Sunday, November 04, 2018

தூங்கெயில் - 7

எயிலின்பொருளாக மதில் (fortress, wall, fortification) ஊர், நகரம் (town,city) என்று தமிழ் அகரமுதலிகளிற் பொதுப்படக் கொடுப்பர். இவற்றுள் சரியான பொருள் காண்பது எப்போதுமே சிக்கல். இடம், பொருள், ஏவல் பார்க்கவேண்டும். சட்டென்று சொல்லிவிடமுடியாது. எது முதற்பொருள், எது வழிப்பொருள் என்பதும் காணவேண்டும்.

[சில திங்களுக்குமுன் மடற்குழுக்களிற் பேசிய ’தகரம்’ பற்றிச் சொன்னால் மேற்கூறுஞ் சிக்கல் புரியும். ”மயிர்ச்சாந்து, மணம்வீசும் மரவகை, மணம், வெள்ளீயம், உலோகத்தகடு, இதயத்தின் உள்ளிடம்” என அகரமுதலிகளிற் பொதுப்பட அதற்கு விளக்கமிருக்கும். அவற்றைப் படித்தபின், ”மணம்வீசும் மரவகை எது?” என்ற கேள்வியெழுந்தால், இதே அகரமுதலிகளில் விடை கிடைக்காது. விலங்கு, மீன் வகைப் பெயர்களிலும் இதுபோலவே, விதப்பு விளக்கம் கிடைக்காது. ”குறிப்பிட்ட விலங்கோ, மீனோ என்ன இனம்? என்ன குடும்பம்? என்ன வகை விதப்புயிரி (species)?”- என்ற கேள்விகளுக்கும் தமிழில் விடை காண்பது அரிது. வேறுவழியின்றி ஆங்கிலக் களஞ்சியத்தையே நாம் தேடி ஓடவேண்டும். ஒவ்வொன்றிற்கும் இப்படியானால், தமிழ் எப்படி அறிவியல் மொழியாகும்?

இதுபோகத் தமிழ்ச்சொல்லிற்கு அகரமுதலியிற் பொருள்காணும் வழக்கம் நம்மூரில் அரிதென்பதால் துறைசார் அகரமுதலிகளும் பெரிதாய் எழுவதே யில்லை. ஆனாலும், “எங்க வீட்டுக்காரருங் கச்சேரி போனார்” என்றபடி தமிழகப் பல்கலைக் கழகங்களில் அகரமுதலித் துறைகள் உள்ளன. ஏது ஒன்றிற்கும் ஆங்கில வழியிற்றான் அறிவியல் விளங்குமெனில், கால காலத்திற்கும் நோஞ்சானாய், சவலையாய்த் தமிழ் நிற்குமே? வீட்டுமுற்றம், சமையலறை, வெட்டிப்பேச்சு, சவடால், நையாண்டி, கேளிக்கை, திரைப்படம், மேடையுரை, கவியரங்கம், பட்டிமன்றமென வாழ்வின் ஒருபகுதிக்குமட்டும் தமிழை நறுக்கிக் கிடத்தி மற்றபடி ஆறங்கத்தைக் கீழே வீழ்த்தி ஆங்கிலத்தை வணங்குவது சரியா? எண்ணிப்பாருங்கள் தேவைகளுணராது நாமுள்ளதால், எந்தத் தமிழகப் பல்கலைக்கழகமும், ஆய்வு நிறுவனமும், தமிழ் வளர்ச்சித் துறையும் இதைச் சரிசெய்ய முன்வருவதில்லை. ”அம்மாவும் அப்பாவும் வேண்டாம்; ’மம்மியும் டாடியும்’ போதும்” என்று சொல்பவர் நாம் தானே?]

மேற்சொன்ன மதில், ஊர், நகரம் போன்றவை எயிலுக்கு முதற்பொருள்கள் அல்ல. கோட்டைப்பொருளை அகரமுதலிகள் குறிக்கவுமில்லை. மதிலும் எயிலும் ஒற்றைச்சொற்களல்ல; கூட்டுச்சொற்கள். மட்டு + இல் = மட்டில்> மத்தில்>மதில் என சொல் பிறக்கும். மட்டு>மத்து>மத்தித்தல்; மத்தி>மதி= அளவு; ”அம்மட்டும் போகாதே” என்கிறோமல்லவா? மதில் = அளவுகுறிக்கும் வரம்புச்சுவர். இக்கோட்டைக்கு இது வரம்பென (boundary) வரையறுப்பர். மட்டின் மேலிருந்த ”இல்” மதில் என்பது ஓரிரு கல் திண்ணத்தில் (thickness) அமையும் வெறுஞ்சுவரில்லை. அதன்மேல் பெரும்பாலும் கிடைமட்ட நடைத்தளம் உண்டு.

அதேபோல எய்வதற்கான இடம் எய்+இல் = எயிலாகும். மதிலும் எயிலும் எல்லாவிடத்தும் ஒன்றல்ல. எங்களூர்ப் பக்கத்துத் திருமெய்யம் போல், கானப்பேரெயில் (காளையார் கோயில்) போல், மதில் முழுக்க எயிலாகிக் கோட்டையாகலாம். அன்றி மதிலிற் சிலவிடங்கள் எயிலாகலாம். கோட்டையின் அடவு (design), கட்டுமானம் (construction) போன்றவற்றைப் பொறுத்து, வேல்வீரர், வில்வீரர் எயில் மாடங்களில் குவிந்திருப்பர். பழங் குமுகத்தில் அம்பெய்வோரை எயினரென்பர். அம்பு, ஈட்டிகளால் விலங்கு வேட்டையாடியும், மற்றமாந்தரைப் போரிற்கொன்றும், தன்னிருப்பை நிலை நாட்டவும் எய்தல் தொழில் பயனுறும். கோட்டைமதில் மேல் வில்லாளிகளும் ஈட்டியெறிஞரும் நடமாடும்படி அகலும் உள்ளகப் பாதை அகப்பாவாகும். (அகத்திற் பரவியது அகப்பா.) சீனப்பெருஞ்சுவரின் அகப்பா 2 வண்டிகள் ஒன்றையொன்று மோதாமற் பயணிக்குமளவிற்கு அகலங்கொண்டதாம். அகப்பாத் தளத்தைத் தாங்குமளவிற்குச் சுவரின் திண்ணம் (thickness) கூடியிருக்க வேண்டும்.

மதில்பற்றி இன்மொரு செய்தியுஞ் சொல்லவேண்டும். மத்திரை, மதிரையென பழங்கல்வெட்டில் வருவதை ஏற்காமல், மதுரையென மீத்திருத்தி இலக்கியங்கள் சொல்லியதால், ”சுவடிகளே சரி, கல்லைக் கீறியோர் படிப்பு அறியார்” என்பார் தமிழறிஞர். ஆனாற் படித்தவர் சரியா? தலைகீழாய் ஏன் இருக்கக் கூடாது? சுவடிகளில் மதிரையென்ற பெயரே முதலிலிருந்து (பின் சங்கதத்தைப் பார்த்து, வடமதுரை வெளிச்சத்தில் தமிழர் சூடுபோட்டுக் கொண்டதால்) நம்மூரை மீத்திருத்தமாய் மதுரையாக்கினாரா? சொல்ல முடியவில்லை. எது சரி? ஆழ்ந்துபார்த்தால், மதில்>மதிர்>மதிரை என்பது தமிழிற் சிறக்கப் பொருந்துஞ் சொற்பிறப்புத் தான். மக்கள்வழக்கில் கோட்டையால், அரசனால், தலைநகர்க்குப் பெயரிடுவது இயல்பே. சில பழந்தலைநகர்களின் பெயர்களைக் கவனித்தால் இது புலப்படும்.

மகதத்தின் முதல் தலைநகர் அரசகம் (ராஜ க்ருகம். அரசன் இருக்கும் வீடு). சேரநாட்டுக் கருவானது கருவூர், அதன் மதில் வலிந்திருந்ததால் வல்ஞ்சி> வஞ்சி (பலரும் வஞ்சிக்கொடியையும், வஞ்சி மரத்தையும் பிடித்துத் தொங்குவார். நானிங்கு குடவஞ்சி, கொங்குவஞ்சி என இரண்டையுஞ் சொல்கிறேன்), காழ்ஞ்சியது காஞ்சி (காழ்= திடம், உறுதி; காழ்த்த மதில்) சோழ அரசன் உறைந்தது உறந்தை, பகைவர் புகாதவூர் புகார்; மதிலாற் சிறந்தது மதிரை. சங்ககாலத்தெழுந்து (மணலூர்/கீழடிப் பள்ளிச்சந்தையில் அண்மையில் அகழாய்ந்தது ஒருவேளை பழ மதிரையோ, என்னவோ? மதிரைக்கு மிக அருகில் இன்னொரு நகரம் இருந்திருக்குமா???), மதிரை என்பது கண்ணகியால் எரிக்கப்பட்டு, இடம்மாறிப் பின்னைப் பாண்டியரால் மீளவெழுந்து, மாலிக் காபூராற் சீரழிந்து, 1300 இல் 3 ஆம் முறை கம்பண உடையாரால் மீண்டும் எழுந்து, ஆங்கிலரால் அழிக்கவும் பட்டது. 3 ஆம் கோட்டைச்சுவர் அழித்து அதில் மாரட்டு வீதியும், அகழி தூர்த்து வெளி வீதியும் எழுந்தன. சு.வேங்கடேசனின் அண்மைப் புதினமான “காவற் கோட்டம்” மூன்றாங் கோட்டையைப் பற்றிப் பேசும். படிக்கவேண்டிய புதினம். கீழடி ஆய்வு நமக்குப் பழம் மதிரையை அடையாளங் காட்டுகிறது.)

ஆலம்>ஆரம் என்பது மாலைபோல் அமையும் கோட்டையின் சுற்றுவரை யாகும். {circumference; இக்கலைச்சொல்லைச் சுற்றளவென்றே பலருஞ் சொல்வார். என் சிற்றகவையிலும் அப்படியே படித்தேன். அது சரியான தேர்வு அல்ல. கலைச்சொல் படைப்பதில் அவக்கரமாய் இப்படி ஏதோவொன்றை உருவாக்கிப் போட்டுவிடுகிறோம். அது கடைசிவரை குறைப்பட்டுத் தங்கிப் போகிறது. இயல்வெளியில் ஒரு வடிவத்தை இட்டளிப்பதை முகன வடிவியலில் (modern geometry) இடப்பென்பர் (topos). இடப்பியல் (topology), கணுக்குமை (connectedness), வட்டுமை (circularity) என்ற மூன்றுமே வடிவங்கள் பற்றி வடிவியலில் அடுத்தடுத்த புரிதல்களாகும். இவற்றின் பின்னரே அளத்தலுக்கான (measurement) மட்டிகை (metric) எழும். சரியான புரிதலில், அளத்தற் கருத்து முந்திவராது. ஏனெனில் அளவின் மதிப்பு கோல் நுணுகலாற் கூடலாம். அளவற்ற சுற்றுவரைகளும் வடிவியலிலுண்டு. தமிழகத்தின் ’சரியான’ சுற்றளவு என்னவென உங்களுக்குத் தெரியுமா? பகுவல் வடிவியல் (fractal geometry) வழியாய்ச் சற்று எண்ணிப் பாருங்களேன்? நான் சொல்வது புரியும். வட்ட மையத்திலிருந்து சுற்றுவரையின் தொலைவையும் ஆரமென இக்காலத்தில் விதப்பாகச்சொல்வர்.

பெருகு+ஆரம் = பெருகாரம் என்பது பெரிய மாலை. இது கோட்டையினுள்ளே சுற்றிவரும் பெரியபாதை. பெருகாரம்>ப்ரஹாரம் என்று சங்கதத்தில் திரித்து இன்று பெருங்கோயில்களின் உட்சுற்றைக் குறிப்பர். இதைச் சுற்றாலை யென்றுஞ் சொல்வர். திருவரங்கம் போன்ற பெருங்கோயில்களில் 7 பெருகாரம் இருப்பதாய்ச் சொல்வர். (திருக்கண்ணபுரத்திலும் 7 மதில்களிருந்து அதையொரு சோழன் அழித்துச் சுற்றியுள்ள கோயில்களைக் கட்டியதாய் ஒரு தொன்மமுண்டு,) சில கோயிற்பெருகாரங்கள் வீதியாகவே சொல்லப்பெறும். மதுரை அங்கயற்கண்ணி கோயிலின் ஆடிவீதி ஒரு பெருகாரந் தான்

அடுத்தசொல் உவளகம். உள்வு>உவ்வு; உவ்வு+அள்=உவள்= கோட்டையின் உட்பக்கம் interior of a fort என்று விரியும். உவளென்று சொல்லாது இற்றைத் தமிழில் உள்ளகமென நீட்டிமுழக்குவார். குறுஞ் சொற்களைப் பயில நாம் முன்வரவேண்டும். சிறைச்சாலை, மதில், வாயில், பள்ளம் அகழியென்ற பொருட்படவும் உவளைப் பயன்படுத்தியுள்ளார்.

இதற்கடுத்தது ஓதை. மதிலுக்கு வெளியுள்ள அகழியை ஓடையென்றுஞ் சொல்வார். மதிலுக்குள்ளே ஆனால் சற்று ஒட்டி ஒத்தியிருப்பது ஓதை. மதிலைக் காப்பாற்றும் படையினருக்கு மதிலையொட்டினாற் போல் உதவுஞ் சாலை இதுவாகும்.

மதிலுக்குக் கடகமென்ற பெயருமுண்டு. குடங்குதல் = வளைதல், சூழ்தல்; குட>குடம்>குடகம்>கடகம் = கோட்டையைச் சூழ்ந்த மதில் (இங்கே வட்டுமைக்கு மாறாகச் சூழ்தலே முகன்மையுறும்.) மதிலின் இன்னொரு பெயர் காப்பு; கவ்வியது கவ்வு>காவு>காப்பு என்றாகும். கவ்வு>காவு என்பதில் இருந்தே காவடியென்ற சொல் உருவானது. அதையிங்கு விளக்கினால் வேறிடத்திற்கு இட்டுச்சொல்லும். காப்பிற் சூழ்தலே முகன்மைப் பொருள் ஆகும். “திருத்துஞ்சு திண்காப்பின்” என்ற வரிகளை (பட்டினப்பாலை 41) ஓர்ந்து பார்க்கலாம்.

அடுத்துவருவது சாலம். தொடக்ககாலத்தில் கோட்டைகளை வெறுங்கல்லால் அன்றி, மரமுஞ் சேர்ந்தேகட்டினர். (ஆனானப்பட்ட மகதரின் கோட்டை பெரிதும் மரத்தால் ஆனது.) யாமரம் என்பது Hardwickia binata வைக் குறிக்கும். ஆச்சாமரமென்றும் குறிப்பிடுவார் யா எனும் கருமைவேரிற் தொடங்கி யா> யால்>யால்+அம் = யாலம் என்றாகிய பெயரும் இதற்குண்டு. சங்கதத்தில் ஸ்யாலம்>ஸாலம் ஆகிச் சாலமெனத் தமிழில் மீண்டு வரும். மராமரத்திற்கும் சாலப் பெயருண்டு. சாலத்தாலான மதிலையும் சாலமென்பர்.

சிலுகு>சிறுகு>சிறகு என்பது பறவை பறக்க உதவுங்குறிப்பை முதலில் தந்து, பறவை/பறனையின் (பறனை = plane) இருபக்க முடிவாய் (இறுவாய்) இருக்கும் wings-side உறுப்பைக்குறித்தது. (தெருவின் இரு பக்கங்களும் (sides) கூடச் சிறைகளே. சிறை-side என்பது போன்ற தமிழ்-ஆங்கில ஒப்புமைகளுக்கு வழக்கம்போல் இராம.கி.யைக் கடியாது சற்றாழ்ந்து ஓர்ந்து பார்க்கலாம்.) சிறை>இறை என்பது இறுதல்/முடிதல் பொருளில் மதில், ஒருபக்கம், எதிராளிகளைத் தனித்திறுத்தும் இடமெனப் பொருள்கொள்ளும். பார்க்க: இராம.கி.யின் http://valavu.blogspot.in/2011/05/blog-post.html]

அடுத்தது கோட்டைமதிலைக் காப்பாற்றும் நொச்சி. தனிநோக்கில் நொச்சி பாராது, உழிஞை, வஞ்சி, காஞ்சித் திணைகளோடு பொருத்திப் பார்ப்பது தமிழரின் அரசுக்கோட்பாட்டிற்கான புரிதலை நல்கும். தமிழரின் பழங்குடி வாழ்க்கையில், ”தன்(னு)மை, குடி, நிலம், கோட்டை” என்ற 4 உறுப்புக்களோடு தொடங்கிய இக்கோட்பாடு,   .

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசறுள் ஏறு.

எனும் குறளின் படி ஏழுறுப்பாய் விரிந்தது. இதே கருத்து அருத்தசாற்றத்திலும், பின்வந்த சில வடநூல்களிலுமுண்டு. வள்ளுவப் பொருட்பாலுக்கும், அருத்த சாற்றத்திற்கும் ஒப்புமை/வேற்றுமை காணும் பொழுது ஒரு பென்னம்பெரிய நூல் விரியக்கூடும் எந்த ஆராய்ச்சியாளர் முன்வருவார்? கூழென்ற சொல் treasury யைக் குறிக்கும். தவிர, economics ற்கு இணையாகவும் ”கூழியலைப்” பயனாக்கலாம். அரண் = கோட்டை/மதில். படை, கூழ், அமைச்சு, நட்பு என்பவை நிலத்திலிருந்து விரிந்தவை.

அமைச்சென்பது பழங்காலத்தில் மந்திரிகளை மட்டுமின்றி, அரசு இயந்திரத்தையும் உணர்த்தும் [bureaucracy; இதைக் கோத்தொழில் என்று சிலப்பதிகாரங் குறிக்கும். bureaucrat கோத்தொழிலர்/ கோவலர் என்றாவார். சிலம்பின் நாயகனுக்கு கோவலந்தொழில் (bureaucracy) செய்யும் முற்பிறப்பிற் பரதனென்ற இயற்பெயரையும், பரவத்தொழில் (trading. விலையைப் பரத்துபவர் பரதர்; பர-தரும் கடலோடும் பரத-வரும் வெவ்வேறானவர். எழுத்துச்சேர்க்கையும் பொருளும் வேறாகும்) செய்யும் இப்பிறப்பிற் கோவலனென்ற இயற்பெயரையும் அமைத்து ஊழ்விளையாட்டை இளங்கோ உணர்த்துவார்.]

2000 ஆண்டுகளுக்குமுன் அமைச்சர் என்றசொல் இக்கால இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/அதிகாரிகள் (IAS) போன்றோரையுங்கூடக் குறிக்கும். இதே சொல் பாகதம்/பாலியில் அமாத்ய என்றழைக்கப் படும். மேலைமொழிகளில் வரும் administer என்ற சொல்லும் அமாத்ய என்பதோடு தொடர்புள்ளதே. அசோகன் ஆட்சியில் 2000 க்கும் மேற்பட்டு அமாத்யர் இருந்தாராம். இற்றைத்தமிழில் அமைச்சர் என்றதன் பொருளைக் குறுக்கி மந்திரியென்றே புரிந்துகொள்ளப் படுகிறது. அரசியந்தரத்தைக் கட்டி அமர்த்தப்பட்டவர் (அமைத்தியவர்) அமைத்தர்>அமைச்சர். இன்னொருவகையில் அமைத்த>அமாத்ய. அமர்த்தல் = இருத்தல். அமை>அவை>சவை.>சபை எல்லாம் தொடர்புடைய சொற்கள். தமிழேதோ தனித்தது; பாகதம்/பாலி/சங்கதத்திலிருந்து இது கடன் வாங்கியது என்றுகொள்ளாது இதை மேற்கூறிய மொழிச்சொற்களோடு ஒருங்கே பார்த்தால் நான்சொல்லும் தொடர்புகள் புரியும்.   
 
அதிகார உழியைக் (=இடத்தை) கைப்பற்றக் கோட்டை மதிலரணை அழிக்குஞ் செயல் உழியை>உழிஞையாகும். உழிஞை செய்வோரை நொய்ய வைப்பது (வலிவிழக்க வைப்பது) நொச்சிப் பணி. அடுத்த பகுதியில் இவையிரண்டோடு, புரிசை, வாரி, வேணகை, வேதி, வேலி ஆகியவற்றையும் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, November 03, 2018

தூங்கெயில் - 6

தவிர, முகன வாயிலையொட்டி ஞாயிலெனும் பகுதியுண்டு. அது மீச் சிறியதாயுமாகலாம். ஆயினும் அதுவொரு command centre. ஞாயிலும் வாயிலும் வெவ்வேறானவை. ஞா-என்பது காணிக்கும் நிலை (overseeing). கண்ணையும், காட்சியறிவையுங் குறிக்கும் ஓரெழுத்தொருமொழி. ஞாயிலிலிருந்தே நாயகன் கோட்டையைக் கவனிப்பான். யா எனும் காட்சிவேரில் யாயன்> ஞாயன்>நாயன்>நாயகன் எனச் சொல்வளரும். நாயன்=தலைவன். சிவநெறி நாயன்மார் இறைவன்தொண்டர். மக்களுக்குத் தலைவர். நாய்ச்சியார்> நாச்சியார் தலைவியார். தென்பாண்டியில் நாச்சியார் புழக்கம் மிகுதி. [விண்ணவத்திலும் ஆள்வார்>ஆழ்வார் மக்கள்தலைவரே. இன்னொருபக்கம் இறைத்தொண்டர். ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் என்றபெயரை எண்ணிப் பாருங்கள். இச் சொல்லியங்கியல் (word dialectics) தெரியாதார் ”ஆழ்வாரைப்” புரியார். ”திருவரங்கக் கோயிலொழுகு” படித்தால் ஒருவேளை இது புரியலாம். பெருமாளும் பெருந்தலைவனே. ஆண்டான், ஆண்டாள், முதலியென்பார் விண்ணவத்தில் தலைமையர்.] நாவிகன்>நாயிகன் கப்பல் செலுத்துகிறவன். (கண்ணகி தாதை பெருங்கப்பல்களால் நாடுவிட்டு நாடேகும் தொழிலைச் செய்பவன். Shipping owner. வணிகனல்லன்.) நாயிகனும், நாயகனும் வேறானவர். 

கோட்டை மூலையிலோ, முகன வாயிலுக்கு அருகிலோ, கோட்டை உயரத்திலிருந்து எதிரி இடராளிகளை காணும்படி உக்கடம் (watch tower) எனும் கட்டுமானமுண்டு. [இற்றைக் கோவை நகராட்சி அலுவத்துக்கருகில் உக்கட நிறுத்தம் இருக்கிறதே? அது அந்நாளைய watch tower இருந்தவிடம். ஒருபக்கம் கொற்றென்பதற்கு aggresion பொருளுண்டென்றால், இன்னொருபக்கம் கோட்டையையுங் குறிக்கும். அகராதியிற் பதியாத கோட்டைப்பொருளைச் சங்கதப்புழக்கம் பார்த்தே நான் சொல்கிறேன். துருக்குகளே கோட்டைகளை அடையாளங் காட்டியதால் அம் விகுதி சேர்த்துத் துருக்கங்களென (towers) தமிழில் அகட்டுவதுமுண்டு. சங்கதத்திற் கடனாய்ப் போகையில் துருக்கும் துருக்கமும் துர்க்கென்று நின்றே இரண்டையுஞ் சேர்த்துச் சுட்டும்.

துருக்கு>துர்க்கின் ஐ (இறைவி) துர்க்கையாவாள். (இற்றை இந்துப்பார்வையில் இவள் உமையென்றும் அறியப்படுவாள்.) அ+ஐ=அவ்வை=அம்மா, தலைவி [பெண்வழிக்குமுகாயத்திலே தான் பழங்குடிகள் முதலில் வாழ்ந்தார். ஆண்= ஆள்பவன்; பெள்>பெண்= பெள்ளப்படுபவள்= பேணப்படுபவள்; பெள்+தல்= பெட்டல்>பெட்டை; பெண்>பேண். என்ற சொல்வளர்ச்சிகள் பின்னால் பெண் அடிமையுற்றதை நினைவுறுத்தும். பெருமித்த பொதுவுடைமைக் (primitive communism) காலத்தில் பெண்ணே தலைவியாவாள். ஐ என்ற ஈறு பல பெண் வழிப் பெயர்களில் இன்றும் நிலைப்பதே இத் தலைமைக்காலத்தை உணர்த்தும். அய்யை>அய்ஞை>அஞ்ஞை>அன்னை, அக்கை, தங்கை, நங்கை எனப் பல சொற்களை எண்ணிப் பார்க்கலாம்.] துர்க்கைக்கீடான கொற்றவையும் கூட்டுச்சொல்லே. கொற்று+அவ்வை = கொற்றவ்வை> கொற்றவை. கொற்றத்தின் கோட்டைப்பொருள் இப்போது புரிகிறதா? சங்க இலக்கியத்திற் கொற்றம் வருமிடங்களை மீளாய்ந்தால் அப்படிக்கொள்வது தவறென்று தோன்றாது.

கொற்றவன் = கோட்டைக்குத் தலைவன், அரசன்,
கொற்றக்குடை = கோட்டைத் தலைவனின் குடை
கொற்றத்தேவி/கொற்றவ்வை/கொற்றவை/கொற்றவி = கோட்டைத் தலைவி
கொற்றம் = கோட்டை, ஆட்சிப்பகுதி (domain), வெற்றி, வீரம், வன்மை, அரசியல்
கொற்றமுரசு = கோட்டையின் தலையாய முரசு
கொற்றவஞ்சி = தலைவனின் கோட்டை வலியால் நிலைபெற்றதைச் சொல்லி அவன் புகழைப் பாடும் புறத்துறை வல்+ந்+சி= வஞ்சி 
கொற்றவள்ளை = மாற்றார் கோட்டையை வகுந்து சிதற்றியதைக் கூறி தன் தலைவனின் புகழைப் பாடும் புறத்துறை; வள்ளுதல் = வகுத்தல், வெட்டுதல்; வாளால் வள்ளுகிறார்; வள்ளுரம் = வகுக்கப்பட்ட மாட்டிறைச்சி;. அப்படியொன்றும் மாட்டிறைச்சி நம்மூரில் ஒதுக்கப்படவில்லை. மாட்டிற்கு ”மதப்”பொருள் தமிழ் வழக்கிற் கிடையாது. செல்வப் பொருள் மட்டுமே நெடுநாள் நிலைத்தது. 
கொற்றவாயில் = கோட்டையின் வாயில்
கொற்றவுழிஞை = மாற்றார் கோட்டையைக் கைக்கொள்ளும் பொருட்டு நம் தலைவன் படையெடுத்ததைச் சொல்லும் துறை.
கொற்றவைநிலை = கோட்டையின் இறைவிக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை. எல்லா அம்மன் கோயில்களிலும் இறைவிக்குப் பலியிடும் பழக்கம் வெகுகாலமிருந்தது. காலவோட்டத்தில் கொல்லாச் சிந்தனை விரவி, இப்பழக்கம் மறைந்துவருகிறது. இதற்கு மாறாகவே பூசணிக்குள் மஞ்சள்/குங்குமம் விரவிப் பலிபீடத்தில் உடைக்கிறார். சுண்ணமும் மஞ்சளும் சேர்ந்தால் அரத்த நிறங் காட்டும். அம்மன் கோயில்களில் குங்குமம் வாங்கி நெற்றியில் இடுவதும், அரத்தப் போலியைச் சுட்டிக் காட்டும். இதற்கெல்லாம் சங்கதத்தில் பொருள்தேடின், கிட்டாது. நம் மரபுகளில் தேடவேண்டும். நாம் தாம் நம் மரபுகளை இழித்துக்கொண்டிருக்கிறோமே?
கொற்றன்>கொத்தன் = கொற்றைக் கட்டுபவன்; முதலாங்கட்டு, சமையற்கட்டு, பின்னங்கட்டு, வளைவுக்கட்டு, மூன்றாங்கட்டு என எண்ணிக்கைப்படியும், பயன்பாட்டின்படியும் கட்டிடப்பெயர்கள் விரியும். கொற்றை மட்டுமின்றி எல்லாவற்றையுங் கட்டுவதால், ”கட்டுவோன்” எனும் பொதுப்பொருளே கொற்றனுக்கு நாளாவட்டத்தில் வந்துசேர்ந்தது. கொத்து = ஒருதொகுதி என்றசொல் வேறுபட்டது.

கொற்றத்திற்குக் கோட்டை முதற்பொருளாகி, ஊர், நாடு, அரசு, ஆட்சி என்பன வழிப்பொருள்களாய் விரியும். புழக்கங்கூடிப் பொருள்விரிவதும் சுருங்குவதும், மொழிவளர்ச்சியில் இயற்கை. (பிறகேன் அகராதிகளிற் கொற்றத்திற்குக் கோட்டைப் பொருள் தவிர்த்தார்? புரியவில்லை.) குல் எனும் வளைவு வேரில், குல்>கொல்>கொல்+து=கொற்று>கொற்றம் எழும். அதே போல் குல்>குள்>கொள்>கொட்பு, கொட்டு, கொடு, கொட்டில், கொட்டாரம், கோடு, கோட்டம், கோட்டை என்பவையும் வளைபொருளிற் கிளைத்தவையே. வடக்கே பலவூர்கள் கொற்றிற்கு இணையாக garh ஆகிக் கோட்டைப்பொருள் சுட்டும். katta, kot என முடியுஞ் சொற்களும் (kalikatta, Rajkot போன்றவை) கோட்டைக்கு இணைகாட்டும். பல இந்திய ஊர்களின் ஈறுகள் தமிழ்த் தோற்றங் காட்டும். [ஊர்ப்பெயர்களைப் பார்த்தால் இந்தியாவின் வடக்கு-தெற்குத் தொடர்பு பெரிதும் புலப்படும். தமிழின்றி இந்தியாவின் முழுப் பண்பாட்டு வரலாற்றை எழுதமுடியாது. ஆனாலும் தமிழை மட்டந்தட்டுவது நடந்துகொண்டேயிருக்கிறது.] 

[இன்னொரு இடைவிலகல். பேச்சிற்கும் எழுத்திற்குமிடையே தமிழில் ஊடாட்டமுண்டு. பேச்சுவழக்கில் இன்றும் பல றகரச்சொற்களைத் தகரமாய்ப் பலுக்குவோம். (ஆற்றுக்கு>ஆத்துக்கு) டகர, தகர எழுத்துக்களை ஒன்றின்கீழ் இன்னொன்றாய்ப் பிணைத்தே தமிழியில் றகரவெழுத்து உருவானது. இதே போல் தந்நகரப் பழவெழுத்திலிருந்தே கொக்கிவளைந்து றன்னகரம் உருவானது. றகரமும், னகரமும் வெகுநாட் கழித்து உருவானதாற்றான் மெய்யெழுத்தின் முடிவில் வந்துசேர்ந்தன. இது புரியாது, பெருமியிலிருந்து வரிவடிவத்தைத் தமிழி பெற்றதால் தமிழெழுத்துக்களைப் பின்னாற் சேர்த்தாரென்பது தலைகீழ் வாதம் தொல்லியலின் வழியாய்ந்தால் தமிழி-->பெருமி என்பதே சரியான கொடிவழியாகும். அப்படிப் பார்க்கும்பொழுது இந்தியவரலாறும் ஒழுங்காய்ப் புரியும். பேரனைத் தாத்தனென்று சொல்லி நெடுங்காலம் கழித்தவர்க்கு (இதில் மேலையாய்வாளருஞ் சேர்த்தி.) இனிமேலாவது புரிந்தாற் சரி.]

கோட்டைப் பாதுகாப்பென நாம்சொல்வது மெய்யாய் மாற்றார் வலுக்காட்டிற்கு (offence) எதிரான, வலுவெதிர்ப்பு (defence) முனைப்புக்களே. கீழே உழிஞை, நொச்சி, வஞ்சி, காஞ்சி என்ற திணைகள் பற்றியும் விரிவாகப் பேசுவேன். இங்கோர் இடைவிலகல். defence, safety, security, police என்பவற்றிற்குச் "சர்வ நிவாரணியாகப்" பாதுகாப்பு என்ற சொல்லையே பயன்படுத்துகிறோம். இது நம்மைப் பெருந்தொலைவு கொண்டுபோகாது. மாறாக, வலுவெதிர்ப்பு (defence), சேமம்(safety), பாதுகாப்பு(security), காவல்(police) என்று தனித்தனிச் சொற்களைப்பயின்றால் தெளிவுகிடைக்கும். வலுவெதிர்ப்பைச் சுருக்கமாய் அரணென்றுஞ் சொல்லலாம். armyக்கு அரணமென்றும் பரிந்துரைத்தேன். வலுவெதிர்ப்பு முனைப்புக்களில் ஒன்றே எயில்மாடமாகும். கி.மு.462-446 இல், மகதவரசன் அசாதசத்துவிற்குப் பின் வந்த, உதயபட்டனின் பாடலிபுத்தக் கோட்டையில் 54 வாயில்கள், 570 எயில்மாடங்கள் இருந்தனவாம். அவ்வூர் ஏறத்தாழ 14.5கி.மீ. நீளம், 2.5கி.மீ. அகலங் கொண்டதெனில் ஊர்நடுவே எவ்வளவு பெருங்கோட்டை இருந்திருக்கும் ?! - என்று சற்று எண்ணிப் பாருங்கள். எயில்மாடங்கள் எவ்வளவு கருவானவை (crucial) என்று புரியும்

அன்புடன்,
இராம.கி.

Friday, November 02, 2018

தூங்கெயில் - 5

கோட்டையென்பது கோட்டில் விளையுஞ்சொல். வலிய, உயர்ந்த, வளைந்த சுவர் கொண்ட தனியாள்பரப்பான கோட்டையை அரணென்றுஞ் சொல்வர். (வளைத்துக் கட்டப்பட்டது வட்டாகி தென்கிழக்கு ஆசியா எங்கணும் இன்று கோயிலை wat என்பர். நம் தமிழுறவு இதனுளிருக்கிறது. வாட்டைப் போன்றே நாம் கோயிலைக் கோட்டம் என்போம்.) உரத்தன்>அரத்தன்>அரத்யன் என வடக்கே திரிந்து, ராத்யன்>ராஜ்ஜன்>ராஜன்>ராசன்>அரசன்>அரயன் என்றாகும். (இச்சொல்லைப் பொறுத்துப் பாவாணரிடமிருந்து நான்கொஞ்சம் வேறு படுவேன். வடநாட்டுச் சங்கத, பாகத ஊடாட்டம் இதில் கண்டிப்பாய் உள்ளதாகவே நானுணர்வேன்.) சிலம்பின் 29 ஆம் காதையில் ”உரவோன்” வருவதைக் காணலாம். உரவோனும் உரத்தனும் ஒரேபொருள் கொண்டவை. உரவும், அரணும் வலுவைக்குறிக்கும். ”அரண்” பாதுகாப்பையுங் குறிக்கும். அரள்தலென்பது ஒருவர்வலுவால் மற்றோர்பெறும் அச்சங் குறித்தது. மாற்றார்க்கு அச்சம், அரசனுக்குக் காப்பு. (தமிழிற் பல சொற்கள் இது போல் தான் ஈரஃகு வாட்களாகும் - double edged swords அஃகு, விளிம்பு, ஓரம், முனை = edge, corner என்ற சொற்களையும் இத்தொடர்பில் கவனியுங்கள்.)

அரணுக்குள் அரசன் மனை அரண்மனையாகும். கோட்டையை மட்டுமின்றி அதன்சுவரையும் அரண் குறித்தது. கோட்டை, கோட்டமுமாகும். மதிலுள்ள கோயில்களும் மக்கள்வழக்கிற் கோட்டமாகும். (இன்றைக்கும் வட சென்னையிற் கந்தகோட்டமுண்டு.) இலக்கியம் விவரிக்கும் அகப்பா, அரணம், அல், ஆரம், இஞ்சி, உக்கடம், உவளகம், எயில், ஓதை, கடகம், கதவம், காப்பு. கொற்றம், சாலம், சிறை, ஞாயில், நொச்சி, புதவம், புரிசை, பெருகாரம், மாடம், வாயில், வாரி, வேணகை, வேதி, வேலி என்னும் கோட்டையுறுப்புக்களை நாம் முழுதும் அறிந்தோமில்லை; குழப்பமுங் கொள்கிறோம்.

பொ.உ.1250 களின்பின் நிலவிய வெளியாட்சியில் தமிழ்த்தொடர்ச்சி குலைந்து, சங்கநூல்படிக்க ஆட்களருகி, உரைகாரரெழுந்தார். (புரிதல்குறையுங் காலத்தில் தான் புத்துரையெழும்) தமிழ்மூலங்களுக்குச் சங்கதச்சொற்களும், எடுநூல்களும் (reference) சார்ந்தே விளக்கஞ் சொன்னார். விசயநகரப்பேரரசில் தமிழாட்சி குறைந்தது. (அதன்தாக்கம் இங்குமட்டும் ஏற்படவில்லை. தென்கிழக்கு ஆசியா நோக்கிய தமிழர் நகர்ச்சிகூட, மேலையர் வரும்வரை இதனால் நின்றுபோனது. விசயநகர ஆட்சிக்கு அப்புறம் தமிழர் கடலிற் செல்வது அருகிப் போனது. மீண்டும் மேலையர் காலத்திற்றன் இது திரும்பியது.) கோட்டை உறுப்புக்களின் தமிழ்ச்சொற் புழக்கம் குறைந்ததால், ”தூங்கெயில்” யாருக்குப் புரிந்தது சொல்லுங்கள்?

படித்தோர் மொழியாய்ச் சங்கதமானபின் தமிழ் தாழாது போமோ? (இன்று படித்தோர் மொழி ஆங்கிலம். இதன் தாக்கத்தை இன்னும் 100 ஆண்டுகளில் உணர்வோமா? தமிழின் எதிர்காலம் என்ன?) மதில், அரணெனச் சில சொற்களாற் பேர்பண்ணி, உப்பிற்குச் சப்பாணியாடுகிறோம். பல்துறையறிஞர் சங்க இலக்கியம் ஆய்வதில்லை. பல தமிழறிஞரும் உரைகாரர் சொல்லை மேடையிற் பரட்டும் கிளிப்பணி மட்டுமே போதுமென்கிறார். (Are they just conservators, record-keepers and not researchers?) அகரமுதலிகளில், 2-ஆம் நிலைப் பொருளை மட்டுமே பதிகிறார். விளக்கமறியச் சங்கதம், ஆங்கிலத்திற்கே நாம் போகவேண்டியுள்ளது. இதற்குமாறாய்க் ”கோட்டையும் அதன் உறுப்புக்களும்- சங்க இலக்கியப் பார்வை” என்றோர் தமிழாய்வு நூல் என்றைக்கு எழும்? சொல்லுங்கள். 

கோட்டையை அணுகையில் முதலில் அமைவது மிளைக்காடு. அதனுட் புகுந்தபின், முதலைகள் புரண்டசையும் அகழி. கோட்டைக்குத் தக்க, இதன் அகலமும் ஆழமும் வேறுபடும். அருத்த சாற்றம் ஒரு கோட்டைக்கு 3 அகழிகளைச் சுட்டும். அகழ்ந்தமண்ணைக் குமித்து மேடாக்கிய கோட்டை மேட்டிற் (இதை rampart என்பர்; இம்மேட்டைக் குறிக்க அலங்கமென்ற சொல்லும் தமிழில் உண்டு. அல் = மதில். அல்+அங்கம் = மதிலிருக்குமிடம். இன்றுந் தஞ்சாவூர்க் கோட்டைமேட்டை இப்பெயரால் அழைப்பர்.) கோட்டைச் சுவரைக் கட்டி, முட்செடி, நச்சுக்கொடிகளை அம்மேட்டில் வித்தி, மாற்றாரை அணுகவிடாது செய்வர். செம்பாறாங்கல், கருங்கல் எனவடுக்கிச். சேறு, (சங்கு, சிப்பி, கிளிஞ்சல்களாற் செய்த) சுண்ணப்பொடி, முட்டையோடு, கடுக்காய்த் தூள், வெல்லம் பிரிவதால் தேங்கும் கருப்பஞ் சாறு (molasses), இயற்கைப்பிசின் போன்ற பல்வேறு பொதிகள் (bodies) கலந்த சாந்தைப் பூசிக் கோட்டைச் சுவரைக் கட்டுவர். (இதே செம்பாறாங்கல், இதே சாந்தை நான் கம்போடியாவில் பார்த்தேன். அசந்து போனேன். நண்பர்களே! கம்போடியாவைக் கட்டாயம் போய்ப்பாருங்கள். நம்மூர்த் தொடர்பு அங்கு எக்கச்சக்கமாய் உள்ளது. ஆனாலதை ஒழுங்காய் விளக்கிச்சொல்ல ஆட்கள் இல்லை. தமிழை அம்போவென ஒதுக்கி மீளமீளச் சங்கதவழிதான் பலரும் விளக்குகிறார். தென்கிழக்கு ஆசியாவிலுள்ளது தமிழின் தாக்கமே. அத் தமிழடிப்படைமேல் சங்கதம் குந்திக்கொண்டது குந்தியது வென்றது.:-()

இக்கோட்டைகளின் உறுதியறியும்படி, மேற்சொன்ன சாந்தின் பொதிவு (composition), செய்மானம் (procedure) போன்றவற்றை இற்றை அறிவியல் கொண்டு சோதித்துப் பதியாது, மரபுசார் நுட்பங்களைத் தொடர்ந்து தொலைத்த வண்ணம் நாமுள்ளோம். [இந்நுட்பங்களை வைத்து நம்மூர் வெதணத்திற்குத் (climate) தக்கக் குறைச்செலவில் ஏராளம் வீடுகளைக் கட்ட இயலுமே?] இச் சாந்தால் மதிற்சுவர் கட்ட, ஈரம் இய்ந்து (<இழுந்து = உள்வாங்கி) இறுகி, இ(ய்)ஞ்சியாகும். [வளைந்த மதிற்சுவரைக் (கொடு+இஞ்சி=) கொடிஞ்சி என்றும் அழைப்பர். பழந்தேர்களில் தலைவன் நிற்கும் பெருந் தேர்த்தட்டையும், பாகன் நிற்கும் சிறு தேர்த்தட்டையுஞ் சுற்றி மதில்போற் கட்டப்படும் மரச்சுவரையும் கொடிஞ்சியென்றே அழைப்பர்.] நீரின்றி இய்ந்திறுகிய இஞ்சி வேருக்கும் இதே இய்யுங் கருத்துத் தான்.

கோட்டைப் பரப்பும், மதிலும், வாயில்களும், உருளைத் (cylinderical) துருக்குகளும் (turrets), (துருக்குகளின் மேலமையும்) எயில் மாடங்களும், கோபுரங்களும் சேர்ந்தது கோட்டையாகும். துருக்குகள் வட்டமாயன்றிச் சதுர, செவ்வகக் குறுக்குத் தோற்றமுங் கொள்ளலாம். புவியில் வெளிவந்து புறத்தெற்றும் (to project) துருக்கும் (=துருத்தும்) கூண்டைத் துருக்கென்பார். (சொற்பிறப்புத் தெரியாது இதைச் சங்கதமென்பார் உண்டு. புறத்தெற்றும் துருக்குகள் கொண்ட வேதியற் திணைக்களத்தைக் - chemical plant - கட்டும்போது புறத்தெற்று - project - என்று அழைக்கக்கூடாதோ?) துருக்கின்மேற் குவித்து மூடின், குல்>குல்வு>குவ்வு>குவு>கூ என முன்னொட்டாகி, புரமெனும் கட்டடச் சொல்லோடு கூபுரம்>கோபுரமெனும் புதுச்சொல்லெழும். கூ, கூம்பு, கூடம் ஆகியவை சங்ககாலச் சொற்களாகும். கோபுரம் சங்ககாலத்தின் பின்னால் எழுந்தது. கோபுரத்திற்கும் அரசருக்குந் தொடர்பில்லை. (இருப்பதாய் நானும் ஒருகால் நினைத்தேன். கோபுரம்- விமான வேறுபாடு தெரியாதோர் நம்மில் பலருண்டு. கோயிற் கட்டுமானம் பற்றியறியப் பார்க்க:

http://valavu.blogspot.in/2013/10/blog-post.html)

கோபுர/விமானங்கள் (3,5,7,9,11,13 என எண்ணிக்கையிலான) இடைமாடத் தொகுதியோடும், தலைமாடத்தோடும் ஆனவை. (சங்கதத் தாக்கத்தில் தாவதியர்/ஸ்தாபதியர் தலைமாடத்தைச் சிகரமென்பர். (கோயில்களெலாம் நம்முடையன. கோயில் கட்டப் பயனாகும் சிற்பநூல்களெலாம் சங்கதத்தில் என்று காலஞ்சென்ற பேரா.தமிழண்ணல் மனம்வருந்திச் சொல்வார்.) தமிழர்/திராவிடர் கட்டுமானங்களில் இடைமாடத் தொகுதி சதுர, செவ்வகக் கூம்புகளின் கூர்ப்புவெட்டிய கூடமாகும் (frustum of a square or rectangle pyramid). (மாடமாளிகை, கூடகோபுரம் - பலரறிந்த சொல்வழக்காறு. கூம்பு/கூடத்தின் அடிப்பரப்பு வட்டம், சதுரம், செவ்வகமாகலாம்.). இக்கூடமும் hall-கூடமும் வெவ்வேறானவை. வடவர் கோபுரங்களில் கூடம் வேறாகக் காட்சியளிக்கும். விமான/கோபுரத் தலைமாடம் அரைக்கோளம்  (hemispherical) ஆகவோ, அன்றிக் காற்கோளத்தோடு அரையுருளை சேர்ந்தோ (1/4 of sphere+half-cylinder. இதற்கு யானைமாடமென்று பெயர்.) அமையலாம். தலைமாடத்திற் கலசங்களைப் பொருத்தி, கோட்டைக்கொடிகள் அவற்றோடுசேர்த்துக் கட்டப்படும். யானை மாடம் போலவே, கருவறைகளில் கனச்செவ்வகத்தோடு, அரையுருளை சேர்ந்ததை கயப்புட்ட>கஜப்ருஷ்ட வடிவென்று சங்கதத்தில் ஒலிப்பர். நம்மூர் கட்டிட அடவுச் சிந்தனையில் யானையொப்பீடுகள் இப்படிப் பெரிதுமிருந்தன. யானையோடு சேர்ந்து வளர்ந்தவர்க்கு வேறெப்படித் தோன்றும்?
       
அம்பு/ஈட்டி எறிவதற்குத் தோதாய்த் துருக்குச்சுவரின் பலமட்டங்களில் துளைகள் உண்டு. கோட்டையின் வாய்+இல் (gate house) வாயிலாகும். கோட்டைக்குப் பல வாயில்களிருக்கலாம். பாதுகாப்பைப் பொறுத்து ஒவ்வொன்றும் கோட்டைவலுவைக் குறைக்கும். உள்ளிருக்கும் மக்களுக்கோ புழங்குவாய்ப்புக்களைக் கூட்டும். வாயிலை gate ஆய்ப் புரிந்துகொள்வோரே மிகுதி. வாயிலிற் கதவுண்டு. கடந்து செல்வது கடவு>கதவு = gate ஆகும் (இன்னொரு பக்கம் அதுவொரு அடைப்பு.) வாயிலைக் gate house ஆகப் புரிந்துகொள்வதே சரி. [தமிழிய, இந்தையிரோப்பிய மொழிகளுக்கிடை ஆயிரக்கணக்கில் இணைச்சொற்களுண்டு. இவற்றை ஆங்காங்கு என் கட்டுரைகளிற் சொல்வதே எனக்குப் பொல்லாப்பாகிறது. ஆங்கில ஓசையில் சொல்படைப்பதாய் அவதூறு வேறு. வில்லியஞ்சோன்சு, மாக்சுமுல்லர், மோனியர்வில்லியம்சு தாசருக்குமுன் ஏழைசொல் அம்பலமேறுமோ?] வாயிற்கதவுள் சிறு புதவிருக்கலாம் புகுவது புதவு. gate within a gate. புகல்=port. passport=புகற்கடவு. இதுதவிர முகனவாயிலுக்கு முன்னுள்ள தூக்குப் பாலத்திற்கும் அப்பால் பாலத்தொடக்கில் முகமாளிகையின் வாயிற் புகுவழியை அடைப்பதாய் மேலிருந்து கீழிறக்கும் வண்ணம் ஈட்டிகளாற் செய்த சட்டக்கதவுண்டு (portcullis). 

அன்புடன்,
இராம.கி.

Thursday, November 01, 2018

தூங்கெயில் - 4

இதுதவிர, முன்னே சொன்னதுபோல், தொல்காப்பியம் பொருளதிகாரம் களவியலில் ”மெய்தொட்டுப் பயிறல் பொய்பாராட்டல்” என்று தொடங்கும் 11 ஆம் சொற்றத்தில் (சூத்திரத்தில்) ”என்னென்ன விதமாய்த் தலைவன் கூற்று உண்டெ?”ன்பதில் தலைவனின் ஆற்றாமையை நீக்கத் (”குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்”) தலைவனுக்கு நடக்கும் குற்றங்களைப் பாங்கன் வெளிப் படுத்தலும், தலைவன் மறுமொழித்தலும் அடங்கும். இதற்கு நச்சினார்க் கினியர் காட்டும் எடுத்துக்காட்டுகளில் ”குறவமக்கள் தலைவியின்சிறப்பைத் தாம் பயந்ததாய்ச் சொல்வார்” எனும் அகப்பாட்டு தூங்கெயில் எறிந்ததைப் பேசும் இப்பாட்டு நச்சினார்க்கினியர் உரையாலே நமக்குத் தெரிகிறது. இதை ”யார் பாடினார்? எவ்விலக்கியஞ் சார்ந்தது?” என்று நமக்குத் தெரியவில்லை. [கீழே நச்சினார்க்கினியார் கொடுத்த பாட்டை முழுதுங் கொடுத்துள்ளேன். படியுங்கள். ஏதோவொரு வரலாற்றுச் செய்தி உள்ளேயிருக்கிறது.]

கண்ணே,
கண்ணயற் பிறந்த கவுளழி கடாஅத்த
அண்ணல் யானை யாரியர்ப் பிணித்த
விறற்போர் வானவன் கொல்லி மீமிசை
அறைக்கான் மாச்சுனை யவிழ்த்த நீலம்

பல்லே,
பல்லரண் கடந்த பசும்பூண் பாண்டியன்
மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்துறை
ஊதை யீட்டிய வுயர்மண லடைகரை
ஓத வெண்டிரை யுதைத்த முத்தம்

நிறனே,
திறல்விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த
விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்
நலனணி யரங்கிற் போகிய மாவின்
உருவ நீள்சினை யொழுகிய தளிரே

என்றவை பயந்தமை யறியார் நன்று
மறவர் மன்றவிக் குறவர் மக்கள்
தேம்பொதி கிளவி யிவளை
யாம்பயந் தேமெம் மகளென் போரே

இப்பாட்டில், தலைவியின் கண்ணும், பல்லும், நிறமும் முறையே வான வரம்பன் உதியஞ்சேரல் (அன்றி அவன் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரல்) ஆதனின் கொல்லிச்சுனையில் மலர்ந்த குவளைக்கும், பசும்பூண் பாண்டியனின் கொற்கைத்துறை மணற்கரையை அடைந்த முத்திற்கும், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியனின் போர்ச் செங்களத்து நீள்மாமரத்தின் இளந்தளிர் நிறத்திற்கும் ஒப்பிடப் படுகின்றன. ஆரியரைப் பிணித்த சேரலாதன், பசும்பூண் பாண்டியன் என்ற முந்நாள் வேந்தரை இப்பாட்டு குறிப்பதால் பாட்டின் காலம் பெரும்பாலும் கி.மு.120/150 க்கும் முன்னதென்றே தோன்றுகிறது

[கட்டுரைக்கு இடைவிலகலாய், பாட்டின் பொருளை இங்கு கொடுக்கிறேன். ”அவள் கண்ணோ, தூக்கமிழந்து, கன்னந்தடவிப் பார்வைசெலுத்தும் பெரும் யானைகளால் ஆரியரைப் பணித்த, போர்த்திறங் கொண்ட, சேரலாதனின் கொல்லி மலைக்குகையிலுள்ள பெருஞ்சுனையில் மலர்ந்த குவளை போன்றது; அவள் பல்லோ, பல்லரண்களைக் கடந்த பசும்பூண் பாண்டியனின் பெருங்கடலிலுள்ள கொற்கை முன்துறையில், உயர்ந்து பொங்கிவரும் வெள்ளோத அலையால், மணற்கரையை வந்தடையும் முத்தைப் போன்றது; அவள் நிறமோ, திறம் வெளிப்பட்ட உவணரின் தூங்கெயிலை எறிந்த விறல் மிகுந்த முரசோடு போர்வெல்லும் சோழனின் செம்மைசார்த்திய போர்க்களத்தில் இருந்த நீண்ட மாமரக்கொம்பின் தளிர் போன்றது” என்றபடி, அவைகிடைத்தமை அறியாதவர், நன்று, மறவர்மன்றத்தில் இக்குறவர் மக்கள் இன்சொற்களைப் பேசி, ”இவளை நாங்களே பயந்தோம்; இவள் எம் மகள்” என்று சொல்வாரே]

தூங்கெயில் என்ற சொல்லின் பொருளறிய இப்பாட்டில் முகன்மையான குறிப்பொன்று நமக்குக் கிட்டுகிறது. அதாவது தூங்கெயிற்கான போர்ச் செங்களத்தில் மாமரம் ஒன்றிருந்தைக் குறிப்பதால், தூங்கெயில் உறுதியாக அந்தர ஆகாயத்திலில்லை என்பது பெறப்படும்.; அது மண்ணிற்றான் இருந்தது என்பது ஆணித்தரமாய் விளங்கும். எனவே தூங்கெயிலை விண்ணிற் காண முயலும் தமிழறிஞர் அதைவிட்டு மண்ணுக்கு வருவதே நல்லது. சங்க காலத்திற்கு அப்புறமும் சோழன் தூங்கெயிலெறிந்த கருத்து தொடர்ந்து வந்ததையும், ”முயன்றால் முடியாததில்லை; கூரம்பின் அடியை இழுத்து எய்துவிட்டால் எவ்வரணையும் காப்பாற்ற முடியாது” என்று அதற்கு விளக்கந் தருவதாயும், பழமொழி நானூற்றின் 155 ஆம் பாட்டு வெளிப்படுத்தும்

வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம் 'கூரம்பு
அடியிழுப்பின் இல்லை அரண்'.

இப்படிப் பழவிலக்கியத்தில் மட்டுமின்றி, பிற்காலத்தில் குலோத்துங்கசோழன் பெருமைபேசும் குலோத்துங்கசோழன் உலாவும்,

தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா
மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக்
கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும்
பதுமக் கடவுள் படைப்படையக் காத்த
முதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க
வாங்கெயி னேமி வரையாக மண்ணாண்டு
தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய
மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து
மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன்
றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு
மலையெறிய மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத்

என்று பதிவுசெய்யும். இன்னும் கலிங்கத்துப்பரணி (இராச 17, “தேங்கு தூங்கெயி லெறிந்த வவனும்”) , இராசராச சோழனுலா (வரி 13; “வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத், தூங்கும் புரிசை துணித்த கோன்”), விக்கிரம சோழனுலா (வரி 16, 17; “கூடார்தந், தூங்குமெயிலெறிந்த சோழனும்” ) போன்றவையும் பேசும்.

இத்தனை எடுத்துக்காட்டுகளுக்கு அப்புறமும், மேற்கூறிய தூங்கெயிலை, ”ஆகாயக் கோட்டையாய்” கற்பனை கலந்த மீமாந்தக் (அமானுஷ்யக்) குறிப்போடு உரைகாரரைப் பின்பற்றிப் பெரும்பாலோர் நவில்வது வியப்புத் தான். அறிவியற் குறுகுறுப்பும், ஏனெனும் தருக்கும் உள்ள இக்காலத்தில், உரைவழி பாராது, நேரேயே சங்ககாலத்தைப் புரிந்துகொண்டாலென்ன?- என்று நான் கேட்பேன். மேகலை படித்துப் புரியாக்காலத்தில், மீமாந்த விவரிப்புள்ள அதன் காப்பியப்போக்கை நானுங் கேள்வி கேட்டதில்லைதான். ஆயினும், மீமாந்தங் குறைந்த சிலம்பைப் படித்தபின் (அதிலும் கண்ணகி முலைதிருகி எறிய மதுரையெரிந்தது போன்றவை மீமாந்தச் செயல்களே. அவற்றின் நேர்விளக்கமும் என்னிடமில்லை.) மீமாந்த விவரிப்பின்றி தூங்கெயில் எறிந்ததை இயல்பாய் நவில வாய்ப்பில்லையா? தூங்கெயில் என்பது புவியின் குருவிசை (gravity force) மறுத்தசைந்த ஆகாயக் கோட்டையா? அன்றி நிலத்திற் பதிந்த, விதப்பு அடவுள்ள (specialized design) கோட்டைப்பகுதியா? யாருடையது இத் தூங்கெயில்? அரசன் விறல்வியந்து பெயரடை தரும் அளவிற்குத் தூங்கெயிலெறிவது கடினமா?- என்ற கேள்விகளெழும். தூங்கெயிலைப் புரிந்துகொள்ள, கோட்டையையும் அதன் பகுதிகளையும் விரிந்து காண்போம்.

அன்புடன்,
இராம.கி.