Friday, January 16, 2009

ஒரு சில கலவை நிறங்கள்

அண்மையில் திரு ரவிசங்கர் Tux Paint என்னும் திறவூற்றுச் சொவ்வறைக்குத் (open source software) தமிழ் இடைமுகம் செய்யும் பணியில் ஒரு சில கலவை நிறங்களுக்கான தமிழாக்கம் கேட்டிருந்தார். அதற்கான என் பரிந்துரைகள்.

purple,
O.E. purpul, dissimilation (first recorded in Northumbrian, in Lindisfarne gospel) from purpure "purple garment," purpuren "purple," from L. purpura "purple-dyed cloak, purple dye," also "shellfish from which purple was made," from Gk. porphyra (see porphyry), of Semitic origin, originally the name for the shellfish (murex) from which it was obtained. Tyrian purple, produced around Tyre, was prized as dye for royal garments. As a color name, attested from 1398. Also the color of mourning or penitence (especially in royalty or clergy). Rhetorical for "splendid, gaudy" (of prose) from 1598. Purpur continued as a parallel form until 15c., and through 19c. in heraldry. Purple Heart, U.S. decoration for service members wounded in combat, instituted 1932; originally a cloth decoration begun by George Washington in 1782. Hendrix' Purple Haze (1967) is slang for "LSD."

பரிந்துரை: கத்தரி, செந்நீலம் [பொதுவாய்க் கத்தரிக்காய் செந்நீல நிறத்தில் தான் இருக்கும். வெள்ளை, பச்சை நிறத்தில் இருக்கும் ”கத்தரிக்காயை” வழுதுணை என்றே சொல்லுவார்கள். பேச்சு வழக்கில் கத்தரி என்பது purple நிறத்தையே குறிக்கும். சில பெண்டிர் திசம்பர்ப் பூவை வைத்தும் சொல்லுவார்கள். கத்தரி கொஞ்சம் அடர்த்தியானது. திசம்பர்ப் பூ சற்று வெளிறியது.]

lavender,
c.1265, "fragrant plant of the mint family," from Anglo-Fr. lavendre, from M.L. lavendula "lavender" (10c.), perhaps from L. lividus "bluish, livid." Associated with Fr. lavande, It. lavanda "a washing" (from L. lavare "to wash;" see lave) because it was used to scent washed fabrics and as a bath perfume. The meaning "pale purple color" is from 1840.

pale purple என்பதனால் இது “இளங்கத்தரி, இளஞ் செந்நீலம்”

pink,
1573, common name of Dianthus, a garden plant of various colors. Attribution to "pale rose color" first recorded 1733 (pink-coloured is recorded from 1681). The plant name is perhaps from pink (v.) via notion of "perforated" petals, or from Du. pink "small" (see pinkie), from the term pinck oogen "half-closed eyes," lit. "small eyes," which was borrowed into Eng. (1575) and may have been used as a name for Dianthus, which sometimes has pale red flowers. The flower meaning led to a fig. use for "the flower" or finest example of anything (e.g. Mercutio's "Nay, I am the very pinck of curtesie," Rom. & Jul. II.iv.61). Pink slip "discharge notice" is first recorded 1915. Pink-eye "contagious eye infection" first recorded 1882, Amer.Eng. Pink collar in reference to jobs generally held by women first attested 1977. To see pink elephants "hallucinate from alcoholism" first recorded 1913 in Jack London's "John Barleycorn."

சிவப்பில் வெள்ளையைச் சேர்க்கச் சேர்க்க pink நிறம் வந்து சேரும். அலரிப் பூ (=அரளிப் பூ என்பது பேச்சு வழக்கு.) என்பது pink இலேயே அடர்ந்தது. தமிழில் பூ என்னும் முன்னொட்டு பொதுவாக வெளிறிய, வலுக்குறைந்த என்னும் பொருட்பாடுகளைத் தரும். சிவப்பைக் குறிக்கும் செய் என்னும் சொல் கை என்றும் பேச்சு வழக்கில் திரியும். கையும் செய்யும் ஒன்றிற்கொன்று போலி. அதனால் பூஞ்செய் (=பூஞ்சை), பூங்கை, என்பன வெகு எளிதில் pink யைக் குறிக்கும். இது போகப் பூவல், பூங்காவி எனவும் வெளிறிய சிவப்பைக் குறிப்பதாக அகரமுதலிகள் குறிக்கின்றன. பூங்காவி என்பது சற்று மஞ்சளும் கலந்த நிறம். எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.

beige,
1858, "fine woolen fabric," from Fr. dialectal "yellowish-grey," from O.Fr. bege "the natural color of wool and cotton," origin obscure. As a shade of color, it is attested from 1879.

silk cotton என்பதைத் தமிழில் இலவம் என்று குறிப்போம். இலவம் பஞ்சின் நிறம் அப்படியே இந்த beige தான். இலவத்தைப் பூளை என்றும் அகரமுதலிகள் குறிக்கின்றன. சற்று பட்டுப் போல் மஞ்சள் நிறம் கூடினால் அதைப் பீது என்றும் சொல்லலாம். பீது என்பது வைக்கோலைக் குறிக்கும் சொல். விண்ணவன் அணியும் பட்டாடையை பீது+அம்பரம் = பீதாம்பரம் என்ற இருபிறப்பிச் சொல்லால் குறிப்பர். வைக்கோலுக்கு வைது என்ற பெயரும் உண்டு. beige என்பதைப் புழுங்கு நிறம் என்றும் சொல்லலாம். புழுங்கல் அரிசி சற்று மங்கியவெள்ளையில் காட்சியளிக்கும்.

tan,
late O.E. tannian "to convert hide into leather" (by steeping it in tannin), from M.L. tannare "tan, dye, a tawny color" (c.900), from tannum "crushed oak bark," used in tanning leather, probably from a Celtic source (e.g. Breton tann "oak tree"). The meaning "make brown by exposure to the sun" first recorded 1530. To tan (someone's) hide in the figurative sense is from 1670. The adj. tan "of the color of tanned leather" is recorded from 1665; the noun sense of "bronze color imparted to skin by exposure to sun" is from 1749; as a simple name for a brownish color, in any context, it is recorded from 1888.

தமிழில் தேன் நிறம் என்பது இதைத்தான் குறிக்கும். நிறங்கள் என்பவை பொருள்முதல் வாதப் படியே ஒப்பீட்டு முறையில் ஒரு மொழியில் பெயரிடப் படுகின்றன.

brown
O.E. brun "dark," only developing a definite color sense 13c., from P.Gmc. *brunaz, from PIE *bher- "shining, brown" (cf. Lith. beras "brown"), related to *bheros "dark animal" (cf. beaver, bear, and Gk. phrynos "toad," lit. "the brown animal"). The O.E. word also had a sense of "brightness, shining," now preserved only in burnish. The Gmc. word was adopted into Romantic (cf. M.L. brunus, It., Sp. bruno, Fr. brun). Colloquial brown-nose (1939) is "from the implication that servility is tantamount to having one's nose in the anus of the person from whom advancement is sought" [Webster, 1961]. Brown Bess, slang name for old British Army flintlock musket, first recorded 1785.

பழுத்தது brown. பழுப்பு / பழுவம் இருவடிவங்களும் அந்தச் சொல்லையே உணர்த்துகின்றன. அடர் பழுப்பு, கரும் பழுப்பு = dark brown, இது போகப் புகர், புற்கு, கபிலம், குரால் என்ற சொற்களும் உண்டு. கபிலம் என்பது சற்று செம்மை கலந்த பழுப்பு. குரால் என்பது அடர்ந்த செம்பழுப்பு

இது போக, அடிப்படையான நிறங்களைச் சற்று ஞாவகப் படுத்திக் கொள்ளுவோம்.

black = கருப்பு
grey = சாம்பல்
violet = ஊதா, செங்கருநீலம், (நாவற் பழம் செங்கரு நீலத்தில் தான் காட்சியளிக்கிறது.) ஊதா என்ற பெயரே இன்றையப் பேச்சு வழக்கில் violet ற்கு இணையாக ஆழ்ந்து பரவிவிட்டது. எனவே அதையே வைத்துக் கொள்ளலாம்.)
violet
c.1330, small plant with purplish-blue flowers, from O.Fr. violette, dim. of viole "violet," from L. viola, cognate with Gk. ion (see iodine), probably from a pre-I.E. Mediterranean language. The color sense (1370) developed from the flower.
iodine
1814, formed by British chemist Sir Humphry Davy from Fr. iode "iodine," coined 1812 by Fr. chemist Joseph Louis Gay-Lussac from Gk. ioeides "violet-colored," from ion "violet" + eidos "appearance" (see -oid). So called from the color of the vapor given off when the crystals are heated.
indigo = அவுரி = கருநீலம் (அவுரிச் செடி என்பது அவிரிச் செடி என்பதன் திரிவு. அது indigo செடியையே குறிக்கும்.
blue = நீலம்
green = பச்சை
yellow = மஞ்சள்
orange = கிச்சிலி, காவி [கிச்சிலிப் பழம் என்பது orange பழம். orange என்பது நம்மூர் நாரங்காயில் (=நார்த்தங்காயில்) சொற்பிறப்பு கொண்டிருந்தாலும் இன்று நம்மூரில் நாரங்காயை orange யைக் குறிப்பதில்லை. எனவே கிச்சிலி என்பதைக் கொள்ளலாம். காவி நிறம் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் துல்லியம் பார்த்தால் காவி orange brown யைக் குறிக்கும். பழங் காலத்தில் காவிச் சாயம் பெரிதும் செய்யப் பட்ட காரணத்தால் காசி என்ற பெயர் எழுந்ததாக தருமானந்த கோசாம்பி சொல்லுவார்.]
red = அரத்தம்
white = வெள்ளை

இது போக சிவப்பும் பழுப்பும் சேர்ந்த நிறத்தை அருணம் என்று தமிழில் சொல்லுவார்கள் திரு அருண மலை > திரு அண்ணாமலையின்
சொற்பிறப்பு இப்படித்தான். = reddish brown

அன்புடன்,
இராம.கி.

Saturday, January 10, 2009

பொத்தகத் தடை

நொச்சிப் போர்ச் சிந்தனைகள் சிலநாட்களாகவே என்னை ஆட்கொண்டிருக்கும் நிலையில், (இன்னும் என் கட்டுரைத் தொடரை முடிக்கவில்லை) நேற்றுப் பிற்பகல், 32 ஆவது சென்னைப் பொத்தக வியந்தைக்குப் போயிருந்தேன். [அங்கு சென்னைப் புத்தகக் காட்சி என்று தான் போட்டிருந்தார்கள்; அப்பாடா, ஒருவழியாய்க் ”கண்... ”தொலைந்து, ”காட்சி” மட்டும் நிலைத்ததை ”முன்னேற்றம்” என்றே எண்ணிக் கொண்டேன். ”தொழில் நுட்பத்தில்” தொழில் போய் “நுட்பியல்” என்று இந்தக் காலத்தில் ஆனதல்லவா? அது போல இங்கும் ஆயிற்று போலும் என்று எண்ணிக் கொண்டேன். இனி, எத்தனை நாட்கள் காட்சியை வைத்து exhibition காட்டுவார்களோ, தெரியவில்லை. சொல்லாக்கம் என்று சொன்னால், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் நம் பழக்கம் மறையவே மறையாது போலும். சொற்களில் துல்லியம் பார்ப்பதை நம்மவர் என்று உணர்வார்களோ? fair என்பதும் exhibition என்பதும் ஒன்றல்லவே?]

சென்னைப் பொத்தக வியந்தை மிகவும் பெரியது. இந்த முறை 600க்கும் மேற்பட்ட தளிகள் (stalls). இரண்டாவது நாளென்பதாலும், நான் போன நேரம் பிற்பகல் என்பதாலும் அவ்வளவு கூட்டமில்லை. எனவே மெதுவாகப் பொத்தகக் கடைகளைத் துழாவ முடிந்தது. முதல் வரிசையில் ஏதோவொரு கடையில், திரு. குப்புசாமி செல்லமுத்து எழுதிக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “பிரபாகரன்” என்ற வாழ்வரைப்(biography) பொத்தகம் 4 படிகளைப் (copies) பார்த்தேன். பொத்தகத்தைப் புரட்டிய நான், ஆர்வ மிகுதியால் அதை வாங்குவதற்கு விருப்பப் பட்டு, பின் பதிப்பகத்தின் பெயரைப் பார்த்துக் ”கிழக்குத் தளியிலேயே வாங்கிக் கொள்ளலாமே” என்ற எண்ணத்தில், முதலிற் பார்த்த கடையில் வாங்காது நகர்ந்து விட்டேன்.

அப்படியே மெதுவாகச் சென்ற போது, கிழக்குப் பதிப்பகம் பதிப்பாசிரியர் பா.ரா.வையும் பார்த்தேன். அவரைப் பார்த்து நாளாகி விட்டது என்பதால், முகமன் சொல்லி சற்று நேரம் உரையாடி நான் நகர்ந்தேன். அப்பொழுது அந்தப் பொத்தகம் பற்றி அவரிடம் எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.

நாலைந்து வரிசை தள்ளி கிழக்குத் தளிக்கு வந்து அங்கு தேடிய போது தான், அந்தப் பொத்தகம் அங்கு இல்லாததைக் கவனித்தேன். கடையில் இருந்த பணியாளர் ஒருவரிடம், பொத்தகத்தைக் குறிப்பிட்டுக் கேட்டால், அவர் மெதுவாகத் தணிந்த குரலில் “நேற்றுவரை அந்தப் பொத்தகம் இருந்தது; விற்றோம்; அப்புறம் அதை விற்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்” என்று சொன்னார். வியந்து போனேன். பெரும் செலவளித்து அச்சடித்துப் பொத்தகம் போடுபவர்கள் விற்காமல் இருப்பார்களோ? அப்படியானால் யாரோ ஒருவர் அந்தப் பொத்தகத்தை கிழக்குப் பதிப்பகத்தார் அங்கு விற்கக் கூடாது என்று தணிக்கை செய்திருக்கிறார்கள், அல்லது தடை செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். [பத்ரி தான் இதை விளக்க வேண்டும்.] அப்படியானால், முதல் வரிசைக் கடைக்காரர், கிழக்கில் இருந்து முன்னாலேயே மொத்த விற்பனையில் வாங்கி உதிரி விற்பனை செய்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். அவக்கரம், அவக்கரமாய், முதல் வரிசைக் கடைக்குப் போய்ப் ”பொத்தகம் இருக்கிறதா?” என்று மீண்டும் தேடினேன். இப்பொழுது அங்கும் பொத்தகப் படிகளைக் காணோம். வேறு உதிரி விற்பனைக் கடைகளில் தேடினால், அங்கும் காணோம்.

ஆக, வியந்தை முழுதும் அந்தப் பொத்தகம் இரண்டு மணிநேரத்திற்குள் திடீரென்று மறைந்திருக்கிறது.

என்னய்யா இது, கண்கட்டு வித்தையா? நான் சனநாயக நாட்டில் தான் வாழ்கிறேனா? நடந்ததைக் கண்டு சிரிப்பதா, சினமுறுவதா? வியல்ந்து கிடக்கும் இணையவெளியில் தேடினால் “பிரபாகரனின் வாழ்வரை” யாருக்கும் கிடைக்காமற் போகாதே?. அப்படி இருந்தும், அந்த வாழ்வரையை இந்தியத் தமிழர் வாங்கிப் படிக்கக் கூடாது என்று தடுப்பது யாரோ சில அதிகாரிகளின் விழைவு போலும்.

நினைத்துக் கொண்டேன்; ”இவர்களா, ஈழ விடுதலைக்கு, போர்நிறுத்தத்திற்கு, முயலுவார்கள்?” முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?

எனவே, என்னருமை ஈழத் தமிழர்களே! இனி இந்தக் கற்பனையைத் தூக்கிக் கடாசி எறியுங்கள். உங்கள் நாட்டிற் தமிழினம் அழிந்து பெரும் இழவு கூட்டிய பிறகு தான், இவர்கள் சாவுச் செய்தி கேட்க வருவார்கள். அதுவரை தமிழ்நாட்டுத் தமிழரை ஏமாளியாக்கி “இந்தாப் போகிறேன், அந்தாப் போகிறேன்” என்று பாவனை காட்டிக் கொண்டே இருப்பார்கள். ஒரு மண்ணும் செய்ய மாட்டார்கள். சிங்களனுக்கே குடைபிடித்துத் திரிவார்கள். இந்தச் செயலுக்கு பேராயக் கட்சியினரும் வால்பிடிப்பார்கள். பாவம், கலைஞர் ....... ஒருவேளை அவரும் இதிற் கூட்டோ என்னவோ?

ஆக, எந்தச் செய்தியையும் தெரிய விடாமல், பத்துப் பதினைந்து ஆண்டு காலம் ஒரு இனத்தின் கண்களையே கட்டி வைத்திருக்கிறார்கள்; வாய்ப்பூட்டு போட்டு இருக்கிறார்கள். இருபத்தைந்து அயிர மாத்திரியில் (கிலோ மீட்டரில்) ஓர் இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றித் தலைமை அமைச்சர் சென்னைக்கு வந்தும் மூச்சு விடமாட்டேன் என்கிறார், எங்கோ இருக்கும் காசாவில் மனித உரிமை பறி போவதை மட்டும் இவர் கண்டிப்பாராம்.

மலேசியப் பினாங்கு மாநிலத்தின் துணை முதலமைச்சர் சரியாகத்தான் வெளிநாட்டிந்தியர் மாநாட்டில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நமக்குத் தான் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லை.

வருத்தத்துடன்,
இராம.கி.

Wednesday, January 07, 2009

நொச்சிப் போர் எழுப்பிய சிந்தனைகள் - 2

போரியலில் குறிக்கோள் என்பது மிகவும் முதன்மையானது. “இந்த நிலத்தைப் பிடி, இவர்களைச் சாய், இந்தக் கோட்டைகளை வீழ்த்து, முடிவில் இதை அடை” என்றவாறு ஒரு படையணி (battalion) அல்லது அரணத்தின் (Army) முன்பாகக் குறிக்கோள்கள் வைக்கப் படுகின்றன. அந்தப் படை/அரணம் இருக்கும் இடத்தில் இருந்து, அவர்கள் முன்வைத்த குறிக்கோளை அடைய அரண வல்லுநர்கள் தடவரைகளை ஏற்படுத்தித் தருகிறார்கள். ”இது தான் உங்களுக்குச் சரியான தடம், இந்த வழியில் போங்கள், உங்கள் குறிக்கோளை உறுதியாய் அடையலாம்” என்று ஒரு
பருந்துப் பார்வையில் வானில் இருந்து நிலத்தைப் பார்த்தாற்போல் ஒரு கோடு வரைவது தான் தடவரையாகும். strategy என்று ஆங்கிலத்தில் இதைச் சொல்லுவார்கள். Strategy என்பதை ஒரு பாதை போல உருவகிக்கலாம். (யுத்த உபாயங்கள் என்று மணிப் பவளத்தில் சொல்லுவார்கள்.) ஒரு வினையைச் செய்வதற்கு முன்னால் தடவரைகள் வரையப் படுகின்றன.

கணிதத்தில் இடப்பியல் (topology) என்ற பிரிவு ஒன்று உண்டு. அதில் சொல்லுவது போல ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் போக கணக்கற்ற பாதைகள் உண்டு. அதே போல ஒரு குறிக்கோளை அடையவும் கணக்கற்ற தடவரைகள் இருக்கும். அதில் எந்தத் தடவரை சிறப்பானது, நேர்த்தியானது என்பது பல்வேறு காரணங்களால் நடைமுறையில் அறுதி செய்யப் படுகிறது. [நாம் இருக்கும் புள்ளி நமக்குக் கொடுக்கப் பட்டது. நம் குறிக்கோள் நாம் போகவேண்டிய புள்ளியை நிருணயிக்கிறது. போகவேண்டிய புள்ளி நம் தடவரையைப் போட, பெரிதும் உந்துகிறது.]

அந்தத் தடவரையின் படி ஒருவரோ, ஒரு குழுவோ, ஒரு படையோ, ஒரு படையணியோ முன்னே சென்று குறிக்கோளை அடைவதற்கு ”இதை முதலில் செய், இதை அடுத்து ஆற்று, மூன்றாவதாக இப்படி நகர்....” என்று செய்யவேண்டிய ஆற்றங்களை (actions) வரிசையாய் அடுக்குகிறார்களே அதற்கு அடுவரை (tactics) என்று பெயர். [tactics என்ற சொல் tassein (Gk) - arrangements என்ற சொல் - பொருளிலேயே பிறந்திருக்கிறது. design என்ற சொல் கூட tassein (Gk) - arrangements என்பதிற் பிறந்தது தான். (அதை அடவுகள் என்று மொழிபெயர்க்கலாம்.) அடுக்குதல் என்பது to arrange என்றே தமிழில் பொருள் கொள்ளும். tactics என்பது ஒரு பயண நிரலைப் போல அமையும். ஒரு நிரலை விதம் விதமாய் நாம் மாற்றி அடுக்கலாம் அல்லவா? தந்திரோபாயங்கள் என்று மணிப்பவளத்தில் அறிவுய்திகள் (intelligentia) இதைக் குறிப்பார்கள். மணிப்பவளத்தைத் தூக்கிக் குப்பையிற் போட்டு நல்ல தமிழுக்கு வருவோமே? நாம் செய்வதும் செய்ய வேண்டியது என்னவென்று அப்பொழுதாவது விளக்கமாய்ப் புரியும்.] இந்த அடுவரையை அரண வல்லுநர்கள் சொல்லுவதில்லை; படைத்தளபதியே இடம், பொருள், ஏவல் பார்த்து அமைத்துக் கொள்ளுகிறார்.

பொதுவாக எந்த அடுவரையிலும் கொஞ்சம் நீக்குப் போக்கு உண்டு. ஆற்றங்கள் நடக்கும் பாங்கிற்கு ஏற்ப அடுவரையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும்; சற்று பிறழும்; சிலபோது முன்பின்னாகும்; ஏன், புது வடிவம் கூட எடுக்கும். ஆனால் தடவரையில் இது போன்ற பிறழ்ச்சிகள் நெடுகவும் நடந்தால் அப்புறம் அது தடவரை ஆகாது. குடவரை (=கோணவரை) ஆகிப் போகும் ”முதற் கோணல் முற்றுங் கோணல்” என்பது நினைவிருக்கிறதா? அப்படிப் பிறழ்ந்து கொண்டே இருந்தால், போக வேண்டிய ஊருக்கு நாம் போய்ச் சேர மாட்டோம். ”போகாத ஊருக்கு வழி கேட்கக் கூடாது” என்ற சொலவடையும் உங்களுக்கு ஞாவகம் வருகிறதா?

குறிக்கோள் - தடவரை - அடுவரை என்பது ஒரு தொகுதி. போரியல் நிகழ்வுகளை இந்தத் தொகுதியை வைத்தே புரிந்து கொள்ள முடியும். .

எந்தப் போருக்கும் குறிக்கோளாய் மூன்றை மட்டுமே தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லுகிறது. ஒன்று மாற்றானின் செல்வத்தைக் கவர்ந்து கொள்ளல். ஒரு காலத்தில் செல்வம் என்பது மாட்டு மந்தைகளே. மாட்டு மந்தைகளைக் கவர்ந்து கொள்ளுவது வெட்சிப் போர், கவர்ந்ததை மீட்டுக் கொள்வது கரந்தைப் போர். அண்மைக் காலத்தில் நடந்த வெட்சி - கரந்தைப் போராகக் குவைத்திற்கும் ஈராக்கிற்கும் இடையே நடந்த போரைக் குறிக்கலாம். ஈராக்கின் பாறைநெய்ச் (petroleum) செல்வத்தை நிலத்திற்கு அடியில், வளைந்த குழாய் போட்டுச் சுரண்டி, குவெய்த் கவரத் தொடங்கியது. ஈராக் அதைத் தடுத்துத் தன் செல்வத்தை மீட்டுக் கொள்ளப் பார்த்தது. முடிவில் அமேரிக்கா, இரோப்பா போன்ற சண்டியர்களின் உறுதுணையால் வெட்சியார் வெற்றி பெற்றார்கள். கரந்தையார் தோற்றார்கள். வளைகுழாய் நுட்பியலில் இன்றைக்கும் இராக்கின் பாறைநெய் குவெய்த்தால் கவரப் பட்டே வருகிறது. [பலநேரம் வெட்சிப் போர் கமுக்கமாய், ஊமைக் குசும்போடு, ஆளரவம் அற்று இருக்கும். கரந்தைப் போர் பெரும் ஆரவாரத்துடன் நடக்கும். உடனே பார்வையாளர் கரந்தையார் தான் போரைத் தொடங்கினார்கள், அவர்களே கெடுதிக்காரர்கள் என்று எண்ணத் தொடங்கிவிடுவார்கள். கடைசிவரை வெட்சியாரின் வேட்கை சாடப் படாமலே போகும். இங்கும் எல்லோரும் இராக்கையே சாடிய நிலையில், குவெய்த் கண்டனத்திற்கு உள்ளாகவே இல்லை.]

அடுத்த வகைப் போரை வஞ்சிப் போர்.என்று தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லும். மண் நசையால் (விருப்பத்தால்) ஒருவன் இன்னொரு நாட்டை போரால் கவருவது. இந்தப் போருக்குக் கணக்கற்ற எடுத்துக் காட்டுக்கள் உண்டு. [சொல்லப் போனால் வஞ்சிப் போர் மிகவும் பரவலானது. முன் நடந்த இரண்டு உலகப் போர்களும் கூட வஞ்சிப் போர்கள் தான்.] நம் முன்னே இப்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ஈழப் போரும் ஒரு வஞ்சிப் போர் தான்.. சிங்களனுக்குத் தமிழ்மண் வேண்டும். தமிழரைத் துரத்தியடித்து, அவர் நிலத்தில் சிங்களரைக் குடியேற்றி நாட்டின் மக்கள்
பரம்பலை (distribution) அவன் மாற்ற விழைகிறான். இதற்கு அவன் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க அவன் அணியமாய் இருக்கிறான். தமிழன் என்ற இனம் அழிந்தால் தான் சிங்களனுக்கு நிலம் கிடைக்கும் என்றநிலையில், ”தமிழன் இறந்தாலும் சரி, அகதியாய் ஓடிப் போய் நிலம் விட்டு நகர்ந்தாலும் சரி,” சிங்களனுக்கு ஏற்கை தான். இந்த நிலையில் தமிழரின் குறிக்கோள் என்ன? ”தமிழ்மண் உரிமையை எக்காலத்தும் விட்டுக் கொடுக்கக் கூடாது; முடிந்தால் அகலவே கூடாது” என்பது தானே?

இதற்கான தடவரையில் புலிகள் போயிருந்தால், ”ஏன் 7 ஆண்டுகளாய் சமதானம் பார்த்தார்கள்?” என்று என் சிந்தனைக்குப் புரிபடவில்லை. சமதானத்திற்கு முன் அகன்று கொண்டே போய், விரிந்த நிலப்பரப்பைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் அவர்கள் கொண்டுவந்தார்களே? அதை முற்றிலுமாய் முடித்து தமிழருக்கான முழு நிலத்தையும் தங்கள் வசம் கொண்டு வருவதில் ஏன் சுணக்கம் ஏற்பட்டது? - விளங்கவில்லை.

இந்த 7 ஆண்டுகளில் பல செய்திகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனாலும் அடிப்படைக் கேள்வி அப்படியே நிற்கிறது.

நான் போரியலாளன் அல்லன். அதே பொழுது தமிழர் வெல்ல வேண்டும் என்று நினைக்கும் பார்வையாளன். யாராவது விளக்கமாய்ச் செறிவாய்ச் சொன்னால் தெரிந்து கொள்வேன்.

இன்னும் சில சிந்தனைகள் நொச்சிப் போரை ஒட்டி இருக்கின்றன. அடுத்தடுத்துச் சொல்லுகிறேன். .

அன்புடன்,
இராம.கி.

பி.கு. தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லும் மூன்றாவது வகைப்போர் தும்பைப் போர். அது வலிமையை உணர்த்து முகத்தான் ஒருவன் செய்வதும் அதை எதிர்த்து மற்றொருவன் போரிடுவதும் ஆகும். அமெரிக்கா, ஈராக்கின் மேல் தொடுத்ததும், ஆப்கனித்தான் மேல் தொடுத்ததும் தும்பைப் போர்கள். அந்த வகைப் போர்கள் இப்பொழுது நம் உரையாடலுக்குள் உள்ளாத காரணத்தால் அவற்றைப் பற்றி இங்கு பேசவில்லை.

Sunday, January 04, 2009

நொச்சிப் போர் எழுப்பிய சிந்தனைகள் - 1.

நொச்சி வீழ்ந்தால் என்ன? நொச்சியில் இருந்து உழிஞைக்கு மாறிக் கொள்ள முடியாதா, என்ன? நொச்சியும் உழிஞையும் மாறிமாறி ஏற்படும் செருநிலைக் (battles) குறியீடுகள்; அவ்வளவு தான். அவை மண்ணாசைக்காக எழும் நீண்ட வஞ்சிப் போர் அல்ல, இடைநிலைப் போகுகள். நீண்ட வஞ்சி இனியும் தொடரும், வாகையில் முடியும் வரை. எங்கள் தம்பி வாகை சூடத்தான் செய்வான். அடச்சே, போங்கடா!

புறம் 271 ல் வெறிபாடிய காமக் காணியார் என்னும் புலவர், நொச்சித் திணையில் செருவிடை வீழ்தல் என்னும் துறையில்

நீரறவு அறியா நிலமுதல் கலந்த
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்
தொடலையாகவும் கண்டனம் இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்துப்
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே

என்று பாடியிருப்பார். இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்தாற் போன்று ஒரு விவரிப்பு.

நொச்சியைப் புதலியற் (Botany) துறையில் Vitex nigundo L. என்பார்கள். (நீர்க் குன்றி என்ற தமிழ்ச்சொல் தான் nirgundi>nigundo என்று ஆகியிருக்கிறது. நொச்சிச் செடி முற்றிலும் ஒரு தமிழ்நிலத்துச் செடி.) ஒரு குறுமரம் என்றே சொல்லத் தக்க நொச்சிச்செடி சமவெளிகளிற் கிட்டத்தட்ட 4 மாத்திரி உயரத்திற்கும், மலைப் பகுதியில் 6 மாத்திரி உயரத்திற்கும் கூட வளரும். எங்கெல்லாம் ஈரம் மிகுந்திருக்குமோ, அங்கு, குறிப்பாக ஆற்றோரங்களில், நொச்சிச் செடி வளரும். காமக் காணியார் பாட்டின் “நீரறவு அறியா நிலமுதல் கலந்த” என்ற முதல்வரி, இந்த அறிவியல் அவதானிப்பைச் சட்டென்று உணர்த்துகிறது. நீரறவு என்பது நீர்க்குறை. நீரறவு அறியா நிலம் என்னும் போது நீர்வளம் குறையாத நிலத்தைக் குறிக்கிறது. நொச்சிச் செடி நஞ்சைப் பகுதியில் (அதாவது மருத நிலத்தில்) வேலியாகக் கூட வளர்க்கப் படுகிறது. எனவே வேலிக்கு உவமையாய் நொச்சி திகழும்.

நொச்சியிலை 7-12 நுறுமாத்திரி (செண்டிமீட்டர்) நீளமும், 2-3 நுறுமாத்திரி அகலமும் கொண்டு ஈட்டி வடிவில், கண்ணை ஈர்க்கும் பசிய நிறத்தில், இருக்கும். மயிலின் தாளைப் போல இலை இருப்பதால் அதை மயிலடி இலை என்று கூட விவரிப்பது உண்டு. இலைக் காம்புகள் ஒன்றரை நுறுமாத்திரி இருப்பதால் இலைகளைத் துணி போலப் பின்னுவது எளிது. நொச்சித் தழையாடையை மருதநிலத்துப் பெண்கள் தம் இடுப்பில் அகன்ற அல்குலை மூடும் வகையில் அணிந்து கொள்வார்களாம். பருத்தித் துணிக்கு மேல் அணிந்து கொண்டிருக்கலாமோ, என்னவோ? இலைகளின் பசியநிறம் கண்களை ஈர்த்ததைப் பல சங்கப் பாடல்கள் சொல்லியிருக்கின்றன. ”கண் ஆர் குரூஉத் தழை, மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் தொடலையாகவும்” என்று மேலே வரும் சொற்றொடரும் அதே செய்தியைச் சொல்கிறது. தொடலை என்பது இலைகளை நெருக்குப்பத்தையாய்த் துணிபோற் பின்னிக் கட்டுவதாகும்.

நொச்சிப் பூவின் இயற்கை நிறம் கருநீலம் செறிந்த செவ்வூதா. பூங்கொத்துக்கள் 25 நுறுமாத்திரி அளவில் பூத்துக் குலுங்கும். சமவெளியில் சனவரி - ஏப்ரல் மாதங்களிலும், மலைப்புறத்தில் சூலை - அக்டோபரிலும் பூக்கும். குரல் என்பது கொத்து. நொச்சிக்கே உரிய மணம் செடிக்கு அருகில் போனாலே கமழ்ந்து தெரியுமாம். செடிப்பட்டை, சிறு இளம் கிளைகள், பூங்கதிர்கள், மற்றும் இலையின் கீழ்ப்புறம் ஆகிய எல்லாமே சாம்பற்பொடி தூவியது போல் இருக்குமாம்.

சங்க இலக்கியங்களில் நொச்சியைக் குறிக்கும் குறியீடாகக் ”கருங்குரல் நொச்சி, மாக்குரல் நொச்சி, மணிக்குரல் நொச்சி, மணிஏர் நொச்சி, ஒண்குரல் நொச்சி” என்று பூங்கொத்தோடு கூட்டியோ, ”தாழ்வின் நொச்சி, தடவுநிலை நொச்சி, கூழை நொச்சி” என்று செடியின் குள்ளத் தன்மை பற்றியோ சொல்லுகிறார்கள். குள்ளப் பெண் கூளி, குள்ளி என்றும் தமிழில் குறிக்கப் படுகிறாள் இல்லையா? குள்ளச் செடியும் அப்படிக் குறிக்கப் படலாம் தானே? குள்ளிநொச்சி மிகுந்த இடம் குள்ளிநொச்சி> கிள்ளிநொச்சி> கிளிநொச்சியாகப் பேச்சுவழக்கில் சொல்லப் படுவது வியப்பில்லை. நான் சொல்லும் களம் புரிகிறதோ?

மருதநிலத்தில் நஞ்சை வேலியாக நொச்சிச் செடி வளர்க்கப் பட்டது என்று பார்த்தோமல்லவா? அதனால் வேலி/மதில் என்பதற்கே நொச்சி ஒரு குறியீடு ஆனது. மருதநிலத்தில் தானே மதில்களும் அரண்களும், கோட்டைகளும்.பரந்து கிடக்கின்றன. அரண்களைக் காக்கும் போர் நொச்சிப் போர். நொச்சிப் போராளிகள் நொச்சிப்பூ தொடுத்த மாலையைக் கழுத்திற் போட்டுக் கொள்ளுவார்கள். மேலே பாட்டின் ஆறாவது வரியில் தெரியல் என்ற சொல் வருகிறதே அது இந்த மாலையைக் குறிக்கும். அரணைத் தகர்க்க வருபவரை உழிஞையார் (உழிஞைப் பூ அணிந்தவர்) என்றும், அரணைக் காப்பவரை நொச்சியார் என்றும் தமிழிலக்கணம் சொல்லும்.

பாட்டில் வரும் மைந்தன் என்ற சொல் போராளியைக் குறிக்கிறது. மைந்து என்பது வலிமை. மறம்புகல் மைந்தன் = போரில் பொருதும் போராளி..

இப்பொழுது பாட்டின் பொருளைப் பார்ப்போமா?

”நீர்வளம் குறையா நிலத்தோடு ஒன்றி, கருநீலப் பூங்கொத்தோடு காட்சியளிக்கும் நொச்சிச் செடியின் (கண் நிறைத்துத் தோற்றும்) தழையைத் தொடலையாக்கி, தம் அழகிய அகன்ற அல்குலை மூடி மகளிர் அணிந்துகொள்வதை முன்பு இனிதாய்ப் பார்த்திருக்கிறோம். போரில் புகுந்த மகன் இறந்து கிடக்கும் இப்பொழுதோ, அச்சம் தரும் குருதியில் முழுதாய்த் தோய்ந்து, நிறம் மயங்கிக் கிடக்கும் நொச்சி மாலையை ஊன் என்று கருதிப் பருந்து கவ்வ விழைவதைப் பார்க்கிறோம்.”

என்ன சொல்ல வருகிறார், புலவர்? ”முன்னால் நொச்சித் தழையாடை உடுத்த காட்சியை இனிது கண்டோம்; இப்பொழுது எங்கள் போராளி நொச்சிமாலை குருதியில் நிறம் மாற, பருந்து கவ்வ வருவதைப் பார்க்கிறோம்”. ”மேலது கீழாய் கீழது மேலாய், இந்த நிலை இனியும் மாறும்” என்பது உடன் வரும் உள்ளுறைப் பொருள் ஆகும். புலவர் சொல்லிய முரண்தொடையால் இந்தப் பொருள் பெறுகிறோம். ஏனென்றால்,

“தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என்றலும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே ....”

- கணியன் பூங்குன்றன், புறம் 192.

அன்புடன்,
இராம.கி.