Saturday, December 01, 2007

பண அட்டைகள்

பல்வேறு பண அட்டைகள் குறித்து ஓர் உரையாடல் தமிழுலகம் மடற்குழுவில் முன்பு ஒருமுறை எழுந்தது. சில விளக்கங்கள் கொடுத்து அங்கு தந்த சொல்லாக்கங்களை இங்கு தருகிறேன்.

swipe card:- வயப்பு அட்டை; வயப்படுத்தல் = தனதாக்கிக் கொள்ளல், தன்பக்கம் சாரவைத்தல்; வயம்>வசம். வயம் என்பதன் வேர்ப்பொருள் வளைத்தலே; "என்ன, அவுங்களை வளைச்சுப் போட்டாச்சா?" என்பது வயப்படுத்தியதையே குறிக்கும். [The old English word for sweep was swaapan, which evolved into Middle English swope. Modern English sweep, which began to emerge in the 13th century, probably came from the old past tense swepe, a descendent of old English sweop. Swaapan itself came from the prehistoric Germanic base *swei 'swing, bend' which also produced German schweifen 'wander' and English swift. Swipe probably originated as a dialectal variant of sweep.]

affinity card:- a credit card where a certain amount of money is given by the credit card company to a charity everytime the card is used
பயன்கொடை அட்டை (இன்னும் ஓர்ந்து பார்த்தால் இதைவிட நல்ல சொல் ஒன்று கிடைக்கலாம்.)

cash card:- காசு அட்டை

charge card:- பற்று அட்டை

cheque guarantee card:- காசுறுதி அட்டை

credit card:- கிட்டிப்பு அட்டை (Creed was the first of a wide range of English words borrowed from Latin credere 'believe'. Others include credible, credence, credential, credit, credulous.); நம்புதல் என்பது நெருக்கத்தை ஓட்டியது. "நமக்கு வேண்டப் பட்டவருங்க, பணங் கொடுங்க, ஒண்ணும் ஆகாது.!" "நம்ம பக்கம் தான்; எங்கூர்க்காரர் தான்; கடன் கொடுக்கலாம். திருப்பி வந்துரும்." "நமக்கு நெருக்கம்." "நமக்கு அண்மை;" அண்ணுதல் = நெருங்குதல்; அண்ணுதலில் இருந்து பிறந்த சொல்லே அண்பு>அன்பு. அவனோடு அன்பாக இருக்கிறேன் என்றால் நெருக்கமாக இருக்கிறேன் என்று தான் பொருள். நண்ணுதல் என்பதும் நெருங்குதலே. நள் என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது நண்ணுதலாகும். நள்>நட்பு. நள்ளில் இருந்து பிறந்த இன்னொரு சொல் நண்பு>நம்பு; நம்புதல் என்பதும் நெருங்குதலே. நம்பிக்கை = நெருக்க நிலை. இந்த நெருக்க நிலைக்கு இன்னொரு சொல் கிட்ட நிலை. "கிட்டக்கவே இருந்துட்டு நம்பாமல் இருந்தா எப்படி?" நெருக்கத்தில் பிறப்பது நண்பிக்கை>நம்பிக்கை. கிட்டித்தல் என்பதும் நெருங்குதலே. இந்தையிரோப்பியச் சொற்களுக்கே ஆன ரகரப் பலுக்கத்தை முதல் எழுத்தில் நுழைத்தால் credit வந்துவிடும். [சொல் பிறந்திருக்கக் கூடிய கதையைச் சொன்னேன்.] உனக்கு எவ்வளவு கிட்டியது என்ற கேள்வி உனக்கு எவ்வளவு credit வந்தது என்றே பொருள்படும். கிட்டக் கூடியது பொன்னா, பொருளா, பணமா என்பது முகமையில்லை. அது இன்னொருவரிடம் இருந்து வருவதாய் இருக்கவேண்டும். கிட்டியதின் நீட்டமே கிடைப்பு. கிடைப்பின் இன்னொரு தோற்றம் get/got போன்றவை.

debit card:- கடவிப்பு அட்டை (debt originated as debita, the plural of Latin debitum 'that which is owed', a noun formed from the past participle of the verb debere, 'owe') கள்>கழு கழுக்கப் பட்டது கட்டப் பட்டது என்ற பொருள் கொள்ளும். கட்டுதல் என்பது பிணைக்கப் படுதலாகும். இன்னொருவோரோடு பணத்தால் பிணைக்கப் பட்ட நிலை கட்டம் பட்ட நிலை. கட்டம்>கடம்>கடன் என்று விரியும். கழுவோடு இகரம் சேர்ந்தால் அதன் பொருள் எதிர்மறையாக மாறிவிடும் இழு என்ற வினையில் இரண்டு பொருள்களுக்கு இடையே தொடர்பு இருக்கிறது என்று புரிபடும். ஒன்று இன்னொன்றை நகர்த்துகிறது என்று இங்கே பொருள். இழி என்றானால், ஒன்று இன்னொன்றில் இருந்து பிரிந்தது என்று பொருள் வரும். இது போன்ற சொற்களில் வரும் இகரத்தின் தாக்கம் அவ்வளவு. எதிர்மறைப் பொருளைக் கொண்டு வந்துவிடுகிறது. இன்னும் இதுபோன்ற காட்டுக்களைக் காட்ட முடியும். நீக்குதலுக்கான வேரடி கழி என்ற சொல்லில் இப்படி வருகிறது. கழு+இ>கழி = எடு என்னும் பொருள். ஐந்தில் இருந்து இரண்டைக் கழிக்க மூன்று கிடைக்கும். கடவுதல் என்றாலும் இழுத்தல் என்றே பொருள் கொள்ளும்; அங்கே வகர உகரம் போய்விட்டால், கடத்தல் என்பதும் நீங்குதல், கழிதல் என்ற பொருளே கொள்ளுகிறது. வகரம் பகரமாவுதும் தமிழிய மொழிகளிலும், இந்தையிரோப்பிய மொழிகளில் இயற்கையே. கடவித்தல் என்பது கடத்தல் என்ற தன்வினைச் சொல்லில் இருந்து பிணைக்கச் செய்தல் என்ற பொருள் கொண்ட பிறவினைச் சொல்லை உருவாக்கும். நீங்கள் ஒரு பொருளை வாங்கும் போது அதற்கான பணத்தை உங்கள் வங்கிக் கணக்கோடு கடவித்துக் கொடுக்கும் அட்டை கடவிப்பு அட்டை.

gold card:- பொன்னட்டை

store card:- கடையட்டை

அன்புடன்,
இராம.கி.

Monday, October 01, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 5

இராமர் சேது என்று இன்று தவறாகச் சொல்லப்படும் மண்திட்டு ஒரு பக்கம் இராமேசுரத்தையும் (1964 புயலில் நம் கண்ணறிய அழிந்து போன பழைய தனுக்கோடி) இன்னொரு பக்கம் தலைமன்னாரையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. இதே போல இன்னொரு திட்டும் அந்தப் பக்கம் கோடிக்கரையில் இருந்து யாழ்ப்பாணம், நயினார் தீவு வரை இருக்கிறது. அந்தத் திட்டும் தான் உயர்ந்து கிடக்கிறது. இந்தப் பக்கம் இராமேசுவரத்திற்கு அருகில் இருப்பதை மட்டும் இராமர் கட்டியதாகச் சொல்லும் கூட்டம், அந்தப் பக்கத்தில் கிடக்கும் இன்னொரு சேதுவை (அதை ஆதி சேது என்பார்கள்.) யார் கட்டியதாகச் சொல்லுவார்கள்? கடல்மட்டம், கடலியல் வரைவு தெரிந்தவர்கள் "இந்த இரண்டு சேதுக்களும் இரட்டையானவை" என்றே சொல்லுவார்கள். ஒன்றை மட்டும் உயர்த்தி, இன்னொன்றைக் கண்டுகொள்ளாமல் விடுவது எப்படி? அப்படி என்ன ஓரவஞ்சனை? வலது கண்ணுக்கு மையும், இடது கண்ணுக்குச் சுண்ணாம்புமா உங்கள் ஊரில் அப்புவார்கள்?

அடுத்தது அகம் 70 இல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடிய நெய்தல் திணைப் பாடலில் இராமன் திருவணைக் கரைக்கு வந்து இருந்ததாய் ஒரு செய்தியைப் பார்ப்போம். தலைவியிடன் காதல் தொடர்பாக ஊரார் பேசுவதைப் பற்றித் தலைவியிடம் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவதாகப் புலவர் பாடுவார்:

கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென
இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புகுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானலம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே. (அகநானூறு:70:5-17)

இந்தப் பாடலில் வரும் பரதவர் என்ற இனக் குழுவினர் தொடக்க காலத்தில் சோழநாட்டுக் கடற்கரையிலேயே இருந்தவர். (என் இடுகையின் முதற்பகுதியில் இளஞ்சேட்சென்னி பரதவரை வெற்றி கொண்ட செய்தியைக் குறிப்பிட்டு இருப்பேன்.) பாண்டிய நாட்டில் பரதவர் அவ்வளவாக விரிந்து இருந்தது இல்லை. பாக்கம் என்று முடியும் நெய்தல் ஊர்ப் பெயர் சோழநாட்டிலும், பின்னால் அதனின்றும் விலகிய தொண்டை நாட்டிலுமே உள்ள பெயராகும். பாண்டிய நாட்டில் இது போன்ற பெயர்கள் மிகவும் அரிது. ஞாழல், புன்னை ஆகிய மரங்கள் விரவிய கானலம் பெருந்துறை (காடு பின்புலமாக இருக்கும் பெருந்துறை) என்ற குறிப்பு கோடிக்கரையையே உணர்த்துகின்றது. இன்றும் இங்கு ஞாழலும், புன்னையும் நிறைந்து கிடக்கின்றன. கோடிக்கரைக் காடு என்றுதான் இந்தப் பக்கம் சொல்லுகிறார்கள். இது போன்ற விவரிப்பு இராமேசுவரத்துக்கோ, இராமநாதபுரத்துக்கோ ஒத்து வராது. அவை பாலை நிலத்தின் கூறுகள் என்பது அங்கே வசிக்கிறவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது போகத் தொல்முது கோடி என்பது ஆதி சேது என்ற குறிப்பையும் உணர்த்துகிறது.

அதையும் மீறி வென்வேல் கவுரியர் என்று பாண்டியரைச் சுட்டுவதால் பாண்டிநாட்டுத் தலத்தைக் குறிக்க முடியுமா என்றால் "சற்றுப் பொறுங்கள்" என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கு தொண்டி, மீமிசல் எனக் கிழக்குக் கடற்கரை ஊர்களைக் கடந்து முத்துப் பேட்டை வரை போனால் கோடிக்கரை வந்துவிடும். இந்த ஊர்களுக்கு உட்பரப்பில் இருக்கும் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஆவுடையார் கோயில் ஆகிய ஊர்கள் எல்லாம் ஒரு காலத்தில் முத்தூர்க் கூற்றத்திற்கு அண்மையும் சேர்ந்தவையுமே. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைக்கும் இருக்கும் இந்தப் பகுதிகள் காலம் காலமாய் சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே பந்தாடப் பட்ட பகுதிகள். இம்மென்றால் சோழன் பாண்டியனிடமிருந்து இவற்றைப் பிடுங்கிக் கொள்ளுவான்; இல்லையென்றால் சோழனிடமிருந்து பாண்டியன் பிடுங்கிக் கொள்ளுவான். கடைசிக் கடற்கோளில் தன் நாடு கணிசமாகக் குறைந்ததால் சோழனிடமிருந்து முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடமிருந்து குண்டூர்க் கூற்றத்தையும் பாண்டியன் பறித்துக் கொண்ட கதை கலித்தொகை 104.4 ல் கீழ்வருமாறு சொல்லப்படும்.

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவு ௾ன்றி, மேல்சென்று, மேவார் நாடு ௾டம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

இந்த இரு கூற்றங்களின் பெயரை உரையாசிரியர் வழியாகவே நாம் அறிகிறோம். தவிர மணிவாசகர் காலத்தில் பரி வாங்கப் போகும் திருப்பெருந்துறையும் (ஆவுடையார் கோயிலும்) இந்தக் கூற்றத்தில் தான் உள்ளது. (பரிவாங்கிய போது இது பாண்டியர் கூற்றமாகவே இருந்திருக்கிறது.) இன்றும் கூட இந்தப் பகுதிகளில் சோழ, பாண்டிய நாடுகளின் இரண்டு பக்கத் தாக்கங்களின் மிச்சம் கணிசமாகவே இருக்கிறது. அதனால், கோடிக்கரை ஓரோர் சமயம் பாண்டியரின் ஆட்சிக்கு வந்ததில் வியப்பு இல்லை. (அகம் 70 ஆம் பாடல் தனுக்கோடியைக் குறிக்கிறது என்று சொல்லுவாரும் உண்டு. என்னால் மேலே சொன்ன காரணங்களுக்காக ஏற்க முடியவில்லை.)

இனி அகம் 70 ஆம் பாடலில், வரும் செய்தியைப் பார்ப்போம். தோழி சொல்லுகிறாள்: (இங்கே அட்லாண்டா பெ.சந்திரசேகரனின் சொற்களை அப்படியே பயனாக்கி "கோடிக்கரை" என்று ஊர்ப்பெயரை மட்டும் மாற்றித் தருகிறேன். அவர் தனுக்கோடி என்ற கருத்தாளர்.)

"உன்னைத் திருமணம் செய்துகொள்ளுமுன் அவருக்கும் உனக்கும் இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் ஊரார் பலரும் அறியுமாறு அலர் (கிசுகிசு!) பேசிச் செய்தியைப் பரப்பினர். ஆனால், திருமணம் ஆன பின்னரோ [நிலைமை வேறு]; வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் குலத்துப் பாண்டியருக்குரிய மிகப் பழமையான கோடிக்கரையில் முழங்கும் பெருங் கடல் அலைவீசும் துறையில் வெற்றியன்றி வேறேதும் அறியாத இராமன் தன் இலங்கைப் படையெடுப்புப் பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆல மரத்தடியின் அடியில் அமர்ந்திருந்தான்; அப்போது அமைதியை வேண்டி ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல், ஊர் அமைதியாகிவிட்டது!" என்றாள்.

ஆலமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை இராமன் கையுயர்த்தி ஒலி எழுக்காமல் இருக்கச் செய்தது கம்பனில் கிடையாது; வான்மீகியிலும் கிடையாது. இப்படி ஒரு செய்தி கோடிக்கரையில் சொல்லப் படுவதில் இருந்தே, கடைச் சங்க காலத்திலேயே இன்றைய இலங்கைக்கும் இராம காதையில் சொல்லப்படும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிதல் குழப்பம் ஏற்படத் தொடங்கிவிட்டது என்று அறியலாம். ஆனாலும் ஒருசிலர் இராமர் சேது என்று தங்களுக்குத் தோன்றியபடி கற்பனை வாதம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

"இராவணன் ஆண்ட ௾லங்கை எது?" என்ற தலைப்பில் சைவசித்தாந்த வெளியீட்டுக் கழகத்தின் செந்தமிழ்ச் செல்வி இதழில் "சிலம்பு 23" (volume 23) ல் மயிலை. சீனி வேங்கடசாமியார் மற்ற ஆய்வாளர்களின் முடிவுகளைத் தெரிவித்திருப்பார். ஏகப்பட்ட வட இந்திய ஆய்வாளர்கள் இராவணனின் இலங்கையை இன்றைய சத்திஸ்கர், ஜார்க்கண்ட் பகுதியில் ஒரு ஏரிக்கு நடுவில் காட்டுவார்கள். தவிர இன்றைய இலங்கையின் மகாவம்சத்தில் பழஞ்செய்தியாக, தொன்மக் கதையாகக் கூட, இராவணன், இலங்கை என்னும் பெயர்கள் கூறப்படவில்லை.

இனி அடுத்து இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் நடுவே பாம்பன் வாய்க்கால் ஏற்பட்டது பற்றிப் பார்க்கலாம். இதை நான் சொல்லுவதைக் காட்டிலும், இராமநாத சுவாமி கோவில் கும்பாபிசேக மலர் 1975ல் "இராமேசுவரத் தீவு" என்னும் தலைப்பில் மயிலையார் எழுதிய ஒரு கட்டுரையை அப்படியே தட்டச்சித் தருகிறேன்.
------------------------------
இராமேசுவரம் என்னும் இச்சிறு தீவு முற்காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்த ஒரு நிலமாக இருந்து பிறகு சிறு தீவாக மாறிற்று என்னும் வரலாறு பலருக்குத் தெரியாது. இச்செய்தி பலருக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இராமேசுவரம் தீவும் இராமநாதபுரமும் ஒரு காலத்தில் இணைந்திருந்தன என்பது உண்மை.

தென்னிந்தியாவின் கடற்கரை ஓரங்கள் எக்காலத்திலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. கடற்கோள்களினாலும், கடல் அரிப்பினாலும் நமது நாட்டுக் கடற்கரைப் பக்கங்களில் எத்தனையோ மாற்றங்கள் நெடுங் காலமாக நடந்துள்ளன. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது பாண்டிய நாட்டுக்கு அருகில் இருக்கிற இலங்கைத் தீவு முன்னொரு காலத்தில், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலமாக இருந்தது. இந்தப் பெரிய நிலப்பரப்பு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கடற்கோளினாலும், கடல் அரிப்பினாலும் சிறிது சிறிதாகச் சிதைந்து போய்க் கடைசியில் தனித் தீவாகப் பிரிந்து போய், பிற்காலத்தில் இலங்கைத் தீவாக மாறிப் போயிற்று. நில ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் இந்த வரலாற்றுச் செய்தியைக் கூறுகிறார்கள். இலங்கை, தனித் தீவாகப் பிரிந்து போன பிறகுங் கூட, கொழும்புக்குத் தெற்கேயுள்ள கடலோரங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதி நிலங்கள் கடலில் முழுகிப் போயுள்ளன என்று மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது.

கன்னியாகுமரி இப்போது தமிழகத்தின் தெற்கெல்லையாக அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒரு நிலப்பரப்பு தமிழகத்தோடு இணைந்திருந்தது. அந்த நிலப்பரப்பு ஏறத்தாழ இரண்டு மாவட்டங்கள் (ஜில்லாக்கள்) அளவு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த நிலப்பரப்பு பிற்காலத்தில் கடற்பெருக்கினாலும், கடல் அரிப்பினாலும், பையப் பைய கடலில் மூழுகிப் போய்விட்டது. அந்த நிலப்பரப்பு முதல்தடவை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் ஒரு பகுதி மறைந்து போய் எஞ்சியிருந்த இன்னொரு பகுதி நிலம் மற்றுமொரு கடற்பெருக்கினால் மறைந்து போயிற்று, இந்த வரலாற்றுச் செய்தியைச் சிலப்பதிகாரமும், கலித்தொகையும் கூறுகின்றன. இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரமும், கடற்கோளினால் முழுகிப் போன இந்த நிலங்களைக் கூறுகிறது.

திருப்பதி என்னும் திருவேங்கடமலையை எல்லோரும் அறிவார்கள். வேங்கடமலையைச் சூழ்ந்திருக்கும் நாடுகளுக்கு வேங்கடக் கோட்டம் என்பது பழைய பெயர். இந்த வேங்கடக் கோட்டத்துக்குக் கிழக்கே கடற்கரையோரமாகப் பவத்திரிக் கோட்டம் என்னும் ஒரு நிலப்பரப்பு இருந்தது. பவத்திரிக் கோட்டம் ஒரு ஜில்லா (மாவட்டம்) அளவுள்ள நிலம். இந்தப் பவத்திரி நாட்டை 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நக்கீரர் அகநானூறு 340ம் செய்யுளில் கூறுகிறார். இந்தப் பவத்திரிக் கோட்டம் கி.பி.11ம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிப் போயிற்று. கடலில் முழுகிப் போன பவத்திரிக் கோட்டம் இப்போது திருவேற்காடு ஏரி (பழவேற்காடு ஏரி - இராம.கி) என்று பெயர் பெற்று பெரும் நீர்ப்பரப்பாக இருக்கிறது. பவத்திரிக் கோட்டம் இருந்ததையும், அது கடலில் முழுகிப் போனதையும் பிற்காலத்துச் சோழ அரசர்களின் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பவத்திரிக் கோட்டத்தில் இருந்த ஊர்களில் ஒன்று காகந்தி என்பது. "கடல்கொண்ட காகந்தி" என்று சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. நெடுங்காலமாகத் தொண்டைநாடின் கடற்கரையொரமாக இருந்த பவத்திரிக் கோட்டம் கடலில் முழுகிப் போய் இப்போது திருவேற்காடு ஏரியாய் மாறிப் போய்விட்டது. இந்த ஏரியின் தென்பகுதி இப்போது தமிழக அரசாட்சிக்கு உட்பட்டும், வடபகுதி ஆந்திர அரசுக்கு உட்பட்டும் இருக்கின்றன. (ஸ்ரீஹரிக் கோட்டா என்று இன்று சொல்லப்படும் விண்வெளி ஏவுகணைத் தளத்தின் பெயரில் பின்னுள்ள "கோட்டா" இந்தக் கோட்டமாய் இருக்க வாய்ப்பு உண்டு. ஸ்ரீஹரி என்னும் திரிவு எப்படி வந்தது, பவத்திரிக்கும் அதற்கும் உள்ள ஓசைத் தொடர்பு என்ன, என்று இன்னும் அறிந்தேன் இல்லை; தேடுகிறேன் - ௾ராம.கி)

தமிழகத்தின் தெற்கே பாண்டிநாட்டிலே கிழக்குக் கடற்கரையையடுத்து கொற்கைக்குடாக் கடல் இருந்தது. கொற்கைக் குடாக் கடல் நிலத்தில் புகுந்து உள்கடலாக அமைந்திருந்தது. கொற்கைக் குடாக் கடலின் மேற்கே கொற்கைப் பட்டினம் இருந்தது. இது துறைமுகப் பட்டினமாகவும் முத்துக் குளிக்கும் இடமாகவும் இருந்தது. கொற்கை நகரத்தைப் பற்றிச் சங்கப் பாடல்கள் சிறப்பாகக் கூறுகின்றன. தாமிரபரணி ஆறு அக்காலத்தில் கொற்கைக் குடாக் கடலில் சென்று விழுந்தது. கடற்கரையில் இருந்து ஐந்து மைல் தூரம் உள்புகுந்து உள்நாட்டுக் கடலாக இருந்த கொற்கைக் குடாக் கடல் பிற்காலத்தில் ஏறத்தாழ 10 ஆம் நூற்றாண்டில் மண்மூடி மறைந்து போய்விட்டது. கடற்கரைப் பக்கமாகக் கடல் அலைகள் மணலைக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் ஒரு புறத்தைத் தூர்த்து விட்டன. தாமிரபரணி ஆறு மணலை அடித்துக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் இன்னொரு புறத்தைத் தூர்த்துவிட்டது. இவ்வாறு இருபுறமும் மணல் தூர்ந்து கொற்கைக் குடாக்கடல் அடியோடு மறைந்து போய் இப்போது அது இருந்த இடம் நிலமாக மாறிவிட்டது. தாமிரபரணி ஆறும் இடம் மாறிவிட்டது. இவ்வாறு கடற்கரையோரங்களில் கடல் அரிப்பினாலும், கடல்பெருக்கினாலும் பல இடம் கடல்மாறிப் போனதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். (மாமல்ல புரத்திற்கு அருகில் ஏற்பட்ட மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். - இராம.கி.)

இராமேசுவரம் ஒரு காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்திருந்ததென்றும், அது பிற்காலத்தில் தீவாகப் பிரிந்து தாய்நாட்டில் இருந்து பிரிந்து போய்விட்டதென்றும் கூறுகிறோம். அதனை விளக்குவோம். இராமேசுரம் இராமநாதபுரத்துடன் இணைந்திருந்த காலத்தில் இராமேசுவரக் கோயிலில் இருந்து இராமலிங்கப் பெருமானை இராமநாதபுரத்துக்கு எழுந்தருளிவித்து ஒரு வாரம் தங்கிப் பிறகு மீண்டும் இராமேசுவரத்துக்குக் கொண்டு போவது வழக்கமாய் இருந்தது. இவ்வாறு இராமேசுவரம் தீவாக மாறுவதற்கு முன்பு வரையில் இது நடந்து வந்தது. தீவாக மாறிப் போனபிறகு இராமேசுவரர் இராமநாதபுரத்துக்கு எழுந்தருளுவது நின்றுவிட்டது. ஏறத்தாழ கி.பி.12ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட சிங்கள அரசன் தமிழ்நாட்டின் மேல் படையெடுத்துப் போர் செய்ய வந்தபோது, அவனுடைய சேனையைக் கப்பல்களில் ஏற்றிக் கொண்டுவந்து இராமேசுவரத்தில் இறங்கிப் பிறகு அந்தச் சேனையை இராமநாதபுரத்துக்கு அழைத்து வந்தான் என்று சுல்லவம்சம் (=சூளவம்சம் - இராம.கி) என்னும் இலங்கைநூல் கூறுகிறது. இதனாலும் இராமநாதபுரமும் இராமேசுவரமும் முற்காலத்தில் ஒன்றாக இணைந்திருந்தன என்பதை அறிகிறோம்.

ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுர வட்டத்தில் போர்ச்சுகீசியர் வந்து கப்பல் வணிகம் செய்தார்கள். அக்காலத்தில் பெரும் புயலடித்துக் கடல் கொந்தளித்துக் கடலில் நீண்டுகிடந்த இராமேசுவரத்தைத் தீவாகப் பிரித்துவிட்டதும், கடல்நீர், சிறு கால்வாய் போலப் பாய்ந்து இராமநாதபுரத்தையும், இராமேசுவரத்தையும் பிரித்துவிட்டது. சிலகாலம் வரையில் இந்தச் சிறு கால்வாயைக் கடந்து இராமநாதபுரத்துக்குப் போக்குவரத்து இருந்தது. பிறகு இந்தக் குறுகலான கால்வாயில் கடல்நீர் புகுந்து அதை அகலமாக்கி விட்டது. அப்போது போர்த்துகீசிய வாணிகர் தங்களுடைய வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காக இந்தக் கால்வாயை ஆழமாகவும் அகலமாகவும் செய்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான வராகன்களைச் செலவு செய்தார்கள்.

புயல் அடித்து காற்று மழையினாலும் கடல் கொந்தளிப்பினாலும் இயற்கையாக உடைப்புண்ட இராமேசுவரம் பிறகு பையப் பைய உடைப்பு அகலமாகிக் கால்வாய் ஆகிவிட்டது. அந்தக் கால்வாயை போர்த்துகீசிய வாணிகர் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக அகலமும் ஆழமுமாகச் செய்து விட்டனர், இவ்வாறு இராமேசுவரம் தனித்தீவாகப் பிரிந்து போயிற்று. இராமநாதபுரத்துக்கும், இராமேசுவரத்துக்கும் உள்ள கால்வாய் இப்போது பாம்பன் கால்வாய் என்று பெயர் கூறப்படுகிறது. இராமேசுவரமும், இராமநாதபுரமும் முன்னொரு காலத்தில் இணைந்து ஒரே நிலமாக இருந்தது என்பதைப் பிற்காலத்தவர் மறந்து விட்டார்கள்.
----------------------------------

இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் இடையில் பாம்பன் கால்வாயை போர்த்துகீசியர் வெட்டிய போதும், பின்னால் ஆங்கிலேயர்கள் அதை அகலப் படுத்திய போதும், இராமர் சேது என்று சொல்லி அதை நிறுத்த ஆட்கள் இல்லை. இன்றோ, சேதுக் கால்வாய் வெட்டுவதை நிறுத்துவதற்கு இராமனைக் காரணம் காட்டுகிறார்கள்.

இனி ஆதி சேதுவுக்கும், இப்பொழுது பேசப்படும் இராமர் சேதுவுக்கும் இடையிலான நிலம் கடற்கோளில் அழிந்த செய்தியை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 4

"அரக்கனும் தமிழும்" என்ற முன்பாதித் தலைப்பைப் பற்றி இதுகாறும் பேசிய நாம், "தமிழும், இராமர் சேதுவும்" என்ற பின்பாதித் தலைப்பிற்குள் சென்று பார்த்துவிட்டு, மீண்டும் முன்பாதித் தலைப்பிற்குப் போகலாம். (வான்மீகியையோ, அல்லது கம்பனையோ, ஒழுங்காகப் படித்தாலே, சேது பற்றி விளங்கிப் போகும் என்றாலும் திருகு வாதங்களையும், சூழ்ச்சிகளையும் சேர்த்து வைத்து, ஓர் இயற்கை மண்திட்டை இராமர் சேது என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று இருப்பவர்களுக்கு நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நொதுமலாய் இருக்கும் பொதுவானவர்களுக்கு நிலையை ஓரளவாவது புரிய வைக்க வேண்டும் என்றே இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடங்கினேன்.)

"இராவணன் எங்கே சீதையைத் தூக்கிக் கொண்டு போனான்?" என்று தேட முற்பட்ட வானரர்களை நான்கு திசைகளுக்கும் பிரித்து அனுப்பும் சுக்ரீவன், தென்திசைக்கு அனுமனையும், அங்கதனையும், சாம்பவனையும் இன்னும் சிலரையும் அனுப்புவான். அவர்களுக்கு, எங்கு தேடவேண்டும் என்றும், எப்படி போக வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கும் சுக்ரீவன் தென்கடல் வரைக்கும் அவர்களைப் போகச் சொல்லியிருப்பான். இங்கு வான்மீகியை எடுத்துரைக்காமல், அவரைப் பெரும்பாலும் ஒட்டிச் சென்ற, நமக்கு நன்கு தெரிந்த கம்பனில் இருந்தே, குறிப்புத் தருகிறேன். கிட்கிந்தா படலம் நாடவிட்ட படலத்தில்

தென்தமிழ் நாட்டு அகன்பொதியின் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்
சேர்கிற் பீரேல்
என்றுமவன் உறைவிடமாம் ஆதலினால் அம்மலையை
இறைஞ்சி ஏகி
பொன்திணிந்த புனல்பெருகும் பொருநையெனும் திருநதிபின்
பொழிய நாகக்
கன்றுவளர் தடஞ்சாரல் மயேந்திரமா நெடுவரையும்
கடலும் காண்டிர்

என்ற பாடல் வரும். இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய செய்தி "பொதிகை மலையைத் தாண்டி, பொருநையையும் (தாம்பர பெருநையும்) தாண்டிச் சென்றால், மகேந்திர மலையடுக்கையும், அதன் அருகில் கடலையும், காண்பீர்கள்" என்று சுக்கிரீவன் கூற்று மட்டுமே. இதே கூற்றின் படி அனுமனும் மற்றவரும் மகேந்திர மலை போய்ச் சேர்ந்ததை, ஆறுசெல் படலத்தின் கடைசிப் பாடலில் கம்பன் சொல்லுவான்.

வன்திசைக் களிறு அன்ன மயேந்திரக்
குன்று இசைத்தது வல்லையில் கூடினார்
தென்திசைக் கடற்சீகர மாருதம்
நின்றிசைக்கும் நெடுநெறி நீங்கினார்

தென்திசைக் கடலில் இருந்து வரும் ஈரக்காற்று, நின்று ஒலிக்கும் வழிகளைக் கடந்து, தென் திசையைத் தாங்கும் யானை போன்ற மகேந்திர மலையை அடைந்த அனுமனும் மற்றவர்களும், அடுத்து சம்பாதியோடு உரையாடி இலங்கை பற்றி அறிகின்றனர். அதற்குப் போகுமுன் தென் கடல் பற்றிய செய்தியைப் புரிந்து கொள்ளுவோம்.

ஒரு 300/400 ஆண்டுகளாய், வங்காள விரிகுடா என்று சொல்லப்படும் கடல், தமிழ் இலக்கியம் நெடுகிலும் குணகடல் அல்லது கிழக்குக் கடல் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதை ஒருநாளும் தென் கடல் என்று யாரும் அழைத்ததில்லை. அப்படி அழைத்ததற்கு தமிழில் ஆவணப் பதிவும் கிடையாது. அதே போல அரபிக்கடல் என்று வாஸ்கோட காமா காலத்தில் இருந்து சொல்லப்படும் கடல், குட கடல் அல்லது மேற்குக் கடல் என்றே தமிழ் இலக்கியம் நெடுகிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

தென் கடல் என்பது இன்றைக்கு இந்துமாக் கடல் என்று சொல்லப் படுகிறது. வேத காலத்துச் சில வடபால் நூல்களிலும், பிராமணங்கள், ஆரண்யங்கள் போன்றவற்றில், தென்கடல் என்ற கருத்து அரபிக் கடலைக் குறிப்பதாகவும் சில வடமொழி அறிஞர்கள் கருத்துச் சொல்லுகிறார்கள். (ஏனென்றால் சப்த சிந்துவுக்கு அது தென்பகுதி.) அந்த ஆதாரங்கள் வடமொழி இலக்கியங்களைத் தேடினால் கிடைக்கும். வடமொழி இலக்கியத்தில் கிழக்குக் கடல் என்பது "சகரனின் மைந்தர்கள் தோண்டிய செயற்கைக் கடல்" என்றும், அதனால் சாகரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ஒரு தொன்மக் கதை உண்டு. (பின்னால் சாகரம் என்ற சொல் பொதுமைப் பெயராகி மற்ற கடல்களுக்கும் பயன்பட்டது.) ஆனால் வடமொழி இலக்கியங்களிலும் கூடக் கிழக்குக் கடல் ஒரு காலத்தும் தென் கடல் என்று சொல்லப் பட்டது இல்லை.

அடுத்து மகேந்திர மலை என்பது இன்றைக்குக் குமரி மாவட்டத்தில் மகேந்திர கிரி என்ற சொல்லப்படும் இடத்திற்கு (Liquid propulsion centre இருக்கும் இடத்திற்கு) அருகில் உள்ள மலையடுக்கு என்று சொல்லுவார்கள். பின்னால் இந்த மகேந்திர மலையில் இருந்து தான் அனுமன் இலங்கைக்குத் தாவிப் போனதாக இராம காதை சொல்லும். (நெடுங்காலம் கழித்து வந்த மாணிக்க வாசகரும் கூட மகேந்திர மலையை சிவனின் இருப்பிடமாகக் கீர்த்தித் திரு அகவலில் "மன்னும் மாமலை மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்று குறிப்பிட்டுச் சொல்லுவார். ஏதோ ஒருவகையில் மகேந்திரம் என்பது தமிழருக்குச் சிறப்பானதாக இருந்ததோ, என்னவோ? மகேந்திர மலை பற்றிய இலக்கியச் செய்திகளும், மற்ற தரவுகளும் ஆய்வு செய்யப் படவேண்டியவை.)

அடுத்து நெடுங்காலத்திற்கு முன்னால் அழிந்த குமரி நிலம் பற்றிப் பேசவேண்டும். தெற்கே கடற்கோளால் நிலம் அழிந்தது உண்மை. "அது கண்டமா? குறுநிலமா?" என்பதில் தமிழ் அறிஞர்களிடையே பெருத்த வேறுபாடுகள் உண்டு. அந்தக் கருத்தாடலுக்குள் நான் இப்பொழுது போகாமல் அதைத் திரு. சு.கி.ஜெயகரன் (குமரிநில நீட்சி, காலச்சுவடு பதிப்பகம், திசம்பர் 2002. இந்தப் பொத்தகத்தோடு நான் வேறுபட்டாலும், அதே பொழுது, படிக்கவேண்டிய பொத்தகம் என்று சொல்லுவேன்.) சொல்வது போலக் குறுநிலம் என்றே இப்போதைக்கு எடுத்துக் கொண்டு பார்த்தால், இன்றுள்ள குமரிமுனைக்கும் தெற்கே கிட்டத் தட்ட 80 கி.மீ அளவுக்கு கணிசமான நிலம் (குமரிக் கண்டம் என்ற கருத்தைக் காட்டிலும் குமரிநிலம் என்ற சொல்லைப் பயனாக்குவது நல்லது.) அழிந்து போயிருக்கலாம் என்று கொள்ளலாம். (இந்த நீளத்தை சட்டென்று நான் ஒப்ப முடியவில்லை. இன்னும் நீண்டு இருக்கக் கூடும் என்றே எண்ணுகிறேன். அது பற்றிய கடல் ஆய்வு தொடர வேண்டும்.) ஜெயகரன் சொல்லும் இன்னொரு கருத்து (இதில் பெரும்பாலும் யாருமே வேறுபட மாட்டார்கள்.) தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலுமான நிலப்பரப்பும் கூட கடல்மட்ட உயர்ச்சியால் அழிந்து போனது. இதைப் பற்றி விரிவாகக் கீழே பார்ப்போம். இந்த இரு அழிவுகளும் கடல் மட்டம் உயர்ந்ததனால் நடந்திருக்கின்றன.

இற்றைக்குப் 15000 - 12000 ஆண்டுகளூக்கு முன்னால் இருந்த பனியுகத்தில் (ice age) கடலின் மட்டம் இன்று இருப்பதைக் காட்டிலும் 80-100 மீ. குறைந்து இருந்தது. அதனால் நீரின் அடியில் இன்று இருக்கும் பல நிலங்கள் (பெரும்பாலும் பெருநிலக் கடற்கரை, தீவுகள் ஆகியவற்றை ஒட்டியவை) அன்று வெளிப்பட்டு நிலமாகவே இருந்தன. இத்தகைய நிலை இந்தியத் துணைக் கண்டத்திலும் இருந்தது. அப்படிக் கடற்கரை பெரியதாக இருந்த போது, M130 ஆட்களும் (நாகர், இயக்கர் போன்ற பல்வேறு கருப்பு இனத்தவரும்), பொதுவாக இந்தியர் என்று சொல்லப்பெறும் (என்னைப் போன்ற ஒரு சிலர் திராவிடர் என்றே சொல்ல விழையும்) M20 ஆட்களும் (The Journey of Man - A Genetic Odyssey by Spencer Wells, Penguin Books. M20 ஆட்கள் உலகில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தான் மிகுந்து இருக்கிறார்கள் என்றும், இவர்களில் 50% தென்னிந்தியாவிலே இருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.), இவர்களுக்கு இடையே கலந்து உருவான ஆட்களும், ஆகப் பெரும் கூட்டமே இந்த அழிந்து போன கடற்பரப்பு நிலங்களில் வாழ்ந்து இருப்பார்கள். (இந்த ஆட்களின் வாழ்க்கை எச்சங்கள் தான் சென்னையில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருக்கும் அச்சரப் பாக்கத்தில் கிடைக்கின்றன.)

பின்னால் வெவ்வேறு காரணங்களில் தூண்டப்பட்டு பனியுகம் முடிந்து, பனிப் பாறைகள் உருகி, கடல் மட்டம் உயரத் தொடங்கி இருக்கிறது. பொதுவாகக் கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் உயரும் போது அது அங்கு வாழும் மாந்தரின் மரபில் கதைகளை உண்டு பண்ணாது. மாறாகச் சில இலக்குச் சார்ந்த புவியியல் அமைப்புகளால் (localized geographical formations) திடீரென்று நீர் பிளந்து கொண்டு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்துக் கொட்டும் போது, அது மாந்தர்களின் குமிந்த மரபில் (common traditions) அழிக்கமுடியாத தொன்மத்தை உருவாக்கும். அப்படி ஒரு காலம் கி.மு. 5600 ஆகும்.

இந்தப் பொழுது திடீரென்று துருக்கிக்கு அருகில் உள்ள பாஸ்பரஸ் நீரிணை பிளந்து, மத்திய தரைக் கடலின் நீர், வெள்ளமாய், ஒரு பெரும் அருவி போல, கருங்கடலுக்குள் கொட்டி கருங்கடலின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம் என்று பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் William Ryan என்பவரும், Waltar Pitman என்பவரும் சேர்ந்து ஒரு தேற்றை (theory) 1998 அளவில் வெளியிட்டார்கள். (அவர்களுடைய பொத்தகம் Noah's Flood, Simon& Schister, Rockefeller Centre, 1230 Avenue of the Americas, New York NY 10020 - கட்டாயமாகப் படிக்க வேண்டிய ஒன்று.) மற்ற ஆய்வாளர்கள் இந்தத் தேற்றின் ஒரு சில விவரங்களையும் முடிவுகளையும் மறுத்தாலும், முற்றிலும் ஒதுக்கி விடவில்லை. இவர்களின் முன்னீடு, ஆய்வாளர்கள் மனத்தில் ஒரு புதிய பார்வையைக் கொண்டு வந்திருக்கிறது.

இது போன்ற ஒரு நில அழிப்பு தமிழகக் கடற்கரையிலும், குறிப்பாக இன்றையக் குமரிமனைக்குத் தெற்கிலும் நடந்திருக்கலாம். இந்த நிலங்கள் அழிந்ததை ஒரு இயக்கப் படமாக வலையில் போட்டிருந்தார்கள். அதன் சுட்டி கீழே.

http://www.grahamhancock.com/underworld/AshCF1.php?p=1

(மேலே உள்ள தளத்தில் அடுத்தடுத்து 5 பக்கங்கள் இருக்கும். வலைத்தளத்தில் சொல்லுவதை நான் ஏற்கிறேன் என்று பொருள் கொள்ளாதீர்கள். நான் சுட்டி கொடுத்தது அதில் வரும் இயக்கப் படத்திற்காகவே.)

அந்தப் படத்தில் பார்க்கும் போது குமரிமனைக்குக் கீழே தீவு ஒன்றும் தெரியும். அது தான் இராமாயணத்தில் சொல்லப் படும் இலங்கையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கம்பனில் சொல்லப்படும் அடையாளங்கள் குமரி முனைக்கும் தெற்கேதான் கொண்டு போகின்றன. தவிர "குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை" என்று சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையிலும் கூறியிருக்கிறார்.

இனி மீண்டும் கம்பனுக்கே வருவோம். மகேந்திர மலைக்கு வந்து சேரும் அனுமனும் மற்றவர்களும் சீதையைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் தங்கள் இயலாமையைப் பேசிக் கொண்டிருப்பதைச் சம்பாதிக் கழுகு கேட்கிறது. அப்பொழுது தன் உடன்பிறந்தான் சடாயு இறந்ததை அறிந்து மிகுந்த வருத்தம் உறுகிறது. பின்னால் இராவணன் சீதையை இலங்கைத் தீவுக்குக் கொண்டு போன செய்தியை வாணரருக்குச் சம்பாதிக் கழுகு சொல்லுகிறது. இலங்கையின் இருப்பிடத்தையும் அதன் தொலைவையும், இராவணனின் நகர் பற்றியும் கூடச் சொல்லுகிறது. இதைத் தொடர்ந்து, கிட்கிந்தா காண்டம், சம்பாதிப் படலத்தில் "ஓசனை ஒருநூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை" என்ற வாசகமும், கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலத்தில் "ஓசனை ஒன்று நூறும்" என்ற குறிப்பும் கம்பனால் சொல்லப் பெறும்.
ஆக மகேந்திரமலையில் இருந்து இலங்கைநகரம் 100 யோசனைத் தொலைவு இருந்தது. இந்தத் தொலைவை அனுமன் தாவிக் கடந்ததாக இராம காதை கூறும். சரி, யோசனை என்ற தொலைவு இன்றையக் கணக்கில் எவ்வளவு ஆகும்?

பொறிஞர் கொடுமுடி சண்முகம் "பழந்தமிழர் பொறியியல் நுட்பத் திறன்" என்ற ஆய்வுப் பொத்தகத்தில் (படிக்க வேண்டிய இரு பொத்தகங்கள்; மீனா கோபால் பதிப்பகம், மனை எண் 9, புதிய கதவு எண் 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை -88, தொலை பேசி: 22533667)

1 விரல் = =1 3/8 inch = 3.5 cm (3.48958 cm)
6 விரல் = 1 சாண் =8 1/4 inch = 21 cm
2 சாண் = 1 முழம் =16 1/2 inch = 42 cm
2 முழம் = 1 கோல் =33 inch = 84 cm
4 கோல் = 1 தண்டம் =11 ft = 3.35 m
500 தண்டம் = 1 கூப்பீடு= 1 mile 220 ft = 1.675 Km
4 கூப்பீடு = 1 காதம் = 4 mile 1 furlong 220 ft = 6.7 Km
4 காதம் = 1 யோசனை =16 mile 5 furlong 220 ft = 26.82 Km

இந்த அளவீடுகள் கிட்டத்தட்ட சிற்சில மாற்றங்களுடன் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து நாவலந்தீவு எங்கணும் (தமிழகமும் சேர்த்து) இருந்ததாகத்தான் பல ஆவணங்களும் (கௌடில்யரின் அர்த்த சாத்திரம் கூட) சொல்லுகின்றன.

100 யோசனை என்பது 2682 கி.மீ. ஆகும். அதாவது மகேந்திர மலையில் இருந்து இலங்கை நகரம் 2682 கி.மீ தொலைவில் இருக்க வேண்டும். சரி கம்பன் காதத்திற்கு மாறாக யோசனை என்று தவறாகச் சொல்லிவிட்டான் என்றால் 670 கி.மீ. தொலைவில் இலங்கை இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றாகக் கம்பனின் அறிவைக் குறைசொல்லி நாம் குறைத்துக் கணக்கிட்டுக் கொண்டே போகலாம்.

எப்படி முட்டிப் பார்த்தாலும், இன்றைய இலங்கை பற்றிய கணக்கே ஒட்டிவராது. வால்மீகியோ, கம்பரோ தாங்கள் என்ன சொல்கிறோம் என்று தெரியாதவர்களா?

அடுத்த செய்திகளுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, September 27, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 3

"அரக்கர் என்பவர் கருமைகூடிய சிவந்த நிறத்துத் தனி இனத்தார் (tribe); நாவலந்தீவில் இருந்த பல இனத்தவர் போல இவரும் ஒருவர்" என்ற செய்தியோடு, இன்னுஞ் சில பழம் பாடல்களை அடுத்துப் பார்க்கலாம்.

பழைய இராமாயணம் ஒன்று தமிழில் இருந்திருக்க வேண்டும் என்பது "ஆசிரிய மாலை" என்னும் தொகுப்பு நூலின் வழி தெரிகிறது. ஆசிரியப் பாக்களினால் ஆன நூல்களிலிருந்து சில பாடல்கள் தொகுக்கப்பட்ட செய்யுள்களைக் கொண்ட நூல் ஆசிரியமாலையாகும். எத்தனையோ தமிழ் இலக்கியங்களை நம்முடைய கவனமின்மை காரணமாயும், பல்வேறு மூடத் தனங்களாலும், இழந்தது போல், இந்த ஆசிரிய மாலையும் நமக்கு முழுமையாகக் கிடைக்காதபடி ஆயிருக்கிறது. நல்ல வேளையாக, ஆசிரிய மாலையில் இருந்து ஒரு சில பாட்டுக்களையாவது புறத்திரட்டு என்னும் தொகைநூலில் சேர்த்திருக்கிறார்கள். இது தவிர, தொல்காப்பியத்திற்கான நச்சினார்க்கினியர் உரையிலும் ஓரிரு பழைய இராமாயணப் பாட்டுக்கள் கிடைக்கின்றன. புறத்திரட்டு என்பது திரு. வையாபுரிப் பிள்ளையின் எடுவிப்பில் (editing), சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டிருக்கிறது. (அண்மையில் கூட இதன் மறுஅச்சு வெளி வந்திருக்கிறது.). இதே போல "மறைந்து போன தமிழ்நூல்கள்" என்ற தலைப்பில் மயிலை. சீனி. வேங்கடசாமியாரால் வெளிவந்த பொத்தகத்திலும் இந்தப் பழைய இராமாயணப் பாடல்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

[இந்தப் பாடல்களை இணையத்தில் எங்களைப் போன்ற பலருக்கும் அறிமுகம் செய்து விளக்கியவர் நண்பர் அட்லாண்டா பெரியண்ணன் சந்திர சேகரன் ஆவார். Remnants of Tamil Works lost over the years - I, pazaya rAmAyaNam (in Tamil Script, TSCII format) என்று தேடினால் அவர் வலையில் இட்டது கிடைக்கும். (அவரைப் போன்றவர்கள் இன்று தமிழ் இணையத்தில் இல்லாதது ஓர் இழப்பே!) இந்தப் பாடல்கள் வால்மீகி இராமாயணத்தில் இல்லாத நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது பற்றி பெர்க்லி பல்கலைத் தமிழ்-வடமொழிப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு (George Hart) "The Poems of Ancient Tamil: their milieu and their Sanskrit counterparts", (1975) என்னும் நூலில் சொல்லுவதாக பெ.சந்திரசேகரன் சொல்லுவார்.]

பழைய இராமாயணம் என்று மேலே சொன்னாலும், கிடைத்தது என்னவோ, ஐந்து பாடல்கள் தாம். இந்தப் பழைய இராமாயணம் என்பது கம்பராமாயணத்திற்கும் முந்தியதாய் இருந்திருக்க வேண்டும்; ஆனால் எந்தக் காலம் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. அதன் நடையையும் (தேவாரம், நாலாயிரப் பனுவல்களுக்கும் முந்திய காலங்களில் தான் அகவல் நடை பெரிதும் விரும்பப் பெற்றது. பிற்காலங்களில் விருத்தப் பாக்கள் கூடிவிட்டன), சொல்லாட்சிகளையும் பார்த்தால், பெரும்பாலும் சங்க காலத்தின் கடைசியில் உருவாகி இருக்க வாய்ப்புண்டு என்றே ஊகிக்கிறோம். ஆசிரிய மாலையில் வரும் பழைய இராமாயணப் பாக்கள் எல்லாமே போர்க்களம் பற்றியதாய் இருக்கின்றன. மற்ற பாட்டுக்கள் எல்லாம் சுவடி அழிந்ததில் தொலைந்தன போலும்.

முதற்பாட்டு:

மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து
கான்உறை வாழ்க்கையில் கலந்த இராமன்
மாஅ இரலை வேட்டம் போகித்
தலைமகள் பிரிந்த தனிமையன் தனாது
சுற்றமும் சேணிடை அதுவே முற்றியது
நஞ்சுகறைப் படுத்த புன்மிடற்(று) இறைவன்
உலகுபொதி உருவமொடு தொகைஇத் தலைநாள்
வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி
வன்தோள் ஆண்தகை ஊரே அன்றே
சொல்முறை மறந்தனம் வாழி
வில்லும் உண்(டு)அவற்(கு) அந்நாள் ஆங்கே
மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும்
நீலக் குவளை நிறனும் பாழ்பட
இலங்கை அகழி மூன்றும் அரக்கியர்
கருங்கான் நெடுமழைக் கண்ணும் விளிம்(பு)அழிந்து
பெருநீர் உகுத்தன மாதோ வதுவக்
குரங்குதொழில் ஆண்ட இராமன்
அலங்குதட(று) ஒள்வாள் அகன்ற ஞான்றே.

இராமனின் தனிமை இலங்கையின் அழிவில் முடிந்ததை இந்தப் பா சொல்லுகிறது. இனிக் கீழே ஒவ்வொரு பாவுக்கும், நானறிந்த வகையில் உரை சொல்லி என் புரிதலையும் கொடுத்துள்ளேன். இந்த உரைகளுக்கும், புரிதலுக்கும் நானே பொறுப்பு. ஒருவேளை கம்பனை இன்னும் ஆழ்ந்து படித்தால், சிற்சில இடங்களில் மாறுபட இயலும். நண்பர்கள் முயன்று உரிய பொருளைப் பலருக்கும் உணர்த்தினால் நல்லது.

--------------------------
அகவையில் மூத்த தந்தையின் ஏவலால், ஊரைத் துறந்து, காட்டுவாழ்க்கையில் கலந்துபோன இராமன், பெரிய கலைமான் வேட்டையில் ஈடுபட்டுத் தன் தலைவியைப் பிரிந்த தனிமையாகி, தன்னுடைய சுற்றத்தையும் விட்டுத் விலகுமாறு முடிந்ததால், நஞ்சுகறைப் பட்ட கழுத்துடைய இறைவன், உலகாளும் அம்மையொடு சேர்ந்திருந்த தலைநாளில், பனிமலை இமயத்தை அசைத்தெடுத்த பெரும் வன்தோள் ஆண்தகையின் (அதாவது இராவணனின்) ஊர் முற்றுகையுற்றது.

கொலைக்குரங்குகளின் தொழிலை ஆண்ட இராமனின் ஒளி மின்னும் வாள் அதன் உறையை விட்டு அகன்ற பொழுது, நீண்டமழையில் கருங்காடு எல்லையில்லாமல் நீர் உகுப்பது போல, அரக்கிப் பெண்களின் சிவந்தவரிப் புறத் தோற்றமும், குவளை மலர் போன்ற நிறமும் பாழ்பட, இலங்கையின் மூன்று அகழிகளும், பாழ்பட்டன. சொல்முறை மறந்தோமோ! வாழி ! அவன் வில்லும் அந்த நாளில் அங்கு தான் இருந்தது.
------------------------

மேலே சொன்ன விவரிப்புச் செய்தியில் முகன்மையானது, இராவணனின் கோட்டை மூன்று பக்கம் அகழி கொண்டது என்று சொல்லுவதாகும். இதன் மூலம், கோட்டையின் இன்னொரு பக்கம் கடலாக இருந்திருக்கக் கூடும் என்று உணருகிறோம். இந்த விவரிப்பு கம்பனின் இராம காதைக்கு முற்றிலும் மாறுபட்டது. (இராமாயணத்தில் பல்வேறு வேற்றங்கள் -versions - உண்டு என்பது தமிழிலும் இதன்வழி உண்மையாகிறது. ஆசிரிய மாலையில் வரும் பழைய இராமாயணத்திற்கும், கம்பராமாயணத்திற்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன.) கம்பனில் இராவணனின் கோட்டைக்கு நாலு பக்கம் அகழியும் வாயில்களும் சொல்லப் படும். மேலே "வன்தோள் ஆண்டகை" என்று இராவணன் சிறப்பாகவே சொல்லப் படுகிறான். அரக்கிப் பெண்களின் நிறம் குவளை மலர் போன்று சொல்லப் படுகிறது. செங்கீற்றுப் பாய்ந்த கருநிறம் குவளை நிறமாகும். ("அவன் பெருமானர் மகன் (son of a brahmin); அவனைப் போய் இவர்கள் ஆதரிக்கிறார்களே?" என்ற இந்துத்துவக்காரர்களின் சதுரப் பேச்சு - smart talk - இங்கு எடுபட முடியாது. அரக்கர் தனி இனம் என்று தான், அரக்கியரின் நிறம் குறிப்பது வழியாக, இங்கு அறிகிறோம்.)

இனி இரண்டாம் பாட்டிற்கு வருவோம்.

இருசுடர் இயங்காப் பெருமூ(து) இலங்கை
நெடுந்தோள் இராமன் கடந்த ஞான்றை
எண்(கு) இடை மிடைந்த பைங்கண் சேனையிற்
பச்சை போர்த்த பலபுறத் தண்ணடை
எச்சார் மருங்கினும் எயிற்புறத்(து) இறுத்தலின்
கடல்சூழ் அரணம் போன்றது
உடல்சின வேந்தன் முற்றிய ஊரே.

-----------------------------------
கதிரும் நிலவும் உலவாத, பெரும் முது இலங்கையை பெருந்தோள் இராமன் வெற்றி கொண்ட போது, கரடிகள் இடைநிறைந்த, சினத்தால் பசித்த சேனை, மதிற்புறத்து எந்தப் பக்கம் நெருங்கினாலும், பச்சை போர்த்திய பல்வகை மருத நிலப்புறம் இருந்ததால், உடல் சினந்த வேந்தன் முற்றுகையிட்ட ஊர் கடல் சூழ்ந்த அரணம் போன்று ஆனது.
-----------------------------------

பாடலின் வழி நாம் கூர்ந்து கவனிக்கும் செய்திகளுக்கு வருவோம். முற்றுகையின் போது இராமனின் உடல் சினந்து காணப்படுகிறது. அவன் இயல்பான ஒரு மாந்தனாகவே, கம்பனில் சொல்லுவது போல் கடவுள் அல்ல, இந்தச் சொல்லாட்சியில் அறியப் படுகிறான். போர் வெற்றி கொண்ட நாள் அமையுவா நாளாக (கதிரும் நிலவும் உலவாத அமாவாசை நாளாக) அறியப் பெறுகிறது. (கம்பராமாயணத்தில் இந்தச் செய்தியை நான் இன்னும் ஒத்துப் பார்க்கவில்லை)

கோட்டையின் மூன்று பக்கத்திலும் சுற்றி இருந்தது மருத நிலப்புறம். கம்பன் சொல்லுவது போல மலையும் காடும் சூழ்ந்த அணுக்கம் நான்கு திசையிலுமாய் விவரிக்கப் படவில்லை. திரிகூடமலை இங்கு உணர்த்தப் படவில்லை. (கம்பன் விவரிக்கும் யுத்த காண்டத்தில் மரா மரங்களும், கடம்ப மரங்களும் கணக்கற்று குரக்கினத்தால் பிடுங்கப் படுகின்றன; கல்லும், பாறைகளும் பெயர்க்கப் படுகின்றன.) கம்பன் விவரிக்கும் இடமும், இந்த இடமும் வேறுபடுகின்றன. மருத நிலப்புறம் என்பது "பலபுறத் தண்ணடை" என்ற சொல்லாட்சியால் இங்கு உணர்த்தப் படுகிறது. இந்தக் குறிப்பு கம்பனுக்கு முற்றிலும் வேறுபடுகிறது. கம்பன் சொல்லும் இடம் வேறு எதோ விவரிப்பைக் குறிக்கிறது. கம்பன் கூறும் இடம் இன்றைய இலங்கையாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே கம்பனை ஆழ்ந்து படிப்போர் உணர முடியும். (இன்றைய இலங்கையின் புவியியல் தெரிந்தவர்கள் அதை ஆய்வு செய்யவேண்டும். இலங்கையின் புவியியல் குறிப்புபற்றி நான் தெரிந்தவற்றைப் பின்னால் சொல்லுகிறேன்.)

மூன்றாவது பாட்டு இராவணனின் வள்ளன்மையையும், மள்ளரின் வீரத்தினால் நொச்சித் தடந்தகையை (strategy) அவன் வகுத்ததையும் பாடுகிறது.

மேலது வானத்து மூவா நகரும்,
கீழது நாகர் நாடும் புடையன
திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக்
கண்நுதல் வானவன் காதலின் இருந்த
குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்
தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை
வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்த இலங்கையில்
வாடா நொச்சி வகுத்தனன்
மாலை வெண்குடை அரக்கர் கோவே.

---------------------------------
மேலே வானத்தில் அழியா நிற்கும் அமராவதி நகரிலும், கீழே நாகருடைய நாட்டிலும் பெருகிக் கிடப்பவற்றையும், எட்டுத் திசை காப்பாளர்களின் தேசக் கோட்டையையும், சூறையாடுவதாய்ச் சூளுரைத்து, அவற்றைக் கவர்ந்து, முன்பு பெற்ற பல்வேறு விழுநிதியெல்லாம், அந்த வழியில், நெற்றிக்கண் முதல்வனின் மேல் உள்ள பற்றிமையால் (பக்தியால்) கயிலைக் குன்றை ஏந்திய தடக்கைகள் இப்பொழுது தொழிற்படும்படி, தோலா வலிமையோடு, தன் நிழலுக்குக் கீழே வாழ்ந்த வல்லமை பொருந்திய மள்ளருக்கு அள்ளிக் கொடுத்து ஏற்படுத்திய இலங்கையின் மருதப் புறத்து மதிலைக் காக்கும் படி நொச்சி ஏற்பாட்டை வகுத்தான், மாலையொடு வெண்கொற்றக் குடையிந் கீழ் வீற்றிருக்கும் அரக்கர் அரசன்.
---------------------------------

மேலே வானம், கீழே பாதலம் (இதற்குப் புவியின் அடியில் என்ற பொருளை மட்டும் கொள்ள வேண்டியதில்லை. இவர் இருக்கும் புவிமட்டத்திற்குக் கீழே உள்ள இடம் கூடப் பாதலம் தான். பாதலம் என்பது கிட்டத்தட்ட இன்றையப் பொருண்மையான பள்ளத்தாக்கையே குறிக்கிறது. காட்டாக மலை மேட்டிலிருந்து பார்த்தால் கீழே உள்ள இடத்தைப் பாதலம் என்று தான் பேச்சுவழக்கில் சொல்லுவார்கள்.), சுற்றிலும் எட்டுத் திசையிலும் இருக்கும் நாடுகளில் இராவணனின் அதிகாரம் நிலவியதாக இங்கு புலவர் சொல்லுகிறார்.

இந்தப் பத்துத் தலையிலும் (தலை என்பதற்குத் தமிழில் திசை என்றும் பொருள் உண்டு.) இவன் ஆட்சி எடுபட வேண்டுமானால், இராவணன் பத்துத் தலையான் என்று சொல்லுவது இயல்பே. பின்னால் பத்துத் தலையான் என்று உடல் அமைவோடு குழம்பினரோ, என்னவோ?

இவன் பத்துத் தலையிலும் சூறையாடியது கூட வியப்பில்லை. "ஆ, அரக்கன், அதனால் சூறையாடினான்" என்று அச்சடித்துப் பார்க்கும் வேலையெல்லாம் தேவையில்லை. சூறையாடும் செயலை நாவலந்தீவில் பல அரசரும், தலைவர்களும் வெவ்வேறு கால நிலைகளில் செய்திருக்கிறார்கள். வேண்டுமானால் புறநானூற்றுப் பாட்டுக்கள் சிலவற்றைப் படித்துப் பார்க்கலாம். ("ஆகா, தமிழனைச் சொல்லிவிட்டான்" என்று தேவைக்கு மீறி உணர்ச்சி வயப் படாமல், இயல்பான முறையில் மேலே உள்ள பாவின் வரிகளைப் புரிந்து கொள்ளுவது நல்லது. எந்தக் காலத்திலும் தடியெடுத்தவன் எல்லாம் தண்டற்காரன் தான். இந்தத் தடியெடுப்பை இராவணனும் செய்வான், இராமனும் கூடச் செய்வான்; செய்திருக்கிறான்.)

இராவணன் கயிலையை அசைத்ததும், அவன் சிவநெறியாளன் என்பதும் இந்தப் பாடலில் பெரிதும் பேசப் படுகிறது. தமிழரின் இலக்கியத்தில் இராவணன் ஒரு சிவ வழிபாட்டாளன் என்பது மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த எண்ணம் நெடுநாட்கள் தமிழரிடையே இருந்திருக்கலாம். (கலித்தொகை 38 இலும், இராவணன் இமயமலைக்கு அடியில் சிவனின் அழுத்தலால் சிக்கிய கதை சொல்லப் படும்.

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல - கலி 38:1-5

---------------------------
அந்தணன் என்ற சொல்லைப் பார்த்துப் "பெருமானராய்ச் சிவனைச் சொல்லிவிட்டார் இந்தப் புலவர்" என்று படையெடுத்துக் கொண்டு யாரும் வரவேண்டாம். அந்தன்> அந்தனன்> அந்தணன் என்ற சொல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் பார்ப்பனரைக் குறிக்கவில்லை. அப்படிக் குறிப்பதாகப் பலரும் பரப்புரை செய்கிறார்கள்; அது தவறு. பெருமானர், பார்ப்பனர், அந்தணர் என்ற சொற்களின் பொருண்மைகள் பல்வேறு நிகழ்ப்புக்களுடன் (agenda) விதம் விதமாக நம் முன்னால் திரிக்கப் படுகின்றன. பொதுவாக, அத்தன் = தலைவன், ஐயன், பெரியவன் என்ற பொருளையே அந்தணன் என்ற சொல் குறிக்கிறது. தமிழறிஞர் இளங்குமரன் "அந்தணன்" என்ற சொற்பிறப்பை அழகாக எடுத்துரைப்பார். என்னுடைய முந்தையக் கட்டுரைகளில் அவரை எடுத்துரைத்து வழி மொழிந்திருக்கிறேன்.)
-------------------------------

கலித்தொகைப் பாடலை விடுத்து, ஆசிரிய மாலையில் வரும் மூன்றாவது பழைய இராமாயணப் பாடலுக்கு மீண்டும், வருவோம்.

தன்னால் வாழும் படையினருக்கும், மக்களுக்கும் பல நிதியங்களை இராவணன் அள்ளிக் கொடுத்திருக்கிறான்; அவர்களோடு பெரிதும் ஒன்றியிருக்கிறான். அவர்களால் தான் அவன் தலைநகரே கட்டப் பட்டிருக்கிறது. (அவனுக்காக உயிர்கொடுக்கவும் தயங்காதவர்களாய் அவர்கள் இருந்திருக்க வேண்டும். அவன் கொடுங்கோலனாய் இருந்திருந்தால் இது முடியாது.)

மள்ளர் என்பது மேலே வீரரைக் குறிக்கும் கடைந்தெடுத்த தமிழ்ச்சொல். அது மட்டுமல்லாது, கோட்டை மதிலைக் காக்க இராவணன் நொச்சித் தடந்தகையை (strategy) வகுத்தான் என்று சொல்லும் போது தொல்காப்பிய வழித் தமிழ்ப் போர்முறை இங்கு குறிக்கப் படுகிறது. கம்பரும் கூட யுத்த காண்டத்தின் அணிவகுப்புப் படலத்தில், இராவணன் முன்னே நிகும்பன் தம் பகைவரை இகழ்ந்து கூறுவதாக ஒரு பாடலை வைப்பார்:

எழுபது வெள்ளத் துற்ற குரக்கினம் எயிலை முற்றும்
தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்
அழவநீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே
உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர்

என்று வரும். "குரக்கினம் எழுபது வெள்ளம் சேனை வைத்து இருந்தால் என்ன? உன்னிடம் ஆயிரம் வெள்ளம் சேனை இருக்கிறது. அவருடைய உழிஞைத் தடந்தகையை (strategy) முறியடிக்க நொச்சித் தடந்தகையை (strategy) தன் உச்சியில் உன் ஊர் கொண்டுள்ளது" என்று சொல்லும் இந்தக் கம்பர் பாடல் ஆசிரிய மாலையின் தாக்கம் கொண்டதாகவே இருக்கிறது. இந்தப் போர் தமிழ்முறைப்படியே தான் இரு புலவராலும் புரிந்து கொள்ளப் படுகிறது. [மிண்டும் சொல்லுகிறேன். "போர்முறை" தமிழ்முறைப் படியே சொல்லப் படுகிறது. "இராவணன் தமிழனா, தமிழன் இல்லையா?" என்று தொங்கியவண்ணம் தாவ நினைக்கின்றவர்கள், மேலே கொடுத்திருக்கும் பட்டகைகளை - facts - குழப்பிக் கொள்ளக் கூடாது.]

அடுத்து நான்காம் பாட்டிற்குப் போவோம்.

இருபால் சேனையும் நனிமருண்டு நோக்க
முடுகியல் பெருவிசை உரவுக்கடும் கொட்பின்
எண்திசை மருங்கினும் எண்ணிறைந்து தோன்றினும்
ஒருதனி அனுமன் கைஅகன்று பரப்பிய
வன்மரம் துணிபட வேறுபல நோன்படை
வழங்கி அகம்பன்தோள் படையாக ஓச்சி
ஆங்க,
அனுமன் அங்கையின் அழுத்தலில் தனாது
வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம்கரிந்(து)
உயிர்போகு செந்நெறி பெறாமையின்
பொருகளத்து நின்றன நெடும்சேண் பொழுதே.

-----------------------------
பெரும்விசையோடு, முடுகி எறிந்த வலிந்த கடுஞ் சுழற்சியில், எட்டுத் திசை மருங்கிலும் எண்ணமுடியாத படி தோன்றினாலும், தனி ஒருவனான அனுமன் தன் கையை அகற்றி வீசிய வலியமரம் உடைந்து போக, பல்வேறு நோன்புகளால் பெற்ற படைகளை வீசியும் அழியாததால், பெருமான் (பிரமன்) கொடுத்த வேற்படையை வீசிப் போதியதாக்க, அனுமன் உள்ளங்கையின் அழுத்தலால் தன்னுடைய வலிந்த தலையோடு உடல் புகுந்து தைக்க, முகம் கரிந்து, உயிர் போகும் விதி பெறாமையால், இருபக்கத்துச் சேனையும் மிகுந்து மருண்டு நோக்கிய படி, நெடிதுயர்ந்த பொழுதுக்கும், போர்க்களத்து நின்றன.
-----------------------------

இங்கே இராவணன் முன்னால் பிரமனிடம் பெற்ற படையை வீசி இலக்குவனை அயரச் செய்தது கூறப் படுகிறது. (பெருமான் என்ற வடபுலத்துத் தெய்வக் குறிப்பு இங்கே பதிவு செய்யப் படுகிறது.) இந்தப் படையை வீசும் போது, குறுக்கே அனுமன் தடுத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. (அந்தச் செய்தி கம்பனில் கிடையாது.) ஆனால் யார் மேல் எறிந்தான் என்று இந்தப் பாடலை மட்டும் வைத்துச் சொல்ல முடியவில்லை. நல்ல வேளையாக, கம்பனின் இராம காதை உதவிக்கு வருகிறது. இராவணன் எறிந்த அகம்பன் (=நான்முகன்) வேல் இலக்குவனை மயங்க வைத்ததாக இரு பாட்டுக்கள் கம்பனில் (யுத்த காண்டம், முதற் போர்புரி படலத்தில்) இருக்கின்றன.

வில்லினால் இவன் வெலப்படான் எனச் சினம் வீங்க
கொல்லும் நாள் இன்று இது எனச் சிந்தையில் கொண்டான்
பல்லினால் இதழ் அதுக்கினன் பருவலிக் கரத்தால்
எல்லின் நான்முகன் கொடுத்த ஓர் வேல் எடுத்து எறிந்தான்

எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்துப்
பொறிந்து போய் உக, தீ உக, விசையினின் பொங்கி
செறிந்த தாரவன் மார்பிடை சென்றது சிந்தை
அறிந்த மைந்தனும் அமர்நெடுங் களத்திடை அயர்ந்தான்.

இந்த இருபாட்டுக்களின் உதவியோடு மேலே ஆசிரிய மாலையின் பாட்டைப் பார்த்தால் பொருள் சட்டென்று விளங்குகிறது. "வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம் கரிந்(து)" என்ற இலக்குவனின் நிலை கம்பனில் சொல்லப் படவில்லை. அங்கு இலக்குவன் ஆதிசேடனின் அவதாரம் என்பதால் இலக்குவன் பட்ட வலியும், முகம் கரிதலும் சொல்லப் படாமல் "அவன் அயர்ந்தான்" என்று மேலோட்டமாய்ப் பூசியது போல் சொல்லப் படும். இரண்டு சேனையும் இந்தச் சண்டையைக் கவனித்து மருண்டு போய் நிற்கின்றன.

இனி ஐந்தாம் பாட்டிற்கு வருவோம்.

கடலும் மலையும் நேர்படக் கிடந்த
மண்ண வளாக நுண்வெயில் தகளினும்
நொய்தால் அம்ம தானே இஃ(து)எவன்
குறித்தன நெடியான் கொல்லோ மொய்தவ
வாங்குசிலை இராமன் தம்பி ஆங்(கு)அவன்
அடிபொறை ஆற்றின் அல்லது
முடிபொறை ஆற்றலன் படிபொறை குறித்தே.

இடுகையை வேகமாய் முடிக்க வேண்டிய நிலையில் இந்தப் பாடலின் உரையை கம்பனோடு ஒப்பிட்டு "எந்த நிகழ்வை இது குறிக்கிறது?" என்று ஆய்ந்து எழுத முடியாது இருப்பதால், பாட்டை மட்டுமே தருகிறேன். இலக்குவன் பெயரை நேரே குறித்த தமிழ்ப் பழம்பாடல் இது ஒன்றாகத் தான் இருக்கும்.

"அரக்கர் என்பவர் வெறுக்கப் படத்தக்கவர்" என்ற சுமையேற்றிய பார்வை இந்தியத் துணைக் கண்டத்தில் பெரிதும் பரப்பப் பட்டிருக்கிறது. மேலே உள்ள 5 பாக்களைப் படித்தால், அந்தப் பார்வை ஒருபக்கப் பார்வை என்பதைக் குறிப்பால் அறியமுடியும். ஒருபக்கம் குரக்கினமும், இராமனும், அவனைச் சார்ந்தவர்களும்; இன்னொரு பக்கம் அரக்கர் என்ற அளவிலேயே நொதுமலாய்ச் (neutral) செய்திகள் சொல்லப் படுகின்றன.

இனி அடுத்த இடுகையில் அரக்கர் பற்றிக் கொஞ்சமும், சேது பற்றி நிறையவும் பேசுவோம். (அகம் 70 பற்றிய செய்தி அங்குதான் வருகிறது)

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 23, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 2

புறம் 378 கீழ்வருமாறு போகிறது.

தென்பரதவர் மிடல் சாய
வடவடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத்து அன்ன நீள்நகர் நின்றுஎன்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கென வகுத்த வல்ல மிகப் பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழி தந்தோனே! அதுகண்
இலம்பாடு இழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும்
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ் சேர் மதரணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்(கு)
அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே
இருங்கிளை தலைமை எய்தி
அரும்படர் எவ்வ முழந்த தன் தலையே

இந்தப் பாடலின் காலத்தில், சோழரின் அரசு தெற்கே கடற்கரையை ஒட்டிப் பரவவொட்டாமல், தடுத்ததில் பரதவரின் பங்கும், வேங்கடத்திற்கும் வடக்கே பரவவொட்டாமல் தடுத்ததில் வடுகரின் பங்கும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. (முன்னே சொன்னது போல் இளஞ்சேட்சென்னி - கரிகாலன் II ஆகியோர் தான் பெருஞ்சோழர் அரசை உருவாக்கியவர்கள். அதனால் தான் கரிகாலனுக்கு அவ்வளவு பெயர் தமிழர் வரலாற்றில் ஏற்பட்டது. பரதவரை வென்றி கொண்டதெல்லாம், சோழ அரசின் தொடக்க காலங்களில் நடந்திருக்க வேண்டும். ஒரு பேரரசின் தொடக்கம், நிலைப்பு, முடிவு ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால், இந்தப் பாட்டைச் சங்கம் முடிகின்ற காலத்துக்கு அருகில் கி.பி. 150-க்குத் தள்ளுவது கொஞ்சமும் சரி வராது. மீண்டும், மீண்டும், கி.மு. 200ல் இருந்து கி.பி. 200 என்ற 400 ஆண்டு காலத்தையே சுற்றிக் கொண்டு சங்க காலத்தைக் கொள்ளுவது, முன்னே சொன்ன செங்குட்டுவன் - கயவாகு என்னும் சம காலப் பொருத்தத்தால் அமையும் செக்குமாட்டுச் சுற்று. அதைவிட்டு வெளியே வந்தால் தான், சங்க காலம் என்பது ஆய்வாளருக்குச் சரியாகப் புலப்படும்.

குறிப்பாக, அண்மைக்கால அகழ்வு ஆய்வுகளும், தமிழிக் கல்வெட்டு ஆய்வுகளும், சங்க காலத்தை கி.மு.400-கி.பி.200 என்ற 600 கால அகண்ட இடைவெளிக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. இன்னும் கொடுமணலும், ஆதிச்ச நல்லூரும் முழுதாக ஆயப்படவில்லை. இது வரை இங்கு நடந்த 5% ஆய்வுகளே தமிழக வரலாற்றை அசைத்து, 200 ஆண்டிற்கு அகலப் படுத்தியிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் பலரும் இன்னும் கி.அ. நீலகண்ட சாத்திரியாரிடமும், ஐராவதம் மகாதேவனிடமும் இருந்து கொண்டிருந்தால் எப்படி? ஆற்றில் பெரும்நீர் சாத்திரியாருக்கும் அப்புறம், திரு. மகாதேவனின் தமிழிக் கல்வெட்டு ஆய்வுக் காலத்திற்கு அப்புறம், ஓடிவிட்டது. அண்மைக்கால 10, 15 ஆண்டு ஆய்வுகளைக் கூர்ந்து கவனிக்குமாறு சொல்லுகிறேன். முனைவர் கா.ராஜனின் "தொல்லியல் நோக்கில் சங்க காலம்" - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004 ஆம் ஆண்டு வெளியீட்டை படித்துப் பார்த்தால் நான் சொல்லுவது புரிபடும்.)

புறம் 378 ஆம் பாடலின் முதற் பன்னிரு வரிகளில் இளஞ்சேட் சென்னியைப் புகழும் புலவர் (அவற்றை நான் இங்கு விளக்கவில்லை), அதற்கு அடுத்த வரிகளில், அரசன் தனக்கு முன்பு தந்த நகைகளைத் தன் சுற்றத்தார் அணிந்து கொள்ளத் தெரியாமல் தடுமாறிய காட்சியை விவரித்துச் சிரிக்கிறார். "இப்பொழுது இவன் கொடுக்கப் போகும் செல்வம் என்ன பாடுபடும்?" என்பதே அவர் உள்ளத்தே எழும் குறுகுறுப்பு.

"வறுமையைச் சட்டென்று இழந்த தன் சுற்றத்தார் விரலிற் செறிந்து கொள்ளுவதைச் (அதாவது மோதிரத்தை) செவியிற் தோடாய்ப் போட்டுக் கொண்டும், செவியிற் போடும் தோட்டை, மோதிரம் ஆக்கியும், அரையில் போடும் இடுப்புச் சங்கிலியைக் கழுத்திற் போட்டும், கழுத்துச் சங்கிலியை அரையில் போட்டுக் கொண்டும், தடுமாறியது எப்படி இருந்ததாம்?"

மிகுந்த கோவத்தில் (கருந்தெறல் என்றால் அது ஒரு பொருள்) இருக்கும் இராமனின் மனைவி சீதையை வலிமிகுந்த அரக்கன் கவர்ந்து கொண்டு போன போது, நிலத்தின்மேல் நகைகளைத் தூக்கி விட்டெறிந்தாளே (இங்கே கொஞ்சம் ஊன்றி ஓர்ந்தால், வான்வழி சீதையைக் கொண்டுபோன செய்தியும் கூட இந்தப் பாட்டில் மறைந்து நிற்பது புலப்படும்), அந்த ஒளிமிகுந்த நகைகளை அள்ளி, இப்படித் தாறுமாறாக அணிந்து கொண்ட, வான் கலத்திற்குக் (aircraft) கீழே இருந்த குரங்குகளின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தது போல இருந்ததாம்.

இந்தக் குரங்குகளை எப்படி நாம் புரிந்து கொள்ள வேண்டும்? வெறும் சிறு குரங்குகள் என்றா? அல்லது மாந்தக் குரங்குகள் என்றா? இந்தப் பாட்டில் அதற்குக் குறிப்பில்லை. (செம்முகப் பெருங்கிளை என்பது உறுதியாகச் சிறு குரங்குகளைக் காட்டவில்லை. மாந்தக் குரங்குகளா, காட்டு மனிதர்களா என்பது அவரவர் விழைவு :-)) ஆனால் வலித்தகை அரக்கன் என்பது குறிப்பிடப் படுகிறது. இந்த அரக்கனுக்குப் பொருள் காணும் போது ஒருமையை வைத்துப் பார்ப்பது சரியாக அமையாது. அரக்கர் என்னும் பன்மைச் சொல்லாட்சியை வைத்துப் பார்க்க வேண்டும். "இந்த அரக்கன் சீதையைக் கவர்ந்து போனான்" என்பது கதைப்படி சரியான கூற்றுத் தான். இதற்கு மறுதலைக் கூற்றாய் "பெண்ணைக் கவர்பவன் எல்லாம் அரக்கன்" என்று சொல்ல முடியுமோ? அப்புறம் என்ன இராட்சதன், இராக்கதன்? ஓர் அரக்கன் கவர்ந்தது விதப்பான செயல். அதே பொழுது அரக்கன் என்பது பொதுமைப் பெயர்.

எப்படி வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர், நாகர், இயக்கர், மாந்தர் என்பவை பொதுமைப் பெயரோ, அதைப் போல அரக்கர் என்பதும் பொதுமைப் பெயரே! பொதுவாகப் பொதுமைப் பெயர்கள் எல்லாம் விதப்பான பொருளில் எழுந்து நாளாவட்டத்தில் பொதுமைப் பட்டுப் பின் மற்ற விதப்பான பொருண்மைகளையும் குறிக்குமாப் போலப் பேச்சில் பயன்படுவது பல மொழிகளிலும் நடப்பது தான்.

அமெரிக்காவில் கருப்பர் அல்லாதவருக்கு, கருப்பர் மேல் இருக்கும் ஓர் சுமையேற்றிய பார்வையை இங்கு குறிப்பிட விழைகிறேன். 1980ல் ஒருமுறை மாண்ட்ரியாலில் இருந்து என் குடும்பத்துடன் அமெரிக்காவின் கிழக்குக் கரை நகரங்கள் சிலவற்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே வாசிங்டன் நகருக்கும் போக முற்பட்டேன். மாண்ட்ரியாலில் என்னோடு இருந்த பல தமிழரும்/இந்தியரும், கனேடிய வெள்ளைக்காரர்களும், என்னைக் கலவரப்படுத்தி "வாசிங்டன் என்பது கருப்பர்நகரம். நீ கவனமாக இருக்க வேண்டும்; பொது இடங்ளிலும், பேருந்து, தொடரி (train) போன்றவற்றிலும் உன் உடமை, குடும்பம் ஆகியவற்றின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்" என்றெல்லாம் அவரவரின் பொதுப் புத்திக்கு ஏற்பச் சொல்லி கருப்பர் மேல் ஒரு பூதகரத் தன்மையை எனக்கு ஊட்டினார்கள். நானும் கலவரப்பட்டுத் தான் வாசிங்டன் போனேன். ஆனால் அங்கு நடந்ததே வேறு கதை. (அதை இங்கு சொன்னால் தடம் மாறிவிடும்). பின்னால் என் முட்டாள் தனம் கண்டு நானே வெட்கப் பட்டுப் போனேன். "கேப்பையில் நெய்வடிகிறது" என்று சொன்னால், கேட்பவனுக்கு எங்கே புத்தி போயிற்று? - என்று நினைத்து அமைந்துகொண்டேன். வெகு எளிதில் ஆதிக்கப் பார்வை என்பதைப் பொதுப்புத்தி மூலம் புதியவருக்கும் பரவி விடும் உலகம் இது.

பொதுவாக ஆதிக்கக்காரர்கள் தங்களுடைய குமுகப் பார்வையை தாங்கள் கையாளும் மொழிக்குள்ளும் சுமையேற்றி வைப்பார்கள். விவரம் தெரியாத மற்றவரும் தற்சிந்தனை இல்லாமல் அந்த ஆதிக்கப் பார்வையை தம்மை அறியாமலே கைக்கொள்ளுவார்கள். "கருப்பரா? கவனம்" என்ற தொடர் எவ்வளவு சுமையேற்றிய பார்வையோ, அதே போல "கிராதகன்" என்ற சுமையேற்றிய பார்வையும் வேத நெறியின் காலத்தில் இருந்தே நாவலந்தீவில் பரப்பப் பட்டிருக்கிறது. (எப்படி மேல்சாதி இளைஞரிடம் ஆதிக்கச் சிந்தனையாளர் கீழ்சாதியார் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஒருசார்ப்பட இயக்கி வைப்போர்களோ அதே போல, இன்னொரு மதத்தாரை "கொம்பு முளைத்தவர், பயங்கரவாதிகள்" என்று பொதுப்புத்தியில் சுமையேற்றி வைக்கும் அடிப்படை மதவாதிகள் போல) "கிராதகன்" என்ற சொல்லும் இந்தியர்களின் அடிமனத்தில் சுமையேற்றப் பட்டிருக்கிறது.

கிராதர் என்பவர் கருத்தவர்களே - கருப்பானவர்களே! இவர்களைத்தான் இன்றைய மாந்தவியல் Mon-khmer என்றும். முண்டா மொழி பேசுகிறவர்கள் என்றும் கூறும். இவர்களே இன்றைக்கும் வடபுலத்தின் ஆதிக் குடிகள். கருத்தர் என்ற நிறவழிச் சொல்லை நாளாவட்டத்தில் சுமையேற்றி வடமொழியின் வழியாக இந்திய மொழிகள் பலவற்றிலும் "கிராதகன்" என்ற கொடுமைப் பொருள் கொண்ட சொல்லை உருவாக்கவில்லையா? கிராதகன் கொடுமையானவன் என்ற இரண்டாம் வழிப் பொருளை வைத்துக் கொண்டு முதற்பொருளை விட்டொழிப்பது சிந்தனைத் தாக்கம் தானே? முதற்பொருள் கருப்பு என்பதே. "அவன் கருப்பா, அப்பொழுது கிராதகன் என்பது சரிதான்" என்று எத்தனை மக்கள் மனத்தில் அனிச்சைச் செயலாய் சொற்கள் ஆளப்படுகின்றன? இத்தனைக்கும் இன்று புனிதம் என்று சொல்லப்படும் கங்கை எனும் கருப்பு ஆற்றிற்குக் கூட முதலில் கிராத் என்ற பெயர்தான், இருக்கு வேதம் முடிந்த காலத்தில், இருந்திருக்கிறது.

இருக்கு வேதத்தின் நாயகர்களான திவோதசும், அவன் மகனான சுதாசும் கி.மு.1200 களில் ஆரிய சப்தசிந்துவில் இருந்த சம்பரனென்னும் கிராத அரசனுடன் போர் புரிந்து அவர்களை மலைக்கு ஓடச் செய்து தங்கள் ஆட்சியை நிலைத்துக் கொள்ளுவார்கள். இருக்கு வேதத்தின் குறிப்பிடத்தக்க பகுதி இதைப் பற்றித் தான் பேசுகிறது. "வேதத்தில் அது இருக்கிறது, இது இருக்கிறது" என்ற கற்பனை வாதங்களைத் தூக்கி எறிந்து இருக்கைக் கூர்ந்து படித்தால், "அது வெற்றி பெற்றவர் எழுதிய இலக்கியம், தாங்கள் வெற்றிபெறுவதற்காகத் தங்கள் தெய்வங்களிடம் வேண்டிக் கொண்ட முல்லைநிலப் பாடல்களின் தொகுப்பு" என்பது புரியும். (வேதம் அநாதியானது; அது 4000, 5000 ஆண்டுகளுக்கு முந்தியது என்ற கருத்தை நான் ஏற்பவன் அல்லன். எனக்குக் காதுகுத்தி மிகுந்த ஆண்டுகள் ஆயிற்று. பல ஆய்வாளர்களும் கி.மு.1200 யைத்தான் இருக்கு வேதத்தின் தொடக்க காலமாகவும் கி.மு.1000 ஐ அதன் இறுதிக் காலமாகவும் சொல்லுகிறார்கள்.)

வரலாற்றிற்குச் சற்று முற்பட்ட காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மக்கள் பெரும்பாலும் நிறம் பற்றியும், ஓரளவு இடம் பற்றியுமே, அறியப் பட்டார்கள். இனக்குழுக்கள் காலத்தில் அது இயற்கையே. மேலே கொடுத்த பட்டியலில் வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர், நாகர், இயக்கர், மாந்தர் என்ற எல்லாச் சொற்களுமே நிறத்தை ஒட்டி ஏற்பட்ட பழைய சொற்கள் தான்.

ஒவ்வொரு சொல்லாக எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்.

முதலில் வரும் சொல் பார்ப்பனர். கீற்று வலைத்தளத்தில் வரும் செய்திமடல் சூலை 2006ல் "பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?" என்ற கட்டுரையை இரா.மதிவாணன் எழுதியிருப்பார். அதில் பால்-பார்ப்பு-பார்ப்பார் என்று வெண்மைநிறம் கருதியே பார்ப்பனர் என்ற சொல் எழுந்தது என்று அழுத்தமாக நிறுவியிருப்பார். (இன்றையப் பார்ப்பனர் பலரும் நிறம் மாறிக் கிடப்பது வரலாறு 3200 ஆண்டுகள் நகர்ந்துவிட்டதை உணர்த்துகிறது.) பேரா. இராகுல சங்கிருத்தியாயனும், "ரிக்வேத கால ஆரியர்கள்" என்ற தன் பொத்தகத்தின் மூன்றாம் அதிகாரத்தில் (வர்ணமும், வர்க்கமும்) இருக்கு வேதத்தின் பல செய்யுட்தொகுப்புகளை எடுத்துரைத்து ஆரியரின் வண்ணம் பால்நிறம் என்றே நிறுவுவார். (ஆரியர் என்று ஒருவரும் இல்லை; ஆரியர் அல்லாதவர் என்று ஒருவரும் இல்லை என்று பூ சுற்றப் பார்க்கும் வாதத்தைப் புறம் தள்ளுவோம்.) ஆரியரின் முடி வண்ணம் இரோப்பியர் பலரைப் போலத் தீ நிறம் - பொன் நிறம் தான்; blonde.

தேவர் என்ற சொல் தீயென்னும் சொல்லில் இருந்து கிளைத்தது என்று பாவாணர் தன் நூல்களில் ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார். தேவர் என்பவர் பொன் நிறத்தவர்; பொன் முடியாளர்.

(வெள்ளைக்காரர் என்ற சொல்லுக்கு நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை. அதே போலக் கருத்தர், கருப்பர் என்பதற்கும் நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை.)

நாகர் என்பவரும் கருப்பரே. யா என்னும் கருமைக் கருத்தில் இருந்து ந்யா>ஞா>நா என்ற வளர்ச்சியில் நாகர் என்ற சொல் பிறக்கும். (தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகப் ஆய்வறிஞர் ப.அருளியாரின் "யா" என்ற கருவூலம் படித்து ஓர்ந்து பார்க்க வேண்டிய பொத்தகம்.) நாகரின் சுருக்கம் தான் நக்கர் என்பது ஆகும். நக்கவாரம் என்னும் nicobar -இல் வசிக்கும் மக்களை நக்க சாரணர் என்றே மணிமேகலை குறிக்கும். நக்கர் என்ற சொல் தெரிந்தோ தெரியாமலோ இந்தையிரோப்பிய மொழிகள் எங்கும் பரவி இன்று உலகெங்கும் nigger, negro என்று பரவிக் கிடக்கிறது. (இதையெல்லாம் சொன்னால், இது என்ன அபத்தம், மம்போ-ஜம்போ என்று சொல்லுவதற்கும் கேலிசெய்வதற்கும் பெயரில்லாத சிலர் முன்னிகை தர முன்வருவார்கள். இவர்களின் வறட்டுத் தனத்திற்கு எல்லை இல்லை. நாவல் பற்றிச் சொல்ல வேண்டியது நிறையக் கிடக்கிறது. அதற்கும் இன்னொரு நாள் வரவேண்டும்.)

இயக்கர் என்ற ஈழத்தீவின் பழங்குடிகளும் (இவர்களின் தலைவனாகக் குபேரனை வடமொழித் தொன்மங்கள் உருவகஞ் செய்யும்) கருப்பரே. யா என்னும் வேரின் வழி யக்கர் இயக்கராவர்.

யாவகர் (கருப்பர்) இருந்த தீவு யாவகம்>ஸ்யாகவகம்>சாவகம் = java என்னும் இந்தோனேசியத் தீவு. வாரணர் என்பரும் கருப்பரே. வாரணத் தீவு = borneo தீவு.

(இன்னும் சொன்னால் சேரர், சோழர், பாண்டியர் என்பவை கூட நிறத் தொடர்பில் பண்பாடு ஒட்டிய பெயர்கள் தான். அவற்றின் விளக்கத்தை இங்கு சொல்லாமற் தவிர்க்கிறேன்.)

ஆகக் கருப்பர் தென் ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மிகுந்தே இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் கி.மு. 60000 ல் தொடங்கிய கருப்பர் சோமாலியா, தெற்கு அரேபியா, ஈராக், ஈரான், கூர்ச்சரம், மாராட்டியம், கொண்கானம், சேரலம், பாண்டியம் (அங்கிருந்து ஒரு ஈற்றாக ஈழம்), சோழம், கலிங்கம், அங்கம் எனக் கடற்கரை வழியே போய், பின் தென்கிழக்கு ஆசியா வழியாக முடிவில் ஆத்திரேலியா வரை இன்னொரு ஈற்றாக அங்குள்ள பழங்குடிகளாக கி.மு.40000த்தில் முடிந்ததாக அண்மைக்கால Y chromosome மாந்த ஆய்வு ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. நம்முடைய பிரான்மலைக் கள்ளரை ஆய்வு செய்திருக்காவிட்டால் இந்த மாந்தப் பரம்பல் தெரியாமலே போயிருக்கும். இந்த ஆதிக் கருப்பரை M130 வகையினர் - கடற்கரை மக்கள் - coastal people - என ஈனியல் (genetics) குறிக்கும்.

கருப்பரும் வெளுப்பரும் இந்தத் துணைக்கண்டம் வந்தது போக இன்னும் சில இடைப்பட்ட நிறத்தவரும் இங்கு வந்து சேர்ந்த மற்றவர்களில் குறிப்பிட வேண்டியவர்கள் M20 எனப்படும் இந்தியர்கள் (இவர்கள் இங்கு வந்து சேர்ந்து 35000 ஆண்டுகள் ஆகிவிட்டன; திராவிடர் எனப்படுவோர் இவர்தான். என்னதான் இந்துத்துவக் காரர்கள் "திராவிடம் என்பது மொழி பற்றிய கருத்தீடு; அதை இனங்கள் பற்றிய முடிவிற்குள் நுழைக்கக் கூடாது" என்று முறுக்கிக் கொண்டாலும் அறிவியல் அப்படித்தான் போகிறது), 9000 ஆண்டுகளுக்கு முன்வந்த ஒரு குழுவினர், 3500 ஆண்டுகளுக்கும் முன்னால் வந்த இன்னொரு குழுவினர் ஆகியோராகும்.

"Language of Harappans", "The Civilized Demons: The Harappans in Rgveda" என்ற இரு பொத்தகங்களின் வழியாக அசுரர்/அரக்கர் என்போரை ஆரியருக்கு முன்வந்த கூட்டத்தார் என்று மாலதி J ஷெண்கேயும், "Deciphering the Indus Script" என்ற தன் பொத்தகம், மற்ற கட்டுரைகள் மூலமாய் திரு. அசுகோ பர்போலாவும் இரட்டை நிலைக் குடியேற்றத்தை உணர்த்தியிருப்பார்கள். ஈனியல் குறித்துக் காட்டும் 9000, 3500 ஆண்டுகள் இந்த இரட்டை நிலைக் குடியேற்றத்திற்கு அடையாளம் காட்டுகின்றன.

அரக்கர் (அசுரர்) என்பவருக்கும், தேவர் என்பவருக்கும் இடையே இருந்த போராட்டம், துருக்கியில் ஹிட்டைட் தொடங்கி பாபிலோனியாவில் அசூர் நாகரிகம் வழி (இன்றைய சிரியா அசூர்களின் நினைவில் எழுந்த பெயர்தான். பாபிலோனிய அரசன் அசுர் பனிபால் - இப்படி அடுத்தடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம்), இரானில் செண்ட் அவத்தா வரை பல தெற்றுக்கள் தென்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்திலும் அடையாளம் தென்படுகிறது. அசுரர்-தேவர் போராட்டம் பற்றிய பல தொன்மங்கள் ஒன்றுக்குள் ஒன்றாய் இந்த நீண்ட நிலப்பகுதியில் உருவெடுத்திருக்கின்றன. இந்த நிலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டமும் ஒரு பகுதியே!

அரக்கர் என்பவர் அரக்கு நிறத்தவர். - கருஞ்சிவப்பு. தமிழ்ப் பொருண்மை தான் சரியான புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. இன்றைக்குக் கருப்பருக்கும் வெள்ளைக்காரருக்கும் இடையில் coloured என்று சொல்லுகிறார்களே, அந்த கலப்பினத்தவர் போல இருப்பது அரக்கு நிறம். அமெரிக்காவில் coloured என்பவரை வெள்ளை நிறத்தாருடன் யார் சேர்த்துப் பேசுகிறார்கள்? அவரும் கருப்பு நிறத்தாரின் தாயாதியாகத்தானே எண்ணப் படுகிறார்?

வருணம் பற்றி இவ்வளவு எழுதியதற்கு நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் வருணம் நிலைக்க வேண்டும் என்று சொல்பவன் அல்லன். நம்மை அறியாமலேயே வருணச் சொற்கள் சுமையேற்றிய நிலையில் நம்மால் பயன்படுத்தப் படுகின்றன என்பதை இங்கு உணர்த்த வேண்டியிருந்தது. அரக்கன் என்ற சொல்லை ஏரணத்தோடு புரிந்து கொள்ள வேண்டும்.

நடைமுறையில் "அரக்கன் கருப்பனோடு சேர்த்தே எண்ணப் படுவான்". இருக்கு அப்படித்தான் சொல்லுகிறது. அடுத்த செய்திக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, September 22, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 1

அண்மையில் "இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு" என்ற இடுகையில் திரு.குமரன் சங்க இலக்கியத்தில் வரும் இராம காதைச் செய்தியைச் (புறம் 378) சொல்லியிருந்தார். அரக்கன் என்ற சொல்லாட்சி அந்தப் பதிவிலும், அதன் பின்னூடங்களிலும் பெரிதும் பேசப்பட்டது. "அப்படி ஒரு கவனிப்பு அந்தச் சொல்லுக்கு ஏன் வந்தது?" என்று முதலில் எனக்குப் புரிபடவில்லை. "வௌவியவன் தமிழன் அல்லன், அரக்கனே! தமிழரையும், அரக்கரையும், (அதே போல தமிழரையும், குரங்குகளையும்) ஒன்றாய் எண்ணிக் குழம்பலாகாது" என்ற கருத்தும் அந்த இடுகையில் உணர்த்தப் பெற்றது. இந்த உணர்விப்பினுள், "அரக்கருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருப்பதாய்ச் சான்றுகள் உண்டா?" என்ற கேள்வியும் கூடத் தொக்கி நிற்கிறது. (பொதுவாய் இராட்சசன், இராக்கதன் என்ற சுமையேற்றிக் கிடக்கும் வட சொற்திரிவுகளைக் காட்டிலும் அரக்கன் என்ற எளிய தமிழ்ச் சொல்லின் பொருண்மையை நேரடியாய்ப் பார்ப்பது நம்மைச் சரியான புரிதற் பாதையில் கொண்டு செல்லும். எங்கும் வடமொழிக் கண்ணாடியை வைத்துக் கொண்டே, வழி தேடுவது நம்மில் பலருக்கும் வாடிக்கையாகி விட்டது. இதில் திராவிடச் சிந்தனையாரும் விதிவிலக்கல்ல போலும். வேதநெறி, மனுநீதிகளின் இடைவிடாத் தாக்கத்தால், ஒருசார்க் கோடலாய்த் தமிழர், தம் சிந்தனை இழப்பது வருத்தமாய் இருக்கிறது.)

"அரக்கர் என்பவர் யார்?" என்ற கேள்விக்கு நாம் போகுமுன்னால், குறிப்பிட்ட புறம் 378 பாடலின் காலத்தைப் புரிந்து கொள்ளுவது நலம் பயக்கும். இந்தப் பாடல் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை முன்னிறுத்தி, ஊன்பொதி பசுங்குடையார் பாடியது (பாடாண் திணை, இயன்மொழித் துறை).

[ஊன்பொதி பசுங்குடையார் என்பது புலவரின் இயற்பெயரல்ல; காரணப் பெயர். தென்பாண்டி நாட்டில் இன்றும் கூடப் பெரும் விழாக்களில் (காட்டாக கோயில்களில் ஆடி மாதம் நடைபெறும் படையல்களில்) பெரும் பானைகளையோ, மாழைக் (metallic) கலசங்களையோ, தேடிக் கொண்டு இருக்காமல், பச்சைப் பனையோலையில் பின்னிய கூடைகளையே, விழாச்சோறு முகந்து கொள்ளவும், ஊன் போன்றவற்றைப் பொதிந்து கொள்ளவும், பயனுறுத்துவார்கள். பசுங்குடை என்ற சொல்லாட்சி பசுங்கூடையை உணர்த்தும் திரிவாகும். பூக்குடல் என்பது பூக்கூடையை உணர்த்துமல்லவா? அதைப் போல குடை என்ற சொல் இங்கு கூடையை உணர்த்தியது. ஊன்பொதி பசுங்குடை என்ற அழகான சொல்லாட்சியைத் தன்னுடைய வேறொரு பாவில் இந்தப் புலவர் பயன்படுத்தியிருக்க வேண்டும்; ஆனால் அந்தச் சொல்லாட்சி உடைய பாடல் நமக்குக் கிடைக்கவில்லை. தொகுப்பாளரின் உரையை வைத்தே புலவரின் பெயர்க்காரணத்தை நாம் அறிந்து கொள்ளுகிறோம்.] இதே அரசனை இதே புலவர் புறம் 10 (பாடாண் திணை, இயன்மொழி, பூவைநிலைத் துறை), புறம் 203 (பாடாண் திணை, பரிசில் துறை), புறம் 370 (வாகைத் திணை, மறக்கள வழித் துறை) ஆகிய பாடல்களிலும் பாடியிருக்கிறார். இது தவிர இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய அகம் 375 இலும் இளம்பெருஞ்சென்னி என்ற குறிப்பு இருக்கிறது.

இளஞ் சேட்சென்னியும், இளம் பெருஞ்சென்னியும் ஒரே ஆளாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பது தமிழிய மொழிகளின் சொல்வளத்தைக் கவனித்துப் பார்த்தால் புரிபடும். சேடு, சேட்டு என்பவை உயர்வு, பெரியநிலை, தொலைவு போன்றவற்றைப் பழந்தமிழிற் குறிக்கும். சேண்மை என்ற சொல்லும் கூட இன்றைக்குத் தொலைவைக் குறிப்பது தான். மலையாளத்தில் பெரியவனைக் குறிக்கச் சேட்டன் என்றும், பெரியவளை சேட்டத்தி என்றும் சொல்லுகிறார்கள் அல்லவா? சேள் என்பது தான் இதன் வேர். மூவேந்தர்களில் பெருஞ்சேரல், நெடுஞ்சேரலாதன், பெருவழுதி, நெடுஞ்செழியன், பெருங்கிள்ளி, பெருவளத்தான், மாவளத்தான், பெருஞ்சோழன் என்று சொல்லப்படும் பெயர்கள் பெருஞ்சென்னி - சேட்சென்னி என்ற பெயரையும் இயலுமை ஆக்குகின்றன. இளஞ்சேட்சென்னி என்பவன் இன்னொரு சேட்சென்னியின் இளவலாய் இருந்திருக்கலாம்.

இந்தச் சோழன் இளஞ்சேட்சென்னியை, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், பாமுளூர் எறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், புறநானூற்றுத் தொகுப்பாளர் குறிப்பிடுவார். பாழி என்ற பெயரில், தமிழ்கூறும் நல்லுலகில், சங்க காலத்தில், பல ஊர்கள் இருந்திருக்கின்றன. பொதுவாய்ப் பாழி என்பது இயற்கைக் குகையைக் குறிக்கும். (ஆசீவகத் துறவிகளின் வாழ்விடங்கள் பாழி என்றே நம் இலக்கியங்களில் குறிக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி என்பது பொதுவாய்ச் செயினர், போதியர் ஆகியோரின் இருப்பிடங்களைக் குறிக்கும்.) செருப்பாழி என்பதில் வரும் செரு என்பது திரு என்ற பொருள் கொண்ட ஒரு முன்னொட்டு. (சேரே திரட்சி என்பது தொல்காப்பிய உரியியல்; செருப்பாழி என்பது பெரிய, திரண்ட குகை என்ற பொருள் கொள்ளும்.) செரு என்ற முன்னொட்டு திரு என்ற பொருளைக் குறித்ததற்குச் சான்றாக, திருத்தணிகையையைச் செருத்தணி என்று சொல்லும் வழக்கம் அகரமுதலிகளில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. வடுகரைப் பெருஞ்சென்னி வெற்றி கொண்ட செய்தி புறம் 378 இலும், அகம் 375 இலும் வருவதால், வேங்கடத்தை ஒட்டி இந்தச் செருப்பாழி இருந்திருக்கலாம். (சரியான இடத்தைக் குறிக்க முடியவில்லை.)

சென்னி என்பது ஓர் இனக்குழுப் பெயர். (சென்னியர் என்ற சொல்லும் செம்பியர் என்ற சொல்லும் ஒரே வேரில் உருவானவை தாம்.) சோழர்கள் தொடக்க காலத்தில் பல்வேறு பகுதிகளில் (அழுந்தூர், ஆமூர், கழார், குடந்தை, பருவூர், பெருந்துறை, போர், வல்லம் ஆகிய ஊர்கள்) தனித் தனி இனக்குழுக்களாய் கி.மு. 500/400க்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வோர் இனக்குழுவும் இன்னொன்றை வென்றி கொண்டு, இணைந்து, பின்னர் பெரும் இனக்குழுக்களாகி, சென்னி, கிள்ளி என்று இரு பெரிய இனக்குழுக்கள் மட்டுமே கடைசியில் அமைந்து, முடிவில் பெருஞ்சோழராய் உருவாகி இருக்கிறார்கள்.

கி.மு. 500/400க்கு அண்மையில் அழுந்தூரில் தொடங்கிய சென்னி வகைச் சோழர் கொஞ்சம் கொஞ்சமாய் பெருஞ்சோழராகி, நெய்தலங்கானலுக்கு வந்து (நெய்தலங்கானல் என்பது காவிரிப்பூம் பட்டினத்திற்கு மிக அருகில் உள்ள ஊர்), முடிவில் காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டதும், கிள்ளி வகைச் சோழர்கள் இதே போலச் வேறு சிறிய ஊர்களில் தொடங்கி, முடிவில் உறையூரைத் தலைநகராக்கி ஆண்டதுமாய் இருக்கும் தொடக்க காலச் சோழர் வரலாற்றை சங்க இலக்கியங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அதே பொழுது சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக்குழுவின் தலைவர்களாய் வேந்தர்கள் கி.மு.7 ஆம் நூற்றாண்டு அளவில் இருந்ததைத் தொல்காப்பியம் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.ஆகச் சங்க இலக்கியம், தொல்காப்பியம் என்ற இரண்டு தரவுகளையும் பார்க்கும் போது, கி.மு.700ல் இருந்து கி.மு.500 வரை ஒரு 200 ஆண்டு காலத் வரலாறு இன்னமும் தெளிவு படாமல் இருக்கிறது.

சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக் குழுக்களின் தோற்றம், வரலாறு, மரபுகள், தொன்மங்கள் பற்றி இந்த இடுகையில் நான் விவரிக்கவில்லை. அதற்கு இன்னொரு இடுகைதான் செய்ய வேண்டும்.

சங்க கால வரலாறு என்பது சரியாக எழுதப் படாமல், கால முரண்பாடுகளோடேயே தான் இன்றும் இருக்கிறது. குறிப்பாக செங்குட்டுவன், கயவாகு என்ற தவறான சமகாலப் பொருத்தலால், கி.பி.171-193 என்று செக்கில் சிக்கிக் கொண்டு, முன்னேற முடியாமல், தமிழக வரலாறு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் கிடைக்கும் தமிழிக் கல்வெட்டுக்களையும், அகழாய்வுச் செய்திகளையும், சங்க கால அரசர்களின் நாணயங்களையும், சங்க இலக்கியங்களோடு பொருத்திப் பார்க்கும் போது, "செங்குட்டுவன் - முதலாம் கயவாகு ஆகியோர் சம காலத்தவர்" என்ற முன்னீட்டை முற்றிலும் ஒதுக்கினால் தான் தமிழர் வரலாறு சரியாகும் போல் தெரிகிறது. சிலப்பதிகாரத்தின் பதிகத்திற்குப் பின்னாலும், புகார்க் காண்டத்திற்கு முன்னாலும் வரும் உரைபெறு கட்டுரைக்கும், சிலம்பின் கடைசியில் வரும் வரந்தரு காதைக்கும் இடையே தெரியும் பெருத்த உள் முரண்பாடுகள் நம்மைப் பெரிதும் ஓர்ந்து பார்க்க வைக்கின்றன. பெரும்பாலும் வரந்தரு காதை என்பது காப்பியத்தோடு ஒன்றுபடாமல், பின்னோர் செய்து ஒட்டியதோ என்று எண்ண வைக்கிறது. அதே போல உரைபெறு கட்டுரையும் ஆசிரியர் இளங்கோவடிகளால் சேர்க்கப் படாமல், பின்னவர்களால் இணைக்கப் பட்டிருக்கக் கூடும். [சிலம்பு பற்றி இங்கு பேசினால் அது வேறு புலனத்திற்குக் கொண்டு போகும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.]

இந்த முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் எழுந்த அண்மைக்கால இரு வரலாற்று முயற்சிகள் ஆவணப்படுத்தப் பட்டு இருக்கின்றன. [அவற்றில் முதல் ஆவணம் பேரா. பே.க. வேலாயுதம் (பெரியார் ஈவெ.ரா. கல்லூரி, திருச்சி) ப.சீனிவாசன் (திருச்சி நாணயவியல் கழகம்) ஆகியோர் இணைந்து திருச்சி நாணயவியல் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் 23/2/1997 வெளியிடப்பட்ட "சங்க கால மன்னர் வரிசை" என்னும் சிறு கையேடு ஆகும். இரண்டாவது, "சங்க கால மன்னர்களின் காலநிலை - தொகுதி 1" மற்றும் "சங்க கால மன்னர்களின் காலநிலை - தொகுதி 2" என்ற இரு பொத்தகங்களாய், டாக்டர் பத்மஜா ரமேஷ், வி.பி. புருஷோத்தமன் ஆகியோரால் எழுதப்பட்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சிஐ.டி. வளாகம், தரமணி, சென்னை மூலம் 2000 த்தாம் ஆண்டில் வெளியிடப் பட்டது.]

மேலே சொன்ன ஆய்வாளர்களில், திருவளர். பத்மஜா ரமேஷ், திரு. புருஷோத்தமன் ஆகியோர் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியும், உருவப்பல் தேர் இளஞ்சேட்சென்னியும் ஒருவரே என்ற கருத்துக் கொள்கிறார்கள். உருவப்பல் தேர் இளஞ்சேட்சென்னியை முதற் கரிகாலனின் மகனாகவும், இரண்டாம் கரிகாலனின் தந்தையாகவும் பொருநராற்றுப் படை ஆதாரத்தின் மூலம் இவர்கள் அடையாளப் படுத்துவார்கள். அவர்கள் கூற்றின் படி, உருவப்பல் தேர் இளஞ்சேட் சென்னியின் காலத்தில், கிள்ளி வகைச் சோழர்களின் ஆட்சி ஓர் அண்ணுமுடிவிற்குக் (near end) கொண்டு வரப்படுகிறது. இளஞ்சேட்சென்னியின் பேரன், இரண்டாம் கரிகாலனின் மகன் ஆன நலங்கிள்ளி - இளஞ்சேட்சென்னி என்ற இரட்டைப் பெயரெடுத்து, கிள்ளிவகை அரசரின் கடைசி அரசனான நெடுங்கிள்ளியைத் தொலைத்தெறிவதோடு, கிள்ளிகளின் குல ஆட்சி உறையூரில் முற்றிலும் முடிந்து போகிறது. தலைநகரும் அதற்கு அப்புறம் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து உறையூருக்கே மாறுகிறது.

முன்னே சொன்ன இரண்டு ஆவணங்களையும் படித்தால் ஒன்றிற்கொன்று முரணாகச் சில காலநிலைகளும், உடன்பாட்டில் சில காலநிலைகளும் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த ஆவணங்களை ஆழ்ந்து படித்து அதில் இருக்கின்ற ஒன்றாமைகளை (inconsistencies) உணர்ந்ததால், மூல இலக்கியங்களையும், கல்வெட்டு விவரங்களையும், மீண்டும் படித்து, சங்க கால நிலையை நான் தற்போது ஆய்ந்து கொண்டு இருக்கிறேன். சங்க இலக்கியப் பாடல் எழுதியோரையும், பாடப்பட்டவரையும் பொருத்தி இந்தக் காலத்தியப் பிணைய அலசல் (network analysis) முறை மூலம் என் ஆய்வு நடத்தப் படுகிறது. ஆய்வு முடியச் சற்று காலம் ஆகலாம்.

இப்போதைக்கு நான் முந்தைய ஆய்வாளர்களின் முடிவுகளையே இங்கு கொடுக்கிறேன். ஊன்பொதி பசுங்குடையாரின் பாடற்காலத்தை, மேலே சொன்ன முதல் ஆவணத்தின் மூலம் கிட்டத் தட்ட கி.மு.325 - 250 என்றும், இரண்டாம் ஆவணத்தின் மூலம் கி.மு.250-225 என்றும் முடிவு செய்யலாம். ஆக இராமகாதை பற்றிய செய்திகள் கி.மு.250 அளவிலேயே தமிழில் பதிவு செய்யப் பட்டதாகச் சொல்ல வேண்டும்.

சங்க இலக்கியத்து இராம காதைச் செய்திகளுக்கு புறம் 378 தவிர, அகம் 70, கலி - 38 என இன்னும் இரு சான்றுகளும் உண்டு. சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பழமொழி நானூற்றிலும் ஒரு குறிப்பு உள்ளது. "இராமகாதை வரலாற்றுச் செய்தியா, அன்றி தொன்மச் செய்தியா?" என்பது அவ்வளவு முகன்மையானது அல்ல. இங்கே காதுற்ற செய்தி காதையாயிற்று. அவ்வளவு தான். அதைத் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தத் தடை இருக்க முடியுமோ? அதே பொழுது, அப்படிப் பயனுறுத்தியதாலே "அது வரலாறா, தொன்மமா?" என்ற கேள்விக்கு மறுமொழித்ததாய்க் கொள்ளவும் கூடாது.

இனிப் பாடலுக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, August 21, 2007

நுணலும் அடவும்

இரவெல்லாம் ஓயாது எகத்தாள மழைப்பொழிவு;
மழைகுறையத் தூறலிடை, மடுவெங்கும் நீரொதுங்க,
எங்கேயோ தோட்டத்தில், ஏறிவரும் நுணலோசை;
நள்ளிரவில் துயில்விலக்கி, நான்விழிக்கும் கவனிப்பு;

o0o

குக்கூகுக் குக்கூகுக் கூடிவரும் குழுத்தாளம்;
எப்படித்தான் மழைப்பொழிவு இங்கதிகம் ஆகிவிட்டால்,
குக்குவக்கும் தவளையெலாம் குரலெடுக்கச் செய்திடுமோ?
சுரந்துவர உள்ளோடும் சூழ்க்குமத்தை யாரறிவார்?

o0o

நுவலுகின்ற நுணப்பாலே, நுணலென்று சொன்னார்கள்;
திவலைகொளும் நீர்ப்பரப்பின் திரையோங்கித் தனைக்காக்கும்
தவளையதின் குரலெடுப்பு தவழரவிற் கெதிரொலிப்பா?
எத்தனைநாள் ஆடுபுலி ஆட்டமிங்கே நடந்திருக்கும்?

o0o

நடைபழகக் காலையிலே நகருகின்ற சாலையெலாம்,
சீருந்தும், இருவளையும், சிதைத்தொழித்த நுணற்தேய்ப்பு;
நீர்தவிர்த்து, நிலம்நாடி, நேர்ந்ததுதான் எதற்காக?
தன்னேர்ச்சி தமக்கென்றே தெரியாத தடுமாற்றோ?

o0o

என்னதொரு அடவு இது, என்முன்னே எழும்காட்சி?

அன்புடன்,
இராம.கி.

சீருந்து = car
இருவளை = two wheeler
அடவு = design
தன்னேர்ச்சி = accident

Saturday, August 18, 2007

வலைச் சொற்கள் (webterms)

வலைச் சொற்கள் (webterms) என்ற தலைப்பில் wall paper, banner, ring tone, mobile, gadget, widget, screen saver ஆகியவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களை விக்சனரி மடற்குழுவில் கேட்டிருந்தார்கள். அதற்கான பரிந்துரையை அங்கு பதிந்தது போக, இங்கும் பதிந்து வைக்கிறேன்.

* wall paper
சுவர்த் தாள் என்றே இதைச் சொல்லலாம். [அப்படிச் சொல்லக் கூச்சப் படவேண்டாம்.] சுவரில் பொதிக்க வேண்டிய தாள் சுவர்த் தாள் தானே? அந்தச் சுவர் மெய்யான சுவராகவோ, மெய்நிகர் சுவராகவோ இருக்கலாம்; அதனால் என்ன? நான் இப்படிச் சொல்லுவதற்கு ஒரு காரணம் உண்டு. திரைப்படமும் விளம்பரங்களும் வந்த நாளாக, ஒரு 60, 65 ஆண்டுகளில், தமிழ்கூறு உலகம் எங்கணும் wall poster - சுவரொட்டி பற்றிச் சொல்லி வருகிறார்கள் தானே?

இந்தச் சுவரொட்டி என்ற சொல்லின் கருத்து நன்கு நமக்கு ஊறிவிட்டது. அதை ஒட்டி, சுவர்த் தாள் என்பதும் நமக்கு எளிதில் புரிபடும். இன்னும் துல்லியம் கருதினால், wall poster என்பதை சுவர்ப் பொதிப்பு என்றும் கூடச் சொல்ல முற்படுவேன். ஏனென்றால், ஒட்டுதலைக் காட்டிலும் பொதிதல் = பொருத்துதல் என்ற வினை நன்றாக பொருந்தும். பின்னணி என்ற சொல் இங்கு பொருந்தி வராது. அது பின்னால் அணி செய்தல் (= வரிசைப்படுத்தி அடுக்குதல்) என்று வேறு ஓர் ஆழமான பொருளை உணர்த்தி, background என்று கொண்டுவந்து விடும்.

* banner
பதாகை என்ற சொல் பலநாட்களாய் இருப்பது தான்.

* ring tone
கறங்கும் (அல்லது கலிங்கும்) தொனி. [கறங்குதல் அல்லது கலிங்குதல் = ஒலித்தல்; எவ்வளவுநாள் தான் மணியோசை என்று ஒப்புமைச் சொல்லையே சொல்லிக் கொண்டு இருப்பது? நம்முடைய சரியான சொற்களை மறுபடியும் புழங்க விடுவோமே? எங்கெல்லாம் ring என்று ஒலிக்குறிப்பு வினைச் சொல் வருகிறதோ, அங்கெல்லாம் கறங்குதலைப் (அல்லது கலிங்குதலைப்) புழங்கலாம். கொஞ்சம் கூடத் தயக்கம் வேண்டாம்.]

* mobile
நகர் (இடை) பேசி. mobile person = நகராளி; cell phone = செல்(லிடை) பேசி

* gadget
1886, gadjet (but said to date back to 1850s), sailors' slang word for any small mechanical thing or part of a ship for which they lacked, or forgot, a name; perhaps from Fr. ga^chette "catchpiece of a mechanism," dim. of ga^che "staple of a lock."

தமிழில் staple of the lock என்பதைக் கொக்கி என்றுதான் சொல்லுகிறோம்; பூட்டைத் திறந்து காட்டி, "சாவியை இப்படிப் போட்டுத் திறந்தா, இந்தக் கொக்கி இந்தக் காடைக்குள்ளே விழணும்பா" என்று சொல்லுகிறோம் இல்லையா? கொக்கும், கொடுக்கும் ஒன்றுதான். "வளைந்த பொருத்து" என்று பொருள்.

கொடுக்காப் புளிப் பழம் சாப்பிட்டிருக்கிறீர்களோ? வளைந்து சுருண்டு கிடக்கும் பழம் கொடுக்காப் புளி. சற்றே மெலிந்த புளிப்புடன், சுவையாக இருக்கும் பழம். இன்றைக்கு நகர்ப்புறத் தமிழர்கள் சற்றும் அறியாத பழம். நாட்டுப்புறங்களிலும் அழிந்து கொண்டிருக்கும் பழம். [தமிழ்நாட்டின் வளத்தில் இன்னும் ஒன்றாய் அழிந்து கொண்டிருக்கிறது.] அதில் வரும் கொடுக்கு என்ற முன்னொட்டு வளைந்த நீட்டத்தைக் குறிக்கும்.

வால் என்பதற்குக் கூட கொடுக்கு என்ற பொருள் உண்டு. கொ(டு)க்கின் சிறியது கொ(டு)க்கட்டை. மேலை மொழிகளில் get என்று வருவது போல கட்டை என்ற சொல் நம் மொழியில் சிறியதைக் குறிக்கும் பின்னொட்டாய் அமைய முடியும். கொக்கட்டை என்பதைச் சொல்லுவதற்குப் பெரிதாய்த் தோன்றினால், அல்லது தயங்கினால், கொக்கை என்றே கூட gadget -யைச் சொல்லலாம். கொக்கை - catchpiece of a mechanism என்று சொல்ல முடியும்.

* widget
"gadget, small manufactured item," c.1920, Amer.Eng., probably an alteration of gadget, perhaps based on which it.

எங்கோ ஓரிடத்தில் இடுங்கி, ஒட்டிக் கொண்டு கொடுக்காய் இருக்கும் ஒரு பொருத்தை, இடுக்கை என்றே சொல்லலாம். விக்கிப்பீடியாவிற்குள் போனால், widget என்பதற்கு கீழே உள்ள விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். இடுக்கை என்று நான் பரிந்துரைக்கும் சொல் அவைகளுக்கும் பொருந்தியே வருகிறது.
---------------------------------
Widget may refer to:
Widget (economics), a placeholder name for an object or, more specifically, a mechanical or other manufactured device
In computing:
Widget engine, such as Dashboard widgets for Apple's Mac OS X v10.4, Windows Vista Sidebar, KlipFolio or Yahoo! Widgets (aka Konfabulator)
GUI widget, a component of a graphical user interface that the user interacts with
Web widget, a third party item that can be embedded in a web page
Mobile widget, a third party item that can be embedded in a mobile phone
Widget (beer), the nitrogen widget in cans and bottles of beer
Widget (comics), a character in Marvel Comics
Widget (name), in-house name for the Delta Air Lines corporate logo
Widget (TV series), a 1990's animated television series
Widget (tool), a small scraping tool consisting of a blade and a handle, used to remove paint from glass
Widget (Burnout move), A swift horizontal karate chop to the throat, best delivered to the throat or trachea.

The term was first applied to user interface elements during Project Athena in the 1980s. The word was chosen because "all other common terms were overloaded with inappropriate connotations" and ஖ since the project's Intrinsics toolkit associated each widget with a window of the underlying X Window System ஖ because of the common prefix with the word window. [1]
-------------------------------------

* screen saver
A screensaver is a computer program originally designed to conserve the image quality of computer displays by blanking the screen, or filling it with moving images or patterns when the computer was not in use. Today, screensavers are primarily used for entertainment or security purposes.

அந்தக் காலத்தில் இருந்த cathode ray display களில் ஒரே படத்தைத் தொடர்ச்சியாகக் காட்டிக் கொண்டிருந்தால் அப்படியே அந்தப் படத்தை அழிக்க முடியாமல் கணித்திரை பொரிந்து பொட்டுவிழுந்தாற் போல தொடர்ச்சியாய் நிழல் தோற்றம் காட்டக் கூடும். to "save" the screen from burn-in என்பதற்காக இந்த screen saver நிரலிகள் எழுந்தன. இவற்றைக் கணித்திரைக் காப்பிகள் அல்லது கணித்திரைச் சேமிகள் என்று சொல்லலாம். நாளாவட்டத்தில் தமிழ்ப் புழக்கம் கூடினால், கணி என்பதை விட்டுவிடலாம். அப்பொழுது திரைச் சேமிகள் என்பது பழகிவிடும்.

அன்புடன்,
இராம.கி.

Monday, August 13, 2007

வேங்கடத்து நெடியோன் - 3

பின்னால் வந்த எல்லா ஆழ்வார் பாடல்களிலும், "வேங்கடத்தான், வேங்கடவன், வேங்கட வாணன், வேங்கடத்துள்ளான், வேங்கடத்து உறைவான், வேங்கடத்து நின்றான், வேங்கடமுடையான், வேங்கட நாடன், வேங்கடக் கோன், வேங்கட மேயோன், வேங்கடப் பொருப்பன், வேங்கட வெற்பன், வேங்கடாத்தரி, வேங்கட வேதியன், வேங்கடத்து ஆயன், வேங்கடத்து எந்தை, வேங்கடத்து அண்ணல், நீள் வேங்கடத்து எந்தை, திருமலையான், வட மாமலை உச்சி, நெடுவரை உச்சி மேலோன், நெடியோன்" என்ற பெயர்களே ஆளப் படுகின்றன. அந்த மலையும் கூட ஆழ்வார் பாடல்களில் வேங்கடம், வடமலை, திருமலை, அண்ணல் மலை என்றே அழைக்கப் படுகிறது.

ஸ்ரீநிவாசன் என்ற பெயர் ஆழ்வார் பாடல்களில் வேங்கடத்தை ஒட்டி எங்கும் குறிக்கப் படவே இல்லை. பெரும்பாலும், அந்தப் பெயர் மிகவும் பிற்பட்ட காலத்திலேயே, விண்ணவர் வழக்கில், எழுந்திருக்க வேண்டும். இதை உறுதி செய்ய, பேரரசுச் சோழர்களின் பிற்காலக் கல்வெட்டுக்கள், பிற்காலப் பாண்டியரின் கல்வெட்டுக்கள், விசயநகரப் பேரரசின் கல்வெட்டுக்கள் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். அது ஒரு பெரிய வேலை என்பதால், இன்னும் நான் செய்யாதிருக்கிறேன். (புறனடையாக, திருமலை - திருப்பதி தேவத்தானத்தார் வெளியிட்ட "முந்தையக் கல்வெட்டுக்கள்" என்ற தொகுதியை மட்டும் பார்த்துச் சில செய்திகளைக் கீழே சொல்லியிருக்கிறேன்.)

ஸ்ரீநிவாசன் என்ற பெயர் எப்படி எழுந்திருக்க முடியும்? வடமொழிப் பொருளாய் srinivaasa என்பதற்கு மோனியர் வில்லியம்சில் abode of Sri என்று "திருமகள் இவனுக்குள்ளே குடியிருப்பதைச்" சொல்லுகிறது. அதாவது "திரு வாழும் இடத்தான்" என்றே ஸ்ரீநிவாசனுக்குப் பொருள் கொள்ளுகிறது. [தஞ்சாவூர்ப் பக்கம் "திருவாழத்தான்" என்று சொல்வார்களே, நினைவுக்கு வருகிறதா?] ஆனால் சொற்பிறப்பு அதில் காட்டப் படவில்லை. இந்தச் சொல் பயிலும் இடங்களாய், kaavya, chandomanjari, bhaagavata puraana ஆகிய மூன்றும் அந்த அகரமுதலியில் காட்டப் படுகின்றன.

வாய்மொழியாய் தொன்மக் கதைகளாய் இருந்த வடமொழிக் காவியங்கள் எழுத்து வடிவில் எழுந்தது குத்தர்கள் (=குப்தர்கள்) காலத்தில், சங்க காலத்திற்குப் பின்னால் (கி.பி 300-400) தான்; சந்தமஞ்சரியின் காலம் எனக்குத் தெரியவில்லை; தேடிப் பார்க்க வேண்டும். பாகவத புராணம் சேர்ந்த 18 புராணங்கள் பிற்காலத்தில் கி.பி. 600-1400 க்குள் எழுதப் பட்டதாகத் தான் பல ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். ஸ்ரீ - நி - வாசன் என்பதைப் பிரித்து திருமகள் மார்பில் உறைபவன் என்று தலை கீழாகச் சொல்வதும், பொருந்தாதைப் பொருந்தச் சொல்வதாகத் தெரியும் சமய விளக்கம் ஆகும். [பல சமய விளக்கங்கள், நம் வரலாற்றைப் புறம் தள்ளி, தமிழ் வழக்கைப் புறம் தள்ளி, ஏன் வடமொழி இலக்கணத்தையும் கூடப் புறம் தள்ளி, சொல்லப் படுகின்றன. அந்த விளக்கங்களைக் கேட்பவர்களும் ஏதேனும் அவக்காரம் வந்துவிடுமோ என்று எதிர்க் கேள்வி கேட்பதைக் குறைத்துக் கொண்டு விடுகிறார்கள். எல்லாமே chaltha hai என்று ஆகிவிடுகிறது.]

நாம் மேலும் நினைவு கொள்ள வேண்டியது "மேல் திருப்பதியில் தாயாருக்கு இடம் கிடையாது, அங்கே பெருமாள் மட்டும் தான்" என்ற செய்தியாகும். மேலே மூலவரின் பெயர் திருவேங்கடமுடையான் என்றே இருக்கிறது. (அது ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது.); வேங்கடாசலபதி என்பது வேங்கட மலையானைப் பாதி வடமொழியாக்கி இருபிறப்பிச் சொல்லாய்க் கூப்பிடுவது; பாலாஜி என்பது மிக, மிக அண்மைக் காலப் பெயர். ஸ்ரீநிவாசன் என்ற பெயர் பற்றித்தான் இங்கு பேசிக் கொண்டு இருக்கிறோம். மேல் திருப்பதியின் ஊருலவருக்கு (=உற்சவருக்கு) மணவாளப் பெருமாள் என்றுதான் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்; இந்தக் காலத்தில் அதையும் வடமொழியாக்கி கல்யாண வெங்கடேசர் என்று சொல்லுகிறார்கள்; தமிழ்ப்பெயர் போயே போயிந்தி. ஆனாலும் வேங்கடமுடையான் என்ற கருத்து வடமொழிப் பெயர்ப்பின் உள்ளே நின்று தொனிக்கிறது.

தாயார் அலர்மேல்மங்கை (பத்மாவதி என்பது அப்படியே வடமொழிப் பெயர்ப்பு) திருச்சானூரில் தனித்து இருப்பதாக மரபு. (தமிழ்ப் பேச்சுவழக்கில் இது அலமேலு என்று சுருங்கும்.)

கீழ்த் திருப்பதியில் உறையும் பெருமாளுக்குக் கல்வெட்டுகளின் படிக் கோவிந்தப் பெருமாள் என்றே பெயர். (இன்றைக்கு அதையும் கோவிந்தராசனாக்கித் தமிழல்லாத தோற்றம் காட்டுகிறார்கள். இந்தக் கோவிந்தன் பேரில் தான் திருமலையில் பற்றாளர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கூறுகிறார்கள்.) கீழ்த் திருப்பதியில் உள்ள தாயாருக்குப் புண்டரீக வல்லி என்று பெயர். இதுவும் அலர்மேல் மங்கையின் இன்னொரு வடமொழிப் பெயர்ப்புத் தான்.

காலவோட்டத்தில் வெவ்வேறு காரணங்களால், மூலவருக்கே பேர் மாற்றம் செய்த கதைகள் தமிழ்நாட்டுக் கோயில் வரலாறுகளில் நெடுகவே உண்டு. (முட்டாள் தனமாக, தமிழ்ச் சொல்லின் மூலப் பொருள் புரியாமல், வேறொரு வழிப் பொருளைக் கொண்டு, அதை வடமொழிக்கு மாற்றி அதற்கும் ஒரு தொன்மம் படைக்கும் கூத்துக்கள் நிறையவே உண்டு. திருமரைக்காடு, திருமறைக்காடாகி, வேதாரண்யம் என்று மொழிமாற்றம் பெற்ற கதை பலருக்கும் தெரியும். இது போன்ற கதைகள், காதில் பூவைத்திருப்பவர்கள் இருக்கும் வரை, தொடரும்.) காட்டாக, சென்னை முகப்பேரியில் (முகப்பு ஏரி = முகப்பேரி) இருக்கும் சந்தான சீனிவாசப் பெருமாளுக்கு பழைய பெயர் ஒன்று உண்டு. அந்தக் கோயிலில் இருக்கும் 18 ஆம் நூற்றாண்டு, 19-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களைப் படித்தால் மூலவரின் பழைய பெயர் ஆதிகேசவப் பெருமாள் என்று இருந்திருப்பது புலப்படும். ஆனால் வணிக மயமாகிப் போன இன்றைய நாளில் அதற்குப் பெயர் சந்தான சீனிவாசப் பெருமாள் என்று ஆகிவிட்டது. (கோயிலுக்குள் வணிகம் வளர, வளர, கல்வெட்டுக்கள் வெகுவிரைவில் அழிந்து கொண்டிருக்கின்றன. வணிக நோக்கில் நம் கோயில்கள் அழிவது ஏராளம், ஏராளம்.)

எப்படி என்றால், நாம் 40 ஆண்டு கால வரலாற்றிற்கு முன்னால் போக வேண்டும். 1968ல் சென்னையில் ஒரு பெரிய பொருட்காட்சி நடத்தினார்கள். அப்பொழுது அண்ணா நகர் என்னும் குடியிருப்பு உருவாக்கப் பட்டது. இந்தப் பெருமாள் கோயில் ஒரு தனியார் நிலத்தில், அந்தக் குடும்பத்தின் பரம்பரைப் பொறுப்பில், இன்றைய அண்ணா நகர் ரவுண்டானாவிற்கு அருகில் 1968 -ல் இருந்தது. பின் அண்ணா நகர் அமைந்த போது, நிலம் கொள்முதலில் அப்படியே கல், கல்லாகப் பெயர்த்து, இன்றைய முகப்பேரிக்குப் போயிருக்கிறது. (இத்தனைக்கும் கோயில் 8, 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.) முகப்பேரிக்குப் போன பிற்பாடு தான், மூலவர் பெயர் மாறியிருக்கிறது. முகப்பேரி என்ற புது இடத்தின் பொருளையே மாற்றி யாரோ ஒரு விவரமானவர், "எதில் மக்கள் சிக்குவார்கள்?" என்று பார்த்து, "மகப்பேறு கொடுப்பவர்" என்று ஒரு கதையை இட்டுக் கட்டி, முகப்பேரிக்கு மாறாய் மகப்பேறு என்று இல்லாத பொருள் சொல்லி, மேலும் "சீனிவாசன் என்றால் ஆட்கள் கூடுவார்கள்" என்ற உந்துதலில் "சந்தான சீனிவாசப் பெருமாள்" என்று கூட்டுப் பெயரை உருவாக்கி, அதுவரை இல்லாத ஒரு தொன்மத்தையும் உருவாக்கி, 1993 - 94 ல் அண்ணா நகரெங்கும் ஒரு பெரிய பரப்புரை செய்து, கூட்டம் கூட்டி, இன்று கோயில் ஓகோ என்று இருக்கிறது. (எனக்குப் பிடித்த பெருமாள் கோயில்களில், மூலவரின் திருமேனிகளில், இதுவும் ஒன்று என்பது வேறு புலனம். நான் சொல்ல வருவது இப்படி இட்டுக் கட்டும் தொன்மங்கள் பற்றியே ஆகும்.)

நெடியோன் கோயில் எப்படி ஸ்ரீநிவாசன் கோயில் ஆனது? மீண்டும் ஸ்ரீ - நி - வாசன் என்ற வடமொழிப் பிரிப்பிற்கு வருவோம். வாசன் என்பவன் வசிக்கிறவன். "திரு மார்பில் இருக்க, வசிக்கிறவன்" என்றால் அது மிகவும் பொதுமையாக இருக்கிறது; திருமால் கோயில்கள் எல்லாவற்றிலும் தான், மேலே சிலம்பின் காடுகாண் காதை 11:41-51- இற் சொன்னது போல், விண்ணவன் என்பவன் "நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு" இருக்கிறான். "நலங்கிளர்" என்று சொல்லும் போது திருமகள் ஆரத்தில் இருக்கிறாள் என்று பொருள். திருவும் நலமும் ஒன்றுதான்.

தவிர, பதிதல் என்பற்குத் தமிழில் உள்ள பொருள் "ஓரிடத்தில் இருப்பதும், வசிப்பதும் தான்". பதிதல்>வதிதல் என்று திரியும். வதிதல் என்பது வடமொழிப் பலுக்கில் வசித்தல் என்று ஆகும். திருப்பதியான் என்பதே தமிழ் முறைப்படி ஸ்ரீநிவாசன் என்ற பொருள்தான் கொள்ளும். ஆனால் திருப்பதி என்பது திருமலை அல்லவே? அது மலையடிவார ஊர் அல்லவா? மேலே இருக்கும் திருமேனிக்கு திருப்பதியான் என்ற பெயரை நாம் எப்படிச் சொல்லுவது? திருமலையான் என்றல்லவா சொல்ல வேண்டும்? (திருமலையான் என்ற பேரும் பல விண்ணவர்களுக்கு இருக்கிறதல்லவா?) திரு. ஜி.ராகவன் சொன்னது போல் திருக்குடி என்றெல்லாம் புதிதாகச் சொல்ல வேண்டுவதில்லை. திருப்பதியான் என்ற சொல்லே மேலோட்டப் பொருண்மையைப் பார்த்த வகையில் (ஆழ்ந்த பொருண்மையில் அல்ல) ஸ்ரீநிவாசனுக்கு இணையாய் அமைய முடியும்.

ஆனாலும் ஏதோ ஒன்று இடிக்கிறது.

வேங்கடத்தில் இருப்பவனுக்கு என்று ஓர் ஓரிமை (uniqueness) இருக்க வேண்டுமே? அது என்ன? ஆறு அரத்து (=அறுத்து) வந்த அரங்கத்தில் இருப்பவன் அரங்கன் என்று ஆனதைப் போல, கீழே தலத்தில் சாய்ந்து கிடப்பவன் தல சயனப் பெருமாள் (கடல் மல்லையில் இருக்கும் பெருமாள்) என்று ஆனது போல, ஒரு விதப்பான பெயர் அல்லவா வேங்கடத்தில் இருப்பவனுக்கு அமைய வேண்டும்? ஸ்ரீநிவாசனில் அப்படி ஒரு விதப்பு இல்லையே? "திருவானவள் தன்னுள்ளே வசிக்க இருப்பவன்" என்பது ஒரு தட்டையான பெயராய், இருக்கும் இடத்திற்குப் பொருந்தாத பெயராய், அமைகிறதே? இத்தனைக்கும் அருகில் திருமகள் இல்லாமல் அங்கே அவன் தனித்து நிற்கிறானே? அப்புறம் எப்படி ஸ்ரீநிவாசன் என்று வரும்? ஆனாலும் அந்தப் பெயர் இன்று வழக்கில் இருக்கிறது.

இனி நி என்ற வடமொழி இடைச்சொல்லிற்கும் வருவோம். அதற்கு என்ன பொருள்? மோனியர் வில்லியம்சில் down, back, in, into, within என்ற பொருண்மைகளைக் கொடுத்து இந்தச் சொல் வினைச்சொல் அல்லது பெயர்ச்சொல்லின் முன்னொட்டாய் சேர்க்கப் படும் என்றும், சில போது எதிர்மறைப் பொருள் கொண்டு தரவும் இது சேர்க்கப் படும் என்றும் குறித்திருக்கிறது. அப்படியானால், இடைச்சொல்லின் பொருள் பார்க்கும் போது, ஓடு, உடன் என்ற பொருட்பாடுகள் இல்லாத நிலையில், திருவோடு உறைபவன், திருமகள் கேள்வன் என்ற இணைச்சொற்களாய்க் காட்டப்படுபவை எல்லாம் பொருத்தம் இல்லாதவையாகவே தோன்றுகின்றன.

ஸ்ரீநிவாசன் என்ற பெயரைக் கல்வெட்டுக்களில் பதிவு செய்ததை, திருப்பதியை ஒட்டி உள்ள கல்வெட்டுக்களில் பார்த்தால் அது மிகுந்த ஆண்டுகள் கழித்து, விசயநகர அரச காலத்தில் தான் பதிவு செய்யப் படுகிறது. காட்டாக, திருமலை-திருப்பதி தேவத்தானம் 1998ல் வெளியிட்ட "முந்தைய கல்வெட்டுக்கள்" என்ற பொத்தகத்தில் 199 ஆம் கல்வெட்டாய், திருமலைக் கோயிலின் முதற் சுற்றாலையில் (=பிரகாரத்தில்) ஆவணப் பதிவு அறையின் (record room) வெளியோடியில் (verandah) வடக்குச் சுவரின் வெளிப்பக்கத்தில் இருக்கும் கல்வெட்டில் 4 வது வரியில், "திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்களில் முதலியார் திருக்கலிகன்றிதாஸர் அகரமான ஸ்ரீநிவாச புரத்தில்" என்ற குறிப்பு வருகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1444 அளவில் இருக்கலாம்.

இதே கல்வெட்டில் திருமலைப் பெருமாளின் பெயர் வேங்கடமுடையான் என்றே குறிக்கப் படுகிறது. முதலியார் என்ற வழக்கு அந்தக் காலத்தில் சாதியைக் குறிப்பிடும் சொல் அல்ல; அதற்கு முன்னவர், முதலாகக் கருதப்படும் பெரியவர், என்றே பொருள் உண்டு. கலிகன்றி என்பது திருமங்கையாழ்வாரின் இயற்பெயர். கலிகன்றிதாஸர் என்பது கலிகன்றிக்குத் தாஸர் என்று பொருளில் ஒரு விண்ணவப் பார்ப்பனரைக் குறிக்கிறது. அகரம் என்ற தமிழ்ச்சொல் இன்று அக்ரஹாரம் என்று திரிக்கப் பட்டு வடமொழி போல் தோற்றம் காட்டும் அருமையான தமிழ்ச்சொல். அகரம் என்பது இங்கே பார்ப்பனர் குடியிருப்பு.

ஆக 1444 ல் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீநிவாசபுரம் என்பது கீழ்த்திருப்பதியின் அருகே உள்ள குடியிருப்பு. திருப்பதியான் என்ற பொருளை ஸ்ரீநிவாசன் என்ற சொல் தரும் என்று முன்னே குறித்திருந்ததை நினைவு கொள்ளுங்கள். அடுத்து அதே பொத்தகத்தில் குறிப்பிடப்படும் கல்வெட்டு எண் 201 இலும் இந்த ஸ்ரீனிவாசபுரம் குறிப்பிடப்படுகிறது. தவிர அந்தக் குடியிருப்பினுடைய இயற்பெயரும் சித்தக் குட்டை என்றும் 201- ஆம் கல்வெட்டில் சொல்லப் படுகிறது.

பொதுவாகப் பல்லவர் காலத்தில் இருந்து, சோழ, பாண்டிய, விசய நகர அரசு வரை, அரசர்கள் பல்வேறு காரணங்களுக்காக, ஓர் இயல் ஊரை அங்கு ஏற்கனவே இருப்போரிடமிருந்து வரி காரணங்களால் வலிந்தோ, பணம் கொடுத்து வாங்கி மெலிந்தோ, பெற்று, பார்ப்பனருக்குத் தானமாய்க் கொடுப்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. அப்பொழுது விண்ணவன் கோயிலைச் சேர்ந்த பார்ப்பனருக்கு உரிமையாய் அமைந்தால் அந்த ஊர் திருவிடையாட்டம் என்று சொல்லப் படும். [சிவன் கோயிலுக்குக் கொடுத்தால் தேவதானம் என்றும், அல்லிருமைப் (அத்வைதப்) பார்ப்பனருக்குக் கொடுத்தால் அது பெருமதேயம் (ப்ரம்ம தேயம்) என்றும், சைனருக்குக் கொடுக்கும் போது பள்ளிச்சந்தம் என்றும் சொல்லப் படும்.] இந்த 201 ஆம் கல்வெட்டின் படி சித்தக் குட்டை என்னும் ஊரே ஸ்ரீநிவாசபுரம் என்ற பெயரில் திருவிடையாட்டமாய் மாறியிருக்கிறது. (சித்தக் குட்டை என்ற பெயர் சைன, ஆசீவகம் பற்றி ஓர்ந்து பார்க்கத் தூண்டுகிறது. ஆய்வு செய்ய வேண்டும்.)

202- ஆம் கல்வெட்டிலும், 217 - ஆம் கல்வெட்டிலும் (இதன்படி, ஸ்ரீநிவாசபுரம் என்னும் குடியிருப்பு திருப்பதியில் தென்சீர்மையில் சிங்கர் கோயில் தெருவுக்குத் தெற்கில் இருந்திருக்கலாம்.) 224 - ஆம் கல்வெட்டிலும் (ஸ்ரீநிவாச புரத்தில் வீர நரசிம்ஹப் பெருமாள் கோயில் இருந்தது.) மேற்கொண்டு சில செய்திகளை அறிகிறோம்.

ஆக ஸ்ரீநிவாசபுரம் என்ற சொல் கீழ்த் திருப்பதியை ஒட்டியே இருந்திருக்கிறது. "எப்பொழுது திருமலையின் மூலவருக்கு இந்தப் பெயர் போனது?" என்ற கேள்விக்கு நான் பார்த்தவரை விடை தெரியவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். விசயநகரக் கல்வெட்டுக்களிலும் கூட திருமலையின் மூலவர் வேங்கடமுடையான் என்றே அழைக்கப் படுகிறார்.

இனி, நான் சொல்லப் போவது ஒரு முன்னீடு (proposal) மட்டுமே; இது முடிந்த முடிவு அல்ல. எனவே யாரும் பாய்ந்து வந்துவிடாதீர்கள். எந்த ஓர் ஆய்விற்கும் முதலில் முன்னீடு வேண்டும். பின்னால் அதை நிறுவிக்கலாம், அல்லது, தூக்கிப் போடலாம். எது சரி என்று எனக்கு இப்பொழுது தெரியாது.

பொதுவாய், நெடியோன், உயர்ந்தோன் என்பதைத் தமிழில் நிவந்தோன் என்றும் சொல்லலாம். நிவத்தல் என்பது உயர்தல், வளர்தல், மேலாதல். இவை அத்தனையும் திருவிக்கிரம அவதாரத்தில் நடந்தவையே. நிவத்தலின் இன்னுமொரு வடமொழித் திரிவாய் நிவேதனம் என்ற சொல் கிளர்ந்து தெய்வத் திருமேனிகளின் முன்னால் தமிழ் ஆகம முறைப்படி படையலை உயர்த்திக் காட்டுவது குறிப்பிடப்படும். (படையலை உயர்த்திக் காட்டுவது வேதமுறையே கிடையாது. அது ஆகம முறை. வேத முறையில் கீழ்நோக்கிச் சாய்த்து ஆகுதி ஆக்க வேண்டும்.)

(வேதமுறை வேறு, ஆகம முறை வேறு என்று சொன்னால் பலரும் புருவத்தை உயர்த்தலாம், இது என்ன குழப்பம் என்றும் நினைக்கலாம். வேதநெறிக்காரர்கள், அல்லிருமைக்காரர்கள், கோயிலுக்குள் புகுந்தது எல்லாம் பின்னால் வந்த மரபு. வரலாற்றின் ஒரு பொழுதில் இந்த வேதம், ஆகமம் ஆகிய இருவேறு முறைகளும் தனித்தே வைக்கப் பட்டு இருந்தன. பின்னால் ஏதோ ஓர் உந்துதலில், சேர்ந்து போயின. இந்தக் கால சிவநெறி, விண்ணவ நெறி ஆகியவற்றில் இருக்கும் கோயிலொழுகுகள் ஆகமநெறி, வேதநெறிப் பழக்கங்களின் கூட்டுக் கலவையே ஆகும்.)

நிவேதத்தை மீண்டும் தமிழில் கடன் வாங்கி நிவேத்தியம்>நைவேத்தியம் என்று சொல்ல முற்படுவார்கள். தமிழ்ப் பலுக்கோடு இருக்க வேண்டுமானால் நிவந்தம் என்றே நைவேத்தியத்தைச் சொல்லலாம். நமக்கும் நம் ஆகம முறைகள் ஒழுங்காய்ப் புரிபடும். [கோயிலுக்கென முன்வந்து உரிமையாய் விடும் நிலமும் கூடத் தமிழ்க் கல்வெட்டுகளில் நிவந்தம் என்றே குறிக்கப் படும். முன்வருவதும் தமிழ்மரபில், ஓர் உயர்ச்சி தான்.]

இனி, விந்த மலை என்பது, விஞ்ச மலை என்று போலி ஒலிப்புப் பெறுவதைப் போல, அய்ந்து என்பது அஞ்சு என்று ஆவதைப் போல, நிவந்தன்>நிவஞ்சன் என்று ஆகிப் பின்னால் நிவாஞ்சன்>நிவாசன் என்று மூக்கொலி இல்லாமல் ஆவதும் மொழிப் பலுக்கலில் இயல்பாக அமையக் கூடியது தான். (வந்தாங்க என்பது எங்கள் பக்கம் வந்தாக என்று ஆவது எப்படி? வைதாங்க/வைஞ்சாங்க/வைதாக என்பதெல்லாம் வசை என்னும் பெயர்ச்சொல்லை எப்படி உருவாக்குகிறது?) அப்படி நிவாசன் என்று ஆகும் போது நெடியோன் என்ற பொருளும் நீண்டு நிலைக்கிறது. ஆனால் இதற்குச் சான்று? இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைப்பின் சொல்லுகிறேன். அதே பொழுது, "திருமகளைத் தன் மார்பில் இருக்க வைத்திருப்பவன்" என்ற பொருள் ஏரண முறையில் பார்த்தால் சரியென்று தோன்றவில்லை.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். திருமலையான், "நெடியோன்" என்றுதான் தொன்றுதொட்டு 2500 ஆண்டுகளாய் தமிழில் அழைக்கப் பெறுகிறான் என்று அழுத்தமாகச் சொல்லலாம்.

இதுவரை மேலே சொன்னவற்றில் நான் தொடாத ஒரு புலனமும் உண்டு. திருமலையான் நெடியோன் மட்டும் தானா அல்லது இரண்டுருவின் கலப்பா என்ற அய்யத்தைப் பற்றியது. (இங்கே கருத்தியல் கலப்பைச் சொல்லவில்லை; அந்தத் திருமேனியில் நம் கண்களுக்குத் தெரியக் கூடிய சிற்பக் கூறுகளையே பார்க்கச் சொல்லுகிறேன். அந்தப் பெரிய நாமம் .......) கீழே உள்ள பாடலை ஆழ்ந்து படியுங்கள். இது இயல் விவரிப்பா, அன்றி மனத்துள் எழுந்த கருத்தியல் உருவகமா?

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து

- பேயாழ்வர், மூன்றாம் திருவந்தாதி 63.

அன்புடன்,
இராம.கி.

Thursday, August 09, 2007

வேங்கடத்து நெடியோன் - 2

வேங்கட மலையையும், அதில் திருமால் குடிகொண்டுள்ளதையும், அவன் பெயர் நெடியோன் என்பதையும் நமக்குக் கிடைத்தவற்றில் முதலில் பதிவு செய்த ஆவணம் சிலப்பதிகாரம் தான். நாம் கவனிக்க வேண்டியது நெடியோன் என்ற பெயர். [அந்தப் பெயரின் விளக்கம், "வாமனத்தின் முடிவில் எடுக்கும் திருவிக்கிரமத் அவதாரத்தால்" என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கதை தமிழ் இலக்கியங்களில் நெடுகவே பயின்று வந்திருக்கிறது. அப்படி ஒரு தாக்கம் ஏற்படவேண்டுமானால், அந்தத் தொன்மங்கள் இங்கு ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு உண்டு.] "நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல்" என்று குறிப்பிட்டுக் காடுகாண் காதை 11:148 ல் சொல்லப்படும். இந்த அவதாரக் கதையில் வரும் மாவ(ல்)லி மன்னன் ஒரு சேர அரசனாய் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

(இன்றைக்கும் மாவல்லி ஒவ்வொரு ஓணத்தன்றும் கேரளத்தில் நினைவு கூரப்படுகிறான்.) அவன் அரக்கன் என்பது நிறம் கருதியே அன்றி வேறாய் இருக்க வாய்ப்பு இல்லை. அரக்கு நிறம் என்பதும் தமிழர் நிறம் தான். மாந்தளிர் நிறம் அரக்குத் தானே? சேரமான் மாவண் கோ, விளங்கில் மாவண் கடலன், மாவண் புல்லி, மாவண் கிள்ளி எனப் பல்வேறு அரசர்களும், வேந்தர்களும் சங்க காலத்தில் சொல்லப் படுகிறார்கள். இந்த மா என்னும் முன்னொட்டு அவன் தமிழ் அரசன் என்று உணர்த்திவிடுகிறது. மாவல்லியின் தாத்தன் பெருகலாதன் என்பதும் கூடப் பெருஞ்சேரலாதன்>பெருங்கேரலாதன்>பெருங்கலாதன்>பெருகலாதன் என்ற திரிவில் அமையக் கூடிய பெயரே. அப்படி அய்யுறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஆதன் என்னும் பெயரீறு சேர அரசர் பலருக்கும் இருந்திருக்கிறது. இரண்டு, மாவலியின் வழியில் வந்தவன், சோழன் மாவண் கிள்ளிக்குப் பெண் கொடுத்ததாக மணிமேகலைக் காவியத்தில் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதையில் (16:53-55)

நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி என்னும் திருத்தேவி ------

என்று பதிவு செய்யப் படும். இதே மாவண் கிள்ளியைச் செங்குட்டுவனின் மைத்துனன் என்று சிலம்பில் இளங்கோவடிகளும் பதிவு செய்வார். செங்குட்டுவனின் தாய் ஞாயிற்றுச் சோழன் என்று சிலம்பில் காணப்படும். ஆனால், பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்திற்கான பதிகத்தில் "குடவர்கோன் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி மகள் ஈன்ற மகன்" என்று மணக்கிள்ளியாக "ஞாயிற்றுச் சோழன்" என்னும் செங்குட்டுவனின் தாய்வழித் தாத்தனை உணர்த்தும். இத்தகைய உறவு முறையால் மாவல்லி என்பவன் சேரனாய் இருக்கவே பெரிதும் வாய்ப்பு உண்டு.

நெடியோன் என்ற பெயர் திருமாலுக்கு சிலம்பின் பல இடங்களிலும் பயிலப்படுகிறது. சிலம்பின் இந்திர விழவூர் எடுத்த காதை 5: 169-174 ல், புகாரில் இருந்த பல்வேறு கோயில்களைப் பற்றிச் சொல்லும் போது

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வண்குடை மன்னவன் கோயிலும்

என்று நெடியோன் பெயரை இளங்கோவடிகள் பதிவு செய்வார். சிலம்பின் கடலாடு காதை 6: 28-31 வரிகளில்

சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சயம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும், தாங்கா விளையுள்
காவிரி நாடும் காட்டி ---------

என்று சொல்லி வேங்கட மலையும் பதிவு செய்யப் படும். அடுத்து, சிலம்பு வேனிற்காதை 8:1-2 ல்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு

என்ற புகழ்பெற்ற வரிகளின் மூலம் வேங்கட மலை என்பது அந்த நெடியோனின் குன்றம் என்றும், சிலம்பின் காலத்தில் தமிழ் வரப்பைக் குறிப்பதில் நெடியோன் குன்றத்தின் பெயர் அழுத்தமாகவே பயன்படும். மேலே நாடுகாண் காதை 10: 9-10 ல்

அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டத்து வலஞ்செயாக் கழிந்து

என்று திருவரங்கத்தைப் பதிவு செய்ததோடு நில்லாமல், விரிவாகக் காடுகாண் காதை 11:41-51 ல், திரு வேங்கடமும், செங்கண் நெடியோனும் கீழ்வரும் வரிகளால் விரிவாகச் சொல்லப் படுவார்கள்.

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

இந்த வரிகளில் மிக விரிவாக நெடியோனின் உருவம் வரையப் படுகிறது. வேங்கடத்தில் ஓர் அருவி இருந்ததாகச் சொல்லப் படுகிறது; (வேங்கடம் பற்றிய சங்கப் பாடல்கள் பலவற்றிலும் இந்த அருவி குறிப்பிட்டுச் சொல்லப் படுகிறது. ஆனால் இன்று அந்த அருவியைக் காணோம்.) மலையின் உச்சியில் கோயில் இருந்திருக்கிறது. ஒரு பக்கம் ஞாயிறும், இன்னொரு பக்கம் திங்களும் இருக்க, இடைநிலையில் மின்னல் எனும் கோடி உடுத்து, வில்லைப் பூண்டு, மேகம் நிற்பது போல சக்கரத்தையும் சங்கையும் தாமரைக் கைகளில் தாங்கி, மார்பில் ஆரம் அணிந்து, தங்க ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் என்ற விவரிப்பைப் படிக்கும் போது, இன்றுள்ள பெருமாளின் திருமேனி அப்படியே நம் கண்முன் தோன்றுகிறது.

இந்தச் சொற்களைப் படிக்கும் போது திருமலையின் நெடியோன் திருமேனி திருவிக்கிரம அவதாரத்தைக் குறிக்கிறது என்றும் (செங்கண் மால் என்னும் குறிப்பு நரசிங்க அவதாரத்திலும், திருவிக்கிரம அவதாரத்திலும் ஆழமாய்க் குறிக்கப் படும் குறியீடுகள். திருமலையில் இருப்பவன் திருவிக்கிரமனே என்ற குறிப்பு சிலம்பில் ஆழவே வெளிப்படுகிறது. முதலாழ்வார் பாடல்களையும் கூர்ந்து படித்தால் இந்தச் செங்கண்மால் என்னும் குறியீடு புலப்படும்.), அந்த அவதாரத்தில் தாயார் உடன் வருவது இல்லை என்பதும் புலப்படும். சிலம்பில் துன்ப மாலை 18: 4 ல் "நெடுமால் அடி" என்ற சொல்லாட்சியும், அழற்படு காதை 22: 60 ல், "உரைசால் சிறப்பின் நெடியோன்" என்ற சொல்லாட்சியும் கூட "நெடியோன்" என்ற பெயரின் ஆழ்ந்த ஆட்சியை உறுதி செய்கின்றன. நெடியோன் என்று இல்லாமல், உயர்ந்தவன் என்ற பெயரில் ஊர்காண் காதை 14:8 ல், "உவணச் சேவல் உயர்ந்தோன் நியமம்" என்று வரும் கருத்து வேறு ஒரு பரிமானத்தைக் கொடுக்கும். நெடியோன் தவிர அந்தக் காலத்தில் பெரிதும் பயன்பட்ட பெயர்களை அடுக்கிச் சொல்லுவது ஆய்ச்சியர் குரவை 17: படர்க்கைப் பரவல் 2 ல் வரும் பாட்டாகும்.

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்யக்
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!

பெரியோன், மாயோன், விண்ணவன், கரியவன் என்ற பெயர்கள் எல்லாம் வேங்கட மலை பற்றி மட்டுமே சொல்லப் படுவதில்லை. ஆனால் நெடியோன் என்ற பெயர் தான் அங்கு விதப்பாகவே பேசப்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, August 08, 2007

வேங்கடத்து நெடியோன் - 1

அண்மையில் வேங்கடமுடையானின் இற்றைக் காலப் பெயரான "சீனிவாசனைத் தமிழில் சொல்ல முடியாதா?" என்பது பற்றிய உரையாடல் திரு. கண்ணபிரான் ரவிசங்கரின் வலைப்பதிவில் எழுந்தது. அந்தப் பதிவையும், அதில் வந்த பின்னூட்டுக்களையும் படித்த போது, "உடனடியாக எழுதாது, கொஞ்சம் ஆற அமரச் சரிபார்த்து, உறுதி செய்து, பின் எழுதலாம்" என முன்னிகை தருவதைத் தவிர்த்தேன். அச் சரிபார்ப்பு இப்பொழுது ஓரளவு முடிந்த நிலையில், சொல்லாய்வு, முற்கால வரலாறு ஆகியவை சேர்த்து, இந்தப் பதிவில் சொல்கிறேன்.

நமக்குக் கிடைத்த தரவுகளில், வேங்கடத்தை  முதலில் குறிப்பிட்ட சான்று தொல்காப்பியத்தில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகத்து" என்று தொடங்கும் பனம்பாரனாரின் சிறப்புப் பாயிரத்தில் உள்ளது. இதில் வேங்கடம், மலையை மட்டும் குறித்ததா என உறுதி சொல்ல முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டு வடஎல்லையில் இன்றுள்ள வேங்கடமலை ஆயின், அது வடகிழக்கில் மீச்சிறிய இடங்குறித்ததாய் அமையும். தவிர, இற்றை வட எல்லையே சங்க காலத்தில், அதற்கு முந்தைய தொல்காப்பியக் காலத்தில் இருந்ததாய்ச் சொல்ல முடியாது. மாமூலனாரையும், காரவேலன் கல்வெட்டையும் படித்தால், அற்றை வட எல்லை இன்னும் வடக்கே என்றே தோன்றுகிறது. இதுவரை செய்த என்னாய்வில் அது எதுவென என்னால் சொல்ல முடியவில்லை. 

வட எல்லை வடகிழக்கிலுள்ள மீச்சிறு எல்லையைக் குறிக்காது கிழக்கிருந்து மேற்கு வரை ஓர் அகண்ட பட்டையைக் குறித்தால் வட எல்லை என்பதில் நல்ல பொருளுண்டு. தொல்காப்பிய உரை எழுதிய இளம்பூரணர் (11 ஆம் நூ.) தன் உரையில் என்ன காரணத்தாலோ, வேங்கடத்தைத் திருமாலோடு பொருத்திச் சொல்லார். ஆனால் 14 ஆம் நூ. நச்சினார்க்கினியரோ நிலங்கடந்த நெடுமுடி அண்ணலாகிய திருமால் உறையும் மலையாக வேங்கட மலையைக் கூறுவார். 19, 20 ஆம் ஆண்டு உரையாசிரியரும், தமிழாசிரியரும் நச்சினார்க்கினியர் அளவிற்கு இளம்பூரணரை ஓதாக் காரணத்தால் நெடியோன், திருமாலாய் மட்டுமே எண்ணப்படுகிறான். 

திருமாலை மட்டுமின்றி, சிவன், அனுமன், ஏன் சாத்தார நெட்டையன்,  உருவகத்தால் நெடிதுயர்ந்த குன்று-மலை என ‘நெடியோன்’ குறிக்கலாம். சிவனை மதுரைக் காஞ்சி , “மழுவாள் நெடியோன்” என்று சொல்லும். அவனை மாதேவன், பெருந்தேவன் என்பது கூட அவனின் நெடுமையாலும், , பெருமையாலும் ஆகலாம். 

வேங்கடம் என்பதைச், சங்கப் பாடல்களில் 14 இடங்களில் (அகம் 27, 61, 83, 141, 209, 211, 213, 265, 393, புறம் 381, 385, 389, 391) காணலாம். உரையாசிரியர்களின் கூற்றுகளைத் தவிர்த்து, பொருள்களை ஓர்ந்து பார்த்தால், இற்றைத்  திருமலை மட்டுமின்றி, வேறொரு  மலைத் தொடரையும், அதை ஒட்டிய பகுதிகளையும் குறித்திருக்கலாம். 

அதாவது வேங்கடம் என்பது மலை, தொடர், அதைச்சுற்றிய பகுதிகள் என விரிந்தே பொருள்கொள்ள வேண்டும். அப்பகுதிகள் எவ்வளவு தொலைவு இருக்கும் என்பது அடுத்த கேள்வி. இற்றை வேங்கடப் பகுதிகள் சங்க காலத்தில் (கி.மு. 600 - கி.பி. 300) நமக்குத் தெரிந்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாய், திரையனுக்குக் கீழும் (இவன் தொண்டைமான் இளந்திரையனுக்கு முன்னோனாய் இருக்கலாம்), மாவண் புல்லி என்ற குறுநில அரசனுக்குக் கீழாயும், ஆதனுங்கனுக்குக் கீழாயும் (இவன் மோரிய அரசன் பிந்துசாரனின் படையெடுப்புக் காலத்தில் இருந்துள்ளான். இவன் பற்றிய செய்தி அறதப் பழைய காலம்.) இருந்ததாக அடையாளப் படுகின்றன. இக் குறுநில மன்னரின் தொடர்ச்சிவரிசை நமக்குக் கிட்டவில்லை. எனினும், இப் பகுதிகள் தமிழ்பேசும் பகுதிகளாய் இருந்தன என்றே அறிகிறோம்.

இந்தப் 14 பாடல்களிலும், ஓரிடத்தில் கூட, வேங்கடத்தின் திருமால், திருமால் கோயில் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லப் படாதது வியப்பையே அளிக்கிறது. "பரங்குன்றைக் குறிக்கும் போதெல்லாம், விட்டு விடாது, முருகனைச் சேர்த்துக் குறிக்கும் சங்கப் பாடல்கள், வேங்கடத்தைச் சொல்லும் போது மட்டும், கூடவே திருமால், திருமால் கோயிலைக் குறிக்காது போனது ஏன்?" - என்பது நமக்குக் கேள்விக் குறியாய் இருக்கிறது. இத்தனைக்கும் வேறு பல இடங்களில் சங்கப் பாடல்கள் மாயோனையும், வாலியோனையும் அழுத்தமாகக் குறிக்கின்றன. முல்லைநிலத் தெய்வம் மாயோன் தானே? (வாலியோன் மாயோனின் அண்ணன்; இவனைக் குறிப்பிடும் வழக்கம் சங்க இலக்கியத்தில் கொஞ்சம் அதிகம் தான். வாலியோனை வழிபாட்டிற் சிறப்பிப்பது பழந்தமிழகமும், இன்றைய ஒரிசாவும் தான்.)

பொதுவாகச் சங்க இலக்கியத்தில் பாலைத்திணையில் (சங்க இலக்கியத்தில் இந்தத் திணைப் பாட்டுக்கள் மிகுதியாய் உள்ளன.) பொருள்வயின் பிரிதலைக் குறிக்கும் எல்லா இடங்களிலும், சிலம்பில் (11:63-67) சொல்லப் படுவது போல்,

"வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலம் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்"

என்ற அளவில் முல்லையும் குறிஞ்சியும் திரிந்த இடமே பாலை என்பதாக ஒரு தமிழ் நாட்டு வரையறையைக் குறிப்பதாகக் கொள்ள முடியவில்லை. அவை வேறு ஏதோ ஒரு நிலைத்த இடத்தை, அதுவும் தமிழ்கூறும் உலகைத் தவிர்த்து, ஒரு மொழிபெயர் தேயமாகவே, குறிப்பதைக் கவனிக்க முடியும். அதோடு வேங்கடம் என்ற சொல், வெறும் மலையை மட்டும் அல்லாது, வெய்யிலில் வேகும் பகுதியையே முதலில் குறித்திருக்க வேண்டுமோ என்றும் ஐயுற வேண்டியிருக்கிறது.

(இயற்பொருளின் படி, வேகும் கடம் என்பது, வெய்யிலால் சுட்டெரிக்கும் இடம் என்பது, வேங்கடம் என்றாகும்; கடம் என்பதற்கு பாவம் என்ற பொருள் கூறி சமய உணர்வில் விளக்கப் பார்ப்பது வேண்டாத வேலை. எல்லாவற்றிற்கும் சமயத் திருகையே - twist - விளக்கமாய் அளித்துக் கொண்டிருந்தால் வரலாறு என்பது சரியாய் விளங்காமல் போகும். பாவம் - புண்ணியம் போன்ற கருத்துக்கள் எல்லாம் மெய்யியல் வழியாக வந்தவை. மெய்யியற் சிந்தனை தமிழ்க் குமுகாயத்தில் அழுந்தியது கி.மு. 200 களுக்கு அப்புறமே. தொடக்க காலத்தில் தெய்வ வழிபாடு இருந்தது; ஆனாற் சமய நெறி கிடையாது. 2300-2500 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இடப்பெயர்கள் பெரும்பாலும் இயற்கையை ஒட்டியே அமைந்திருப்பதை நாவலந்தீவின் பல இடங்களின் பெயர்களில் பார்க்கலாம்.)

தென்னிந்தியாவிலேயே கோடைகாலத்தில் மிகுந்து வேகும் பகுதி ஆந்திரத்தில் இருக்கும் இராயலசீமைப் பகுதியே ஆகும். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், சங்க இலக்கியத்தில் பாலையாகக் குறிப்பிடப்படும் வேங்கடப் பகுதி, ஒரு பெரிய நிலப்பரப்பாய், குறிப்பாகக் கண்ண பெண்ணை (கிருட்டிணா) ஆற்றில் இருந்து வட பெண்ணை ஆறு வரைக்கும் இருக்கும் இந்தக் கால இராயல சீமைப் பகுதியாகவே இருந்திருக்க வாய்ப்புண்டு என்று சில ஆய்வாளர்கள் குறிப்பார்கள். இது மொழிபெயர் தேயம். தமிழும் வடுகும் ஒன்றிற்கொன்று ஊடுறுவிய பகுதி.

தவிரப் பொருள்வயின் பிரிவது என்பதை "வணிகம் கருதியே பிரிந்திருக்க வேண்டும்" என்று கொண்டால், அந்த வணிகம் நிலம்வழி நடந்தது என்றால், அது வடக்கு நோக்கி இருந்திருக்கவே வாய்ப்புண்டு. அந்த வணிகத்தில் வடவெல்லை மகதமாகவே கி.மு.600-400 களில் அமைந்திருக்கலாம். மகதத்திற்கும், தமிழ்கூறு உலகத்திற்கும், பிந்துசாரன் (= மோரிய அரசன் அசோகனின் தந்தை) காலம் தவிர்த்து, நந்தர், மோரியர் என்று வரும் காலங்களில் கனிவான உறவு குறைபடாமலே இருந்திருக்கிறது. தவிர, அந்தக் கால மொழிபெயர் தேயமாய் தமிழகத்திற்கு அடுத்தாற்போல இருந்தவை, வட மேற்கே இருந்த நூற்றுவ கன்னரின் (= சாதவ கன்னரின்) அரசும், வடகிழக்கே இருந்த கலிங்க அரசுமே ஆகும்.

நூற்றுவர் கன்னரை தோழமை கொண்ட தமிழரசர் என்றே சிலம்பு பேசுகிறது. கலிங்க அரசன் காரவேலனின் கல்வெட்டும், தமிழ் மூவேந்தரின் நீண்ட காலக் கூட்டணியைப் பகைமை இல்லாமலேயே குறிக்கிறது. எனவே நூற்றுவர் கன்னர் அரசின் வழியாகவும், கலிங்க அரசின் வழியாகவும் மகதம் வரை செல்லும் வாணிகம் நடந்திருக்க வேண்டும். குடிலரின் (=கௌடில்யரின்) பொருள்நூல் (=அர்த்த சாத்திரம்) தெரிவிக்கும் ஒரு சில வணிகப் பண்டங்கள் தெற்கிருந்து போனவையாகவே தெரிகின்றன. பொதுவாகச் சங்க இலக்கியங்களில் கிடைக்கும் நந்தரின் அரசுச் செய்திகளும் மகதத்திற்கும் தமிழகத்திற்குமான உறவு மேம்பட்டே இருந்திருப்பதை உறுதிப் படுத்துகின்றன.

பழந் தமிழகத்தில் இருந்து (இது இன்றையத் தமிழகமும், கேரளமும், தென்கன்னடமும் சேர்ந்த ஒருபகுதி.) வடக்கே போக இரண்டு வழிகள் தான் உண்டு. ஒருவழியில், எருமைநாட்டைக் கடந்து (= மைசூர் நாடு; அதுவும் அன்று முழுமையாய்த் தமிழ் பேசி இருந்த நிலம் தான். இன்றையத் தென்கன்னட நாடு முழுமையும் அன்றைக்குத் தமிழ் பேசும் நிலமாய்த் தான் இருந்தது. இதைக் கல்வெட்டுக்களும், கன்னட மொழி வளர்ந்த நிலையும், கன்னட இலக்கியங்கள் பிறந்த வரலாறும் தெளிவாகவே உணர வைக்கின்றன.) சமண வெள்ளைக்குளம் (=ஸ்ரவண பெலகுளா) வழியாக இன்றைய ஔரங்காபாதிற்கு அருகில் கோதாவரி ஆற்றின் வடகரையில் இருக்கும் நூற்றுவர் கன்னரின் முதல் தலைநகரான படித்தானம் போய் அங்கிருந்து மகத அரசின் தக்கணப் பாதையைப் பிடிக்க வேண்டும். (படித்தானம்>பயித்தானம்>பைத்தான்; நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை இருக்கிறது. படித்தானத்திற்குச் சற்று அருகில் தான் எல்லோரா மற்றும் அசந்தா மலைக் குகைகளும் இருக்கின்றன.)

மகத அரசின் தக்கணப் பாதை கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானத்தில் தொடங்கி, அசந்தா, எல்லோரா வழியாக, வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசருக்கு வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, அப்புறம் உஞ்சைக்குப் (உச்செயினி) போய், மேலே பில்சா வந்து, பின்னால் நேர்வடக்கே திரும்பி, தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பிக்கு வந்து, அதற்கு அப்புறம் அயோத்தி என்ற சாகேதத்தில் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேரும். (சாவத்தி என்பது கோசலத்தின் தலைநகர். கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள். இராமாயணக் கதையில் வரும் கோசலம் இராமனின் தாய் பிறந்த நாடு. மகத அரசின் பேர்பெற்ற முதலரசன் பிம்பிசாரன்; அவனுடைய மைத்துனன் ஒரு கோசலத்து மன்னன் தான். மகத்திற்கும் கோசலத்திற்கும் இருந்த உறவு 18 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சேதுச் சீமைக்கும், சிவகங்கைச் சீமைக்கும் இடையே இருந்த மாமன் - மச்சான் உறவு போன்றுதான்; ஒருசமயம் இழைந்து கொள்ளுவார்கள்; மறுசமயம் அடித்துக் கொள்ளுவார்கள்.)

தெற்கிருந்து வடக்கே போவதற்கு இன்னொரு வழி, வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்த வேங்கடப் பகுதியைக் கடந்து அமராவதி வந்து (புத்த நெறியின் தென்பகுதித் தலைமைப் பீடம் போன்றது.) அங்கிருந்து கலிங்கம் வழியாக மகதத்துள் வந்து சேருவது. அமராவதியில் இருந்து படித்தானத்திற்குக் குறுக்கில் ஒரு கிடைப் பாதையும் உண்டு.

பழங்கால நாகரிக வளர்ச்சியையும், அரசர்கள் படையெடுத்ததையும், வணிகப் போக்கையும் புரிந்து கொள்ள எண்ணுகிறவர்கள் இந்தப் பாதைகள் போன போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால், ஒழுங்காக இந்திய வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியாது.

சங்க கால வேந்தர்களும், பின்னால் பேரரசுச் சோழர்களும் கொங்கு நாட்டையும் (>கங்க நாடு), அதிகன் நாட்டையும் (அசோகனின் கல்வெட்டில் குறிக்கப் படும் சத்திய புத்த நாடு) கைக்குள் வைத்துக் கொள்ளாத பொழுது, இந்த வேந்தர்கள் நாட்டு வணிகர்கள், இரண்டாவது வழியான வேங்கடப் பகுதி வழியாகக் கலிங்கம் போய்த்தான் மகதம் செல்ல நேரிடும். நாட்டில் செல்வம் கொழிக்க விரும்பிய தமிழக அரசருக்கு மாராட்டியம், கலிங்கம் ஆகிய இரண்டில் யாரோ ஒருவர் இவர்கள் பக்கம் சார்ந்து இருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். மகதத்தை நோக்கிய வணிகம் இல்லாமால் தமிழ்நாட்டு அரசுகள் நெடுங்காலம் தரிக்க முடியாது.

முன்பு சொன்னது போல், வேங்கடப் பகுதியின் வடக்கு என்பது இன்றையத் தெற்கு ஆந்திரத்தையே, அதாவது வடுகு மொழி பெரிதும் பேசும் தேயத்தையே குறிப்பதாகத் தோற்றுகிறது. அந்தக் கால வடுகு என்பது நமக்கு வடக்கில் உள்ள மொழி என்றே புரிந்து கொள்ளப் பட்டது; அதே பொழுது, பாகத மொழி பேசிய நூற்றுவர் கன்னருக்கு அது தெனுகு (தெற்கு) மொழியாய் ஆனது. தெனுகு (=தெலுகு; தெனுங்கு; தெலுங்கு) பேசும் இடத்திலும் தமிழ் மொழி அங்கங்கே ஊடாகப் விரவி இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நூற்றுவர் கன்னர்கள் தங்கள் காசுகளின் ஒருபக்கம் தமிழிலும் பொறித்திருக்க மாட்டார்கள் அல்லவா? வேங்கடம் என்பது தமிழ் கூறும் உலகிற்கு எல்லையாக இருக்குமானால், அந்தப் பெயரையே வைத்து எல்லை ஒட்டிய பகுதிகளையும் குறிப்பது மாந்தருக்கு இருக்கும் வழக்கம் தான். இது எப்படியென்றால், இன்றைக்கும் தெலுங்கர்கள் தமிழர்களை அரவமாடு என்று குறிப்பதைப் போல என்று கொள்ள வேண்டும்.

[தமிழ்நாட்டின் வடபகுதி மண்டலங்களாய் அருவா நாடு, அருவா வடதலை நாடு என்று இரண்டைப் பழங்காலத்தில் குறிப்பார்கள். பழைய ஆர்கா நாடு>அருகா நாடு (>அருவா நாடு) தான் இன்றைய வட ஆர்க்காடும், தென் ஆர்க்காடும் சேர்ந்த நிலப்பரப்பு ஆகும். ஆர்கா நாடு>ஆர்க்காடு என்று ஆனது. அருவா வடதலை என்பது இன்றைய ஆந்திர மாநிலம் சேர்ந்த சித்தூர், நெல்லூர் மாவட்டங்களாகும். (அவை இரண்டும் பெரும்பான்மையர் தமிழ் பேசிய இடங்களாய்த் தான் 1956/57 வரை இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்ட குழப்பத்தில் இந்த மாவட்டங்களையும், இது போல கன்னடமாநிலத்திற்கும், கேரள மாநிலத்திற்கும் நாம் இழந்த பகுதிகளும் உண்டு. இப்படிப் பெரிதும் ஏமாளிகளாய் இருந்தாலும், தமிழர் ஏதோ இந்திய இறையாண்மையில் ஒன்று படாதவர்கள் போலவே சித்தரிக்கும் கூத்தும் அவ்வப்பொழுது நடந்து கொண்டுதான் இருக்கிறது.)

அருவா நாடு, அருவா வடதலை நாடு ஆகிய இரண்டுமே தெலுங்கருக்கு அண்மையில் இருந்த காரணத்தால், அருவாளர் என்ற சொல் (அருவம் ஆடு>அரவம் ஆடு = அரவமாடு; ஆடும் ஆளும் ஒரே பொருள் கொண்ட சொற்கள் தான். ஒன்று தெலுங்கிலும், இன்னொன்று தமிழிலும் பரவலாகிப் போனது.) மொத்தத் தமிழரையும் குறிப்பிடும் சொல்லாய் ஆனது. இதே போல தென்கேரளத்தில் பாண்டி என்ற சொல் மொத்தத் தமிழரையும் குறிக்கும் சொல்லாக அமையும்; திகிளர் என்ற சொல் கன்னடத்தில் மொத்தத் தமிழரையும் குறிப்பதாக அமையும். பொதுவாக எல்லைப் புறத்துச் சொல், மொத்தப் பரப்பாளரையும் குறிப்பதாக அமைவது குமுகவியல், மாந்தவியலில் இயற்கையே.]

அப்பொழுது வேங்கடம் என்பது பகுதிதானா. மலை இல்லையா என்றால், இரண்டும் தான் என்றே விடை சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.