Sunday, October 31, 2021

நண்பர்கள் கவனத்திற்கு

முகநூலில் Linguistic coincidences and curiosities குழுவில் பல்வேறு மொழிகளுக்கு இடையே இருக்கும் தற்செயல் அமைவுகள், விந்தைகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு எழுதுவார். இதில் உலகின் பல்வேறு மொழிகளின் சொற்களும், உருபுகளும், இலக்கணக் கூறுகளும் ஒப்பிடப் படும். ஒருமுறை Miŋ Q Kim என்பார் , 

#ProtoUralic *niŋä /niŋæ/ "woman"

#Spanish niña /niɲa/ "girl"

PU *niŋä is the origin of Hungarian nő, Mansi нэ̄, and Tundra Nenets не. Spanish niña is the feminine equivalent of niño....

என்று எழுதியிருந்தார். வெவ்வேறு உறுப்பினர் அவருக்குத் தோன்றிய செய்திகளை இங்கு குறிப்பிட்டார். நான் ”In Tamil, nangai = woman” என்று சொன்னேன். உடனே, Aaron Marks என்பார், ”I mean, all languages come from Tamil, so that's cheating“ என்று சொன்னார். நான் என் மறுமொழியாக, ”I never said that. Why do you attribute motive to me? I only said nangai = woman in Tamil. Should I keep quite when I see some correspondence? Is this a forum for just some exclusive people? Pl respond to what I said and nothing more. This is a forum to indicate linguistic coincidences and curiosities “ என்று சொன்னேன். 

மீண்டும் Aaron Marks தன் மறுமொழியில் “Lol, sorry, wasn't trying to impugn you personally, just have heard the Tamil theory a bunch from different people recently and decided to call it out, just for fun  ;) “ என்று சொன்னார். அதோடு, இடுகையிட்ட Miŋ Q Kim என்பாரே “Making a joke that Tamil is mother language of all languages is a meme” என்று சொல்லிக் கூடவே ”search Tamil in this group” என்று சொன்னார்.

இந்த உரையாடலை நான் ஏனிங்கு வெளியிடுகிறேன் எனில், தமிழராகிய நாம், வெளியில் எப்படி மதிக்கப்படுகிறோம் என்று அறிந்து கொள்ளத் தான். நம்மிற் பலரும் இணையமெங்கும், குறிப்பாய் முக நூலில், “தமிழே உலகத் தாய்மொழி, உலகின் எல்லா மொழிகளுக்கும் அதுவே முதல்” என்று தன் முனைப்பாக, வானத்தில் பட்டம் விடுவது போல், ஏதேதோ சொல்லி விடுகிறோம். இதுநாள் வரை  நம்மை அடக்கி வைத்த சங்கதத்தை மீறுவது தேவை தான். (அது உள்ளூர்ச் சிக்கல்.) அதற்கும் ஆதாரங்கள் வேண்டும். அதற்கு அடுத்தாற் போல் இந்தையிரொப்பியன் - தமிழ் தொடர்பையும் பேசத் தான் வேண்டும். அதிலும் தவறில்லை அதிலும் நாம் சொல்ல நினைப்பதை ஆதாரத்தோடு சொல்ல வேண்டும்.

ஒன்றைக் கவனித்தீர்களா? நாம் சொல்வதெல்லாம் நம் ஆதாரங்கள் மட்டுமே1 பிற மொழிகளோடு ஒப்பிட வேண்டுமெனில் அம்மொழிகளில் நமக்குப் புலமை வேண்டும். சுமேரியன், அக்கேடியன், எகிப்து, சீனம் இப்படிப் பழம் மொழிகளில் நமக்குப் புலமை இல்லாத போது, வானத்தை வில்லாய் வளைக்க முடியாது. வேற்று மொழிச் செய்தி தெரிந்தால், அது போல் நம்மூரில் செய்தி யிருந்தால் அதற்கு நம்மூர் ஆதாரஞ் சொல்லி “இப்படி இருக்கிறது” எனலாம். அதற்கு மேல் ஏதுஞ் சொல்ல முடியாது. நான் அறிந்தவரை தமிழே உலக மொழிகளுக்குத் தாய் என்று சொல்ல நம்மிடம் இருக்கும் தரவுகள் பற்றாது. (அதே பொழுது உலகின் பழைய செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்று சொல்லக் கட்டாயம் வாய்ப்புண்டு.)  

எதையும் ஆதாரமின்றிச் சொல்வோமானால், உலகம் அதைப் பார்த்துக் கொண்டு நிற்காது. நம்மைக் கேலி செய்யும், ஒதுக்கும், மறுக்கும், முடிவில் நாம் பேசுவது எதுவுமே இணையவுலகில் எடுபடாது போகும். நண்பர்களே! உள்ளமையைப் புரிந்து கொள்வோம். ஒருபக்கம் பாவாணரைக் கொண்டாடுவது சரியே. அதே பொழுது, இன்னொரு பக்கம் மாற்றார் கூற்றையும் படியுங்கள். ஆழ்ந்து ஓர்ந்து பாருங்கள். இரண்டும் முரண்படலாம். அதில் தவறேயில்லை. சற்று பொறுமை கொள்ளுங்கள். மாற்றாரோடு நல்லுறவைப் பேணுங்கள். இது கற்க வேண்டிய காலம். நம்மிருப்பை மாற்றாருக்குச் சொல்ல வேண்டிய காலம். சொல்லாமலே பல காலம் தூங்கி விட்டோம். இனியாவது அதைச் செய்வோம்.


No comments: