Monday, February 21, 2022

தெலுங்கர், கன்னடர், துளுவர், மலையாளர்

"மலையாளி எனும் சொல் மலை+ஆள்/ஆள்பவர் என்று பொருள்படுகிறது. இதுபோல தெலுங்கர்/கன்னடர்(கன்னடிகா)/துளுவர் ஆகியவருக்கான பெயர்க்காரணம் ஏதேனும் (அந்த மொழியிலாவது) உண்டா?" என்று திரு. தாமரைச்செல்வன் தன் முகநூல் பக்கத்தில் கேட்டார். பலருக்கும் இக்கேள்வி இருக்கிறது போலும். ஆனால் சரியான வரலாறு தெரியாத  வெறும் உன்னிப்பு விடையே பலரும் அளிக்கிறார். என் கட்டுரைகளில்  வேறு செய்திகளுக்கு இடையில் ஆங்காங்கே இதுபற்றிக் குறிப்பாய் நான் தந்துள்ளேன். ஒருமுறை தனியே ஒருமுகமாய்த் தருவது நல்லது என்று இங்கு விவரிக்கிறேன். 

முதலில் தெலுங்கர். தமிழருக்கு வடக்கிலுள்ள அவரை வடுகர் என்றது சங்க கால வழக்கமாகும். வடுகர் என்போர் அப்போது பேசிய மொழி ஒரு வட்டாரத் தமிழ். தமிழில் தொடங்கி முதலில் பிரிந்தது அவரே. வடவருக்கும் நமக்கும் இடையே இருந்தவர்/இருப்பவர் இவர் தான்.  வடக்கருக்கு தெற்கில் இவர் உள்ளதால் இவர் வடவர் நோக்கில் தெனுகர்/தெலுகர் எனப்பட்டார். தென்/தெல் என்பது தெலுகின் பெயர்ப் பகுதி. (தெற்கு என்னும் நம் சொல்லில் தெல் எனும் பகுதி உண்டு.) தெலுங்கு என்பது தமிழரின் பலுக்கு. தெலுகின் வடவருக்கும் வடுகருக்கும் அடையாளக் குழப்பம் ஏற்படக் கூடாது எனச் சங்க காலத்திற்கு அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாய், அவர் பெயரைத் தெலுங்கர் என்று சொல்லத் தொடங்கினோம். சாதவா கன்னர் காலத்தில் தெலுகெனும் பெயரே நிலைத்தது,  நம் தெலுங்கு, கன்னடப் பங்காளிகளின் தொடக்கம் சாதவா கன்னரில் உள்ளது. சங்க இலக்கியத்தை ஒழுங்காய் ஆய்ந்தால்தான் அது விளங்கும்.

சாதவா கன்னர் (நூற்றுவர் கன்னர்) நாட்டின் தொடக்கம் அடிப்படையில் மாராட்ட மாநிலம். (மா = பெரிய. ராட்டம்> ராட்ட> ராஷ்ட்ர = நாடு. இன்று மகாராஷ்ட்ர என்று இப்பகுதி சொல்லப் படுகிறது, (பஞ்ச திராவிடத்தில் அவரும் ஒருவர் தான். இன்று அவரும் மறந்தார். நாமும்  மறந்தோம். (கூர்ச்சரரும் - குசராத்தியரும் - ஒரு கால் திராவிடரே!) 2000 ஆண்டுகளுக்கு முன் கன்னர் நாட்டில் 2 மொழிகள் ஆட்சியில் இருந்தன. ஒன்று பாகதம் இன்னொன்று தமிழ். மகாராஷ்ட்ர என்பது அந்நாட்டிற்கான பாகதப் பெயர். சாதவா கன்னர் காலத்தில் பேசப்பட்ட பாகதத்திற்கு ”மகாராஷ்ட்ரீ” என்று பெயர். எல்லாப் பாகதங்களிலும் மிக இனிமையாய், பாட்டிற்கும், ஓசைக்கும் பெயர் போன மொழி மகராஷ்ட்ரீ ஆகும். (இற்றை மராட்டி இதன் தொடர்ச்சி. கொஞ்சம் பரிதாவ நிலை அதற்கு இன்று ஏற்பட்டது வருத்தம் தருகிறது.) மகராஷ்ட்ரீ பற்றி நிறைய எழுதலாம். பெயர் பெற்ற அகம் எழுநூறு (Gāhā Sattasaī; in Sanskrit: Gāthā Saptaśatī) என்ற அருமையான நூல் நம் அகநானுறு போலவே அங்கு எழுந்தது. இது பற்றியும் மிக எழுதலாம். நம் உறவுள்ள நூல். 

கன்னரின் முதல் தலைநகர் கோதாவரியின் வடகரையில் இருந்த படித்தானம் ஆகும். இது இன்று Paithan எனப்படும். ஔரங்காபாதின் அருகில் உள்ளது. இங்கிருந்து அஜந்தா, எல்லாரோவிற்கு வழியுண்டு. கன்னர் நாட்டின் தென்கிழக்கு இற்றைத் தெலிங்கானம். தெலுங்கு ஆந்திரத்திற்கும் பின் விரிந்தது. (தொடக்கத்தில் ஆந்திரம் முழுதும் காடு. தமிழகம் தொட்டு நெய்தல் ஆந்திரம் (Coastal Andhra) வழி கலிங்கம் வரை அன்று காடு தான். தெலுங்கரின் முதல் புழக்கம் தெலிங்கானாவில் தொடங்கியது. முடிவில் கிழக்குக் கடற்கரை வந்தார். பொ.உ.மு. 250 வரையிருந்த கன்னர், தம் கடைசி 150, ஆண்டுகளில்  நாடு சுருங்கியபோது, மாராட்டத்தைக் கைவிட்டு ஆந்திர அமராவதி நகரைத் தலைநகர் ஆக்கிக் கொண்டார்.  பிந்தையக் கன்னர் பாகதம் சேர்ந்த தமிழைப் (இதுவே தெலுங்கு) பேசினார்.

மகாராஷ்ட்ரத்திற்கு இன்னொரு பெயர் தமிழில் இருந்தது. அது கல்+ + நாடு = கன்னாடு>கன்னாடம்>கர்நாடம். கல் = பெரிய. நாடு = ராஷ்ட்ரம். சாதவா கன்ன அரசின் வடக்கே மகராஷ்ட்ரீ மொழியும், தெற்கே தமிழும் பேசப்பட்டன, அதனால் தான் அதை மொழிபெயர்த் தேயமென்று மாமூலனார் அழைத்தார். நம்மில் பல தமிழறிஞர் அதன் உண்மைப் பொருளை உணர்ந்தாரில்லை. மாரட்டரும் உணர்ந்தாரில்லை. சங்க இலக்கியத்தில் இது நிறையப் பேசப் பட்டுள்ளது. மொழி பெயரும் தேயம் = மகாராஷ்ட்ரம் + கர்நாடகம். பெயர்தல் = மாறுதல். 

கன்னர் அரசு அழிந்து, அடுத்த அரசுகள் வந்தபோது முன்னால் சொன்னது போல் அவர்நாடு உடைந்தது, அவரின் தென்மேற்குப் பகுதியின் தமிழ் கொஞ்சங் கொஞ்சமாய்த் திரிந்து கன்னடம் என்ற புதுமொழி பிறந்தது.  கன்னடம் பேசப்பட்ட பகுதி கன்னாடு>கன்னடம்> கன்னாடம் எனபட்டது. இன்றும் கன்னடர் திரிவுகளோடு சேர்ந்து தம் இனப்பெயராய்த் தமிழ்ப்பெயர் தான் கொண்டுள்ளார். தம் தமிழ் மூலம் அறியாது, தமிழரோடு சண்டை இடுவது இன்றும் நடக்கிறது, பழங்கன்னடத்திற்கும் (ஹளே கன்னடாவிற்கும்) சங்கத்தமிழுக்கு அடுத்துவந்த தமிழுக்கும் மிக வேறுபாடு காண முடியாது. அதனால் தான் கள அப்ரர் (கருப்பு ஆயர்> கருபு யாதவர்) எளிதில் தமிழ்நாடு நுழைந்து நம்மை ஆளமுடிந்தது. 

துளுவர் பற்றியும் சங்க இலக்கியம் நான்மொழிக் கோசர் என்று பேசும். ”தோகை காவின் துளுநாட்டு அன்ன” என்பது அகம் 15/5 படியுங்கள்.  துளிர்த்தல்>துளுத்தல் = தளிர்தல், செழுத்தல்/, மேலெழும்புதல்.. துளுவு = மழை. துளுநாடு/ துளுவநாடு - மழைநாடு. துளுவும் ஒரு வட்டாரத் தமிழாய்த் தான் தொடங்கியது.  

அடுத்தது மலையாளி. சாரல் - சந்தனம் நெற்றியில் சாரல் பூசிய தமிழ்ப் பேரினம் சாரலர் ஆகும். சாரலர்> சேரலர் ஆவார். அவரைக் கேரலர்>கேரளர் என்றும் சொல்லலாம். நெற்றியில் சாம்பல் = பாண்டு பூசிய பேரினம் பாண்டியர் ஆவர். மஞ்சள்= குங்குமம் = கொழு>கோழ் பூசியவர் கோழியர்= சோழியர் எனும் பேரினம் ஆவர். சாரல்>சாரம்>ஆரம் என்பதும் சந்தனமே. ஆளம்>ஆரம் என்பதும் சந்தனமே. மலை ஆளம் பூசிய சாரலர் மலையாளர்> மலையாளி. அவர் மலையை ஆள்பவர் எல்லாம் இல்லை. 

நண்பர்களே! உன்னிப்புச் சொற்பிறப்பைத் தூக்கியெறியுங்கள்.

காஷ்ட

அண்மையில் திரு. ஆறுமுகத் தமிழனின் முகநூல் பக்கத்தில், :காஷ்டீக மௌனத்தைக் கட்டை மோனமென்று சொல்லி விளக்கினார், அப்போது, ”கட்டை என நாம் சொல்வதை காஷ்ட என்று சங்கதத்தார் சொல்வர். யாருடையது முதற்சொல் என்பதில் இருவருக்கும் சண்டை எழும்” என்றார். நான் இச்சொற்களின் கால எழுச்சியைக் கண்டு அதைப் பல முன்னிகைகளில் தெரிவித்தேன். Star Trek தொலைக்காட்சிச் சரத்தை, அமேசானில் தொடர்ந்து பார்த்துக் கொண்டே, இச்செய்திகளையும் ஒருங்கு சேர்த்து எழுதுவதில் கொஞ்சம் நேரமானது..

மொத்தத்தில் அங்கு ஒரு சுவையான உரையாடல் நடந்தது. அதில் ஒரு சிலவற்றை மட்டும் தொகுத்து இங்கு தனிப்பதிவாய் இடுகிறேன். 

------------------------

காஷ்ட என்பது சங்கத அகரமுதலியில் பயன்பாட்டுப் பொருளில் மட்டுமே உண்டு. சொற்பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சில் தாது எதுவென்று சொல்லவில்லை. அதில் கொடுத்துள்ள முதல் 3 பொருள்கள் வருமாறு: (Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary.) 1) Kāṣṭha (काष्ठ):—m. Name of one of Kubera’s attendants, [Mahābhārata ii, 415]. 2) n. a piece of wood or timber, stick, [Śatapatha-brāhmaṇa; Kātyāyana-śrauta-sūtra; Manu-smṛti] etc. 3) wood or timber in general. இன்னும் பல பொருள்கள் அதிலுண்டு. ஆனால், நமக்குத் தேவையான wood or timber இதில் வந்துவிட்டது.

மேற்சொன்ன கட்டைப் பொருளின் பயன்பாட்டு ஆவணங்களில், சதபத பிராமணத்தின் காலம் பெரும்பாலும் பொ..உ. மு. 600 - 300. (The Shatapatha Brahmana (Sanskrit: शतपथब्राह्मण Śatapatha Brāhmaṇa, meaning 'Brāhmaṇa of one hundred[a] paths', abbreviated to 'SB') is a commentary on the Śukla (white) Yajurveda. It is written by the Father of the Indian philosophy saint Yajnavalkya. Arthur Berriedale Keith states that linguistically, the Shatapatha Brahmana belongs to the later part of the Brāhmaṇa period of Vedic Sanskrit (8th to 6th centuries BCE, Iron Age India). M. Witzel dates this text to the 7th-6th centuries BCE. Jan N. Bremmer dates it to around 700 BCE. J. Eggeling (translator of the Vājasaneyi mādhyandina recension into English), dates the final, written version of the text to 300 BCE, although stating some elements 'far older, transmitted orally from unknown antiquity')

இரண்டாவதான காத்யாயன ஸ்ரௌத்ர சூத்ரத்தின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 300. மனு சுமிர்தியை இங்கு ஒதுக்கிவிடலாம். அதன் காலம் பொ.உ. 200. வடமொழியில், எங்கு நோக்கினும் இதற்குச் சொற்பிறப்பு சொன்னதில்லை. பாவாணரின் ”வடமொழி வரலாற்றில்” பக்கம் 101 (தமிழ்மண் பதிப்பகம்) இல், கள்>கட்டு>கட்டை என்று சொற்பிறப்பும் சொல்லி ”திரண்ட மரத்துண்டு, திரண்ட விறகு” என்ற பொருளும் சொல்வார். வடமொழியில் திரட்சிப் பொருள் இல்லை கட்டை, கம்பராமாயணத்தில் தான் இலக்கிய வழக்கில் முதலில் வருகிறது, பேச்சு வழக்கில் இன்றுவரை உண்டு. இதன் தொடர்பான பல சொற்கள் மற்ற தமிழிய (திராவிட) மொழிகளிலும் உண்டு. தமிழில் கள், கட்டு எனும் சொற்பிறப்பு முந்தைச் சொற்கள் 2500 ஆண்டுகள் இருந்துள்ளன. கட்டையும் இருந்திருக்கும். பர்ரோ- எமெனோவின் அகரமுதலி (DED) இதைத் திராவிடச் சொல் என்றே சொல்கிறது.

தமிழில் இருந்த எல்லாச் சொற்களும் இலக்கியங்களில் பயின்றதாய்ச் சொல்லமுடியாது. மறந்து விடாதீர். சங்க இலக்கியம் என்பது ஓர் அகரமுதலியில்லை.

------------------------------

மேலிருந்த என் முன்னிகையைப் பார்த்து, வடமொழி அன்பர் ஒருவர், “இலக்கியங்களில் பயிலாத சொற்களெல்லாம் புழக்கத்தில் இருக்கும் என்ற வாதம் வட மொழிக்கும் பொருந்துமே. காற்றில் கரைந்த சொற்களைக் கண்டுபிடித்த பின் தான் வாதம் செய்ய இயலும் போல” என்று எழுதினார். எனக்குச் சற்று சினம் வந்துவிட்டது.

-------------------------------

”உம் வாதம் போன்றதைத் தான் முரண் வாதம் என்று விடாது சொல்கிறேன். நான் சொல்வது ஏற்க முடியாதெனில், அம்மொழியில் இருக்கிறது என்று சொல்லாதீர். அந்த இலக்கியத்தில் வழக்கு இருக்கிறது என்று சொல்க. மொழியை விட்டு விடுக. அந்த இலக்கியம் முதல் இலக்கியமா? மொழி பெயர்ப்பு இலக்கியமா? - என்று பார்க்க வேண்டாமா

சங்கதப் பஞ்ச தந்திரம் 11/12 ஆம் நூற்றாண்டு இலக்கியம். அதற்கு முன்னால் எம்மொழியில் பஞ்சதந்திரம் முதலில் இருந்தது என்று உமக்குத் தெரியுமா? சங்கத அகரமுதலியில்” பஞ்ச தந்திரத்தில் குறிப்பிட்ட சொல் பழகுகிறது. எனவே சங்கதம் முதல்” என்பார். இதுபோல் பல்வேறு உருப்படியிலாத முரணான கதைகளைக் கேட்டுவிட்டேன். வேலையற்றுத் தேடிப்போய், ஞாயமாய் இங்கு பேசினால், “காற்றில் கரைந்த சொற்கள்” என்று கீழறுப்பு வாதம் வருகிறது. ”65000 ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்தவன் கட்டை, தடி கூடத் தெரியாமல் ஊமையாய் இருந்தான். 9000 ஆண்டுகளுக்கு முன் எங்கோ இருந்தவன் இங்கு வந்துசொல்லிக் கொடுக்கும் வரை கட்டைச்சொல் இல்லாமல் இருந்தான்” என்ற நம்பிக்கை உமக்குப் போதும் போலும்.

பர்ரொ-எமெனோ ”தமிழியச் சொல்” என்று சொன்னது தவறா? கட்டை என்ற சொல்லின் சங்கதச் சொற்பிறப்பு என்ன? வேறு இந்தை யிரோப்பியனில் ”காஷ்ட” இருக்கிறதா? அது சங்கதத்தில் ஏன் கடன் சொல் ஆகக் கூடாது? (இப்போதையத் தொல்லியல் அறிவின் படி) பொ.உ.மு. 600 இல் எழுத்தில் நுழைந்த தமிழ் இலக்கியம் போல் அன்றி பொ.உ.150 வரை சங்கத இலக்கியம் எழுத்தில் இல்லை. அதுவும் அதுவரை ”காற்றில் கரைந்த இலக்கியம்” தான். உணர்க. கட்டையோடு தொடர்புற்ற கற்றை என்ற சொல் பெரும்பாண் ஆற்றுப்படையிலும், நற்றிணையில் இரண்டு இடங்களும் உண்டு. நற்றிணை சங்க இலக்கியத்தின் தொடக்க நூல்களில் ஒன்று. அது தெரிவித்த வாழ்க்கை பொ.உ.மு.300க்கு முற்பட்டது. கறி என்ற சொல்லையும் தேடலாம். நான் இன்னும் ஆய்வில் ஆழ்ந்து தேடினால், பலவும் கிட்டும். பொழுது வேண்டுமே? றகரம் என்ற எழுத்து டகரத்தையும் தகரத்தையும் ஒன்றின் கீழ் எழுதி உருவாக்கிய எழுத்து. இதனால் கற்றையின் முந்தை வடிவம் கட்டை தான். ஆய்வே இல்லாது நம்பிக்கையின் பாலிருந்து பேசுவோர் சங்கியர் காலத்தில் கூடி விட்டார்”

---------------------------------

என்று முன்னிகைத்தேன். அவர் மறுமொழியாய், அவர், “ஐயா, 65000 ஆண்டுகளுக்கு முன் நாம் இங்கிருந்தோம். அவர்களும் எதோ ஒரு மூலையில் இதே உலகில்தானே இருந்தார்கள். இடையில் எங்கிருந்தோ வந்திருந்தாலும் அனைத்து மனிதர்களுக்கும் மூலம் ஒன்றுதானே. என் இனம்தான் மூத்தது என்று யாருமே சொல்ல முடியாதே. சங்கத பஞ்சதந்திரம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இந்த தமிழ் சம்ஸ்கிருத சண்டை தேவையா என்பதே என் கேள்வி. சண்டையிடும்போது அடுத்தவர் குறைகள் மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். அடுத்தவரின் வலிமை பெருமைகளை உணர்ந்து அதை பயன்படுத்திக் கொள்வதுதான் எல்லோருக்குமே நல்லது. சாதாரண மனிதர்கள் பிற மொழிகளை கேலி கிண்டல் செய்து குறை கூறிக் கொண்டு களிக்கலாம். உங்களை போன்று ஆறுமுகம் ஐயா போன்ற அறிஞர்களும் அதே பாதையில் செல்லலாமா?” என்று சொன்னார். 

நான் மீண்டும், 

----------------------------------

இங்கே “காற்றில் கரைந்த சொற்கள்” என்று முதலில் சொன்னது யார்? அது சாத்தாரச் சொல்லா? நான் ஆய்வுப் பார்வையில் ”காஷ்ட” பற்றி ஞாயமாய்த் தானே சொன்னேன்? கீழறுப்புச் சொற்களைச் சொல்லிவிட்டு இப்போது சமதானம் பேசவருவது ஏன்? இதுபோல் தான் சங்கத ஆட்கள், “ சிசுன தேவனைக் கும்பிடுவோர், மிலேச்சர், தஸ்யூக்கள், அகல மூக்கர்” என்று எம்மை வித விதமாய்ச் சொல்லிவிட்டு 3200 ஆண்டுகள் நஞ்சை விதைத்தார். இன்று வரை, எம் மொழியை ”நீசமொழி” என்று தான் சொன்னார். “சாமி, ஏதோ தெரியாமல் சொல்கிறார்” என்று பேசாமல் தான் நாங்கள் இருந்தோம். கொஞ்சம் எமக்கு அறிவு வந்த பின் உள்ளதை உள்ளது படி அறிவியல் ஞாயம் தவறாமல் கூறுகிறோம். அவ்வளவு தான். 

65000 ஆண்டு என்பது ஆப்பிரிக்கர் அல்லாத மாந்தர்க்குரிய ஆண்டுகள். அதில் பிரிந்து, பின், மாந்த ஏற்ற இறக்கம் பேசியவருக்கு மறுமொழியாய் என்னை போன்றவரும் பேசவேண்டியதாகிறது, ஒருவருக்கு வெளிப்பட்டால் அரத்தம், இன்னொருவருக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா? இனிமேல், “காற்றில் கரைந்த சொற்கள்” என்று அறியாமல் சொல்லாதீர்.

---------------------------------


என்று முடித்தேன். 


Tuesday, February 15, 2022

ஆதாரமில்லாது எதையும் மொழியாய்வில் கூறாதீர்.

 நண்பர் இங்கர்சால் நார்வே தன்னுடைய Feb 13 முகநூல் பக்க இடுகையில் 100 FACTS OF TAMIL என்ற தொகுப்பை நாடி, ”தமிழ் மொழி இனம் நாடு ஆகியவை பற்றிய தகவல்  துணுக்குகளைப் பட்டியலிடுங்கள்” என்று வேண்டிவருகிறார். அது நல்ல வேண்டுகோள். தன் பங்கிற்குத் தமிழிணையத்தில் உலவுவற்றைத் தொகுத்து, 22 கருத்துகளைக் கொடுத்திருந்தார். அது ஓர் சேகரிப்பு. அவர் சொந்தக் கருத்து அல்ல. இதில் 19 ஆம் கருத்து கீழ்வருவது போல் போகும்.

"According to Walter William Skeat (21 November 1835 – 6 October 1912, a pre-eminent English philologist of his time, and instrumental in developing English as a higher education subject in the United Kingdom), out of 14286 words in The Etymological dictionary of the English language, 12960 (90%) words have its roots in Tamil". 

இதைப்படித்த நான், இதற்கு ஆதாரமெது? திரு Skeat எங்கு எந்தப் பொத்தகத்தில், கட்டுரையில், ஆவணத்தில், நாளிதழில் கூறியுள்ளார்?” என்று கேட்டேன். இதற்கு விடைசொன்ன நண்பர், “இக்கூற்று பல இடத்தில் இருக்கின்றது ஆனால் அதற்கான சான்று எங்கும் கிடைக்கவில்லை அந்த புத்தகத்தில் 23 முறை தான் தமிழ் என்ற சொல் வருகிறது. மற்றவை ஆரிய சொல் சமஸ்கிருத சொல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது கண்டிப்பாக இது உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன்” என்று சொன்னார். 

இதற்கு மறுமொழியாய், :நான் இப்பொத்தகத்தை pdf வழி இறக்கியுள்ளேன். சில சொற்களுக்குப் படித்தும் இருக்கிறேன். பெரிய பொத்தகம். மிகுந்த நாள் பிடிக்கும். அவர் முன்னுரையை இன்னும் படிக்க வில்லை. 90% என்பது போன்ற வீச்சுக் கூற்றுகளுக்குச் சான்றிருப்பது போல் தெரியவில்லை. ஆதாரமின்றிப் பேசுவதால். தமிழின்பெயர் இணையத்தில் வேற்று மொழியியலாளரிடம் கீழே கிடக்கிறது. ஆய்வில்லாத வெற்று உணர்ச்சியாளர் தம் கூற்றுகளால் தமிழைக் கீழே தள்ளுகிறார். தமிழரிடம் ஆய்வு கூடவேண்டும். கொஞ்சம் அடக்கமும், துலை மனப்பான்மையும் நமக்கு வேண்டும்.” என்று சொன்னேன்.

தமிழில் பெருமிதம் வேண்டும். ஆனால் ஆதாரமில்லாத பெருமிதம் மிகவும் பாதகத்தை விளைவிக்கும்.  இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்று கட்டுரைகளில் பல இடத்தும் சொல்லும் நான் தான் இங்கே ”துலை மனப்பான்மை வேண்டும்” என்கிறேன்..


Thursday, February 03, 2022

ஓம் எனும் மந்திரம்.

ஓம் என்ற சொல்லிற்குக் ”காப்பாற்று” என்று பொருள் சொன்னவுடன், சங்கதத்தில் பொருள் சொல்ல முடியாத நண்பர் ஒருவர் திருமூலரின் ஒன்பதாம் தந்திரத்தில்,  பிரணவ சமாதி என்கிற பகுதியில் இருக்கும் 2639 ஆம் பாட்டை எடுத்துச் சொன்னார்.

ஓமெனும் ஓங்காரத் துள்ஒரு மொழி 

ஓமெனும் ஓங்காரத் துள்ளே உருஅரு

ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்

ஓமெனும் ஓங்காரத்து ஒள்முத்தி சித்தியே

என்பது அந்தப் பாட்டு. அதைப் படித்தவுடன் சிரித்துக் கொண்டேன். இதற்குப் பொருள் சொல்லும் போது பல்வேறு உரையாசிரியர் தமக்கு வேண்டியதை எல்லாம் சேர்த்துச் சொல்வர். என் போக்கு அதுவல்ல, நான் கட்டாயம் உரைகளை படிப்பேன். அதே பொழுது சற்று கிடுக்கத்தோடு (criticism) படிப்பேன். பாட்டிலில்லாத சொற்களை தேவையின்றி ஊடுசேர்ப்பது என் வழக்கமில்லை. (மந்திரம், தந்திரம் என்ற சொற்களுக்குக் கூடத் தமிழில் தான் சரியான பொருளுண்டு. சங்கதத்தில் வழிப்பொருள், பயன்பாட்டுப் பொருள் மட்டுமே உண்டு. அதுவுங்கூட அவர் கடன் வாங்கியது தான். எந்த இந்தை யிரொப்பியனிலும் அப்படிச் சொற்கள் கிடையா. சங்கதத்தில் ”அது இருக்கிறது, இது இருக்கிறது” என்று கால காலமாய்ச் சொல்லி தமிழைத் தாழ்த்தியது அதிகம். இனிமேலும் அப்படி எத்தனை நாட்களுக்கு நாம் இருப்பது? )   

மொழி என்பதற்குச் சொல், பொருள் என்றே அகர முதலிகள் அருத்தம் கூறுகின்றன. அகரம், ஆகாரம் போல் இது ஓங்காரம். ஓம் எனும் ஒலி. நான் புரிந்து கொண்ட வகையில் இங்கே பொருள் சொல்லுகிறேன். 

ஓம் எனும் ஓங்காரத்துள் சொல்/பொருள் இருக்கிறது.

ஓம் எனும் ஓங்காரத்துள் உருவும், அருவும் இருக்கின்றன.

ஓம் எனும் ஓங்காரத்துள் பல்வேறு பேதங்கள் இருக்கின்றன.

ஓம் எனும் ஓங்காரத்தில் ஒளிரும் வீடுபேறும் அதனறிவும் இருக்கின்றன. 

இதற்குமேல் பொருள் சொல்லவேண்டுமானால், உரு, அரு பற்றியும், பல்வேறு பேதங்கள் பற்றியும் நீட்டி முழக்கவேண்டும். அதேபோல வீடுபேற்றையும் அதனறிவு பற்றியும் விளக்கவேண்டும். வேறொரு முறை பார்ப்போம். இங்கு எனக்கு முகன்மையானது ”ஓம் எனும் ஒலிக்குத் தமிழ்ச் சொல்லும், பொருளும் உண்டு” என்பது தான்.  I stand vindicated, Your honor! நான் திருமூலருக்கு முரணாய் ஏதுஞ் சொல்லிவிட வில்லை.  சங்கதப் பொருள் ஏதேனும் இருந்தால் அறிந்தவர் சொல்லட்டும்.