Monday, December 09, 2019

கம்மம்>காமம்>க்ராமம்

”கிராமம் என்பதற்கான நேரடி தமிழ்ச்சொல் என்ன?” என்று நண்பர் கௌதம சன்னா அண்மையில் கேட்டார். வேறு வேலையில் ஆழ்ந்ததால் உடன் மறுமொழிக்க முடியவில்லை. ”கூடிய விரைவில் வருவேன்” என்றேன். இப்போது நேரங் கிடைத்தது. விளக்க முற்படுகிறேன்.

’க்ராம’வெனும் சங்கதச் சொல்லின் தமிழ் வடிவம் 'கிராமம்’ ஆகும். ’க்ராம’விற்கும் முந்தையது காம எனும் பாகதச் சொல்லாகும். வெவ்வேறு வட்டாரங்களில் பாகத மொழி வெவ்வேறு மாதிரிப் பலுக்கப்பட்டது. பாணினி கால வடமேற்கு வட்டாரமொழிக்குப் பாஷா (தமிழின் ’பேச்சும்’, ’பாஷாவும்’ ஒருபொருட் சொற்கள்) என்று பெயர். இதில்  பல சொற்களைப் பலுக்கையில், முதல் உயிர் மெய்யின் ஊடே ரகர ஒலிப்பு வந்துசேரும். எனவே மற்ற நிலங்களில் ”காம” என்பது இங்கு, ”க்ராம” ஆகும்.   பிற்காலத்து எழுந்த கலப்புப் பேச்சான சங்கதத்திற்கு பாஷாவே அடிப்படை. பொ.உ.. 300 க்கு அப்புறம், சங்கதமே வடபுல ஆட்சியரால் ஆதரிக்கப் பட்டதால், க்ராம என்ற சொல் இந்தியாவின் பலவிடங்களில் பரவியது. இனி க்ராமத்திற்கு முந்தைய காமத்திற்கு வருவோம். (தமிழில் வேறொரு காமமும் உண்டு. அதை இங்கு எண்ணிக் குழம்பக் கூடாது)

பொ.உ.மு.1000-600 களில் இந்தியாவின்  பெருத்துப் புழங்கியவை தமிழும் பாகதமுமே. (அப்போது சங்கதம் பிறக்கவில்லை. வேதமொழி இருந்தது.) அக்கால இந்தியர் தொகை 1, 2 கோடியிலும், தமிழர் தொகை 20-35 இலக்கங்களிலும் இருக்கலாம். பொ.உ.மு.1000-100 இல்  விண்டு>விண்டிய> விந்திய மலை வரை பரவிய பாகதம் வட இந்தியாவின் பரவலான பேச்சு.  தெற்கிருந்து விண்டுமலை வரை, அக்காலங்களில், தெற்கில் தமிழ் இருந்ததோ? - என்ற ஐயமுண்டு. ஒரு வேளை தொல்காப்பியர் கால வட வேங்கடம், விண்டுமலையோ? - என்றும் எண்ணியதுண்டு. தமிழக- மகத ஊடாட்டத்தில் நாம் பல பாகதச் சொற்களையும் (காட்டு: பகவன்) அவர் பல தமிழ்ச்சொற்களையும் (காட்டு: கம்மம் = ஊர்.) புழங்கினார். கம்மம்>காம என அவரால் பலுக்கப் பட்டது. இன்றும் பாகத வழிச் சிங்களத்தில் ’காம’வுக்கு அதே பொருள்தான். (காட்டு: கதிர்காம).   இன்றும் வடபுல மொழிகளில் gaon என ஊர்ப்பெயர் சொல்வார். (தில்லிக்கு அருகில் gurgaon ஐ இந்துத்துவர் gurugram என்று மாற்றினார்.)

’க்ராம’ என்ற சங்கதச் சொல்லிற்கு inhabited place, village, hamlet என்று பொருள் கொடுப்பர். இருக்கு, அதர்வணம்,  வாஜசனேயி சம்ஹிதா போன்றவற்றில் பயின்றதாய் மோனியர் வில்லிம்சு சொல்லும். ’க்ராம’விற்கு வேர் ஏதென இந்த அகரமுதலி சொல்லாது. ஓரிடம் நிலைக்காது, அலைந்திருந்த நாடோடிகள், ’க்ராம’ என்ற சொல்லைக் கண்டார் என்பது நம்புதற்கு ஐயமான ஒன்று.  “இயற்கை நிலை சரியில்லை” எனில் ஆடுமாடுகளைக் கூட்டி, வண்டிகளைப் பூட்டி இன்னோர் இடத்திற்கே முல்லையார் பெயர்வார். இவருக்கு நிலைத்த ஊர் என்பது தொடக்கத்தில் கிடையாது. நெடுநாள் ஓரிடத்தில் தங்கி, தம் விலங்குகளுக்கும், தமக்குமாய்ப் பயிர்செய்யத் தொடங்குவோரே, ’க்ராம’ எனுங் கருத்தீட்டிற்கு வரமுடியும். ஓர்ந்து பார்த்தால், இச்சொல் மருதநிலத்தில் எழவே வாய்ப்பதிகம்.

இயற்கையில் உயிருள்ள நிலத்திணைகள், விலங்குகள் பலவும் வளர்கின்றன. (இது ஒரு பரிமானத்திலோ, இரு பரிமானத்திலோ, முப் பரிமானத்திலோ, அன்றேல் எண்ணிக்கையிலோ நடக்கலாம். மொத்தத்தில் இது முன்னதைவிட இப்போதையது மிகுதல், பெருகுதல் என்று பொருள்படும். ) அவ்வளர்ப்பில் நீர், குறிப்பிடத்தக்க மண்சத்து, காற்று, போன்ற வளங்கள் இருந்தால் தான் உயிரிகளின் அலங்கல் வளர்ச்சி (organic growth) அமையும். பல்வேறு  வளங்களை இவற்றிற்கு அருகில் கொண்டுவந்து இட்டு அவற்றின் வளர்ச்சிக்கு நாம் துணைபோவதையே வளர்த்தல் என்கிறோம். வளர்தல் தன்வினை. வளர்த்தல் பிறவினை. வளர்=தலுக்கு இன்னொரு தமிழ்ச்சொல் குரு-தல். வளர்த்தலுக்கு இணையானது குருத்தல்.

குல்>குரு என்று இச்சொல் வரும்.  பேச்சுவழக்கில் குருத்தல் கருத்தலென்றும் திரியும். உயிர்க்கரு என்பதும் அதே பொருள் தான். அது மையமாவதால் கருவிற்கு மையம் என்று பொருள் உண்டு. குழவி கருவிலிருந்து வளர்கிறது. வேறுவகையில் உயிருக்கு உதவும் கருத்தல் தொழிலில் நம் உடம்புறுப்புகள் பலவும் வேலை செய்தாலும்  ஓர் உறுப்பு மட்டும் மிக அதிகமாய் வேலை செய்யும். அதைக் கரம் என்றார்.  கருத்தது கரம். கருத்தலில் விளைந்த பெயர்ச்சொல் கருமம்.  வளரும் பொருள் கொள்ளும்>கள்ளும் (கூடும், பெருகும்) கள்.கய்>கை என்பதும் கரத்தைக் குறிக்கும். கை, செய் என்பது இயல்பான பேச்சுத்திரிவு, கையால் செய்கிறோம். கருத்தலும் செய்தலும் ஒரே பொருட் சொற்கள்.   குல்>குரு>கரு>கருத்தல் = செய்தல்

யாரெல்லாம் கையால் கருமஞ் செய்கிறாரோ, அவரெல்லாம் கருமர். கருமம் மெய்ம்மயங்கி கம்மமாகும்.  (பாலியில் தருமம்>தம்மம் ஆகும். தமிழில்  இருமம் இம்மம் ஆகி இம்மையைக் குறிக்கும். எருமை கன்னடத்தில் எம்மெ ஆகும். உருநம் = உச்சிவேளை என்பது உண்ணமாகும். உண்ணத்தைச் சங்கதம் உஷ்ணமாக்கும். உருநத்தை நெல்லையார் உருமம் என்றுஞ் சொல்வார். பருமுவது பம்மும்; பின் பொம்மும். மருமம் மம்மாகும். இன்னும் பல சொற்களை இங்கு எடுத்துக் காட்டலாம்.)

கருமகாரர்>கம்ம காரர் = வினைஞர், கைத் தொழிலாளர்; கம்மத்தம் = வேளாண்பண்ணை; கம்மம் = பயிர்த்தொழில்; கம்மம் = கருமியர் தொழில் (இரும்புக்கொல்லர், தச்சர் போன்ற பல்வேறு craftsmen); கம்மம் = தொழில்; கம்மவாள்>கம்மவார் = தெலுங்கு மொழி பேசும் உழவருள் ஒரு பிரிவினர்; கம்மாக்காரர் = மீனவர்; கம்மாளன் = பொன்வேலை செய்பவன்; கம்மாளத்தி; கம்மி = தொழிலாளி; கம்மியநூல் = சிற்பநூல்; கம்மியம் = கைத்தொழில், கம்மாளத்தொழில்; கம்மியன் = தொழிலாளி;  கம்மாளன்= நெய்பவன்; கருமம் ஆளா மட்டி = கம்மம் ஆளா மட்டி> கம்மாளாமட்டி> கம்மணாம்ட்டி>கம்மணாட்டி= வேலைசெய்யத் தெரியாதவன்; கமக்காரன் = உழவன் (கம்மம் தொகுத்துக் கமம் ஆனது); கமங்கட்டுதல் = உரிமை நிலத்தில் வேளாண்மை செய்தல்; கமத்தொழில் = பயிர்த்தொழில்; கமம் = நிறைவு; கமம் = வேளாண்மை. நன்செய்

இத்தனை பேரும் இருக்குமிடம் கம்மம் = ஊர், சிற்றூர். கம்மம் பாகதத்தில் காம ஆகும். இதுவே பாஷா>சங்கதத்தில் க்ராம ஆகும். எப்படிச் சுற்றினாலும், இந்தியாவின் பல நாட்பட்ட சொற்களை அடையாளங் காணத் தமிழுக்கு வாராது போக முடியாது ஐயா. இதை நான் சொல்வதால் தான் ”தமிழ் வெறியன்” என்பார். க்ராமத்தின் உருப்படியான விளக்கத்தை வேறு மொழி வழியே யாரையேனும் சொல்லச் சொல்லுங்கள், பார்ப்போம்!


Sunday, December 01, 2019

சதுரங்கம் - 5

சதுரங்கம் போலவே எட்டுப்பதி ஆட்டத்திலும் எதிரி காய்களை வெட்டுவது உண்டு. ஒவ்வொரு வெட்டுக்கும் புள்ளிகளுண்டு. காலாளை வெட்ட 1 புள்ளி, தேரை வெட்ட 2, இவுளியை வெட்ட 3, யானையை வெட்ட 4, தலைவனை வெட்ட 5. இந்த ஆட்டத்தின் நடுவில் எந்த வாய்ப்பிலும் எதிரித்தலைவனை வெட்டலாம். தலைவனைக் கட்டும் முற்றுகை (check)முயற்சி இவ்வாட்டத்தில் இல்லை.  எதிரியின் எல்லாக் காய்களையும் வெட்ட, 19 புள்ளிகள் கிடைக்கும். தன் காய்கள் பலியாகாது, 3 எதிரிப்படைகளை வீழ்த்தின் உச்சப் பெறுதியாய் 54 புள்ளிகள் கிட்டும். பொதுவாய் இது அரிது. எந்நேரத்திலும் ஆட்டத்தை நிறுத்திவிடலாம். யாருக்குப் புள்ளிகள் அதிகமோ அவர் வெற்றிபெற்றவர் ஆவார். அல்லது 3 பேர் முற்றிலும் தோற்று ஒருவர் மட்டும் எஞ்சும் நிலை ஏற்படலாம்.

மேலே யானை, இவுளி, தேரெனத் தனித்தனியே சொன்னாலும் அவற்றில் ஆட்களிருப்பதாகத் தான் பொருள். (யானையில் 6 பேர், தேரில் 6 பேர், குதிரை செலுத்த ஒருவர். தனிப்பட்ட குதிரை போல், தேர்/ யானையைச்  சுற்றியும் குதிரையுள்ளதாய்ப் பொருள். பாரதக் குறிப்பின்படி 1 யானைக்கு 3 சுற்றுக் குதிரைகளும், யானை செலுத்த 6 பணியாட்களும்,  3 சுற்றுக் குதிரைகளுக்கு 3 ஆட்களும், 3 குதிரைகளைச் சுற்றி 15 காலாட்களும் இருந்தார். இதுபோல் ஒரு தேருக்கு 4 செலுத்தக் குதிரைகளும், 3 சுற்றுக் குதிரைகளும் தேர்செலுத்த 6 பணியாட்களும், சுற்றுக் குதிரைகளின் மேல் 3 ஆட்களும். 3 குதிரைகளைச் சுற்றி 15 காலாட்களுமிருந்தார். இத்தனை ஆட்களுக்கும் பகரியாய் எட்டுப் பதி ஆட்டத்தில் 1 காலாள் மட்டுமே அந்தந்தக் காய்களின் முன் வைக்கப் பட்டு ஆட்டம் நகர்கிறது

ஒவ்வொரு வெட்டின் மறை பொருளும், உண்மைப் போரில் நடைபெறுவது போலவே வெளிப்படும். யானையிலிருந்து போரிடுவது  பெரும்பாலும் வேல்வீசிப் பொருதலே. தேரிலிருந்து பொருதுபவர் ம் வில்லால் அம்பெறிந்தே போர்செய்கிறார். தலைவனும் தேர்போன்ற வையத்தில் (வாகனத்தில்) இருந்தே வேலும், அம்பும் எய்கிறார். தேவைப்பட்டால் வாட்சண்டையும் இடுகிறார். காலாள்/வயவர் என்பார் வேல்சண்டை மட்டுமே செய்கிறார். மேலே நான் கூறிய மணிமேகலை, கல்லாட வரிகளையும் நினைவு கொள்ளுங்கள். இதுவே எட்டுப்பதி ஆட்டத்தின் பின்னுள்ள போர்ச் சிந்தனை.

எட்டுப்பதி ஆட்டத்திலிருந்தே சதுரங்க ஆட்டம் பெரும்பாலும் எழுந்தது போலும். மிகச்சில மாற்றங்கள் செய்தாலே சதுரங்க ஆட்டம் வந்துவிடும். முதலில் 4 பேர் ஆட்டமானது 2 பேர் ஆட்டமாகிறது. ஒருவருக்கு 2 பட்டிகள் என்றாகி ஒரு தலைவன் அரசனாகி இன்னொருவன் அமைச்சன்/சேனாபதி ஆகிறான். அரசனின் நகர்ச்சி காலாளைப் போல் ஒரு கட்டமே தரப்படுகிறது. பகடை தவிர்க்கப் பட்டு, எக்காயை வேண்டினும் ஆட்டக்காரர் நகர்த்தலாம் என விதி மாறுகிறது.  ஆட்டமுடிவு  ”மாற்றரசன் மேல் முற்றுகை” என மாறுகிறது  ஆகப் போர்களுக்கு நடுவில் பொழுதுபோக்காயும் ஆயிற்று; போர் அறிவைக் கூர்தீட்டுவதாயும் ஆயிற்று, இப்படித்தான் சதுரங்கம் வளர்ந்தது. 

சதுரங்க ஆட்டத்திற்குத் தமிழில் வேறு தனிப்பெயர் உண்டா என்று தெரிய வில்லை, ஆனைக்குப்பு எனும் சொல் இவ்வாட்டத்தைக் குறித்தது என அகர முதலிகளில் உள்ளது தான். அதற்கு அணைவாய் எல்லோரும் ஒன்றுபோல,  ”ஆனைக்குப்பாடுவாரைப் போலே” என்ற திருவாய்மொழி ஈடு, 10, 3,  9 ஆம் விளக்கத்தை இனங் காட்டியிருப்பார். இதில் ஒரு வேடிக்கை தெரியுமோ? இப் பாசுரக் குறிப்பே தவறு.  ”ஆனைக்குப்பே சதுரங்கம்” என்ற சொன்ன ஒருவர் கூட ஈட்டு மூலத்தைப் பார்க்கவே இல்லை. திருவாய்மொழி பத்தாம் பத்தில் ”செஞ்சொற்கவிகாள்” எனுந் தலைப்புக் கொண்ட 7 ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டிற்கான விளக்கம் இது. அதைப் போய் 3 ஆம் பதிகம் என்று தவறாய் எல்லோரும் எழுதியுள்ளார்,  இருந்தாலும் 2 காரணங்களால் ஆனைக்குப்பு = சதுரங்கம் என்பதை இன்னும் ஏற்கத் தயங்குவேன்.

1. ”ஆறாயிரப்படி” ஈட்டு விளக்கத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அம்மூலங் காணவில்லை.  நம்பிள்ளையின் ”இருபத்தி நாலாயிரப் படி” விளக்கத்தை மட்டுமே பார்த்தேன். திருவாய்மொழி பத்தாம் பத்தில் ”செஞ்சொற்கவிகாள்” எனுந் தலைப்புக் கொண்ட 7 ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டின் விளக்கமாய்,, நாலாயிரப்பனுவலில் இல்லாத  சொல்லாட்சியாய், ஆறாயிரப் படியார் இதைச் சொல்லியுள்ளார். ”யானைக்  குப்பு ஆடுவாரை” என்று பிரிக்காது, ”யானைக்குப் பாடுவாரைப் போல” என  ஆறாயிரப்படி மூலத்தில் இருந்தால் என்செய்வது? தவிர,

 2. சதுரங்க ஆட்டத்தில் யானை மட்டுமின்றி, குதிரை, தேர், அமைச்சன்/சேனாபதி, காலாள் என்று பல காய்களும் குப்ப வைக்கப் படுகின்றன. அப்புறம் யானைக்கு மட்டும் என்ன சிறப்பு?  ஒருவேளை யானைக்குப்பு என்பது சதுரங்கப் பலகையில் ஆடும் வேறு ஆட்டமானால் என் செய்வது?

இப்போதைக்கு ஆனைக்குப்பை நான் ஏற்க முடியவில்லை.  அதேபோல் 'check', used in chess என்பதற்கு அரசு என்பதையும் நான் ஏற்கவில்லை. முற்றுகை என்பது இன்னும் தெளிவான சொல். சதுரங்க ஆட்டச் சூழ்க்குமம் ஒரு காலத்தில் சிலருக்கு மட்டுமே கமுக்கமாய்க் கற்றுக்கொடுக்கப் பட்டது. படைத்தலைவருக்கு மேல் இருந்தோர் மட்டும் தான் இந்த ஆட்டத்தை ஆடினார் போலும். எனவே தான், ஆட்டத்தை விவரிக்கும் இலக்கிய வரிகள் நமக்குக் கிடைப்பது  குதிரைக் கொம்பாக உள்ளது. இவ்வாட்டம் 19, 20 ஆ நூற்றாண்டுகளில் தான் பொதுமக்களிடை பரவியது . இந்நிலையில் ஆட்ட வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கும் பழங் கையேடுகளைத் தேடுவது போகாவூருக்கு வழி தேடுவதாகும். 

சதுரங்கம் பற்றிய என் கருத்துக்களை நான் சொல்லிவிட்டேன்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, November 30, 2019

சதுரங்கம் - 4

நாற்படை அளவுகள் சிச்சிறிதாய் பெரிதாகின. அவற்றின் அளவுகளைப் பார்ப்போம். கொஞ்சம் வியந்துபோவோம். முதலில் வருவது பட்டி. ஒரு நாட்டுப்படையின் முதலலகு பட்டி/பண்டி/ பத்தி/பந்தி என்றழைக்கப் பட்டிருக்கலாம். (சரியான சொல் ஏதென என்னாற் சொல்ல முடியவில்லை. ஆனால் படைக்கும் பட்டிக்கும் ஏதோ தொடர்பு தெரிகிறது.) இன்றும் பட்டி, கால்நடைத் தொகுதியையும், கால்நடைகள் கட்டுமிடத்தையும் குறிக்கிறது. (முல்லை நில ஊர்கள் பட்டியெனப்பட்டன.) ’பண்டி’ வண்டியையும், யானையையுங் குறித்தது. வடபுல நூல்களிலும் (மோனியர் வில்லியம்சு அகர முதலி, மகாபாரதம், அல்பெருனியின் பயணக்குறிப்புகள்), தமிழ் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும், இலக்கியங்களிலும் குதிரைகட்டுந் துறை “பந்தி” எனப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டு பெரும் பற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாய் உடையார் புராணத்தில் இச்சொல் வரும். இங்கே பட்டியெனவே பயில்கிறேன். மற்ற சொற்களை ஆய்ந்து சரியான முடிவிற்கு வரவேண்டும்.

மகாபாரதப்படி 1 பட்டியில் 1 தேர், 1 யானை, (தேரை/யானை சுற்றி) 3 குதிரைகள் (தேரும், யானையும் குதிரைக்கணக்கில் ஒன்று போலக் கருதப்பட்டன), ஒவ்வொரு குதிரையைச் சுற்றி 5 காலாள்கள் இருந்ததாய்ச் சொல்வர். குதிரைகளுக்கும் ஆட்களுக்குமான மொத்தக் கணக்கைச் சரியாய்ப் புரிந்துகொள்ளவேண்டும். (அரபுப் பயணி அல்பெருனி இதில் தவறினார்.) 1 தேரிழுக்க 4 குதிரைகள் எனில் பட்டியில் மொத்தம் 4+3+3= 10 குதிரைகள் இருந்தன. ஆட்களைக் கணக்கிட்டால் யானைத்தலைவன், முன்னால் யானைப்பாகன், பின்னால் துணை யானைப்பாகன், தலைவன் வேல்வீச யானை மேலிருந்து உதவும் 2 வீரர், யானையோடு கீழ் ஓடிவரும் உதவியாளென 1 யானைக்கு 6 பேருண்டு. இதுபோல் தலைவன், தேர்ப்பாகன், மெய்க்காவலன், தலைவனுக்குத் தளவாடம் கொடுத்து உதவும் 2 வீரர், தேர்ப்பழுது பார்க்கும் தச்சனென 1 தேருக்கும் மொத்தம் 6 பேருண்டு. எனவே மகாபாரதப் படி, 1 பட்டியில் 2*[6+3*(1+5)] = 48 ஆட்களிருந்தார். எனவே ஒரு பட்டியில் தேர், யானை, குதிரைகள், ஆட்களின் விகிதம் (1:1:10:48). இந்தக் கணக்கில் யானை, குதிரை, தேரொடு சேராத தனிக் காலாட்கள் இருந்தாரா என்பது தெரியவில்லை. 16 கணபதங்களுக்குச் சற்று முன்னிருந்த குரு, பாஞ்சால அரசுகளில் இதுவே வழக்கம் போலும்.

மாறாகக் குடிலரின் அருத்தசாற்றப் படி பார்த்தால், 1 தேர் அல்லது 1 யானையைச் சுற்றி 5 குதிரைகள், 1 குதிரை சுற்றி 6 காலாட்கள் என்றுவரும். இக்கணக்கின் படி தேர்:யானை:குதிரைகள்:ஆட்கள் ஆகியோரின் விகிதம் 1:1:(4+5):.2*[6+5*(1+6)] = (1:1:14:92) ஆகும். மகத அரசில் இதுவே பழக்கம் போலும். (பாரதக் காப்பியம் பொ.உ.மு. 1000-800 ஐ ஒட்டிய கதையைச் சொல்லும். அக்காப்பியம் பொ.உ.மு.400 களில் எழுதப்பட்டு படிப்படியாக இடைச் செருகல்கள் பெற்று பொ.உ.400 வரை எழுதப்பட்டுக்கொண்டே வந்தது. படை பற்றிய விரிவான குறிப்புகள் பெரும்பாலும் இக் காலகட்டத்தின் பிற்பகுதியில் வரையப்பட்டிருக்கலாம்) பட்டிக்கு மேலும் அக்காலத்தில் படையணிகளுண்டு. இவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். சங்கதப் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் சங்கதப் பெயர்களே உள்ளன. தமிழ்ப்பெயர்களை பெருமாய்விற்கு அப்புறமே என்னால் அடையாளங் கண்டுகொள்ள முடிந்தது. அவற்றைக் கீழே சொல்லியுள்ளேன்.

3 பட்டிகள்              = 1 படைமுகம் [சேனாமுகம். மகாபாரதக் கணக்கு (3:3:30:144),                        அருத்தசாற்றக் கணக்கு (3:3:42:276)];
3 படைமுகங்கள் = 1 குழுமம்        [குல்ம.              மகாபாரதக் கணக்கு (9:9:90:432),                        அருத்தசாற்றக் கணக்கு (9:9:126:828)];
3 குழுமங்கள்       = 1 கணம்           [கண,                மகாபாரதக் கணக்கு (27:27:270:1296),                அருத்தசாற்றக் கணக்கு (27:27:378:2484)]);
3 கணங்கள்         = 1 வானி            [வாகினி.         மகாபாரதக் கணக்கு (81:81:810:3888),                அருத்தசாற்றக் கணக்கு (81:81:1134:7452)];
3 வானிகள்          = 1 தானை          [ப்ரிதனா        மகாபாரதக் கணக்கு (243:243:2430:11664)         அருத்தசாற்றக் கணக்கு (243:243:3402:22356)];
3 தானைகள்       = 1 குமம்              [சமூ                  மகாபாரதக் கணக்கு (729:729:7290:34992)         அருத்தசாற்றக் கணக்கு (729:729:10206:67068)];
3 குமங்கள்          = 1 சேனை           [அனீகினி       மகாபாரதக் கணக்கு (2187:2187:21870:104976) அருத்தசாற்றக் கணக்கு (2187:2187:30618:201204)];
10 சேனை            = 1 அக்கவானி. (அக்க்ஷௌகினி அல்லது அக்குரோனி).

மேற்சொன்ன 2 கணக்குகளையும் அணிவகுப்புகளையும் அறிய, The Arthashastra-Kautilya -Penguin Classics- edited by L.N.Rengarajan 1992 என்ற பொத்தகத்தைப் படியுங்கள் . அருமையான ஆய்வுப் பொத்தகம். அருத்த சாற்றம் படித்தால், நம் புறப்பொருள் இலக்கியங்கள் இன்னும் தெளிவாய்ப் புரியும். (தெரிந்தோ, தெரியாமலோ நம்முடைய பல நூல்கள் சங்கதத்தில் வந்துவிட்டன. அவற்றைப் படிக்கும்போது தான் நாம் எவற்றை இழந்தோமென்று புரிகிறது. நம் நூல்களின் பெருமையும் புரிகிறது. 

எட்டுப்பதி (அஷ்டபதி) எனும் வேறொரு ஆட்டத்தில் சதுரங்கம் தொடங்கியது போல் தெரிகிறது. இதைச் சதுராஜி என வடக்கே அழைத்துள்ளார். https://en.wikipedia.org/wiki/Chaturaji அவ்வாட்டத்தில் 4 பேர் விளையாடுவர். ஒவ்வொருவரிடமும் 8 காய்களுண்டு. எட்டுப்பதி ஆட்டம் இப்போதையச் சதுரங்கப் பலகையிலேயே (8*8 = 64 கட்டப் பலகை) ஆடப்பட்டது. 8 காய்கள் ஒரு பட்டி (படை)யை குறிப்பதாய்க் கொள்வர்.  ஒரு படையில் 1 தலைவன், 1 யானை, 1 இவுளி, 1 தேர் என 4 காய்களும், இவற்றின் முன் 4 காலாளும் ஆக மொத்தம் 8 காய்கள் 8 பதியில் நிலை கொள்ளும். (இந்த ஆட்டத்தில் இருக்கும் 64 பதிகளில் தாம் கொண்ட 8 பதிகள் போக அடையவேண்டிய பதிகள் 56 என்பர். பழைய இந்தியாவில் ஒரு வேந்தன் சூறையாடிப் பெறவேண்டிய நாடுகளும் 56 என்பர்).

4 பேர் ஆடுவதால், மொத்தம் 32 காய்கள் ஆட்டத்தில் ஈடுபடும். (4 பேரும் 4 வேந்தரைக் குறிக்கிறார்.) நாலு படைக் காய்களுக்கும் வெவ்வேறு வண்ணம் பூசப்பட்டிருக்கும்.  இக்காய்கள் நகரச் சில சதுரங்க விதிகள் போக, எந்தக் காய் நகரவேண்டுமென நிறுவ நீள்பகடைத் துணையும் உண்டு. ஒரு நீள் பகடையில் 2, 3, 4, 5 என்ற எண்கள் மட்டுமே பொறித்திருக்கும்.  ஓர் ஆட்டத்தில் 2 நீள்பகடைகள் பயன்படுத்துவர். நீள் பகடைகளுக்கு மாறாக அறுமுகப் பகடைகளைப் பயன்படுத்தலாம். 6 முகப் பகடைகளில் 1 ஆம் எண் விழுந்தால், 2 இன் விதி பொருத்தியும். 6 ஆம் எண் விழுந்தால்,  5 இன் விதி பொருத்தியும் இதிலாடுவர். இரு நீள் பகடைகளைக் கொண்டு ஆடுவதாய் இப்போது கொள்வோம். விழும் பகடை எண்களுக்குத் தக்க படையுறுப்புகளை நகர்த்தவேண்டும். 

2 விழுந்தால் தேரையும், 3 விழுந்தால் இவுளியையும், 4 விழுந்தால் யானையையும், 5 விழுந்தால் காலாள் அல்லது தலைவனையும் நகர்த்தலாம்.  சதுரங்கம் போலவே தேர் குறுனத் திசையில் பலகை விளிம்பு வரை வேண்டும்படி நகரும். நெடுக்கு/கிடைத் திசையில் யானை நகரும். தலைவன் குறுனம், நெடுக்கு, கிடை என 3 திசையிலும் நகர்வான். காலாள் நெடுக்கில் மட்டும் ஒரு கட்டம் நகரலாம். இவுளி நகர்ச்சி சற்று விதப்பானது. கோண நகர்ச்சியில் நெடுக்கிலும் கிடையிலும் சேர்த்து 3 கட்டம் “ட” எழுத்தைப் போல் நகரலாம்.  இது முன்சொன்ன மகாபாரதக் குறிப்பிற்கு ஒத்துவருகிறது. அதில் தேர்/யானையை ஒட்டி 3 குதிரைகள் ஓரடுக்காய் நகருமென்றேன். இங்கு 1 குதிரை 3 கட்டம் என்பது ஏதோவொரு தொடர்பு காட்டுகிறது.   இப்போது பகடைகளைக் குலுக்கிப் போட்டால் 2, உம் 4 உம் விழுவதாய்க் கொள்வோம். இதன்மூலம் ஓர் ஆட்டக்காரர் தேரையும் யானையையும் விரும்பியபடி நகர்த்திக் கொள்ளலாம். இனி, அடுத்தவர் பகடை உருட்டித் தன் நகர்ச்சியைப் பார்ப்பார்.

அன்புடன்,
இராம.கி.

Friday, November 29, 2019

சதுரங்கம் - 3

இனிச் சதுரங்க ஆட்டம் எக்காலம் எழுந்ததெனப் பார்ப்போம். நிலைப் படைகள் என்பன ஓர் அரசிற்குப் பின்புலனாய் அமைவதற்கு வெகுகாலம் முன்னே, துணைக்கண்ட நெய்தலிலும், அடுத்துள்ள திணைகளிலும் மாந்த நகர்ச்சிக்கு நெடுநாட்கள் நடையே வழியானது. நடைக்கு அடுத்த நகர்ச்சி சகடங்களால் விளைந்தது. விலங்காண்டி நிலையிருந்து வளர்ந்தபின், குறிப்பிடத்தக்க நுட்பியல் மாற்றமாய்ச் சக்கரம், சகடம், சகடை, தேர், உருளம்> உருடம்>உருதம்>ரதம் போன்றவை குமுகத்தில் உருவாகின. இவை எங்கு எப்பொழுது முதலில் உருவாகின என இன்னுந்தெரியாது. ஆனாற் சிந்துவெளியில் இவையிருந்ததற்குச் சான்றுகளுண்டு. [தொடக்கத்தில் காளைகளே சகடங்களை இழுத்திருக்கலாம். கால்>காள்>காளை; கால்நடை என இன்றும் சொல்லப் படுவதே ”காளைச்” சொற்பிறப்பைக் காட்டும்]. இதே போன்ற சான்றுகள் எகிப்திய, சுமேரிய நாகரிகங்களிலும் கிடைத்துள்ளன.

பொ.உ.மு.9000-1800 வரை சிந்துவெளியில் குதிரைப்புழக்கம் இருந்தது போல் தெரியவில்லை.  (யானையும் சகடும் இருந்தன.) இத்தனைக்கும் ஆவ்க்கனித்தான், இரான், நடு ஏசியா போன்ற மேற்கு ஆரிய நாடுகளில் குதிரை உலவியது. இட்டைட், மித்தனி நாகரிகங்களில் குதிரை, வண்டி கொண்டே ஆரியர் முன்னிலைக்கு வந்தார். சிந்துவெளி நாகரிக முடிவில் குதிரைத் தாக்கம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கலாம். சிந்துவெளிக்கு மேற்கே நடுக்கிழக்கு நாடுகள் நடுவண் ஆசிய நாடுகள், இரோப்பா போன்ற இடங்களில் யானையில்லை. ஆனால் தேரும் குதிரையும் இருந்தன.

பாரசீக, அரேபியா நாடுகளிலிருந்து நிலம் மூலம் வடக்கேயும், நருமதைத் துறைகள் தொடங்கி தீவகற்பம் முழுதும் கப்பல் மூலம் தெற்கேயும் குதிரைகள் (பொ.உ.மு. 1500க்கு அப்புறம்) தொடர்ந்து இறக்கப் பட்டன. இதன் பின் சுமைவண்டிகளைக் காளைகளும், வேகவண்டிகளைக் குதிரைகளும் இழுத்தன. இந்திய நாகரிகத்தில் பொ.உ.மு.1500/1200 க்கு அப்புறமே படை வேலைகளுக்குக் குதிரை பயன்பட்டது. குதிரையையும், வண்டிகளையும் இணைத்த பின் தான் சாலைகளிற் கல் பாவும் பழக்கமும், மேடுபள்ளமின்றிச் சாலைகளை அமைக்கும் நுட்பமும் இந்தியாவிற் பரவியது.  இந்த நுட்பமின்றி குதிரை பெருவலப் (ப்ரபலப்) பட்டிருக்காது.
.
இந்தியாவில் யானைகளும் மாந்தவேலைக்கு உதவியாய் நெடுநாள் பழக்கப் பட்டு வந்தன. அவற்றைக் கொண்டு எதிரிக் கோட்டைகளை அழிப்பது பொ.உ.மு. 2000க்கு முன்னும் இருந்திருக்கலாம். இப் பழக்கம் எப்போது ஏற்பட்டதென உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. பெரும்பாலும் பொ.உ.மு. 1200 - 1000 க்கு அப்புறம்,  சகடங்களும், யானைகளும், குதிரைகளும் போர் உத்திகளில் பயன்படத் தொடங்கின. போரொட்டிய இலக்கிப்பு முயற்சியில் (logistic effort. இலக்கு= குறிப்பிட்ட இடம்; இலக்கிப்பு= குறிப்பிட்ட இடத்திற்குப் பொருள்களைக் கொண்டு சேர்த்தல்.) தேரும், யானையும் ஒன்றுபோல் கருதப் பட்டன தேரை நகர்த்துவதும், யானையை நகர்த்துவதும் (அவற்றின் எடை கூடக்கூட) ஒரேயளவு மாந்தமுயற்சி கொண்டவையாகக் கருதப்பட்டன. சதுரங்கத்திலும் கூட rook ஐச் சிலர் தேரென்பார். சிலர் யானையென்பார். இவற்றிடை ஒற்றுமைகளும்ம் வேற்றுமைகளும் உண்டு. (இரண்டையும் நடத்துவோர் நம்மூரில் பாகரென்றே சொல்லப்பட்டார்.)

பேரரசுகள் ஏற்படுமுன் இனக்குழுச் சண்டைகளே இங்கு இருந்தன. ஓர் இனக் குழுவோடு இன்னோர் இனக்குழு போரிடுகையில் கூட்டமாய்த் திரண்டு, கையிற் கிடைத்த ஆயுதங்களையும், கூட இருந்த விலங்குகளையும் பயன் படுத்தியே பொருதினார்.  இக்காலத்தில் யாரிடமும் நிலைப்படைகள் இல்லை. 16 கணபதக் காலத்திற்கு (பொ.உ.மு. 800 க்கு) அருகில் தான் பேரரசுகள் (குறிப்பாகக் கோசலமும் மகதமும் பின் வச்சிரமும் அவந்தியும்) வடபுலத்தில் எழுந்தன.  (தென்புலத்தில் பேரரசு அப்போது இருந்ததா? இது வரைக்கும் தெரியாது. ஆனால் பொ.உ.மு. 600 அளவில் நம்மூரில் அரசுகள் இருந்தன.) போர்த் தடந்தகை (war strategy) பற்றிய சிந்தனையும்  ஆட்டமும் பொ.உ.மு.700/600 களில் எழவே  வாய்ப்பதிகம். மாபாரதக் கதை கூட (அது உண்மையோ, கற்பனையோ) பொ.உ.மு.600 களில் எழுந்ததென்றே வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. மாபாரதத்திலும் இடைச் செருகல் தொடர்ந்து நடந்து முழு வடிவுற்றது பொ.உ.400 என்பார். 

முப்படைகள் பற்றி தமிழில் முதலில் சொன்னது தொல்காப்பியமே, பொருள் அதிகாரம் புறத்திணையியலில் தும்பைத்திணை பேசும் 17 ஆம் நூற்பாவின் முதலிரு அடிகள்,

தானை, யானை, குதிரை என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்

என்று போகும். இதில் தேர் நேரடியாகக் கூறப்படவில்லையாயினும், இதே புறத்திணையியல் 21 ஆம் நூற்பாவில் தேர் பேசப்படுகிறது. ஒருவேளை தானைக்குள் காலாட்களோடு, தேரும் சேருமா? தெரியாது. (தொல்காப்பியக் காலம் குறைந்தது பொ.உ.மு. 700 என்றே பலரும் சொல்கிறார்.) நாற் படைகளை முதலில் வெளிப்படச் சொன்ன சங்க இலக்கியம் புறநானூறு தான். (இக்குறிப்பிற்கு முன்னும் தமிழ்வேந்தரிடை நாற்படைகள் இருந்திருக்கலாம்.) பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடும் புறம் 55 ஆம் பாட்டில்,

கடுஞ்சினத்த கொல்களிறும், கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவரும் என

7-8 ஆம் வரிகள் வரும்.  இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், மருதன் இளநாகனார் ஆகியோரின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 50 என்று ”சிலம்பின் காலம்” நூலில் சொல்லியிருப்பேன். இதற்கடுத்து வெளிப் படையாகத் தமிழிலக்கியத்தில் நாற்படையைச் சொல்லியது பொ.உ.375-385 இல் தோன்றிய மணிமேகலையே. அதன்படி, இருபெரும் மன்னர் மணி பல்லவப் புத்தபீடிகையை தாமே கொள்வதற்காக தம்பெருஞ் சேனைகளால் சண்டையிட்டாராம். அடுத்து, சேர, பாண்டியரின் யானை, தேர், குதிரை மாவொடு, வயவர் நிரம்பிய சேனைகளோடு வஞ்சியிற் பொருதி சோழன் காரியாற்று மாவண் கிள்ளி அடைந்த வெற்றி பற்றி,

வஞ்சியினிருந்து வஞ்சி சூடி
முறஞ்செவி யானையும் தேரும் மாவும்
மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர்
சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை
ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி
ஒளியொடு வாழி ஊழிதோ றூழி.

என்று மணிமேகலை 19, 120-128 வரிகள் சொல்லும். எனவே சதுரங்கப் போர் என்பது பொ.உ.மு. 50 க்கு அருகில் வந்துவிட்டது என்றே பொருளாகும்.  மூன்றாவதாய், என் கணக்கில் 6 ஆம் நூற்றாண்டு ஆன (இதை ஒப்பாது, 9/10 ஆம் நூற்றாண்டு என்பாரும் உண்டு) கல்லாடம், 36 ஆம் பாட்டில் 6-7 ஆம் வரிகளில்,  ”முன்னொரு நாளில் நால்படை உடன்று செழியன் அடைத்த சென்னி பாட” என்றும், 40 ஆம் பாட்டில் 14-15 ஆம் வரிகளில், “தருமப் பெரும்பயிர் உலகுபெற விளக்கு நாற்படை வன்னியர் ஆக்கிய பெருமான்” என்றும் 4 படைகளை வெளிப்படச் சொல்லி வரும்.

எனவே சதுரங்க ஆட்டம் என்பது பொ.உ.மு. 700 அளவில் சற்று முன்னோ, பின்னோ தோன்றியிருக்கலாம்.  தொல்லாய்விற் காய்கள் கிடைத்தால் இதை உறுதி செய்யமுடியும். கீழடி ஆய்வில் கிடைத்த விளையாட்டுக் காய்கள் எந்த நூற்றாண்டு அளவில் கிடைத்தன, அவை எதற்குப் பயன்பட்ட காய்கள் என்பதும் தெரியவில்லை. எதிர்காலமே இதற்கு விடையிறுக்க வேண்டும்..

அன்புடன்,
இராம.கி.

Thursday, November 28, 2019

சதுரங்கம் - 2

முதலில் சொல்ல விழைவது: " சதுரங்கம்  என்பது சங்கதச் சொல் இல்லை, அது ஓர் இருபிறப்பிக் கூட்டுச்சொல்" என்பதாகும். சதுரங்கத்தின் முதற் பகுதியான சதுரத்தில் ’அம்’ விடுத்துச் சதுரெனச் சங்கதம் கொள்ளும். எப்படிப் பார்த்தாலும் சதுரம் என்பது தமிழே. நம்மில் பலரும் இதை அறியாது உள்ளோம். இதன் விளக்கத்தை மீண்டும் ஒருமுறை கொடுப்பதில் பொருளில்லை. அருள்கூர்ந்து  https://valavu.blogspot.com/2019/07/blog-post.html) என்ற வலைப்பதிவைப் படியுங்கள்.. அடுத்துவரும் அங்கம் என்பது ஓர் இருபிறப்பிச் சொல். பெரும்பாலும் அலங்குதல்>அலங்கம் (= உறுப்பு, சினை) என்ற சொல்லில் கிளைத்திருக்கலாம். இதற்கு https://valavu.blogspot.com/2018/07/organ.html என்ற வலைப்பதிவைப் பாருங்கள். சதுர்+அங்க = சதுரங்க எனக் கூட்டுச்சொல் வடமொழியிலாகும்.  சதுரங்கப் பொருளுக்குக் கீழே வருவோம்.  அதற்கு முன் வேறொன்றைக் கவனிக்க வேண்டும்.

”சதுரங்கம் என்பது முதல்நிலைப் பொருளில் இவ்வாட்டத்தைக் குறிக்க வில்லை. இடம், பொருள், ஏவல் தெரிகையில், ஒரு நீளக் கூட்டுச் சொல்லை முற்றிலும் சொல்லாது  சுருங்கச் சொல்வது எல்லா மொழியார்க்கும் உள்ள பழக்கம். காட்டாக, ”ஐலசமுத்ரம்” எனும் சங்கதக் கூட்டுச்சொல்லில் ஜலத்தைத் தவிர்த்து சமுத்ரம் (=பெருகிக் கிடப்பது) என்று மட்டுமே சொல்லிப் பொருளைப் புரிய வைப்பார். [நேர்தமிழான நீர்க்கடலிலும் கூட நீரைத் தவிர்த்துக் கடலை (= அகண்டது, விரிந்தது, பரந்தது) மட்டும் நாம் தனியே பயில்வோம். இதுபோல் பல்வேறு சொற்களை நான் சொல்லமுடியும்.  சதுரங்கமும் இப்படியானதே. சதுரங்க ஆட்டத்தில் ஆட்டத்தைத் தொகுத்துச் சதுரங்கமே (இடம், பொருள், ஏவல் கருதி) பின்னால் நிலைத்தது.   அரசப் பாதுகாப்பு தொடர்பான இச்சொல்லுக்குள் போகு முன், பொருட்பாலின் (அங்கவியலின்) முதற் குறளில்

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு..

என்று அரசனோடு சேர்த்து 7 உறுப்புகளை வள்ளுவர் தெரிவிப்பதைக் கவனிப்போம். (இதில் குடி என்பது நாடு. கூழ் என்பது கூலம்/தானியத்தில் எழுந்த சொல். பயிரியற் பொருளியலில் கூலமே செல்வ அடிப்படை.   கருவூலம் (treasury), நாட்டின் செல்வம் (wealth) என்றும் கூழைப் புரிந்து கொள்ளலாம். கூழ்பற்றிப் படிப்பது கூழியல். பொதுவாக economics க்கும், விதப்பாக macro-economics க்கும் இது சரிவரும்.  ”கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு” எனும் 554 ஆம் குறளிலும் கூழ் பயிலும். )  இக்குறளுக்கும்  அருத்த சாற்றம் (அர்த்த சாஸ்த்ரம்) 6 ஆம் பாகம், முதலாம் அத்யாயத்தில் ”ஸ்வாம்ய அமாத்ய ஜநபத துர்க கோஷ தண்ட மிதராணி ப்ரக்ருதய” என்ற முதற்சொலவ முதல்வரிக்கும் தொடர்புண்டு. ஸ்வாம்ய = அரசன்; அமாத்ய = அமைச்சு; ஜநபத = குடி/நாடு; துர்க = அரண்; கோஷ = கூழ்; தண்ட = படை; மித்ர = நட்பு.  (வள்ளுவரின் கூழ் கோழ்>கோஷ என்று சாணக்கியரால் சொல்லப்படும். )  இந்த 7 உறுப்புகளில், முதலில் வள்ளுவர் சொல்வது படை தான். அந்தக் காலத்தில் நாடு, பொருளாதாரம், மக்கள், அரசு போன்றவை, உலகெங்கும் படைகளால் தான் காப்பாற்றப் பட்டன

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாந் தலை.

என்று படைமாட்சி அதிகாரம்  761 ஆங் குறளில் வள்ளுவர் படையின் முகன்மையைச் சுட்டிக் காட்டுவார். படையை மேலுங் கூறிட்டு அந்தக் காலத்த்தில் யானைப் படை (elephantry), தேர்ப்படை (chariotry), இவுளி/குதிரைப் படை (cavalry இவுளி என்பதே சங்க இலக்கியங்களில் பெரிதும் புழங்கியது. மேலை நாடுகளில் புழங்கும் Equus என்பது இவுளியொடு தொடர்புற்றது. இதன் அடியில்  குதிரைகள், கழுதைகள், வரிக்குதிரைகள் ஆகிய விலங்குகள் அடங்கும். குதிரை என்பது metathesis இல் குருதை ஆகி horse ஓடு தொடர்பு காட்டும்.,) காலாட்படை (infantry) என 4 அங்கங்களாய்ப் பிரிப்பர்.  [https://valavu.blogspot.com/2018/08/8.html என்ற இடுகையையும் படியுங்கள்.]   இந்தக் காலத்தில் அரணம் (army), நாவாய் (navy), வான (air force) என முப்படையைச் சொல்வோம்.  இதுபோக, போரில் ஈடுபடும் இருவேறு தானைகளும் (வள்ளுவர் காலத்தில் சேனை இல்லை போலும்) மாற்றார் வகுத்த படைவகுப்புகளை ( சங்கதத்தில்  இவற்றை வியூகங்கள் என்பார்)  அறிந்துகொண்டு முன்னேறிச் செல்ல வேண்டுமென்ற பொருளில்,

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.

என்ற 767 ஆம் குறள் வரும். முழுப் போரிலும், “ எதிரி என்ன மாதிரிப் படை/அணி வகுப்பு செய்கிறான்?  எது முன்னால் உள்ளது? எது பக்கவாட்டில் வருகிறது? எது மறைந்து தாக்கும்? ஏன் சிலவற்றை எதிரி மறைத்து வைக்கிறான்? எப்போது வெளிப்படுத்துகிறான்?  எதிரியின் ஒவ்வொருபடை  நகர்த்தலுக்கும் பின்னுள்ள பொருளென்ன? அவற்றை எப்படி முறியடிப்பது? அவன் படையை நாம் எப்படிக் கவிழ்ப்பது? - என்று கவனித்துக் கொண்டே இருப்பது படைத்தகையில் (military strategy) சேரும். இதுவே சதுரங்க விளையாட்டின் அடிப்படையும் ஆகும். இதைக் கற்கவே பலரும் இவ் விளையாட்டை  ஆடுகிறார், ஆங்கிலத்தில் chess is a strategy game என்பார். 768 ஆங் குறளில்

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்

என்பார். 768 ஆம் குறள் என்பது சதுரங்கம் ஆடுவோருக்கு முகன்மையான குறளாகும். போரல்லாத கோ-வலம் (governance; சிலம்பில் கோவலனுக்கு/கோத் தொழிலனுக்கு  இப்படிப் பெயர்வைப்பர். http://valavu.blogspot.com/2009/03/4.html), பொதின நடத்தம் (business practice) போன்றவைகளுக்கும் கூட இது போன்ற  strategy வேண்டுமென்று தான் படைத்தகை என்ற வள்ளுவரின் சொல்லைப் பார்த்துத் தடந்தகை (strategy) strategyஎன்ற சொல்லை ஒருகாற் பரிந்து உரைத்தேன். (படைத்தகை என்பது பதாகை, கொடி, குடை, பல்லியம், காகளம் போன்ர தோற்றம் என்று பரிமேலழகர் சொல்வார். நான் அதற்கு உடன்படேன். ”தோற்றத்தால் பாடு பெறும்” என்று அவர் சொல்லுவது சரியென எனக்குத் தோற்றவில்லை. )

அன்புடன்,
இராம.கி.

Wednesday, November 27, 2019

சதுரங்கம் - 1

'"சதுரங்கம்' என்ற சொல் சமக்கிருதம் என்றால் 'Chess' விளையாட்டுக்கு தமிழில் என்ன பெயர்?" என்ற கேள்வி (https://ta.quora.com/caturankam-enra-col-camakkirutam-enral-Chess-vilaiyattukku-tamilil-enna-peyar) அண்மையில் கோரா தமிழ்த் தளத்தில் எழுந்தது. இதற்கு 5 பேர் மறுமொழி அளித்தார். அவர்களில் ஒருவர் பேரா. செ.இரா. செல்வக்குமார்  16 நவம்பர் 2019 இல் அவரளித்த மறுமொழி வருமாறு:
-----------------------------------
சதுரங்கம் அல்லது ஆனைக்குப்பு என்னும் ஆட்டம் குறைந்தது 1500 ஆண்டுகளாக வெவ்வேறு விதிகளுடன் ஆடப்பட்டு வந்துள்ளது. இஃது இந்தியாவில் குப்தர்களின் ஆட்சிக் காலத்தில் (பொது ஊழிக்காலம் 300–500 வாக்கில்) தொடங்கியதாகத் தெரிகின்றது. இவ்வாட்டத்தின் வரலாற்றை அறிய விக்கிப்பீடியாவைப் பார்க்கலாம். இது சமற்கிருதத்தில் சதுரங்க (चतुरङ्ग) என்றழைக்கப் பட்டது[1]. நான்கு (சதுர்) பிரிவுகள் (காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை ஆகிய நான்கு பிரிவுகள்) கொண்ட போர் நகர்வு விளையாட்டு. இது பாரசீகத்துக்குப் பரவிய பொழுது (ஏறத்தாழ பொ.ஊ 600) சத்ரங்க்' Shatranj (Arabic: شطرنج‎, from Middle Persian chatrang) என்றும், கிரேக்கத்தில் ζατρίκιον (zatrikion) என்றும் அழைக்கப்பட்டது. சீனத்தில் xiàngqí 象棋 என்றழைக்கப் பெற்றது. இச்சீனச் சொல்லின் முதற்பகுதியாகிய 象 (சியாங்) என்றால் உருவம் அல்லது யானை என்று பொருள். இரண்டாவது பகுதியாகிய 棋 (சி) என்றால் சதுரங்கம். ஆக இது ஆனைச் சதுரங்கம் என்பது போன்ற பொருள் தருவதாகும். ஏறத்தாழ தமிழில் ஆனைக் குப்பு என்பது போன்ற பொருளே. இவ்விளையாட்டு இந்தியாவின் கொடை என்று சொல்லலாம்.

ஆனைக்குப்பு அல்லது சதுரங்கத்தைப் பற்றிய கலைச்சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன். இவை தமிழ்ப்பேரகராதியில் இருந்து தொகுக்கப் பெற்றவை. இவற்றில் இரண்டு சொற்கள் சமற்கிருதமென்று கருத இடமுள்ளது. ஆனால் ஒன்று (சகடு) தமிழே என்று கருதுகின்றேன்.

அரசு! int. An exclamation equivalent to 'check', used in chess; சதுரங்கத்தில் அரசன் கட்டுப்படவிருத்தலைக் குறிக்கும் குறிப்புச்சொல்
அரசு சொல்லு-தல் aracu-collu- , v. intr. < id. +. To say 'check', in chess; சதுரங்க விளையாட்டில் ராஜாவுக்குப் பகைக்காயை யெடுத்துவைத்து அரசென்று கூறுதல்
.ஆட்கால் āṭ-kāl , n. < id. +. (Chess.) Square where a piece is liable to be captured by a pawn; சதுரங்கக் கட்டத்துள் காலாட்காயால் வெட்டக்கூடிய அறை
ஆனைக்குப்பு āṉai-k-kuppu , n. < id. +. cf. குப்பி. Chess, as having elephants for rooks; சதுரங்க விளையாட்டு. ஆனைக் குப்பாடுவாரைப் போலே (ஈடு, 10, 3, 9)
(இங்கே ஈடு என்பது நாலாயிரத்திற்கு வைணவர் உரை)
ஆனையடி āṉai-y-aṭi , n. < id. +. (Chess.) Vertical and horizontal movements, the movements of the elephant or rook; சதுரங்க ஆட்டத் தில் யானை செல்லுங் கதி.
கட்டம்¹ kaṭṭam , n. < கட்டு-. Square, chequered space as in a chess-board; கவறாட்டத் திற்கு வரைந்துள்ள அறைகள். (பெருங். மகத. 14, 56.)
[இது சதுரங்கத்திற்கும் வேறு கவறாட்டம் (தாயக்கட்டை) இட்டு ஆடும் ஆட்டத்தில் பயன்படும் கட்டத்திற்கும் பொதுவான கலைச்சொல்]
கட்டு - Surrounding; forcing into a corner, as in chess; encirclement; வளைப்பு. தெறுகட்டழிய (திருக்கோ. 313). (இது சிறப்பான கலைச்சொல்)
காய் - 6. Chessman, die; ஆடுதற்குரிய காய் (சதுரங்கத்தில் உள்ள காய்களுக்கும், தாயம் போன்றவற்றில் பயன்படும் உருக்குக் காய்களுக்கும் பொதுவான சொல்)
குதிரையடி kutirai-y-aṭi , n. < id. +. Knight's move in the game of chess; சதுரங்க விளையாட்டில் குதிரையின் கதி. (இதுவும் யானையடி போன்ற சிறப்பான கலைச்சொல்)
சகடு cakaṭu , n. < šakaṭa. 2. Bishop in chess; தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய். (தேர் என்பதும் இதுவும் ஒன்றே; சகடு என்பது தமிழ்ச்சொல்லே. )
மனை² maṉai ,7. Square, as of a chess-board; சூதாடு பலகையி னறை. (W.) (இதுவும் கட்டம் என்பதும் ஒன்றுதான்)
வீடு¹ vīṭu ...Squares, as of a chess board; சதுரங்கத்தில் காய்களிருத்தற்கு உரிய தானம்.
வெட்டு² veṭṭu ...Removing a piece in chess and other games; ஆட்டக்காயை நீக்குகை.
வெட்டு¹-தல் veṭṭu- ...To take away, remove, as a piece in chess and other games; ஆட்டக்காயைப் பயனற்றதாக நீக்குதல்.
பஞ்சமகர் pañca-makar A way of ending a game in chess, when the total of pieces on both sides is five; சதுரங்க ஆட்டத்தில் இரு பக்கங்களின் காய்களுஞ் சேர்ந்து ஐந்தாவதால் ஆட்டம் முடிவுறுகை.

அடிக்குறிப்பு
———————-
[1] சதுரங்க என்பது சமற்கிருதத்தில் நான்கு படைகளைக் குறித்தற்கான இலக்கிய சான்றுகள் உள்ளன. ஆனால் விளையாட்டைக் குறித்தற்கான சான்றுகளை நான் அகராதிகளில் காணவில்லை
(மோனியர்-வில்லியம்சு, ஆப்தேயின் அகராதி). அரைகுறையாகத்தான் விளையாட்டோடு தொடர்புபடுத்தும் குறிப்புகள் உள்ளன.
அ) ஆப்தே அகராதி, " -2 a sort of chess.".
ஆ) மோனியர்-வில்லியம்சு "a kind of chess (played by 4 parties) Tithya1d."
-------------------------------

மேலே பேராசிரியர் சொன்னதோடு சேர்த்து வேறு சில கருத்துகளைச் சொல்ல விழைகிறேன். இடுகை நீளமென்பதால், கோராவில் இடாது, தனி இடுகையாக என்8 வலைப்பதிவில் இட்டு என் முகநூல் பக்கத்தில் சுட்டி கொடுக்கிறேன். சதுரங்க ஆட்டம்  எப்பொழுது எழுந்திருக்கலாம், அதன் இந்திய/தமிழ்க் கூறுகள் என்னவென ஆய்வதும் இதன் நோக்கமாகும்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, November 20, 2019

Cheetah, Jaguar, Leopard, Panther

அண்மையில் “Cheetah, Jaguar, Leopard, Panther ஆகியவைகளுக்கு சிறுத்தை, சிறுத்தைப்புலி, சிவிங்கிப்புலி, பெருசிறுத்தை ஆகிய சொற்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிகிறேன்.. ஒவ்வொன்றுக்கும் சரியான சொல் கிட்டினால் நன்றாக இருக்கும்” என்று திரு. தாமரைச் செல்வன் முகநூல் சொற்களத்தில் கேட்டிருந்தார். இவையெலாம் நமக்குப் பழக்கமான புலியோடு தொடர்புடையன. எல்லாம் இந்தியாவில் கிடையாது. ஆனால் இந்தியாவின் பல்வேறு அகற் பகுதிகளில் புலி இருந்திருக்கிறது  புலி பற்றி அறிந்த மாந்தர் எங்கிருந்தார் என்பதே இப்போதையக் கேள்வி. இதில் தொடக்கமாய்ப் பொ.உ.மு. 2600- 1800 வரை இந்திய வடமேற்கிலிருந்த சிந்து நாகரிகத்தில் புலித் தடயம் நன்றாகவே தெரிகிறது.

சிந்து நாகரிகம் தமிழரோடு தொடர்புடையதெனுங் கருத்து கொஞ்சங் கொஞ்சமாய் இப்போது வலுப்பெறுகிறது. (இதையேற்கும் நான் சிந்து சமவெளியிலிருந்து தெற்குநோக்கி தமிழர் வந்தார் என அண்மையில் சிலரால் பரப்பப்படும் தேற்றை ஏற்பவனில்லை. என் கருதுகோள், ”ஆதிச்ச நல்லூரும் சிந்துவெளியும் சமகால நாகரிகங்கள்”. இக் கருதுகோள் இன்னும் நிறுவப்பட வேண்டும்.) எனவே சிந்துவெளிப் புலிப்பெயர்களைத் தமிழ்வழி காண்பதில் தவறில்லை.  பொ.உ.மு. 1500 க்கு அருகில் இந்தியாவில் நுழைந்த ஆரியருக்கு புலி பற்றித் தெரியாதென்றே இதுவரை அறிந்த இலக்கிய, வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன.. வடமேற்கில் வேதமொழியார்  நுழைந்த போது அறிந்த விலங்குகளில் புலியும் ஒன்று. (சிங்கம்  இவருக்கு முன்பே தெரியும். நடுக்கிழக்கில் கிடைத்த பல ஆதாரங்களும் சிங்கத்தை உணர்த்திப் புலியை உணர்த்தவில்லை.)  சங்கதப் புலிப்பெயர்கள் எல்லாம் பெரும்பாலும் தமிழிலிருந்து சென்றன போலவே தெரிகின்றன.

புலியின் தமிழ்ப் பெயர்கள் அதன் கூர்நகத்தால், பாய்ச்சலால், புல்லும் இயல்பால்,  வலிமையால் உருவானவை. உல்>உள்>உழு> உழுவை என்பது ”உள்ளும் நகமுள்ள புலி”க்கு ஒருபெயர். (உள் =கூர்மை, உள்>உளி = கூர்ங்கோல். உளி>உசி>ஊசி = கூர்ங்கம்பி, உள்>உளி>உளியம் = உளிபோன்று கூரிய நகமுள்ள கரடி. தவிர உள்>உழு>உகு>உகிர்= புலிநகம்.) தவிர உகிரம் என்பது கூர்நக விலங்கைக் குறிக்கும்  அடுத்து, மாந்தரைத் தாக்கையில் அவரைப் புல்லுவது போலவே பாய்வதால், புலி.  புலியடி வலிப்பதால் அது வல்மா; எனவே வல்லியம்.  வல்மா> வெல்மா  ஆகும். வல்லை வயமென்றும் குறிப்போம். எனவே வயமா இன்னொரு சொல். பாய்மா= பாயும் மா.  அடுத்து வய, உகிரம் என்ற 2 சொற்களைச் சங்கதம் கடன்வாங்கி அவர் வழியில் திரிக்கும்.  வய + உகிரம் >வ்ய+ உகிரம்>வ்யௌகிரம்>வ்யாக்ரம். இதை மீண்டுங் கடன்வாங்கித் தமிழில் வியாக்கிரம் ஆக்குவார்.

தாக்குவதால் புலி தாக்கு மா எனப்படும். அக்கால ஓலைகளில் ”தா” வின் கால்க் குறிக்கும் ரகரத்திற்கும் வேறுபாடு காணாது, தாக்குவைத் தரக்கென்று நிகண்டுகள் பதிவுசெய்யும். வேகமாய்ப் பாய்வதால், புலி வேய்ங்கை> வேங்கை ஆனது  குயத்தல்= பதிதல். (குயவும் தொழிலார் குயவர்) பதியப் பட்ட வரி கொண்டதால் புலி, குயவரி ஆனது, அந்த வரி நேரே இலாது கொடுகிய (= வளைந்து) தால் அது கொடுவரி. முடிவில் சார்த்துலம் என்ற சொல்லுக்கு வருவோம் ,  உள்>உளம் என்பது நகத்திற்கு இன்னொரு சொல். எதிர்விலங்கில் பதியக் கூடிய (சாரக் கூடிய) அளவிற்கு நகங் கொண்டதால், புலிக்குச் சார்த்துளம் சரியான பெயரே. (சங்கதத் தாக்கில் இது சார்த்துலம் ஆகும்.).  ஆங்கில tiger (n.) க்குக் கீழ்வரும் சொற்பிறப்புக் காட்டுவர்.
 
Old English tigras (plural), also in part from Old French tigre "tiger" (mid-12c.), both from Latin tigris "tiger," from Greek tigris, possibly from an Iranian source akin to Old Persian tigra- "sharp, pointed," Avestan tighri- "arrow," in reference to its springing on its prey, "but no application of either word, or any derivative, to the tiger is known in Zend." [OED]. Of tiger-like persons from c. 1500. The meaning "shriek or howl at the end of a cheer" is recorded from 1845, American English, and is variously explained. Tiger's-eye "yellowish-brown quartz" is recorded from 1886.

possibly from an Iranian source என்பது அறியாமையில் சொல்வது. புலி ஈரானில் இலாதபோது அவருக்குத் தெரிந்த சிந்துசமவெளி மக்களிடமிருந்து  tiger க்கு ஆன சொல்லைக் கடன்வாங்கவே வாய்ப்புண்டு. சிந்துவெளிச் சொற்களைத் தமிழ்வழி தேர்வது தவறில்லை என்றும், புலிப் பெயர்கள் அதன் கூர்நகத்தால், பாய்ச்சலால், புல்லும் இயல்பால்,  வலிமையால் உருவானவை என்றும்  மேலே அறிந்தோம்.  தமிழில் துள்>தள்>தய்>தை> தைத்தல் என்பது குத்தலைக் குறிக்கும். (துல்> துல்லு> துல்கு> துகு>துகை>தை என இணைத்தல், சேர்த்தல் பொருளை உணர்த்துவது வேறு வளர்ச்சி.) முள் தைத்தது என்கிறோம் இல்லையா?  கூர்த்த புலிநகமும் ஆழத் தைக்கும்.  எனவே தைக்கும் நகம் (=உகிர்) தய்யுகிர் ஆகும். தய்யுகிர்> tigra என்ற பலுக்கல் பழம் பெர்சியனில் எளிதில் நடக்கும். இவற்றைக் கொண்டு புலியின் வெவ்வேறு வகைகளுக்குத் தனிப்பெயர்களைப்  பரிந்துரைக்கலாம்.

தை என்பது குத்தும் நகத்தையும், நகங்கொண்ட விலங்கையும் குறிக்கும்.  மற்ற புலிவகைகளைக் காண்கையில் சிறுத்தை சற்றே சன்னமான சிறு ”தை விலங்கை”க் குறிக்கும்.. சிறு+தை = சிறுத்தை.  இதையே ஆங்கிலத்தில்  cheetah என்கிறார். இதன் சொற்பிறப்பாய், cheetah (n.) "large, spotted cat of India," 1704, from Hindi chita "leopard," from Sanskrit chitraka "hunting leopard, tiger," literally "speckled," from chitra-s "distinctively marked, variegated, many-colored, bright, clear" எனச் சங்கதம் வழி  கொணர்ந்து from PIE *kit-ro-, from root *skai- "to shine, gleam, be bright;" see shine (v.)) + kayah "body," from PIE *kwei- "to build, make" எனத் தவறான விளக்கம் சொல்வர். வேதமொழி வழி விளக்கம் தேடுவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும்.

அடுத்தது panther (n.) இதை early 13c., from Old French pantere "panther" (12c.), from Latin panthera, from Greek panther "panther, leopard," probably of Oriental origin. Folk etymology derivation from Greek pan- "all" + thēr "beast" led to many curious fables என்று ஆங்கிலச் சொற்பிறப்பு சொல்லும்.  probably of Oriental origin என்றவுடன் இந்தியாவிற்குள் வரத்தான் செய்யவேண்டும். நகத்தால் பறண்டுவதைக் கேள்விப்பட்டு உள்ளோமே? பறள் என்பது பகுதி. பறள்+ந்+து = பறண்டு. இதை இக்காலத்தில் ப்ராண்டு என்று சங்கத ஓசையில் சொல்வாரும் உண்டு. பறள் என்ற வினைப் பகுதியைப் பெயராக்கிப் பறண்டும் புலியைப் பறளென்றுஞ் சொல்லலாம். panther (n.) = பறள்.

அடுத்தது leopard. சிங்கம் புலி என்று 2 வேறு பெரும்பூனை இனங்கள் பொதுவாய்ப் புணராது. அதேபொழுது பெரும் விந்தையாய் இயற்கையிலோ, செயற்கையிலோ பெண்சிங்கத்தோடு ஆண்புலி சேர்ந்து பெற்ற இனமாய் leopard ஐச் சொல்வர்  leopard (n.) late 13c. (early 13c. as a surname), "large cat of the wooded country of Africa and South Asia," from Old French lebard, leupart "leopard," heraldic or real (12c., Modern French léopard), from Late Latin leopardus, literally "lion-pard, lion-panther" (the animal was thought in ancient times to be a hybrid of these two species), from Greek leopardos, from leon "lion" (see lion) + pardos "male panther," which generally is said to be connected to Sanskrit prdakuh "panther, tiger." இதிலும் தேவையற்று சங்கதப் prdakuh வைக் கொணர்வர். மாறாக ஆண்புலியை உணர்த்த, பறள்/ பற(ண்)டு என்பதே போதும்.  சிங்கத்தின் இன்னொரு பெயர் யாளி என தனி இடுகையில் சொன்னேன். (https://valavu.blogspot.com/2018/08/blog-post_20.html)  இரண்டையும் சேர்த்தால் யாளிப்பறள் அல்லது யாளிப்பறடு leopard க்கான பெயராகும்.

jaguar (n.) என்பது அமெரிக்காவில் பரவிக் கிடந்த ஒரு வகைப் புலி. big spotted cat of the Americas (Felis onca), c. 1600, from Portuguese jaguar, from Tupi jaguara, said in old sources to denote any large beast of prey ["tygers and dogs," in Cullen's translation of Abbe Clavigero's "History of Mexico"]. ஆக இது தய்யுகிரின் வேறு வடிவம். நாம் உகிரம் என்றே சொல்லிப் போகலாம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, November 19, 2019

வள்ளுவரின் ஊர்

கீழே வருவது, மின்தமிழ்  மடற்குழுவில், S.P.Senthil Kumar என்பார்  19/11/2019 இல் அனுப்பிய மடலில் இருக்கும் செய்தி. பலருக்கும் பயன்படும் என்று இங்கு முன்வரிக்கிறேன்.

அன்புடன், 
இராம.கி.
-----------------------------------------------------------
திருவள்ளுவர் பிறந்த ஊருக்கு சென்றிருக்கிறேன். அவரைப் பற்றி ஏரளமான ஆய்வுகள் செய்த முனைவர் எஸ்.பத்மநாபன் அதற்கான ஆதாரங்களையும் இங்கு சொல்லியிருக்கிறார். 2013-ம் ஆண்டு பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையை இங்கு அப்படியே தருகிறேன். இவர் சொல்வதும் நம்பக்கூடியதாகவே இருக்கிறது.

ன்னியாகுமரி என்றதுமே முக்கடலும் கடலுக்குள் உயர்ந்து நிற்கும்  திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும்தான்  நினைவில் வந்து போகும். படகுத் துறையில் இருந்து திருவள்ளுவர் சிலையைப் பார்க்கும்போது அதன் பிரமாண்டமும் கடலின் மத்தியில் எழுந்து நிற்கும் அழகும் நமக்குள் இனம்புரியா ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். இவ்வளவு பெரிய சிலையை இங்கு வைக்க என்ன காரணம் என்ற கேள்வியும் மனதில் எழும்.

படகு துறையிலிருந்து திருவள்ளுவர் சிலை 
திருவள்ளுவர் என்ற உடனே வரலாற்று ஆய்வாளரும் 'ஆய்வுக் களஞ்சியம்' மாத இதழ் ஆசிரியருமான டாக்டர் எஸ். பத்மநாபன் என் நினைவில் வந்து நின்றார். திருவள்ளுவர் குறித்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் அவர். வள்ளுவரைக் குறித்து கேட்டதுமே "வாங்க வள்ளுவர் பிறந்த ஊரைப் பார்த்து வருவோம்'' என்று அவரது ஸ்கார்பியோவில் அழைத்துச் சென்றார்.

கரை கண்டேஸ்வரர் ஆலயம்
கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் முட்டம் கடற்கரையில் இருந்து  5 கி.மீ. தொலைவிலும் அந்தக் கிராமம் இருந்தது. அதன் பெயர் திருநாயனார்குறிச்சி. எளிமையான கிராமம், மற்ற கிராமங்களைப் போலவே நவீன வடிவம் பூண்டிருந்தது.  அங்கிருக்கும் கரை கண்டேஸ்வரர் ஆலயம் முன் எங்களது கார் நின்றது.

"இதுதான் திருவள்ளுவர் பிறந்த ஊர்" என்றார்.

வள்ளுவர் பிறந்த அந்த புனிதமான மண்ணில் கால் பதிக்கிறோம். மனதுக்குள் ஏதோ ஒரு சிலிர்ப்பு முழுவதுமாக ஆட்கொள்கிறது. பின் காலாற கிராமத்து தெருக்களில் நடந்தோம். பசுமை பூத்துக் குலுங்கும் வயல்களுக்குள் உலாவினோம். மனம் முழுவதும்  வள்ளுவர் பற்றிய பெருமிதம் தொற்றிக் கொண்டிருந்த நேரம்.  அதே வேளை என் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியையும் பத்மநாபன் சாரிடம் நேரடியாகவே கேட்டேன்.

பளிங்கினால் ஆனா யானை சிற்பம் - விவேகனத்தர் பாறை 
"வள்ளுவர் இங்குதான் பிறந்தார்! என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? '' என்று கேட்டேன்.

"நிறைய ஆதாரங்கள் இருந்ததால்தான் மூன்று முதல்வர்களிடம் இதைப்பற்றி என்னால் பேசமுடிந்தது.  எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூன்று பேரிடமும் எனது ஆய்வு குறித்து பேசியிருக்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளாக திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். எனது ஆய்வுகளில் தலைசிறந்தது என்றால் அது 'திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்'  என்ற எனது கண்டுபிடிப்புதான். இதை 1989 டிசம்பர் மாதம் மொரீஷியஸ் தீவில் நடைபெற்ற ஏழாவது அனைத்துலக தமிழ் மாநாட்டில் பேசினேன்.  பின் அதையே புத்தகமாக வெளியிட்டேன். அதை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் வெளியிட்டார்.

மைலாப்பூர்தான் திருவள்ளுவர் பிறந்த இடம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வள்ளுவருக்காக வள்ளுவர் கோட்டம் அமைத்த கலைஞருக்கு இதை நம்புவது கடினமாக இருந்தது.  ஆதாரங்களோடு நான் எழுதிய தகவல்களை அவரால் மறுக்க முடியவில்லை. அதன் மூலம் வள்ளுவர் பற்றிய பொய்யான பல கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.  அதன்படி திருவள்ளுவர் வள்ளுநாட்டை ஆண்ட மன்னர், வள்ளுவ நாட்டின் ஒரு பகுதியான முட்டத்தை அடுத்துள்ள திருநாயனார்குறிச்சியில் பிறந்து, மதுரையில் சில காலம்  தங்கி, மயிலாப்பூர் சென்று மறைந்தார். இதற்கான ஆதாரங்கள் திருக்குறளிலேயே எனக்கு கிடைத்தன.

கிட்டத்தட்ட திருக்குறளில் 50-க்கும் மேற்பட்ட சொற்கள் இந்தப் பகுதியில் மட்டுமே பேசப்படும் தனிச் சொற்கள் உள்ளன. 'இன்னைக்கு ஒரே மடியா இருக்கு' என்பது சாதாரண பேச்சு மொழி. மடி என்றால் சோம்பல். திருவள்ளுவர் மடியின்மை என்று ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். தமிழகத்தில் வேறெங்குமே சோம்பலை மடி என்று சொல்வதில்லை. இங்கு அது சாதாரண பேச்சுத் தமிழ்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கரைபுரண்டு ஓடும் நீரை மட்டுமே வெள்ளம் என்று சொல்லுவார்கள். குமரி மாவட்டத்தில் மட்டும்தான்  கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் போன்றவற்றையும் வெள்ளம் என்பார்கள். இதை வள்ளுவர் 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு '  என்று குறிப்பிடுகிறார். இந்த மண்ணில்தான் தாமரை பூத்த தடாகங்கள் அதிகம். குடிக்க வெள்ளம் வேண்டும் என்பது இங்கு பேச்சு வழக்கில் உள்ளது.  மற்ற இடங்களில் இப்படி பேசினால் சிரிப்பார்கள்.  குமரி மாவட்டத்தில் வெள்ளம் என்றால் தண்ணீர் என்று பொருள். இதனை அப்படியே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

அதேபோல் எழுவாய் உயர்தினையாக இருந்தாலும், பயனிலை அஃறிணையாகக் கூறுவது இந்த மக்களின் வழக்கம்.' அப்பா வரும்', 'அம்மா பேசும்', 'மாமா முடிக்கும்' இப்படி பல. இதை  அப்படியே திருக்குறளில் பயன்படுத்துகிறார் வள்ளுவர். 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண்விடல்'  இந்த குறளில், இதனை இவன் முடிப்பவன்  என்று கூறாமல் முடிக்கும் என்று கூறுவது, குமரித் தமிழ் இங்கு பேசுகின்றது.

அதேபோல் உணக்கின் என்ற வார்த்தையும், ஒரு பங்கு மண், கால் பங்கு ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி  உரம் கூட தேவையில்லாமல் அந்த நிலத்தில் பயிர் செய்யலாம் என்பதை வள்ளுவர் 'நொடி புழுதி கஃசா  உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்' என்று குறிப்பிடுகிறார். இதில் உணக்கின் (காய வைத்தல்) என்ற வார்த்தையை குமரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள் பேசுகின்றனர்.

மீன்கள் மிணு மிணுப்பிற்கு மயங்கும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு. முட்டம், கடியப்பட்டினம் மீனவர்கள் தூண்டிலில் ஜரிகையை இணைத்து மீன் பிடிப்பதில் வல்லவர்கள். இப்படி தூண்டிலில் பொன் இழையை வைத்து மீன் பிடிக்கும் வழக்கத்தை 'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்ற தூஉம், தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று' என்று குறிப்பிடுகிறார். இத்தகைய  தூண்டில் முறை திருவள்ளுவர் பிறந்த திருநாயனார் குறிச்சிக்கு அருகில் மட்டும்தான் உள்ளது. வேறு எங்கும் இல்லை. இந்த ஊரின் பழைய பெயர்தான் கடியப்பட்டினம்.

இவற்றையெல்லாம்விட ஓர் அரிய சான்றினை கூறுகிறேன்.  இதுதான் திருவள்ளுவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதற்கு மிக அரிதான சான்று. 'வரைவின் மகளிர்' என்ற தலைப்பில் விலைமகள்களைப் பற்றி கூறுகிறார்.  'பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில், ஏதில் பிணைந்தழீ இயற்று' என்பது அந்தக்குறள்.

வாடிக்கையாளர்களை மிகவும் அன்போடு தழுவுவதாக நடிக்கும் ஒரு விலைமகளின் செயல் இருட்டறையில் முன்பின் தெரியாத ஒருவரின் பிணத்தைத் தழுவுவது போலாகும் என்று கூறுகிறார். பிணம் தழுவுதல் என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்தது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்கள். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தை தழுவி வரவேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்கள். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கூலிக்காக முன் பின் தெரியாத பெண்ணின் பிணத்தை தழுவிய இளைஞனையும், பணத்திற்காக எந்த உடலையும் தழுவும் விலைமகளையும் வள்ளுவர் ஒப்பிட்டுக் கூறுகிறார். மலை நாட்டிலுள்ள பிணம் தழுவும் வழக்கத்தை வள்ளுவர் தமது நூலிலே குறிப்பிட்டிருப்பது அவர் குமரி மண்ணிலே பிறந்தவர் என்பதற்கான அசைக்க முடியாத சாட்சி'' என்றார் உறுதியான குரலில் பத்மநாபன்.

 வள்ளுவன் கல் பொற்றை
திருநாயனார் குறிச்சியை வலம் வந்த நாங்கள் அடுத்து சென்றது, வள்ளுவன் கல் பொற்றை என்ற இடத்திற்கு.எங்களுடன் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டாக்டர் சிதம்பரநாதன் ஆகியோரும் சேர்ந்து கொண்டார்கள். இந்த இடத்திற்கும் திருவள்ளுவருக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது.  தடிக்காரங்கோணம்  அருகே உள்ள கூவைக்காடு என்ற இடத்தில்தான் இந்த மலை இருக்கிறது. இது அந்த காலத்திய ஊட்டி, கொடைக்கானல் போல் குளுமையாக இருந்திருக்க வேண்டும்.  இந்த மலையில்தான் திருவள்ளுவரும், அவர் மனைவியும் ஓய்வெடுக்க வருவார்கள். தேனும் தினைமாவும் விரும்பி உண்பார்கள். அப்படி அவர் தங்கி இளைப்பாறிய இடம்தான் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

வள்ளுவன் கல் பொற்றையில் டாக்டர் பத்மநாபன், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டாக்டர் சிதம்பரநாதன் ஆகியோருடன் நான்
சிறிய மலையின் மீது ஏறிய எங்கள் கார் ஒரு இடத்தில் நின்றது. எங்களுக்கு எதிரில் கருமை நிறத்தில் பெரிய பாறை ஒன்று சிறு குன்று போல் இருந்தது. "அதுதான் வள்ளுவன் கல்பொற்றை''  என்றார் பத்மநாபன். அதன் உச்சியில் பொறிக்கப்பட்டுள்ள பாதம் 'வள்ளுவர் பாதம்' என்று அழைக்கிறார்கள் இங்குள்ள பழங்குடிமக்கள்.

டாக்டர் பத்மநாபன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தும், அதன்பின் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கும் போதும் திருவள்ளுவரைப்பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வந்திருக்கிறார். திருவள்ளுவர் சிலை இங்கு வருவதற்கான காரணத்தை ஆதாரத்தோடு சொல்லி முடித்தார்.

திருவள்ளுவர் பிறந்த ஊரான திருநாயனார் குறிச்சியும், அவர் மலைவாழ் மக்களோடு ஓய்வெடுத்த வள்ளுவன் கல் பொற்றை இரண்டு இடங்களையும் பத்மநாபன் சாரின் துணையோடு பார்த்தப்பின் எனது பயணம் கன்னியாகுமரியை நோக்கி நகர்ந்தது.

விவேகானந்தர் பாறை
கன்னியாகுமரி என்றதுமே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது விவேகானந்தர் பாறை.  இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சிறிய பாறைத் தீவில் விவேகானந்தர் பாறை அமைக்கப்பட்டுள்ளது.  1892-ல் சுவாமி விவேகானந்தர் இங்கு நீந்தி வந்து தவம் புரிந்திருக்கிறார் என்றும்,  அதன் நினைவாகவே விவேகானந்தர் பாறை உருவாகியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

மிகப் பெரிய தேசிய சின்னமாக விளங்கும் விவேகானந்தர் பாறை ஏக்நாத் ரானடே என்ற தனி மனிதரின் தன்னிகரில்லா உழைப்பின் வெளிப்பாடு.  முதலில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலை நடைபெறும் போதே பிரச்சினை கிளம்பியது. கிறிஸ்துவ மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட குமரியில் புனித சவேரியருக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்பது அவர்களின் ஆசை. அதற்காக மிகப் பெரிய சிலுவை ஒன்றைக் கொண்டு போய் அங்கு  வைத்தார்கள். விஷயம் கோர்ட்டுக்குப் போனது. அதில் இந்தப் பாறை விவேகானந்தர்  பாறைதான் என்று தீர்ப்பு வந்தது.  இரவோடு இரவாக சிலுவையை எடுத்துச் சென்றனர். அதே வேளையில் கலவர சூழ்நிலை உருவானது. அதன்பின் பாறை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு யாரும் நுழை முடியாதபடி பாதுகாப்பு போடப்பட்டது.

தியான மண்டபம்
1963ல் அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் சிறிய நினைவகம் கட்டுவதற்கு அனுமதி தந்தார். மத்திய அரசின் பண்பாட்டு துறை அமைச்சராக இருந்து ஹூமாயூன் கபீர் நினைவுச் சின்னம் அமைத்தால் பாறையின் இயற்கை அழகு போய்விடும் என்று அனுமதி மறுத்தார். இனி வேறு வழியில்லை, பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆதரித்தால் மட்டுமே நினைவகம் எழுப்ப முடியும் என்ற நிலை.

டெல்லியில் மூன்று நாட்கள் முகாமிட்டு 323 எம்பிக்களின் கையெழுத்தை விவேகானந்தர் நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக வாங்கினார் ஏக்னாத்.  ஆனால் 15 அடிக்கு 15 அடி என்ற மிகக் சிறிய அளவில் கட்டுவதற்கு மட்டுமே பக்தவச்சலம் அனுமதி தந்தார்.  அதையும் கடந்து மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் நிதி, பொதுமக்களின் நிதியோடு கட்டுமானப் பணியைத் தொடங்கியது.  6 வருடங்களாக உருவான நினைவகம் 1970-ல் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.


ஆறு அறைகள் கொண்ட தியான மண்டபம் ஒன்றும், விவேகானந்தர் நின்ற நிலையில் ஒரு வெண்கல சிலை அமைக்கப்பட்ட சபா மண்டபமும், முக மண்டபமும் அமைக்கப்பட்டன.  இந்தப் பாறையில் குமரி பகவதியம்மன் ஒற்றைகாலில் நின்று தவம் செய்ததாக ஒரு ஐதீகம்  உண்டு. அந்த பாதச் சுவடு பாறையில் இருப்பதால் அதற்கென்று ஸ்ரீ பாத மண்டபம் ஒன்று கட்டுப்பட்டுள்ளது.


விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து உண்டு. தமிழ்நாடு அரசு பூம்புகார் போக்குவரத்துக் கழகம் இவற்றை இயக்கி வருகிறது. இதற்கு இரண்டு வித கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.  சாதாரணக் கட்டணம் ரூ.34. (சிறப்புக் கட்டணம் ரூ.169). இதில் ரூ.29 படகுக்கான கட்டணமாகவும், ரூ.5 திருவள்ளுவர் சிலைக்கான கட்டணமாகவும் சேர்த்தே வசூலித்து விடுகிறார்கள். இதுபோக விவேகானந்தர் பாறைக்கு விவேகானந்தர் மண்டபத்திற்கு நுழைவுக் கட்டணமாக ரூ.20 விவேகானந்தா கேந்தரா மூலம் வசூலிக்கப்படுகிறது.

1970ல் செப்டம்பர் 2-ல் இந்திய ஜனாதிபதி வி.வி.கிரி இதனை திறந்து வைத்தார்.  5 வருடம் கழித்து 1975ல் விவேகானந்தர் பாறை அமைந்திருக்கும் பெரிய பாறைக்கு அருகில் உள்ள சிறிய பாறையில் 8  அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு ஒரு சிலையை எழுப்ப வேண்டும் என்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு ஏக்நாத் ரானடே ஒரு கடிதம் எழுதினார்.  1976ல் சட்டமன்றத்தில் திருவள்ளுவருக்கு 30 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார்.  1979-ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல் நாட்டினார்.  அதன்பின் எந்த வேலையும் நடைபெறவில்லை. மீண்டும் 1990-ல் பணி தொடங்கப்பட்டது. 10 வருடமாக கட்டுமானப் பணி முடிந்து 1.1.2000-த்தில் புத்தாயிரம் ஆண்டில் திருவள்ளுவர் சிலை கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது.


திருவள்ளுவர் சிலை செய்யும் பணி கன்னியாகுமரி, அம்பாசமுத்திரம், சங்கராபுரம் ஆகிய  மூன்று இடங்களில் நடைபெற்றது.  அம்பாசமுத்திரத்தில் இருந்து 5,000 டன் கற்களும், சங்கராபுரத்தில் இருந்து 2,000 டன் உயர்வகை கிரானைட்  கற்களும் கொண்டு உருவாக்கப்பட்டது.   மொத்தம் 3,681 பெரிய கற்களால்  சிலை வடிவமைக்கப்பட்டது.  இதில் 15 டன் வரை கனமான கற்களும்  உள்ளன.  பெரும்பான்மையான  கற்கள்  3 முதல் 8 டன் எடை கொண்டதாக இருந்தன. கற்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்காக 18,000 துளைகள் போடப்பட்டுள்ளன.  இது பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டடம் போன்றது.  உலகத்திலேயே வேறு எங்கும் இப்படியொரு கருங்கல் சிலை அமைக்கப்படவில்லை.


பீடம் 38 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. அது திருவள்ளுவர் கூறும் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலை பொருட்பால்  இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிக்கும் விதமாக கடல் மட்டத்திலிருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையின் மீது 133 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.  சிலையின் மொத்த எடை 7,000  டன், இதில் சிலையின் எடை 2,500 டன், பீடத்தின் எடை 1,500 டன், பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை 3,000 டன், முகம் 10 அடி உயரமும், தோள்பட்டை அகலம் 30 அடியும் கொண்ட இந்த பிரமாண்ட சிலை தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலை இருக்கும் சிறிய பாறைக்கும் இடையே 200 அடி இடைவெளிதான் உள்ளது. இந்த இரண்டு சிறு தீவுகளையும் இணைக்கும் விதமாக பாலம் கட்ட வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் நெடுநாளைய விருப்பம். இணைப்பு பாலம் இல்லாத காரணத்தால் அங்கிருந்து திருவள்ளுவர் பாறைக்கும் படகில் போகவேண்டியுள்ளது.


தென் பகுதியில் உள்ள இந்தியாவின் கடைசி நிலத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இரண்டு தத்துவ ஞானிகளின் நினைவாக நினைவுச் சின்னங்கள் அமைந்திருப்பது நம் எல்லோருக்கும் பெருமையே...!



Wednesday, November 13, 2019

stereotype

ஒருமுறை மின்தமிழ் மடற்குழுவில் ”stereotype என்ற ஆங்கிலச்சொல்லிற்கான தமிழாக்கம் என்ன?”வென்று திரு.தாமரைச்செல்வன் கேட்டிருந்தார் வேதிப் பொறியியலை ஒட்டிய தொழில்முறை ஆலோசனைப் பணியில் அப்போது ஆழ்ந்ததால் உடனே மறுமொழிக்க வாய்ப்பில்லாது போனது. பின் நேரம் கிடைத்தபின் சொன்னேன். இப்போது என் வலைப்பதிவில் சேமிக்கிறேன்.

ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிப் பாத்திகட்டி அதிற் பழகும் ஆங்கிலச் சொற்களுக்கு விதப்பாகத் தமிழாக்கஞ் செய்வதை நான் எப்போதும் ஒப்புக் கொண்டதில்லை. கூடியமட்டும் துறைகளுக்கு பொதுவான தொடர்புச் சொற்களைப் பட்டியலிட்டுக் கொண்டு அவற்றிடை நிலவும் ஓரிமையை ஆழவுணர்ந்து, ”அதையெப்படித் தமிழிற் கொணரலாம்?” என்றே பார்ப்பேன். முன்சொன்னது போல் வினைச்சொல் காண முடியுமானால் அதையுந் தேடுவேன்.

இயற்கைப் பொருள்கள் எல்லாமே முப்பரிமானங் கொண்டவை. அறிவியல் வரிதியாய் அவற்றை அலசவும், ஆய்விற்காகவும் 1 பரிமான, 2 பரிமானப் பொருட்களை மாந்தர் கற்பித்துக் கொண்டார். ஒரு பரிமானப் பொருட்களுக்கு நீளம் அளவுகோலாகும் போது, இரு பரிமானப் பொருட்களுக்கு நீளமும் அகலமும் அளவைகளாகி, இரண்டையுஞ் சேர்த்துப் பரப்பென உணர்கிறோம். ஏனத்தின் வடிவுகொள்ளும் நீர்மப் பரப்பை ஏன வாய்வழி உணர்கிறோம். பரப்பின் வெவ்வேறு வடிவங்களாய் சதுகரம்> சதுரம், செவ்வஃகம்>செவ்வகம், வட்டம், நீள்வட்டம் எனப் பலவற்றையும் படிக்கிறோம்.

திடப்பொருளெனும் முப்பரிமானப் பொருட்களுக்கோ,  நீள, அகலத்தோடு திட்பம்/திண்ணமெனும் (thickness) 3 ஆவது அளவுமுண்டு. திட்பு/திட்டு/திண் என்பவை ஒரே பொருளுணர்த்துங் குறுஞ் சொற்களாகும். ”அம்” எனும் ஈறு சேர்த்த திட்பம், தி(ட்)டம், திண்ணம் என்பவையும் அதேபொருள் உணர்த்தும். திடரென்பதும் (அம் ஈற்றுப் பெற்ற திடரமும்) திட்பு/திட்டு/திண் என்ற பொருளை உணர்த்தும். திடரல், திடர்தல் என்பது அடர்தல் விளைவால் திடப் படும் வினை குறிக்கும். திடப்படும் பொருள், உறுதியை, வலுவைப் பெறும்.

solid இற்குத் தமிழில் திண்மமென்றும், strong யைத் திடமென்றும், thick இற்குத் திட்பம்/திண்ணமென்றும், density யைத் திணிவு/அடர்த்தி என்றும் விதப்பாய்ப் பயன்படுத்துங் காரணத்தால் stereo விற்குத் திடர்/திடரம் என்ற சொல்லைப் பயன்படுத்த விழைகிறேன்.

[இங்கே ஓர் இடைவிலகல். பொறுமையிலாத் தமிழ் “விஞ்ஞானவாதிகள்” சிலர் கலைச்சொற்களை ஏதோ விளக்கந்தருஞ் சொற்களாகவே பார்க்கிறார். தமிழில் அவர்க்கு 4000 சொற்கள் தெரியுமென வையுங்கள்.  நாலாயிரத்தோடு முன்னொட்டு, பின்னொட்டு சேர்த்து உலகின் எல்லாப் பெயர்களுக்கும், வினைகளுக்கும் இணையான தமிழ்ச்சொற்களை உருவாக்கி விடலாம் என்பதும், இல்லாவிடில், வெளிமொழிச் சொல்லை அப்படியே கடன்வாங்கி விடலாம் என்பதுமே இவ் “விஞ்ஞானவாதிகளின்” பரிந்துரையாக உள்ளது. தம் தமிழ்க் குறைவை மூடி மறைத்து தம் தமிங்கில நிறைவை வெளிப் படுத்தும் வடிகாலாகவே தமிழ்ச் சொல்லாக்கத்தை இவர் பார்க்கிறார். இதற்குத் தமிழறிஞரும் துணை போகிறார். பழந்தமிழிலக்கியச் சொற்களை ஆழங் காணாது, அவற்றைப் புதுமைப் படுத்தாது, ”சுவைத்தறிய மட்டுமே தமிழிலக்கியம்” என்ற மனப்பாங்கில் அறிவியல், நுட்பியற் சொற்களின் அடியூற்றை இலக்கியத்தில், நாட்டுவழக்கில் காணத் தவறிவிட்டார்.

நம் எல்லோரிடமும் (என்னையுஞ் சேர்த்தே சொல்கிறேன்.) உள்ள குறையே நம் தமிழ்ச்சொல் தொகுதியைக் கூட்டிக் கொள்ளாதது தான். நம்மிடம் இருக்கும் 3000/4000 சொற்களை வைத்துப் பேர் பண்ணித், தமிங்கிலத்தில் பேசுவதாலேயே, “தமிழில் அறிவியலை, நுட்பியலைச் சொல்லமுடியாது” என்று கூக்குரலிடத்  தொடங்கி விடுகிறோம்.  நம் தமிழ்ச் சொற்றொகுதியை 10000, 15000 அளவிற்காவது கூட்டிப் போவதே நம் சிந்தனை மாறத் தலையாய வழி. கூடவே தமிழென்றால் இளக்காரம் என்ற எண்ணத்தையும் போக்க வேண்டும். தவிரக் கலைச்சொல்லென்றால் ”அது எனக்குத் தெரிந்த தமிழில் விளக்கந் தருஞ் சொல்” என்று சொல்வதும் மாறவேண்டும்.

கலைச்சொல் என்பது சட்டென நம்சிந்தனையில் ஓர் ஒளிக்கீற்றை உருவாக்க வேண்டும். முழுப்பொருளையல்ல.  இங்கே ”திட” என்ற ஒலி கேட்டவுடனே அதையொட்டிய கூறுகள் நமக்குத் தென்பட்டு விடும். மின் என்றால் இக்காலம் electricity நினைவிற்கு வருகிறதே, அதுபோற் கொள்க. . (இத்தனைக்கும் மின்னின் பழம்பொருள் ஒளி தான். மின்னைக் காட்டிலும் சிறப்பான கலைச்சொல்லுண்டோ? கலை (craft) க்குள் பயன்படுவது கலைச் சொல். ”எது கலைச்சொல்?” என்பது பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம்.   ]

stare என்பது திடர்ந்துபார்த்தல். அதாவது அசையாமற் திடமாய் நின்று கூர்ந்து பார்த்தல். இங்கே அழுந்தச் சொல்லவேண்டியது ”திடமான பார்வை” பற்றிய கருத்தே. அடுத்து stereo விற்கு வருவோம். இற்றைக் காலத்தில் பல்வேறு கூட்டுச்சொற்களுக்கு இது அடிப்படை. இந்த அடிச்சொல்லை தமிழில் இனங் காணாதிருந்தால், தொடர்புள்ள எல்லாக் கூட்டுச் சொற்களுக்கும் சுற்றி வளைத்தே சொற்களாக்கும் நிலைக்கு வந்து சேருவோம். (பலரும் இப்படியே செய்கிறார். மொழி வளர அது வழியில்லை.)

John Ayto வின் ”Bloomsbury Dictionary of Word Origins” என்ற பொத்தகத்தில் ”Greek stereos meant "solid". The earliest English Compund noun from it was stereometry, a mathematical term denoting the measurement of solid or three-dimentional objects. This was followed by Stereographic, stereotype (coined in French and originally used for a "solid" printing block; the metaphorical 'unvaried or conventional usage' emerged in the middle of the 19th century), stereoscope (a viewer for producing 'solid' three dimentional images), and stereophonic 'producing three-dimentional sound'. Stereo was used in the 19th century as an abbreviation for stereotype and stereoscopic; its use for stereophonic dates from 1950s” என்று போட்டிருப்பர்..
 
இணையத்தில் பலரும் பயன்படுத்தும் Etymonline வலைத்தளத்தில் “stereo- Look up stereo- at Dictionary.com. before vowels stere-, word-forming element meaning "solid, firm; three-dimensional; stereophonic," from comb. form of Greek stereos "solid," from PIE *ster- (1) "stiff, rigid, firm, strong" (cognates: Greek steresthai "be deprived of," steira "sterile," sterphnios "stiff, rigid," sterphos "hide, skin;" Latin sterilis "barren, unproductive;" Sanskrit sthirah "hard, firm," starih "a barren cow;" Persian suturg "strong;" Lithuanian storas "thick," stregti "to become frozen;" Old Church Slavonic strublu "strong, hard," sterica "a barren cow," staru "old" (hence Russian stary "old"); Gothic stairo "barren;" Old Norse stirtla "a barren cow," Old English starian "to stare," stearc "stiff, strong, rigid," steorfan "to die," literally "become stiff," styrne "severe, strict") என்று போட்டிருப்பார். தமிழின் திட்பு/திட்டு/.திண்/திட/.திடர் என்ற சொற்கள் எல்லாம் இதோடு தொடர்புடையவை.

[தமிழ் எந்தவிடத்தில் பிறமொழிகளோடு ஓட்டுகிறதென்று பாராது, அத் தொடர்பை முடிந்தாற் பயன்படுத்துவோமே என்று கொள்ளாது, காலஞ் சென்ற வில்லியஞ்சோன்சு, மாக்சுமுல்லர், மோனியர் வில்லியம்சு, வெல்லிசு, கால்டுவெல் போன்ற பழம் மேலையாய்வாளரின் முடிவுகளை அப்படியே கல்மேல் எழுத்தாகக் கொண்டு, முற்றுமுழுதான உண்மையென நம்பி, நமக்கு நன்றாகவே தெரியும் மொழியுறவுகளை மறைத்து, தமிழைத் தத்தளிக்க விடுவதே சொல்லாக்கரின் போக்காக இன்றிருக்கிறது. தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள உறவை அடிக்கடி சொல்லும் இராம.கி இவர்களாற் தப்பாகவே அறியப்படுவதும் வழமையாகிப் போனது.]     

மேற்சொன்ன stereo விளக்கத்தின்படி அடுத்து வருவது stereometry என்ற கூட்டுச் சொல்லாகும். இதில் metry என்பதை அளத்தலென்றே பொருள் கொள்கிறோம். metre என்ற அலகுப்பெயரும் அளத்தற் பொருள் கொண்டதே. கோல் என்ற சொல்லை இதற்கு ஈடாகத் தமிழில் நெடுங்காலம் புழங்கியுள்ளோம். தமிழில் மட்டுதல் வினைச்சொல் மதித்தலைக் குறிக்கும். இன்றுங்கூட “உங்களுக்கு என்னமாதிரி இது மட்டுப்படுகிறது?” எனும்போது நம்மையறியாமல் அளத்தலைச் சுட்டுகிறோம். மட்டிகை என்பது metric. மட்டிகையின் நீட்சியான மத்திகையும்/ மதிக்கையும் metry யைக் குறிக்க நல்ல சொற்களாகும். மத்திகையின் இன்னொரு வளர்ச்சியாய் ’மாத்திரி’ என்பதைப் பாவாணர் உருவாக்கினார். kilometre-ஐ,  அயிரமாத்திரி என்று தனித்தமிழ் அன்பர் பயன்படுத்துவார். இன்னுஞ் சிலர் kilometre போன்ற அலகுச் சொற்களை வெறுமே ஒலிபெயர்த்து கிலோமீட்டர் என்று எழுதவேண்டுமென்பார். (நான் இரு விதமாயும் எழுதுவேன்.)

stereometry. என்பது திடர் மதிக்கை = திண்மப் பொருளின் முப்பரிமான அளவுகளை மதிக்கும் முறை.

stereographic என்பது இரு பரிமானப் பரப்புக் கொண்ட தாளில் ஒரு முப் பரிமானத் தோற்றத்தைக் குறிப்பிட்ட முறையில் கிறுவிக்காட்டும் முறை. பொறியியல் வரைவுப் (Engineering Drawing) பாடத்தில் இது விதப்பான படிப்பு. இதையறியாத பொறியாளர் இருக்கமுடியாது. கிறுவுதல் = வரைதல். (வரைதலை to draw என்பதற்கும் கிறுவுதலை to graph என்பதற்கும் விதப்பாக நான் பயன்படுத்துகிறேன். கிறுவுதலின் நீட்சியாய் கீறுதல், கீற்று, கீற்றம், கிறுக்குதல் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகிறோம்.)

projection= புறத்தெற்றம். தெற்றிக்காட்டல் என்பது எடுத்துக்காட்டலை/ வெளிக் காட்டலைக் குறிக்கும். தெற்றி>தெறி என்ற சொல் இற்றை இளைஞரிடை பெரிதும் பரவுகிறது. ஒரு திரைப்படங்கூட இப்பெயரில் வந்தது. தெற்றுப்பல் என்பது வாயிதழ்களுக்குள் அடங்காது வெளிவந்த பல். தெற்றலோடு ஒட்டிப் பல வட்டாரச் சொற்களுமுண்டு. தெற்றுதல் என்பது தெறிக்க வைக்கும் பிற வினைச் சொல்லாகும். (இன்னும் எத்தனை நாட்களுக்குத் தெற்றுதலை இராம.கி. மட்டும் புழங்கும் தனிச்சொல்லாய்ப் பார்த்து விக்கிப்பீடியா போன்ற களஞ்சியங்கள் ஒதுக்கி வைக்குமோ? தெரியாது. project என்ற சொல்லிற்கு இன்னும் எத்தனை நாள் திட்டமென்று இணை சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்? என்னைக் கேட்டால் புறத்தெற்று என்று சொல்லிப் போவேன்.)
 
stereographic projection = திடர்க் கிறுவப் புறத் தெற்றம். = திண்மப் பொருளின் முப்பரிமானத்தையும் தாளிற் கிறுவிக் காட்டும் முறை.

அடுத்தது stereotype. முதலில் type ஐக் காண்போம். உத்தமத்திலும் (INFITT), வேறு சில மடற்குழுக்களிலும் typography பற்றி ஒரு கட்டுரை வெளியிட்ட நினைவிருக்கிறது.. mold தொழிலில்  type என்பது முகன்மையானது. Mo(u)ld க்கு ஈடாக, ”வார்ப்படம்” என்பது நம்மூர் கொல்லுத்தொழில் நடைமுறையில் உண்டு. ஒரே மாதிரிப் பொம்மை, சிலை, மானுறுத்தத் தொழிற்பொருட்கள் (manufactured articles) போன்றவற்றைச் செய்யும் போது பல்வேறு அச்சுகளில் உருகிய மாழையை, (metal) அல்லது பலமரை (polymer) ஊற்றி வார்ப்பது இயல்பு. foundary என்பது வார்ப்படச்சாலை என நம்மூரில் அழைக்கப்பட்டது. வார்ப்புத்தொழிலின் நடைமுறைகள் பின் அச்சுத் தொழிலுக்கும் பயன் பட்டன. அச்சு வந்த புதிதில், வெவ்வேறு எழுத்துக்களைச் செய்ய  இப்படித் தான்  உருகிய ஈய மாழையை வார்ப்படத்தில் (mold) ஊற்றுவர். அப்படி வடிக்கப்பட்ட ஒவ்வொன்றும் வடிப்பு/வார்ப்பு (font) என்றே அழைக்கப்பட்டது. 

கல்வெட்டுக்களிலும் இச்சொல்லுண்டு. foundary யில் செய்த எழுத்தச்சுகளை வார்ப்பு என்றழைப்பதே நம் பழம்வரலாற்றோடு தொடர்பு காட்டுஞ் சொல் ஆகும். இதற்குமாறாக ”எழுத்துரு” என்ற புதுச்சொல்லை கணிப்பொறியாளர் அழைப்பது ஒருவகையில் தத்தம் துறைகளுக்குப் பாத்தி கட்டும் வழக்கமே. ஒவ்வொரு துறையும் இப்படித் தனித்தனிப் பாத்தி கட்ட முற்பட்டால் தமிழில் அறிவியற் புரிதலே ஏற்படாது. ]இப்படித்தான் ஒரு காலத்தில் ”அருவி”யிருக்க ”நீர்வீழ்ச்சியை” உருவாக்கினார். அருவியில் அரிக்குஞ் செயல் (erosion) மட்டும் உள்ளது. ஆயினும் மலையிலிருந்து நீர்கொட்டுங் காட்சி நமக்குள் எழுகிறதே, அது எப்படி? ”வார்ப்பி”ருக்க ”எழுத்துரு” என்பது என்னைப் பொறுத்தவரைக் ”கனியிருப்பக் காய்கவர்ந்தற்று” தான்.]

stereotype = திடர்வடிப்பு = ஓர் அச்சில் வார்க்கப்படும் திண்ம வடிப்பு, மேலே John Ayto வின் விளக்கத்தைப் படியுங்கள். இச்சொல்லின் வரலாறு புரியும். அதை ஒதுக்கி இற்றைப்பொருளை மட்டும் விளக்குமாப் போல் அந்தரத்திற் சொல் படைக்க ஆசைப்படின் நானென் சொல்வது? முத்திரை குத்தல், அச்சு வடிப்பு, கடைந்தெடுத்த தோற்றம் போன்றன திடர்வடிப்பை நமக்குத் தெரிந்த வேறு போல்மத்தாற் (model) சொல்லிக்காட்டுவதாகும். அவ்வளவு தான். சுற்றி வளைத்துச் சொல்லுதல் என்பது எந்த மொழியையும் வளரவிடாது.

stereoscope = திடரங் காட்டி = திண்ம முப்பரிமானத்தையும் நமக்குக் காட்டுவிக்கும் கருவி; stereophonic = திடர் ஒலிப்பு,= முப்பரிமானத்திலும் நமக்கு வந்துசேரும் ஒலிப்பு. திடர் என்ற அடிச்சொல்லைக் கொண்டு மொத்த வரிசைக் கூட்டுச்சொற்களையும் சொல்லலாம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, November 12, 2019

மணிவாசகரின் யாப்புக் கைச்சாத்து (poetic signature)

மாணிக்க வாசகர் காலத்தை நிறுவும் எத்தனையோ வகைகளில் ஒன்றாய் "மாணிக்கவாசகர் எம்மாதிரிப் பாவகைகளைக் கையாண்டார்" என்பதைச் சொல்வதும் ஒருமுறையே, முதலில் இதைக் கையாண்டவர் மறைமலை அடிகள். அவருடைய முடிவு கி.பி.3- ஆம் நூற்றாண்டு.  நான் முற்றிலும் ஏற்கத் தயங்குவேன். மாணிக்க வாசகர் பற்றிய மறைமலை அடிகளின்  ( மாணிக்க வாசகர் வரலாறும் காலமும்)  ஆராய்ச்சி நூலை, வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள். அண்மையில் (2003) பூம்புகார் பதிப்பகம் [12 (ப.எண் 63), பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 600 108] அதை மறுபதிப்பாக வெளியிட்டது.

மாணிக்க வாசகர் காலம் பற்றிய என் முழு இடுகையை இப்போது இட வில்லை. அதை முழுதுமெழுதக் காலம் பிடிக்கும். பாவகை வழிமுறை பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன்.  ஓரோர் இலக்கிய ஆசிரியருக்கும், இலக்கிய காலத்திற்கும் விதப்பான யாப்புக் கைச்சாத்து (poetic signature) இருக்கிறது.  யாப்புக் கைச்சாத்து என்பது ஓர் எண்ணல்ல. அதுவொரு பங்குப் பரவல் (distribution). பாரதிக்கென ஒரு பரவலுண்டு. கம்பனுக்கெனப் பரவலுண்டு; சங்கப் பாடல்களுக்கெனப் பரவலுண்டு. இவை ஒவ்வொன்றையும் சீர்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கலாம். ஏன், இன்னும் ஆழம்போய் அசைகளின் அடிப்படையிலும் கண்டுபிடிக்கலாம். அப்படியெனில் மாணிக்க வாசகரின் யாப்புக் கைச்சாத்து என்ன?

மரபுப்பாக்களில் ஒவ்வொன்றும், வெவ்வேறு அடிவரையறை கொண்டு, வெவ்வேறு சீரளவு காட்டுவதால், அடிப்படையில் ஒரலகைக் கொணர்வதாய் இங்கு சீர்களோடு நின்று கொள்கிறேன். இல்லாவிடில், நாரங்கையும், ஆப்பிளையும் ஒப்பிட்டுக் கொண்டிருப்போம்.  எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒப்பிட வேண்டுமெனில், சீர்  அலகை அடிப்படையாகக் கொண்டு செய்ய வேண்டும். காட்டாக எண்சீர் ஆசிரிய விருத்தம் 32 சீர் கொண்டது; வெண்பா 15 சீர் கொண்டது; கட்டளைக் கலித்துறை 20 சீர் கொண்டது இப்படி..... ஒவ்வொன்றாய்க் கணக்கிட வேண்டும்,

சங்க காலத்தில் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பாவே பெரிதும் பயன்பட்டது. இப்போது ஒரு “புது இலக்கியம்” காண்கிறோமென வையுங்கள். அதனுள் பயிலும் ஓசைத்தொகுதிகளைச் சீரளவில் கணக்கிடும் போது இப்பாக்களே அதிக எண்ணிக்கையில் வந்தால் ”அவ்விலக்கியம் சங்ககால யாப்புக் கைச் சாத்து கொண்டது” என ஓரளவு துணிந்துசொல்லலாம். இதுபோல் வெண்பா வகை மேலிருந்தால் குறிப்பிட்ட இலக்கியம் சங்கம் மருவிய காலத்து யாப்புக் கைச்சாத்து சேர்ந்தது எனலாம். சங்கம் மருவிய காலத்தில் கலித்தாழிசை,  கலித்துறை, கலிவிருத்தம் போன்றவை வந்துவிட்டன. களப்பிரர் காலத்திலும் அவை விரவின. ஆசிரிய விருத்தம் என்பது களப்பிரர் காலத்தில் தோன்றி அதற்கப்புறம் பெரிதும் புழங்கியது. இன்னுஞ் சொன்னால் சங்கம் மருவிய காலத்திலேயே ஆசிரிய விருத்தம், கலிவிருத்தத் தாக்கத்தில் ஏற்பட்டுவிட்டது எனலாம். ஆயினும் பொ.உ.700 ஆண்டுகளுக்கு அப்புறமே ஆசிரிய விருத்தத் தாக்கம் இங்கு பெரிதும் கூடியது. அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம் என்றெழுந்து பின் 12 சீர், 14 சீர், 16 சீர் என வகைதொகை இன்றி பெரிதும் வளர்ந்தது.  இனி மாணிக்க வாசகருக்கு வருவோம்.

மாணிக்கவாசகர் பாடல்களைக் கொண்டு ஒரு பட்டியலிட்டால், கீழ்வருவது போல் அமையும். (இப்பட்டியலில் முதல் நிரை பாடப்பெற்ற தலத்தைக் குறிக்கிறது; இரண்டாம் நிரை பாடலுக்கு நம்பியாண்டார் நம்பி கொடுத்த தலைப்பு; மூன்றாம் நிரை பாடல் வகை; நாலாம் நிரை அடி அல்லது பாட்டுகளின் எண்ணிக்கை; ஐந்தாம் நிரை சீர்களின் எண்ணிக்கை; ஆறாம் நிரை அந்தந்தப் பாடலோ, பதிகமோ, சிறுபகுதியோ திருவாசகத்திலுள்ள மொத்த சீர்களில் எத்தனை விழுக்காடு கொண்டதென்று காட்டுகிறது.

                                                                                                                           அடி/பாட்டு     சீர்கள்       சீர் %
திருப்பெருந்     சிவபுராணம்                 கலிவெண்பா                                         95           379     2.206952775
தில்லை             கீர்த்தி திருஅகவல்      நிலைமண்டில ஆசிரியப்பா            146           584     3.400687125
தில்லை             திருவண்டப்பகுதி        நிலைமண்டில ஆசிரியப்பா            182           728     4.239212718
தில்லை             போற்றித்திருஅகவல் நிலைமண்டில ஆசிரியப்பா            225           900     5.240784953
திருப்பெருந்     திருச்சதகம்                   கட்டளைக் கலித்துறை                        10           200     1.164618878
                                                                      கலிவிருத்தம்                                          10           160      0.931695103
                                                                      எண்சீர் ஆசிரிய விருத்தம்                 10            320     1.863390206
                                                                     அறுசீர் ஆசிரிய விருத்தம்                  10             240     1.397542654
                                                                     கலிவிருத்தம்                                          10             160      0.931695103
                                                                     அறுசீர் ஆசிரிய விருத்தம்                  10             240     1.397542654
                                                                     அறுசீர் ஆசிரிய விருத்தம்                  10             240     1.397542654
                                                                     எழுசீர் ஆசிரிய விருத்தம்                   10             280      1.63046643
                                                                     கட்டளைக் கலித்துறை                        10             200      1.164618878
                                                                     எண்சீர் ஆசிரிய விருத்தம்                 10             320      1. .863390206
உத்தரகோச   நீத்தல்விண்ணப்பம்   கட்டளைக் கலித்துறை                        50           1000       5.823094392
திருவண்ணா திருவெம்பாவை          தரவிணைக்கொச்சகக் கலிப்பா      20             640      3.726780411
திருவண்ணா திரு அம்மானை          ஆறடித்தரவுகொச்சகக் கலிப்பா      20             480      2.795085308
தில்லை           திருப்பொற்சுண்ணம்அறுசீர் ஆசிரிய விருத்தம்                  20             480      2.795085308
தில்லை           திருக்கோத்தும்பி         நாலடித்தரவுகொச்சகக்கலிப்பா     20             320      1.863390206
தில்லை           திருத்தெள்ளேனம்       நாலடித்தரவுகொச்சகக்கலிப்பா     20             320      1.863390206
தில்லை           திருச்சாழல்                   நாலடித்தரவுகொச்சகக்கலிப்பா     20             320      1..863390206
தில்லை           திருப்பூவல்லி                நாலடித்தரவுகொச்சகக்கலிப்பா     20             320      1.863390206
தில்லை           திருவுந்தியார்               கலித் தாழிசை                                      20             240      1.397542654
தில்லை           திருத்தோள்நோக்கம்  நாலடித்தரவுகொச்சகக்கலிப்பா     14             224      1.304373144
உத்தரகோச  திருப்பொன்னூசல்      ஆறடித்தரவுகொச்சகக்கலிப்பா        9              216     1.257788389
தில்லை           அன்னைப் பத்து          கலிவிருத்தம்                                         10              160      0.931695103
தில்லை           குயிற்பத்து                    அறுசீர் ஆசிரிய விருத்தம்                 10              240      1.397542654
தில்லை           திருத்தசாங்கம்            நேரிசை வெண்பா                              10              150      0.873464159
திருப்பெருந்   திருப்பள்ளியெழு         எண்சீர்ஆசிரிய விருத்தம்                 10              320      1.863390206
தில்லை           கோயில்மூத்தபதிகம் அறுசீர்ஆசிரிய விருத்தம்                 10               240      1.397542654
தில்லை           கோயில்திருப்பதிகம்   எழுசீர்ஆசிரிய விருத்தம்                 10               280      1.63046643
திருப்பெருந்  செத்திலாப்பத்து            எண்சீர்ஆசிரிய விருத்தம்                10              320      1.863390206
திருப்பெருந்  அடைக்கலப்பத்து         கலவைப் பாட்டு                                  10              160      0.931695103
திருப்பெருந்  ஆசைப்பத்து                  அறுசீர் ஆசிரிய விருத்தம்                10              240      1.397542654
திருப்பெருந்  அதிசயப்பத்து                அறுசீர் ஆசிரிய விருத்தம்                10              240      1.397542654
திருப்பெருந்  புணர்ச்சிப்பத்து            எழுசீர் ஆசிரிய விருத்தம்                  10              280      1.63046643
திருப்பெருந்  வாழாப்பத்து                  எழுசீர் ஆசிரிய விருத்தம்                  10              280      1.63046643
திருப்பெருந்  அருட்பத்து                      எழுசீர் ஆசிரிய விருத்தம்                   10             280      1.63046643
திருக்கழுக்    கழுக்குன்றப்பதிகம்     எழுசீர்ஆசிரிய விருத்தம்                  10             280      1.63046643
தில்லை          கண்டபத்து                     கொச்சகக் கலிப்பா                             10             160      0.931695103
திருப்பெருந்  பிரார்த்தனைப்பத்து   அறுசீர் ஆசிரிய விருத்தம்                  10             240      1.397542654
திருப்பெருந்  குழைத்தபத்து               அறுசீர் ஆசிரிய விருத்தம்                  10             240      1.397542654
திருப்பெருந்  உயிருண்ணிப்பத்து     கலி விருத்தம்                                         10             160       0.931695103
தில்லை          அச்சப்பத்து அறுசீர்     ஆசிரிய விருத்தம்                                 10             240     1.397542654
திருப்பெருந்  திருப்பாண்டிப்பதிகம்  கட்டளைக் கலித்துறை                        10             250     1.455773598
திருத்தோணிபிடித்தபத்து எழுசீர்     ஆசிரிய விருத்தம்                                 10             280      1.63046643
திருப்பெருந்   திருவேசறவு                  கொச்சகக் கலிப்பா                              10             160      0.931695103
திருவாரூர்      திருப்புலம்பல்               கொச்சகக் கலிப்பா                              10             160      0.931695103
தில்லை           குலாப்பத்து                   கொச்சகக் கலிப்பா                              10             160      0.931695103
திருப்பெருந்   அற்புதப்பத்து               அறுசீர் ஆசிரிய விருத்தம்                   10             240     1.397542654
திருப்பெருந்   சென்னிப்பத்து            ஆசிரிய விருத்தம்                                  10              280     1.63046643
திருப்பெருந்   திருவார்த்தை              அறுசீர் ஆசிரிய விருத்தம்                   10              240     1.397542654
தில்லை           எண்ணப்பதிகம்          ஆசிரிய விருத்தம்                                     6             144     0.838525592
தில்லை           யாத்திரைப்பத்து        அறுசீர் ஆசிரிய விருத்தம்                   10              240     1.397542654
தில்லை           திருப்படைஎழுச்சி      கலிவிருத்தம்                                              2                32     0.186339021
திருப்பெருந்   திரு வெண்பா              நேரிசை வெண்பா                                 11              165     0.960810575
திருப்பெருந்   பண்டாய நான்மறை நேரிசை வெண்பா                                   7              105     0.611424911
தில்லை           திருப்படையாட்சி       பன்னிருசீர்ஆசிரிய விருத்தம்              8              384     2.236068247
தில்லை          ஆனந்த மாலை            அறுசீர் ஆசிரிய விருத்தம்                     7              168     0.978279858
தில்லை          அச்சோப் பதிகம்          கலிவிருத்தம்                                             9              144     0.838525592

திருவாசகத்தில் மொத்தச் சீர்கள்                                                                                          17173
திருக்கோவையார் மொத்தச் சீர்கள்                                                                                       8000

இனி ஆறாம் நிரையிலுள்ள விழுக்காடுகளைப் பாவகையால் தொகுத்தால், கீழ்ப்பட்டியல் கிட்டும்.
.

                                   திருவாசகம் மட்டும்    திருவாசகம்+திருக்கோவையார்

பாவகை                       சீர்கள்         சீர் %         சீர்கள்           சீர் %

வெண்பா                          799      4.652652419       799        3.174035673
ஆசிரியப்பா                  2212     12.8806848        2212        8.787192627
கலிப்பா                          3640     21.19606359      3640      14.45993723
கலித்தாழிசை                240       1.397542654      240        0.953402455
கலித்துறை                    1650       9.608105747    9650      38.33472371
கலிவிருத்தம்                  816        4.751645024     816         3.241568347
ஆசிரிய விருத்தம்       7816      45.51330577     7816       31.04913995
                17173 100        25173 100

இப்பட்டியலை மாணிக்கவாசகரின் யாப்புக் கைச்சாத்து (poetic signature) எனலாம். கூர்ந்துகவனியுங்கள் அவருடைய கைச்சாத்து ஆசிரிய விருத்தத்திற்கு மறுபக்கமாய்ப் பெரிதும் சாய்ந்திருப்பதை அறியலாம். அதிலும் திருப்படையாட்சி என்னும் 12 சீர் விருத்தத்தை ஒரு வெளிப்புள்ளி (outlier) என்று கொண்டால்,  இத்தகைய கைச்சாத்து 9-ஆம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்பில்லை என்றே என் சிற்றறிவிற்குப் படுகிறது. அதே பொழுது பொ.உ. 3 ஆம் நூற்றாண்டு என்றுஞ் சொல்லமாட்டேன். தவிர, களப்பிரர் காலத்தைப் பலரும்  சொல்வது போல் பொ.உ.300 க்குச் சற்றுபின் என்றுங் கொள்ளமாட்டேன். என் கணிப்பில் அது பொ.உ.மு.400 க்கு அப்புறம் தான். (அதாவது மூர்த்திநாயனார் காலத்தில்தான்.)  இப்போதைக்கு என் கணிப்பில் மாணிக்க வாசகரின் காலம் பொ.உ. 300க்கும் பொ.உ.400க்கும் இடைப்பட்ட காலம். மணிமேகலையின் காலம் பொ.உ.450 க்கு அருகில். மணிவாசரின் திருவாசகம் மணிமேகலைக்குச் சற்று முந்தையது என்றே  கொள்கிறேன். :”மாணிக்கவாசகரின் காலத்தை” வேறு தொடரில் ஆழமாய்ப் பார்ப்போம். யாப்புக் கைச்சாத்து என்பது காலக் கணிப்பில் ஒரு கூறு. அவ்வளவு தான்.

தேவார மூவரின் கைச்சாத்தை நான் இன்னும் கண்டுபிடிக்க முற்படவில்லை. நேரம்கிடைப்பின் செய்வேன். அதற்கிடையில் வேறு யாரேனும் ஈடுபாடு உள்ளவர் கண்டுபிடித்துச் சொன்னால் இங்கே ஒப்பிடுவதற்குத் தோதாய் இருக்கும்.

அன்புடன்,
இராம.கி.