Sunday, May 10, 2026

Raksha, Raksha, Naga

கோராவில் ஒருவர் “what is the etymology of the words Raksha/Rakkha(Rakshasa), Yaksha/yakkha and Naga/Naka? Are they Tamil or Sankrit?” என்று கேட்டிருந்தார். அவருக்குத் தமிழ் தெரியுமாம். இருப்பினும் இச்சொற்களை அறிந்தார் இல்லை. தமிழில்,

 அரட்டு-தல் = அச்சமூட்டு-தல்

அரக்குதல் = வருத்துதல், அழித்தல் என்ற வினைகளில் அடியெழும்  பெயர்ச்சொற்கள் இவை. 

இவற்றை அறிய எந்தத் தொல்கதையும் நமக்குத் தெரிய வேண்டியதில்லை. வெறும் பொருள் போதும். அரக்கு-தலின் வழி,   

அரக்கு> அரக்கன்

அரக்கு> அரக்கி 

அரக்கு> அரக்கதன்> ராக்கதன்> இராக்கதன் என்ற  சொல்லும் பருத்தவன், அச்சமூட்டுபவன் என்ற பொருளில் வரும்.

இனி அரக்கு> அரக்கத்தி> அரக்கச்சி> அரக்க்சசி? அரக்க்ஷசி> ராக்க்ஷசி> ராக்சஷி>இராட்சசி

அரக்கு> அரக்காயி> ராக்காயி

யா = கருப்பு; யாக்கன் = கருப்பன்; யாக்கி = கருப்பன்

யாக்கன்> யக்கன். யக்ஷன்

யாக்கி> யக்சி> யக்ஷி 

அடுத்து ய> ஞ> ந திரிவில் கருப்பைக் குறிக்கும் யா என்ற சொல் நா என்றும் திரியலாம். 

யா>நா; யாக்கன்>யாகன்>நாகன்= கருப்பன்

Thursday, February 19, 2026

வித்தகரும் பொறுதியும்

 எளிமையான குறள் அல்ல. ஒரு மணி நேரம் குழுவாகப் படித்தபோதும், தெளிவான பொருள் கிடைக்கவில்லை. உங்கள் புரிதலை பகிர வேண்டுகிறேன்.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. (குறள் 235)
- என்று நண்பர் நாஞ்சில் பீட்டர் அவருடைய காலக்கோட்டில் கேட்டிருந்தார். அதற்கு நானளித்த மறுமொழி கீழே:
-----------------------------------------
நுந்துதலுக்குத் தூண்டலெனும் பொருளுண்டு. நுந்துதல்>நந்துதல் என்ற திரிவில் தூண்டலோடு, தழைத்தல், வளர்தல், செருக்கல், விளங்கல் என்ற பொருள்களும் வந்துசேரும். விளங்கலின் பொருள் புகழ் தானே? (நந்துதலுக்கு கெடுதல், சாதல், அவிதல், மறைதல், நிந்திக்கப்படுதல் என்ற தலைகீழ்ப் பொருள்களுமுண்டு. இங்கே தலைகீழ்ப்பொருள் கொள்ளமுடியாது. ஏனெனில் நத்தத்திற்கு அடுத்த சொல் கேடு. எனவே நேர்படு பொருளே கொள்ளவேண்டும்.) நந்துதலென்ற வினைச்சொல் நத்தமென்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். நத்தம், இக்காரணத்தால் புகழென்று பொருள்கொள்ளும். கேட்டிற்கு இங்கே வேறுபாடென்ற பொருளையே கொள்ளமுடியும். மற்றபொருட்கள் பொருந்திவராது. வேறுபாடு என்பது இங்கே இகழுரையே.
சாக்காடு = சாகக் கிடக்கும் நிலை. சாவுக்குச் சற்றுமுந்தையது. சிலருக்குச் சாக்காடென்பது சில நொடிகளில், நுணுத்தங்களில் (minutes), நாட்களில், மாதங்களில், ஆண்டுகளில் நடக்கலாம்.. யாருக்கு எது நடக்குமென்று என்று உறுதியாய்ச் சொல்லமுடியாது. தெரிந்தவர், பெரியவர், உற்றார் ஆகியோர் சாகக்கிடப்பவர் அருகுவந்து கிடப்பவர்செய்த நல்லதையே, புகழ்ச்செயல்களையே பேசுவார். சாகக்கிடப்பவர் எவ்வித எதிர்வினையுமின்றிக் கேட்டிருப்பார். ஆனால் இது மட்டுமா சாவீட்டில் நடக்கும்? கிடக்குமிடத்துக்குச் சற்று வெளியே, கிடப்பவரோடு வேறுபட்டுள்ள ஊரார் அவர்செய்த மற்ற செயல்களையும் பேசுவார்/தூற்றுவார். இறக்கக் கிடப்பவர் காதில் அது விழக்கூடாதென்றே நம்மூரில் முயல்வார். தூற்றல் கேட்டால், உணர்ச்சிமேலிட்டு, சாக்காட்டாளரின் உடலுறுப்புகள் தம்செயற்பாட்டை முடித்துக்கொள்ளலாம். சாவு உடனே ஏற்படலாம். ஆனால் வித்தகரோ, புகழுரைகளையும், இகழுரைகளையும் பொருட்படுத்த மாட்டார். அதற்கான மனவுறுதியும், பொறுதியும் அவர்க்குண்டு. இப்பொறுதியே இக்குறளில் பேசப்படுகிறது.
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.
”புகழுரைபோல், இகழுரையும் உளதாகும் சாக்காடு வித்தகர்க்கு மட்டுமின்றி மற்றோருக்கு அரிது”. எனவே ”நமக்குப் புகழ்வந்ததென அகங்காரங் கொள்ளாதீர். இகழுரைகளும் வந்துசேரும். இவற்றைத் தாங்கும் பொறுதி நமக்கு வேண்டுமெனில் வித்தகராகுங்கள்” என்றுணர்த்துகிறார் வள்ளுவர்.
அன்புடன்,
இராம.கி