Thursday, August 27, 2020

பல்வேறு வகைக் கூடல்கள்

meeting - சந்திப்பு = an occasion when people come together to discuss things and mak decisions.

conference = அரங்கம்  = a large formal meeting, often lasting for several days

session = செற்றம் = a formal meeting or groups of meetings of a parliament or a law court

summit = சிமையம் = a meeting or set of meetings between the leaders of two or more governments

convention = வணையம் = a conference of people who do a particular job or have a similar interest.

gathering = கூட்டம் = an occasion when people come together for a specific purpose

assembly = அவையம் = a meeting of people gathered for a particular purpose

Friday, August 14, 2020

valve = வாவி

valve (n.) என்ற ஏந்து (equipment) பற்றி ஒரு கேள்வி தமிழ்ச் சொல்லாய்வுக் களத்தில் எழுந்தது. ஆங்கிலத்தில் அதன் சொற்பிறப்பை late 14c., "one of the halves of a folding door," from Latin valva (plural valvae) "section of a folding or revolving door," literally "that which turns," related to volvere "to roll," from PIE root *wel- (3) "to turn, revolve" என்று சொல்வார். 

தமிழில் வளைவுப் பொருளிற்குள் நான் செல்லவே இல்லை. மாறாக நீர்ப்பிடிப்பிற்குள் சென்றேன். எங்கள் ஊர்ப்பக்கம் ஏரி, கண்மாய், குளம், ஊருணி என்று பல்வேறு நீர்நிலைகள் உண்டு, எங்கள் பகுதி பாலை நிலம். மழைக்காலத்தில் பெய்யும் நீரைப் பிடித்து வைத்துக்கொள்வோம். மற்ற காலங்களில் அதைப் பயன்படுத்துவோம். கண்மாயிலிருந்து திறந்துவிடும் நீரையும், ஓடைகள், கால்வாய்கள் வழி, சில இடங்களில் மண்ணை உடைத்து, சில இடங்களில் அடைத்துத் திருப்பி விடுவோம். அதாவது ஓடைகளைச் சில இடங்களில் பற்றிக்கொள்வோம். சில இடங்களில் அடைத்துவிடுவோம். இப்படித்தான் அங்கு பாயனம்>பாசனம் நடக்கிறது.valve இன் செயற்பாடும் இது தான். இதற்குப் பெரிய கம்பசூத்திரம் தேவையில்லை. எங்கு பற்றவேண்டும், எங்கு விடவேண்டும் என்று புரிந்தால் போதும். 

தமிழில் வல்வுதல்>வவ்வுதல் என்பது ”பற்றிக் கொள்ளுதல் to take hold of” என்பதைக் குறிக்கும். ”கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி” (அகநா.348.23). "அரசர் செறின் வவ்வார்” (நாலடி 134), “வவ்வித் துழாயதன் மேல் சென்ற” (திவ்.பெரியதிரு. 9,4,4) என்று பல காட்டுகள் இதற்குண்டு. பற்றிக் கொள்ளும் செயலைத் தமிழில் அவ்வுதல், கவ்வுதல், வவ்வுதல் என்று 3 வழிகளில் சொல்வோம். இவற்றில் எது சொன்னாலும் சரியே. 20 ஆண்டுகளுக்கு முன் நான் வவ்வுதலைத் தேர்ந்தேன். அவ்வளவாகப் பயன்படாத சொல் அது என்பதே காரணம். எனவே இதிலிருந்து பெயர்ச்சொல் உருவாக்கி வாவி என்று பயனுறுத்தினேன் வவ்வுதலை அறியாதோர், ”நான் ஆங்கில ஒலியில் சொல் படைக்கிறேன்” என்பார். சொல்லிப் போகட்டும். 

valve இற்குள்ளே ஒரு விளவம் (fluid) வருகிறது. வெளியே அனுப்ப பல்வேறு வழிகள் இருக்கலாம். அவற்றில் ஏதேனும் ஒருவழியைப் பற்றிக்கொண்டு மற்ற வழிகளை அடைக்க வேண்டுவதே valve இன் வேலை. இதற்கான சொல்லைத் தமிழில் ஆக்கும் போது, “பற்றிக் கொள்ளும்” செயலைச் சொல்லியும் சொல் ஆக்கலாம். அடைக்கும் செயலைச் சொல்லியும் ஆக்கலாம். பல வழிகள் இருக்கும் போது பற்றிக் கொள்வதைச் சொல்வது நலம் பயக்கும். சொல் நீளாது, வவ்வும் தொழிலைச் செய்யும் ஏந்து வாவு>வாவி (valve) ஆகும். [படுவது பாடு என்றும் அவ்வுவது ஆவு>ஆவி, கவ்வுவது காவு>காவடி என்றும் ஆவது போல் இதைப் புரிந்துகொள்ளுங்கள்.] valve ஓடு சேர்த்து பல்வேறு கூட்டுச் சொற்களை வேதியாலைகளில் கையாளுவோம். எல்லா valve களின் முடிவிலும் வாவி எனச் சிறு சொல் இருப்பது பயன்கொடுக்கும். ஒருசில வாவிகளைக் கீழே பட்டியலிடுகிறேன். 

அமைப்பால் வழங்கும் சில வாவிகள்: 

ball valve = பந்து வாவி 
butterfly valve = பறவட்ட வாவி (வண்ணத்துப் பூச்சி என்று சொல்லமுடியாது. இது திகிரி-disc-போல் உள்ளது. பறக்கின்ற வட்டம் எனவே பறவட்டம்.) 
choke valve = சொருக்கு அல்லது அடைப்பு வாவி (சொருகு என்றும் சொல்லலாம்; சொருக்கு என்றும் சொல்லலாம்) 
gate valve = கதவு வாவி 
globe valve = கோள வாவி 
knife valve = கத்தி வாவி 
needle valve = ஊசி வாவி 
pinch valve = பிதுக்கை வாவி 
piston valve = பொலுத வாவி (சரியான சொல்லைப் பொது அவையில் சொல்லமுடியாது என்பதால் இடக்கர் அடக்கலாய்ப் பொலுத என்று மாற்றியுள்ளேன்.) 
plug valve = புழுக்கை வாவி 
solenoid valve = சுருள்காந்த வாவி 
spool valve = பொந்து வாவி 

செய்முறையில் வழங்கும் சில வாவிகள்: 

check valve = துழவு வாவி 
flow control valve = விளவக் கட்டு வாவி 
pr.reducing valve = அழுத்தம் குறைக்கு வாவி 
thermal expansion valve = தெறும விரிப்பு வாவி 
safety or relief valve = சேம அல்லது வெளிவு வாவி 
 sampling valve = மாதிரியெடுப்பு வாவி 

ஆனாலும் சிலருக்கு நான் சொல்வது புரிபடுவதில்லை. “வாவி ஆங்கில ஒலிப்புக்கு இணையாக உள்ளது. வாவி என்றால் நீர்நிலை, குளம் என்றும் பெயர் உண்டே?” என்று ஒரு நண்பர் வழக்கம் போற்கேட்டார். 

என் மறுமொழி இது: 

“வாவி = குளம், நீர்நிலை என்ற சொல் எப்படி வந்ததென்று ஒருமுறையாவது எண்ணிப் பார்த்தீர்களா? நீங்களாக ஏதோவொரு ஓரப் புரிதலில் கருத்துச் சொன்னால் எப்படி? அவை நீர்ப் பிடிப்புகள் தானே? பிடித்தலும் பற்றலும், வவ்வுதலும் ஒன்று தானே? நான் வேறு ஏதாவது ஒரு மொழி் பேசுகிறேனா? நீரைப் பற்றிக்கொள்வதை நீரை வவ்விக்கொள்வது என்று எனக்குத் தெரிந்த குறைத் தமிழில் கட்டாயம் சொல்லலாம். எனவே நீர்ப்பிடிப்பும் வாவியானதில் வியப்பில்லை. இன்னொன்றும் பாருங்கள் நீரை நிலைத்துப் பிடிப்பது மட்டுமே வாவியல்ல, ஆற்றோடையும் கூட வாவி தான். ஒரு நல்ல அகரமுதலியில் தேடிப் பாருங்கள். இதெல்லாம் இராம.கி.யின் ஆக்கங்கள் அல்ல, தூக்கித் தள்வதற்கு, “வண்டார் குவளைய வாவியும்” என்பது சீவக 337 இல் வரும் சொல்லாட்சி. 

 ”நீங்களெல்லாம் சிந்தாமணியில் வரும் நீரோடை யை ஏற்பீர்கள்? ஆனால் இராம.கி. அடையாளங் காட்டிய, valve இன் வழி ஏற்படும் நீர்ம ஓட்டத்தைத் தவிர்ப்பீர்கள்? ”என்றால் எனக்கு முற்றிலும் வியப்பே ஏற்படுகிறது. நாம் இந்த உலகில் தான் இருக்கிறோமா? அல்லது இல்லையா? நீங்கள் சிறந்த பழஞ் சொல்லாட்சிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு, உங்களுக்குத் தோன்றும் விந்தைப் புரிதலில் சொற்களைத் தேடுவது உங்கள் உகப்பு என்று நான் நகர்ந்து விடுவேன். வாவி என்ற சொல்லை நான் உரிய பொருள் கொண்டே ஆழப் புரிந்து இத்தனை காலம் (20 ஆண்டுகள்) பயனுறுத்தி வருகிறேன். அப்புறம் ஒன்று சொல்லவேண்டுமே? ” இந்த ஆங்கில ஒலிப்பு: என்பதைக் கேட்டுக் கேட்டு எனக்குப் புளித்துவிட்டது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று நேரடியாய்ச் சொல்லிப் போங்கள். அது இருவருக்கும் நல்லது”. 

 இதற்கு நண்பரின் மறுமொழி: 

 “ஐயா, பொறுத்தருள வேண்டுகிறேன், உங்களின் ஆழ்ந்த வேர் சொல்லாய்வு என்னை வியக்க வைக்கிறது. வாவிப் பொருள் மட்டுமே அறிவேன் அதன் ஆழ்ந்த வேரறியேன். இன்று தங்களால் தெளிவாகியது. மிக்க நன்றி ஐயா. Catchment area என்பதற்கு ஏற்ற தமிழ்ச்சொல் நீர்பிடிப்புப் பகுதியை வாவி என அழைத்தலாகும்.” 

 என் மறுமொழி: 

நான் வேரறிந்து சொல்லிப் பலனென்ன? அது யாருக்கு உறைக்கிறது? ”நான் ஆங்கில ஒலிப்பில் சொல்படைக்கிறேன்” என்று யாரோவொரு விவரங் கெட்டவர் சொன்னதை நம்பித் தானே, வாவியை மறுத்தீர்கள்? உங்களிடம் நான் எதைச்சொல்லி என்ன பயன்? அவதூறுகளே நிலைக்கின்றன.

முடிவாக ஒன்று சொல்லவேண்டும். ”தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் இருக்கும் உறவைக் காட்டிவிடக் கூடாது” என்ற தீண்டாமைக் கொள்கைச் சிலரைக் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்ட வைக்கிறது என்பது நன்றாகவே புரிகிறது.  “அது செய்யக்கூடாது, இது செய்யக் கூடாது” என்று வரும் வாய்ப்புக்களைத் தவறவிட்டு ஒழுமுழ நீளத்திற்கு இன்னும் எத்தனை நாள் சொல்படைப்பார்கள் என்று தெரியவில்லை. வாவி இரண்டெழுத்துத் தான். ”அது வேண்டாம் ஆங்கிலம் மாதிரி இருக்கிறது” என்று சொல்லி நீளச் சொற்களை நாடிப் பலரும் தமிழைக் காப்பாற்றுகிறார் போலும். 

அன்புடன், 
இராம.கி.

Tuesday, August 11, 2020

துயில்

துபாயில் இருந்த நண்பர் சாபு ஒருமுறை மடற்குழுவில் நித்திரை, உறக்கம், தூக்கம் பற்றிக் கேட்டிருந்தார். உடனேயே எழுத முடியாது போய், கொஞ்சம் நாள் கழித்து மடல் எழுதினேன். அதை உங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன். 

துயில், பள்ளி, துஞ்சல், அனந்தல், 
கிடை, படை, சயனம், கனவு, 
கண்படை, கண்வளரல், கண்ணடைத்தல், 
கண்ணயர்தல், கண்படுதல், கண்முகிழ்த்தல் 

என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். உறங்குவது என்பதும், இருட்டு, கிடத்தல், படுத்தல், அயர்வு, சோர்வு, வாட்டம், தங்குதல், அடைதல், அணைதல், தாமதம், சோம்பல், சாவு போன்ற கருத்துக்களும் ஒன்றோடு ஒன்று இழைந்தே தமிழில் பயிலுகின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 

 1. ஒரு இடத்தைப் பள்ளும் போது (தோண்டும் போது) பெரிதாகச் செய்தால் பள்ளம். சிறிதாகச் செய்தால் பள்ளி(ல்). நாளாவட்டத்தில் இந்த வேறு பாடு குறைந்து போய், ஏன் மாறிக் கூடப் போய், குகைக்கு மற்றொரு சொல்லாகவே 'பள்ளி' என்பது ஆயிற்று. நாகரிகம், மதங்கள் வளர்ந்த பிறகும் பள்ளிகள் மனிதனின் வாழ்விலிருந்தே வந்தன. குராப் பள்ளி, சிராப் பள்ளி போன்ற ஊர்ப்பெயர்கள் எல்லாமே குகைகள் இருந்ததையும், அதில் ஒரு சாரார் வசித்து வந்ததையும் தெரிவிக்கின்றன. இதே பள்ளி, பின் சமயக் காலத்தில், சமணப் பள்ளி, புத்தப் பள்ளி, பள்ளி வாசல் எனப் புதிய மதத்தார் கோயில்களுக்கும் பயன்பட்டது. இச் சமயப் பள்ளிகளில் கல்வியும் கற்றுக் கொடுக்கப் பட்ட போது, கல்விச் சாலையும் பள்ளியாயிற்று. 

 2. காலையெல்லாம் வேட்டையாடி தன் உண்பசி தீர்த்து அயர்ந்து, சோர்வுற்று மாலையில் திரும்பும் ஆதிகால மனிதனுக்குப் பொழுதுசாய்ந்தால் போக்கிடம் இருட்டும், குவையும், கொடியும் தானே! என்ன தான் தீயின் அண்மையில் இருந்து விழிப்பைக் கூட்டிக் கொண்டாலும், சோர்வும், அயர்ச்சியும் கண்ணைச் சொக்கிக் கொண்டு வரும் தானே! பள்ளப்பட்ட குகையில் கண்ணை மூடிக் கொண்டு கிடக்கும் போது (கொடிய, ஆனால் சிறிய, பாம்புகள் போன்ற ஊருயிரிகள் தன்னைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக கல்லை வெட்டிச் செய்து கொண்ட படுக்கைகளில் படுக்கும் பழக்கம் வந்தது. இந்தப் படுக்கைகளும் பள்ளியென்றே அழைக்கப் பட்டன. பள்ளியில் இருந்து தோன்றியதே படுக்கை. 

அதம் என்றாலும் பள்ளம் (பா அதலம் = பாதாலம் (=பாதாளம்)). பள்ளி எனும் சொல் அதன் நீட்சியில் தூக்கத்தையும் குறித்தது. 

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அடைந்தான்; 
            கன இருள் அகன்றது; காலையம் பொழுதாய் 
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்; 
             வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி 
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த 
            இரும் களிற்று ஈட்டமும் பிடியொடும் முரசும் 
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்; 
            அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே!

பள்>படு>படுகு>படுக்கு>படுக்கை. (பள்ளப்பட்ட இடத்தில் தான் படுத்தனர் போலும்.) 

 3. நிதலம் என்பது கீழ் உலகங்களில் ஒன்று. (இன்றைய நெதர்லாந்து என்ற நாட்டின் பெயரும் இதே பொருளில் தான் இருக்கிறது. நெதர் என்றால் அந்த மொழியிலும் பள்ளம், தாழ்ந்தது என்றே பொருள்.) நித்திக் கிடப்பது நித்தை. நித்தை வடமொழியில் நித்திரை என்று ஆகும். 

 4. இதே போல கீழே கிடந்தது கிடை. (என்ன ஆச்சு, ஒரே கிடையா இருக்கா? மருத்துவர் கிட்டே போகலாமா?) 

 5. சாய்ந்து இருந்தது சயனம். (பெருமாள் திருவரங்கத்திலே கிடந்த திருக்கோலம். தெற்கே பார்த்து சயனம்) 

 6. படுப்பது படை என்று அறிவது மிக எளிது.
 
 7. அதேபோல ஒடுங்கிக் கிடப்பது, உறங்கிக் கிடப்பது ஆகும். 

 8. கொடிகள் மற்றும் மரக்கிளைகளில் தொங்கித் தூங்கியது தூக்கம் (பிள்ளை தாலில் தொங்கும் போது, தூங்கத்தானே செய்கிறது?) 

 9. இனி அனந்தல். கொஞ்சம் சரவலான சொல். கண்ணை மூடினால் இருட்டு எனும் போது இருட்டே உறக்கத்தின் கூராய்ப் போனது. அல்-இரவு, இருள். அந்,அன் - இன்மை அந்தம் - உள், மறைவு அந்தப்புரம் - உள்ளே இருக்கும் புரம் அல்லது கட்டு, மறைவான கட்டு. அத்தமித்தல் - மறைதல், படுதல், உட்புகுதல், அற்றுப்போதல், இல்லாமற் போதல் அன்+அந்தல் = அனந்தல், இதுவும் உறக்கம் தான். திருவனந்தபுரத்தில் அறிதுயில் கொண்டு படுத்துக்கிடக்கும் அனந்தனைத் தெரியாதார் யார்? அறிதுயில் ஒரு நுண்மையான சொல். அவன் முற்று முழுதாக அறிந்து கொண்டே துயில்வதாக ஒரு பாவனை. 

 10. கனவு என்பது இருட்டு எனும் பொருளில் கல் ஏனும் வேர்ச்சொல்லில் மலர்ந்தது. நாளாவட்டத்தில் dream என்ற இற்றைப் பொருளிற்கு நீண்டுள்ளது. 

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, 
முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற் கீழ், 
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்! 

 11. கண் வளரல் என்பது சுவையான சொல்லாட்சி. ஒரு அருமையான சப்பானிய ஐக்கூ பல ஆண்டுகள் முன் படித்தேன். அடிகள் நினைவில் இல்லை. பொருள் மட்டும் ஞாவகத்தில் உள்ளது. தலைவன் கல் ஒன்று வளருவதைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அதிலொரு முரண் வரும். அப்படிப் பட்ட ஓர் உணர்வில் வருவது தான், கண் வளரல். (கண் எப்படித் தூக்கத்தின் போது வளரும்? பிள்ளையை மடியில் வைத்து ஆராரோப் போட்டால், பின் அது வளராமல் என்ன செய்யும்?) 

இது பெரும் பாலும் குழந்தைகளைத் தொட்டிலில் போட்டுத் தூங்க வைப்பதற்குப் பயன்படும். ஒரு நாட்டுப்புறப் பாடல்: 

கரும்புருகத் தேனுருகக் கண்டார் மனமுருக, 
எலும்புருகப் பெற்றகண்ணே! இலக்கியமே! கண் வளராய்! 

 12. கண்ணடைத்தல் என்பது சேர்ந்துபோய் எழுகவொண்ணாதபடி கண் செருகிக் கொண்டு வருவது. 

 13. கண்ணயர்தல் கிட்டத் தட்ட அதே பொருளில் தான். 

 14. கண் படுதல் என்பது திட்டிப் (=திருஷ்டி) பொருளாக மட்டுமல்லாது தூங்குவதற்கும் ஓரோவழி பயன்படுகிறது. உடம்பு படுவது போலக் கண்ணும் படுகிறது, பதிகிறது. 

 15. கண்படை, கண்படுதலின் தொடர்ச்சியே. 

 16. கண்முகிழ்த்தல் 'தோன்றும்' பொருளில் அல்லாது. 'மூடல்'  அமங்கலம் என்று கருதி எதிர்ச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். எங்கள் பக்கம் வீட்டிற்குள், சாமி அறையிலுள்ள விளக்கை 'அணை'யென்று சொல்ல மாட்டார். அதை இடக்கர் அடக்கலாக, 'விளக்கை நல்லா வை' என்று சொல்வார். அதுபோலத் தான் கண்முகிழ்த்தலும். 

 17. எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். இந்தத் துயில், துஞ்சல் மட்டும் தான் கொஞ்சம் சரவல். இரண்டிற்குமே வேர் துய் தான். துயக்கு, துயங்குதல், துயரம் எனப் பல சொற்கள் சோர்ந்து போகும் பொருளிலேயே வழக்கில் உள்ளன. அதேபொழுது ”துயல்தல்” அசைதல் பொருளில் வருவதைப் பார்க்கும் போது கொஞ்சம் வியப்பு வருகிறது. துயல் = அசைதல் துயில் = ஆழ்ந்த அசைவில்லாத நிலை. இது எப்படி என்றால், மண்= செறிந்த நிலை, மணல் என்பது மண் அல்லாதது= செறியாதது என்பதைப் போல. இங்கே ஓர் உயிர் எழுத்து மாற்றத்தில் மாறுபட்ட பொருள்கள் கிடைக்கின்றன. 

 18. துஞ்சல், துயிலின் நீட்டமே. 

அன்புடன், 
இராம.கி.

Friday, August 07, 2020

புனிதம்

இச்சொல் பற்றி தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்கப் பட்டது. அது ”புண்யம் எனும் சங்கதச் சொல் தொடர்பானது” என்று ஒருவர் கூறினார். நானறிந்தவரை அது தவறு. ஒரு சொல்லைச் சங்கதம் என்றுசொல்ல விழைவோர் கூடியமட்டும்  இணையச் சங்கத அகரமுதலிகளில் சொல்லைச் சரிபார்த்துப் பின்னர் சொன்னால் நன்றாக இருக்கும். மாறாக, கேள்விப் பட்டதையெலாம் வைத்துத் தான்தோன்றியாய்ச்  சொல்ல முற்படுவது பலநேரம் முரணாக அமைந்து விடும். மீண்டும் சொல்கிறேன் புண்யத்திற்கும் புனிதத்திற்கும் எத்தொடர்பும் இல்லை. சங்கத அகரமுதலியே அப்படிச் சொல்லவில்லை. புனிதமெனும் சொல் பெரும்பாலும் வேற்றுருவில் தமிழில் எழுந்து சங்கதம் போய்த் திரிந்து, பின் மீண்டும் தமிழுக்கு மாற்றுருவில் வந்தது. 

வேள்வி செய்வதை  நாடும், இறப்பின் பின்னால் உடலை எரிக்கும், ஆரியரின் பண்பாட்டில் படிமைகள் என்பன தொடக்க காலத்தில் கிடையா. தமிழருக்கும் அவர் தொடர்பாளருக்கும் மட்டுமே, இறந்தோர் உடலைப் புதைக்கும் காரணத்தால், நடுகற்களும், படிமைகளும் உண்டு, ஒவ்வொரு நினைவு நாளிலும். நடுகல்லை/ படிமையைக் கழுவித் துடைத்துப் பொட்டிட்டு, துணி கட்டி, அலங்காரம் பண்ணிப் பூச்சூடி, படையலிட்டு வருவது இன்றுமுள்ள நாட்டார் பழக்கம். இப்பழக்கங்களைப் படிமைகளுக்கும் செய்து நாம் அழகு பார்ப்போம். இற்றைக் கோயில்களிலும் இதையே செய்கிறோம். நடுகல் பேணுதலில் வந்த பழக்கம் இதுவாகும். இதற்குச் சொல்லைச் சங்கதத்தில் தேடுவது பொருளற்றது/

படிமையைக் கழுவித் தூய்மை செய்வதை பூசுதல் என்றே தமிழில் சொல்வர். ”நீரான் வாய் பூசுப”-நான்மணிக் கடிகை 35. ”பூசிக் கொளினும் இரும்பின் கண் மாசொட்டும்”-நான்மணிக் 99 . தரை மெழுகுதலும் தமிழில் பூசுதல் எனப்படும். ”புனலொடு விரவியே பூவின் அல்லது” புரலிங். இட்டலிங். 37 . சந்தனம், நீறு போன்றவற்றைப் படிமையில் அல்லது உடலில் தடவுவதும் ”பூசுதல்” எனப்படும் ”நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை” - தேவா.627. ”பூசு” என்பது மற்ற தமிழிய மொழிகளிலும் உண்டு. ம. பூசுக. க. பூசு; கூசு; தெ. பூயூ, து புசுனி, பட. கூசு. இது புல் எனும் பொருந்தற் கருத்தில் எழுந்த சொல். நடுகல் பரப்பில் நீர், சந்தனம், நீறு போன்றவற்றைப் பொருந்திப் பரவுவது. புல்>புள்>புய்>*(பூய்)>பூசு>பூசு-தல் என்று இச்சொல் வளரும். இதன் பெயர்ச்சொல் தான் பூசை. அதைச் சிலர் பூசெய் என்றெலாம் தவறாய்த் திரிப்பார். 

எச்சிலைத் தன் முன்னங்காலால் எடுத்து முகத்தில் பூசிக்கொள்ளும் விலங்கும் பூசை எனப்பட்டது. *பூய்/பூசு என்பது யகர>ஞகர>நகரத் திரிவில் பூசு>பூஞு>பூநு என்று திரியும். பூசுதலின் பெயர்ச்சொல்லான பூசை, படிமங்களுக்குச் செய்யும் கடனோடு நின்றுகொண்டது  பூசை> பூஞை> பூநை> பூனை என்று இயல்பாய்த் திரியும் சொல்லோ விலங்கிற்குப் பயனாகியது, தமிழில் பூசையும், பூனையும் இன்றும் புழக்கத்தில் வெவ்வேறு பொருளைக் குறிப்பன.  ஆனால் சங்கதத்தில் *பூய் என்ற தமிழ்வேர், பூ என்ற தாதுவாய் மலர்ந்திருகிறது  இதில் உருவான சொற்களாய், (https://sanskrit.inria.fr/MW/161.html#puu) மோனியர் வில்லியம்சில் கீழ்க்கண்டவாறு போட்டிருப்பர்.

पू [ pū ] [ pū ]1 Root cl. [9] P. Ā. ( Lit. Dhātup. xxxi , 12) [ punā́ti ] , [ punīté ] ( 3. pl. Ā. [ punáte ] Lit. AV. , [ punaté ] Lit. RV. ; 2. sg. Impv. P. [ punīhi ] Lit. RV. , [ punāhí ] Lit. SV.) ; cl. [1] Ā. ( Lit. xxii 70) [ pávate ] ( of P. only Impv. [ -pava ] Lit. RV. ix , 19 , 3 , and p. gen. pl. [ pavatām ] Lit. Bhag. x , 31 ; p. Ā. [ punāná ] below , [ pávamāna ] see p. 610 , col. 3 ; 1. sg. Ā. [ punīṣe ] Lit. RV. vii , 85 , 1 ; pf. [ pupuvuh ] . [ °ve ] Lit. Br. ; [ apupot ] Lit. RV. iii , 26 , 8 ; aor. [ apāviṣuḥ ] Subj. [ apaviṣṭa ] Lit. RV. ; fut. [ paviṣyati ] , [ pavitā ] Gr. ; ind.p. [ pūtvā́ ] Lit. AV. ; [ pūtvī́ ] Lit. RV. ; [ pavitvā ] Gr. ; [ -pū́ya ] and [ -pāvam ] Lit. Br. ; inf. [ pavitum ] Lit. Br.) , to make clean or clear or pure or bright , cleanse , purify , purge , clarify , illustrate , illume (with [ sáktum ] , " to cleanse from chaff , winnow " ; with [ krátum ] or [ manīṣā́m ] , " to enlighten the understanding " ; with [ hiraṇyam ] , " to wash gold " ) Lit. RV. ; (met.) to sift , discriminate , discern ; to think of or out , invent , compose (as a hymn) Lit. RV. Lit. AV. ; (Ā. [ pávate ] ) to purify one's self. be or become clear or bright ; (esp.) to flow off clearly (said of the Soma) Lit. RV. ; to expiate , atone for Lit. ib. vii , 28 , 4 ; to pass so as to purify ; to purify in passing or pervading , ventilate Lit. RV. (cf. √ [ pav ] ) : Pass. [ pūyáte ] , to be cleaned or washed or purified ; to be freed or delivered from (abl.) Lit. Mn. Lit. MBh. : Caus. [ paváyati ] or [ pāvayati ] ( ep. also [ °te ] ; aor. [ apīpavat ] Gr. ; Pass. [ pāvyate ] Lit. Kāv.) , to cleanse , purify Lit. TS. Lit. Br. Lit. : Desid. , [ pupūṣati ] , [ pipaviṣate ] Gr.: Desid. of Caus. [ pipāvayiṣati ] Gr. ( ( cf. Gk. 1 ; Umbr. (pir) ; Germ. (Feuer) ; Eng. (fire) . ) )
  .           
தவிர,  पुनीत [ punīta ] [ punītá ] m. f. n. cleaned , purified Lit. MBh. என்றும்  கொடுத்து இருப்பர். பூவிலிருந்து புனித எப்படி வந்ததென்று அங்கு சொல்லமாட்டார். தமிழில் சொல்வது எளிது. பூசு-தல் வினையிலிருந்து பூசிதம் என்ற பெயர்ச் சொல் எழலாம். பூசைக்கு உரியவர். பூசிக்கப் படுபவர் என்றதற்குப் பொருள் ஆகும். முன்சொன்ன ய>ஞ>ந திரிவில் அது பூசிதம்>பூஞிதம்>பூநிதம் என்று ஆகும்.  பெரும்பாலும் பூநிதமே வடக்கே கடன் வாங்கப்பட்டு, முதலெழுத்தைக் குறிலாக்கி புநித என்றாகி இருக்கவேண்டும். மீண்டும் தமிழில் கடன்வாங்கிப் புநிதவைப் புனிதம் ஆக்கியுள்ளோம். பேசாமல் பூசிதம் என்று சொல்லலாம். சங்கதத்தில் பூசை, பூசையர் என்பதையும் வேறுவகையில் பூஜ்ய, பூஜ்ய(ர்) என்றாக்குவார். பூஜ்யஸ்ரீ என்பது நம் பூசிதத்திற்கு இணையாகவும் வேறு வகையில் ஆளப்படும். பேரன் தாத்தனுக்கு முந்தி என்று இன்று நம் காதில் சிலர் பூசுற்றிக் கொண்டிருக்கிறார்.  

ஒரு காலத்தில் நான் படித்த St Joseph's college ஐ புனித வளனார் கல்லூரி என்று சொல்வோம். சிலர் தூய வளனார் கல்லூரி என்றுஞ் சொல்வர். மேலே எழுந்த புரிதலுக்குப் பின் பூசித வளனார் கல்லூரி அல்லது தூய வளனார் கல்லூரி என்று சொல்லுமாறு பரிந்துரைக்கிறேன்.       

On-line, off-line

மேலே உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு நண்பர் ஒருவர் தமிழில் இணை கேட்டிருந்தார். நம்மில் பலரும் இதில் முகன்மையான line இற்குச் சொல் தேடாது, on, off இற்குச் சொல் தேடிச் சுற்றி வளைத்து ஒப்பேற்ற முயல்வோம். என்னைக் கேட்டால் பல இடத்தும் பயனுறுத்தும்படி line க்குப் பொதுச்சொல் காணாது இக் கலைச்சொல் சிக்கலைத் தீர்க்க முடியாது என்பேன். பொதுவாக,  line க்குக் கோடு என்றே பலரும் சொல்வர். ஆனால் அதுமட்டும் இணைத் தமிழ்ச்சொல்லல்ல. கோடலின் அடிப்பொருள்  வளைதலே.  “சரி, நேர்கோடு” எனச் சிலர் சொல்ல விழைவார். அதுவும் முரண்தொடையே. அடிப்படையில் 2 புள்ளிகளைக் கயிறால் கட்டித் தொடர்புறுத்துவதை  line என்பார். ஆங்கிலத்தில், இப்படியே வரையறுப்பார். கயிறு தொய்யின் சரியான தொலைவு காணவியலாது. இழுத்துக் கட்டியே line நீளம் அளக்கமுடியும். 

line (n.) a Middle English merger of Old English line "cable, rope; series, row, row of letters; rule, direction," and Old French ligne "guideline, cord, string; lineage, descent" (12c.), both from Latin linea "linen thread, string, plumb-line," also "a mark, bound, limit, goal; line of descent," short for linea restis "linen cord," and similar phrases, from fem. of lineus (adj.) "of linen," from linum "linen". 

இழுக்கப் பட்டது (to draw, to pull, to haul) தமிழில் இழையாகும். திருக்கு ஏறாத நூலைக் குறிக்க இழை பயன்பட்டது. எல்லா இடத்தும் பொதுக் கலைச் சொல்லாய் இழையைப் பயன்படுத்தினால், குழம்பும்.  இழை என்ற சொல் filament இற்கு வெகு சிறப்பாய்ப் பொருந்தும். கயிறு (string) நூல் (spun), கோடு, திரி என வெவ்வேறு சொற்கள் வெவ்வேறு விதப்பிற்குப் பொருந்தியவை. (திரி, பஞ்சைத் திரிப்பதற்குப் பயன்படும். thread இக்குச் சரிவராது. திரியீடு (= திருக்கு இடு) என்று சற்று திரித்து நான் சொன்னது ஒரு பேராசிரியருக்குப் பொறுக்க வில்லை. ”ஆங்கில ஒலிச்சொல் படைக்கிறேன்” என்று  திட்டிவிட்டார். இங்கே சொல்லும் line இற்கும் திட்டத்தான் போகிறார். இருப்பினும் செய்கிறேன்.

இழை, நூல், திரி, கயிறு போன்றவற்றோடு தொடர்புடைய, அதேபொழுது line எனும் புதுக்கருத்தை உள்வாங்கி, ஒருசொல் வேண்டுமென நினைத்தேன். இழுக்கலை இழுவல் (இழுவு-அல்) என்றும் சொல்லலாம். இழுவு, இழுக்கும் தொழில் குறிக்கும்.  இதை இழும்/இழுன் என்றும் சொல்லலாம். இழுக்கப் பட்டது இழுவை/இழுமம்/இழுனம்/இழுனை ஆகும். இழுத்துக் கட்டலை இழுமுதல்/ இழுனுதல் என்றும் சொல்லலாம். இழுமம்/இழுனம்,  அல்லது இழுனை என்பதை line க்கு ஈடாய்ப் பயன்படுத்துகிறேன். இதுவரை எச் சிக்கலும் இப்பயன்பாட்டில் நான் காணவில்லை. இதன் வினைச்சொல் இழுனு-தல் என்றாகும்.

நாம்புரியும் செலுத்தில் (process) சாரா வேறி (independent variable)யின் மதிப்பில் கொஞ்சம் வேறுபட, சாரும் வேறியும் (dependent variable) அதே விழுக்கு வேறுபடும் எனில், இத்தகை உறவுள்ள செலுத்தை, இழுனியச் செலுத்து (linear process) என்றும், கன்னா, பின்னாவென அளவிறந்து சாரும் வேறியில் நிறைய விழுக்கு வேறுபடுமானால் இழுனாச் செலுத்து (non-linear process) என்றும் இற்றை அறிவியலில் சொல்வார். இழுனிய செலுத்தில் அதன் சாய்வு (gradient) மாறாதிருக்கும்;  இழுனாச் செலுத்தில் சாய்வு மாறிக் கொண்டே வரும் (gradient will keep changing). இழுனாச் செலுத்துகள் பலவும் அவற்றின் வாகு (behaviour) களால், இன்றும் அறிவியலில் புதிராகவுள்ளன. அதனால் பலரும் இவற்றை ஆழ்ந்து படிக்கிறார். கணிப்பயன்பாடு கூடிய பிறகே,  இப்படிப்பு ஓரளவு பெருகியுள்ளது. இப்போது கூட்டுச் சொற்களுக்கு வருவோம். இதில் நான் இயலுமையைச் சொல்கிறேன். இவற்றைக் காட்டிலும் பழகிய சொற்கள் இருப்பின் பயிலலாம்.

lineo- = இழுனிய
airline = பறப்பு இழுனம்
align = இழுனாக்கு
baseline = அடியிழுனை/அடியிழை
bee-line = தும்பி இழுனை/தும்பியிழை
borderline = வரம்பிழுனை/வரம்பிழை
byline = எழுதிழுனை = எழுனை
clothes-line = துணி இழுனை/கயிறு
coastline = கடற்கரை
curvilinear = சுருவு இழுனை
dateline = நாள் இழுனை
deadline = முடிவு இழுனை
delineate = இழுனப் படுத்து
flat-line = மட்ட இழுனை
front-line = முன் இழுனை
guideline = காட்டு இழுனை
hairline = முடியிழை
hard-line = கடு இழனை
headline = தலை இழுனை
hemline = முன்றானை

இனி, 
on-line = இழுனை(யின்) மேல். Will you come on the line? இழுனையின் மேல் வருவீர்களா? 
off-line = இழுனை(யை) விட்டு Will you come off the line? இழுனையை விட்டு வருவீர்களா?

switch on = மேற்சொடுக்கு Can you switch  it on? மேற்சொடுக்க முடியுமா?
switch off = விடுச்சொடுக்கு Can you switch it off? விடுச்சொடுக்க முடியுமா?

 

Thursday, August 06, 2020

இராமேசம் - 3

கடற்கரை மணலில் நுணுகித் துளைக்கும் இல்லிப்பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லிக் கொண்டே போவதால் அது இல்லிப் பூச்சியானது.  இல்லி - துளை, இல்(லு)தல் - குத்துதல் to pierce, துளைத்தல் to make a hole, பிளத்தல் to cut into two, கீறுதல் to divide; பொடித்தல், நுண்ணிதாக்கல் எனப் பல்வேறு பொருள்களுண்டு. இல்>ஈல்>ஈர்> ஈர்ந்தை = பொடுகு, பேன்முட்டை. என்ற பொருள்களுண்டு. இல்லிக்குடம்= ஓட்டைக்குடம், இல்லப்பட்டது இல். மலைகளிற் குகைகள் உள்ளனவே? இயற்கையாய் இருந்தாலும் சரி, செயற்கையாய் இருந்தாலும் சரி, அவைதாம் முதலில் உருவான இல்கள். மாந்தனாற் கட்டப்பட்ட மற்றவையெல்லாம் அப்புறம் எழுந்தவை. இல்லியது இல். கல்லில் தோண்டியது, துளைக்கப் பட்டது இல். இல்>ஈல்>ஈ என்றாலும் குகைப் பொருளுண்டு. குகையைப் பார்த்தே வீடு, மனைக் கட்டுமானங்கள் எழுந்தன.

”இல்லெனில் இடமென்றும்  பொருளுண்டு. இருத்தல் வினையும் இல்லிலிருந்தே இல்>இர்>இரு எனத் தோன்றியது. இருத்தலுக்குப் பகரியாய் ’குத்த வைத்தல்’ என்பார்.. இருந்தல் = குந்தல்; உள்ளுதலிருந்து உட்கார்தல் எழுந்ததுபோல் இல்லுதலிலிருந்து இருத்தல் எழுந்தது.” இல் தமிழ்ச்சொல் மட்டுமல்ல, தமிழிய மொழிக்குடும்பச் சொல்லும் தான். ம.இல்; க. இல், இல்லு; தெ. இல்லு; து. இல்லு; கோண். இல், இந்த்; பர் இல், பொதி (கூரை0; நா. எல்ல; கொலா.எல்ல; கூ.இடு; குவி. இல்லு.

இல்>ஈல்>ஈள்; ஈள்தல்>ஈளுதல்>ஈட்டுதலின் கருவிப் பெயர் ஈட்டி. ஈல்தல்/ஈர்தல் என்றால் பிரித்தல், பிளத்தல் என்ற பொருளுண்டு. ஈல்>ஈர்>ஈ = பிரித்தல், பிளத்தல்”

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் 
வாளது உணர்வார்ப் பெறின் 
                          - திருக்குறள் 334

இல்>ஈல்>ஈலி. ஈலி எனில் கைவாள் (sword), சுரிகைப் (dagger) பொருள்களுண்டு. ஈர்தல் = இரண்டாக்கல். பனை, தெங்கு, ஈச்சை போன்றவற்றின் ஓலைக் காம்பை இரண்டாய்ப் பிரிப்பதால், ”ஈர்க்கு” எழும். ஈரும் பொருள் நிறைந்த மரம் ஈந்தாகும். பேச்சுவழக்கில் ஈச்ச மரம். ஈர்- இரு- இரள்- இரண்டு என்ற சொற்களும்  இல்- ஈலிற் பிறந்தவையே. ஓர் எண்ணை இன்னொன்றால் வகுப்பதும் ஈல்தலே. வகுத்துவருவதை ஈல்வு>ஈர்வு>ஈவு என்போம். ஆறுபோகும் வழியில் 2 ஆய்ப் பிரிந்து மீளக் கூடுமெனில்,  நடுத்தீவை அரங்கம் என்பார். *அருத்தது> அறுத்தது அரங்கம். அரங்கம்போல் அமையும்சொல் இலங்கை. இல்லியதை (= அறுபட்டதை) இலங்கியது என்பார். (ஈழமும் ஈலில் எழுந்ததே.) சிறுபாணாற்றுப்படையில் ஓய்மாநாட்டு மன்னன் நல்லியங்கோடன் ஊர் மாவிலங்கை. தென்பெண்ணாற்றில் திண்டிவனம் அருகிலுள்ள ஆற்றுத் தீவு.” தமிழ்நாட்டின் தென்கிழக்கிலுள்ள இலங்கைத் தீவும் இப்படிப் பிரிந்ததே.  

ஒரு காலத்திற் கடல்மட்டம் உயர்ந்து, முகனை நிலத்திலிருந்து (main land)ஈல்ந்து (>ஈழ்ந்து) பிரிந்தது அந்நிலம். ஈழம், இலங்கை என்ற இரண்டுமே நற்றமிழ்ச் சொற்கள். யாரோ புரியாமல் இலங்கையைச் சிங்களமென்று தவறாகச் சொல்ல, சிலர் அதுபிடித்துத் தொங்குவார். அந்நாட்டின் பெயரே தமிழ்ப்பெயர் தான். இல்>ஈல் என்பது முகனைச் செய்தி. பழந்தமிழகம் என்பது இற்றைத் தமிழ்நாடு மட்டுமல்ல; இலங்கைத்தீவும் அதன்தெற்கே கடலுள் மூழ்கிய பகுதிகளும் சேர்ந்தவையே. இற்றைத் தமிழ்நாடு ஈழம் ஆகியவற்றின் இடைப்பட்ட கடற்பகுதியும், குமரியின் தெற்கே கடல்கொண்ட பகுதிகளும் எனத் தமிழர் இழந்தது ஏராளம்  கடல்கொண்ட குமரிக்கண்டம் ஒரு கற்பனை. ஆனால் கடல்கொண்ட குமரிநிலம் முற்றும் உண்மை. 

இன்னொரு செய்தியுமுண்டு. ஆங்கிலத்தில் isle உண்டல்லவா? மேலையன் ஈல்>ஈழ் என்று தானே பலுக்குகிறான்?. ”சொல் தோற்றம் தெரியாது” என்று அகரமுதலியிற் போடுவார். island இற்கும் ”தண்ணீர் மேலுள்ள நிலம்” என்று சுற்றிவளைப்பார். ஈழம் தெரிந்தபின்னும் சுற்றி வளைக்க வேண்டாம். முகனை நிலத்தில்து ஈல்ந்தது என்பதில் அறிவியல் உண்மை உள்ளது. கூர்ந்து கவனியுங்கள் ஈழமெனும் விதப்புப் பெயர், மேலைநாடுகளில் உலகத் தீவுகளைக் குறிக்கும் பொதுப் பெயரானது. அப்படியெனில் தமிழன் கடலோடியது எப்போது? நாமோ ஈல்>ஈழம் என்பதும் இல்> இலங்கு> இலங்கையும் தமிழில்லை எனச் சொல்லித் திரிகிறோம். 

இல்லை என்றவுடன் இன்னொன்று நினைவு வரும். இல்-தல்= துளைத்தல். துளைத்தபின் குறித்த இடத்தில் உள்ளீடு இருக்காது. அதனால் இன்மைப் பொருள் இல் எனும், துளைப்பொருளில் இருந்து, எழும்பியது. மேலே, ”இலம் பாடு” போலும் வறுமைச் சொற்கள் எழும். இலகுபோல் நொய்மைச் சொற்களும், இலவுபோல் மென்மைச் சொற்களும் இல்லில் எழுந்தன. நூறாயிரங் குறிக்கும் இலக்கமும் நொய்ப்பொருளில் எழுந்ததே. வேர் தமிழிலிருந்து, பின் வடக்கேபோய்ப் பெயர்ச்சொல்லாகி மிகப் பின்னாளில் தமிழுக்குள் கடன்வந்த சொல். 

இன்னொன்றும் உண்டு. இல்லிக் கொண்டே போனால் என்னவாகும்? ஒரு மட்டத்திலிருந்து இறங்குவோம் தானே? இல்லித்தது இலியும்; பின் இழியும். இழிதல் எனில் இறங்குதல். இச் சொல் நீர்மம் இறங்குதற்கு விதப்பாய்ப் பயனாகும். இழிவெனும் தாழ்ச்சிப் பொருளும் இதில் எழுந்ததே. இழிகுதல்> இயிகுதல்>ஈகுதல்>இகுதல் வளர்ச்சியில் இறங்குதலுக்கு இன்னொரு சொல் எழும். (ழகரம் யகரமாய் மாறுவது வட தமிழ்நாட்டுப் பழக்கம்.) இகுத்தல் எனும் பிறவினை தாழ்த்தற் பொருள் கொள்ளும். இகழ்தல் வினையும் இகுதலின் நீட்சி தான். 

இலங்குதலின் எதிர் இலங்காதிருத்தல். சுள்>(சொள்)>சொள்கு> சொகு> சோகு> சோகம், திரண்ட தொடையைக் குறிக்கும். [ஊருவும் கவானும் சோகமும் குறங்கே” திவாகரம் 351]  திகுதிகு எனத் திரள்வதாலேயே thigh எனும் இந்தை யிரோப்பியச்சொல் பிறந்தது. இலங்கா சோகம்= பிரியாத் தொடை. இற்றை வட மலேசியாவின் இப் பழம்பெயர். எத்தனை பேருக்குத் தெரியும்? ஜோகூர் வரை தொடை நீண்டு கிடக்கிறது. பொ.உ. 2 ஆம் நூ.வில் காழக(கடார) அரசு இலங்காசோகத்தில் தொடங்கியதென்பார். இதுவே தென்கிழக்காசியாவின் முதலரசுத் தொடக்கமாம். 

இலங்கை முகனை நிலத்திலிருந்து இற்றைக்கு 18000-3000 ஆண்டுகள் முன் பிரிந்தபோது ஒரு துருத்தி மட்டும் நம்மில் பிரியாதிருந்தது. தமிழ்மக்களின் பொதுப் புத்தியில் அவ்வுண்மை  நிலைத்துப் போனது. ”இலாத” என்பது ”இராத” என்றும் ஆகும். இரா நிலம் = பிரியா நிலமாகி நம்மூரில் அத் துருத்தியை இராமம் என்றே அழைத்திருக்கவேண்டும். இன்று கோயிலையும்  ஊரையும் சேர்த்து. இராமேசம் என்கிறோம். இராமத்தின் ஈசர் இராமேசர்.  சங்கதம் இராமேசத்தை இராமேஸ்வரமாக்கும். 

இலங்கையை உடன்சேர்த்து இராமாயணக் கதைகட்டி, ”சண்டை முடிந்து, இராமர் இங்குவந்தார், ”இராம நாதர்” எனும் மணல் இலிங்கத்தைச் சீதை பிடித்தாள். வடக்கிருந்து அனுமன் கல்கொண்டு வந்தான். “இராமலிங்கம்” செய்தார் - என்பார், இரு இலிங்கங்கள் இன்றும் கருவறையில் உள்ளதற்கு இப்படியாகச் சுவைக்கதை எழும். யாருக்கு உண்மை தெரியும்? சம்பந்தர் கூட இக்கதையை நம்புகிறார். அவரின் இராமேச்சுரப் பதிகம் படித்தால் புரியும். உண்மை எதுவென்று தெரியவில்லை. வால்மிகி இராமாயணத்தை ஆய்ந்தவர், இலங்கையின் இருப்பிடத்தை வேறாகச் சொல்வார். நம்மூர் ஊண்பொதிப் பசுங்குடையார் பாடலில் தொன்முதுகோடிக்கு (கோடிக்கரைக்கு) இராமன் வந்ததாய்ச் சொல்வர். ஆக இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய புலம். இராமேசத்தின் உட்பொருளாய் 

முடிவாக என் கூற்று: ”இரு/ஈர்” என்பது புரிந்தால் இராமம்= பிரியாநிலம் என்பது புரியுமென எண்ணுகிறேன்.  இராமனை விட்டுவிடச் சம்மதியா அந்த ஊர்க்காரர் ஏற்கமாட்டார். 

அன்புடன்,
இராம்.கி.



Wednesday, August 05, 2020

இராமேசம் - 2

”இராமேசம்” கட்டுரையை ஒருவழி முடித்ததாகவே முதலிற் கருதினேன். ஆனால் அது முடியவில்லையென்று தோன்றியது. 2 காரணங்கள். 1. சேதுவும் கோடியும் வடமொழியெனச் சிலர் சொன்னது. 2. ”இராமேசத்தில்” இன்னும் நான் தோய்ந்தது. முதற்கூற்றிற்கு விடை சொல்வதும், 2 ஆவதைப் பதிவு செய்வதும் தேவை. அதனாற்றான் இத்தொடர்ச்சி. 

முதலில் ”வடமொழி” ஆட்டையைப் பார்ப்போம். ”சேரே திரட்சி” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியலின் 65 ஆம் நூற்பா. சேரிற் பிறந்த சொற்கள் மிகப்பல. அச்சொற்கள் பிறக்கையில், சில வற்றில் ரகரம் வெளித் தெரிவதும், சிலவற்றில் கரந்துறைவதும் உண்டு. இன்னும் சில சொற்களில் ரகரந் திரிந்து வேற்றொலிகள் ஆவதுமுண்டு. மொழிவளர்ச்சி, இது போன்ற சொற்றிரிவுகளாலேயே ஏற்படுகிறது. ஈன் (gene) வெளிப்பாட்டு மாற்றங்களால் (mutations) எப்படி உயிரினங்கள் உலகிற் பெருகினவோ, அதுபோல் சொல் திரிவுகளால் மொழிச் சொற்கள் பெருகின. அதே பொழுது, கண்டமேனிக்கு மொழிச்சொற்கள் திரிவதுங் கிடையாது, அவற்றின் மாற்றங்களில் வியக்கத் தக்க ஒழுங்கும், விதிமுறைகளுமுண்டு. 

குருமிய (chromosomes) ஒழுங்குமுறைகளையும், மாற்றங்களையும் எப்படி ஈனியல் கண்டுபிடிக்கிறதோ, அதுபோல் தான் சொற்றொகுதிகளின் ஒழுங்கு முறைகளையும், திரிவுகளையுஞ் சொற்பிறப்பியல் கண்டுபிடிக்கிறது. இற்றை ஈனியல் எப்படியோர் அறிவியலோ, அதுபோற் சொற்பிறப்பியலும் ஓர் அறிவியலே. (தமிழரின் போகூழாய் இணையத்தில் தமிழ்சொற்பிறப்பியல் பற்றிய இனம்புரியாக் குழப்பம் உள்ளது. ”பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே” என்பார் பெரியோர். தமிழ்ச்சொல் பலவும் சங்கதக்கடன் எனும் பொய்யைக் காலங் காலமாய்க் கேட்டு வந்ததால், நம்மேலேயே நமக்கு நம்பிக்கையிலாது போனது போலும். தமிழர்களே! அருள்கூர்ந்து விழிப்புறுங்கள்.. 

இங்கே சேரையும், அதனோடு தொடர்புடைய, சேருக்கு முந்தைய, ’சால்’, ’சார்’ தொடர்பான சொற்களையும் பார்க்கிறோம். (இவற்றிலும் திரிவுகளுண்டு.) சாகார/சேகாரச் சொற்களை மட்டுமே பட்டியலிடுகிறேன். இவற்றின் சொற் பொருள்களுள் கூட்டம், திரட்சி, பிணைப்பு என்பன, தெளிவாக வெளிப்படும். முதலில் சாகாரச்சொற்களைக் காண்போம். ரகரம் வெளியில் தெரிவதையும், கரந்துறைவதையும், திரிவதையும் சேர்த்தே தருகிறேன். 
 
சார்= கூடுகை, பக்கம், அணைக்கரை (3ஆம் பொருள் முகன்மை), தாழ்வாரம்; சார்கொடுத்தல்= அணுகவிடல்; சார்ச்சி= தொடர்பு, சேருகை; சார்த்தல்= இணைத்தல், சாரச்செய்தல்; சார்த்து வகை= சார்பு வகையால் கூறும் முறை; சார்த்துவரி= பாட்டுடைத் தலைவனை இடம், பேரோடு சார்த்திப் பாடும் வரிப்பாட்டு; சார்தல்; சார்ந்தவர்= சுற்றத்தார், நண்பர்; சார்ப்பு= ஆதாரம்; சார்பறுத்தல்= துறத்தல்; சார்பு; சார்பெழுத்து; சார்மனை; சார்மானம்; சார் வணை= சாய்தற்குரிய அணை; சார்வு; சாரி= கூட்டம்; சாரியை= சார்ந்து வரும் இடைச்சொல்; சாரை= அடுத்தடுத்து வருவது; சால்= நிறைவு; சால்தல் = நிறை தல், பொருந்தல்; சாலம்= கூட்டம்; சாலை= நிறையுமிடம், கூடம், கொட்டில், மண்டபம், மரஞ்செறிந்த பாதை; சாவகன்= சார்ந்திருப்பவன் வேதமறுப்பு நெறிகளில் பழகுஞ் சொல், அறிவரைச் சார்ந்தவர்; சா(ர்)வடி = சாரும் இடம், தங்குமிடம்; சார்>சாறுதல் = பெருக்கல்; சாறு = பெருகிய கூட்டம் சேரும் திருவிழா,

இனிச் சேகாரத்தில். ரகரம் வெளித்திரிவதையும், கரந்துறைவதையும், திரிவதையும் தனிப் பட்டியல்களில் காட்டுகிறேன். முதலில் ரகரம் வெளித் தெரியுஞ் சொற்கள்: சேர்க்கை= திரள்கை, கூடுகை; சேர்கட்டல்= தானியம் அளந்து நெற்கட்டி விடல்; சேர்கால்= தளைகால்; சேர்த்தல்= இயைத்தல், தொடுத்தல், கலத்தல், புணரச்செய்தல், கூட்டிக்கொள்ளல், கட்டல், இடைச் செருகல், ஈட்டல், தனதாக்கல், அடைவித்தல்; (சேதுப்பொருளறிய முகன்மைத் தொழிற்பெயர் சேர்த்தல்.); சேர்த்தி; சேர்தல்; சேர்ப்பு= வாழ்விடம், கடற்கரை; சேர்பு= வாழ்விடம்; சேர்மானம்= இணைப்பு, கூடுகை; சேர்விடம்; சேர்வு; சேர்வை; சேர= கூட; சேரக்கட்டுதல்; சேரி= ஊர். இச்சொற்களின் எல்லாப் பொருள்களையும் இங்கு பட்டியலிடவில்லை. அடுத்து ரகரம் கரந்துறையும் சொற்கள்: 

சே(ர்)க்காளி= தோழன்; சே(ர்)க்குப் புள்ளி= உறவினரற்றுத் திரிந்தவன்; சே(ர்)க்கை= மக்கட் படுக்கை, விலங்குப் படுக்கை, தங்குமிடம், பறவைக்கூடு; சே(ர்)க்கைப்பள்ளி= படுக்கை; சே(ர் )கண்டி= காவலர் உறைவிடம்; சே(ர்)கரம்= கூட்டம்; சே(ர்)து= செய்கரை, நீரணை, பாலம் (இவற்றின் விளக்கம் கீழே. செய்வதும் சேர்ப்பதும் தொடர்புள்ளவை) சேது பந்தனம்= அணைக்கட்டு (சங்கதமெனத் தெரியுஞ் சொல். பந்தனம், பந்தத்தில் உருவானது. பல்+து>பற்று தமிழானால், பல்+ந்+து= பந்தும் தமிழே. இந்தையிரோப்பியனில் bind ஆகும். உடையெலும்பு ஒட்டுக்குக் கட்டும் மட்டையை நுட வித்தகர்(வைத்யர்) பற்று> பற்றை>பத்தை என்பார். பத்தையில் ரகரஞ் சேர்க்க bridge ஆவது புரியும்); சே(ர்)வகம்= ஊழியம்; சே(ர்)வனை= ஊழியத் தொழில்; சே(ர்)வித்தல்= பணி செய்தல், வணங்கல் (சேவித்தலில்லாப் பெருமாள்கோயில் உண்டோ?); சேவுகம்= ஊழியம்; சேவை= தொண்டு (சேவையின்றிப் பொருளியல் இயங்குமோ?) அடுத்து ரகரம் றகரமாகிய, டகரமாகிய காட்டுகள்: சேறு= சகதி, குழம்பு, சாரம்; சேடு= திரட்சி.
 
மேலிருக்கும் பல்வேறு சொற்களையும், கூட்டுச்சொற்களையும் ஆழ்ந்து பார்த்தால் சேது, தமிழ்ச்சொல்லே. அதைச் சங்கதமென்பது அறியாக் கூற்று. (சேது சங்கதமெனில், மேலே எல்லாச் சொற்களுக்கும் சங்கதப் பின்புலம் உள்ளதாய்ச் சொல்ல வேண்டுமே? ஒப்புவீர்களா?) ”அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெலாம் பேய்” என்பார். ஒருசிலருக்குக் கண்டதெலாம் வடமொழி என்பதே வாடிக்கை ஆகிறது. 

2 இடங்களை, 2 பொழுதுகளை, 2 மாந்தரைச் சேர்த்தலும் தமிழ்தானே? விற் கோடி ஒருமுனை, மன்னார் இன்னொரு முனை எனில். இவற்றைச் சேர்ப்பது சே(ர்)து. இதை (மாந்தர்) செ(ய்)தது எனும்  தொன்மத்தை இற்றையறிவியல் உறுதி செய்யவில்லை. ஆனால் 2 முனைகளைச் சேது சேர்ப்பது உண்மை. தவிரச் : மேற்கூறிய ”சாரின்” பொருளான அணைக்கரையையும்,  ’சார்வணை’யையும் பாருங்கள். ’சாரை’ உறுதி செய்வது போல் ’பார்’ என்ற சொல்லும் நெய்தலிலுண்டு. “வரம்பு, அணை” என்று பொருள் சொல்வர். பார்க் கட்டல்= வரம்பு கட்டல். உள்ளே அலை வராதிருக்கக் கட்டுவது. பாரோடு தொடர்பு உள்ளதே பல்>பால்>பாலம். (பத்தைக்குச் சொன்னபல்லே இதற்கும் வேர். பாலத்தூண்கள் பல்போல கீழ்நிலம் பற்றும்.) இதற்கு ”நீர் அணைச்சுவர்” என்றும், ”நீர் கடக்கும் கட்டுமானம்” என்றும்  பொருள். இனி சங்கதம் என்று சொல்லும் கருத்திற்கு வருவோம். மோனியர் வில்லியம்சில், setu என்பதற்கு,

(H1) sétu [p= 1246,1] [L=252089] mfn. (fr. √1. si) binding , who or what binds or fetters RV.
(H1B) sétu [L=252090] m. a bond , fetter ib.
(H1B) sétu [L=252091] m. a ridge of earth , mound , bank , causeway , dike , dam , bridge , any raised piece of ground separating fields (serving as a boundary or as a passage during inundations) RV. &c
(H1B) sétu [L=252092] m. rāma's bridge (» setubandha) BhP.
(H1B) sétu [L=252093] m. a landmark , boundary , limit (also fig. = " barrier , bounds ") Mn. MBh. &c
(H1B) sétu [L=252094] m. a help to the understanding of a text , an explanatory commentary (also N. of various commentaries) Cat.
(H1B) sétu [L=252095] m. an established institution , fixed rule MW.
(H1B) sétu [L=252096] m. the praṇava or sacred syllable Om (which is said to be mantrāṇāṃ setuḥ) Ka1lP.
(H1B) sétu [L=252097] m. Crataeva Roxburghii or Tapia Crataeva (= varaṇa , varuṇa) L.
(H1B) sétu [L=252098] m. N. of a son of druhyu and brother of babhru Hariv.
(H1B) sétu [L=252099] m. of a son of babhru Pur.
(H1B) sétu [L=252100] m. of a place MW. 

என்று போட்டிருப்பர். இதன் வேராக si காட்டப்படும். அதையுந் துழாய்ந்தால், Westergaard Dhatupatha links: 27.2, 31.5, Whitney Roots links: sA1 என்பது சொல்லி,

(H1) si 1 [p= 1213,1] [p= 1212,3] [L=243722] (cf. √4. sā) cl.5.9. P. A1. ( Dha1tup. xxvii , 2 ; xxxi , 5) sinoti , sinute ; sinā́ti , sinite (really occurring only in pres. sinā́ti , impf. asinot ; pf. siṣāya RV. ; aor. [?] siṣet ib. ; asaiṣīt , aseṣṭa Gr. ; fut. setā ib. ; siṣyati MBh. ; seṣyati , °te Gr. ; inf. sétave AV. ; setum Gr.) , to bind , tie , fetter RV. AV. VS. Pa1rGr2. Kat2hUp. : Caus. sāyayati (aor. asīṣayat) Gr.: Desid. sisīṣati , °te ib. : Intens. seṣīyate , seṣayīti , seṣetiib. [cf. Gk. á¼±-μάς , á¼±-μονία ; Lett. sinu , " to bind " ; Angl.Sax. sa7l ; Germ. Seil.]
(H1) si 2 [L=243729] (» sāyaka , senā) , to hurl , cast.
(H1) si 3 என்ற விளக்கம் வரும். ஸேது, சங்கமன என்பன பாலத்திற்கான பாலிச் சொற்கள். சேது என்பது பாகதத்திலும் உண்டு. 

ஆணிவேரின் பொருள் பந்துதலெ. சேது என்பது பந்தமென்ற பொருளிலேயே பருப்பொருள் குறியாது, கருத்துப்பொருளில் இருக்குவேதத்தில் ஆளப்பட்டது. பொதுவாகக் கருத்துப் பொருள் குறிக்கும் சொற்கள் முதற்சொற்களாய்ச் சொல்லமுடியாது. இன்னும் ஆய்வுதேவை. பருப்பொருளில் முதன்முதல் குறித்தது பாகவத புராணமே (இது தென்னக உருவாக்கம். நம்மூர் ஆழ்வார் காலத்தது.) அடுத்து மாபாரதம். அங்கும் எக் களத்தில் இது சொல்லப்பட்டது என்று தெரியவில்லை. மாபாரதம் இறுதி செய்யப்பட்டது பொ.உ.400 இல். சேதுவுக்கு முந்தைய, மேலேகாட்டிய, பல தமிழ்ச் சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு. சேது அதில் இல்லை தான். ஆனால் சேது பற்றிய பருப்பொருட் குறிப்பு ஆழ்வார் பாசுரங்களிற்றான் முதலில் வருகிறது போலும். .  

சேர் என்ற சொல் கூட்டுப்பொருளில் சுள்>செள்>செரு>சேர் என்றுருவானதாய்த் தமிழ்ச்சொற்பிறப்பியல் சொல்லும். சுள்>செரு>செறி = கூடு; சுல்>(சொல்)> சோலை, சொல்>சொது>சொதை = குழாம், கூட்டம்; சார்>சார்த்து>சாத்து = வணிகக்கூட்டம், சுல்>சொல்>சோல்>சால்>சாலுதல் = நிறைதல்; சால் = மிக; சான்றோர் = நற்குணம் நிறைந்தோர்; சான்றாண்மை = நற்குணங்கள் நிறைந்து அவற்றை ஆளுந்தன்மை; சுள்>செள்>செழு>செழுத்தல்>செழித்தல் = மிகுதல்; செழியன் = பாண்டியனின் குடும்பப் பெயர்; செய் = நிலம்; செய் = கை;   

இனி இன்னும் ஒன்று மீந்திருக்கிறது. இராமேசத்தில் ஈசத்தின் பொரூள்  பார்த்தோம். இராமத்தின் பொருளென்ன? இலங்கையோடு சேர்த்துப் பார்க்கவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, August 04, 2020

இராமேசம் - 1

திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (~ கி.பி.1230) செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியால் இயற்றப்பட்டது. பிறவா யாக்கைப் பெரியோனின் 64 திருவிளையாடல்களை விவரிக்கும் நூல்களில் இதுவே தமிழில் முதலெழுந்ததாய்த் தெரிகிறது. நம்பியார் புராணத்தை ஏட்டுச்சுவடியிலிருந்து அச்சுநூலாக முதன்முதல் 1906 இல் வெளியிட்டவர் உ.வே.சா. ஆவார். அதன் மறுபதிப்பு உ.வே.சா. நூலகத்தால் 1972 இல் மீண்டும் வெளியிடப் பெற்றது. இதற்குமுன் முழுதாகவன்றி அங்குமிங்கும் உதிரி உதிரியாய்ச் சில செய்திகளைத், தேவாரம், கல்லாடம், திருவாசகம் போன்றவற்றில் அறியலாம். இதற்கப்புறம் எழுந்த பல நூல்களில் கி.பி. 1660 இல் எழுந்த பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணமும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதாகும்.. 

அது என்னவோ தெரியவில்லை. பின்னவர் நூலையே பலரும் இக்காலத்திற் பேசுவார். ஆனால் உள்ளீட்டைப் பார்த்தால், அக்காலச் செய்திகளை (குறிப்பாக பாண்டியன் கடுங்கோன், அவனுக்கும் முந்தைய களப்பாளர் காலச் செய்திகளை) அறிய பரஞ்சோதியார் நூலை விட நம்பியார் புராணமே பயனுள்ளது. (இதன் pdf படியை முனைவர் ஒருமுறை ழான்லுக் செவ்வியார் எனக்கு அனுப்பி வைத்தார். மாணிக்கவாசகர் காலம் பற்றிய என்னாய்விற்கு இந்நூலே பெரிதும் உதவியது.) தமிழறிஞரில் மிகப் பலர் நம்பியார் புராணத்தின் பயன்பாட்டை உணர மறுக்கிறார். என்னைக் கேட்டால் திருவாலவாயுடையார் புராணத்தை மீளாய்வு செய்வது பயன்தரும். உருப்படியாக ஆய்வு செய்யத் தான் நம்மூரில் ஆளில்லை. தமிழாய்வு பெரிதும் தளர்ந்துள்ளது. நானிங்கே சொல்லவருவது வேறு. உ.வே.சா. வெளியீட்டின் முகவுரையில் பாண்டி நாட்டுத் தேவாரத் தலங்களாய் 14 தலங்களைக் குறிப்பிடும் வெண்பாவொன்று வரும்..
 
கூடல் புனவாயில் குற்றால மாப்பனூ
ரேடகநெல் வேலி யிராமேச - மாடானை
தென்பரங்குன் றஞ்சுழிய றென்திருப்புத் தூர்கானை
வன்கொடுங்குன் றம்பூ வணம்

ஒருமுறை இதுகுறித்து மின்தமிழ் குழுவில் உரையாடலெழுந்தது. அப்போது, திரு.வேந்தன் அரசு “இராமேசத்தின் பழைய பெயரென்ன?” என்றுகேட்டார். நல்லகேள்வி. இதன் விடையோடு தொடர்புடைய மற்றசெய்திகள் பலருக்கும் பயன்படுமென எண்ணி இங்கு பதிகிறேன். முதலில் ஈசமென்ற சொல்லின் பொருளறிவோம். (சிவன் கோயில்கள் பலவும் ஈசமென்றே சொல்லப் படும்.) ஈசமென்பது திசை தொடர்பான சொல். திசைகள் பற்றிய என் பழந்தொடர் 3 ஆம் பகுதியில் (http://valavu.blogspot.in/2008/04/3.html) ஈந்து>ஐந்து>ஐந்திரம் என்பது கிழக்குத் திசை குறிக்குமென நிறுவினேன்.  ஈந்து>ஈத்தின் தொடர்பாய் ’ஈசம்’ எழுந்து, வடகிழக்கைக் குறிக்கும். 

ஈசன்/சிவன் வடகிழக்குத் திசைக்கு உரியனென்றே மனையடிநூலிற் சொல்வர். இந்தியப் பெருநிலத்தின் வடகிழக்கிற்றான் குயிலாலுவ>கயிலாலுவ மலையுள்ளது. சிவன் அம்மலையில் உள்ளதாகவே தமிழரிற் பலரும் தொன்மஞ் சொல்வர். கயிலாயமன்றி ஈசன் திருவுரு அமைந்த இடங்களும்/கோயில்களும் கூட ஈசமென்றே அழைக்கப்பட்டன. ஈசத்தைச் சங்கதம் வகரஞ் சேர்த்து ஈஸ்வமாக்கும். இதே போல் ஈசனை தமிழ் முறைப் படி மதிப்புக் கூட்டி ஈசராக்கி சங்கத முறைப்படி ஈஸ்வராக்குவர். ஈஸ்வரிலிருந்து மீண்டும் தமிழ்முறைப்படி ஈஸ்வரம்>ஈச்சுரம் என்றாகும். இப்படித் தமிழும் சங்கதமும் மாறி மாறி ஊடாடியே சிவன் கோயில்களுக்கான பெயரெழுந்தது. சங்கதம் பழகவேண்டாமெனில் ஈசம் என்ற சொல்லே நமக்குப் போதும்.   

சிவனுக்கு உரியதாய்ச் சொல்லப் படும் 12 சோதி இலிங்கங்களில் இராமேசத்தைத் தமிழ்நாட்டிலும், சோமேசத்தைக் கூர்ச்சரத்திலும், நாகேசம், குசுமேசம் போன்றவற்றை மாராட்டத்திலும், விசுவேசத்தை உத்திரப் பிரதேசத்திலும் பொருத்துவர். இவையத்தனையும் ஈசமென முடியுந் தலங்கள். அகரமும் ஈகாரமுஞ் சேர்ந்து வடமொழிப் புணர்ச்சியில் ஏகாரமாகும். இது போக, வித்தநாதம் (வைத்யநாதம்), வீமநாதம் (பீமநாதம்), திரியம்பகமென 3 தலங்கள் மாராட்டத்திலும், திருப்பருப்பதம் (சிரீசைலம்) ஆந்திரத்திலும், ஓங்காரம், உஞ்சை (உச்செயினி) மத்தியப் பிரதேசத்திலும், கேதாரம் உத்திரப்பிரதேசத்திலும் காட்டப்படும். இராமேசத்தில் 2 இலிங்கங்கள் உண்டு, முன்னால் உள்ள இலிங்கம் மணலால் ஆனது. இரண்டாவது கல்லால் ஆனாது. முதலாவதைச் சீதை பிடித்துவைத்தாள் என்றும், 2 ஆவதை அனுமன் வடக்கிருந்து கொண்டுவந்தானென்றுஞ் சொல்வர். (தொன்மக் கதைகள் உண்மையா, இல்லையா என்ற சிக்கலுக்குள் நான் போகவில்லை. நம்புபவனுக்கு அவை உண்மை.) 

இராமேசக் கோயில் தேவார காலத்தில் மீச்சிறிதே. இன்றுள்ள மண்டபங்கள், சுற்றாலைகள் எல்லாம் அன்றில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் கருவறையைச் சுற்றி ஒரு சுற்றாலை இருக்கும். 12 ஆம் நூறறாண்டில், பாண்டியரின் தாயாதிச் சண்டையில் ஊடுவந்த  சிங்கள மாமன், மன்னன் பராக்கிரம பாகுவே பழங் கோயிலை இடித்து இற்றைக் கோயிலின் அடிப்படை அடவை உருவாக்கினான் என்பர். (நாம் விரும்பினாலும், விரும்பா விடினும், தமிழர்-சிங்களர் ஊடாட்டம் நம் வரலாற்றில் நெடுகவேயுண்டு. தவிர்க்கமுடியாது. அவனுக்கு நாம் பெண் கொடுத்தோம், அவன் வீட்டில் பெண் எடுத்தோம். அது தொடர்கதை.)    

கோயில் இறைவர் பெயர் இராமநாதர் (மணல் இலிங்கத்திற்கு அதுவே பெயர்.). முன்னிருக்கும் கல் இலிங்கத்திற்கு இராமலிங்கமென்று பெயர். (எத்தனை பேருக்குத் தெரியுமென்று தெரிய வில்லை. இராமசாமியெனில் பெருமாளைக் குறிக்கும். இராமநாதனெனில் சிவனைக் குறிக்கும். இவன் ”ரம்மியம்” ஆனவனா? அன்றி இராமனுக்கு நாதனா? இராமத்தின் நாதனா? -என்பது பார்வையைப் பொறுத்தது. (நான் மூன்றாம் விளக்கத்தை நம்புபவன். கீழே பார்ப்போம்.) இறைவியின் பெயர் மலைவளர் காதலி., (பருப்பத/பர்வத வர்த்தினி என்பது அதன் சங்கதவாக்கம்.). கோயிலுக்குளுள்ள பல்வேறு நீர்நிலைகள் உப்புநீர் மேல் கூடியுள்ள நன்னீரால் ஏற்படுவன. இன்று நம்மூர் ஐயர்கள் இங்கு பூசகத்தில் கிடையாது. பண்டாக்கள் எனும் மராட்டியக் குருக்களே யுண்டு. வரலாற்றில் வந்த விசயநகர, மராட்டிய, நாயக்கர் தாக்கம் இது என்றெண்ணுகிறேன். இற்றை மண்டபங்களெல்லாம் இவர்களால், பின்வந்த சேதுபதிகளால், எழுந்தவை. மூன்றாம் சுற்றாலை மிகப் பெரிது. இற்றைக் காலத்தில் கோயிலிற் காணப்படும் கூட்டம் சொல்லிமாளாது. ஒரே இரைச்சல். அங்குமிங்கும் ஓட்டம். எங்கு பார்த்தாலும் நீர்ச்சகதி. 

காசிக்கும், குமரிக்கும் (சோழர்காலக் கல்வெட்டுகள் அப்படிச் சொல்கின்றன) சொல்லப்பட்ட இடையுறவு எப்படியோ காசிக்கும், இராமேசத்திற்குமாய் மாறிவிட்டது. எப்போது மாறியது என்பது சுவையான ஆய்வு. ஒருவேளை பாண்டியராட்சி முடிந்தபின் விசயநகர ஆட்சியில் ஏற்பட்டதோ, என்னவோ? கோயிலுக்குள் இந்தியே இங்கு அன்றாட மொழி. விரைவு வண்டிகளில் நம்மூர்க்காரரை விட வடவர் கூட்டமே மிகுந்துளது. கோயில் கிழக்குவாசலுக்கு முன் நீராடுங் கடலில் குப்பைகளும், மாசுகளும் நிரவிக் கிடக்கின்றன. யாராவது இதைச் சரிசெய்தால் என்ன? - என்று தோன்றுகிறது. ”ஸ்வட்ச் பாரத்” என்று சொல்வதெல்லாம்  எங்கு போயிற்றென்று தெரியவில்லை. இன்னுங்கூட மரங்களைநட்டுத் தீவைச் சரி செய்யலாம். வறட்சி கூடிவருகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு பெரிதாகவேயுள்ளது. கோயிலில் தெரிசனம் முடித்தபின், அப்துல் கலாம் நினைவகத்தில் கூட்டம் கூடுகிறது. தீவின் பொருளியல் வளர்ச்சியில் அதுவொரு மாற்றம்.   
 
தேவாரகாலத்தில் இராமேசம் தீவில்லை. (ஏனெனக் கீழே சொல்வேன்.) இராமநாதபுரத்திலிருந்து கடலுள் நீண்டுசெல்லும் துருத்தியாகவே அதுவன்று இருந்திருக்கலாம். துருத்தி முடிவில் வில் வடிவில் பாதி முழுகியும் முழுகாதும் நிலமிருந்து அப்பக்கம் மன்னாரை இணைத்தது. அதையே சேது என்றார். மன்னாருக்கு அடுத்தது திருக்கேதீச்சுரம். வில்வடிவின் தொடக்கமான விற் கோடியை தனுஷ்கோடியென சங்கதத்தில் பெயர்த்துச் சொல்வார். (விற் கோடியைத் தொல்முதுகோடி எனச்சிலர் சொல்ல முற்படுவது புரட்டு. அக நானூறு சொல்வது இவ்விடமில்லை. அது திருமறைக்காட்டிற்கு அருகிலுள்ள கோடிக்கரை. அதைப் பற்றி வேறிடங்களில் நான் நெடுகப் பேசியுள்ளேன். மீண்டும் இங்கு பேசிப் பொரித்தெடுக்க வேண்டாமென விடுக்கிறேன்.) 

இன்று இராமேச்சுரத்திலிருந்து விற்கோடி வரை தமிழக அரசினர் உருப்படியான சாலை போட்டுள்ளார். 2018 இல் இராமேசம் போனபோது இதைப் பார்த்தேன். வியந்து போனேன். இப்போது இராமேசம் வருவோர், தானியை எடுத்துக்கொண்டு விற்கோடிவரை போய்வருகிறார். அடுத்தமுறை நீங்களும் போய்வாருங்கள். பார்த்து வியக்கவேண்டிய இடம். துருத்திக்குள் நடந்து சென்று இந்தியமுனையைத் தொடும்போது, அங்கிருந்து வில் வளர்வதை நன்றாகவே உணரமுடியும், நாசா வெளியிட்ட படத்திலும் இதைப் பார்க்கலாம். இது மாந்தன்செய்த சேது என்பதை மட்டும் நான் ஏற்கேன். வானம் தெளிவாகி, பார்வை கூர்ந்து, கையில் தொலைப்பெருக்கி (telescope) இருக்குமானால், அந்தப் பக்கக் கோடியில் நிலத்தைப் பார்க்கலாம். 

சம்பந்தர் காலத்தில், இன்றிருப்பதை விட  2,3 மீட்டர்கள் கடலாழம் குறைந்து இருக்கும். துருத்தி இன்னும் சில கிலோமீட்டர் நீண்டிருக்கும். வெகு எளிதில் இராமேசத் தீவிலேயே சம்பந்தர் கேதீச்சுரம் பார்க்கும் தொலைவிற்குப் போயிருப்பார். இப்பக்கத்திலிருந்து திருக்கேதீச்சுர விமானத்தைக் கூட அவர் பார்த்திருக்கலாம். யார் கண்டார்? (இராமேசம் அன்று தீவில்லை என்று ஏன் சொன்னேன்? தீவாயிருந்தால், படகு வைத்தல்லவா சம்பந்தர் இராமேசம் போயிருக்க முடியும்? பின் அதே படகில் திருக்கேதீசம் போக என்ன சிக்கல்? அவர் போகவில்லையே? இங்கு இருந்தே கேதீசத்திற்கும் திரிகோண மலைக்கும் பதிகம் பாடினாரே? இத்தனைக்கும் பாண்டிய அரசி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் அருகில் கூட இருந்தாரே? அப்படி எனில் என்ன பொருள்? கேதீசத்தை விற்கோடியிலிருந்து சம்பந்தர் பார்க்கமுடிந்தது. இடையில் கடல். ”ஆளுடைப் பிள்ளையை” வைத்துக் கொண்டு இக்கு (risk) எடுக்க அரசியும், அமைச்சரும் விரும்பவில்லை. அதே பொழுது இராமநாதபுரத்திலிருந்து எல்லோரும் நடந்தே, அல்லது ஊர்தி வழி நகர்ந்தே, இராமேசம் வர முடிந்தது என்றுதானே பொருள்? 

மயிலை சீனி வேங்கடசாமியும், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, குறிப்பிட்ட விழாநாட்களில் இராமேசத்து இராமலிங்க ஊருலவரைத் தூக்கிக்கொண்டு இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் வரை வந்து, ஒருநாள் அங்கு வைத்திருந்து மீண்டும் கோயிலுக்கு எடுத்துச்செல்வரென்று தெளிவாக ஆதாரத்துடன் பதிவுசெய்வார். ஆகப் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இராமேசம்  தீவல்ல. வெறும் துருத்தி. பார்த்தீர்களா? இவ்வளவு சொன்னேன். இராமேசத்தின் மறுபெயர் சொல்ல விட்டேனே? ஒருகாலத்தில் எம் அரசர்களின் குடும்பப்பெயர் சேதுபதி. அவர் சேதுக்கு ”பதி”. சேதென முன் சொன்னேனே அவ்விற்கோடிக்கு அப்புறமுள்ள இயற்கை இணை. சேதுள்ள ஊர் சேதூர். அவ்வூருக்குப் போகும் 2 விரைவுவண்டிகளில் ஒன்றின் பெயர்கூட  இராமேசுரம் விரைவி, இன்னொன்று சேது விரைவி. சேது தான் அவ்வூரின் மாற்றுப்பெயர். இராமநாதபுரச் சீமையில் யாரைக் கேட்டாலும் மாற்றுப் பெயரைச் சொல்வர். 

”சேதுவை மேடுறுத்தி வீதிசெய்வோம்” என்றான் பாரதி.  ”சேடனென்னப் பொலிந்தது சேதுவே” கம்பரா. சேதுப. 66. “சேதுவின் இராமநாதனை நிறுவிய காதையை” என்பது சேதுபு. அவை.1 “சேதுகாவலன் திருவணை காவலன்” கல்லாடம். “சேதுபுராணம்” என்பது 16 ஆம் நூற்றாண்டில் நிரம்பவழகிய தேசிகரால் பாடப்பெற்ற இராமேசுரப்புராணம். இனி இராமேசம் என்ர பெயர் எப்படி எழுந்தது என்று பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, August 03, 2020

SOME ACRONYMS


Wi-Fi = Wireless Fidelity = கம்பியிலாப் பற்றை
LED = Light Emitting Diode = ஒளி உமிழ் ஈரோடை
GPS = Global Positioning System = கோளப் பொதிக் கட்டகம்
USB = Universal Serial Bus = ஒருங்குற்ற சரப் பட்டி
SMS = Short Message Service = குறுஞ் செய்திச் சேவை

PDF = Portable Document Format = புகற்றாவண உருவல்
GB = Giga Byte = ஆம்பல் தொடை
WWW = World Wide Web = வைய விரி வலை
SIM = Subscriber Identity Module =உறுப்ப அடையாள மூட்டு.
ATM = Automated Teller Machine = தானியங்கித் தரும் மாகனம்

RSVP = Re'pondez, S'il Vous Plait (French for please reply) = விடை தருக
FAQ = Frequently Asked Questions = அடிக்கடி எழும் கேள்விகள்
IQ = Intelligence Quotient = அறிவு ஈவு
SOS = Save Our Soul / Save Our Ship = கலம்/உயிர் காப்பாற்றுக
OCD = Obsessive Compulsive Disorder = விடாப்பிடிக் கட்டாய ஒழுகாமை

LASER = Light Amplification by Stimulated Emission of Radiation = தூண்டு கதிரெழுச்சி மூலம் ஒளிகூட்டல்
CVS = Consumer Value Stores = நுகர்வோர் மதிப்புக் கடை
M&M = Mars and Murrie's (the founders) = மார்சும் முர்ரியும்
YAHOO = Yet Another Hierarchical Official Oracle = இன்னொரு படிநிலை அலுவ ஓரக்கிள்
ZIP = zone Improvement Plan = பகுதி வளர்ச்சிப் படிவு

TIME = The International Magazine of Events = நிகழ்வுகளின் அனைத்துநாட்டுத் தாளிகைIKEA
IKEA = Ingvar Kamprad Elmtaryd Agunnaryd (founders initials and his hometown) = இங்வார் காம்ப்ராடு எல்ம்தாரிடு அகுன்னாரிடு
CAPTCHA = Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart = கணிகளையும் மாந்தரையும் பிரித்தறியும்படி, முழுதும் தானியங்கும் பைம்புலத் தூரிங் சோதனை
GIF = Graphics Interchange Format = கிறுவ இடைமாற்று உருவல்
GEICO = Government Employees Insurance Company = அரசலுவர் காப்புறுதிக் கும்பணி

NERF = Non Expandable Recreational Foam = விரிக்கவியலா பொழுதுபோக்கு நுரை
SPAM = Special Processed American Meat (yep, that's true) = விதந்து செய்த அமெரிக்கக் கறி
BMW = Bayerische Motoren Werke (German" Bavarian Motor Works) = பேயர் நகர்த்தி உழையம்
CDROM = Compact Disc Read-Only Memory = படிக்க மட்டுமான நினைவுச் செறி திகிரி