Sunday, October 31, 2021

மதுரைக் கோட்டை அகழியின் கீழே ஒரு சுருங்கை வீதி

கீழடி அகழாய்வு என்பது இப்போது ஏழாங் கட்டத்திற்கு வந்துவிட்டது. ஒரு பெருநகருக்கு அருகில் வெறும் 12 கிமீ.யில் இன்னொரு நகரிருக்க வழியில்லை. மதுரையென்னும் பெருநகர் 2,3 முறை அழிந்திருக்கிற்து. (சிலம்பில் சொல்லப் படும் அழிவு, இடைக்காலப் பாண்டியரின் மதுரை, நாயக்கர் காலத்து மதுரை, கான்சாகிப் காலத்து மதுரை என்று பலமுறை அழிந்து மீண்டும் கட்டப் பட்டுள்ளது. தவிர வைகையாறும் தடம் மாறி ஓடியிருக்கிறது. எனவே நாம் இப்போது சொல்லும் கீழடி ஒருக்கால் பழ மதுரையாய் இருந்திருக்கலாம். அதை அடையாளங் காண ”சிலம்பு” ஒரு வழி சொல்லுகிறது. இது பற்றி என் சிலம்பு ஐயங்கள் தொடரில்  https://valavu.blogspot.com/2019/09/27.html என்ற பகுதியில் சொல்லியுள்ளேன். 

சிலம்பில் மதுரைக் கோட்டையில் உள்ள அகழிக்கடியில் ஒரு சுருங்கை வீதி இருந்தது சொல்லப்படும்.  

-------------------------------

இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த

இலங்குநீர்ப் பரப்பின் வ்லம்புண ரகழியில்

பெருங்கை யானை இளநிரை பெயரும்

சுருங்கை வீதி மருங்கிற் போகிக்

கடிமதில் வாயில் காவலிற் சிறந்த

அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்

காயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு

வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில்

    - ஊர்காண் காதை 63-69   

-----------------------

இதன் பொருள்:

கட்டுவேலி சூழ்ந்த காவற் காட்டோடு வளைந்து கிடக்கும்

நீர்ப்பரப்பின் வலப்பக்கம் புணரும் அகழியின் கீழ்

பெருந் துதிக்கை கொண்ட யானைகள்

கூட்டமாய்ப் பெயரும் சுருங்கை வீதியின் மருங்கிற் போய்

ஆங்கு

ஆயிரங்கண் இந்திரனுடைய அருங்கலச் செப்பின் வாய் திறந்தது போல்

தோற்றும் மதிலக வரப்பின் (= gate complex) முன்னே

அகழியும், சுருங்கை வீதியும் அதற்கப்பால்

இலங்குநீர்ப் பரப்பும், ஆற்றின் மருதந்துறையும்

இருப்பதைச் சொல்லும். பொதுவாய் மேலையர் கோட்டைகளில் வழக்கமாய்க் காணும் அகழிப் பாலத்திற்கு மாறாய் இங்கே முற்றிலும் புதிய அடவாய் (design) அகழிக்கடியில் சுருங்கை வீதி (கவனித்துப் பாருங்கள் வீதி. யானைகள் கூட்டமாய்ப் போகும் அளவிற்கு ஒரு வீதி ஆற்றின் அடியில்) ஒன்று சொல்லப் படுகிறது. இதுவொரு தொல்லியற் குறிப்பு. (கீழடியை ஆய்வு செய்வோர் இக் குறிப்பைப் படித்தாரா என்று தெரியாது. ”கோட்டை வாசலில் ஒரு சுருங்கை, அகழிக்கடியில் இருந்திருக்கிறது”. இதைக் கண்டுபிடித்தால் பழம் மதுரைக்கு அருகில் வந்து விட்டோம் என்று பொருள்.) இது போன்ற கட்டுமானத்தை எந்தத் திரைப்படமும், புதினமும், நூலும் நமக்குச் சுட்டியதில்லை. ஏன், மகதக் கோட்டையை விவரிக்கும் அருத்த சாற்றங் கூட இப்படிக் காட்டாது.

மணிமேகலை  12 ஆம் காதையில்  79 ஆம் அடியில், ”பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி” என்ற கூற்று குளத்திலுள்ள மதகுக்கு அடுத்து உள்ள சிறு வழியில், இது குழாயாகலாம். இன்றும் இப்பழக்கம் குளம், கண்மாய், ஏரிகள் இருக்கும் ஊர்களில் உண்டு. இதன் பெயர் ”சுருங்கைச் சிறுவழி” வெறும் ”சுருங்கை” அல்ல. சுருங்கை என்பது பூமிக்கடியில் தோண்டியது என்று பொரூள் கொள்ளும். சிறு வழி  என்ற சொல் இல்லையென்றால் பொருள் வேறு. மேலே சுருங்கை வீதி என்ற விரி பொருள் கூட்டுச் சொல்லுக்கு வந்ததை நினைவு கொள்ளுங்கள்.

மணிமேகலை 28 ஆம் காதையில் ”சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர் கருங்குழல் கழீஇய கல்லவை நீரும்” என்பதில் வரும் சுருங்கித் தூம்பு தான் இங்கு வடிகால் என்ற பொருள் கொள்ளும். அதிலும் சுருங்கைக்கு அந்தப் பொருளில்லை. தூம்பிற்குத் தான் அந்தப் பொருள் சுரங்கமாய்த் தோண்டிப் பொருத்திய தூம்பு என்று பொருள். தூம்பு = குழாய் = tube.

அன்புடன்,

இராம.கி.   


No comments: