Friday, March 30, 2007

சுடர்வழியே செய்தி

ஆர்வமுடன் எழுதும் பலரிடம் சுற்றிக் கொண்டிருந்த இந்தச் சுடர் என்னிடம் வந்து சேரும் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை.

விடுதலை வீரன் வீரபாண்டியக் கட்டமொம்மனுக்கு ஒரு வழக்கம் உண்டாம். செந்தூரில் முருகனுக்குப் பூசை நடந்த பின் தான், பாளையக்காரர் காலையில் உண்பாராம். அதற்குத் தோதாக, திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங் குறிச்சி வரை அடுத்தடுத்து, குறைந்த தொலைவில் மேடைகள் கட்டி, முரசு வைத்திருப்பார்களாம். வரிசையாக முரசு அடித்துப் பூசை முடிந்த செய்தியை, ஒரு சில நுணுத்தங்களிலேயே (minutes), பாஞ்சாலங் குறிச்சிக்குத் தெரியப்படுத்துவார்களாம். ஒலி வழி செய்தி அறிவித்தலைப் போல இங்கு ஒருவர் மாற்றி ஒருவர் சுடரேற்றி மற்றவருக்குத் தெரியப் படுத்துகிறார்கள். யாருக்குச் செய்தி போகிறது? தமிழர் என்னும் கூட்டத்திற்குத் தானே? எனவே, அந்தப் பணியில் எல்லோரும் தாராளமாய்க் கலந்து கொள்ளலாம்.

நண்பர் சாகரனுக்கு என் நினைவு அஞ்சலிகள். (அவரின் மறைவுக்கு முன்னால் ஒரு தடவை, அவர் சென்னையில் இருந்து தொலைபேசியில் பேசியது இன்னும் நினைவில் நிற்கிறது. அடுத்தமுறை உறுதியாய்ச் சந்திப்போம் என்று அவர் சொன்னதும் நினைவிற்கு வருகிறது. துடிப்பான இளைஞர்; எவ்வளவோ சாதித்தவர்; தமிழுக்கு இன்னும் பணி செய்திருப்பார்; பெரிய இழப்பு.)

இனி அருள்செல்வன் கொடுத்த கேள்விகளுக்கு என் மறுமொழிகள்:

1. நீங்கள் சென்ற கோவில்களிலேயே தமிழரின் வரலாற்றில் ஒரு பெரும் தாக்கத்தத்தை ஏற்படுத்தியது என நீங்கள் கருதுவது எது? ஏன்?

கோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும். அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் நான் சொல்லுவேன். (எங்கள் பக்கத்துக் கோயில் என்பதற்காக அப்படிச் சொல்லவில்லை.)

காளையார் கோயில் என்பது, இன்று கோயிலுக்கும் ஊருக்குமான பெயர். சங்க காலத்தில், கானப் பேரெயில் என்று தான் ஊருக்குப் பெயர் இருந்தது. (கானத்தில் இருக்கும் பெரிய கோட்டை கானப் பேர் எயில்.)

சோழ நாட்டில் இருந்து, ஈழம் செல்ல ஒரு பக்கம் ஆதி சேது என்னும் கோடியக் கரை; இன்னொரு பக்கம் மதுரை வழியாய் இராமேச்சுரம். இரண்டாவது வழியில், கடலாழம் அன்றைக்கு மிகவும் குறைவு; கிட்டத்தட்ட ஓராள், இரண்டாள் உயரம் தான் பல இடங்களில் இருக்கும்; வெகு எளிதில் ஈழம் போய்விடலாம். மதுரையில் இருந்து இராமேச்சுரம் போக, காளையார் கோவில் கானத்தைக் கடக்க வேண்டும்.

கானப்பேரை ஆண்டுவந்த கோதைமார்பனை வீழ்த்தி கானப் பேரெயிலைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கடந்ததாக சங்க இலக்கியம் பேசும். (அப்படிக் கடந்து, குறுநில மன்னனை தோற்கடித்தால் தானே நெல்லையும், நாஞ்சிலும், குமரியும் பாண்டியனின் கட்டுக்குள் தொடர்ந்து இருக்கும்?) இன்றைக்கு நாம் காணும் சங்க இலக்கியங்களைத் தொகுத்தது, இந்தப் பாண்டியனின் பேரவையில் தான்.

கானப்பேரெயிலைச் சுற்றி இருக்கும் காட்டின் அடர்த்தி தமிழக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டிருக்கிறது. பேரரசுச் சோழர் (imperial chozas) காலத்தில், இந்தக் காடு இன்றையைக் காட்டிலும் பரந்து பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரை இருந்திருக்க வேண்டும். (அதே போல திண்டுக்கல், அழகர்கோயில் வரை இன்னொரு காடு தொட்டுக் கொண்டிருக்கும்.) கானத்தின் வடகிழக்கு எல்லையாய் கான் நாடு காத்தான் என்னும் பெயர் கொண்ட எங்கள் பக்கத்து ஊர் தென்படுகிறது. "இராசராசனும், இராசேந்திரனும், இன்ன பலரும், தங்களின் பெரும்படையை கானபேரெயிலின் வழியே நகர்த்தி ஈழம் போயிருக்க வேண்டும்" என்று ஆய்வாளர் ஊகிக்கிறார்கள். இலங்கையில் இருந்து படையெடுத்து வந்த இலங்காபுரத் தண்டநாதன் கூட, எதிர்வரவாய், மதுரை நோக்கிக் காளையார்கோயில் வழி படையெடுத்துப் போயிருக்கிறான். [சிங்களத்தாருக்கும், நமக்கும் இடையுற்ற உறவாடல்கள், சண்டைகள், பெண் கொடுப்பு, பண்பாட்டுப் பரிமாறல்கள் போன்றவற்றை நம் வரலாறுகள் சொல்லித் தருவதில்லை. வடபுலத்தாரைக் காட்டிலும் சிங்களத்தாரும், கன்னடத்தாரும் நமக்கு முகன்மையானவர்கள் என்பதே வரலாற்று உண்மை.]

காளையார் கோயிலின் மூலவரைக் காளீசர் என்றும், அம்மனைச் சொன்னவல்லி (சொர்ணவல்லி) என்றும் அழைக்கிறார்கள். காளியப்பன், சொர்ணவல்லி என்ற பெயர்கள் சிவகங்கை வட்டாரத்தில் மிகுதியும் உண்டு. கோயிலின் உள்ளே, அருகருகே, மூன்று கருவறைகள் உண்டு. காளீசருக்கு ஒருபக்கம் சோமேசரும், இன்னொரு பக்கம் மதுரையை நினைவுறுத்துமாப் போல சுந்தரேசரும், இருக்கிறார்கள். இவர்களுக்கு நாயகியாய்ச் சுந்தர நாயகியும், அங்கயற்கண்ணியும், உண்டு. ஆக மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரு பெருங்கோயிலாய் மாறியிருக்கிறது. சம்பந்தர், சுந்தரரும், அருணகிரிநாதரும் இங்கு பாடியிருக்கிறார்கள். பதினோறாம் திருமுறையும் பாடுகிறது. திருவருட்பாவிலும் சொல்லப் பட்டிருக்கிறது. சிற்பக் கலை சிறந்து விளங்கும் இந்தக் கோயில் பெருமாண்டமானது. பலரும் பார்க்க வேண்டிய கோயில். [அண்மையில் வலைப்பதிவில் திரு. இராமநாதன் இந்தக் கோயில் பார்த்ததை ஒளிப்படங்களோடு பதிவு செய்திருந்தார்.] வரகுண பாண்டியன் (1251-1261) காளீசருக்குத் திருப்பணி செய்து ஒரு சிறு கோபுரத்தை இங்கு எழுப்பியிருக்கிறான்.

பாண்டியருக்குப் பின்னால், நாயக்கர் ஆட்சியும், நவாபு ஆட்சியும் வந்து, முடிவில் சிவகங்கைச் சீமை முழுதும், 1604 ல் சேதுபதிகளுக்குக் கீழ் வந்து சேர்ந்திருக்கிறது. சேதுபதிகள் மதுரை நாயக்கர்களுக்கும், பின்னால் ஆற்காடு நவாபுக்களுக்கும் கீழ், தொட்டும் தொடாமலும், அவ்வப்போது கப்பம் கட்டி, அடங்கி இருந்திருக்கிறார்கள். கிழவன் சேதுபதி (1674-1710)க்கு அப்புறம் வந்த அவர் மகன் விசயரகுநாத சேதுபதி, தன் மகள் அகிலாண்டேசுவரியை நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணம் முடித்ததில் இருந்து, சிவகங்கைச் சீமை ஒரு தனித்த நிலை பெறுகிறது. திருமணத்திற்குப் பின்னால், சேதுநாட்டில் இருந்து மூன்றில் ஒருபங்கு பிரித்துச் சிவகங்கைச் சீமையில் சேர்க்கப் பட்டது. சேதுநாட்டிற்கும் சிவகங்கைச் சீமைக்கும் எப்பொழுதும் வெதுப்பும், கனிவுமாய் அடுத்தடுத்து உண்டு. கொள்வினை - கொடுப்பிணை இருக்கும் சீமைகள் அல்லவா?

சசிவர்ணரின் மைந்தர் முத்துவடுக நாதருக்கு (இவர் பூதக்க நாச்சியார் என்ற இன்னொரு அரசிக்குப் பிறந்தவர்; சேதுபதியின் மகள் அகிலாண்டேசுவரிக்கு பிள்ளைகள் கிடையாது). மெய்க்காப்பாளராய் வந்து சேர்ந்தவர்கள் மருதிருவர். [இவர்கள் பிறந்த ஊர் அருப்புக் கோட்டைப் பக்கம். இவர்களின் தாயாரின் ஊர் சிவகங்கைப் பக்கம்.] முத்துவடுகரை ஆங்கிலேயரும், ஆற்காடு நவாபும் சூழ்ச்சி செய்து தொலைத்த பின்னால், அவர் மனைவி வேலுநாச்சியார் ஆட்சிக்கு வந்தார். முத்து வடுகர் ஆட்சியிலும், வேலுநாச்சியார் ஆட்சியிலும் மருதிருவர் பெரும்பொறுப்பு வகித்தார்கள். பெரிய மருது தலைமை அமைச்சராயும், சின்ன மருது தளபதியாயும் சேவை செய்தார்கள். முடிவில், தாயாதிச் சண்டையில் இருந்து மீள்வதற்கு இடையில், வேலுநாச்சியார் பெரிய மருது சேர்வையையே மணஞ் செய்தார். அதற்குப் பின் நடந்த எல்லாப் புரிசையிலும் (practice) பெரிய மருது மன்னராகவே கருதப் பட்டார்.

மேலும் இங்கு நுணுகி விவரிக்காமல், மருதிருவர் காலத்தில் காளையார் கோயிலுக்கும் தமிழக வரலாற்றிற்கும், நாவலந்தீவின் விடுதலைப் பெருங்கடனத்திற்கும் (ப்ரகடனம்) உள்ள தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வுகளைக் கூற விரும்புகிறேன்.

காளீசர் கோயிலை இன்றிருக்கும் அளவிற்கு பெரிதாக்கிக் கட்டியவர்கள் மருதிருவரே. மருதிருவரின் கோயில் திருப்பணிகள் பரந்து பட்டவை; அவற்றில் காளையார் கோவில் பணியே மிக உயர்ந்தது. பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது. மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால் (அல்லது தொலை நோக்காடி - telescope - கொண்டு பார்த்தால்), தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும். பழைய பாண்டியர் கால வழக்கப் படி, மதுரையைப் போலவே பெருங்கோபுரம் எடுத்து கோயிலைக் கட்டியதால் தான், மருதிருவர்கள் பாண்டியர் என்றே மக்களால் அழைக்கப் பட்டார்கள். நாட்டுப் பாடல் ஒன்று,

கருமலையிலே கல்லெடுத்து
காளையார் கோவில் உண்டுபண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மருது வாரதைப் பாருங்கடி

என்று அவர்களின் பெருமை சொல்லும். (இந்தப் பாட்டு "சிவகங்கைச் சீமை" திரைப்படத்திலும் வரும். பார்க்க வேண்டிய படம். கண்ணதாசன் எடுத்த படம். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிலும் நல்ல வரலாற்றுப் படம்.)

கோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை - மானாமதுரை - முடிக்கரை - காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை. இந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு. (காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் - தியாகம் - செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும்; இன்னொரு முறை பார்க்கலாம்.) 1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது. கோயிலுக்குத் தெற்கே உள்ள ஆனைமடு ஊருணி மிகவும் பெரியது. மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அளவிற்கு அது இருக்கும்.

மருதிருவருக்கு கிட்டத் தட்ட இரண்டாம் தலைநகராகவே காளையார் கோவில் இருந்தது. அவர்களின் படைகள் குவிக்கப் பட்டு, படைத் தளமும் அங்கு தான் இருந்தது. படைத்தளபதி சின்ன மருது, சிறுவயலில் அரண்மனையில் தங்கியது போக, பெரும்பாலான நேரம் காளையார் கோயிலிலேயே இருந்து, படைநடவடிக்கைகளை கவனித்திருக்கிறார். அத்தனை படைத் தளவாடங்களும் கானப்பேர்க் கோட்டைக்குள் தான் இருந்தன. படையும் சிறப்பான திறமைகள் பெற்று ஆங்கிலேயர் படைக்குச் சரிநிகர் சமானமாய்த்தான் இருந்தது. இந்தக் காட்டினுள் மருதிருவரும் அலையாத இடம் கிடையாது.

பின்னால், மருது பாண்டியருக்கும் ஆங்கிலேயருக்கும் (கூடவே ஆற்காடு நவாபுக்கும்) இடையே, வரிவிதிப்பு மீறல், தன்னாளுமை போன்றவற்றால் பெருத்த சண்டைகள் ஏற்பட்டன. அந்தக் காலத்தில் சின்ன மருது ஒரு பெரிய தடவழி (strategy)க்காரர். படையுத்திகளில் வல்லவர். அவர் தன் நாட்டு விடுதலையை மட்டும் பாராமல், நாவலந்தீவின் விடுதலைக்கே முதன்மையாய், வெள்ளைக்காரரை வெளியேற்ற வேண்டும் என்று, ஓர் எதிர்ப்புப் போராளி முன்னணியையே, உருவாக்கினார். அதில் திப்பு சுல்தான், வட கேரளக் குறுநிலக் காரர்கள், கன்னட அரசர்கள், மராட்டியத் தலைவர்கள், பாஞ்சாலங் குறிச்சி முதற்கொண்டு பல்வேறு தமிழகப் பாளையக் காரர்கள், போராளிக் கழகங்கள் என்று பல்வேறு உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். தென்னிந்திய அளவில் இந்த முன்னணி விரிந்து பரந்திருந்தது. இவர்களின் கூட்டங்கள் பலகாலம் திண்டுக்கல், திருப்பாச்சிப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கூட்டணியின் தலைவரான சின்னமருதுவின் தடவழிக்கு இணங்கவே யாவரும் பணியாற்றியிருக்கிறார்கள். சின்னப் பாண்டியரின் "ஜம்புத்வீபப் பிரகடனம்" - படிக்க வேண்டிய ஒன்று - 1801 ஜூன் 16 க்கு முன்னால் திருவரங்கம் கோயிலின் வெளி மதிலில் முதன்முதலாய் ஒட்டப் பெற்றது. (வேடிக்கையைப் பார்த்தீர்களா? இந்திய விடுதலையின் முதல் எழுச்சிவெளியீடு சீரங்கம் அரங்கன் கோயில் சுவரில் ஒட்டப் பட்டிருக்கிறது.) பின்னால், திருச்சிக் கோட்டையின் வெளிச்சுவரிலும் ஒட்டப்பட்டது.

இந்தச் சீரங்க வெளியீட்டை அறிந்த ஆங்கிலேய அரசு, (அப்பொழுது சென்னையில் ஆங்கிலேயரின் ஆட்சியாளர் இராபர்ட் கிளைவின் மகனான எட்வர்ட் கிளைவ்.) 6.7.1801 ல் எதிர்ப்பு முன்னணியை முளையிலேயே கிள்ள வேண்டும் என்ற நோக்கில், அரசாணை பிறப்பித்தது. ஆங்கிலேயர் படையினர், பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கி, ஒவ்வொருவராய் அழித்து, இடையில் மைசூரையும் 2 மாதங்களில் தொலைத்து, முடிவில் சிவகங்கைக்கு வந்தார்கள். கிட்டத் தட்ட 1801 மார்ச்சில் இருந்து அக்டோ பர் வரை 8 மாதங்கள் சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டனர். ஆங்காங்கே சிறுசிறு வெற்றிகள் பெற்றாலும் முழு வெற்றியை ஆங்கிலேயரால் பெறவே முடியவில்லை. இத்தனைக்கும், அதுவரை இந்தியாவில் நடந்த எந்தப் போரிலும், இவ்வளவு ஐரோப்பியர் இறந்ததில்லையாம்; சிவகங்கைப் போரில் தான் அதிகம் பேர் இறந்திருக்கின்றனர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தீர்மானமாய் நிலைத்ததில் இந்தப் போர் முகன்மையானது. (This war was decisive in firmly establishing English rule in India).

"காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; முன்னணி உடையும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்கள்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நாவலந்தீவில் நிலைக்கும்" என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி வளைத்தான். 40 மைல் சுற்றளவும், குறுக்கே 11-12 மைல் நீளமும் கொண்ட காட்டின் இடையே அப்பொழுது வயல்களோ, ஊர்களோ இல்லை. காட்டை ஒரு பக்கம் வெட்டத் தொடங்கினால், நிழல் குறைந்து ஆங்கிலேயர் அணி (அதனுள் இந்தியர் மட்டுமில்லை, மலாய்க்காரரும் இருந்தனர்.) வெய்யிலில் நகர முடியாமல் தடைப் பட்டது. காட்டிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. முடிவில், காட்டிக் கொடுத்தவர்களின் உதவியோடு, மருது படை பயன்படுத்திய கமுக்க (secret) வழியை அறிந்து, அதன் வழியே படைநடத்தி, 30/9/1801 இரவு கழிந்து மறுநாள் புலரும் நேரத்தில், காளையார்கோவில் ஊர்வாயிலுக்கு அக்னியூ வந்து சேர்ந்தான்.

அதற்கு இடையில் ஒற்றர் மூலம் "கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க" அக்னியூ திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு செயலைச் செய்தார்கள். (பீரங்கி வைத்து பிளப்பது என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைக் குமுகத்தில் பலரும் ஆங்கிலேயர் காலத்தில் அறிந்த காரணத்தால், பின்னொரு காலத்தில் பாரதிதாசன் வேடிக்கையாகச் சொல்லுவார்: "சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?" ஒரு சிலர் கோவப் படாதீர்கள்!! இங்கே கோபுரம் பிளக்கும் கதை தான் குறியிடப் படுகிறது ;-))

கில்ஜிகளின் காலத்தில், திருவரங்கக் கோயில் உலாத் திருமேனிகளுக்கு ஆபத்து வந்த போது, காளையார் கோயிலில் தான் அவை பாதுகாக்கப் பட்டன. (இது திருக்கோட்டியூர் வழியான தொடர்பு. இராமனுசர் காலத்தையும் அவருக்குப் பின்னால் ஏற்பட்ட உறவுகளையும் இங்கு எண்ணிக் கொள்ளுங்கள். இன்றைக்கும் திருக்கோட்டியூர் சிவகங்கைச் சமத்தானக் கோயில்.) இப்பொழுது காளையார் கோவிலுக்கே பாதகம் என்றால், என்ன செய்வது? 1783 - ல், திருவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தகர்ப்பதாய் அறிவித்து, நெல்லைப் பாளையக்காரர்கள் கப்பம் கட்ட ஒப்பிய பின்னரே, ஆங்கிலேயர் கோபுரத் தகர்ப்பைக் கைவிட்டனர். [இன்றைக்குத் தமிழ்நாடு அரசின் சின்னமாகப் போற்றுகிறோமே அந்தக் கோபுரம் தான் இது.] இதே போல சங்கரன் கோயில் கோபுரத்தையும் (பார்க்க வேண்டிய கோயில்) இடிப்பதாக அறிவித்த பின்னால், நெல்கட்டும் செவல் பூலித்தேவர், கோயில், கோபுரத்தைக் காப்பாற்றுவதற்காகச் சண்டை போடாமல் சரணடைந்தார். கோபுரத்திற்காக எதிரியிடம் சரணடைந்தவர் தமிழக வரலாற்றில் பலர் இருந்திருக்கிறார்கள். கோபுரங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகள் தமிழகத்தில் மிகுதி.

அத்தனையையும் சீர்தூக்கிப் பார்த்த மருதிருவர், இரவோடு இரவாய் 78000 பேர் கொண்ட தங்கள் படையை, தளவாடங்களுடன், நகரை விட்டு நகர்த்தியிருக்கிறார்கள். 1801 அக்டோபர் முதல் தேதி அக்னியூ ஊரில் நுழைந்தான்; ஓர் எதிர்ப்பும் இல்லை. முடிவில் ஒரு வெடி வெடிக்காமல், ஒரு துமுக்கு (rifle) வேட்டு இல்லாமல், ஒரு குண்டு இல்லாமல், ஆங்கிலேயர் கொடி காளிசர் கோபுரத்தின் உச்ச கலசத்தில் ஏறிப் பறக்க விடப்பட்டது; கவனம் கொள்ளுங்கள், கொடிபறந்தது கோட்டை வாசலில் அல்ல; கோபுர உயரத்தில். ஆக, காளீசர் கோபுரத்தையே ஆங்கிலேயர் பிடித்தார்கள். அதில்தான் அவர்களின் முழுக்கவனமும் இருந்தது. [பின்னால் அக்னியூவின் கோபுரத் தகர்ப்பு ஆணை ஆங்கிலேய அரசிதழிலேயே வெளிவந்தது.]

ஆக ஒரு கோபுரத்திற்காக, அதைக் காப்பாற்றுவதற்காக, தமிழக விடுதலை, ஏன் இந்திய விடுதலை, 146 ஆண்டுகள் தள்ளிப் போனது. போரே இல்லாது போனதால், போராளிகளின் போராட்டமும் பின்னால் பிசுபிசுத்தது. இத்தனைக்கும் மருதுபாண்டியர் பெருத்த வலிமையுடன் இருந்தார்கள் என்றுதான் வரலாறு சொல்லுகிறது. மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய பெரிய மருது, காளீசர் கோபுரத்தைக் காக்காமல் வேறு என்ன செய்வார்? "இப்படி நடந்திருக்குமானால் - what if" என்ற கேள்வி வரலாற்றில் சிக்கலானது தான். ஆனாலும், சின்ன மருதுவின் "ஜம்புத்வீபப் பிரகடனம்" படித்தவருக்கும், அந்தக் காலப் போர்க் கூட்டணியைப் புரிந்து கொண்டவருக்கும், கிழக்கிந்தியக் கும்பனியின் அந்தப் பெரிய போர் முயற்சியை ஆழ்ந்து ஆய்ந்தவருக்கும் நான் சொல்லுவது புரியும். It is perplexing that we lost an opportunity of throwing out the English rule just for the sake of a Temple Tower.

இன்றையத் தமிழ் இளையர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சொன்னது கதையல்ல, உண்மை. காளையார் கோயில் போர், இந்திய விடுதலையின் ஒரு முகன்மைக் குறியீடு. (வேலூர்க் கோட்டைச் சிப்பாய்ப் புரட்சியெல்லாம் அதற்கு அப்புறம் வந்தது, 1857 ல் வடக்கே நடந்த சிப்பாய்ப் புரட்சியும் இன்னும் பல ஆண்டு கழித்து வந்தது.) இந்திய வரலாற்றில் மருது பாண்டியரின் பங்களிப்பு சரியான முறையில் மக்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை.

காளையார் கோயிலை வசப்படுத்திய அக்னியு, பத்தே0 நாட்களில், அக்டோபர் 11 அன்று, அந்தக் காட்டையே கொளுத்தினான்; சிவகங்கை, திண்டுக்கல் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான் அந்தச் சீமை; காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது. உடன் இருந்த மெய்க்காப்பாளன் கருத்தான் காட்டிக் கொடுக்க, தொடையில் குண்டடி பட்டு, சின்னப் பாண்டியர் 4/10/1801 லேயே கைதானார். அடுத்த நாளில் கருத்தானின் கைகாட்டலில், அவருக்கு இருந்த பக்கவாதக் குறைவை சூழ்ச்சியால் ஏற்பட வைத்து, பெரிய பாண்டியரைக் கைது செய்தனர். (இரண்டு பாண்டியரும், நாட்டின் மேல் இருந்த காதலால், காளையார் கோவில் காட்டை விட்டு, அகலவே இல்லை; நினைத்திருந்தால் வட கேரளத்திற்கும், கன்னட தேசத்திற்கும் தப்பி, பின்னால் மீண்டு வந்து, அணிசேர்த்து, ஆங்கிலேயருக்கு எதிராய்த் திரும்பவும் படையெடுத்திருக்கலாம்; ஆனால் செய்யவில்லை. மக்களின் மேல் இருந்த பற்று, நாட்டை விட்டு நகர வைக்காமல், அவர்கள் கண்ணை மறைத்தது.) இருவரும் திருப்புத்தூரில் அக்டோ பர் 24-ல் தூக்கில் இடப்பட்டனர். சிவகங்கை அரச குலம் அந்த மூன்றே வாரத்தில் ஒருவரில்லாமல் முற்றிலுமாய்க் கருவறுக்கப் பட்டது.

மருதிருவர், சிவகங்கை பற்றிய நிறையச் செய்திகளை, வரலாற்றின் இந்தப் பகுதியை அறிய விரும்புவோர், பெரியவர் செயபாரதியின் அகத்தியர் மடலாடற் குழுவிற்குப் போனால், ஏராளமாய்ப் படிக்க முடியும். கூடவே மீ.மனோகரனின் "மருது பாண்டிய மன்னர்கள் 1780-1801" என்ற பொத்தகத்தையும் (அன்னம் வெளியீடு, 2, சிவன்கோயில் தெற்குத் தெரும் சிவகங்கை 623 560) படிப்பதற்கு நான் பரிந்துரை செய்வேன்.

2. திராவிட இயக்கத்தின் தமிழ்ப் பங்களிப்பை வரலாற்று நோக்கில் எப்படி கணிப்பீர்கள். ஒரு தமிழறிஞரின் பார்வையில் கேட்கிறேன். சிறுபத்திரிக்கை இயக்கத்தினரின் 'இலக்கிய' மதிப்பீடுகளைப் பற்றி இதில் கணக்கில் கொள்ளாமல் கணிக்கவும்.
(அல்லது)
தமிழருக்குத் தம் மொழியின் மீது ஏன் இத்தனை வெறுப்பு? விளையாட்டாகக் கேட்கவில்லை. காண்பதைத் தான் கேட்கிறேன்.


நீங்கள் கேட்டிருக்கும் அடுத்த கேள்வியும் இந்தக் கேள்வியும் தொடர்பு கொண்டவை. முற்றிலும் வெறுப்பு, பகைமை என்று பொதுப்படச் சொல்வதைக் காட்டிலும் அலட்சியம், வேண்டாவெறுப்பு, ஒருவித கீழ்நோக்குப் பார்வை, என்றே நான் சொல்லுவேன்.

கருப்பாய் இருக்கும் பெரும்பாலான தமிழ் ஆண்கள், கொஞ்சம் வெளிறிய நிறம் கொண்ட சிவப்புப் பெண்களையே மணம் செய்யத் தேடிக் கொண்டிருப்பதைப் போல் இதை உணரவேண்டும். பெருமிதம் குறைந்து போய், அடிமைத்தனம் ஊறிக் கிடக்கிற காரணத்தால், "ஆங்கிலம் உசத்தி. தமிழ் தாழ்த்தி" என்ற முட்டாள்ப் புரிதலால் இது அமைகிறது. இங்கு நான் சொல்லும் எடுத்துக் காட்டிற்கு மன்னியுங்கள். "எப்படி அமெரிக்க வெள்ளைக்காரர்களின் மேலாட்சியால், அமெரிக்கக் கருப்பர்கள் தங்களின் பெருமிதத்தை 400 ஆண்டுகளில் தொலைத்தார்களோ அதுபோல, நாமும் பெருமிதம் தொலைத்தோம்." (எவ்வளவு வறுமையிலும், ஒரு கிழக்கு ஆப்பிரிக்கன் பெருமிதம் குலையாது இருப்பான். கூர்ந்து கவனியுங்கள்.) இப்படி ஓர் அடிமைத்தனத்தை எளிதில் ஏற்படுத்த முடியும் என்று ஓர்ந்து தான், 1835ல் மக்காலே ஆங்கில வழி படிப்பை இந்தியாவில் கொண்டு வந்தான். இதில் என்ன வியப்பென்றால், 1971 வரையிலும் மனத்தால் அடிமையாகும் புத்தி, அவ்வளவு காட்டுத்தீயாய், நம்மிடை பரவவில்லை. அதற்குப் பின்னால், தமிழ், தமிழ் என்று வாய் ஓயாமல் பேசிய நம் அரசுத் தலைவர்களே, நமக்குக் கொள்ளி வைத்தார்கள். அதைப் பேசு முன், மக்காலேயின் பேச்சை அறிந்து கொள்ளுவோம்.

Lord McCauley - A British writer, historian and Parliamentarian, responsible for making the choice of Modern English Education for Indians stated in his speech of Feb 2, 1835 at British Parliament.

"I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation".

மக்காலேயின் சீடரான கழக ஆட்சியினரே, தமிழைப் பாடமொழியாகக் கொள்ளும் போக்கை வெகு எளிதில் கொன்றார்கள். அதைப் பேராயம் (congress) செய்யவில்லை. கழக ஆட்சியினர் மேல் என் கோவம் இதில் தான் தொடங்குகிறது.

20ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் என்பது மணிப்பவளமாய் விரைந்து கரைவதை நிறுத்த மறைமலை அடிகள் தலைமையில் ஓர் இயக்கமே தேவைப் பட்டது. தமிழ்நடையும், தமிழுணர்வும், பண்பாட்டுப் பெருமிதங்களும் ஒருவழியாய் மீண்டு வந்தன. அந்த உணர்வுகளின் கனிகளைத் திராவிட இயக்கங்கள் நன்றாகவே கைக்கொண்டு சுவைத்தன. இவர்கள் 1967ல் இந்த இயக்கத்தின் குறிக்கோள்களை அரசதிகாரம் கொண்டு ஓரளவாவது நிறைவேற்றுவார்கள் என்று எண்ணியது, 2,3 ஆண்டுகளில் நீர்த்துப் போனது, காய்ந்த மாடு கழனியில் பாய்ந்த கதையாய், பணம், பதவி, சொத்து, சுற்றம் என்று இவர்கள் சோரமாகிப் போனார்கள்; ஊழலும், கையூட்டுமாய், பணம், பணம் என்று இவர்கள் அலைந்து கொண்டிருப்பதைக் கண்டு பலர் மனம் பெரிதும் வாடுகிறது. இவர்களில் இருந்து 72-75 களில் பிரிந்து போன தாயாதிக் காரர்களும் இவர்களுக்குச் சளைத்தவர்களாய் இல்லை. அண்ணன், தம்பி என இரண்டு பேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இதில் ஐயாவென்ன, அம்மாவென்ன? எல்லோரும் ஒன்று தான்.

திராவிடத்தின் மூலம் தமிழியம் என்றாலும், தமிழியத்திற்கு எதிராகவே, இவர்களின் செயல்கள் ஆகிப் போயின. "படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்" என்ற சொலவடை இவர்களைப் பொறுத்தவரை, முழு உண்மையானது; பகுத்தறிவு என்றார்கள், மூடநம்பிக்கையை வளர்த்தார்கள்; தமிழென்றார்கள், தமிங்கிலம் வளர இவர்களே துணை நின்றார்கள்; குமுகாயத்தின் அடிநிலை மக்கள் வளருவார்கள் என்றார்கள், ஒருசிலர் மட்டுமே உயருவதற்கு வழிவகுத்தார்கள். தெற்கு தேயாது என்றார்கள், அது தேய்ந்து தான் போனது. முடிவில் 35 ஆண்டுகளில் "மாநிலமாவது, ஒன்றாவது" என்று ஆக்கி வைத்தார்கள். இப்பொழுது வெறுமே வாய் இதழ்கள் மட்டுமே இவர்களிடம் அசைந்து கொண்டிருக்கின்றன. இவர்களின் பங்காளிச் சண்டையில் மாநிலம் சீரழிந்தது தான் மிச்சம். திராவிடம் என்ற கருத்தீட்டை உள்ளார்ந்து இவர்கள் மறந்து, அநேக நாட்களாயிற்று. இப்பொழுது, அனைத்திந்திய சோதியில் இரண்டறக் கலந்து, ஒன்றிக் கொண்டு, மெய்ம்மறந்து இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிப் பேசினாலே நம் மனம் கசப்பது தான் மிச்சம். 1965 - 67 களில் இவர்களுக்காக வேலை செய்த என்னைப் போன்ற அகவையினர் பலரும் மனம் சலித்துப் போய் விட்டார்கள். "இவர்களைக் கொண்டு வரவா இவ்வளவு பாடுபட்டோம்?" என்று எண்ணத் தோன்றுகிறது.)

எங்கு பார்த்தாலும் இன்று ஆங்கிலமே கோலோச்சுகிறது. மக்காலே பெரிதும் மகிழ்ச்சிப் பட்டுப் போயிருப்பான். அவன் செய்யாததை, இவர்கள் செய்து விட்டார்கள் அல்லவா? "தமிழ் சோறு போடுமா?" என்ற கேள்வியைப் பலரும் இன்று கேட்கிறார்கள், "சோறு போடாத மொழி எனக்கு எதற்கு?" என்ற எண்ணமும் மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாய் ஊடுறுவுகிறது. ("தமிழெனும் கேள்வி" என்ற என் பழைய கட்டுரையைத் திரும்பப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.) தமிழ் இல்லாத தமிழனுக்கு, முகவரி உண்டோ? அவன் இந்திக் கூடத்தில், ஆங்கிலத்தில், கரைந்தல்லவா விடுவான்? அதுதானே கயானாவில் நடந்தது? பிஜியில் நடந்தது? மொரிசியசில் நடந்தது? முடிவில் சோகத்தோடு சொல்ல வேண்டியிருக்கிறது, இந்தியாவிலும் அது நடக்கலாம். தமிழராகிய நாம் விழித்துக் கொண்டால் ஒழிய இது மாறாது. இல்லையெனில் எல்லாம் போயே போயிந்தி.

"தமிழ் என்பது வெறும் பழமை பேசும் மொழியல்ல, வீட்டில் வேலைக்காரரோடும், வெளியே விளிம்பு நிலை மாந்தரோடும் வேண்டாவெறுப்பாய், அலட்சியத்தோடு, கீழ்நிலை நோக்காய்ப் பார்த்துப் பேசும் மொழியல்ல" என்று நடுத்தர வருக்கத் தமிழர்கள் என்று உணருவார்களோ? இந்த மனப்பான்மை மாறினால் தான் மேலே கூறிய அலட்சியம், வேண்டாவெறுப்பு, கீழ்த்தரப் பார்வை போன்றவை போகும். "காதலிக்க நேரமில்லை" படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் செல்லப்பாவின் (நாகேசு) உடன்பிறந்தார்கள் சொல்லுவார்கள்: "We don't see Tamil Pictures; we only see English Pictures" அது போல "We don't speak Tamil here; We speal only English" என்பது தான் நகரங்களில் இன்றையப் பரவலான நிலை. சென்னையின் பல அலுவங்களில் (offices), அது அரசோ, தனியார் அலுவமோ என ஏதாய் இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசினால் தான் இன்று உங்களுக்கு மரியாதை; தமிழில் பேசினால் "தள்ளி நில்லு, அப்புறம் வருகிறேன்" என்றுதான் சொல்லுகிறார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் Gymkhana Club -ல் Indians and dogs are not allowed என்று எழுதிப் போட்டிருக்குமாம். இன்றைக்கு சென்னையில் St.Michaels பள்ளியிலும், மதுரையில் ஏதோ ஒரு பள்ளியிலும், தமிழில் பேசினால் வெளியே நில் தான். தமிழ் நாட்டில், தருமமிகு சென்னையில், தமிழ் பேசப் பலரும் வெட்கப்படுகிறார்கள்.

ஓரொ பொழுது, நான் எண்ணுவது உண்டு. "தமிங்கிலர் என்று புதிய இனத்தார் (இதற்கு முந்திப் பிரிந்தவர் மலையாளத்தார்) தமிழரில் இருந்து பிரிந்து விட்டாரோ? அவர்கள் வேறு, தமிழர் வேறு என்று ஆகி விட்டதோ?" என்று எண்ணுவேன். ஆனாலும், முயன்று பாடுபட்டால், தமிங்கிலத்தை ஒழிக்கலாம் என்ற எண்ணமும் உள்மனத்துள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

பாருங்களேன், அண்மையில் ஒருவர் எழுதப் போக, தமிழ் மணத் திரட்டியெங்கும் weird என்ற ஆங்கிலச்சொல் தான் ஓடிக் கொண்டே இருக்கிறது. விந்தை என்ற சொல் இவர்களைப் பொறுத்து அழிந்தே போய்விட்டது இல்லையா? இப்படித்தான் ஒவ்வொரு சொல்லாய் தமிழர் மறந்து தொலைப்பார்கள். (விந்தையின் விளக்கம், அது weird-ஓடு பொருந்துவது பற்றியெல்லாம் இங்கு எழுதுவது வீண் என்றே எனக்குத் தோன்றுகிறது. தமிழின் மேல் இவர்களுக்கு ஆர்வமே இல்லையென்றால், அப்புறம் என்ன விளக்கம் சொல்லுவது, போங்கள்.) பயன்படுத்தாத ஏதொன்றும் மறந்து தான் போகும் அல்லவா?

அதே பொழுது, நெற்றியில் இப்படி அடித்துக் கொள்வதோடு நிற்காமல், இது மாற ஒரு வழி செய்ய வேண்டும் என்றும் நான் உணர்கிறேன். நான் அறிந்தவரை, மடிக்குழைப்பள்ளிகளின் (matriculation schools) அதிகாரத்தைக் குறைப்பதில் தான் தமிழின் எதிர்காலமே இருக்கிறது. இதற்குத் தோதாய் தமிழக அரசின் கல்வித்துறையில் ஒரு புரட்சியே நடைபெற வேண்டும். அதற்கு வலுவான அரசியல் தலைமை வேண்டும்.

3. அறிவியல் தமிழ் என்று நிறையப் பேசுகிறோம். அரசு ஏன் எதுவுமே இப்போதெல்லாம் இதற்காக செய்வதில்லை. ஒரு கலைகளஞ்சியத்தை இற்றைப்படுத்த முயற்சியாவது இருக்கிறதா? இணையம் இதில் பங்களிப்பது என்பது எந்த அளவு நடைமுறையில் சாத்தியம்?

அறிவியல் தமிழ் என்பது இன்றைக்கு வெறுமே ஏட்டளவில் தான் இருக்கிறது. இப்பொழுது, நாம் சறுக்கிய நிலையில் உள்ளோம். முன்னே சொன்னது போல் மடிக்குழைப் பள்ளிகள் (matriculation schools) பெருகிக் போய், பள்ளியில் தமிழில் படிப்பதே அருகிய நிலையில், தமிழில் அறிவியல் பெருகும் என்றா நினைக்கிறீர்கள்? நம்மூரில் ஆங்கிலத்தில் பேச்சுத் திறமை வளர்த்துக் கொள்வதற்கும், ஆங்கிலத்தின் மூலமாய் எல்லாவற்றையும் பள்ளியில் படிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூடப் பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்; சண்டித் தனம் செய்கிறார்கள். நாங்கள் (1964க்கு முன்னால்) பள்ளியில் படிக்கும் போது, மாநிலம் எங்கும், ஒரு பத்துப் பள்ளிகள் மடிக்குழைப் பள்ளிகளாய் இருந்தாலே வியப்பு. இன்றைக்கோ, இரண்டாயிரத்து ஐந்நூற்றிற்கும் மேல் இருக்கின்றன. மாநிலத்தில் தமிழில் படிப்பவன் இன்று முட்டாளாய்த் தெரிகிறான். அவனுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது. "Tamil medium, get out; no job." முதலில் நம் பள்ளிகளில் தமிழ் நிலைத்தால் ஒழிய, அறிவியல் தமிழ் என்பது வளரவே வளராது. முதலில் பள்ளிகளில் நிலைத்து, பின் கல்லூரிக்குப் பரவிப் முடிவில் ஆய்வுக்குப் பழக வேண்டும். இதுவெல்லாம் நடக்கும் என்று 1971 வரை நாங்கள் நினைத்த முயற்சி, கழகத்தாரின் திருகுவேலையால் பின்னடைந்து, உருப்படாது போயிற்று. இப்பொழுது ஆங்கிலவழிப் படிப்பையே இரு கட்சியினரும் போட்டி போட்டு வளர்க்கிறார்கள். தமிழுக்கு அதிகாரம் கொண்டுதர, இன்னொரு இயக்கம் தான் இனிமேல் வரவேண்டும்.

கலைக் களஞ்சியங்களைப் புதுப்பிக்கும் வேலை அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடைபெறுகிறது. அகரமுதலிகளிலும், தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் பெருஞ் சொல்லகராதி (4 தொகுதிகளோடு நின்று போயிற்று, மேற்கொண்டு காணோம்.), ப,அருளியின் முயற்சியால் வெளிவந்த அருங்கலைச்சொல் அகரமுதலி போன்றவை நல்ல முயற்சிகள். மணவை முஸ்தாபா தனித்து அறிவியல் அகரமுதலிகள் வெளியிட்டு வருகிறார். சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி இன்னும் திருத்தி வெளியிடப் படாமல் இருக்கிறது. தமிழ்வளர்ச்சித் துறை வெளியிடும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலில் நான்காம் மடலம் - மூன்றாம் பாகத்துடன் (தௌ வரை) 2004- ஆம் ஆண்டோடு நின்று போனது. அதற்கு அப்புறம் ஒன்றும் காணோம். அந்த அகரமுதலியின் விரிவும் ஆழமும் கூடச் சிறுகச் சிறுகக் குறைந்துவருகிறது. பாவாணருக்குப் பின் கொஞ்சகாலம் இரா.மதிவாணன் பார்த்தார்; இப்பொழுது இருப்பவர்களால், கவனிப்பு குறைந்து போனது என்றே எனக்குத் தோற்றுகிறது.

இணையத்தால் முடியுமா, என்று கேட்டால் முடியும்; ஆனால் நாட்களாகும். இணையத்தில் செய்வதற்குக் கூட, அரசின் உதவியில்லாமல், பெருத்த முதலீடு இல்லாமல், ஒரு நிறுவன முயற்சியில்லாமல், வழியில்லை. என்னைக் கேட்டால், இதைச் செய்வதற்குச் சரியான மானகை நெறியாளர் (managing director) வேண்டும். வல்லுநர்கள் பலரும் நம் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் நெறியாள்கை தான் சரியில்லை. நம்மூர்த் திட்டங்களின் பெருங்குறையே மானகைக் குறை தான்.

4. உங்களுக்குப் பிடித்த எம்ஜீஆர் படம் எது, ஏன்? . உங்களுக்குப் பிடித்த ஹாலிவுட் படம் எது, ஏன்?

ம.கோ.இரா. படங்கள் பலவும் பார்த்திருக்கிறேன். அது என்னமோ தெரியவில்லை, சிவாசியின் படங்களைக் காட்டிலும், இவர் படங்களை இன்றும் கூட அலுக்காமல் பார்க்கலாம். ஏனென்றால், கதைப் போக்கில் பலக்கிய தன்மை (complexity) இராமல், நீரோட்டமாக, பழைய கால சங்கரதாசு சுவாமிகள் நாடகப் போக்கோடு, இருக்கும். கிட்டத் தட்ட கூத்துப் பார்க்கும் உணர்வு தான். இன்றைக்கும் கோவலன் - கண்ணகி, கீசக வதம், பவளக்கொடி, ஆகியவற்றை நாட்டுப் புறத்தில் பார்க்கிறார்களே, அது போலத் தான் இவர் படமும். ம.கோ.இரா. படத்திற்குள், மாறுவேடம் போட்டுச் சிறு சிறு காட்சிகள் வரும் பாருங்கள் அதில் ஒரு நளினமும், குறும்புத் தனமும் நிறைந்து இருக்கும். ம.கோ. இரா, மிளிர்வது அது போன்ற காட்சிகளில் தான். (காட்டு படகோட்டி படத்தில் வளையல்காரராய்ச் சிறிது நேரம் வருவார், நினைவிருக்கிறதா?) அவர் படங்கள் பார்த்ததில் பெரிதும் பிடித்தது, குலேபகாவலி, நாடோடி மன்னன், தாய் சொல்லைத் தட்டாதே, அரசிளங்குமரி, எங்க வீட்டுப் பிள்ளை, படகோட்டி, அன்பே வா - இன்னும் நிறையச் சொல்லலாம்.

ஹாலிவுட் படங்கள், அண்மையில் சில ஆண்டுகளாய்ப் பார்ப்பது பெரிதும் குறைந்துவிட்டது. ஒருகாலத்தில் பைத்தியமாய்க் கிடந்து, கிட்டத்தட்ட எல்லாவகைப் படங்களும் பார்த்தேன். (Alien போன்ற அருவருப்பு எழுப்பும் ஒரு சில படங்களைத் தவிர்த்திருக்கிறேன்.) பல தடவை பார்த்த படம் Sound of Music. ஏன் என்றால் அதில் வரும் பாட்டுக்கள்; படம் எடுத்த விதம், பேச்சு நடை இன்னும் பல. Star trek series தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலுமாய் விடாது பார்த்துக் கொண்டிருந்தேன். (star wars -ஐக் காட்டிலும் star trek - ஏ எனக்குப் பிடித்தது.) என் star trek பைத்தியத்தைப் பார்த்து என் மனையாள் சொல்ல முடியாமல் தவிப்பாள். அதுவும் Spock - யைக் கண்டால் அவளுக்கு ஆகவே ஆகாது. "என்ன இருக்கிறது என்று இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்பாள். Steven Spielberg படங்களையும் பெரும்பாலும் பார்த்துவிடுவேன். Eddy Murphy, Robin Williams படங்களும் பார்க்க விழைவேன் தான். Come September, Guess who is coming to the dinner?, My fair lady, Towering Inferno, Mrs.Doubtfire, Brave Heart, Titanic என்று வெவ்வேறு காலப் படங்கள் இப்போது சட்டென்று நினைவுக்கு வருகின்றன. Shogun TV series என்னைக் கவர்ந்த ஒரு தொகுதி. அண்மையில் பெரும்பாலும் தொலைக்காட்சியிலேயே ஆங்கிலப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

5. உங்கள் சிறுவயது, நடுவயது, தற்போதைய பொழுதுபோக்குகளைப் பற்றிக் கொஞ்சம் கூறவும்.

சிறுவயதுப் பொழுதுபோக்கு: பல்வேறு வினைப் பொருட்களைச் செய்வது, கரிக்குச்சி (pencil) வரைபடங்கள், அஞ்சல் தலை சேகரிப்பு.

நடுவயதுப் பொழுதுபோக்கு: வரைகலை, ஓவியம் (பெருஞ்சுவர்களில் வரைவது), கவிதை, நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பு, பேச்சு, நாடகம் (கதை, உரையாடல், நெறியாக்கம்), மலையேறல், வளைதடியாட்டம் (hockey), தமிழிசை (கூடவே தமிழில் வரும் கருநாடக இசைப் பாடல்கள்), ஊர்சுற்றல்,

தற்போதையப் பொழுதுபோக்கு: இணையத் துழாவல், பொத்தகப் படிப்பு (தமிழ், ஆங்கிலம், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது வேற்றுமொழி அகரமுதலிகளை அருகில் வைத்துக் கொண்டு புரட்டிக் கொண்டே இருப்பது), எழுதுகை (கவிதை, கட்டுரை மட்டுமே. கதை எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன்.), ஊர்சுற்றல் (108 பெருமாள் கோயில்களை நேரம் கிடைக்கும் போது பார்த்துவிட வேண்டும் என்று முயன்று, கிட்டத் தட்ட 70க்கு அருகில் வந்துவிட்டேன்.), காலை நடை

அடுத்து சுடரை ஏற்றி வைக்க நான் அழைப்பது நாக. இளங்கோவன்.

ஐந்து கேள்விகள்:

1. நண்பர் சாகரனை அருகில் இருந்து பார்த்தவர்களில் நீங்கள் ஒருவர். அவருடன் நடந்த சுவையான நிகழ்வை நினைவு கூருங்களேன்.
2. திராவிட அரசியல் நீர்த்துப் போய்விட்டது என்று நான் சொல்லுவதை முற்றிலும் மறுக்காமல், அதே பொழுது ஏற்றுக் கொள்ளாமலும் நீங்கள் இருப்பீர்கள். இனிமேலும், திராவிடக் கட்சிகளின் அரசியல் நம்மூரில் எடுபடும் என்று எண்ணுகிறீர்களா?
3. இயற்கை பற்றிய பாக்கள் உங்களிடம் இருந்து சிறப்பாக வந்திருக்கின்றன. மரபில் ஒன்றும், புதுசில் ஒன்றுமாய் காட்சி வரையுங்களேன்.
4. "உள்ளுரும நுட்பியற் குமிழி (information technology bubble) வெடிக்கப் போகிறது, மிகுந்த நாட்கள் இந்தியா இதில் தாக்குப் பிடிக்க முடியாது" என்று பலரும் சொல்லுகிறார்கள். இந்தத் துறையில் மிகுந்த பட்டறிவு கொண்ட உங்களின் கணிப்பு என்ன?
5. சிலம்பு மடல் எழுதிய போது, கண்ணகி கோயிலைத் தேடி ஒரு தடவை போனீர்கள். அது போல, வேறு ஒரு வரலாற்றுத் தேடலை, தமிழ்த் தேடலை, எங்களுக்குச் சொல்லுங்களேன்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, March 25, 2007

இந்திய மட்டைப் பந்தும், எதிர்காலமும்

தோனி வெளியேற்றப் பட்டவுடனேயே, "மேற்கொண்டு பார்ப்பது வீண், இனி இவர்கள் உருப்பட மாட்டார்கள்" என்றெண்ணி எரிச்சலுடன், தொலைக்காட்சியை அணைத்துப் படுக்கப் போய்விட்டேன். மறுநாள் காலையில் சரியான தூக்கம் இல்லாமல், கொஞ்சம் தலைவலியோடு தான் எழுந்தேன். நேற்று முழுக்க ஒரே சோர்வு. மாலை வர, வரத்தான் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படுவது இயற்கைதான் என்று அமைந்தேன்.

"சட்டியில் இருந்தால் அல்லவா, அகப்பையில் வருவதற்கு?"
"ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றால் எப்படி?"

கொஞ்சம் கொஞ்சமாய் நுட்பியல் தாக்கங்களால் (impacts of technology) உலகெங்கும் ஆட்டங்கள் மாறிக் கொண்டிருக்கும் போது, அந்த மாற்றங்களை உணர்ந்து கொள்ளாமல், மாற்றங்களுக்கேற்பத் தங்களை அணியமாக்கிக் கொள்ளாமல், இன்னும் பழைய முறையிலேயே ஆடிக் கொண்டிருந்தால், இது போன்ற ஏமாற்றங்கள் நமக்கு ஏற்படத் தானே செய்யும்?

வளைதடிப் பந்தாட்டத்திலும் (hockey) இப்படித்தான் நடந்தது. செயற்கைப் புல்விரிப்புக்களும் (artificial turf), வலிய அடிப்புக்களுமாய் (shots), ஆடுகின்ற ஆட்டமே மாறியபின், பழைய துணைக்கண்ட அணுகு முறையிலேயே, வளைதடிக்கு அருகில் பந்தை வைத்துக்கொண்டு, எதிராளியின் வளைதடியில் பந்தைச் சிக்க விடாமல், இரண்டு மூன்று பேர் தங்களுக்குள்ளேயே சிறுசிறு கடவுகளில் (passes) பந்தை அங்கும் இங்கும் திருப்பி அலைத்து, நளினமாய் நகர்த்திக் கொண்டு, எதிராளியின் கவளை (goal) வரை போய் சட்டென்று பந்தைத் திணித்து வரும் உத்திகளெல்லாம் மறைந்து போய் எத்தனை மாமாங்கம் ஆயிற்று? இன்னும் அதே பழைய முறையிலேயே இந்தியா ஆடிக் கொண்டிருந்தால் எப்படி? வளைதடிப் பந்தில் இந்தியா தோற்றுக் கொண்டுதான் இருக்கும்; ஒரு நாளும் அது மேலே வராது. இது போக பந்தாட்டக் குழும்பில் (hockey club)இருக்கும் வட்டார அரசியல், பணங்களைச் செலவழிக்கத் தயங்கும் போக்கு; ஊழல் இன்ன பிற.

அதே போன்ற நிலை வேறு உருவத்தில் மட்டைப் பந்திலும் (cricket) ஆகிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

இப்பொழுதெல்லாம், பெரும்பாலான சிறந்த அனைத்து நாட்டு அணியினர் மட்டைப் பந்தைப் போடும் வேகம் கூடிக் கொண்டே போகிறது. மணிக்கு 140-142 கி.மீ.க்கு மேலும், பலர் பந்து வீசுகிறார்கள். அதோடு, அந்தப் பந்துகளின் தொடக்க முடுக்கமும் (initial acceleration) கூடுதலாய் இருக்கிறது. பந்தை விரல்களில் இருந்து வெளியே விடும் இலவகமும் சிறக்கிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பந்து பாதித் தொலைவைத் தாண்டிவிடுகிறது; மட்டையால் பந்தைத் தடுத்து திருப்பிவிட வேண்டுமானால், பரவளைவில் (parabola) வரும் ஒவ்வொரு பந்தின் நகர்ச்சியையும், வேகத்தையும், முடுக்கத்தையும் நிதானிக்கத் தெரியும் திறன் மட்டையாளருக்கு (batsman) இருக்கவேண்டும். இந்தத் திறனில் கண், கையோட்டம் ஆகியவற்றை ஒருங்குவிக்கும் (co-ordinating)போக்கும் அமையவேண்டும்.

அதிட்டமில்லா வகையில், நம் மட்டையாளர்கள் இத்திறனில் கொஞ்சம் கூட வளர்ச்சி பெறவில்லை. நம் மட்டையாளர்கள் மட்டுமல்ல, ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல, நம் பந்து வீச்சாளர்களும் 135-138 கி.மீ / மணிக்கு மேல் தாண்டி பந்து வீச மாட்டேம் என்கிறார்கள்; ஆகப் பிழை என்பது மட்டையாளர்கள், வீச்சாளர்கள் என இருவரிடமும் தான் இருக்கிறது. ஒருவர் மட்டும் காரணம் இல்லை. நம்மிடம் மொத்தமாய் உள்ள வலுவின்மை இது. வேகப் பந்துத் தடுமாற்றம்.

வலுக்குறைந்த நம் வீச்சாளர்களின் பந்துவீச்சிற்கே பழக்கப்பட்டு அடித்துவரும் மட்டையாளர்களும் 140 கி.மீ./மணிக்கு மேல் பந்தின் வேகம் இருந்தால், அதோடு முடுக்கமும் கூடுதலாய் இருந்தால், அதைத் தடுத்து அடிக்கவே தடுமாறுகிறார்கள். இதில் தெண்டுல்கரில் இருந்து எல்லோரும் அப்படித்தான் ஆகிறார்கள். (அன்றைக்கு தில்லார வெர்னாண்டோ, மலிங்கா போட்ட பந்து வீச்சுகளில் எல்லோருமே தடுமாறினார்கள்.) இதே நிலைமைதான், பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளைக் கண்டு இந்திய அணியினரிடம் அமைகிறது. வெளிநாட்டுப் பந்து வீச்சாளருக்கு மேல், நம் வீச்சாளர் அமைந்தால் அல்லவா, அந்தப் பயிற்சியின் விளைவால், வெளிநாட்டுக் காரரை எதிர்கொள்ளும் திறம் நம் மட்டையாளருக்கு வந்து சேரும்?

இது போலப் பட்டிகைகளும் (pitches) வேகப் பந்திற்கு வாகாக அமையும் வகையில் நம் நாட்டில் மாற்றப் படவேண்டும். அதற்குத் தேவையான மண்எந்திரவியல் (soil mechanics) ஆய்வும் இங்கு நடைபெற வேண்டும். எந்தப் பட்டிகை எவ்வளவு குதிப்புக் (bounce) கொடுக்கும்? எவ்வளவு பரவலாய்க் கொடுக்கும்? எப்படிக் குதிப்பை வேண்டுவது போல் மாற்றலாம்? - இந்தக் கேள்விகளுக்கு விடை நமக்குத் தெரிய வேண்டும். நல்ல பட்டிகைகளை உருவாக்கும் கலைத்திறன் கொண்டவர்களை நம் வாரியம் பாராட்டிப் பேணவேண்டும். கொஞ்சம் கூடக் குதிப்பு இல்லாத வறட்டையான (flat) பட்டிகைகளை உருவாக்கி நம் ஆட்டக்காரர்களை நாமே கெடுக்கிறோம். இந்த வகையில் இந்திய வாரியம் மாநில வாரியங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அவரவர் தங்கள் குழுக்கள் வெற்றிபெற வேண்டும் என்று எல்லா இடத்திலும் சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள். நம் ஆட்டக் காரர்களின் எதிர்காலத்தை நம் மாநில வாரியங்களே கெடுக்கின்றன.

உள்ளூர் ஆட்டங்களில் வேகப் பந்தைப் போடுவதற்கும், எதிர்கொள்ளுவதற்குமான திறனை வளர்த்துக் கொள்ள நம் நாட்டில் பயிற்சிக் களங்களை ஏற்படுத்தாது இன்னொரு பெரியகுறை. சென்னையில் இருக்கும் MRF பயிற்சிக் களம் என்பது ஒரு புறனடையாகத் (exception) தான் இருக்கிறது. இது மட்டும் போறாது. இது போல 10, 12 களங்களாவது நாடெங்கிணும் வேண்டும். MRF பயிற்சிக் களத்திலிருந்து வெளிவருகிறவர்களும், தங்கள் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து, நாளாவட்டத்தில் கோட்டையும் (line), நீளத்தையும் (length) சரி செய்யும் போக்கில், தங்களின் வேகத்தில் கோட்டை விடுகிறார்கள். (காட்டாக: முனாவ் பட்டேல், இர்பான் பத்தான்).

இன்னொரு குறை: நம்முடைய மரபு சார்ந்த சுழற்பந்திலும் (spin bowling) திறன் குறைந்து போனது; புதிய உத்திகள் உருவாவதில்லை. முத்தையா முரளிதரன் தூஸ்ரா பந்தைப் போடப் பழகி, தூண்டில் போடுவது போல் சுழித்து எறிகிறார். நம்மாட்களோ அதில் வகையாக மாட்டிக் கொள்ளுகிறார்கள். அது போலப் பந்து போட, நம் பக்கத்தில் ஆட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் (அர்பஜன் இந்தப் பந்தில் அவ்வளவு தெளிவு இல்லை). சுழற்பந்து போடுவதில் புதுப்புது வேற்றங்களை (variations) நாம் உருவாக்க மாட்டேம் என்கிறோம்.

அதே போல, உள்வட்டத்தில் இருக்கும் களத்தர்கள் (fieldsman) பந்தைப் பிடித்து நேரே குத்திகளை (stumps) விழுத்துமாப் போல பந்தைத் தூக்கி எறியாமல், குத்திகளுக்கு அருகில் உள்ள களத்தருக்கு எறிந்தே, பழக்கப் பட்டிருக்கிறார்கள். நேரே பந்தெறிந்து குத்தியைத் தகர்க்கும் கலையில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். அது போக, கள வேலைகளில், ஒரு மேலோட்டத் தனம், ஈடுபாடு இல்லாமை, ஆகியவை தென்படுகின்றன; இவை களையப் படவேண்டும்.

பொதுவாக, இப்பொழுதெல்லாம் ஆட்டம் என்பது பணமயமாய் ஆகிப் போய் விட்டதால், உள்ளூர் ஆட்டங்களில் பலரின் கவனமும் குறைந்து போயிற்று; இவ்வளவு பணம் சம்பாரிக்கும் மட்டைப்பந்து வாரியத்தின் முயற்சியில் உள்ளூர்ப் போட்டிகளின் ஆழம் கூட்டப் படவேண்டும். (ஒருபக்கம் ரஞ்சி, இன்னொரு பக்கம் மற்றைய ஆட்டங்கள் என்று நேரம் வீணாகப் போகாமல், நாடு தழுவிய அளவில் ஒருநாள் ஆட்டத்திற்கு ஒரு போட்டி, ஐந்து நாள் ஆட்டத்திற்கு இன்னொரு போட்டி என்று இரண்டு மட்டும் இருந்தால் போதும். இவை எல்லாம் ஒரு ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப் படவேண்டும்.)

உள்ளூர் ஆட்டங்களில் நுட்பியல் பெரிதும் கூடிவர ஏற்பாடு செய்ய வேண்டும். நுட்பியல் இல்லாமல் மட்டைப் பந்து இல்லை என்று இப்பொழுது ஆகிவிட்டது. உள்ளூர் ஆட்டங்களில் பந்து வீச்சின் வேகத்தோடு, முடுக்கம் போன்றவையும் கணிக்கப் பட வேண்டும்; பல்வேறு நுட்பியல் கருவிகள் கொண்டு ஒவ்வோர் இயக்கமும் பதிவு செய்யப் படவேண்டும்; உள்ளூர் ஆட்டங்கள் விழியப் படங்களாய்ப் (video movies) பதிவு செய்யப் படவேண்டும். தொலைக்காட்சிகளில் உள்ளூர் ஆட்டங்களைக் காட்ட வழிசெய்ய வேண்டும். வல்லுநர்கள் உள்ளூர் ஆட்டங்களைத் தீவிரமாக அலசி "யார் மேல் நிலையில் உள்ளார்? யாருக்கு என்ன பயிற்சி கொடுத்தால் இன்னும் மேல்நிலைக்குக் கொண்டு வரலாம்?" என்று பார்க்க வேண்டும். சமலேற்ற அலசல்கள் (simulated analyses) நடக்க வேண்டும்.

வெறுமே மேட்டுக் குடியினர் (இதை நான் விவரித்தால் பலருக்கும் பிடிக்காமல் போகலாம்.) ஆடும் குழும்பு (club) ஆட்டங்களில் மட்டுமே கவனம் கொள்ளாமல், நாட்டுப் புறங்களில் நடக்கும் ஆட்டங்களை வாரியம் தூண்டிவிட வேண்டும். வேகப் பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில் இருந்து வரவே வாய்ப்பு உண்டு. உள்ளூர் ஆட்டங்களில் ஓர் அணிக்கு இரண்டு வேகப் பந்து வீச்சளாராவது இருக்க வேண்டும் என்ற கட்டாயம் வேண்டும். அந்தப் பந்து வீச்சாளர்களின் வேகமும், குறைந்த ஓட்டங்களில் மட்டையாளர்களை வெளியேற்றக் கூடிய திறனும், அதிகரிக்கும்படி, போட்டிகள், பரிசுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை உண்டாக்க வேண்டும்.

அதே போல சுழற்பந்து வீச்சிலும் நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சிகளைத் (organized efforts) தொடங்க வேண்டும்.

தவிர இந்தியப் பல்கலைக் கழகங்களில், குறைந்தது ஐந்தாறு இடங்களிலாவது உயிர்எந்திரவியல் (biomechanics) தொடர்பான ஆய்வுகளின் மூலம் இந்திய மட்டைப்பந்து ஆட்டத்தை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இந்த ஆய்வுகளுக்கு மட்டைப்பந்து வாரியம் பணம் செலவழிக்க வேண்டும். இது போன்ற ஆய்வுகள் ஆத்திரேலியப் பல்கலைக் கழகங்களில் நடக்கின்றன. இப்பொழுது தென்னாப்பிரிக்காவிலும் நடக்கிறது. அதே போல பொருதுகள மருத்துவமும் (sports medicine) ஆத்திரேலியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் பெரிதும் கிடைக்கிறது. நம் ஆட்டக்காரர்களும் கூட ஏதாவது சிக்கல் என்றால் அங்கு தானே ஓடுகிறார்கள்? நம்மூரிலேயே பொருதுகள மருத்துவமும், அதையொட்டிய வளர்ச்சி, ஆய்வுப் பணி போன்றவை நடைபெற்றால், நாமல்லவா வளர்ச்சி பெறுவோம்?

இன்னொன்றும் நடைபெறலாம். இனியும் இந்தியா என்று ஒரே அணியை மட்டும் வைத்துக் கொண்டு இருப்பது சரியில்லை. இன்றைய நிலையில் 100 கோடி மக்களில் 15 பேர் என்பது பல்வேறு வகை அரசியல் நடப்பதற்கே வழி வகுக்கிறது. இந்தியா - வடக்கு, இந்தியா - கிழக்கு, இந்தியா - மேற்கு, இந்தியா - தெற்கு என்று நான்கு அணிகளை உருவாக்கி அவற்றை அனைத்து நாட்டுப் போட்டிகளில் நம் வாரியம் பங்கு பெற வைக்கலாம். இதனால் பல நல்ல விளைவுகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, இப்பொழுது இருக்கும் வட்டார அரசியல் குறைய வாய்ப்புண்டு. தவிர, மட்டைப் பந்தாட்டத்தில் நடக்கும் அரசியல், சூதாட்டம், பணக்குவிப்பு போன்றவை குறைய, இது போன்ற பரவலாக்கங்களே உதவி புரியும்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, March 20, 2007

அதிட்டம்

சொல் ஒரு சொல் பதிவில் இட்ட இந்தப் பின்னூட்டம், இங்கு தனிப் பதிவாகச் சேமிக்கப் படுகிறது.
-----------------------------------

அதிட்டம் பற்றிய இடுகையைப் படித்தேன். இங்கு பலரும் கூறிய நல்லூழ், ஆகூழ், புண்ணியம், பாக்கியம், (இன்னும் பலர் சொல்லாத நற்பேறு) போன்ற மாற்றுச் சொற்களைப் பற்றி நான் இங்கு சொல்ல வரவில்லை. அதிட்டத்தோடு மட்டுமே தற்போதைக்கு நின்று கொள்கிறேன்.

அதற்கு முன்னால் ஊழ் பற்றிய கருத்து முரணை மாற்று முகத்தான், ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். ஊழ் என்பது determinancy. அது முன்னால் ஏற்பட்ட நிலை. given, a priori, condition. This word does not talk about the right and wrongness of the actions performed. ஊழ் என்பது வெறுமே இயற்கையை மாந்தன் அவதானிப்பதிலேயே புரிந்துவிடும். இலக்கியப் பதிவுகளின் படி பார்த்தால், ஊழ் என்னும் கோட்பாட்டை ஆழ்ந்து உரைத்தவன் தமிழன் தான். ஊழைப் பற்றிய ஒரு சிறப்பான பாடல் நாமெல்லோரும் அறிந்த கணியன் பூங்குன்றனாரின் 192- ஆம் புறநானூற்றுப் பாடல் ஆகும்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

இதைப் பற்றி பெரிய விளக்கமாய் எழுதலாம் என்றாலும், சுருக்கமாய் இங்கு சொல்லுகிறேன். இது போன்ற மெய்யியற் பாட்டுக்கள் சங்க இலக்கியத்தில் ஓரளவு இருக்கின்றன; தமிழரின் அடிப்படைப் புரிதலையும் உணர்த்துகின்றன. இதில் வியப்பு என்னவென்றால், நம்மில் பலரும் இந்தப் புரிதலை இன்றும் கொண்டிருக்கிறோம். தமிழருக்கு இது இயல்பாய் வருவதொன்று.

"எல்லா ஊரும் எங்கள் ஊர்தான்; எல்லோரும் எங்கள் உறவுகள் தான்; தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை; துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான். செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை. வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் இல்லை. மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் இல்லை;

வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் யாற்று நீரில் சிக்கி, அதன் தடத்திலே போகும் புனையைப் போல, அரிய உயிரியக்கம் ஆனது முன்னால் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், பெரியவர்களைக் கண்டு வியத்தலும் இல்லை; சிறியவர்களை இகழ்தல் அதனிலும் இல்லை." [இங்கே காட்சி என்பது ஞானம் என்பதற்கான மாற்றுச் சொல்; இதைத் தரிசனம் என்றும் வடமொழி நூல்கள் கூறும். (தரிசனம் என்பது கூடத் தெரியனம் தான். தெரியனம்>தரிசனம்; தீவம் காட்டியதில் சாமித் தெரியனம் நன்றாய்க் கிடைத்ததா? - தீவம் காட்டியதில் சாமி நல்லாத் தெரிஞ்சுதா?) தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள இருதடப் போக்கை அறியாமல், அதை ஏற்காமல், எல்லாவற்றையும் மேலிருந்து பள்ளம் - வடமொழியில் இருந்து தமிழ் - என்ற ஒரு திசைப் போக்கையே சொல்லிக் கொண்டிராமல், வெறுமே வேதம், வேதம் என்று பாராயணம் பண்ணிக் கொண்டிராமல், பார்த்தால் ஒழிய, இந்திய மெய்யியலை நாம் ஒழுங்காகப் புரிந்து கொள்ள முடியாது. - இராம.கி.]

எல்லோரும் இந்தப் புறநானூற்றுப் பாடலின் முதல் வரியை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு "தமிழன் பார்த்தாயா, எப்படிச் சொன்னான், ஆத்தி, உசத்தி" என்று அமைந்து விடுகிறோம். அது சரியில்லை; முழுப்பாடலையும் நாம் ஆழ்ந்து படிப்பதில்லை. (உஷா கொஞ்சம் விதிவிலக்குப் போலிருக்கிறது; பாட்டின் இறுதியில் வரும் இரு வரிகளை தன் நுனிப்புல் வலைப்பதிவில் மேற்கோளிட்டுக் காட்டுகிறார்.)

மேலே உள்ள பாட்டில் "முறைவழிப் படும்" என்று சொல்லுகிறது பாருங்கள், அதில் வரும் முறை என்பதில் தான் நியதி, ஊழ் ஆகிய செய்திகள் அடங்கியிருக்கின்றன. இந்திய மெய்யியலில், முறை, நியதி, ஊழ் என்னும் சொற்கள் பெரிதும் பேசப்பட்டிருக்கின்றன. "காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம்" என்ற திரைப்பாட்டு உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? அந்தப் பாட்டிலும் ஊழ் பேசப் படுகிறது.

"காட்டாறு ஓடுற ஓட்டத்தில், நாம் என்ன செய்யமுடியும்? முயற்சி செய்யலாம்; ஆனால் ஓரளவுக்குத் தான். அதனால், உன்னை நிரம்பவும் பெரிதாக நினைத்துக் கொள்ளாதே! இயற்கைக்கு முன்னால் நீ ஒரு சுண்டைக் காய்" என்று ஆற்றுப் படுத்துவதாய் இந்த ஊழ்க் கோட்பாடு நமக்குச் சொல்லுகிறது. If you go by dielectical materialism, "a priori order - ஊழ்" indicates the struggle of human beings against the nature.

ஊழுக்கு மாறான ஊழ்வினை என்பது வேறு ஒன்றைச் சொல்லுகிறது. "இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்கு வைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த பிறவிக்கு "இருப்பு இவ்வளவு" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை. இதிலும் வெவ்வேறு சமயங்களும், நம்பா மதங்களும் மாறுபடும். சொல்க்கம் (சொர்க்கம்), நிரயம் (நரகம்) போன்ற கருத்துக்களும் கூட இந்த ஊழ்வினையோடு தொடர்பு கொண்டவை. ஊழ்வினை பற்றி எழுத வேண்டுமானால், உலகாய்தம், ஆசீவகம், செயினம், புத்தம், மீமாஞ்சை, ஆதிசங்கரரின் மாயாவாத வேதநெறியான அல்லிருமை (அல்+துவைதம் = அத்துவைதம்), சிவனெறிக் கொண்முடிவு (சைவ சித்தாந்தம்), போன்ற மெய்யியல் கருத்தீடுகளுக்குள் போக வேண்டும்; அது ஒரு நீண்ட கட்டுரையே ஆகிவிடும். எனவே தவிர்க்கிறேன்.

முற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது. அப்படிச் சொல்லுபவர்கள் மீள்பார்வை செய்வது நல்லது. வள்ளுவர் ஊழ் பற்றிப் பேசுகிறாரே ஒழிய, ஊழ்வினை பற்றிப் பேசுவதே இல்லை. நம்முடைய கருத்தை அவர்மேல் ஏற்றக் கூடாது. ஆனால் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்று சிலப்பதிகாரம் பேசும். "எந்தப் பொருளில், என்ன விளக்கத்தில் சிலம்பு பேசுகிறது?" என்பது இன்னொரு பெரிய ஆய்வு.

சுருக்கமாய்ச் சொன்னால், தமிழரில் பலரும், ஊழுக்கும் ஊழ்வினைக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிக் கொள்கிறார்கள்.

இனி அதிட்டத்திற்குள் போவோமா?

தமிழில் அடுதல் என்பது சார்தல், சேர்தல் என்ற பொருளைத் தரும் வினைச் சொல். அள் என்னும் வேர். நெருங்குதல் என்ற பொருளுடையது. அட்டுதல் என்பது பிணைத்தல், ஒட்டுதல் என்ற பொருளில் பிறவினையைக் காட்டும். இதே போல அடுத்தல் என்பதும் பிறவினைச் சொல் தான். அடுத்தது = next என்ற பொருளில் சொல்லுகிறோமே, அதைக் கவனியுங்கள். ஒன்றன் பின் ஒன்றாய் அடுத்து இருப்பது அடுக்கு என்றாகும்.

நம் உடம்பை அட்டி, அரத்தம் உறிஞ்சும் புழு அட்டைப் புழு ஆகும். பொத்தகத்தின் இரு மருங்கும் அட்டித்து (ஒட்டி) இருக்கும் கனத்த தாள் அட்டை. அடுத்து என்ற சொல் மென்மேல் என்ற பொருளையும் கொண்டுவந்து தரும். (தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொண்டுவிற்கப் போன தமிழர் எல்லோரும்) கடைகளில் (அது எதுவாய் இருந்தாலும்) நமக்கு உதவியாய் இருப்பவரை (assistant) அடுத்தாள் என்று சொல்லுவார்கள். அடுத்தேறு என்ற சொல் மிகை என்ற பொருளில் திருவாய்மொழி ஈடு, முப்பத்தாறாயிரப்படி 3,8,9 -இல் "அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து" என்று பயிலப் பட்டிருக்கிறது.

அடுத்தலின் திரிவான அடர்த்தல் என்ற சொல் செறிதல் என்ற பொருளில் ஆளப் பட்டிருக்கிறது. நாங்கள் எல்லாம் பள்ளியில் படித்த போது, அடர்த்தி என்ற சொல் என்ற சொல் density என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தப் பட்டது. (இன்றைக்கு திண்ணிமை என்றே நான் புழங்குகிறேன். திணித்தது திண்மம் - denser substance is solid. At the same time solidity is more than density. திண்மத்தனம் என்பது திண்ணிமையைக் காட்டிலும் பெரியது.) (செறிவு என்பதைக் concentration என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்துகிறோம்.) மேலே சொன்ன தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொண்டுவிற்கப் போன தமிழர் கடைகளில் அடத்தி என்ற சொல் wholesaler என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தப் பட்டது. அடத்தியிடம் பொருளை வாங்கிச் சில்லரை வணிகர்கள் வாய்பகரம் (=வியாபாரம் = trade) செய்கிறார்கள்.

சேர்ப்பு என்ற பொருள் நாளா வட்டத்தில் பெரியது என்ற பொருளையும் கொடுக்கும். அட்டக் கரி, அட்டக் கருப்பு என்ற சொற்கள், அடர்ந்த கருப்பு நிறம் என்ற பொருளில் நாட்டுப்புறங்களில் பயன்படுத்துவதை ஓர்ந்து பாருங்கள். "பெருந்தொல்லை" என்ற பொருளில் பயன்படும் அட்டகாசம் என்ற சொல்லையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம். மொத்தமாகத் தெரிவு செய்த வரியை (total tax) அடந்தேற்றம் என்று (அடந்து தெரிந்தது) சொல்லும் பழக்கமும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. இன்றைக்கு மொத்தவரி என்றே சொல்லி விடுகிறோம்.

"வந்து சேர்ந்தது" என்பதை அடைதல் என்று சொல்லுகிறோம். அடைதலின் பிறவினையாய் அடைச்சுதல் - சேர்ப்பித்தல் என்பதும் சொல்லாட்சி கொண்டிருக்கிறது. வேறு பெயரில் அழைக்காமல், கடலை அடையும் ஒரு குறு ஆற்றை அடையாறு என்றே இங்கு சென்னையில் அழைக்கிறோம். அடைத்தல் என்பது நியமித்தல், விதித்தல் என்ற பொருளும் கொள்ளும். அடைமானம் என்ற சொல் வாங்கிய கடனுக்கு மாறாக நியமித்தது, விதித்தது என்றே பொருள் கொள்ளும். பல பருப்புக்களையும் அரிசியையும் சேர்த்து அரைத்து மாவாக்கிச் சுடும் பண்டத்திற்கு அடை என்றே பெயர் உண்டு. (சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களில் பெரிதும் விரும்பப் படும் காலை உணவு. "எங்கோ ஒரு ஒழுக்கு (leak) ஏற்படுகிறது, அந்த ஒழுக்கை அடைக்கிறோம். அது அடைப்பு என்று ஆகிறது". மூடுதல், பொருத்துதல் என்ற பொருளும் வந்து சேர்கிறது.

அடைதலின் இன்னொரு திரிவாய் அடைசுதல் என்ற சொல் நெருங்குதல், அளவுக்கு அதிகமாகச் சேர்தல், பொருந்துதல் என்ற பொருட்பாடுகளில் ஆளப்பட்டிருக்கிறது. "என்ன இது, வீடெல்லாம் ஒரே அடைசலாய்க் கிடக்கிறது?" என்பது சிவகங்கை வழக்கு. நாட்டியத்தில் காட்டும் வெவ்வேறு கைப்பொருத்துகளை, அடைவு என்றே சொல்லுகிறோம். சிலபோது இது அடவு என்றும் எழுதப் படுகிறது. அடவுகள் தெரியாமல் நாட்டியம் கற்க முடியாது. இப்படி, வெவ்வேறு பொருத்தங்கள், விதவிதமாய் அமைவதால் (arrangement) அடவு என்ற சொல்லையே இன்று design என்ற சொல்லிற்கு இணையாய்ப் பொறியியலில் பயன்படுத்துகிறோம்." மேலை மொழியிலும் arrangement என்ற கருத்துத் தான் design என்ற சொல் எழக் காரணமாய் இருந்தது. இளமைக் காலத்தில், நான் ஒரு அடவுப் பொறிஞனாய் இருந்தேன் - I was a design engineer in my younger days".

முன்னே சொன்னது போல் டகரவொலி தகரமாய்த் திரிவது தமிழில் உள்ள பழக்கம்; குறிப்பாக வடபுலத்தில் இது இன்னும் விரிவான பழக்கம். இரண்டு துண்டை ஒன்றாய்ப் பொருத்தித் தைத்தலை அத்துதல் என்று வின்சுலோ அகரமுதலி குறிக்கும். "அத்தும் பொல்லமும் தைத்தல் துன்னம்" என்று பிங்கலம் 2302 குறிக்கும். அத்து என்ற சாரியை கூட சேர்ந்த என்ற பொருளைத் தமிழில் குறிக்கும். "காமத்துப் பகை" (குறுந்: 257) "அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்" (சில. 4, 3) போன்ற சொல்லாட்சிகள் தமிழில் கணக்கற்று உண்டு. "வானம் என்பதைச் சேர்ந்த அணி நிலா" என்ற கருத்தை ஆழ்ந்து புரிந்து கொண்டால் அத்து என்பது எவ்வளவு தூரம் தமிழ் வழக்கைச் சேர்ந்தது என்பது புரியும். "அந்தத் தோட்டத்து மாம்பழம்" என்னும் போது, தோட்டமும் மாம்பழமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவை என்பது புலப்படும். ஆங்கிலத்தில் and என்று சொல்லுவதும் add என்று சொல்லுவதும் ஒரே பொருள் தான். மற்ற மேலை மொழிகளிலும் இது போன்ற சொல்லிணையைக் காண முடியும். இங்கும் தமிழில் அதே பொருள் அடுத்தல் / அத்து என்பதில் வருவதை எண்ணிப் பாருங்கள்.

இனி இரு பிறப்பியாய் அத்தியந்தம் என்ற சொல் "முற்று முழுமையாக, மிகவும்" என்ற பொருட்பாடுகளைக் காட்டும். அத்தித்தல்>அதித்தல் என்பது சிறத்தல், மிகுதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். அதிகம் என்ற பெயர்ச்சொல் மிகுதி என்ற பொருளைச் சுட்டும். காளமேகப் புலவரின் வேடிக்கையான பாட்டு அதிகம் என்ற சொல்லை ஆளும் விதத்தைப் படியுங்கள்.

கண்ணபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்
உன்னிலுமோ யான் அதிகம் ஒன்றுகேள் - முன்னமே
உன்பிறப்போ பத்தாம் உயர்சிவனுக்கு ஒன்றுமிலை
என்பிறப்பெண் ணத்தொலையா தே.

அதி என்ற முன்னொட்டு மிகுதி, அப்பால், மேல், மேன்மை என்பவற்றை உணர்த்தி வடமொழியில் பயிலும். நான் அறிந்தவரை பாணினியின் தாதுபாடத்தில் அதி என்பதற்கு எந்த வேர்ச்சொல்லையும் காட்டவில்லை. மோனியர் வில்லியம்சே கூட, இதை முன்னொட்டு என்று சொல்லி, அதன் ஊற்றுகை (origin) ஏதென்று சொல்லுவதில்லை. (ஆனாலும் அதிர்ஷ்டம் என்ற வடமொழித் தோற்றம் கொண்ட சொல்லை வடமொழிச் சொல் என்றே பலரும் எழுதி வருகிறார்கள். எனக்குப் புரியவில்லை. நான் எதைக் கவனிக்க மறந்தேன் என்று அறிந்தவர்கள் கூறினால் திருத்திக் கொள்ளுவேன். (பல சொற்களை இது போல வெறும் நம்பிக்கையில் வடமொழி என்று சொல்லும் பழக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதிர்ஷ்டம் என்ற தோற்றத்தைக் கண்டு மருண்டு போனால் எப்படி? உண்மையில் அதிட்டியது அதிட்டு>அதிட்டம். இருட்டியது இருட்டைப் போல் என்று புரிந்து கொள்ளுங்கள். அதிட்டம் என்பது வடமொழியிற் போகும் போது, அதிஷ்டம்>அதிர்ஷ்டம் என்று பலுக்கப்படும் ஒரே காரணத்தால் அது வடமொழியாகி விடாது.) குறளுக்கு உரைசொன்ன பரிமேலழகர் "அதி என்பது மிகுதிப் பொருளதோர் வடமொழி இடைச்சொல்" என்று சொன்னதால் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டுமா, என்ன?

அதிகத்திற்கு இன்னொரு வலுவான பொருள் உண்டு. "அதிகம்...... பொலிவின் பெயரெனப் புகன்றனர்" என்று திவாகரம் 1672 பயிலும். பொலிவு என்பது சற்று வெளிறிய மஞ்சள் ஓடிய, பொன் நிறம். பொலிவு - அதிகம் நிறைந்தவன் அதிகன்>அதியன். அதிகனின் மகன் அதிகமான்.

தமிழ் மூவேந்தர் மூவரும் அவர்களின் குடியினர் பூசிக் கொண்ட நிறங்களாலே அறியப் பெற்றிருக்கிறார்கள். (அவர்களின் இயற்கை நிறம் கருப்புத் தான்.) தமிழரின் நெடுநாளைய உறவினரான ஆத்திரேலியப் பழங்குடியினரும் அவர்கள் பூசிக் கொள்ளும் நிறங்களினால், அவர்கள் சூடிக் கொள்ளும் அடையாளங்களினால் அறியப் படுகிறார்கள். சாம்பல் (=பாண்டு. பால் நிறம் பாண்டு.) பூசியவர் பாண்டியர் (தமிழரின் திருநீற்றுப் பழக்கம் இந்தக் குடியிடம் இருந்து வந்திருக்கலாம்.)

மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் பூசியவர் கோழியர் (=சோழியர்). குங்குமச் செந்தூரம் இன்றும் தமிழரிடம் விரவிக் கிடக்கிறது.

சார்ந்தது சார்ந்தனம்>சந்தனம். சார கந்தகம் என்பதும் சந்தனத்தையே குறிக்கும். சாரம் = சந்தனம்; சாரத்தில் சகரம் குறைந்த சொல்லான ஆரமும் சந்தனத்தையே குறிக்கும் சாரர்>சேரர் என்போர் சந்தனம் பூசிய இனக்குழுக்கள் ஆவர். இன்றைக்கும் மலையாளத்தில் சந்தனத்தின் முகன்மை புலப்படும்.

திருநீறு, குங்குமம், சந்தனம் எனப் பலவும் விலங்காண்டி நிலையில் வெவ்வேறு தமிழ் இனக்குழுவினர் அணிந்திருந்த இனவேறுபாட்டு அடையாளங்களே.

அதே நோக்கில் மஞ்சள் - பொன் - பொலிவு - நிறம் அணிந்திருந்த இனக்குழுவினர் அதிகர் என்ற இனக்குழுவாய் இருந்திருக்கலாம். மோரியர் காலத்திருந்தே மூவேந்தரோடு அதிகர் ஒருங்கு வைத்து எண்ணப் பட்டதும் இங்கு ஓர்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. அதிகம் என்ற சொல்லின் தமிழ்மை நன்கு புலப்படும்.

அதிகாலை என்ற சொல் காலைக்கு முந்திய பருவத்தைக் குறிப்பதையும் எண்ணிப் பார்த்தால் அதித்தல் என்ற வினைச்சொல்லின் ஆழம் புரியும். அதித்த நிலையை உருவாக்குதலை அதிகரித்தல் என்று சொல்லுவதும் சேர்ந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும். அன்றாட நிலைக்கு மேற்பட்டு அதிகம் செய்தது அதிசெய்யம்>அதிசயம் என்றே ஆகி வியப்பு, சிறப்பு என்ற சொற்களைக் குறிப்பது அதி என்ற முன்னொட்டோ டு சேர்ந்தது தான்.

நான் புரிந்து கொண்டவரை அதிட்டம் என்பது பெரும்பாலும் தமிழாய் இருக்கவே வாய்ப்பு உண்டு. அதற்கான முகன்மையான குறிப்புக்கள் அத்து என்ற சாரியைப் பொருள், அடுத்தல் என்ற வினைச்சொல், அதிகன் என்ற குடியினரின் பெயர் ஆகியவை ஆகும்.

அன்புடன்,
இராம.கி.

(luck என்ற ஆங்கிலச் சொல்லைப் பற்றி இங்கு பேசுவதைத் தவிர்க்கிறேன். அதற்கும், அதை ஒட்டிய மேலைச் சொற்களுக்கும் ஊற்றுகை தெரியாதென்றே அகரமுதலிகள் குறிக்கின்றன. ஊழைப் பற்றிப் பேசும்போது அதைப் பார்க்கலாம்.)

Friday, March 02, 2007

அயிரை மேட்டில் ஓரிரவு

சந்த வசந்தம் மடற்குழுவில் அவ்வப்போது நான் எழுதி வந்த பாடல்கள் "காணவொரு காலம் வருமோ" என்ற தலைப்பில் ஒரு பதிகமாய்க் கிளைத்தன. கவிமாமணி இலந்தையார் "இதைத் தொகுத்து ஒரு மின் பொத்தகமாய்ப் போடலாம்" என்று சொன்னார். இங்கு வலைப்பதிவிலும் முன்பு போட்டிருந்தேன். நாளைக்கு மாசி மகம் பூரணை; கண்ணபுரத்தான் திருமலைராயன் பட்டினம் போய்ச் சேரும் நாள். "தீர்த்த வாரி" என்று அங்கு சொல்லுவார்கள். பதிகத்தின் இரண்டாம் பாட்டு, காரழகுத் திருமேனியின் அயிரை மேட்டு நிகழ்வை அப்படியே நினைவு கூர்கிறது. உங்கள் வாசிப்புக்கு.

அன்புடன்,
இராம.கி.

2. அயிரை மேட்டில் ஓரிரவு

வரையாத அழகோடு, வடிவான உருவோடு,
வலையரின் பத்து மினியாள்;
வளையாத வில்லையும், வகிடாத வாளையும்,
பழிக்கின்ற புருவ எழிலாள்;
புரையாத திருமகளின் தோற்றரவில் முன்ஒருநாள்
புலம்காட்டி நின்ற போது,
புல்லியே வதுவையுறப் போனதை இன்றளவும்
புவனத்தில் யாரும் அறிய,
நுரையோடு திரைஓங்கும் திருமலையின் பட்டினத்தில்
நுளையோரின் மருக னாக,
நுண்அயிரை மேட்டிலே இரவெலாம் களிப்பதை,
நோக்குநாள் எந்த நாளோ?
கரையோடு ஊர்உலவும் காரழகுத் திருமேனி
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!


இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம் உண்டு. இந்தத் தோற்றரவில் (அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. கண்ணபுரம் மாசித் திருவிழாவின் ஒரு நிகழ்வாய், பெருமாள் பத்மினி நாச்சியாரைக் கைப் பிடிக்கும் விழா நடக்கிறது. பெருமாளுக்குச் சரம் (கைலி) கட்டி மீனவனாய் மாற்றி, ஊருலவுத் திருமேனி (உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாபம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாய் இருப்பது வழக்கம். "எங்கள் மாப்பிள்ளை, எங்கள் மாப்பிள்ளை" என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது, சில காலம் முன்பு வரை இருந்திருக்கிறது.

பூதேவி சீதையாகவும் ஆண்டாளாகவும் பிறந்த தோற்றரவுகள் (அவதாரங்கள்) பலரும் அறிந்தது போல், சீதேவியின் தோற்றரவுகள் பலராலும் அறியப்படுவதில்லை. புரைதல் = ஒப்புதல், பொருந்துதல்; புரையாத திருமகள் = ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்; கரையோடு ஊருலவும் திருமேனி = கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.