Showing posts with label சொல்லாக்கம். Show all posts
Showing posts with label சொல்லாக்கம். Show all posts

Wednesday, October 07, 2020

சில நிறங்கள் - சொல்லொப்புமைகள்

ஆங்கிலம் - சங்கதம் - தமிழ்

Red. रक्त . Rakta அரத்தம்

Green. हरित . Harita குருந்து, கீரை

Blue. नील . Nīla நீலம்

Black. श्याम , काल. Śyāma, Kāla யாமம், காளம்

White. शुक्ल , श्वेत. Śukla, Śveta = சுலவம், வெள்ளை

Grey. धूसर . Dhūsara = தூசரை 

Brown. श्याव . Śyāva = யாவம்

Pink. पाटल . Pāṭala = பூங்கை, 

Yellow. पीत . Pītaḥ = பித்தம்

Orange. नारङग . Nāraṅga = நாரங்கை

Crimson. शोण . Śoṇa = சொன்னம்

Reddish Brown. अरुण . Aruṇa = அருணம்

Thursday, February 15, 2007

தெள்ளிகை - 2

"சரி, கல்வியை விட்டுவிடலாம், teaching- என்பதைச் சொல்லிக் கொடுப்பது என்று சொல்லலாமா?" என்று கேட்டால், அங்கேயும் ஒரு டொக்குப் போட வேண்டியிருக்கிறது.

சுல்>சொல் என்ற வளர்ச்சியிலும் கூட ஒலி என்ற பொருளே உள்ளிருக்கிறது. சொல்>சல் என்ற திரிவில் வருவதும் ஒலிப்பொருள் தான். சலசலத்துப் போகும் நீரோட்டத்தைச் சலம் என்று சொல்லும் போதும் ஒலித்தற் பொருள் தான் உள்ளே நிற்கிறது. (சலம் என்பது நல்ல தமிழ்ச்சொல்; ஜலம் என்ற வடசொல்லில் இருந்து அது வந்ததாய்ப் பலரும் தலைகீழாய்ப் புரிந்து கொள்ளுகிறார்கள்; இல்லை, ஜலம் என்பது தமிழ்ச் சலத்தின் திரிவு. நம்முடையது இல்லையென்று நாம் தொலைத்தவை மிகவும் அதிகம்.) ஒலித்தற் பொருளில் சல் என்ற வேரில் இருந்து கிளைத்து வரும் இன்னொரு சொல்லான சலங்கையை இங்கே நினைவு கொள்ளுங்கள்.

சுல்>சில் என்ற திரிவில் எழுந்த சிலம்புதல், சிலைத்தல் போன்ற வினைச் சொற்கள் கூட ஒலித்தல் என்ற பொருளையே உணர்த்துகின்றன. அறுபடை வீட்டில் ஒன்றான பழமுதிர் சோலையில் ஒலித்துப் பாய்கிற ஓடையைச் சிலம்பாறு என்றே சொல்லுகிறார்கள் அல்லவா? (அதை நூபுர கங்கை என்று வடமொழியில் பெயர்த்துச் சொல்வது வேதாரண்யம் போன்ற ஒரு தவறான, முட்டாள்தனமான, மொழிபெயர்ப்பு). பெண்கள் காலணியான சிலம்பும் ஒலிப்பொருள் வழியே எழுந்த சொல் தான். முத்துச் சிலம்பிற்கும், மாணிக்கச் சிலம்பிற்கும் ஒலி வேறுபட்டு எழும். ஒன்று பாண்டியொலி, இன்னொன்று சோழவொலி, இல்லையா? :-)

"அப்படியானால், teaching என்பதற்கு மறுதலையாய் learning என்று பயன்படுத்துகிறார்களே?" என்று சொல்லி, அதற்கு அணைவாய், செருமன் சொல்லான lehren என்பதைக் காட்டினால், நான் புன்சிரித்துக் கொள்ளுவேன்; அது சரியா என்பதை கீழே உள்ள பத்தியைப் படிக்கச் சொல்லி உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

to learn:

O.E. leornian "to get knowledge, be cultivated," from P.Gmc. *liznojan (cf. O.Fris. lernia, O.H.G. lernen, Ger. lernen "to learn," Goth. lais "I know), with a base sense of "to follow or find the track," from PIE *leis- "track." Related to Ger. Gleis "track," and to O.E. laest "sole of the foot" (see last (n.)). The transitive sense (He learned me how to read), now vulgar, was acceptable from c.1200 until early 19c., from O.E. laeran "to teach" (cf. M.E. lere, Ger. lehren "to teach;" see lore), and is preserved in the adj. learned "having knowledge gained by study" (c.1340).

ஆக, முன்னால் போட்ட தடத்தில் பின்னால் போவது தான் learning. எங்கள் ஊர்ப் பக்கம் திண்ணைப் பள்ளிக்கூட ஆசான், மணலிலோ, தாளிலோ "ஆனா, ஆவன்னா....." என்று வரைவுகளை எழுதி வைத்து, அதன் மேல் நம்மையும் (தடங்களைப்) பின்பற்றி எழுதச் சொல்லுவார். (மணலில் விரல் தேய மாய்ந்து, மாய்ந்து, எழுதியிருக்கிறேன்.) "நான் எழுதுவதைப் பார்த்து அப்படியே விளம்பு" என்று ஆசான் சொல்லுவார். விளம்புதல் என்பது விளாம்புதலின் வழி வந்தது. விளாம்புதலுக்கும், விளாவுதலுக்கும் தொடர்பு உண்டு. "வெந்நீரை விளாவி விட்டாயா?" என்பது தென் தமிழகப் பேச்சு. இதில் இருக்கும் சொற்பொருள் நீட்சியைப் பாருங்கள். விளாவுதல் என்பது ஒரு ஏனத்தில் இருப்பதை அப்படியே ஒரு குச்சி வைத்துச் சுற்றிச் சுற்றிக் கலப்பது. விளாவுதல் என்பது விளாம்புதல் ஆகி முடிவில் விளம்புதல் எனவும் ஆனது. விளம்புதலை விளர்த்தல் என்றும் சொல்லுவது உண்டு. முடிவில், ஏதொன்றையும் ஆசான் சொல்ல, நாம் திருப்பிச் சொல்வது, திருப்பி எழுதுவது, திருப்பிச் செய்வது என எல்லாமே விளம்புதல் என்று ஆயிற்று. திண்ணைப் பள்ளி வழக்கின் படி,

to learn = விளம்புதல்
learning = விளம்பு

"learning disability ஒரு சிறுவனுக்கு இருக்கிறது", என்று சொன்னால், விளம்புவதில் இயலாமை இருக்கிறது என்று பொருள். நம்மூர் மரபுகளை விடாது இருந்தால், "விளம்புதலை"க் காப்பற்ற வேண்டாமோ? நம்முடைய கவனக் குறைவால், நம் மொழிநடை மொண்ணையாக இருக்க வேண்டுமா?

இனி, teaching என்ற கருத்தைச் சற்று நேரம் தொய்வு விட்டுப் பிறகு பிடிப்போம்; அந்த நேரத்திற்குள் மற்ற தொடர்புடைய சொற்களைப் பார்ப்போம்.

இந்த வரிசையில் வருவது lecture. உரத்த குரலில் பேசினான் என்று சொல்லுகிறோமே, அந்த உரத்தலின் பொருளும் ஓசை எழுப்புதலே. உரத்தது உரை = lecture. உரை என்பதை விளக்கம் என்ற பொருளிலும் நாம் பயன்படுத்துகிறோம். உரத்தலின் முந்தைய உரு உலத்தல். ஒவ்வோர் உலத்தமும் ஒரு பாடம் என்பதைத்தான், ஆங்கிலத்தில் lesson என்கிறார்கள். சங்கத் தமிழில், ஓத்து, ஓதம் என்று சொல்லுவது கூட lesson தான்; பல இலக்கிய உரையாசிரியர்கள் தங்கள் உரைகளின் ஒவ்வொரு பெரும் பகுதியையும் ஓத்து என்று சொல்லுவார்கள். அதன் வழி, lecture என்பதற்கு இணையாய், உலத்து, ஓத்து, உரை எனப் பலவாறாய்ச் சொல்லலாம்; உலத்தர், ஓதகர், உரையாளர் என்பவர் lecturer.

அழனிக்கு முன்னால் இருந்து வேள்வி மந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓதுபவன் அழனியோதி (agnihotri; அழனியை வடமொழியில் அக்னி என்று சொல்லுவார்கள். ஓதி ரகரம் நுழைந்து otri ஆகும்; h என்பது உடம்படு ஒலியாய் உள்நுழைந்து நிற்கும். இதை விளக்கப் போனால், இன்னும் நாலுபேர் நான் சங்கதத்தைக் கீழிறக்கி விட்டேன் என்று வலைப்பதிவுகளில் காவிகட்டிப் பாய்ந்து வருவார்கள். அய்யா, சங்கதத்தைக் கீழிறக்குவது என் வேலையல்ல. தமிழின் ஆழத்தைக் காண்பது என் வேலை; தமிழை இந்தக் காலத்திற்குத் தகுந்தாற் போலப் புதுக்குவது என் முயற்சி. இதில் நான் வெல்லலாம்; வெல்லாமலும் போகலாம். அதனால் என்ன? என் கடன் பணி செய்து கிடப்பதே.); சிவன் கோயிலில் தேவாரத்தை ஓதுபவர் ஓதுவார். அதே போலக் கல்லூரியில் ஒரு பாடத்தை நமக்கு ஓதுபவரும் ஓதுவார் தான்.

"அய்யோ, போச்சு! என்ன இவர்? அழனியோதியையும், தேவார ஓதுவாரையும் ஒரே தட்டில் வைத்து lecturer-ஓடு இணைத்து வைத்துப் பேசுகிறார்?" என்று ஒரு சிலர் திகைத்துப் போகலாம். ஆனால், சாதி வழக்கு கூடிப் போன நம்முடைய அரை நிலவுடைமை - அரை முதலாளியக் குமுகாயத்தில், இது போன்ற சிந்தனைக் கட்டுப்பாடுகள் நம்முடைய முரண்பாடுகளைக் களையவொட்டாமல் தடுக்கின்றன. நிலவுடைமைப் போக்கில் அழனியோதி உயர்ச்சியாகவும், ஓதுவார் தாழ்ச்சியாகவும், முதலாளியப் போக்கில் இரண்டுமே தாழ்ச்சியாகவும் தோன்றி, முடிவில் விரிவுரையாளர் என்று lecturer - யை நீட்டி முழக்கிச் சொன்னால் தான் "அப்பாடா" என்று சிலர் நிறைவு கொள்ளுகிறார்கள்.

lecturer -யை, ஓதகர் என்று சொன்னால் நாம் குறைந்து விடுவோமோ, என்ன?

lesson = உலத்தம், ஓதம்
lecture = உலத்து, ஓத்து, உரை
lecturer = உலத்தர், ஓதகர், உரையாளர்

ஒதகரை ஏற்றுக் கொள்ளுவது சரவலாய் இருந்தால், குறைந்தது lecturer -யைக் குறிக்கும் விரிவுரையாளர் என்று சொல்லின் விரியென்ற முன்னொட்டையாவது வீசி எறியலாமே? உரையாளர் என்றாலே புரிந்து போகும் அல்லவா? (தொழில் நுட்பத்தில் தொழிலைத் தூக்கி எறியப் பரிந்துரைத்தது போல இதை வைத்துக் கொள்ளுங்களேன்!:-))

அடுத்தது study, student என்ற சொற்கள்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, February 13, 2007

தெள்ளிகை - 1

Open source teaching பற்றிய ஒரு வலைதளத்தைச் சுட்டி, "அதைத் தமிழில் மொழிமாற்றித் தர இயலுமா?" என்று, நண்பர் மணிவண்ணன், அவரிடம் இன்னொருவர் கேட்டதைப் புறவரித்து (forward), ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சுற்றி வளைத்த சொற்களைப் புழங்காமல், இயல்பான தமிழ் நடையும் வழுவாமல், அந்த வலைதளத்தை மொழிபெயர்ப்பது எனக்குச் சரவலாய்த் தெரிந்தது. குறிப்பாக teaching என்ற சொல். பல நேரங்களில், கல்வி, படிப்பு, சொல்லிக் கொடுத்தல் போன்ற சொற்களை வைத்தே teacher, teaching, taught என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையாய் தமிழில் நாம் ஒப்பேற்றி விடுகிறோம். ஒருமுறையாவது, "what is teaching?" என்பதற்கு நேரடியாய்ப் பலரும் விடை சொல்லுவதில்லை.

Teacher என்பதற்கு நாம் பயன்படுத்தும் ஆசிரியர் என்ற சொல்லை, "அறிவில், படிப்பில் பெரியவர், எனவே ஆசிரியர்" என்றுதான் பொருள் கொள்ள முடியும். ('ஆசு + இரியர் = குற்றங்களை இல்லாமற் செய்பவர்' என்பது சரியான விளக்கம் அல்ல.) தவிர, இது ஆச்சார்ய என்ற வடசொல்லின் தமிழ் வடிவம். இன்னும் ஆழம் போய், ஆச்சார்யாவிற்கு மூலம் பார்த்தால், ஆசான் என்ற தமிழ்ச் சொல் வந்து நிற்கும். (தமிழ்-->வடமொழி-->மீண்டும் தமிழ் என்று "மூக்கை நேரே தொடாமல், பின்னாற் சுற்றித் தொடுவது" பல தமிழ்ச்சொற்களில் நடந்திருக்கிறது. பொதுவாய், வடமொழித் தாக்கம் அறியாமல், நல்ல தமிழ்ச் சொற்களை மீட்க முடியாது.)

ஆசான் என்ற தமிழ்ச்சொல் சேரலத்திலும், குமரித் தமிழிலும் "படிப்பு, கலை, ஆயுதம், கருவி" எனப் பல துறைகளில் வெகுவாய்ப் புழங்கும். மற்ற வட்டாரங்களில் இந்தச் சொல் மறைந்தே போய் விட்டது. "அது எப்படி ஆசான்?" என்று கேட்டால், அய்யன்>ஆயன் என்ற தமிழ்த் திரிவைத் தான் சுட்ட வேண்டும். ஆயம் என்பது கூட்டம். ஆயன், ஆதன் என்பவை பெரியவன் அல்லது தலைவன் என்ற பொருளைக் கொண்டவை. பழைய சேர அரசர்களின் தனிப் பெயர்கள் ஆதன் என்று முடிவதும் கூடத் தலைவன் என்ற பொருளைக் கருதியே ஆகும். ஆதன்>ஆசன்>ஆசான் என்று கூட 'ஆசான்' எழுந்த முறையைச் சொல்லலாம்.

அய்யா என்ற நடைமுறைச் சொல்லையும் பெரியவர், தலைவர் என்ற பொருளில் தான் நாம் பயிலுகிறோம். (உபாத்ய என்ற வடசொற் பாடம் உப ஆத்ய என்று பிரியும்; அதிலும் ஆதன்>ஆத்யன்>ஆத்ய என்று அமையும் திரிவை ஓர்ந்து பார்க்க முடியும். உப ஆத்யா>உபாத்யா>உபாத்தியர்>வாத்தியார் என்ற முறையில் மீண்டும் தமிழில் திரித்துக் கடன் வாங்கி நிற்பது இன்னொரு கதை.) ஆசானுக்கு மாற்றான குரு, குரவர், குரிசில் போன்ற சொற்களும் கூடப் பெரியவர், தலைவர் என்ற பொருளிலேயே அமைகின்றன. [போதகர் என்ற இன்னொரு சொல்லைப் பற்றிக் கீழே பார்ப்போம்.]

அய்யன், அத்தன், அந்தன், அந்தை, அச்சன் என்ற தந்தைச் சொற்களும், ஆத்தாள், அய்யை, ஆயாள், ஆச்சி, அத்தை என்னும் பெண்பாற் சொற்களும் கூட பெரியவர், தலைவர் என்ற பொதுப் பொருளைத் (generic meaning) தான் காட்டுகின்றன. அச்சொற்களின் விதுமைப் பொருள்கள் (specific meanings) பேச்சு வழக்கில் வந்தவையாகும். "அன்னை, தந்தை, குரு, தெய்வம்" என்னும் நால்வரையும் தமிழ் மரபின் படி பெரியவர், தலைவர் என்ற பொருளில் தான் இவை போன்ற சொற்களால் அழைக்கிறோம். [கத்தோலிக்கத் துறவியைக் கூட சேரலத்தில் அச்சன் என்று தான் பெரும்பாலும் அழைக்கிறார்கள். ஆனால், இன்றையத் தமிழ்க் கத்தோலிக்கரோ, துறவியை அப்பன்/அத்தன் என்று சொல்லத் தயங்கித் father என்றே பெரும்பாலும் அழைக்கிறார்கள். தமிழைப் பழகுவது தமிழருக்குத் தான் கடிதாய் இருக்கிறது போலும். :-)]

அந்தணர் என்ற சொல் கூடத் தமிழில் தவறாகவே புரிந்து கொள்ளப் படுகிறது. அந்தன் என்ற சொல் மேலும் ஒரு 'அன்'னைப் பெற்று, நடுவில் வரும் னகரத்தைத் ணகரமாய்த் திரித்து, அந்தணன் என்று உருக்கொண்டு, பெரியவன் என்ற பொருளைக் காட்டும். (இதை, அம் + தணன் என்று பிரித்து, விந்தையான முறையில் விளக்கம் சொல்லுவது சரியல்ல.) பெருமானர், அந்தணர், அய்யர், அய்யன்கார் ஆகிய எல்லாச் சொற்களும் தொடக்கத்தில் சாதி குறிக்காமல், "பெரியவர்" என்ற பொதுமைப் பொருளைத் தான் உணர்த்தின. "அந்தணர் என்போர் அறவோர்" என்ற குறள் வரி கூடப் பொதுப் படச் சொன்னது தான். "ஞான நிலை அடைந்தவரே பெருமானர், பெருமானர் என்ற சொல்லைப் பிறப்பை வைத்துக் கையாளக் கூடாது," என்று கோதம புத்தரும் தம்ம பதத்தில் சொல்லுவார்; "யார் பெருமானன்?" என்று அதிலே மிகத் தெளிவாக வரையறை காட்டிச் சொல்லுவார்.

பொதுவாக, வெளிரிய நிறம் குறித்து எழுந்த சொல்லான பால்ப்பார்>பார்ப்பார் என்ற விதப்புச் சொல்லையும், அந்தணர் என்ற பொதுமைச் சொல்லையும் நாம் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிய வேண்டும். "பார்ப்பனர் என்பவர் அந்தணராய் இருக்கலாம்; அதே பொழுது, எல்லா அந்தணரும் பார்ப்பனர் அல்லர்" என்ற கருத்து சங்க இலக்கியத்தை ஆழமாய்ப் படித்தால் புலப்படும். பின்னாளில் அனைத்தையும் சாதி மயமாய் ஆக்கிப் பொதுமைச் சொல்லுக்கு விதப்புப் பொருளைத் தொடர்புறுத்திச் சிவனையே சிவ பெருமான் என்றும், அதே பெயரைச் சற்று திரித்து சு ப்ரம்மண்யன் என்று முருகனைக் குறித்தும் பெயர் எழுந்த கதை விந்தையானது. (சிவ>சு, சு என்று தொடங்கும் வடமொழிச் சாயலுள்ள சொற்கள் பலவும் சிவ என்ற நல்ல தமிழ் முன்னொட்டில் தொடங்கியவை தான்; ஆழப் பார்த்தால் புரியும். பெருமான்>ப்ரம்மண்யன்).

தந்தை, தாத்தன், ஊர்த் தலைவன். கணங்களின் தலைவன், அகவை கூடியவன், கல்வியில் பெரியவன் எனப் பல்வேறு பொருள்களைச் சுட்டும் சொற்கள் எல்லாம் உயர்ச்சிப் பொருள் கொண்ட ஐ என்னும் வேரில் கிளைத்தவையே. "ஐ வியப்பாகும்" என்பார் தொல்காப்பியர். வியப்பு என்பது இங்கே awe என்றே பொருளில் ஆளப்படுகிறது. நம்மிலும் பெரியவரை, நாம் வியந்து அய்யா என்று அழைக்கிறோம். ஐ பற்றித் தொடர்ந்து எழுதினால் பெருகிக் போகும். [ஆர்ய என்னும் வட சொல்லில் இருந்தே ஐ கிளைத்தது என்னும் வல்வழக்குகளைத் தள்ளி வைத்து மேலே நகருவோம்.]

ஆசானுக்கு எதிராய்ச் சொல்லப்படும் மாணவன்/மாணாக்கன் என்ற சொற்களும் கூட teaching பற்றி எழாமல், மாந்த அளவு பற்றியே கிளைத்தவையாகும். மாணவன் என்பவன் சிறுவன்; மாணாக்கன் சிறுத்தவன்.

"மாணிக் குறளனே தாலேலோ" என்றும் (நாலாயிரப் பனுவல் 44), "மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று" என்றும் (நாலாயிரப் பனுவல் 219), மாணாகி வையம் அளந்ததுவும்" என்றும் (நாலாயிரப் பனுவல் 8:10:8)

என்று பெரிய திருமொழி சொல்லும். இங்கே மாணன் என்பவன் குறளன், குட்டையானவன், சிறுவன். அதன் நீட்சியான மாணவனும் சிறுவன் தான். மாற்றுச் சொற்களான பையன், பிள்ளை ஆகியவையும் தமிழில் சிறுமைப் பொருளையே குறிக்கின்றன. பிள்ளைக்கு நிகரான pupil என்ற ஆங்கிலச் சொல்லும் கூட இலத்தீன் வழியே சிறுமையே குறிக்கும். மாணின் தொடர்பான மணி என்ற சொல்லிற்கும் கூடச் சிறுமைப் பொருள் உண்டு. மணிக் கயிறு, மணிக் காடை, மணிக் குடல், மணித் தக்காளி, மணிச் சம்பா, மணிச் சுறா, மணிப் பயறு, மணிப் புறா, மணிக் கட்டு போன்றவற்றை பார்த்தால் மணியின் சிறுமைப் பொருள் புரியும்.

ஆக நாம் பயன்படுத்தும் ஆசான், மாணவன் என்னும் இரண்டு வகைச் சொற்களும், teaching என்ற தொழிலோடு தொடர்பு காட்டாமல், பெரியவன், சின்னவன் என்ற பொருட்பாடுகளிலேயே அமைந்து விடுகின்றன.

சரி, teaching என்பதைக் கல்வி என்று சொல்லலாமே? - என்று யாரோ ஒரு நண்பர் அங்கு கேள்வி எழுப்புகிறார். நான் அறிந்தவரை அப்படிச் சொல்லமுடியாது என்பதே என் மறுமொழி. நம்மில் பலரும் இக் காலத் தமிழில், துல்லியமான சொற்களைப் புழங்குவதை விட்டு, இருப்பதை வைத்துப் பூசி மெழுகிக் கும்மியடிப்பதையே ஒரு கலையாகத் தமிழில் ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இதன் விளைவாகத் தான் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம் போன்ற கலை எழுத்துக்களுக்கு மட்டுமே தமிழை வைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றிற்கும், குறிப்பாகத் துறை சார்ந்தவற்றிற்கு, ஆங்கிலம் பயன்படுத்தும் போக்கு நம்மிடம் அதிகப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சிலர் வடசொல் கலந்து எழுதிவிட்டு "அதுதான் சிறந்த நடை, நல்லதமிழ் நடை ஒரு 'முயூசிய நடை' " என்று தலைகீழாய் வவ்விக் கொண்டு இருப்பார்கள். (என்ன சொல்லுவது? ;-) மூயூசியம் என்பதற்குத் தமிழ்ச் சொல் அவருக்குத் தெரியவில்லை; மூதையம் என்ற தமிழ்ச்சொல் நினைவிற்கு வருமோ?)துல்லியச் சொற்களைப் புழங்காததனால் தான், இப்படி நடுநடுவே வடசொற்களையும், ஆங்கிலச் சொற்களையும் பெய்து, ஒரு கலவை மொழியை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

ஏதொரு தமிழ்ச்சொல்லும், அடித்து வைத்தாற் போல, வரையறை செய்தாற் போல் "இதற்கு இது தான்" என்று தெளிவாக இருக்க வேண்டாமோ? பலசொல்-ஒருபொருள், அல்லது ஒருசொல்-பலபொருள் போன்றவை இருக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எந்த ஒரு பொருளுக்கும் ஒரு சொல்லாவது நம் மொழியில் விதப்பாக இருக்க வேண்டும் என்கிறேன். அப்பொழுது தான் தமிழ்மொழி இன்றையத் தேவைக்கு உகந்தாற் போல் புத்தாக்கம் பெறும். நூறாண்டு கழிந்தாலும் அது நிலைக்கும்; "நம் பிறங்கடைகள் (successors) இனிக் காப்பாற்றுவார்கள்" என்ற நிறைவில் நாம் போகலாம்.

சரி, teaching -ற்கு வருவோம்.

கல்லுதல் என்பது ஓசையெழுப்புவது. கல்+தல் = கற்றல் என்பதும் கூட ஓசையெழுப்புதல் தான். கல்வித்தல்/கற்பித்தல் என்பது கற்றல்/கல்லுதலின் பிறவினை; அதாவது, ஓசையை எழவைத்தல். அந்தக் காலத் திண்ணைப் பள்ளிகளிலும், இந்தக் கால இசுலாமியர் மதரசாப் பள்ளிகளிலும், சத்தம் போட்டே பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்; அல்லது கற்பிக்கிறார்கள். அது ஒருவகை மரபு. (என் அகவையில் உள்ள பலரும் நாட்டுப் புறங்களில் கீழே வருவது போலத் தான் படித்தோம்; கற்பிக்கப் பட்டோ ம்.)

"ஆ, ஆவன்னா, ஈனா, ஈயன்னா,
ஓரோண் ஒண்ணு; ஈரோண் ரெண்டு;..... எண்ணிரண்டு பதினாறு......
அறஞ்செய விரும்பு...... .......
பிச்சை புகினும் கற்கை நன்றே"

என்ற வகையில் அது போய்க்கொண்டு இருக்கும். (திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்பவை இன்று காணாது போய்விட்டன. எல்லோரும் மக்காலே வழிமுறைக்கு வந்துவிட்டோ ம்.) சத்தம் போடாமல் படிக்கும் கலையை பல நாட்கள் கழித்துத்தான் நாம் மரபுவழி சொல்லிக் கொடுக்கிறோம். "சத்தம் போடாத கல்வி" என்ற சொற்றொடர் கூடத் தமிழில் ஒரு முரண்தொடை தான்.

இருப்பினும் இன்றைக்குக் கல்வி என்ற சொல்லின் பொருட்பாடு நீண்டு விட்டது. கிட்டத் தட்ட education என்பதற்கு இணையாகவே அந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில், education என்பதற்கு ஆங்கில அகரமுதலிகளில் கொடுத்துள்ள சொற்பொருளோ சற்றே வேறுபடும்.

educate:

1447, from L. educatus, pp. of educare "bring up, rear, educate," which is related to educere "bring out," from ex- "out" + ducere "to lead" (see duke). Meaning "provide schooling" is first attested 1588 in Shakespeare. Educationese "the jargon of school administrators" is from 1966; educrat first attested 1968, usually pejorative, second element from bureaucrat (q.v.). Educable is from 1845. Educated guess first attested 1954.

இங்கே அறிவூட்டம், அறிவுயர்த்தம் அல்லது அறிவெழுச்சியே education என்று சொல்லப் படுகிறது; சுருங்கச் சொன்னால், to educate somebody is to make him knowledgeable. ஒருவனை ஏதோ ஒன்றை அறியச் செய்தலே education என்று ஆகிவிடுகிறது.

education = கல்வி, அறிவூட்டம்educator = கற்பிப்பவர் (இந்தச் சொல்லைப் பயனாக்குபவர் இப்பொழுது அரிது; பெரும்பாலும் கல்வியாளர் என்றே சொல்கிறார்கள்), அறிவூட்டுநர்

"சரி, கல்வியை விட்டுவிடலாம், teaching- என்பதைச் சொல்லிக் கொடுப்பது என்று சொல்லலாமா?" என்று கேட்டால், அங்கேயும் ஒரு டொக்குப் போட வேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Monday, January 29, 2007

கணிதச் சொற்கள்

ஒரு முறை, தமிழ் விக்சனரி மடற்குழுவில் கணிதம் பற்றிய சிறு சொற்தொகுப்பைக் கொடுத்து, இணையான தமிழ்ச் சொற்களைக் கேட்டிருந்தார். (விக்சனரி மூலமாய் அந்த இளைஞர் செய்யும் நல்ல பணிக்கு என்னுடைய வாழ்த்து.) அதற்குச் சிலர் தம் பரிந்துரையைக் கொடுத்திருந்தார். அப் பரிந்துரைகளைப் படித்த பின், தொகுதியின் பல சொற்களை நான் அசை போட்டுக் கொண்டிருந்தேன். என் பரிந்துரைகளை இங்கே கொடுக்கிறேன். இவற்றை ஏற்பது படிப்போரின் உகப்பு.

அச் சொற்தொகுதியில் முதலில் வந்தது number; இதற்கு அவர் கொடுத்த "எண்" என்பதோடு, சிலபோது "எண்ணிக்கை" என்பதும் பயன்படக் கூடும்.

இரண்டாவதாய் literal என்பதற்கு மதிப்புரு என்று சொல்லியிருந்தார்; இதைக் காட்டிலும், ”எழுத்தாறு” என்பது சரியாகும் என எனக்குத் தோன்றுகிறது. "எழுதிய படி" என்பதைத்தான் "எழுத்து ஆறு = எழுத்தாறு" என்று சொல்லுகிறேன். "literal ஆக எடுத்துக் கொள்ளாதே" என்பதை "எழுத்தாற்றாய் எடுத்துக் கொள்ளாதே!" என்று சொல்லலாம். "If you take it literally, you will get only this meaning." "இதை எழுத்தாற்றாய் எடுத்துக் கொண்டால், இந்தப் பொருட்பாடு தான் கிடைக்கும்."

(எழுத்தல்>எழுதல் என்ற வினைச்சொற்கள் இலத்தல்>இழுத்தல் என்னும் வினையில் இருந்தே திரிந்து வந்திருக்க முடியும் என்று பாவாணர் சொல்லுவார். அதன் அடிப்படையில் இங்கு தொடர்ந்து வரும் சொற்களும் உடனொட்டிய பொருட்பாடுகளைக் காட்டும். letter = எழுத்து, literature = இலக்கியம், literacy = எழுதுகை அறிவு, literary = இலக்கிய)

தொகுதியின் மூன்றாவது சொல், கணிதத்தில் வரும் term என்பதாகும்; இதற்கு இணையாய் உறுப்பு என்று அங்கு சொல்லியிருந்தார்கள். ஒரு கணக்குச் சரத்தில் (mathematical series) இருக்கின்ற சரக் கண்ணிகளை வெறுமே உறுப்பு என்று சொல்வது எனக்கென்னவோ, சரியாய் வராது என்று தோன்றுகிறது. ஒரு கொத்தின் (set) உள்ளே இருப்பவற்றை வேண்டுமானால், உறுப்புக்கள் (members) என்று சொல்லலாம். ஆனால், term என்பது உறுப்பு என்று சொல்லுதற்கும் மேம்பட்டது. கொடுத்திருக்கும் ஒரு சரத்தில் மேலும் மேலும் term களைக் கூட்டிக் கொண்டே போனால், சரத்தின் மதிப்பு இன்னும் துல்லியப்பட்டுக் கொண்டே வரும். காட்டாக,

e = 1+ 1/1! + 1/2! + 1/3! + 1/4! + ............ 1/n! +....... ,

என்ற மடக்கைச் சரத்தில் (exponential series), முதல் இரு term களைக் கூட்டினால் 2 என்ற மதிப்புக் கிடைக்கும். இதோடு, மேலும் இரு term களைச் சேர்த்துக் கொண்டால், இன்னும் துல்லிய மதிப்பாய் 2.666667 என்று கிடைக்கும். இன்னும் கூட்டுத் தொகையில் term களைச் சேர்க்கச் சேர்க்கச் சரத்தின் பக்கமடை மதிப்பு (approximate value) மேலும் மேலுந் துல்லியமாய்த் (accuracy) தெரிய வரும். சுருங்கச் சொன்னால், சரத்தின் மதிப்பு தீர்மானமாகும்.

தீர்தல்/தீர்த்தல் என்ற வினை முடிதல்/முடித்தல் என்ற பொருளைக் கொடுக்கிறது. "அவனைத் தீர்த்து விடு" என்று பேச்சு வழக்கின் மூலம், "அவனை முடித்து விடு" என்று தானே பொருள் கொள்ளுகிறோம்? தீர்த்துவிடு என்பது ஆங்கிலத்தில் terminate என்ற பொருள்தானே கொள்கிறது? (இதே போலத் தீர்வு என்ற சொல்லும் முடிவு என்ற பொருள் கொள்ளுகிறது அல்லவா?) அடுத்து, determine = தீர்மானி; determination = தீர்மானம் என்று பொருள் கொள்ளுவதை எண்ணிப் பார்க்கலாம். (பலரும் decisions என்பதற்கும் தீர்மானங்கள் என்றே சொல்லுகிறார்கள். காட்டாக, மாநாட்டுத் தீர்மானங்கள் என்ற பொதுச் சொல்லாட்சி. என்னைக் கேட்டால் அவற்றிற்கு decisions என்பதற்கு முடிபுகள் என்பதே சரியாக இருக்கும்.)

இப்படி ஓர்ந்து பார்த்தால், சரத்தின் மதிப்பைத் தீர்ப்பவை, தீரப் படுத்துபவை, termகள் ஆகும். தீர்மம் என்ற சொல் term என்பதற்குச் சரியாக இருக்கும். அதோடு தொடர்புறும் மற்ற சொற்களோடும், அது ஒத்திசையும். ஆற்று முனையைக் குறிக்கும் ஆற்றுத் தீரம் என்ற சொல்லாட்சியை இங்கே நினைவு கொள்ளுங்கள். (நதி தீரம் என்று வடமொழிப் படுத்திச் சொல்லுவார்கள். தீரம் என்பது வடமொழியல்ல; வடமொழியில் சற்றே ஓசை திரிந்து பயன்படுத்தப் படும் சொல்; அவ்வளவுதான்.) தேர்தலில், ஒருவரைத் தெரிந்தெடுக்கும் போது விதிக்கின்ற பொறுப்புக் காலத்தையும் தீர்மம் என்றே சொல்லலாம். [காட்டாக, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரின் தீர்மம் 5 ஆண்டுகள் ஆகும்.] இதன் அடிப்படையில் technical terms என்பதை நுட்பத் தீர்மங்கள் என்று சொல்லலாம் (பலரும் கலைச்சொற்கள் என்றே சொல்லிப் பழகிவிட்டோம். துல்லியம் பார்த்தால் இதுவும் மாறவேண்டும்.)

term என்பதை ஒட்டி, terminal, terminus ஆகிய இரண்டையும் தீர்முனை, தீர்முனையம் என்று சொல்லலாம்; இதில் சுருக்கம் வேண்டினால், தீர் என்பதைத் தவிர்த்து முனையம் என்று சொல்லலாம். (அப்படித்தான் சென்னை வான்புகல் நிலையத்தில் - airport - சொல்லுகிறார்கள்; காமராஜ் உள்நாட்டு முனையம்; அண்ணா பல்நாட்டு முனையம்.) terminology என்ற சொல்லை தீர்மவியல் என்று சொல்லலாம்.

நான்காவதாய் expression என்பதற்குக் கோவை என்று அந்தத் தொகுதியில் கொடுத்திருந்தார்கள். கோத்தல் என்பது சேர்த்தல் என்றும், கோவை என்ற பெயர்ச்சொல் சேர்த்தது என்றும் பொருளைத் தரும். சேர்த்தது என்பது சரம் என்ற பொருளை உள்ளார்ந்து தரக்கூடும். ஆனால், expression என்பது ஒரு சரமாய் இருக்கத் தேவையில்லை. கணிதத்தில் relations (=உறவுகள்), equations (=சமன்பாடுகள் அல்லது ஒக்கங்கள்), functions (=பந்தங்கள்) போல expression என்பது ஒரு சில குறிப்பிட்ட, பந்தப்படாத வேறிகளை (independent variables) வைத்துக் கொண்டு, பந்தப்படும் வேறிகளை (dependent variables) வெளிப்படுத்துவதைக் குறிக்கும். இன்னும் கொஞ்சம் விளக்கமாய்ச் சொன்னால், ஒரு கட்டகத்தில் (system) பந்தப்படாத வேறிகள் நினைத்தபடியெல்லாம் இருக்க முடியாது. இதற்கென்று ஒரு நுணுமக் எண்ணிக்கை (minimum number) உண்டு. அந்த நுணும எண்ணிக்கைக்கிற்கு மேல், வேறிகள் இருக்குமானால், அந்த வேறிகள் எல்லாம் நுணும வேறிகளில் (minimum variables) இருந்து வெளிப்படுத்துவதாகவே இருக்கும். expression என்பதை வெளிப்பாடு என்று சொல்லுவதே சரியாக இருக்கும். கணிதம் அல்லாத துறைகளிலும் வெளிப்படுத்துதல் என்ற வினையையே to express என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறோம்.

அடுத்து ஐந்தாவதாய், natural number என்பதற்கு இணையாக இயல்பு எண் என்று கொடுத்திருந்தார்கள். இயல் எண் என்றே சுருங்கச் சொல்லிவிடலாம். கூடிய மட்டும் கூட்டுச் சொற்களைச் சொல்லும் போது, தேவையில்லா ஈறுகளை விலக்குவது நல்லது. இதன் மூலம் சொற் சுருக்கமும் பலுக்க எளிமையும் கிடைக்கும்.

ஆறாவது real number; இதை மெய்யெண் என்று குறித்திருந்தார்கள். ஆனால் மெய் என்பது truth என்பதற்கே சரியாக வரும். real என்பதற்குச் சரியாக வருமோ? முதலில், real என்ற கருத்தைத் தமிழில் எப்படிச் சொல்கிறோம் என்று பார்ப்போம். எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம் "Is it really true?". இதைத் தமிழில் ஆக்கும் போது "இது உள்ளபடியே உண்மையா?" என்றுதானே சொல்லுகிறோம்? "அது என்ன உள்ளபடி?" என்று மேலே உள்ள வாக்கியத்தை ஓர்ந்து பார்த்தால், நாம் தேடும் சொல் சட்டென்று புலப்பட்டு விடும்.

இன்னொரு பயன்பாட்டையும் சொல்லுகிறேன்.

கொஞ்சம் கருப்பாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு மணம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். (கருப்பு என்றால் மாநிறத்திற்கும் சற்று அடர்ந்த நிறம். மாநிறம் என்றால் தமிழில் என்னவென்று தெரியுமோ? மாங்கொழுந்து நிறம் எதுவோ, அதுதான் மாநிறம். மாங்கொழுந்தில் மஞ்சள் கெழுவும் (yellow colour) ஊடே ஓடினாற் போல் இருக்கும். மஞ்சள் பூசிய தமிழ் மகளிரும், அந்தப் பழக்கத்தின் காரணமாய் கொஞ்சம் மாங்கொழுந்து போல் இருப்பார்கள். தமிழரில் கணிசமானவர் மாநிறம் தான். மாநிறத்தை வேறு மாதிரி விளக்கிச் சொல்வது கடினம்.) "அவள் என்ன நிறம்?" என்று மற்றவர் கேட்டால், எங்களூர்ப் பேரிளம் பெண்கள், கொஞ்சம் நளினமாக, "உள்ளது போல் இருப்பாள்" என்று சொல்லுவார்கள். அதாவது கொஞ்சம் கருப்பு என்று சொல்வதற்குக் கூச்சப்பட்டு, "எல்லா இடத்திலும் எப்படிக் கருப்பு உள்ளதோ, அதுபோல கருப்பு" என்ற பொருளில் சொல்லுவார்கள். இங்கே reality என்பது உள்ளது என்று சொல்லப் படுகிறது. கருப்பு என்பது தமிழரின் reality. (இதில் வெட்கப்படத் தேவையில்லை). அங்கும் இங்குமாய்க் கொஞ்சம் வெளிர்மை (fairness) ஒரு சிலரிடம் தென்படலாம். ஆனால் உள்ளது எதுவோ, அதுதானே கிடைக்கும். உள்ளது என்பது reality தான்.

இனி உள்ள படிக்கே என்று மேலே சொன்னோமே, அதன் தொடர்ச்சியாய் உள்ளமை என்ற சொல் realistic என்பதைக் குறிக்கும். (உள்ளமை என்று சொன்னவுடன் உண்மை என்ற தொடர்பான சொல் நினைவுக்கு வந்து என்னைப் புன்சிரிக்கு ஆளாக்கியது. என்னய்யா இது? மெய் வேண்டாம் என்கிறாய், ஆனால் உண்மைக்கு அருகில் பரிந்துரைக்கிறாயே? என்னுடைய மறு கேள்வி: உண்மையும், மெய்யும் ஒன்றா? மெய்யியல் என்று philosophy க்குச் சொல்கிறார்களே? அப்பொழுது மெய்மை என்பது உண்மைக்கும் மேற்பட்டது அல்லவா? இங்கே நாம் அறிவாராய்ச்சிக்குள் போகவில்லை எனினும் சரியான சொல்லாட்சிக்குப் போகிறோம்.)

சரி, real estate என்பதை எப்படிக் குறிக்கலாம்? மிக எளிது. உள்ளகத் திட்டுகள் (திட்டு என்பது அடையாளம் காண்பதற்குத் தகுந்தாற்போல் திட்டாகத் தெரிவது) real estate developer என்பவர் உள்ளகத் திட்டை வளர்த்தெடுப்பவர் ஆவார்.

இந்தச் சிந்தனையில் real number என்பதை உள்ளக எண் என்றே சொல்லலாம்.

ஏழாவதாய் complex number என்பதைக் கலப்பெண் என்று குறிப்பிட்டிருந்தார்கள். கலத்தல் என்பது blending, mixing, assorted என்ற பொருட்பாடுகளையே கொள்ளும். பல்வேறாய்க் கிடக்கின்ற எண் complex number ஆகும். அது உள்ளகப் பகுதி (real part) ஒன்றும் அமைகணப் பகுதி (imaginary part) ஒன்றுமாய் இரட்டைத் தொகுதியாய் உருவம் காட்டி நிற்கும். அதை பலக்கிய எண், பலக்கெண் என்று சொல்லுவது சிறப்பாக இருக்கும்.

அடுத்து எட்டாவதாய், function என்பதைச் செயலி என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த செயல் என்பதை எல்லாவறிற்கும் இழுத்துப் பிடித்து, process, procedure, operation, movement எனப் பல்வேறு வினைகளுக்கும் ஒன்றே போல் சொல்லுவது என்னைப் பொறுத்தவரை மொண்ணையான பயன்பாடாகும். மேலே முன்னாற் சொன்னது போல் பந்தம் என்று சொல்லுவது சரியாக இருக்கும். (பந்தம் என்பதும் வடமொழி அல்ல; நல்ல தமிழே. பலரும் மிகுதியான சொற்களைத் தமிழ் வேர் அறியாமல் வடசொற்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ளுகிறார்கள்.) பந்தப் படுவது என்பது ஒன்றை நாடி நிற்பது. உறவு கொண்டு இருப்பது.

ஒன்பதாய் வந்த prime number என்ற சொல்லிற்கு, பகா எண், வகுபடா எண் என்று சொல்லியிருந்தார்கள். ஆங்கிலத்தில் பொதிவான (positive) முறையில் பெயரிடும் போது, நாம் சுற்றி வளைத்து நொய்வில்லாதது (non-negative) என்று பெயரிடுவது சரியில்லை. காட்டாக free என்பதை நேரடியாகத் தமிழில் சொல்லுவதற்கு மாறாகச் சிலர் தளையுறாத, கட்டுறாத என்று மொழிபெயர்ப்பார்கள். இது போன்ற மொழியாக்கத்தால், அறிவியல் தமிழ் முன்னேற முடியாது என்பது என் புரிதல். எந்தவொரு ஆங்கிலச் சொல்லிற்கும் நேரடியாகச் சொல்லாக்குவதே நாள்பட நிலைக்கும்.

பின் prime என்பதை எப்படிச் சொல்லுவது? அதன் பொருள் முன்னே நிற்பது; அடிப்படையானது. தமிழில் பெருமிக் கிடப்பது என்பது முன்வந்து இருப்பதே! பெருவுடையார் = prahadeeswarar; பெருகதம் = pragatham; பெருவாரம் = prahaaram; பெருமானர் என்பவர் முன்னே இருப்பதாக அந்தக்காலக் குமுகாயத்தில் குறிக்கப் பட்டவர் (இந்தக் காலத்தில், இது போன்ற புரிதல் முற்றிலும் மாறி விட்டது. இருந்தாலும் வரலாற்றுக் காரணமாய், பெருமானர் என்ற சொல் அதே போலப் புழங்குகிறது.) இந்தச் சொற்களின் வழியில் prime number = பெருமெண். இந்தச் சொற்களுக்கு எல்லாம் அடிப்படை வினைச்சொல் = பெருவுதல் = முன்வருதல்.

அடுத்து பத்தாவதாய் prime factor. இதைப் பகாக் காரணி என்று குறித்திருந்தார்கள். prime என்பது பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். factor என்பதைக் காரணி என்று எல்லா இடத்தும் சொல்லுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதிலும் இங்கே கணிதம் பற்றிச் சொல்லுவதில் முற்றிலும் உடன்பாடு இல்லை. அது வினைச் சொல்லிற்குச் சரியாக வராது. When you factor a given number, you get prime numbers as quotient. பேசாமல் வகுத்தல் என்ற வினையில் இருந்து சிறிது மாற்றி, வகுதை = factor; வகுத்தெடுப்பு = factorization, factoring என்று சொல்லுவது அறிவியலில் மேற்கொண்டு போக வழி வகுக்கும். prime factor = பெரும் வகுதை

பதினொன்றாய் coefficient என்பதற்குக் கெழு என்று கொடுத்திருந்தார்கள். அதோடு தகை என்றும் சொல்லலாம்.

அடுத்து பன்னிரண்டாய் monomial என்பதற்கு ஓருறுப்புக்கோவை என்று சொல்லியிருந்தார்கள். இந்தச் சொல் விளக்கமாய் இருப்பதால் தவிர்க்க விழைகிறேன்.

உண்மையில் mono என்ற முன்னொட்டு monobasic, monoacid, monochord, monochrome, monocle, monocline, monoclonal, monocoque, monocotlyledon, monoculture, monocyte, monogamy, monogenesis, monoglot, monogram, monograph, monolith, monologue, monomania, monomer, monomial, monoplane, monopole, monopoly, monorail, monosyllable, monotone, monotype, monovalent எனப் பல்வேறு சொற்களில் பயிலுகிறது.

தமிழில் ஒன்று, ஒற்றை என்ற சொற்களை மட்டுமே வைத்துச் சொல்லாக்கும் பழக்கம் இந்தக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. இதற்கு மாறாய் இன்னொரு மரபு உண்டு. முதல் என்று சொல்லும் பழக்கம். மாதத்தில் ஒன்றாம் தேதி என்று சொல்லாமல் முதல் தேதி என்று சொல்லும் பழக்கம், முதன்மைச் செய்தி, முகன்மைச் செய்தி, முகப்பு என்ற சொற்கள் நம்மை முகன என்ற முன்னொட்டை இங்கு பரிந்துரைக்க வைக்கிறது. main என்ற ஆங்கிலச்சொல்லிற்கும் முகன என்றே சொல்லாட்சி தரலாம். main road = முகனச் சாலை.

மேலே உள்ள சொற்தொகுதியை தமிழ்ச்சொல் இணையோடு கீழே கொடுத்துள்ளேன்.

monobasic = முகனக் களரி (களரி = alkali, காடி = acid என்ற சொற்கள் ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்னால் கோவை நுட்பியற் கல்லூரியில் பரிந்துரைத்தவை.)
monoacid = முகனக் காடி
monochord = முகனக் குறுக்கம் (வட்டத்தில் உள்ள குறுக்கங்கள் எல்லாவற்றிலும் பெரிதான குறுக்கம் விட்டம் என்று சொல்லப்படும்.)
monochrome = முகனக் குருவம் (குரு, நிறம், கெழு, வண்ணம் எனப் பல சொற்கள் இருந்தாலும், குருவம் என்ற சொல் chrome என்பதற்குப் பொருத்தமாய் வேர்ச்சொல் வழியில் அமையும்.)
monocle = முகனக் கண்ணாடி
monocline = முகனச் சரிவு
monoclone = முகனக் குலனை (ஒரே குலத்தில், ஒன்றே போல் இன்னொன்று உருவாவது குலனை)
monocoque = முகனக் கொக்கி
monocotlyledon = முனியிலைச் செடி (முகனிலை>முனியிலை)
monoculture = முகனச் செழிக்கை, (செடி, மரம், உயிரி போன்றவற்றை செழிக்க வைப்பது செழிக்கை = culture. தானே வளர்வது வளர்ச்சி = growth. வளர்த்தெடுப்பு என்பது development.)
monocyte = முகனக் குழை (குழை என்பது சிறிய உயிர்)
monogamy = முகனக் காமம் (காமம் என்பது இங்கே மணவினையைக் குறிக்கிறது)
monogenesis = முகனக் கனுகை (கன்னுதல் கனியைக் கொடுக்கும். கன்னுதல் என்பதைத்தான் கன்றுதல் என்று கன்று ஈனும் செயலைக் குறிக்கப் பயன்படுத்துகிரோம். கன்னுகை>கனுகை)
monoglot = முகன மொழியர்
monogram = முகனக் கீற்றம்
monograph = முகனக் கிறுவு
monolith = முகனக் கல்
monologue = முகன உரை
monomania = முகன முன்னிப்பு (ஒரே முன்னிப்பாய் இருப்பது; ஒற்றைச் சிந்தனை)
monomer = முகனமர்
monomial = முகன வகை
monoplane = முகனப் பறனை
monopole = முகனத் துருவம்
monopoly = முகனப் பள்ளி
monorail = முகன இருளை (இருளை என்ற சொல் rail என்பதைக் குறிக்கும். இருள்வாய் = railway)
monosyllable = முகன அசை
monotone = முகனத் தொனி
monotony = முகனத் தொனிவு
monotype = முகன அடிப்பு
monovalent = முகன வலுதை

(மேலே உள்ள சொற்தொகுதியை விளக்கிச் சொல்லலாம்; அதை விடுக்கிறேன்.)

பதிமூன்றாவது சொல்லாய் polynomial என்பதற்கு அடுக்குக் கோவை என்று சொல்லியிருந்தார்கள். என்னுடைய பரிந்துரை பலனம் / பலன வகை

அடுத்தது பதினான்காய் equation என்ற சொல்; இதற்கு எல்லோரும் பயன்படுத்தும் இணைச்சொல் சமன்பாடு; கூடவே ஒக்கம் என்ற சொல்லையும் நான் பரிந்துரைப்பேன். equality = ஒக்கல்; ஏனென்றால் கும்முதல் >சம்முதல் என்ற வினைச்சொல்லிற்கு சேர்த்தல், குவித்தல் என்ற அடிப்படைப் பொருளும், அதன் விளைவாய் ஒன்றே போல என்ற வழிப்பொருளும் உண்டாகும். ஒக்குதல் என்ற வினைக்கு ஒன்றோடு ஒன்று சமமாய் இருக்கிறது என்ற பொருள் சட்டென்று தென்படும். இந்த வரிசையில் இருக்கும் சில சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

equable = ஒக்கக் கூடிய
equalize = ஒக்கலிடு
equate = ஒக்கு
equator = ஒக்க வரை
equatorial = ஒக்க வரைப்பு

அடுத்து பதினைந்தாம் சொல்லாய் slope என்பதற்குச் சாய்வு என்று கொடுத்திருந்தார்கள். என்னுடைய பரிந்துரை சரிவு. ஓர்ந்து பார்த்தால், சாய்வைக் காட்டிலும் சரிதல் இன்னும் பொருத்தமாய் இருக்கும். sloppy = சரிவான

பதினாறாய் variable என்ற சொல்; இதற்கு மாறி என்று சொல்லியிருந்தார்கள். நான் வேறி என்றே சொல்லுவேன். மாறுதல் என்பது to change.

பதினேழாம் சொல்லாய் constant என்பதற்கு மாறிலி என்று சொல்லியிருந்தார்கள். மாறுதல் என்று இங்கு பயன்படுத்துவதை விலக்குவது போக, முன்னே சொன்னது போல் இது அதில்லை என்ற சொல்லாக்க நெறியைக் கூடியமட்டும் தவிர்ப்பேன். constant என்பதற்கு நிலைப்பி என்றும், constancy என்பதற்கு நிலைப்புமை என்றும் சொல்லுமாறு பரிந்துரைக்கிறேன்.

பதினேழாவது சொல் exponent. இதை அடுக்குறி என்று சொல்லியிருந்தார்கள். நான் மடக்கு/மடக்கை என்றே சொல்லுவேன். மடக்கு என்பது மீண்டும் மீண்டும் பெருக்குவதைக் குறிக்கும்.

அன்புடன்,
இராம.கி.