Sunday, September 06, 2009

குளிர்ச் சொற்கள்

மாந்தவாழ்வில் பல சூடுகளை (hotnesses) நாம் பட்டறிகிறோம். உறைபனிப் புள்ளிக்கு அருகில் வருவது சிலிர் (chill). [உறைதல் = to freeze. ஒரு பொதி (body) நீர்மமாய் உள்ள வரை ஒரு ஏனத்திலோ, பள்ளத்திலோ, அங்குமிங்கும் அசையமுடியும். ஆனால், குறிப்பிட்ட சூட்டிற்கு இறங்கி வரும்போது அசையாது போவதால் இப்புள்ளி உறைதலாயிற்று. உறு>உறை என்று இச்சொல் வளரும். உறுகுதலும், உறைதலும் ஒரேபொருள் தரும் இருவேறு சொற்கள். frost என்பது ”உறைபனி” என்றும் frigid என்பது ”உறைந்த” என்றும் சொல்லப்பெறும்.] அதற்கும் மேலே குளிர் (cold); அதற்கும் மேலே வெதுமை (warm); இன்னும் மேலே இளஞ்சூடு (mild hot); அதற்கும் மேலே கடுஞ்சூடு (very hot); இன்னும் போனால் கொதிசூடு (boiling). இப்படி ஒவ்வொரு சூட்டையும் வெவ்வேறு சொற்களால், தமிழில் உணர்த்த முடிகிறது. அதே பொழுது, வெவ்வேறு குளிர்நிலைகளைத் துல்லியமாய் விவரிப்பதில் இற்றைத் தமிழில் தடுமாறுகிறோம். நொகை (negative) 50 பாகை செல்சியசிலிருந்து பொதிவு (positive) 50 பாகை செல்சியசு வரையுள்ள வெதணத்தை (climate) தாமாகவோ, அன்றிக் கருவி சார்ந்தோ, மாந்தர் எதிர்கொள்ளும் இக்காலத்தில், தமிழன் மட்டும் புறனடையா, என்ன? உலகின் பல்வேறு வெதணங்களை விவரிக்கு முகமாய், ஊதுமக் கோள வெம்மைக்கும் (atmospheric temperature) கீழுள்ள சூடுகளைக் கீழே பார்ப்போம்.

முதலில் வருவது குளிரெனும் சொல்.

குல் எனும் வேரிலிருந்து குல்>குள்>குள்ளுதல் = குறுகிப் போதல் என்பது விரியும். குறுகியவன் குள்ளன் தானே? எத்தனையோ வினைகளால் நாம் குறுகிப் போகிறோம். அதில் முதன்மையானது நீருக்குள் நின்றவாறே உடல் குறுக்கித் தலையை உள்ளிழுத்துக் கொள்வதாகும். இதையே குள்ளித்தல்> குளித்தல் என்கிறோம். இன்னொரு விதமாய் நீருக்குள் ஆழ்தல் = நீராழல்> நீராடல் என்றும் சொல்லுகிறோம். நெட்டநின்று மேனியில் நீரை ஊற்றிக் கொள்வதும், நீர்த்தாரைக்குக் (water shower) கீழ் மேனிபடிவதும், விசையோடு தூம்பு (tube) நீரை மேனியிற் சிந்திக் கொள்வதும், தொட்டிக்குள் படுத்து நீரில் தோய்வதும், எனக் குளித்தல் பலவிதங்களாய் இன்றாயினும் தமிழரைப் பொறுத்தவரை, அதன் அடிப்படை குள்ளுதலே. நீண்டுகிடக்கும் ஒரு பொருள், முழுக்கவும் குள்ளினால், அது சுருளும் (circles), உருளும், (rolls) கோளமாய்த் (globe) திரளும். குறிப்பிட்ட பருமை (volume) கொண்ட பொதி (body), நுணவப் பரப்போடு (minimum surface) வெளியை நிறைக்க, உருண்டை (round) வடிவமே கொள்ளும் என்பது வடிவியற் (geometry) பாடம். குளிகை, குளியம் (globules) என்ற சொற்கள் உருண்டைகளைக் குறிக்கும். குள்வது குவ்வுதலாகி, அதுவும் நீண்டு குவளுதலாகும். குவள்>குவளம்>கோளம் = உருண்டை.

அடுத்து, சூழமை வெம்மை (environmental temperature) சட்டெனக் குறைந்தாலும், நாம் குள்ளிப்போகிறோம் அல்லவா? நம்மை இப்படிக் குள்ளவைப்பது குள்ளி> குளி>குளிர் என்றாகும். குளிர் கூடக்கூட மெய் ஒடுங்குகிறோம் (குறுமைக் கருத்தைக் கூர்ந்து கவனியுங்கள்); நடுங்குகிறோம். குள்ளுதல் = to become cold O.E. cald (Anglian), ceald (W.Saxon), from P.Gmc. *kaldaz, possibly pp. adj. of *kal-/*kol-, from PIE base *gel-/*gol- "cold." நம் குளிருக்கும் அவரின் cold - ற்கும் உள்ள இணை வியக்கத்தக்கது. குளிருக்கு மாற்றாய்,

நளிர் (நள்>நளி>நளிர்; நள்ளுதல் = நடுங்குதல்),
பனி (பல்>பன்>பன்னி>பனி. இதை விரிவாய்க் கீழே பார்ப்போம்.),
அளி (அள்>அள்ளு>அள்ளி>அளி; அள்ளுதல் = செறிதல், to become compact, சுருங்குதல், சிறுகுதல்),
தண் (துள்>தள்>தண் = நெருக்கப் படுதல், நெருக்கலின் தொடர்ச்சியாய் அமைவது.),
மழை (ஊதுமக்கோளத்தின் மேன்மட்ட மேகங்கள் குளிர்ந்து, ஈரப்பதம் (moisture) செறிந்து (concentrated), கனிந்து (condense), மழை பொழிய, ஊதுமக் கோளத்தின் கீழ்மட்டச் சூடும் குறைவதால், குளிர்ச்சிப் பொருள் இங்கு சொல்லப்பட்டது,)
சாந்தம் (கீழே சிந்து எனும் சொல்லை விளக்கும்போது வருகிறது.)

என்ற சொற்களை அகரமுதலிகள் எடுத்துக் காட்டும். குளிர், நம்மைச் சூழ்ந்த சூட்டிற்கும் கீழுள்ளதைக் குறிக்கும் பொதுமைச் சொல்லாகும்.

அடுத்து, சில் எனும் வேர் குல்லைப் போன்றது. சில்>சில்லி என்பது சிறு துண்டைக் குறிக்கும். சில்லி, சல்லியாய்த் திரிந்து சிறுநாணயத்தைக் குறிக்கும். அக்காலத்தில் 192 சல்லி = 1 உருபாய் ஆகும். ”கண்ணாடிக் குவளையைத் தரையில் போட்டு உடைத்தான்; சுக்கு நூறாய் சில் சில்லாய் ஆகிப்போனது” எனும் வாக்கில், சுக்கு என்பது சுல்>சுல்க்கு>சுக்கு என்றும், சில் என்பது சுல்லின் திரிவாயும் உருவானவை. சுல்>சுரு> சுருங்கு என்ற வளர்ச்சி shrinkage = குறைதல் என்பதை உணர்த்தும். உடல் குறுகுவதை ”உடல் சிறுகும்” என்றும் சொல்லலாம் தானே? குல்>குரு> குறு என்பதைப் போலவே சில்>சிரு>சிறு என்பதும் விரியும். குல்> குன்னி = சிறியது என்பதைப் போலவே சில்>சின்னி என்பதும் பொருள் தரும். சின்>சின்னவன் என்பதும் சிறுமை உணர்த்தும். ஒரு பெருங்கல்லை சில் சில்லாய் உடைத்து உருவம் வடிப்பது சில்லை>சிலை ஆகும்.

குளிரின் விதப்பாய் வருவது சிலிர். இதைச் சில்லீடு என்றுஞ் சொல்லலாம். “அவன் உடம்பு சிலிர்த்திருக்கிறது/ சில்லிட்டிருக்கிறது. சன்னி கண்டதோ? மருத்துவரைக் கூப்பிடுங்கள்” என்கிறோம் இல்லையா? [சில், சன்னியைச்  சிலர் ஜில், ஜன்னி என்றுபலுக்கி அவை சங்கதமோ என்று மயங்குவர்.] சில்லெனும் சொல் குளிரை உணர்த்தியதை அன்றாட வாழ்க்கையிலிருந்தே அறியலாம். வட்டமாய் ஆலித்து, வட்டிலுக்கும் குவளைக்கும் மாற்றி மாற்றி, நீர்ப்பரப்பை அதிகரித்து, வெப்ப வாயிகத்தின் (heat convection) மூலம் சூட்டைக் குறைத்து, தேநீர் அருந்துகிறோமே? ”ஒரு நீர்ப்பொதியை அடுத்தடுத்துத் துளிக்க (making it into droplets) அதன் பரப்பு கூடிப் பொதிச்சூடு குறையும்” எனும் இச் சூழ்க்குமத்தைப் பாமரரும் தம் பட்டறிவாற் புரிந்திருப்பர்.

[துல்>துள்+ந்+து = துண்டு.
துல்>துள்>துளி. துளித்தல் = துண்டித்தல்.
துல்>துள்>துள்வுதல்>துவ்வுதல்>தூவு = dew: O.E. deaw, from P.Gmc. *dawwaz, from PIE base *dheu-.
துல்>துள்>துள்வு>துவ்வு>தூவு>தூவல்,
துல்>துள்>துள்வு>துவ்வு>துவல்>துவலை>திவலை;
துல்>துல்குதல்>துகுதல்>துகள்;
துல்>துரு>துறு>தூறு; மழை தூறுகிறது. தூவு, துளி, தூறு என்ற சொற்கள் அடுத்தடுத்து பெரிய அளவின. மழை தூவித் துளித்துப் பின் தூறும்; அப்புறம் பெய்ந்து, பொழிந்து பின் கொட்டும்.
துல்>துன்>துன்னல்;
துல்>துள்>துளி>தெளி,
துல்>துரு>துறு>தெறு>தெறி. பல்துளி>பஃறுளி என்பது பழந்தமிழகத்தின் தெற்கே இருந்த ஆறு.]

”நீர்ப்பரப்பு கூடக்கூட நீர்ச்சூடு குறையும்” என்பதால் சிறுத்தலை, சூட்டுக் குறைவோடு பொருத்துவார்கள். சில்>சிலிர்>சிலிர்தல். பிறவினையில் இது சிலிர்த்தல் ஆகும். [இப் பிறவினைச் சொல்லால் நடுக்கம், திகைப்பு போன்ற உணர்வுகளைக் குறிப்பர். அவையும் குளிர்ச்சிப் பொருளின் நீட்சி உணர்வுகளே.] சில்-இடுதல் சில்லீடு (chill) எனும் பெயர்ச்சொல் உருவாக்கும். chill: O.E.ciele, cele "cold," from P.Gmc. *kal- "to be cold," from PIE base *gel- "cold."

சில்லிட்ட நீரையே ஆண்டின் பல மாதங்கள் வடபுலத்தார் பயனுறுத்துவதால் சில்>சல்>சலம்>ஜலம் என்று திரிவில் நீர்ப்பொருளைச் சங்கதம் சுட்டும். [சலசல என்ற ஒலிப்பொருளில் ”சலம்” பிறந்ததாய்ச் சொல்வது இன்னொரு விளக்கம்.] ஜலத்திலிருந்து ஜலீலம் என்ற சங்கத நீட்சி ஏற்படும். மேலை நாடுகளில் சிலபோது நீரும் பனிக்கல்லும் சேர்ந்து காற்றோடு பெய்யும் மழை வருவதுண்டு. இதை sleet என்பார். சில்லின் நீட்சியாய் பனிக்கல்லைச் சில்லுக்கல் எனலாம். [sleet ஐ சில்லுக்கல் மழை என்று தமிழில் எளிதாய்ச் சொல்லலாம். கல்லை ஒதுக்கிச் சிலிதை என்றுஞ் சொல்லலாம்.]

சில்லின் நெருங்கியதிரிவில் சல்>சல்நம்>சன்னம் ஆகி thin - சிறுமை காட்டுவது போல, மெய் சில்லிட்ட நிலையை சல்நி>சன்னி எனும் சொல் அடையாளம் காட்டும். சில்>சின்னி என்பதும் அதே நிலை காட்ட முடியும். ஒரு நீர்ப்பொதி சில்லுறும் போது, சிலும்பும் (சில்>சிலு> சிலும்பு), சில்கும், சீகும், சீகுறும். (சீகரம் இப்படி எழும்.) சிதறும் (சில்தல்>சிதல்> சிதர்> சிதரு>சிதறு. சிதர், சிதரம் = மழைத்துளி ). பின் சில்ந்தியும் போகும் (>சிந்தும். சிந்தல்= சொரிதல்). சிந்திய பொருளின் சூடும் குறையும்.

சிந்து என்பது துளி, நீர், ஆறு, கடல் என்பதோடு வெள்ளை நிறத்தையும் குறித்தது இங்கு கவனிக்கத் தக்கதாகும். பனியும் வெள்ளை தானே? சுல் என்னும் வேர் வெள்ளையைக் குறிக்கும். சுல்>சுல்லு>சுள்ளி என்பது வெள்ளியைக் குறிக்கும். சுல்லு>சுல்லம்>சுல்வம் என்பது சங்கதத்தில் வெள்ளியைக் குறிக்கும் (ஆங்கில silver). வெள்ளை நிறத்து ஆண் விந்து சுல்>சுல்க்கு> சுக்கு>சுக்கிலம் எனப்படும். வெள்ளை நிறத்து வெள்ளிக் கோள் சுல்>சுல்க்கு>சுக்கு>சுக்ர என்ற திரிவில் சங்கதப் பெயர் கொள்ளும். சுல்>சுவ்>சுவேது எனும் வடமொழி வளர்ச்சியும் வெள்ளை குறிக்கும். சுவேதாம்பரர், வெள்ளையாடைச் செயினரைக் குறிக்கும் சொல். இன்றைக்கு கேரளத்தின் பெரிய ஆறான பெரியாறு சுள்ளியம் பேராறு என்றே சங்க இலக்கியத்தில் பேசப்படும். நீரக அயனிச் செறிவு (hydrogen ion concentration) கூடிப்போய் களரி அரங்கில் (alkali range) வருமாகில் ஆறு பால் நிறம் காட்டும். பால் நிறம் வெள்ளி நிறம் தானே?

வெள்ளைப் புள்ளிகளையுடைய ஆடு, மாடுகளைச் சிந்துவகை என்று குறித்துள்ளார். வெள்ளை நிற இருவாட்சி (Tuscan jasmine) சிந்து என்று சொல்லப் படும். செல், சி(ந்)தல், சிதலை என்ற சொற்கள் வெண்ணிறக் கறையானைக் (termite) குறிக்கும். சிந்தின் சகரத்தைப் போக்கி இந்தெனும் பழக்கம் நமக்கு  உண்டு. சிந்து எனும் சொல் இகர/அகரப் போலியில் சந்து என்றும் திரியும். சந்த்ர என்றும் வடவர் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஒலி வேறுபாடுகளோடு

இந்துகமலம், சந்த்ர காம்பியம், சித அம்புஜம் = வெண்டாமரை,
இந்த்ர புஷ்பம் = வெண்தோன்றி,
இந்த்ரபம் = வெட்பாலை

என்னும் சில சித்த மருத்துவப் பெயர்களைப் பார்த்தால், ”இந்து, சிந்து, சந்து, சந்த்ர” என்ற சொற்களுக்கும் வெண்மைக்கும் ஒரு தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

சிந்தாற்றின் உயர்பகுதிகளில் கரைகளை ஒட்டிய பாறைகளில் படிவமாய்க் கிடைக்கும் உப்பு சிந்துப்பு எனப்பெறும். [சகரம் தவிர்த்து இந்துப்பு என்றும் இதைச் சொல்வர்.] வடக்கே இந்தி மொழியில் ”சந்தா நமக், சிந்தா நமக்” என்றும் இதைச் சொல்வார். நம் சித்த மருத்துவ அகராதிகளில் ”சந்திர லவணம், சிந்து, சிந்துசாரம்” என்றும் இது சொல்லப்படுகிறது.

இந்த உப்பின் கதையைச் சற்று விரிவாய்ப் பார்ப்போம். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென்னிந்தியா வடகிழக்கே நகர்ந்து ஆசியாவை முட்டியது என்பார். இரண்டிற்கும் இடைப் பட்ட டெதிசுக் கடல் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து ஆவியாகிப் போனதாம். இதனால், பழங்கடலின் உப்பு செறிந்து, படிகமாகிப் பல மாத்திரிகள் (meters) உயரத்திற்குப் பள்ளங்களை நிறைத்து, பாறையானதாம். மேலும் மேலும் ஆசியாவோடு மோதியதால், உப்புப் பாறைகளுக்கும் மேல் வண்டலும் மண்ணும் படிந்து, கூடவே நில மடிப்பு விழுந்து, உயர்ந்து, குன்றுகள், மலைகள் ஏற்பட்டனவாம். இம்மலைகளின் தொடரே இயய மலைத் தொடராகும். காலம் செல்லச்செல்ல, இமயமலை மேல் பனிப் பாறைகள் உருவாகி, வெப்பம் கூடும் காலத்தில், பனியுருகி மேற்கே வழிந்து வளைந்து, சிந்தாறு ஏற்பட்டுத் தென்மேற்கில் ஓடியதாம். அப்பொழுது, அது வண்டல்களை வாரிக் கொள்வதோடு அன்றி, பனிப்பாறைகள் ஆற்றின் இருபுறத்தும் மூடிநிற்க வழி ஏற்படுத்திப் போனது. பனிப்பாறைகளின் கீழே பனியுருகி நிலப்பாறைகளின் புரைகள் (pores) வழி ஊடுறுவிக் கசிந்து, அங்கிருந்த உப்பைக் கரைத்து கீழ்ப்புரைகள் வழியாய் வெளிப்பட்டு, சில இடங்களில் தொடர்துளிகளாய் ஆண்டு முழுக்கச் சொரிந்திருக்கிறது. செறிந்த உப்புக் கரைசலில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் நீர் ஆவியாகும் போது நிலப் பாறையோரங்களில் புரைகளுக்கு அடுத்து சரஞ்சரமாய் உப்பு மீண்டும் படிகமாகித் தொங்கிக் காட்சியளித்தது.

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நடந்துவரும் இப் புவிச்செயல்கள் 50000  ஆண்டுக்கணக்கிலும், அதற்குப் பின்னும் படர்ந்த இந்திய முதன்மாந்தருக்கு புரியவா செய்யும்? அவர் பார்த்ததெல்லாம் பனிப் பாறைகளும், அவற்றிற்குச் சற்று கீழே சரமாய்த் தொங்கும் உப்புப் படிவங்களும் தானே? கடற்கரை இலாக் குறிஞ்சிநிலத்தாருக்கு, கடலுப்பின் பகரியாய்ச் சிந்துப்பு பயனுற்றது. அம்மாந்தரின் பார்வையில், சிந்துப்பு என்பது பாறைகளில் பனிபடர்ந்து சொரிவதால் இயல்பாய் விளையும் உப்பு. (Rock salt is formed naturally on mountains and rocks, being solidified from falling dew. It is an impure chloride of sodium.) உலகின் விந்தை விளைவுகளில் சிந்துப்பும் ஒன்று. இற்றைப் பாக்கித்தானில் உப்பு அரங்குப் (salt range) பகுதிகளில், ஆற்றிற்கும் உப்பிற்கும் உள்ள பொதுக் கரணியத்தால் இப்பெயர் ஏற்பட்டது. அப் பொதுக்கரணியம் என்ன?

சிந்து எனும்சொல் துளி, நீர், ஆறு, கடல், வெள்ளை மட்டும் குறிக்காது, மிகுந்து சில்லிட்ட நீர் அல்லது பனித்துகள் என்பதையும் குறித்திருக்கும் என்று கீழ்வரும் பல கரணியங்களால் ஊகிக்கிறோம். அக் கரணியங்களில் முதலானது, ”ந்நு, ந்து” என்ற பலுக்கற் திரிவுகள் இருந்தாலும் தமிழிய மொழிகளில் இணைச்சொற்களாகி ஒரே பொருளைச் சுட்டி அமைவதாகும்.. காட்டு: வந்நு/வந்து, பந்நு/பந்து. (நகர ஈறு னகரம் ஆவதையும் இங்கு சேர்த்து எண்ணலாம்.) சில்>சின்>சின்னு என்ற வளர்ச்சி ஏற்படுமானால் சின்னு/சிந்து என்ற திரிவும் தமிழில் அமையக் கூடாதா, என்ன?

snu என்னும் சங்கத வேர்ச்சொல்லிற்கு dripping, trickling, sprinkling என்ற பொருட் பாடுகளைச் சொல்வார். சில்>சின் எனும் தமிழ்வேரில் கிளைத்த சின்னம், சீந்தல் என்ற தமிழ்ச்சொற்கள் மழைத்தூறலைக் (drizzling) குறித்ததாய் அகராதி நிகண்டு பதிவுசெய்யும். கோவை, நீலமலை மாவட்டங்களைச் சீத நாடென்று சொல்லிக் கொடுந்தமிழ் 12 நாடுகளில் ஒன்றாய்க் காட்டுவார். சீந்து, சீந்தல், சீதம் ஆகிய தமிழ்ச் சொற்களின் முந்திய வடிவாய்ச் சிந்து என்ற சொல்லே அமைய முடியும். அதற்குப் பனிப்பொருள் (cold, chill) இருந்திருக்க பெரிதும் வாய்ப்புண்டு. தூவப்பட்ட (sprinkle) பனித்துகள், உருகி நீரானால், அது சொட்டும் (drips), துளித்து விழும் (trickles) தானே?

snu என்ற சங்கதச் சொல்லை ஒட்டிய மேலைச் சொற்கள் பலவும் உள்ளன. snow: O.E. snaw "snow," from P.Gmc. *snaiwaz (cf. O.S., O.H.G. sneo, O.Fris., M.L.G. sne, M.Du. snee,Du. sneeuw, Ger. Schnee, O.N. snjor, Goth. snaiws "snow"), from PIE *sniegwh -/*snoigwho- (cf. Gk. nipha, L. nix (gen. nivis), O.Ir. snechta, Welsh nyf, Lith. sniegas, O.Prus. snaygis, O.C.S. snegu, Rus. snieg', Slovak sneh "snow") என்று அவை அமைந்திருக்கின்றன. ஓர் ஆண்டில் ஆறேழு மாதங்கள் பனிநீரைத் தங்கள் மேனிமேற் சொரிந்து கொண்ட வடபுலத்தார் snu என்ற சொல்லோடு தொடர்புறுத்திக் குளித்தலை ”ஸ்நாயதி” என்று சொல்லி ஈரப்படுதல் என்று பொருள் கொண்டார்கள். வடக்கே குள்ளக் குளிக்க முடியாது; ஓரளவு ஈரப்படுத்திக் கொள்ளவே முடியும். [The cognate in Skt., snihyati, came to mean "he gets wet."] சுடுநீரால் தான் அவர்கள் ஆண்டின் பல மாதங்கள் குளிக்க முடியும்.

சிந்திற்கும் பனிக்கும் தொடர்பில்லையெனில், சிந்தாறு என்று கூட்டுச்சொல் ஏற்பட வாய்ப்பேயில்லை. [சிந்து எனுஞ் சொல்லை ஈச்சமரத்தோடு தொடர்பு காட்டி திரு. நா. கணேசன் பொருள் சொல்வார். அதையேற்க எனக்குப் பெருந் தயக்கம் உண்டு. இன்னும் சிலர் சிந்தின் சங்கத வேராக ஸித் = செல்லைக் காட்டுவர். அந்த வேர் சிந்தின் விதப்பான பொருளாகாது பொதுமையான பொருளாய் உள்ளது. எப்பொழுதும், ஆற்றின் பெயர்கள் பொதுமையில் இல்லாது விதப்பாகவே இருப்பதையே நாம் காண்கிறோம். காட்டு: பொன்னி, கன்ன பெருநை, தாம்ப பெருநை, வெள்கை>வைகை]

சிந்தாற்றின் சிறப்பே, மக்கள் புழங்கும் உயர்பகுதிகளில், வடந்தைப் பருவத்தில் (வாடை, வடந்தல்> vadanther> vidanther> winther> winter) ஆற்றின் கரையோரங்கள் பெரிதும் பனி பொழிந்து பாறைகளாவது தான். பனிப்பாறை படர்ந்து கிடக்கும் சிந்தாற்றின் மேற்பகுதிகளை மிகப் பழங் காலத்தில் மாந்தர்களால் அணுக முடிந்திருக்க வேண்டும். அற்றை நிலையில், மீள மீள வெம்மை கூடும்போது பனிப்பாறை உருகி, நீராய் மாறிப் போவதையும் பின் வெம்மை குறையும்போது, நீர் உறைந்து பனிப்பாறை ஆவதையும் அவர் பட்டறிந்திருக்க வேண்டும். சிந்தியதும், உருகியதும் நீர்த்துகளே என்ற புரிதல் அவர்க்குப் பட்டறிவால் ஏற்பட்டிருக்கும். இச் சிந்தனைகளின் வழி ஓர்ந்துபார்த்தால், சிந்தாற்றின் பொருள் பனியாறு என்பதாய் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருவோம். [கூடவே silver river - வெள்ளாறு என்ற புரிதலும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடியும். தென்னகத்திலும் நாலு வெள்ளாறுகள் வேறு காரணம் பற்றியுள்ளன. சிந்து என்பது வெள்ளைப் பனி. இவை வெறுமே வெள்ளாறுகள்.]

சிந்தாறு = பனியாறு என்ற அதே அணுகலைக் கொள்ள முடியாத அளவிற்கு, காடுகள் மிகுந்து, மலைப்பாதைகள் அமையாது, கங்கை, தொழுனையின் (யமுனை) மேற்பகுதிகள் இருந்திருக்கலாம். வடபுலத்து மாந்தர், தம் நாகரிக வளர்ச்சியில் சிந்தாற்றங்கரையில் இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்த பின் தான், கங்கை, தொழுனைக் கரைக்கு மெதுவாய்ப் பெயர்ந்திருக்கிறார். எனவே பனியைச் சிந்தாற்றோடு மட்டுமே தொடர்புறுத்தியிருக்கலாம். கங்கை, தொழுனையின் நீர் மலையின் கீழ்மட்டங்களில் மட்டுமே அணுகக் கூடியதாய் இருந்ததால், பனியைக் காணாது வெறுமே சில்லிட்ட நீராய் மட்டுமே வடபுல மாந்தர் இவ்வாறுகளை உணர்ந்திருக்கலாம்.

முன்சொன்னது போல், சிந்து எனும் சொல் இகர/அகரப் போலியில் சந்து என்றும் திரியும். சந்து, சாந்தென்றும் நீளும். சந்தின் நீட்சியாய்ச் சந்தன் என்ற பெயர் குளிரும் இரவிற்குரிய, பால்வண்ணம் காட்டும், நிலவின் பெயராய் வடபுலத்திலமையும். சந்த>சந்த்ர என்று சங்கதத்தில்  இன்னுந் திரியும். சிந்து, சகரம் தவிர்த்து இந்தாகி மீண்டும் நிலவைக் குறிக்கும். நிலவைக் குறித்த சொல் இன்னுந் திரிந்து இந்த>இந்த்ர என்றாகி வெள்ளை நிறத் தேவர் தலைவனைக் குறிக்கும். அத்தலைவன் ஏறும் விலங்கையும் வெள்ளை யானை என்று தொன்மஞ் சொல்வார். அவன் பார்வைக் குளிர்ச்சிப் பார்வை என்றும் அவர் தொன்மங்கள் கூறும்.

குளிர்வது, நிலவிற்கு இயல்பானதால், தண்ணவன், நிலவைக் குறிக்கும். [தண் எனும் வேர் பற்றி இக்கட்டுரையில் அலசவில்லை.] இதுபோல ஒரு குறிப்பிட மரக்கட்டைகளை அரைத்துப் பெற்ற கலவை குளிர்ச்சி தருவதால், நிறம் வெள்ளையன்றி வேறாயிருந்தும், சந்து சந்தனம் என்ற சொற்களைப் பெறும். பின் அக்குளிர்ச்சி உடலைச் சார்வதால் சார்ந்து>சாந்து>சாந்தம் என்று பெயரும் வேறுவகையிற் கொள்ளும். சாரம்>ஆரம், சாரல்>ஆரல் நீட்சிகள் இன்னும் அடுத்த சொல்வளர்ச்சி நிலைகள் ஆகும்.

சிந்து, சந்து, சீதம் போன்ற பல்வேறு சொற்களை விரிவாகப் பார்த்த நாம் இனிப் பனி என்று பலரும் பயன்படுத்தும் சொல்லைப் பார்ப்போம்.

”ஒரு நீர்ப்பொதியை துளிக்கத் துளிக்க அதன் பரப்பு கூடிப் பொதிச்சூடு குறையும்” என்ற வாக்கிலேயே பனி என்ற சொல்லுக்கான உட்பொருளும் அடங்கியுள்ளது. ஒரு நீர்ப் பொதி 100 ml இருக்கிறது என்று வையுங்கள். அதை நூறு 1 ml பொதிகளாய் மாற்றினால், பரப்புக் கூடுமா, இல்லையா? இன்னும் பகுத்து, ஆயிரம் 0.1 ml பொதிகளாய் ஆக்கினால் பரப்பு மேலும் கூடும். மேலும் பகுத்து பத்தாயிரம் 0.01 ml பொதிகளாய் ஆக்கினால், நீர்ப்பொதியின் பரப்பு எக்கச்சக்கமாய் கூடிப்போகும். இப்படிப் பகுப்பதின் விளைவால் பொதியின் சூடு, சுற்றுச்சூழலுக்குப் பரவிக் குளிர்ந்துகொண்டே வரும். பொதிகள் பலவாகப்பலவாக, ஒவ்வொரு பொதியும் தன்னளவில் சிறிதாகிப் போகும். பொதிப் பன்மையோடு, தனிப்பொதியின் சிறுமை அமைவதில் இயங்கியற் (dialectics) தொடர்பு சேர்ந்தே வரும். இதனால், சிறுமைக்குச் சொன்ன குளிர்த் தன்மை, பொதிகளின் பன்மைக்கும் பொருந்தி வரும். இந்த அடிப்படைக் கருத்தோடு பன்மையைச் சற்று ஆழ்ந்து பார்ப்போம்.

கல்>கால், கல்>கள்>காள் என்ற சொற்கள் கருமையைக் குறித்தது போல் பல்>பால், பல்>பள் என்ற சொற்கள் முதலில் வெண்மையையே ல் குறித்தன. வாயிலிருக்கும் பல்லிற்கு வெண்மையே முதற்பொருளாய்ச் சொல்லப்பட்டது. அதேபொழுது, பல் ஒன்றல்ல, ஒன்றிற்கு மேற்பட்டது. அதனால் ”ஒருமைக்கு மீறியது” என்ற வழிநிலைப் பொருள் அடுத்து ஏற்பட்டு இருக்க வேண்டும். பல்குதல் வளர்ச்சியும் பல்லில் தொடங்கியதே. ”பல” போன்ற சொற்கள் பல் எனும் பருப்பொருளில் ஏற்பட்டன என்று புலவர் இளங்குமரன் ”தமிழ் வளம் -சொல்” என்ற தன் பொத்தகத்தில் விளக்குவார். [வெளியீடு. திருவள்ளுவர் தவச்சாலை, திருவளர்குடி (அல்லூர்), திருச்சி மாவட்டம் 620101] பல்லில் பிறந்த பல்வேறு சொற்களை அதில்  விளக்குவார். படிக்கவேண்டிய கட்டுரை. பலாப் பழத்தில் பல சுளைகள் இருப்பதால் தான் பலா என்ற சொல் ஏற்பட்டது. பலாச்சுளைகள் போலப் பருத்திக்காய் வெடிக்கையில் பருத்திச் சுளைகள் பல இருக்கும். பல்>பன்>பன்னு> பன்னல் என்ற பெயர் இப் பன்மைக்காரணம் பற்றியே பருத்திப் பஞ்சிற்கு ஏற்பட்டது. இதேபோல நீர்த்துகள் பலவாறாய்ச் சிதறிக் கிடப்பதால் பல்> பன்>பன்னி>பனி என்ற சொல் ஏற்பட்டது.

பனி என்ற சொல் நீரின் திண்மத் துகளை மட்டுமல்லாது, நீரின் நீர்மத் துகளையும் குறித்தது. இல்லாவிட்டால் மார்கழி மாதம் நம்மூரில் காலை வேளையில் ”பனி பெய்கிறது” என்று எப்படிச் சொல்வோம்? பனி என்பது நீர்மமா, திண்மமா என்பதில் இரண்டுங்கெட்டான் நிலையை இச்சொல் வழி பார்க்கிறோம். நொய், பொடி, புழுதி, நுறுங்கு என்ற சொற்கள் தெளிவாய்த் திண்மத் துகள்களைத் தமிழில் காட்ட, பனியின் வரையறை நம் புழக்கத்தில் துல்லியமாய் இல்லை தான். அதேபொழுது பனித்துகள் என்றால் திண்மம் என்று தெளிவாய்ச் சொல்லிவிட முடியும். பனியின் நீர்ம நீட்சியாய், வடவர் பனி>பானி>பாணி, பனி>பானி>பானீயம் போன்ற சொற்களைப் பயில்வர். [இதேமுறையில் தான் சிந்திற்கு நீர்ப்பொருள் ஏற்பட்டுள்ளது. அப்படியானால், சிந்தின் முதற்பொருள் பனி போல் தான் இருந்திருக்க வேண்டும் என்ற புரிதலையும் பனி>பாணி வளர்ச்சியில் தலைகீழாய்ப் புரிந்து கொள்ளலாம்.] பனியின் இன்னொரு நீர்ம நீட்சியாய் பனித்தல் என்ற வினை தமிழில் விடா மழையைக் குறிக்கும். பனியின் மீகுறை வெம்மையை உணர்த்துமாப் போல பனிப்பு என்ற சொல் தமிழில் நடுக்கத்தை உணர்த்தும்.

வெள்ளை நிறத்தை உணர்த்துமாப் போல பல்>பல>பலதேவன் என்ற பெயர் கண்ணனின் அண்ணனைக் குறிக்கும். பல்>பால்>வால் என்னும் திரிவில் வாலியோன் பெயரும் அவனையே குறிக்கும். வால்>வல்> வெல்>வெள் என்ற திரிவும் வெள்ளையே குறிக்கும். பால் நிறம் கொண்டே, பல்>பால்ப்பு>பார்ப்பு>பார்ப்பனர் என்ற சொல் எழுந்ததாய் இரா. மதிவாணன் உறுதி செய்வார். வெள்ளை நிறத்துக் கலைமகள் வெள்ளை மெய்யாள், வால்>வானி>வாணி என்று பெயர் பெறுவாள்.

பால்>பாள்>பாள்+ந்+து = பாண்டு என்றசொல் வெள் நீற்றைக் குறிக்கும். வெள்நீற்றை இனக்குழு அடையாளமாய்ப் பூசியவர் பாண்டியர் எனப் பட்டனர். பாண்டியர் பற்றிய பல செய்திகளும் வெள்ளையைத் தொடர்பு உறுத்தியே வருகின்றன. [வெள்நீறைப் பூசும் பழக்கம் ஆத்திரேலியப் பழங்குடியினருக்கும் உண்டு. பாண்டியர் பழங்குடியினர் என்ற தமிழர் தொன்மமும் ஆத்திரேலியப் பழங்குடியினர் தமிழகம் வழியாகப் போய் இருக்கலாம் என்ற இற்றை ஈனியற் கண்டுபிடிப்பும் இப்பழங்குடிப் பழக்கங்களை ஆழவும் ஆய்வுசெய்யத் தூண்டுகின்றன.] இதேபோலச் சாரல் = சந்தனத்தை இனக்குழு அடையாளமாய்ப் பூசியவர் சாரலர்>சேரலர் எனப்பட்டனர். மஞ்சட் தூளை [அது காடியரங்கில் (acid range) இருந்தால் மஞ்சளாயும், களரியரங்கில் (alkali range) இருந்தால் குங்கும நிறத்திலும் இருக்கும்] பூசியவர் கொல்>கோழு>கோழியர்>சோழியர் எனப் பட்டனர். பழைய முப்பெரும் தமிழ் இனக்குழுக்களும் இன்று தமக்குள் ஒன்றாய்க் கலந்து போய், தமிழர், மலையாளிகள் என இரு பெரும் தேசிய இனங்களாய் மாறிப் போயினர். இரு தேசிய இனங்களிடையே நீறு பூசுதலும், சந்தனம் பூசுதலும், மஞ்சள்/குங்குமம் பூசுதலும் இனக்குழு மிச்சங்களாய்த் தங்கிப்போய், அதேபோது சமய வழக்கங்களாய்க் காட்சியளிக்கின்றன. இப் பழக்கங்கள் சிச்சிறிதாய் இந்தியாவின் மற்ற தேசிய இனங்களுக்கும் சமய வழி பரவியது ஒரு பெரும் வியப்புத்தான்.

ஆலி பற்றி ”நாரணன்” என்ற என் முந்தையப் பதிவில் பேசியிருந்தேன். தேவையானவற்றை இங்கு முழுமைகருதி வெட்டியொட்டுகிறேன். [முழு விவரம் வேண்டுவோர் அதைப் படியுங்கள்.] வெப்ப நாடான நம்மூரில் காலங் கெட்டு திடீரென்று, வானத் தலைகீழ் மாற்றத்தால் ஆலங்கட்டி மழை பொழிவதைப் பார்த்திருக்கிறீர்களா? அது என்ன ஆலங்கட்டி? வேறு ஒன்றுமில்லை நீர்க்கட்டி/பனிக்கட்டி இதை hailstone என்று ஆங்கிலத்திற் சொல்லுவார்கள். [க.து. ஆலிகல், ம. ஆலிப்பழம், குட.ஆலிகய், பட ஆனிகல்லு. க. ஆலி, ஆணி, ஆரி, பட. ஆனிகல்லு; கோத. அரகசு; தெ.குரு.மால், குட ஆலி; து ஆலிகல்லு, குவி,மே ஆஜி, பர் ஏதிர், ஏயிர் - ஆகத் தமிழிய மொழிகளிற் பரவலாய் உள்ல சொல்.] சிறு சிறு கற்களைப்போல வானத்தில் இருந்து நீர்க்கட்டி மழை கொட்டுகிறது. விழுந்த வேகத்தில் தரைச்சூட்டில் ஆல் [ஆலம், ஆலங்கட்டி, ஆலி] உருகிக் கரைந்து போகிறது. [ஆலித் தண்மழை - ஐங்குறுநூறு 437; ஆலஞ்சேர் கழனி தேவா.2.81.7 என்ற காட்டுக்களை இங்கு ஓர்ந்து பாருங்கள்.] ஆகப் ice/பனிக்கட்டியைத் தெரியக் குளிர்நாட்டில் வாழத் தேவையில்லை. வெப்ப நாடாயினும் தெரிந்து வைத்து, இலக்கியத்திலும் நாம் பதிந்திருக்கிறோம். ஆல், ஆலம், ஆலி என்ற சொற்கள் குளிர்நீரையும், பனிக்கட்டியையும் குறித்தவை தான்.

ஆலம் என்பதன் திரிவாய் ஆயம்/அயம் என்பதும் தமிழில் நீரைக் குறிக்கும். [அயம் திகழ் சிலம்பு - ஐங்குறுநூறு 264.2] O.E. is "ice," from P.Gmc. *isa- (cf. O.N. iss, O.Fris. is, Du. ijs, Ger. Eis), with no certain cognates beyond Gmc. ஆலி என்பது ice-யைக் குறிக்கச் சங்கநூலில் பயன்பட்ட சொல். இன்றோ எல்லாவற்றிற்கும் பனி என்பதையே வைத்து dew, ice இவற்றிற்கு வேறுபாடு காட்டத் தெரியாமற் சுற்றிவந்து கிளித்தட்டு ஆடிக் கொண்டிருக்கிறோம். ஆலிக்குழைவு = ice cream. என்று சொல்லக் கூடாதா? பனிக்காற்றும் ஆலிமழையும் வெவ்வேறானவை. ஆலி என்னும் சொல் இந்தக் கால அறிவியற் சிந்தனையைத் தமிழில் துல்லியமாய் விளக்கப் பயன்படும் சொல்.

துல்லியம் கருதி, மேலே விவரித்த பல்வேறு குளிர்ச் சொற்களைக் கொண்டு இற்றைத் தேவைக்குத் தக்கக் கீழ்க்கண்டவாறு நாம் பட்டியலிடலாம்.

winter = வடந்தை, வடந்தல், வாடைக் காலம்
chill = சிலிர்
snow = சிந்து
ice = ஆலி
freeze = உறைதல்
O.E. freosan "turn to ice" (class II strong verb; past tense freas, pp. froren), from P.Gmc. *freusanan (cf. O.N. frjosa, O.H.G. friosan, Ger. frieren "to freeze," Goth. frius "frost"), from P.Gmc. *freus-, equivalent to PIE base *preus- "to freeze," also "to burn" (cf. Skt. prusva, L. pruina "hoarfrost," Welsh rhew "frost," Skt. prustah "burnt," Albanian prus "burning coals," L. pruna "a live coal").
frost = உறைபனி
frigid = உறைந்த
c.1420 (implied in frigidity), from L. frigidus "cold, chill, cool," from stem of frigere "be cold;" related to frigus "cold, coldness, frost." Frigidaire as the proprietary name of a brand of refrigerators dates from 1926.
refrigerators: உறுகி(ப்பெட்டி):
arctic = வட துருவம். வடதுருவத்தில் மேல் நோக்கிப் பார்த்தால் கரடி உடுக்கூட்டம் தெரிந்தது என்று மேலையோர் பெயரிட்டிருக்கிறார்கள். நாம் துருவ விண்மீன் தெரிகிறது என்று பெயரிட்டிருக்கிறோம்.
c.1391, artik, from O.Fr. artique, from M.L. articus, from L. arcticus, from Gk. arktikos "of the north," lit. "of the (constellation) Bear," from arktos "bear," the Bear being a northerly constellation. From the usual I.E. base for "bear" (cf. Avestan aresho, Arm. arj, Alb. ari, L. ursus, Welsh arth); see bear (n.) for why the name changed in Gmc. The -c- was restored 1556.
blizzard = பனிப்புயல்
1859, origin obscure (perhaps somehow connected with blaze (1)), it came into general use in the hard winter 1880-81, though it was used with a sense of "violent blow" in Amer.Eng., 1829; and blizz "violent rainstorm" is attested from 1770.
sleet = சிலிதை
c.1300, slete, either from an unrecorded O.E. word or via M.H.G. sloz, M.L.G. sloten (pl.) "hail," from P.Gmc. *slautjan- (cf. dial. Norw. slutr, Dan. slud, Swed. sloud "sleet"), from root *slaut-. The verb is attested from c.1325.
hail = ஆலங்கட்டி
glacier = ஆலியோடை
1744, from Fr. glacier, from Savoy dialect glaciere "moving mass of ice," from O.Fr. glace "ice," from L. glacies (see glacial).

பனி, குளிர், நளிர், அளி, தண் போன்ற சொற்களை நாம் ஒதுக்க வேண்டியதில்லை. அவற்றைப் பல இடங்களில் நாம் பொதுமைச் சொற்களாய்ப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்துவது குளிரின் புரிதலுக்கு வழிவகுக்கும்.

அன்புடன்,
இராம.கி.