Monday, May 24, 2010

சிலம்பின் காலம் - 12

கட்டுரையை முடிக்க இன்னும் ஒரு கேள்வி மீதமிருக்கிறது. ”சிலம்புக் கதையின் காலம் கி.மு.75-80 ஆய் இருக்கலாம். சிலம்பு என்னும் காப்பியத்தின் காலம் அதற்கும் பின்னால் சில நூற்றாண்டுகள் கழித்து இருக்கக் கூடாதா?” இதை இந்தப் பகுதியிற் பார்ப்போம்.

1.இத்தகைய கூற்றிற்குத் துணையாக ஒருசிலர் சிலம்பில் வரும் வடசொற்களைக் காரணஞ் சொல்லுவார்கள். [பேரா. வையாபுரிப் பிள்ளை போன்றோரின் கூற்று.]

தமிழில் வடசொற்கள் நுழைவது இன்று நேற்றல்ல; நந்தர், மோரியர் காலத்திலேயே தொடங்கி விட்டது. என்றைக்கு ஆசீவகம், செயினம், புத்தம், உலகாய்தம் போன்ற நம்புநெறிகளும், நம்பாநெறிகளும் வேதநெறியைக் கேள்விகேட்கத் தொடங்கினவோ, அன்றே அறிவாளிகளின், முனிவர்களின் (இருடிகளின்), மெய்யியலாளர்களின், நகர்ச்சி வடக்கிருந்து தெற்கு நோக்கித் தொடங்கிவிட்டது. இங்கிருக்கும் அரசரின் ஆதரவை பெற வேண்டாமா? இந்நகர்ச்சியில் பாகதமும், சங்கதமும் சிறிது சிறிதாய்த் தமிழில் நுழையத் தானே செய்யும்? [அம்மொழிச் சொற்களைத் தமிழில் தக்க வைத்து, தமிழையே மாற்ற முற்படுவது வேறு கதை. அதை நான் பேசவில்லை. கூடியமட்டும் நம் நடையிற் தமிழ்ச்சொற்களை ஆளுவதே சிறந்தது என்று சொல்லுவேன். ”அகிலத்தின் ஒழுங்கின்மை (entropy of the universe) கூடுகிறது” என்பதற்காக எந்தக் கட்டகமும் (system) தன்னுள் ஒழுங்கை (order) உருவாக்காது இருக்கிறதோ? ஒழுங்கு என்பது ஒழுங்கின்மைக்கு நடுவில் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.]

”வடசொற்கள்” எனுஞ் சொல் சங்கதம், பாகதம் என்ற இரு மொழிச்சொற்களுக்கும் பொதுவானது. ”வடசொற்கள்” எல்லாம் சங்கதமே என்னும் பார்வை ஒருபாற் கோடியது. (தமிழாய்வில் நெடுங்காலம் பாகதத்தைக் குறைத்தே மதிப்பிட்டிருக்கிறார்கள்.) வடசொற்கள் தமிழுள் ஊடுறுவியது வெறும் மெய்யியலார் தொடர்பால் மட்டுமல்ல.அதற்கும் ஆழமான, தமிழகம், மகதம் ஆகிய இரு தேசங்களின் அரசியற் பொருளியல்கள் ஊடாடத் தொடங்கியவுடன், தக்கண, உத்தரப் பாதைகளின் வழி சாத்துக்கள் இடை நகரத் தொடங்கியவுடன் மொழிகளின் பரிமாற்றம் அதனூடாக நடக்கத் தொடங்கும் தானே?

இத்தகைய இயல்பான பரிமாற்றம் நடக்கும் போது, ஒரு சிலரின் மொழிநடை மாற்று மொழியால் பாதிப்பில்லாது இருக்கும்; வேறு சிலரின் மொழிநடையோ பெரிதும் பாதிக்கப்படும். ஏன் ஒருவரே வெவ்வேறிடங்களில், வெவ்வேறு நடை பயிலமாட்டாரா, என்ன? வடசொற் கிளவியைத் தமிழில் சிலர் பயிலத் தொடங்கியதாற்தானே கி.மு. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் ”வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்று நெறிப்படுத்த முனைந்தார்? ”தமிழை மேலோட்டமாய்ப் பேசத் தெரிந்த, ஆனால் அதை முழுதும் புரிந்துகொள்ளாத, தமிழர் மரபு என்பதை முறையே அறிந்து கொள்ளாத, படித்த, மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க எழுந்த இலக்கணம் தான் தொல்காப்பியம்” என்று அண்மையில் பேரா. கா.சிவத்தம்பி சொல்லவில்லையா?(95) [பேரா. சிவத்தம்பியோடு தொல்காப்பியரின் காலக் கணிப்பில் நான் வேறுபடுகிறேனேயொழிய இக்கருத்தில் அல்ல.]

தமிழக வரலாற்றில் தொடர்ச்சியாக ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எழுத்துநடை என்பது ஓரளவு கட்டுப்பட்ட பழமைப் போக்கிலும், பேச்சுநடை என்பது ஓரளவு நீக்குப் போக்கோடு, கலவை நடையாக இருப்பதும் உண்மைதானே? அண்மைக்காலப் பாரதியையே எடுத்துக் கொள்வோமே? வடசொற்கள் அவன் உரைநடையில் மிகுந்தும், கவிநடையிற் குறைந்தும் இல்லையா? இதே போலக் கவிப்பேரரசன் கம்பன் செய்திருக்க மாட்டானா? தேவார மூவர் செய்திருக்க மாட்டாரா? இளங்கோ செய்திருக்க மாட்டானா? அருணகிரிநாதர் எக்கச் சக்கமாகத் திருப்புகழில் வடமொழி பயின்றார் என்பதால் அவர்க்கு முந்திய 14 ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கினியரில் அதே அளவு காணுவதில்லையே? ஏன் 11 ஆம் நூற்றாண்டு இளம்பூரணருக்கும், 14 ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கினியருக்கும் எத்துணை அளவு வேறுபாடு கண்டுவிட்டோம்? ஒரே காலகட்டத்தில், வடமொழி விரவிய நடையும், விரவாத நடையும் பயிலத்தான் செய்திருக்கின்றன.

எத்துணை விழுக்காடு வடசொற்கள் சமகாலத்திற் தமிழர் பயின்றார் என்பது அகன்ற பட்டை போன்றது. அதை நூலிழைபோற் கருதிக் கணித்துவிட முடியாது. கூடவே, மொழிநடை என்பதைக் காலத்தோடு நேருறவுற்றதாய்க் (direct relation) கொள்ளக் கூடாது. ஒரு காப்பியத்தை எடுத்துக் கொண்டு அதிலுள்ள வடசொற்களைக் கணக்குப் போட்டு அது எந்தக் காலம் என்று துல்லியமாக 10 ஆண்டுக் கணக்கிற் சொல்லுவது மிகக் கடினம். என்னைக் கேட்டால் இந்தக் கணிப்பில் 100, 200 ஆண்டுத் துல்லியங் கணக்கிடுவது கூடச் சரவலான செயலேயாகும்.

அடுத்த கேள்வியான ”சிலம்பிற்குள் எது வடசொல், எது தமிழ்ச்சொல்?” என்பதிற்கூட ஒரு ஒன்றுபட்ட அளவுகோல் கிடையாது. வடசொல் என்று சிலர் சொல்லுவதை தமிழ்ச்சொல் என்று இன்னொரு அறிஞர் வேர்ச்சொற்கள் கொண்டு சான்றுகளோடு நிறுவுகிறார். மொத்தத்தில் அயல்மொழிச் சொற்களை வைத்து, ஓர் இலக்கியத்தின் காலத்தைத் தெள்ளத் தெளிவாகக் கணிப்பது அவ்வளவு எளிதான செயலல்ல. அது சவ்வாக இழுத்துக் கொள்ளும். இருந்தாலும் சிலம்பிற் பயிலும் வடசொற்கள் எத்தனை விழுக்காடு என்பது சுவையார ஆய்வுதான்.

2. மணிமேகலையோடு சிலப்பதிகாரத்தை இணையாக வைத்து இரட்டைக் காப்பியம் என்று சொல்லி, அதனாற் காலத்தைக் குறைத்துக் காட்டுவார்கள். [பல தமிழறிஞர் கூற்று.]

என்றைக்குப் பதிகத்தையும், வரந்தரு காதையையும் இளங்கோ இயற்றியதாய் இருக்கவியலாது என்று ஒதுக்கினோமோ, அன்றைக்கே இக்கூற்றுப் பட்டுப்போகிறது. கோவலன், மாதவியின் மகள் மணிமேகலை என்பதைத் தவிர்த்து இரண்டு கதைகளுக்கும் தொடர்பு கொஞ்சமும் கிடையாது. புத்தநெறியே சிறந்தது என்று நிலைநாட்டப் பிறந்த மணிமேகலையின் கதைக்களன் முற்றிலும் வேறுபட்டது. அதன் காலத்தைத் தனித்துக் கணிக்க வேண்டுமேயொழிய சிலம்போடு சேர்த்து இரட்டைக் காப்பியம் என்று சொல்லி சிலம்பின் காலத்தை வலிந்து கீழே தள்ளுவது வேண்டாத வேலை. சிலம்பு என்னும் காப்பியம் ”பத்தினிக் கோட்டம் கட்டிய நிகழ்வோடு ஒரு சில ஆண்டுகளிலேயே காப்பியமாய் எழுதப்பட்டிருக்கவேண்டும்” என்று எண்ணுமாப்போல், அகநானூற்றின் 149 ஆம் பாட்டு உறுதி செய்கிறது. அதைக் கீழே பார்ப்போம்.

3. சிலப்பதிகாரத்தைச் செயினக் காப்பியம் என்றுரைத்து, “செயினம் என்பது களப்பிரர் காலத்திற்தான் தமிழகத்தில் பெரிதும் பரவியது” என்று கட்டங்கட்டி, அதனால் சிலம்பு பிற்பட்டது என்று ஒருசிலர் சொல்லுவார்கள். [இது பல இடதுசாரியர் கூற்று]

கட்டுரையின் முன்பகுதிகளிற் சொன்னாற் போல், சிலம்பு ஒரு செயினக் காப்பியம் என்று சொல்ல முற்படுவதற்கு வரந்தரு காதை மட்டுமே சான்றாகும். வரந்தரு காதையை ஏற்பதில் தயக்கம் வந்தபின், சிலம்பு செயினக் காப்பியம் என்று சொல்வதிலும் தயக்கம் ஏற்படும். கவுந்தி என்னும் செயினத் குரத்தி காப்பியத்தின் ஊடே ஒரு கதை மாந்தராய் செயினம் பேசி வருவதாலேயே சிலம்பு செயினக் காப்பியம் ஆகிவிடாது. ”கவுந்தி பேசுவது ஆசீவகம் தான்; அவரை செயினக் குரத்தி என்று சட்டென்று சொல்லிவிட முடியாது, ஊழையும், ஊழ்வினையையும் பலர் குழப்பிக் கொள்கிறார்கள்” என்று பேரா. க.நெடுஞ்செழியன் கூறுவார்(96).

ஆசீவகத்திற்கும், செயினத்திற்கும் இடையுள்ள ஆட்டத்தில் பல்வேறு ஆசீவகச் சான்றுகளை செயினமாய்க் காட்டும் போக்கு 19, 20 ஆம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களிடையே, தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே பெரிதும் இருந்திருக்கிறது. ஏதெல்லாம் செயினம் எனப்படுகிறதோ, அவற்றை மீளாய்வு செய்வது இப்பொழுது தேவையாகிறது. சிலம்பும் அதிலோர் ஆய்வுக் களமே.

இன்னொரு செய்தியும் இங்கு சொல்ல வேண்டும். நிக்கந்தர்கள் நெடுங்காலம் வேதநெறிப் பார்ப்பனரைப் போன்றே ஏதொன்றையும் எழுத்தில் வைக்கத் தயங்கினார்கள். “சரசுவதி இயக்கம்” என்ற செயின எழுத்தியக்கம் கி.மு.150 களிற் தொடங்கி கி.பி.100 வரை நடந்தது. அந்த இயக்கத்தையொட்டியே மகாவீரர் போதனைகள் எழுத்தில் ஆவணப்பட்டன. இதன் உச்சகாலம் கி.மு.50 இல் இருந்து கி.பி.50 வரையாகும். இக்காலத்திற் தான் செயின சமய நூல்கள் எழுதிவைக்கப்பட்டன. அதற்கு முன் அவர்களுக்கு வேத நெறியாளரைப் போல எல்லாமே வாயுரைகள் தான்(97).

சிலம்பைப் போன்றதொரு காப்பியம் கி.மு.50-கி.பி.50இலும், அதற்குப் பின் 100 ஆண்டுகளிலும், செயினச் சமய நோக்கில் எழுந்திருக்க வாய்ப்பேயில்லை. அதோடு இன்று நமக்குக் கிடைத்த சீவக சிந்தாமணி, ஐஞ்சிறு காப்பியங்கள் போன்றவை “ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தார், அவருக்கு இத்தனை மனைவியர், இத்தனை பிள்ளைகள். . . .” என்று சொல்லி, ஊடே மாந்தரை மீறிய மாகைச் (magic) செய்திகளை நுழைத்து, முடிவில் “செயினம் வெல்லுகிறது” என்ற முடிப்போடு, தொன்மம் (புராணம்), பழங்கதை சொல்லும் போக்கிற் தான் இருக்கின்றனவே யொழிய, சிலம்பைப்போற் கூத்துவடிவில் சட்டென்று திரையைத் தூக்கி நாடகப் பாங்கில் ஓர் வரலாற்று இலக்கியமாய்த் தோற்றங் காட்டவில்லை. சிலம்பின் கூத்து வடிவம் செயினக் கருத்தாளருக்கு முற்றிலும் மாறான புதிய வடிவம்.

4. பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்தில் வரும் கடல்பிறக்கோட்டிய குட்டுவனும் சிலம்பில் வரும் செங்குட்டுவனும் வெவ்வேறானவர்கள் என்று சொல்லியும், பதிற்றுப் பத்தின் பதிகம் மிகப் பிற்காலத்தது, பேரரசுச் சோழர்களின் மெய்கீர்த்திகளையொட்டி பதிகம் எழுந்தது என்று சொல்லிச் சிலம்பின் காலத்தைப் பிந்தையது என்பார்கள். [இதுவும் இடதுசாரியர் கூற்றே.]

சிலம்பினுள் வரும் ஒத்திசைவான சான்றுகளைக் குப்புறத் தள்ளிவிட்டு, பதிற்றுப்பத்துப் பதிகத்தின் காலத்தை வைத்துக் கொண்டு இப்படித் தீர்ப்பு எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. பதிற்றுப் பத்தின் பதிகங்கள் காலத்தாற் பிற்பட்டவையாக இருக்கலாம். ஆனால் அவற்றில் வரும் செய்திகள் முற்பட்டவையாக இருக்கக் கூடாதா? கி.பி.100க்கும் பின்னால் எழுந்த குணாட்டியரின் “ப்ருகத்கதா”வில் வரும் செய்திகள் பிம்பிசாரனுக்கும் முந்தைய காலத்தை, அவந்தி, வச்சிரம், வத்தவம், மகதம் என்று தனித்திருந்த கணபதங்களின் காலத்தை, அல்லவா பழங்கதை சொல்லுவது போற் சொல்லுகின்றன? அவை சம காலத்தைச் சொல்லவில்லையே? அதே போல பதிற்றுப் பத்தின் பதிகங்கள் தங்களின் காலத்திற்கு முற்பட்ட செய்திகளை ஏன் சொல்லக் கூடாது?

சற்று முன்னாற் சொன்னது போல் அகம் 149 ஆம் பாட்டைப் படித்தால், சிலம்பு என்னும் காவியம், ’தன் வரலாறு’ நடந்து முடிந்த நாலைந்து ஆண்டுகளுக்குள்ளேயே எழுந்திருக்கலாம் என்ற எண்ணம் ஆழமாய் எழுகிறது. அதைக் கீழே பார்ப்போம்.

5. செங்குட்டுவனோ, தமிழக அரசர்களோ வடக்கே எந்தக் காலத்தும் படையெடுத்துப் போகவில்லை; எல்லாமே “கப்சா”; ”முதல்முதல் வடக்கே போனவன் இராசேந்திர சோழன் தான்; எனவே சிலப்பதிகாரம் ஒரு கற்பனை” என்று சொல்லி ஒரு புது “திரைக்கதை-வசனம்” எழுத முற்படுவார்கள் [இது திரு.செல்லன் கோவிந்தனின் வழிமுறை]

இதற்குச் ”சிலம்பின் காலக் கணிப்பு” என்ற நூலில்(98) முனைவர் இரா. மதிவாணன் ஏற்கனவே விடை கூறிவிட்டார். [அதேபொழுது மதிவாணன் சிலம்பின் காலம் கி.பி.2 ஆம் நூற்றாண்டு என்பார்.]

மேலேயுள்ள ஐந்து கூற்றுகளையும் ஏற்காத நிலையில், ”சிலம்பு என்னும் காப்பியம் எழுந்த காலம் எது?” என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. அதை இனிப் பார்ப்போம்.

சேரனை வேள்வி நடத்த மாடலன் வேண்டியபோது, சேரன் ஆட்சிக்கட்டிலேறி 50 ஆண்டுகள் ஆயிற்று. பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் பதிகத்தின் படி செங்குட்டுவன் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தான். 25 அகவையில் ஆட்சிப் பொறுப்பேற்ற சேரனுக்கு, பத்தினிக்கோட்டம் எழுந்தபோது 75 அகவை ஆகியிருக்கும். அதன்பின் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறான். அவனுக்குப் பின் அவன் மகன் குட்டுவன் சேரல் ஆட்சிக்கு வந்திருக்கலாம்.

முன்னே சொன்னது போல், மதுரையில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு அப்புறம் ஆட்சிக்கட்டில் ஏறிய அவன் தம்பி வெற்றிவேற் செழியனின் தொடக்க காலம் குழப்பமாய் இருந்தது. மக்களின் கோவத்தைத் தணிக்கும் வகையில் 1000 பொற்கொல்லரை ”படையற் பலியாடுகள்” போலக் காவு கொடுக்கும் நெருக்கடி அவனுக்கு நேர்ந்திருக்கிறது. எப்பொழுது இந்தப் பலி நடந்தது என்று சொல்ல முடியாவிடினும், பாண்டிநாட்டில் சட்டம்- ஒழுங்கு அரசின் அடக்குமுறை மூலந்தான் நிலைநாட்டப் படுகிறது என்று உறுதியாய்ச் சொல்லலாம். இதன்முடிவில் நாடெங்கும் ஒரு மயான அமைதி ஏற்பட்டிருக்க வேண்டும். [இந்தச் செய்தி, வடசெலவிற் புறப்பட்டுச் சென்ற சேரனுக்கு 32 மாதங்கள் கழித்துத் தான் தெரிகிறது.]

இந்தக் கால முடிவில், பத்தினிக்குக் கல்லெடுக்கச் சேரன் வடக்கே படையெடுத்தது வெற்றிவேற் செழியனுக்கு ஒற்றர் மூலம் தெரிந்திருக்க வேண்டும். எங்கிருந்திருந்தோ வந்த ஒரு சோழநாட்டுப் பெண்ணால் தன்நாட்டுக்குத் தீராப் பழியும் கேவலமும் வந்து சேர்ந்தது, பாண்டியன் வெற்றிவேற் செழியன் மனத்திற் பெருங்கனலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்தக் கோவம், நீலன் கனகவிசயரைக் கொண்டுவந்து பாண்டியனிடம் காட்டும் போது சேரனை ஏளனம் செய்வதில் முடிகிறது(99). “ஊர் இரண்டுபட்டுக் கிடக்கக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்ற வகையிற் ”தங்களுடைய பரிதவிப்பில் சேரன் சிக்கெடுக்கிறான்” என்றே பாண்டியர் எண்ணியிருப்பர்.

சேர நாட்டு வஞ்சியில் பத்தினிக்குக் கோட்டம் எடுத்ததைப் பாண்டியரால் கொஞ்சங் கூடத் தாங்கிக் கொண்டிருக்கவே முடியாது. ஏனென்றால் அந்தப் பத்தினிச் சிலை பாண்டியர் நீதி தவறியதை மெய்ப்பிக்கும் ஓர் அடையாளச் சின்னம். [பாண்டியர் நீதி குறைப்பட்டுப் போனதை மக்கள் மறந்து தொலைக்க வேண்டுமென்றே பாண்டிய அரசகுலத்தார் நினைந்திருப்பர்.] அந்தச் சின்னத்தை அழிப்பதில் பாண்டியர் பெரும் முனைப்புக் கொள்வது இயற்கையே. அப்படி ஒன்று நடந்திருக்கிறது. அதை அகம் 149 இல் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பதிவு செய்திருக்கிறார். சற்று விரிவாகப் பார்ப்போம்.

பாலைத் திணையைச் சேர்ந்த அகம் 149 ஆம் பாட்டில்(100) வணிகத்தின் பேரில் செல்லவிருக்கும் பாண்டிநாட்டு தலைமகன் ஒருவன் இருவேறு காட்சிகளைத் தன் கண்முன்னே எண்ணி, தன் செலவைத் தவிர்க்கிறான். ஒரு காட்சி, அவன் போகவிருக்கும் சுரத்தின் கொடிய விவரிப்பாய் அமைகிறது. அக்காட்சியின் பின், “இப்படிப்பட்ட ஆளைக் கொள்ளும் வழியில் நான் சென்று பொருளீட்ட வேண்டுமா?” என்று தலைவன் தன் நெஞ்சை விளிக்கிறான். இன்னொன்று பரங்குன்றச் சுனையின் நீலமலர் போலச் செவ்வரிபடர்ந்த கண்களுடைய காதலியின் முகத்தோற்றம். இந்த இரு காட்சிகளால் அவன் செலவு அழுங்கிப் போகிறது.

[பாட்டை விவரிக்கும் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பாண்டிநாட்டாராக இருக்கப் பெரும் வாய்ப்பு உண்டு. காரைக்குடிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்பட்டியில் கண்டெடுத்த ஆறாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் “எக்காட்டூர் கோன் பெருந்தச்சன்” என்ற ஒரு வாசகம் வரும்(101). எருக்காட்டூர் என்பது தான் எக்காட்டூராகப் பிழைபடப் பதிவுசெய்யப்பட்டதாக ஐராவதம் மகாதேவன் கருதுவார். எருக்கஞ்செடிகள் நிறைந்த காடு எருக்கங்காடு>எருக்காடு. இன்றைக்கும் அந்தப் பகுதியில் எருக்கஞ் செடிகள் மிகுந்து காணப்படும். உள்ளூர்த் தச்சனாய் இருந்தால் பிள்ளையார்பட்டியின் பழைய பெயர் எருக்காட்டூர் ஆகும். அதே பொழுது ஔவை துரைசாமியார் வேறு அடையாளஞ் சொல்லுவார்(102). எருக்காட்டூர் என்பது பழைய தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், குளிக்கரை இருவுள் (Rail) நிலையத்திற்கு மேற்கில் இருக்கிறது என்று அவர் சொல்லுவார். எருக்காட்டூரைச் சேர்ந்த “மணற்குன்று” என்னும் ஊரை “எருக்காட்டூர்ச் சேரிக்குப் பிடாகையான” எனத் திருக்கடவூர்க் கல்வெட்டுக்கள் (A.R. No.32 and 38 of 1906) குறிப்பதாக அவர் சொல்லுவார். எது தாயங்கண்ணனாரின் ஊர் என்பது மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.]

தாயங்கண்ணனார் பரங்குன்றத்தை விவரிக்கும் போது “மதுரையின் மேற்கே மயிற்கொடி உயர்த்தப்பெற்று இடையறாமல் விழா நடக்கும் முருகனின் பரங்குன்றம்” என்று சொல்லுவார். மயிற்கொடியை விவரிக்கும் போது ”நெடுநல் யானை அடுபோர்ச் செழியனின் மீன்கொடி அண்மைக்காலத்தில் சேரனைச் சமரிற் (battle and not war) கடந்து, ”படிமம் வவ்விய” வெற்றியால் அசைந்ததை” ஒப்பீடாகச் சொல்லுவார். இந்த அடுபோர்ச் செழியன் உறுதியாக ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனல்லன்; அவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுமல்லன். வேறு யாரோவொரு செழியன். அவன் சேரன் மேற் கனன்று கொண்டிருந்த வெற்றிவேற் செழியனாய் இருக்கப் பெரும்வாய்ப்பு உண்டு. ஆழ்ந்து போவோம்.

அகம் 149 இன் படி, “சேரலனின் சுள்ளியம் பேரியாற்றில் பொன்கொணர்ந்து, கறியேற்றிச் செல்லும் யவனரின் கலங்கள் அடுத்தடுத்துப் போவதால் வெண்நுரை பொங்கிக்கொண்டேயிருக்கிறது. அப்பேற்பட்ட சிறப்புடைய முசிறித் துறைமுகத்தைச் சுற்றி வளைத்து சேரர்படையை நிலைகுலைய வைத்து, ஆற்றுள் நுழைந்து வஞ்சியிலுள்ள படிமத்தை தன் படையால் பாண்டியன் வவ்விக் கொண்டு போகிறான்.” அப்படியென்ன சிறப்பு அப்படிமத்திற்கு? சிலம்புக் காலத்தின் சூழ்க்குமம் அதிற்தான் இருக்கிறது.

[The Periplus of the Erythraean sea என்னும் நூலில், தொண்டியில் இருந்து கடற்கரையை ஒட்டி 480 ஸ்டேடியா கடந்து பின் ஆற்றிற்குள் நுழைந்து 20 ஸ்டேடியா போனால் முசிறித் துறைமுகம் வந்துவிடும் என்ற குறிப்புண்டு. இந்த ஸ்டேடியாவை ஏதென்சின் அட்டிக் ஸ்டேடியாவாகக் கொண்டால் 1 அட்டிக் ஸ்டேடியா = 0.185 கி.மீ என்றாகும். அதன்படி, தொண்டியில் இருந்து கடற்கரையை ஒட்டி 480*0.185 = 88.8 கி.மீ சென்று பின் ஆற்றிற்குள் 20*0.185 = 3.7 கி.மீ சென்றால் முசிறி வந்து சேரும். முசிறிப் பட்டணத்தில் இருந்து ஆற்றையொட்டிக் குறைந்தது 8/10 கி.மீ தூரத்தில் வஞ்சி மாநகர் இருந்திருக்கலாம். (நமக்கு உண்மைத் தொலைவு தெரியாது.)]

முசிறியை வளைத்தவன், சேரநாட்டைப் பிடிக்கவில்லை. வெறுமே படிமம் கவர இவ்வளவு தொலைவு கடல்வழியே போயிருக்கிறான். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், ஆங்கிலத்திற் சொல்வது போல் இது திடீரென்று பழிவாங்கும் தாக்குதல், தண்டனை கொடுக்கும் தும்பைப் போர் (punitive expedition). எந்தச் செழியன் படிமத்தைத் தூக்கிவர முற்படுவான்? சேரனை ஏளனமாகப் பேசிய வெற்றிவேற் செழியன் அன்றி அது வேறு யாராய் இருக்க முடியும்? அது கண்ணகியின் படிமம் என்றி வேறேதாக இருக்க வாய்ப்புண்டு? [உரையாசிரியர்கள் பொற்படிமம் என்று சொல்லுவார்கள். ஆனால் அகம் 149 ஆம் பாட்டில் பொன் என்னும் சொல்லாட்சி எங்கணும் கிடையாது. படிமம் மாழைப் படிமமா, கற் படிமமா என்று கூட அகம் 149 சொல்லவில்லை. நம்முடைய ஊகமாய் அது கற்படிமம் என்று சொல்லத் தோன்றுகிறது.]

வெற்றிவேற் செழியன் நெடுநாட்கள் கொற்கையில் இருந்தவன். கொற்கையில் இருந்து முத்துக் குளிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும் அந்தக் காலத்தில் இந்தக் காலம் வரை, பருவகாலத்தை ஒட்டி பாண்டிக் கடற்கரையில் இருந்து புறப்பட்டு வஞ்சி வரை (இற்றைக் கொச்சின் வரை) வந்து போவது மீனவர் பழக்கம். இந்த நாவாய், படகுகளுக்கு நடுவில் ஒரு அதிரடிப்படையை அனுப்புவது அப்படியொன்றும் கடினமான செயலல்ல. நிலத்தின் வழியே படையை அனுப்பினால் அது பெரும் போரில் வந்து முடியும். அதைத் தவிர்த்து, பாண்டியன் அதிரடிப் படைகள் கடல்வழியே கரையொட்டிப் போய் முசிறியில் ”அருஞ்சமம்” நடத்தி முடிவில் வஞ்சினம் தீர்க்கும் வழியாய், ”படிமத்தை” வவ்விக் கொண்டு போவதே எளிதானது, இத்தகைய அதிரடிச் சமரைத்தான் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் அகம் 149-இற் பதிவு செய்கிறார்.

”மீன்கொடிகள் சட்டென்று பறந்து படிமத்தை விரைவாய்க் கவ்விக் கொண்டுவந்துவிட்டன. அதைப்போலப் பரங்குன்றத்து மயிற்கொடிகள் ஆடுகின்றன” என்று ஒப்புமை சொல்லுகிறார்.

தாயங்கண்ணனார் பாடல் வெற்றிவேற் செழியனைக் குறித்தவை என்று எப்படிச் சொல்ல முடிகிறது? - என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது. அவர் இன்னொரு அரசனையும் தம் வாழ்நாளில் பாடியிருக்கிறார். அவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பவனாவான். நினைவிருக்கிறதா? சிலம்பிற் பதிவு செய்தபடி செங்குட்டுவனின் மைத்துனன் ஒரு கிள்ளிவளவன்(103,104,105). ஒன்பது சோழ இளங்கோக்களோடு போரிட்டு அவனை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிவைத்தது செங்குட்டுவன் தான். இவன் உறந்தை யரசன் என்பது மாறோக்கத்து நப்பசலையார் பாட்டால் (39) விளங்குகிறது. (இவனே பின்னால் சேர அரசிற்கு எதிராகப் படையெடுக்கும் காலம் ஒன்றுண்டு. எனினும் மாறோக்கத்து நப்பசலையார், ”இமயத்தில் வில் பொறித்த சேரனை வென்றவனே” என்று சோழனைப் பாராட்டுவார்(106).மாறோக்கம் என்பது கொற்கைக்கு அருகில் உள்ள சிற்றூர். இவர் பாண்டிநாட்டுப் பெண்புலவர்.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்திலும், அவன் மகன் இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காலத்திலும் இருந்த மாந்தரஞ்சேரல் இரும்பொறையை (இவன் சிலம்புக் காலத்தில் அகவை குறைந்தவனாய் இருந்திருக்கவேண்டும்.)சிலம்பு தெளிவாகக் குறிப்பிடுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் இருந்திருக்கிறான். இந்த நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கோ, வெற்றிவேற் செழியனுக்கோ மகனாய் இருக்க வேண்டும். இத்தனை அரசர்களின் சமகாலம் முறைப்படி வெகு எளிதாகப் பொருந்துகிறது. அதைப்பற்றி விவரிக்கப் போனால் வேறு எங்கோ இழுத்துச் செல்லும்; எனவே சிலம்பிற்கு மீண்டும் வருவோம்.

சிலம்பு என்னும் காப்பியம் பல ஆண்டுகள் கழித்து எழுந்திருக்குமானால் படிமம் வவ்விய செய்தியை அதுவே பதிந்திருக்கும். கதையின் பாங்கும் பெரிதும் மாறிப் போயிருக்கும். அதை இளங்கோ பதியாத காரணத்தால், அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு நடப்பதற்கு முன்னேயே காப்பியம் எழுந்திருக்கவேண்டும் என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லலாம். பெரும்பாலும் குட்டுவன் சேரலின் அவையில் சிலம்புக் காப்பியம் அரங்கேறியிருக்கலாம். குட்டுவனுக்குப் பின் அவன் பங்காளியான மாந்தரஞ்சேரல் இரும்பொறை சேரரின் கூட்டரசை ஆண்டிருக்கிறான். அவன் காலத்திற்றான் ஐங்குறுநூறு தொகுப்பிக்கப்பெற்றது என்ற குறிப்புமுண்டு(107). [அன்றி மாந்தரன் சேரல் இரும்பொறையின் அவையிலோ எழுந்திருக்கலாம்.]

குட்டுவன் சேரல் தன் தந்தையின் புகழ் விளங்க வேண்டுமென்று ”சிலப்பதிகாரம்” என்ற இந்நூலுக்கு ஆதரவு அளித்திருக்கலாம். பேரரசுச் சோழர் காலத்தில் குலோத்துங்கனின் பிறங்கடைகள் ஒட்டக்கூத்தரை வைத்து தங்கள் முன்னோருக்கு உலாப் புகழும், பரணிப் புகழும் பாடவில்லையா? இது போன்ற புகழ்ப்பாடுதல்கள் உடனே நடந்துவிடும்; நாட்பட்டு நடக்கா. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதும், இரும்பு சூடாய் இருக்கும் போதே அடிப்பதும் தான் உலகியல் வழக்காகும்.

எனவே கண்ணகிப் படிமத்தை வவ்வியது வெற்றிவேற் செழியன் தான் என்று உறுதி செய்ய முடிந்தால் சிலம்பு எழுந்தது கதை நடந்து முடிந்த ஒருசில ஆண்டுகளில் என்றே சொல்லவேண்டியிருக்கிறது.

இன்னொரு கேள்வி எழுகிறது. வவ்விய படிமம் எங்கே போயிற்று? அதனாற்றான் கொடுங்களூர் பகவதி கோயிலில் மூலவள் இல்லாது இன்றும் கருவறை நான்கு பக்கமும் அடைபட்டிருக்கிறதா?(108) அந்தப் பகவதி கோயிலுக்குள் இன்னொரு சூழ்க்குமம் இருக்கிறதோ? என்று அதை அவிழ்ப்போம்?

----------------------------------
[இந்த ஆய்வு பற்றிய சுருக்கத்தை, 2007 நவம்பரில் அமெரிக்க ஒன்றிய நாடுகள், தென்கரோலினா மாநிலத் தலைநகரான சார்ல்சுடனில் ஒரு நாள் மாலை, அங்கிருந்த நூலகம் ஒன்றில் எனக்காகக் கூடியிருந்த சில தமிழன்பர்களிடையே உரையாட்டில் சொல்லியிருந்தேன். அந்த உரையாடலை ஏற்பாடு செய்த நண்பர் சுந்தரவடிவேலுக்கும், உரையாடலில் பங்கு கொண்டோருக்கும் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். அங்கு சொன்னதற்கும் மேல் விரித்து, கூடிய மட்டும் சான்றுகளுடன் இங்கு சொல்ல முற்பட்டிருக்கிறேன்.]

எடுகோள்கள்:

95. பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி ”பண்டைய தமிழக வரலாற்றின் மீது ஓர் ஆய்வொளிப் பாய்ச்சல்” பனுவல், தொகுதி 1, இதழ் 1, நவம்பர் 2008, பக்கங்கள் 36-66.
96. பேரா., க.நெடுஞ்செழியன் ”ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்”, மனிதம் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி - 21, 2002
97. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India”, pp 64-75, Munshiram Monoharlal Publishers Pvt. Ltd. 2005.
98. முனைவர் இரா. மதிவாணன், “சிலம்பின் காலக் கணிப்பு” சேகர் பதிப்பகம், சென்னை 78, 2005/
99. ஆங்கு நின்று அகன்றபின் அறக்கோல் வேந்தே
ஓங்குசீர் மதுரை மன்னவற் காண
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீரியல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவில் தலைக்கோல் ஆங்குக்
கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி
இமயச் சிமையத்து இருங் குயிலாலுவத்து
உமையொரு பாகத்து ஒருவனை வணங்கி
அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து
தவப்பெரும் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதியழற் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது என்றனன் போர்வேற் செழியன்
நடுகற் காதை 96-107
100.சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையில்
புல் அரை இருப்பைத் தொள்ளை வான்பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள் இடைப் போகி நன்றும்

அரிதுசெய் விழுப்பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி என் நெஞ்சே! சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளம்கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அருஞ்சமம் கடந்து, படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய

ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.
அகநானூறு 7-16, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
101. Iravatham Mahadevan, “Early Tamil Epigraphy” pp 474-475, Crea-A, Chennai India, and The Department of Sanskrit and Indian Studies, Harvard University, U.S.A., 2003
102. ஔவை துரைசாமிப் பிள்ளை விரிவுரை, “புறநானூறு 201-400 பாட்டுக்கள்” பக்கம் 453, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1972.
103. நீடு வாழியரோ நீள்நில வேந்தென
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநாடு அளிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்
நீர்ப்படை காதை 116-123
104. சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக்
கோயில் இருக்கைக் கோமகன் ஏறி
வாயிலாளரின் மாடலற் கூஉய்
இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர்
வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோற் தன்மை தீதின்றோ என
நீர்ப்படை காதை 156-161
105. ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச்செரு வென்று
நடுகற் காதை 116-117
106. ஓங்கிய
வரையளந்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமயஞ் சூட்டிய வேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டுநின்
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே
புறம் 39. 13-18
107. அ. பாண்டுரங்கன், “தொகை இயல்” தமிழரங்கம், புதுச்சேரி 605008, 2008.
108. முனைவர் வி. ஆர். சந்திரன், “கொடுங்கோளூர் கண்ணகி” (தமிழில் ஜெயமோகன்), யுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை, 2005

அன்புடன்,
இராம.கி.

Saturday, May 22, 2010

சிலம்பின் காலம் - 11

மாடலன் வருகையும், மன்னவர்க்கு உரைத்ததும்: 

 ”கானற்பாணி கனக விசயர்தம் முடித்தலை நெறித்தது”என்ற வாசகமும், ”குடவர் கோவே நின்னாடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்” என்ற வாசகமும் இங்குதான் சொல்லப்படுகின்றன. கூடவே ”கவுந்தியின் உண்ணாநோன்பு, மதுரை நிகழ்வுகள், மாசாத்துவன், மாநாய்கன் துறவு, இருவரின் மனைவியர் இறந்தது, மாதவி, மணிமகலை துறவு, மாடலன் நன்னீர்க் கங்கை ஆடப் போந்தது” என்று அடுத்தடுத்த செய்திகள் சொல்லப்படுகின்றன. பொதுவாக தெற்கிருந்து வந்து கங்கையிற் புனித நீர் ஆடுவதென்பது அன்றிலிருந்து இன்றுவரை. காசியன்றி வேறெங்கும் நடப்பதில்லை. மாடலன் செங்குட்டுவனைப் பார்க்கும் இடத்தில் தான் அருகில் செங்குட்டுவனின் தென்கரைப் பாடி இருந்திருக்கிறது. இதனாலேயே செங்குட்டுவனின் போர்க்களம் பெரும்பாலும் காசிக்கு வடக்கே இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறோம். கங்கைக்குத் தென்கரையில் காசியிற் தங்கிய பாடிக்கு அருகில் ஏதோ ஒரு சிறுகுன்றம் இருந்ததாகச் சிலம்பு சொல்கிறது(87). இதைப் பற்றியும் கள ஆய்வு தேவை. 

 மாடலனை அரசன் கேட்கும் கேள்விகள் அத்தோடு முடியவில்லை. மைத்துனன் கிள்ளிக்காக ஒன்பது சோழிய இளங்கோக்களோடு செங்குட்டுவன் பொருதியதும் இங்கு நினைவுகூரப் படுகிறது(88)

 முடிவில் கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் 1000 பொற்கொல்லரைக் கொன்று உயிர்ப்பலியூட்டிய செய்தி சொல்லப்படுகிறது. இந்தச் செய்தி மதுரை எரியுண்டு 32-36 மாதங்களுக்கு அப்புறம் தான் செங்குட்டுவனுக்குத் தெரிகிறது. 

 மொத்தத்தில், செங்குட்டுவனின் வடசெலவைக் குறைத்து மதிப்பிடமுடியாது. அது வழிநெடுகப் பல தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டே சென்றிருக்க வேண்டும். இந்த 32-36 மாதங்களில் பாண்டிய நாட்டில் கலகமும் போராட்டங்களும் வெடித்திருக்க வேண்டும். முடிவில் மக்களின் கோவத்தைக் குறைக்க 1000 பொற்கொல்லர் பலியாடுகளாக ஆக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். நீதிவழி தப்பிய அரசனும் அதனால் ஏற்பட்ட பிற விளைவுகளும் கொடிதானவை என்பது சிலம்பைப் படித்த யாருக்கும் விளங்கும். 

 சேரனின் பெருங்கணி “எண்ணான்கு (32) மதியம் வஞ்சி நீங்கியது” என்ற அறிவிப்பைத் தருகிறான். அதற்கு மறுமொழி சொல்வதற்கு மாறாய், தன் மைத்துனன் கிள்ளியையே நினைந்து, ”இளங்கோ வேந்தர் இறந்ததிற் பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவன் (உறையூர்ச் சோழன்) கொற்றமொடு செங்கோல் தன்மை தீதின்றோ? – என்ற கேட்பதால், நேரிவாயிற் போரின் பின் உறையூர் ஆட்சியை மைத்துனனுக்கு பிடித்துக் கொடுத்தது கண்ணகி கதைக்குச் சற்று முன் நடந்திருக்கலாம் என்று உணர்கிறோம். காசியில் இருந்தபோது செங்குட்டுவனுக்கு அந்தக் கவலையும் இருந்திருக்கிறது. எனவே அந்த நேரிவாயிற் போர் வடசெலவிற்கு ஓரிரு ஆண்டுகள் முன்னர்தான் நடந்திருக்க வேண்டும். நாக நாட்டுச் சோழன், பாண்டியன் ஆகியோரின் கோவம் இயற்கையாகவே சிலம்புக் காலத்திற் அதிகமாக இருந்திருக்க வேண்டும். 

 32 மாதங்களில் நடந்த செய்தியைச் சொன்ன மாடலனுக்கு, குறிப்பாகத் தன் மைத்துனன் கிள்ளியைப் பற்றிச் சொன்ன மாடலனுக்கு, தன்னிறைக்குத் தக்க 50 ஆடகப் பெருநிறையைச் சேரன் கொடுக்கிறான். அடுத்து ஆரிய மன்னரை (கனக விசயனோடு களத்தில் இருந்த 100 பேரை) நாடு செல்க என்கிறான். ஆரியப் பேடியொடு, எஞ்சிய மன்னர், சேரனுடைய இறைமொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈரைஞ்ஞூற்றுவர், கனக விசயர் ஆகியோரை இருபெரு வேந்தர்க்குக் காட்டுமாறு ஏவுகிறான். இது எதற்கு என்று புரியமாட்டேன் என்கிறது. ஒருவேளை இந்தக் கண்காட்சி சோழ, பாண்டியர் கோவத்தை, மாற்றும் என்று நினைத்தானோ? - தெரியவில்லை. 

 வடபுலத்தை விட்டுப் புறப்படுமுன் வடதிசை மன்னரின் மண்ணெயில் முருக்கிக் கவடி (= வெள்வரகு, கொள்) வித்தி, கழுதையாற் சேரன் ஏருழுகிறான்(89). இவ்வளவு விவரம் சொல்லும் சேரன் படையெடுப்பையே ”பொய்”யென்று சொல்லி வடநாட்டு வரலாற்றாசிரியரும் (சில தமிழ்நாட்டு வரலாற்றாசிரியரும்) மேலைநாட்டாரும் ஒதுக்குகிறார்களே? அது என்னவிதமான ஆய்வு? - என்ற வியப்பும் நமக்குள் எழுகிறது. 

  காப்பியத்தின் முடிப்புச் செய்திகள்: 

 கதை விரைவாக வஞ்சிக்கு மாறுகிறது. ஒரு நாள் மாலை, வேண்மாளோடு வஞ்சி அரண்மனை நிலாமுற்றத்தில் பறையூர் சாக்கையன் கூத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது (கொடுங்கோளூர் - எர்ணாகுளம் இடையே இன்றைக்கும் பறையூர் உள்ளது. சாக்கைக்கூத்தின் இன்னொரு வளர்ச்சி தான் இந்தக் காலத்துக் கதகளியும், மோகினியாட்டமும். இதைப் படித்த பிறகும் செங்குட்டுவன் இருந்தது குடவஞ்சியில்லை, கொங்கு வஞ்சி என்று சொல்லச் சில ஆய்வாளருக்கு எப்படி மனம் வருகிறது?) நீலன் வந்து, ஆரிய அரசரோடு நாகநாட்டுச் சோழனையும் பாண்டியனையும் பார்த்த கதையைச் சொல்லுகிறான். செங்குட்டுவனின் சினம் கூடிப்போகிறது. 

 கூத்துப் பார்க்கும் போது கூடவிருந்த மாடலன் செங்குட்டுவனின் சினம் தணித்து :”ஆட்சியேற்று 50 ஆண்டுகள் ஆனபின் இன்னும் வேள்வி செய்யவில்லையே?” என்று கேட்கிறான். இந்த ஒரு செய்தியால், நடுகற் காலத்தில் செங்குட்டுவனின் அகவை 70-75 ஆக இருந்திருக்கலாம் என்று நாம் ஊகிக்க இடம் தருகிறது. இந்தச் செய்தியை பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்துப் பதிகம் அவன் ஆட்சிக்காலம் சொல்லுவதன் மூலம் உறுதி செய்கிறது(90)

அதுவரை வேள்வி செய்யாத சேரர்கள், அடுத்தடுத்து ஏதோவொரு காரணத்தால் வேள்வி செய்யும் படி தூண்டப்பட்டிருக்கிறார்கள், அவர்களும் அதற்கு இணங்கியிருக்கிறார்கள். இந்தக் கேள்வியும் ஆய்வு செய்யப்படவேண்டியதே. வேதநெறி அவ்வளவு தூரம் அவர்களை ஆட்படுத்தியதா? கொஞ்சங் கொஞ்சமாக மற்ற நெறிகளின் தாக்கம் தமிழ்நாட்டில் குறைந்தது போலும். பல்லவர் காலம் வரும் போது வேதநெறியோடு பிணைந்து கலவையான சிவநெறியும், விண்ணவ நெறியுமே இங்கு ஆட்சி செய்யத் தொடங்கின. மாடலன் கூற்றில் செங்குட்டுவனின் வெவ்வேறு பங்காளிகளைப் பற்றிய கூற்றும் வருகிறது(91). வேத வேள்வி செய்து முடிந்தபின், வஞ்சிப் புறநகர் ஆற்றங்கரையில் வேளாவிக்கோ மாளிகையில் இருந்த ஆரிய அரசரையும், மற்றோரையும் வில்லவன் கோதைமூலம் சேரன் சிறையிருந்து விடுவிக்கிறான். குடிமக்களின் வரியைக் குறைக்குமாறு அழும்பில் வேளுக்கு ஆணையிடுகிறான். 

 அதன் பின்னால் பத்தினிக் கோட்டம் சென்று, கைவினை முற்றிய கண்ணகியின் தெய்வப் படிமத்தைப் பார்க்கிறான். பார்த்து, மனம் களித்து, ”பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி, வேள்வியும் விழாவும் நாள் தொறும் வகுத்து, கடவுள் மங்கலம் செய்கு” என்று ஆணையிடுகிறான். நிகழ்வுகள் எல்லாம் சடசடவென்று நடைபெறுகின்றன. இடையில் மலைப்பாதை வழி எந்தப்பயணமும் சேரன் மேற்கொண்டதாய்ச் சொல்லப்படவில்லை. 

நினைவிருக்கிறதா? முன்னால் கண்ணகி பற்றிய செய்தி அறிந்த போது ஆற்றைக் கடந்து செங்கோட்டின் மேல் ஏதோவொரு இடத்தில் தங்கியிருந்தான். அவ்விடம் செல்லச் சேரனுக்குச் சிலநாட்கள் கூடப் பிடித்தன. அது போன்ற பயணம் இங்கு விவரிக்கப்படவில்லை. இந்தக் காதையில் எல்லாமே அடுத்தடுத்த செய்திகளாக, அரண்மனையில் இருந்து அருகே ஊருக்குள் நகர்ந்த வண்ணமே விவரிக்கப்படுகின்றன. 

 இதைக் கூர்ந்து கவனித்தால், கண்ணகி. கோயில் என்பது குடவஞ்சியில் அமைந்ததுதான், எங்கோவொரு மலையில் அமைந்ததல்ல, என்று புரிந்துபோகும். இதை நிறுவுவதற்கு நடுகற் காதை 226-234 ஆம் வரிகளில் வரும் ஒரு விவரிப்புப் போதும்(92). அதோடு எந்த அரசனும் இதுபோன்று கோயிலெழுப்பும் செயலைத் தன் தலைநகரிற் செய்வானேயொழிய நாட்டு எல்லையிற் செய்ய மாட்டான். [இன்றைக்கு தமிழக எல்லையில் இருக்கும் மங்கலாதேவிக் கோட்டம் பின்னால் எழுந்த எத்தனையோ கண்ணகி கோயில்களில் ஒன்றாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அதோடு அங்கே உடைந்து கிடக்கும் படிமங்களும் கேரளபாணிச் சிற்பங்களை நமக்கு உணர்த்தவில்லை. 

 அடுத்து வாழ்த்துக் காதையில், தேவந்தி, கண்ணகியின் காவற்பெண்டு, கண்ணகியின் அடித்தோழி, ஐயை ஆகியோர் பத்தினிக்கோட்டம் வந்த செய்தி சொல்லப்படுகிறது; அவர்களில் மூவர் அழுது அரற்றியதும் சொல்லப்படுகிறது. ”தென்னவன் தீதிலன்; நானவன் மகள்” என்னும் கண்ணகியின் வான்குரல் எழுகிறது. இந்தகைய முடிப்பு நாட்டுப்புறத் தொன்மங்களில் அப்படியே உண்டு. 

 ”கண்ணகியைப் பாண்டியன் மகளாக உருவகப்படுத்தும் கதைக்கூறு ”கோவலன் கதை”என்னும் நாட்டுப்புறக் கூத்திலும்(93), ”சந்திராவின் பழிவாங்கல்” என்ற கன்னட நாட்டுப்புறக் கதையிலும்(94) உண்டு. இது ஒருவிதமான கருத்தீடு. இது உண்மையாய் இருக்கத் தேவையில்லை. கதை நாயகியை எதிரியின் மகளாகச் சொல்வதும், குழந்தையை ஆற்றில் விடுவதும், அதை இன்னொருவர் கண்டுபிடித்து வளர்ப்பதும், உலகெங்கும் காலகாலமாய் பயன்படுத்தப்படும் புனைவு உத்திகளாகும். யூத நெறியாளர் மோசே குழந்தையாய் இருந்தபோது நீல நதியாற்றில் இதுபோலக் கூடையில் வைத்து மிதந்து வந்ததும், எகிப்திய அரசனால் பின்னால் இராமசிசோடு சேர்த்து வளர்க்கப்படுவதும் இங்கு நினைவிற்கு வருகின்றன. இதுபோன்ற கதையுத்திகள் யாரோ ஒரு கதையில் நடந்திருக்கலாம். ஆனால் அவை மக்கள் மனத்தை பெரிதும் கவர்ந்திருப்பதால், அதே யுத்திகளை வெவ்வேறு கதைகளில் புனைவாளர் இடைச்செருகிறார்கள். ”கண்ணகி பாண்டியன் மகள்” என்னும் பாமர மக்களின் கருத்தீட்டைப் புறம் தள்ளவேண்டாம் என்று இளங்கோ வாழ்த்துக் காதையிற் சேர்த்திருக்கலாம். இளங்கோவின் குறிப்பில் இருந்தே அதற்குப் புனைவுகள் சேர்த்து, மேலே சொன்ன நாட்டுப்புறக் கூத்துக்கள் எழுந்திருக்கலாம். இந்தக் கூத்துக்கள் மிக மிகப் பிற்காலத்தன. [எவ்வளவு முனைந்து கணித்தாலும், இவை 16 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாற் போகாதவை.] இவற்றை வைத்துக் கொண்டு சில ஆய்வாளர் சிலம்பின் காலத்தைப் பிற்காலத்திற்குத் தள்ளமுயல்வது “பேரன் தாத்தனுக்கு முன்னோன்” என்று சொல்வதைப் போன்றது. இது போன்ற முயற்சிகளைச் சரியான ஆய்வாளர் புறந் தள்ளுவர். 

  ஈற்றுவாய்: 

 இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் தான். 

 "சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் ஆய்வாளர் வையாபுரியாரிலிருந்து, இக்கால இடதுசாரிகள் வரை பலருண்டு. பேரா. ரொமிலா தாப்பர் போன்றோரும் கூடச் சிலம்பின் காலத்தைப் பின் தள்ளுவார்கள்.) செங்குட்டுவன் வென்றதாகச் சொல்லப்படும் கனக விசயர் யார்? வடபுலத்து மன்னர்கள் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார்? சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் அப்போது மகதத்தை ஆண்டார்கள்? அந்தக் காலத்தில் பெரும்நகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் செங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா? இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல் எடுத்தான் என்றால், கிட்டத்தட்ட அந்த இடம் எங்கிருக்கலாம்? வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர் கன்னர் யார்? நூற்றுவர் கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது? செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள்?" 

 இது போன்ற பல கேள்விகள் வஞ்சிக் காண்டம் படிக்கும் நமக்கு எழுகின்றன. ஒரு சில கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை காண முயன்றிருக்கிறேன் (எல்லாக் கேள்விகளுக்கும் அல்ல.) நாவலந்தீவின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய மன்னனான சேரலன் (நமக்கு நம் நாடு பெரிதென்றாலும், நாவலந்தீவில் சேர நாடு சின்னது தானே?) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் "நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான்? அவர் தவிர்க்க முடியாதவரா?" என்ற கேள்வி எண்ணிப் பார்க்க வேண்டியது தான். [சிலம்பில் ஏற்பட்ட வரலாற்று வேட்கையும் எனக்கு நூற்றுவர் கன்னரில் தான் தொடங்கியது.] 

 மொத்தத்தில் சிலம்பை ஆழ்ந்து படித்தால், பெரும்பாலும் சிலம்புக் கதையின் காலம் கனகர் ஆட்சிக்குச் சற்று முன், கி.மு.75-80 யை ஒட்டியிருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது. வெறுமே வரந்தரு காதையையும், மகாவம்சப் பட்டியலையும் வைத்துக் கொண்டு உள்ளிருக்கும் முரண்களைப் பார்க்காது முதலாம் கயவாகுவின் காலமாய் கி.பி.177-யை வைத்துக் கொண்டு அதையே சிலம்பிற்கும் காலமாய்ச் சொல்லுவது சற்றும் பொருத்தமில்லை. 

 இன்னும் ஒரு கேள்வி மீதமிருக்கிறது. ”சிலம்புக் கதையின் காலம் கி.மு.75-80 ஆய் இருக்கலாம். சிலம்பு என்னும் காப்பியத்தின் காலம் அதற்கும் பின்னால் சில நூற்றாண்டுகள் கழித்து இருக்கக் கூடாதா?” இதை அடுத்த கடைசிப் பகுதியிற் பார்ப்போம். 

 எடுகோள்கள்: 

 87. நீர்ப்படை காதை 196. 
88. பதிற்றுப்பத்து 5 ஆம் பத்துப் பதிகம், அகநா.125:18-21 
89. வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கிக் 
 கவடி வித்தியக் கழுதையேர் உழவன் 
 குடவர் கோமான் வந்தான். . . 
                                           நீர்ப்படைக் காதை.225-227 

 90. பதிற்றுப் பத்து 5 ஆம் பதிகம். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப் பாட்டு. பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு வாரியையும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தான் அக் கோ. கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான். தன் மகன் குட்டுவன் சேரலைக் கொடுத்தது என்றவுடன் அவனைக் கொடை கொடுத்தான் என்று பொருள் கொள்ளக் கூடாது. சிறுவன் குட்டுவன் சேரலைப் பரணரிடம் அளித்து உரிய காலம் படிப்பித்துத் தரும்படி “இவன் நின் அடைக்கலம்” என்று கூறியதாகவே பொருள் கொள்ளவேண்டும். செங்குட்டுவன் பத்தினிக்குக் கல் எடுத்தபோது பெரும் முதுமையடைந்திருக்க வேண்டும். இங்கே பரணர் பாடியது குட்டுவன் சேரல் சிறுபிள்ளையாய் இருந்த போது என்பதால், பரணரின் பாடலில் இமயத்திற் கல்லெடுத்த செய்தி வராதது இயற்கைதான். பதிகம் பாடப்பட்டது வடசெலவிற்குப் பின் இருந்திருக்க வேண்டும் என்பதும் இந்தத் தருக்கத்தாற் புலப்படுகிறது. 

91. கடற் கடம்பு எறிந்த காவலன் – நெடுஞ்சேரலாதன், நடுகற் காதை 135

 விடர்ச்சிலை பொறித்த விறலான் - நெடுஞ்சேரலாதன், நடுகற் காதை 136

நான்மறை யாளன் செய்யுட் கொண்டு 
 மேல்நிலை உலகம் விடுத்தோன் – செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 137-138

 போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கு எனக் 
 கூற்றுவரை நிறுத்த கொற்றவன் - யாரென்று தெரியவில்லை, நடுகற் காதை 139 -140 

 வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு 
 பொன்படு நெடுவரை புகுந்தோன் - யாரென்று தெரியவில்லை, நடுகற் காதை 141-142 

 மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி 
 அகப்பா எறிந்த அருந்திறல் - செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 143-144

 உருகெழு மரபின் அயிரை மண்ணி 
 இருகடல் நீரும் ஆடினோன் – செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 145-146

 சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து 
 மதுக்கொள் வேள்வி வேட்டோன் – இளஞ்சேரல் இரும் பொறை, நடுகற் காதை 147-148 

 92. இமையவர் உறையும் இமையச் செவ்வரைச் 
 சிமயச் சென்னித் தெய்வம் பரசிக் 
 கைவினை முற்றிய தெய்வப் படிமத்து 
 வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து 
 முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப் 
 பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி 
 வேள்வியும் விழாவும் நாள் தொறும் வகுத்துக் 
 கடவுள் மங்கலம் செய்கு என ஏவினன் 
 வடதிசை வணக்கிய மன்னவர் ஏறு என் 
                                             - நடுகற் காதை 226-234 

 93. ”கோவலன் கதை” பதிப்பாசிரியர் முனைவர் சூ. நிர்மலாதேவி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2003. சிலம்பினின்றும் மாறுபட்ட நிகழ்ச்சிகள் இதில் விவரிக்கப் படுகின்றன. பாண்டியன் தேவியாகிய கொப்புலிங்கி (<கோப்பெருங்கி) பெற்றெடுத்த மகள் கண்ணகி என்றும், காளியே கண்ணகியாக வந்து பிறந்தாள் என்றும், சோதியர் அறிவுறுத்தியபடி குழந்தை ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டு வையையாற்றில் விடப்பட்டது என்றும், மாசாத்துவானும் அவன் மைத்துனன் வண்ணமாலைச் செட்டியும் (மாநாய்கன்) பெட்டியைக் கண்டெடுத்து, வண்ணமாலைச்செட்டி கண்ணகியை எடுத்து வளர்த்தான் என்றும் கதை போகும். மாசாத்துவான் மனைவி வண்ணமாலை என்று சொல்லப்படுவாள். இங்கும் முறை மாப்பிள்ளை/பெண் உறவு கண்ணகிக்கும், கோவலனுக்கும் சொல்லப்படுகிறது. முழுவிவரிப்பையும் அந்தக் கதையுள் கண்டு கொள்க. கோவலன் கதை என்பதைப் 12-13 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த புகழேந்திப் புலவர் இயற்றினார் என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். ஆனால் கொச்சி, கொல்லம் போன்ற துறைமுகங்களைப் பற்றிப் பேசும் கோவலன் கதை அவ்வளவு முந்திய காலமாய் இருக்க வாய்ப்பில்லை. 

 94. ”சந்திராவின் பழிவாங்கல்” என்ற கன்னட நாட்டுப்புறக் கதை The Cilappatikaaram - The tale of an anklet”, Penguin Classics, 2004, என்ற பொத்தகத்தில் பக்கங்கள் 321-326 இல் சொல்லப்படும். இந்தக் கதை முன்னாற் சொன்ன கோவலன் கதையில் இருந்தும் சிறிது வேறுபடும். 

 அன்புடன், 
இராம.கி. .

Friday, May 21, 2010

சிலம்பின் காலம் - 10

செங்குட்டுவன் வடசெலவு பொருந்துங் காலம்: முன்னர் சொன்ன செய்திகளில், சுங்கரின் நிலப்பரப்புச் சுருக்கத்தையும், அதே போல நூற்றுவர் கன்னரின் நிலப்பரப்புச் சுருக்கத்தையும், கூடவே மகதத்தை வெற்றிகொள்ள கன்னர் வேட்கை கொண்டதையும், அவர் செல்வாக்கையும் பார்க்கும் போது, செங்குட்டுவனின் வடசெலவுகள் இலம்போதரக் கன்னன் காலத்தில் (கி.மு.87-69), சுங்கன் தேவபூதி காலத்தில், (கி.மு.86-75 இக்கு நடுவில்), கனகர் ஆட்சி (கி.மு.75-26) தொடங்குமுன், கி.மு.80 அளவில் நடந்திருக்கலாம் என்றே எண்ணவேண்டியிருக்கிறது. அப்படியோர் இடைவேளையே செங்குட்டுவனின் வடசெலவுச் செய்திகளுக்குச் சரியான இடங் கொடுக்கிறது. 

இலம்போதரக் கன்னன் காலத்தில் (கி.மு.87-69) நூற்றுவர் கன்னர் வலிமை குன்றியிருந்ததால் தான், தெற்கேயிருந்து சேரன் படையெடுத்து வந்தபோது, அவனுக்கு உதவி செய்து தம்நிலையைச் சீர்படுத்திக் கொள்ள முயன்றிருக்கின்றனர். “கல்லெடுப்பதற்கு நீங்கள் போகவேண்டுமா? உங்கள் சார்பாக நாங்கள் போரிட்டுக் கல்லெடுத்துத் தரமாட்டோமா?” என்று செங்குட்டுவனிடம் கன்னர் சொல்லச் சொன்னதாகச் சஞ்சயன் பேசுவது ஒருவகையிற் பார்த்தால் இருபுலப் பேச்சாகும் (diplomatic speech). அந்த நேரத்தில் சேரருக்கும் சிறியவராய் குறைவலிமை கொண்டிருந்த நிலையில், கன்னர் இப்படிப் பேசாமல் வேறு எப்படிப் பேசுவர்? அதனாற்றான், பல்வேறு பொருள்களும் படையும் சேரனுக்குக் கொடுத்து உதவிக்குப் போயினர் போலும். செங்குட்டுவனுக்கு நூற்றுவர் கன்னர் கொடுத்தவை கால்கோட்காதை 128-140 வரிகளிற் பேசப்படுகின்றன(72).அதோடு தம் உள்ளூர ”சேரன் வடபுலத்திற்கு வரவேண்டும்; போரிட வேண்டும்; சுங்கரும், அவருக்கு அமைச்சராய் இருந்த கனகரும் வலிகுன்ற வேண்டும்” என்ற விழைவு கன்னருக்கு இருந்திருக்கலாம். இல்லையெனில் காட்சிக் காதையில் வரும் இந்த நிகழ்வைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.

 
                                    படம் 5:செங்குட்டுவனின் வடசெலவுப் பாதை. 

 செங்குட்டுவன் வடசெலவு படம் 5 இல் இருப்பது போல், பெரும்பாலும் குடவஞ்சியில் தொடங்கி, கடலொட்டி நகர்ந்து, வயநாட்டுச் சாரலில் ஏறி (80 கி.மீ), நீலமலை தாண்டி, (இது வரை சிலம்பு பேசுகிறது(73)). முன்னால் முதலாங் கரிகாலன் படையெடுத்த போது சென்ற பாதையிலேயே, குடகு, அதியர், கங்கர் நாடு வழி (ஐம்பொழில் ஊடாக, வடுகவழி மேற்கு) கருநாடு கடந்து, படித்தானம் (கன்னரின் தலைநகர்) பிடித்து தக்கணப் பாதை வழியாகப் மகேசர், உஞ்சை, பில்சா, சாஞ்சி, கோசாம்பி கடந்து, முடிவில் மகதத்தில் முடிந்திருக்கும். 

 அந்தக் காலத்தில் குடகு, அதியர் நாடுவழி ஐம்பொழில், படித்தானம் போக்காமல் வடக்கே செல்லமுடியாது. ஏனென்றால், இன்னொரு மாற்றான கலிங்க வழி, அடர்காடுகளின் காரணமாய், பல நூற்றாண்டுகள் கழித்தே ஏற்பட்டது. அது பிற்காலப் பேரரசுச் சோழர் காலத்தது. கலிங்கம் என்ற நாடு கடற்கரையை ஒட்டிப் பாலூரைத் (இந்தக் கால ஒரியா மாநிலத்துப் பாரதீப்பைத்) தலைநகராய்க் கொண்டு இருந்தது. அதன் மேற்கு எல்லை காடுகளால் நிறைந்தது. அதன் தெற்கு எல்லை (இன்றைய ஆந்திர மாநிலத்தின் நெய்தல் நிலம் தவிர மற்றவை எல்லாமே) அடர்ந்த முல்லையும் குறிஞ்சியும், பாலையுமாய் இருந்ததால், தமிழர்களின் வடநாட்டுத் தொடர்பே பெரும்பாலும் கருநாடகம் வழியாகத்தான் இருந்தது 

 கருநாடகமும் சாதவா கன்னரின் அரசிற்குள் அடங்கியதே. கருநாடக மக்கள் கொடுங் கருநாடராய்ச் சிலம்பிலும் அதற்குப் பின்வந்த நூல்களிலும் சொல்லப் படுகின்றனர். கொடுமை என்பதற்கு இந்தக் காலப் பொருள் கொள்ளக் கூடாது. அவர் மொழி கொடுந்தமிழாய் இருந்ததையே அந்தச் சொற்றொடர் குறிக்கிறது. பழங் கன்னடம் என்பது பழந்தமிழுக்கு நெருங்கிக் கொடுந்தமிழாய் இருந்தது. கன்னடத்தின் இப் பழநிலையை மறுப்பது தமிழருக்கும் வடபுலத்தாருக்கும் இருந்த தொடர்பையே மறுப்பதாகும். 

  இடைப்பட்ட அவந்தியும், கன்னரின் வீச்சும்: 

 படித்தானத்திற்கு அடுத்த பெரிய ஊர் உஞ்சை. அவந்தியின் தலைநகர். சிலம்பின் படி இதை ஆண்டவர் “பாலகுமாரன் மக்கள்” எனப்படுவர்(74). இவர் யார் என்றறிவது அப்படியொன்றும் கடினமானதல்ல. கி.மு.550 களில் நடந்த உதயணன் கதை இந்தியாவெங்கும் பெரிதும் பேர் பெற்றது. இது நெடுங்காலம் பொதுமக்களிடையே பெருவழக்கில் இருந்தது. [குணாட்டியரின் ’ப்ருஹத் கதா’ பிசாச மொழியில் எழுதப்பட்டது. கங்கன் துர்விநீதன் கி.பி.570-580 இல் இதைச் சங்கதத்தில் எழுதினான். கொங்குவேளிர் இதைப் பெருங்கதை என்று தமிழில் ஆக்கினார்.] 

 இந்தக் கதையில், வச்சிர நாட்டு உதயணன் பல்வேறு சூழ்ச்சிகள், போர்கள், நிகழ்ச்சிகளின் பின் அவந்தி நாட்டு வாசவதத்தையை மணப்பான். [ஞாவகம் வருகிறதா? முதற் கரிகாலன் காலத்தில் அவந்தி சோழனுக்குத் துணையாய் இருந்தது. மகதம் சண்டையிட்டது. வச்சிரம் சண்டைபோடாமலே அடிபணிந்தது.] அவந்தியின் அரசன் பெருத்தோதன் (பிரத்யோதனன்). அவனுடைய மக்கள் ”பாலகன், பாலகுமாரன், கோபாலகன்.”என்று அழைக்கப்படுவர்(75). பின்னால் பாலகுமாரன் குடியே அவந்தியை ஆளும். ”பாலகுமாரன் மக்கள்” என்ற குறிப்பு இப்படியெழுந்தது தான்.

 செங்குட்டுவனின் வடசெலவுக் காலத்தில் அரசாண்ட அரசன் பெயர் தெரியவில்லை. ஒருவேளை கி.மு.80 களில் அது கன்னரின் மிரட்டலுக்கு ஆட்பட்டதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் கி.மு.74-61 இல் அவந்தியின் (மாளுவத்தின்) அரசன் ”கருதவில்ல மகேந்திராதித்யன்”என்று செயின ஆவணங்கள் பதிவு செய்யும்(76)

 உஞ்சை தாண்டி, கோசாம்பி வழியே மகதம் நுழைந்த செங்குட்டுவன் கங்கையின் தென்கரையில் காசிக்கு அருகிலேயே ஆற்றைக் கடந்திருக்க வேண்டும். அவன் பாடலிப் பட்டணம் போனதாய் சிலம்பின் எங்கணும் அறியமுடியவில்லை. முன்னால் அவன் தாய் புனித நீர் ஆடியது கூடக் காசியாய் இருக்கலாம் இரண்டாம் முறையும் அதற்கருகிலேயே கங்கையைக் கடந்திருக்கலாம் என்பது ஒரு கருதுகோளே. ஆற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் ஒரு வங்கப் பரப்பையே (படகுப்பரப்பையே) ஏற்பாடு செய்கிறார்கள். கங்கையாற்றின் அகலம் பாடலி அளவிற்கு காசியிற் பெரிதில்லை. ஆற்றின் வடமருங்கில் கன்னர் சேரரை எதிர்கொள்ளுகிறார்கள் [கன்னரின் வீச்சு கங்கையின் வடகரை வரை இருந்திருக்கிறது என்றால் சுங்கர்/கனகரின் வலிமை பெரிதும் அங்கு குன்றியிருக்க வேண்டும்.] அந்த நாடும் கழிந்து, இன்னும் வடக்கே போகிறார்கள்; பகைப்புலம் வந்துவிடுகிறது. எனவே கங்கையைக் கடக்குமிடம் சுங்கர்/கனகர் கையில் இல்லை. இத்தனை செய்திகளும் கால்கோட் காதை 175-181 ஆம் வரிகளில் தெரிய வருகிறது(77).

  கனகனும் விசயனுமா? கனக விசயனா?: 

முன்னே சொன்னது போல், செங்குட்டுவன் படையெடுப்பின்போது சுங்கன் தேவ பூதிதான் பெரும்பாலும் மகத அரசனாக இருந்திருக்கலாம்(78). இருந்தாலும் சுங்கனின் தலைமை யமைச்சனாகக் கனக விசயன் என்ற குறுநில மன்னன் இருந்திருந்தான் என்பதையும் பார்த்திருந்தோம். இனிக் கனக விசயன் என்பவன் ஒருவனா, இருவரா என்ற ஐயப்பாட்டிற்கு வருவோம்.

 தமிழகப் புரிதலில் சிலம்பையொட்டிய வரலாற்று ஆய்வுகள் புதிதாக ஏற்படாததால், 60, 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த புரிதலில் கனகர், விசயர் என்று இரண்டு பேராகவே பலரும் சொல்லிவருகிறார்கள். அரச குலத்தவரைக் குப்பன் சுப்பன் என்று ஒற்றைப்பெயரால் அழைப்பது வரலாற்றில் யாருக்கும் பழக்கமில்லை சேரன் செங்குட்டுவனை சேரன், செங்குட்டுவன் என்று இரண்டாகப் பிரிப்போமோ? பாண்டியன் நெடுஞ்செழியனை பாண்டியன், நெடுஞ்செழியன் என்று இரண்டாய்ப் பிரிப்போமோ? மகதத்தை ஆண்ட சுங்கனுக்கும், அவன் அமைச்சன் கனகனுக்கும் குடிப்பெயர் ஒன்றும், இயற்பெயர் ஒன்றும் தனித்தனியாய் இருக்காதோ? 

 சிலம்பில் இரண்டு இடங்களில் கனகனும் விசயனும் என்று உம்மை சேர்த்தும்(79) 4 இடங்களில் கனக விசயன் என்று உம்மை சேர்க்காமலும்(80) இந்தப் பெயர் குறிப்பிடப்படும். உம்மை சேர்த்த இரு இடங்களிற் கூட உம்மையை எடுப்பதனால் வாக்கிய அமைப்போ, சீரமைப்போ, தளையோ ஒன்றும் மாறுபடாது. இந்த இரு இடங்களும் ஏன் படியெடுப்பின் பிழைகளாக இருக்கக் கூடாது? 

 தவிர கனகவிசயரின் கதிர்முடி ஏற்றியது அவ்வளவு பெரிய கல்லா, இரண்டு பேர் தூக்க? பொதுவாய்க் கேரளப் படிமங்களின் உரு சிறிதாக ஒரே கல்லிலான புடைப்புச் சிற்பமாகவே இருக்கும். [இன்றைக்கும் கேரளக் கோயில்களைப் பார்த்தால் இது விளங்கும். அவர்களின் ஊருலவர் (உர்ச்சவர்) திருமேனியும் நம்மூரைப்போல நாலுபேர் தூக்கும்படிப் பெரிதாக இருக்காது. ஒருவர் தன்தலையிலோ, அன்றி இரு உள்ளங்கைகளிலோ வைத்துக் கொள்ளும்படி சிறிதாகவே இருக்கும். பெருந்திருமேனிகளைக் கையாளுவது அவர்கள் பழக்கம் அல்ல.) இற்றைத் தமிழ்நாடு போல பெரிய கருங்கற்களில் பெருத்த படிமங்களைச் செதுக்குவது அங்கு மரபல்ல. 

 பல்லவர், பேரரசுச் சோழர், பிற்காலப் பாண்டியர் காலத்துக் கோயில்களின் சிற்பங்களைப் பார்த்துப் பார்த்துச் சிலைகள் என்றாற் பெரிதாக இருக்கும் என்றெண்ணும் நிலைக்கு நாம்தான் வந்து விட்டோம். ”கடவுள் எழுதவோர் கல்”.என்னும் போது அது சிறிய புடைப்புச் சிற்பமாகத்தான் இருக்கக் கூடும் என்று நாம் எண்ணினால் என்ன? தவறா? 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கும் சிற்பங்கள் சிறியதாக இருந்திருக்கக் கூடாதா? அதோடு, இமயமலையிலிருந்து கருங்கற்கள் எடுத்துவருவதற்கு வாய்ப்புக்கள் குறைவு.

 [கருங்கற்கள் இந்தியத் தீவக்குறையிலே தான் சிலை செய்யப் பயன்படுகின்றன. வடக்கே கருங்கற்கள் அல்லாதவையே பயன்படுத்தப் படும்.] கருங்கல் அல்லாத ஒன்றை கிட்டத்தட்ட 15, 20 அயிர எடை (கிலோ எடை) அளவுள்ள கல்லை ஒருவரே தம் தலையிற் தூக்க முடியும். கல் தூக்கி வந்தது ஒருவர் தலையிலா? இருவர் தலையிலா? என்பது கள ஆய்வின் மூலம் செய்து பார்த்து முடிவு செய்ய வேண்டிய கேள்வி.}  

 ஒருவரா, இருவரா என்ற கேள்விக்குச் சான்றளிப்பது பதிற்றுப் பத்து 5 ஆம் பத்தின் பதிகமே(81). தெள்ளத் தெளிவாக ஆரிய அண்ணல் என்று ஓர் அரசனையே சொல்லும். எந்த அரசன் போரை முன்னின்று நடத்தினானோ, அவனைத்தானே ‘வீட்டி (வீழ்த்தி) ” என்று சொல்லமுடியும். எனக்குப் புரிந்த வரையில் கனகவிசயன் என்பவன் ஒருவன் தான். அன்றைக்கு நடைமுறையில் மகத அரசன் கனகனே; சுங்கன் தேவபூதி ஒரு பாவை போலத் தான் பாடலியிலோ, அன்று கோசம்பியிலோ கொலுவீற்றிருந்தான். அவன் போரில் கலந்து கொள்ளாது மற்ற பங்காளிகளையும், சுற்றியுள்ள வட அரசர்களையும் போரில் இறக்கியிருக்கலாம். கனகவிசயன் போரில் தோற்றபின், கல்லைச் சுமந்து சேரனோடு வர, உடன் போரிட்ட வடபுலத்தரசரை போர்க்கள முடிவில் சேரனே விடுவிக்கிறான். அதற்குப் பின்னால் சுங்கனின் ஆட்சியில் விசயனின் மகன்(?) வசுதேவன் அமைச்சனாகி கி.மு.75-இல் சுங்கரிடமிருந்து ஆட்சியைப் பிடித்துக் கொள்கிறான் போலும்(82). இதுபோன்றதொரு இயலுமையே வரலாற்றிற் தெரிந்த உண்மைக்கும், சிலம்பில் வரும் காட்சிகளுக்கும் பொருத்தம் காட்டுகிறது. 

  கனகரோடு சேர்ந்த வடதிசை மன்னவர்: 

 கண்ணகிக்குக் கல் எடுப்பதற்காகப் போர் நடப்பதற்கு முன்னால், சேரனின் முதற் படையெடுப்பிற்குப் பின்னால், நடந்த ஒரு விருந்தில் வடபுலத்து அரசர் (அவருள் அவந்தி அரசரும், மற்றவரும், கனக விசயனும் அடக்கம்) தமிழரை இகழ்ந்தது சிலம்பில் பேசப்படுகிறது83

 கனகரோடு சேர்ந்து பொருதிய வடதிசை மன்னவரைக் கால்கோட் காதையின் 182-192 ஆம் வரிகள் உரைக்கும்(84). ஆனால் இந்தப் பட்டியலிலும் எது குடிப்பெயர், எது இயற்பெயர் என்ற தடுமாற்றம் உண்டு. ”சுவடிப் பெயர்ப்புப் பிழைகள் இங்குமுண்டா?” என்ற கேள்வியும் எழுகிறது 

 ”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்” என்று அடுத்தடுத்துப் பெயர்கள் எழும்பொழுது ”உத்தர விசித்திரன், ருத்ர பைரவன்” எனச் சொல்லலாமா? அதே போல “சித்திரன்” என்பவன் யார்? சிங்கன் சுங்கனாய் இருக்கலாமோ? [இது போன்ற சுகர, சிகரக் குழப்பங்கள் சிங்கள அரசர் பெயர்ப்பட்டியலிலும் உண்டு. தமிழில் ஒருவிதமாயும் , பாலியில் இன்னொரு விதமாயும் வரும்] சிங்கனோடு சித்ரனா? தனுத்ரனா? ”சிவேதன்” யார்? அரசர்க்கான மரபில் குலப்பெயரும் தனிப்பெயரும் சேர்ந்தல்லவா வரும்? - என்ற கேள்விகளும் எழுகின்றன. [த்ர’என்ற ஒலிக்கூட்டு வடநாட்டு அரசர் பெயர்களின் பெரிதும் உள்ளதே. இந்தப் பெயர்கள் வடபாற் பெயர்கள் தான்] இவர்களை அடையாளம் காணும் பணி இன்னும் மீந்து நிற்கிறது. தேவபூதியை தனுத்ரபூதி என்றோர் ஆவணம் சொல்லுகிறதாம். இதையும் ஆய வேண்டும். தேவபூதியின் தந்தை பாகபத்ரன் பற்றியும், சுங்கர்/கனகர் காலத்து வடபுல அரசர் குறிப்புக்களையும் ஆயவேண்டும். 

 ”ஒருபகல் எல்லையில் ஆரியப் படையைச் செங்குட்டுவன் சாய்த்தான். கனக விசயர் 100 கடுந்தேராளரொடு களம் புகுந்தனர். தோற்றபின் துறவி வேடம் பூண்டுத் தப்ப முயன்று பிடிபட்டனர்” என்பவை அடுத்துவரும் செய்திகளாகும். துறவி வேடம் பூண்டு தப்பமுயன்றதில் ஒன்றும் வியப்பில்லை. காசிக்கருகில் சாம்பற் பூசிய துறவிகள் இன்றைக்கும் கணக்கற்றுத் திரிவர். காசிக்கு அருகில் தப்புதற்கு அந்த வேடம் மிகவும் எளிய வழியாகும். இவர்கள் இப்படித் தப்பியதே, போர் ஒருவேளை காசிக்கு அருகில் நடந்திருக்குமோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது. முன்னாற் சொன்னது போல், வடபுலத்தில் காசிதான் முதலில் எழுந்த பெரு நகரம். அதற்கு அப்புறம் தான் மற்ற நகரங்கள் அங்கு தோன்றின. 

 இந்தப் போருக்குப்பின் செங்குட்டுவன் கங்கைத் தென்கரையில் பாடிகொள்கிறான். வில்லவன் கோதையோடு படைகளை மேலும் வடக்கே அனுப்பி இமையத்தில் இருந்து கல்லெடுத்துவரச் செய்கிறான்(85). ஆனால் அப்படிப் போகும் போது போர் ஏதும் நடந்ததாய்த் தெரியவில்லை. கனக விசயனின் முடிமேல் கல்லேற்றிக் கொண்டு வந்து அதைக் கங்கையில் நீர்ப்படை செய்கிறார்கள்(86)

 அதன்பின் தெள்ளுநீர்க் கங்கையின் தென்கரையில் ஆரிய மன்னர் அழகுற அமைத்த பாடியில் இருக்கும் போது மாடலன் வருகிறான். [இன்றைக்கும் தெள்ளுநீர்க் கங்கை காசிக்குத் தென்கரையில் தான் என்பது வியக்கத் தக்க செய்தி. வடகரையில் இருக்கும் சுடுகாட்டுக் கரைகளைத் தவிர்த்து, சாம்பல் பூச்சிதறல் இல்லாமல், உருப்படியாக நீராட வேண்டுமென்றால் படகில் ஏறித் தென்கரைக்குத்தான் வரவேண்டும். அங்கு தான் சோலைகளும் தோட்டங்களும் உண்டு. தென்கரை அழகு அன்றைக்கும் இருந்தது வியக்கத்தக்க ஒற்றுமைத் தொடர்ச்சியாகும். வாரணசி நகருக்கு வடக்கே இன்றும் பறந்தலைகள் தான். முற்காலத்திற் பறந்தலைகளே போர்க்களங்களாய் ஆயின. போர்க்களம் எது என்றறிவது அங்குள்ள நிலவரைவை (geography) ஆய்வு செய்வதிற்றான் தெளிவாகும். 

  எடுகோள்கள்: 

 72. நாடக மகளிர் ஈரைம்பத்து இருவரும் 
 கூடிசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும் 
 தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை 
 நண்ணிய நூற்றுவர் நகைவேழம்பரும் 
 கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பத்திற்று இரட்டியும் 
 கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும், 
 ஐயீராயிரங் கொய்யுளைப் புரவியும் 
 எய்யா வடவளத்து இருபதினாயிரம் 
 கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும் 
 சஞ்சயன் முதலாத் தலைக்கு ஈடு பெற்ற 
 கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவரும் 
 சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே 
 வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப 
                                   - கால்கோட் காதை 128-140 

 73. தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும் 
 வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத 
 மலைமுதுகு நெளிய நிலைநாடு அதர்பட 
 உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு 
 ஆலும் புரவி யணித்தேர்த் தானையொடு 
 நீலகிரியின் நெடும்புறத்து இறுத்து ஆங்கு 
                                   - கால்கோட் காதை 80-85 

74. பால குமாரன் மக்கள் மற்றவர் 
 காவா நாவிற் கனகனும் விசயனும் 
 விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி 
 அருந்தமிழ் ஆற்றலர் அறிந்திலர் ஆங்கு எனக் 
 கூற்றங் கொண்டு இச்சேனை செல்வது 
 நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் 
 கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன 
 வங்கப் பெருநிரை செய்க தாம் எனச் 
                                  - கால்கோட் காதை 159-165 

 75. பாலகுமாரன் - பெருங்கதைக் குறிப்பு. ”கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை - பகுதி 1. எடுவிப்பு: டாக்டர் உ.வே.சா, உ.வே.சா. நூல்நிலையம், 2000, கீழே வருவன அப்பொத்தகத்தில் வரும் அருஞ்சொல்லகராதிக் குறிப்புகள் பக்கங்கள் நூலில் வரும் இடங்களைக் குறிக்கின்றன. 

 [பிரச்சோதனன் = ஒரு மகாச் சக்கரவர்த்தி; வாசவதத்தையின் தந்தை. இவன் நாடு அவந்தி; இராசதானி உச்சைனி நகர்; உதயணனை வஞ்சத்தாற் பிடித்துச் சிறாஇயில் வைக்கும்படி செய்தவன்; இவன் தேவியர் பதிறாயிரவருள் வாசவதத்தையைப் பெற்ற நற்றாயாகிய பதுமகாரிகை என்பவள் முதன்மை வாய்ந்தவள். இவனுக்குப் பாலகன், பாலகுமாரன், கோபாலகன் என்பவர் முதலிய குமாரர்கள் பலர் உண்டு. 

 பாலகன் = பிரச்சோதனன் புதல்வர்களுள் ஒருவன், பக்.92; 

 பாலகுமாரன் = பிரச்சோதனன் புதல்வன், உஞ்சை நகரில் உதயணன் நளகிரியை அடக்கிய பின்பு தந்தையின் கட்டளைப் படி அவனுக்கு வேண்டியவைகளைக் குறிப்பறிந்து செய்து வந்தவன், பக்.43. பாலகுமரார் = பிரச்சோதனனுடைய பிள்ளைகளின் பொதுப்பெயர், பக்.116] 

 76. அவந்தி அரசன் பற்றிய செயினக் குறிப்பு. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900)”pp 32-38, Munshiram Manoharlal Publishers Pvt.Ltd. 2005. 

 77. பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து 
 கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற 
 வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி 
 ஆங்கு அவர் எதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு 
 ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇப் 
 பகைப்புலம் புக்குப் சறை யிருந்த 
 தகைப்பருந் தானை மறவோன் தன் முன் 
                                            - கால்கோட்காதை 175-181 

78. தேவபூதியின் ஆட்சிக் காலம். http://en.wikipedia.org/wiki/Devabhuti 

79. காவா நாவிற் கனகனும் விசயனும் – கால்கோட்காதை 176 
 காய்வேற் தடக்கைக் கனகனும் விசயனும் – கால்கோட் காதை 222 

80. கலந்த மேன்மையிற் கனக விசயர் – கால்கோட் காதை 186 
 கனக விசயர் தம் கதிர்முடி ஏற்றி – நீர்ப்படைக் காதை 4 
 கானற் பாணி கனக விசயர் தம் – நீர்ப்படைக் காதை 50 
 தெரியாது மலைந்த கனக விசயரை – நீர்ப்படைக்காதை 190 

81. ”வடவ ருட்கும் வான்தோய் வெல்கொடிக் 
 குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்கு 
 சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன் 
 கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் 
 கானவில் கானங் கணையிற் போகி, 
 ஆரிய அண்ணலை வீட்டி பேரிசை 
 இன்பல் அருவிக் கங்கை மண்ணி” 
                             - பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பதிகம் 

82. கண்வ வசுதேவன் ஆட்சியைப் பிடித்தது. http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty 

83. பால குமாரன் மக்கள் மற்றவர் 
 காவா நாவிற் கனகனும் விசயனும் 
 விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி 
 அருந்தமிழ் ஆற்றலர் அறிந்திலர் ஆங்கு எனக் 
 கூற்றங் கொண்டு இச்சேனை செல்வது 
 நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் 
 கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன 
 வங்கப் பெருநிரை செய்க தாம் எனச் 
                             - கால்கோட் காதை 159-165 

வடபுலத்தரசர் ஒரு விருந்தில் தமிழரை இழித்துப் பேசியது. குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை, வட ஆரிய மன்னர் ஆங்கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கை தன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின் தவழும் இமயநெற்றியில் விளங்கு வில், புலி, கயல் பொறித்த நாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லை போலும் என்ற வார்த்தை அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்தவிடத்து, - வாழ்த்துக் காதை உரைப்பாட்டு மடையின் முதற்சில வரிகள். 

 84. உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் 
 சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் 
 வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம் 
 தென் தமிழாற்றல் காண்குதும் யாம் எனக் 
 கலந்த கேண்மையிற் கனக விசயர் 
 நிலத்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர 
 இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமாக் 
 கரிமாப் பெருநிரை கண்டு உளம் சிறந்து 
 பாய்ந்த பண்பிற் பல்வேல் மன்னர் 
 காஞ்சித் தானையோடு காவலன் மலைப்ப 
                                       - கால்கோட் காதை 182-192 

 85. வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த 
 பல்வேற் தானைப் படைபல ஏவி 
 பொற்கோட்டு இமையத்துப் பொருவறு பத்தினிக் 
 கற்கால் கொண்டனன் காவலன் ஆங்கென். 
                                      - கால்கோட் காதை 251-254 

 86. வடபேர் இமயத்து வான் தரு சிறப்பிற் 
 கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின் 
 சினவேல் முன்பிற் சருவெங் கோலத்துக் 
 கனக விசயர்தம் கதிர்முடி யேற்றிச் 
 செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் 
 அறியாது மலைத்த ஆரிய மன்னரைச் 
 செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக 
 உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற் றிரட்டியென்று 
 யாண்டும் மதியும் நாளும் கடிகையும் 
 ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள 
 வருபெருந் தானை மறக்கள மருங்கின் 
 ஒருபகல் எல்லை உயிர்த்தொகை யுண்ட 
 செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு 
 கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து 
 பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை 
 நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து 
                                              - நீர்ப்படை காதை 1- 14 

அன்புடன், 
இராம.கி.

Thursday, May 20, 2010

சிலம்பின் காலம் - 9

வடசெலவின் போது சுங்கர், கனகரின் நிலை:

”செங்குட்டுவனின் வடசெலவு, மோரியருக்கு அடுத்த சுங்கர், கன்னர் ஆகியோரின் வலுவற்ற காலத்தில் நடந்திருக்கவே வாய்ப்புண்டு” என்னும் கூற்றை இக்கட்டுரையின் அடிக்கோளாய்க் கொண்டு, இனிவரும் பகுதிகளில் அதைப் பல்வேறு கோணங்களில் அலசுவோம்.

மகதத்தை ஆண்ட சுங்கர்களின் கடைசியரசன் தேவபூதியாவான் (கி.மு.83-73)(56). இவனுக்கு உடன்பிறந்தார் இருந்தாலும் அவர் யாரும் ஆட்சிக்கு வரவில்லை. நடு இந்தியாவிலுள்ள சாஞ்சி(=விதிசா)க் கல்வெட்டை வெட்டுவித்த ’காசிபுத்ர பாக பத்ர’ என்பவன் இவன் தந்தையாவான்(56) .கி.மு.180 இல் இருந்த சுங்க அரசின் விரிவு கீழேயுள்ள படத்தில் தரப்படுகிறது. இந்தக் கட்டுரையில் முன்பக்கங்களிற் குறிப்பிட்ட காரவேலன் கல்வெட்டை ஆழ்ந்து படித்தால், சுங்கர் அரசின் எல்லைகள் அவரின் கடைசிக் காலத்தில் (கி.மு.73) கீழே படத்திற் காட்டப்படும் விரிவில் இருந்தும் சுருங்கியிருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது. [குறிப்பாக அவந்திப்பகுதி (உஞ்சை) அவர்களிடம் இருந்து வழுவிப் போயிருக்கிறது.] ஆனால் எவ்வளவு சுருங்கியது என்று உறுதியாய்ச் சொல்லமுடியவில்லை. அதற்குரிய ஆய்வுகள் இதுவரையில்லை.


படம் 3: மோரியருக்கு அப்புறம் இருந்த சுங்கரின் அரச விரிவு

சுங்கன் தேவபூதியின் முதலமைச்சன் வசுதேவ கண்வன் என்னும் குறுநில மன்னன் ஆவான் (57). கி.மு.75 - இல் வசுதேவ கண்வனே அரண்மனைக் கலகத்தில் தேவபூதியை பாடலிப் பட்டணத்தில் இருந்து துரத்தி மகத அரசைக் கைப்பற்றியிருக்கிறான். கண்வரில் வரும் ”ண்வ” எனும் ஒலிக்கூட்டு பழந்தமிழில் இல்லை. (இற்றைத் தமிழிற் பயில்கிறார்கள்.) அதை உயிர்மெய்க் கூட்டாக்கி, கனுவர்>கனவர் என்றே பழந்தமிழர் பலுக்கியிருக்க வாய்ப்புண்டு. அதோடு வகரமும், ககரமும் தமிழிற் போலிகளாதலால் (காண்க: பாவற்காய்/ பாகற்காய், நாவற்பழம்/நாகற்பழம், குடவம்/குடகம், குணவம்/குணகம்). கனவர் என்னுஞ் சொல் தமிழொலிப்பில் கனகராகும்.

இன்னொரு செய்தியையும் வரலாற்றாசிரியர் ஏமச்சந்திர ராய்சௌதுரியால் அறிகிறோம். ”கண்வ” என்பது “கனுவ்வாயன” என்றும் சொல்லப் பட்டிருக்கிறது(58). வடமொழி - தமிழ்த் திரிவில் கனுவ வாசன்>கனுவ வாஸ்யன்>கனக வாஸ்யன்>கனக விசயன் என்றாகலாம். அப்படியெனில் ”சேரன், சோழன், பாண்டியன்” போலக் ”கனகவிசயன்” என்பது வெறும் குடிப்பெயராகலாம். இன்னொரு வகையில், ”கனகன்” குடிப் பெயராகி ”விசயன்” இயற்பெயராகலாம். எந்த இயலுமை உண்மை என்பதைப் பாகதச் செய்திகள் மூலமே அறியமுடியும். தமிழர் கண்ணோட்டத்திற் பார்த்தால், மோரியருக்குப் பின்னிருந்த சுங்கர், கண்வர் வரலாறு ஆயப்பட வேண்டிய தொன்றாகும்.

சுங்கருக்கு அடுத்து மகதத்தை ஆண்ட கனக அரசர் (கி.மு.75-26) நால்வராவர்(59). அவரில் முதல் அரசனான கனக வசுதேவனும் கனக விசயனும் ஒருவரா? அன்றி முன் சொன்னது போல் கனகவாஸ்யன் என்ற குடிப்பெயர் கனகவிசயன் என்று தமிழராற் புரிந்து கொள்ளப் பட்டதா? முன்றாவது முறையில், விசயன் – வசுதேவன் என்ற பெயர்கள் மாபாரதக் கதையின் தாக்கத்தால் வழிமுறை உறவுப் பெயர்களாய் அமைந்தனவா? [காட்டாகச் சிங்கள அரசின் முதல் அரசன் விசயனாய் இருக்க, அவன் மகன் பாண்டு வசுதேவன் எனப்படுவான்.(60)] என்ற கேள்விகளுக்குச் சரியான விடையில்லை. ”கனக விசயன் என்பது கனக வாசுதேவனின் தந்தையாய் இருக்கலாமோ?” என்ற ஐயமும் இக்கட்டுரையாசிரியனுக்கு உண்டு.

வடசெலவின் போது கன்னர் நிலை:

சுங்கரைப் பேசும் போது நூற்றுவர் கன்னர் பற்றியறிவதும் தேவையாகும். மகத வணிகத்திற்கான தென்னகப்பாதையின் (Dakshinapaatha) முடிவில் (இற்றை அவுரங்காபாத் அருகில்) கோதாவரியின் வடகரையில் உள்ள படித்தானத்தைத் (படித்தானம்>பயித்தானம்>பைத்தான்>paithan என்பது இற்றைப் பெயர். நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை படித்துறை என்று சொல்வதில்லையா? படித்தானம் என்பதும் படித்துறை என்பதைப் போலத்தான்.) தலைநகராய்க் கொண்ட அரசராயும், மோரியரின் மாதண்டநாயகராகவும் நூற்றுவர் கன்னர் இருந்திருக்கின்றனர். மோரியருக்கு அப்புறம் நடுவணரசுப் பிடியிலிருந்து விடுபட்டு நூற்றுவர் கன்னர் தம் தனியாட்சியை நிறுவியிருக்கிறார்கள்(61). ஆனால் சுங்கரின் பிடியிலிருந்து அவர் முற்றிலும் விலகியதாய்ச் சொல்ல முடியவில்லை.

படித்தானத்திற்கு மேற்கில் விரைந்தால் இந்தக் கால லோனாவாலாவும், அந்தக் காலக் கார்லே குகைகளும் வந்துசேரும். (கார்லே குகையில் தான், இந்தியாவின் மிகப் பழமையான புத்த சேத்தியங்களில் ஒன்று (கி.மு.280) உள்ளது.) கார்லேயில் இருந்து இன்னும் மேற்கே போனால் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சோபாரா துறைமுகம் வந்து சேரும். (இது இன்றைய மும்பைக்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கால இந்தியத் துறைமுகங்களில் பலவும் பழைய துறைமுகங்களுக்கு அருகில் எழுந்தவை தான்; காட்டாக முசிறி/கொச்சின், கொற்கை/காயல்பட்டினம்/தூத்துக்குடி, புகார்/நாகப்பட்டினம், பாலூர்/பாரதீப், தாமலித்தி/ஆல்தியா, சோபாரா/மும்பை, பாருகச்சா/பரூச்).

சோபாரா துறைமுகம் (கூடவே சோபாராவுக்குச் சற்று முன்னே கன்னேரிக் குகைகள்) நூற்றுவர் கன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. நூற்றுவர் கன்னருக்கும் முன்னால், மகத அரசிற்கு முகன்மையாக சோபாராவும், நர்மதையின் கழிமுகத்தில் இருந்த பாரகச்சாவும் (இந்தக் கால பரூச் Bhaarukaccha>Broach) துறைமுகமாய் இருந்திருக்கிறன. இந்தத் துறைமுகங்கள் அரேபிய, உரோம வாணிகத்திற்கு உறுதுணையாய் இருந்தவை. இதே போல வங்க விரிகுடாவில் தாமலித்தி இருந்திருக்கிறது. அது கீழைக் கடல் வாணிகத்திற்குத் துணையாக இருந்திருக்கிறது.

நூற்றுவர் கன்னர் தமிழக வழக்கப்படி முறைப்பெண்களை மணமெடுத்துப் பழகியவர்(62). தமிழ், பாகதம் என ஈர் ஆட்சிமொழி நாணயம் வெளியிட்டவர்(63). (அவரரசில் இருமொழியும் அருகருகே புழங்கியிருக்கலாம். மாமூலனார் கூறிய மொழிபெயர்தேயத்தை இங்கு நினைவு கொள்ளுங்கள்.) தமிழ் அகநானூறு போலவே மரபு கொண்ட ”காதா சத்தசதி” என்னும் பாகத நூலுக்குக் காரணமானவர்(64). கன்னரின் மரபுகளைப் பார்த்தால், அவரைத் தமிழ்மரபுக்கு முரண்பட்டவராய்ச் சொல்ல முடியாது.

சாதவா கன்ன எனும் பாகதப் பெயரைப் பலரும் பலவிதமாய் அடையாளங் காணுவர். ”சாதவா கன்ன என்ற பெயர் Indo-Austric மொழிகளில் சாத = குதிரை; கன்னா = மகன் என்று எழுந்ததாகச் சிலர் சொல்வர்(65). ஆனால் சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால்,”நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்லமுடியும். சிலம்பும் அப்படித்தான் மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். "அவனைப் போட்டுச் சாத்திட்டான்" என்று இன்றைய வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா?

அந்தச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்குதல் என்னும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற ஆங்கிலச் சொல்லும் கூடப் பொடி என்ற பொருளில் எழுந்தது தான்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான். ஆக சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலரும் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (=சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவுதான். இன்னும் ஒரு சிலர் சாதவா கன்னர் என்று படிக்காது சாத வாக(ன்)னர் என்று படிக்கிறார்கள்(66). அப்படிச் சொல் பிரிப்பது தவறென்றே தோன்றுகிறது. சதம்>சதவர்>சாதவர்>சாதவா = நூற்றுவர்.


படம் 4. நூற்றுவர் கன்னரின் அரச விரிவு

கன்னர் என்பது கர்ணி என்றும் திரிகிறது. இங்கே ”காது, கன்னக்குழி” போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்னன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் விதப்பாகச் சொல்லப்படுவான்(67). பாகதத்தில் கிருஷ்ண என்பது கன்ன என்றாகும். கன்னன் என்பது சேரன், சோழன், பாண்டியன், போல ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும். முன்னால் சேர, சோழ, பாண்டியருக்கு இன அடையாளம் சொன்னது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநர்>கன்னர் என்று ஆகியிருக்க வாய்ப்புண்டு.

கன்னரின் ஆட்சிக்காலம் கி.மு.230 - கி.பி.220 ஆகும். கன்னரின் முதலரசன் சீமுகன். இவர்களின் முதற் பேரரசன் சாதகர்ணி I (கி.மு. 180-124) சுங்கரைக் கட்டுப்படுத்தி மாளுவம்/ அவந்தியைப் பிடித்தான். அத்திகும்பா கல்வெட்டும் (கி.மு.172) சாதகர்ணி I ஐப் பற்றிப் பேசுகிறது. முதலாம் சதகர்ணிக்கு அப்புறம் ஒரு பெருவீழ்ச்சி கன்னருக்கு ஏற்பட்டது(68). தாங்கள் பிடித்த நிலங்களிற் பெருவாரியை அவர்கள் இழந்திருக்கிறார்கள். மாளுவம் இவர் கைவிட்டுப் போயிற்று. அந்த வீழ்ச்சியால் கி.மு.87-69 இல் இலம்போதரன் என்னும் சாதவா கன்ன அரசன் காலத்தில், கன்னரின் அரச எல்லை பெரிதும் சுருங்கியது. இக்காலத்திற் கன்னர் சுங்கருக்கு இறைகூடச் செலுத்தியிருக்கலாம்(69). இலம்போதரனுக்குப் பின்வந்த அபிலகனும் மற்ற அறுவரும் கனகருக்குக் கீழ் சிற்றரசராகவே ஆயினர்(70). ஆனாலும் கன்னர் கருவிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். மீண்டும் வீறுகொண்டு எழுந்து கி.மு. 26-இல் சுங்கர் அரசை கன்னர் முற்றிலும் வீழ்த்தியிருக்கின்றனர். விதப்பாகப் கன்னன் புலிமாவியின் ஆட்சியில் மீண்டும் வலியுற்று, மகதத்தையே பிடித்தனர். பின்னர் கன்னர் அரசு பெரிதாக விரிவடைந்திருக்கிறது(71).

சாதவா கன்னரின் முகன்மை, அவர்கள் தக்கணப்பாதையின் வாயிலைக் காத்த மாதண்ட நாயகராய் இருந்ததாலே தான் ஏற்பட்டது. தவிர, அதே காரணத்தால், நூற்றுவர் கன்னரைத் தொடர்பு கொள்ளாமல், எந்தத் தமிழரசராலும் வடக்கே படையெடுக்க முடியாத நிலை அந்தக் காலத்தில் இருந்தது. தமிழக வரலாற்றை இந்திய வரலாற்றோடு பொருத்திக் காட்டுவது சாதவா கன்னர் என்னும் பற்றிய செய்தியே.

எடுகோள்கள்:

56. http://en.wikipedia.org/wiki/Sunga_Empire
57. http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty
58. Hemachandra Raychaudhuri, “Political History of Ancient India” p 353, Oxford University Press, 1996 Seventh Inpression 2008..
59. வசுதேவ (கி.மு.75-66); பூமிபுத்ர (கி.மு.66-52); நாராயண (கி.மு.52-40); சுசர்மன் (கி.மு.40- 26) http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty
60. விஜயன் (தீப வம்ச வரி 9.42; மகா வம்ச வரி 7.74) - கி.மு.483-445; அரசனற்ற காலம் (தீப. வரி 11.9; மகா.வரி 8.5) - கி.மு.445-444; விஜயன் மகன் பாண்டு வாசுதேவன் (தீப. வரி 10.5; மகா.வரி 9.25) - கி.மு.444-414; விஜயன், வசுதேவன் என்ற பெயர் இணைகள் மா.பாரதத் தாக்கத்தை நமக்கு நினைவுறுத்துகின்றன. வசுதேவனுக்கு முந்திவரும் ”பாண்டு” என்னும் அடைமொழி, அவன் பாண்டிய அரசகுமாரிக்குப் பிறந்த மகன் என்னுஞ் செய்தியை உணர்த்துகின்றது. ”சிங்களவர் தமிழ்த் தாய்மாருக்கும், அங்கிருந்த பழங்குடித் தாய்மாருக்கும் பிறந்தவரே”. என்று அவர் நூல்களே தெளிவாகக் கூறுகின்றன.
வில்ஹெம் கெய்கர், தமிழில் மறவன்புலவு க. சச்சிதானந்தம், கவிஞர் அண்ணா கண்ணன், “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை” பக்கம் 53. காந்தளகம், 2002.
61. நூற்றுவர் கன்னர் ஆட்சி ஏற்படுத்தியது கி.மு..230. K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.92, Oxford University Press, 1975.
62. நூற்றுவர் கன்னர் முறைப்பெண்ணை மணத்தல், ”Another Characteristic feature of the Satavahanas and many of their successors was the use of Metronyms, which took the form of brahminical gotra + puta (son); e.g., Gotamiputa, Vasithiputa, and so on. These are two of the most widely used metronyms among Satavahanas, which raises the possibility that several of the Satavahana queens were closely related to one another and that in consequence some of the Satavahana marriages were consanguineous. Once this is granted it follows almost immediately that Satavahanas had a rule of Cross Cousin Marriage. - By Thomas R Trautman “The Dravidian Kinship” p 375, Cambridge University Press, 1981.
63. நூற்றுவர் கன்னர் இருமொழி நாணயம் Iravatham Mahadevan, “Early Tamil Epigraphy”, pp 199- 204, Crea-A, Chennai and The Departmemt of Sanskrit and Indian Studies, Harvard University, U.S.A., 2003
64. நூற்றுவர் கன்னர் “காதா சத்தசதி”; K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.94, Oxford University Press, 1975
65. நூற்றுவர் கன்னரின் பெயர்விளக்கம். D.D.Kosambi, "Satavahana Origins". Introduction to the study of India history pp. 243 -244. Popular prakashan. Mumbai, 1975.
66. நூற்றுவர் கன்னர் பெயரை “சாத வாகனர்” என்று படித்தல். முனைவர் ஐராவதம் மகாதேவன், “சிந்துவெளிப் பண்பாடும், சங்க இலக்கியமும்” பக்.32, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600005., 2010.
67. நூற்றுவர் கன்னரின் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் பற்றிய செய்தி. K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.93, Oxford University Press, 1975
68. நூற்றுவர் கன்னரின் ஆட்சி விரிவும், சுருக்கமும்
http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty

Satakarni (c.180-124 BCE)
His successor Sātakarnī I was the sixth ruler of the Satavahana. He is said in the Puranas to have ruled for 56 years.

Satakarni defeated the Sunga dynasty of North India by wresting Western Malwa from them, and performed several Vedic sacrifices at huge cost, including the Horse Sacrifice - Ashwamedha yajna. He also was in conflict with the Kalinga ruler Kharavela, who mentions him in the Hathigumpha inscription. According to the Yuga Purana he conquered Kalinga following the death of Kharavela. He extended Satavahana rule over Madhya Pradesh and pushed back the Sakas from Pataliputra (he is thought to be the Yuga Purana's "Shata", an abbreviation of the full name “Shri Sata” that occurs on coins from Ujjain), where he subsequently ruled for 10 years.

By this time the dynasty was well established, with its capital at Pratishthānapura (Paithan) in Maharashtra, and its power spreading into all of South India.

Kanva suzerainty (75-35 BCE)

Many small rulers succeeded Satakarni, such as Lambodara, Apilaka, Meghasvati and Kuntala Satakarni, who are thought to have been under the suzerainty of the Kanva dynasty. The Puranas (the Matsya Purana, the Vayu Purana, the Brahmanda Purana, the Vishnu Purana) all state that the first of the Andhra kings rose to power in the 1st century BCE, by slaying Susarman, the last ruler of the Kanvas.[11] This feat is usually thought to have been accomplished by Pulomavi (c. 30-6 BCE), who then ruled over Pataliputra
69. இலம்போதரன்; http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty
70. அபிலகனும் அறுவரும் http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty
71. நூற்றுவர் கன்னர் மீள்விரிவு K.A.Nilakanta Sastri “A History of South India”, pp 94-96, Oxford University Press, 1975

அன்புடன்,
இராம.கி.

Sunday, May 16, 2010

சிலம்பின் காலம் - 8

சேரரின் வஞ்சி:

சேரன் செங்குட்டுவனின் சமகாலப் பங்காளிகளைப் பார்த்தோம் அல்லவா? இவர்களின் மையப் புள்ளி எங்கிருந்திருக்கும்? பங்காளிகளுக்கு நடுவிலா? அன்றி, விளிம்பிலா? - என்பது அடுத்த கேள்வி. குறிப்பாக இது குட நாட்டு வஞ்சியா? கொங்கு வஞ்சியா? - என்ற கேள்வியெழும். கொங்குமண்டலப் பற்றுக் கொண்ட பல ஆய்வாளர்கள் ஆன்பெருநை என்னும் பெயர் தமிழக அமராவதிக்குப் பொருந்துவதாலும் [ஆன்பெருநை = ஆன்பெருவதி> ஆம்பெராவதி> ஆம்ப்ராவதி> ஆம்ராவதி> அமராவதி], அங்கு ஏராளம் தொல்லியற் பொருட்கள், நாணயங்கள் கிடைப்பதாலும், அதையே சேரர் தலைநகர் வஞ்சி என்று சொல்வார்கள். ஆனால் சிலம்பைச் சரியாக ஆராய்ந்தால் தலைமை வஞ்சி கொங்கிலில்லை, அது அடுத்த வஞ்சி என்பது எளிதில் விளங்கிப் போகும். [இதற்காகக் கொங்குக் கருவூரின் முகன்மையை நாம் குறைக்கிறோம் என்று பொருளில்லை. ஒரே பெயர் இருவேறு ஊர்களுக்கு இருப்பது தமிழருக்குப் புதிதா, என்ன?]

நெடியோன் மார்பில் ஆரம் போன்று ’பெருமலை விலங்கிய பேரியாற்று அடைகரை” என்று காட்சிக் காதை 21-22 ஆம் வரிகள் சொல்லுவதால்,. செங்குட்டுவனின் வஞ்சி என்பது உறுதியாக இன்றையக் கொடுங்களூர் தான்; (முன்னாற் சொன்ன எடுகோள் 12.) வஞ்சிக் காண்டம் நெடுகிலும் இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன(43). இன்றைய கொடுங்களூரில் இருந்து சுள்ளியம் பேரியாற்றை ஒட்டியே, மூவாற்றுப் புழை வழியே அயிரிமலை (= கூர்த்த மலை) வரை போகமுடியும். செங்கோடு என்பதற்கும் செங்குத்து மலை என்று பொருள் கொள்ள முடியும். அயிரி மலைக்குக் கிழக்குப் பக்கம் வையை தோன்றுகிறது. மேற்குப் பக்கம் சுள்ளியம் பேரியாறு தோன்றுகிறது. ஆறு தொடங்கும் இடத்தில் அயிரியாறு என்றும் அழைக்கப் படுகிறது.

கோன்முறை பிழைத்த கொற்ற வேந்தன்:

செங்குட்டுவனின் பங்காளிகளையும், அவன் வஞ்சியையும் பார்த்த நாம் இனி அவனுடைய தமிழக எதிராளிகளைப் பார்ப்போம். முதலிற் நாம் பார்ப்பது பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகும்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்” என்ற புறப்பாட்டை எழுதிய அரசன் இந்த நெடுஞ்செழியனாவான். ”வடவாரியர் படைகடந்து, தென்றமிழ்நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசுகட்டிலிற் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று” என்ற சொல்லால், இவன் வடவாரியர் படைகடந்த பாண்டியன் என்பதை அறிகிறோம். [இது செங்குட்டுவனின் முதற் படையெடுப்பிற்கு முந்தியதோ, பிந்தியதோ, தெரியாது. ஆனால், இவன் இமையம் போகவில்லை, வடவாரியர் என்போர் “அரசன் இல்லா ஆயுதகணத்தார் (யௌதேய கணத்தார்= merceneries)” என்று ம.சீ.வே சரியாக நிறுவுவார்(44). இவன் எதிரியான நெடுஞ்சேரலாதன் வடசெலவிற் வெற்றி கொண்ட காரணத்தால் அதற்குப் போட்டியாய், இப்படியோர் பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டான் போலும்.]

ஆனாலும் நெடுஞ்செழியன் கடைசிக் காலம் பெரிதும் குழப்பமானது. சிலம்புக் காலத்தில் மக்களின் பெருங்கோவத்திற்கு இவன் ஆளாகியிருக்கிறான். மக்கள் இவன் ஆட்சியின் மேல் குறை கொண்டிருந்திருக்க வேண்டும். கோவலன் கொலைக்கு முன்பும், நெடுஞ்செழியனின் கோத்தொழிலர் (bureaucrats), கோமுறை (goveranance) தவறியதால், மக்களின் முணுமுணுப்பு அரசனுக்கு எதிராய்க் கூடியிருந்திருக்கிறது. வார்த்திகனை விடுவித்து, ”கோன்முறை பிழைத்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதி” பற்றிச் சிலம்பு ஆழமாகப் பேசுகிறது(45).

கணவன் கொலைக்களப் பட்டபின் அரசன் முன் வழக்குரைத்த கண்ணகி, கோவலன் தந்தையின் பெயரை முன்னுரைத்தே தன்னை அறிமுகம் செய்வாள். அப்படியெனில் மாசாத்துவான் என்னும் வணிகன் தமிழகமெங்கும் பேர்பெற்றவன் என்பது புலப்படுகிறது. அப்படிப் பன்னாட்டு மன்னராலும் அறியப் பட்டவன் மாசாத்துவானெனில், கோவலனைக் கொல்லச் செழியன் ஆணையிட்டது எப்படி? கோவலன் நாடு புகுந்த செய்தியை கோத்தொழிலர் எப்படி அரசனுக்குச் சொல்லாது இருந்தனர்? கோட்டை வாசலில் நுழையும் போது “கோவலன் யார்?” என்று கேட்டு, செய்திகள் உரியமுறையில் அறியப்பட்டு அரசனுக்குச் சொல்லப் படாமற் போயிருக்கிறதே? நெடுஞ்செழியனின் புலனறிவாளர் (intelligence people) தரங் குறைந்தவரா? அரசனுக்குச் செய்திகளைச் சரியானபடி தராதவரா? செழியன் எடுப்பார் கைப்பிள்ளையா? அன்றி அரசனுக்கும் கோத்தொழிலருக்கும் நடுவே ஒருவேளை பெருத்த இடைவெளி இருந்ததோ? இந்த இடம் நமக்குப் புரிபடாமல் போகிறது. மொத்தத்தில் பாண்டியன் அரசு தடுமாறிக் கொண்டிருந்த காலத்தில், மக்களின் கோவம் கூடியிருந்த காலத்தில், சிலம்புக் கதை நடந்திருக்கிறது.

”மதிரையில் நடந்த செய்திகள் குன்றக் குரவரும், சாத்தனாரும் சொல்வதற்கு முன் சேரனுக்குத் தெரியாதா?” என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஒற்றர்கள் இல்லாது அரசகருமம் என்பது என்றுமேயில்லை. ஆனால் இற்றைப் போல் அன்று நடைச்செலவு எளிதானதல்ல. மதுரையை எரித்து 14 ஆம் நாள் பகற்பொழுதில் கண்ணகி செங்கோடு வந்து சேருகிறாள். அதற்கு இரண்டு, மூன்று நாட்களில் மலைவளங் காணவந்த சேரனிடம் குன்றக் குரவர் செய்தியைச் சொல்லியிருக்க வேண்டும். ஒற்றர்களுக்கும் சேரனையடைய கிட்டத்தட்ட இதே காலம் பிடித்திருக்கும். ஒற்றர் கூறிய செய்தியை கதைமாந்தர் வழியாகவே வெளிப்படுத்துவது சிறப்பென்று இளங்கோ எண்ணியிருக்கலாம். சம காலத்தில் (அதாவது நிகழ்வுகள் நடந்த சில காலத்துள்) காப்பியம் எழுதப்பட்டிருந்தால், புலனாய்வுச் செய்திகளை வெளியிட இளங்கோ போன்றவர் முற்படமாட்டார்.

சிலம்பிற் காணும் உதிரிச் செய்திகள்:

சிலம்புக் காலச் சமயப்பின்னணி பற்றி முன்பே பேசினோம். அதே பொழுது, வரந்தருகாதையை ஒதுக்கினால், இந்தக் காப்பியம் எந்தச் சமயநெறியையும் சிறப்பித்துச் சொல்லவில்லை. வேதநெறி, சிவநெறி, விண்ணவநெறி, ஆசீவகம், செயினம், புத்தம் எனப் பல்வேறு நெறிகளைப் பின்பற்றியோர் இதன் கதைமாந்தராய் வருகின்றனர். பலநெறிப் பாடல்களும், பரவுதல்களும் பேசப்படுகின்றன. ஆசீவகக் கருத்துகள் சிலம்பின் உள்ளே பெரிதும் பொதிந்திருப்பதாக க.நெ. குறிப்பிடுவார். ஆனாலும் எந்த நெறியும் முதல் நெறியாகப் பேசப்படவில்லை. ”தமிழர் என்று பொதுமை” பேசப்புகுந்த காப்பியம் அதன் நோக்கிலிருந்து தவறி மதம் பேசப் புகுமோ?

ஒருசில உதிரிச் செய்திகள் நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. முருகன் கோயிலாய்ச் சிலம்பிற் சொல்லப்படும் இடங்களில்(46) செந்திலைத் தவிர மற்றவற்றை இன்னுஞ் சரியாக யாரும் அடையாளம் காணவில்லை. அழகர் மலை(47), திருவரங்கம்(48), வேங்கடம்(49), குயிலாலுவம்(50) (கைலாயம்) பற்றிச் சொல்லும் முதற் தமிழ் நூல் சிலம்பே. மதுராபதித் தெய்வத்தின் விவரிப்பு அப்படியே இன்றைய சொக்கர் -மீனாட்சியின் இருபுடை விவரிப்பாய்த் தெரிகிறது(51).

செங்குட்டுவனின் வடசெலவுக் காரணம்:

உதிரிச் செய்திகளை ஒருபுறந் தள்ளி, செங்குட்டுவனின் வடசெலவுக் காரணம் பற்றி இனி ஆழ்ந்து பார்ப்போம். செங்குட்டுவனின் வடநாட்டுப் போர், உண்மையில், காட்சிக்காதையின் 127-130 ஆம் அடிகள்(52) சொல்வது போல் கல்லெடுக்கத் தான் எழுந்ததா? அன்றிக் காலகாலமாய்த் தமிழரோடு போட்டிபோட்ட மகதத்தை ஒறுக்க எழுந்ததா? (மறக்கவேண்டாம் அது பகைப்புறத்து மகதம்)

இப்படிச் சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. தமிழகத்து மூவேந்தரிடையே ஒருவருக்கொருவர் நம்பாமை இருந்திருக்கிறது. ஓரிரு தலைமுறைகளுக்கு முன்னால் கொங்குக் கருவூரைப் பிடித்துச் சேரர் தம்பகுதியாய் அறிவித்தது சோழ,பாண்டியருக்கு கடுப்பை விளைவித்திருக்கும். சோழநாட்டு அரசவுரிமையில் செங்குட்டுவன் தலையிட்டு, உறையூரில் தன் மைத்துனனை ஆட்சிக்கு அமர்த்தியது புகார் வேந்தனுக்குப் பகைமையைக் கிளப்பிவிட்டிருக்கும். வேளிருக்கிடையேயும் குழப்பம் இருந்திருக்கலாம். ”எப்போதெல்லாம் உள்நாட்டில் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போது, வெளிநாட்டைக் காரணங் காட்டி அவரை நோக்கிப் படையெடுக்க வைத்து உள்நாட்டினரை அமைதிப் படுத்துவது காலகாலமாய் பல்வேறு அரசுகளுக்கு உள்ள பழக்கம் தானே?” இற்றைக் காலத்தும் இத்தகைய தடந்தகைகள் (strategies) இருக்கின்றனவே?

எனவே முன்னே செங்குட்டுவன் தந்தை சேரலாதன் காலத்தில் வடக்கே படையெடுத்தது(53), இப்பொழுது வடபுலத்தார் செயலைப் பெரிதுபடுத்துவது என எல்லாமே செங்குட்டுவனைப் பொருத்த மட்டில் வேறு அரசியற் காரணம் காட்டுகின்றன. செங்குட்டுவனுக்கு வந்த உளவுச் செய்திகள் பலவாக இருந்திருக்கலாம்; அவன் வடநாட்டுச் செய்திகளை அறிவதில் கவனத்தோடு இருந்திருக்கிறான்(54). கண்ணகிக்குக் கல் கொள்ளுவது, வடநாட்டுப் படையெடுப்பிற்கான சாக்கா? - என்ற எண்ணம் சிலம்பை ஆழ்ந்து படிக்கும் யாருக்கும் எழாது போகாது. அவனுடைய சூளுரையும் இந்த எண்ணத்திற்குப் பின்புலம் காட்டுகிறது(55).

எடுகோள்கள்:

43.குட வஞ்சிக்கான வஞ்சிக் காண்ட ஆதாரங்கள்: .காட்சிக்காதை 9,34,148,174,180, .கால்கோட்காதை 46,50,79,99, நீர்ப்படை காதை 113,149,256, நடுகற் காதை 4,147,196, வாழ்த்துக் காதை உரைப்பாட்டு மடை (இருமுறை). 11,14,28 ஆம் பாட்டுக்கள்.
44. மயிலை சீனி வேங்கடசாமி “தமிழுக்கு வழங்கிய கொடை” - ”14. ஆரியப்படை கடந்த அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் - செந்தமிழ்ச்செல்வி சிலம்பு -46”, பக். 172-179”, 19. ஆரியப்படையும் யௌத்தேய கணமும் - கல்வெட்டுக் கருத்தரங்கம் 1966”, பக்.201-209, வெளியிடுவோர்: எம்.வெற்றியரசி, மனை எண் -9, கதவு எண் -26, ஜோசப் காலணி, ஆதம்பாக்கம், சென்னை 600088, 2001.
45. நன்கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி
வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பிக்
கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றிப்
படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன் என
இடுசிறைக் கோட்டத்து இட்டனராக அதுகண்டு
மையறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினைக் கதவம் திறவாது ஆதலின்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக்
கொடுங்கோல் உண்டுகொல் கொற்றவைக்கு உற்ற
இடும்பை யாவதும் அறிந்தீம் என்னென
கட்டுரை காதை (98-112)
46.சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே
- குன்றக்குரவை 8
47. காடுகாண் காதை 91
48. காடுகாண் காதை 35-40,
49. காடுகாண் காதை 41-51
50. நடுகற் காதை 102
51. சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி
கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியள்
இடக்கை பொலும்பூந் தாமரை யேந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றுந் தகைமையள் பனித்துறைக்
கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்
பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்
குலமுதற் கிழத்தி
- கட்டுரைக் காதை 1-13
52. புன்மயிர்ச் சடைமுடி புலரா உடுக்கை
முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து
இருபிறப்பளரொடு பெருமலை யரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவுள் எழுதவோர் கல்தாரான் எனின்
- காட்சிக் காதை 127- 130
53. நும்போல் வேந்தர் நும்மோடு இகலிக்
கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி
பகைப்புறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன
கொங்கணர் கலிங்கர் கொடுங்கருநாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கதுன்
கடமலை வேட்டம் என் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங்கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இது நீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை
- காட்சிக் காதை 132-167
54. வியம்படு தானை விறலோர்க் கெல்லாம்
உயர்ந்தோங்கு வெண்குடை யுரவோன் கூறும்
இமையத் தாபதர் எனக்கீங் குணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பா லொழிகுவ தாயி னாங்கஃது
எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியுந் தரூஉம்
- கால்கோட் காதை 7-12
55. இமையத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவது ஆயின் அஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்
வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்
கடவுள் எழுதவோர் கற்கொண்டு அல்லது
வறிது மீளும் என் வாய்வாளாகில்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகு என
கால்கோட் காதை 9-18

அன்புடன்,

இராம.கி.

Saturday, May 15, 2010

எம்மைப் பற்றும் ஆசாகிய தலைவன் எங்குள்ளான்?

சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும் மன்னே
பெரிய கள் பெறினே
யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே
சிறு சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடும் வழியெல்லாம் எமக்கு ஈயும் மன்னே
அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் தான் நிற்கும் மன்னே
நரந்த நாறும் தன்கையாற்
புலவுநாறும் எந்தலை தவரும் மன்னே
அருந்தலை இரும்பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்து அன்று அவன்
அருநிறத்து இயங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
இனி,
பாடுநரும் இல்லைப் பாடுநர்க்கு ஒன்று ஈகுநருமில்லைப்
பனித் துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே

- புறம் 235: திணை: பொதுவியல்; துறை: கையறு நிலை. இறந்த அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது.
----------------------------------

சிறிய அளவே கள் கிடைத்தால்
எங்களுக்குக் கொடுத்துவிடுவான்;
பெரிய அளவில் கள் கிடைத்தால்
எங்களுக்கும் கொடுத்து
நாங்கள் பாட, அவன் மகிழ்ந்து உண்பான்.

சிறிய சோறானாலும்
மிகப் பலரோடு பகிர்ந்து கொள்ளுவான்
பெருஞ்சோறானாலும்
மிகப் பலரோடு பகிர்ந்து கொள்ளுவான்

எலும்போடு ஒட்டிய
ஊன்தசைகளை அனைத்தையும் எமக்கே ஈவான்

அம்பும் வேலும் நுழையும்
வழியெல்லாம் தான் நின்றுகொள்வான்

நரந்தம் புல் நாறும் தன் கையால்
புலவு நாறும் எங்கள் தலையைக் கோதிக்கொடுப்பான்

தலைமைப் பாணர்களது
அகன்ற சோற்றுக் கலனைத் துளைத்து,
அவனிடம் இரந்தோரின் கைகளுள்ளும் போய்,
அவனாற் காப்பாற்றப்படுவோரின்
புல்லிய கண்பாவை சோர்ந்துபோகச் செய்து.
அருஞ்சொல்லை நுணுகத் தேடிப் பெய்யும்
புலவருடைய நாவிலும் குத்திச் சென்று,

வீழ்ந்தது அவன் மார்பிற் தைத்த வேல்.

எம்மைப் பற்றும் ஆசாகிய தலைவன் எங்குள்ளான்?

இனி,
அவனைப் பாடுநரும் இல்லை; பாடுநருக்கு ஈகுநரும் இல்லை;

குளிர்ந்த துறையில் மலரும் தேன்கொண்ட பகன்றை
யாராலும் சூடப்படாது கழிந்தாற்போல

பிறர்க்கு ஒன்றும் ஈயாது வீணே வீழும் உயிர்கள் மிகப்பல.

----------------------------------
If he found a little liquor,
he would give it to us.

If he had more,
he would drink happily
while we sang.
where is he now?
If he had even a little rice.
he shared it
in many plates.
where is he now?
If he had more,
he shared it
in many more plates.
where is he now?
He gave us
all the flesh
on the bones
where is he now?
Wherever spear and arrow flew,
he was there.
where is he now?
With his palms scented
with lemon grass,
he carressed my hair
smelling of meat.
where is he now?
The spear that pierced his chest
pierced at once
the wide eating bowls
of great and famous minstrels,

pierced many begging patms,

and, dimming the images in the eyes
of men he sheltered,
it went right through the subtle tongues
of poets
skilled in the search
for good words.

Where is he now,
father, mainstay,
king?
where is he now?
No more,
No singers any more
nor anyone to give anything
to singers

As in the cold waters
jalap flowers blossom,
large, full of honey,
but die untouched, unworn,

there are many now living
and dying,

without giving
one thing
to others.

- translated by A.K.Ramanujam "Poems of War and Love" pp 169-170, Columbia University Press, 1985
--------------------------------------------

மே 18 இல் இல்லாது போன தமிழர் தலைவனுக்கு எம் வீர வணக்கம்.

அன்புடன்,
இராம.கி.

சிலம்பின் காலம் - 7

சிலம்புக் காலத் தமிழக நில முகப்பு (map):



படம் 1: தமிழர் வரலாறு - பி.இராமநாதன், தமிழ்மண் பதிப்பகம்

மேலேயுள்ள படம் - 1(30) கிட்டத்தட்ட கி.மு. முதல் நூற்றாண்டில் நிலவிய தமிழக எல்லைகளைக் குறிக்கும். இந்தக்காலத்தில் சேரர் நாடு என்பது கொங்குநாட்டையும் இணைத்து மூவரிலும் பெரிதானது. செங்குட்டுவன் காலத்தில் இன்னும் இது வடக்கே விரிந்திருக்கலாம். குடநாட்டு வஞ்சி மூன்று திசைகளிலும் வீச்சுக் கொண்டதாய் இருந்தது. கோசர் நாடு (south canara) என்னும் துளுநாடு இற்றை மங்களூரைச் சுற்றியது. சிலம்பின் காலத்தில் இதுவும் சேரருக்கு அடங்கியது என்றே தோன்றுகிறது.

படத்தில் தொண்டை,நாட்டையும், நாகநாட்டையும் பிரிப்பது தென்பெண்ணை ஆறாகும். வளநாடு தான் அன்றிருந்த மூவேந்தர் நாடுகளுள் மிகவும் சிறியது. வளநாட்டிற்கும், நாகநாட்டிற்கும் இடையே காவிரியின் தென்கரை வரைக்கும், பாண்டிநாடு துருத்தியதை மாங்காட்டு மறையவன் கூற்றால் அறிகிறோம். பெரும்பாலும் இற்றைத் திருவாங்கூரையும், அதற்குத் தெற்கிலும் இருக்கும் வேணாடு உட்பட்ட கேரள நிலங்கள் தென்பாண்டி நாட்டிற் சேர்ந்திருக்கலாம். படத்தில் பாண்டிநாட்டிற்கும், வளநாட்டிற்கும், நாகநாட்டிற்கும் இடைப்பட்ட எல்லைகள் தெளிவாகக் குறிக்கப் படவில்லை. இவையும் ஆய்விற்குரியன. மூவேந்தர் போக, குறுநில வேளிர் பலரும் அவரிடை இருந்திருக்கின்றனர். அவர்நாடுகளும் படத்திற் குறிக்கப் படவில்லை.

முதற் கரிகாலன் பற்றிய செய்திகள் / உத்தர, தக்கணப் பாதைகள்:

தமிழ் மூவேந்தரின் பின்புலத்தைப் பார்க்கும் போது, சிலப்பதிகாரக் காலத்தில் அவரிடையே பெரும் ஒற்றுமைக்குலைவு இருந்ததை மேலே குறிப்பாகப் பார்த்தோம். இத்தகைய குலைவில் இருந்து தமிழர்நிலை மாறவே, தமிழரெனும் குடை பிடித்து, முன்னோர் பெருமிதங்களை இளங்கோ தன் காப்பியத்துள் சொல்லுகிறார் என்பது சிலம்பைப் படிக்கும் யாருக்கும் விளங்கும். முதற் கரிகாலன் பற்றிய சிலம்பின் செய்தியும் அத்தகைய முன்னோர் பெருமிதங்களில் ஒன்றே.

சிலம்பை ஆழ்ந்து படிக்காத பலரும் முதற் கரிகாற் சோழனைச் சிலம்பு காலத்தவனாகவே சொல்கிறார்கள். அந்தப் புரிதல் முற்றிலும் தவறு. இந்திரவிழவு ஊரெடுத்த காதையின் 89-104 ஆம் வரிகளைப்(31) படித்தால், கரிகாலன் புண்ணிய திசைமுகம் (= வடக்கே காசியை நோக்கிய பயணம்) போனது ‘அந்நாள்’ (= ’சிலம்பிற்கு நெடுங்காலம் முன்னால்’) என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும். அந்த விவரிப்பின் 96 ஆம் வரியில் வரும் ’பகைவிலக்கிய பயங்கெழு மலை’ என்பது இமயத்தைக் குறிக்கும்.

திருமாவளவன் வடநாட்டுச் செலவில் சென்ற நாடுகள் வச்சிரம், மகதம், அவந்தி ஆகிய மூன்றாகும். இவற்றில் ’பகைப்புறத்து மகத’த்தோடு போர் நடந்திருக்கிறது. ’உவந்து கொடுத்த அவந்தி’யோடு போர் நடக்கவில்லை. மகதத்திற்கு மேற்கில் இருந்த வச்சிரம் இறை கொடுத்ததால், போர் நடவாது போயிருக்கலாம். கோசலத்திற்கு வடக்கே இருந்த இமயத்தில்.எங்கு புலிச்சின்னம் பொறித்தான் என்பது கள ஆய்விற்குறியது.

அவந்திக்குப் போகும் வழியிலிருந்த நாடுகள் மொழிபெயர் தேயத்தில் இருந்தவை. அவை பற்றி ஏதும் இங்கு பேசாததால், எந்தவிதமான எதிர்ப்புமின்றி திருமாவளவன் எளிதிற் கடந்திருக்கிறான் என்றே பொருள் கொள்ளலாம். மூவேந்தர் காவலுக்குட்பட்ட மொழி பெயர் தேயம் ஆங்கிலத்தில் சொல்லப் படுவது போல், ஒருவகை buffer states ஆகவே இருந்திருக்கலாம். கீழேயிருக்கும் படத்தில்(32) தக்கண, உத்திரப்பாதைகள் சுட்டிக் காட்டப் படுகின்றன. கரிகாலனின் வடசெலவைப் புரிந்து கொள்ள உதவும் தக்கணப்பாதை இக்கட்டுரையாசிரியனால் படத்தில் படித்தானத்திற்கும் (Paithan) தெற்கில் நீட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.

கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள் என்பவை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தையும், ஒரிசாவையும், சத்திசுகாரையும், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களையும் முழுதும் ஆட்கொள்ளவில்லை. இவ்விடங்கள் எல்லாம் பெருங்காடுகளாய் இருந்தன. காடுகள் குறைந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மராட்டியம் போன்றவை வழியாகத்தான் வடக்கு/தெற்கு வணிகமே நடந்தது.

அன்றைய உத்தர, தக்கணப் பாதைகள் வணிகத்துக்கு மட்டுமல்லாது, அரணம் (army) நகர்வதற்கும், கோட்டைகள் அமைத்துக் காவல் செய்வதற்கும் கூட முகன்மையானவை. இந்தப் பாதைகளைக் கைக்குள் வைத்துக் கொள்ளாத எந்தப் பேரரசும் மிக எளிதில் குலைந்து போயிருக்கும். அதே போல எந்த எதிரியும், இந்தப் பாதைகளைத்தான் முதலில் கைக்கொள்ளத் துடிப்பான். மாதண்ட நாயகர்கள் இந்தப் பாதைகளின் விளிம்புகளில் தான் பேரரசால் பணிக்கு அமர்த்தப் படுவார்கள். இந்தப் பாதைகள் பெருவழிகள் என்று வரலாற்றில் சொல்லப்படும்.



படம் 2: உத்தர, தக்கணப் பாதைகள்

வடமேற்கில் தக்கசீலம் தொடங்கி, (ஜீலம், செனாப், ராவி, சட்லஜ் என்னும்) நான்கு ஆறுகளைக் கடந்து கங்கையையும் கடந்து அத்தினாபுரம் வழி, சாவத்தி, கபிலவாய்த்து, குசினாரா, வேசாலி, பாடலிபட்டணம் வழியாக அரசகம் (முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகம் - Rajgir) வரை வந்து சேரும் பாதையை உத்தர பாதை என்று சொல்லுவார்கள்.

இதே போல, கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானம் (patiththaana> prathisthana; patiththaana> payiththaana> paithan; இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் உள்ளது) தொடங்கி அசந்தா, எல்லோரா வழியாக வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா(Bhilsa) வந்து நேர்வடக்கே திரும்பி தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி என்ற சாகேதம் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேருவது தக்கணப் பாதையாகும். (சாவத்தி கோசலத்தின் தலைநகர் கிட்டத்தட்ட நேபாள எல்லையில் உள்ளது. கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள்.)

உத்தர, தக்கணப் பாதைகள் போக, கங்கையை ஒட்டியே பாடலியில் இருந்து மேற்கே சென்றால் வாரணசி வழி, கோசாம்பி அடையும் பெருவழியும் அந்தக் காலத்தில் முகன்மையான ஒன்றாகும்.

எந்த வடநாட்டுப் படையெடுப்பும் இந்த முப்பெரும் பாதைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நடக்க முடியாது. மேலேயுள்ள படம் -2 இல் காட்டப்பெறும் தக்கண, உத்தரப் பாதைகள் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறுகளை நிருணயித்தவை.

முதற்கரிகாலன் காலத்தில் வடக்கில் இருந்த 16 பெருங்கணப் பதங்களில் (mahajana padas) முகன்மையானவை காசி - கோசலம் (தலைநகர் - சாவத்தி / சாகேதம்), மகதம் (தலைநகர் - இராச கிருகம்), வத்சம் / வச்சிரம் (தலைநகர் - கோசாம்பி), அவந்தி (தலைநகர் - உஞ்சை என்னும் உச்சயினி) ஆகிய நாலு பதங்களாகும். வட இந்திய வரலாற்றின் முதற் பேரரசு காசி-கோசலம். அதன்பின் எழுந்த இரண்டாம் பேரரசு மகதமாகும். கி.மு.546-494 ஆண்டுகளில் மகதத்தை ஆண்ட பிம்பிசாரன் மகதத்தின் முதற் பேரரசனாவான். அவனுக்கு முன்னால் வரலாற்றுக் கால அரசர்கள் யாரும் குறிப்பிடப் படுவதில்லை. இந்த அரசனின் காலத்துக்கு நடுவில் தான், கி.மு.527ல் செயின மதத்தின் 24 ஆவது தீர்த்தங்கரர் மகாவீரர் இறந்ததாகச் சொல்லுவார்கள்(33). [மகாவீரர் நிருவாணநாள் குறித்துக் காலக்குழப்பம் இதுவரை சொன்னதில்லை.]

பிம்பிசாரனுக்கு அடுத்து கி.மு.494-462 இல் மகத்தை ஆண்டவன் பிம்பிசாரன் மகனான அசாதசத்து ஆவான். அவன் தன் மாமன் பெருஞ்சேனாதியின் (Presnejit) கோசலத்தையும், விச்சி (தலைநகர் - வைசாலி) யையும் பிடித்ததால், புத்தர் காலத்திற்குப் (கி.மு.563-483) பின், 3 பெருநாடுகளே மீந்தன. [விச்சியும் வச்சிரமும் வெவ்வேறானவை.] இவற்றிலும் அவந்திக்கும் மகதத்திற்கும் இடையே பெரும் புகைச்சல் இருந்ததாகவே வரலாறு சொல்லுகிறது. இவ்விரு நாடுகளுக்கு நடுவிருந்த வச்சிரம் பெரிதும் வலி குறைந்திருந்தது. கி.மு.462-446 இல் அசாதசத்துவிற்குப் பின் வந்த அவன் மகன் உதயன் காலத்தில், கி.மு.459 இல் பாடலிபுத்ரம் என்னும் தலைநகரம் உருவாகியது.

முதற் கரிகாலனின் வடசெலவு அசாதசத்துவின் கடைசிக் காலத்தில் அல்லது உதயனின் தொடக்க காலத்தில், கி.மு.462 -க்கு அண்மையில், நடந்திருக்கவே பெரிதும் வாய்ப்புண்டு. இதே கருத்தைப் பேரா. க.நெடுஞ்செழியனும் வலியுறுத்தியிருக்கிறார்(34). சிலம்பிற் கூறியுள்ளபடி, இப்படையெடுப்பில் அவந்தியரசன் கரிகாலனோடு சேர்ந்து மகதனை எதிர்த்துப் பொருதி இருக்கிறான். அவந்திக்கு அடுத்திருந்த வச்சிர நாடு போரிடாமலேயே கரிகாலனுக்கு அடங்கிப் போயிருக்கிறது. மகதப் போரின் பின்னால் இமையம் ஏறி கரிகாலன் புலிச்சின்னம் பொறித்திருக்கலாம். [அந்தக் காலத்தில் கோசலத்தைக் கடந்தே இமையம் செல்லவேண்டும். அசாதசத்துவின் காலத்தில் கோசலம் மகதத்தின் ஆளுகைக்கு உட்பட்டு விட்டது. எனவே மகதத்தைத் தோற்கடித்தால் இமையம் செல்வது கடினமானது அல்ல.]

இப்படியாக, அசாதசத்துவின் வழியினரோடு கரிகாலன் முதன்முறை பொருதியதற்குப் பின்னால், நந்தர்(35), மோரியர்(36), சுங்கர், கனகர் (இவர்கள் இருவரின் காலத்துச் செய்தி சிலம்பில் வருகிறது; பின்வரும் பத்திகளில் பேசப் படுகிறது), என அடுத்தடுத்து பகைப்புறத்து மகதத்தோடு தமிழகம் தொடர்ந்து பொருதியிருக்கிறது. இந்தப் போர்களை மகதத்தின் பக்கமுமிருந்து யாரேனும் வரலாற்றாய்வு செய்வது நலம் பயக்கும். அப்படியோர் எதிரி அங்கில்லாது இருந்தால், நமது செவ்விலக்கியம் விளம்பும் தமிழ்வேந்தரின் வடசெலவுகளுக்குப் பொருளில்லை. உண்மை எங்கோ பொதிந்திருக்கிறது. இருந்தாலும் தமிழிலக்கியம் கூறுவதை இந்திய, மேல்நாட்டு வரலாற்றாசிரியர்கள் ஒதுக்கியே தள்ளுகிறார்கள்.

மகத்திற்கும் தமிழ்மூவேந்தருக்கும் இடையே விருப்பு-வெறுப்பு உறவுமுறை [love-hate relationship] நிலவி, ஒரேவிதமாய்ச் சிந்திக்கும் ஈர் எதிராளிகளாய்த் (like minded opposites.) இவர்கள் இருந்திருப்பாரோவென்று எண்ணவேண்டியிருக்கிறது. [இருவரிடத்தும் இருந்த அறிவுச் செறிவு, மெய்யறிவியல் வாக்குவாதங்கள் (பட்டிமண்டபங்கள்), ’பனையோலை’ மரங்கள், இரும்பு, வாணிகம், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நெல்வேளாண்மை, பல்வேறு குமுக அடையாளங்கள், சமகாலத்திய எதிராளித் தன்மையை ஆழ்ந்து உணர்த்துகின்றன.] மேலே சொன்ன பல்வேறு மகத ஆட்சியாளரைக் கவனித்தால், நந்தரோடு தமிழர் சற்றுக் குறைத்துப் போர் புரிந்திருக்கிறார்கள் என்றும், அவந்தி வச்சிரங்களோடு சிலபோதே போர் நடந்திருக்கலாம் என்பதும் புலப்படுகிறது. .

இந்தப் போர்ச் செய்திகள் மட்டுமல்லாது, தமிழர்கள் அடிக்கடி வடக்கே புனித நீராட்டுப் பயணம் கொள்ளும் போக்கைக் குறிக்குமாப் போல, மத்திய தேசத்தில் இருந்த வாரணாசியும் சிலம்பின் அடைக்கலக் காதை 178 ஆம் வரியில் ”மத்திம நன்னாட்டு வாரணம்” என்று பேசப்படுகிறது(37). செங்குட்டுவனின் அன்னை புனித நீராடியதும் வாரணாசியில் இருக்கலாம். கங்கை நீராடல் என்பது தமிழகத்தின் நெடுநாட் பழக்கம் போலும். இன்றுவரை நிலவுகிறது. [காசித் தடங்கண்ணி (விசாலாட்சி) - ஆலமர் செல்வன் (விசுவநாதன்) என்ற தொன்மங்கள் தமிழரிடம் இன்றுவரை பெரிதும் நிலைத்தன. ஆலங்காடு (Ficus Bengalensis) செழித்திருந்த நாடு மகதம் ஆகும்.]

செங்குட்டுவனின் சமகாலப் பங்காளிகள்:

செங்குட்டுவனோடு, அவன் காலத்துப் பங்காளிகளைச் சிலம்பின் மூலமாகவும், மற்ற சங்க நூல்கள் மூலமாகவும், அடையாளம் காணுவது செங்குட்டுவன் பின்புலத்தை மேலுந் தெளிவாக்க உதவும்.

செங்குட்டுவனின் தந்தையைப் பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்துவழியாகவே அறிகிறோம். அவன் இமயம் வரை சென்ற செய்தி மேலும் ஆய்வு செய்யப் படவேண்டியது. ஒருவேளை செங்குட்டுவனின் முதல் வடசெலவும் (அவன் தாய் காசியில் புனித நீராடியது), இமயவரம்பனின் வடசெலவும் ஒன்றாய் இருக்கலாம். தந்தையின் பெயரால் மகன் போரிட்டிருக்கலாம்.

அடுத்தது செங்குட்டுவனின் சிற்றப்பனான பல்யானைச் செல்கெழு குட்டுவன். கட்டுரைக்காதையின் 61-64 ஆம் வரிகள் இவனைக் குறிக்கின்றன(38). இவன் வானுறை கொடுத்த செய்தி பாலைக் கௌதமனாரால் பதிற்றுப்பத்து - 3 ஆம் பத்திலும் உறுதி செய்யப் படுகிறது.

செங்குட்டுவனின் அண்ணன் (பெரிய தாய் மகன்) களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், (நார்முடிச் சேரலின் நேரடித்) தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் பற்றிப் பதிற்றுப் பத்தின் 4, 6 ஆம் பத்துகள் வாயிலாக அறிகிறோம். இளங்கோ என்பவர் சேரனின் தம்பியா என்பது வரந்தரு காதையினாலன்றி வேறெங்கும் நமக்குத் தெரிவதில்லை. [வரத்தருகாதை என்ற ஆக்கம் இளங்கோ பற்றி உண்மையைச் சொல்லியிருக்கலாம். அதேபொழுது, எப்பொழுது வரந்தரு காதையை இளங்கோ எழுதியதன்று என நாம் ஒதுக்கினோமோ, அப்பொழுதே நம்மைப் பொருத்தவரை இளங்கோ என்பவர் சேரனின் தம்பி என்ற கதை பட்டுப் போகிறது. உண்மை ஏதென்று நாம் சொல்லுதற்கில்லை.]

கட்டுரை காதையின் படி (79-84ஆம் வரிகள்), ஐங்குறுநூற்றைத் தொகுப்பிக்க உதவிய (யானைக்கண் சேய்) மாந்தரஞ் சேரல் இரும்பொறை செங்குட்டுவனின் சமகாலத்தவன் ஆகிறான். ஆனால், இவன் கொங்குக் கருவூரில் இல்லாது பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்குப் பிறகு இன்றையப் பொன்னானிக்கருகில் குடநாட்டின் வடக்கிலிருந்த மாந்தரத்தில் ஆட்சி கொண்டிருக்கலாம். யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் குறிக்கப்படுவதன் காரணமாய், முகன்மைச் சங்க இலக்கியத்தொகுப்பு ஏற்பட்டது கூடச் செங்குட்டுவனுக்குச் சற்றுப் பின்னுள்ள காலமாகலாம்.

இளஞ்சேரல் இரும்பொறை பற்றிய செய்தியும் சிலம்பில் வருவதால்(39), அவனுமே செங்குட்டுவன் காலத்தான் ஆகிறான். கொங்குக்கருவூரில் ஆண்ட தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் செங்குட்டுவன் காலத்தில், அன்றி அவனுக்குச் சற்று பின்னால் இருந்திருக்க வாய்ப்புண்டு.

மொத்தத்தில், செங்குட்டுவன் வாழ்நாளில் அவனுக்குச் சமகாலத்திலும், சற்றுமுன்னும் பின்னுமாய், கொங்குச் சேரர் உட்பட, 8, 9 சேரர்கள் இருந்திருக்கிறார்கள். குட வஞ்சி, குட்ட நாடு, கொங்கு வஞ்சி, பூழிநாடு, மாந்தரம், தொண்டி எனப் பல்வேறு இயலுமைகள் சேரரிடை இருந்ததால், இத்தனைபேர் சமகாலத்தில் இருந்திருக்க வழியுண்டு. எல்லாச் சேரரும் யாப்பிற்குத் தகுந்தாற் போல் சேரல், பொறையன், மலையன், வானவன் என்று விதந்து சொல்லப் பட்டிருக்கிறார்கள்(40).

பொதுவாகச் சொன்னால், சங்க கால வரலாறு, குறிப்பாகச் சேரர் வரலாறு, மீண்டும் முறையாக ஒழுங்கு செய்யப் படவேண்டும்.

நாம் சேரர்பற்றி உணரவேண்டிய, இன்னொருசெய்தியும் உண்டு. வேதநெறித் தாக்கம் சேரரிடம், சிறிதுசிறிதாய்க் கூடியது பதிற்றுப்பத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. மற்ற நெறிகளின் பாதிப்பும் வஞ்சியில் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக புத்தநெறித் தாக்கம். அசோகப் பேரரசனின் தாக்கம், சேரர் காலத்துச் சமயப்பழக்கத்தில் மட்டுமின்றி, அரச நடைமுறைகளிலும் இருந்திருக்க வேண்டும்.. சங்கப் பாடல்களிலும், சிலம்பிலும் பலவிடங்களில் வரும் திகிரி என்னும் சொல்லின் பயன்பாடு. வெறும் தேர்க்காலைக் குறிக்காது, அறத்தோடு கூடிய அரச நெறி, அறவாழி என்பதையே குறித்தது, என்று பேரா. க.நெடுஞ்செழியன் சொல்லுவார்(41). இதையும் ஆழ்ந்து ஆயவேண்டும். அற்றைச் சமண நெறிகள் (ஆசீவகம், செயினம், புத்தம் என்ற மூன்றுமே) மகதத்தார் போலவே தமிழரிடை பெரிதும் புழங்கியிருக்க வாய்ப்புண்டு. அவை வேதநெறியோடு போட்டிகொண்ட காலநோக்கில், சங்க இலக்கியம் ஆயப்படவேண்டும்.

“தேவனாம்பிய” என்னும் பெயர் அசோகனுக்கும், அவன் வழியாருக்கும் அன்றி, அவனுக்குச் சற்று பிற்பட்ட இலங்கை அரசன் தீசனுக்கும் உரிய பட்டமாய் வரும். ”சேரருக்கான வானவரம்பன், இமையவரம்பன் ஆகிய பட்டங்கள் அது போன்றதே” என்று ஓர்ந்துரைப்பார் மயிலை.சீனி.வேங்கடசாமியார்(42). [வானவரன்பன்>வானவரம்பன், இமையவரன்பன்>இமையவர் அம்பன் என்று ஏடெழுதுவோரால் திருத்தப் பட்டிருக்கலாம் என்று அவர் சொல்லுவார்]. இதுவும் அசோகனின் தாக்கத்தை நமக்கு உணர்த்துகிறது. அவ்வளவு பெரிய அரசனின் புத்தநெறிப் பரப்பல் தமிழரைப் பாதிக்காது இருந்தல் இயலாது. [இதே போல பல சங்கப் பாடல்கள் ஆசீவக நெறியை உணர்த்துவதாய் பேரா. க.நெடுஞ்செழியன் சொல்லுவார். அதையும் ஒதுக்க முடியாது.]

எடுகோள்கள்:

30. பி.இராமநாதன், “தமிழர் வரலாறு”, ப.88, தமிழ்மண் பதிப்பகம், 2008.
31. இருநில மருங்கில் பொருநரைப் பொறாஅர்
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து தண்ணார்ப் பெறுக இம்
மண்ணக மருங்கில் என் வலிகெழு தோள் எனப்
புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள்
அசைவில் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்
பகை விலக்கியது இப் பயங்கெழு மலையென
இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும்
- இந்திரவிழவூர் எடுத்த காதையின் (89-104)
32. D.D.Kosambi, “The Culture and Civilization of Ancient India in Historical Outline”, pp 136-137, Vikas Publishing House Pvt Ltd., 1994. [within the figure shown here, a tentative extension of the Dakshina Patha upto Vanji is shown by the present author. This is done to aid visualization.]
33. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900)” pp 16-27. Munshiram Maniharlal Publishers Pvt. Ltd, 2005
34. க.நெடுஞ்செழியன், “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, ப.99, பத்ப்பாசிரியர். இரா.சக்குபாய், மனிதம் பதிப்பகம், திருச்சி 620021.
35. அகம்: 265.4, அகம் 251.5
36. அகம்:69.10, 251.12, 281.8, புறம்: 175.6
37. வாருண, அசி என்ற என்பவை கங்கையில் இணையும் ஆறுகளாகும். அவற்றையொட்டியே வாரணவாசி>வாரணாசி என்ற பெயர் தோன்றியது.
38. வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கு எனக்
கட்டுரைக் காதை (61-64)
39. சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
நடுகற் காதை (147-148)
40. காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்
41. க.நெடுஞ்செழியன், “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, ப.104-130, பதிப்பாசிரியர். இரா.சக்குபாய், மனிதம் பதிப்பகம், திருச்சி 620021.
42. மயிலை. சீனி.வேங்கடசாமி, ”சேரன் செங்குட்டுவன்”, ப 93-98, வ.உ.சி.நூலகம், சென்னை 14, 2005

அன்புடன்,
இராம.கி.,