கீழே வருவது என் நண்பர் இண்டிராம் தமிழ் உலகம் மடற்குழுவில் "புழம்பரின் மேல் ஒரு புழம்பு வேலை" என்ற மடலுக்கு அளித்த பின்னூட்டு; அவருடைய மடலையும் என் மறுமொழியையும் இங்கே உங்கள் வாசிப்பிற்குக் கொடுக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
-----------------------------------------------------------------
நண்பர் ராமகி
தமிழகத்தில் தொழில் நுட்ப, அறிவியல் கருத்தரங்கங்களில் எப்படி ஆங்கிலத்தில் தான் உரையாற்றுகிறார்கள், தமிழில் அல்ல,
என்று குறிப்பிட்டிருந்தார்.
இது பொதுவாக தமிழ் மொழி பேசுபவர்களின் இயலாமையை சுட்டிக்காட்டினாலும் மற்ற இந்திய மொழிபேசுபவர்களிடமும் உள்ள குறைபாடுதான் இது ஒரு மொழியின் குறைபாடா அல்லது மொழிபேசுபவரின் குறைபாடா? தமிழ் மொழி காப்பாளர்கள் இம்மாதிரி போக்குக்கு பதில் அளிப்பார்களா? பல மொழிகள் பேசுபவர்கள் (குறிப்பாக இந்தியர்கள்)
கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை தங்களது வெளிப்பாடுகளில் குறைவாகப் பயன்படுத்திவருவதை அவதானிக்கலாம்
பழைய மொழிகளெல்லாம் வெறும் அடிப்படை உணர்வு, கருத்து, சிந்தனை வெளிப்பாடுகளுக்குத்தான் அம்மொழி பேசுபவர்களால் பயன் படுத்தப்படுகின்றன. நுணுக்கமான விடயங்களை, தற்கால வாழ்க்கைக்கு தேவையான
விடயங்களை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால் எல்லோரும் சகஜமாக ஆங்கிலத்துக்குத்தான் தாவுகிறார்கள்
இந்த நிலமையை பெரும்பாலானோர் (பெரிய படிப்பு படித்தவர்களும், பாமரர்களும் கூட) ஏற்று வருகிறார்கள்.
ஏனெனில் ஒரு மொழி எதற்காக உள்ளது என்பதை ஆராயவேண்டும்? அதாவது தன்னுள் தோன்றும் உணர்வுகளையும், சிந்தனைகளையும், கருத்துக்களையும், பிறர்க்கு "தெளிவாகத்" தெரிவிப்பதற்காகத்தான்
பேராசிரியர் குழந்தைசாமி படியகத்திற்கு அருகே சென்று
"உள்ளுரும நுட்பியற் செயலாளருடன்,
உள்ளுருமச் செயலர்,
படியகத்தின் முன்னால்,
தொடக்கச் செற்றம்,
பொது அரங்கு,
நுட்பியச் செற்றம்,
முடிவுத் தொகுப்பு"
என்ற சொற்றொடர்களை பயன்படுத்தி உரையாற்றியிருந்தாரானால், நண்பர் ராமகியைத் தவிர மற்றவர்களெல்லாம் அரங்கத்திலிருந்து ஓடியிருந்திருப்பார்கள் அல்லவா?
லெட் டS பி டுரூத்புல் அண்ட் ரியலிSடிக்
--------------------------------------------------------------------------
நண்பர் திருவரசு குறிப்பிட்ட குறுக்குவழி அறுவை சிகிச்சை என்கிற சொல்லாடல் தற்காலத் தமிழகத்தினரின் வாயிலிருந்தும்
பேனாவிலிருந்தும் இயல்பாக வராது. எல்லோரும் "பைபாS சர்fரி" என்றே சொல்லி எல்லோருக்கும் தெளிவாகத்
தமிங்கிலத்தில் தெரிவித்துவருகிறார்கள். அதே மாதிரி "ஊசிவழியாகக் குருதிக் குழாய்களில் மூன்று சின்னஞ்சிறிய குழாய்களைப்"
என்று சுற்றி வளைத்து சொல்லாமல் மூணு Sடெண்ட் போட்டாங்க" என்று தான் இயல்பாக சுருக்கத் தமிழில் சொல்லி வருகிறார்கள்.
இந்த பிரச்சனை தமிழ் மற்றும் இதர இந்திய மொழியினரையும் பாதித்துவருகிறது. ஆகவே நாம் நம்மவர்களை மட்டும்
குறை சொல்லி மாரடிக்க, தலையில் குட்டுபோட வேண்டாம். இந்த இயலாமை பேராசிரியர் திரு.குழந்தைசாமியையே
பாதித்திருக்கிறாது என்றால் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படித்துவரும் வருங்கால தமிழ்ச் சந்ததியினரிடமிருந்து வருங்காலத்தில்
நாம் தமிழ் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம்? எதிர்பார்க்கக்கூடும்?
இன்னும் குறைவானப் பயன்பாடுதான் இல்லையா?இந்த மொழித் தேய்மானத்தை, அழிவு நோக்கி ஓடும் நிலைமையை தடுக்கமுடியுமா? இக்கேள்வி பல மொழியினரின் அடிமனதில் இருந்து உறுத்தி வருகிறது. தங்களது கருத்தென்னவோ?
இண்டி ராம்
-------------------------------------------------------------------------------
அன்பிற்குரிய இண்டிராம்,
மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி?
இன்றைய அவல நிலையை யாரும் மறுக்கவில்லை. எந்தவொரு திருத்தமும் செய்யாது சும்மா கிடந்தால், தமிழ் என்பது மெல்ல இனிச் சாகும் என்று நான் உணர்ந்தவன் தான். பல்வேறு தமிழர்களும் உணர்கிறார்கள். எப்பாடு பட்டாவது தமிங்கிலத்தைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் முயலுகிறார்கள். அப்படி முனைப்புடன் செயற்படும் சிலருக்கு நான் ஒரு வினையூக்கி; அவ்வளவுதான்.
இன்றைக்கு 100க்கு 50 விழுக்காடு ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் ஒருவர், இது போன்ற முயற்சிகளால் ஒரு சில காலத்தில் 100க்கு 60 அல்லது 70 விழுக்காடு தமிழ் பேசமாட்டாரா என்ற விழைவில் தான் இதையெல்லாம் நல்ல தமிழில் எழுத விழைகிறேன். உங்களுடைய கருத்துக்களுக்குப் போகுமுன்னால், முந்தா நேற்று, நண்பர் ஒருவரின் வலைப்பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டை இங்கு தருகிறேன். அவர் பெயர் அண்ணா கண்ணன். நல்ல தமிழ் அறிந்த, ஆற்றலுள்ள இதழாசிரியர். தற்போது sify.com வலையிதழின் ஆசிரியர். அவருடைய வலைப்பதிவில் டெரகோட்டா படைவீட்டம்மன் என்று எழுதியிருந்தார். என் பின்னூட்டு:
----------------------------------------------
"என்ன நண்பரே?
நீங்களும் டெர்ரா கோட்டா என்று எழுத வேண்டும்? சுடுமண் மொம்மை, அல்லது சிலை அல்லது திருமேனி என்று எழுதலாமே? "சுடுமண் சிலையாய்ப் படைவீட்டம்மன்" என்று எழுதலாமே? ஒவ்வொரு சொல்லாய் இப்படித் தமிழில் நாம் இழக்க வேண்டுமா? நீங்கள் என்றில்லை, பலரும் சுடுமண் என்று எழுதுவதைத் தவிர்ப்பதைத் தாளிகைத் துறையில் கவனிக்கிறேன்.
1722, from It. terra cotta, lit. "cooked earth," from terra "earth" (see terrain) + cotta "baked," from L. cocta, fem. pp. of coquere (see cook). As a color name for brownish-red,
attested from 1882."
அன்புடன்,
இராம.கி.
----------------------------------------------------
இப்படிச் சுடுமண் பொம்மை என்ற எல்லோரும் அறிந்த சொல்லைக் கூடச் சென்னை போன்ற பெருநகர்களில் பலதரப் பட்ட மக்களும் புழங்காதிருந்தால் எப்படி? என்னைப் போன்றவர்கள் அதைச் சுட்டிக் காட்டுவது தப்பா?
தமிழகத்தில் அறிவியல், நுட்பியல் கருத்தரங்குகளில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார்கள் என்று தான் சொன்னேன். (நீங்களே பாருங்கள், நுட்பியல் என்று சுருக்கமாய்ச் சொல்லுதற்கு மாறாக தொழில் நுட்பம் என்ற நீண்ட சொல்லை இன்னும் பழமை மாறாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு எப்படித் தமிழ்நடை வளரும்? சொற்சுருக்கமும், துல்லியமும் கூடாமல் எப்படி அறிவியலும் நுட்பியலும் வளரும்? இது ஒரு இயக்கம், அய்யா! மீண்டும், மீண்டும் நாமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.) அதே பொழுது ஒருசிலர் மிகுந்த முயற்சி எடுத்துத் தங்களால் இயன்ற அளவில் மேலே சொன்னது போல் 70%, 80% தமிழில் உரைகளைக் கொடுத்துத்தான் வருகிறார்கள். அவர்களைப் போன்று மற்றோரும் முன்வர வேண்டும்.
இது போன்ற கலப்புத் தமிழில் உரையாடுவதற்குக் காரணம் பெரும்பாலும் (95%) பேசுவோரின் சோம்பற் தனம் தான். இவர்கள் தங்களின் தமிழ்ச் சொற்குவையைக் கூட்டிக் கொள்வதில்லை. ஆங்கிலத்தில் உள்ளது போல் துல்லியமாய்ப் பேசத் தமிழ்ச் சொற்களின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களின் உரை, கூர்மைப் பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள் இல்லை. ஏன், தமிழ் அகரமுதலிகளை அவ்வப்போது புரட்டி, புதிய சொற்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது கூட இல்லை.
தமிழ் மொழிக் காப்பாளர்கள் என்று யாருமே தனியாக இல்லை. நீங்களும், நானும், நம்மைப் போன்றோரும் தான் தமிழ்மொழியைப் பேண வேண்டியவர்கள்; நாம் நம் பொறுப்புகளில் இருந்து வழுவுகிறோம், அவ்வளவுதான். பெற்றோரை அகவை கூடிய காலத்தில் தூக்கி எறிவது போல, நாம் தமிழ்ப் புழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுகிறோம்.
"பல மொழிகள் பேசுபவர்கள் (குறிப்பாக இந்தியர்கள்)கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை தங்களது வெளிப்பாடுகளில் குறைவாகப் பயன்படுத்திவருவதை அவதானிக்கலாம்"
என்று எழுதியிருந்தீர்கள். இவற்றிற்குச் சோம்பல், முட்டாள்தனம், உலகமயமாக்கல் என்னும் சோதியில் கலப்பதற்காக ஒடிச் சேரும் அடிமைத்தனம், நம்முடைய பெருமிதத்தை உணராமை, எனப் பல காரணங்களை என்னால் கூற முடியும். தமிழை இந்தக் காலத்திலும் காப்பாற்றி விடுவோம் என்று தான் குறியேற்றம் போன்ற செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழுக்குச் சாவு மணி அடிக்க வேண்டுமானால், நாளைக்கு முதல்வர் கலைஞர் ஓர் அரசாணை கொண்டு வந்து, "இனிமேல் தமிழை எல்லோரும் உரோமன் எழுத்துக்களில் தான் எழுதவேண்டும்" என்று சொன்னால் போதும், எல்லாமே "ஓ கயா". நாமெல்லோரும் உலகமயமாக்கலில் ஒன்றிவிடுவோம். இது தான் நமக்குத் தேவையா? தமிழர் என்று ஓரினத்தார் இருந்தார்கள் என்று நூறாண்டுகளுக்கு அப்புறம் சொல்லுவார்கள். செல்டிக் என்ற இனத்தார் அழிந்தபடி, ஐரிஷ் என்று இனத்தார் இன்று அழிந்து கொண்டிருப்பது போல; நான் சொல்லிக் கொண்டே போகலாம். அய்யா, இது அடையாளச் சிக்கல்.
"பழைய மொழிகளெல்லாம் வெறும் அடிப்படை உணர்வு, கருத்து, சிந்தனை வெளிப்பாடுகளுக்குத்தான் அம்மொழி பேசுபவர்களால் பயன் படுத்தப்படுகின்றன"
என்று எழுதினீர்கள். அது தவறு. நான் பார்த்தவரை தமிங்கிலம் பழகியவர்கள் நாவில், முயற்சி ஏதும் இல்லை என்றால், அன்றாடப் பேச்சில் கூட ஆங்கிலம் கூடிக் கொண்டு தான் வருகிறது. அந்த வீட்டினர் தோற்றத்தால் தமிழராய் இருந்து சிந்தனையால் ஆங்கிலராயோ, அல்லது கலப்பராகவோ மாறிப் போகின்றனர். அவர்களின் அன்றாடச் சொற்களும் ஆங்கிலமாய் ஆகிப் பண்ணித் தமிழாய் ஆகிவிடுகிறது. இவ்வளவு ஏன், மேலே சொன்ன சுடுமண் போல, தமிழ்க் காய்கறிகளின் பெயர்களைக் கூட மறந்து கோயம்பேட்டில் ஆங்கிலச் சொல்லைக் கூறியே காய்கறி வாங்குகிறவர்கள் உண்டு. நண்பரே ஒரு பெரிய நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் எல்லாமே மாய்ந்து போகும்.
"நுணுக்கமான விடயங்களை, தற்கால வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால்
எல்லோரும் சகஜமாக ஆங்கிலத்துக்குத்தான் தாவுகிறார்கள் இந்த நிலமையை பெரும்பாலானோர் (பெரிய படிப்பு படித்தவர்களும்
பாமரர்களும் கூட) எற்று வருகிறார்கள்."
என்று நீங்கள் எழுதிய நடைமுறை உண்மையை ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால் சும்மா கிடப்பதே சுகம் என்ற சோம்பற் தனத்தால் அல்லவா, இது நடக்கிறது? தமிழ் நாட்டில் நடக்கின்ற ஒரு கருத்தரங்கில் மேடையில் தமிழே இல்லையே என்று ஒரு பெரியவர் ஆதங்கப் பட்டது தப்பா? தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுங்கள் என்று கூடச் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு அரசுச் செயலருக்குக் கவனக் குறைவா?
"மொழி என்பது தன்னுள் தோன்றும் உணர்வுகளையும், சிந்தனைகளையும், கருத்துக்களையும் பிறர்க்கு "தெளிவாகத்" தெரிவிப்பதற்காகத்தான்" என்று எழுதியிருந்தீர்கள். உண்மைதான். ஆனால் "தெளிவாகத்" தெரிவிப்பதற்குத் தமிழில் மூங்கையாய் (ஊமையாய்) இருந்தால் எப்படி? யாரோ ஒரு வெளிநாட்டுக் காரன் போல வெளி மொழிச் சொற்களை அளவிற்கு மேல் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? தமிழ் மறந்தல்லவா போகும்?
"பேராசிரியர்" என்ற சொல் பலருக்கும் தெரிந்த தெளிவுச்சொல் தான் அய்யா!
"படியகம்" என்று நான் சொன்னது podium என்பதற்கு இணையாக நம்முடைய படியின் நீட்சியே (படி>படியகம்) பயன்பட முடியும் என்று சொன்னேன். நம்மில் பலரும் எதையெடுத்தாலும் மேடை, அரங்கு என்று மட்டுமே சொல்லிக் கொண்டு மொண்ணையாக உரையாடிக் கொண்டு இருக்கிறோம். மேடை என்பது stage; அதில் பேசுபவருக்காகப் போட்டிருப்பது படியகம். எண்ணிப் பாருங்கள் இரண்டிற்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்தி, இல்லை என்றால் மேடை, பேசுமேடை என்று சுற்றி வளைத்து சொல்லி, இல்லையென்றால் ஸ்டேஜ், போடியம் என்றே சொல்லி நாம் நம் சிந்தனை வளத்தைக் குறைத்துக் கொள்ளுவது தான் வளர்ச்சியா? அப்படி என்ன முன்னேற்ற ஓட்டத்தில் முடங்கி விட்டோம்? இன்றைக்கு ஒருவர் படியகம் என்றால், நாளைக்கு நாலுபேர் அதைப் புழங்கினால், இது கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைந்து ஊரெங்கும் பரவாதா? பின்னூட்டு என்ற சொல் தமிழ் இணையம், தமிழ் உலகம், அகத்தியர் போன்ற குழுக்களில் தான் முதலில் தொடங்கியது. அங்கு தான் அதை முதலில் உரைத்தேன். இன்றைக்கு உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகம் அந்தச் சொல்லைப் பழகிக் கொள்ள வில்லையா? "1960"களின் முடிவில் எங்கள் கோவை நுட்பியற் கல்லூரியின் (CIT) தமிழ்மன்ற மலரான "தொழில் நுட்பம்" என்ற இதழில் "இயல்பியல்" என்ற சொல்லை நானும், இன்னும் சிலருமாய் முதலில் உரைத்தோம்; இன்றைக்கு அது தவறாகப் பலுக்கப் பட்டு, இயற்பியல் என்று ஆகிப் போனாலும், மனம் பெருமிதப் பட்டுப் போகிறது. ஏனென்றால் தமிழ்ச்சொல் பரவி விட்டது. ஆக, நாம் நினைத்தால் முடியும், அய்யா.
"உள்ளுருமம், உள்ளுரும நுட்பியல்" பற்றி முன்னே தமிழ் உலகம் மடற்குழுவில் எழுதிய நினைவு. தகவல் தொழில்நுட்பம் என்ற சொல், ஆழமான கருத்துக்களைச் சொல்லும் விதமாய், முன்னொட்டாய் வரும் வகையில், அமையவில்லை என்பது என் கணிப்பு. வேண்டுமானால், இன்னொரு முறை விளக்கம் பின்னால் தருகிறேன். ஆனால் தகவல் தொழில்நுட்பம் என்ற சொல் நம்மைக் கடைசி வரை சவலைப் பிள்ளையாகவே வைத்திருக்கும் என்பதில் ஆழ்ந்த உறுதி கொண்டிருக்கிறேன். அந்தச் சொல் மாற வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது.
செற்றம் என்ற சொல்லைப் பற்றி நீங்கள் குறித்ததைப் பார்த்தவுடன் சிறு நகை கொண்டேன். கொஞ்ச நேரம் இந்தச் சொல்லில் செலவழிப்போம். சில்லுதல் என்றால் உடைத்தல். சில் என்பது உடைந்த துண்டு. சில்லுதலின் வழியாகத்தான் சிலர், சிறு, சின்னம் எனப் பலப்பல சொற்கள் தோன்றின. சில்லுதலின் தொடர்ச்சி தான் சிலைத்தல் - சிலை. சில் என்பதில் உகரம் முடிவில் சேராமல் இருந்தால் சில்+தல்>சிற்றல் = சிறிதாக்குதல் என்ற பொருள் கொள்ளும். சிற்றல் சிற்றுதலாகி சிறுதலும் ஆகும். இது போன்ற சொற்கள் ஏற்படுவது மொழியின் வளத்தைக் குறிக்கிறது. சில்லுதல் சில்குதல் என்றும் பலுக்கப் படும் - சின்னஞ் சின்னமாய் ஆகிப் போதல். பின்னால் சில்குதல்>செகுதல் என்றும் திரியும். செகுதல் என்றால் பிரிதல், சின்னாப் பின்னமாய் ஆகுதல். வள்ளுவர் கூட "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று" என்றார். செகுத்தல் = பிரித்தல், to sect (மேலையிரோப்பியத் தொடர்பை அறியுங்கள்.) section = செகுத்தம் = பிரிவு. இதே கருத்துத் தொடர்ச்சியில் தான் செற்றம் = session என்ற சொல் எழுந்தது. எண்ணிப் பாருங்கள், எதற்கு எடுத்தாலும், பிரிவு, வகுப்பு என்ற இரண்டு சொற்களை வைத்துக் கொண்டு மொண்ணையாகத் தமிழில் உரையாடுகிறோம் இல்லையா? second session of the third division of the 14th plenum என்பதைத் தமிழில் சொல்ல சொற்கள் வேண்டாமா? "14வது அரங்கத்தின் மூன்றாவது பிரிவின் இரண்டாம் செற்றத்தில்" என்று சொன்னால் நம் மொழிநடை கூர்மையான நடை என்று சொல்ல முடியும்; அப்படி ஒரு நடையை நாம் தமிழில் கொண்டு வரவேண்டும். ஆங்கிலம் இவ்வளவு வளர்ந்ததிற்குக் காரணம் சொற்களைக் கடன் கொண்டது அல்ல. (பலரும் புரியாமல் அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். கடன் வாங்கி வைத்தாலே நமக்கு வளம் வந்துவிடுமா? எதற்கு எதைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையில்லாமல் போனால் எப்படி?) சிந்தனையைக் கூர்மைப் படுத்தி நுணுக்கத்திலும் நுணுக்கம் பார்த்ததால் தான் ஆங்கிலம் என்ற மொழி வளர்ந்தது. அது தான் மொழிநடையை வளர்க்கும். நடுவில் ஒன்றிரண்டு ஆங்கிலச் சொற்களைத் தாராளமாய்ப் போட்டு எழுதுங்கள்; தவறில்லை; அதுவெல்லாம் நாளாவட்டத்தில் சரியாகிவிடும்; ஆனால் கூடிய மட்டும் நல்ல தமிழில் எழுதுங்கள் என்று தான் சொல்லுகிறேன்.
"நண்பர் ராமகியைத் தவிர மற்றவர்களெல்லாம் அரங்கத்திலிருந்து ஓடியிருந்திருப்பார்கள் அல்லவா?"
என்ற உங்கள் வாக்கைப் படித்துச் சிரித்தேன். நடந்திருக்கக் கூடும். ஆனால் இது போன்ற செய்திகளை நாளா வட்டத்தில் சிரிப்பும், சிந்தனையுமாய், ஆட்களைக் கையாளும் விதத்தில், ஒரேயடியாகத் தமிழைக் கையாளாமல், சிறிது சிறிதாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலச் சொன்னால், இத்தனை தமிழ்ச் சொற்களும் பொதுப் புழக்கத்திற்கு வரும்.
"லெட் டS பி டுரூத்புல் அண்ட் ரியலிSடிக்"
என்ற உங்களின் கூற்றிற்கு என் மறுமொழி: நோயாளியின் ஊறுகளைப் புரிந்து, உண்மையை உணர்ந்து அவருக்கு நல்வழி சொல்லிக் கொடுக்கும் மருத்துவர் எனவே என்னைக் கருதிக் கொள்ளுகிறேன். நான் படித்ததை என் உற்றாருக்குச் சொல்லிக் கொடுக்காவிட்டால் எப்படி? நான் ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டாமா? நோயாளியை அருகில் போட்டுக் கொண்டு, "இறைவனே காப்பாற்று" என்று புலம்பும் பெந்தெகொஸ்தக் காரர்களைப் போல் என்னால் இருக்க முடியாது. (பெந்தெகொஸ்தக் காரர்களே, சண்டைக்கு வந்து விடாதீர்கள். உங்கள் வழிமுறைகளைப் புரிந்து கொள்ளுகிறேன். அது உங்கள் நம்பிக்கையின் பாற்பட்டது.)
--------------------------------------------------------------------------
"நண்பர் திருவரசு குறிப்பிட்ட குறுக்குவழி அறுவை சிகிச்சை என்கிற சொல்லாடல் தற்காலத் தமிழகத்தினரின் வாயிலிருந்தும்
பேனாவிலிருந்தும் இயல்பாக வராது எலோரும் "பைபாS சர்fரி" என்றே சொல்லி எல்லோருக்கும் தெளிவாகத்
தமிங்கிலத்தில் தெரிவித்துவருகிறார்கள்"
--------------------------------------------------------------------------
என்று எழுதியிருந்தீர்கள். நாம் என்றைக்குத்தான் மாறுவது? சாலைகளில் போடும் குறுக்கு வழி தெரிகிறது. குருதிக் குழாய்களிலும் குறுக்கு வழி ஏற்படுத்த முடியும் என்ற சிந்தனைப் பொறியைத் தூண்டக் கூடாதா? "குறுக்குவழிப் பண்டுவம் (bypass surgery) செய்து கொண்டேன்" என்று முதலில் சொல்லுவது ஒரு சிலருக்குச் செயற்கையாய்த் தெரியலாம். ஆனால் பத்துப் பேர் விளங்கிக் கொண்டால் அப்புறம், அது மற்றோருக்கும் இயல்பாய் வந்துவிடும்.
அதே மாதிரி stent பற்றியும் ஒரு குறுகிய சொல்லை உருவாக்க முடியும். நண்பர் திருவரசு இருக்கின்ற சொற்களை வைத்து விளக்கம் தருவது போல் எழுதினார்; தவறில்லை.
அன்பிற்குரிய இண்டிராம், நீங்கள் முடிவாகக் கூறிய வாக்கியத்தை நீங்களே படித்துப் பாருங்கள்:
--------------------------------------------------------
"இந்த இயலாமை பேராசிரியர் திரு.குழந்தைசாமியையே பாதித்திருக்கிறாது என்றால் மெட்ரிகுலேசன் பள்ளிகளில்
படித்துவரும் வருங்கால தமிழ்ச் சந்ததியினரிடமிருந்து வருங்காலத்தில் நாம் தமிழ் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம்? எதிர்பார்க்கக்கூடும்? இன்னும் குறைவானப் பயன்பாடுதான் இல்லையா? இந்த மொழித் தேய்மானத்தை, அழிவு நோக்கி ஓடும் நிலைமையை தடுக்கமுடியுமா? இக்கேள்வி பல மொழியினரின் அடிமனதில் இருந்து உறுத்திவருகிறது
தங்களது கருத்தென்னவோ?"
-----------------------------------------
நண்பரே! புண் பெரிதும் புரையோடிப் போயிருக்கிறதல்லவா? அந்தப் புண்ணைச் சொரிந்து கொண்டு ஆதங்கப் படுவோமா? அல்லது புண்ணைத் தீர்க்க வழி பார்ப்போமா? முடிவில் ஒன்று சொல்லி அமைகிறேன். தெறுமத் துனவியல் (thermodymamics) இரண்டாம் விதி சொல்லுகிறது.
"எந்த முயற்சியும் எடுக்காத வரை, தனித்துக் கிடக்கும் கட்டகம் (sytem) சீரழிந்து தான் போய்க் கொண்டிருக்கும்"
அன்புடன்,
இராம.கி.