Friday, May 16, 2008

ஔ - 4

18, அடுத்தது ஒளபாசனம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல். ஒருகாலத்தில் இல்லறத்தில் ஈடுபட்டுள்ள எல்லாப் பெருமானரும் தங்கள் வீட்டில் வேள்வித் தீ வளர்த்தே ஆகவேண்டும்; அவர்கள் வீட்டு அடுப்பாங்கரையில் கங்கு கனன்று கொண்டே இருக்கும். இப்பொழுது, இதையெல்லாம் பின்பற்றுபவர்கள் அரிதிலும் அரிது.

வேள்வித் தீயைக் காப்பாற்றுதலை தீ ஓம்புதல் என்று தமிழில் சொல்லுவார்கள். ஓம்பாயனம் என்பது தமிழ்வினையைச் சங்கத ஈறு கொண்டு முடிக்கும் ஒரு பெயர்ச்சொல். காப்பற்றுதல் என்ற தொழிற்பெயரை உணர்த்தும். ஓம்பாயனம்>ஓம்பாசனம் ஆகி பெரும்பாலான தமிழர்கள் மெல்லின ஓசையை அவ்வப்போது பேச்சுவழக்கில் ஒலிக்காமற் போவது போல, ஓம்பாசனம்>ஓபாசனம் ஆகிப் பின் மேலும் திரிந்து ஔபாசனம் ஆகும். [தமிழ் ஓதியை வலிந்து மறுக்கும் ஹோத்ரிக்காரர்கள் இந்த ஓம்புதல் - ஔபாசனத்தை மறுக்கப் போகிறார்களா? தமிழ்வேரை இப்படி மறுத்துக் கொண்டே போனால், அப்புறம் வேள்வியை ஒட்டிய பல வடசொற்களின் சொற்பிறப்பையும் மறுக்க வேண்டும். தாத்தனைப் பேரனாக்கும் முயற்சியை என்று கைவிடுகிறார்களோ, அன்று தான் வடமொழிக் குழப்பத்திற்கு முடிவு காண முடியும்.]

19. அடுத்தது இரண்டு சொற்கள் ஒளரசன், ஒளரதன் - உரிமை மகன்; கணவனுக்குப் பிறந்த மகன். உள்ளே இருக்கும் தமிழ் வேர் உள் என்பது தான். இதற்கென்று உள்ளவன் உரியான், உரியன், உரிதன், உரயன், உரதன். உரிமைப் பொருள் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. உரயன்>உரசன்>ஔரசன், உரதன்>ஔரதன்.

20. அடுத்த சொல் ஒளரப்பிரகம். இங்கே ஒருவப் பெருகம் என்பது தன் உருமாற்றிக் காட்சியளிக்கிறது. 'ஒரு' என்பதைச் செம்மறியாடு என்று பிங்கல நிகண்டு குறிக்கும். பெருகம் என்பது மந்தையைக் குறிக்கிறது. ஒரு என்னும் சொல் ஒருவம் ஆகி பின் ஒருவப் பெருகம்>ஔரப்ரஹம் ஆகி ஆட்டுமந்தையைக் குறிக்கும்.

21. அடுத்தது ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன். ஊற்று நீரை, ஊற்று என்றாலே அந்தக் காலத் தமிழில் அமையும் என்று முன்னே உதம் பற்றிச் சொல்லும் போது பார்த்தோம். ஊறுவது ஊறுவம். இனி ஏதோவொன்றை அடையும் விதமாகத் தன்னை வதைத்துக் கொள்ளுபவன் (தனக்குத் தானே வதம் செய்து கொள்ளுபவன்) வதி. வடமொழி வாய்பாட்டில் வதி வ்ரதி ஆகும், வதம் வ்ரதம் ஆகும். நாம் மீண்டும் அதைக் கடன் வாங்கி விரதி, விரதம் என்று சொல்லிக் கொள்ளுவோம்; நம்முடைய தமிழ்ச்சொற்களான வதை, வதி, வதம் ஆகியவற்றை விட்டுவிடுவோம். [இந்த அடிமைத் தனம் என்று போகும்?] ஊறுவ வதி >ஊருவ வதி>ஊருவ வ்ரதி>ஔரவ வ்ரதி என்ற வளர்ச்சி, கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் புரிந்து போய்விடும்.

22. ஒளலியா - இசுலாமிய அடியார்கள். இதை விளக்க அரபு மொழிக்குப் போகவேண்டும். அதைச் செய்யாமல் தவிர்க்கிறேன். இசுலாமிய அடியார் என்றே சொல்லலாம்.

23. அடுத்தது ஔவியம். இந்தச் சொல்லைப் பற்றிய விளக்கமே, என்னை ஔ என்னும் பதிவுத் தொடரை எழுத வைத்தது.

ஔவியம் என்பது அவ்வியத்தின் போலி. இந்தப் பெயர்ச்சொல்லின் செயல்வினை (active voice) அவ்வுதல் என்றும், செயப்பாட்டு வினை (passive voice) அவ்வித்தல் என்றும் ஆகும். அதாவது, அவ்வியது அவ்வியம்>ஔவியம் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "திருக்குறள் மெய்ப்பொருளுரை"க் கூற்றுப்படி, சங்க இலக்கியத்தில் ஆவணப் படாத இந்த 'அவ்வியம்' திருக்குறள் 167, 169 பாக்களிற் தான் முதன்முதலில் ஆவணப் பட்டிருக்கிறது. பின்னால் "ஔவியம் பேசேல்" என ஆத்திச்சூடியிலும், "ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு" என்று கொன்றை வேந்தனிலும் சொல்லப் பட்டிருக்கிறது.

அவ்வியம் என்ற சொல்லாட்சி குறளில் இருக்க, ஆத்திச்சூடியிலும் கொன்றைவேந்தனிலும் ஔவியம் என்றே பயிலப் படுகிறது. எனவே, 12 ஆம் நூற்றாண்டிற்கு அருகாமையில் 'அவ்'விலிருந்து ஔகாரப் போலி ஏற்பட்டிருக்கலாம். [அவ்வையார் என ஐந்து பேர் வெவ்வேறு காலங்களில் இருந்ததாகத் தமிழறிஞர் சொல்லுவார்கள்.] சிலம்பின் அடைக்கலக் காதை 122 ஆம் அடிக்கான அடியார்க்கு நல்லார் உரையிலும் கூடச் செவ்வியள் என்பவள் "ஔவியம் இல்லாள்" என்று சொல்லப் பட்டிருக்கும். [அடியார்க்கு நல்லாரின் காலத்தையும் 12 ஆம் நூற்றாண்டிற்கு அண்மையாகவே சொல்லுவார்கள்.] பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலும் [18 ஆம் நூற்றாண்டு] ஔவியம் என்ற சொல்லாட்சி இருப்பதாகத் தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக் கழகப் பெருஞ்சொல்லகராதியில் குறிப்பிட்டிருக்கிறார்கள்; ஆனால் அதன் மூலத்தில் என்னால் இப்பொழுது கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னால் தேட வேண்டும்.

அவ்வியச் சொல் வரும் குறள் அதிகாரத்தின் தலைப்பு அழுக்காறாமை. அதன் பொருள் தெரிந்தால் தான், அவ்வுதலின் பொருளைத் தேடுவது எளிதாக அமையும்.

ஆறுதல் என்பது வழிப் படுதலைக் குறிக்கும். [குறிஞ்சி, முல்லை நிலங்களை பழங்காலத் தமிழ்மாந்தன் கடக்க, ஆறுகளே வழி காட்டின. அதனால் ஆறு என்பதற்கு வழி என்ற பொருளும் தமிழில் உண்டு. ]

அழுக்கு என்பதைப் பலரும் மாசோடு (dirt) தொடர்பு படுத்துவார்கள். மாசு என்பது ஒரு வழிநிலைப் பொருள்; முதல்நிலைப் பொருள் அல்ல. இந்தச் சொல்லின் பொருள் புரிய வேறுவகையில் அணுக வேண்டும்.

அழுத்துதல் என்றவொரு பிறவினையை இன்றைக்குப் பயில்கிறோமே, அதை எப்படிப் புரிந்து கொள்ளுகிறோம்? காட்டாக, A என்னும் பொதி (body) B - என்னும் பொதியை அழுத்துகிறது; இதை B -யின் நோக்கில், தன்வினையாய், எப்படிச் சொல்லலாம்? B, A - ஆல் அழுங்குகிறது. அழுங்குதல் என்பது தன் வினை; அழுத்துதல் என்பது பிறவினை. ஒரு பொதி அழுங்க, அழுங்க, அதன் மேல் அழுத்தம் கூடிக் கொண்டேயிருக்கிறது என்று பொருள். அழுங்குவதால் அது அழுக்கு; அழுத்துவதால் அழுத்து. [அழுங்குதல் வினை தற்பொழுது மிக அரிதாகவே பயன்படுகிறது.]

அழுத்துதல் என்பது to press என்றே இந்தக் காலத்தில் புரிந்து கொள்ளப் படுகிறது. அதைப் பொதுமைப் படுத்தி, அறிவியல் மற்றும் பொறியியலில் 'அணுக்களை நெருங்கவைத்தல்' என்னும் ஆழ்பொருளில் துறுத்தல் என்னும் வினை ஆளப்படும். இது ஆங்கிலத்தில் உள்ள to stress என்ற வினைச்சொல்லிற்கு இணையானது. துறுத்தலுக்கு மாறாய் தகைத்தல் என்றும் சிலர் ஆளுகிறார்கள். [தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலச் சொல் அகரமுதலியிலும் 'தகைத்தல்' இருக்கிறது. இருந்தாலும், to tighten என்பதற்கே தகைத்தல் சரியாகும் என்பதாலும், ஐகாரம் பயிலும் தகைப்பைக் காட்டிலும், உகரம் பயிலும் துறுத்து பலுக்க எளிதாய் இருக்கும் என்பதாலும் நான் அதையே பரிந்துரைக்கிறேன். துறுத்திற்கு மாறாய் தகைப்பு நிலைத்தாலும், எனக்கு உகப்பே.]

அழுத்தப் பட்ட பொதி அழுங்குவதைப் போலத் துறுத்தப் பட்ட பொதியும் துறுங்கும் (to get strained). மூன்று விதமான துறுத்தங்களை, மாகனவியல் - mechanics - குறிக்கும். அவை திணிசுத் துறுத்தம் - tensile stress, அமுக்கத் துறுத்தம் - compressive stress, கத்தரித் துறுத்தம் = shear stress என்றாகும். அதே போல, நீளவாட்டுத் துறுங்கு [longitudinal strain; இதை மாகனவியலில் கணக்கிடும் முறையில் ஒருசில வரையறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். to stretch என்பதைக் குறிக்கத் துயக்குதல் என்ற சொல் பயின்று, நீளுதல் பொருளைக் கொடுக்கும். ஒரு நீளத்தின் துயக்கத் திரிவை (change in the stetch) நீளத்தால் வகுத்தால் கிடைக்கும் எண், நீளவாட்டுத் துறுங்கு என்று சொல்லப் படும்.], பருமத் துறுங்கு (bulk strain = பருமத் திரிவு / பருமன்), கத்தரித் துறுங்கு [shear strain = குறுக்குச் செகுத்தத் திரிவு (change in cross section) / குறுக்குச் செகுத்தம்(cross section)] என்ற மூன்று விதமான துறுங்குகளையும் மாகனவியல் பேசும்.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் வரை (இதை இளகு எல்லை - elastic limit என்று சொல்லுவார்கள்) துறுத்தமும் (stress) துறுங்கும் (strain) நேர் வீதத்தில் (direct proportion) தம்மிடையே உறவு கொள்ளும் (இந்த நேர் வீதத்தை இளகுமை - elasticity, அல்லது இளகுக் குணகம் - elastic coefficient என்று சொல்லுவார்கள்). அழுக்கு ஆறுதல் என்பது to get strained. அழுக்காறு என்பது strained state.

அழுக்காற்றின் இயற்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றிலும் இருக்கும் மனச் சூழமைவு நமக்குள் ஓர் அழுத்தத்தை தொடர்ச்சியாய் ஏற்படுத்துகிறது. அதனால் நாம் அழுங்குகிறோம். நமக்குள் அழுக்காறு கூடுகிறது அல்லது குறைகிறது. அழுக்காறு என்பதை முற்றிலும் தவிர்த்தவர் இவ்வுலகில் யாருமில்லை; ஆனால் அதைக் கூட்டுவதும், குறைப்பதும், நம் கையில் இருக்கிறது. பொதுவாய்ப் பல உரைகாரரும், பல அகரமுதலியர்களும் அழுக்காற்றைப் பொறாமை என்றே சொல்லுகிறார்கள்.

அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

என்ற 35- ஆம் குறளில் வரும் அழுக்காறு பொறாமையைக் குறிக்கிறது என்று பரிமேலகர் கூடச் சொல்லுவார். இந்தக் கருத்தோடு நான் மாறுபடுகிறேன். என் கேள்வி: அழுக்காற்றைப் பொறாமை என்றால், அப்புறம் அழுக்காறாமை என்பது என்ன? அழுக்காறாமை என்ற ஓர் அதிகாரமே குறளில் இருக்கிறதே? இரண்டும் ஒரே பொருளைக் குறிக்க முடியுமா?

ஓர்ந்து பார்த்தால், அழுக்காறு என்பது நாம் தொடர்ச்சியாய் அழுங்கிக் கிடக்கும் நிலை. அழுக்கின் வழி. "ஏதோ ஒரு விசை நம் மனத்தை அழுத்துவதால் ஏற்படும் அழுக்கு, தொடர்ச்சியாய்க் குறையாது நம்மிடம் இருக்குமானால், நம்மை அது அறம் செய்யவிடாது" என்றே 35 ஆம் குறளுக்கு நான் பொருள் கொள்ளுகிறேன். [அப்படி அழுக்கைக் குறைக்க ஒரு வழி, நம் மனப் பரப்பை விரித்துக் கொள்வதாகும். இதை விரிவாகக் கீழே பார்ப்போம்.]

அழுக்காறு mentally strained state என்றானால், அழுக்கு ஆறாமை என்பது என்ன என்பது அடுத்த கேள்வி. நாம் காணும் திண்மப் பொதிகளின் (solid bodies) துறுத்தம்-துறுங்கின் நடவுகையில் (stress-strain behaviour) இந்த இளகு எல்லை என்பது முகன்மையானது. அதாவது, எல்லையற்ற வகையில் எந்தவொரு பொதியும், துறுத்தத்தை (அழுத்தத்தை) ஏற்று துறுங்கிக் (அழுங்கிக்) கொண்டே இருக்காது. ஏதோ ஒரு எல்லையில் அதன் பொறுக்கும் கொண்மை (bearing capacity) மீறி, அதாவது பொறாது, தானே் சிதைந்து போகும். அந்த அழுக்கு ஆறா எல்லையைத் தான் அழுக்கு ஆறாமை என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்; (அதாவது the state of being unable to withstand or bear the stress). இதை வேறுவிதமாய்த் தமிழிற் சொன்னால் பொறாமை.

பொறுமையின் எதிர்ச்சொல் பொறாமை. ஆக, பொறாமை / அழுக்காறாமை என்பது ஓர் இளகு எல்லையைக் குறிக்கிறது. அழுக்காறு = mental strain அழுக்காறாமை = limit to the mental strain. திருக்குறளில் பயிலும் இந்தக் கலைச் சொற்கள் மனவியற் (psychology) பொருளையே கொண்டாலும், ஒப்பான முறையில் மாகனவியலிலும் - mechanics தம் நடைமுறை கொள்ளுகின்றன.

இனி அவ்வியம் என்பதற்கும் கூடப் பொறாமை, அதாவது பொறுக்காத தன்மை என்றே பலரும் பொருட்பாடு காட்டுவார்கள் [காட்டாகப் பரிமேலழகர், பாவாணர்]. என் கேள்வி: அழுக்காறு, அழுக்காறாமை, அவ்வியம் என மூன்றிற்கும் ஒரே பொருள் சொல்லுவது எந்த விதத்தில் சரி?. மற்ற உரைகாரர்களுக்கு மாறாகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தன்னுடைய 'திருக்குறள் மெய்ப்பொருளுரையில்' அவ்வுதல் என்பதற்குச் சுருங்குதல், குறுகுதல் என்ற பொருளைச் சொல்லுவார். [திருக்குறள் உரைகளைப் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் 'திருக்குறள் மெய்ப்பொருளுரையைக்' கட்டாயம் படிக்க வேண்டும். அது மிகச் சிறந்தவொரு கருவூலம். இதுவரை 4 பகுதிகளே வந்திருக்கின்றன. மற்ற பகுதிகளை (ஒரு சில கையெழுத்துப் பதிப்பாகவே இருந்து) முடிக்காமலேயே பெருஞ்சித்திரனார் இயற்கை எய்திவிட்டார். அண்மையில் முனைவர் மு.இளங்கோவன் திண்ணையில் பல்வேறு திருக்குறள் உரைகள் பற்றிச் சொன்னபோது இதைப் பற்றியும் சொல்லியிருப்பார். இதற்கு எதிர்வினையாற்றிய ஜடாயு திருக்குறள் மெய்ப்பொருளுரையைப் படித்திருப்பாரா என்பது ஐயமாய் இருக்கிறது. "திராவிடமா, போட்டு அடி" என்ற வெற்று முனைப்பில் இவரைப் போன்றவர்கள் இருக்கும் போது, அப்புறம் என்ன சொல்வது?]

பொறாமையையும், அவ்வியத்தையும் ஒன்று போலவே சொல்லுவதில், பெருஞ்சித்திரனார் போலவே, எனக்கும் ஒப்புதல் இல்லை. ஏனெனில் 'அவ்வித்து அழுக்காறு உடையான்' என்று குறள் 167 -இல் சொல்லும் போது, அவ்வித்தல் என்பதை அழுக்காற்றிற்கு முந்திய செயலாகவே வள்ளுவர் கூறுகிறார். அவர் கூற்றுப் படி, அவ்வித்தலும் அழுக்காறலும் உடன் ஒக்கும் செயல்கள் அல்ல.

அப்படியானால் அவ்வித்தல் என்பது தான் என்ன? மீண்டும் ஒப்புமை கருதி, மாகனவியலுக்கே போவோம்.

இப்பொழுது நம் எடுத்துக் காட்டு அலசலை, வெறும் அமுக்கு விசையைக் கொண்டே பார்ப்போம் [மற்ற திணுசு, கத்தரி விசைகளைக் கொண்டும் பார்க்கலாம். இருப்பினும் அமுக்கு விசையைப் புரிந்து கொள்வது எளிது, எனவே இந்த எடுத்துக் காட்டைத் தருகிறேன்.]

ஒரு பொதியின் மேல் 10 அலகுள்ள ஒரு விசை அமுக்குகிறது. அந்த விசைக்கு நேர் கீழுள்ள குறுக்குச் செகுத்தப் பரப்பு (cross sectional area) 5 சதுர அணுங்குழை (square inch). இப்பொழுது பொதியின் உள்ளே உணரப் பெறும் அமுக்குத் துறுத்தம் = 10/5 = 2 அலகு/சதுர அணுங்குழை என்றாகும். இதற்கு மாறாக அதே அமுக்கு விசையில் குறுக்குச் செகுத்தம் இரண்டு மடங்கானால், அமுக்குத் துறுத்தம் = 10/10 = 1 அலகு/சதுர அணுங்குழை என்று ஆகும் அல்லவா? இதே போல குறுக்குச் செகுத்தம் குறையக் குறைய அமுக்குத் துறுத்தம் கூடும். [நினைவு வைத்துக் கொள்ளுங்கள் ஒரு பொதியின் மேல் தாக்குவது அமுக்கு விசை (compressive force); ஆனால் பொதியின் உள்ளே உணரப் படுவது அமுக்குத் துறுத்தம (compressive stress). பொதியின் குறுக்குச் செகுத்தத்தைப் பொறுத்தே அந்தத் துறுத்தம் அமையும்.]

இப்பொழுது மீண்டும் அவ்வுதல் என்ற சொல்லுக்கு வருவோம். இதற்குக் குறுகுதல், சுருங்குதல், தட்டையாதல் என்ற பொருட்பாடுகள் உண்டென்று முன்னரே அவல்/அவம் பற்றி இந்தத் தொடரிற் பேசிய போது பார்த்தோம். அந்த முறையில் அவ்விய நெஞ்சம் என்று குறள் 169 ல் சொல்லுவதைக் குறுகிய நெஞ்சம் என்றே பொருள் கொள்ள முடியும். பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் அப்படியே தான் பொருள் கொள்ளுவார்.

[அவ்வுதலின் ஆதிப் பொருள் வெறும் ஒலிக் குறிப்புத் தான். 'அந்த வடையை அவ்வெனக் கடித்தான்'. அவ்வெனப் பல்லாற் கடிக்கும் குறிப்பு, மீந்திருக்கும் வடை குறைந்திருப்பதையும் உணர்த்துகிறது அல்லவா? நாளாவட்டத்தில் ஒலிக்குறிப்பின் பொருட்பாடுகள் பலவாகின. அவற்றுள் முகன்மையானது குறைதல், சுருங்குதல், கெடுதல், பள்ளமாதல் போன்றவையாகும். அவ்வுதல் என்பதன் இன்னொரு வெளிப்பாடான அம்முதல் என்ற வினைச் சொல் அம்மி என்ற ஓர் அடுப்படிக் கருவியை நமக்குக் காட்டும். அம்முதலின் நீட்சி அமுக்குதல் = to press. இதே போலத் தொம்முதல்> தும்முதல்> துமுக்குதல்> துவுக்குதல்> துவைத்தல் என்பதும் அடித்து அமுக்குதலைக் குறிக்கும். தேங்காய்த் துவையல் (=துகையல்)என்று சொல்லுகிறோமே, அதுவும் ஒரு அவையல் தான். அவல் என்பதும் அவையலில் உருவான பண்டம் தான். முதலிற் பருமனாய் இருந்தது இப்பொழுது தட்டையாய், சின்னதாய், ஆயிற்று.]

அவ்வுதலுக்கும், குறுகுதலுக்கும் உள்ள தொடர்பு நுணுகி அறிய வேண்டியதாகும். A -இன் ஆக்கம் B -இன் கண்ணுக்கெதிரே நடந்து கொண்டு இருக்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க, மற்றவர்கள் சொல்லச் சொல்ல, பட்டு அறிய அறிய, B யின் மன அழுத்தம் கூடிக் கொண்டே போகிறது. வெளியே தன்னைச் சுற்றிக் காணும் ஒரே விசையானது, தன் நெஞ்சம் குறுகக் குறுக அதிக மன அழுத்தமாய் உணரப் படும்.

இனி, நெஞ்சம் குறுகுதல் என்றால் என்ன? ஒருவர் பரந்த மனம் உள்ளவர், இந்னொருவர் குறுகிய நெஞ்சர் என்னும் போது என்ன பொருள் கொள்ளுகிறோம்?

உலகில் நடக்கின்ற போக்குகள், தான் சரியென்று நினைக்கின்ற போக்கிற்கு மாறி நடந்தாலும், அவற்றைப் பெரும்போக்காக எண்ணி முனிவு கொள்ளாமல் "தனக்கு உரிமை இருப்பது போல் மற்றோருக்கும் உரிமை உண்டு" என்று ஏற்றுக் கொண்டு, பொறுத்துப் போகிறவரை பரந்த மனம் உள்ளவர் என்கிறோம் இல்லையா? "தான் சொன்னபடி தான் நடக்க வேண்டும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்று அடம்பிடிக்கிறவரை, "தான் சொல்லும் படியே மற்றவர் நடக்க வேண்டும்" என்று எண்ணுபவரை, குறுகிய நெஞ்சர் என்று சொல்லுகிறோம் இல்லையா? இப்படி உருவும் இல்லாத, பருவும் இல்லாத மனக் கொண்மையைத் தான் நெஞ்சப் பரப்பு என்று பேச்சு வழக்கில் சொல்லுகிறோம். இந்த நெஞ்சப் பரப்பு விரிய விரிய அழுக்காறு என்பது குறையும்; இந்த நெஞ்சப் பரப்புக் குறையக் குறைய அழுக்காறு கூடும். அழுக்காறு குறையக் குறைய அழுக்காறாமை (அழுக்காற்றின் இளகு எல்லை) இன்னும் கொஞ்சம் தள்ளிய அழுக்கில் ஏற்படும்.

இந்தப் புரிதலோடு, 167 ஆம் குறளைப் பார்த்தால்,

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்

என்பதன் பொருள் புரியும். "மனம் குறுகி அழுக்காறு உள்ளவனை, தன் மூத்தாளுக்குக் காட்டிவிட்டு திருமகள் விலகி விடுவாள்" என்ற பொருள் வரும். திருமகள் / மூத்தாள் என்ற தொன்மத்தை வள்ளுவர் ஏன் சொல்லுகிறார் என்ற கருத்தை நான் விளக்குவதைக் காட்டிலும் பெருஞ்சித்திரனார் விளக்குவதே சரியாய் அமையும். எனவே அதைத் தவிர்க்கிறேன். அவர் நூலில் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து 139 ஆம் குறளில்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

குறுகிய நெஞ்சத்தவனின் ஆக்கமும் செவ்வையானின் கேடும் பலராலும் நினைக்கப் படும். இங்கே விளக்கம் சொல்ல வேண்டியது அவ்வியத்தின் எதிர்ச்சொல்லான செவ்வியம் என்பது பற்றியே.

சென்னை அடையாற்றில் இருந்து கோட்டூர் புரத்திற்கு ஒரு செவ்வையான வழி இருக்கிறது. [இங்கே செவ்வையான வழி என்பது நேர்கோட்டு வழி என்று பொருளல்ல; proper / perfect road; எல்லோரும் பயன்படுத்தும், சரியாக இழைக்கப் பட்ட, தடைகள் ஏதுமில்லா, .......... வழி என்று பொருள்.] அதை விடுத்து குறுக்கு வழியில் தூய பாட்ரிக் பள்ளி, கோட்டூர் வழியாகத் தான் ஒரு பெரிய வண்டியில் போவேன் என்றால் மாட்டிக் கொள்ள வேண்டியது தான். செவ்வை>செவ்வியம் என்பதற்கு எதிர்ப்பொருள் கொண்டது அவ்வியம். இதனால் தான் அடியார்க்கு நல்லார் அடைக்கலக் காதையின் 122 ஆம் அடிக்கான உரையில் செவ்வியள் என்பவள் "ஔவியம் இல்லாதவள்" என்று சொல்லுகிறார். வள்ளுவரும் அவ்வியத்தானின் ஆக்கத்தையும் செவ்வியனின் கேட்டையும் ஒருங்கு சேர வைத்து அவற்றைக் குமுகாயம் என்றைக்கும் மறக்காது நினைக்கும் என்று சொல்கிறார்.

24. அடுத்த சொல் ஒளவை. இதற்குத் தவப்பெண், தாய், ஆரியாங்கனை, ஒளவையார் என்னும் புலவர் என்று பொருள் சொல்லுவார்கள். அம்மை என்னும் சொல் மகர, வகரப் போலியில் அவ்வை என்று சொல்லப் படும். செம்மை>செவ்வை என்று ஆவது போல இதைப் புரிந்து கொள்ளலாம். கோடா, தோடா, கன்னடம், குடகு, தெலுங்கு, கடபா, கோண்டி, சங்கதம், பாகதம், மராத்தி, கொங்கணி போன்ற மொழிகளிலும், இன்னும் பல்வேறு வடகிழக்கு மொழிகளிலும் அவ்வ என்ற சொல் அம்மையைக் குறிக்கும். தமிழிலும் பல காட்டுக்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. நண்ணிலக் கடலை (mediteranian sea) ஒட்டிய நாடுகளின் தொன்மக் கதையான ஆதாம் ஏவாள் என்பதும் கூட ஆதன் / அவ்வை என்னும் தமிழ் ஆளன்/ அம்மையை நினைவு படுத்தும்.

தாயைக் குறித்த சொல் தவப் பெண்ணைக் குறித்தலும், பின்னால் நீட்சியில் பெருமானர் வீட்டுப் பெரும்பெண்களைக் (ஆரியாங்கனை = ஆரியாங்க அன்னை) குறித்ததும் இயற்கையே.

அவ்வைக்குத் தாய் என்ற பொருள் போக உயரம் குறைந்தவள் என்ற பொருளும் உண்டு. அவ்வுதல் என்ற வினையை மேலே பார்த்தோம் அல்லவா? அவ்வன் = குள்ளன். அவ்வை = குள்ளச்சி. பொதுவாக நம் நாட்டுப் புறங்களில் பெயர் தெரியாத ஒருவரை, அவர் உயரம், நிறம், தோற்றம், அல்லது தொழிலை வைத்தே அடையாளம் சொல்லுவார்கள். நெட்டையன், கூளைச்சி, கருப்பன், வெள்ளையன், முறுக்கன், மீசைக்காரன் இப்படித்தான் ஒருவருக்கொருவர் முன்றாமவரைச் சொல்லுவது உண்டு. சங்க காலப் புலவரான அவ்வையார் ஒருவேளை குள்ளமான தோற்றம் உடையவராய் இருந்திருக்கலாம்.

அவர் பாடல்களைப் படிக்கும் போது அவர் அகவை கூடியவர் என்று சொல்ல முடியாது இருக்கிறது. ஆனால் அவர் அரசர்களுக்கு, குறிப்பாக அதியமான் நெடுமான் அஞ்சிக்கும், அவன் மகனுக்கும் நெருக்கமானவராய் இருந்திருக்கிறார். அரசனுக்குச் சரிக்குச் சரியாக உண்பதும், கள் மாந்துவதும் கூட நடந்திருக்கிறது. தன் அறிவுக் கூர்மையாலும், தமிழ்த் திறத்தாலும் இவர் இந்நிலையை அடைந்திருக்கலாம். இருந்தாலும் அவர் இயற்பெயரை எங்கும் அறிந்தோம் இல்லை. இவ்வளவு திறமுள்ளவர் குள்ளமாய் இருந்தது ஓர் அடையாளமாய் இருந்திருக்கலாம். இதற்கு மேல் ஒன்றும் சொல்ல நம்மிடம் தரவுகள் இல்லை. வெறுமே பெண் என்பதற்கு அவ்வை என்று அழைப்பார்களா என்பது என் கேள்வி. அதியமானுடன் அவர் செய்த கேளிக்கைகளை மீண்டும் படியுங்கள். அவ்வை என்ற சொல் ஔவையானது பிற்காலத்தில் ஏற்பட்ட போலி என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் சங்க காலத்தில் ஔ என்னும் எழுத்து பெரிதும் பயிலப் படவில்லை. கவ்வை = அலர், பவ்வம் = கடல், கவ்வுளி = பல்லி, நவ்வி = பெண்மான் போன்ற சொற்கள் எல்லாம் இது போலக் கௌவை, பௌவம், கௌளி, நௌவி என்று போலியாகி இருக்கின்றன [பெற்றோரைப் பற்றி - சொல்லாய்வறிஞர் ப.அருளி, தமிழ்ப் பல்கலைக்கழகம்]

25. கடைசிச் சொல் ஒளவைநோன்பு. இதுவும் அவ்வை நோன்பு என்பதன் போலியே. இது பெண்கள் மட்டுமே செயகின்ற ஒரு நோன்பு. இதைச் செவ்வாய் நோன்பு என்றும சில பகுதிகளிற் சொல்லுவார்கள். தமிழ்நாட்டு வட்டாரங்களில் விதம் விதமாய் இந்த நோன்பு் கொண்டாடப் படும். இந்த நோன்பிற்குள் எந்த ஆண்களையும் கலந்து கொள்ள விடமாட்டார்கள். இந்த நோன்பின் விவரிப்பைப் பெண்களாக வெளியே சொன்னால் தான் உண்டு. எனக்கும் ஆழமாய் இந்த நோன்பின் விவரம் தெரியாது; மிக மேலோட்டமான செய்திகளே தெரியும். எஅம்முடைய போகூழ், இது போன்ற செய்திகள் ஆவணப் படாமலே மறைந்து கொண்டிருக்கின்றன. என்ன செய்வது, வருத்தப்படத்தான் முடியும்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, May 14, 2008

ஔ - 3

10. அடுத்த சொல் ஒளடணம். "மிளகாய் சுள்ளென்று எரிக்கிறது என்று சொல்லுகிறோம், இல்லையா?" மிளகாய் போர்த்துகீசியரால் நம்மூருக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னால், நம்மூர் உணவுகளில் பெரிதும் மிளகே பயன்பட்டது. மிளகும் நம் நாவில் எரிக்கிற சுவையைக் காட்டும். எரிதல் என்பது சுவையோடு சூட்டையும் உணர்த்தும் சொல். "நாக்கு எரிகிறது, நாக்கு சுடுகிறது" என்ற இரண்டையும் இடம் மாற்றிச் சொல்வது பலமொழிகளில் உண்டு.

உருத்தல் என்னும் வினை எரிதல், சுடுதல் ஆகிய பொருள்களைக் கொடுக்கும். உருத்தலில் கிளைத்த உருமம் எனும் பெயர்ச்சொல் சூடு மிகுந்த பகலுச்சியைக் குறிக்கும். (தென்பாண்டி நாட்டில் புழக்கத்தில் இருக்கும் சொல்.) இதே வழியில் உருநம் என்பது சூடு. உருநத்தைப் பேச்சுவழக்கில் உண்ணம் என்று சொல்லுகிறோம். (கருநன் கண்ணன் என்று ஆனது போல). பெருமானர் பலுக்கலில் உண்ணம் வடபுலத் திரிவு கூடி உஷ்ணமாய் மாறும். இனி மீநிலைத் திரிவில் உஷ்ணம்>உஷணம்>ஔஷணம் என்றாகி, மிளகு, மிளகுச் சாறு போன்றவற்றைக் குறிக்கும். மீண்டும் அதைக் கடன் வாங்கி வழக்கம் போல் ஷகரத்தை டகரகமாக்கி, ஔடணம் என்று தமிழில் சொல்லுவார்கள். இப்படியெல்லாம் மாற்றாமல், தமிழ்வினையில் இருந்து உருவான உருநம்/ உண்ணம் என்பதையே பழகலாம்.

11. அடுத்த சொல் ஔடும்பரம்/ஔதும்பரம் என்பது; இது செம்பு/தாம்பரம்>தாமிரம் என்ற மாழையால் ஆன பொருளைக் குறிக்கும்.

தும்பரம் என்பது தாம்பரத்தின் இன்னொரு வெளிப்பாடு. தும்>தும்பு>துப்பு என்பது சிவப்பு, பவளம் ஆகியவற்றைக் குறிக்கும். துப்பு>துப்பம் என்பது செந்நிற அரத்தத்தைக் குறிக்கும். தும்பு>தோம்பு>(தாம்பு)>தாம்பரம் என்பதும் சிவப்பு, செம்பு ஆகியவற்றைக் குறிக்கும். சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் என்ற ஊர் சிவந்த நிலம். சிவந்த சேற்று நிறத்தில் நீரை அடித்துக் கொண்டு வரும் தென்பொருநையாறு தாம்பரப் பெருநை>தாம்பர பருணி>தாம்ப்ரபர்ணி என்று வடமொழிப் பலுக்கில் சொல்லப் படும். இது தமிழ்ச்சொல் வடபலுக்கில் மாறிய கதை. தாம்பரம்>தாம்பரை>தாமரை = சிவந்த மலர். ஒளிரும் தும்பரம் [ஒளிவிடும் செம்பு] ஒள்+தும்பரம் ஆகி, ஒட்டும்பரம்>ஔடும்பரம்>ஔதும்பரம் என்று ஆவது வடமொழித் திரிவின் இயல்பு.

12. அடுத்தது ஔத்திரி. மந்திரங்களை ஓதுபவர் ஓதி. இறைப் பாக்களை இறைத் திருமேனியின் முன்னே அழுத்தந் திருத்தமாய்ப் பாடி வழுத்துபவர் ஓதுவார். வடசொல் திரிவில் ஓதி என்பது ஹோத்ரி என்றாகும். மீண்டும் தமிழில் ஓத்திரி>ஔத்திரி என்று அது திரும்பி வழங்கும்.

(ஓதியின் தமிழ்மை பற்றி முன்பொரு முறை நான் எழுதியதை மறுத்து, ஒரு சில வடமொழி அன்பர்களும், அவர்களுக்கு அணைவாய் ஒரு கல்வெட்டு அறிஞரும், "ஆகா, எப்படி நீ சொல்லப் போயிற்று? உனக்கு வடமொழி தெரியுமா? வேதத்திலேயே சொல்லியிருக்கிறது. அதை மறுக்கிறாயோ?" என்றெல்லாம் மறுவினை செய்ததை முந்தைய இடுகைகளில் பார்த்துக் கொள்ளுங்கள். வடமொழியின் விதப்பான தன்மையை ஒருநாளும் நான் மறுத்தவன் இல்லை; அந்த மொழியும், ஆக்கங்களும் படிக்க வேண்டியவையே. ஆனால், இத்தனை நாள் மூடிமறைத்த தமிழின் முன்மையை ஊடே எடுத்துக் காட்டி, இழந்ததை மீட்கக் கூடாதா, என்ன?)

13. ஔதகம் = நீரோடு தொடர்புடையது. உலகில் பேரளவில் காலங் காலமாய் குடிநீர் கிடைத்தது மூன்று வகையில் என்பார்கள். அவை ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்றாகும். ஆற்றில் நீளுகின்ற காரணத்தால் அந்தப் பொருள் நீல்>நீர்>நீத்தம் என்று ஆயிற்று. அதே போல ஊறும் நீர் ஊற்று>ஊத்தம்>ஊத்தம்>ஓதம் என்று ஆயிற்று. [மிகுந்த மழையால், தரையில் ஊற்றுக்கள் காணப்படின், தரைமுழுதும் ஓதம் பரவிவிட்டது என்று நாட்டுப்புறங்களில் சொல்லுவார்கள்.] மழைநீருக்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு. அதைப் போல நீரின் பல்வேறு சொற்களுக்கும் சொற்பிறப்புக் காணலாம். ஊத்தம் > ஓதம் போன்ற சொற்கள் வடபுலத் திரிவில் உதகம் என்று ஆகும். மேலை மொழிகளில் இருக்கும் water போன்ற சொற்களும் இந்த ஊத்தம்/ஓதத்தோடு தொடர்பு கொண்டவையே.

14. அடுத்தது ஒளதசியம். - பால், பழம், அமிழ்து; கீரம் என்று பல்வேறு சொற்களை அடையாளம் காடுவார்கள். அடிப்படைப் பொருள் பால் என்பதே.

உதசம் என்பது மாட்டின் முலைமடி. முன்னால் முல்லிப் பருத்து வந்து, முனையாய் நிற்பது முலை. மு என்னும் ஓரெழுத்து முன்னிற்பதைக் குறிப்பது போலவே, உ/ஊ என்னும் சுட்டும் தமிழில் முன்னிலையைக் குறிக்கும். அது, இது என்பது போல உது என்பது முன்னிலையில் இருக்கும் பொருளைக் குறிக்கும். (அண்மைக்கும் சேய்மைக்கும் நடுவில் இருப்பது முன்னிலை.) தமிழ்நாட்டுத் தமிழரிடம் முன்னிலைக் குறிப்பு பெரிதும் குறைந்து போனாலும், ஈழத்தாரிடம் இன்னும் மறையாது இருக்கிறது. இது போக, உதுத்தல் என்னும் வினை பருத்தற் செயலைக் குறிக்கும்.(உதுத்தலில் இன்னொரு நீட்சியான ஊதலும் பருத்த நிலையைக் குறிக்கும். "பாரு, ஊதிப் பருத்திருக்கிறான்.") உதசம் என்ற சொல் மாட்டின் பருத்த முலையைக் குறிப்பது வடமொழிப் பயன்பாடு. உதசத்தின் வழி கிடைக்கும் மாட்டின் முலைப்பால் உதஸ்யம் என்று வடமொழியில் ஆகும். அதைத் திரித்துக் கடன் வாங்கி ஔதசியம் என்று தமிழில் எழுதுகிறார்கள். பேசாமல் பால் என்றே சொல்லி விடலாம்.

15. அடுத்தது இரண்டு சொற்கள் ஒன்று, ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம், இரண்டாவது. ஒளதாரியம் = உதாரம், மிகுகொடை, உதாரகுணம், பெருந்தன்மை.

இந்த இரு சொற்களுமே உயர்ச்சிப் பொருளில் எழுந்த இருபிறப்பிகள். உ/ஊ/ஒ/ஓ என்ற ஓரெழுத்தொரு மொழிகள் தமிழில் உயர்ச்சியைக் குறிக்கும். இவற்றில் பிறந்த சொற்களை எந்த அகரமுதலியின் வழியாயும் அறியலாம். அப்படி எழுந்த சொல் தான் உத்தம் = உயர்ந்தது. உத்தத்தின் நீட்சியாய் நாவலந்தீவின் நில அமைப்பைக் கருதி, அது வடக்கையும் குறிக்கும், உத்தம்>உதம்>ஓதம் என்ற வளர்ச்சியில் அம்பாரி, உயர்ந்த பீடம் போன்றவற்றைக் குறிக்கும். அதே போல உயர்ந்த குணம் உத்தாரம் எனப்படும். பின்னால் உத்தாரம்>உதாரம்>ஔதாரம்>ஔதார்யம் என்ற வளர்ச்சியில் மிகுந்த கொடை, பெருந்தன்மை போன்றவற்றைக் குறிக்கும்.

16. அடுத்தது ஒளபசாரிகம். உவம் என்ற முன்னொட்டைப் பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். ஒன்றின் உள்ளாக, இன்னொன்று அமையும் நிலை உவ நிலை. வகர, பகரப் போலியில் அது உப என்று வடமொழியில் ஆகும். சார்ந்தது எல்லாம் 'ஒன்றைப்போல் இன்னொன்று' என்னும் தன்மையை உணர்த்தும். தமிழ் ஈற்றில் சாரி, சார்வு, சார்பு, சாரம் என்று அமைவது போல் சாரிகம் என்று முடிவது வடமொழி முறை. அடிப்படைவேர் அப்படியே தமிழாகத் தான் (சார்) இருக்கிறது, ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது உப சாரிகம். மீண்டும் தமிழ் வேர்/தண்டு; வடபுலத்துப் புறனை.

உவசாரிகம்>உபசாரிகம்>ஔபசாரிகம்

17. ஔபத்யம் = புணர்ச்சி. பாலியல், கலவி, புணர்ச்சி பற்றிய பல்வேறு சொற்களைத் தமிழில் நேரடியாக ஓர் அவையில் சொல்ல முடியாத வழக்கத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம்; வளர்க்கப் பட்டிருக்கிறோம்; கூச்சப் படுகிறோம். இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் இந்தச் சொற்களை இளம் அகவையிற் தெரிந்து கொண்டு விடுகிறோம். ஓ----வில் தொடங்கும் புணர்ச்சி வினைச்சொல் நம்மில் பலருக்கும் தெரிந்ததே. அந்தச் சொல்லின் இடக்கர் அடக்கலாய் ஒவ்வுதல் = பொருந்துதல், புணருதல் என்ற சொல்லைக் காட்ட முடியும். இதன் பெயர்ச்சொல் ஒவ்வதம்>ஓவதம். இதில் வகரம் பகரமாகி, பின் ஔபத்தியம் என்று ஆகித் தமிழ்மூலம் மறைந்து கிடக்கிறது. ஓ----ல் வினையின் வழியாக ஓ----தம் என்ற சொல் நேரடியாகப் புணர்ச்சியைக் குறிக்கும்.

[பாலியற் சொற்கள் இல்லாது எந்த மொழியும் கிடையாது. இதைச் சொல்ல வடமொழிக்குப் போக வேண்டிய தேவையில்லை. இருந்தாலும் பலரும் செய்கிறார்கள். நேரடியாகத் தமிழில் சொல்லக் கூச்சப் பட்டு, சுற்றி வளைத்து வடமொழியைப் பயன்படுத்துவது பலநேரம் நடக்கிறது.

காட்டாக, "ஆதி வராகன்" என்ற என் பேராசிரியர் சொல்லுவார்" "என்ன பெயர்றா இது? முதற் பன்றின்னு ஒரு பெயரைப் போய் எனக்குப் பெரியவுங்க வச்சுட்டாங்க." நாங்கள் சிரிப்போம். இருந்தாலும் உள்ளே இருக்கும் சூழ்க்குமம் பார்த்தீர்களோ? யாராவது முதற்பன்றி என்று தமிழில் பெயர் வைத்துக் கொள்ளுவார்களோ? அதை வடமொழி இருபிறப்பியில் மாற்றி "ஆதிவராகன்" என்று சொல்லும் போது பலரும் ஏற்கிறார்களே, அது ஏன்? பொதுவாய் இது ஓர் உளவியற் சிக்கல்.]

அன்புடன்,
இராம.கி.

Tuesday, May 13, 2008

ஔ - 2

8. அடுத்த சொல் ஔஷதம்>ஔடதம். இதையும் பார்த்த மாத்திரத்தில் பலரும் வடசொல் என்றே நினைத்துக் கொள்ளுகிறார்கள். இதுவும் ஓர் இருபிறப்பியே.

முன்னே சொன்னது போல், தமிழில் உய்தல் என்பது உயிர் வாழ்தலைக் குறிக்கும். உய்த்தல்/உய்வித்தல் என்பது உயிர் ஊட்டுதலைக் குறிக்கும். அந்த வகையில் உய்த்தம் = உயிர் கொடுக்கும் மருந்து ஆகும். இனி உய்த்தம்>உயத்தம்>உஷத்தம்>உஷதம்>ஔஷதம் என்ற திரிவில் மருந்து என்பதை வடமொழியிற் குறிக்கும். நாம் மீண்டும் இதைக் கடன் வாங்கி, (விஷயத்தை விடயம் ஆக்கியது போல) ஔஷதத்தை ஔடதம் என்போம். [அண்மைக் காலமாய், வலைப்பதிவுகளில் பலரும் விடயத்தைத் தவிர்த்து, விதத்தல் என்னும் தமிழ்வினையில் உருவான விதயத்தைப் புழங்குவது போல,] ஔடதத்திற்கு மாறாக, மருந்திற்கு இன்னொரு சொல்லாய் உய்த்தம் என்ற (நல்ல தமிழ்ச்) சொல்லைப் பயிலலாம். [மருந்து என்பது மரத்தில் இருந்து விதப்பாய்ப் பெற்ற பொருளை முதலிற் குறித்து பின்னால் பொதுமைப் பொருளைக் குறித்தது.]

உண்மையில் ஒவ்வோர் இருபிறப்பிச் சொல்லுக்குள்ளும் ஆழ்ந்து பார்த்தால், அழகு தமிழ்ச் சொற்களை அடையாளம் கண்டு, மீட்க முடியும்.

9. அடுத்த சொல்லான ஔடவம் என்பது இசைநூலில் வரும் ஒளடவ ராகத்தைக் குறிக்கும். இதைப் பற்றிய விளக்கம் நீண்டது. இருந்தாலும் இசை நுணுக்கம் கருதிப் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.

ஆர் ஓங்கலிலும் (=ஏறு வரிசையிலும்; ஓங்கல் = உயர்ச்சி, வரிசை. ஓங்கல்>ஓகல்>ஓகணம் என்பது வடமொழித் திரிவில் உருவான சொல்.), அவல் ஓங்கலிலும் (இறங்கு வரிசையிலும்) 5 சுரங்கள் மட்டுமே ஒலிக்கும் பண்ணை, தமிழர் இசையில் திறம் என்று அழைத்தனர். இந்தக் காலத்தில் அதை ஔடவ ராகம் என்று கர்நாடக இசையார் அழைக்கிறார்கள். காட்டாக 'முல்லைத் தீம்பாணி' என்று இளங்கோவடிகளாலும், 'சாதாரி' என்று அடியார்க்கு நல்லாராலும் அழைக்கப்பட்ட திறப்பண் இன்று மோகனம் (ச ரி2 க2 ப த2) என்று அழைக்கப் படுகிறது. இதே போல செந்துருத்தி என்று அன்று அழைக்கப் பட்ட ஐஞ்சுரப் பண் மத்யமாவதி ( ச ரி2 ம1 ப நி1) என்று இன்று அழைக்கப் படுகிறது.

தமிழிசையில் 12 அரைத் தானங்கள் உண்டு. [குரல், மென் துத்தம், வன் துத்தம், மென் கைக்கிளை, வன் கைக்கிளை, மெல் உழை, வல் உழை, இளி, மெல் விளரி, வல் விளரி, மென் தாரம், வன் தாரம்]. இதில் குரலையும் (ச), இளியையும் (ப) நிலையாய் வைத்துக் கொண்டு மற்ற 10 அரைச்சுரங்களில் இருந்து ஏதோ ஐந்து அரைச்சுரங்களை உகந்தெடுத்து வரிசையாய் அமைத்த பண்களைப் பெரும்பண்கள் என்று தமிழிசையில் குறிப்பார்கள். (இப்படி 7 சுரத் தானங்களை வைத்து அமைப்பதில் மொத்தம் 2^5 = 32 பெரும்பண்கள் ஏற்படும்.) இந்தப் பெரும்பண்ணை 'முற்றும் பூரித்த பண்' எனும் பொருளில் சம்பூர்ண ராகமாய்க் கர்நாடக இசையில் மொழிபெயர்ப்பர். [200/300 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒவ்வொரு தமிழிசைக் கருத்தும், சொல்லும், சங்கதம் வழி பெயர்க்கப் பட்டு, மூலம் சீரழிய, 'இசை என்பதே தமிழர்க்கு இல்லையோ?' எனும்படி ஆக்கி, கண்ணிற்கு முன்னேயே, ஒரு கண்கட்டு வித்தை ஆடப் பட்டது. ஓர் ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்த அடிகளும் அதை மாற்றித் தமிழிசையைத் தேட வைத்தார்கள்.]

இனி, ஏழு சுரங்களுக்கு மாறாக ஆறு சுரங்களே ஏறு வரிசையிலும், இறங்கு வரிசையிலும் அமைப்பது பண்ணியல் எனப் பட்டது. வடமொழியில் இதைச் சாடவம் என்றார்கள். இது சாட் + அவம் = ஏழின் குறை = அதாவது ஆறு. சாட் (= சாத்) என்பது போன்ற இந்தையிரோப்பியச் சொற்கள் எல்லாம் ஐந்து -இரண்டு என்று சேர்த்துச் சொல்லுமாப் போல செய்துவம் என்பதன் திரிவாகவே அமைந்திருக்கின்றன.

செய் என்பது கையைக் குறிக்கும் சொல். தெலுங்கில் அது இன்னமும் உண்டு. நாம் வினையைச் செய் என்று வைத்துக் கொண்டு கையைப் பெயர்ச்சொல்லாய் வைத்திருக்கிறோம். செய்/கை என்பது ஐந்தைக் குறிக்கும். ஐந்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லாய்க் கையை மட்டுமே நகர்ப்புறத் தமிழர்கள் அறிந்து கொள்ளுகிறோம். இன்னும் அதிகமாய்ச் சில சொற்கள் உண்டு.

காட்டாக, கைத்த(ல)ம் என்ற தமிழ்ச்சொல் வடமொழியில் ஹஸ்தம் என்று போய் அதை மீண்டும் திரும்பக் கடன் வாங்கி அத்தம் என்று சொல்லுவார் உண்டு. அதற்கும் ஐந்து என்ற பொருட்பாடு உண்டு. இனிச் சந்தையில், வாழையிலை வாங்கும் போது "அடுக்கு 5 ரூவாய், 10 ரூவாய்" என்று எங்கள் பக்கம் சொல்லுவார்கள். இப்படி ஓர் அடுக்கு என்று சொல்லும் போது, அதில் ஐந்து இலை இருக்கிறது என்று பொருள். இதே போல, காரைக்குடி, கும்பகோணம் பக்கம் ஓர் அடுக்குச் சட்டி என்று சொன்னால், ஒன்றிற்குள் ஒன்றாய் ஐந்து சட்டிகளைக் கொண்ட அடுக்கைக் குறிக்கும். இன்னும் சில தமிழ்நாட்டுப் பகுதிகளில் பூட்டு என்ற சொல் ஐந்து உருப்படிகளைக் குறிக்கும். பூட்டியது என்பது கையை இணைப்பது; பொருள் நீட்சியில் பூட்டு எனும் பெயர்ச்சொல் கையைக்/ஐந்தைக் குறிக்கும். இதே போல, மாட்டுச் சந்தையில் ஆளப்படும் "வீச்சு" என்ற சொல்லும் ஐந்தைக் குறிக்கும். பச்சை, கடுவாய், வீச்சு போன்ற சொற்கள் வெவ்வேறு உருவாய்த் தாள்களைக் குறிக்கும்.

கை, அத்தம், அடுக்கு, பூட்டு, வீச்சு என்பன எண்ணுதி (quantity) வகையில் குறிக்க, ஒரு பிடி என்ற சொல் முகத்தல் அளவையில் ஒரு கைப்பிடி அளவை முதலிற் குறித்து, பின்னால் பொருள் நீட்சியில் ஐந்து என்ற எண்ணையும் குறிக்கும். (ஒரு பிடி = ஒரு கை; எனவே ஐந்து). இந்தப் பிடியின் இன்னொரு தோற்றமான பிண்டி என்ற சொல் பரத நாட்டியத்தில் ஒரு கையாற் செய்யப்படும் பாவனைகளைக் குறிக்கும். பிண்டிக் கைப்பாவனைகளில் (பிண்டி ஹஸ்தங்கள்) கட்டைவிரல் ஒரு தொகுதியாகவும், மற்ற விரல்கள் இன்னொரு தொகுதியாகவும் வேலை செய்யும். பிண்டியில் விரல்கள் ஒன்றை ஒன்று வித விதமாய்த் தொடும், அல்லது பற்றும், அல்லது பிடிக்கும். இதே போல் இரண்டு கைகள் சேர்ந்து செய்யும் பாவனைகளைப் பிணையல் என்று சிலம்பு சொல்லும்.]

ஐந்தின் பல்வேறு சொற்களைப் பார்த்த நாம், இனித் துவம் என்ற சொல்லுக்கு வருவோம். ஈர்தல்/இரள்தல் என்ற வினை வெட்டுதல் என்ற பொருளைக் கொடுக்கும். இந்த வினையில் பிறந்த பெயர்ச்சொல் ஈர்/இரண்டு என்பதாகும். அதே போல வெட்டுதற் பொருளில் இருக்கும் இன்னொரு தமிழ் வினை துமித்தல். இதில் பிறந்த பெயர்ச்சொல் துமம் என்றழைக்கப் படும். துமம் என்பது மகர, வகரப் போலியில் துவம் என்றாகி, வடபுலத்திற் போய் இரண்டைக் குறித்து நிற்கும். (துமம் / tomy என்ற சொல் மேலை மொழிகளில் வெட்டுதல், ஈர்தல், இரண்டு ஆகிய பொருட்பாடுகளைக் குறிக்கும். a- tom = துமிக்க முடியாதது. அணு என்ற சொல் நெருங்கியது, சுருங்கியது, செறிவானது என்ற பொருளைத் தமிழில் குறிக்க, அல் துமம் = a tom என்பது துமிக்க முடியாதது என்று கிரேக்க மொழியில் குறிக்கும். துமித்தலில் விளைந்த சொற்களைக் கூறினால் இங்கு பெருகும். துமம், துவம், two போன்றவைக்குப் பின் இருக்கும் தமிழ் மூலம் நாம் ஆழ்ந்து உணர வேண்டிய ஒன்று.)

செய்யும் துவமும் சேர்ந்து செய்துவம்>செவ்துவ்>செவ்த்>சாத் என்று வடபுலத்தில் ஏழை உணர்த்தி நிலைகொள்ளும். இதே சொல் செவ்த்>செப்த்>sept என்று மற்ற மேலை மொழிகளிலும் நிலை கொள்ளும். எண்களின் சொற்பிறப்பை இன்னொரு முறையில் விரிவாகப் பார்ப்போம்.

இனி, குறையைக் குறிக்கும் அவம் என்ற சொல் பற்றி மேலே ஔ = நிலம் என்னும் பொருட்பாட்டைக் குறிக்கும் போது பார்த்தோம். சாட் அவம் = சாடவம் = ஏழின் குறை = எனவே, ஆறு.

அடுத்தது ஔடவம். மோனியர் வில்லியம்சு அகரமுதலி ஒடவம்>ஔடவம் என்றே சொற்பிறப்பைக் காட்டினாலும் ஒடவம் எப்படி வந்ததென்று குறிக்கவில்லை. இது ஐஞ்சுரப் பண்ணைக் குறிக்கும் சொல். ஔடவத்திற்கும் ஐந்திற்கும் அப்படி என்ன தொடர்பு?

தமிழில் தொள்ளாயிரம் என்பது ஆயிரத்தில் குறைந்தது. அதாவது அதற்கு முந்திய அலகில் ஒன்று (அதாவது நூறு என்னும் அலகில் ஒன்று) குறைந்தது. இதே போல தொள் நூறு என்பது நூற்றிற்கு முந்திய அலகில் ஒன்று (அதாவது, பத்து என்னும் அலகில் ஒன்று) குறைந்தது. இங்கே கவனிக்க வேண்டிய வினை தொள்ளுதல் = குறைதல். அதே போல ஒல்லுதல்/ஒல்குதல் என்பதும் குறைதலைக் குறிக்கும். [ஒல்லியாகிப் போனான் - பருமனிற் குறைந்து போனான்.] ஒல்கிய பத்து ஒன்பது. பொதுவாய் தொள்ளியது/ஒல்கியது என்னும் போது முந்திய அலகில் ஒன்று குறைந்தது என்றே பொருள். [ஆயிரத்திற்கு முந்திய அலகு நூறு. நூற்றிற்கு முந்திய அலகு பத்து. பத்திற்கு முந்திய அலகு ஒன்று.] தொள்ளாயிரம், தொண்ணூறு, ஒன்பது போன்றவற்றின் வெளிப்பாட்டை இப்படியே புரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணுப் பெயர் வரிசையைச் சொல்லும் போது ஒரு பெரிய அலகில் இருந்து இரண்டு குறு அலகுகளைக் குறைக்கும் பழக்கம் தமிழில் இல்லை; ஆனால் தெலுங்கிலும் அதற்கு வடக்கிலும் உண்டு. காட்டாகத் தெலுங்கில், தொம்மிதி = பத்தில் ஒன்று குறைச்சல் = ஒன்பது. எனிமிதி = பத்தில் இரண்டு குறைச்சல் = எட்டு. இப்படி இரண்டு குறைத்தல் என்ற கருத்து வடமொழிப் பயன்பாட்டில் ஒல் துவம் > ஒள் துவம் >*ஒட்டுவம்>ஒடுவம்>ஒடவம் என்றாகும். [ஒல்லுதல் >ஒள்ளுதல் >ஒடுங்குதல் என்ற விரிவில் குறைதல் பொருள் தொடருவதை நோக்கலாம்.] ஒடவம் என்ற சொல் மேலும் திரிந்து ஔடவம் ஆவது வடமொழியில் உள்ள இயல்பான திரிவே. மொத்தத்தில் இரண்டின் குறைச்சல் என்ற பொருளோடு 'உள்ளே ஒரு தமிழ்வேர்; வெளியே வடமொழித் தோற்றம்' நம்மை மருட்டுகிறது. ஏழில் இருந்து இரண்டின் குறைச்சலாய், ஔடவம் பிறந்த கதை இது தான்.

கடைசியாக உள்ளது நந்நான்கு சுரங்களாய்ச் சேர்த்து அமைக்கும் சதுர்த்தம். இதைத் தமிழில் திறத்திறம் என்று சொல்லுவார்கள். சதுர்த்தம் என்ற எண்ணுப்பெயர் எழுந்த வகையை வேறொரு பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

ஔ - 1

வலைப்பதிவர் இராதாகிருஷ்ணன் முன்பு பிப்ரவரி 23, 2005 - ல் ஓர் இடுகை எழுதியிருந்தார். அதில்......
---------------------------------
"அம்மா இங்கே வா வா..." என்ற அகரவரிசை எழுத்துகள் வரும் பாடலைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்த போது பாடலில் இருந்த 'ஒள' வரி தடம் புரண்டு, "ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திச்சூடி வரியை வாய் உளறிவிட்டது. சமாளித்துக் கொண்டு ஒளவியம் என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்தேன்; அகராதிதான் கைகொடுத்தது. ஒள வரிசையில் வரும் வார்த்தைகள் கொஞ்சம்தான் எனினும் சில சுவையாக உள்ளன.

ஒள - அநந்தன் என்னும் பாம்பு; நிலம்; விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை இவற்றைக் காட்டும் ஓர் உபசருக்கம்; கடிதல்; ஒளவென்னேவல்.
ஒளகம் - இடைப்பாட்டு.
ஒளகாரம் - ஒள என்னும் எழுத்து.
ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஒளசரம் - கோடாங்கல்.
ஒளசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று. (அதென்ன உப புராணம்?)
ஒளசித்தியம் - தகுதி.
ஒளஷதம், ஒளடதம் - மருந்து.
ஒளடவம் - ஒளடவராகம்.
ஒளடனம் - மிளகு ரசம்.
ஒளதசியம் - பால், பழம், அமிழ்து; கீரம்.
ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம்.
ஒளதாரியம் - உதாரம்; மிகுகொடை; உதாரகுணம்; பெருந்தன்மை.
ஒளபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஒளபசானம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஒளரசன், ஒளரதன் - உரிமை மகன்; கணவனுக்குப் பிறந்த மகன்.
ஒளரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன்.
ஒளலியா - பக்தர்கள்.
ஒளவித்தல் - பொறாமைப்படுதல்.
ஒளவியம் - பொறாமை; தீவினை.
ஒளவை - தவப்பெண்; தாய்; ஆரியாங்கனை; ஒளவையார்.
ஒளவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஒளனம் - மிளகுரசம்; காயரசம்; மிளகுநீர்.

நன்றி: கழகத் தமிழ் அகராதி

இராதாகிருஷ்ணன்
-------------------------------

என்று எழுதி இருந்தார். பதிவர் குமரனும் ஔவியம் என்ற இதே சொல்லைப் பற்றி 2006ல் 'சொல் ஒரு சொல்' எனும் தம் பதிவில் ஓர் இடுகையைச் போட்டிருந்தார்.

அண்மையிற் திரு.குமரன் தன்னுடைய 'கூடல்' பதிவில் 'ஔவியம்' பற்றி முன்னாள் நடந்த உரையாடல்களைத் தொகுத்து, ஒரு மீள்பதிவு செய்த பின்னர், ஔகாரச் சொற்கள் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து போனேன்.

ஔகாரம் பற்றிய தெளிவு நம்மில் பலர்க்கும் இல்லாததால், சொன்மூலம் தெரியாது தடுமாறுகிறோம். ஔகாரத்தில் தொடங்குவதாய் அகரமுதலிகளிற் காட்டப் படும் சொற்கள் பலவும், உகர, ஒகரத் தமிழ்ச் சொற்களின் வடமொழி மரூஉவாகவோ, வளர்ச்சியாகவோ (அதாவது உள்ளுக்குள் தமிழ் வேரும், வெளிக்குள் வடமொழி உருவும், பலுக்குமாய், இரு பிறப்பிகளாகவோ), அல்லது "அவ்" வில் தொடங்கும் தமிழ்ச்சொற்களின் போலியாகவோ, அமைந்து கிடக்கின்றன.

இங்கே உயிரெழுத்தில் தொடங்கும் சில சொற்களுக்கு மட்டுமே சொற்பிறப்புக் காட்டுகிறேன். [உயிர்மெய் ஔகாரங்களை இதே போல அலசலாம் எனினும், பதிவின் நீளம் கருதி அவற்றைத் தவிர்க்கிறேன்.]

சொன்மூலம் தேடும் இந்த நேரத்தில், கி.பி.500/600க்கு முற்பட்ட கல்வெட்டுக்களில் பழந் தமிழியின் ஔகார எழுத்தைக் காணுவதில்லை என்பதையும் (இதே போன்ற நிலை ஐகாரத்திற்கும் உண்டு), "பிற்காலத்தில் தான் அது வளர்ச்சி பெற்றதோ?" என்ற ஐயம் தமிழறிஞரிடம் இருப்பதையும், தொல்காப்பியர் ஔகாரத்தை ஒப்பிய போதிலும், "அகர உகரம் ஔகாரம் ஆகும்" என்று அந்த ஈரொலியின் (diphthong) தோற்றத்தைச் சொன்னதையும்,

"அம்முன் இகரம் யகரம் என்றிவை
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அவ்வொடு
உவ்வும் வவ்வும் ஔவோர் அன்ன"

என்று நன்னூலார் (எழுத்தியல் 125) ஐகார, ஔகாரப் போலி பற்றிச் சொன்னதையும் இங்கு கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன். ஔகாரம் தவிர்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அந்தச் சொற்களின் மூலம் வேறெங்கோ இருக்கிறது என்ற பார்வையை மட்டுமே இங்கு வைக்கிறேன். [அண்மையில் அய் என்று எழுதி ஐகாரம் போக்குவது பற்றி நண்பர் நாக. இளங்கோவன் தன் பதிவில் சொல்லியிருக்கிறார். ஐகாரச் சொற்களிலும் பல சொற்களின் சொற்பிறப்பு வேறெங்கோ இகரத்திலும், எகரத்திலும் இருக்கிறது என்பதை இந்த இடத்தில் சொல்ல விழைகிறேன். இன்றைய நிலையில், ஐகார, ஔகாரச் சொற்கள் வடமொழித் தொடர்பால் தமிழில் கூடிக் காட்சியளிக்கின்றன என்று நன்கு உணரமுடியும். அதே நேரத்தில் ஐகார, ஔகாரங்களின் தமிழ்மையை நான் மறுக்கவில்லை; ஒதுக்கச் சொல்லவும் இல்லை.]

1. முதலில் ஔ எனும் ஓரெழுத்து ஒருமொழிக்கான பொருட்பாடுகளைப் பார்ப்போம்.

1a. அநந்தன் என்னும் பாம்பைக் குறிக்கும் பெயராக ஔ பயன்படுவதை அகரமுதலிகள் குறிக்கின்றன. இத்தகைய பொருட்பாடு பாம்பின் தோற்றத்தையும் ஔ -வின் இன்றைய உருவையும் ஒப்பிட்டு எழுந்திருக்கலாம். ஔகார எழுத்து கி.பி.500/600க்கு முன்னால் காணப்படாததாலும், அதன் இன்றைய உருவம் கி.பி.1400க்கு முன்னால் இல்லாததாலும், பாம்பு குறித்த பொருட்பாடு வெகுகாலம் கழித்தே, ஒரு 500/600 ஆண்டுகளுக்கு முன் தான் தமிழில் ஏற்பட்டிருக்க இயலும்.

1b. அடுத்தது நிலம் என்னும் பொருள். அவ்வையாரின் "நாடா கொன்றோ காடா கொன்றோ" என்ற புறநானூற்று 187 ஆம் பாடலின் இரண்டாம் வரியில் "அவலா கொன்றோ, மிசையாக கொன்றோ" என்ற ஒரு வரியில் அவல் என்பது பள்ளமான இடத்தையே குறிக்கிறது. பொதுவாய் அம், அல், அன் போன்ற ஈறுகளைத் தவிர்த்தே தமிழ்ச் சொற்கள் வடபுலப் பயன்பாட்டில் திரிகின்றன. தவிர 'அவைதல்' என்பது தமிழில் தட்டையாதலைக் குறிக்கும். குற்றப்பட்ட அரிசி - அவையப் பட்ட அரிசி - அவல் என்று சொல்லப் படுவதில்லையா? இது போக, அவ எனும் குறுஞ்சொல் ஒரு முன்னொட்டாகத் தமிழிலும் வடமொழியிலும் பயிலும்போது, தாழ்ந்த நிலையையும், குறையாகிப் போனதையும், கேடாகிப் போனதையும் குறிக்கும். இந்தச் சிந்தனையில் ஓர்ந்து பார்த்தால், நிலம் என்ற பொருட்பாடு அவைத்தலில் இருந்தே எழ முடியும்.

1c. மூன்றாவது பொருளாய், ஔவென்னும் ஓரெழுத்தொரு மொழியை, விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல் ஆகிய பொருட்பாடுகளைக் குறிக்கும் ஒரு வடமொழி முன்னொட்டு (உப சருக்கம்) என்று அகரமுதலிகள் குறிக்கும். ஓ என்னும் ஓரெழுத்தொரு மொழி தமிழில் முன்னொட்டாய் வராமல் இதே பொருட்பாடுகளைத் தனித்து நின்று உணர்த்தும். வடமொழியிலோ, அதே பொருட்பாடுகளில் ஔகாரமாய்த் திரிந்து முன்னொட்டாகப் பயன்படுகிறது.

2. ஒளகம் என்ற சொல் இடைப்பாட்டையும், ஔகி என்பது இடைப்பாட்டுக் கூத்தியையும், குறிப்பதாக அகரமுதலிகளில் அறிகிறோம். இந்தச் சொல்லும் கூடப் பொருட்பாட்டு வகையில் ஓர் இருபிறப்பியே. இதனுள்ளே, வேராய் அடங்கி இருப்பது சுருங்கற் பொருளில் வரும் உல்குதல் ஆகும். உல்கு>உள்கு>உக்கு>உக்கம் என்பது தமிழில் இடையைக் குறிக்கும் ஒரு பெயர்ச்சொல். உக்கம்>உகம்>ஔகம் என்ற திரிவில், வடமொழிப் பலுக்கும் உருவமும் ஏற்பட்டு, இடைப்பாட்டு என்ற புதுப்பொருளைக் கொடுக்கிறது. இடை என்ற பொருள் தமிழில் இருக்க, இடைப்பாட்டு என்பது வடமொழியில் எழுந்த ஒரு புதுப் புடைப்பெயர்ச்சியாகும். [இப்படித்தான், ஒவ்வொரு மொழியும் வேற்று மொழிச் சொல்லைக் கடன்வாங்கிக் கையாளும் போது அதே பொருளோடோ , அல்லது சிறு நீட்சியில் புதுப்பொருள் பெற்றோ, திரிவு காட்டும்.]

இதே போல, உல்கு>ஒல்கு என்னும் போக்கில் அசைதல் என்ற கூத்துப் பொருளையும் கொடுத்து, ஒல்குபவள் ஒல்கி>ஒக்கி>ஔகி என்று ஆவாள். ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி என்ற பொருள் வந்த கதையும் இப்படித்தான்.

இவ்வளவு ஆழம் தமிழ்வேரினுள் இருந்தாலும், இடைக்கால மணிப்பவளப் போக்கில் ஆட்பட்ட அடியார்க்கு நல்லார், சிலம்பின் 14:156க்குக் கொடுத்த உரையில் "தலைப்பாட்டு ஆவது உகம்; இடைப்பாட்டாவது ஔகம்" என்றே உரைப்பார்.

3. அடுத்த சொல் ஒளசரம். இதைக் கோடாங்கல் என்று அகரமுதலிகள் குறிக்கின்றன. உயரம்>உசரம்>ஔசரம்; [கோடு என்பதும் மலையுச்சியைக் குறிக்கும்.] உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் கோடாங்கல். இதை உச்சக்கல் என்றும் நல்ல தமிழில் சொல்லலாம். [ஔசரம் ஒதுக்கலாமே?]

4. அடுத்த சொல் ஔசீரம். இது இலாமிச்சைவேர் (தென்பாண்டி நாட்டில் சொல்லும் பெயர்) அல்லது வெட்டிவேரைக் குறிக்கும். கோடைகாலத்தில் சாளரங்களுக்கு வெட்டிவேர்த் தட்டி கட்டி, அதில் நீரைத் தெளித்து, வெக்கை தணித்துக் கொள்கிறோம் இல்லையா? .அந்த வெட்டிவேரைப் பரப்பி இருக்கையாகவோ, ஆசனத் தட்டியாகவோ, படுக்கையாகவோ போட்டுக் கொள்வதும் உண்டு. தென்னிந்தியாவின் இயற்கைப் புல்லான வெட்டிவேரின் புதலியற் பெயர் Coeus Vettiveroides. இந்தக் கோரைப்புல்லைப் பிடுங்கிப் மேலே இருக்கும் தழையையும், கீழே இருக்கும் வேரையும் வெட்டிவிட்டு நடுவிலுள்ள துண்டை மீண்டும் நிலத்தில் நட்டுப் பயிரிடுவதால், இது வெட்டிவேர் எனப் பெயர் வழங்கப் பட்டது.

இதற்கு ஔசீரம் என்ற பெயர் ஏற்பட்டது கொஞ்சம் வியப்பானது. முறிதலைக் குறிக்கும் இன்னொரு தமிழ்வினை ஒசிதல் ஆகும். இதே சொல் பிறவினையாய் வரும் பொழுது, ஒசித்தல் = முறித்தல், வெட்டுதல் என்ற பொருளைக் கொடுக்கும். வெட்டிவேர் ஒசிவேர்>ஒசிவேரம்>ஒசீரம்>ஔசீரம் என்று இருபிறப்பி ஆகி, வடமொழியோ என நம்மை மருட்டுகிறது. பேசாமல் ஒசி வேர் என்றே நல்ல தமிழில் சொல்லிவிட்டுப் போகலாம். தமிழாவது பிழைக்கும்.

ஔசீரத்திற்கு இன்னொரு பொருளும் கவரி மயிரை வைத்து உண்டு. இமையமலைச்சாரலில் இருக்கும் மாந்தர் தம் குளிரைப் போக்கக் கம்பளிப் போர்வை செய்ய வேண்டி, யாக் எருமையின் மயிரை ஒசித்து (பிரித்து) எடுப்பார்கள்; அந்த மயிர் ஒசி + ஓரி = ஒசியோரி>ஒசீரி என்று சொல்லப்படும். ஓரி என்பது மயிர். ஒசீரிப் பொருளான அந்த மயிர் ஒசீரியம்>ஔசீரியம் என்ற திரிவில் வடநாட்டில் வழங்குகிறது. யாக் எருமை தான் கவரி மான் என்று தமிழில் சொல்லப் படுகிறது. மயிர் போக்கிய கவரி மான் உயிர் வாழாது என்பதால் அதன் உயிர் மயிரில் இருக்கிறதோ என்ற குறைப்புரிதல் அந்தக் காலக் குமுகாயத்தில் இருந்ததால் தான்,

"மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்"

என்ற திருக்குறள் எழுந்தது.

5. அடுத்த சொல் ஒளசனம். இதற்கு உப புராணம் என்ற பொருளுண்டு. 'பதினெட்டனுள் ஒன்று' என்பது அகரமுதலிகள் சொல்லுவது. பதினெட்டு உபபுராணங்களின் பெயரை நிகண்டுகளிற் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 'அதென்ன உபம், புராணம்?' என்று கேட்டால், "உள்ளே இருப்பது, உள்விக் கிடப்பது, சேர்ந்து கிடப்பது, உவம்" என்று சொல்ல வேண்டியிருக்கும். உள்வம்>உவ்வம்>உவம் என்ற திரிவோடு, வகர, பகரப் போலியில் உவம்>உபம் என்று ஆகும். இதே போல உள்ந்து கிடப்பது உடம்>உடன் என்று ஆகும். உடம்பு, உடன் போன்ற சொற்கள் தமிழென்றால், அப்புறம் உவம் என்பதும் தமிழ் தான்; ஆனாலும், பலர், உபம் என்ற பலுக்கலில் மயங்கி, அதை வட சொல் என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். இதே போலப் புராணம் என்ற சொல்லும் பழனம்>பழானம்>பராணம்>புராணம் என்ற திரிவே. புராணத்தின் முன்னைய தமிழ்ச்சொல் பழனமே. (தொன்மம் என்ற சொல்லும் பழனத்திற்கு மாற்றாய்ப் பயிலப்படுகிறது.) டிரங்குப் பெட்டி மாதிரி பழம்புராணம் ஓர் இரட்டைச் சொல். வெறுமே பழனமே அமையும். பெரும் பழனங்களுக்குத் துணை வரும் பழனங்கள் உவப் பழனங்கள் ஆகும்.

இனி, உவம்>உவயம்>உவசம் என்ற வளர்ச்சியில் உவச புராணம் என்ற சொல்லாட்சி எழும். பின் அதைத் தொகுத்து உவசனம் என்று வடமொழியர் ஆக்கிக் கொள்ளுவர். உள்ளே உவம் எனும் தமிழ் வேர்; வெளியே ஒரு வடமொழித் தோற்றம்.

6. அடுத்தது ஔசித்யம். உசிதம் என்ற இருபிறப்பியின் அடுத்த திரிவு ஔசித்யம். உ எனும் தமிழ்ச் சுட்டு உயர்ச்சிப் பொருளில் உயத்தம்>உசத்தம் என்ற திரிவில் தகுதி, மேன்மை என்ற பொருளைக் கொடுக்கும். உகரச் சுட்டு, உயர்ச்சிப் பொருளில், தமிழில் பல சொற்கள் உண்டு. உகரம் ஒகரமாய் மாறியும் அதே பொருளைக் கொடுக்கும். (உயத்தம் என்பதன் மீநிலை வளர்ச்சியான உயர்த்தம் என்ற சொல்லும் தமிழ் தானே? "அவர் ரொம்ப உசந்தவருங்க - ஒசந்தவருங்க".) உசத்தம் என்ற வழக்குச் சொல்லின் ஊடே ஓர் இகரவொலி சேர்ந்து, உசித்தம்>ஔசித்யம் என்று திரிந்து, தகுதி என்ற பொருளை வடமொழியிற் கொடுக்கும். ஒளசித்யம் - தகுதி. நல்ல தமிழில் இதை உயத்தம் என்றே சொல்லலாம். (இப்படியெல்லாம் பேசுதற்கு ஓர் உயத்தம் வேண்டாமா? இவரெல்லாம் இதைப் பேசுவதா? ) உசிதம் என்று கொச்சையாய்ச் சொல்ல வேண்டியது இல்லை.

7. அடுத்த சொல் ஔசீவனம். உவம் என்ற முன்னொட்டைப் பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். உய்யித்தல்/உய்வித்தல் என்னும் வினைச்சொல்லிற்கு வாழுதல் என்றே பொருள் உண்டு. அன்றாடப் பேச்சில் உயிர் என்பது உசிர் ஆவது போல உய்வித்தல் என்பது உசுவித்தல் என்றும் சொல்லப் பட்டும். "என்னடா, உசு உசுன்னு இழுத்துக்கிட்டே ஓடியார்றே. கொஞ்சம் நின்னு மூச்சு விட்டு அப்புறம் சொல்லு". உசுவித்தல்>சீவித்தல் என்ற திரிவில் வடபுலத்தில் மூசுதலைக் குறித்துப் பயன்படும். சீவிதம் சீவனம் போன்ற சொற்கள் உய்யித்தம்/ உய்வனம் போன்றவற்றைக் குறிக்கும் வடபுலத்துச் சொற்கள். உய்வனத்திற்கு உவமாய் இருப்பது உவ உய்வனம். வடமொழியில் இது உப ஜீவனம் ஆகும்; support, livelihood என்ற பொருட்பாடுகளை உணர்த்தும்.

அன்புடன்,
இராம.கி.