Monday, September 28, 2020

வலசை

வலை-த்தல்>வல-த்தல்  (தன் வினை)= இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வருதல்

வலை-யித்தல்>வல-யித்தல்>வலசி-த்தல் (பிற வினை) =   இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வரும்படி செய்வித்தல்

வலையம்>வலயம் = வளையம், வட்டம்

வலசை= இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வரும் செய்கை. பறவைகள் வான்வழியே வலசை போகின்றன - என்பார், இதுபோலவே சில படகுகளும், கலங்களும், வங்கங்களும் கடல்வழியே வலசை போய்வரலாம். அந்தக்காலத்தில் SS Rajula, MV Chidambaram என்ற கப்பல்கள் சென்னை-நாகை-பினாங்கு- சிங்கை என்று ஒருவழியிலும், திரும்பி சிங்கை- பினாங்கு- நாகை - சென்னை என்று மீள மீள வலசை போய்வந்தன.  இன்றும் பினாங்குத் தீவிற்கும், பட்டர்வொர்த் என்னும் மலேயத் தீவுக்குறையில் உள்ள துறைமுகத்திற்கும் இடையே அரைமணி/ஒருமணிக்கு ஒருமுறை பெரும்படகு ஒன்று போய்வரும். நம்மூரில் குமரிமுனையில், குமரித்துறை- விவேகானந்தர் பாறை = வள்ளுவர் பாறை; மீண்டும் வள்ளுவர் பாறை - விவேகானந்தர் பாறை - குமரித்துறை என்று படகுகள் போய்வரும்.

ferry (v.) = வலயி-த்தல், வலசி-த்தல்

Old English ferian "to carry, convey, bring, transport" (in late Old English, especially over water), from Proto-Germanic *farjan "to ferry" (source also of Old Frisian feria "carry, transport," Old Norse ferja "to pass over, to ferry," Gothic farjan "travel by boat"), from PIE root *per- (2) "to lead, pass over." Related to fare (v.). 

ferry (n.) = வலசை

early 15c., "a passage over a river," from the verb or from Old Norse ferju-, in compounds, "passage across water," ultimately from the same Germanic root as ferry (v.). Meaning "place where boats pass over a body of water" is from mid-15c. The sense "boat or raft to convey passengers and goods short distances across a body of water" (1580s) is a shortening of ferry boat (mid-15c.).

ferry boat = வலசைப் படகு. 

Friday, September 25, 2020

திரை

 திரை (screen) என்பதன் சொற்பிறப்பு பற்றிய  அண்மையில் ஒரு கேள்வி எழுந்தது. ”தெரிதலில் திரை பிறந்ததா?” கிடையாது. அது ”திரைச்சீலை” என்னும் கூட்டுச் சொல்லின் முற்பாதியாகும். நாளாவட்டத்தில் பிற்பகுதியைத் தொகுத்துத் திரை என்பது ஆகுபெயராய் திரைச்சீலைக்கு ஆனது. இதுபோல் பல சொற்கள் தமிழில் ஆகும் ”நல்ல பையன்/மாந்தன்” என்ற சொல்லில், முன் பத்திகளில் பையன்/மாந்தனைப் பற்றிச் சொல்லியிருந்தால் பின்னால் ”நல்லவன்” என்ரு சொன்னாலும் பொருள் புரிந்துபோகும். ஒவ்வொரு முறையும் பையன்/மாந்தன் என்று சொல்லத் தேவையில்லை. அதுபோல் நான்மாடக் கூடல் என்பது மதுரைக்கு ஒரு பெயராகும். பின்னால் நான்மாடத்தைத் தொகுத்துக் கூடல் என்றே சுருங்கச் சொல்வர். இதேபோல் நீர்க்கடல் = நீர்த்தொகுதி (ஐல சமுத்ரம்) என்பதில் நீரைத் தொகுத்துக் கடல் என்றே சொல்கிறோம். அது எப்படி? நீர் என்பது இங்கே உள்ளே மறைந்து நிற்கிறது.. இதுபோன்ற கூட்டுச்சொற்களில் முதற்சொல் மறைகிறதா? இரண்டாம் சொல் மறைகிறதா - என்பது பேச்சு வழக்கைப் பொறுத்தது.

திரைத்தல் = திரக்குதல் = அலைபோல் மடித்துக் கொள்ளுதல். மேடையில் இருக்கும் சீலையை இழுத்துச் சுருக்கும் போது அது திரைத்துக் கொள்ளும் கடல் அலையும் இது போல் மடித்து ஒடுங்குவதால், அலை திரைகிறது. திரங்குகிறது. திரங்கும் அலைகள் உள்ள இடம் திரங்கம் பாடி. திரங்கம்>தரங்கம் = அலை.

நாளாவட்டத்தில் திரை என்ற சொல் பேச்சுவழக்கில் திரைச்சீலையைச் சுருங்கக் குறிக்கத் தொடங்கிவிட்டது. ”பொழுது” என்ற சொல் நேரத்தை எப்படிக் குறிக்கிறது? ஓர்ந்து பாருங்கள். நம்மைச் செலுத்துகிறவன் கடவுள் எனப்பட்டான் கடவுதல் = செலுத்துதல். ஒருகாலத்தில் இது சமயத் தலைவனுக்கும், இறைவனுக்கும் ஆன சொல் , இன்று இறைவனுக்கு மட்டும் ஆனசொல்.  நூற்றுக்கணக்கான சொற்கள் நம் மொழிமரபில் இதுபோல் சுருக்கம் தெரிவிப்பதாய் உள்ளன.  இடமும் மரபும் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்  

Monday, September 21, 2020

நாளும் கூடும் ஆங்கிலத் தாக்கம்

11 ஆண்டுகளுக்கு முன் ஒரு வாரம் (21/2/2008) வெளிவந்த குங்குமம் தாளிகையில் "ஆதலினால்..." என்ற தொடரில் "முகத் திருத்தம்" பற்றிப் பேசவந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மேல்தட்டு முடி திருத்தகத்தில் நடந்த செய்தியைச் சொல்கிறார். அதை இங்கு கீழே கொடுத்திருக்கிறேன்.
-------------------------
வயதானவர், தயக்கத்துடன் "தம்பி சொன்னது புரியலை" என்றார். "இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று அவன் கோபம் அதிகமானது. வயதானவர், தான் நாற்பது வருஷத்துக்கும் மேலாக இதே தொழிலை மானா மதுரையில் செய்து வந்ததாகச் சொன்னார். அவரது குரலை யாரும் மதிக்கவேயில்லை. மாறாக "ஆங்கிலம் தெரியாதவர் ஏன் இந்த வேலைக்கு வருகிறார்?" என்ற கேலியே எழுந்தது.
தனக்குத் தெரிந்த தொழிலை நாற்பது வருடங்களுக்குச் செய்து வந்த ஒரு மனிதன், பிழைக்க வழியின்றி பெருநகரத்துக்கு வந்து, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவமானப் படுத்தப்படும் கொடுமை வேறு எங்காவது நடக்குமா என்று தெரியவில்லை. சவரம் செய்து கொள்ளும் இடத்திலும் ஆங்கிலம் அறியாதவர் வாழ முடியாது என்ற நிலை நம்மிடையே மட்டுமே இருக்கிறது.
மேலாளர் வயதை மறந்து அவரைத் திட்டிக் கொண்டிருந்தான். தலை கவிழ்ந்து நின்ற அவரது தோற்றம் அத்தனை கண்ணாடிகளிலும் பிரதி பலித்தது. ஆள் உயரக் கண்ணாடிகள் இருந்த போதும் எதையும் அந்த மனிதர் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
அவர் தனது வலியை மறைக்கத் தெரியாமல். "இந்த தலைமசிரை நேத்து வரைக்கும் சீவிச் சிங்காரிச்சிட்டு, வெட்டிப்போட்ட மறுநிமிஷம் குப்பைனு தூக்கி எறியுற மாதிரி நம்ம பொழப்பும் ஆகிப்போச்சுல்ல" என்றார். அலங்கார நிலையத்தின் மேலாளர், "இனிமே குப்பை அள்ளுற வேலை தான் உனக்கு, புரியுதா? போயி அந்த வேலையை ஒழுங்காப் பாரு" என்றான். வயதானவர் கோபத்துடன் விடுவிடுவென அந்த இடத்திலிருந்து வெளியேறிப் போனார்.
அந்த மனிதன் அவமதிக்கப்பட்ட வலி ஆறாமலே இருக்கிறது. இவரைப் போல மாநகரில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சொல்லும் ஆட்டோ ஓட்டுநர், ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒவ்வொரு நாளும் அவமானப் படுத்தப் படுகிறார். அடுக்குமாடிக் குடியிருப்பின் துணி தேய்க்கிறவன், ஆங்கிலம் பேசத் தெரியாத காரணத்தால் முட்டாள் ஆக்கப்படுகிறான். லண்டனில் கூட இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் தமிழில் உரையாடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் நேர் எதிரான சூழலே உள்ளது.
------------------------------------
இனி நாம் சற்று அவதானிக்கலாம் வாருங்கள்.
மேலே கூறும் "அவமதிக்கப் பட்ட வலிகள்" இன்று நேற்றா ஏற்பட்டன? ஒரு 25, 30 ஆண்டுகளாய் நடந்து கொண்டு தானே இருக்கின்றன? (நாடு விடுதலை பெற்றவுடனேயே கூட இந்த அவமதிப்புத் தொடங்கி விட்டது என்று சொல்லலாம்.)
"இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று கோபப் பட்ட இளைஞரைப் போன்றோர் இன்று இலக்கக் கணக்கில் இருக்கிறார். அவரைத்தான் தமிங்கிலர் என்று சொல்கிறோம். அவர்தான் இன்று பல இடங்களிலும் முகன்மையான ஆட்களாய் இருக்கிறார். அவர் சொல்லும் பொள்ளிகைகளைத் (policies) தலைமேல் எடுத்துக் கொண்டு நடத்தும் அடியாட்களாக, இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் இருக்கிறார். கூர்ந்து நோக்கினால், தமிங்கிலர் தமிழரை ஆண்டு கொண்டு இருக்கிறார்.
தமிங்கிலர் உருவான கதை ஒரு தனிக்கதை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது, எழுபதுகளில் பல நாளிதழ்களில், தாளிகைகளில், கதைகளில், தமிழ்த் திரைப்படங்களில், ஒரு ஏக்கம் தொடர்ச்சியாய் வெளிப்பட்டு வந்தது. காட்டாக, தமிழ்த் திரைப்படங்களில், கதைநாயகி என்பவள் ஆங்கிலப் பள்ளி (convent)யிலிருந்து படித்தவளாயும், கதைநாயகன் ஆங்கிலம் தெரியாத, வெகுளியானதொரு பட்டிக்காட்டானாகவும் உருவகிக்கப் பட்டு, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவனைக் கேலி செய்கிற காட்சியையும் காட்டி, அதற்குப் பின், எப்படியோ ஆங்கிலத்தில் தேறி, வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்து, விளையனிடம் (villain) இருந்து கதைநாயகியைக் காப்பாற்றி, அவளையே அடைவதாகக் கதை நகரும். பார்க்கும் பலருக்கும் வாழ்விற் செய்யவேண்டியது என்று சில அடிப்படைக் கருத்துக்கள் ஊசியேற்றுவது போல் உறுத்தப்படும். அதில் ஒன்று "ஆங்கிலம் தெரிந்தால் தான் வாழ்க்கையிற் கடைத்தேறலாம்" என்ற ஏக்கமும் ஆகும். இந்த ஏக்கத்தை இன்று நேற்றல்ல; ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளாகவே தமிழ் மக்களிடையே உருவேற்றியிருக்கிறார். இந்த ஏக்கத்தின் விளைவு தமிழரில் மேல்வருக்கத்தார் தமிங்கிலராய் மாறிக் கொண்டு வருகிறார்.
அந்த ஏக்கத்தின் வடிகாலாய், சென்னை போன்ற பெருநகரங்களில், ஒன்றிரண்டு ஆங்கிலோ இந்தியர் பள்ளிகளும், மிகமிகக் குறைந்த வகையில் தென்னிந்தியக் கிறித்தவ சபையினர் (Church of South India) பள்ளிகளும், மற்றும் ஏசு குமுகத்தினரின் (Society of Jesus) கத்தோலிக்கப் பள்ளிகளுமாய் ஆங்கிலப் பள்ளிகள் அமைந்திருந்தன. வணிக நோக்கில் நடத்தப்பெறும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் அப்போது கிடையா. பொதுவாய் பழைய, புதிய பணக்காரர் தம் பிள்ளைகளை இம்மடலாயப் பள்ளிப் (convent school) படிப்புக்கு அனுப்பி வைத்து அந்தக் காலத்தில் ஊருக்குள் பெருமை கொண்டார்.
பின்னால், மேட்டுக்குடியைப் பின்பற்றி அப்படியே ஈயடிச்சான் படி(copy) யெடுக்கும் உயர் நடுத்தர வருக்கமும், அதையடுத்து நடுத்தர வருக்கமும், இன்னும் கீழே உள்ளவரும் எனக் கொஞ்சம் கொஞ்சமாய் கூம்பின் உச்சியில் இருந்து ஆர்வம் கீழாய்ப் பெருகி, பொல்லாத ஏக்கம் கொண்டு, ஆங்கிலப் பள்ளிப் படிப்பிற்கு மாற முற்பட்டனர். கூடிப் போன இந்த ஏக்கத்தை நிறைவு செய்யுமாப் போல மடிக்குழைப் பள்ளிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒருசிலர் வளர்த்தனர். ஒரு கட்டத்தில், இந்தக் கூடுதற் தேவையை ஈடு செய்ய மடலாயப் பள்ளிகளால் முடியவில்லை.
இப் பள்ளிகளில் இருந்து வெளிவந்த ஒரு சிலர், தனியார் பள்ளிகளாய், "மடலாயப் பள்ளிகள் போலவே தாங்களும் நடத்த முடியும்" என்ற முன் மொழிவில், மடிக்குழைப் பள்ளிகளைத் தொடங்கினர். அந்நிலையில் தான், பள்ளி தொடங்குவதற்கு அனுமதி வழங்கும் போது இடையாளராய் இருந்து ஏகப்பட்ட பணம் பண்ண முடியும் என்று யாரோ சில சூழ்க்குமதாரிகள் சொல்லிக் கொடுக்க, அதைத் தாரக மந்திரமாய் எடுத்துக் கொண்டு, 2 கழகத்தாரும் அவரின் அமைச்சர்களும் ஒன்றிற்கு ஒன்று போட்டியாய், அடுத்தடுத்து தங்கள் ஆட்சியில் காசுக்கு அனுமதி வழங்கினார். இதன் விளைவாய், "சடசட"வென, "படபட"வெனப் புற்றீசலாய், மடக்கை (exponential) வேகத்தில், பணம் ஒன்றே குறியாய், தேவையை நிறைவு செய்யும் அளிப்பாக மடிக்குழைப் பள்ளிகள் பெருகின. மாநிலத்தின் கல்வித்துறை, கையூட்டு மல்கிய துறையாக, மாற்றம் பெற்றது. தலையில் இருந்து கால்வரை பணம் ஏராளமாய்ப் புரண்டது. மேடையில் முழங்குவது மட்டும் தமிழாகவும், அன்றாட நடைமுறையில் புரந்தருவது ஆங்கிலம் ஆகவும் கல்வி வணிகர்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரிகள் ஆகியோரின் கூட்டுறவில் ஆகிப் போனது. தமிழக அவலத்தின் ஊற்றுக்கண் மடிக்குழைப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் தான் இருந்தது.
இவ்வேகம் ஓர் அசுர வேகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் அரசு வாரியம் வழிநடத்திய தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 99 விழுக்காடு தமிழகத்தில் இருந்தன. தவிர, அப்போது ஆட்சியில் இருந்த பேராயக் கட்சியும் பெரிதும் விடுதலை உணர்வால் உந்தப்பட்டுத் தமிழை முன்னெடுத்துச் செல்லுவதாய்த் தான் செயற்பட்டு வந்தது. அதனால் 67 தொடங்கும் வரை, இன்னுஞ் சொன்னால், எழுபதுகளின் முடிவுவரை கூட நிலை ஒன்றும் பெரிதாய் மாறவில்லை; மாநிலமெங்கும் 80 மடிக்குழைப் பள்ளிகளே இருந்தன. இன்றோ, மாநிலமெங்கும் 6500க்கும் மேற்பட்ட மடிக்குழைப் பள்ளிகள் இருக்கின்றன. தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 50 மேனி இருக்குமா என்பது கேள்விக் குறியே! (அதோடு, இன்றைக்கு மடிக்குழைப் பள்ளி நடத்துவோரின் கூட்டமைப்பு பணமும் வலியும் கொண்ட அமைப்பாக, வழக்குமன்றம், சட்டப் பேரவை போன்றவற்றை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இவரைச் சாய்க்காமல், ஒரு மண்ணும் தமிழகத்தில் செய்யமுடியாது; தமிங்கிலரைத் தொடர்ந்து உருவாக்குவதே இவரின் பணி.)
தமிழ் மாநிலத்தில் தமிழில் படிப்பது தொலைந்தது மட்டுமல்லாமல், தமிழே படிக்காமல் (அதாவது மொழியாய்க் கூடப் படிக்காமல்) பிரஞ்சு, சங்கதம் என்று வெறும் மதிப்பெண்ணிற்காகப் மட்டுமே படிக்கும் தற்குறிகளாய் மாறிப் போன தமிழ் இளைஞர் 20, 30 இலக்கத்தை நெருங்குவர். தம் வீட்டு வேலைக்காரர், தம் அடுக்குவீட்டுக்கு அருகில் உள்ள துணிதேய்ப்பவர், தம்மைப் பள்ளிக்கு இட்டுச் செல்லும் தானி ஓட்டுநர், எனத் தாழ்நிலை வேலையாளருடன் பேசுவதற்கு மட்டுமே தமிழைப் பயன்படுத்தும் இவர் தமிங்கிலராய் ஆகாமல் வேறு எப்படி ஆவர்? மேலே முடிதிருத்தகத்தில் கோவப் பட்ட இளைஞரும் இத்தமிங்கிலரில் ஓர் உறுப்பினர் தான்.
பணம் சம்பாரிப்பதற்காக தமிழ்நாட்டுக் கல்விப் பொள்ளிகையைக் காற்றில் பறக்கவிட்ட கழக அரசுகளே தமிங்கிலரை உருவாக்கியதில் பெருங் காரணம் என்பதை வேதனையோடு சொல்ல வேண்டியிருக்கிறது. (இளமையில் 67- ல் கழக அரசு ஏற்பட வேண்டும் என்று பெரிதும் பாடுபட்ட என்னைப் போன்றவர் மனம் வெதும்பி இப்பொழுது நிற்க வேண்டி யிருக்கிறது. உண்மையான திராவிடக் கொள்கையில் ஒரு பிடிப்பு இருந்திருக்குமானால், இப்படி இவர் சோரம் போவாரா?)
இன்னொரு சிந்தனையும் எழுகிறது. அந்த முடிதிருத்தகத்தில் நடந்தது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் தமிழ்நாடெங்கணும் நடக்கின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை நிறுத்த முயற்சிகள் செய்திருக்கிறோம்? கூடிவரும் ஆங்கிலத் தாக்கத்தை அப்படியே அடிமையாய் ஏற்றுக் கொள்ளுவதைத் தவிர, அதனால் விளையும் தமிங்கில நோய் எங்கணும் பரவ நாம் தரும் பங்களிப்பையும் தவிர, நம்மைப் போன்றோர் என்ன செய்துள்ளோம்?
வெள்ளைக்காரன் ஆண்டிருந்த காலத்தில் மகிழ் குழும்புகளின் (ஜிம்கானா, காசுமாபாலிடன் போன்றவை) நுழைவாயிலில் "Indians and dogs are not allowed" என்று எழுதிப் போட்டிருந்ததாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்நிலை மீண்டும் இப்பொழுது வருகிறது அல்லவா? "Tamils and dogs are not allowed" என்று அந்த முடிதிருத்துக் கடையில் நேரடியாய் எழுதிப்போடவில்லை தான்; ஆனாலும் நடைமுறையில் அதுதானே இருக்கிறது?
இன்றையத் தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாகச் சென்னை போன்ற பெரு நகரங்களில், எந்தவொரு அலுவத்திலும் (அது தனியாராய் இருந்தாலும் சரி, அரசினராய் இருந்தாலும் சரி) தமிழில் கேள்வி கேட்டால், நம்மைத் தள்ளித் தான் வைக்கிறார். ஆங்கிலத்தில் கேட்டால் ஏதோ ஒரு மறுமொழி, இணங்கியோ, இணங்காமலோ கிடைக்கிறது. இதே போல சென்னை அடையாற்றில் உள்ள ஒரு மடிக்குழைப் பள்ளியில் ஒருமுறையும், மதுரையில் ஒரு பள்ளிக்கூடத்திலும் தமிழில் தங்களுக்குள் உரையாடிக் கொண்ட சிறுவர் தண்டனை பெறத் தான் செய்தனர். அங்கும் "Tamils and dogs are not allowed" என்பது தானே நடைமுறைப் பொள்ளிகையாய் (policy) இருந்திருக்கிறது? அப்புறம் என்ன, வேண்டிப் பெற்ற விடுதலை? "சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்?"என்ற மன்றாட்டு?
நன்றாக நினைவுக்கு வருகிறது நான் பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் (1965 - 70) விடுதிகளுக்கு வரும் நாட்டுப்புற மாணவர்களில் பலர், தமிழ்மட்டுமே தெரிந்த தம் பெற்றோரை மற்றோரிடம் அறிமுகம் செய்ய வெட்கப்பட்டு ஒதுக்கித் தள்ளிய பழக்கம் இன்றளவும் மாற வில்லையே?
ஒரு காலத்தில் ஐயா என்று மரியாதையுடன் அழைக்கப் பட்ட தமிழாசிரியர் இன்றைக்கு தாளிகை, திரைப்படம், தொலைக் காட்சி எல்லாவற்றிலும் கேலிக்கு ஆளாகும் மாந்தராகத்தானே காட்டப் படுகிறார்? தமிழாசிரியர் கேலிக்குரிய மாந்தரானால், அப்புறம் தமிழும் கேலிப்பொருளாய் மாணவரிடையே ஆகிவிடாதோ?
விடுதலைக்கு முன்னால் வெள்ளைக்காரத் துரைக்கு எழுத்தராய் (clerk) தமிழர் வேலை செய்தது போல, தேயிலையைத் தவிர வேறு எதுவும் பெரிதாய் விளைவிக்காமல், வாழ்க்கைத் தேவையான பலவற்றையும் இறக்குமதி செய்துகொண்டு, அதற்கு ஏந்தாக ஏராளமான எழுத்தர்கள், அரசதிகாரிகள், இலடண்டனுக்கான முகவர்கள் எனப் பழகிய குடியேற்ற காலத்து இலங்கைத் தீவுப் பொருளாதாரம் போல, எங்கோ இருக்கிற புத்தாக்கத்திற்கு, இங்கிருந்து சேவைசெய்யும் பொதினச் செலுத்த வெளியூற்று (business process outsourcing) புற்றீசல் போலத் தமிழகத்தில் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் "எந்தத் தொழில் துறை அறிவும் தேவையில்லை, வெறுமே ஆங்கில பேசத்தெரிந்தால் போதும், நீங்கள் கூலி எழுத்தராய் ஆகிச் சம்பாரிக்கலாம்" என்று ஆசைகாட்டி, நுனிநாக்கு ஆங்கிலம் பேச வைக்கும் அளவுக்கு உள்ளூர் மனவியலை மாற்றியதை என்ன சொல்லுவது?
ஆங்கிலத் தாக்கத்துக்குக் கொடிபிடிக்கும் தமிங்கிலகம் என்ற நாட்டிற்குக் கீழ் தமிழகம் என்ற நிலம் குடியேற்ற நாடாகத் தானே இருக்கிறது? வெள்ளைக்காரன் காலத்தில் நாடு அடிமைப் பட்டிருந்ததற்கு என்னென்ன அடையாளங்கள் இருந்தனவோ, அவை அத்தனையும் மீண்டும் வந்தாயிற்று அல்லவா? என்ன, இந்த முறை தமிழரை ஆள்பவர், தமிழரே போலும் இருக்கிறார். அதன் காரணமாகவே, அவர் ஆட்சி இன்னும் முற்றாளுமையோடு இருக்கிறது. "மக்களே போல்வர் கயவர்" என்றார் வள்ளுவர். தமிங்கிலருக்கும் தமிழருக்கும் வேறுபாடு தெரியாத வகையில் பல இடத்தும் நாம் தடுமாறுகிறோம்.
"தமிழில் தலைப்பு வையுங்கள்; கேளிக்கை வரி விலக்குத் தருகிறோம்" என்ற அளவுக்கு ஓர் அரசு போகுமானால், இங்கே ஆங்கில, தமிங்கிலத் தாக்கங்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?
"தமிழில் பேசு; தங்கக் காசு தருகிறோம்" என்று ஒரு தொலைக்காட்சியினர் சொல்லும் அளவுக்குத் தமிங்கிலம் இங்கு இயல்பாகிப் போனதே? அந்தத் தொலைக்காட்சி தவிர மற்றெல்லாத் தொலைக் காட்சி, பருவெண் மட்டுழைத்த (frequency modulated) வானொலி நிலையங்கள் என எல்லாவற்றிலும் தமிங்கிலம் தடையின்றிப் புழங்குகிறதே?
இதற்கிடையில் முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்கும் வகையில் 12/06/2006ல் கொண்டுவரப்பட்ட தமிழகச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட (petition) ஆகஸ்டு 23ம் தேதி உயர்நய மன்றம் கூறிய தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நயமன்றம் தள்ளிவைத்தது.
முதல்வர் பெருமைப் பட்டுக் கொள்ளுகிறார். முன்னே 20 ஆண்டுகள் இரு கழக ஆட்சியில் கல்வியில் நடந்த அவலங்களை அவர் எண்ணிப் பார்ப்பாரோ?
தமிங்கிலம் என்று சொன்னவுடன், தேனிசைச் செல்லப்பா பாடிய இன்னொரு பாடலின் தொடுப்பு நினைவிற்கு வருகிறது.
வணக்கம் என்று சொன்னால் வாய் நோகுமோ? - நல்
இணக்கம் தருதமிழில் இருகை கூப்பிநின்று (வணக்கம்)
- தேனிசைச் செல்லப்பாவின் பாடல் வரிகள்.
அன்புடன்,
இராம.கி.

Advance

 ஆங்கிலத்தில் advance (v.) என்பதற்கு,

mid-13c., avauncen (transitive), "improve (something), further the development of," from Old French avancir, avancier "move forward, go forward, set forward" (12c., Modern French avancer), from Vulgar Latin *abanteare (source of Italian avanzare, Spanish avanzar), from Late Latin abante "from before," composed of ab "from" (see ab-) + ante "before, in front of, against" (from PIE root *ant- "front, forehead"). Compare avant.

The unetymological -d- was inserted 16c. on mistaken notion that initial syllable was from Latin ad-. From c. 1300 as "to promote, raise to a higher rank." Intransitive sense "move forward, move further in front" is mid-14c.; transitive sense "bring forward in place, move (something) forward" is from c. 1500. Meaning "to give (money, etc.) before it is legally due" is first attested 1670s. Related: Advanced; advancing. The adjective (in advance warning, etc.) is recorded from 1843.

என்று பொருள்சொல்லி விளக்குவார். தமிழில் ஆகுதல் என்பது gets done என்ற பொருள் கொள்ளும். க, ய, வ ஆகிய மூன்றும் ஒன்றிற்கொன்று போலிகளாகி ஆகுதல் என்பது ஆயுதல், ஆவுதல் என்றும் பேச்சுவழக்கில் திரியும். இன்னுந் திரிந்து ஆதல்/ஆனல் என்றுஞ் சொல்வோம். ஆயுதலை/ஆதலை முன்தள்ளுவது ஆய்+உத்தம்= ஆயுத்தம் ஆகும். (உந்துதல்>உத்துதல்>உத்தம்= முன்தள்ளல் உச்சகாரம் என்பது முன்னிலைக்கான தமிழ்ச்சுட்டு. உந்துதலை உங்குதல் என்றுஞ் சொல்லலாம். ஆது+உங்கு = ஆதுவுங்கு என்று வகர உடம்படுமெய் சேர்த்து இந்தையிரோப்பியம் போகும். இதிலும் தமிழிய, இந்தையிரோப்பியத் தொடர்பு தெரிகிறது. சொன்னால் கேட்பதற்குத் தான் ஆட்கள் அணியமாய் இல்லை. உன்மத்தமாய் ”தமிழ்த்தொடர்பு” எதையும் மறுத்துவிடுவார். அந்த அளவிற்கு ஒரு மனப்பான்மை ஊறிக்கிடக்கிறது. என்ன சொல்ல?) 

ஆயுத்தம் என்பது தமிழில் முன்னேற்பாட்டைக் குறிக்கும். ”என்னப்பா, ஆயுத்தமாகிட்டீங்களா?”, ”எல்லா ஆயுத்தமும் செய்யுங்க”, ”அவன் ஆயுத்தி இருந்தான்” ஆயுத்த கருமம் என்பது ஒன்று முடிவதற்கான முன்னேற்பாட்டுவேலை. இது ஆயுத்தகாரம் எனப்படும். ஆயுத்தகாரம்>அயுத்தகாரம்>அயுச்சகாரம்>அச்சகாரம்>அச்சாரம் எனப் பேச்சுவழக்கில் இன்னுந்திரியும். ”என்னப்பா, இப்பவே அச்சாரம் போடுறியே? கொஞ்சம் பொறுப்பா!” என்பதும் பேச்சுநடைமுறை தான். ஆனால் காரம்போட்டு நீட்டவேண்டாம் ஆயுத்தென்றாலே அச்சகார> அச்சாரப் பொருள் வந்துவிடும். ஆயுத்து என்பது முன்னேற்பாடுகளோடு சேர்ந்துவரும் நிதி, பணம் போன்றவற்றையும் குறிக்கலாம். loan advance, finance advance, journey advance போன்ற பலவிடங்களில் முதற்சொல் தொக்கிநின்று, வெறுமே advance  என்று பலரும் புழங்குவார். இடம், பொருள், ஏவல் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். இதுபோன்ற பல இடங்களில் ஆயுத்து என்பது advance க்குச் சரியாகவே இருக்கும்.

consortium advance = சேர்த்திய ஆயுத்து

அன்புடன்,

இராம.கி.

Friday, September 18, 2020

Fashion, trend, Vogue, Style, Costume, outfit, makeover, Boutique

 

Kavignar Thamarai தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் “
Fashion, trend, Vogue, Style, Costume, outfit, makeover, Boutique போன்றவற்றுக்கான தமிழ்ச் சொற்கள் தர முடியுமா ?.

மோஸ்தர் என்பது சமக்கிருதமா ? அல்லது தமிழ் வேர்ச்சொல் உண்டா ?” என்று கேட்டிருந்தார். அவருக்க்கு நான் கொடுத்த மறுமொழி: 

Fashion: பட்டவம், படியம், ஒயில் என்று 3 சொற்களை இதற்கு ஈடாய்ப் பயனுறுத்தியுள்ளேன். கொஞ்சம் அலங்காரம் வேண்டுமென்றால் ஒயிலே சரிவரும். இல்லை யெனில் பட்டவமே சரி. அதையே பெரிதும் பயன்படுத்தியுள்ளேன்.

Trend = போக்கு, பெரிதும் சரிவரும்
Vogue = வழமை. ஈழத்தவர் பெரிதும் பயன் படுத்துவார். நாம் வழக்கம் பயன் படுத்துவோம்,
Costume = கட்டாடை. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்குத் தக்கக் கட்டும் ஆடை இது.
Make-up: ஒப்பனை make-over: (ஒரு பாத்திரத்திற்குத் தக்க மாற்றிக் கொள்வதால், இது) மாற்றனை
Boutique:பூட்டிகை. பல்வேறு அழகு, ஒப்பனை ஏந்துகளை நாம் பூணிக் கொள்கிறோம். அதாவது பூட்டிக் கொள்கிறோம். அது பூச்சாகலாம், பூணாகலாம், பொருந்தாகலாம். பொதுவாய்ப் பூட்டிகை எனலாம்.

மோஸ்தர் என்பது mauzūn என்னும் அரபிச் சொல்லில் எழுந்தது. 

அன்புடன்,
இராம.கி,

Saturday, September 12, 2020

Buoy

ஒரு நண்பர் ஒருவர் தனிமடலில் ”Buoy” என்ற சொல்லுக்கான தமிழ்ச்சொல் கேட்டிருந்தார். ”மிதவை எனும் சொல் தனக்குச் சரியாய்ப் படவில்லை” என்றும் சொல்லியிருந்தார். கூடவே, “சுடர் மிதவை எனலாமா?” என்றும் கேட்டிருந்தார். என் பார்வையைக் கீழே சொல்கிறேன்.

தென்பாண்டிக் கடற்கரைக்கு அருகில், முத்துக்கள் கிளிஞ்சல்களுக்காக முக்குளிக்கும் போது, மீண்டும் மீண்டும் இறங்கும் கடலடி இடங்களை நீர்மட்டத்தில் அடையாளங் காட்டும் தேவை இயல்பாக எழுந்தது. எனவே இதற்குத் துணையாக ஒரு வேலையைச் செய்தார். முதல்நாள் முத்துக் குளித்த இடத்தில், ஒரு கல்லை இறக்கி (இதுபோன்ற நங்கூரக் கற்களை இராமேசுரத்தில் கடலடித் தொல்லாய்வர் கண்டுபிடித்தார். கல் நங்கூரங்கள் தென்பாண்டிக் கடற்கரை நெடுகிலும் உண்டு.), அக்கல்லோடு ஒரு கயிறைக் கட்டி, கயிற்றின் இன்னொரு முனையில் ஒரு கிண்ணத்தை முடிந்து வைத்து இறக்குவார். கயிற்றின் நீளம் கடலின் ஆழம்பொறுத்து வேறுபடும். கல் கடலடித் தரையிலும், கிண்ணம் கடல்நீர்ப் பரப்பின் மேலும் இருக்கும். 

கிண்ணம் கல்லிருக்கும் இடத்திற்கு நேர்மேல் மிகவும் அலைபாயாது மிதந்து (மீ>மீது>மித) நிற்கும். பகல் நேரங்களில் கிண்ணத்தை அடையாளங் காண்பது சரவலில்லை. மாறாய், கருக்கல் நேரங்களிலும், மூட்ட நேரங்களிலும் இது கடினம். எனவே கிண்ணத்தினுள் ஒரு விளக்கும் வைப்பதுண்டு. அடுத்த நாள் முத்துக்குளிக்க வரும் வரை விளக்கு எரியும்படி மீன் கொழுப்பு கிண்ணத்தில் வைக்கப் பட்டிருக்கும்  கலங்கரை விளக்கம் (=கலத்தை அழைக்கும் விளக்கம்) போல், மிதக்கும் விளக்கங்களை ”இடங்கரை விளக்கம், முக்குளி விளக்கம் அல்லது ஆழிட விளக்கம்” என்று சொன்னால் விளங்கிவிடும். கீழுள்ள ஆங்கிலப் பெயரிடலையும் கவனியுங்கள்.

buoy (n.) "float fixed in a place to indicate the position of objects underwater or to mark a channel," late 13c., boie, probably from Old French buie or Middle Dutch boeye, both of which likely are from Proto-Germanic *baukna- "beacon, signal" (see beacon). OED and Century Dictionary, however, suggest it is from Middle Dutch boeie or Old French boie "fetter, chain" (see boy), "because of its being fettered to a spot."

beacon (n.) Old English beacen "sign, portent, lighthouse," from West Germanic *baukna "beacon, signal" (source also of Old Frisian baken, Old Saxon bokan, Old High German bouhhan); probably from Proto-Germanic *baukna- "beacon, signal," from suffixed form of PIE root *bha- (1) "to shine." Figurative use from c. 1600.

மேலேயுள்ள வரையறைகளைப் படித்தால், “கிண்ணம் நீரில் மிதப்பது விதப்பல்ல. கிண்ணத்துள் விளக்கமிருப்பதே விதப்பு” என்பது புரியும். இன்று கொழுப்பு விளக்கங்களுக்கு  மாறாய், மின்கல விளக்கங்களை ஏற்றுவார். ஒரு துறைமுகத்தில் கப்பல் அணைவதற்கான பாதை இதுபோன்ற விளக்கங்களால் அடையாளங் காட்டப்படும். (பறனை நிலையங்களில் ஓடுபாதை காட்டப்படுவது போல் இது அமையும்.) என்னைக் கேட்டால் buoy என்பதற்கு ”விளக்கமே” போதும்.  மிதத்தலைச்  சொல்லத் தான் வேண்டுமென எண்ணினால் ”மீதவிளக்கம்” எனலாம்.  


Wednesday, September 09, 2020

கபிலரும் சாங்கியமும் - 5

புறநானூற்றில் ஈசனிலாச் சாங்கியம் பார்த்த நாம் அடுத்துப் பரிபாடலில் பேசப்படும் ஈசானச் சாங்கியத்தைக் காண்போமா? (கவனங் கொள்க. பரிபாடலின் காலம் பொ.உ.மு.50. விண்ணன் தாயன் பாடலுக்கு ஒரு தலை முறை அடுத்தது.) ஈசான சாங்கியத்தின் வழி திருமாலைக் குறித்த பரிபாடல் 3, 77-80 ஆம் அடிகள் வெளியிடும் அழகு வியக்கவைகிறது. எண்களின் வழியே சாங்கியம் படிக்கும் போது நம்மை அசத்துகிறது. இன்னொன்று சொல்ல வேண்டுமே? zero விற்காகத் தமிழில் வெளிவந்த முதற்சொல்லாய் ”பாழ்” இதில் பயில்கிறது. பூழ்> போழ்> பாழ் என இச்சொல் எழுந்தது. பூழியத்தை இற்றைத் தமிழர் பூஜ்யம் என்கிறார். சங்கதம் பழகுதற்கு மாறாய், பூழ்/பூழியம், சுழி./சுழியம், அற்றம் என ஏதோவொரு தமிழ்ச் சொல்லைத் தமிழர் பழகலாம். தமிழ்ச்சொல் வாய்க்குள் நுழையக் கடினமாகவா இருக்கிறது? சுழி/சுழியத்தின் வட திரிவான சூன்யத்தை ஏன் பயில்கிறோம் என்றும் எனக்குப் புரியவில்லை

பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,

இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,

ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,

நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை” [– பரிபாடல், 3:77-80]

இதன் பொருளை உரையாசிரியர் பரிமேலழகரைப் பின்பற்றி நம் சொற்களில் சொல்லலாம்.  ‘பாழ்’ எனும் ஆகுபெயர் மூலவியற்கையையும், ’கால் ’எனும் ஆகுபெயர் காயம், காற்று, தீ, நீர், நிலன் எனும் ஐம்பூதங்களையும், ’பாகு ’ கருமத் தொழிலால் பாகுபடும் ’வாக்கு, பாதம், கை, எருவாய், கருவாய்” எனும் கரும எந்திரங்களையும், ‘ஒன்று ’தொடங்கி ’ஐந்து ’ வரை, ’ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய 5 தன்மாத்திரைகளையும், ’ஆறு’ என்பது  ’கண், நா, செவி, மூக்கு, தோல்’ எனும் ஐம்புலன்களையும் (ஞான எந்திரங்களையும்) ஆறாவதாய் மனத்தையும், ‘ஏழு’ மூளையில் எழும் அகந்தையையும், ‘எட்டு’ எண்ணும் மானையும், ‘தொண்டு ’ தொள்ளும் ஆதனையும் குறிக்குமென்பார்.  (மனம், அகந்தை, மான் எனும் மூன்றின் இருப்பிடம் மூளை) இவ்விவரிப்பின் கீழ் நால்வகை ஊழியில் எண்ணியதை நவிற்றும் சிறப்புக் கொண்டவன் திருமால் என்றும் சொல்லப்படும்.  

5 ஊழிகளையும், அவற்றின் நடப்புக் காலங்களையும் சொல்லி இப்பேரண்டப் பிறப்பை பரிபாடல் 2, 1-15 ஆம் அடிகள் விவரிக்கும். இதுபோலும் வியத்தகு கூற்றைச் சங்கத இலக்கியங்களில் காண்பது அரிது. இற்றை அறிவியலோடு பெரிதாய்ப் பொருந்தும்.  

தொல்முறை இயற்கையின் மதியொ.  

----------------------- மரபிற்று ஆக

பசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட

விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்

கருவளர் வானத்து இசையின் தோன்றி    5

 

உருஅறி வாரா ஒன்றன் ஊழியும்

உந்துவழி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்

செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும், அவையிற்று

உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு       10


மீண்டும் பீடுயர்பு ஈண்டி அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்

நெய்தலும், குவளையும், ஆம்பலும். சங்கமும்

மைஇல் கமலமும் வெள்ளமும் நுதலிய

செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை

என்பவை அவ்வடிகளாகும். தொன்முறையில் இயங்கிய திங்கள் மண்டிலமும் , ஞாயிற்று மண்டிலமும் தத்தம் மரபினின்று விலகி, விண்மீன்களும் கோள்களும் சிதறிப் பாழ்பட, அப்படிப் பாழுற்றவை ஊழிக்காலத்திற்கும் விரியும் விசும்பில்  தோய்ந்து விலகிச்செல்ல, பின் ஏதோவொரு கட்டியத்தால் நடக்கும் விரிவு நின்றுபோய்ச் சுருங்கிக் கருவாகி வளருமாம். ( குறிப்பிட்ட அளவுக்குப் பேரண்டம் விரிந்து மீளச் சுருங்குவதை பெருஞ்சுருக்கு/ பெரு வெடிப்பு (big crunch/ big bang)> விரிவு> மாற்றம் > சுருக்கு> பெருஞ் சுருக்கு/ பெரு வெடிப்பு (big crumch/ big bang) எனும் தொடர்செலுத்தமாய் (continous process) விவரிக்கலாம்.). பெருவெடிப்பின் போது பேரோசையும் தோன்றுமாம். தமிழில் விசும்போடு ஓசை தொடர்புடையது என்றே சொல்வர். பெருவெடிப்பில் மிஞ்சிய cosmic murmur ஐ இன்றும் கூடக் கேட்கலாமென இற்றை அறிவியல் சொல்லும். பாட்டின் முதலைந்து வரிகளில் இப் புரிதல் கிட்டுகிறது. 

பெருவெடிப்பிற்கு அப்புறமான முதலூழியில்  எவ்வுருக்களும், விண்மீன்களும், கோள்களும் உருவாவதில்லை. இக்காலத்தில் முன்னி (proton),மின்னி (electron).நொதுமி (neutron) போன்ற அணுவிலும் கீழான துகள்களே உருவாகின்றன. (பாவின் 6 ஆம் அடி) இது நெய்தல் காலம் நடக்குமாம் (13 ஆம் அடி). நெய்தல் காலத்தை  இலக்கம் = 10^5 ஆண்டுகள் எனலாம். (https://valavu.blogspot.com/2018/08/7.html). இவ்வூழிக்கும் அடுத்த ஊழியில் நீரகம் (hydrogen), எல்லியம் (helium) என்று வளிகள்/காற்றுகள் உருவாகின்றன. இந்த ஊழி குவளை = கோடி ஆண்டுகள் நடக்குமாம். இதன்பின் தீயால்/சூட்டால் விரவிய ஊழி ஆம்பல் (10^9) ஆண்டுகள் நடக்குமாம். 

இதற்கடுத்துப் பனியொடு தண்பெயல் தவழும் ஊழி சங்கம் (10^12) ஆண்டுகள் நடக்குமாம்.   இந்த ஊழியின் முடிவில் புவி முழுக்க நீர் வெள்ளமே இருந்தது என்று இற்றை அறிவியல் சொல்லும். பின் இன்று இருக்கும் கடல் அளவைப் போல் மூன்று மடங்கு நீர் நிலத்தின் மண்ணுறல்களோடு வினைபுரிந்து மண் உள்ளீட்டில் இறங்கி மேலேயுள்ள நிலம் வெளிப்பட்டது என்று இற்றை அறிவியல் கூறும் இதை அப்படியே 10-12 ஆம் அடிகள் கூறும். நிலம் வெளிப் பட்ட காலம் தாமரை (10^13) ஆண்டுகளும், பின் வெள்ளம் (10^14) ஆண்டுகளும் ஆகுமாம். இந்த விவரணை நம்பக் கூடியதா, கற்பனையா என்பது தெரியாது. ஆனால் இப்படித்தான் 2050 ஆண்டுகளுக்கு முன் நம்மவர் கருதுகோள் இருந்திருக்கிறது.     

பரிபாடல் 3 இல் சொன்ன சாங்கியச் செய்தியை பரிபாடல் 13, 14-22 ஆம் அடிகளும் திருமாலை ”அடுபோர் அண்ணல்” என்றழைத்து வேறுமுறையில் உரைக்கும்.

“சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,

அவையும் நீயே, அடு போர் அண்ணால்!

அவையவை கொள்ளும் கருவியும் நீயே;

முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;

இரண்டின் உணரும் வளியும் நீயே;

மூன்றின் உணரும் தீயும் நீயே;

நான்கின் உணரும் நீரும் நீயே;

ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே

அதனால் நின் மருங்கின்று மூவேழ் உலகமும்

மூலமும் அறனும் முதன்மையின் இகந்த 

காலமும்...........................................................” 

                  – பரிபாடல், 13:14-25]

கூர்ந்து கவனித்தால், இப் பரிபாடல் வரிகளில் மனம், அகந்தை, மான் தவிர மற்றவை குறிக்கப்படும். நீயே என்பதில் இறைவனே ”புருஷனாய்ச்” சொல்லப் படுவான். இதில் மூலவியற்கை மூலமாகும். பேரண்ட ஒழுங்கும், கால காலமாய்த் தொடக்கிலிருந்து நகரும் பாங்கும் விவரிக்கப்படும். “ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனத் தன்மாத்திரைகளாய் உணரப் படுவதும் நீயே! ’வாக்கு, பாதம், கை, எருவாய், கருவாய்’ என்னும் ஆற்றுக் கருவிகளும் நீயே!  ’கண், நா, செவி, மூக்கு, தோல்’ எனும் ஐம்புலன்களும் (ஞானக் கருவிகளும்) நீயே!  முன்னே யாம் கூறிய 5 தன்மாத்திரைகளில் ஓசையெனும் ஒன்றால் அறியப்படும் வானும் நீயே! ஓசை, ஊறெனும் இரண்டால் அறியப்படும் காற்றும் நீயே! ஓசை. ஊறு, ஒளி எனும் மூன்றால் அறியப்படும் தீயும் நீயே! ஓசை, ஊறு ஒளி, சுவை எனும் நாலால் உணரப்படும் நீரும் நீயே! ஓசை, ஊறு. ஒளி, சுவை, நாற்றமெனும் ஐந்தால் உணரப்படும் நிலனும் நீயே.!  அதனால், நின் பக்கலிலுள்ள மூவேழ் உலகமும் அதன் மூலமும், அறனும், தொடக்கத்தில் இருந்து  இறங்கிய காலமுமாய்  நின்று நிலைக்கும்” என்பது இவ்வடிகளின் பொருளாகும்.

வடபுலத்து நூல்களிலும் ஈசான சாங்கியம் வெளிப்படும். காட்டாக சூர்ய சித்தாந்தத்தில் , 

வாஸுதே3வ: பரம் ப்3ரஹ்ம தந்மூர்தி: புருஷ: பர: |

அவ்யக்தோ நிர்கு3ண: சா’ந்த: பஞ்சவிம்சா’த் பரோ(அ)வ்யய: || [– ஸூர்ய ஸித்3தா4ந்தம், 12.12]

என்ற சொலவம் வரும்.  திருவாய்மொழி 10.7.10 இல் நம்மாழ்வார், .

“மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய

நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே

பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்

இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே” [– திருவாய்மொழி, 10.7.10]

என்ற பாசுரத்தின் மூலம் 25 +1 உறுப்புகள் கொண்ட ஈசான சாங்கியத்தை பேசுவார். 

அன்புடன்,

இராம.கி.


Tuesday, September 08, 2020

கபிலரும் சாங்கியமும் - 4

“நன்றாய்ந்து, நீள்நிமிர்ந்த, சடையைக் கொண்ட முதுமுதல்வன் வழியில் போகாதவர், 24 கூறுகளை ஒன்றாகப் புரிந்து முற்றும் உணர்ந்து, ஒப்பின்றிச் செய்த  அவனுடைய முதுநூலோடு, இகல் (மாறுபாடு) கொள்கிறார். அப்படி இகல்கொண்டவரின் செருக்கைச்  சாய்க்கவேண்டி, இகல்கொண்டோரின் மெய்போலும் பொய்யை உணர்ந்து, அப்பொய்யின் பக்கம் சாராது மெய் கொண்டு, 21 தருக்க முறைகளில் முட்டின்றிப் போகிய உரைசான்ற சிறப்பின் உரவோர் மருகனே!” என விண்ணந்தாயனின் சிறப்பைக் கூறும்படி முதல் பகுதிக்குப் பொருள் கொண்டால், சரியான விளக்கம் நமக்குத் தானாகவே கிட்டும்.  

இங்கே 24 கூறுகள் கொண்டதெனக் கூறப்படுவது ஈசனிலாச் சாங்கியமே. (25 கூறுகள் கொண்டது இதற்கெதிரான ஈசான சாங்கியம்.) அக்காலத்தில் சாங்கியத் துணையின்றி எந்த வகை மெய்யியல் உரையாடலும் நிகழவே யில்லை. தவிர, சாங்கிய வழி உரையாடாத (சாருவாகர் தவிர்த்த) சமயவாதி  எவனும் பொ.உ.மு. 800க்கு அப்புறம் நாவலந்தீவில் இருந்ததுங் கிடையாது. சாங்கிய நூல் இத் துணைக்கண்டத்தில் கபிலம் எனவும் அழைக்கப்பட்டது. கபில முனிவனைச் சிவனோடும் (உருத்திரனோடும்)  கூடப் பொருத்தினார். ”கபிலனின்” சொற்பிறப்பை அலசினால் இது புரியும். நம்பா மதங்களுங் கூட சிவனின் இன்னொரு தோற்றமான “ஆதிநாதனை” முதல் தீர்த்தங்கரனாய் ஏற்றன. (வேதமும், வேதாந்தமும் ஆதிநாதனை ஏற்கா.) 

எந்தச் சிக்கும் தன் முடிக்கு வாராதபடி முடியை நன்றாயாய்ந்து நீள்நிமிர் சடையாய் அதையாக்கிக் கட்டிக்கொண்ட ஆதிநாதனைப் பல சமயங்களும் ஏற்றுக்கொண்டன. ஆதிநாதனின் அடையாளமான புல்வாய்க் கலைமான் தோலை பல முனிவரும் இடையிலுடுத்தினர். விண்ணந்தாயனும் உடுத்துவார். பாட்டுத்தலைவனான விண்ணந்தாயனைச் சிலர் விஷ்ணுதாசன் என மொழி பெயர்ப்பர். எனைக் கேட்டால் அதற்கு வாய்ப்பில்லை  பொ.உ.மு. 100 களில் விண்ணு எனும் முழுமுதல் கருத்தீடு முற்றிலும் உருவாகியிருக்கவில்லை. மாயோன்/திருமால், வாசு தேவன், கண்ணன், இராமன் ஆகியோரின் கருத்தீடுகள் இருந்தன.  இவ்வுருவகங்களைப் பிணைத்த மொத்த விண்ணவக் கருத்தீடு கொஞ்சங்கொஞ்சமாய் உருவாகிக் கொண்டிருந்தது. ”விண்ணுவிற்கு அடியான்” என்பது சற்று முந்திரிக் கொட்டையான காலப் பிறழ்ச்சி. பொ.உ. 300/400க்கு அப்புறம் பாகவத மதம் உருவான பின்தான், அது நிலை கொண்டது.  

அப்படியெனில் விண்ணந்தாயனை எப்படிப் பொருள் கொள்ளலாம்?  ஔவை. சு, துரைசாமியார் ”விண்ணன் அவன் பெயர். தாயன் அவன் தந்தை பெயர்” என்பார், சாலை விண்ணனைக் குறிக்கும் தனிப்பாடல் ஒன்று அவர் தொகுத்த தமிழ்நாவலர் சரிதையில் உண்டு. ”விண்ணனும்” பொருந்துப் புகல்வதென்றே தோன்றுகிறது., மாறாக ”விள்நன்>விண்ணன்” என்பதன் வழி, மெய்யியல், அறவியல்  போன்ற படிப்பறிவுகளை, வாத-எதிர்வாதங்களை விளக்குவோன் எனப் பொருள்கொள்ளலாம். தாயம்= கூட்டம். விண்ணந்தாயன்= விளக்குவோர் கூட்டத்தான். scholar. அறிஞர் கூட்டத்தாரில் பெரும்பாலோர் கலைமான் தோலாடை  பூண்டவர், பூணூல் அணிந்தவர், பெரும்படிப்புக் கொண்டவர். அத்தனை caricature-உம் பாவில் பேசப்படும், 

அது சரி. கௌண்டின்யன் என்ற பெயர் எப்படி எழுந்தது? (கோழியூர்= உறையூர், கோழியர்= சோழியர். சோழிநாட்டான்/சோணாட்டான் என்பது கோழிநாட்டான்/ கோணாட்டான் ஆகலாம். பாகதத்தில்  இது கோணாட்டிண> கோண்டிண என்றாகிச் சங்கதத்தில் கௌண்டிண்ய ஆகும். மீளக் கடன் வாங்கிக் கௌணியன் என்போம். கௌண்டின்யன் எனப்படுவோர் எல்லோருமே பார்ப்பனராகத் தேவையில்லை. (விண்ணந்தாயன் ஒரு பார்ப்பான் என்பது உண்மை) அவன் சோழநாட்டான் என்பதே கௌண்டின்யன் எனும் பெயர் வெளிப்படுத்துகிறது. சோழியன் எனப் பின்னால் தமிழ்நாட்டில் சொல்லப்பட்டவரும் பெருமானக் கௌண்டிய கோத்திரத்தாரும் உறவுள்ளவரே.

[இங்கே வேறொரு கௌண்டியக் குழப்பத்தையும் சொல்லத்தான் வேண்டும். மணிமேகலையில் நாகநாட்டு இளவரசி பீலிவளையை நெடுமுடிக்கிள்ளி விருப்பங்கொள்வான் காதல்மணம் முடிப்பான். நாக நாடு என இதில் சொல்லப்படுவது பெரும்பாலும் சுமத்ரா ஆகவோ, கம்போடியா ஆகவோ இருக்கலாம் என்பது தெ.கி. ஆ. தொன்மங்களைப் படித்தால் விளங்கும்.. தென்.கி. ஆ, வின் இளவரசியை மணம் முடித்தவனை அவர்கள் நாட்டுக் கதையில் கௌண்டின்யன் என்பார். இதைக் கேட்டவுடனேயே நம்மூர் வரலாற்றாசிரியரோ ”கௌண்டின்யனா, பார்ப்பான்” என்று கதைப் போக்கைத் திருப்பிவிடுவார். அப்படியெனில் மணிமேகலைக் காப்பியத்தில் வரும் பீலிவளைக் கதை தவறா? அதில் பார்ப்பனனே வரவில்லையே? சோழ இளவரசன்தானே பேசப்படுகிறான்?  - என நான் ஆழமாய் மறுத்துக் கேட்பேன். 

மேலேநான் பரிந்துரைத்த சொற்பிறப்பை ஓர்ந்துகாணின், சோழன் நெடுமுடிக்கிள்ளியைக் கோணாட்டான்>கௌண்டின்யன் என அழைக்கலாம். பிற்றைச் சங்கதமொழித் தாக்கத்தில்  “கம்போடியக் கௌண்டின்யன் ஒரு பார்ப்பான்” எனத் தவறாய் முடிவு செய்திருக்கலாமே? எல்லாச் செய்திகளையும் சங்கதம், பார்ப்பனர் என தென்கிழக்கு ஆசிய வரலாற்று ஆய்வாளர் அலசுவதால் உருவாகும் தவறு இதுவாகும். இதன் தொடக்கம் நீலகண்ட சாத்திரியார் ஆவார். அவரைத் துபாசி ஆக்கி அத்தனை மேலை யாசிரியரும் உரையாடுவார். பெரும்பாலான மேலையர் உரைகளின் உள்ளே துலங்குவது துபாசியர் கருத்தே. சங்கதப் பார்வை பல இடங்களில் நம்மைக் கவிழ்க்கும் என்பதற்கு இதுவும் ஓர் காட்டு. தென்கிழக்கு ஆ.சிய வரலாற்றை மீள்பார்வை செய்வது கட்டாயம் தேவை. எதெல்லாம் தமிழோ, அதெல்லாம் சங்கதத்திற்கு என பெரிதும் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.   

கௌண்டின்யரென்பார் வழமையான வேதநெறியோடு ஓரளவு முரண் கொண்டவர். இவர் வேள்வி செய்வார். ஆனால் இந்திரன் போன்ற வேதத் தெய்வங்களை முன்னிறுத்தாது, சிவனையே தம் வேள்வியில் முன் நிறுத்துவார். சிவ சமயக் குரவரில் ஒருவரான ஞானசம்பந்தரும் கூட ஒரு கவுண்டின்யரே. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளியிட்ட, அ.ச.ஞான சம்பந்தனின் “பெரிய புராணம் - ஓர் ஆய்வு” என்ற நூலைப்படித்தால் பார்ப்பனரிலுள்ள கவுண்டிண்ய கோத்திரத்தின் விதப்பு பற்றிய தெளிவு ஏற்படும். (அருமையான நூல். படியுங்கள்.) அதேபொழுது புறம் 166 இன் பாட்டுக்கான என் விளக்கம், அ.ச.ஞா. வின் விளக்கத்திலும் வேறுபட்டது. 

இனிப் பறம் 166 இன் 2 ஆம் பகுதிக்கு வருவோம்.  வாதங்களால்  பெற்ற செல்வங் கொண்டு விண்ணந்தாயன் இரந்தோர்க்குக் கொடையும் கொடுக்கிறான்.  ”உன் கொடைவினைக்கு வேண்டி, நீ பூண்ட, மேட்டு வயல் கலைமானின் தோலாடையும், அரிய தோளிலிட்ட பூண்ஞாணும் மிசைந்து பொலிய, மறங்கடிந்த  அரும்படிப்பால், அறம்புகழ்ந்த   வலைசூடி, சிறுநுதலும். பெரிதகன்ற அல்குலும், குறைந்தசொல்லும், பெருகிய கூந்தலும் கொண்ட, நின் நிலைக்குத் தக்க உன் துணைவியர் தமக்கமைந்த வெவ்வேறு தொழில்களை கேட்டு நிற்க” எனப் பொருள் அமையும். இந்த அடிகளில் பார்ப்பனருக்குப் பலதார மணம் பேசப்படுகிறதா எனில் இல்லை என்பேன். பல்வேறு துணைவியரை மனைவியர் என்று கொள்ளத் தேவையில்லை. பார்ப்பன மாளிகையில் வெவ்வேறு பணிகள் செய்யும் பெண்கள் இவர் எனலாம்.  இங்கே துணைவியரின் உருவம், அழகு, படிப்பு, சொல்கேட்டு நிற்றல் போன்றவை விதந்து பேசப்படுகின்றன. 

அடுத்து புறம் 166 இன் 3 ஆம் பகுதியில் விண்ணந்தாயன் கொடைச்சிறப்பு விவரிக்கப்படும்  “காடோ எனும்படி, நாட்டில் எமைவாட்டும் ஏழ்மையிடம் மோதிக்கொண்டிராது, அருமையாய் விளங்கும் இப் பெருங்காலத்தில்,  ’நீரும் நாணும்படி நெய்போல் உயர்ந்தவற்றை அளவற்று வழங்கியும், எண்ணற்றவர் தம்முள் நாணியபடி பலவற்றை வேண்டினும்,  மண் நாணும்படி அவற்றை ஈந்து புகழ் பரப்பியும், எம்மோடு விருந்துற்ற நின் திருந்திய மேம்பட்ட நிலையை’ யாம் காண்கிறோம், அம்ம ! " என்று பொருள் கொள்ளலாம். வேள்விப் பொருளை இங்கு வலிந்து உரையாசிரியர் வருவிக்க வேண்டியது இல்லை. ஏனோ சிலர் அப்படிச் செய்கிறார். பார்ப்பனர் பலர் அற்றுவிகம், செயினம், புத்தம் போன்ற நெறிகளில் ஈடுபட்டு இருக்கையில் ஈசனிலாச் சாங்கியத்தில் ஒரு விண்ணந்தாயன் இருக்கக் கூடாதா? எல்லாப் பார்ப்பனரையும் வேதநெறி பேணுவோராய் ஏன் கொள்ளவேண்டும்?  

அடுத்து 4 ஆம் பகுதி: இதில் ஆவூர் மூலங்கிழார் தம் ஊரை விவரிக்கிறார். ”மேற்கே பொன்போன்ற வெளிச்சம் படு நெடுவரையில் இடியும் முகிலும் வில்போல் தெறித்துவரும் மழையால், பூவிரியும்  புதுநீர் புரண்டுவரும் காவிரியால் புரக்கப்படும் தண்புனற் தோட்டமான எம்மூரின் ஆங்கண், உன்கொடையால் உண்டும் தின்றும் ஊர்ந்தும் நாங்கள் ஆடுவோம் என்று எண்ணிச் செல்கிறேன், அந்த மேகங்களைச் செல்லவிடாது, மழை மேலிருந்து கீழே பெய்யும்படி நீண்ட நெடுவரையும், மூங்கில் வளரும் இமயம்போல, நீ நிலமிசை நின்று நிலைப்பாயாக” என்பது அதன் பொருளாகும். வேள்வியைப் பேசியிருந்தால் இதுபோன்ற ஓர் முடிப்பு வருமா, என்ன? இது down to earth விவரிப்பு. சங்கப் பாடல்களில் இப்படித்தான் அமையும். துறக்கம் பற்றிப் பேசும் உவநிற்ற முடிவு அமையாது.  

ஆக ஈசனிலாச் சாங்கியத்தைப் பயன்படுத்தி மெய்யியல் சொற்போரில் வென்ற பார்ப்பன வாகை புறம் 166 இல் பேசப்படுகிறது. (இதுபோன்ற எடுத்துக் காட்டு வடபுல இலக்கியங்களில் எங்கும் கண்டதில்லை. அங்கெலாம் ஈசான சாங்கியமே பேசப்படுகிறது.) இதைப் போய் வலிந்து வேண்டுமென வளைத்து மாற்றி வேதநெறிக்கு முட்டுக் கொடுக்க முனைவது முற்றிலும் முறையற்றது என்றே எனக்குத் தோன்றுகிறது. அற்றுவிகத்தின் நேரடித் தற்பக்கக் (சுபக்கக்) கூற்றுகள் தமிழில் மட்டுமே  இருப்பது போல் ஈசனிலாச் சாங்கியத்தின் தற்பக்கக் கூற்றும் தமிழில்தான் உள்ளது. புறம் 166 மட்டும் இல்லாது போயின், நாமும் எதிர்ப்பக்கத்தில் (பரபக்கத்தில்) இருந்தே உருவகித்துப் பேசிக் கொண்டிருப்போம். 

அன்புடன்,

இராம.கி.


Monday, September 07, 2020

கபிலரும் சாங்கியமும் - 3

மூலப்பகுதி போக ஈசனிலாச் சாங்கியத்தில் வெளிப்படும் உறுப்புகளாய் 23 ஐச் சொல்வர்.  இயற்கையைப் புரிந்துகொள்ள உதவும்  உட்கருவிகளாய் மான் (அ) புத்தி (மன்னுவது மான்), தான்/புறம் பிரிக்கும் அகந்தை, நல்லது/ கெட்டது பிரிக்கும் மனம் எனும் 3 ஐ முதற்றொகுதியாகவும், “மெய், வாய், கண், மூக்கு, செவி” எனும் ஐம்புலன்களை (ஞான எந்திரங்களை) 2 ஆம் தொகுதியாகவும், ”வாக்கு, கை, கால், எருவாய், கருவாய்” எனும் ஐ ஆற்று கருவிகளை (கரும எந்திரங்கள்; வாய்க்கு உண்ணுங் கருமம், வாக்குக் கருமம் என 2 கருமங்கள் உண்டு. முன்னது ஐம்புலனிலும், பின்னது ஆற்று கருவியாகவும் கொள்ளப் படும். எருவாய் = ஆசனவாய்; கருவாய்= reproductive tool) 3 ஆம் தொகுதி யாகவும், ”காயம், காற்று, தீ, நீர், நிலம்” எனும் ஐம்பூதங்களை 4 ஆம் தொகுதியாகவும், ”ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ” எனும் தன்மாத்திரைகளை (தானறி அளவைகளை) 5 ஆம் தொகுதியாகவும் சொல்வர்.  

மேலே பயின்றுவரும் ”தன்மாத்திரைகள்” என்ற சொல்லும் (மாத்தல் = அளத்தல்; மாத்திரை = அளவை), காயமெனும் 5 ஆம் பூதக் குறிப்பும். வாய்/வாக்கு எனும் சொல்லாட்சியும் சாங்கியப் பிறப்பிடம் தமிழகமே என்பதை உணர்த்தும். 23+மூலப்பகுதி என 24 உறுப்புக் கொண்ட ஈசனிலாச் சாங்கியத்தோடு, ”புருஷன்/ஆதன்” எனும் இன்னொரு வெளிப்படாததைச் சேர்த்து 25 உறுப்புகள் ஆக்கி, ஈசானச் சாங்கியம் எழும்.    (புருஷன் என்பது ஓர் இடைச்செருகலாகவே வடமரபில் இணைக்கப்பட்டு பின் ஈசான சாங்கியம் உருவானதைச் சாரக சங்கிதை தெளிவாக விளக்கும். ‘சாங்கியத்தில் புருஷன்’ எனும் தலைப்பில் ஆராய்ந்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, ”புருஷன் ஓர் இடைச் செருகலே” என்பதை உறுதிப் படுத்துவார்.

மாந்த உடலுறுப்புகளையும், செய்தொழில்களையும், தானறி அளவைகளையும், பேரண்ட உறுப்புகளையும் ஐந்தைந்தாய் வரிசையிட்டு, இவற்றை அளந்தறியும் மான் (=அறிவு = புத்தி), அகந்தை, மனம் ஆகிய எண்ணக் கருவிகளைச் சேர்த்து ஓர் தொகுதியாக்கி, இதுவரை வெளிப்படாத மூலவியற்கைக்கும், பேராதனிற்கும் உள்ள இடையாற்றங்களை ஈசானச் சாங்கியம் விரிவாய்ப் பேசும். இவைபோக மான், அகந்தை, மனம்  ஆகிய வற்றின் வெவ்வேறு வெளிப்பாட்டுத் தரங்களாய் சாற்றுவ (சாத்வ), ஆற்றுவ (ராஜஸ), தாழும (தாமஸ) என்ற முக்குணங்கள் சொல்லப்படும் . இன்னும் பிற்காலத்தைய ஈசான சாங்கியம் இம்முக்குணங்களை பெருமியதாய்ச் (primitives)சேர்த்து 28 உறுப்புகளாகவும் பேசும்.

முதலில் உருவான 24 உறுப்புக் கொண்ட ஈசனிலாச் சாங்கியத்தின் மூல வடிவை புறம் 166 ஆம் பாடல் பதிவு செய்யும். இது சோணாட்டு பூஞ்சாற்றூர் (காவிரி மண்டலத்தில் முடிகொண்டான் ஆற்றங்கரை ஊர்) பார்ப்பான் கௌணியன் விண்ணதாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியதென்பர். (கிழார் என்றவுடன் ஏதோ நிலச்செழிப்புள்ள பண்ணையார், இவரேன் புலவராக இரந்தார் என எண்ணவேண்டாம்.  நிலத்திற்கு உரிமையுள்ள, பணமிலாக் கிழாரும் முன் இருந்துள்ளார்.) இதே புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் புறநானூற்றில் பாடுவார். கிள்ளிவளவன் காலத்தை அடையாளங் காணமுடிந்தால், விண்ணந்தாயன் காலத்தையும் அறியலாம். அப்படி அறிவது புறம் 166 ஆம் பாட்டின் பொருளைத் தவறின்றிப் புரிந்து கொள்ளப் உதவும். ஆவூர் மூலங்கிழார் பாட்டைத் வேதநெறிக்கு அணி செய்வதாய்ப் புரிந்தவரே மிகுதி. உ.வே.சா.விற்குக் கிடைத்த 14/15 ஆம் நூ. புறநானுற்றுரையுங் கூட அதுபோல்  புகலும். எனக்கு அப்படித் தோன்ற வில்லை. (இதே பழைய உரை மாற்றுக்கருத்தையும் தொட்டுக் காட்டும். ஆனால் விளக்காது.) 

கிள்ளிவளவன் என்பான் செங்குட்டுவனின் மாமன் மகனாவான். செங்குட்டுவனின் தாய் நற்சோணை உறையூரைத் தலைநகராய்க் கொண்ட வளநாட்டைச் சேர்ந்த ஞாயிற்றுச் சோழனின் மகள். ஞாயிற்றனை ஆதித்தன் என்றும், அதன் முதற்குறையைத் தித்தனென்றும் சொல்வார். தித்தன் பட்டமேறிய பின், முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான். இவன் மகன் தித்தன் வெளியன் என்பான், வேற்பல்தடக்கை பெருநற்கிள்ளி, போர்வைக்கோ பெருநற்கிள்ளி, இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி என மூவிதமாய் அழைக்கப்பட்டான்  (பல்யாகப் பெருவழுதியோடு சேர்த்து இவனையும் வேதநெறி போற்றியதாய்ச் சாடிய தமிழறிஞர் அதிகம்.) செங்குட்டுவனின் தாய்மாமனை வேறொரு கட்டுரையில் விரிவாய்ப் பார்ப்போம்.   

தித்தன் வெளியனுக்கும் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் நடந்த போரில்  இருவருமே  இறந்து போனார். தித்தன் வெளியனின் மகனே குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆவான். தந்தை இறந்தபோது கிள்ளி வளவன் மிகச்சிறியன். அவன் பங்காளிகள் 9 பேருடன் அவனுக்காகப் போரிட்டு உறையூர் அரசைக் கிள்ளிவளவனுக்குச் செங்குட்டுவனே பெற்றுத் தருவான். இச்செய்தி சிலம்பின் வஞ்சிக்காண்டத்தில் மிகத் தெளிவாக வரும். பெரும்பாலும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் ஆட்சிக் காலம் பொ.உ.மு.75-50 க்குள் இருக்கலாம். எனவே கௌணியன் விண்ணந்தாயனின் காலமும் ஏறத்தாழ இதுவே என்று சொல்லலாம்.   கீழே 4 பகுதிகளாய் 34 அடிகளைப் பிரித்துள்ள புறம் 166 ஆம் பாட்டை முதலில் படியுங்கள். 

நன்றாய்ந்த நீள்நிமிர்சடை

முதுமுதல்வன் வாய்போகாது,

ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்,

ஆறுணர்ந்த ஒருமுதுநூல்

இகல்கண்டோர் மிகல்சாய்மார்,                          5

மெய்யன்ன பொய்யுணர்ந்து,

பொய்யோராது மெய்கொளீஇ,

மூவேழ் துறைபும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக!


வினைக்கு வேண்டி நீபூண்ட                                  10

புலப்புல்வாய்க் கலைப்பச்சை

சுவல்பூண்ஞான் மிசைப்பொலிய;

மறம்கடிந்த அருங்கற்பின்,

அறம்புகழ்ந்த வலைசூடிச்,

சிறுநுதல், பேரகல் அல்குல்,                                 15

சிலசொல்லின் பலகூந்தல், நின்

நிலைககொத்தநின் துணைத்துணைவியர்

தமக்கமைந்த தொழில்கேட்பக்;


காடு என்றா நாடு என்று ஆங்கு

ஈரேழின் இடம்முட்டாது,          20

நீர்நாண நெய்வழங்கியும்,

எண்நாணப் பலவேட்டும்,

மண்நாணப் புகழ்பரப்பியும்,

அருங்கடிப் பெருங்காலை,


விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை, 25

என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது

பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,

பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்

தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,

உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்; 30

செல்வல் அத்தை யானே; செல்லாது,

மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்

கழைவளர் இமயம்போல,

நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?  

===============================

வாகைத்திணை, பார்ப்பன வாகைத்துறை சேர்ந்த இப்பாடலில் சமயம்/ மெய்யியல் தொடர்பான சொற்போரில் ”நாவலோ நாவல்” என்று கூவி பார்ப்பனன் மற்றாரின்மேல் பெற்ற வெற்றி  குறிப்பிடப் படுகிறது.  ”கேள்வியால் சிறப்பெய்தியானை வேள்வியான் விறல் மிகுத்தன்று” என்று புறப்பொருள்  வெண்பாமாலை பார்ப்பன வாகைக்கு இலக்கணஞ் சொல்லும். அதாவது, “பல்வேறு நூல்கள் கேட்டுச் சிறந்தானை வேள்விகூடிய பார்ப்பனன் தன் வாதத்திறமையால் மிகுத்துப் பெறும் வெற்றி” என்பது பொருள். (இக் காலத்தில் பட்டிமண்டபம், வழக்காடுமன்றம் என்கிறாரே? அதுபோன்ற சொற் போர் இது. ஆனால் மெய்யியல் தொடர்பானது. கூடிநின்று வாதங் கேட்போர் வென்றார்க்குப் பொன்னும் பொருளும் கொடுப்பது அற்றை வழக்கம். (இன்றும் உரைக்குப் பணங்கொடுக்கும் வழக்கமுண்டு.)  சொற்போரில் பெற்ற வாத வெற்றி என்னாது, வேதநெறிக்குச் சான்றாய் ஏன் இப்பாவை உரையாசிரியர் கொண்டார்? விளங்கவில்லை.  

பாடலின் காலமான பொ.உ.மு. முதல் நூற்றாண்டில், எப்படிப் பார்த்தாலும் வேதம் ”த்ரயீயே”. அது ”சதுரி” ஆக மேலும் 200 ஆண்டுகள் பிடிக்கும். இவ் வரையறை அறியாத 14/15 ஆம் நூ. உரைகாரர் அவர்காலப் புரிதலில் 4 வேதம் என்று கொண்டார் போலும்.  ஆறங்கங்கள் என்பவை வேதத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வழிமுறைகளே ஒழிய, மெய்யியல் கூறுகள் அல்ல, மணிமேகலை 27, 100-103 அடிகளும் சரியாகவே சமயக்கணக்கர் திறங்கேட்ட காதையில் வேதவாதி வழி, இதைக் கோடிட்டுக் காட்டும். 

”கற்பங் கை சந்தங் கால் எண் கண்

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு

உற்ற வியாகரணம்  முகம்பெற்று” 

இயல் (கற்பம்) என்பது கையாகவும், இசை (சந்தம்) காலாகவும். கணக்கு (எண்ணுகை, சோதியம்) கண்ணாகவும், நாடகம் (நிருத்தம்) செவியாகவும் , பயிற்சி (சிக்கை/ சிட்சை) மூக்காகவும், இலக்கணம் (வியாகரணம்) முகம் ஆகவும் இங்கு உருவகிக்கப்படும். ஆறங்கம் இவ்வகையில் உடற்கருவிகளைக் குறிக்கும் குறியீடே.  ”ஒன்றுபுரிந்த ஈரிரண்டின், ஆறுணர்ந்த ஒரு முதுநூல்” என்பதற்குப் பொருள்சொல்ல 4 வேதம் 6 அங்கங்களை ஏன் உரைகாரர் நுழைக்க முயல்கிறார்? - புரியவில்லை. நான் புரிந்துகொண்டவரை, ஈரரண்டின் ஆறு என்பது 2*2*6 என்று பெருக்கல் வழி 24 ஐயே குறிக்கும். வேள்விப் பொருளுக்கு மாறாக, சாங்கியத் தருக்கப்பொருள் கொண்டால் இதில் குழப்பமே இல்லை. 14/15 ஆம் ஆண்டு உரையாசிரியர் ஓரோவழி அப்படியும் பொருள் கொள்ளலாமெனத் தெளிவாகச் சொல்கிறார்  ஆனால் 20 ஆம் நூற்றாண்டு உரைகாரர் எவரும் இதற்கு முயலவே இல்லை.   21 ஆம் நூற்றாண்டில் நாமாவது முயல்வோம்.

அன்புடன்,

இராம.கி.


Sunday, September 06, 2020

கபிலரும் சாங்கியமும் - 2

 சங்கம்>சாங்கியம் என்றவுடன் பலரும் வடமொழி நாடியே திரும்புவார். அப்படியாகத் தேவையில்லை. சங்கத்தின் வளைபொருளை  http://valavu.blogspot.com/2018/08/5.html இலும்,  கூட்டப்பொருளை http://valavu.blogspot.com/2018/08/6.html இலும், எண்ணிக்கைப் பொருளை, http://valavu.blogspot.com/2018/08/7.html இலும் பேசினேன். தென்கடற் சங்கு, வளைவில் கிளைத்த சொல். தொல்தமிழர், நெடுங்காலம் சங்கூதியே தம் கூட்டத்தைச் சேர்த்தார். இன்றும் இம்மரபு நாட்டுப்புறங்களிலுண்டு.  அடுத்து, சம்முதல்=  கூடல்; சேர்தல்; சம்>சங்கு>சங்கம்= கூட்டம்  என்றெழுந்தது  மூன்றாவதாய், கூட்டநீட்சியில், ”எண்ணிக்கை” எழுந்தது. 

[எண்ணிக்கைப் பொருளை, 10^12 என ஆய்ந்தறிந்தேன். இக்காலத்தில் இலக்கங்கோடி என்கிறாரே, அதற்கான ஒற்றைச்சொல் சங்கம். அதைப் பயனுறுத்த எத்தனைபேர் நம்மில் அணியம் ஆவோம்? தெரியவில்லை. ”பாமரர் பழகாச் சொல்லை இராம.கி. பரிந்துரைக்கிறார்” என்று நொள்ளை சொல்லவே பலரும் அணியமாவார். பழஞ்சொல் அறியாதார், அறிந்தவரைக் குறை சொல்வது இங்கு வழக்கமாகிப் போனது. இலக்கங் கோடி என்றோ, ட்ரில்லியன் என்றோ சொல்வது சரியெனவும் சிலர் இக்காலத்தில் வாதாடுகிறார். மொத்தத்தில் தமிழ்நடை வளரக் கூடாது என்பதில் சிலர் பிடிவாதமாய் உள்ளார்,. கடைசி வரை சவலைப் பிள்ளையாய்த் தமிழ்நடை சீரழியட்டும் என்றாக்குவதில் பலருக்கும் விருப்பம் போலும்.]       

சங்கத் தொகுதிக்குள் அடங்கும் உறுப்புகளைச் சாங்கங்கள் எனலாம். இதிலும் எண்ணவியலும் (countable)சாங்கம், எண்ணவியலாச் சாங்கம் என 2 வேறு வகைகள் உண்டு. குறிப்பிட்ட வகைச் சாங்கங்களை எண்கள் என்கிறோம். காட்டாகப் பதின்ம வகை எண்களை (1,2,3,4,5,6,7,8,9,10... ) என்கிறோம். இதுபோல் இரும வகை, பதினறும வகை எனப் பலவும் உண்டு. சங்கம் என்பது கொத்தையும் (set), சாங்கம் அதன் உறுப்புகளையும் (members) குறிக்கும். அகரமுதலிகளில் சாங்கம் = ஒழுங்கு,  உறுப்புகள் அனைத்தும், முழுதும், தொகுதி என்று பொருள் சொல்வார். இன்னொரு வகையிலும் சாங்கத்தின் கூட்டப் பொருளை அணுகலாம். அதுவும் அறியவேண்டியதே. 

சார்-தல் என்பது “அடு-த்தல், சேர்-தல், கல-த்தல், கூடு-தல், ஒ-த்தல்” போன்றவை குறிக்கும் தன்வினையாகும்.  ஒத்த குணங்கொண்ட உறுப்புகள் சா(ர்/ல்)ந்த தொகுதி (அ) கொத்தைச்  சா(ர்/ல்)தி எனலாம். தன்வினையில் பிறந்த சா(ர்)தி போல். பிறவினைப் பெயர்ச்சொல் சார்த்தியாகும். ஆங்கில set ஓடு, சாதி/கொத்து தொடர்புற்றது.  முற்காலத்தில் தாவரம், நீர்வாழ்வன. ஊர்வன, பறப்பன. விலங்கு, மாந்தர், தேவர் என்ற 7 பிரிவுகளையே பழந்தமிழர் கணக்கில் கொண்டார். தொல்காப்பியம் மரபியல் ”நீர்வாழ் சாதி” என்று வெளிப்படையாகவே “சாதி” என்ற சொல்லைக் குறிக்கும். தேவர் எனும் பிரிவு தவிர்த்த,  மற்ற 6 இயற்கைச் சாதிகளுக்கு தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கும். (தேவர் என்பார் எல்லாமும் பொருந்திய மேலுலகத்தார். இக்குறிப்பு நம்மிடமும் இருந்தது. ஆரியரிடமும் இருந்தது. இது ஒரு hypothetical construct.)

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

தாவரம் 20 இலக்கம், நீர்வாழ்வன 10 இலக்கம், ஊர்வன 11 இலக்கம், பறப்பன 10 இலக்கம், விலங்கு 10 இலக்கம், மாந்தர் 9 இலக்கம், தேவர் 14 இலக்கம் என 7 சாதிகளின் விதப்புகள் பற்றி ஒருவித வகைக் கணக்கும் சொல்வார். இவ் விதப்புகளை யோனிவேற்றம் (species. யோனிபேதம் - சங்கதம்) என்றுஞ் சொல்வதுண்டு, மேற்கூறிய 7 சாதிகளுள்ளும் மேலும் உட்சாதி பிரிப்பதைச் (காட்டாக மாந்தருள்ளும் சாதி பிரிப்பதைச்) சங்கத் தமிழர் ஏற்றதில்லை. ”பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” எனக் குறள் தெளிவாய்ச் சொல்வதால், ஒத்த மாந்தரை பிரிக்கும் இக்காலச் ”சாதிப்” பயன்பாடு அடிப்படையில் முறையற்றது. இருப்பினும் இற்றைக் குமுகம் ”சாதியால்” பிளவுபட்டுள்ளது.

இக்காலத்தில் ”சாதி” விலக்கப்பட்டவரைச் (கூட்டத்தில் இல்லாதவரைச்) சாங்கமிலார் என்பார். தவிர, சாங்கரர்= (கூட்டத்தில்) கலந்து போனவர்,  சாங்கரம்= கலப்பு. என்ற சொற்களும் கூட இக்காலம் பயில்கின்றன. (கொத்துத் தேற்றம் -set theory- விவரிக்கையில் ”சாதி” என்ற சொல்லை நான் பயனுறுத்துவதில்லை.) “சாதிச்” சடங்குகளைப்  பேச்சுவழக்கில் சாங்கியம் என்பர்.. (”அது எங்களின் சாங்கியம் இல்லை”) சங்கதத்தில், ”சாங்க உப அங்கம்” என்பது,  ”துணையுறுப்புகளும் முழுதும்” என்ற பொருளைக் குறிக்கும். சாதிக்குத் தொடர்பில்லாது, அதேபொழுது உடலுறுப்பைக் குறிக்கும்  ”அங்கம்”, அலங்கத்தின் இடைக்குறையில் எழுந்தது. (http://valavu.blogspot.com/2018/07/organ.html)

சாங்கம் = கூட்டம், எண்ணக்கூடியது எனும் பொருளின் தொடர்பாய், சாங்கியம் என்ற சொல் ”எண்ணிக்கைக்கு உட்படுவது” எனும் பொருள் கொண்டு, ”கபில மெய்யியல்” குறிக்கப்படும். (கபிலர் உருவாக்கிய மெய்யியல்). ”சாங்கியத்தை” வடமொழிச்சொல் எனச் சில ஆய்வர் எண்ணி, அதை ”எண்ணியம்” என்பார். சால்தல் தமிழானால், சாங்கியமும் தமிழ் என்பதே என் கருத்து, (எண்ணை நெடுநாள் பழகியதால், ”சாங்கத்தைப்” நாம் பயில்வதில்லை.)  சாங்கியம் பற்றி சற்று விரிவாய்ப் பார்ப்போம். நம்மைச் சுற்றிய பேரண்டத்தில் வெளிப்பட்டதற்கும் வெளிப்படாததற்கும் ஆன இடையாற்றத்தைச் சாங்கியம்  விளக்க முயலும். வெளிப்படாததை வரையறுக்கும் வகையில்,  2 வேறு சாங்கியங்கள் உண்டு. 

முதலிலெழுந்த ஈசனிலாச் சாங்கியம்  (சங்கதத்தில் நிரீஸ்வர சாங்கியம்.)  ”வெளிப்படாதது (non-manifest)” எனும் புரிதலில் மூல இயற்கையை மட்டுமே குறிக்கும்.  தமிழில் இதைப் பகுதி என்றும். சங்கதத்தில் ப்ரக்ருதி என்றுஞ் சொல்வர். வெவ்வேறாய் மூலவியற்கையைப் பகுத்து நுகரக் கூடுமாதலால், மூலப்பகுதி எனும் விதப்புப்பெயர் மூல இயற்கையைக் குறிக்கத் தமிழில் எழுந்தது. (இலக்கணத்தில் வினைப் பகுதி என்கிறோமே? அதையும் இங்கு ஒப்பிட்டு நினைவு கொள்க). 2 ஆவதாய் எழுந்த சாங்கியத்திற்கு ஈசானச் சாங்கியம் (ஈஸ்வர சாங்கியம்) என்று பெயர் . 2 ஆம் வகைச் சாங்கியத்தில்  மூல இயற்கையும் பேராதனும் (சங்கதம் புருஷன் என்னும்; பெருமாதன் பரமாத்மா ஆவான்) வெளிப்படாதனவாகச் சொல்லப்படும்.  

ஆதனைச் சில நெறிகள் நம்பும். சில நம்பா. வேதம் நம்பாத சாருவாகம் (உலகாய்தம்) ஆதனை மறுக்கும். அற்றுவிகமும் செயினமும் பெருமாதனை மறுத்துத் தனி உயிராதன்களின் (ஜீவ ஆத்மாக்களின்)இருப்பை மறுக்கா. புத்தமோ பெருமாதனை முற்றிலும் மறுத்துத் தனி உயிராதன்களைச் சில விளக்கங்களில் மறுத்து, சிலவற்றில் மறுக்காது. வேதநெறியின் 2 வகைகளில் ஒன்றான பூருவிக மீமாஞ்சை பேராதனையும் உயிராதன்களையும் ஏற்காது. உவநிற்றங்கள் (உபநிடதங்கள்) வழிப் பட்ட உத்தர மீமாஞ்சையோ, பேராதனை ஏற்கும். தெற்கின் சிந்தாந்த சிவமும், திரு விண்ணவமும் பேராதனையும் தனி உயிராதன்களையும் ஏற்கும். பேராதனுக்கும் தனி உயிராதன்களுக்குமான உறவுநிலை சொல்வதில் சிவமும், விண்ணவமும் வேறுபடும். 

சாங்கியம் பற்றி ஏராளம் சொல்லலாம். ஆனால், மெய்யியலில் ஈடுபாடு இல்லாதாருக்கு அது கடினமாகலாம். எனவே விவரங்களைத் தவிர்க்கிறேன். சாருவாகம், பூருவிக மீமாஞ்சை தவிர்த்த இந்திய நெறிகள் எல்லாமும் உடல், உயிர்/ஆதன்  பிரிப்பையும், இவ்வுலகில் இயலக்கூடிய 84 இலக்க யோனிவேற்ற உடல்களில் உயிர்கள் பிறப்பதையும் நம்பும்.  திருமந்திரத்திலும், சில உவ நிற்றங்களிலும் (உபநிடதங்களிலும்) கூட, இவ்வெண்ணிக்கை சொல்லப் படும். எல்லா  84 இலக்க வகைப் பிறப்புகளிலும் ஓர் உயிர் பிறந்தே ஆக வேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு பிறப்பிலும் செய்யும் நல்வினை / தீவினைகளுக்கு ஏற்ப, மொத்தப் பிறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியுமெனச் சில நெறிகள் கூறும்; குறைக்கமுடியாதென வேறு சில நெறிகள் கூறும். எந்தெந்த நெறிகள் பிறவிச் சுழற்சியை (இறந்து பிறப்பதை) மறுக்க வில்லையோ, அவை ஆன்மாவை ஏற்றன என்றே பொருள். 

ஆழ்ந்து ஓர்ந்தால், ஏதோவொரு வழியில் மேற்சொன்ன நெறிகளெலாம் தம் மெய்யியல் புரிதலில், பொ.உ.மு 800 க்கும் முன் எழுந்த ஈசனிலாச் சாங்கியத்திற்குப் பெரிதுங் கடன்பட்டவையே. ஈசனிலாச் சாங்கிய விளக்கநூல்கள் அனைத்தும் இற்றைநிலையில் செரிக்கப்பட்டு விட்டன. 2 ஆம் வகை ஈசானச் சாங்கியம் சுங்கர் காலத்து எழுந்தது. இற்றைச் சாங்கிய நூல்களெல்லாம் ஈசானச் சாங்கியம் சார்ந்தவையே. அவற்றின் முதல் நூல் (பொ.உ.5 ஆம் நூ) ஈஸ்வர கிருஷ்ணரின் சாங்கிய காரிகை என்பர். (பார்க்க: Classical SAmkhya. Gerald James Larson, Motilal Banarsidass Publishers,Delhi 2011). தமிழில் ஆவூர் மூலங்கிழாரின் புறம் 166 ஆம் பாட்டில், கௌணிய விண்ணந்தாயன், ஈசனிலாச் சாங்கியத்தைக் கையாண்டு அதன் எதிரிகளின் மேல் வெற்றி கொண்டதாய்ப் பாராட்டிப் பேசும். (கீழே பார்ப்போம்.)   

அன்புடன்,

இராம.கி.


Saturday, September 05, 2020

கபிலரும் சாங்கியமும் - 1

 ”கபிலர்->கபில், கபிலவஸ்து.. நம்மிடமிருந்து இச்சொல் வடக்கே சென்றதற்கு ஏதேனும் வரலாறுண்டா ?” என்ற கேள்வியை நண்பர் நாக.இளங்கோவனின் முகநூல் பக்கத்தில் புறம் 53 ஐ விளக்கிய இடுகையில் 2020, 16 ஆகத்தில் இன்னொரு நண்பர் விஸ்வநாதன் எழுப்பினார். ”கபிலர்” என்ற சொல்லின் வேர்பற்றி விளக்கும் படி நண்பர் இளங்கோவனும் கேட்டிருந்தார்.  பல்வேறு கபிலர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார். அவரில் சிலரை மட்டும், குறிப்பாகச் சாங்கியத் தொடர்பு கொண்ட ஆதிக் கபிலரைப் பற்றி,  இங்கு பார்ப்போம். ”கபிலரின்” சொற்பிறப்பைக் கடைசியில் அலசுவோம். பலருமறிந்த சங்க காலக் கபிலர் பற்றிச் சொல்ல நிறைய இருப்பினும் ஏற்கனவே அவர் பற்றிய செய்திகள் இணையத்தில் ஏராளம் உள்ளதால்,  என் பார்வையில் குறைந்த சிலவற்றையே அவரையொட்டி இங்குசொல்ல விழைகிறேன்.

 1. சங்கநூல்களில் 235 பாடல்கள்  பாடிய கபிலரின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 197-143 ஆகலாம். பதிற்றுப்பத்தில் 7 ஆம் பத்தைப் பாடி, செல்வக் கடுங்கோ வாழியாதனிடம் (பொ.உ.மு. 164-140) நூறாயிரம் காணம் பொன்னும்,  "நன்றா" மலை மீதேறி அவன் கண்ணுற்ற அளவு கொடுத்த நாட்டையும் கபிலர் பரிசிலாகப் பெற்றிருக்கிறார். கபிலரோடு பரணரையும் சேர்த்தே தமிழறிஞர் இணையாய்ச் சொல்வர். அதேபொழுது பரணரைவிடக் கபிலர்  மூத்தவராகவே தெரிவார். பரணரின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு.180-123 ஆகும். பரணரைப் பாணர் என்றும் பழஞ்சுவடிகளில் படிக்கலாம். பாணரெனில் அவர் இயற்பெயர் தான் என்ன? - தெரியாது. கபிலர், பரணர், மாமூலனார், இளநாகனார், ஔவையார் ஆகியோரை ஒதுக்கிப் பார்த்தால், சங்க இலக்கியம் மெய்யாகவே வறிதாகி விடும். 

2. புறம் 200 ஆம் பாட்டில் ”யானே பரிசிலன் மன்னும் அந்தணன்” என்றும்,  புறம் 201 இல் ”அந்தணன் புலவன்” என்றும் கபிலர் தன்னை அடையாளங் காட்டிக் கொள்வார்.  "புலனழுக்கற்ற அந்தணாளன்" என மாறோக்கத்து நப்பசலையாரும் (புறம் 126, 174) கபிலரைப் பாராட்டிக் கூறுவார். [பெருங்குன்றூர்க் கிழாரும் (பதிற்.85),  பொருந்தில் இளங்கீரனாரும் (புறம் 53) கபிலரின் புலமையைப் பாராட்டியுள்ளனர்.] தந்தையை இழந்த பாரிமகளிரை ஓர் அந்தணர் வீட்டில் இறுத்தியது, “மகட்கொடைக்கு ஆட்படாது இருக்க” என்றே பல அறிஞருஞ் சொல்வர். இக்கூற்றுகளைப் பார்க்கையில், அந்தணர் என்பது இங்கு பார்ப்பனரைக் குறிப்பதாகவே கொள்ளலாம்.  தமிழ் நாவலர் சரிதையில், கபிலர் பாடியதாய் 

நெட்டிலை யிருப்பை வட்ட வான்பூ 

வாடாதாயிற்

பீடுடைப்  பிடியின் கேடேய்க் கும்மே 

வாடிலோ,

பைந்தலைப் பரதவர் மனைதொறும் உணங்குஞ்

செந்தலை யிறவின் சீரேய்க் கும்மே

என்ற தனிப்பாடலுண்டு. இது எந்தத் தொகைநூலிலும் வாராத பாட்டு. இப் பாவின் சிறப்பைக் கருதி, 12 ஆம் நூற்றாண்டு திருவாலவாயுடையார் புராணத்தின் 27 ஆம் பகுதியான ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் 3 ஆம் பாட்டிலும் (கீழே வருவது) இதே செய்தியை பெரும்பற்றப் புலியூர் நம்பி மேற்கோளாய்க் குறிப்பார். 17 ஆம் நூற்றாண்டு திருவிளையாடல் புராணத்திலும், திருவாலவாயுடையார் புராணம், கற்பனை குறைந்து, உண்மைச் செய்திகள் மிகுந்தது.  . 

தீதிலா மதூக நீழல் நெட்டிலை இருப்பை என்றோர் 

காதல்கூர் பனுவல் பாடும் கபிலனார் பிறந்த மூதூர்

சோதிசேர் வகுள நீழல் சிலம்பொலி துலங்கக் காட்டும்,

வேதநா யகனார் வாழும் வியன்திரு வாத வூரால்

என்னும் திருவாலவாயுடையார் புராணப் பாட்டின் வழி  மாணிக்கவாசர் பிறந்த அதே பாண்டிநாட்டுத் திருவாதவூரில் தான் சங்ககாலக் கபிலரும் பிறந்தார் என்றறிகிறோம். ஒருவேளை  மாணிக்கவாசகரைப் போல், கபிலரும் அமாத்திய (அமைச்ச) குலத்தில் பிறந்தாரோ, என்னவோ? தெரியாது. ஏனெனில் வாசகர் போலவே இவரும் பல்வேறு அரசரின் ஊடே வெகு எளிதில் புகுந்து வெளிவந்து விடுகிறார். பொ.உ. மு.143 இல்,  திருக்கோவலூருக்கு அருகில் தென்பெண்ணை ஆற்றின் நடுவில், கபிலர் குன்றில், உண்ணா நோன்புற்று கபிலர் இறந்திருக்கலாம் என்பர்   ஏன் இப்படி நோன்புற்று உயிர் துறந்தார் என்பது நமக்கு விளங்கவில்லை. ஏனெனில் பாரி மகளிரை விச்சிக் கோனுக்கும், இளங்கோவேளுக்கும் மணமுடிக்க இயலாத நிலையில் நோன்புற்றார் என்பதே நம்பமுடியாதுள்ளது.  பின்னால் ஒரு பார்ப்பனன் பாரிமகளிரை மணந்தான் என்று சிலர் சொல்வதுங் கூட பெரும்பாலும் ஊகமாகவே தெரிகிறது.  

3. ”சிலம்பின்” காலம், செங்குட்டுவன் காலம், நெடுஞ்சேரலாதன் காலம் ஆகியவற்றைக் கணித்தே புகழூர்க் கல்வெட்டு குறிக்கும் செல்வக் கடுங்கோ வாழியாதனின் காலத்தை நாம் கணிக்கமுடியும். அவன் காலங்கொண்டே கபிலரின் காலங் கணிக்கிறோம். தவிர, ஓர் ஆரிய அரசனுக்குத் தமிழ்கற்றுக் கொடுக்கக் குறிஞ்சிப்பாட்டு பாடினாரே, அது பெரும்பாலும் கடைசி மோரியன் பெருகதத்தனுக்கே (ப்ரகத்ரதன்; பொ.உ.மு.187-185) என ஆய்வு வழி தெரிகிறது. இவனை யாழ் பிரமதத்தன் என்னும் குறிப்புமுண்டு. இவன் குறுந் தொகையில் 184 ஆம் பாட்டைப் பாடியுள்ளான். கலிங்கக் காரவேலனின் (பொ.உ.மு. 185-173) சமகாலத்திலும் கபிலர் இருந்துள்ளார். அந்துவஞ்சேரல் இரும்பொறை கொங்குக் கருவூரை மீட்டதையும் பார்த்துள்ளார்.   

4. சங்ககாலக் கபிலரால் பாடப்பெற்றோர் அகுதை, இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன், கபிலர் - அகுதை, இருங்கோவேள், ஓரி, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக் கோன், வேள்பாரி, வையாவிக் கோப்பெரும்பேகன், மேற்சொன்ன பெருகதத்தன் ஆகியோராவார். கபிலர் பாடல்களில் வேள்பாரியின் தொடர்பால் பாடியதே அதிகம்.  சங்க இலக்கியத்தின் பெரும்பாலான பாடல்கள் பொ.உ.மு. 200 இலிருந்து பொ.உ.100 க்குள்  எழுந்திருக்கலாம் என்றே சொல்லமுடிகிறது இதற்கும் முந்தையப் பாடல்களும் சங்க இலக்கியத்திலுள்ளன. சங்க இலக்கியத்தின் காலத்தைப் பெரும்பாலும் பொ.உ.மு 600 இலிருந்து பொ.உ.150 வரை நான் கொண்டு செல்வேன். பொ.உ.மு.300-பொ.உ.300 என்ற காலத்தை நான் ஏற்பதில்லை.. 

மேற்சொன்ன கபிலர் தவிர, தொல்கபிலரென இன்னொருவரும் இருந்துள்ளார். அவர் பாடியதாய், அகம் 282, குறு, 14, நற். 114, 276, 328, 399 என 6 பாக்களுண்டு. அவையெலாம் வேந்தரையோ, வேளிரையோ பேசாது, பெரும்பாலும் சங்க காலத் தொடக்கக் குறிஞ்சிப் பாக்களாய் அவை தோற்றும். (பொ.உ.மு.600 க்கும் முந்தைய சனபதக் காலப் பாக்களாய் அவையிருக்கலாம்). ஆழ்ந்து படித்தால் தொல்கபிலர் என்பார் பாரிக் கபிலருக்கு முந்தையவராகவே தோற்றுகிறார். இவ்விரு கபிலர் போக, ஆவூர் மூலங்கிழார் பாடிய, கௌணிய விண்ணந் தாயனைக் குறித்த, புறம் 166 ஆம் பாடலில்  ”சாங்கியக் கபிலர் பற்றிய செய்தியும்” பெயரின்றி வரும். தொல்கபிலரும்  சாங்கியத் தோற்றுநரான ஆதிக்கபிலரும் ஒருவரா? தெரியாது. (இருப்பினும் ”தொல்” முன்னொட்டு எதைக் குறித்தது? - என்ற கேள்வி நம்மைக் குறுகுறுக்க வைக்கிறது.)  அடுத்த பகுதியில் சாங்கியக் கபிலர் பற்றி நிறையவே பேசுகிறேன். 

அன்புடன்,

இராம.கி.


Tuesday, September 01, 2020

கட்டிடவியல் சொற்கள் - 1

நண்பர் ஒருவர் கட்டிடவியல் சொற்கள் சிலவற்றைக் கொடுத்து அவற்றின் இணைகள் கேட்டிருந்தார். அவை கீழே: 

1.Cladding = கவசம்

2.Jamb = நிலை

3.Pilaster = போலித்தூண்

4.Form work = சட்டகம்

5.Aisle = வரந்தை

6.Rafter = கூரைத்தடம் 

7. Oculus = பலகணி 

8.Coffer = பேழை

9.Pediment = புரிமம் 

10.Arcade = கவான்

11.Filler Slab = நிறைப் பட்டைக் கல்

12.Interior = உள்ளகம்

13.Rat Trap Bond எலிவளைப் பற்றை

14.Masonry Course இட்டிகை வரிசை

15.Wattle and daub விளாற்று வேய்வும் பூச்சும்

16.Skirting = குறும் பாவடை

17.Slurry = கலவை

18.Trowel =சட்டுவம்

19.Shuttering =பட்டகை

20.Master Plan = பெரும் படிவு