Monday, October 13, 2014

புதிய பாலை






இது 2002 ஆம் ஆண்டு செப்தம்பர் 9 அன்று திண்ணை வலையிதழில் வெளிவந்தது. அன்றைக்குச் சவுதி அரேபியா ரியாதில் வாழ்ந்தேன். அதன் தாக்கம் இந்தப்பாட்டு. இதசேமிக்கவேண்டும் என்பதற்காக இங்கு மீண்டும் பங்களிக்கிறேன். உங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.


முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்த்ப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்
                                      - சிலப்பதிகாரம் 11: 60-7

என்றான் இளங்கோ தமிழப் பாலையை

இது

அன்றைய நிலையில் அவன்செய் வரையறை;
இன்றைக் கிருந்துநான் எண்ணிப் பார்க்கிறேன்:

முல்லையும் மருதமும் முறைமையில் திரிந்து....
சரளையும் மேடும் மணலொடு புணர்ந்து
வேலிக் கருவை கோரைப் புல்லோடுப்
போலிகை நிலமாய் புறத்தினிற் காட்டி
பன்னெடுங் காலம் பானையில்## வினைத்து
கன்னெயும்* வளியும் கலந்தே உருக்கி
பொன்னையும் பொலிவையும் நெய்யொடு பீற்றி
கூடத் தெறிப்பின் மாடகோ புரங்கள்
ஆடல் தோற்றம் அழகு வண்ணங்கள்
தேடி வாராதோ அரபுப் பாலையில் ?

பின் துயர் எங்கே நடுக்கி உறுத்தும் ?

எண்பதில் நாற்பது ஆயிரம் மாத்திரி#
எவனுக்குத் தெரியும் நகரப் பரப்பு ?
ஊருக்கு வெளியே பாலைவனமாம் ?
உள்ளே இருந்தால் யாருக்குத் தெரியும் ?
கோடையில் மட்டும் பதனித்து** விட்டால்
நாடவர் யார்தான் வாழ மறுப்பார் ?

யாரங்கே காசை அள்ளித் தெளியுங்கள்!
பாரெங்கும் செழிப்பைப் பார்த்துக் கொணருங்கள்!

பின் துயர் எங்கே நடுக்கி உறுத்தும் ?

பளிங்கும் ஆடியும் பளிக்கும் கருங்கலும்
விளங்கும் ஒளியும், வியன்நகர் மனைகளும்;
பறக்கும் சாலையும், திரக்கும், நேரியும்
வழிதுறை எல்லாம் மகிழுந்துச் சாரையும்;
(சாலையில் நடப்பது இந்தியன் மட்டுமே!
வேலைக்கு வந்தவன் வேறென்ன செய்வான் ?)

வேலிக் கருவையின் வாழ்வைப் பாருங்கள்.
ஆறுகிடந்தன்ன அகல்நெடுந் தெருக்களில்
இந்த மரமே இருமருங் கிருக்கும்
நடுவரி முழுதும் பேரீந்தின் ஆட்சி

உலகில் உள்ள பொதினர்கள்$ எல்லாம்
கலக்க வருவார்; கல்நெய் அல்லவா ?
ஏழரை மில்லியன்@ யார்தரு வார்இனி ?

மணலும் கல்லும் மணல்சார் இடமும்
புதுத் திணை என்றால் புலவர்கொள் ளீரோ ? '

உரக்கச் சொன்னேன்:

'பின் துயர் எங்கே நடுக்கி உறுத்தும் ?
உலகைப் புரப்பதே பாலை வனந்தான்! '

வானொலி சொன்னது:

'கல்நெய் இன்றேல் பாலையென் னாகும் ? '

விடை தெரியாமல் முகம் கவித்தேன் நான்.

## புவி என்ற பானை
* கல்+நெய் = கன்னெய் = petrol here denoting petroleum
#ஆயிரம் மாத்திரி = கிலோ மீட்டர் (here it denotes the size of Riyadh)
** பதனித்தல் = air-conditioning
$ பொதினம் = business; பொதினர் = businessman
@ seven and half million barrels per day = the present production of Oil in Saudi Arabia

***
poo@giasmd01.vsnl.net.in





Wednesday, September 24, 2014

தமிழ்க் கணிமைக்கான உள்ளுறும நுட்பியற் பொள்ளிகை (IT Policy for Tamil Computing)

இக்கட்டுரை அண்மையில் 2014 செப். 19-21 தேதிகளில் புதுச்சேரியில் நடந்த 13 ஆவது தமிழ் இணைய மாநாட்டிற் படிக்கப்பட்டது. இங்கு உங்கள் வாசிப்பிற்காகப் பதிகிறேன்.

அன்புடன்,
இராம.கி.
-----------------------------------------------

தமிழ்க் கணிமைக்கான உள்ளுறும நுட்பியற் பொள்ளிகை (IT policy for Tamil computing)

முனைவர் இராம.கி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா

(சுருக்கம்)

தமிழக அரசும், புதுவை அரசும் இதுநாள் வரை உருவாக்கிய உள்ளுறும (=தகவல்) நுட்பியற்[1] பொள்ளிகைகள் (IT policy) உ.நு.தொழில் வளர்ச்சிக்குப் பொதுவானவை. தமிழ்க்கணிமை  முன்னெடுப்புக்களை, இவற்றிற்குள் ஒடுக்குவதால் ஏற்படும் போதாமையைச் சொல்லி, தமிழ்க்கணிமைக்கென ஒரு தனிப் பொள்ளிகையை உருவாக்கவேண்டிய தேவையையும், அவற்றால் வரும் தமிழ்க்கணிமை மேம்பாட்டையும், மொழிவளர்ச்சியையும், இவற்றொடு ஏற்படும் பொருளியல் மாற்றத்தையும் இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகிறது.

(கட்டுரை)

இற்றையுலகில் பல்வேறு நாடுகள் தம் பொருளியலைப் பெருக்கவும், புத்தாக்கங்கள், தொழிற் செலுத்தங்கள், அலுவ இயக்கங்கள் ஆகியவற்றைத் தானியக்கமாய்ச் செய்யவும், கட்டுறுத்தவும் (control) உள்ளுறும நுட்பியலையே பெரிதும் நாடுகின்றன. ”இந்த நுட்பியல் பிணையா அறிவியலும், பொறியியலும் இனிக் கிடையாதோ? இதைத் தவிர்க்கும் மொழி சார் மக்களினம் வளர முடியாதோ” என இந்நாட்டம் உலகிலுள்ளது. 

அதேபோது வரலாற்று நேர்ச்சியாலும், தாராளமய, உலகமய, புதுக் குடியேற்றத் தாக்கங்களாலும் இவ்வூடாட்டம் உலகெங்கணும் ஆங்கில வழியே  பெரிதும் நடக்கிறது. அதேபொழுது, மேலை, சீன, சப்பானிய நாடுகளோ தம் மொழிவழியே உள்ளுறும உள்ளடக்கம், செயற்பாட்டைக் கொணர்ந்து தம் பொருளியலை உயர்த்துகின்றன; இந்நாடுகளுக்கு, ஆங்கில ஆதிக்கம் என்பது சற்றும் தடையாவதில்லை. அதேபோது, 22 தேசிய மொழிகளுடைய இந்தியாவில் இவ்வூடாட்டம் ஆங்கிலத்திலேயே நீள்கிறது. (இதேநிலையிலுள்ள வளரும் நாடுகள் பெரும்பாலும் தம் மொழிகளை ஊக்கிப் பொருளியல் உயரா நிலையில், ஆங்கிலத்தைப் பயனுறுத்தி, ஆதிக்க நாடுகளின் ஒட்டுண்ணி ஆகிவிடுகின்றன.) விடுதலையாகி 67 ஆண்டுகள் ஆனதின் பின்னும், சொந்த நாட்டிற் பயனுறாது பொதினச் செலுத்த வெளியூற்றுப் (Business process outsourcing) பணிகளில் நாலுகாசு பார்ப்பதே நம் ஊழ் என நம்முடைய ஆள்வோரும், அதிகாரிகளும் அமைந்து போகிறார்; இதன் காரணமாய்க் கணிசார் தொழிலுக்கே தமிழக, புதுவை அரசுகள் தம் உ.நு. பொள்ளிகைகளைப் (IT policies) பயன்படுத்துகின்றன.

பேச்சு வலு, எழுத்து வலு, அச்சு வலு ஆகியவற்றைப் பெற்ற இந்திய மொழிகள், இன்று மிகத்தேவையான மின்னி[2] வலுவை (electronically enabled) மட்டும் பெறாது தடுமாறுகின்றன. இந்த வலுக்கள் ஒவ்வொன்றும் நுட்பியல் எழுச்சியாகும். இவற்றை அவ்வக்காலத்திற் பெற்ற  மொழிகளே இன்றும் உலகெங்கும் முகல்ந்து (modernized), முன் நிலைக்கின்றன; மின்னி வலுவுறாத மொழிகள் எல்லாம் அழிகின்றன. 2500 ஆண்டுகள்முன் எழுத்து வலுவுற்ற தமிழ், குடியேற்ற (colonialism) ஆதிக்கத்தாலும் கிறித்துவ விடையூழியர் தூண்டலாலாலும் 450 ஆண்டுகளில் அச்சுவலுப் பெற்றிருந்தும், இன்னும் முழு மின்னிவலுப் பெறாதுள்ளது. இந்தியாவில், உ.நு. பயன்பாட்டில் நடுவணரசின் பெருநிதி ஊக்கத்தோடு இந்தி மட்டுமே தன்னந்தனியாய் மின்னிவலுப் பெற்றுவருகிறது. மற்ற மொழிகளோ, ஆட்சி, தொழில், கல்வி, வணிகம், பொதினம், நயன்மைத் (justice) துறைகளிற் சிறிதும் பயன்படாது பெரிதும் நொடித்துக் கிடக்கின்றன.

அதேநேரத்தில், ஆங்கிலமும் மாநில மொழிகளும் கலந்து (தரங்கெட்டுப் பிணைந்த தமிங்கிலம் போல்) கிரியோல் மொழிகள் நாடெங்கும் உருவாகின்றன. [மக்கள் வழக்கு இந்தியும்  கிட்டத்தட்ட ஒரு கிரியோல் மொழியாகவே இருக்கிறது. ”சர்க்காரி இந்தி” மட்டுந்தான் சற்றுப் புறனடை யாகும்.] அலுவலுக்கு ஆங்கிலம், மாநிலம் மீறிய பரம்பலுக்கு இந்தி, பழம்பெருமை பேசச் சங்கதம், ஊடும் கேளிக்கைக்கு மாநிலக் கிரியோல் என்ற நடைமுறையை இந்த நாட்டின் அறிவுய்திகள் ஆழமாய்  விதைக்கிறார். (இந்தியா என்பது ஒரு ஒற்றைதேச நாடா, பல்தேச நாடா என்ற தெளிவின்மையும் கூட இதற்குக் காரணமாகிறது.)

குடிமக்கள் இடையாட்டம் அரசு/தனியார் அலுவத்தில் அலுவர் முகம்பார்த்து நடப்பதில்லை. பிறப்புச் சான்றிதழ் பெறுகை, திருமணப் பதிவுகள், மனை/நில விற்பனைப் பதிவுகள், உரிமைமாற்றப் பதிவுகள், சுற்றுச்சூழல் வெம்மை அறிதல்கள், மழைப்பொழிவு, வெதண (climates) அறிவிப்புகள், வேளாண்மை அறிவுரைகள், பொதுமக்கள் வேண்டுகோள்கள், அரசுச் சேவைகள், பொதினங்கள் (businesses) இடையே ஏற்படும் பரிமாற்றங்கள், பொதின-அரசுப் பரிமாற்றங்கள், பொதினம்-நுகர்வோர் பரிமாற்றங்கள் என எல்லாமே அந்தந்த மொழிகளில் மின்னிக்கருவிகள் வழி உலகில் நடைபெறுகின்றன. வளர்ந்த நாடுகளில் 99% கணிமயமெனில், இந்தியில் 10%ம், தமிழில் 1%ம் தான் நடக்கிறது. என்னதொரு அவலம், பாருங்கள்.

ஒருபக்கம் தமிழை உ.நு. கொண்டு வலுப்பெற விடாநிலையில், இன்னொரு பக்கம் மேலைப் பொருளியலை மேம்படுத்த இந்தியாவில் உ.நு. தொழில்களைச் சில நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன. இவற்றை ஊக்குவிக்கத் தமிழக அரசும் 1997, 2002, 2005, 2008, 2014 ஆகிய ஆண்டுகளிற் உ.நு. (IT), உ.தொடர்பாடல் (ICT), உ.நு. வாய்ப்புற்ற சேவை (ITES) [3]  ஆகியவற்றின் பொள்ளிகைகளை (policies) [4]   வெளியிட்டது. {2014 இல் உ.நு.வா.சே. (ITeS) பொள்ளிகையும் வெளிவந்தது. இவை தவிர, 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் அறிவிக்கும் உ.நு.திட்டங்களுமுண்டு.}  இவற்றை வெளியிடுவது தேவை தான் எனினும் இவை உ.நு.தொழிலுக்கு மாநில அரசு கொடுக்கும் ஆதரவைத் தெரிவிப்பன மட்டுமே என்பதை நம் கருத்திற் கொள்ளவேண்டும்.

தமிழக அரசைப் போலவே புதுச்சேரி அரசும் 2002, 2008 ஆம் ஆண்டுகளில் உ.நு. பொள்ளிகையை (காண்க  http://dit.puducherry.gov.in/)  வெளியிட்டிருக்கிறது. ஆனால், இரு அரசுகளும் ”தொழில்சார்ந்த உ.நு.கணிமை தனி, தமிழ் வளர்ச்சிக்கான கணிமை நுட்பியல் தனி” என்ற வேறுபாடு உணர்ந்ததாய்த் தெரியவில்லை. இதனால், ஏறத்தாழ 15 ஆண்டுகளாக, தமிழக, புதுவை அரசுகள் தொழில்சார் கணிமைப் பொள்ளிகைகளுக்குள் தமிழை நுழைத்து ஒதுக்குகின்ற நிதியாற் ”போடும் முயற்சிகள் என்னவாகிறது?” என்று அறியாது இருளில் இருப்பது போலாகிறது. அரசுகள் நிலை இப்படியிருக்க, பொள்ளிகை வேறுபாடுணர்த்தும் அரசதிகாரிகளும், கணிஞரும் வாளாய் இருக்கிறார்.

உ.நுட்பியலால் புத்தாக்கங்கள், தொழிற் செலுத்தங்கள், அலுவ இயக்கங்களைத் தமிழ்வழித் தானியக்கமாக்கவும், கட்டுறுத்தவும் (control)] தமிழர்க்கு, தமிழுக்குச் செய்யும் வண்ணம் மாநில அரசுகள் பொள்ளிகை அளிக்கவேண்டாமா? நம் மொழி வழியே ஆட்சி, தொழில், கல்வி, வணிகம், பொதினம், நயன்மை நடந்தால் நம் மாநில மக்கள் பயனுறுவரல்லவா? அரவணைப்புச் சனநாயகம் (inclusive democracy) என்பது அதுதானே?

நம்முடைய போகூழாய், இதுவரை தமிழ்க் கணிமைக்கான உ.நு. பொள்ளிகையைத் தமிழக, புதுவை  அரசுகள் ஆகிய இரண்டுமே வெளியிட்டதேயில்லை. இவ்வரலாற்றுத் தடுமாறலால், தமிழக, புதுவை அரசுகள் தமிழ்க்கணிமையை அடிப்படையாகக் கொண்ட தமிழ்வளர்ச்சிக்கு நிறை பணியை ஆற்றமுடியாது இருக்கின்றன. ஆவலாகத் தமிழ் வளர்ச்சிக்குச் செய்யும் அரசு முயற்சிகளும், ஒதுக்கும் நிதியும் தொழிற்சார் பொள்ளிகைக்குள் சென்று அளிக்கவேண்டிய பலனை அளிக்காது முடங்கிவிடுகின்றன.

1997 இல் வெளியிட்ட தமிழக உள்ளுறும நுட்பியற் பொள்ளிகையிற் தமிழ் பற்றி ஒன்றுமேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறியேற்றங்களிற் கோட்டைவிட்ட காலமது. C-DAC இன் ISCII குறியீட்டை நடுவணரசு ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பிய போதே அனைத்தெழுத்துக் குறியேற்றத்தைப் (TACE) தமிழக அரசு பரிந்துரைத்திருப்பின் தேவையான குறியேற்ற இடங்கள் நமக்குக் கிடைத்திருக்கும். Level 1 ஆதரவோடு எல்லாச் செயலிகளும் இங்கு  உருவாகியிருக்கும். 2002 பொள்ளிகையில், 

10.1. Efforts already taken in the use of Tamil in information technology by the government will be strengthened / 10.1.1. The government will facilitate research in Tamil computing / 10.1.2. Tamil software development fund (TSDF) will be further strengthened for devising IT solutions in Tamil / 10.1.3. All websites will be converted into Bilingual

என்ற வரிகள் மட்டுந் தமிழ்க்கணிமை குறித்து உப்பிற்குச் சப்பாணியாய்ச் சேர்க்கப் பட்டன. சொல்வதை அளக்கக் கூடிய மட்டிகை (metric) இல்லாத  ஒரு பொள்ளிகையால் வெறும் விருப்பம் மட்டுமே தெரிவிக்க முடியும். 2005இல் உள்ளுறும நுட்பியல் வாய்ப்புற்ற சேவைத் தொழிலுக்கான பொள்ளிகை வெளிவந்தது. தமிழைப் பற்றிப் பேச இதிலும் வாய்ப்பில்லை. 2008 இல் வெளியிட்ட உள்ளுறுமத் தொடர்பாடற் பொள்ளிகையில்  (ICT 2008)

17. The use of Tamil in information Technology / 1. The Government will promote and popularize Tamil Virtual University in India and abroad. Efforts will be taken to host Tamil Books and Publication in an e-library along with Technical Glossaries and cultural Video Gallery. / 2. The Government of Tamil Nadu will encourage efforts to improve standards for Tamil in computing and mobile applications. / 3. An international conference on development of Tamil Computing will be conducted.

என்றிருந்தது. இன்றோ, தமிழக அரசு தொடங்கிய மெய்நிகர் பல்கலைக் கழகம் வெறுந் தமிழிணையக் கல்விக்கழகமாய்ச் சுருங்கிப் போனது. இந்நிறுவனம் ஆற்றிய பணிகளையும், அதற்கான செலவுகளையும் அளக்கத்தான் மட்டிகைகள் ஏதேனுமுண்டா? - எனில் இல்லை. எதையும் அளக்க முடிந்தாற்றானே, ”என்ன சாதித்தோம்?” என்பது தெரியும். அளக்கவியலா நிலைக்கு தமிழ்க்கணிமை முயற்சிகள் முடிவதன் காரணம், தமிழ்க்கணிமைப் பொள்ளிகை என்பதே தனியாக இல்லாது,  தொழில்சார் உ.நு.பொள்ளிகைக்குள் அதை முடக்கியதே காரணமாகும். பேசுவது மட்டுமே பென்னம் பெரிதாகும் நம்மூரில் ஆக்கங்கள் என்பவை அரிதாகவேயுள்ளன. தமிழ்க்கணிமை மேம்பாட்டிற்குப் பன்னாட்டுக் கருத்தரங்கு நடத்துவது, ஒரு சில உத்தமம் மாநாடுகளுக்கு நிதியுதவி தந்ததைக் குறித்தது போலும். குறிக்கும் வகையில் தமிழ்க்கணிமை ஆய்விற்கு தமிழக அரசு எதையும் செலவிட்டதாயும், TSDF மூலம் தமிழ்ச் சொவ்வறை (software) வளர்ச்சிக்குப் பெரிதாய்ச் செலவு செய்ததாயும் தெரியவில்லை.

இத்தனை ஆண்டுகளில், இப்பொள்ளிகைகளால் தமிழ்க்கணிமைக்கு நடந்ததைக் கணக்கிட்டால், நெஞ்சுநிறைய ஆறா வருத்தமே அண்ணுகிறது. தமிழ்க்கணிமை என்பது வெற்றிடத்திலியங்குமா? மின்னிவலுவிற்கு ஒருங்கிணையும் சொவ்வறையர் (software specialists) எப்பொழுது இயல்பாகத் தம் வேலைசெய்வார்? உருவாக்கும் நிரலிகளுக்குச் சந்தை  என்பது ஏற்பட்டாற்றானே? எண்ணிச் சொல்லுங்கள். எந்தத் தமிழ்ச் சொவ்வறை கணிசமாய் விற்றிருக்கிறது? ஒரு புள்ளி விவரமாவது தமிழக, புதுவை  அரசுகளிடம் இருக்கிறதா அல்லது உத்தமம் போன்ற அமைப்பினர் தான் அதைச் செய்திருக்கிறாரா? அல்லது தனியார் யாராவது அவற்றைச் சேகரித்திருக்கிறாரா?

உதட்டளவில் மின்னாளுகை என்று பேசிப் பலனென்ன? 97 இலிருந்து இன்றுவரை, கணித்தமிழ் முயற்சிகளில் பொருளியல் அளிப்பையும் (supply side economics) அதில் வரும் சிக்கல்களையுமே எல்லோரும் பேசுகிறோம். இவை கிடைத்தால் தமிழர் தமிழுக்கு மாறுவரென்பது ஒருவகையிற் பார்த்தாற் கானல்நீர் தான். நாம் யாரும் கொஞ்சங் கூடத் தேவைப் (demand) பக்கத்தைப் பார்க்கவேயில்லை. அதைச் சரிசெய்யவே இப்பொழுது தமிழ்க்கணிமை குறித்து ஒரு பொள்ளிகை வேண்டுமென்கிறோம் இப்பொள்ளிகையின் உள்ளடக்கங்களும் அடிப்படைகளும் எப்படி இருக்க வேண்டுமென கீழ்க்கண்ட கருத்துகளைக் கட்டுரை முன்வைக்கிறது.

1. இப்பொள்ளிகையின் முதல் ஒப்புகை, குறியேற்றம் பற்றியதாய் இருக்கவேண்டும். இணையப் பரிமாற்றங்களுக்கு ஏதுவாக ஒருங்குறியையும். அச்சு நுட்பத்திற்குத் தேவையான வகையில் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் 2009 இல் வரவேற்ற தமிழக அரசாணை, கடந்த ஐந்தாண்டுகளிற் செயல்வடிவம் பெறாது நிற்கிறது. ”வானவில்” போன்ற 8 மடைத் (bit) தனியார் குறியேற்ற வார்ப்புக்களை (fonts) அரசுச் செயலகங்களில் இன்னும் புழங்குவது அடுத்த 6 மாதங்களுக்குள் நிறுத்தப்பட வேண்டும். (ஒருங்குறியிற் தமிழை உள்ளிட இலவயமாக TVA இன் உள்ளீட்டு நிரலி, Microsoft இன் PME எழுதி, NHM writer, இ-கலப்பை எனச் சொவ்வறைகள் கிடைக்கின்றன.) இது புதுவையரசிற்கும் பொதுவான பொள்ளிகைத் தொடக்கந்தான்.

2. தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கும்  வலைத்தளங்கள் இற்றைப் படுத்தப்பட வேண்டும். இவ்வலைத்தளங்கள் பலவும் ஆங்கிலத்திலேயுள்ளன. தமிழில் இருப்பவை பல்வேறு தனியார் குறியேற்றங்களிலுள்ளன. புதுச்சேரி அரசிலும் வலைத்தளங்களின் நிலை சிறப்பாக இல்லை.   http://dit.puducherry.gov.in/documents/GovtWebsite_guidelines.pdf  என்ற புதுவை அரசின் இணையத்தளம், இந்திய நடுவணரசு உருவாக்கிய அரசாங்க வலைத் தளங்களுக்கான கையேட்டை, வழிகாட்டியை வெளியிட்டிருக்கிறது. ஆவணத்தின் பகுதி 5.7ல் கீழ்க்கண்டவாறு நடுவணரசு சொல்கிறது:

At present, a majority of the content in Government websites is in english, except few which have content in Hindi or one of the Regional languages. Thus, even though Government websites are accessible, they are still not usable. Hence, there is a need to put the information in Regional languages. Depending on the nature of the content and its prospective usage, content should be translated in desired languages and should be a part of the same website with prominent links. Technology for publishing the content in Indian languages is already quite developed and a large number of tools are available to support this

தன்முனைப்பாய்ச் செய்யவேண்டிய அடிப்படைக் கணிமை விதயங்களை நடுவணரசு வற்புறுத்தி வழிகாட்டிச் சொல்லியும் பல்வேறு மொழிசார் மாநில அரசுகள் அவ்விதயங்களை முழுமையாகச் செய்யாதுள்ளன. தமிழ்க் கணிமைப் பொள்ளிகைகள் இல்லாமையும், உ.நு.பொள்ளிகைக்குள் தமிழைத் தள்ளிவிட்டதால் எழுந்த செயல் வடிவக் குழப்பங்களும் இதற்கு முதற் காரணமாகும்.

3. தமிழக அரசு, மக்களுக்காகப் பல்துறை  விண்ணப்பங்கள்/படிவங்களை (500/1000 தேறுமா?), உருவாக்கியிருக்கிறது. இவற்றை இணையத்தில் அணுகும் படி தமிழ் ஒருங்குறி வார்ப்பில் எடுகோட்டு நிலையில் (on line) வைக்கவேண்டும். அரசக் கருமங்களில் பொதுமக்கள் நேரே வந்து அலுவரைப் பார்த்து விண்ணப்பிக்கும் நடைமுறை படிப்படியாகக் குறைய வேண்டும். துறை வாரியாகத் தமிழ்வழி மின்னாளுமை இன்னின்ன மாதங்களில் இப்படி நிறைவு செய்யப்படுமென்ற கால அட்டவனை உருவாக வேண்டும். இது நீண்ட கால எல்லை கொண்டிராது, 6 மாதம் முதல் ஓராண்டு காலத்துள் நடைமுறையாகவேண்டும்.

4. இப்பொழுது உ.நு.பொள்ளிகைக்குள்ளேயே மின்னாளுகை என்ற கருத்தீடு வந்துகொண்டிருக்கிறது. இனிமேல், அது தமிழ்க்கணிமை சார்ந்த நுட்பியற் பொள்ளிகைக்குள் வரவேண்டும்.

5. தமிழக அரசின் அடிப்படை ஆவணங்கள் இன்று ஆங்கிலத்திலேயே யுள்ளன. அவை சட்டபூருவமென்றுஞ் சொல்கிறார். இதை மாற்றித் தமிழ் ஆவணமே எதிர்காலத்தில் அடிப்படையாக வேண்டும். எல்லா அரசு ஆவணங்களும் தமிழிற் கிடைக்க வேண்டும்; மற்ற மொழிகளிலிருப்பின் அவற்றைப் பெயர்க்க வேண்டும். அரசின் துணையாய் இயந்திர மொழி பெயர்ப்புத் துறை வலுப்பட வேண்டும். ஆட்சித் துறை, சட்டத்துறைத் தமிழ்ச்சொற்களைப் பொதுக் கொற்றத்திற் (public domain) கொணரவேண்டும்.

6. நாடாளுமன்றச் சட்டத் திருத்தத்தின் மூலம், மாநில மொழிகள் ஆட்சி மொழி அதிகாரம் பெறவேண்டும். நடுவண் அரசிற்கு தமிழ்நாட்டிலிருந்து போகும் ஆவணங்கள் தமிழானாலும் ஏற்கப்படும் நுட்பியல் வாய்ப்பு அமைய வேண்டும்.

7. தமிழ்நாடு, புதுவை அரசுகள், தத்தம் மாநிலத்தில் தமிழ்க் கணிமைச் சந்தையின் மதிப்பைக் கணக்கிட வேண்டும். கணிகளிற் தமிழ்ப்பயன்பாடு, நுட்பக் கணிமை, மொழியியற் கணிமை, அறிதியியற் கணிமை (informatics computing), வரைகலைக் கணிமை, தமிழ் மின்னாளுகை போன்ற பல்வேறு வகைப்பாடுகளில் இற்றைத் தமிழின் நிலை பற்றி ஆய்வுகளையும், ”இதில் உருவாகும் வருமானம் என்ன? இதற்கு அரசும் தனியார் நிறுவங்களும் செலவிடும் தொகை எவ்வளவு?” என்பவை போன்ற சந்தைசார்ந்த ஆய்வுகளையும் நிகழ்த்தி, அவற்றின் அடிப்படையில் வளர்ச்சிப்பணிகளைத் திட்டமிடவேண்டும். வெறுமே, ஓர் அரசு, நிதி ஒதுக்கீடு செய்வது மட்டும் போதாது. ஆற்றில் போட்டாலும் அளந்துபோடென்பாரே? அளந்தாற்றானே இதுவரை தொலைவும், போகும் தொலைவும் புலனாகும்? அப்படியான ஆய்வுகளையும், அளவைகளையும் தமிழ்க்கணிமை உ.நு.பொள்ளிகை கொண்டிருக்கவேண்டும்.

8. பல்லாயிரம் கோடி வருமானம் உருவாக்கும் உ.நு.நிறுவனங்கள் ஆண்டு தோறும் வளர்வதுபோல் தமிழ்க்கணிமை ஏன் இதுகாறும் வளரவில்லையென ஒப்பாய்வு செய்யவேண்டும். அப்படிச் செய்தால், உ.நு நிறுவனங்கள் என்பவை வெறுமே கட்டங்களுள் இயங்கவில்லை என்பதும், அவை உருவாக்கும் சொவ்வறைகளுக்குத் தரக்கட்டுப்பாடு, செலுத்தங்கள், இதனை இதனால் இவன் இப்படிச் செய்யும் எனும் முறைமைகள்,  செய்தவற்றைச் சரிபார்க்கும் நெறிகளென உலகளாவிய உயர்கணிமைக் கோட்பாட்டுள் இயங்குவது போன்றவை விளங்கும். அத்தகைய உலகளாவிய கோட்பாடுகளைத் தமிழ்க்கணிமைக்கும் கொணர்ந்து நிறுவனமாக்க வேண்டும். இன்றைக்கு, தமிழ்க்கணிமைத் துறையில் இன்றியமையா அடிப்படை ஒரு சிறிதுமில்லை. கணிவழி மின்னாளுமை என்பது, வெறுமே ஒரு வலைத்தளம் போட்டுத் திறப்புவிழா நடத்துவதல்ல. சொவ்வறைப் பொறியியல் (Software Engineering) என்றுதானே சொல்கிறோம்? தமிழ்க் கணிமைக்குட் “சொவ்வறை இருக்கிறது”; அதையுருவாக்கும் பொறியியல் பற்றி நாம் சிந்தித்தது கூடக் கிடையாது.

9. அடுத்தது சொற்திருத்தி, இலக்கணத் திருத்தி பற்றியது. எழுத்து, சொற்றொடர்,  வாக்கியம், நடை எனப் பிழைகள் மலிந்து தமிழாக்கங்கள் வருவதை இப்போது யாரும் கண்டுகொள்வதில்லை. ஆங்கில ஆக்கங்கள் இணையத்தில் அப்படியில்லை. அடுத்த இரண்டாண்டுகளுக்குள் 2, 3 சொவ்வறைச் செருகிகளாவது (software plug-ins) சந்தையிற் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இம்முயற்சி தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் / தமிழிணையக் கல்விக்கழகத்தின் நெறியாளுகையிற் செயற்படலாம். (அண்மையில் ”மென்தமிழ்” சொல்லாளரை பேரா. தெய்வசுந்தரம் உருவாக்கினார். அது சொற்திருத்தியாகவும், இலக்கணத் திருத்தியாகவும் வேலை செய்கிறது.)

10. இப்பொழுது மாநிலமெங்கும் வணிகப் பெயர்ப்பலகைகள் தமிழ் ஆகின்றன. இது  தொடக்கப் பணியே. அடிப்படைத் தேவை கடைகளுக்கு உள்ளேயே இருக்கிறது. எந்தக் கடையில், நிறுவனத்தில், பெறுதிச்சீட்டு (receipt) வாங்கினும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது. இது சரியில்லை. தமிழ்நாட்டு வணிகம் தமிழில் நடைபெறவேண்டும். தமிழில் பெறுதிச் சீட்டை ஊக்குவிக்க, மாநில அரசு விற்பனைவரியில் அடிப்படை மாற்றஞ் செய்ய வேண்டும். தமிழிற் பெறுதிச் சீட்டு கேட்டால் குறிப்பிட்ட % உம், ஆங்கிலத்திற் கேட்டால் 1% அதிக விற்பனைவரியும் விதிக்க வேண்டும். புதுச்சேரி அரசும் இதைச் செய்யலாம். இதனால் பொதினங்களில் தமிழ் புழங்குமொழியாக மாறித் தமிழ்ச் சொவ்வறைகளுக்குத் தேவையெழும். ஆயிரக்கணக்கில் படியாற்ற நிரல்கள் (application programmes) எழும். அலுவற் சொவ்வறைகள் (Office softwares) தமிழில் வர, இத்தூண்டுதல் தேவையான ஒன்றாகும்.

11. தமிழகம், புதுவையில் விற்கும் மின்னிக்கருவிகளின் கையேடுகள் தமிழில் இருக்க வேண்டும். பிறமொழிகளிலிருந்தால் 1% அதிக விற்பனைவரி விதிக்கவேண்டும்.

12. மேல்நிலைப் பள்ளிமாணவர்களுக்குக் கொடுத்திருக்கும் மடிக்கணி தமிழ் வலுப் பெற்றதாகவேண்டும். தமிழகம், புதுவையில் விற்கும் கணிகள், மின்னிக் கருவிகள் தமிழ்வலுப் பெற்றிருக்கவேண்டும். அப்படி வலுப்பெறாத கருவிகளின் விற்பனை தமிழகம், புதுவையில் தடைசெய்யப் படவேண்டும். தமிழ்வலுக் கொள்ளாத நகர்பேசிச் சேவையர் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் தொழில் தொடராதவாறு செய்யவேண்டும்.  

13. கணிமயமாகும் தமிழக பத்திரப் பதிவுத் துறையின் எல்லாப் படிவங்களும் தமிழில் எழுந்து, பெறுதிச் சீட்டுக்கள் தமிழிலேயே கொடுக்கப்படவேண்டும்.

14. தமிழக அரசு நடத்தும் கல்வி வாரியங்கள், பல்கலைக்கழகங்களின் அலுவல்கள் அனைத்தும் தமிழில் நடந்து தமிழ்வழி மின்கல்வி பெருக வேண்டும். முதுகலை, முது அறிவியல், இளம் பொறியியல், மருத்துவம், இள முனைவர், முனைவர் பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான புறத்திட்டு அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) 5 பக்கங்களில் தமிழ்ச் சுருக்கம் கொண்டிருக்கவேண்டும். நேர்முகத் தேர்வில் 15 நுணுத்தங்களாவது (minutes) தமிழில் கேள்விகள் கேட்டு, விடைவாங்கி, அதற்கப்புறமே பட்டமளிப்புத் தேர்ச்சி கொடுக்கவேண்டும். தமிழறியாது நம் பல்கலைக்கழகங்களிற் பட்டம் பெறுதல் தடுக்கப்படவேண்டும்.

15. தமிழை ஆட்சிமொழியாக்கி, தமிங்கிலப் பயன்பாட்டைக் குறைக்கும், நாளிதழ்கள், தாளிகைகள், ஊடகங்களுக்கே தமிழக அரசு விளம்பரங்களைக் கொடுக்கவேண்டும்.

16. தமிழகத்திலிருக்கும் நடுவண் அரசுத் துறைகள், நிறுவனங்களில் பொதுமக்களோடு நடக்கும் பரிமாற்றங்கள் தமிழிலேயே நடைபெற வேண்டும் அரசு வங்கிகளிலும் இந்த நடைமுறை நிலைபெறவேண்டும்.

17. உயர்நியதி மன்றம் வரை வழக்குமன்ற மொழியாகத் தமிழ் ஆகவேண்டும்

18. Excel, Powerpoint Presentation போன்ற சொவ்வறைகளைத் தமிழில் உருவாக்குவதிலும் புதுப் புது முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில இயங்கு கட்டகச் சொவ்வறை (operating system softwares) முயற்சிகளும் நடக்கின்றன. இவை பற்றாது. அடுத்த ஈராண்டுகளில் பேச்சிலிருந்து எழுத்து (speech to text), எழுத்திலிருந்து பேச்சு (text to speech), இயந்திர மொழிபெயர்ப்பு (machine translation), தமிழ் அறிதியியல் (tamil informatics) போன்ற துறைகளிற் தமிழ்ச் சொவ்வறைகள் வரும் படி திட்ட ஒதுக்கீடு செய்யவேண்டும்.

19. தமிழகத்துள் தமிழ், வெளித்தொடர்புக்கு ஆங்கிலம், இதற்கு அணைவாக உ.நு. என்பதே தமிழக மின்னாளுமையின் அடிநாதமாய் இருக்க வேண்டும்.

இக் கட்டுரைக் கருத்துக்களை அலசிக் கிடுக்கித் திருத்திப் வீயெது, மணியெது என்று தரம்பிரிக்க உதவிய நண்பர் நாக.இளங்கோவனுக்கு என் நன்றிகள். மாநாட்டிற் கூடியோரைத் தமிழ்க்கணிமை உ.நு.பொள்ளிகை பற்றிய உரையாடலுக்கு அழைக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:

1. உள்ளுறும நுட்பியல் என்ற புத்தாக்கச் சொல்லைக் கண்டு சிலர் துணுக்குறலாம். ”தகவல் நுட்பத்தின்” போதாமை கண்டே இச்சொல்லைப் பரிந்துரைக்கிறேன். தகவல் போன்ற பெயர்களைக் கடன்வாங்கித் துணை வினை போட்டுச் சுற்றிவளைப்பதால் தமிழ்மொழிப் பயன்பாடு கடினமாகிறது. புதுக்கருத்தை வினைச்சொல்லிற் தொடங்கின், மொழியில் இயல்பாகப் பொருந்தும். பின்னாற் பல பெயர்ச் சொற்களையும், வழியுறு வினைச் சொற்களையும் வாய்ப்பாக அமைக்கலாம். ”உள்ளுறுத்தல்”  என்பது ஒரு விதயத்தின்/செய்தியின் உள்ளடக்கத்தை இன்னொருவருக்கு உணர்த்துவதாகும். உணர்த்தலை உறுத்தலென்றுந் தமிழிற் சொல்லலாம். உள்ளுறுமம் என்பதை உள்ளுறுத்தம் என்றுஞ் சொல்லலாம். I informed him. = நான் அவரை/ அவருக்கு உள்ளுறுத்தினேன்; Information = உள்ளுறுத்தம் அல்லது உள்ளுறுமம்; Information technology = உள்ளுறுத்த நுட்பியல். Information technology companies = உள்ளுறுத்த நுட்பியற் குழுமங்கள்.

2. மின்னி electron-யைக் குறிக்கும்; [இது 1960 களில் எழுந்த சொல்.] மின்னணு என்று நீட்டி முழக்கவேண்டாம். மின்னி, கணிக் (=computer) கருத்திலும் மேலானது; அகண்டது. கணிகளை (computers) மீறி மின்னிப் பொறிகளில் (electronic equipments) இன்று மொழிப்பயன்பாடிருக்கிறது. காட்டு: நகரும் போதே, ஒருவருக்கொருவர் பேசப் பயன்படும் நகர்பேசி (cell phone). இதுபோகத் தொலைக்காட்சி (television), இசையியக்கி (music player). உறையூட்டி (refrigerator), கட்டிட ஒளிமையைக் கட்டுறுத்தும் (control) பெட்டிகள் என மின்னிக் கருவிகளை இயல்மொழிப் பேச்சாலும், எழுத்தாலும்  இயக்குவிக்கும் பயன்பாடு வந்துவிட்டது.

3. மருத்துவ ஒலிபெயர்ப்பு (Medical transcription), சட்டத் தரவடிச் செலுத்தம் (Legal Database processing), தோயல் உள்ளடக்க மேலாக்கம் / அசைவூட்டம் (Digital content development/animation), தொலைப் பேணல் (Remote Maintenance),  கணக்கு வழக்கு / நிதிச் சேவைகளுக்கான பின்னலுவ இயக்கங்கள் – (Back office operations – Accounts/Financial Services), தரவுச் செலுத்தங்கள் (Data processing), அழைப்பு நடுவங்கள் (Call centres), பொறியியலும் அடவும் (Engineering and Design), புவிக் கிறுவ உள்ளுறுமச் சேவைகள் (Geographic Information Services), மாந்தவள ஊற்றுச் சேவைகள் (Human Resources Services), காப்புறுதி உரிமை கோரும் செலுத்தங்கள் (Insurance Claim Processing), சம்பளவரிசைச் செலுத்தங்கள் (Payroll processing), வருமானக் கணக்கிடல்கள் (Revenue Accounting), ஆதரவு நடுவங்கள் (Support Centres), வலைத்தளச் சேவைகள் (Website Services), பொதினச் செலுத்த வெளியூற்றுகை (Business Process Outsourcing) ஆகியவை தமிழக அரசினால் ITES துறையில் முகன்மையாய்க் கருதப்படுகிறது.

4. ”பொள்ளிகை” என்ற சொல்லும் சிலருக்குப் புதிதாய்த் தெரியும். பலரும் ”கொள்கை”யையே policyக்கு இணையாகப் பயிலுவர். philosophy, doctrine, principle என்பவற்றைப் பின் எப்படிச் சொல்வது? அவையும் கொள்கைகள் என்று சொல்லபடுகின்றனவே? தமிழ்க் கலைச்சொற்களின் சிக்கல்களில் ஒன்று துல்லியம் பற்றியதாகும். இருப்பதை வைத்துப் பூசி மெழுகுவது எனில் எந்தக் கலைச்சொல்லும் தமிழிற் சரியாக வரையறுக்காது. பொள்ளுதல் என்பது பொறித்தலுக்கு முந்தைய வினைச்சொல்லாகும். ”இன்னின்னதை இந்த அரசு செய்யும்” என்று கல்லிலும், செப்பேட்டிலும், ஓலையிலும் பொள்ளிக் காட்டுவது அக்கால அரசர்களின் வழக்கம். பொள்ளப் பட்டது பொதுப்பார்வைக்கும் கவனத்திற்கும் வந்துசேரும். சுருங்கச் சொன்னால், பொள்ளப்பட்டது பொள்ளிகை.

Monday, September 08, 2014

'இன்னும் கொஞ்சமாய் என்மனக் கசகில் '

Thursday January 15, 2004 இல் திண்ணையில் வெளிவந்த அகவற்பா. திண்ணை வலையிதழில் இனிமேலும் இருக்குமா என்ற ஐயம் எனக்கு வந்துவிட்டது. சேமிப்பிற்காக இங்கு இடுகிறேன்.
அன்புடன்,
இராம.கி.



உலகியற் போக்கில் ஒன்றிய பலரும்
இலகாய்க் கேட்பது 'இன்னுங் கொஞ்சம் ';
எங்கு திரும்பினும், எப்படிக் காண்கினும்,
அங்கு நுழைவது, 'இன்னுங் கொஞ்சம் ';
கிண்ணிச் சோற்றைக் குழவி மறுத்தால்,
அன்னை சொல்வது 'இன்னும் கொஞ்சம்! '
நுழைவுத் தேர்வில் முன்னிலை நோற்பின்,
விழையும் மதிப்பெண், இன்னும் கொஞ்சம்!
நூற்று மாத்திகள்(0) வெற்றியை நாடின்,
ஏற்றுக வேகம் இன்னும் கொஞ்சம்!
கடுந்தொலை ஓடிக்(0a) கடந்திட வேண்டின்,
இடையிலா நகர்ச்சி(1) இன்னும் கொஞ்சம்!

இதுபோற் காட்டுகள் எத்தனை ? இருந்தும்,
அதுவெல் லாமே அறிந்த விளைவுதான்!
கொஞ்சம் முயன்றால், கொஞ்சம் பலன்கள்!
கொஞ்சம் விஞ்சினால், கூடிய விளைவு!
கொஞ்சம் என்பதின் எல்லை எதுவரை ?
விஞ்சி யஞ்சியே துஞ்சும் வரையிலா ?
இன்றைய அறிவியல் விந்தையிற் கொஞ்சம்
உன்னியே பார்த்தால், புரிந்தவை புரியா.

இன்னும் இன்னுமே கொஞ்சம் ஏற்றினால்
என்ன ஆகிடும் இயற்கை விளைவுகள் ?
ஆலெனப் படர்ந்து அகல்ந்திடப் போமோ ?
பீலிபெய் சகடாய் அச்சிறுந் தாகுமோ ?
பரந்த பாலையில் பாவும் மணலெலாம்
சரவிக் கிடக்கும் சமன்வெளி யென்றால்,
முன்னுறு நிலையாய் முகிழ்ப்பது எதுவோ ?
கன்னிய வெறுமையில் கானல் பூக்குமே ?
மேடும் பள்ளமும், போடும் விடுகதை
புரிந்தால் தானே போயுறும் பயணம் ?

'கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டிச் செய்கையில்,
கொஞ்சம் விளையுமா ? கொள்ளை பெருகுமா ?
இழுமிய விளைவா(3) ? இழுமா விளைவா(4) ? '
'சுழுமுனை(5)ச் சூக்குமம் சொன்னவர் யார்தான் ? '
இந்த ஆய்விலே இசகு பிசகென
வந்து தித்ததே, கசகு (2) எனும்புலம்;
பூத வியலும்(6), வேதி யியலும்(7),
ஆதிக் கணக்கும், அளகை யியலும் (8)
புதுவகைப் போக்கில் கசகைப் புரட்டும்;
நொதுமற்(9) பார்வையில் நோக்குவோம் ஒருசில!

முதற் பார்வை:

குவளை ஒன்றில் துவலை நீர்ப்பல
குவளைச் சுவரைத் தொடுகும் வரைக்கும்
ஆடி அசைந்து முத்தெனக் காட்டும்;
கூடிப் பெருகியும் கூவளைத்(10) தோற்றமே;
இன்னும் கொஞ்சம் இட்டதும், நீர்த்துளி
சன்னமாய்ச் சுவரைச் சார்ந்ததும், 'அடடா!
எப்படி மாயம் இங்கேற் பட்டது ?
குப்புறப் பரவிக் கூங்குவை(11) ஆனது ? '

இரண்டாம் பார்வை:

கொஞ்சம் வெப்பிட(12), குவளையுள் நீர்மம்
கொஞ்சம் வெம்மை(13) கூட்டியே காட்டும்;
மிஞ்சிக் கொதிநிலை மேவா வரைக்கும்,
கொஞ்சம் உப்பும்(14), கொஞ்சம் குமுறும்;
கிடுகிய நிலை(15)க்கு அடுகா திருந்தால்,
கடுகிய மாயம் காட்டிச் சிதறும்!
சின்ன வெடிப்பு; சீறும் பொக்குளம்(16);
மண்டி விரிந்து மேலுறும் ஆவி,
சடபுடத் தாளம், சக்கர வாகம்!
படபடச் சத்தம், வாகை(17)யே மாற்றம்!

மூன்றாம் பார்வை:

தூரம் என்பதே மாறா முழுமுதல் (18),
சாரம் இதுவெனக் கற்றோம் இல்லையா ?
ஓரடிக் கோலை ஒத்தி அளந்தால்,
ஈழகத் தீவின் சுற்றள வென்ன ?
பாதிய கோலாய்ப் பதித்துப் பார்த்தால்
ஏதிது மாயம் எக்கச் சக்கமாய் ?
இன்னம் கூடுதே இத்தரைச் சுற்று ?
சின்னக் கோலால் சீரிதாய் அளந்தமோ ?(19)
அளவுகோல் இக்குணி ஆகியே விட்டால்,
விளம்பிய சுற்று விளிம்பிலாத் தொலைவோ(20) ?

பரந்த பார்வை:

இப்படிக் கொஞ்சம் ஏறவும், குறையவும்,
எப்படி விந்தை, இயற்கையின் நிகழ்வில் ?
தன்னுமைச் சமலையாம் (21); பகுவல் தோற்றமாம் (22);
பகிர்த்த விளைவாம் (23); பட்டாம் பூச்சியாம் (24);
ஆருடம் சொல்லுதற்கு அமையாப் புலமாம் (25);
விந்தையின் ஈர்ப்பாம் (26); துருவளை நகர்வாம் (27);
எல்லாம் ஒருவகைச் சொலவம் என்றுநாம்
தள்ளவும் முடியா நுள்ளிய விளைவுகள்;
கொளுவிய(28) தெல்லாம் குலைக்கும் விளைவுகள்;
இழுமாச் செய்கைகள் இன்னுமா கொஞ்சம் ?

அத்தமே இல்லா ஆழறி வியலில்,
வித்தகர் இந்நாள் விண்டியே சொல்வது:
'உலகப் போக்குகள், ஆருடக் கணிப்பிலை,
கலவும் தொடக்கக் கட்டையே(29) பொறுத்ததால்!
தொடக்கம் மாறின், தோய்வதும் மாறும்!
மடக்கிப்(30) பெருகி மாறுபட் டோடும்! '
தொடக்க முரணின் விடைப்புக் கூறுகள்
இடக்கர் அளித்து முடக்கியே வைக்கையில்,
தலையா ? பூவா ? தாயக் குலுக்கலா ?
பழமா ? மலையா ? பாம்பா ? ஏணியா ?

தனிக்கதைப் பார்வை:

'இன்னும் கொஞ்சம் ' என்கிற கட்டுகள்
தன்னிலே பாதிதான்! தனிக்கதை அறியுமோ ?
'பென்னம் போர்க்களம்; இருபடை; ஒன்றில்
சின்னஞ் சிறிய ஆணியில் லாமல்
புதையடி(31) போச்சு; குதிரையும் போச்சு;
குதிரையின் வீரனோ குப்புறக் கவிழ்ந்தான்;
வீரன் இறந்ததால், போரிலே தோற்றார்;
பாரிலே அரசு பாழாய்ப் போச்சு ';
இன்னும் கொஞ்சம் ஆணிகள் இருந்தால்,
தன்னுடை அரசைத் தவிக்க விடுவரோ ?

வாழ்கோட்டுப் பார்வை:

கசகு என்பதை மிகையுடன் சொன்னால்,
திசைகளே அறியாத் திகைப்புடன் முடியலாம்;
முடிவிலா ஓர்மையில் தொடக்குகள் மாறி,
அடிகொள் வாழ்நிலை அகன்றே விலகி,
நாற்பரி மாண நகர்விலே உழன்று,
ஏற்புறுங் காலப் பிறழ்ச்சியும் வாய்த்து,
என்வாழ் கோடு எங்கோ சுழித்து,
என்றன் பேரன் எனக்குமுன் பிறந்து,
யானே எனக்கு வழிமுறை ஆகி,
கோணிக் குறுகி குழம்பிக் கிடப்பனே!

'என்ன மானி! கடைசிலே
ரொம்பச் சிக்கலா கசகுலே
கொணாந்துட்டாக! '

'பங்காளி, இதுக்கே பயந்தா, எப்படி ?
இன்னம் கொஞ்சம், எத்தனையோ இருக்கு,
நம்ம ரெண்டுபேரு வாழ்கோடும்
இன்னொரு நாள் முட்டுணாப் பார்க்கலாம்.
அப்ப, வரட்டா ? '

------------------------------------------------------------------
சொல் விளக்கம்:

0) நூற்று மாத்திகள் = 100 meters
0a) கடுந்தொலை ஓட்டம் = marathon run
1) இடையிலா நகர்ச்சி = non-stop movement or motion
2) கசகு = chaos, கசங்கிக் குதறிக் குழம்பிக் கிடப்பது கசகு; இந்தச் சொல்லையே chaos என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறேன். இந்தப் பாவில் இனி வரும் கருத்துக்கள் சிலவற்றின் விரிவை James Gleick எழுதிய Chaos என்ற பொத்தகத்தில் அறியலாம்; அருமையான பொத்தகம்; வியக்க வைக்கும்
செய்திகளை அறிவு பூர்வமாக அங்கே காணலாம். (இது ஒரு கார்டினல் வெளியீடு.)
3) இழுமிய விளைவு = linear effect
4) இழுமா விளைவு = non-linear effect, கோடு என்பது இழுத்து வருவது (line); ஆயினும் அதற்கு வளைவு என்ற பொருளும் பழகு தமிழில் வந்துவிட்டது.
இழுத்தலின் திரிபான இழுமித்தல் என்ற இன்னொரு சொல்லும் கோடுதல் என்பதற்கு இணையானதே; நாம் புரிகின்ற ஒரு செய்கையில் (process)
ஒரு சாராத வேறி (independent variable)யை அதன் மதிப்பில் இருந்து கொஞ்ச விழுக்கிற்கு வேறுபட வைத்து, இந்த வேறுபாட்டின் விளைவால்,
சாருகின்ற வேறியும் (dependent variable) தன் மதிப்பில் அதே விழுக்கு வேறுபடுமானால்,இத்தகைய உறவு உள்ள செய்கையை,
இழுமியச் செய்கை (linear process) என்றும், கன்னா, பின்னாவென்று அளவிறந்து நிறைய விழுக்கு வேறுபடுமானால் இழுமாச் செய்கை (non-linear process) என்றும் இன்றைய அறிவியலில் சொல்லுவார்கள். இழுமிய செய்கையில் அதன் சாய்வு (gradient) மாறாது இருக்கும்; இழுமாச் செய்கையில் சாய்வு மாறிக் கொண்டு வரும் (gradient will keep changing). இழுமாச் செய்கைகள் பலவும் அவற்றின் வாகு(behaviour)க்களால், இன்றைக்கும் அறிவியலில் புதிராகவே இருக்கின்றன. அதனால் பலரும் இந்தச் செய்கைகளை ஆழ்ந்து படிக்கிறார்கள். கணியின் பயன்பாடு கூடிய பிறகே இந்தப் படிப்பு ஓரளவு முன்வந்து இருக்கிறது.
5) சுழுமுனை = மூளையின் மூல ஆதாரத்தில் இருந்து உச்சித் துளை வரைக்கும் உள்ள நாடி என்பதற்கு, ஓகத்தில் (yoga) பயிலும் சொல்.
6) பூத வியல் = Physics
7) வேதியியல் = Chemistry
8) அளகையியல் = Logic; இதைத் தருக்கவியல், ஏதுசாற்றம் என்றும் சொல்வது உண்டு. இதன் வல்லமை நாவலந்தீவில் காஞ்சியில் சிறந்து இருந்ததால், புத்தர் காலத்திலேயே இதைப் படிக்க பலரும் தென்னாடு வந்ததாகச் சான்றுகள் உண்டு. அளவையாடல் என்ற சொல்லாட்சி முந்நாளிலேயே இலக்கியங்களில் உண்டு. Logic- கும், Law- வும் தொடர்பு உடையவை; அளவை என்பது law- வையும் குறிக்கும். அளவு செய்யப்படுவது அளவை. அதாவது குமுகாயம் ஒன்றைச் சரி என்கிறது; இன்னொன்றை மறுக்கிறது; 'இது அளவுற்றது; இது அளவொழித்தது ' என்று வரையறுக்கிறது. நுண்ணிய வேறுபாடு காட்டுதற்காக logic- ஐ அளகை என்றும், law -வை அளவை என்றும் குறிக்கிறோம்.
9) நொதுமல் = neutral
10) கூவளை = convex
11) கூங்குவை = concave
12) வெப்பு = heat
13) வெம்மை = hotness. (வெதுமை = temperature. வெதுமை என்பது வெம்மையில் இருந்து மிகச் சிறிது வேறுபட்டதாகக் கொள்ளவேண்டும். சில்லீடு, பனிநிலை, குளிர், வெதுவெதுப்பு, சூடு, வெப்பம், கொதிநிலை எனப் பலவாறாக வெம்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறோம். தொடுவுணர்வால் அறியப்படும்
இந்தச் சொற்களுக்கு ஒரு அளவு கோலின் வழி எண்ணிய வெளிப்பாடு (numerical representation) கொடுப்பதே வெதுமை எனப்படும். காட்டாக, பனிநிலையைச் சுழி என்றும், கொதிநிலையை நூறு என்றும் கொள்ளுவது ஒரு வகை வெதுமை அளவுகோல் - temperature scale. இதை நூறலகுக் கோல்
(centigrade scale) என்கிறோம். Temperature is minutely different from hotness. It is a numerical representation of qualitative aspects of hotness.)
14) உப்புதல் = expansion of the volume
15) கிடுகிய நிலை = critical state (என்னங் காணும், இப்படியா கிடுக்குப் பிடி போடுவாங்க!) [இன்னதென்று சொல்ல முடியாமல் இங்குமல்லாமல் அங்குமல்லாமல் கிடுக்கப் பட்டநிலை கிடுகிய நிலை. கிடுகிய நிலையில் ஒரு பொருளை நீர்மம் (liquid) என்றும் சொல்ல முடியாது; வளிமம் (gas) என்றும் சொல்ல முடியாது. எனவே கிடுகிய நிலைக்கு மீறிக் கிடக்கும் வாகையை பாய்ம வாகை - fluid phase என்று அறிவியலில் சொல்லுகிறோம்.]
16) பொக்குளம் = bubble
17) வாகை = வாகு என்ற சொல்லின் திரிவாய்ப் பிறந்தது; phase என்ற சொல்லை இங்கு இது குறிக்கும். (Here the liquid phase is turning into vapour phase); வாகு = behaviour
18) முழுமுதல் = absolute
19) சீரிதாய் அளத்தல் = precise measurement (சீர்மை/சீரிமை = precision; ஓரிமை = uniformity)
20) விளிம்பிலாத் தொலைவு = infinite distance; விளிம்பு = finite; விளிம்பிலி = infinity; கந்திலி என்றும் சிலர் infinity பற்றிச் சொல்லுவது உண்டு. அதுவும் நல்ல சொல்லாக்கமே; கந்து என்பது பற்றுக்கோல்; அடிமரம். கந்து>கந்தன் = வாழ்விற்குப் பற்றுக்கோடு ஆனவன், முருகன். கந்தை வைத்தே கந்தனைத் தொழுத காலம், காட்டு விலங்காண்டிக் காலம்; கந்திற்பாவை என்ற சொல்லாட்சியைச் சிலம்பில் காணலாம். மரங்களின் அடியில் இறைவனைத் தொழுத காரணத்தால் ஆலமர் செல்வன், கந்தன், கடம்பன் போன்ற சொற்கள் எழுந்தன. இன்றைக்கும் கோயில் மரம் என்ற கருத்து தென்னாட்டவர் மனத்தில் ஆழ்ந்து இருப்பதை உணரலாம். கந்தில் படர்ந்த கொடி வள்ளிக் கொடி, எனவே அவன் தேவி வள்ளியானாள்.
வள்ளிக்கு இன்னொரு பொருளும் உண்டு. அதைக் கீழே பார்ப்போம். கந்தில் இருந்து பிறந்த இன்னொரு சொல் கந்தழி. கந்து>கந்தழி = நெருப்பு. தான் பற்றிய கோலையே அழிப்பது.

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே!

என்று தொல்காப்பிய நூற்பா 1034 -ல் குறிப்பிடப் பெறும். கொடிநிலை என்பது மாறாது நிலைத்து நிற்கும் ஞாயிற்றையும், கந்தழி என்பது மேலே சொன்னவாறு நெருப்பையும், வள்ளி என்பது (வளர்ந்தும் அமைந்தும் ஒளிதரும்) நிலவையும் குறிக்கும். இவைதாம் தமிழர்களின் முதல் மூன்று கடவுள்கள். அதனால் தான் அவை 'முதலன மூன்றும் ' என்று குறிக்கப் பெற்றன. வள்ளை = வளர்ந்தும் அமைந்தும் ஒளி தரும் நிலவு. இந்த மூன்றும்
மூவேந்தர்களுக்கு முறையே முன்னவர்களாகச் சொல்லப் பெறும். (இந்தச் செய்திகளை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை பக்கம் 27 -ல் அறியலாம்.) சிலம்பில், தொல்காப்பிய மரபுப்படி, திங்களைப் போற்றி, ஞாயிறைப் போற்றித் தொடங்கும் இளங்கோவடிகள் மூன்றாவதாகக் கந்தழிக்கு முரணாக மாமழையைப் போற்றித் தொடங்குகிறார்.
21) தன்னுமைச் சமலை = self similarity
22) பகுவல் தோற்றம் = fractal appearance (பகுவற் படங்களைப் பார்க்க இணையத்தில் ஒரு தளமே இருக்கிறது. இதைப் பற்றி எழுதத் தொடங்கினால், ஏகப்பட்டவை இருக்கின்றன. தலைசுற்ற வைக்கும் விந்தைகள்.)
23) பகிர்த்த விளைவு = bifurcation (ஒரு புலத்தில் இருந்து இன்னொரு புலத்தைப் பிரித்துக் காட்டுவது.) 24) பட்டாம் பூச்சி விளைவு = butterfly effect (இதைப் பற்றியும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. கசகைப் பற்றிப் படிக்கும் போது இதை உணரலாம்.
25) ஆருடம் சொல்ல அமையாப் புலம் = unpredictable field
26) விந்தை ஈர்ப்பு = strange attractor
27) துருவளை நகர்வு = turbulent motion (துருவிச் சுழித்து வளையும் நகர்வு துருவளை நகர்வு. கசகைப் பற்றிப் படிக்கத் தொடங்கிய பின்தான், துருவளை நகர்வின் உள்ளாழங்கள் புரியத் தொடங்கின.)
28) கொளுவு = hypotheis
29) தொடக்கக் கட்டு = initial condition
30) மடக்கல் = exponentiation (2 என்ற எண்ணின் ஐந்தாம் மடக்கு 32.)
31) புதையடி = boots or shoes, மிதியடி போலப் புதையடி என்று சொல்லலாம். இங்கே குதிரைக் குளம்புக்கான இலாடத்தைக் குறிக்கிறது.
-----------------------------------------

poo@giasmd01.vsnl.net.in




Friday, August 29, 2014

பணம் - ஒரு பால பாடம்

வேறெதையோ தேடிக்கொண்டிருந்த போது, இணையத்தில் பத்தாண்டுகளுக்கு முன் 2004 மே 20 இல் திண்ணையிதழில் வெளியான என் பொருளியற் கட்டுரையொன்று கிடைத்தது.  நானே படித்து “அடடா, முற்றிலும் மறந்து போனேனே?” என்றெண்ணிக் கொண்டேன். இது இப்பொழுதும் படித்தறிய வேண்டிய கட்டுரை தான்.  (தவிர இது என் வலைப்பதிவில் சேமித்து வைத்ததுமல்ல.  இப்போதாவது சேமித்து வைப்போம் என்று செய்கிறேன். உங்கள் வாசிப்பிற்காக இங்கும் இடுகிறேன்.) ஒருவேளை சிவகங்கை வட்டார வழக்கில் எழுதப்பட்டதால், மற்ற வட்டாரத்தாருக்குப் புரிவதிற் கடினமாகலாம்.   பொறுத்துக் கொள்ளூங்கள். முயன்றாற் புரிந்துவிடும். நாங்கள் ஒன்றும் முரணான தமிழிற் பேசிவிடவில்லை. 

(விதப்பான வட்டார வழக்கிலும் இதுபோன்ற கட்டுரைகளை எழுதமுடியும் என்று காட்டுவதற்காக இதை எழுதினேன். அமெரிக்க ஆங்கிலத்தில் எழுதினாற்றான் பொருளியற் கட்டுரைகள் புரியும் என்பதை நான் ஏற்பவனல்லன்.  அவரவருக்குப் பிடித்த அறிவியற் துறைகளில் மனமிருந்தால் நல்ல தமிழில் எழுதமுடியும். அறிவியற் கட்டுரைகளும் தமிழிற் பெருகும். வெறும் கதை, கவிதை, கேளிக்கை, துணுக்கு, கேலி என்பஅர்கு மட்டுமே தமிழைப் பயன்படுத்தி மற்ற அறிவுசார்ந்த துறைகளுக்கு ஆங்கிலம் பயன்படுத்துவது நம்மைக் கரைசேர்க்காது. )

அன்புடன்,
இராம.கி.
-----------------------------------------------------------------------------------------------------------
'பணம் 'னா என்னாண்ணே ? '

'என்ன கேள்வி இது இந்த நேரத்துலே ? எங்கே பாத்தாலும் இந்த வருசம் மழையே இல்லை, வெள்ளாமை சுத்தறவாப் போச்சுன்னு நான் உக்காந்திருக்கிற நேரத்துலே, நீ என்ன நக்கல் பண்றியா?  'ஏதோ கிடைச்ச வேலையைச் செய்ஞ்சமா, பணத்தைச் சம்பாரிச்சமா, செலவு பண்ணமா'ன்னு இல்லாம இப்படிக் கேள்வி கேட்டு என்னத்தைக் கண்டே? தவிர, இதெல்லாம் இங்கிலீசு படிக்கலைன்னா யாருக்குத் தெரியும் ? '

'அண்ணே, அப்படிச் சொல்லாதீக, என்னன்னு தெரியாமலேயே, விளங்காமலேயே, ஒண்ணைப் புழங்கிட்டு இருந்தா, நம்மளை முட்டாப் பயகன்னு சொல்லமாட்டாய்ங்க? அன்னாடம் புழங்குறதுக்கு, இதையெல்லாம் புரிஞ்சுக்குற தேவை இல்லை தான். அதுக்காக இப்படி நெடுகப் புரியாமலே இருந்தா, இந்தக் காலத்திலே குப்பை கொட்ட முடியுமாண்ணே? நம்மளத் தூக்கிச் சாப்பிட்ற மாட்டாய்ங்க! வாழ்க்கையிலே பொருளாதாரம், பணம்கிறது புரியணும்ணே! எல்லாம் இங்கிலிசுலே படிச்சாத்தான் முடியும்னு நாமளும் சும்மா இருந்துட்டோம்; அப்படி ரொம்ப நாளைக்கு இருந்துறப்படாது. '

'அப்படின்னா உனக்குப் புரிஞ்சதை மத்தவுகளுக்குத் தமிழ்லே சொல்லு! நாங்க கேட்டுக்குறோம்; நம்ம பக்கத்துலே மெத்தப் படிச்ச மேதாவி நீய்தான். '

'இதுக்கு ஏண்ணே மேதாவி, அது இதுன்னு என்னமோ சொல்றீக? படிச்சவன்லாம் மேதாவி ஆயிட்டானா, என்ன?  இப்ப, நீங்க ஆடு, மாடு வளக்குறீகன்னு வச்சுக்குங்க! நான் விவசாயம் பண்றேன். ஒங்களுக்கு நெல்லு தேவைப்படுது. ஒரு ஆட்டைக் கொண்டாந்து எங்கிட்ட விட்டுட்டு ஒரு மூடை நெல்லை நீங்க எடுத்துக்கிணு போறதுக்கு நான் சம்மதிச்சேன்னா, மத்தவுகளும் இதே மாதிரிப் பண்ணினா, ஒரு ஆட்டுக்கு ஒரு மூடை நெல்லு சமம்னு ஆகிப்போகிறும், இல்லையா?

மூவாயிரம் நாலாயிரம் வருசத்துக்கு முன்னாடி, எத்தனை வருசம்னு கணக்குத் தெரியலை, இப்படி ஒவ்வொரு பண்டத்தையும் இன்னொரு பண்டத்தாலே அளந்து, அதுக்கு இது சமம்னு ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துக்குணு, பண்டமாத்துப் பண்ணியிருக்காய்ங்க. வாழ்க்கை வளர, வளர, மனுசனுக்குத் தேவைப்படுற பண்டங்கள் கூடிப் போச்சு. 100, 200 பண்டங்களை வச்சுக்குணு, பண்டமாத்துப் பண்ணும் போது, எதுக்கு எது எவ்வளவு சமம்னு மனசுலே நெனைவு வச்சு, கொடுக்கல் வாங்கல் பண்ணுறது, நாளடைவிலே கடுசாப் போச்சு; அதனாலே இயல்பா, எல்லாருக்கும் அரிதாக் கிடைக்குற பண்டத்தாலே, வெய்யில், மழை, சூழல்னு அழியாத ஒரு பண்டத்தாலே, மத்த பண்டங்களின் சமன்பாட்டை அளக்க முற்பட்டாய்ங்க! உப்பு, விதை, முத்து, மணி அப்படின்னு ஒண்ணொண்ணா முயற்சி செய்ஞ்சு கடைசிலே பொன்னுக்கு வந்து சேர்ந்தாய்ங்க! எந்தப் பண்டத்தையும் பொன்னாலேயே அளக்க முற்பட்டாய்ங்க! அதாவது பொன்னுங்குறது பண்டமாத்துக்கு ஒரு அலகாப் போச்சுது.

இதுலே ஒண்ணு கவனிக்கோணும், நம்ம கையிலே பொன்னிருக்கோணுங்கிற கட்டாயமே இல்லை. வச்சுருக்குற பொருளுக்கு எவ்வளவு பொன் கிடைக்கும்கிறதைத் தெரிஞ்சிருந்தாப் போதும். கழஞ்சு, காணம், காசு அப்படின்னு பல்வேறு உருவிலெ, பேரிலே, பொன்னைப் புழங்கியிருக்காய்ங்க! பொன்னுக்கு வந்த பொலிவைப் பாத்து, ஒவ்வோரு செல்வந்தரும், பண்டமாத்துப் பண்ணுற பெரிய பெரிய வணிகய்ங்களும், பொன்னைச் சேகரிக்கத் தொடங்குனாய்ங்க! பொன்னோட தேவை கூடிப் போச்சு.  பொன்னைத் தேடுற சண்டையும் கூடிப் போச்சு. நாவலந் தீவுலே எல்லாப் பயகளும் ஒரே இடத்துக்கு வந்து சேர்ந்தாய்ங்க!

அந்தக் காலத் தமிழ்கூறும் நல்லுலகம் இன்னைய நிலத்தைக் காட்டிலும் ரொம்ப ரொம்பப் பெரிசண்ணே.  தெக்கே ஈழத்துலேர்ந்து, வடக்கே வடபெண்ணை, கரும்பெண்ணை யாறு வரைக்கும் தமிழ் பேசுனாய்ங்க! அதுக்கு மேலே உள்ள வடநாடுகள்லேயும் தமிழ் புரிஞ்சுது. இவ்வளவு பெரிய, தமிழ் பேசும் இடத்துக்கு நடுவுலே ரொம்ப நாளாவே பொன்னு இயற்கையா கிடைச்சுது. இன்னைக்கு கோலார்னு சொல்றோமில்லியா? அதுக்கு அந்தக் காலத்துலே கொல்லாளபுரம்னு பேரு; கொல்லுன்னா தங்கம்ணே. கொல்லை ஆளுற புரம் கொல்லாள புரம்; இதை வடக்கத்திகாரய்ங்க நாக்கை வளைச்சுக் குவலாள்/குவலாளபுரம்ணு திரிச்சுச் சொல்லியிருக்காய்ங்க. கொல்லாள் தான் இந்தக் கால கோலாளு/கோலாரு. நாம என்னடான்னா, ஒரு காலத்துலே கோலாள்ப் பொன்னுக்கு சொந்தக்காரய்ங்கங்கிற வரலாத்தையே மறந்துட்டு நிக்கிறோம்.

அங்கே இருக்குற சுரங்கங்கள் தான் உலகத்துலே ஆழமான,  நாள்ப்பட்ட சுரங்கங்கள். இங்கே தங்கம், தங்கம்ணு சொல்லி ரொம்ப காலத்துக்கு நோண்டிக்கிணே இருந்திருக்காய்ங்க! இந்தத் தங்கத்துக்காகத் தான் நம்ம அரசாங்களெல்லாம் சண்டை போட்டிருக்காய்ங்க. கொல்லாளபுரத்தைக் கையிலே வச்ச அரசன் எவனோ,  அவென்தான் உச்சாணிக் கொம்புக்குப் போனான். தெற்கே நடந்த பெருஞ் சண்டைகள்ளே பலதும் எவன் கைக்குள்ளே இந்த இடத்தை வச்சுக்கிறதுன்னு நடந்த சண்டைதான்.

பொன்னை வச்சுத்தான் வணிகமே நடந்துச்சு. வணிகங்கிறது உள்நாட்டு வணிகம்னு இல்லாம வெளிநாட்டு வணிகத்தையும் குறிச்சிது. பண்டத்தை வாங்குறது, விக்குறது எல்லாமே பொன்னாலே தான். பொன்னு நிறைய வச்சிருக்கிறவய்ங்க வணிகத்துலே பெரியாள் ஆனாய்ங்க. இவய்ங்க, பண்டம் நிறையக் கிடைக்குற இடங்களுக்குப் போய் கொள்முதல் செய்ய ஆரம்பிச்சாய்ங்க. மொத்தத்துலே வணிகர்கள்ணு சொல்லிகிறவய்ங்க தமிழகத்துலேர்ந்து பெரிதா உருவாகி நாவலந்தீவு முழுக்கப் பரவுனது இந்த இயற்கை விளைவாலே தான். அதனாலே, வணிகத்துக்கு மொழி தமிழ்னு அந்தக் காலத்துலே ஆகிப்போச்சு.  தமிழ் வணிகய்ங்க மகத நாட்டுக்குப் போய் கொடுக்கல் வாங்கல்லே ஈடுபட்டதாலே மாவீரரும் புத்தரும் கூட தமிழ் கத்துருக்காங்க. தமிழ் வணிகர் பத்தி சாணக்கியரே அவரோட பொருள்நூல்லே எழுதி வச்சுருக்கார்.  சாணக்கியரே தமிழ்நாட்டுக்காரரோங்குற சந்தேகம் கூட ஒரு சிலருக்கு உண்டு; இன்னோரு சேதி; வணிகங்க தானே கணக்கு வழக்கு எழுதி வக்கணும்; அதனாலே இந்த நாவலந்தீவுலே எழுத்துக் கூட தமிழ்ல்லே தான் முதல்லே வந்துருக்குமோன்னு பல அறிஞர்கள் ஊகமாய்ச் சொல்றாக.

சரி, பொன்னு வணிகத்துக்குத் தேவை; ஆனா அது அவ்வளவு எளிதாக் கிடைக்குறது இல்லையே! பொன்னிங்குற காவிரி ஆத்தை ஒட்டி எவ்வளவு தூரம் மண்ணைக் கொழிச்சாலும் பொன்னு ஓரளவுதானே கிடைக்கும் ? சுரங்கத்துலே தோண்டுன மண்ணூறலும் (mineral) எத்தனை நாளைக்கு வரும் ? சுரங்கம் ஆழப்பட்டது தான் மிச்சம். கொஞ்சம் கொஞ்சமா பொன்னோட கிடைப்புக் குறைஞ்சுது. ஆனா தேவை கூடிப் போச்சு; ஒரு மாதிரிச் சிக்கல் வந்துச்சு. இப்ப நாடெங்கிலும் மொத்தமாத் தோண்டி எடுத்து கொழிச்சு வச்ச பொன்னு ஒரு லெச்சம் கிராம் தேறும்னு வையுங்க. அதை எத்தனை முறை திருப்பித் திருப்பி ஒருத்தருக்கு ஒருத்தர் செலாவணியாப் பொருளாதாரத்துலே சுத்த முடியும்?  கொடுத்து வாங்குற பண்டத்தின் மதிப்பு லெச்சம் கிராமுக்கு மேலே போச்சுன்னா என்ன பண்றது? அப்பத்தான் தங்கத்தோடு இன்னொரு உலோகத்தைச் சேர்க்குற நுட்பம் தெரிஞ்சுது. இதுலே கொஞ்ச நாள் நீட்டிக்கலாம்னு புரிஞ்சுது. இதன் மூலமா, லெச்சம் கிராம் தங்கம் வச்சுக்குணு மத்த உலோகங்களைக் கலந்து ஒண்ணேகால் லெச்சம் கிராம் அளவுக்குக் கூடப் பண்டங்களைப் புழங்கலாம், ஏன், அதுக்கு மேலேயும் புழங்கலாம்ணு நினைச்சாய்ங்க!

இருக்குற மாத்துக் குறையாத தங்கத்துலே வெள்ளி சேர்த்தாய்ங்க; செம்பு சேத்தாய்ங்க; கொஞ்சம் கொஞ்சமா அதையெல்லாம் மக்கள் ஏத்துக்கினாக. பணத்துக்கே கூட அந்தக் காலத்துலே தங்கத்தோட பேரு தான் இருந்துச்சு; ஒரு கழஞ்சுப் பொன்னுன்னா இவ்வளவு எடையுள்ள பொன்னுனு பேரு. கடைசியிலே பணத்தையே கழஞ்சுன்னு சொன்னாய்ங்க; காணம்னாய்ங்க; காசுன்னாய்ங்க; இன்னும் சில ஊர்லெ தங்கமில்லாம வெள்ளியைக் கூடச் செலவணியாக்குனாய்ங்க; அதனாலே பணத்தை வெள்ளின்னு கூடச் சொல்ல ஆரம்பிச்சாய்ங்க. சிலசமயம் இந்தத் தங்கம், வெள்ளி எல்லாம் நம்பகமானதான்னு தெரிய முத்திரை போட ஆரம்பிச்சாய்ங்க.  வராக உருவம் போட்ட நாணயம் வராகன்னு ஆச்சு. ஒரு 100 வருசத்துக்கு முன்னாடி, வெள்ளைக்காரன் காலத்துலே, நம்மூர்லே வராகன்கிற நாணயம் உலாவுச்சு. ஒரு சின்ன வராகன்னா மூணரை ரூபான்னு அருத்தம். ஒரு பெரிய வராகன்னா, மூவாயிரத்து ஐஞூறு ரூபான்னு அருத்தம். ரூபாங்கிறது கூட ராசாவோட உருவம் அச்சடிச்சதாலே வந்த பேரு தான்.

இன்னும் நாளான பிறகு, பொன்னோட தேவை ரொம்பவே கூடிப் போச்சு; அப்பத்தான் ஒரு பொறி மூளையிலே உதிச்சுது. 'ஏன் ஓவ்வொரு தடவையும் பொன்னை நேரடியாப் பரிமாறிக்கோணும் ? பேசாமப் பாவனை பண்ணுனா என்ன? 'ன்னு தோணுச்சு.  மெதுவாப் 'பொன்னோட இருப்புக்கும், கொடுக்கல் வாங்கலுக்கும் நேரடித் தொடர்பு இல்லை; பொன்னுங்கிறது  ஓர் அடையாளம்; பண்டங்களை மதிப்பிடுற ஓர் அலகு'ன்னு புரிஞ்சது; அதுக்குப் பின்னாலே, 'பொன்னு கையிலே இருக்கோணும், வாங்குறவுகளும், விக்குறவுகளும் கொடுத்து மாத்தோணும்'னு யாரும் நினைக்கலே.  ஒரு பாவனைன்னு சொன்னா, ஒரு ஓலையிலெ கைச்சாத்துப் போட்டு 'இவ்வளவு பொன்னை நீங்க வந்து கேட்டாக் குடுக்குறேன்'னு வெறுமனே எழுதி, ஒரு பெரிய ஆளு நமக்காக இலச்சினை வச்சிட்டா, அதுக்கு இன்னோரு இடத்துலே மதிப்பு வந்துது. ஏதோ பொன்னையே கொடுத்துட்டதா அந்த ஓலையை, துணியை, தோலை மதிக்க ஆரம்பிச்சாய்ங்க. இது ஒரு வளர்ச்சி. தோள்லே பொன்னையோ, மத்ததையோ சுமக்க வேண்டியதில்லையே? அதுவே ஒரு பெரிய சங்கதி தானே!

நாணயம்கிற சொல்லுக்கு நம்பிக்கைங்குற பொருள் இப்படித்தான் ஏற்பட்டுச்சு.  நாணயம் தோலா, துணியா, ஓலையா, தாளா மாறிச்சு. தங்கமெல்லாம் ஏதோ ஒரு கிடங்குலே குடியேறிச்சு. எல்லாம் ஒரு நம்பிக்கையிலே, யாரும் வந்து பொன்னைக் கேட்டுற மாட்டாங்கன்னு நினைச்சு இன்னை வரைக்கும் ஓடிக்கிணு இருக்கு.

இப்ப நாணயம் பத்திச் சொன்னது பணம்கிறதைப் பத்திப் புரிஞ்சுக்கிறதுக்காக.  நாணயம் பத்தியே சொல்லணும்னா இன்னும் ஊரம்புட்டுச் செய்தி இருக்குன்னாலும் மேக்கொண்டு அதையே பேசாம, பணம்னா இந்தக் காலத்துலே என்னன்னு இனிப் பாப்போம்.

நமக்கிட்டே இருக்குற பண்டம்(1), பானை, பொருள், மனை, நிலம், வண்டி, தோட்டம், துரவு எல்லாத்தையும் கொடுத்து சட்டுன்னு நாணயமா, ரூவாத் தாளா மாத்தி வாங்கணும்னு வையுங்க. இதையெல்லாம் வாங்குறவுக தேடிப் பாத்து, ஒவ்வொண்ணா விக்குறோம். ரூவா ஏதோ கிடைக்குது. ஆனா நினைச்ச படி எல்லாத்தையும் சட்டுன்னு விக்க முடியுமோ ? சிலதை உடனே விக்கலாம்; சிலதை ரெண்டு நாள்லே விக்கலாம்; சிலதை ஒரு வாரத்துலே, ஒரு மாசத்துலே, ஒரு வருசத்துலே விக்கலாம்; சிலதை விக்க முடியாமலே கூடப் போகலாம்.

பொருளாதாரப் படி, ஒரு குறிப்பிட்ட நாள் கணக்கை எடுத்துக்கிணு அந்த நாளுக்குள்ள எதெல்லாம் விக்க முடிஞ்சு ரூவா கிடைக்குதோ, அதெல்லாம் பணம். மிச்சதெல்லாம் பணமில்லை, ஆனாச் செல்வம்னு சொன்னாக. இந்த வரையறைப் படி, நம்ம நாட்டுலே 15 நாளைக்குள்ளே விக்க முடியிற பண்டம் எல்லாத்தையும் பணம்னே எடுத்துக்குறோம். இப்ப உங்கள்ட்டே ஒரு நிலமிருக்கு. பதினைஞ்சு நாளைக்குள்ளே வாங்க ஆளு இல்லை. விக்க நீங்க ரொம்பச் சரவற் படுறீங்க. அப்ப அதைப் பணம்னு கணக்குலே எடுக்க முடியாது. அது செல்வம், ஆனாப் பணமில்லை. இதுபோல ஒவ்வொண்ணையும் பதினைஞ்சு நாளைக்குள்ளே எவ்வளவு விரைவா, சல்லிசா ரொக்கமா மாத்தமுடியும்னு பாருங்க; அதெல்லாம் பணம். இதைத்தான் நீர்போல மாத்தக்கூடிய நீர்மநிதிச் சொத்துக்கள்(2)னு நீட்டி முழக்கிச் சொல்றாய்ங்க. இந்த நீர்மநிதிச் சொத்துக்கள் நாட்டுலே அதிகமா இருக்குற வரைக்கும் ஒரு நாட்டோட பொருளாதாரம் கோலாகலமாப் போகும்.

இப்ப ஒரு பேச்சுக்குப் பழைய கதையைச் சொல்றேன், கேட்டுங்குங்க.

நம்மூர்லே நகரத்தார் இருக்காகள்லே, இவுக இங்கேர்ந்து பர்மாவுக்குக் கொண்டுவிக்கப் போனாகள்ல; போன இடத்தில் வட்டிக்குக் கொடுத்து வாங்குனாக. வட்டிவாங்கி முதலைத் திருப்பித் தர்ற வரைக்கும் நிலத்தை அடைமானமா வாங்கிக்குனாக; அப்புறம் விளைச்சலையே முதலுக்குத் தவணையா அவுக ஒப்புக்கொண்டாக. பர்மா நாட்டுலே ஒரு சமயம் அடுத்தடுத்த வருசத்துக்கு வெள்ளாமை சரியா வரவேயில்லெ. ஏகப்பட்ட பணம் கொடுபடாமச் சிக்கல்லே மாட்டிக்கிச்சு. அரிசிவிலையும் சந்தையிலே திடீர்னு சரிஞ்சுருச்சு; நம்ம நாடெல்லாம் விரும்பி இறக்குமதியான பர்மா அரிசி எங்கேயும் விக்கல்லே; முத விளைச்சல்லெ மாட்டிக்கிட்டு அடுத்து விதைப்புக்குப் பணங்கேட்டுத் திரும்பத் திரும்ப நீர்ம நிதி வேணும்னு இவுகள்ட்டே வந்தா, இவுகள்ட்டே மிஞ்சுனது நிலமும் முதலாண்டு விளைச்சலும் தான். விளைச்சலை வாங்குறதுக்குத்தான் ஆளுகளேயில்லையே.

நான் ரொம்பச் சுருக்கமாச் சொல்றேன். ஒரு புதைகுழி மாதிரி இவுகவுட்டுப் பணமெல்லாம் நீர்மமில்லாம, புடிச்சு வச்ச புள்ளையார, அசையாம மாட்டிக்கிச்சு. அப்படியாகும்னு இவுகளும் நினைக்கலே; கடன் வாங்குன பர்மாக்காரனும் நினைக்கலே. மொத்தத்துலே ஒரு புதைகுழிக்குள்ளே பர்மாநாடே மாட்டிக்குச்சு. கடைசிலே விவசாயத்துக்குன்னு நம்மூருலேர்ந்து வேலை செய்யப் போன குத்தகைப்பயலுக, வெள்ளாமை பாக்குற ஆளுகள்லாம் ஊருக்குத் திரும்புறபடியா ஆயிருச்சு; எல்லாரோடெ பணங்களும் மாட்டிக்கிச்சு; பர்மாக்காரன் நிலமும் மாட்டிக்கிச்சு. கிட்டத்தட்ட 75%  விவசாய நிலம் அடமானத்துலே நம்ம பக்கத்துத் தொண்ணூற்றாறு ஊர் நகரத்தாருக்கிட்டே மாட்டிக்கிச்சு; நகரத்தாரு, கடன் வாங்குனவுக, விவசாயஞ் செய்ஞ்சவுக, இடைத்தரகர், அரிசி யாவாரிகன்னு யாராச்சும் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருக்கோணும் இல்லையா? யாரும் செய்யுறமாதிரி இல்லை; சிக்கல் விழுந்த முடிச்சை அவுக்க முடியாமத் தவிக்கிற மாதிரி, கவுத்தைப் போட்டு எல்லாரையும் கட்டிப் போட்டாப்பிலே, எல்லாப் பயகளும் மயங்கிப் போனாய்ங்க.

இந்தச் சமயம் பார்த்து ஒருபக்கம் இரண்டாம் ஒலகப் போரு வேற வர ஆரம்பிச்சுது; இன்னோரு பக்கம் பர்மாவிலும் விடுதலைப் போராட்டம் சூடு புடிக்குது; மொத்தத்தில் பர்மா சீரழிஞ்சு, நம்ம இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அறந்தாங்கிப் பக்கமெல்லாம் போண்டியாச்சுது. செட்டிநாடே அம்போன்னு போச்சு. இன்கேர்ந்த வீடுகள்லெல்லாம் போயிக் கடைசிலே 30 வருசம் கழிச்சு மொத்தமா இடிஞ்சதுதான் மிச்சம்.  மிஞ்சுன பணத்தை இவுக இந்தியாவுக்குக் கொண்டாந்து பாழாப்போன சென்னைக் கோடம்பாக்கத்துலே படங்காட்டப் போட்டதுதான். அதுவும் அநேகம்பேருக்கு விளங்காமப் போச்சு.

பொருளாதாரத்துலே முத படிப்பினை இதுதாண்ணே; 'சொத்துலே கணிசமானதைப் பணமா வச்சுக்க; எல்லாத்தையும் அடைமானத்துக்கு வச்சுறாதே! நீர்மமாவே வச்சுக்க! தனி மனுசனா நீ இருந்தாலும் உன் சேமிப்புலே மூணுலே ஒண்ணை நீர்மமா வச்சுக்க; இன்னொண்ணை நீர்மம் ஆகுறாப்புலே வச்சுக்க (நீர்மம் ஆகுறாப்புலேன்னா என்னன்னு பொறவு சொல்றேன்); கடைசி ஒண்ணை அசையாச் சொத்தா வச்சுக்கோ. '

அதுக்கு முன்னாடி, ஒண்ணு புரியோணும்ணே! நீர்மமா இருந்தாத்தான் நா உங்கள்ட்டே பண்டம் வாங்குறதுக்கோ, சேவை பெத்துக்கிறதுக்கோ, ஏதோ ஒன்னுக்கு விலையா, இல்லாட்டிப் பரி(3)யாக் கொடுக்கலாம்; நீங்க இதுபோல இன்னோருத்தர்ட்டே கொடுக்கலாம்; ஆத்துலே நீரோடுற மாதிரி நாடெங்கிலும் இப்படிப் பணம் கைமாறிக்கிட்டே இருக்கணும். எந்த ஒரு இடத்துலேயோ கிடங்கு(4)க்குள்ளே போயிருச்சுன்னு வைய்ங்க; அது இந்தச் சுத்துக்குள்ளே வரவே வராது. அப்பப் பணப் புழக்கம் குறைஞ்சிருச்சுன்னு சொல்லுவோம்; (அண்ணே, ஒரு மாதிரியாப் பார்க்காதீக; நான் இங்கே அரசியல் பேசலே, பணப் புழக்கம் குறைஞ்சிருச்சுன்னு சில ஆளுகள் ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நம்மூர்லே சொன்னது வேறே கணக்கு; அந்த ஆட்டத்துக்கு நான் வர்லே. என்னை விட்டுருங்க! :-)). பணப்புழக்கத்தைத் தான் பணவோட்டம்னு சொல்றோம். இங்கிலீசுலே கரன்சிங்குறாகள்லே அது இதுதான். இந்த ஓட்டத்துக்குள்ளே,  நல்லாக் கவனிச்சுங்க, நமக்கிட்ட இருக்குற பணம்; நம்ம வங்கிகள்லே போட்டு வச்சிருக்குற பணம் போக இன்னோரு பணமும் இருக்கு.

அதுக்கு முன்னாடி வேற ஒண்ணைப் புரிஞ்சுக்கோணும். வங்கிகளுக்கெல்லாம் ஒரு வங்கி இருக்குன்னு ஒங்களுக்குத் தெரியுமில்லே. இப்ப நம்ம ரூவாத் தாளேப் புழங்குறோமில்ல ? அந்தத் தாள்லே காந்தி படம்போட்டு, முத்திரையிட்டு எத்தனை ரூவான்னு சொல்றது போக, 'யாரு கொண்டாந்து எங்கள்ட்டே கொடுத்தாலும், இதை நாங்க மதிச்சு இவ்வளவு ரூபா கொடுப்போம் 'ணு ஒருத்தர் கையெழுத்துப் போட்டிருப்பார். அவர்தான் வங்கி ஆளுநர். அந்த வங்கிதான் பணத்தையே புழக்கத்துக்கு விடுற வங்கி. எல்லாருக்கும் பொதுவா, தங்கத்தையும், அதுபோல மதிப்புள்ள வேறு பணங்களையும் (குறிப்பா வெளிநாட்டுப் பணங்களையும்) தங்கள்ட்டே சேர்த்து வச்சுக்கிணு நம்மூருப் பணத்தை எடுத்து அவுக அச்சடிச்சு விடுறாக.  எல்லாரு பணத்தையும் சேர்த்து வச்சுக்குறதுனாலே அந்த வங்கி சேர்ப்பு வங்கி; இந்தியச் சேர்ப்பு வங்கி.(5)

நாமெல்லாரும் பணத்தை வங்கிலே போட்டு வச்சு, வேணும்கிற போது பணமெடுத்துப் புழங்குறோமில்லை அந்த வைப்புகளுக்குப் பேரு வேண்டு வைப்புகள்(6); இந்த வேண்டு வைப்பு மாதிரி ஒரு சில வாய்ப்புகளை நமக்குக் கொடுக்குறவுகளுக்குப் பேரு மாறுகை வங்கிகள்(7). அவுகளோட வேலையே, ஒருத்தர்ட்டேர்ந்து பணத்தை வாங்கி, அதுக்கு மாறாக் கொஞ்சம் வட்டி கொடுத்துட்டு, பணம் வேணுங்கிறவுகளுக்குப் பணத்தைக் கொடுத்து, அதுக்குக் கூடவட்டி வாங்கிட்டு, இடையிலே சம்பாரிச்சு, வங்கித் தொழிலை நடத்தி, கைமாத்திக்கிணே இருக்குறதுதான்.  கை மாறுதுங்குறதைத் தான் மாறுகைத் தொழில்னு சொல்றோம்.  மாறுகைங்கிறதைத் தான் இங்கிலீசுலே காமர்சுங்கிறாய்ங்க. பல்வேறு வாடிக்கைக்காரய்ங்களை இணைக்கிறது இந்த மாறுகை வங்கிகள் தான். இந்த மாறுகை வங்கிகளுக்கு கொஞ்சம் நிலைத்தன்மை(8) வரணும்கிறதுக்காக, இவுக வச்சுருக்கிற பணத்துலே ஒரு பங்கை எப்பவுமே சேர்ப்பு வங்கிலே போட்டு வைச்சிருக்கோணும்னு நம்ம அரசாங்கம் கட்டாயம் பண்ணிவச்சிருக்கு. அப்படி மாறுகை வங்கிக சேர்ப்பு வங்கியில் வைப்பா வச்சுருக்கிறதும் ஒருவகையில் பணம் தான். ஏன்னா, இவுக கேட்டா அவுக உடனே பொட்டகத்தைத் தொறந்து எடுத்துக் கொடுத்துறணும் இல்லியா ?

இதுவரை பாத்த மூணுவகைப் பணம் போக இன்னோரு வகையுமிருக்கு.  நம்மூர்ப் பணத்தை வெளியூர்ப் பணத்துக்கும் வெளியூர்ப் பணத்தை நம்மூருக்கும் மாத்தித் தர்ற பெரிய முகவர்கள்(9) சிலபேர் இருக்குறாய்ங்க; அவய்ங்களும் தங்கள் பணத்தைச் சேர்ப்பு வங்கிலே வைப்பு நிதியா வச்சுருக்காய்ங்க;

மொத்தத்துலே சுற்றுலே இருக்கிற ஓடுபணம்(10), நாம எல்லாரும் உடனே எடுக்கிறாப்புலே வச்சிருக்கிற வேண்டு வைப்பு நிதிகள், வங்கிகளும் பணமாற்ற முகவர்களும் சேர்ப்பு வங்கிலே வச்சிருக்கிற வைப்பு நிதிகள் ஆகிய எல்லாத்தையும் சேர்த்து பொருளாதாரத்துக்கு அடிப்படையான பணம் - M0 (11) ன்னு சொல்லுவாக. இதுலே உடனேன்னு சொல்றதை வரையறுக்கோணும்லே. அதுதான் முன்னே சொன்னாப்புலே பதினைஞ்சு நாள் - ரெண்டு வாரம்னு அருத்தம். ஆனா ஒவ்வொரு வாரத்துக்கும் ஒருக்கா, சேர்ப்பு வங்கி தன்னோட ஐந்தொகைக் கணக்கை(12)ப் போட்டு M0 பணம் நாட்டுலே எவ்வளவு புழங்குதுன்னு சொல்லும். இந்த M0 - ங்குறதுதான் நாட்டினுடைய பொருளாதாரத்துக்கான பண அடிப்படை.
M0வுக்கு அடுத்த நிலை M1. இது என்னன்னு பாப்போம். இப்ப மாறுகை வங்கிகள் கொஞ்சம் நாள்பட்டதா ரெண்டு வாரத்துக்கும் மேற்பட்டு சில பிணைகள்(13) வச்சிருக்காக; ஒரு வங்கி இன்னொரு வங்கிட்டே கைமாத்தா வாங்கிட்டு ஆனா வட்டி கொடுக்காம நடப்புக் கணக்குலே வச்சிருக்கிறது ஒருவகை; அதே போல நாம நடப்புக் கணக்கு(14)லே வச்சு அதுக்கு நம்ம வங்கி வட்டி வாங்காம வச்சிருக்கிறது இன்னோரு வகை. இப்படிப் பலவகையிலே வட்டி தராம பல வங்கிப் பிணைகள் இருக்கு பாருங்க, அதையெல்லாம் சேர்த்தா வர்றது வங்கிப் பிரிவுகளின் பிணை.  இதையும் M0வையும் சேர்த்தா வர்றது M1(15). இன்னொரு வகையாச் சொன்னா, ஓடுபணம், வங்கிகள்ட்டே இருக்கும் எல்லாவிதமான வேண்டுவைப்புகள் (வட்டி இருந்தாலும், இல்லாட்டாலும் சரி), சேர்ப்புவங்கிலே இருக்குற 'மற்ற வகை'  வைப்புகள் ஆகிய மூணும் சேர்ந்தது M1. இதை ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா இந்தியச் சேர்ப்பு வங்கி, கணக்குப் போட்டுச் சொல்லுது.

அடுத்தது M2. இதுலே M1 -ஓடே, வங்கிகள்லே இருக்கிற, குறிப்பிட்ட காலத்துக்குள்லே திருப்பிக் கொடுக்க வேண்டிய, சேமவைப்புக்கள்(16), வங்கிகள் கொடுக்கும் வைப்புச் சான்றிதழ்கள்(17), ஒரு வருசத்துக்குள்ளே திருப்பிக் கொடுக்க வேண்டிய தவணை வைப்புக்கள்(15) எல்லாத்தையும் சேர்க்கோணும். மொத்தத்துலே ஒரு வருச காலத்துலே அளக்குறது M2(18). இதுவுமே எவ்வளவு இருக்குன்னு ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா இந்திய சேர்ப்பு வங்கி சொல்லிருது.

கடைசியா M3 (19): இதுலே M2 - ஓடே ஒரு வருசத்துக்கு மேற்பட்ட தவணை வைப்புக்கள், வைப்புநிதி வச்சுக்காத நிதி நிறுவணங்கள்ட்டேர்ந்து வங்கிகள் வாங்குற கடன்கள் ஆகியவற்றைச் சேத்துக்குறோம். இதுவும் ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா எவ்வளவு இருக்குன்னு சேர்ப்பு வங்கி மூலமாத் தெரிஞ்சுரும்.

பொதுவா, ஒரு நாட்டுலே M0 கிறதை மட்டும் தான் பணம்னு சொல்றது. அப்பாலே, M0-வுக்கு மேலே M3-வரைக்கும் இருக்குறதைப் அணுகுபணம்(20)னு சொல்றோம். அதாவது பணத்தை நெருங்கி அணுகுன ஒன்னு. அணுகுபணத்துக்கு மேலே உள்ளதெல்லாம், அசையாச் சொத்து(21). பணம், அணுகுபணம், அசையாச் சொத்து ஆக மூணும் சேர்ந்தது தான் செல்வமண்ணே! செல்வம்னா வேறே ஒண்ணும் இல்லைண்ணே!
மொத்தச் செல்வத்துலே M0 வோட விழுக்காடு அதிகமா இருந்தா அந்த நாட்டோட மக்கள் பெருத்த செலவாளிகள்னு அருத்தம். பணமும்,அணுகுபணமும் கூட இருந்தா, எதுன்னாலும் செலவளிக்க முனைப்புள்ளவுங்கன்னு அருத்தம். அணுகுபணத்தைப் பணமாகவும் பணத்தை அணுகுபணமாகவும் மாத்த அணியமா இருந்தா, பொருளாதாரத்தின் நிலைத்துவம் தடுமாறும்னு அருத்தம். திடீர்ன்னு அணுகுபணத்துலேர்ந்து எல்லாரும் பணமா மாத்தணும்னு சொல்லி, அப்ப வங்கிகளும் சேர்ப்பு வங்கியும் ஓரளவு தடுமாறுச்சுன்னா, பணவீக்கம்(22) நாட்டிலே கூடீறும்.
திடீர்ன்னு எல்லாரும் பணம் கேட்டா, அதுதான் பண வீக்கம். பணத்தை எவ்வளவு தொகைக்கு சுத்துக்குள்ளே விடுறதுன்னு சேர்ப்பு வங்கி பார்த்துக்குது. பணத்தோட வேண்டுதல் கூடப் போய் அதைச் சேர்ப்பு வங்கி கட்டுப்படுத்த முடியலைன்னா பணவீக்கம் பெருத்துடும்.

அண்ணே, இதோட நிறுத்திக்கிடுவோம். இன்னும் சொல்லிட்டே போனோம்னா அப்புறம் பெரியப் பொருளாதாரப் பாடம் ஆயிரும். நீங்களும் கேக்க மாட்டீக.  போட்டுப் பொரிச்செடுக்குது(23)ன்னு வேறே சொல்லிருவீக. தவிர அதெல்லாம் பொறுமையாப் படிக்க வேண்டிய சங்கதி.

வரட்டுமாண்ணே!
----
அருஞ்சொல் அடைவு:
1. பண்டம் = commodity
2. நீர்மநிதிச் சொத்துக்கள் = liquid financial assets
3. பரி = free
4. கிடங்கு = vault
5. இந்தியச் சேர்ப்பு வங்கி = Reserve Bank Of India
6. வேண்டு வைப்புக்கள் = demand deposits
7. மாறுகை வங்கிகள் = commercial banks
8. நிலைத் தன்மை = stability
9. முகவர்கள் = agents
10. ஓடுபணம் = currency
11. M0 = Currency in circulation + bankers ' deposits with RBI + 'other ' deposits with the RBI (including primary dealers ' balance); It is compiled every week. M0 is essentially the monetary base, compiled from the balance sheet of the Reserve Bank of India.
12. ஐந்தொகைக் கணக்கு = balance sheet
13. பிணைகள் = liabilities
14. நடப்புக் கணக்கு = current account
15. M1 = Currency with the public + demand deposits with the banking system+ 'other ' deposits with the RBI = Currency with the public + current deposits with the banking system + demand liabilities portion of savings deposits with the banking system + 'other ' deposits with the RBI. M1 purely reflects the non-interest bearing monetary liabilities of the banking sector. It is compiled every fortnight.
16. சேம வைப்புக்கள் = safe deposits
17. வைப்புச் சான்றிதழ்கள் = deposit certificates
18. M2 = M1+ time liabilities portion of savings deposits with the banking system + certificates of deposits issued by banks + term deposits of residents with a contractual maturity of up to and including one year with the banking system = Currency with the public + current deposits with the banking system + savings deposits with the banking system + certificates of deposits issued by the banks + term deposits of residents with a contractual maturity up to and including one year with the banking system + 'other ' deposits with the RBI. M2 includes besides currency, and current deposits, saving and short-term deposits reflecting the transactions balances of entities. It is compiled every fortnight
19. M3 = M2+ term deposits of residents with a contractual maturity of over one year with the banking system + call borrowings from 'non-Depository ' financial corporation by the banking system. M3 has been redefined to reflect additionally to M2 the call fundings that the banking system obtains from other financial institutions. It is compiled every fortnight
20. அணுகுபணம் = near - money
21. அசையாச் சொத்து = non-liquid asset
22. பணவீக்கம் = inflation
23. பொரிச்செடுத்தல் = boring
----



Wednesday, August 06, 2014

தமிழெழுத்தும் கிரந்தமும் ஒருங்குறி ஊடாடலும் - பரத்தீடு

இதுவும் ஒரு பழைய பரத்தீடு.  பொதுவிற் சேமிக்கவேண்டுமென்று இங்கு இடுகிறேன்.

கிரந்தத்தின் இற்றைநிலை: SMP இல் குறியேற்றம் பெறுகிறது.

7 தமிழ்க் குறியீடுகளை கிரந்தத்துள் கொணரும் முயற்சிகள் துண்டு துண்டாக இப்பொழுதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ”முதலில் குறில் எகரத்தையும் ஒகரத்தையும் உள்ளே கொண்டுவருவோம், பின் ளகரத்தைக் கொணர்வோம், அப்புறம் ழகரம், முடிவில் றகரம், னகரம்” என்று திட்டம் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. எகர, ஒகரச் சான்றுகள் தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு சில தமிழநாட்டுச் சமய மடங்கள் இன்னும் தங்கள் முயற்சிகளை விடவில்லை.

திரு. நா. கணேசன் தன் முயற்சியால் கிரந்த எழுத்தில் தமிழ்நூல்களை வலையேற்றிவிட முயன்றுகொண்டு தான் இருக்கிறார்.

சமயஞ் சார்ந்த ஒருசில வலைத்தளங்கள் தமிழின்/தமிழியின் கதியை குப்புறச் சாய்க்கும் வேலைக்கு அணியமாகவே உள்ளன.

தமிழ் கெட்டுச் சீரழிந்தால் யாருக்கு என்ன கவலை சொல்லுங்கள்?

விழியில் விளக்கெண்ணெய் விட்டு, கொட்டக் கொட்ட அகல விரித்து ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு வரும் முன்னீடுகளை (proposals) இணையத்திற் பார்த்திருக்கும் தமிழரைத்தான் எங்குங் காணோம். இவருக்கு உள்ளூர் ”விவகாரங்களே” விரிந்து கிடக்கிறது. அப்புறமெங்கே ஒருங்குறிச் சேர்த்தியத்தின் வல்லாண்மை பற்றிக் கவனம் கொள்ள முடியும்?
  


அன்புடன்,
இராம.கி.

Saturday, August 02, 2014

ஒருங்குறியேற்றத்தின் போதாமை - பரத்தீடு

2010 ஆண்டு பிப்ரவரி 23-26 தேதிகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ்- பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் ஒரு விருந்தினனாக நான் அழைக்கப்படிருந்தேன். அப்பொழுது வெளியிட்ட இப்பரத்தீடு ”ஒருங்குறியின் போதாமை” பற்றிய கிடுகுப்பார்வையை வைத்தது. அப் பரத்தீட்டை இப்பொழுது மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

இற்றை நிலைமை கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது. இன்னும் தமிழ் அனைத்தெழுத்துக் குறியீடு சவலைப் பிள்ளையாய் நிற்கிறது. ஒருங்குறிச் சேர்த்தியம் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசும் ஆணை பிறப்பித்ததோடு சரி. உத்தமத்தின் எட்டாம் பணிக்குழு தன் அறிக்கையைச் சமர்ப்பித்ததோடு சரி. (உத்தமம் அதை பொதுப் பார்வையில் வைக்கக் கூட இல்லை.)

எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு சொலவடையுண்டு. “பார்ப்பாத்தியம்மா, மாடு வந்தது கட்டினாக் கட்டிக்கோ, கட்டாட்டிற் போ.” இங்கு தமிழர்கள் அந்தப் பார்ப்பாத்தியம்மா நிலையிற்றான் இருக்கிறார்கள். தறியிற் கட்டப்படாத மாடு அலைந்துகொண்டிருக்கிறது. சீர்கெட்டுப் போனால் யார் கவலைப் படப் போகிறார்கள்?ஒருங்குறிச் சேர்த்தியம் சிரித்துக்கொண்டேயிருக்கும்.  தமிழர்களுக்கே தமிழைப் பற்றிக் கவலையில்லை. அப்புறம் சேர்த்தியம் கவலைப்பட்டு யாருக்கு என்ன ஆதாயம்? .




அன்புடன்,
இராம.கி,

Monday, July 28, 2014

Friday, July 25, 2014

சிலம்பின் காலம் - பரத்தீடு.

முன்னால் இங்கிட்ட சிலம்பின் காலம் என்ற கட்டுரைத் தொடரின் பரத்தீடு.

உங்கள் பார்வைக்கு.



http://www.slideshare.net/iraamaki/ss-37352202

என்னுடைய பல்வேறு பரத்தீடுகளை இப்படி இணையத்திற் போட்டுவைக்கலாம் என்ற எண்ணத்தில் இதைச் செய்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, July 22, 2014

தமிழும் தமிழரும் - பரத்தீடு

வட கரோலினாவில் இருக்கும்  சார்லட் நகரத் தமிழ்ச்சங்கம் சார்பில் நேற்று என்னை ஒரு விருந்தினனாக அழைத்து “தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் உரையாற்றப் பணித்தார்கள். அழைப்பை ஏற்று ஒரு பரத்தீடு வழியே இன்றைக்குத் தமிழர் தமிழை வைத்திருக்கும் நிலை பற்றிப் பேசினேன். தமிங்கிலம், தமிழ்க்கணிமை, கணித்தமிழ் பற்றியும் பேசும் தேவை ஏற்பட்டது.

இந்தப் பரத்தீடு பொதுவிலும் பயன்படும் என்று இங்கு பதிகிறேன். ஒருசில வழுதைகள் (slides) இதற்கு முன்னால் பதிந்த “தமிழர் தோற்றமும், மொழியூறவுகளும்” என்ற பரத்தீட்டோடு பொதுவாக இருக்கக் கூடும்.

இனி உங்கள் பார்வைக்கு.

அன்புடன்,
இராம.கி.

,http://www.slideshare.net/iraamaki/1-37205136




Wednesday, July 02, 2014

தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும் - பரத்தீடு

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆம் ஆண்டுவிழா அமெரிக்கா செயிண்ட் லூயிசு நகரில் சூலை 4, 5,6 நாட்களில் நடக்கிறது. அதில் என்னைச் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அழைத்திருக்கிறார்கள்.

வரும் வெள்ளிக்கிழமை காலை 10 - 12 மணியளவில் ”தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்” என்னும் என் உரையைச் சிறப்பரங்கில் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கான பரத்தீட்டை (presentation) எல்லோரும் படிக்கும் வகையில் இங்கு வெளியிடுகிறேன்.

நேரடியாகச் செய்யும் உரை/கட்டுரையளவிற்கு இது அமையாதென்றாலும், ஓரளவு பரத்தீட்டின் மூலம் நான் சொல்லவரும் கருத்துப் புரியுமென்று எண்ணுகிறேன்.

இதைக் கீழ்க்கண்ட வலைத்தளத்திலும் போட்டுள்ளேன். இனி இங்கள் வாசிப்பிற்கு.

http://www.slideshare.net/iraamaki/ss-36534251


அன்புடன்,
இராம.கி.



Friday, April 04, 2014

தமிழி - உரோமன் எழுத்துப்பெயர்ப்பு - 2

இக்கருத்தரங்கில் தமிழ்ப் பின்னங்கள், குறியீடுகளை ஒருங்குறியிற் சேர்ப்பது கருதி, தமிழ்ப் பெயர்களை ஒரே வகை உரோமன் எழுத்தில் [அதாவது உயர் கட்டெழுத்தையும் (upper case  letters), தாழ் கட்டெழுத்தையும் (lower case letters) கலக்காது அந்தந்த தனிக் கட்டெழுத்தில்] எப்படிக் குறிப்பதென்ற கேள்வியெழுந்திருக்கிறது. அதை முடிவு செய்வதற்காக

1.Prof. M. Ponnavaikko, Vice Chancellor, S.R.M. University.
2.Prof. V. Jayadevan, Chief Editor, Madras University Tamil Lexicon Revision Project.
3.Prof. Murugaiyan, Professor (Retd.), Annamalai University.
4.Thiru. Ma. Poongundran, Editor, Directorate of Tamil Etymological Dictionary.
5.Dr. M. Kannan, Editor, Directorate of Tamil Etymological Dictionary  (Addl. member).
6.Dr. Shriramana Sharma, Research scholar with special interest in technological support for old Indic writing system, Author of Unicode proposal L2/13-047 the standing proposal to
encode Tamil fractions and symbols in Unicode.
7.Thiru. Mani M. Manivannan, Chair, Tamil Unicode Working Group, INFITT.

அடங்கிய குழுவொன்றைக் கருத்தரங்கின் முடிவில் ஏற்படுத்தியிருக்கிறார். இக்குழு இது வரை கூடியதா, தன் தேர்வு முடிவை எடுத்ததா, அரசிற்குப் பரிந்துரை அளித்ததா என்பதெலாம் எனக்குத் தெரியாது. நான் தமிழறிஞனும் இல்லை; கணிஞனுமில்லை. கொஞ்சமே தமிழறிந்த பொறிஞன். [”கணிஞனும், தமிழறிஞனும் இல்லெனில் தமிழ்க்கணிமை பற்றிப்பேச உனக்கென்ன அருகதை?” என்று யாராவது அன்றே கேட்டிருந்தால் இப்புற்றுக்குள் கை வைத்திருக்கமாட்டேன். “கரை வேட்டியோ, கதர் வேட்டியோ போடாதவன் தமிழரிடை அரசியல் பேச அருகதை இல்லாதவன்” என்று சொல்வது போல் இருக்கிறது.] ஆர்வ மிகுதியால் 16 ஆண்டுகள் தமிழ்க் கணிமை பற்றிப் பேசிவிட்டேன். என்னைப் பொறுத்துக் கொண்ட தமிழர் உலகிற்கு நன்றி.

(அதேநேரம் தமிழெழுத்து, ஒலிகளின் நுட்பம் பற்றி மேலோடத் தெரிந்தவர் எல்லாம் தமிழ் ஒருங்குறியுனுட் புகுந்து ”அதை மாற்று, இதை நுழை, அதை வைத்தே தீர வேண்டும்” என்று ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் முன்னீடு கொடுத்துத் தாம் வேண்டும் மாற்றங்களை அடையுங் கால முரணைப் பற்றி  எண்ணாது இருக்க முடியவில்லை. 10 கோடிப் பேரின் செய்யாமையிடையே, ஒரு தனி மாந்தன் தன் தனிப்பட்ட தாக்கத்தால் தான்தோன்றித் தனமாய்ச் செய்துவிடும் அச்ச விளைவுகளும் இதில் இருக்கின்றன. தனிமாந்தரின் தான்தோன்றிச் செயல்களுக்கு முன் தமிழக அரசோ, இந்திய நடுவண் அரசோ தடுமாறித் தான் போகின்றன. மேலே கூறிய கருத்தரங்கம் நடந்ததற்கே ஒரு தனி மாந்தரின் முன்னீடு தான் கரணியமாகும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

என்று சொன்ன குறளை நினைத்துக்கொள்ள வேண்டும் போலும்.)
எழுத்துப் பெயர்ப்பு விதயத்தில் எனக்குத் தென்பட்டதை ஓரிடத்திற் பதிவு செய்வோம். படிப்பவர் படிக்கட்டும். எழுத்துப் பெயர்ப்புக் குழுவினர் என் ஓர்மைகளை வேண்டின் ஒருவேளை கருதட்டும் என எழுத முற்படுகிறேன். விளக்கங் கேட்டு அவர் எனைப் பணித்தால் இயன்றது செய்ய அணியமாய் உள்ளேன். (அக்கருத்தரங்கிற்கும் அணில் போல உதவத்தான் செய்தேன்.)

எழுத்துப் பெயர்ப்பு என்பது (transliteration) கேட்பொலிப் பெயர்ப்பினும் (transcription) வேறுபட்டது. எழுத்துப் பெயர்ப்பின் ஊற்றுக்கொத்து (source set) என்பது தமிழெழுத்துக்கள் அனைத்தும்  அடங்கியதாகும். அதன் எயினக் கொத்து (target set) என்பது, உரோமனெழுத்துக்கள் அடங்கியதாகும். இரு கொத்துக்களிலும் இருக்கும் எழுத்துக்கள் வெறும் வடிவங்களல்ல, அவை ஒலிகளையும் குறிக்கின்றன. எழுத்தெனும் வகைப்பாட்டின் ஆழமான தொல்காப்பியப் பொருளை இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வட இந்தியப் பெருமி (Brahmi) வழிப்பட்ட நாகரியெழுத்தை வைத்து அதே அடைப் பலகையிற் (template) தமிழெழுத்தைச் சில கணிஞர் இடைப்பரட்டி விளங்கஞ் சொல்வது நம்மை முன்செலுத்தாது. [மைக்ரொசாவ்ட்டின் பாஷா இந்தியா என்றதொரு வலைத்தளம் அப்படியொரு பணியைச் செய்து கொண்டு இருந்தது. தமிழெழுத்து பெருமியெழுத்தைப் போல அபுகிடா (abugida) வகை என்றங்கு முறையற்றுச் சொல்லிக்கொண்டிருந்தார்]. [இன்னுஞ் சிலரோ பெருமியிலிருந்து தமிழி உருவாக்கப்பட்டதென அவக்கரப்பட்டு முழு ஆய்வும் இல்லாது சொல்கிறார். இதுவரை கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளின் படி பெருமிக்கும் காலத்தால் முந்திக் (கி.மு.490) தமிழிக் கல்வெட்டுக் கிடைத்துள்ளது. தமிழியிலிருந்து பெருமி ஏன் தோன்றியிருக்கக் கூடாதென்று பல்வேறு ஆய்வாளரும் எண்ணிப் பார்க்கத் தவறுகிறார். இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடு இருப்பதை உணராமலும், இப்படி ஒரு ‘குதருக்கம்’ நடப்பது தெரியாமலேயும் தமிழறிஞரும் உருப்படியான கணிஞரும் தம் கருத்துச் சொல்லாது விலகியிருக்கிறார்.]

(தமிழெழுத்தைத் தமிழி என்றே நான் இப்போதெல்லாங் குறித்து வருகிறேன். தமிழி என்பது பெருமிக்கும் முந்தையது. தனிப்பட்டது என அண்மைத் தொல்லியல், கல்வெட்டு ஆய்வுகள் சொல்லிவருகின்றன. இனிமேலும் திரு ஐராவதம் மகாதேவனைப் பின்பற்றித் தமிழ்-பிராமி என்று தமிழர் குறிப்பது சரியல்ல. பெருமியென்பது அகரமேறிய மெய்யெழுத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழியென்பது அகரமேறாத் தனிமெய்யை அடிப்படையாகக் கொண்டது. இரண்டும் வெவ்வேறானவை)

ஒருங்குறியேற்றம் நடந்தபோது இத் தப்பைச் சிலர் செய்யாதிருந்திருப்பின் தமிழுக்கு நன்மை கிடைத்திருக்கும். ஒருங்குறியில் 128 அறைகளுக்குள் தமிழெழுத்துச் சிறைப்பட்டு இருந்திருக்காது. அந்நேரம் தமிழறிஞரும், பெரும்பாலான கணிஞரும் சேர்ந்து தூங்கிவிட்டார். தூங்காதவரும் தமக்குள் கட்சி கட்டி TAB/TAM/TSCII என்று உள்ளூர்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பல்வேறு உள்ளூர்ச் சண்டை போடுவதிற்றான் தமிழர்கள் 2500 ஆண்டுகளைக் கழித்திருக்கிறோமே? தமிழர் என்றைக்குத்தான் ஒன்றுபட்டிருக்கிறோம்? அரசியலார் மட்டும் இதில் மாறுவாரா, என்ன? 1985 அளவில் தமிழறிஞர், கணிஞர் என யாருமே தமிழ்க் கணிமை பற்றித் தமிழக அரசைத் தட்டி யெழுப்ப வில்லை. நல்ல வாய்ப்பை நழுவவிட்டோம்.

இத் தூக்கத்திற்கு நடுவில் நடுவணரசின் CDAC நிறுவனம் தனக்குத் தோன்றியது போல் ISCII அடைப்பலகையை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அப்படியே முன்மாதிரியாக அனுப்பியது. இப்படி 128 இடங்களிற் தமிழ் சிறைப்பட்டதால் எல்லாக் கணினி வெளியீட்டுச் சாதனங்களிலும் (output devices) ஒரு rendering engine இன்றித் தமிழாவணங்களை இப்பொழுதுங் காட்சிப் படுத்த முடிவதில்லை. தமிழைக் காட்சிப் படுத்தும் கணிகள் இந்த வேலையைச் செய்த பின் தான் குறியீடுகளை வெளியீட்டுச் சாதனங்களுக்கு அனுப்பின. மேலைமொழிக் கணிமைகளின் எளிமைக்கு முன்னால் கால காலத்திற்கும் தமிழ்க் கணிமையிற் சுற்றிவந்து மூக்கைத் தொடும் நிலைக்கு நாம் ஆட்பட்டுள்ளோம். இப்பொழுது தன் நிலையுறுதிப் பொள்ளிகையைக் (stability policy) காரணங் காட்டி ஒருங்குறிச் சேர்த்தியம் ”128 அறைகளுக்கு மேலில்லை” என அடம்பிடிக்கிறது. அதை மறுத்து வாதமிட நமக்கு ஆற்றல் இல்லை. 800 பவுண்டுக் கொரில்லாவிற்கு முன் நாமெல்லாம் எந்த மூலை? எனவே 128 இடங்களிற் சிறைப்பட்டபடியே தமிழ்க் கணினி நிரல்களுக்குள் நாம் இன்று வேலைசெய்ய வேண்டியிருக்கிறது.

[தமிழ் ஒருங்குறியில் மொழிச்செலுத்தம் (language processing) என்பது உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களை வைத்து நடப்பதில்லை. இக்கட்டுரையைப் படிப்பவர் சற்று மூச்சைச் சீர்படுத்தி நானென்ன சொல்கிறேனென உணர்ந்து படிக்கவேண்டுகிறேன். உயிரெழுத்துக்கள், அகர உயிர்மெய், சில குறியீடுகள் என்று இன்னுங் கீழ்மட்டத்தில் மொழிச்செலுத்தம் நடந்து, முடிவில் நாம் படிக்கும் வகையில் உயிர், அகர உயிர்மெய், குறியீடுகளை வெளியீட்டுச் சாதனங்களில் ஒன்றோடொன்று பொருத்தி ஒட்டிவைக்கவேண்டும். அப்போது தான் தமிழெழுத்தின் தோற்றப் பொலிவிருக்கும். இப் பொருத்தும் நிரலே rendering engine எனப்படுகிறது. எந்தெந்த நிரலிகளின் முடிவில் பொருத்தும் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லையோ, அங்கெல்லாம் தமிழெழுத்தின் தோற்றம் கோணல் மாணலாய் வெளிப்படும். இன்றைக்கும் அங்குமிங்குமாய் தமிழெழுத்துக்கள் சிலபோது குதறப்பட்டு இணையத்தில் இளிச்சவாய்த் தோற்றங் காட்டி அமைவது இயல்பாய்ப் போனது. ஒரு வெருவி (virus) தமிழ் நிரலிக்குள் உள் நுழைந்தால் போதும், தமிழெழுத்து இளித்து விடும். எத்தனை ஆவணங்களை இது போல் பார்த்துவிட்டோம்?]

இந்த எழுத்துப் பெயர்ப்பிலும் அதேவகைப் பிழையைச் செய்துவிடக் கூடாது. தமிழுக்காகப் பணிசெய்யும் கணிஞரும், தமிழறிஞரும் ஒன்றுசேர்ந்து வேலை செய்யவேண்டும்..

பொதுவாகத் தமிழியெழுத்தின் ஒலி அவ்வெழுத்தின் வடிவம், குறிப்பிட்ட எழுத்து,சொல்லில் வருமிடம் ஆகியவற்றைப் பொறுத்தது.

Sound of a Tamili letter = Function of (the shape of the letter, place of its occurrence in a word).

அதே பொழுது,

Sound of a Brahmi letter = Function of (the shape of the letter).

எனவே தமிழியெழுத்தின் ஒலிப்பு முறை ’ஒன்றிலிருந்து பல’ என்ற உறவு முறையைக் (one to many correspondence) கொண்டது. பெருமியெழுத்தின் ஒலிப்பு முறை ’ஒன்றிலிருந்து ஒன்று’ என்ற உறவுமுறை (one to one correspondence) கொண்டது. உரோமன் எழுத்தும் ஒன்றிலிருந்து பல உறவு முறை கொண்டது.  
தமிழியும் உரோமன் எழுத்தும் ஆன இரண்டு கொத்துகளும் ஒன்றிற்கொன்று எண்ணிக்கையளவில் மதிக்கத் தக்கனவா எனில் இல்லை. 12 உயிர்களோடு, 1 ஆயுதவெழுத்து, 6*2 வல்லின மெய்யொலிகள், ககரத்திற்கும் சகரத்திற்கும் சிறப்பான உயிரிடை (intervocalic) மெய்யொலிகள், 6 மெல்லின மெய் யொலிகள், 6 இடையின மெய்யொலிகள் என்ற 39 தமிழ் எழுத்துக்களோடு, (நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏதோவொரு காலகட்டத்திற் சேர்ந்து கொண்ட) 6 கிரந்த எழுத்துக்களும் சேர்த்து 45க்குத் தகுந்தாற் போல் இணைக்குறிகளை நாம் பரிந்துரைக்கவேண்டும். உரோமன் எழுத்திலோ, F, W தவிர்த்து 24 வடிவங்கள் / ஒலிகளே உள்ளன. ஆக இரண்டு கொத்துக்களும் ஆங்கிலத்திற் சொல்வதுபோல் தத்தம் அளவிற் பொருந்தாதவை (incommensurate). 45 is not equaled to 24. இப் பொருந்தாமை முரணைச் சரிபண்ண, மூன்றுவித ஓர்மைகள் உண்டு.

1. உரோமனெழுத்தில் உயர்கட்டெழுத்தையும் (upper case letters), தாழ்கட்டெழுத்தையும் (lower case letters) கலந்து எழுதுவது. [இக் கலப்பினால் எயினக்கொத்து 48 என வந்துசேரும். ஆனால் இப்படிக் கலந்தெழுதக் கூடாthu என ஒருங்குறிச் சேர்த்தியஞ் சொல்லுகிறது. மாறாக அந்தந்த தனிக் கட்டெழுத்திலே குறிக்கவேண்டும் என வலிதாகக் குறித்திருக்கிறார். எனவே இந்த ஓர்மையை நாம் செயற்படுத்த முடியாது.]

2. அடுத்து, ஏதோவொரு கட்டெழுத்தையும், (1, 2,....9,0) என்ற எண்களையும் உரோமன் குறியீடுகளையும் கலந்தெழுதலாம் என்பது இரண்டாவது ஓர்மை [ஒரு தமிழாவணத்தில் பொருண்மை கருதி எண்களும் எழுத்துக்களும் சேர்ந்து பயிலலாம் என்பதால் எண்களை வெறும் ஒட்டுக்குறிகளாக்குவது இல்லை என்றாகிப் போகிறது.]

3. உரோமனெழுத்தோடு ஆளங்குறிகளை (diacritic marks) ஒட்டிவைத்து எழுதுவது. [இதைப் பல மேலை மொழிகளே பயனாக்கி வருகின்றன. இதைத் தவிர்க்க வேண்டும் என்று சில கணிஞர் சொல்லுவது ஏனென்று எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் சில மேலை மொழிகளே இப்படியொட்டி தம் ஒலிகளுக்கு வடிவங் காட்டிவருகின்றன. தமிழுக்காக உரோமன் எழுத்தில் இதைச் செய்தாலென்ன?] 

எழுத்துப் பெயர்ப்பு பற்றி ஆங்கில ஆட்சி நெடுகிலும் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளன. அவற்றின் உச்சகட்டம் எல்லோரும் பெரிதும் புழங்கிய சென்னைப் பல்கலைக்கழகச் சொற்களஞ்சிய எழுத்துப் பெயர்ப்பாகும். இம் முறையில் மாக்கோடு, அடிக்கோடு, மேற்புள்ளி, கீழ்ப்புள்ளி, அலை என 5 ஆளங்குறிகளைப் (diacritic marks) பயன்படுத்துவர். சிறப்பாக, ஆ, ஈ, ஊ, ஏ ஓ ஆகிய எழுத்துக்களைக் குறிக்கக் குறில் வடிவங்களைப் போட்டு அவற்றின் மேலே மாக்கோடு (macron) போடுவார். Transliteration, transcription மாற்றஞ் செய்ய விழைவோர் சென்னைப் பல்கலைக்கழக எழுத்துப்பெயர்ப்பை விளங்கி கொள்ளவேண்டும். அந்த எழுத்துப்பெயர்ப்பில்,

ஃ என்பதற்கு k என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு (underbar) போடுவார். [இதற்கு மாறாய் q என்றும் போடலாம். கணிஞர் முத்து நெடுமாறனின் அஞ்சல் விசைப்பலகையில் அப்படித்தான் செய்கிறோம்.)

ற் என்பதற்கு r என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு போடுவார்

ன் என்பதற்கு n என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு போடுவார்.

ழ் என்பதற்கு l என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு போடுவார்

ங் என்பதற்கு n என்று போட்டு அதன்மேல் புள்ளி போடுவார்.

ட் என்பதற்கு t என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்

ண் என்பதற்கு n என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்

ள் என்பதற்கு l என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்

ஷ் என்பதற்கு s என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்

ஞ் என்பதற்கு n என்று போட்டு அதன்மேல் அலையைக் (tilde) போடுவார்

அ   ஆ இ    ஈ   உ    ஊ   எ  ஏ    ஐ  ஒ   ஓ  ஔ   ஃ
a       ā     i      ī     u       ū     e    ē     ai    o     ō     au        ḵ
க்   ங்  ச்   ஞ்   ட்  ண்   த்   ந்   ப்   ம் 
k     ṅ    c     ñ     ṭ      ṇ       t    n    p    m
ய்   ர்  ல்   வ்   ழ்  ள்
y     r     l      v      ḻ     ḷ
ஜ்   ஸ்   ஷ்   ஹ்  க்ஷ்   ஶ
j        s       ṣ        h      kṣ     ஶ

சென்னைப் பல்கலைக்கழகத்தின் உரோமன் எழுத்துப்பெயர்ப்பு கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாகப் பயன்பட்டுவருகிறது. [NHM font converter இல் இந்த ஆளங்குறி முறை (diacritic method) செயற்படுத்தப் பட்டிருக்கிறது.] இதில் 5 ஆளங்குறிகளைப் பயன்படுத்துவது சிலருக்குத் தயக்கத்தைக் கொடுக்கலாம். தமிழாவணங்கள் ஆளங்குறி நிறைந்ததாய்க் “கொசகொச” என்று ஆகிவிடுமோ என்று ஐயுறலாம். இந்த ஆளங்குறிகளைக் குறைக்கலாமா எனில், ஓரளவு முடியும்.

காட்டாக, நெடில் உயிர்களை உரோமனெழுத்தில் இரண்டாக எழுதியோ, ஒன்றோடு இன்னொன்றை அடுத்தடுத்துப் போட்டோ எழுதிவிடலாம். அதன் மூலம் உயிர்க்குறில் வடிவங்களின் மேல் மாக்கோடு போடுவதைத் தவிர்க்கலாம். உயிரிடை (intervocalic) வல்லினக் ககரம், சகரம், தந்நகரம், இடையின ரகரம், இடையின லகரம் ஆகியவற்றிற்கு ஓர் அலைக்குறியும், டகரம், அதிர் டகரம், டண்ணகரம், ளகரம் ஆகியவற்றிற்கு ஒரு கனக்குறியும் (grave) இட்டால் இரண்டே ஆளங்குறிகளை வைத்து இப்போதுள்ள சிக்கலைச் சரிசெய்து விடலாம். இரண்டு ஆளங்குறிகளை வைப்பதில் ஒரு வாய்ப்பும் இருக்கிறது.

எல்லாக் கணி விசைப்பலகைகளிலும் 1,2, 3.. என்ற எண்வரிசைப் பொத்தான்களுக்கு முன்னால் இருக்கும் பொத்தானில் இரு ஆளங்குறிகளைக் கொண்டவொரு பொத்தான் ஏற்கனவே இருக்கிறது. அதைவைத்து நாளையே தமிழாவணங்களை உரோமனெழுத்தில் உருவாக்கிவிடமுடியும். எந்த நிரலியின் துணையுமின்றி இதை எல்லாக் கணிகளிலும் உடனே செய்ய முடியும்.

இந்த 2 ஆளங்குறிகளும் தமிழுக்குப் பொருந்துவது போற் பொருண்மையும் இருக்கிறது. டகரம், அதிர் டகரம், டண்ணகரம், ளகரம் போன்றவற்றைச் சற்று கனமாகவே ஒலிக்கவேண்டி உள்ளது. எனவே கனக்குறி அவற்றிற்கு இடுவது மெத்தச் சரி. அதேபோல, அலைக்குறி எழுத்துக்களைச் சற்று நெகிழ்ந்தே  ஒலிக்க வேண்டியுள்ளது. அடிப்படையில் அலைதலென்பது ஒருவகை ஒலி நெகிழ்தலே.

என் பரிந்துரையைக் கீழே குறித்துள்ளேன். இதனால் எத்தமிழாவணத்தையும் இன்றுள்ள நிரலிகளை வைத்தே சரியான முறையில் உரோமன் எழுத்தில் எழுத்துப்பெயர்ப்பு செய்யலாம். எந்தக் குறையும் வாராது. (தமிழ்ப் பின்னக் குறியீடுகளை உரோமன் எழுத்தில் இந்த ஆளங்குறிகளைச் சேர்த்து எழுதி விட முடியும்.) எக் குழப்பமும் ஏற்படாது.

அ        A           a                                 க்         K          k           ய்         Y         y
ஆ      AA          aa         intervocalic க்          K~       k~          ர்          R~      r~
இ         I            i                    voiced க்          G         g           ல்         L~      l~
ஈ         II            ii                                ங்         NG       ng        வ்         V       v
உ        U            u                                ச்          C         c           ழ்          L        l
ஊ       UU         uu        intervocalic ச்         C~        c~         ள்         L`       l’
எ         E             e                 voiced   ச்          J          j
ஏ         EE           ee                             ஞ்         NJ        nj         ற்          R        r
ஐ        AI           ai                                ட்          T`         t`          ன்         N       n
ஒ        O            o                 voiced    ட்         D`        d`
ஓ        OO         oo                             ண்        N`        n`
ஔ    AU          au                             த்          T          t           ஜ்         J         j
                                              voiced    த்         D           d          ஷ்       SH      sh
ஃ          Q            q                                ந்         N~        n~        ஸ்       S         s
                                                              ப்         P            p          ஹ்      H        h
                                             voiced     ப்         B            b          க்ஷ்      X        x
                                                              ம்        M           m         ஶ         Z         z
    
Unused Roman letters                 F,W       f, w

நான் பரிந்துரைத்த இந்த எழுத்துப் பெயர்ப்பில் ஒரு பெரிய அச்சமும் எனக்கு இருக்கிறது. தமிழெழுத்துக்கு மாற்றாக இந்த ஆளங்குறி சேர்ந்த உரோமன் எழுத்து ஒரேயடியாய்ப் பயனாகிவிடக் கூடாது. அப்படியானால் , “உள்ளதும் போச்சுதடா, தொள்ளைக் காதா” என்று ஆகிவிடும். அலைபேசி கொண்டு, குறுஞ்செய்தி (SMS) அனுப்பி (enna machchi, eppatikkiiree?), இணையத்தின் மூலம் கீசிக்கொண்டு (twitter) அரட்டையடிக்கும் எதிர்கால இளைய தலைமுறை, தமிழின் எழுத்தை முற்றும் போக்கடித்துவிடலாம். அது நடக்கக் கூடாது.

இளையரிற் பலருக்கும் அடியோடு தமிழெழுத்துத் தெரிவதில்லை. (உங்களுக்குத் தெரியுமா? கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் இளஞ்சிறார் தம் கீர்த்தனைகளையும், பாடல்களையும் உரோமனெழுத்தில் எழுதி வைத்துப் பாடம் படிக்கிறார். தமிழ்ப் பாட்டும் சங்கத, தெலுங்குக் கீர்த்தனைகளும் அப்படித் தான் இளந்தலைமுறைக்குப் போகின்றன.) பெருங்கணி நிறுவனங்களும், சேவை தருவோரும் தம் வணிக நலன் கருதி தம் கருவிகளும், சேவைகளிலும் தமிழெழுத்து அளிப்பை (supply) வேண்டும் என்றே குறைத்துத் தருகிறார். கன்னாப் பின்னாவென்று தமிழுக்கு உரோமன் எழுத்துப் புழக்கம் இளைஞரிடையே கூடிக்கொண்டிருக்கிறது. பெரியவர் ஆகிய நாமோ தேமே என்று விழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழார்வலர் விழித்தெழாவிட்டால் தமிழெழுத்து மறையுங் காலம் வெகு தொலைவில் இல்லை. பழைய குடியேற்றத்தில் நாட்டாதிக்கம், இனவாதிக்கம், மொழி யாதிக்கம் என நடந்தது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். புதிய குடியேற்றத்தில் இப்பொழுது எழுத்தாதிக்கம் என்பது புதிய பரிமானம். அவ்வளவு தான். ஓர்ந்து பாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.