மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல் அஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
என்பது ஞான சம்பந்தரின் 3 ஆம் திருமுறையில் வரும் 24 ஆம் பதிகத்தின் முதல் பாடல்.
தமிழ்முறைத் திருமணங்களில் தாலிகட்டல் முடிந்தபின் ”இல்லற வாழ்வு தொடங்கும் இருவரும் எதிர்காலத்தில் சிறக்க வாழும்படி சொல்லி, இப் பதிகத்தின் முதல் பாட்டான இதை திருமணத்தை நெறிப்படுத்துவோர் பாடுவார். பதிகத்தின் மிஞ்சிய 10 பாடல்களும் இதே கருத்தில் போகும். நற்பொருள் சொல்லும் இப்பதிகத்தை (குறிப்பாய் இதில் பயிலும் தமிழ்ச் சொற்களின் பொருள்களை) ஒழுங்காய் விளங்கிக் கொள்ளாது ஒரு நாத்திகர் தன் அரைகுறைப் புரிதலால், முட்டாள்தனமான உந்தலால், பதிகத்தினுள் முறையற்ற (ஆபாச) காமச் சொற்கள் பயில்வதாய்ச் சொல்லியிருந்தார். கீழே ஆங்கிலத்தில் வந்த கருத்தை படியுங்கள்..
----------------
In the following poems, 'Dravida Shishu' Thiru Gnana Sambandhar, a Brahmin sage, is appealing to the youngsters attracted to Buddhism and Jainism. "What do you have in these religions? You have to live a dry, womanless life there. Come to Shaivism. My Lord himself is with a beautiful woman with big breasts, slender waist, long vulva and great character. No celibacy is needed here. You can live happily in our religion."
---------------
தமிழ் அறியாத பல நாத்திகர் இது போன்ற தவறான புரிதலில் இப்போதும் இருக்கலாம். இக்கூற்றிற்கான காரணம் வேறொன்றுமில்லை.
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே! 6
எனும் 6 ஆம் பாட்டில் ”அல்குல்” என்ற சொல் வந்துவிட்டதாம்; சம்பந்தர் கெட்ட வார்த்தை எல்லாம் பயின்று புத்த, செயின மாணவரை சிவ நெறிக்குள் அழைப்பதாய் இந்த நாத்திகர் அலறுகிறார். (கந்தனுக்குப் புத்தி கவட்டிற்குள்ளே ” என்ற சொலவடை நாட்டுப் புறங்களில் உண்டு.)
இப் பதிகமெழுந்த வரலாற்றையும் சூழ்நிலையையும் குறிப்பிட்ட நாத்திகர் அறியார் போலும். பாட்டெழுந்த காலத்தில் சம்பந்தருக்கு 14-15 அகவை இருந்திருக்கலாம். திருமறைக்காட்டுக் கோயிற் கதவைத் தம் பதிகங்களால் திறந்து மூடிய அப்பர் சம்பந்தரின் அருளிச் செயல்களுக்கு அப்புறம், அவரவர் வழியில் ஏகுவார். பாண்டிய அரசி மங்கையர்க்கரசி, முதலமைச்சர் குலச்சிறையார் ஆகியோரின் அழைப்பை ஏற்று மறைக்காட்டில் இருந்து சம்பந்தர் மதிரைக்கு ஏகுவார்.
மதிரையில் செயினரோடு வாதாடி, வெற்றி கொண்டு, அடுத்த நாள் ஒரு சிவமடத்தில் சம்பந்தர் தங்கியிருந்த போது அவருடைய தந்தை சிவபாத இருதயர் அங்கு வந்துசேர்வார். தந்தையைப் பார்த்த சம்பந்தருக்குச் சொந்த ஊரான சீர்காழியின் இறைவர் நினைப்பு வந்துவிடும்.பதிகப் 11 பாடல்களிலும் ”சட்ட நாதன் எப்படி இருக்கார்? நலந்தானே?” என்று குறும்போடு இறைவனைப் பற்றிச் சம்பந்தர் பேசுவார்.
நினைவில் கொள்க. தம் தந்தையாருக்கு முன்னால் சீர்காழி இறைவரை நினைந்து மதிரையில் சம்பந்தர் பாடும் பாட்டு இதுவாகும். தந்தைக்கு முன்னால் 14-15 அகவையில் உள்ள இளைஞர், அதுவும் ஒரு துறவி, காம எழுச்சியில் விழைவோர் சூழப் பாடுவாரோ? அப்படியோர் இழிந்த எண்ணம் இந் நாத்திகருக்கு ஏன் வந்தது? புரியவில்லை. ஒருவேளை விக்டோரிய காலத்துப் பழக்கமோ?
”அல்குல்” என்ற சொல்லுக்குப் பெண்குறி என்ற பொருள் திரிகடுகத்தில் தான் முதலில் எழுந்திருக்கிறது. சங்க காலத்தில் அப்பொருள் இல்லவே இல்லை. சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் கூடப் பெண்குறிப் பொருள் இல்லை. சீவக சிந்தாமணியில் 116 இடங்களில் அல்குல் பயின்றாலும் அது எந்தெந்தப் பொருள்களில் என்று நான் ஆயவில்லை.
சங்க காலத்தில் அல்குலைப் பயில யாரும் தயங்கியது போல் தெரியவில்லை. வெகு இயல்பாகவே இச்சொல்லைக் கையாண்டுள்ளார். தவிர, அல்குல் உறுப்பு பெண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண்களுக்கும் உண்டு. மாந்தவுடம்பில் ஒக்கல் (hip) என்றும், இடுப்பு (waist) என்றும் 2 வேறு இடங்களுண்டு. இடுப்பிற்கும் வயிற்றுக்கும் கீழே ஒரு முக்கோணம் போல் காட்சியளிக்கும், சற்று மேடான உறுப்பே அல்குலாகும். இதிலிருந்து தான் 2 தொடைகளும் மாந்தருக்கு வெளிவந்து நீள்கின்றன. முன்னும் பின்னும் புடைத்து நிற்கும் இப் பகுதி அல்குலாகும்.தவிர, அல்குலின் பின்பகுதி புட்டமாகும்.
இருப்பினும், இற்றை அகராதிகளில் பெண்குறிப் பொருள் கொடுத்திருப்பது உண்மை தான். சங்கம் மருவிய காலத்தில் (பொ.உ.4 ஆம் நூ.வில்) ஓர் இடக்கரடக்கலாய்ப் பெண்குறிப் பொருள் எழுந்திருக்கலாம். ஒரு தமிழ்ப் பாட்டில், உரையில் அல்குல் என்ற சொல்லைக் கண்டவுடன், இடம், பொருள் ஏவல், காலம் பார்க்காமல் பெண்குறிப் பொருள் கொள்வது வடிகட்டிய முட்டாள்தனம். பாடலின் சூழ்நிலையைப் பார்க்க வேண்டாமா? அல்குல் என்பதை இக்காலத்திற் பலரும் சொல்லத் தவிர்ப்பதோடு தப்பாகவும் புரிந்து கொள்கிறோம். பல அகரமுதலிகளிலும் தப்பான பொருளையே கொடுத்துள்ளார். உடற்கூறியல் தெரிந்தவர் இது போல் தவறாய்ச் சொல்ல மாட்டார்.
சரி, சொல்லின் சொற்பிறப்பியல் பார்ப்போம். உல்> ஒல்> ஒல்கு> அல்கு> அல்குதல் = ஒடுங்குதல், சுருங்குதல், சிறுத்தல். சங்க காலத்தில் துளைப் பொருளை யாரும் இதற்குப் பொருத்தியதில்லை. அல்குதல் என்பது இன்னும் திரிந்து அஃகுதல் (= ஒடுங்குதல், சுருங்குதல்) என்ற சொல்லும் எழும். அல்குதலோடு இன்னும் 2 சொற்களை நிகண்டுகளில் சொல்வர். முதற்சொல் கடிதடம்; இச்சொல் எப்படி எழுந்தது? கடி = இடுப்பு; தடம் = உயர்/மேல் இடம். கடிதடம் = இடுப்பை ஒட்டியுள்ள உயர்ந்த, மேலான இடம். இங்கே பெண்குறிப் பொருள் இல்லை. அடுத்தது நிதம்பம். இதன் பொருளும் உயரிடம் தான்
இனியாவது நாத்திகர்கள் தமிழ் படிக்கட்டும்.