Wednesday, August 30, 2023

Metro

அண்மையில் metro விற்கு  ஈடாய்த் தமிழில் என்ன சொல்லலாம்? - என்ற கேள்வி இணையத்தில் எழுந்தது. metro என்பது metropolis ஐயும், metropolitan ஐயும் சுருக்கிச் சொல்வதாகும். A metropolis is a large city or conurbation which is a significant economic, political, and cultural area for a country or region, and an important hub for regional or international connections, commerce, and communications. தமிழில் metropolis ஐப் பெருநகர் எனலாம். (மாநகர் என்பது corporation. அதனிலும் பெரியது பெருநகர். தமிழ்நாட்டில் பல்வேறு மாநகரங்களின் நடுவில் பெருஞ்சென்னை மட்டுமே பெருநகராகும்.  

பிரித்தனின் தலைநகரான இலண்டன், பெருநகரான போது Euston பகுதியில் இருந்த பேடிங்க்டன் (Paddington) இருவுள் தட முனையத்தையும் (Railway terminal), அரச குறுக்க (King's cross) இருவுள் தட முனையத்தையும் இணைப்பதற்கு, துரவு மிகுந்த நகர வீதிகளின் அடியில் சுருங்கை வழியில் ஒரு  நிலவடித் தடத்தை ஏற்படுத்தினார். இத் தடத்தை ஏற்படுத்திய குழுமத்தைப் ”பெருநகர் இருவுளி (metropolitan railway) நிறுவனம்” என்று அழைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல சுருங்கைத் தடங்களை இலண்டன் நிலவடி மின் இருவுள் குழுமத்தால் (Underground Electric Railways Company of London) ஏற்படுத்தினார். பின் இருவேறு குழுமங்களும் இணைக்கப்பட்டு ”இலண்டன் பெருநகர் இருவுளி நிறுவனம்” என்று பெயர்கொண்டது. 

இது போல், சென்னை நகரம் வளர வளர, பொதுநிலங்களில், தென்னக இருவுள் (Southern Railway) துறை, தொடரி வழித்தடங்களைக் கூட்டி, 1931 இல் மின்தொடரி வலையைத் தொடங்கியது. இதுதான் இடப்பெயர்ப்பின் முதல் வளர்ச்சி. 

இதன் இரண்டாம் வளர்ச்சியாய், 1995 இல் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை (இப்போது பரங்கிமலை வரை) 19.34 கி.மீ.க்கு ஒரு மேலெழுந்த இருவுள் தடத்தை (Elevated Railway Track) ஏற்படுத்தி, அதன் வழி தொடரிகளை இயக்கினார். இந்த இரண்டாம் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட குழுமத்திற்கு திரள் விரை இடப்பெயர்ப்புக் கட்டகம் (mass rapid transit system) (இடப்பெயர்வு = transit = carrying of people, goods/materials from one place to another) என்று பெயரிட்டார். சுருக்கமாய்த் "MRTS= திவிரைப் பெயர்ப்பு” எனலாம். (சிங்கப்பூரில் metro வை MRT என்றே இன்றும் அழைக்கிறார்.   

இதன் 3ஆம் வளர்ச்சியாய், சென்னைப் பெருநகர் இருவுள் குழுமத்தின்- Chennai Metro Rail Limited (CMRL)- மூலம் (மேழுந்தாற் போலும், சுருங்கையிலும் ஓடும் படி) தடங்கள் அமைத்து தொடரிகளை இயக்கினார். இதுவரை நீலம், பச்சை என 2 தடங்கள் உள்ளன. இன்னும் 3 தடங்களுக்கான கட்டுமான வேலை இப்போது நடக்கிறது. முன் அமைந்த MRTS ஐயும், இப்போதைய CMRL ஐயும் ஒன்றுசேர்த்து CMRL என்றே அழைக்கவுள்ளார். எனவே ”சென்னைப் பெருநகர் இருவுள் குழுமம்” என்ற பெயர் நிலைக்கும். சுருக்கமாய்ப் பெருநகர் இருவுளி என்றோ, திவிரை இருவுளி என்றோ அழைக்கலாம்.   


Wednesday, August 23, 2023

மறதியும் மொழியழிவும்

 பொதுவாக மாந்தருக்கு மறதி என்பது ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கும். நம்முடைய சொற் குவையை நாமே புழங்காது வைத்திருந்தால், நாளாவட்டத்தில் நாம் ஒருசிலவற்றை மறந்து தான் போவோம். (இதனால் தான் சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொன்னார்கள்.)

நமக்குத் தெரிந்த தமிழ்ச்சொற்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 விழுக்காடு அளவை நாம் மறந்தாலும், ஏழு தலைமுறைக்கு (175 ஆண்டுகளில்) அதே மேனியில் தொடர்ந்தால், அப்புறம் இன்று இருப்பதில் கிட்டத்தட்ட 15% தமிழ்ச் சொற்கள் பயன்படாது ஒழிந்தே போகும். அப்புறம் அந்தச் சொற்களுக்கு ஈடாய் இன்னொரு மொழிச் சொற்களை அன்றையத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பயன்படுத்தத் தொடங்குவார்; முடிவில் மொழி என்பது மாறிப் போகும். இப்படித்தான் தமிழியக் கிளைமொழிகள் எல்லாம் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளில் கொடுந்தமிழில் இருந்து மற்ற மொழிகளாய்க் கிளைத்தன. முடிவில், மகதம் வரை விரிந்திருந்த தென்மொழி, இன்று மாலவன் குன்றத்திற்கும் கீழே குறுகிப் போனது.
நம் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், நம் முன்னோர் நம்மிடம் ஒப்படைத்ததை, 2000-3000 ஆண்டுகள் காப்பாற்றி வந்ததை, நாம் தொலைப்பது அவ்வளவு சரியாகத் தென்படவில்லை. நம் பெற்றோரின் கண்ணுக்கெதிரே தோட்டத் தொழிலாளராய்ப் போன தமிழர்கள் (அது போலத் தெலுங்கர்) போன இடத்தில், ஓரளவு மக்கள் தொகை இருந்தும், தம் அறியாமைப் போக்கால், தம் மொழியைக் காப்பாற்றாது போனார். விளைவு? தமிழும், தெலுங்கும் அந்த இடங்களில் தொலைந்து போயின. முத்தம்மா, முட்டம்மா ஆகி, தண்டபாணி தெண்டாபணி ஆகி, காளிச்சரண் கல்லிச்சரன் ஆகி, சரவணன் சர்வன் ஆகி மொத்தத்தில் தமிழ் அடையாளமே தொலைந்தது. மறவாதீர்! தமிழனுக்குத் தமிழே முகவரி.
உங்களுக்குத் தெரியுமா? ஓலாவ் மொழியைத் தொலைத்த அமெரிக்கக் கருப்பர் (ஓலாவ் மொழி மேற்கு ஆப்பிரிக்க மொழி. ஓலாவ் பேசும் பலர் கருப்பு அடிமையாக அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.) பெருமிதத்தையும் சேர்த்துத் தான் 400 ஆண்டுகளில் அவர் தொலைத்தார். இன்றைக்கும் அவர் முகத்தில் பெருமிதத்தைத் தேட வேண்டியிருக்கிறது. மாறாக, மொழியைக் காப்பாற்றியதால், சுரினாம், ஜமைக்கா, மொரிசியசு, பிஜி போன்ற இடங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தி இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது; இந்த இந்திக்காரர் அரசியல், பொருளியல், கல்வி இன்ன பிற துறைகளில் அந்த இடங்களில் முன்னணியில் தான் இருக்கிறார். அவர் முகத்தில் பெருமிதம் இன்றும் இருப்பதைக் கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ் நடை, தமிழ்நாட்டிலேயே ஒருமுறை சீரழிந்து மணிப்பவளம் பெருகி, இப்பொழுது மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் ஓரளவு உயிர்பெற்று வந்திருக்கிறோம். மீண்டும் ஒரு முறை அது அழிய வேண்டாம். நம் வீட்டை நாம் காப்பாற்றாமல், இன்னொருவரா காப்பாற்றுவார்? வரலாறு அறியாதவர் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்.


மேகம்

In meteorology, a cloud is an aerosol consisting of a visible mass of miniature liquid droplets, frozen crystals, or other particles suspended in the atmosphere of a planetary body or similar space. பல்வேறு வகை நீர்மத் துளிகளும், உறைந்துபோன மீச்சிறு கட்டிகளும், அலைபடும் தூசுகளும் நிறைந்து, ஊதும அழுத்தத்திற்குச் (atmospheric pressure) சற்று மேல் அழுத்தம் கொண்டு, கூவளைப் (convex) பேறு கொண்ட கோளப் பொதியைத் தான் aerolsol என்பார். இதைத் தமிழில் காற்றுக் கரைவு என்று சொல்லலாம்.  

இக் காற்றுக் கரைவுகள்  புவிப் பரப்பிற்குச் சற்றுமேல் இருக்கும். நாம் வானைப் பார்க்கையில் ஊதுமக் கோளத்தில் காற்றுக் கரைவுகள் நகர்ந்து கொண்டே இருப்பதைக் காணலாம். இவற்றல் நீர் மட்டுமின்றி. மற்ற நீர்மங்களும் இருக்கலாம். கடலின் மேல் இக் கரைவுகள் வரும் போது கடலிலிருந்து வெளிவரும் நீராவி இக் கரைவுளுக்குள் புகுந்து, அவற்றின் நீர்ச்செறிவை கூட்டும். நிலத்தின் மேல் வரும்போது ஏதோவொரு வெதணத்தில் (climate) கரைவுகளில் இருந்து நீர் வெளிவரலாம். இப்படி நீர் வெளிவருவதைத் தான் மழை என்கிறோம். 

நீர்க்கரைவுகள் எப்போதும் நமக்கு மேலேயே தனித்துத் தெரிவதால் மேகம் என்ற பெயரைப் பெற்றன. ”மேகச்” சொற்பிறப்பு விளக்கத்தைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, 7 ஆம் மடலம், 3 ஆம் பாகம், 54 ஆம் பக்கத்தில் காணலாம். நம்மில் பாதிப்பேர் மேகத்தை megam என்று தவறாய் ஒலிப்பதால், மேகம் வடசொல் ஆகிவிடாது. உண்மையில் ஈருயிர்களுக்குள் இடையில் (intervocalical) வரும் ககரத்தை ”ha” என்று ஒலிக்க வேண்டும். 

சரி, மேகம் என்ற சொல் எப்படி எழுந்தது? 

மீ> மே> மேல் என்பது உள்ளிற்கு எதிரான கருத்தைக் குறிக்கும். ”மேல்” இன்னும் திரிந்து மேல்> மேல்வு> மேவு> மேகு  என்ற சொற்களை உருவாக்கும். (வகரமும் ககரமும் தமிழில் போலிகள்). இனி, மேகு+அம் = மேகம் என இன்னொரு சொல்லும் பிறக்கும். மேகம் அடிப்படையில் வெள்ளைத் தோற்றம் காட்டும். வெவ்வேறு அளவில் ஈரம் மேகத்தில் செறியும் போது காற்றுக்கரைவுகள் கொஞ்சங் கொஞ்சமாய் கறுத்து வரும். கருப்புப் பொருளால், மேகம் என்ற பெயர்ச்சொல் எழவில்லை. மேலே இருப்பதால், மேகம் என்ற சொல் எழுந்தது.  

இனி ஈரம் ஏற ஏற மேகம் என்பது கருமேகம் ஆகும். கருமேகத்தை முகில் என்கிறோம்.