Wednesday, October 27, 2021

பரமக்குடி

ஒரு சமயம் பரமக்குடியும், வேலிக்கருவஞ் செடியை எரிப்பதால் கிடைக்கும் பணம் பற்றிய பேச்சு இணையத்தில் எழுந்தது. வேறு ஊராய் இருந்தால் நான் படித்துவிட்டு நகர்ந்திருப்பேன். பரமக்குடி எங்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு அடுத்துள்ளது. விட்டு நகர மனமில்லை. பரமக்குடிக்குப் பரம்பைக்குடி என்ற பெயர் ஒரு காலத்தில் இருந்திருக்குமென்று சிலர் சொல்வார். பரம்பை என்பது வன்னி மரமே. வன்னி என்பது மரத்தின் வன்மை (வலிமை) கருதி ஏற்பட்ட பெயர் (வன்>வன்னி = hard wood). வீட்டு நிலைகளை வைக்க வேண்டுமானால் வன்னி மரத்தைத் தச்சு வேலைக்குப் பயன்படுத்துவர். அவ்வளவு வலிமை யானது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரம். இதைப்பற்றி இராசத்தானில் பல கதைகள் உண்டு. அவற்றை இணையத்திற் படிக்கலாம். பஞ்ச காலத்தில் ஒன்றுங் கிடைக்கா நிலையில் வன்னிப் பழங்களை உண்டு பசியாறுவாராம். 

வன்னிமரம் சிவநெறியில் பெரிதாகவே கருதப்பட்டது. வன்னிமரம் சான்றுக்கு வந்ததிலிருந்து பல கதைகள் அதற்குச் சொல்லப் படுகின்றன. அகத்தியான் பள்ளி (அகஸ்தியர்கோயில்), அரதைப் பெரும்பாழி (அரித்துவார மங்கலம்), திருவாமாத்தூர் (ஆமாத்தூர்), திரு ஈங்கோய்மலை, திருக்காட்டூர் (கோட்டூர்), திருச்செம்பொன்பள்ளி, திருப்பட்டீசுவரம், பச்சிலாசிரமம் (திருவாசி), பந்திக் கொடுமுடி, திருவான்மியூர், திருப்பேணுப் பெருந்துறை (திருப்பந்துறை), திருப் பாம்புரம், திருமறைக்காடு (வேதாரண்யம்), திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), குமாரவயலூர் (வயலூர்), திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர் (ஆண்டான் கோவில்), திருக்காட்டுப்பள்ளி, திருத்தளிச்சேரி (காரைக்கோவில் பத்து), திருக்கொள்ளிக்காடு (கோவிலடி), திருப்பூந்துருத்தி (மேலப்பூந்துருத்தி), திருப்பெருவேள் (மணக்கால் அய்யம்பேட்டை), திருவன்னியூர் (அன்னியூர்), திருமுண்டீச்சுரம் (கிராமம்), திருவாடானை, திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி), திருமணஞ்சேரி என 26 தலங்களில் வன்னியே தலமரம். இதில் கடுவாய், கொள்ளி என்பதுங் கூட வன்னியைக் குறிக்கலாமென்று எண்ணத் தோன்றுகிறது. 

பரம்பு/பரம்பை என்பது வன்னிமரத்திற்கு நிலத்தால் ஏற்பட்ட பெயர். பரம்பு நில மரம். இது பரவுவதால் ஏற்பட்ட பெயரல்ல. எத்தனையோ மரங்கள் பரவுகின்றன. வேறு விதப்பான காரணம் உண்டு. இன்றைக்கும் பரமக்குடியில் உள்ள வேளாண் ஆய்வுநிலைய வெளியீடுகளை இணையத்தின் வழி பாருங்கள்.        

Agricultural Research Station, Paramakudi is located in the southern bank of the river, Vaigai on Madurai - Rameswaram National Highway. In 1952, it was established as Research station under State Department of Agriculture. Then, it was recognized as Paddy research Sub-center from 1952 to 1958. Later it was changed as State Seed Farm from 1958 to 1978. Again it was renamed as Multi-Crop experiment sub-station from 1978 to 1981.  Finally it was established as Agricultural Research Station under Tamilnadu Agricultural University from 1981 onwards.

Agricultural Research Station, Paramakudi represents rainfed tracts of Ramnad and Sivagangai districts of Tamilnadu. The extent of the experimental farm is about 9.36 ha, which is located at latitude of 9° 21’N and longitude of 78° 22’E and an altitude of 39.83 m MSL. Annual average rainfall is 740 mm of which 60 per cent is received from Northeast monsoon. Soil type is clay loam low in available nitrogen, medium to high phosphorus and potassium. The organic matter content of the soil is very low. Soil is slightly saline with a pH of 8.0

இங்கிருக்கும் மண் 55% களி (clay), 30% களிச்சேறும் (loam) மணலும் (sand) கலந்த கலவை, 15% ஆற்று வண்டல் (river alluvial) சேர்ந்தது. நீர்வற்றிய நிலையில் இங்குள்ள களிப் பாங்கான கருமண் சென்ற ஆண்டிருந்த நீரோட்டத்தால் சிறுசிறு உருளைகளாய்த் திரண்டு கட்டிபட்டுக் கிடக்கும். ஈரச்சத்து அடிப்படையில் இல்லாததால் இந்த நிலத்தை உழுதாலும் புழுதி பறக்கும். இந்தச் சிறு உருளைக் கற்கள் பரபர/ பொருபொரு என பரலாய்க் (granule) பெரும்பிக் கிடக்கும் போது அதன் மேல் நடந்தால் சிறுமுட்களால் குத்துவது போல உணர்ச்சி எடுக்கும். வைகையாற்றில் எப்பொழுதெல்லாம் நீரோடுகிறதோ அப்போது மட்டுமே இந்நிலம் ஈரங் கொள்ளும். இதன் அயனிச் செறிவு 8 என்பதால் நெல் விளைச்சலும் குறைவே. வறண்ட நிலங்களில் பரம்பு நிலம் என்பது இன்னொரு வகை. இவ்வூரின் கிழக்கே பெரும்பச் சேரி எனும் சிற்றூருண்டு. ஆழ்ந்துபார்த்தால் பரம்பச்சேரி> பெரும்பச்சேரியின் பொருள் புரியும். 

பரம்பைக் குடி எப்படிப் பரமக் குடியானது என்பதற்கு வரலாற்றினுள் போக வேண்டும். பின்னாள் பாண்டியாரில் 12 ஆம் நூற்றாண்டிற் பங்காளிச் சண்டை ஏற்பட்ட போது ஒரு சக்களத்தி மகன் சோழர் ஆதரவில் மதுரையைப் பிடித்துக் கொண்டதால், மூத்தாள்மகன் தன் மாமனான சிங்கள பராக்கிரம பாகுவைச் சரணடைந்தான். அவன் ஒரு தண்டல்நாயகனை அனுப்பி வைத்து மதுரைப் பாண்டியனைத் தோற்கடித்துத் தன் மருமகனைப் பட்டத்தில் ஏற்றினான். (பாண்டியருக்கும் சிங்களருக்குமான உறவு பல்லாண்டுக் கதை. அதைப் பேசினால் மாளாது. அதனாற்றான் தமிழ் ஈழத்தார் “விடுதலைப் புலி” என்றார். பாண்டியரின் நெருக்கமே வேண்டாம் என்ற நினைப்போ என்னவோ?) பராக்கிரம பாகுவின் தண்டல் நாயகன் தங்கியிருந்தது இந்த ஊர். தன் அரசன் பெயரால் இவ்வூரைப் பாராக்கிரமக் குடியாக்கினான். அது பராகமக் குடியாகிப் பரமக் குடியாயிற்று. ஆகச் சிங்களன் ஒருவன் இப்பகுதியைப் பல்லாண்டுகள் ஆண்டிருக்கிறான். அச் செய்தியை இன்னும் இப்பெயரால் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். மாறாகப் பரம்பைக் குடி என்றே பழைய பெயருக்குப் போகலாம்.

இப்பொழுதெல்லாம் வன்னியை எங்கே கண்டு கொள்கிறார்? எல்லாம் பாழாய்ப் போன வேலிகாத்தான் எனும் சீமைக் கருவேலந் தான். அதை வயல்களில் வளர விட்டு வெட்டிப் பின் குவித்து மூட்டம் போட்டு கரியாக்கி வெட்டி வட மாநிலங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். பரமக்குடிக்கு அருகிலுள்ள பார்த்திபனூரிலிருந்து நாளொன்றைக்கு ஒரு சரக்குத் தொடரி கிளம்பிய காலமும் உண்டென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தவிர சிறு சிறு வேலைக்கருவங் குச்சிகளை வைத்து எரித்துச் செங்கற் சூளையில் செங்கல் உருவாக்குவதற்கு அருகிலுள்ள கண்மாய்களில் கிடந்த வண்டல், களி மண்ணைத் திருடி ஏராளமானவர் பணக்காரர் ஆகி விட்டார். கொஞ்ச நஞ்ச ஈரமும் பாழானது. வறண்ட மாவட்டம் என்று posting போட்டு வரும் அரசதிகாரிகள் பலர் இதிலிறங்கி ஓராண்டில் பணஞ் சம்பாரித்து ஊர் திரும்புகிறார். ஆக வன்னியிலும் கோரமான முறையில் வளம் பிறக்கிறது. காலம் கலிகாலம் அல்லவா?      

அன்புடன்,

இராம.கி.

No comments: