட்டிடை = சிறுத்த இடை “இட்டிடையின் மின்னிப் பொலிந்து” திருவாசகம் 7:16; “இட்டிடை இடைதனக்கு” கந்தபு. தெய்வயா. 183.
இட்டிது = சிறிது “ஆகாறளவு இட்டிதாயினும்” குறள் 478.
இட்டிமை = சிறுமை, ஒடுக்கம்.
இட்டிய = சிறிய (ஐங்குறு 215)
இட்டேறி = சிறிய வண்டிப்பாதை
இட்டி = சிறு செங்கல்
இட்டிகை = மிகச் சிறிய செங்கல்
இடுக்கண் = நெருக்கு வட்டில் ஏற்படும் துன்பம் “இடுக்கண் வருங்கால் நகுக - குறள் 621”
இடுக்கணி = நெருக்கமான (இடுக்கான) இடம்
இடுக்கிடை = நெருக்கம்
இடுகுதல் = ஒடுங்குதல் “கண்களை இடுகக் கோட்டி” (சீவக. 2086), சிறுகுதல் “இடுகிடைத் தோகாய்” (கம்ப ராமாயணம். சித்திர. 19)
இடுங்குதல் = உள்ளொடுங்கல் “கண்ணிடுங்கி” (திவ்ய. பெரிய திருமொழி. 1:3:4)
இடும்பை -= துன்பம் “ஏமஞ் சாலா இடும்பை” - தொல் பொருள்.50)
இடுவல் = இடுக்கு
இண்டு = மிகச்சிறிய இடைவெளி; இண்டும் இடுக்கும் என்பது உலக வழக்கு.

இனி இன்னொரு வளர்ச்சித் தொடரைப் பார்ப்போம்.

உல்>ஒல்>ஒல்கல் = சுருங்கல் ”ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்” குறள் 136.
ஒல்கு>ஒற்கு>ஒற்குதல் = குறைதல் “ஒற்காமரபிற் பொதியில் அன்றியும்” - சிலப் 25:117
ஒற்கு> ஒற்கம் = குறைவு “ஒற்கத்தின் ஊற்றாந் துணை” குறள் 414; வறுமை (தொல்.சொல்.360)
உடு>ஒடு>ஒடுங்குதல் = சுருங்குதல், குவிதல், “தாமரையின் தடம் போது ஒடுங்க” திவ்வி.இயற்.திருவிருத்த. 76
ஒடுங்கி = ஆமை
ஒடுக்கு = அடக்கம்
ஒடு>ஒடி>ஒடிதல் = முறிதல்
ஒடித்துக் கேட்டல் = விலையைக் குறைத்துக் கேட்டல்
ஒடி>ஒசி [ஓப்பு நோக்குக குடவன்>குசவன், பிடி>பிசி (பொய்)]

பேச்சுவழக்கில் உகரச்சொற்கள் அகரச்சொற்களாய்த் திரிவதும் உண்டு.

ஒடுங்கு>அடுங்கு>அடங்கு>அடங்குதல் = சுருங்குதல், உள்ளமைதல், உட்படுதல், கீழ்ப்படிதல், புலனொடுங்குதல், உறங்குதல், சாதல்
அடங்கு>அடக்கு>அடக்கம் = அடங்கிய நிலை “அடக்கம் அமரருள் உய்க்கும் - குறள் 121”
ஒடுங்கு>ஒதுங்கு>ஒதுக்கு>ஒதுக்கம் = ஒடுங்கியநிலை
ஒதுங்கு>அதுங்கு>அதுக்கு>அதுக்கம்; அதுங்குதல் = ஒடுங்கியநிலை.
அதுக்குதல் = வாயில் அடக்குதல்
அதுக்கு = ஒடுக்கு, கல நெளிவு
ஒதுங்கு>ஒருங்கு>ஒருங்குதல் = ஒடுங்குதல் “உரம் ஒருங்கியது ...... வாலியது மார்பு” (கம்பரா. யுத்த. மந்திர.90) [ஒப்பு.நோ. விதை>விரை]
ஒருங்கு>ஒருக்குதல் = அடக்குதல் “மனத்தை ஒருக்கு ஒருக்கத்தின் உள்ளே” (பதினொரு. திருவிடைமும். 24) [இனி ஒடுங்கு>ஒருங்கு என்றுமாம்.

ஒ.நோ. அடுக்கங்கடை>அடுப்பங்கரை, படவர்>பரவர்]

ஒன்றுசேர்தலைக் குறிக்கும் ஒருங்கு என்ற சொல்லும், ஒடுங்கலைக் குறிக்கும் ஒருங்கென்ற சொல்லும் வெவ்வேறாம். ஒன்றுசேர்தற் கருத்தில் சாதற் கருத்துக்கு இடமின்மை காண்க.

இனி,
உல்கு>ஒல்கு>அல்கு. அல்குதல் = சுருங்குதல்
அல்கல் = குறைவு “அல்கலின் மொழி சில அறைந்து” (நைடத. அன்னத்தைக் கண்.66)
பெண்ணின் உடலில் அல்கிய இடம் அல்குல். இதை இடை என்று ஓரோவழி சொல்வாரும் உண்டு; பெரும்பாலோர் ஒக்கலுக்கும் கீழே பெண்குறி நோக்கி, உடலின் மேற்பாகம் குறுகுவதைக் குறிப்பாரே மிகுதி.
அல்கு>அஃகு. அஃகுதல் = அளவிற் குறுகுதல் (நன். 60); சுருங்குதல் “கற்பக் கழிமடம் அஃகும்” (நான்மணி.20); குவிதல் “ஆம்பல் ..... மீட்டு

அஃகுதலும்” (காஞ்சிப்பு. திருக்கண். 104); நுண்ணிதாதல் “அஃகி அகன்ற அறிவு - குறள் 175”
அஃகல் = சிறியதாகை (திவாகரம்)
அல்கு>அற்கு>அற்கம் = அடக்கம் “அற்கம் ஒன்றும் அறிவுறாள்” (திவ்.திருவாய்.6:5:4)

அடுத்த பகுதியில் ஓட்டு, ஒட்ட, ஓட்டி என்ற விதப்பான சொற்களுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, November 18, 2008

ஒட்டியாணம் - 1

அண்மையில் மின்தமிழ் மடற்குழுமத்தில் ”ஒட்டியாணம் தமிழ்ச்சொல்லா?” என்று திரு. கல்யாணக் குருக்கள் கேட்க, அதற்கு “ஓட்யாணம் வடமொழிச் சொல். ’ஓட்யாண பீடநிலயா’ –ன்பது லலிதா ஸஹஸ்ர நாமம். சாக்த நெறி தேர்ந்தவர்களிடம் விளக்கம் பெற வேண்டும். ஸ்ரீ பாஸ்கர ராயரின் விரிவுரையிலும் விளக்கம் தேடலாம். தமிழில் ஒட்டியாணம்” என்று திரு. தேவ் மறுமொழிக்க, பின் வின்சுலோ அகரமுதலியில் இருந்து ”மேகலை என்பது ஒட்டியாணத்தைதான் குறிக்கும். ஆனால் இது வடமொழி மூலத்திலிருந்து வந்த சொல் என்றுதான் வின்ஸ்லோ அகராதி சொல்கிறது:

*s.* A woman's girdle, or zone, மாதர்இடைக்கட்டு. 2. The swelling sides of a mountain, மலைப்புடைப்பு. W. p. 672. ME KHALA. 3. A woman's jewelled girdle, இடையணியுள் ஒன்று. 4. A garment worn by women, ஆடை. 5. A row or ridge of peaks on Mount Meru, மேருகிரிச்சிகரம்.

என்று நண்பர் ஹரிகி ஒரு குறிப்பை எடுத்துத் தந்து ”ஒட்டியாணம் வடசொல் தான்” என்று உறுதி செய்ய, நான் கொஞ்சம் சலித்துப் போனேன்.

அளவிற்கு மீறிய வடமொழிப் பயனாக்கத்தின் வழிப்பட்டு, நம்மில் பலரும் பெரிதும் மயங்கி விடுகிறோம். ஏதொரு சொல்லையும் ”அது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா?” என்று பார்ப்பதற்கு, ”வெறுமே அதில் போட்டிருக்கிறது, இதில் போட்டிருக்கிறது” என்று சொல்லி அமைந்துவிட முடியாது. குறிப்பிட்ட சொல்லோடு தொடர்புடைய மற்ற பல சொற்களையும் (சில சமயம் 2, 4, 10, 100, 1000 சொற்களையும் கூடப்) பார்க்க வேண்டும். ”அந்தக் கருத்து எப்படி எழுந்தது, எப்படிப் பிறக்கலாம், இணைக்கருத்துக்கள் உண்டா, இந்தச் சொல்லைக் கடன் வாங்கியது என்றால்,மற்ற இணைச் சொற்கள் எல்லாம் எப்படிப் பிறந்தன?” என்றெல்லாம் கூட அலச வேண்டும். அப்புறம் மெதுவாக ஒரு முடிவிற்கு வர வேண்டும். அதுவும் கூடப் புதிய தரவுகளினாலே மாறலாம்.

விடாது நான் சொல்லும் கருத்தை மீண்டும் எல்லோருக்கும் சொல்லுகிறேன். சங்க இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை என்பதாலேயே ஒருசொல்/கருத்து தமிழ்ச்சொல்/தமிழ்க் கருத்து இல்லை என்று சொல்லுவது புரியாமல் சொல்வதாகும். தமிழ் என்பது ஒரு “மூதிக” மொழியல்ல, அது இயல்பாய் வளரும் மொழி. புதுச் சொற்கள்/புதுக் கருத்துக்கள் தமிழில் பல்வேறு காலங்களில் எழுந்திருக்கின்றன. சங்க காலத்திற்கு அப்புறமும் சொற்கள்/கருத்துக்கள் கடன் வாங்காமல் உள்ளிருந்தே கிளைத்திருக்கின்றன. (ஒருசில கடன் வாங்கியும் அமைந்திருக்கின்றன.) அதேபொழுது குதிரைக்குக் குர்ரம் என்றால், யானைக்கு அர்ரமெனச் சொல்லமுடியுமோ? ”கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர உசாவுவதே மெய்”.

ஒட்டி யாணம் (ஒட்டி+யாணம் என்ற கூட்டுச் சொல் அது), கலி யாணம் (கலி+யாணம்) ஆகிய எல்லாம் நல்ல தமிழ்ச் சொற்கள் தான். அவற்றை வடமொழியில் ஒலிபெயர்த்து ஒட் யாணம், கல் யாணம் என்று போட்டு விட்டதாலேயே, அப்படி ஒலிபெயர்த்த சொற்களை லலிதா சஹஸ்ரநாமத்தில் போட்டு விட்டதாலேயே, அவை வடமொழியாகி விடாது. ”சங்கதமே மேடு, தமிழ் பள்ளம் - மேட்டிலிருந்து தான் பள்ளத்திற்கு நீரோட வேண்டும்?” என்ற சிந்தனை கொண்டிருந்தால், நாம் நெடுந்தொலைவு செல்லமுடியாது.

ஒட்டி, யாணம் என்ற இரண்டு தமிழ்ச் சொற்களையும் தனித் தனியாகப் பார்ப்போம். இதுவும் ஒரு கட்டுரைத் தொடர் தான்.

ஒட்டியின் வேர் அறிய உல்லில் இருந்து தொடங்க வேண்டும். உல் என்னும் வேர் தமிழில் ஆயிரக் கணக்கான சொற்களைத் தந்திருக்கிறது. உல் என்னும் வேரில் இருந்து ஒடுங்கற் பொருளிற் பிறந்த சில சொற்களை மட்டும் இங்கே நாம் பார்ப்போம். [வழக்கம் போல, பாவாணர், அவர் வழி வந்தோருக்கு, குறிப்பாக சொல்லாய்வு அறிஞர் அருளிக்கு, நாம் கடமைப் பட்டுள்ளோம். அவர்களின் கருத்தை பலவிடங்களில், சிலபோது வரிக்குவரி எடுத்தெழுதி என் உரையை ஊடாகவும் கலந்து தருகிறேன். என் இடைப்பரட்டும் உண்டு.]

கீழே வருவது பாவாணரின் வேர்ச்சொற் கட்டுரைகள் - 1, தமிழ்மண் பதிப்பகம் பக்கம் 71-77 ல் இருந்து எடுத்தது.

உல்>உல்குதல் = உள்வளைதல், ஒடுங்குதல், சிறுத்தல்.
உல்>உல்லி>ஒல்லி = உள்ளொடுங்கிய ஆள், மெலிந்த ஆள். (உடற் சுற்றளவு சிறுத்தவன் ஒல்லியானவன்.)
உல்லாடி>ஒல்லாடி = மெல்லிய ஆள்.
உல்குதல்>உள்குதல் = உள்ளொடுங்குதல்.
உல்>உள்; that which is inside.
உள்>உள்ளம்
உள்>உளுக்கு>உளுக்கார்தல் = ஒடுங்கியிருத்தல், கீழிருத்தல்
உளுக்கார்தல்>உட்கார்தல் = கீழ் அல்லது இருக்கையில் இருத்தல் (எங்ஙனம் அமர்ந்திருப்பினும் நிற்கும் நிலையினும் உட்கார்ந்திருக்கும் இருப்பு உருவ அளவில் ஒடுங்கியிருத்தல் காண்க.]

உள்குதல்>உட்குதல் = அஞ்சுதல் “நண்ணாரும் உட்கும் என் பீடு” குறள் 1088
உட்குதல்>உக்குதல் = மெலிதல் (=துயரத்தால் மெலிதலை உக்கிப் போதல் என்பர். உக்கின மரம் என்பது உலக வழக்கு.), உளுக்குதல் (= உரங்கெடுதல்). உள்குதல் என்பதன் பிறவினைச்சொல் உளுக்குதல்

உக்கு>உக்கம் = ஒடுங்கிய இடை (மலையாளம்: உக்கம்). “உக்கம் சேர்த்தியது ஒருகை” - திருமுருகாற்றுப் படை. 108.
உக்கு>உக்கல்>ஒக்கல் = இடுப்பு
உக்கல்>உக்கலை>ஒக்கலை = இடுப்பு.
உக்கி = இரு காதையும் இரு கையால் மாறிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தெழும் தண்டனை வகை.
உளுக்கு>உடுக்கு = இடையொடுங்கும் பறை
உடுக்கு>உடுக்கை = இடையொடுங்கும் பறை. “நிலையாய் உடுக்கை வாசிப்பான்” (S.I.I.Vol.II,254.)
உடுக்கை> Skt. Hudukka

அடுத்து இரண்டாம் பகுதிக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, November 14, 2008

பொத்தகம் - 4

இனி, பஞ்சை இழுத்து இழையாக்கி, அதை நீட்டி (நூலுதல்> நீலுதல்> நீளுதல்> நீளம்) நூலப்பட்டது நூல். இது ஒரு துகிற்துறைச் (textile) சொல். அதேபொழுது ஒரு குறிப்பிட்ட கருத்தை/கதையை/நிகழ்வை நீட்டிக் கூறுதலும் நுவலுதல் எனப்படும். அப்படி நுவலியதும் (நுவல்>நூல்) நூல் ஆகும். இந்நூலும் அந்நூலும் பார்க்க ஒன்றுபோல் இருந்தாலும் நுண்ணிய அளவில் சொற்பிறப்பில் வேறுபட்டவை யாகும். இனிப் பல இழைகளைச் சேர்த்துப் பன்னி, முறுக்கேற்றி வலிமை கொடுத்தது பனுவல் (= பன்னப் பட்டது; பல்>பன்னுதல்>பனுவல். இதே சொல்லை இந்தோயிரோப்பியம் (காட்டாக ஆங்கிலம்) spinning என்று சொல்லும்.) பருத்தியை விளைத்து நூலாக்கிய நாவலந்தீவின் சொற்களே துகலியற் தொடர்பில் உலகெங்கும் பெரிதும் பரவிக் கிடக்கின்றன. அவற்றை விவரித்தால் விரியும். (பனுவல் என்பது துகிற்துறையில் மட்டுமல்லாமல், சொல்/ யாப்பு/ நூல் ஆகிய துறைகளிலும் பழகிய சொல்லாகும். (நாலாயிரப் பனுவல்) இதுபோற் சொற்களின் இரட்டைத்தோற்றம் ஆழ்ந்து உணரப்பட வேண்டியதாகும்.

இனித் துல்லுதல் என்பது இணைத்தல், சேர்த்தல் பொருளை உணர்த்தும். துல்லுதல், துல்குதல் என்றுமாகும். அதன் அடுத்த வளர்ச்சியாய், லகரம் தொலைந்து துகுதல் என்றுமாகும். துகுத்தது துகில் = textile என்ற பெயர்ச் சொல் அப்புறம் விளையும். துகிலில் நூல் தொகுப்புமுறை துகுப்பு (texture) எனப்படும். வார்ப்பிலும் (warp) ஊடிலும் (weft) மாறி மாறி புதிய புதிய அடவுகளில் (designs) நூலைக கொடுத்து நெய்வது வெவ்வேறு துகுப்பை நமக்குத் தருகிறது. சட்டைத்துணியின் துகுப்பு ஒரு மாதிரியும், சேலையின் துகுப்பு இன்னொரு மாதிரியுமாக இருக்கிறதல்லவா? நூற்றுக் கணக்கான துகுப்புக்களைச் செய்யத்தெரிந்தன் பெருந் துகிலியலாளன் ஆகிறான்.

இதேபோலச் சொற்கள் பலவும் நேர்த்தியாய்ப் பொருந்திய வாக்கியங்களை அடுத்தடுத்து அடுக்கி ஒரு கட்டுரை/கதை/கவிதை எனத் துகுத்ததை text என்றே இந்தையிரோப்பியத்தில் சொல்கிறார். தமிழில் துல்கு என்று தேவைப் பட்ட இடங்களிற் சொல்லலாம். இனித் துல்ந்தது துன்னப் பட்டது என்றும் தமிழில் வரும். இக்காலத்தில் தையற்காரர் என்கிறோமே, அவரைச் சங்க காலத்தில் துன்னகாரர் என்றே சொன்னார். அதாவது வெட்டிய துணியைச் சேர்த்துத் தைப்பவர் துன்னகாரர். (துகைப்பவர் பேச்சுத்தமிழில் தைப்பவர் ஆவார்.) இவ்வளவும் ஏன் சொல்கிறேனெனில் சேர்த்தல், தொகுதியாக்கல் எனும் அடிக்கருத்து பலவிடத்தும் கிளைத்துப் புதிய புதிய சொற்களை உருவாக்கியுள்ளது என்று சொல்லத்தான். எழுத்திற்கு இணையான துகிலியல் துறைச் சொற்களை மட்டும் இங்கு எடுத்துக் காட்டினேன்.

அதேபோல பொத்துதல் என்ற வினையும், சேர்த்தல், பெருத்துதல், கட்டுதல், தொகுத்தல் என்ற பொருளை உணர்த்தும். பொத்தப் பட்டது பொதி (= தொகுதி). போத்து ஓலைகளை அடுக்கித் தொகுத்தது பொத்தகம். பெருங்கதை உஞ்சைக் காண்டத்தில் யாழ் கைவைத்த காதையில் (34 ஆம் காதையில்) 26 ஆம் வரியில் வரும், “நிறைநூற் பொத்தகம் நெடுமனை ஏற்றி” என்ற வாசகத்தை இங்கு எண்ணிப் பார்க்கலாம். நிறைநூற் தொகுதி இங்கு பொத்தகம் எனப்படுகிறது. இதே போல, நாலடியார் 318 ஆம் பாட்டில்,

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் -- மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு

தொகுத்தல் பொருள் வருகிறது. இந்தக் கால எடுவிப்பில் (edition) மேலே உள்ள நாலடியார் வெண்பாவில் “புத்தகம்” என்ற சொல்லாட்சி இருந்தாலும் அதன் முதற் பதிப்பில், ஏட்டுச் சுவடியில், பொத்தகம் என்ற சொல்லாட்சி இருந்ததா, புத்தகம் என்ற சொல்லாட்சி இருந்ததா என்று இக்காலத்தில் சொல்ல முடியாதுள்ளது. தொகுத்தற் பொருளை நோக்கும் போது, புத்தகத்தைக் காட்டிலும் பொத்தகமே பெரிதும் பொருந்துகிறது.

இதே போல ஏலாதி 63 ஆம் பாட்டில்

“ஊணொடு கூறை, எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்திவை - மாணொடு
கேட்டெழுதி ஓதிவாழ் வார்க்கு ஈய்ந்தார் இம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து

என்னும் பாட்டிலும் புத்தகம் என்றசொல் சுவடி என்ற பொருளிலேயே பயின்றிருக்கிறது. இங்கும் இதன் முதற்பதிப்பில் பொத்தகச் சொல்லாட்சி இருந்ததா, புத்தகச் சொல்லாட்சி இருந்ததா எனச் சொல்லமுடியாதுள்ளது.

இதுபோக, South Indian Inscriptions Vol III - இல் 80 ஆம் கல்வெட்டில் “பொத்தகப்படி குழி” என்ற சொற்றொடர் பயிலப்பட்டதாய் சென்னைப் பல்கலைக் கழக Tamil Lexicon சொல்லும். என்னால் அக்கல்வெட்டை இந்தியத் தொல்லியல் துறையின் நூலில் காணமுடியவில்லை. ஆழத்தேடிப் பார்க்கவேண்டும்.

பொத்தகம் எனும் இச்சொல் இன்று கிடைத்துள்ள சங்க இலக்கியங்களில் அப்படியே பயிலவில்லை தான். அதேபொழுது, சங்க இலக்கியம் என்பது தமிழில் அக்காலத்துப் பயின்ற எல்லாச் சொற்களின் அகரமுதலித் தொகுதி அல்ல. அது ஒரு சிறுதொகுதி என்று புரிந்துகொள்ள வேண்டும். இவை தவிர, நமக்குக் கிடைக்காமல் அழிந்துபட்ட நூல்கள் இன்னும் ஏராளம் என்றே தமிழ் ஆய்வாளர் கூறுகின்றனர். [இந்த அடிப்படைக்கருத்தை ஒதுக்கி, சங்க இலக்கியத்தில் நேரடி இல்லையெனில் ”குறிப்பிட்ட சொல் தமிழில்லை, அது வடமொழியிலிருந்து வாங்கிய கடன்” என முட்டாள் தனமாகச் சொல்லும் “வல்லாளர்” பலருமுண்டு. ஏனெனில் ”ஏழைசொல் அம்பலம் ஏறாது” என்ற நாட்டுவழக்கு அவருக்குத் தெரியும்.]

நாட்பட, நாட்படப் பனையோலையைச் செதில் அரிக்கத்தானே செய்யும்? அதனால், கிட்டத்தட்ட ஒரு 120-150 ஆண்டுகளுக்கு மேல் எந்த ஓலைச்சுவடியும் தாங்காது. அதை அடுத்த எடுவிப்பில் படியெடுக்க வேண்டும். 1900 வாக்கில் ஒரு சுவடி கிடைக்க வேண்டுமெனில் கி.மு.300 ஆம் ஆண்டில் முதற்பதிப்பு என்றால், கி.பி.1900ல் 15வது பதிப்பே கிடைக்கும். எனவே இன்றைக்கு நம் கையில் கிடைத்திருக்கும் சங்க நூற்சுவடிகள் பெரும்பாலும் 12, 13, 14, 15 ஆம் பதிப்புகளாகவே இருக்கும்.

ஓவ்வோர் எடுவிப்பிலும், ஏற்படும் கவனக்குறைவால் எழுத்துப் பிழைகளும், சொற்கூட்டுப் பிழைகளும் கூடிவர வாய்ப்புண்டு. இப் பட்டுமைகளால், ”பொத்தகம்”, ”புத்தகம்” ஆகப் பெரிதும் வாய்ப்புண்டு. சுருங்கச் சொன்னால் போத்தோலைகளைப் (பனையோலைகளைப்) பொத்திக்கட்டியது பொத்தகம். தவிர, ஏட்டுக் கட்டு, ஓலைச்சுவடி எனும் இணைச்சொற்களாலும் இச் சொற்பிறப்பை உணர முடியும்.பனையின்றிப் பொத்தகச் சொல் எழ வாய்ப்பில்லை. கூடவே பனைப் புழக்கமுள்ள பகுதியில் இருந்தே பொத்தகம் என்ற சொல் எழுந்திருக்க முடியும் என்பதையும் உணரலாம்.

சுருக்கமாகப் பொத்தகச் சொற்பிறப்பை ஒரு பத்தியில் எழுதியிருக்கலாம். இவ்வளவு விரிவாக தொடர்புடைய சொற்களோடு பொருத்தி இத் தொடரை 4 பகுதிகளில் எழுதியது மற்ற சான்றுகளை உணர்த்தவே என்று கொள்க!

அன்புடன்,
இராம.கி.

Thursday, November 13, 2008

பொத்தகம் - 3

இனிப் பனையின் பல்வேறு பெயர்களைப் பார்ப்போம். [இவற்றை அறிவது, பொத்தகத்திற்கும், பனைக்குமுள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள உதவும்.]

பெண்ணை, தாலம், புல், தாளி, போந்தை என்று
எண்ணிய நாமம் பனையின் பெயரே

என்று திவாகர நிகண்டின் 700 ஆம் நூற்பா சொல்லும்.

பனை என்ற சொல் பன்னை என்ற சொல்லின் தொகுப்பாய் இருந்திருக்கும்  என்று புலவர் இளங்குமரன் சொல்வார். பல் எனும் அடிச்சொல் முதலில் வெண்பொருளைச் சுட்டி உருவாகியிருந்தாலும், பின்னால் பொருள்நீட்சியில் பன்மை, கூர்மை ஆகிய பொருட்பாடுகளைச் சுட்டியதையும், பல்லினின்று பல வழிச்சொற்கள் உருவாகியதையும், அவர் எடுத்துக் காட்டுவார்.

தன் வாய் வெளியே நீண்ட கோரைப்பல் கொண்டிருக்கும் விலங்கு  பல்லின் காரணமாகவே (பல்+ந்+றி) பன்றி என்றே சொல்லப் படுகிறதல்லவா? அதே போல் மரத்தண்டு முழுதும், (வெள்ளைநிறமாய் இல்லாவிடினும்) பற்களைப் போன்ற கூர்ஞ் செறும்புகளை உடையதால், இம்மரத்தை பல்+நை = *பன்னை என்றே சொல்லியிருக்க முடியும். பின்னால், பன்னையைத் தொகுத்து பனை ஆகியிருக்கலாம். [இத்தொகுப்பு தொல்காப்பிய காலத்திற்கும் முன் நடந்திருக்கலாம்.] பன்னை எனும் சொற்பிறப்பு ஏரணத்திற்கு அணைவாகத் தென்னை, புன்னை என்ற மற்ற மரப்பெயர்களையும் இளங்குமரன் எடுத்துக் காட்டுவார். தெல்+நை = தென்னை; புல்+நை = புன்னை. தெல்>தெள்> தெளிவு, தெள்>தெளிவு என்பது கள்/பதநீரைக் குறிக்கும்.] தெல்> தேன்>தேம் என்பதெலாம் கள்ளைக் குறிப்பதே. அவ்வகையில் தெல்லை/தெள்ளை(=கள்ளை)க் கொடுக்கும் தெல்மரம்(=கள்மரம்) தெல்நை> தென்னை. [இம்மரம் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து நம்மூர் இறங்கியதாகப் புதலியலார் கூறுவார்].

அடுத்த சொல்லான பெண்ணையும் பன்னையின் திரிவே. பன்னை> பண்ணை>பெண்ணை என்ற வளர்ச்சி தமிழில் இயல்பாக அமையக் கூடியது. தென்பாண்டிப் பகுதியில் இன்றைக்கும் நாட்டுப் புறத்தினரால் பல ககரச்சொற்கள் கெகரச்சொற்களாய்ப் பலுக்கப் படும். (”இன்னாரைக் கட்டினான்” என்பதை ”இன்னாரைக் கெட்டினான்” என்பார்), இதுபோலப் பகரச் சொற்கள் பெகரச் சொற்களாய் ஆவதும் தமிழில் இயற்கையான பலுக்கற் திரிவே. (”கொஞ்சங்கூடப் பலமில்லாதவன்” என்பதைக் கூடக்“கொஞ்சங்கூடப் பெலமில்லாதவன்” என்று தெற்கே சொல்வார்.)

அடுத்தது புல் என்னும் சொல். இது ஒரு வகையாக்கச் (classification) சொல்; பனை, தென்னை, கமுகு, (ஏன், வாழை, பப்பாளியைக் கூடச் சொல்லலாம்.) போன்ற மரங்கள் அவற்றின் வளர்ச்சியில் கிளை, சினை, கொப்பு, இலை, பூ, காய், கனி, விதை எனப் பரவாமல், ஒரு புல்லைப் போல, வேர், அடித் தண்டு, இலைத் தொகுதி, பின் பூந்தண்டு, காய், கனி, விதை என்றே சினை, கிளை, கொப்பு இல்லாமல் வளருகின்றன. இவை ஒருவகையான, புல்லைப் போன்ற, விதப்பான, மரங்கள். பனை மரம் ஒரு புல் என்றே பொதுமையாய்ச் சொல்லப் பட்டது ஓர் இயல்பான புரிதல் தான். [இன்னொரு வகையில், பனை மரம் வேர், தண்டு, கிளை, ஈர்க்கு எனப்பிரிந்து ஒவ்வோர் ஈர்க்கிற்கும் இரு பக்க இலை இருப்பதாகவும் கொள்ள முடியும். இந்த இலைகள் பனையில் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டு ஒலைத்தொகுதியைக் காட்டும். தென்னை. கமுகு போன்றவற்றில் இலைகள் ஒட்டாமல் ஒரு தோகையாய் நமக்குக் காட்டும்.]

புல்வகை உறுப்புகளைச் சொல்லும்போது, தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் 1586 ஆம் நூற்பா,

தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்

என்று விவரிக்கும்.

அடுத்தது தாளி (மற்றும் அதன் வடபால் வழக்கான தாலம்) . இதைப் புரிந்து கொள்ள வாழைமரச் செய்திகளை ஓர்ந்து பார்க்கலாம். “வாழை குலை தள்ளியது” என்கிறோம் அல்லவா? அது என்ன குலை தள்ளுவது? ஒன்றின் உள்ளிருந்து இன்னொன்று வெளியே வருவதையும், ஒன்றின் இடத்தை மாற்றுவதையும் தள்ளுதல் வினையாற் சொல்லுகிறோம். பொதுவாகப் புல்வகை மரங்கள் தாங்கள் வாழும் காலத்தில் ஒருமுறைதான் குலை ஈனும். அந்தக் குலையிலேயே, பூ, காய், கனி வளர்ச்சியை அவை காட்டும். [காட்டாக வாழைப்பூவின் அடியில் வாழைக்காய் தோன்றுவதும், அது பழுத்துக் கனியாவதையும் ஓர்ந்துபார்த்தால், இவ்வளர்ச்சி புலப்படும். அதே போலத் தான், பனம்பூ, பனங்காய், பின் பனம்பழம். இளம்பனங்காய்ச் சுளையைத் தான் நுங்கு என்கிறோம்.]

புல்மரக் குலையைத் தார் என்கிறோம். (வாழைத்தார் என்பதை ஓர்ந்து பாருங்கள். தள்>தரு>தார் என்ற திரிவையும் எண்ணிப் பார்க்கலாம். தருதல் வினையையே தள் எனும் வேரில் தோன்றியதாகப் பாவாணர் காட்டுவார். இதேபோல் வருதலுக்கும் வள் எனும் வளைதல் வேரைக் காட்டுவார். கள்>கரு>கார் எனும் கருமைக்கருத்து வளர்ச்சியும் இதே போல் அமைந்ததே.) இனி ரகர/லகரப் போலியை எண்ணிப் பார்த்தால் தால் என்றசொல் தாரைக் குறிக்க முடியுமென உணரலாம். தால்>தாலம், தால்>தாள்>தாளி என்ற வளர்ச்சியும் இயற்கையானதே. தாளி என்ற சொல் பனையைக் குறித்தது இப்படித்தான். பனந்தார்/பனங்குலையைத் தரும் மரம் தாலம்/தாளி.

இனிப் பனையின் தாளியைக் கத்தி கொண்டு கீறினால் சற்றே பால் நிறத்தில் சருக்கரை நீர் அதனின்றும் இழியும். அதைப் பால் என்றே சொல்வார். பனம் பால், தென்னம் பால், கமுகம் பால் என்ற சொல்லாட்சிகளைக் கவனியுங்கள். (அரப்பர் - Rubber - பாலும் இதுபோற் பால் தான்; ஆனால் அது மரத்தைக் கீறி வருவது. தார் எனும் உறுப்பு அதற்குக் கிடையாது.] பால் வருவதால் தாளுக்குப் பால்>பாள்>பாளை என்றும் பெயர் உண்டு. பனம்பாளை, தென்னம்பாளை, கமுகம்பாளை என்ற சொற்களை அறிந்துள்ளீரா? பாளை கொண்ட மரங்களைப் பாளை மரங்கள் என்றே புதலியலார் சொன்னார். palmyra என்பது பாளை மரத்தின் ஆங்கில ஒலிபெயர்ப்பு. [நாம்தான் சொற்பிறப்பு அறியாமல் இருக்கிறோம்.] பின்னால் அதையே பொதுப்படையாக்கி வெவ்வேறு palm trees பற்றிப் புதலியர் சொன்னதும் இதன் வளர்ச்சிதான். புல்மரக் குடும்பங்களுக்கு புதலியற்பெயர் வந்தது தமிழின் அடிப்படையிலே தான்.

பெரும்பாலான பாளை மரங்களிலிருந்து பாளையைக் கீறி வடியும் பாலைச் சற்றுநேரம் ஒரு ஏனத்தில் வைத்தால், காற்றிலுள்ள சில நுண்ணுயிரிகள் அதனுள் புகுந்து தம் நொதிப்பொருள் (enzyme) கொண்டு பாற்சர்க்கரையை மிக எளிதில் வெறியமாக்கி (alcohol) விடும். இப்படி அமைவதே கள். [சரியான அளவுநேரம் நொதிப்பு இருந்தால், குறைச் சருக்கரையும், மிகு வெறியமும் சேர்ந்த இளங்கள்ளாய் இருக்கும். இன்னும் கூடநேரம் நொதிப்பு அமையும் எனில், வெறியத்தின் ஒருபகுதி மேலும் வேதிமாற்றம் அடைந்து, சாலியக் காடியாக (acetic acid) உருவாகி, மொத்தத்தில் அது கடுங்கள்ளாகும். கடுந் தன்மை உடையது காடி. காடியை ஆம்பலம்>ஆமிலம்>அமிலம் என்று சொன்னது புளியம்பழம் எனும் விதப்புப் பொருள் பற்றியாகும்.] தாளில் இருந்து கள் கிடைப்பதால் அது தாளியானது. வட மாநிலங்களில் தாளியைத் தாரி/தாடி என்று பலுக்குவார். வெள்ளைக்காரன் அதை toddy என ஒலி பெயர்ப்பான். நாமோ மூலந்தெரியாது திகைக்கிறோம். மூலம் காட்டினும், நம்மில் சிலர் ஏற்கமறுத்து, எகிறி ஏளனம் செய்வதிலேயே கருத்தாய் இருக்கிறோம். அந்த அளவிற்கு வடமொழி நம் கண்ணைக் கட்டுகிறது. :-).

பனையின் இன்னொரு பெயர் போந்தை (போந்து+ஐ). போந்தின் சொற்பிறப்புக் காணுவது சற்று சரவலானது. போத்து என்பது புதுக்கிளை அல்லது இளங்கிளை. ”போத்து விட்டிருக்கிறது” என்பது நாட்டுப்புற வழக்கு. பனம்பாளையைப் பனை இளங்குருத்து/இளங்கிளை என்றே சொல்லலாம். முதுகிளையிலும் பார்க்க, எந்த இளங்கிளைக்குள்ளும் நீர் கூட இருக்கும். பனையைப் பொறுத்தமட்டும், பாளையில் கிடைக்கும் (சருக்கரை) நீர் விதப்பானது. பனம்போத்தில்/பனம்போந்தில் (சருக்கரை) நீர் நிறைந்து கிடக்கிறது. அதனால் தான், பாளையைக் கீறினால் சருக்கரை நீர் இழிகிறது. முன்சொன்னதுபோல் பனம் பூ, பனங்காய், பனங்கனி வளர்ச்சியும் போந்தில் இருந்தே அமைகிறது. பொந்துதல் என்பது வினைச்சொல்; அது பொருந்துதல், விரிதல், பெருகுதல், சேர்தல், நிறைதல் என்று பொருட்பாடுகளைக் குறிக்கும். பொந்திக்கை = பொருந்துகை, பொந்திகை = நிறைவு, த்ருப்தி, பொந்தி = பருமை. இளங்கிளையை இளங்குருத்து எனும்போதும் குருத்தல் = தோன்றல் என்ற பொருள் தோன்றுவதைப் பார்க்கலாம். [குருத்து>குருந்து ஆகியவை தென்னை, பனை முதலியவற்றின் இளவிலையைக் குறிக்கின்றன.] பூத்தல் என்பதும் தோன்றுதலே.

புகு>பூ>போ>போத்து = இளங்கிளை,
போந்து = பனங்குருத்து,
போது = அரும்பிற்கும், மலருக்கும் இடைப்பட்ட நிலை. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரும்இந் நோய் - குறள் 1227.

பாளை விரிந்த நிலையில் இருப்பதாலும் போந்து என்றசொல் பொருந்தும். போந்தி என்பது வீங்கிய காலைக் குறிக்கும்; வீங்குதல் = விரிதல், பெருகுதல், சேர்தல். போத்து என்பது பிங்கல நிகண்டின் படி, போதகம் என்றும் சொல்லப் படும். போந்தை என்ற சொல் தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் புறத்திணையியல் 1006 ஆம் நூற்பாவில் வெட்சித் திணையின் கரந்தை முதலிய பிற பகுதிகளைக் குறிக்கும் இடத்தில், வேந்தர்களின் பூவைச் சொல்லும் முகமாய்,
.......................................................உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்

என்று வருகிறது. இங்கே போந்தை என்பது பனையையே குறிக்கிறது. இதை விளக்கும் வகையில் இளம்பூரணர் குறிக்கும் வெண்பா:

குடையவர் காந்தள் தன் கொல்லிச் சுனைவாய்த்
தொடையவிழ் தண்குவளை சூடான் - புடைதிகழுந்
தேர் அதிரப் பொங்கும் திருந்துவேல் வானவன்
போர் எதிரில் போந்தையாம் பூ

-புறப். பொது 1

என்று அமையும். போந்தைப்பூ என்பது பனம்பூ. [வாழைப்பூ போல, ஆனால் மிகச் சிறியதும் மஞ்சள் நிறம் உடையதும் ஆகும். பனம்பூ சூடினான் என்பது பனம்பாளை சூடலே. நீர்க்கலசத்தில் பனம்பாளை செருகி வைப்பதை மதுக்குடம் என்று தென்பாண்டி நாட்டில் இன்றும் சொல்வார். இதேபோலத் தலைப்பாகையில் பனம்பாளையைச் சூடிக் கொள்வார். வேடிக்கையைப் பார்த்தால், பனை,ஆர், வேம்பு என்ற மூன்று பூக்களும் மிகச் சிறியவை. அக் குலைகளையே வேந்தர் சூடிக் கொண்டிருக்க வேண்டும்.]

நச்சினார்க்கினியத்தில் பனை பற்றிக் கூறிய வெண்பா

ஏழகம் மேற்கொண்டு இளையோன் இகல்வென்றான்
வேழம் இவனேற வேந்துளவோ? - ஏழுலகும்
தான் தயங்கு நாகம் தலை தயங்க வாடாமோ
போந்தையங் கண்ணி புனைந்து.

என்று அமையும்.

அன்புடன்,
இராம.கி.