Friday, February 28, 2020

பல்லக்கு - 2

இனி நிலைக் கட்டிலுக்கு மாறாய், நகர்த்தியெடுத்திச் செல்லும் கட்டிலுக்கு வருவோம்.  அரசுகட்டிலுக்கும் பல்லக்கிற்கும் உள்ள தொடர்பு தமிழ்ச் சொற்களை ஆயும் போது தான் கிட்டியது. இதைச் சங்கதம் உட்பட்ட இந்தையிரோப்பியன் மொழிகள் வெளிப்படுத்தவில்லை. அவை வெறும் படுக்கையோடு பல்லக்கைத் தொடர்புறுத்தும். ஆழ்ந்து ஓர்ந்தால் அது சரியில்லை. பல்லக்கிற்கும் பல்வேறு வண்டிகளில் இருக்கும் கூடுகளையும் பார்த்தால் ஒற்றுமை புலப்படும். பல்லக்கில் விலங்கிற்கு மாறாய் மாந்தரே பயன்படுகிறார்.   

சிவிகை என்ற பழஞ்சொல்லிற்கு வருவோம். செய்கையிலிருந்து, செய்விக்கை எனும் பிறவினை வழிப்பிறந்த பெயர்ச்சொல் அதே பொருளில் உருவாகும்  செய்விக்கை>செவிகை> சிவிகை எனப் பலுக்கத் திரிவில் இது மாறும். முந்தைக் காலப் பேரிலக்கியங்களில் சிவிகையே, பெரிதும் பயன்பட்டது.  கீழ்வரும் காட்டுகளை பேரா. பாண்டியராசாவின் http://tamilconcordance.in/ மூலம் அறிந்தேன். ”அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை   பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை” என்பது குறள் 4:7. குறளின் காலம் சிலப்பதிகாரத்திற்கு 100 ஆண்டுகளாவது முந்தையது என்பது பல அறிஞரின் கணிப்பு. சிலம்பின் காலம் கி.மு. 75 என்பது என் கணிப்பு. எனவே குறளின் காலம் என் கணிப்பில் பொ.உ.மு. 175. ”வையமும் சிவிகையும் மணி கால் அமளியும்” என்பது சிலம்பின் மதுரைக்காண்டத்தில் 14/126 இல் வரும் வரி. அடுத்து “சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி” என்பது பரிபாடல் 10/17 இல் வரும் வரி (பரிபாடல் காலம் பெரும்பாலும் கி.மு.50 ஆகலாம் என்று என் சிலம்பின் காலம் நூலில் கூறினேன்.)

சிந்தாமணியில் ”சிவிகை” 7 இடத்திலும்  [போந்து காய் பொன் சிவிகை நல் போதகம் - சிந்தா:4 858/3; இரும் களிறு எய்த ஓட சிவிகை விட்டு இளையர் ஏக - சிந்தா:4 975/2; திரு மணி சிவிகை ஏறி செம்பொன் நீள் மாடம் புக்காள் - சிந்தா:9 2069/3; காய் கதிர் சிவிகை செற்றி கலந்தவை நுரைகள் ஆக - சிந்தா:10 2178/2; சீரிய துறவொடு சிவிகை ஏறினார் - சிந்தா:13 2628/3; கடி நிரை சிவிகை ஏறி கதிர் மணி குடை பின் செல்ல - சிந்தா:13 2650/2; சேய் நிற சிவிகை சேர்ந்தான் தேவர் கொண்டு ஏகினாரே - சிந்தா:13 2998/4], ”சிவிகைகள்” ஓரிடத்திலும் [தொழு தகு சிவிகைகள் சூழ போய பின் - சிந்தா:13 2630/2] ”சிவிகையின்” ஓரிடத்திலும் [மாட மா மணி சிவிகையின் மயில் என இழிந்தார் - சிந்தா:12 2379/3], ”சிவிகையும்” ஈரிடங்களிலும் [திருந்து பொன் தேரும் செம்பொன் சிவிகையும் மிடைந்து தெற்றி - சிந்தா:4 972/1; சூழி யானையும் துளங்கு பொன் சிவிகையும் உடையான் - சிந்தா:12 2386/3] பயின்று வந்துள்ளன.

இதேபோல் கம்பராமாயணத்தில், “சிவிகை” 4 இடத்திலும் [சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே - பால:14 18/4; மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய - ஆரண்:10 169/3;துன்னின சிவிகை வெண் கவிகை சுற்றின - கிட்:11 121/4; தேரினில் சென்றனன் சிவிகை பின் செல - கிட்:11 122/4], “சிவிகை-தன்” ஈரிடங்களிலும் [ஐ_இருநூறு சூழ ஆய்மணி சிவிகை- தன் மேல் - பால:14 63/3; குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன - பால:14 64/3] “சிவிகையில்” ஈரிடங்களிலும் [சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான் - பால:14 70/4; தேர் மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும் - பால:23 35/1], “சிவிகையின்” ஈரிடங்களிலும் [இழிந்த தாயர் சிவிகையின் ஏற தான் - அயோ:13 71/1; வேந்தர் ஆதி சிவிகையின் வீங்கு தோள் - அயோ:14 12/3], ”சிவிகையும்” ஓரிடத்திலும் [தேரும் மாவும் களிறும் சிவிகையும்   ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால் - அயோ:11 34/1,2] பயில்கின்றன.

பெருங்கதையில்  சிவிகை  மூன்றிடங்களிலும் [மல்லர் பூண்ட மாட சிவிகை பல் வளை ஆயத்து பைம்_தொடி ஏறலும் - உஞ்ஞை 38/255,256; சிலத மாக்களொடு சிவிகை வருக என - மகத 13/11; வாயிலுள் வைத்த வண்ண சிவிகை ஏறல் நன்று என கூறி வைத்தலின் - மகத 13/42,43], ”சிவிகையில்” என்பது மூன்றிடங்களிலும் [தொகு வேல் முற்றம் சிவிகையில் போந்து - உஞ்ஞை 36/131; கை புனை சிவிகையில் கஞ்சிகை நீக்கி - உஞ்ஞை 47/199; சிறப்பு உடை மாதரை சிவிகையில் தரீஇ - வத்தவ 7/15], ”சிவிகையொடு” ஈரிடங்களிலும் [சே ஒளி சிவிகையொடு சே_இழைக்கு ஈய - மகத 22/71; திரு கிளர் சிவிகையொடு சிலதரை விடுத்தலின் - மகத 22/108]

“சிவிகையும்” ஏழிடங்களிலும் [ செண்ண சிவிகையும் தேரும் வையமும் - உஞ்ஞை 37/269; கை புனை சிவிகையும் கச்சு அணி மாடமும் - உஞ்ஞை 38/43; ஊர்தியும் பிடிகையும் சீர் கெழு சிவிகையும் வையமும் தேரும் வகை வெண் மாடமும் - உஞ்ஞை 42/17,18; வையமும் சிவிகையும் கை புனை ஊர்தியும் - உஞ்ஞை 44/115; தேரும் வையமும் சிவிகையும் பண்டியும் - இலாவாண 12/35; திரு மணி சிவிகையும் பொரு வினை படாகையும் - மகத 23/33; பிடியும் சிவிகையும் பிறவும் புகாஅள் - வத்தவ 15/114] “சிவிகையுள்” நாலிடங்களிலும் [பளிக்கு மணி சிவிகையுள் விளக்குறுத்தது போல் - உஞ்ஞை 42/64; கஞ்சிகை சிவிகையுள் கரணத்து ஒடுங்கி - உஞ்ஞை 47/172; கட்டளை சிவிகையுள் பட்டு அணை பொலிந்த - மகத 13/46; திரு அமர் சிவிகையுள் சுமந்தனர் கொணர்ந்து - வத்தவ 16/3] பயில்கின்றன. இதுபோக கலிங்கத்துப் பரணி, வில்லிபாரதம், தேவாரம் போன்றவற்றிலும் காட்டுகள் உண்டு.

நாளாவட்டத்தில் முல்லை வாழ்க்கையின் முடிவில் மருத ஒருங்கிணைப்பு தோன்றிய பின் சிவிகைகளின் ஆக்கம் பல்வேறாயின. பாதி மூடியது, முற்றிலும் மூடியது, மணிகள் இழைத்தது, வளைந்து நெளிந்த தண்டு கொண்டது, மூங்கில் தண்டால் ஆனதென சிவிகைகளின் அடவுகள் பல வாறாய் விரிந்தன. கீழே தருமபுர ஆதீனம் வந்த தண்டிகை(ப் பல்லக்கைக் காணுங்கள். தண்டிகை  விதப்பால் அந்தப் பல்லக்கு அப்பெயர் பெற்றது.  கூர்ந்து பார்த்தால் தண்டில் தொங்கிவரும் கட்டில் போல் அது தெரியும். இதைத் ”தொங்கு மஞ்சம்” என்றும் சொல்வார்.



அடுத்து யாணமென்ற சொல்லும் கட்டைக் குறிக்கும். யாணத்தில் கூட்டுச் சொற்கள் உண்டு.  ஒட்டியாணம் = ஒட்டில் (=இடுப்பில்) கட்டும் அணிகலன், கலியாணம் = ஆரவாரத்தோடு மணமக்களை கட்டுவிக்கும் விழா. யாணும் தொழில்வினைஞர் யாணர் ஆவார். கல்தச்சர், மரத்தச்சரென இருவரையும் இச்சொல் குறித்தது. யாத்தலை வைத்து  யாத்திரை (= கட்டப் பட்ட செலவு - preplanned trip) என்ற சொல்லும் எழுந்தது. யாணம்>யானம் ஆகிக் கட்டப்பெற்ற ஊர்தி/சிவிகைகளைக் குறித்தது. “வாகன யானம் கண் மிசைக் கொண்டார்” என்பது பெரியபுராணம் தடுத்தாட். 20 ). யானமென்ற சொல் கட்டப்பட்ட மரக்கலத்தையும் (சூடாமணி நிகண்டு) குறிக்கும்,   யானம் என்பது யானிகம்>ஆனிகம்>அனிகம் என மேலும் திரிந்து பல்லக்கைக் குறிக்கும்.

இனிப் பல்லக்கு என்ற தலைப்பிற்கு வருவோம். இது தான் இன்று பரவலான சொல். அட்டப்பல்லக்கு, குமாரப்பல்லக்கு, கூட்டுப்பல்லக்கு, சிங்கமுகப் பல்லக்கு, தந்தப்பல்லக்கு, பச்சைப்பல்லக்கு, பூப்பல்லக்கு, பூம்பல்லக்கு, பெட்டிப்பல்லக்கு, முத்துப்பல்லக்கு, மூடுபல்லக்கு, மேனாப்பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு, அரத்தினப் பல்லக்கு, அந்தூல்பல்லக்கு, கூடாரப்பல்லக்கு என விதம்விதமாய் பல்லக்குகள் அமையும். பல்லக்கு, பல்லாக்கென்றும் சொல்லப்படும். பொருளை ஆழ ஓர்ந்தால், பல்லாக்கு பெரும்பாலும் முதலாயும் பல்லக்கு பிறகும் எழுந்த சொற்களோ எனத் தோன்றுகிறது.



பல்லக்கின் மென்திரிவாய் பல்லங்கம் எழும். பாகதத்தில் பல்லங்க/ பரியங்க என்றும், கன்னடத்தில் பரியங்க, பல்லக்கி என்றும், மலையாளத்தில் பல்லக்கென்றும் புழங்கும். தமிழ் அகரமுதலியில் ”அங்கம்” கட்டிலைக் குறித்து வரும். ”அணையங்கம் மீதே” என்பது திருப்புகழ் 128. ”தந்தப் பல்லக்கும் சிவிகையும் தாங்கி” என்பது தொண்டை. சத. 87.  “எழுவாப் பல்லாக்கு ஆளாக்கினான் பல்கலை தேர்வேந்தனும்” என்பது இன்னிசை.14.  “பல்லக்கு” 300/400 ஆண்டுகளுக்கு முன் தமிழில் பல்லக்கு இருந்ததா என்பது கூட ஐயமே. 16 ஆம் நூற்றாண்டுச் சூடாமணி நிகண்டு, “வையம், தண்டிகை, அனிகம், யானம்” என்பவற்றை மட்டுமே பல்லக்கிற்கு இணையாய்க் காட்டும்  அதிலும் வையம் என்பது கூட்டுவண்டியைக் குறிப்பதால், பல்லக்கைக் குறிக்க வாய்ப்பில்லை. சகடம், வையம், பாண்டில் போன்ற கூட்டுவண்டிகளில் இருக்கும் கூடும் (chasiss) சிவிகை எனப்படும்.

பரியங்க என்பதைப் பரி+அங்கம் என்று ஒருசிலர் பிரிப்பர்  நம் வீடுகளில் இன்று புழங்குகிறோமே, sofa க்கள், அவற்றில் கைகளை இருபக்கம்  வைக்கவும், ஓரளவு முதுகைச் சாய்ந்துகொள்ளவும் (முற்றிலும் சாய்ந்து கொள்ளும் கட்டில் அரசனுக்குச் செய்வதாகும்.) அணைவு கொடுத்திருப்பர். இப்படி 3 பக்கம் பரிந்து (சுற்றி) ஓரளவு அணைவு கொடுப்பதை ”அர்த்த பரியங்க ஆசனம்” என்று செயின நூல்கள் கூறும்  (முழுதும் பரிவதை பரியங்க ஆசனம் என்பார்.) அவர்களின் தீர்த்தங்கர உருவங்கள் இதுபோன்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பதாய் உருவங் காட்டுவர். எல்லாப் பக்கமும் அணை கொடுத்தது (நாலு பக்கத்தோடு, கூரையும் சேர்த்தது) பரியங்கம் எனப்படும், இப் பரியங்கத்திலிருந்து தமிழ்ப் பல்லக்கு வந்தது என்று சிலர் தலைகீழ்ப் பாடம் படிப்பார். இது தவறு.

பல்லாக்கைப் பல்+ஆக்கு என்று பிரிக்கவேண்டும். யாக்கு>ஆக்கு = கட்டப் பட்டது. முன்னால் சொன்னோமே தூக்கிப் போகும் கட்டில் அதுவே ஆக்கு எனச் சொல்லப்படுகிறது. முன்னொட்டான பல், பல்லுதல் வினையின் பகுதி. பல், வினைத்தொகையாய் இங்கு நிற்கிறது. இப்பகுதியையும் ஆக்கையும் சேர்த்து பல்லாக்கெனும் கூட்டுப்பெயர் உருவாகும். பல் வேருக்குப் பல்லுதல்/பற்றுதல் பொருளுண்டு. சுவரில், கூரையில், பல்லி/பற்றிக் கொண்டு போகும்.  பல்+து = பற்று>பற்றி>பத்தி>பக்தி. பற்று>பத்து>பத்தம் = கட்டு. பற்றியது>பத்தியது = பொருந்தியது. பத்தி>பதி = உறைதல், பற்றுதல், இடம், ஊர் போன்ற பல பொருள்களுண்டு.. பதிதல்>பதித்தல் = நிலத்தில் காலால் பொருத்தல். பத-த்தல்>பாதம் = நிலம் பற்றும் உறுப்பு.  பாதம்,, பாதுகை, பாதை என்று இன்னும் பல சொற்களைச் சொல்லலாம். பல்லாக்கு>பல்லக்கு பாகதத்தில் நுழைந்த பின்னர், லகர>ரகரத் திரிவில் பர்யங்க ஆகி, மூலம் புரியாது நாம் செயின நூல்களைக் கடன் வாங்கையில் பரியங்கமானது. இதேசொல் சங்கதத்திலும் பரவியது. பல்லக்கிற்கு இணையான ஒலிச்சொல் வேறெந்த இந்தையிரோப்பியனிலும் கிடையாது. அதுவே தெற்கிருந்து சங்கதம் கடன்பெற்றது என்பதைக் காட்டும்.       
   
ஆங்கிலத்தில் பல்லங்கு என்பது palanquin (n.) என்று புழங்கும். "a covered litter, generally for one person, used in India and elsewhere in the East, borne by means of poles on the shoulders of four or six men," 1580s, from Portuguese palanquim (early 16c.), from Malay and Javanese palangki "litter, sedan," ultimately from Sanskrit palyanka-s "couch, bed, litter," from pari "around" + ancati "it bends, curves," related to anka-s "a bend, hook, angle," and meaning, perhaps, "that which bends around the body." Some have noted the "curious coincidence" of Spanish palanca, from Latin phalanga "pole to carry a burden." "The final nasal appears to have been a Portuguese addition as in mandarin, and is often absent from the forms given by early travellers ..."  என்பது ஆங்கில வறையறை..

மேலையரிடம் உள்ள சொல்லான litter (n.) இன் சொற்பிறப்பையும் பாருங்கள். c. 1300, "a bed," also "bed-like vehicle carried on men's shoulders" (early 14c.), from Anglo-French litere "portable bed," Old French litiere "litter, stretcher, bier; straw, bedding" (12c.), from Medieval Latin lectaria "litter," from Latin lectus "bed, lounge, sofa, dining-couch," from PIE *legh-to-, suffixed form of root *legh- "to lie down, lay." கட்டிலில் விழுந்தான் என்று நாம் சொல்வதை ஆங்கிலத்தில் "to lie on the bed" என்பர். lie>litter என்பதில் தகரம் எப்படிச் சேர்ந்தது? வியப்பில்லையா? விகரம் மறைந்தால் litter இன் உறவு புரியும்.

யானையில் வைக்கும் அம்பாரி தொட்டி எனப்படும்.  தொள்லப்பட்டது தொட்டி, தொட்டியில் சிறியது தொட்டில். தொள்>தோளி. வடநாட்டில் டோலி என்கிறாரே, அது இதுதான். தொள்ளப்பட்ட மரத்துண்டில் இன்னொருவரை உட்காரவைத்து இருவரோ, நால்வரோ துக்கிச் செல்வது தோளி எனப்படும், இதுவும் பல்லக்கு போன்றதே. தோளியின் இன்னொரு வகை நீரில் மிதக்கும். அர்த்த பரியங்கத்திற்கும், தோணிக்கும் தண்டு தவிர்த்தால் வேறுபாடில்லை. ஒன்று தோளில் தொக்கப்படுகிறது. இன்னொன்று நீரில் மிதக்கிறது. ஆந்தோணி = அழகிய தோளி என்பதும் பல்லக்கைக் குறிக்கும்.  சிலர் பாடையையும் தண்டுப் பல்லக்குப் போல்  அமைப்பார்.   பல்லக்கைக் குறித்த ஏனைய தமிழ்ச் சொற்களைப் பற்றி https://ta.quora.com/pallakku-enral-enna-atan-veru-tamilp-peyarkalait-tara-mutiyuma என்ற பதிவைப் பார்த்தேன். அதில் கொடுத்த அந்தளம், கச்சு, ஓகம் என்ற சொற்களை எங்கும் நான் கண்டேனில்லை.

பல்லக்கை இந்தக் காலத்தில் புழங்குவது தவறு தான். எப்படி மாந்தனை மாந்தன் இழுக்கும் rikshaw, cycle rikshaw போன்றவை அழிந்தனவோ அதுபோல் பல்லக்கும் அழியவேண்டியது தான். ஆனால் கோயில் புழக்கம் தொடரலாம்  என்றே  இன்னும் நினைக்கிறேன். சப்பரமும் பல்லக்கும் இல்லாமல் கோயில்விழாக்களை  எண்ணிப் பார்க்கமுடியவில்லை.

அன்புடன்,
இராம.கி.



பல்லக்கு - 1

அண்மையில்  மயிலாடுதுறை தருமபுரத்தின் புது ஆதீனகர்த்தர் தவத்திரு. மாசிலாமணி தேசிகர் பல்லக்கின் வழி செய்த  பட்டினநுழைவுகள் (2019 திச.13 இல்  தருமபுரத்திலும்,  2019 திச. 24 இல் வைத்தீசுவரன் கோயிலும், பின் திருநள்ளாறு கோயிலிலும்) பரபரப்பை உண்டாக்கின. பிப் 12 இல் திருப்பனந்தாள் காசிமடத்திலும் இப்படியே தேசிகர் நுழைவாரென்றதும், தி, க, வும், நீலப்புலிகள் இயக்கமும், வி, சி, க. வும் ”மனிதனை மனிதர் பல்லக்கில் தூக்கும் அடிமை முறையில் பட்டின நுழைவு  கூடாது.  மீறினால் கறுப்புக்கொடி காட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்” என்றார். தீவிர எதிர்ப்பை உணர்ந்த தேசிகர் பல்லக்கில் வருவதைத் தவிர்த்து, மாலை 7 மணிக்குச்  சகட்டில்  (car) வந்திறங்க,  காசிமடம்  முத்துக்குமாரத் தம்பிரான் வரவேற்க, பட்டின நுழைவு நடையில் முடிந்தது.   ”பல்லக்கில்லை” என முன்பே அறிவித்ததால், போராட்டக்காரரும் தம் போராட்டத்தை விலக்கி, ஆதீனகருத்தருக்கு நன்றி சொல்லிக் கலைந்து போனார்.

இச்செய்தி படித்தவுடன், எம்மூரில் நெடுநாட்கள் (அகுதோபர் 22 , 1957 இல்) முன்நடந்த  பழம்நிகழ்வு  ஒன்று நினைவுக்கு வந்தது. அதுநாள் வரை (தென்னை  ஓலைத் தட்டிகள் வேய்ந்த,  உலாவகைப்  பேச்சரங்குகளே (touring talkies) எம்மூரில் உண்டு. குறிப்பிட்ட நாளன்று (செங்கல், கற்காரை, ஆசுபெசுடாசால் கட்டப்பட்ட) ’அழகப்பா’ என்ற நிலைத் திரையரங்கம் (permanent theatre) தொடங்கியது, முதல்படமாய் SS Rajendran உடன் தேவிகா அறிமுகமான ”முதலாளி” வெளிவந்தது.  பிற்பகலில் திரண்ட கூட்டத்தில், சரவற்பட்டு  நுழைந்து, வங்கு (bench) நுழைசீட்டு வாங்கி விட்டோம்.  இதே நாளில் எம்மூருக்குச் சிருங்கேரி சாரதா பீடத்துச் சங்கராச்சாரியர் பல்லக்கில் வருகை தந்தார். அந்நாளுக்கு முன் வெள்ளிப் பல்லக்கை நான் பார்த்ததில்லை. ஊர்ப்பெரிய மனிதர் பலரும் அடுத்தூரிலிருந்து சங்கராசாரியர் அமர்ந்த பல்லக்கைத் தூக்கிவந்து எம் சிவன்கோயில் மண்டபத்தில் வைத்தார்.

[ஓர் இடைவிலகல். பொதுவாக காஞ்சி சங்கரருக்கும், சிருங்கேரி சங்கரருக்கும் ஆகாதென்பர். அல்லிருமை (அத்வைத) நெறியாரில் பெரும்பாலோர் சிருங்கேரி நாடுவர். கும்பகோணத்தில் இருந்த சிருங்கேரித் துணைமடமே ஒருகாலத்தில் முரண்டுபிடித்து விலகிப் புதுச்சடங்கு உருவாக்கிக் காஞ்சிக்குக் குடிபெயர்ந்தாரெனச் சிருங்கேரியார் கூறுவார். காஞ்சி தவிர்த்த 4 சங்கர மடங்களில் சாரதா பீடம் சற்று வேறுபட்டது. சிருங்கேரியார் விசயநகரப் பேரரசருக்கு அரசகுருவாய் இருந்தவர். எனவே பல்லக்கு, அணிகலன், பீதாம்பரம் என ஆடம்பரக் காட்சி கோலாகலப் படும்.  எம் ஊருக்கு அன்றுவந்த சாமியார் இற்றைச் சிருங்கேரியாருக்கும் முந்தையர். அவரோடு அற்றைக் காஞ்சி சந்திரசேகரை ஒப்பிட்டால் காஞ்சியார் எளிமையாகவே தெரிவார். இதற்கு மாற்றாய், இருவரின் சீடரைக் காணில், காலஞ்சென்ற செயேந்திரர் இற்றைச் சிருங்கேரியாரையும் விட ஆடம்பரமாயும், அல்லிருமை குறைந்தும் ஆன்மீகமுரைப்பார்.  இற்றைச் சிருங்கேரியாரோ மிக எளிமையானவர், இற்றை விசயேந்திரரை விட, ஆன்மீகக் கூட்டம் அவருக்கு இன்று அதிகமாகும். மரபுப் பரப்புரையும் பொருளுள்ள கதைகளும் அவரிடம் அதிகம் வெளிவரும்.]

1957 அகுதோபர் 22 ஆம் நாள் நிகழ்வை அல்லவா, சொல்லிக் கொண்டிருந்தேன்? மாலை 6 மணி அளவில் வயதான கூட்டம் கோயில் மண்டபத்திலும், இளைஞர் கூட்டம் திரையரங்கிலும் நிரம்பி வழிந்தது. பாத பூசை நடந்து, சாமியாரை வணங்கி, தெளிநீர் (தீர்த்தம்) பெற்று, திருநீறு பூசிய பின்தான் திரையரங்கம் செல்லலாமென எம் தாத்தா சொல்லிவிட்டார். தாத்தா சொல்லை மீற எம் போன்ற சிறுவருக்கு ஆற்றல் போதாது. ஆனாலும் மாலை மணி 6-15 க்குக் கோயில் மண்டபத்தில் இருப்புக் கொள்ளவில்லை.  படம் தொடங்கியிருக்கும் என்ற படபடப்பு வேறு. ஒரு வழியாக முட்டித் திணறிச் சாமியாரிடம் தெளிநீர், திருநீறு வாங்கித் திரையரங்கிற்கு ஓடி நுழைகையில் படத்தில் 10, 15 நுணுத்தங்கள் ஓடிவிட்டன,

ஏரிக் கரையின்மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னக்கொஞ்சம் பாருநீயே!
அன்னம்போல நடைநடந்து சென்றிடும் மயிலே
ஆசைதீர நில்லுகொஞ்சம் பேசுவோம் குயிலே
 
என்ற பாடல் நேரத்தில் (https://www.youtube.com/watch?v=bmGnB9Z3nHg) நாங்கள் நுழைந்தோம். அருமையான வெண்டளை பயிலும் பழம்பாட்டு. கே.வி. மகாதேவன் இசையில் திகட்டும். ’முதலாளி’ படத்திற்கும், “ஏரிக்கரையின் மேலே” பாட்டிற்கும்,  பல்லக்கில்வந்த சிருங்கேரியாருக்குமாக, என் மூளையில் எப்படியோ தொடர்பு பதிந்துவிட்டது.   இனி இப் பதிவிற்கு வருகிறேன். பல்லக்கின் சொற்பிறப்பென்ன? வேறு சொற்கள் யாவை? எது மிகவும் தமிழரிடம் புழங்கியது?



10000 ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம். முல்லைத் தலைவன் கொஞ்சங் கொஞ்சமாய் கோனாகி, அரசனாகிய காலம். ஆநிரைகளைக் கவர்ந்ததோடு, ஆதிக்கம் சேரத் தொடங்கிய காலம். கோனின் அவை கூடியபோது அதுவரை கல்லில் அமர்ந்து பழகிய கோன், மூங்கில், மரத்தில் செய்யப்பட்ட கட்டிலில் அதிகம் உட்காரத் தொடங்கினான், கட்டப்பட்டது கட்டில், முல்லை மந்தைகளை மேய்த்த வண்ணம் ஓரிடம் விட்டு ஓரிடம் இனக்குழு நகர்கையில், கட்டிலும் நகர்ந்தது. அதிகாரம் கூடிய காலத்தில், தான் நடப்பதற்கு மாறாய், கட்டிலில் கோன் உட்கார,  தண்டுகொண்டு அது தூக்கி நகர்த்தப் பட்டது. இனமக்கள் தம் தலைவனைச் சுமப்பது அதிகார வெளிப்பாடே ஆயினும், வருக்கக் குமுகாயத்தில் அது நடந்தது. அரசுகட்டில் எனும் கருத்தீடு இப்படிப் பெரிதாகிக் கொண்டிருந்தது. எல்லா முல்லை நிலத்தாரும் அரசு கட்டில் என்ற பொதுப்பெயரை உருவாக்கிவிடவில்லை. ஒரு சிலரே பொதுப்பெயர் ஏற்படுத்தினார்.

மேலை நாட்டில் அரசுகட்டிலைத் throne என்பார். The oversized, bejeweled chair on which a king or queen sits is called a throne. Monarchs — kings and queens — sit on thrones on special ceremonial occasions, and so do religious figures such as bishops and popes. ஆங்கிலச் சொற்பிறப்பியலில் throne (n.) c. 1200, trone, "the seat of God or a saint in heaven;" c. 1300 as "seat occupied by a sovereign," from Old French trone (12c., Modern French trône), from Latin thronus, from Greek thronos "elevated seat, chair, throne," from suffixed form of PIE root *dher- "to hold firmly, support" (source also of Latin firmus "firm, steadfast, strong, stable," Sanskrit dharma "statute, law"). From late 14c. as a symbol of royal power. Colloquial meaning "toilet" is recorded from 1922. The classical -h- begins to appear in English from late 14c என்று வரையறை செய்வார்.

உ என்பது ஆணிவேர்ச் சொல்லில் உயரம், உங்கம் போன்றவை தோன்றின. இதன்வழி தகர முதலெழுத்தில் பிறந்த துங்கம் என்பது உயர்வைச் சுட்டியது.  (எந்தத் தமிழ் அகரமுதலியையும் தேடிப் பாருங்கள். இது தமிழில்லை எனில், அப்புறம் தமிழைத் தூக்கி ஓரங் கட்டிவிடலாம்.) தூங்குதல் = உயரத்தில் இருந்தல். தூங்கு கட்டில்/ மஞ்சம் = உயரத்தில் உள்ள கட்டில், தூங்கெயில் = உயரத்தில் உள்ள கோட்டை. (வானிலுள்ள கோட்டை என்று பல உரைகாரர் நம்மை நெடுநாள் புரியவிடாது செய்துவிட்டார் (தூங்கெயில் எனும்  என் கட்டுரைத் தொடரைத் தேடிப்படியுங்கள்.  முதற்கட்டுரையை மட்டும் நானிங்கு அடையாளங் காட்டுகிறேன். http://valavu.blogspot.com/2018/10/1.html. மொத்தம் 7 பகுதிகள் கொண்டது.)  துங்கம் என்பது உயர்ந்த பீடம். திருவோலக்க மண்டபத்தில் அரசன் அமரும் பீடம் உயர்ந்தேயிருக்கும்.  துங்கத்திற்கும் throne க்கும் உள்ள உறவு வியக்கற்பாலது. தமிழிய மொழிக்ளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் நான் உறவு சொல்லிக்கொண்டே இருக்கிறேன். கேட்கத்தான் பலரும் தயங்குகிறார். சங்கதத்திலும் இச்சொல் உண்டு. तुङ्ग (m.tuGga) - துங்கம்,

வழக்கம்போல் ஆய்வுக் குறைச்சலில் இந்தியச் சொற்களுக்கு சங்கதமே அடிப்படை என ஆங்கிலச் சொற்பிறப்பியலார் சாதிப்பார். நான் அப்படிச் சொல்லேன்.  தமிழைப் போல் பீடமும் சங்கதத்தில் உண்டு. पीठ (n.pITha) - பீடம், भद्रपीठ (n.bhadrapITha) - பத்ரபீடம். பத்ரம் கண்டு வியக்க வேண்டாம்  தமிழில் ”அரசன் பட்டமேறினான்” என்கிறோமே, அதுவும் பீடப் பொருள் கொள்ளும். பட்டம் சங்கதத்தில் பத்ரமாகும். பத்ரபீடம் என்பது இரட்டைக் கிளவி.  गर्त (m.garta)- கருத்தம், என்பது ”கருத்தா அவையில் அமருமிடம்”. கருவறையில் இருப்பவர் கருத்தா. இறைவனும் மன்னனும் அக்காலத்தில் ஒன்று போல் கருதப்பட்டார். கருவறை போல் கருத்தம் - centre. இது தவிர அமருமிடம்  அமல்->அவல்- என்ற தமிழ்ப் பகுதி, அவசனம்>ஆசனம் என இருபிறப்பியைத் தோற்றுவிக்கும். அதன்வழி सिंहासन (n.siMhAsana) - சிம்மாசனம்,  सिंहविष्टर (siMhaviSTara) - சிம்மவிஸ்தாரம்,  वरासन (n.varAsana) வராசனம், भद्रासन (n.bhadrAsana) - பத்ராசனம், नृपासन (n.nRpAsana) நிர்ப்பாசனம்,  राजासन (n. rAjAsana) அரசாசனம் என்ற சொற்கள் சங்கதத்தில் எழும்,  இவை எல்லாமே கூட்டுச்சொற்கள்.

இனிக் கட்டலை யாக்கலென்றுந் தமிழில்  சொல்வர். (காஞ்சியின் அகத்துக் கரும்பருத்தி யாக்கும் தீம்புனலூர - அகம்.156, 6-7)  இயத்தலில் (=பொருத்தல்) விளைந்தது யாத்தல்  யாழ்>யாழ்க்கை> யாட்கை> யாக்கை = எலும்பு, தசை, நார் எனக் கட்டப்பெற்ற உடல். (மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு - குறள் 948; வடிந்த யாக்கையன் -புறம் 180-6) செய்யுள்கட்டப் பயனாவது யாப்பிலக்கணம்.  (மொழிபெயர்த்த அதர்ப்பட யாத்தல். தொல்.பொருள்.652); யகரமுதற் சொற்களோடு சகர முன்னொட்டைப் பலுக்கிச் சொல்வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

யாக்கை> சியாக்கை>சேக்கை ஆனது. சே(ர்)க்கை என்றாலும் கட்டிலே. (”நுரைமுகந்தன்ன மென்பூஞ் சேக்கை - புறம் 50). இதேசொல் தங்குமிடம் என்ற பொருளிலும்(புற்றடங்கு அரவில் செற்றச் சேக்கை - மணிமே. 4:117), பறவைக்கூடு என்ற பொருளிலும் (மாலும் அயனும் ஊரும் படர்சிறைப் புண்மாகம் இகந்து வந்திருக்கும் சேக்கை எனவும் - பெரியபு. சண்டே.4:5) வலை எனும் பொருளிலும் (புளிஞர் சேக்கைக் கோழிபோல் குறைந்து= சீவக. 449)  பயின்றுள்ளது. சே(ர்)க்கை செய்கை என்றும் சொல்லப்படும். இயற்கை அல்லாது  செய்யப்பட்டது செயற்கை.  சேக்கையை மஞ்சம் என்றும் தமிழில் குறிப்பர். मञ्च (m.maJca) மஞ்சம் எனும் சங்கதப் புழக்கம் அப்படியே தமிழ் போல் அமையும். தமிழிலிருந்து சங்கதம் புழங்கிய சொற்கள் மிகப்பல.

அன்புடன்,
இராம.கி.

Monday, February 24, 2020

பாமினி

கீழே வருவது ஒரு தமிழறிஞருக்கு 2016 சூனில் அனுப்பியது. இது இன்றும் பொருதமுற்றதாய் அமைகிறது. நான் தனிப்பட்ட பெயர்களை இந்தப் பொது வேண்டுகோளில்  மறைத்துள்ளேன். கீழே வரும் வேண்டுகோளைப் பலரும் அருள்கூர்ந்து பரப்புங்கள்.
----------------------
அன்பிற்குரிய நண்பருக்கு,

இந்த அழைப்பை அனுப்பிய -------------------- பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,யைத் தொடர்புகொண்டு ஒரு கருத்தைத் தாங்கள் சொல்லமுடியுமா? கூடவே உங்கள் தொடர்புகளைக் கொண்டு மற்ற தமிழ்ப் பேராசிரியருக்கும் அனுப்பமுடியுமா? இச்செய்தி தமிழ்த்துறைகள் எங்கும் பரவட்டும். கூடவே தமிழர் புழங்கும் மடற் குழுக்களுக்கும் அனுப்புங்கள். நமக்கு ஒரு பொதுப்பொறுப்பு இருக்கிறது. அதைக் கவனியாதிருக்கிறோம். 

தமிழ்க்கணிமை என்பது இன்றைக்குப் பெருந்தொலைவு வந்துவிட்டது. கடந்த 10/15  ஆண்டுகளாகவே எண்மடைக் (8 bit) குறியீடுகள் குறைந்து நம்மிற் பலரும் இப்பொழுது 16 மடைக் (16 bit) குறியீடுகளுக்கு வந்து விட்டோம். அதே நேரத்தில் தமிழரில் ஒரு பகுதியினர் இன்னும் 8 மடைக் குறியேற்றங்களிலேயே தேங்கிப் போய் நிற்கிறார். [இத்தனைக்கும், ”தமிழாவணங்களில் ஒருங்குறியோ, அனைத்தெழுத்துக் குறியேற்றமோ -TACE- தான் இனிப் பழக வேண்டும்” என்று தமிழக அரசே 2009 இல் ஓர் அரசாணை கொண்டு வந்தது.] குறிப்பாக, எப்படி அரசின் தலைமைச் செயலகத்தில் அதன் அதிகாரிகளே அரசாணையைத் தூக்கியெறிந்து “வானவில்” என்னும் தனியார் குறியீட்டைத் தொடர்ந்து பழகுகிறாரோ, அதே போல அரசின் ஆதரவு பெற்ற தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளும் அரசாணையைக் கடாசித் தங்களின் ”உசிதம்” போல் இயங்குகின்றன. தமிழ்த்துறையினர் நடத்தும் ஆய்வரங்க அழைப்புகளில், ...................................... பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் இந்த ஆய்வரங்கத்தையுஞ் சேர்த்து, “பாமினி எழுத்துருவில்” கட்டுரை அனுப்பச்சொல்லியே தொடர்ந்து கேட்கப்படுகிறது.
-------------------------------------
ஆய்வுக் கட்டுரை பாமினி எழுத்துருவில் 5 பக்கங்களுக்கு மிகாமல் 1.5 இடைவெளியிட்டு எதிர்வரும் ......................... ஆம் நாளுக்குள் கீழ் வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அமையலாம்.
---------------------------------------
(இதுபோன்ற அழைப்புக்கள் பற்றி என்னிடம் 2, 3 நிகழ்ச்சி விவரிப்புக்கள் உள்ளன. அவற்றை விவரித்தால் மடலின் நீளங்கூடும். தவிர்க்கிறேன். தலைமைச் செயலகத்தின் தட்டச்சர்களே அரசின் மொழிக் கொள்கையை நிருணயிப்பதாய் நான் சொல்வதுண்டு. அதே போல் DTP கூடங்களும், சிறு சிறு அச்சுக் கூடங்களுமே நம்மூர்த் தமிழ்த்துறைகளின் ஆவண வெளிப் பாட்டை வழி நடத்துகின்றனவோ என்றும் எனக்குத் தோன்றுகிறது. பொள்ளிகைகளை (policies) யார் நிருணயிக்கிறார் என்பதில், நுட்பியலைக் கவனியாத தமிழர்க்கு, எப்பொழுதுமே சிக்கல் வந்துசேரும்.)

இப்படித் தமிழ்த் துறைகளில் நடப்பது சோம்பலாலா? அறியாமையாலா? விதண்டா வாதத்தாலா? – என்று எம்போன்ற ஆர்வலருக்குப் புரிவதில்லை. தமிழ்க் கணிமையின் போக்கையறிந்து தான் இவர் செயற்படுகிறாரா? அன்றி “ஏதோவொரு நுட்பியற் கல்லாமையில்” இவரிருக்கிறாரா? – என்றுந் தோன்றுகிறது. என் மேற் சினங் கொள்ள வேண்டாம். அருள்கூர்ந்து இந்நிலையை உள்ளமையோடு (realistic) அறிந்து அதற்கிணங்கத் தமிழ்த் துறையினர் நடந்து கொண்டால் தமிழ்க் கணிமையில் எவ்வளவோ செய்யலாம். வெறுமே அரசை மட்டுங் குறை கூறிப் பயனில்லை. ஒரு தேரையிழுக்க, ஊரே திரண்டு வடம் பிடிக்கவேண்டும். ”இச் சணற்கயிற்றை நான் பிடிப்பேன். அந் நூற்கயிற்றை நீ பிடி. எல்லோரும் இதுபோற் செய்யுங்கள், தேரை இழுத்துவிடலாம்” என்பது முற்றிலும் பகற்கனவு.

பாமினி எழுத்துரு என்பது ஓர் எண்மடைக் குறியீடு. தொடக்க காலத்தில் அது ஈழத்தமிழரால் செய்யப்பட்டது. இனப் படுகொலையால் உலகெங்கும் சிதறிப் போன ஈழத்தமிழர் தங்களுக்குள் செய்தி பரிமாறிக் கொள்ள உருவான எழுத்துரு இதுவாகும். தமிழ்க் கணிமை நுட்பம் தமிழரின் ஒரு சாராரால் மட்டும் எழுந்துவிடவில்லை. மின்னஞ்சல் பரிமாற்றத்தேவை (demand) ஈழத்தமிழருளெழுந்து, இத்தகைய அளிப்பை (supply) உருவாக்கித் தமிழ்க்கணிமை நோக்கி நகரவைத்தது. ஏதோ நல்ல நேரம் பார்த்து இந் நுட்பியல் உருவாகி விடவில்லை. ஒரு பக்கம் பேரழிவேற்பட்டு, கொடுமை நடந்த போது, அதிலிருந்து மீள, உறவுகளை ஒட்ட வைக்க, இத்தமிழ்க் கணிமை உருவாயிற்று. உலகின் பல்வேறு போர்களாலேற்பட்ட அறிவியல்/நுட்பியல் வளர்ச்சி போலவே, ஈழப்போரின் குழந்தையாய் தமிழ்க்கணிமை கிடைத்தது இதைத் தமிழர் யாரும் மறந்துவிடக் கூடாது. மொத்தத்தில் பாமினி எழுத்துருவிற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருந்தது. உண்மை தான். ஆனாலும்.... 

அந்தக்காலத்தில் மற்றதமிழர் வாளாயிருக்கவில்லை. பல்வேறு எழுத்துருக்கள் எழுந்தன. முடிவில் 1997-99 இல் பெரும்பாலான உலகத்தமிழர் தகுதரக் (TSCII) குறியீட்டிலும், ஈழத்தமிழர் பாமினிக் குறியீட்டிலும், தமிழகத் தமிழர் தடுமாறியும் இருந்தார். பின் தமிழகத் தரமாய் TAB/TAM எழுந்தது. தமிழகத் தாளிகைகளும், பல்வேறு வெளியீட்டாளரும் 100 வகை எண்மடைக் குறியீடுகளைப் புழங்கிக் கொண்டிருந்தார். இணையமெங்கும் ஒரே குழப்பம். 100 வித எழுத்துருக்களைக் கணியிலிறக்கிப் பதிவு செய்ய வேண்டி யிருந்தது. கணிக்குள்/ இணையத்துள் ஒரு ”தமிழ்” இல்லை. ஓராயிரம் ”தமிழ்”கள் இருந்தன. இணையத்தில் எதையும் உடனே படிக்க, எழுத, படியெடுக்க, பரிமாற, திருத்த, சேமிக்க முடியாத நிலையிலிருந்தோம். நம்முடைய ஒற்றுமைக் குறைச்சல் தான் உலகந் தெரிந்தது ஆயிற்றே?

இதற்கிடையில் 1987க்கு அருகில் CDAC நிறுவனஞ் செய்த ISCII குறியீட்டை இந்திய அரசு ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பி வைத்தது. தமிழுக்கு ஒவ்வாத ISCII குறியீட்டை அடிப்படையாகக் கொண்டே 16 மடை ஒருங்குறியும் செய்யப்பட்டது. நாளாவட்டத்தில் உலகத் தர நிறுவனமான ISO வில், அனைத்து நாட்டுப் பங்களிப்புடன், தமிழுக்கான ஏற்பையும், வணிக வல்லாண்மை பெற்ற ஒருங்குறிச் சேர்த்தியம் பெற்றது. வெறுமே உணர்ச்சி வயப்பட்டுப் புலம்புவதால் நாம் ஒருங்குறியை ஒதுக்க முடியாது.  குறைப் பட்டுப் போனாலும், உலகெங்கும் நூற்றுக்கணக்கான எழுத்து வரிசைகளுக்குப் பரவிய ஒருங்குறியேற்றத்தை வேறுவழி இன்றி நாம் ஏற்கவேண்டியுள்ளது. இருந்தாலும் நம் அச்சுத் தொழில் காரணமாய் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

ஒரு 10 ஆண்டுகளுக்கு முன் தமிழர் தூங்காது இருந்திருந்தால், வெறுமே கட்சிச்சண்டை போட்டு உள்ளூரில் தடுமாறாமல் இருந்திருந்தால், இன்றைக்கு அனைத்தெழுத்துக் குறியேற்றத்தை ஒருங்குறிச் சேர்த்தியமே ஏற்றுக் கொண்டிருந்திருக்கும். நம் கணித்திரைகளில் ஏற்படும் மீள்தருகைச் சிக்கலை (rendering problem) என்றோ முற்று முழுதாகத் தீர்த்திருக்கலாம். எல்லாம் நடந்து முடிந்தவை. இப்பொழுது கணி வழிப் பரிமாற்றத்திற்கு ஒருங்குறியையும், அச்சாவணப் பயன்பாட்டிற்கு அ.இ.கு (அனைத்தெழுத்துக் குறியேற்றம்) பயன்படுத்துவதும் இன்றியமையாத தேவைகள் இவற்றை மறந்து, தமிழரிற் கணிசமானோர் இன்னமும் எண்மடைக் குறியேற்றமே புழங்கிக்கொண்டிருந்தால் நம் முன்னேற்றம் எப்பொழுதும் தள்ளித் தள்ளியே வந்துகொண்டிருக்கும். எப்பொழுதும் பின்தங்கியே நாம் இருப்போம். என்றுமே முன்னிலைக்கு வரமாட்டோம். (நான் எண்மடைக் குறியேற்றமே பயிலுவேன் நீங்கள் NHM Converter ஐ வைத்து மாற்றிக் கொள்ளுங்கள் என்பது ஒரு வகையான சண்டித்தனம்.)

நண்பர்களே! அருள்கூர்ந்து மாறுங்கள். ஊர் கூடித் தேரிழுப்போம். இனி எந்தத் தமிழ்த்துறை ஆய்வரங்கும் பாமினி எழுத்துருவில் கட்டுரை கேட்காதிருக்கட்டும். தமிழின் எதிர்காலத்திற்கும் வழிசெய்வோம்.  . 

அன்புடன்,
இராம.கி.

Friday, February 21, 2020

சில கோயிற்கட்டுமானச் சொற்கள்

அண்மையில் திரு. பத்ரி சேசாத்ரியின் வலைப்பக்கத்தில் ஒரு திராவிடக் கோயிலின் சில கட்டுமானச் சொற்களைப் பார்த்தேன். வியந்துபோனேன். சற்று ஆழப்போனால்  எல்லாமே தமிழாக அவை இருந்தன. இருப்பினும் அவை ”சங்கதக் கலைச்சொற்களே” என்று அங்கு மிரட்டியிருந்தார். ”தமிழில் இவையில்லையா?” என்று சிலர் கேட்டதற்கும் உருப்படியான விடை வர வில்லை. கோயில்களில் தமிழ் என்று சொன்னாலே இப்படித்தான் மிரட்டல் வந்து சேர்கிறது. அது மனத்தைச் சற்று வாட்டுகிறது. அங்கு கொடுத்திருந்த 16 சொற்களையும் நான் எடுத்துக்கொண்டு ஆய்ந்து பார்த்தேன். என் முடிவுகள் வேறு. உங்கள் பார்வைக்கு இங்கு தருகிறேன், அப் பதிவில் கொடுத்திருந்த ஆங்கில விளக்கத்தை அப்படியே தருகிறேன். தமிழ் விளக்கம் மட்டுமே என்னுடையது.


 
1)Sopana Marga: The staircase to enter the Garbha Griha. South Indian Temple Stair cases are flanked on both sides with Yali (Vyala) Figures sopāna (n.) (perhaps contracted fr. sa-+ upāyana-) stairs, steps, a staircase, ladder to (genitive case or compound) 

படிப்பதற்கு மேலே இருப்பது  ஏதோ சங்கதச்சொல் என்று நம்மை மிரட்டலாம்  உண்மையில் ”படிக்கட்டு வழி” என்று பொருள் கொள்ளும் சற்று ஆய்ந்தால் இச்சொல்லின் வேர் தமிழில் இருப்பது புரிந்துவிடும்.  ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குப் படிக்கட்டின் வழி நாம் உயர்கிறோம். உயர்தல், உப்புதல் (=வீங்குதல், பருத்தல், பொங்குதல்) எனப்படும். உப்புசம் = வயிறு உப்பியிருப்பது. உப்பட்டி = ஒன்றின்மேல் ஒன்றுவைத்து உயர்த்திக் கட்டுவது. உப்பரம் = வயிற்றுப் பொருமல். உப்பரி = உயர்தல், மேம்படல், உப்பரிகை = மேல்மாடம். உப்பல் = ஊதிப் பருத்தல். உப்பு = குறிப்பிட்ட salt செறிவு கொண்ட நீர் ஆவியாகிப் பொங்கி உயர்ந்த பிறகு அது படிகமாய் விளைகிறது . அதை உப்பென்பார்.  உப்பனாறு = ஓடி வரும் ஆற்றை எதிர்த்து கடல்நீர் உப்பி உட்புகுந்து நன்னீரும் கடல்நீரும் கலப்பது உப்பனாறு எனப்படும். உப்பாரக்காரன் =. சுவருக்கும் மேல் சுண்ணாம்பு மேற்பூச்சு பூசுபவன், உப்பிதம் = மீள மீள உயர்ந்து இறங்கும் ஒரு வகையான கூத்து. உப்புமா = மாவை நீரில் அவித்ததால் உப்பி எழுந்த மா.

உப்பானி = ஒருவனை தன் முதுகின் மேல் இன்னொருவரை உயரத் தூக்குபவன். உப்பானம் = ஒருவன் இன்னொருவனை உயரத் தூக்கும் முறை.  இதற்கும் salt உக்கும் எந்தத் தொடர்புமில்லை.  உப்பு க்கட்டுதல்/ க்கொள்ளுதல்/ ச்சுமத்தல்/  த்தூக்குதல்= விளையாட்டில் வென்றவனை தோற்றவன் முதுகில் தூக்குதல், சிறுவர் விளையாட்டில் குழந்தையை முதுகில் சுமப்பதும் இப்படியே சொல்லப் படும்.  தவிர, சடுகுடு விளையாட்டில் மணலை உயரத் தூக்கிக் கட்டுதலையும் உப்புக்கட்டுதல் என்பார். ஆங்கிலத்தில் up என்கிறோமே, அதற்கும் இதற்கும் பெருந்தொடர்பு உண்டு. அதைப் பேசத்தொடங்கினால் பலரும் ஏற்கமறுப்பார். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது என்று பலகாலம் சொல்கிறேன். Nostratic studies இல் இது வரும்.

உப்பால்>அப்பால் = beyond. உப்பானம்> ஒப்பானம்>ஓப்பானமாய்த் திரியும். இதுவும் உயரச் செய்வது என்ற பொருள் கொள்ளும். சகர முன்னொட்டு சங்கதத்தில் மங்கலப் பொருள் கொள்ளும்.. ச+ஒப்பானம் = சோப்பானம்> சோபானமாகும். மூலம் தெரியாமல் சோபானம் என்பதைத் தமிழில் மீண்டும் கடன்வாங்குவார். படிக்கட்டு என்பதே இதன் பொருள். அதுபோல் மறுகி மறுகி (திரும்பித் திரும்பி)க் கொண்டே இருக்கும் வழி மறுகு>மாறுகு> மார்க்கு>மார்க்கமாகிச் சங்கதத்தில் செல்லும். பெருவழி என்று பொருள். சோபன மார்க்கம் = படிக்கட்டுப் பெருவழி

2)Upa Pitha: Sub Base of the Garbha Griha உவ பீடம் (ஒன்றின் உள்நிற்பது உள்வு> உள்வம். இது உவ>upa என்று சங்கதத்தில் திரியும்.  பீடம் தன் மகரத்தைத் தொலைத்து pitha என்று திரியும். பீடு = மேன்மை  மேலான தன்மை. 

3)Adhishthana: Base to support the wall of Garbha Griha தமிழ் ”அடித்தானம்” (அடியில் உள்ள தானம்) Adhishthana ஆகத் திரிந்து நம்மை மருட்டுகிறது

4)Simhaavari: Band of Lions சிங்கவரி. சிகை கொண்டது சிகையம்>சிங்கம். அது முற்றிலும் தமிழே. 

5)Paada: Wall of Garbha Griha பாதம். இதற்கு விளக்கம் வேண்டாம். படிவது>பதிவது பாதம்

6)Koshtha: Miniature Temples on external wall of Garbha Griha with Avataras of Main deity கோட்டம். கோட்டம் என்பது இறைப்படிமம் உள்ளது. சிலம்பைப் படித்தால் பூம்புகாரில் உள்ள தெய்வக் கோட்டங்கள் பலவும் புரியும்.

7)Prastara: Area between pillars & Roof – Entablature It is a horizontal superstructure of bands and moldings above column capitals, sometimes functions as a parapet of a story. Prastara is both functional and decorative element located above the architrave of the temple. இதைப்  பட்டடை எனலாம்.  ஒரு 16 கால் மண்டபத்திற்காக 4 வரிசையில் (ஒவ்வொரு வரிசையிலும் 4) தூண்கள் இருப்பதாய்க் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது முதல் வரிசையில் 4 தூண்களின் மேல் ஒரு கல் உத்தரத்தைப் (கற் கட்டையை) படுக்கை வாக்கில் வைப்பதாய்க் கொள்ளுங்கள். 4 வரிசைக்கும் இதுபோல் 4 உத்தரங்கள்  வந்து சேரும். (உத்தத்தில் வைப்பது உத்தரம். இதுவும் தமிழே.) .இப்போது  4 உத்தரங்களின் மேல் கூரை உத்தரங்களை இவற்றின் குறுக்குவாட்டில் அடுக்கலாம். கூரைக்கும், தூண்களுக்கும் நடுவில் இடைப்படும் உத்தரமாய்>படூத்தரமாய்  அமைவதைச் சங்கத ஒலிப்பில் படத்தரம்> படஸ்தர>பரஸ்தர>prastara என்று சொல்வர். (வடக்கே போகப் போக நம் ழகரம்/ளகரம் டகரமாகும், பின் ரகரமாகும்.) படூத்தரம் என்பது நல்ல தமிழில் பட்டடை என்றும் சொல்லப்படும்.  கூரை தூண்களில் மேல் பட்ட வகையில் அடைப்பது பட்டடை.  நல்ல தமிழ் எப்படியெல்லாம் உருமாறிக் கிடக்கிறது என்று பாருங்கள்.   

8)Vyaalaavari: Band of Vyaali figures யாழி என்ற தமிழ்ச்சொல்லை வியால என்று சங்கதத்தில் ஆக்குவர். விளக்கம் வேண்டுவோர் https://valavu.blogspot.com/2018/08/blog-post_20.html என்ற இடுகையைப் படியுங்கள்  யாழியால் ஆன வரி = யாழிவரி/

9)Haara: Parapet looking like the Necklace ஆரம். இதற்கு விளக்கம் வேண்டாம்.

10)Koota: Square Miniature shrine on Haara region கூடம். இதற்கும் விளக்கம் வேண்டாம்

11)Shaala: Rectangular Miniature Shrine on Haara Region சாலை இதற்கும் விளக்கம்  வேண்டாம்.

12)Tala: Storeys. Eka Tala (1 Storey), Dwitala (2 Storey), Tritala (3 Storey) தளம். இதற்கும் விளக்கம் வேண்டாம்.

13)Tala Vahana: Vahana of Main deity on the Top Storey வாகனம் என்பது நம்மூர் வேயத்தில் உருவான சொல். http://valavu.blogspot.com/2013/10/blog-post.html வள்> வளை>வயை>வையை>வையம் என்பது சிலம்பிற் பயிலப்படுகிறது. 50 ஆண்டுகள் முன் நாட்டுப்புறங்களிற் கூட்டு வண்டியைக் குறித்த இச்சொல் இன்று வழக்கற்றுப் போனது. நம் ’வையமும்’ சங்கத ’வாகனமும்’ பொருளாலும், ஒலிப்பாலும் உறவுற்றவை. வாகனத்தையொட்டிய இந்தை யிரோப்பியச் சொற்கள் (1520s, from Middle Dutch wagen, waghen, from Proto-Germanic *wagnaz (cf. Old English wægn, Modern English wain, Old Saxon and Old High German wagan, Old Norse vagn, Old Frisian wein, German Wagen), from PIE *woghnos, from *wegh- "to carry, to move" (cf. Sanskrit vahanam "vessel, ship," Greek okhos, Latin vehiculum, Old Church Slavonic vozu "carriage, chariot," Russian povozka, Lithuanian vazis "a small sledge," Old Irish fen, Welsh gwain "carriage, cart;" see weigh) பலவும் இருக்கின்றன. அடிப்படையில் இழுப்பதற்கே இவ்வாகனங்கள் பயன்பட்டன. இழுக்கும் வாகனங்கள் ஊர்திகள் என்றுஞ் சொல்லப்பெறும்.

பின்னால் கோயில் விழாக்களில் இழுப்பதற்கு மட்டுமின்றித் தூக்குவதற்கும் ”வாகனங்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்தினர். சகடை, வண்டி, தேர் போன்ற இழுப்பு வாகனங்களும், எருது, அரிமா, மூஞ்சூறு, மயில், கருடன், அனுமார், அன்னம் போன்ற தூக்கு வாகனங்களுமாய்ப் பல்லுருக் கொள்ளும். தூக்குவாகனங்களின் அடியில் மூங்கில்களைக் கட்டிக் கோயில் விழாக்களிற் ”பற்றியோர்” தோள்மேல் தூக்கிப் போவர். 6”, 8” விட்டங்கொண்ட முரட்டு மூங்கில்களை இப்போது நம்மூர்ப் பயிரிற் சாத்தாரமாய்ப் பார்ப்பதே இயலாது. (இத்தகை முரட்டு மூங்கில்கள் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளைகின்றன, தவிர, சில கோயில்களில் பழம்பொருளாய் இருக்கின்றன. முரட்டு மூங்கில்களின் வளர்ப்பில் தமிழக அரசு கவனஞ் செலுத்த வேண்டும். மரபு சார்ந்த ஒரு பொருள் நம் கண்முன் அழிந்து கொண்டுள்ளது. கூர்ந்து கவனித்தால் வாகனச் சொல்லாட்சிகளும், கட்டுமானங்களும் கோயில் கட்டமைப் பொறியியல் (structural engineering) படியாற்றத்தில் (application) வெளிப்படும்.   Tala Vahana என்பதைத் தள வையம் என்று சொல்லலாம்

14)Griva: Neck of the Vimana குவிரம்.  இதையும்  http://valavu.blogspot.com/2013/10/blog-post.html என்ற கட்டுரையில் அறிந்துகொள்ளலாம்.

15)Kudu: A motif that appears like Gavaksha (also called Naasi) – An horse shoe shaped Arch கூடு. இதற்கும் விளக்கம் வேண்டாம்

16)Shikhara: The main tower of the Vimana சிகரம் = சிகையென உயர்ந்து நிற்பது சிகரம். எண்சாண் உடம்பிற்குச் சிகையே பெருந்தானம் (>ப்ரதானம்)

கொஞ்சம் ஆய்ந்தால், மேலே கோயிலின் கட்டுமானச் சொற்களாய் காட்டுபவற்றில் உள்ளடங்கிய தமிழ்ச்சொற்களைக் கண்டுவிடலாம்.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர ஆய்வதே மெய். கோயில் தமிழனது. கட்டியவரும் தமிழரே, அதன் கட்டுமானச் சொற்கள் தமிழல்லாது வேறு எப்படி இருக்கும்?

அன்புடன்,
இராம.கி..     

Tuesday, February 18, 2020

IT terms

அண்மையில் திரு.கோகிலன் சச்சிதானந்தன் உள்ளுறும நுட்பியல் (information technology) தொடர்பாய்ச் சில சொற்களின் தமிழாக்கம் கேட்டிருந்தார். என் முயற்சி இங்கே.

IT Security - உ, நு. சேமுறுதி .
Information System Security - உள்ளுருமக் கட்டகச் சேமுறுதி
Firewall - எரிதடுப்புச் சுவர்
Encryption - கரப்பீடு
Decryption - கரப்பேடு
Cryptogram - கரப்புக்கிறுவம்
Cryptography - கரப்புக்கிறுவியல்
Crypto Algorithm - கரப்புச் செயல்நிரல்
Machine Learning - எந்திரவழிக் கற்றல்
Artificial Intelligence - செய் தெள்ளிகை (knowledge = ஞானம்; wisdom = விழிப்பம்; prudence = முனைப்பு; intelligence = அறிவு)
Bio-intelligence - வாழி் அறிவு
Bio-metric - வாழி் மத்திகை
Thermal Image Identifier - தெறும் அமல்கு ஆளத்தி
Face Recognition - முகங்காணல்
Voice Recognition - குரல்காணல்
Intrusion Prevention System - நுழைத் தடுப்புக் கட்டகம்
Hash Algorithm - கட்டச் செயல்நிரலி
Remote Code Execution - தொலை குறிச்செயலாக்கம்
Remotely Controlled Executable - தொலையில் கட்டுறுத்திச் செயலாக்குவது
Remote Peer - தொலைப் பெரியர்
Desktop Computer - மேசைக் கணி
Laptop Computer - மடிக்கணி
Tablets - தட்டைக் கணி
Smart Mobiles - சூடிகை நகரி
Smart Phones - சூடிகை பேசி
Mobile Computing - நகரிக் கணிமை
Server Computers - சேவைக் கணிகள்
High Performance Computing (HPC) Clusters - உயர்திறனாற்றுக் கணிமைக் கொத்துகள்
Wireless Access Points - கம்பியில் அணுக்கப் புள்ளிகள்
Video Conferencing System - விழியக்கூடல் கட்டகம்
Optic Fibre - ஒளி நார்
Virtual Private Network (VPN) - மெய்நிகர் தன்னுமைப் பிணையம்
Multi-Protocol Layer Switching (MPLS) - மல்கு-செய்முறை இழைச் சொடுக்கல் (ம.செ.இ,சொ.)
Protocols - செய்முறைகள்
Internet Protocol (IP) Address - இணையச் செய்முறை அடுவரி
Domain Naming System (DNS) - கொற்றப் பெயரிடும் கட்டகம்
IP Routing - இ.செ. வழிதரல்
IP Subnet - இ.செ. உட்கொத்து
Authorization - ஆணத்தி
Authentication - சாத்துறுதி
Front End - முன்னந்தம்
Back End - பின்னந்தம்
Mid Tier / Middle Tier - நடுத் தளம்
Data Base - தரவடி
rs
29
18
Share

Monday, February 17, 2020

browser

இந்த நிரலியைத் தமிழில் ”உலாவி அல்லது மேலோடி” என்றழைப்பது (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF) பலருக்கும் பழகியிருக்கலாம். ஆங்கிலத்தில் browse (v.) என்ற சொல்லிற்கு mid-15c., brousen, "feed on buds, eat leaves or twigs from" trees or bushes, from Old French broster "to sprout, bud," from brost "young shoot, twig, green food fit for cattle or deer," probably from Proto-Germanic *brust- "bud, shoot," from PIE *bhreus- "to swell, sprout" (see breast (n.)). It lost its -t in English perhaps on the mistaken notion that the letter was a past participle inflection. Figurative extension to "peruse" (books) is 1870s, American English” என்று வரையறை சொல்வர்.

வரையறை படித்தால் தமிழில் நாம் பயிலும் ”உலாவி” பொருத்தமாய்த் தெரியவில்லை. ஒரு தோட்டத்தில் இருக்கும் வெவ்வேறு செடிகள், மரங்கள், கொடிகளிலிருக்கும் தேனைத் தேடிப் போய் வெவ்வேறு மலர்களின் மேல் அமர்ந்து உறிஞ்சிய தேனீ, தேனடையில் கொண்டுவந்து தேனைச் சேர்ப்பது போல் இச்செயல் நிரலி வேலைசெய்கிறது. ஒப்புமையின் முழுமையைச் சற்று ஓர்ந்து பாருங்கள். செயல்நிரலி என்பது தேனீக்கு ஒப்புமை. நாம் தேடும் உள்ளுருமம் (information) என்பது தேனுக்கு ஒப்புமை உள்ளுருமம் கிடைக்கும் இடங்கள் செடி, மரங்கள், கொடிகளிற் பொலிந்து இருக்கும் மலர்களுக்கு ஒப்புமை. மலர்கள், மட்டுமின்றி, மொட்டுகள், இலைகள், கொட்டைகளென பலவற்றிற்கும் பொதுப்பெயர் ”பொலிவுகள்” என்பதாகும்.

browser என்ற நிரலிக்கு இணையாக, வெறுமே உலாவி/மேலோடி என்பது தட்டையாக அழைப்பதாய் எனக்குத் தென்படுகிறது. தேன்சேகரிப்பு ஒப்புமை எனக்கு உலாவியில் கிடைக்கவில்லை. ஆங்கிலச் சொல்லிற்கு இணையான ஆழ்ந்த பொருள் வேண்டுமெனில் நம்மூரின் பயிரியலுக்குள் வரவேண்டும். .புல்>பொல்>பொலி. பொலிதல் = செழித்தல். பெருகல், மிகுதல், விளங்கல், வயலில் விளைந்து கிடக்கும் பயிர்மணிகளைப் பொலி என்பது நம் ஊராரின் வழக்கம். இயற்கையில் விளைந்தோ, செயற்கை நுட்பங்களை இயற்கையோடு சேர்த்து விளைவிக்கப்பட்டோ கிடைக்கும் பொருள்கள் எல்லாம் நமக்குப் ”பொலிவுகளே”. இது ”விளைவுகள்” என்ற சொல்லின் இன்னொரு வடிவம். பொலிவு = மலர்ச்சி, அழகு, செழிப்பு, பருமை, மிகுதி,

அறுவடையன்று அறுத்த கூலமணிகளை அம்பாரமாய்க் குவித்துவைத்து அளந்துபோடும் போது ”பொலியோ பொலி” எனக் கூக்குரலிடுவர். தூற்றாத நெற்குவியல் பொலி எனப்படும். விளைவின் அளவும் பொலி எனப்படும். கீழேவரும் இலக்கியக் காட்டுகளையும் பாருங்கள்.

”பொலியு மால்வரை” - தேவார 236.8
”கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கை” - மதுரைக்காஞ்சி 171
மார்பில் ....... பொலிந்த சாந்தமொடு - பதிற்றுப்பத்து, 88, 30
“பொலிந்த வருந்தவத்தோற்கே” புறநானூறு. 1
”பொலிக, பொலிக, பொலிக” திவ். திருவாய். 5,2,1
வழிவழி சிறந்து பொலிமின் தொல் பொ.422.
”பொலிந்த தாமினிபோரென லோடும்” - கம்பரா. தானை. காண் 2 

புணர்ச்சிச் சினைக்குப் பயன்படும் பெருத்த காளை/எருது/கடா, பொலி காளை/பொலியெருது/ பொலிகடா எனப்படும்.  பொலிவுகளிலிருந்து தேன் ஈர்ப்பதால், இழுப்பதால், உறிஞ்சுவதால், தேன்சேகரிப்பைப் பொலிவீர்ப்பு எனலாம். அது அப்படியே browse இற்கு பொருந்துமென எண்ணுகிறேன்.

பல்வேறு browser களை பொலிவீர்ப்பி நிரலிகள் அல்லது பொலிவீர்ப்பிகள் எனலாம். எல்லா இடங்களிலும்  பொருளோடு பயன்படுத்தமுடியும். ”உலாவி” சிறிது தான். ஆனால்  அது ”என்ன செய்கிறது?” என்பதை வலிந்து பொருள் கொள்ளவேண்டும். இங்கே பொலிவு ஈர்ப்பி என்னும் போது பொருள் சட்டென விளங்கிப் போகும். கூட்டுச்சொல் அவ்வளவு பெரிதில்லை.

என் பரிந்துரை உங்கள் சிந்தனைக்கு.

அன்புடன்,
இராம.கி.

Friday, February 14, 2020

விவசாயி

விவசாயி என்பது நேரடியாய்த் தமிழில்லை. அது தமிழ்வேரில் தொடங்கி ஒருவகை உருவம் பெற்றுப் பின் சங்கத வழித் திரிந்துவந்த சொல். இதைப் புரிந்துகொள்ள என்னுடைய சாத்தன் -1  என்னும் கட்டுரையைச் சற்று ஆழ்ந்து படியுங்கள். (http://valavu.blogspot.com/2018/07/1.html 4 வகைத் தொழிலார் இயற்கையாகவே புதுக் கற்கால நாகரிகத்த்தில் எழுந்தார். அக்கட்டுரையில் இருந்து கீழே  சில பத்திகளை  வெட்டியொட்டிப் பின் மறுமொழிக்கிறேன்.

---------------------------------
புதுக் கற்கால நாகரிகத்தில் வெவ்வேறு இனக்குழுக்களாய் (பொ..உ. மு 3000/2000 க்கும் முன்னர்) .குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலெனத் திரிந்த பொழுது, கூர்த்த கல்முனைகொண்ட சூலம்/வேல் போன்றவற்றால் விலங்குகளை வெட்டித்தின்றதும். மீன்களைக் குத்திக்கொன்றதும் போக, குழுக்கள் தம்மிடையேயும் சண்டை/போட்டி போட்டுக்கொண்டார். பிழை பட்டுச் சரிசெய்யும் முறையில் செம்பும், இரும்பும் ஆக்கும் நுட்பத்தைக் கற்றதால், கல்முனைகள், பொ.உ.மு. 3000/2000 க்கு அருகில், மாழை முனைகளாய் மாறி, மாந்த நாகரிகத்திற்குப் பெரும் உந்தலைக் கொடுத்தன. விலங்கு வேட்டையிலும், மாற்றாரை வெல்வதிலும் வெற்றி கூடின. ஒவ்வோர் இனக் குழுவினரும் அவரவர் புழங்கும் நிலம் அவர்க்கே சொந்தமென உரிமை பாராட்டத் தொடங்கினர். தனிச்சொத்து கூடக் கூடக் குழுக்களின் கட்டமைப்பு, குறிப்பாக அவர்களின் இருப்பை உறுதிசெய்யும் பாதுகாப்புக் கட்டமைப்பு இன்னும் அகன்று, இறுகியது; அதிகாரம் கூடியது.

சூலம்/வேலுக்கு அடுத்ததாய்த் தென்னக மேற்குக் கடற்கரை நெய்தலிலும், அதையொட்டிய குறிஞ்சியிலும் வில்/அம்பு ஆயுதம் எழுந்தது. (வில் அடையாளம் சேரருக்கு.) விலங்குகளையும், வேற்று மாந்தக் கூட்டத்தையும் அருகிற் சென்று கொல்வதினும் தொலை நின்று, வில்வளைத்து, அம்பெய்திக் கொல்வது இன்னும் நேர்த்தியென ஒருவேளை நினைத்தரோ?!? தெரியாது.! தம் குழுவின் இழப்பைக் குறைத்து, மாற்றாரின் இழப்பைக் கூட்டப் பழந் தமிழருக்கு வில்/அம்பு உறுதியாய் வகை செய்தது. இதற்கப்புறம் நேரடிச் சண்டையிற் கொலை செய்யச் சூலம்/வேலை விடச் செம்பு/ இரும்பால் ஆன அரிவாள்/கத்தி என்பது வாகாய் ஆனது. ஆதிச்ச நல்லூரின் செம்பும், கொங்கின் இரும்பும் ஆயுதங்களை நாடி உருக்கப்பட்டதை ஆய்வாளர் மறவார். ஆதிச்ச நல்லூரின் காலம் பொ.உ.மு. 2000க்கும் முந்தையது. (இப்போது பொ.உ.900 என்று சொல்வதை நான் நம்பவில்லை. மேலும் ஆய்வுகள் நடக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.) இரும்பு செய்தது பொ.உ.மு.1500/1200 ஆக இருக்கலாம். கொங்கில் இரும்பு, தங்கம், மணிகள் என்பவற்றிற்கே தமிழக இனக்குழுக்கள் தொடர்ந்து மோதின.

இம்மோதல்களின் முடிவில் சேர, சோழ, பாண்டியப் பெருங்குடிகள் எழுந்தன. இவற்றுள் வேளிரும் பிறருங் கொஞ்சங் கொஞ்சமாய் கரைந்து போனார். சேர, சோழ, பாண்டியர்க்கு முன் கணக்கற்ற இன குழுக்கள் தமிழகத்துள் இருந்திருக்கும். அவற்றின் பாதுகாப்பைக் கவனிக்க அக்குழுக்களுள் மூவேறு வகையார் விதப்பாய் எழுந்தார். ஆயுதவழி பார்த்தால் முதல் வகையாரைச் சூலத்தார் (= வேலார்) என்றும், இரண்டாம் வகையாரை வில்லியர் (=அம்பார்) என்றும், மூன்றாம் வகையாரைக் கத்தியர் (=அரையர்) என்றும் அழைக்கலாம். முதல்வகையார் மிகநிறைந்தும், அடுத்தார் இன்னுங் குறைந்தும், மூன்றாமவர் மேலுங் குறைந்தும் இருந்திருக்கலாம். எண்ணிக்கை குறைந்த பெருமானரின் (இவரேதோ வடக்கிருந்து வந்தார் என்பது ஒரு தலைச் செய்தி. இங்கிருந்த பெருமானரோடு வந்து சேர்ந்தவர் இணைந்து கொண்டார் என்பதே உண்மை) ஓர்தலோடு கிழார்/அரயர்/மன்னர்/வேந்தர் அரசியலதிகாரம் பெற்றார். வேட்டையிலாக் காலங்களில் இனக்குழுவின் பொதுக்கடன்களை அந்தந்தக் குழுவின் சூலத்தார்/வேலார் கவனித்தார். குறித்த இடத்தில் ஓர் இனக்குழு தண்டுற்று உறைகையில், எல்லை தாண்டி மற்ற இனக்குழுக்களோடு சிறு பொருதல்களையும், விலங்கு கவர்தலையும் வில்லியரே செய்தார்.

சங்கதம் கத்தியரைக் கத்ரியர்>க்ஷத்ரியர் என்றாக்கும். (தமிழில் நாம் அவரை அரயர்>அரசர் என்போம். வேறு வகையில் கத்தியின் இன்னொரு வடிவான வாளைக் கொண்டு வாள்மர்>வார்மர்> வர்ம என்றும் சங்கதம் கையாளும்) இதேபோல் வித்தையரை/விச்சியரை சங்கதம் விசையர்/வைசியர் என்று ஆக்கும். (தமிழில் நாம் அவரை அம்பின் வாயிலாய் வாணிகர் என்போம்.) சூலத்தரைச் சங்கதம் சூல்த்தர்/சூத்தர்/சூத்ரர் என்றாக்கும். (தமிழில் வேலரை வேல்>வேள்>வேளாளர் என்போம்.). ”வேலைப் பகிர்வில்” தொடங்கிய தொழிற் பிரிவு நெடுங்காலங் கழித்து, பொ.உ.300 இல் குப்த அரசுக் காலத்தில் இந்தியா எங்கணும் அகமுறைத் திருமணத்தால்/ பிறப்புமுறைப் பிரிவால் நிலைப்படுத்தப் பட்டது. முட்டாள் தனமான சாதி/வருணத் தோற்றம் நம்மூரில் இப்படி எழுந்ததே.

சங்க காலத்தில் அகமுறைத் திருமணங்கள் மிகக் குறைவு. சங்க இலக்கியத்தில் கற்பிலும் மேலாய்க் களவே கொள்ளப்பட்டது. இன்றுங் கூட அகமுறைத் திருமணம் ஒழிந்தால் (காதல் திருமணங் கூடினால்) தமிழ்க் குமுகாயத்தில் சாதி/வருணம் இல்லாது போகும். அப்பன் வேலையை மகன் செய்வது இன்று மிகக் குறைந்துபோனது. ஆனாலும் வருக்கத் தாக்கம் அழியவில்லை.) பழந்தமிழ்க் குடிகளிடம் ஏற்பட்ட அதே தொழிற்பிரிவு தமிழகம், வட இந்தியா, உலகின் மற்ற குடியினரென எல்லோரிடமும் இருந்தது. அவரவர் கையாண்ட பெயர்கள் வேறாகலாம். ஆனால் கருத்தீடு ஒன்றே. நால்வகையார் இருந்த குழுக்கள் பெருகி பல்வேறு சண்டைகளில் ஒரு குழு இன்னொன்றிற் கரைந்து அதிகாரக் கட்டுமானம் கூடிக் கிழார், அரயர்(>அரசர்), மன்னர், வேந்தரென மேலும் இறுகியது. வேந்தர் என்பார் சங்க காலத்திலேயே வந்துவிட்டார்.
------------------------------------------------

இந்தப் பின்புலத்தோடு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.  முன்சொன்னது போல்  வில் என்பது தமிழ். வில்லில் அம்பு விடுவது வித்தை>விச்சை எனப் பட்டது. விச்சையர் பழங்குடிவாழ்வில் காவலுக்கும், விலங்குகளைக் கொன்று இறைச்சி தருவதற்கும் பொறுப்பானவர். ஒரு விலங்கு வேட்டையில் சூலத்தாரும், விச்சையரும் சேர்ந்தே போவர். நாளாவட்டத்தில் விலங்குளைத் தேடிப் போவதிலும் விட சில குறிப்பிட்ட விலங்குகளை தம் குழுவிற்கு அருகிலேயே வளர்த்து, அவற்றின் பாலைப் பருகி, தேவையான பொழுது வளர்த்த விலங்குகளையே கொன்று சாப்பிடுவது பழங்குடியினருக்கு வாய்ப்பாகப் போனது. முல்லை வாழ்க்கை இப்படித்தான் இயல்பாய்ப் பிறந்தது. மாடு, ஆடு, கோழி போன்ற குறிப்பிட்ட விலங்குகள் சாப்பிடுவதற்காகப் பயிரிடத் தலைப்பட்டார். அதை விச்சையரும், சூலத்தாருமே கவனித்துக் கொண்டார்.

இக்கவனிப்பில் பயிர் வளர்க்க, விச்சையார் தம் அம்பாலும், சூலத்தார் தம் சூலத்தாலும் நிலத்தைக் குத்திக் கிளறினார். விச்சையர் வேலை இருவேறு பகுதிகளானது. ஒருவர் வணிகராய் மாறினார் (அதையே சாத்தன் தொடரில் விவரித்தேன்.) இன்னொருவர் சூலத்தாரில் இன்னொரு பகுதியோடு சேர்ந்து உழவரானார். சங்கத வழிமுறை அவரை விதப்பான விச்சையாராகியது. வி-விச்சைய> வி-விசைய>விவசைய>விவசாய என்று அச்சொல் வளரும். இது சங்கதவழியில் ஏற்பட்ட வளர்ச்சி. தமிழ் வழியில் இதே ஆட்கள் வேலாளர்> வேளாளர் ஆனார். தமிழ் வழியில் இது வேளாண்மை எனப்பட்டது. சங்கத வழியில் இது விவசாயம். சங்கதச் சொல்லின் உள்ளே நம்முடைய வில்/வித்தை.விச்சை போன்றவையும் விதப்பு>வி என்ற கருத்தும் அடங்கியுள்ளன. ஆனால் விவசாயம் என்பது முடிவில் வடசொல் தான். நான் வேளாண்மை என்பதையே பயில முயல்வேன்.

தமிழ்த்தேசியர் விவசாயி என்ற சொல்லைத் தவிர்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி,

கூழ்முட்டை

ஒரு முறை முனைவர் இராசம்,, கலிபோர்னியாவில் தன் வீட்டுக்கருகில்  உள்ள துருக்கிக் குழந்தையோடு விளையாடிப் பழகியதைச் சொல்லி ”பாட்டி”யென தன் மழலை நண்பனைக் கூப்பிட வைத்ததையும், அவன் மூலம் தெரிந்துகொண்ட தமிழ் போல் ஒலிக்கும் துருக்கி மொழிச் சொற்கள் சிலவற்றையும் மடற்குழுவில் விவரித்தார். துருக்கி மொழியில் yumurta என்பது முட்டையைக் குறிக்குமெனச் சொல்லி, அதைத் தமிழ்ச்சொல்லான கூமுட்டையோடு தொடர்புண்டா என வினவினார். அப்படியெனக்குத் தோன்றவில்லை. சில மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல விழைந்து, முதலில் முட்டை, கூழ்முட்டை பற்றிச் சொன்னேன். 

முட்டை ஓட்டிற்குள் மஞ்சளும், வெள்ளையுமான 2 கருக்களுமே பாகுமை (viscosity) மிகுந்த, ஒன்றிற்கொன்று கலவாத, நீர்மங்களாகும் (liquids). (மண்ணெண்ணெய் தண்ணீரின் மேல் மிதப்பதை இங்கு எண்ணிப் பாருங்கள்.) தவிர, வெள்ளைக்கருவை ஓட்டோடு ஒட்டாதுபிரிக்கும் ஒரு படலமும் (membrane) உண்டு. கோழி முட்டையிடும்போது மஞ்சள்கரு மீச்சிறிதாயும், வெள்ளைக் கரு பெரிதாயும் இருக்கும். அடைகாக்கும்போது, தாய்க்கோழி தரும் வெம்மையைக் கொண்டு வேதிப் பொருள்களை வெள்ளைக்கருவிலிருந்து எடுத்துக்கொண்டு மஞ்சள்கரு வளர்கிறது. பனிக்குடம் போலிருக்கும் வெள்ளைக்கரு நாளடைவிற் குறைந்து, மஞ்சள்கரு பெரிதாகி, உறுப்புகள் வளர்ந்து உருவெடுத்து குஞ்சுபொரிக்கும் நேரத்தில் முட்டையுடைகிறது.

முட்டைகளைக் கிடங்கிற் காக்கையில் குலுக்கலின்றி, சற்று குளிரோடு முட்டைகளை வைப்பது தேவையாகும். ஒருவேளை தவிர்க்க முடியாத தீவிரக் குலுக்கலும், சற்று வெதுப்பும் வாய்த்துவிட்டால், மஞ்சள், வெள்ளைக் கருக்கள் தனித்தனி நீர்மங்களாயின்றி ஒன்று இன்னொன்றோடு கலங்கி விரவி முட்டை கெட்டுவிடும். அப்படிக் கலங்கித் தங்கிய முட்டைகள் சரியாகப் பொரிக்கா. தேவை யில்லா வேதி வினைகளால் சாப்பிடவுஞ் சுவைக்கா. உடம்பிற்கும் கெடுதலும் விளையும். ”எவ்வளவு நேரம் கலங்கிய தன்மை இருந்தது?” என்பதே அப்போது முகனக் கேள்வியாகும். அத்தகைய வற்றைக் கூழ்முட்டைகள் என்பார். கூழ்தல் = கலங்குதல் (to emusify). இதுவே பேச்சு வழக்கில் கூமுட்டையாகும். கலங்கிய மதியாளனையும் கூமுட்டையென்று வழக்கிற் சொல்வதுண்டு. இது வசவுப் பேச்சில் வெளிப்படும். 

சிலபோது செயற்கையாகவும் முட்டையுள்ளீட்டால் கூழ்மத்தை (emulsion) உருவாக்குவோம். ஆனாற் சிறிதுந் தேங்கவிடாது, சுட்டோ, வேகவோ, (கிளறியோ, கிளறாமலோ) பொரிக்கவோ செய்வோம். காட்டாக, ஓர் ஏனத்தில் முட்டைக்கருக்களை இட்டு [தேவைப் பட்டால் வெங்காயம், தக்காளி, குருக்கிழங்கு (carrot), மிளகாய், கொஞ்சம் உப்பு போன்றவற்றையிட்டுச்] சிறு கரண்டியால் கலக்கி (ஏனத்தில் 2 கருக்களும் ஒன்றோடொன்று மயங்குவதைக் காணலாம்.) கலவையை தோசைத் தட்டில் வார்த்து முட்டைத் தோசையாய்ப் (omelet) சுடுகிறோமே? இது தோசை வார்க்குமுன் செயற்கையிற் செய்வதாகும்.

முற்றிலுங் ’கொற்றிய முட்டை (scrambled egg; கொற்றுதல்>கொத்துதல்; கொத்துப் பரோட்டா போன்றது ஆனால் இது உதிரியாய் விழுது போலிருக்கும். சாப்பிடச் சுவையானது. நம்மூரில் அவ்வளவு விரும்பமாட்டார். மேலையர் விரும்புவார்.)’ செய்யும்போதும் மிக வேகமாய்க் கலக்கி முற்று முழுதாய்க் கூழ்மமாக்குவோம். கலக்கமில்லாது தட்டில் வார்த்து, வெள்ளைக்கருவை மட்டும் அரைவேக்காட்டிற் சுடவைத்து, மஞ்சள்கருவை பாதி நீர்மமாயிருக்கும் படியே தோசைத்தட்டிலிருந்து எடுத்தால் அதற்கு அரை வேக்காட்டு முட்டை (half-boiled egg) என்று பெயர். அடுத்து, ஏனத்தில் நீரிட்டுக் கொதிக்க வைத்து அதில் முட்டையை வேகவைத்தால் ’கொதி முட்டை (boiled egg)’ கிடைக்கும். முட்டைச் செய்மங்களில் இன்னும் பல்வேறு வகைகளுண்டு. 

இனிக் கோழி பற்றி வருவோம். தமிழில் இச்சொல் கிண்டும், கிளறும் பொருளில் எழுந்தது. (குள்>கொழு>கோழி = நிலத்தையும் குப்பையையும் கிளைத்துப் புழுவைத்தேடும் பறவை. கொழு = நிலத்தைக் உழும் காறு. கொழு>கொழுதுதல்>கோதுதல் = மயிர் குடைதல்; குள்>கிள்>கிளர்>கிளறு. இப்பொருளில் ஏராளஞ் சொற்களிருக்கின்றன.) இது போகப் புள்ளென்ற பொதுப் பறவைச் சொல்லும் விதப்பாகக் கோழியைக் குறிக்கும். எல்லாப் பறவைகளும் இரைதேடும் போது புள்ளிக் (குத்திக்) கொண்டிருப்பதால் பறவைகளுக்குப் புள்ளென்ற சொல் வந்தது. இச்சொல்லிற்கிணையாக இந்தையிரோப்பிய மொழிகளில் fowl என்பது காட்சியளிக்கும். Old English fugel "bird, feathered vertebrate," from Proto-Germanic *fuglaz, the general Germanic word for "bird" (cognates: Old Saxon fugal, Old Frisian fugel, Old Norse fugl, Middle Dutch voghel, Dutch vogel, German vogel, Gothic fugls "a fowl, a bird"), perhaps a dissimilated form meaning literally "flyer," from PIE *pleuk- (see fly (v.1)).

ஆங்கிலத்தில் இச்சொல்லைப் போக்கடித்த bird என்ற சொல் தமிழின் பறதைக்கு இணையானது. [பறவெனும் வினை, சிறகுகள் அடித்துக்கொண்டெழும் படபட/பறபற/பதபத ஒலிக்குறிப்பில் உருவான சொல்லாகும். (பார்க்க என் ”இறைவன்” கட்டுரை.) பறப்பது பறவை. பற+வ்+ஐ என்பதில் வரும் வ் உடம்படுமெய்க்கு மாறாக த் எனுஞ் சாரியை வந்தால் பற+த்+ஐ என்றாகிப் பறவை, பறதையாகும். இம்முடிப்பு இற்றைத்தமிழில் வழக்கில்லை. பறவைக்கிணையாய் இன்னொரு ஈற்றால் பறனையென்ற சொல்லை அட்லாண்டா சந்திரசேகரன் உருவாக்கினார். இப்பொழுதெல்லாம் அதையே வானூர்திக்கு (plane) மாற்றாகப் பயன்படுத்துகிறேன். பகுபகு என்ற படபடப்பொலியிலிருந்து உருவான பக்கியும் பறவையைக் குறிப்பதே. பாலியிலும் பாகதத்திலும் இச்சொல் அப்படியே பயிலும் சங்கதத்தில் பக்ஷி ஆகும். இதைத் தமிழில் மீண்டுங் கடன்வாங்கிப் பட்சியாக்குவோம். அதற்குப் பக்கியையே பயன்படுத்திப் போகலாம். தமிழுக்குக் கொஞ்சமாவது நெருக்கமாய் இருக்கும்.]
   
இன்றெல்லோருக்கும் பழகிய நாட்டுக்கோழி காட்டுக்கோழி/சாம்பற்கோழியிலிருந்து மாந்த இடையுற்றால் உருவானது. (சாம்பங்கோழி, சம்பங்கோழியென்றும் பேச்சுவழக்கிற் திரியும். பெரும்பாலான அகரமுதலிகள் சம்பங்கோழியையே பதிவாக்குகின்றன. பழைய நூற்றாண்டுப் புரிதல்களுக்கும் இற்றைப் புரிதல்களுக்கும் பெரும் இடைவெளியுண்டு. பல்துறை அறிஞர்களை பயன்படுத்தி உருவாகாத, அரைகுறைத் தமிழ் அகரமுதலிகளைப் பலகாலம் நான் குறைகூறி வந்திருக்கிறேன்.) இக்காட்டுக்கோழியை (ம.காட்டுக்கோழி; க.காடுகோழி; தெ. தெள்ள அடவி கோடி; து.காடுகோரி; மரா. (அ)ராண் கொம்ப்டி; கோண்டி. பர்தா கொம்ரி; இராசசுத்தானி. கொம்ரி; இந்தியில் ஜங்லி முர்கி) விலங்கியலில் Gallus sonneratii என்றும் பொதுவழக்கில் சாம்பற் காட்டுக்கோழி (grey junglefowl) என்றும் அழைப்பார். (இந்திச்சொல்லைத் தவிர மற்றவையெல்லாமே கோழியின் திரிவுகள் தான். இந்திச்சொல் <உருது<பெர்சியன் என்று விரியும். அதைக் கீழே பார்ப்போம்.)

’உலகமெங்கும் chicken என்று அழைக்கப்படும் கோழி’யின் மூதாதை தென்னிந்தியாவிற்கே சொந்தமென்றும் இதன் எவ்வளர்ச்சியே (evolution) மாந்தப் பரவலில் பல நாடுகளுக்கும் போனதென்றும், அறுதியாய் விலங்கியலார் சொல்வார். நம்மூர்க் குக்கன்/குக்கணம்/குக்குடம் தான் chicken க்கு இணையாகும். (குக்குடத்தைச் சிலர் அறியாது சங்கதச் சொல்லென்று சொல்வார். ’குக்குக்கெ’ன்று ஒலி யெழுப்புவதால் அப்பெயர் எழுந்தது. Old English cicen (plural cicenu) "young fowl," which by early Middle English had came to mean "young chicken," then later any chicken, from Proto-Germanic *kiukinam (cognates: Middle Dutch kiekijen, Dutch kieken, Old Norse kjuklingr, Swedish kyckling, German Küken "chicken"), from root *keuk- (echoic of the bird's sound and possibly also the root of cock (n.1)) + diminutive suffixes.)

கோழி பற்றிய தமிழ்ச்சொற்கள் பலவும் பல மொழிகளுக்குக் கடனாய்ப் போயிருப்பதில் வியப்பில்லை. இன்றைக்கிருக்கும் நாட்டுக்கோழிகளின் கால்களிலும் மற்ற சினையுறுப்புக்களிலும் இழையும் மஞ்சள்/பொன் நிறச் சாயலுக்கும் தமிழகத்திலிருந்த சாம்பற்காட்டுக்கோழியே காரணமாகும். சமயங்களில் இக்கோழி காட்டிலுலவும் செங் காட்டுக்கோழியோடும் (red junglefowl) கூடிக் கலப்பினங்களை உருவாக்கும். செங் காட்டுக்கோழியின் தலைக்கொண்டையும், தாடிச்சதையும் கடுஞ்சிவப்புக் காட்டிநிற்கும். சிவப்பும் மஞ்சளும் விரவிய கோழியை, உடம்பெல்லாம் ஆங்காங்கே மஞ்சளையும் குங்குமத்தையும் (காடிச் செறிவில் - acidic concentration -மஞ்சள், களரிச் செறிவில் - alkaline concentration - குங்குமம்) பட்டையாய்ப் பூசிய சாம்பவர்கள் தங்கள் மருதநிலத்தில் விரும்பி வளர்த்ததும், அவரின் பேரூர் கோழியூர் (உறையூர்) என்றானதும், இன்னொரு துறை சாம்பாபதி>சம்பாபதி (காவிரிப்பூம்பட்டினம்) என்றானதும் வியப்பில்லை. அவரே கோழியர் (என்ற சோழியர்) இன்ற இனக்குழுவும் ஆனார். மருதநிலத்தில் கோழியும் எருமையும் முகன்மை உயிரிகளாகும்.

அளவிற்கு மீறிய மாந்த இடையூற்றால், மஞ்சள் சாயலே இல்லாத வெள்ளைக்கால் கோழிகள் (white leg-on chicken) பண்ணைக் கோழிகளாய் (broilers) வளர்க்கப்பட்டு, பல்வேறு கொழுப்புச் சத்துகளைக் கொடுத்து வேதிப்பொருள்களால் கொழுக்கவைத்து, அவை நோயில் இறந்துவிடாதிருக்க நோய்த்தடுப்பு (antibiotic) மருந்துகளைக் கொடுத்து (இந்தக் கோழிக்கறியை மாந்தர் சாப்பிடும் போது அளவிற்கு மீறிய நோய்த்தடுப்பு வேதிகளை மாந்தர் உடலுக்குள்ளும் ஏற்றி, அதன் மூலம் வெருவிகள் (viruses), பட்டுயிரிகள் (bacteria) ஆகியவை எந்த நோய்த்தடுப்பு மருந்திற்கும் கட்டுப்படாது ஆக்கி) ஒரே கந்தரகோளம் ஆக்கிவிட்டார்கள். கூடியமட்டும் பண்ணைக்கோழிகளைச் சாப்பிடாமல் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவதே நல்லது என்பது பலருக்கும் புரியமாட்டேம் என்கிறது. இந்த மஞ்சற்சாயல் போன கோழிமுட்டைகள் முற்றிலும் வெள்ளையோட்டோடு பளிச்சென்றிருக்கும் நாட்டுக்கோழி முட்டைகள் சற்று புகர்/குரால் நிறத்தோடு அளவிற் சிறியதாய்க் காட்சியளிக்கும். பண்ணைக்கோழி முட்டையின் மஞ்சட்கரு வெளிர் மஞ்சளாய்க் காட்சியளிக்கும். நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சட்கரு சற்று சந்தனநிறத் தோற்றங்காட்டும் மஞ்சளாய் இருக்கும்.

கோழி முட்டையால் இற்றை மாந்த இனம் பெரிதும் வளங்கொண்டதும் உண்டு; சீரழிந்ததும் உண்டு. இனி yumurta விற்கு வருவோம். துருக்கிமொழி பின்னொட்டுப் புழங்கும் மொழி. (தமிழும் 100க்குத் 99 பின்னொட்டுக்கள் புழங்கும் மொழிதான். மிக அரிதாய் முன்னொட்டுக்கள் புழங்கும்.) துருக்கிமொழி அல்தாயிக் கொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் மங்கோலியன், மஞ்ச்சு, சப்பானீய மொழிகளையும் சேர்ப்பர். yumurta என்பதில் ta என்பது இற்றைத் துருக்கி மொழியில் பின்னொட்டாகும். The addition of suffix -da/-ta என்பதற்கு in on at என்ற பொருளையே சொல்கிறார்கள். காட்டாக, என்பது odada [oda-da] in the room என்றும், yatakta [yatak-ta] என்பது on the bed என்றும் பொருள்படும்.தமிழில் இல் என்று பொருளை ta விற்கு இணையாகக் கொள்ளலாம்.

அடுத்து yumurta என்பது Old Turkic இல் yumurtka, yumurga என்றும், Proto-Turkic இல் *jumurtka ‎(“egg”) என்றுமாகும். இதனுள் murg/murk என்ற சொல் நடுவே அடங்கியுள்ளது. அது பெர்சியனில் பறவை/கோழி (murg in persian bird, fowl) என்றே பொருள்கொள்ளும். இன்னொருசொல்லாக சிம்முர்க் என்றசொல் கழுகுப்பறவையைக் குறிக்கும். ஆங்கிலத்திலும் இது கடன்வாங்கப்பட்டுள்ளது. [Simurgh Etymology: from Pers. سیمرغ simurgh, from Pahlavi sin "eagle" + murgh "bird." Cf. Avestan saeno merego "eagle," Skt. syenah "eagle," Arm. ցին cin "kite.". a supernatural bird, rational and ancient, in Pers. mythology. தமிழிலும் உயரப் பறக்கும் பருந்திற்குச் சேணம் என்றும் பெயருண்டு. சேண் = உயரம். சிம்முர்க்கை இங்கு சொன்னதின் காரணம் முர்க் என்ற சொல் பறவை என்ற பொதுப்பொருளில் புழங்குவதைக் குறிப்பதற்குத் தான். துருக்கிக்கும், ஈரானுக்கும் அருகில் உள்ள பல்வேறு இன மக்களும் murgh என்ற பெயரையே கோழிக்குப் பயன்படுத்துகிரார். அது ஈரானுக்கும் கிழக்கில் ஆப்கனித்தான், பாக்கித்தான் (உருது), வட இந்தியா (இந்தி) வரை பரவியுள்ளது. நீங்கள் எந்த வட இந்திய உணவுக்கடைக்குப் போனாலும் முர்க் பன்னீர், முர்க் மொசெல்லம், முர்க் கறி என்று விதவிதமாய்ச் சொல்வர். இந்த முர்க் என்ற சொல் எப்படியெழுந்ததென்று என்னால் இன்னுந் தெளிவாய்ச் சொல்லமுடியவில்லை. கோழி இங்கிருந்து தான் போனது. ஆனால் முர்க் என்ற பெயர் இத்தனை நாடுகளில் எப்படிப் பரவியது? வியந்து கொண்டிருக்கிறேன். அதேபொழுது, இதற்குப் பறவை என்ற பொருள் இருப்பது புரிகிறது.

அடுத்தது முன்னால் வரும் yu/ju என்னும் வினைச்சொல். கூகுளாண்டவர் மூலமாய்ச் செய்தி தேடியதில் கீழுள்ள செய்திகள் தெரிந்தன.

The stem may be derived from Common Altaic *úmu 'to bear, give birth' q. v., see АПиПЯЯ 58, 281, Дыбо 10, Лексика 149. The Turkic form, however, must have also been influenced by PA *nā̀mo 'testicle' (and/or *ǯi̯ŏmu `round'), which explains initial *j-.
altet-prnum,altet-meaning,altet-rusmean,altet-turc,altet-mong,altet-tung,altet-reference,

Egg, Proto -Altaic *omu(r)-tkV
Middle Mongolian omdegen (o with umlaut) < Proto-Mongolian *Omdegen
Literary Manchu UmxanCf:Proto Turkic *jumurtka (>Turkish yumurta), Proto-Japanese *um - (> Japanese umu 'give birth' u with umlaut

அதாவது ”கோழியில் (இருந்து) வெளிவந்தது” என்றே yumurta விற்குப் பொருளாகிறது. அதாவது இச்சொல் அடிப்படையானதல்ல. சுற்றிவளைத்து விளக்கம்போல் எழுந்த சொல் வரையறை. இது தற்செயலாக நம்முடைய முட்டையோடு ஒலிப்புக்காட்டுகிறது. அவ்வளவுதான்.

நம்முடைய முட்டை (ஓட்டால்) மூடிய கோளமான பொருளைச் சொல்லும் பொதுச்சொல். அது கோழிக்கான விதப்புச்சொல் அல்ல. வாத்து முட்டை, கோழிமுட்டை, குருவிமுட்டை என்று பல்வேறு முட்டைகளுக்குப் பொதுவான சொல். அப்படியானால் yumurta என்பது துருக்கிமொழியில் கோழிமுட்டையைமட்டுங் குறிக்கிறதா என்றாலில்லை. எப்படித்தமிழில் எள்நெய்>எண்ணெய் என்ற விதப்புச் சொல் இன்று மண் எண்ணெய், தேங்காய் எண்ணெய் நல்ல எண்ணெய், விளக்கு எண்ணெய் என்று கூட்டுச்சொற்களில் ”எண்ணெய்” என்று பொதுப்பொருளை உருவக்குகிறதோ, அதுபோல yumurta என்பது தன் (கோழி) விதப்புத்தோற்றம் இழந்து பொதுத்தோற்றம் காட்டுகிறது.

just egg.

அன்புடன்,
இராம.கி. 

பி.கு. இது ஒரு பொதுவான புலனம் என்பதால், நான் வழக்கமாய் அனுப்பும் 3 மடற்குழுக்களுக்கும் அனுப்புகிறேன். என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.

Thursday, February 13, 2020

பொத்திகையும் (Plastic) நெகிழியும் (elastic) - 2

ஆங்கிலத்தில் plastic (adj.) என்பதற்கு, 1630s, "capable of shaping or molding," from Latin plasticus, from Greek plastikos "able to be molded, pertaining to molding, fit for molding," also in reference to the arts, from plastos "molded, formed," verbal adjective from plassein "to mold" (see plasma) என்று வரையறை சொல்வர். molding ஐப் புரிந்துகொள்ள நம்மூர் சுவாமிமலை செப்புப் படிம வேலைக்கு வரவேண்டும்.  முதலில்  மெழுகு முட்டம் அல்லது பாளத்தை (wax cake; கொழுப்பு அல்லது எண்ணெயிலிருந்து உருவாக்கப்படும் பொருள். எளிதில் இளகி உருகக் கூடியதாயும், பல்வேறு கீறல், செதுக்கல் வேலைகளுக்கு உகந்ததாயும் உள்ள பொருள்) எடுத்துக் கொள்ளவேண்டும், மெழுகின் சொற்பிறப்பு எளிது, முல்>மெல்> மெல்கு> மெல்குதல்=  மெதுவாதல், நொய்யாதல், இளகுதல்; மெல்கு> மெழுகு.

இலிங்க மெழுகு, மூசாம்பீர மெழுகு, இரச மெழுகு, தாம்பர மெழுகு, சிவப்பு மெழுகு, உப்பு மெழுகு, கத்தூரி மெழுகு, கோரோசனை மெழுகு, கந்தக மெழுகு, பாடாண மெழுகு, வீர மெழுகு எனப் பல்வேறு மெழுகுகள் வழக்கில் உண்டு.  மெழுகை எடுத்து, அதில் கீறி, செதுக்கிச்  சிற்ப வேலைப் பாடுகளால் படிமம் செய்வர். இதற்கு மெழுகுகட்டுதல் என்று பெயர்.  மெழுகுப் படிமத்தை மெழுகு பொம்மை என்றுஞ் சொல்வர். பின் அதைச் சுற்றி குறிப்பிட்ட வகை களிமண்ணைப் பூசுவார். இக் கருக்கட்டும் பசைமண்ணை மெழுகு மண் என்றுஞ் சொல்வர். மெழுகு மண்ணால் மெழுகுப் பொம்மையை மூடுவதால், பொத்துவதால், மூடும் அச்சை, மெழுகு மூழ்த்து, மெழுகுப் பொத்து என்றுஞ் சொல்லலாம்.

[நீருக்குள் அமிழ்வதை முழுகுதல், மூழ்த்தல் என்கிறோமே? நினைவிற்கு வருகிறதா? அதுவும் இதே பொருள் தான். அங்கே முழுப்பொருளும் நீருக்குள் அடங்குகிறது. இங்கே சேற்றுக் களிமண்ணிற்குள் மெழுகுச்சிலை மூழ்கிறது.  இம் மூழ்த்தில் / பொத்தில் ஓர் ஓட்டையும் போட்டுவைப்பர். மெழுகுச்சிலை உள்ளிருக்க அமையும்  மூழ்த்தை/ பொத்தை உலரவைத்துப் பின் சூளையில் இயட்டுச் சூடாக்குவர். மூழ்த்து/பொத்து சூடேறியபின் இறுகும். உள்ளிருக்கும் மெழுகு உருகும். நன்றாய் இறுகிய மூழ்த்தை/பொத்தைப் பின் எடுத்துத் தலைகீழாக்கி உருகிய மெழுகை வெளித்தள்ளுவர். பின் அதனுள் ஏதேனும் ஓர் உருகிய மாழையை (அது பொன், வெள்ளி, செம்பு, ஈயம், ஐந்துலோகம் என எதுவாயும் அமையலாம்) ஊற்றுவர். 

முடிவில் அதையும் குளிர்வித்து மூழ்த்தை/பொத்தைப் பிரித்து உலோகச் சிலையை வெளியில் எடுப்பர். கிட்டத்தட்ட இதே அமைப்புத்தான் இரும்பை வார்க்கும் வார்ப்பட ஆலைகளிலும் (foundry) நடைபெறுகிறது.  இங்கே உருகிய மாழையை ஊற்றுவதற்கு மாறாய்ப்  பாறைவேதிப் பொருளான plastic ஐயும் ஊற்றலாம். ஊற்றுவதற்கு மாறாய்,  plastic ஐ ஏதோ வகையில் மூழ்த்துள் அடைத்து அதிலேயே உருக்கியும் புதுப் படிமத்தை உருவக்கலாம்.  இப்படி நடப்பதில் plastic இற்கும் மாழைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இங்கே plastic என்பது நெகிழவில்லை. இளகுகிறது. இளகுதலும் நெகிழ்தலும் வெவ்வேறு செலுத்தங்கள் (processes). நெகிழ்தல் plastic இற்கான குணமல்ல. நெகிழவே செய்யாத plastic கள் உண்டு.

இருவிதமான plastic கள் உண்டு. ஒன்று தெறுமப் பொத்திகை  (=  thermoplastic) A thermoplastic, or thermosoftening plastic, is a plastic polymer material that becomes pliable or moldable at a certain elevated temperature and solidifies upon cooling. கூர்ந்து கவனியுங்கள். இது உயர்வெம்மையில் மூழ்த்தக் கூடியதாய் அமையவேண்டும். இதில் நெகிழ்தல் பற்றிய  பேச்சே இல்லை. வேதியியலில்,  வேதிப்பொறியியலில் அப்படித் தான் புரிதல் இருக்கிறது . நெகிழ்தலுக்கும் plastic இற்கும் தொடர்பே யில்லை. இன்னொன்று தெறுமச் செறிக்கி = A thermosetting polymer, resin, or plastic, often called a thermoset, is a polymer that is irreversibly hardened by curing from a soft solid or viscous liquid prepolymer or resin. Curing is induced by heat or suitable radiation and may be promoted by high pressure, or mixing with a catalyst.
 
மூழ்த்தும் வேலை, மூழ்த்தம் (molding) ஆகும். மெழுகு, மூழ்த்தல் போன்ற தமிழ்க்கலையே மூழ்த்தம் (molding), வார்ப்படம் (foundry; உருகிய மாழையை மூழ்த்தின்/ பொத்தின்/ அச்சின் குழிகளில் ஊற்றிக் குளிர வைத்தல்), கம்மம் (forging; a die is used and forced on the melted metal when that metal is in its semi-solid state), அடைத்துக் கட்டல் (die-casting. This is a metal casting process characterized by forcing molten metal under high pressure into a mold cavity) போன்ற  நுட்பங்கள் வளரக் காரணம் ஆகும். நம்மூரின் செப்புச் சிலை நுட்பமே வார்ப்படம், அச்சு நுட்பியல் வளர்ந்ததின் தொடக்கம்.  இதையறியாது வெறுமே அரைகுறைப் புரிதலில் “நெகிழி  அது இது” என நாம் சொல்லிவருகிறோம்.  முகன நுட்பியல்களுக்கு முன் எந்தப் பழநுட்பியல் இருந்ததென்று ஓர்ந்து பாருங்கள். நம் தமிழ் நாகரிகத்தை நாமே உணராது இருப்பது பெருஞ்சோகம். நம்முடைய பழஞ்சிந்தனைக்கும் இற்றைச் சிந்தனைக்குமான தொடர்பை எடுத்துக் காட்டி தமிழ்ச்சொற்களைச் சொன்னால், சங்கத விழைவோர் தடுக்கென உள்நுழைந்து மறிக்கிறார். தமிழரும் தடுமாறிப் போகிறார்.  நாம் சங்கதத்திற்குத் தொடர்ந்து அடிமையாக வேண்டுமா, என்ன?  ஏன் யாரும் உரத்துப் பேசமாட்டேம் என்கிறார்?

இந்தக் காலத்தில் மூழ்த்த நுட்பியல் பெரிதும் வளர்ந்து சுழற்று மூழ்த்தம் (Rotational Molding), உள்தள்ளு மூழ்த்தம் (Injection Molding). ஊது மூழ்த்தம் (Blow Molding). அமுக்க மூழ்த்தம் (Compression Molding). வெளித்தள்ளு மூழ்த்தம் (Extrusion Molding). தெறுமஉருமிப்பு (Thermoforming) என்று பல்வேறு முறைகள் ஏற்பட்டுவிட்டன.  இதில் மாழைபோலவே சில குறிப்பிட்ட பாறைவேதியல் திண்மங்களும் (petrochemical solids) பயன்படுகின்றன.  பொத்து, மூழ்த்து என்பன அச்சு போன்றவை. பொத்தில், மூழ்த்தில், அச்சில் புகுந்து. பின் குளிர்ந்து வெளிவருவது பொத்திகை. இகுத்தல் = சொரிதல். பொத்து +இகை = பொத்திகை. வார்ப்படத்தில் வெளிவருவது வார்ப்பு (font). கம்மவுலையில் வெளிவருவது கம்மம். 

அவ்வளவு தான் ஐயா. இனிமேலும் நெகிழியை plastic இற்கு இணையாய்ப் பயன்படுத்தாதீர். அது elastic என்பதற்கு இணையானது.

அன்புடன்,
இராம.கி.

பொத்திகையும் (Plastic) நெகிழியும் (elastic) - 1

”Plastic என்ற ஆங்கிலச் சொல்லை நெகிழி என்று தானே எல்லோரும் அழைப்பர். நீங்கள் பொத்திகை என்ற குறிப்பிடுகிறீர்களே? அதன் காரணம் என்ன?” என்று நண்பர் ஒருவர் வேறொரு இடுகையின் பின்னூட்டில் கேட்டார். என் மறுமொழி சற்று நீண்டது. நான் தமிழாய்வாளன் மட்டுமல்லன். வேதிப் பொறிஞனுங் கூட. கிட்டத்தட்ட 18 அகவையிலிருந்து  70 அகவை வரைக்கும்  வேதிப்பொறியியலில் பழக்கம். புதுக்கம் (production), நுட்பியல் சேவை (technical service), ஆய்வு- வளர்ச்சி (research and development), புறத்திட்டுப் பொறியியல் (project engineering), மானகை- நிருவாகப் பொறுப்பு (managing and administrative responsiblities) எனப் பல்வேறு நிலைகளில் கும்பணிகளில் வேலை செய்து ஓய்வுற்றவன். புறத்திட்டுக் கட்டுமானமுஞ் (project construction) செய்தவன். Plastic போன்ற பாறைவேதியல் (petrochemical) பொருட்களைச் செய்வதிலும், பல்வேறு செலுத்தங்களுக்கும் (processes) வினைகளுக்கும் அவற்றை உட்படுத்துவதிலும் நெடுங்காலம் கவனங் கொண்டவன். என்னால் நெகிழி என்ற தவறான சொல்லை ஏற்கமுடியாது.

அறிவியலுக்குப் பயன்படக்கூடிய மொழியாய் தமிழ் ஆகவேண்டுமெனில் plastic, elastic, rubber போன்றவற்றின் தமிழ்ப் பெயர்களில் நாம் தெளிவு காட்ட வேண்டும். அருள்கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள். மாகனவியலையும் (mechanics), விளவ மாகனவியலையும் (fluid mechanics) ஆழ்ந்து படித்துப் புரிந்த பின்னர் தான் பொத்திகை (plastic), நெகிழி (elastic) எனும் இரு வேறு பெயர்களைப் பரிந்துரைத்தேன். ஏற்கனவே அறிவியல் ஆழமில்லாத, மேலோட்டச் சொல்லாக்கங்களால் நாம் சரவற்பட்டுக் கிடக்கிறோம். நெகிழி என்பதைப் plastic க்குப் பெயரிடுவது பின்னால் தமிழ்வழி அறிவியல், பொறியியல் , நுட்பியல் புரிதலில் சிக்கலையே கொடுக்கும். எதிர்காலப் பிள்ளைகளின் படிப்பில் நாம் கைவைக்க வேண்டாம்.   இச்சொற்கள் எப்படி எழுந்தன என்ற நீண்ட செய்திக்கு வருவோம்.
 
முதலில் plastic, elastic, rubber போன்றவை மாகனவியலில் (mechanics) எப்படி வேறுபடுகின்றன என்று பார்ப்போம்.  மாகனவியல் என்பது கொஞ்சம் கடினமான துறை. இருந்தாலும் கவனங் கொண்டால் இதன் அடிப்படையைப் புரிந்துகொள்ளலாம். பொதுவாகப் பொதிகளின் (bodies) நகர்ச்சியும் (motion), வளைப்புகளும் (deflections), மொத்தை விசைகளாலும் (bulk forces - காட்டு: புவியீர்ப்பு விசை, அழுத்தம்), பரப்பு விசைகளாலும் (surface forces - காட்டு: கத்திரி விசை - shear force) ஏற்படுகின்றன. விளவங்கள் (fluids) தொடர் விளவுகளையும் (continous flows), திண்மங்கள் வளைப்புக்களையும் (deflections) கொள்கின்றன. பொதுவாக விசைகளையோ (forces), அவற்றால் ஏற்படும் துறுத்துகளையோ (stresses) நிறுத்தினால், தொடர்விளவுகள் நின்றுபோகும். திண்மங்களை விசைகளுக்கு உட்படுத்தினால், அவை தெறித்துடையும்
வரை வளைப்புகளை மட்டுமே காட்டும்; விசைகள் நின்றால் வளைப்புகளும் கலையும்.

[அழுத்துதல் என்பது to press என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. அதைப் பொதுமைப் படுத்தி,  ஒரு பொதியின் 'துகள்களை நெருங்க வைத்தல்' எனும் ஆழ்பொருளிற் துறுத்தலெனும் வினை, பொறியியலில் ஆளப்படும். இது to stress எனும் வினைக்கு ஈடானது. துறுத்தலுக்கு மாறாய் தகைத்தலென்றும் சிலர் ஆளுவர். [காட்டாகத் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலச் சொல் அகர முதலியில் 'தகைத்தலே' உண்டு. நான் அதைப் பயனுறுத்தத் தயங்குவேன். ஏனெனில் tighten என்பதற்கே தகைத்தல் சரியாகும். தவிர, ஐகாரம் பயிலும் தகைப்பை விட,  உகரம் பயிலும் துறுத்து,  பலுக்குதற்கு எளிதாகும். இதனாலேயே நான் துறுத்தலைப் பரிந்துரைக்கிறேன். அதே பொழுது என் பரிந்துரைக்கு மாறி, "தகைப்பு" நிலைத்தாலும், எனக்கு உகப்பே.]

ஒவ்வொரு வகை விசை/துறுத்திற்கும் ஒவ்வொரு வகை வளைப்பு ஏற்படும். அவற்றைத் துறுங்குகள் (strains) என்பார். அழுத்தப்பட்ட பொதி அழுங்குவது போலத் துறுத்தப்பட்டது துறுங்கும் (to get strained). 3 துறுத்தங்களை, மாகனவியல் (mechanics) குறிக்கும். அவை, திணிசுத் துறுத்தம் (tensile stress), அமுக்கத் துறுத்தம் (compressive stress), கத்திரித் துறுத்தம் (shear stress) என்றாகும். அதேபோல, நீளவாட்டுத் துறுங்கு (longitudinal strain), குறுக்குச் செகுத்தத் துறுங்கு (cross sectional strain), பருமத் துறுங்கு (bulk strain), கத்திரித் துறுங்கு (shear strain) என்று வெவ்வேறு துறுங்குகளுண்டு. to stretch என்பதைத் தமிழிற் குறிக்கத் துயர்தல்/துயக்குதல் என்ற சொல்லைப் பயிலலாம். இது நீளுதல்/ நீட்டுதல் பொருளைக் கொடுக்கும். (ஏதோவொன்று stretch ஆகி நீள்வதைத் ”துயர்ந்து கொண்டே வருகிறது” என்று சிவகங்கைப் பக்கம் சொல்வார். தொடர்ந்துவரும் துன்பமும் துயரம் என்றே சொல்லப் பெறும்.)

ஒரு நீளத்தின் துயக்கத் திரிவை (change in the stetch) பொதியின் நீளத்தால் வகுத்துக் கிடைக்கும் எண், நீளவாட்டுத் துறுங்கு (longitudinal strain) எனப்படும். இதுபோல் பருமத் துறுங்கு = பருமத் திரிவு / பொதியின் பருமன்.  கத்தரித் துறுங்கு = குறுக்குச் செகுத்தத் திரிவு (change in cross section) / பொதியின் குறுக்குச் செகுத்தம் என்று வரையறை கொள்ளும். ஒரு திண்மத்தின் பருமத் துறுங்கு, பொதுவாக அழுத்த வேறுபாட்டால் எழுவதெனலாம். காட்டாக, ஓர் இலவம்பஞ்சுத் தலையணையின் தடிமன் (thickness) 5 அணுங்குழை (inches) என்றும், மேற்பரப்பு 10X10 சதுர அணுங்குழை என்றும் வையுங்கள். இப்போது தலையணைப் பருமன் 10*10*5 = 500 கன அணுங்குழை ஆகும். அதன்மேல் இன்னொரு பொதியை எடையாக வைத்தால், எடைக்குத் தக்க இலவம் பஞ்சின் தடிமன் குறுங்கிப் பருமன் குறையும். [எடைக்குப் பகரியாய் நேரடி யழுத்தம் கொடுப்பினும் பருமக்குறைவை ஏற்படுத்தலாம்.] பொதுவாக, எந்தத் திண்மப் பொதியும் அழுத்தமிருக்கும் வரை, பருமனைக் குறைத்துக் காட்டும்; அழுத்தம் நிறுத்தினால் பழைய பருமனுக்கு வந்துவிடும்.

[காட்டாக, A பொதி B- யை அழுத்துகிறதென்று வையுங்கள்; இதை B-யின் நோக்கில், தன்வினையாய், எப்படிச் சொல்லலாம்? A-ஆல் B அழுங்குகிறது. அழுங்குதல் என்பது தன்வினை; அழுத்துதல் என்பது பிறவினை. ஒரு பொதி அழுங்க அழுங்க, அதன்மேல் அழுத்தம் கூடும். அழுங்குவதால் அது அழுக்கு; அழுத்துவதால் அழுத்து. (மாசைக் குறிக்கும் அழுக்குச் சொல் வேறு வகையிற் பிறந்தது.) அழுக்கின் நீட்சியாய் அழுக்கு ஆறுதல் = அழுக்காறுதல் என்பது to get strained என்ற பொருளிற் பிறக்கும். ”அழுக்காறு” என்று திருக்குறளில் வருகிறதே, நினைவு வருகிறதா? அது strained state - யைத்தான் குறிக்கிறது. மாகனவியலில் வரும் கலைச்சொல்லான அது தொடர்ச்சியாய் அழுங்கிக் கிடக்கும் நிலையைக் குறிக்கிறது.

அழுங்கல் வினை தற்பொழுது அரிதாகவே இற்றைத்தமிழில் பயனுறுகிறது. அதற்குப் பகரியாய் அமுங்குதலையே பயனுறுதுதுகிறோம். மாசெனும் பொருட் குழப்பமும் இல்லாதுபோகும். ”அழுத்தத்திற்குத் தக்க, ஒரு திண்மம் எவ்வளவு அமுங்கும்/அமுங்கும்?” என்ற வினவிற்கு விடையாய் soft  குறிப்பு உள்ளது. காட்டாக, 500 கன அணுங்குழைப் பருமன்கொண்ட இருவேறு திண்மங்களில், முதற்பொதி 400 கன அணுங்குழையும், இரண்டாம் பொதி 200 கன அணுங்குழையும் குறைவதாய்க் கொள்ளுங்கள். மாகனவியற் புரிதலின் படி, முதற் பொதி இரண்டாம் பொதியைக் காட்டிலும் soft ஆனது என்பார்.

(இலவம்பஞ்சுத் தலையணை, யூரிதேன் நுரைத் - urethane foam - தலையணையை விடச் சொவ்வை (soft) ஆனது. இரும்பை விட ஈயம் soft ஆனது. வயிரத்தை விட இரும்பு soft ஆனது.  இதேபோல், பொத்திகையைக் ( plastic)விட, நெகிழி (elastic), soft ஆனது.) plastic உம், elastic உம் தாம்பெறும் துறுத்திலும் துறுங்கிலும் கூட வேறு படும். elastic இல் துறுத்தை நிறுத்திய பின் துறுங்கு முற்றிலும் எடுபடுவது விதப்பாகத் தெரிவதால் அதை நெகிழ்ச்சித் துருங்கு (elastic strain) என்கிறோம். இத்தகு நெகிழ்ச்சி plastic க்குக் கிடையாது. Plastic strain வேறு.  மாகனவியலில் plastic- இற்கும், elastic- இற்கும்  அதன் துறுத்து/துறுங்கு நடைமுறை வேறுபட்டது.

softness என்ற சொல் திண்மங்களுக்கே பொருந்தும். யாரும் soft gas, soft liquid என்று சொல்வதில்லை. soft solid என்றாற் பொருளுண்டு. [soft water, hard water என்பவை நீரிற் கரைந்திருக்கும் உப்புக்களைப் பொறுத்துச் சொல்லப் படுகின்றன. அவை வேறு விதப்பான பயன்பாடாகும்].

அன்புடன்,
இராம.கி.

Monday, February 10, 2020

விஷயம்

விஷயம் என்ற சொல் பார்ப்பதற்கு வடமொழி போல் தோற்றினும், அதனுள் பொதிந்துள்ளது தமிழ் வேரே ஆறுமுக நாவலர் முனைப்பில் கிரந்த எழுத்தைத் தவிர்க்க விழைந்து அதே நேரம் வடசொற்களை விடத்தெரியாச் சிவநெறித் தாக்கத்தில் ஈழத்தமிழர் பலரும் விஷயத்தை விடயமாக்குவார். இதற்கு மாறாக ”விஷயம்” எழுந்த வகையை அலசியிருக்கலாம். இதன் மாற்றுச் சொல்லை நான் புகன்று 15, 20 ஆண்டுகளாயின. இணையத்தில் அதைச் சிலர் புழங்கினும், அவ்வளவாகப் பரவவில்லை என்றே சொல்ல வேண்டும். இது போன்ற சொற்பிறப்புச் செய்திகளை எங்கோ ஓரிடத்தில் எழுதிச் சேமிக்கும் படி பல நண்பர் சொல்லி யிருக்கிறார். ஆனால் ”வலியது நிலைக்கும்” என்று சொல்லி நான் நகர்ந்து விடுவதுண்டு. நண்பர் கூற்றை எத்தனை நாள் ஒதுக்குவது? எனவே கட்டுரையாய்த் தொகுக்கிறேன்.
புள்>பிள்>விள் என்ற வேர் ”பிள, பிரி, உடை” எனும் பொருள் சுட்டும் விள்ளித் தின்னும் பழம் விளம்பழம். இதில் இரு வகை உண்டு. கூவிளமென்பது சங்கதப் பலுக்கில் வில்லுவம்> வில்வமாகும். சிவனுக்கு உகந்தது என்பார். இந்தி, அசாமி, வங்காளி, மராத்தியில் bael. குசராத்தியில் பீலி. Aegle marmelos புதலியற் (Botanical) பெயர். கருவிளம் என்பது விளாம்பழமாகும். கபிப்ரியா, கபித்தம் என்ற சங்கதப் பெயரோடு, wood apple, Feronia elephantum என்றுஞ் சொல்வர். (பிள்ளையார் சதுர்த்தி, கலைவாணி பூசை, தமிழ் ஆண்டுப் பிறப்பு, பொங்கல் நாட்களில் விருந்தினருக்கு விளாம்பழந் தருவது ஒரு காலத்தில் தமிழ் மரபு.) யாப்பில் நிறைச்சீருக்குக் கூவிளம், கருவிளம் என்று பெயர்கள் உண்டு. இவற்றின் அடையாளந் தெரியாது பலரும் வாய்ப்பாடு சொல்வர். வடக்கே விளையும் கூவிளமும், தெற்கே விளையும் கரு விளமும் இனிய கனிகள். அதிக இனிப்பிற்கு வெல்லஞ் சேர்த்துக் குடிப்பதுமுண்டு. பல்வேறு மருத்துவ குணங்களை இரண்டிற்குஞ் சொல்வர். (இங்கு விரிக்கின் அவை பெருகும்.) 2 பழங்களுக்கும் பசுமை தோய்ந்த மஞ்சள் நிற ஓடுகள் உண்டு. உடையும் பழங்களாதலால் விளவம் பழங்களாயின. (விளவல் = உடைதல்.) கூம்பிய விளம் கூவிளமாயிற்று.(கூவிள இலை கூர்வேலாகும்.) விளா மரப்பட்டை கருநிறம் எனவே உருண்டை விளம் கருவிளம் ஆயிற்று. முள்ளுள்ள 2 மரங்களும் வறள்நிலத்தில் வளரக் கூடியவை பழத்தின் பெயர் அந்தந்த மரத்திற்குப் பெயரானது. மாம்பழப் பெயர் மரத்திற்கு ஆக வில்லையா?
விள்ளலின் இன்னொரு வடிவம் விண்டல். விண்டிய பழம் இரண்டாகும். விண்டு மலைத் தொடர் = இந்திய நாட்டை வடக்கு, தெற்கு எனப் பிரிக்கும் மலைத் தொடர். விண்டிய மலை என்னுஞ் சொல் வடவர் பலுக்கில் விந்திய மலையாகும். 2500 ஆண்டுகளில் விண்டிய மலையின் பொருள் மறந்தோம். (வெங்காலூர்க் குணா நமக்குச் சொல்லா விட்டால் இதைப் பலருமறியார்..) விளத்தல்= விலக்கல். விள்>விள>விளவு. விளவல் = உடைதல். to get split, to burst asunder. விளவு= நிலம், மலை முதலியவற்றின் பிளப்பு. விளாசல்= தரையிற் போட்டு அடித்தல். ”பிதிரை விள்” எனில் to solve as a riddle or conundrum என்று பொருள். விள்ளில் விளைந்த சொற்கள் கணக்கற்றவை. விள்ளியது விளையம்> விளயமாகும். ஒரு பக்கம் விளைதற் கருத்தில் விளைந்தது என்றும், இன்னொரு பக்கம் இரண்டான செய்தியுங் குறிக்கும். எத்தனையோ விளை பயிர்களில், கரு வளர்ச்சியில், ஒன்று இரண்டாவதே புதுத் தோற்றக் காரணம். வாழையடியில் ஒன்று இரண்டாகி கன்றெனத் தோற்றங் கொள்ளும்.
விள்> விடு ஆகிப் பிரிதலைச் சுட்டும். விடுதல், விடுதலை விடுப்பு, விடுபாடு, விடை என்று பிரிதற் பொருளில் நிறையச் சொற்களுண்டு. விள்> விடு> வெடு> வெடுக் என்பது சட்டெனப் பிரியும் செயலைக் குறிக்கும். வெடு> வெடி, விரிந்து சட்டெனப் பிரியும் பொருளைக் குறிக்கும். விள்>(வெள்)> வெட்டு = பிரி. வெட்டு> வேட்டு வெடிக்கும் பொருளைக் குறிக்கும். விள்> விடு> விடர்= மலை வெடிப்பு, குகை. விள்> விடு> வீடு= விட்டிருக்கும் இடம். விட= மிகவும், காட்டிலும். “அதை விட இது பெரிது.”. ஒன்றை ஒதுக்கி இதைப் பார்த்தால் இது பெரிதென்று பொருளாகும். விட என்பது விடுதற் பொருளிற் கிளைத்தது. விள்> விர்> விரி = பிளத்தல், வெடித்தல்; விரி> விரியம் = பிளவு. இது விரிசமென்றும் பேச்சு வழக்கிற் சொல்லப்படும்., விரிசலும் பிளவே.
விரிசயம் என்பது 2 தமிழ்ச்சொற்களின் வடபாற் பிணைப்பு. விர்சயம்> விர்ஸயம்> விஷயம் என்பது மிகச் சாத்தார வடமொழி பலுக்குத் திரிவு. இது போல், உருநமெனும் உச்சிச் சூடு ஸகர இடைநிலை பெற்று உர்ஸ்நம்> உர்ஸ்ணம்> உஷ்ணமாகும். கருநன் எனும் என் பெயர் க்ருஸ்நன்> க்ருஷ்ணனாகும், சுருக்கெனும் இஞ்சி வேர் சுர்ஸ்க்கு> சுஷ்கு ஆகும். விருடை என்னும் மாடு வ்ருஷமாகும்; விண்ணைக் குறிக்கும் விருணு> வ்ருஸ்ணு>வ்ருஷ்ணு ஆகும். ஏராளமான தென் சொற்கள் இதுபோற் திரிவு காட்டி வட சொற்களாகும். இவற்றினுள் வினைச் சொல் அடையாளந் தெரிந்தால் தமிழ் அடையாளத்தை நாம் காட்டிவிட முடியும். விள் என்ற வினைச்சொல் தெரிந்ததால் இங்கு விரிசயத்தைக் கண்டுபிடித்தோம். .
விரித்தம் என்பதும் விரிசலே. விரித்தம்>விர்த்தம்> வித்தமாகி விதத்திற்கு வழி செய்யும். விதம் = வேறுபட்டது. மாதிரி, வகை, பிரிவு. ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று வெவ்வேறு வகைகளைப் பிரிவுகளைச் சொல்கிறோம். விதத்தை ஏற்படுத்துஞ் செயல் வித்தாயம். வடவர் பலுக்கு முறையில் இது வித்யாயம்> வித்யாசமாகும். தாயக்கட்ட விளையாட்டில் 92 இல் நிற்கும் நீங்கள் 96 ஆங் கட்டத்தில் தாயங் கொள்ள (=தங்கிக் கொள்ள) 4 போட வேண்டுமெனில், அது சிறப்பான தாயம். அதை அடையும் வரை தாயக் கட்டையை வீசியிருக்க வேண்டியது தான். ஓராட்டத்தில் 10 விதத் தேவைகள் ஏற்படலாம். ஈறாறு போடு என்றால் எவ்வளவு நேரம் ஆகுமோ? மேலே (96-92) = 4 என்ற வித்தாயம் போட வேண்டியதால் சூதில் தேவையான, சிறப்பான தாயம் வித்தாயம் எனப்பட்டது. வித்தாயம் = difference. வேறுபாடு என்பதற்கான இன்னொரு நல்ல தமிழ்ச் சொல். விதிர் என்றாலும் difference தான். விதத்தல் = சிறப்பாதல். விதந்தோதல் = சிறப்பாக எடுத்துச் சொல்லல். விதப்பு = சிறப்பு. விதப்புக் கிளவி = சிறப்பு மொழி. விதப்பு விதி = சிறப்பு விதி. வித விடுதல் = சிறப்பித்துரைத்தல். விதிர்+ஏகம் = விதிரேகம் = வேறுபாடு கொள்ளல், எதிர்மறை, வேற்றுமையணி. விதுலம்/விதுரம் = ஒப்பின்மை. விதுலன்/ விதுரன் = ஒப்பு இல்லாதவன். (மகா பாரதத்தில் திருதிராட்டிரன், பாண்டு ஆகியோரின் (மாற்றாந் தாய் வழித்) தம்பி. விதண்டை = பிறர் கூற்றை மறுத்துத் தன் கொள்கை நாட்டாது வீணே கூறும் நிந்தை வாதம், பகை
விஷயம் என்பதை வெறுமே எழுத்துப் பெயர்ப்பால் விடயமாக்கிச் சொல்வதை விட, மூலம் போய் விதயம் ஆக்குவது நல்லதென்று முந்நாளிற் கூறி யிருந்தேன். விதத்தல் = வேறுபடுத்திக் காட்டல் (to differentiate, to speciate, to classify) என்றே பொருள் படும். விதமென்ற தன்வினைப் பெயர்ச்சொல் போல, விதயம் என்ற பிறவினைப் பெயர்ச் சொல்லுங் கிளைக்கும். விதயம் = செயல், புலன், புலனால் அறியும் பொருள், நூல் நுதலிய பொருள், காரணம், பயன்
special = விதப்பான, விதப்பானது
speciality = விதப்பு, விதுமை
specialist = விதப்பாளர், விதுமையாளர்
specialize = விதத்தல்
species = விதங்கள்
specific = விதப்பான
specify = விதப்பித்தல்
specification = விதப்பம், விதப்பிக்கை
specimen = விதமம்
specious = விதக்கக்கூடிய
speculate = விதந்தாடு
விடயம் என்று கொண்டால் இவ்வளவும் விதக்க முடியாது. ஊன்சர (sausage) மொழி போலத் துணைவினை போட்டு பண்ணித்தமிழ் செய்து கொண்டிருக்க வேண்டியது தான். விள் என்ற வேர் இதோடு நின்று விடாது. விர்> விறு> வீறு. வீறல்= பிளத்தல், வெட்டுதல் என்று நீளும்..வீறியது வேறு உறும். வீற்று = வேறுபடுகை, துண்டு. விறு> வெறு> வேறு = பிரிந்தது, பிறிது, கூறுபாடு. வேறு> வேற்று> வேற்றுமை என்றமையும். விளமென்றாலே அடம் பிடித்தவன், அகங்காரம் பிடித்தவன் என்று சிவகங்கை மாவட்ட வழக்கில் பொருள் கொள்வர். விளம் பிடித்தவனுக்கு எதையுஞ் சொல்லி விளக்க முடியாது. அவன் ஒரு விதம். விளமென்றால் நஞ்சென்றும் பொருளுண்டு. விளம்> விஷம் ஆவது சங்கதப் பலுக்கல். விளவாது பங்கு கொள்வது, பிறர்க்குப் பங்கில்லாமற் கொண்டது விளாப்பு எனப் படும். விஷேஷம் என்பது விதப்பமாகும் (மேன்மை, சிறப்பு, மிகுதி, வகை); விஷேடித்தல் = விதப்பித்தல் (சிறப்பித்தல், மிகுதியாதல், அடைகொடுத்துக் கூறல்) என்று பொருள் கொள்ளும். விஷேடியம் = விதப்பியம் (அடையடுத்த பொருள்). விதப்பியம் (விஷேடியம்) என்ற கொள்கையை உருவாக்கியவரே தமிழர் தான். அதைப் பற்றி எழுதத் தொடங்கினால் இன்னும் நீளும்.
முடிவாக இரு வேறு பயன்பாடுகள் சற்று விலகினாற் போலுண்டு. அவையும் விள்ளெனும் வேர்ச்சொல்லின் தொகுதி தாம். ஒரு விதமாய் விதந்து கூறுபவன் சில போது நகையும் வரவழைப்பான். விதூஷகன் = விதந்தகன் (நகைச்சுவை விளைப்போன்) இன்னொரு பக்கம் விதந்து கூறுபவன் விதண்டையாளனாயும் (விதூஷணம் = பெருநிந்தை) இருப்பான்.
அன்பன்,
இராம.கி.