Wednesday, December 31, 2008

கொலை

"கொலையைப் பற்றி ஒரு நாள் எழுதுவேன்" என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. ஆனால் பேராசிரியர் முத்து என்பவர் அமெரிக்காவில் இருந்து ஒருமுறை அதைப் பற்றிக் கேட்க, நான் எழுத வேண்டியதாயிற்று. இப்பொழுது பழையதைக் கிண்டிக் கொண்டிருந்த போது, இதை வலைப்பதிவில் போடலாமே, பலருக்கும் தெரிவிக்க வேண்டிய செய்தி தானே என்று தோன்றியது. இப்பொழுது சிறு சிறு மாற்றங்கள் செய்து அதை இங்கு இடுகிறேன்.

ஒவ்வொரு மொழிக்கும் விதப்பான (special) சில சொல்லாட்சிகள் உண்டு. இந்தச் சொல்லாட்சிகள் அந்தந்த மொழி பேசும் மக்களின் தனித்த சிந்தனையாலும், குமுகச் சிந்தனையாலும் ஏற்படுகின்ற சில புதிய பொருட்பாடுகளை (meanings) முன்வைத்து புழக்கத்திற்கு வருகின்றன. இந்தச் சொல்லாட்சிகள் எழுந்தமுறை மிக எளிதாகவே இருக்கலாம். இருப்பினும் இரண்டு வெவ்வேறு சொற்களை ஓரிடத்தில் அடுத்தடுத்துப் பொருத்தும் போதோ, அல்லது ஒரு அடிப்படையில் தோன்றிய கருத்தை இன்னொரு நிகழ்விற்கு உருவகம் செய்யும் போதோ, புதிய பொருட்பாடு அந்த மொழிக்கென வந்து விடுகிறது.

இரண்டு சொற்களைப் பொருத்தி முற்றிலும் புதிதான ஒரு பொருட்பாடு கொள்வதற்கு தமிழில் ஒரு எடுத்துக்காட்டைக் கீழே கொடுக்கிறேன்.

"உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எத்தனையாவது பையன்?" இந்த வாக்கை எப்படி முயன்றாலும் ஆங்கிலத்தில் நேரடியாகச் சொல்ல முடியாது. கொஞ்சம் சுற்றி வளைத்துத்தான் சொல்ல முடியும். இந்த "எத்தனையாவது" என்ற சொற்கூட்டில் "எத்தனை" என்பதையும் "ஆவது" என்பதையும் தனித்தனியே ஆங்கிலத்தில் பெயர்க்க முடியும். ஆனால் சேர்ந்து வரும் போது ஒரு புதிய பொருட்பாடு வருகிறது பாருங்கள். அதைத் ”தமிழுக்குரிய விதப்பு” என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? (இது போல ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பெயர்க்கும் போதும் சில இடையூறுகள் உண்டு.)

உருவகத்தால் வரும் புதிய பொருட்பாட்டிற்கும் இங்கே ஒரு எடுத்துக் காட்டைக் கொடுக்கிறேன்.

எதிர்பாராத தன்னேர்ச்சி (accident) ஒன்று நாம் போகும் சாலையில் நடக்கிறது; ஒருவர் சாகக் கிடக்கிறார். அவருக்கு மூச்சு இருக்கிறதா என்று இன்னொருவர் பார்க்கிறார். கூட்டத்தில் நிற்கும் மற்றொருவர் சென்னைத் தாழ்நிலை மக்களின் பேச்சுவழக்கில், "இன்னாபா, மெய்யாலுமே பூட்டானா?" என்று கேட்கிறார். . உயிர் போவதை "போய்விட்டார்" என்ற சொல்லால் தமிழில் இப்படி உணர்த்துவதை எவ்வளவு தலை கீழாக நின்றாலும் ஆங்கிலத்தில் கொண்டுவர முடியுமோ? இத்தனைக்கும் ஆங்கிலத்தில் இதற்கு "gone" என்ற நேரடிச் சொல் இருக்கிறது. தமிழ் மொழிக்கென்ற உருவகம் இங்கே உள்ளடங்கி நிற்பதை நாம் உணருகிறோம் அல்லவா? (இதே போல ஆங்கிலத்தில் சொல்லும் ஒரு மொழியை அப்படியே தமிழில் பெயர்க்க இயலாத நிலைகள் உண்டு.)

குமுகச் சிந்தனையில் கிளரும் பொருட்பாட்டிற்கு தொல்காப்பியத்தில் வரும் ஒரு கூற்றையே எடுத்துக் காட்டாகக் கூறலாம்:

ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே

இப்படி, சொல்லுபவன் நிலையைப் பொருத்துச் சொல் தொடுக்கும் பழக்கம் மேலை மொழிகளில் பெரும்பாலும் கிடையாது.

சரி, பேராசிரியர் முத்துவின் கேள்விக்கு வருவோம். ”murder என்பதைத் தமிழில் சொல்ல முடியுமா?” என்று முதலில் கேட்டிருந்தார். அதற்கு விடையாக நான் சில சொற்களைக் குறிப்பிட்டு இருந்தேன். உடனே அவர்
---------------------------------------------------------
தமிழில் "murder" என்ற சொல்லுக்கு இணையான சொல் என்று ஒரு சொல்லைக் கூற முடியுமா? இருக்க வேண்டிய அவசியமோ, இல்லாதது ஒரு குறையோ அல்ல. தமிழ் மொழி தமிழர் பண்பாட்டை ஒட்டியே இருக்கும். கொல்வது என்ற செயலே (வஞ்சத்தினாலோ, தற்காப்புக்காகவோ, வேட்டையிலோ, அறியாமலோ, விபத்தினாலோ) குற்றமாகக் கருதப்பட்டால், ஒரு சொல்லே போதும்; ஒரு மனிதப்பிறவி மற்றொரு மனிதப்பிறவியை, வஞ்சனையால் கொல்வது மட்டுமே குற்றமெனக் கருதப்பட்டால் (இன்றைய தமிழ்ச்சமூகம் மற்றும் மேல்நாட்டுச் சமூகப் பண்பாட்டுப் படி) அப்போது, அந்தச்செயலைக் குறிக்க ஒரு தனிச்சொல் வேண்டும். உதாரணமாக, "Indira Gandhi was assasinated" என்பதைத் தமிழில் "இந்திரா காந்தி கொல்லப்பட்டார்" என்றும், "My cat killed a mouse" என்பதை, "என் பூனை ஒரு எலியைக் கொன்றது" என்றும் ஒரே விதமாகக் கூறுகிறோமே அன்றி, வித்தியாசமாகக் கூறுவதில்லையே! தமிழ் இலக்கியத்தில் இவ்விரு செயல்களும்- உதாரணமாகக் கம்ப இராமாயணத்தில் இராமன் வாலியைக் கொன்றதையும், மனுநீதிச்சோழனின் மைந்தன் தேர் ஓட்டி பசுங்கன்றை மாய்த்ததையும்- வேறு வேறு சொற்களால் வருணிக்கப் பட்டிருக்கின்றனவா?
-----------------------------------------------------------------------------------------

என்று மீண்டும் விரிவாகக் கேட்டிருந்தார். நண்பர் சிரீவாசும் அந்தச் சொற்களுக்கு விளக்கம் கேட்டிருந்தார்.

Cambridge International Dictionary of English என்ற ஆங்கில அகரமுதலியில் murder என்பதற்கு the crime of intentionally killing a person என்றே போட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சொல்லின் வரலாற்றை இலத்தீன், இந்தோயிரோப்பியன் வரை போய்ப் பார்த்தால் அங்கே வெறும் இறப்பு என்ற பொருட்பாடு தான் இருக்கிறது. (The ultimate source of murder is the Indo-European base *mor-, *mr- 'die' (source also of English mortal). "வேண்டும் என்றே கொலை செய்தல்" என்ற இந்தக் காலத்துப் பொருட்பாடு அந்தக் காலத்தில் இல்லை. எங்கேயோ இடைப்பட்ட காலத்தில் (பெரும்பாலும் 19-ம் நூற்றாண்டில்) ஏற்பட்டிருக்கலாம். அந்த *mor- என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த மற்ற சொற்களான mortality, mortuary, போன்றவற்றைப் பார்த்தாலும் வெறும் இறப்பு என்ற பொருட்பாடே உள்ளே தொனித்து நிற்கிறது. "*mor- என்ற வேரின் பொருள் என்ன? அது எப்படிப் பிறந்தது?" என்ற விளக்கம் அங்கு இல்லை.

தமிழில் இறத்தல், சாவு, மடிதல் போன்றவை வளைவு என்ற அடிக் கருத்தில் எழுந்தவை. (இன்னும் சில சொற்கள் துண்டாகிப் போன கருத்தில் எழுந்தவை.) ஒருவன் உயிராற்றலை இழந்து சாய்ந்து போனால் அதைச் சாய்வு>சாவு என்கிறோம். சாவு>சவத்தல்>சவம்; சாதல்>சவத்தல்>செத்தல் என்றெல்லாம் அது திரியும். மடிதல் என்பதும் நிற்க முடியாமல் மடங்கிப் போதல் என்றே பொருட்பாடு கொள்ளும். மடிதல்>மரித்தல் (டகரமும் ரகரமும் தமிழில் போலியாகி நிற்கும்)>மரணம், இறத்தல் என்பதும் சரிதல் என்ற பொருளே கொள்ளும். இறக்கம் = சரிவு. சாய்வும் சரிவும் தமிழில் ஒன்றுதானே!

மடிதல்/மரித்தல் என்ற சொல்தான் இந்தையிரோப்பியச் சொல்லடியான mort என்பதோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியானால், மரிப்பு = mortality' மரித்துறை = mortuary (சவ அறை) என்ற சொற்கள் சரியாக இருக்கும்.

மேலே கூறியது போல், இந்தச் சொற்களில் எல்லாம் இறப்பு என்ற கருத்து இருக்கிறதே ஒழிய கொலை என்ற கருத்து உடன் வரவில்லை. பிறகல்லவா "வேண்டும் என்ற கொலை"?

கருத்து வளர்ச்சியில் சொற்கள் விளைவதை ஒரு படி முறை போலப் பார்க்க வேண்டும். முதலில் இறப்பு; "பிறகு எதனால் இறப்பு?" " கொலையால் இறப்பு". அடுத்த கேள்வி: "வேண்டும் என்ற கொலையா?" இது மூன்றாவது படி.

இந்த மூன்றாவது படியைத் தமிழில் ஒரே சொல்லில் சொல்லவியலாது. ஒரு சொற்தொகுதியால் மட்டுமே சொல்ல முடியும். அந்தக் கொலையில் இட்டம் (இழ்+தம் = இட்டம். இழ்+ஐ = இழை>இழைவு; இழைத்தல் என்பது ஈடுபாட்டோடு செய்தல். இட்டத்தை இஷ்டம் என்று வடமொழியில் சிலர் மாற்றுவது உண்டு. ஈடுபாடு = intention) இருக்க வேண்டுமானால் மரியிழைத்தல் என்று சொல்லலாம். இருப்பினும் "வேண்டும் என்றே செய்த கொலை" என்று நீட்டிச் சொல்வதே தமிழுக்குப் பழக்கப் பட்டது. கீழே இருப்பது ”முயன்றால் புழக்கத்திற்குக் கொண்டுவரலாம்” என்று பரிந்து
உரைப்பது.

"இந்த மரியிழைப்பைச் செய்தவர் யார்? (who comitted this murder?) மரியிழையர் = murderer; இல்லையென்றால் வேட்கொலையன் (வேள் = வேண்டுதலின் அடிச்சொல்) என்று கூடச் சொல்லலாம். வேட்கொலை = murder.

இனி நண்பர் சிரீவாசின் கேள்விக்கான விடை:

காட்டு விலங்காண்டிக் காலத்தில் இருந்து இயல்பாக இந்த நாவலந்தீவில் கிளைத்த மொழி தமிழ். நாகரிகம் அடையாத காலத்தில் இருந்தே இங்கு ஒலியும் சொல்லும் கருத்துக்களை ஒட்டி ஒன்றன் பின் ஒன்றாகக் கிளர்ந்தன; ஆனால் மெதுவாக நூற்றாண்டுக் கணக்கில் வளர்ந்த மொழி. இதில் எந்தக் கருத்தில் இருந்து எந்தக் கருத்து கிளைத்தது என்பதை தட்டுத் தடவி மொழியியலார்கள் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக கொல்லுதல் என்ற வினை அறுதப் பழங்காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். மாந்த நூலார் சொல்லும் படி, தம் உயிர் வாழ்வே முதன்மை என்ற நிலையில், தனக்குப் போட்டியான யாரும் ஒழிக்கப் படவேண்டியவர்கள் என்ற போக்கில், மாந்தர்கள் ஒருவரை ஒருவர் கல்லாலும் மரத்தாலும் உணவைத் தேடும் வேட்டையில், அடித்துக் கொன்று திரிந்திருக்க வேண்டும். பின் நெடுநாட்கள் கழித்து, உலோகம் கண்ட பிறகு, உலோகமே மரக்கருவிகளையும், கற்கருவிகளையும் போல அமைந்தாடி (imitate)க் காட்டத் தொடங்கினாலும், சொல்வரலாறு அடித்தளத்தைக் காட்டிக் கொடுக்கிறது. பெரும்பாலான அடிதடிச் சொற்களும், கொல்லுதற் சொற்களும் உலோகத்தைப் பயன்படுத்தும் முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதையே தமிழ்ச் சொல் வரலாறு காட்டுகிறது.

காட்டாக,

மரத்தின் அடியில் இருந்து பிறந்த வினை அடித்தல்.
மரத் தாளில் இருந்து பிறந்த வினை *தாள்க்குதல்>தாக்குதல்.
மரக் காலில் இருந்து பிறந்த வினை *கால்த்துதல்>*காத்துதல்>காதுதல். (போட்டு காத்திட்டான்யா>போட்டுக் காச்சிட்டான்யா!)

மரத்தின் அடி பெருத்துத் தட்டித்துக் கிடந்ததால் அது தட்டு>தட்டி>தடி; இது மூங்கிலுக்கே சிறப்பாக வந்த பெயர். மூங்கில் தட்டை, மூங்கில் தடி என்ற சொற்கூட்டுகளைப் பார்த்தால் இது புரியும். தமிழன் நாவலந்தீவிலே தன் நாகரிகம் அறியா நிலையில் திரிந்தான், வேறு எங்கிருந்தும் வரவில்லை என்பதற்கு "மூங்கில்அடி"ச் சொற்களே கூட ஆதாரம் ஆகும்; இவையே இந்த வன்சொற்களின் மூலம் வெளிப்படுகிறது. மூங்கில் என்னும் நிலத்திணை நடுவண்நிலக் கரை (mediteranian and middle east countries) நாடுகளில் இருந்ததாகப் புதலியல் (botany) சொல்லவில்லை. மூங்கிலின்
பயன்பாடு பழந்தமிழ் மாந்தனின் வாழ்வில் மிகவும் அதிகம். மூங்கில் தடியால் தட்டலாம். தடி தறியாகும். பின் தறித்தலையும் தரும். தறித்தல் = அடித்தல். இன்னும் கொஞ்சம் நீண்டு, தட்டு தண்டாகும்; தண்டு என்னும் விதப்பான பெயர் பின் பொதுமை நிலைக்கு வந்து மற்ற மரங்களின் தண்டிற்கும் பெயர் கொடுக்கும். மாந்தரின் கணக் கூட்டம் வளர, வளரத் தண்டில் இருந்து தண்டனையும் எழும்.

அடிதடியில் தொடங்குகிற கருத்து, சோர்வுக்கும், தளர்ச்சிக்கும், சாய்வுக்கும், சரிவுக்கும் நீண்டுப் பின் முடிவில் இறப்பிற்கும் ஆகப் பொருட்பாடு நீளுவது தமிழின் இயற்கை. இந்த வன்முறையில் குத்துவது, வெட்டுவது, அடிப்பது எனப் பல்வேறு வகைகளில் தாக்குதல்கள் இருக்கும். கற்கருவிகளும், மரக் கருவிகளும் ஒரே நேரத்தில் மாந்தனுக்குப் பயன்பட்டிருக்க வேண்டும். ஆனாலும், கல்லை வைத்து மாந்த நாகரிக வளர்ச்சிக்குக் காலம் சொன்ன மாந்த நூல் கட்டையையும் தடியையும் அவ்வளவு பெரிது படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.

நான் முன்னே சரமிட்ட சொற்களுக்குக் (series of words) கூடிய மட்டும் விளக்கம் தருகிறேன்.

முதற்சொல் எருக்குதல்:

கல்லாலும் கூர்மையான மரத்தாலும் குத்துவது மட்டும் அன்றி ஈர்தலும் செய்ததால் தான் இரண்டு என்பதற்கே இந்த இல்>ஈல்>ஈர் என்பது அடிப்படையாகியது. இல்லுதல் = குத்துதல், புள்ளியிடுதல்.
இல்>ஈல்>ஈர்>ஈர்து>இருடு, இரடு, இருது, இரண்டு
இல்>ஈல்>ஈள்>ஈள்+து>ஈட்டு+ஐ>ஈட்டி (இட்டி என்றும் இதைச் சொல்லுவர்.)
இல்>ஈல்>ஈர்தல்>ஈர்க்குதல்>எருக்குதல்= இரண்டாக வெட்டுதல், தாக்குதல்; குத்திக் கிழிப்பதாலும், தடியால் அடித்தும் இரண்டாக்கலாம். முடிவில் எருக்குதல் என்பதற்குக் கொல்லுதல் என்றும் பொருள் வந்தது.

அடுத்த சொல் எற்றுதல்.

எல் என்பது பெருமை, திரட்சி என்ற கூட்டுப் பொருளின் வேர். எல்லாம், எல்லோரும் என்று சொல்கிறோம் அல்லவா? இங்கே எல்லுதல் = திரளுதல், சேர்த்தல் என்ற அடிப்படைப் பொருள் புலப்படுகிறது.
எல்+து = எற்று = திரண்ட மரம்
எற்றுநூல் = மரக் கோட்டம் பார்க்கும் நூல், மரம் அறுக்க அடையாளம் காட்டும் நூல்.
எற்று>எறு>எறுழ் = தண்டாயுதம், தடி, செந்நிறப் பூவையுடைய குறிஞ்சி நிலத்து மரவகை.
எற்றுதல் = கொல்லுதல்

[இங்கே ஒரு சின்ன இடைவிலக்கு (diversion).

தமிழில் சில விதப்பான மரங்களே கூட அடிதடி வினைகள், கருவிகளைத் தோற்றுவித்தனவோ என்று தோற்றுகிறது. கடம்புக்கு அடிச்சொல் கடு. கட்டை என்ற சொல் கடம்பின் தொடர்பால் வந்ததோ என்று தோன்றுகிறது. யா மரத்தை ஆச்சா மரம் என்றும் சால மரம் என்றும் சொல்வதுண்டு; இதன் தொடர்பால் சால்>சால்+து = சாற்று என்று வந்ததோ?; "அவனைப் போட்டுச் சாத்திட்டாங்கப்பா" என்ற சொல்லாட்சியை எண்ணிப் பாருங்கள்.

மூங்கிலுக்கே தட்டை என்ற சிறப்பான பெயர் உண்டு. மேலே சொன்னேன். "தடிச்சுப் போச்சு" என்ற வழக்கையும் நோக்குங்கள். மூங்கிலின் குருத்தான பிரம்பை வைத்து அடித்தால் தடிக்காமல் வேறு என்ன செய்யும்? கிள்>கிளை>கிழி எல்லாமே மூங்கிலுக்குரிய மற்ற சொற்கள். இதே போல கழி என்பதும் மூங்கிலுக்கான சிறப்புச் சொல். "போட்டுக் கிழிகிழின்னு கீழ்ச்சிட்டான்ய்யா"; (துணிக்குக் கிழி என்று பெயர் வந்தது நாகரிகம் வந்ததற்குப் பின் இருக்க வேண்டும்.)

புளியம் விளாறை வைத்து விளாத்துதல், விளாசுதல் என்றாகும்.

குருந்த மரம் குந்தம் என்றும் சொல்லப் படும். திரண்டு இருக்கும் ஆயுதம் குந்தம் என்று சொல்லப் படும்.

அத்தி மரத்தின் இன்னொரு பெயர் அதம். அதம் பண்ணுதல் என்பது அடிதடி செய்தல்.

அதே போல இங்கே எற்றிற்கும் எறுழுக்கும் உள்ள தொடர்பை மேலே பாருங்கள்.

நான் பலகாலம் சொல்வதுண்டு. விதப்பான சொற்களே (specialized words) பொதுவான கருத்துக்களுக்கு (generic ideas) வித்திட்டன.]

எறியல் = கோடரி (கோடு= மரக்கிளை; மரக்கிளையை அரிவது கோடரி)
எற்றுதல் = திரண்ட மரத்தால் அடித்தல், உதைத்தல், தாக்குதல் (விட்டேற்று என்பது கோலைக் குறிக்கும்)
எற்றியது= அடித்தது; இங்கே மரத்தை உயரத் தூக்கிக் கீழே இறக்குகிறோம் அல்லவா? இந்தக் கருத்தில் இருந்து மேலும் வளர்ந்த கருத்துத்தான் எறிதல்; பின் அது கல்லெறிவிற்கும் பயன்பட்டிருக்க வேண்டும்.

ஒழித்தல் என்ற சொல் அடுத்தது.

உல் = தேங்காய் உரிக்கும் கருவி, கழு, மரம்
உல்லடைப்பு = மரத்தால் ஆற்றிற்கு இடும் அணை.
உல்>உல்லு>உல்லேற்றுதல் = கழுவேற்றுதல் = பிரஞ்சுப் புரட்சியில் இருந்த guilletine போல, ஆனால் மாறுபட்ட ஆயுதம். இதில் கழு நிலைத்து நிற்கும். கொல்லப் பட வேண்டிய ஆள் (man to be murdered; அய்யா முத்து, தமிழில் இபடித்தான் கொல்லப் பட வேண்டிய ஆள் என்று சுற்றி வளைத்தே சொல்ல வேண்டும்.) மேலே இருந்து தூக்கி எறியப் படுவார். கழுவேற்றப் பட்ட சடலம் பின் கோட்டையில் சார்த்தப் பட்டுத் தொங்கிக் கிடக்கும். இதற்கு ஆங்கிலத்தில் spiking என்று சொல்லுவார்கள். கீழை நாடுகளில் எல்லாம் கழுவேற்றுதல் தான். (சப்பான் நாட்டிலும் இதுதான்.
Shogun புதினத்தைப் படித்திருக்கிறீர்களோ?)
உல்லு>உல்லக்கு>உலக்கு=குத்துதல்
உலக்கு>உலக்கை = குத்துகிற மரம், கருவி, தடி, தண்டு
உலக்கு>உழக்குதல் = மிதித்தல், உழுதல், கொன்று திரிதல்
உல்லு>உல்லித்தல்>உலித்தல்(> உலைத்தல்>)*உழித்தல்>ஒழித்தல் = கொல்லுதல், அழித்தல்

மூன்றாவது சொல் காதுதல்:

கல்>கால்>கால்தல் = ஊன்றுதல், இயங்குதல்
கல்>கர்>கரு>கருவி = கூர்மையான ஆயுதம் (கற்கருவி என்பது இப்படித்தான் வந்தது. முதலில் கொல்லப் பயன்பட்ட கருவி பின் கையில் பிடித்தவைக்கெல்லாம் உள்ள சொல்லாகப் பொருள் நீட்டம் கொண்டது.)

கள் = கூட்டப் பொருள்.
கள்>களி>கழி= மூங்கில்; மூங்கில் கூட்டமாகத் தான் வளரும். பின் தனித்து ஒடித்த மூங்கிலுக்கும் கழி என்றே பெயரிடப்பட்டது. அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிக் கூடச் சட்டாம்பிள்ளைகள் பிரம்புக் கழி இல்லாமல் இருப்பது இல்லை.
கள்>களை>கழை = மூங்கில்
வேளாண்மையில் பயிரோடு சேர்ந்ததும் கள். அந்தக் கள்ளை நீக்கினால் தான் பயிர் வளரும்.
களை = நீக்கு, அழி. கூட்டத்தில் இருந்து நீக்கப் படுகிற மாந்தர்களும் களையெடுக்கப் பட்டார்கள்.

கள்+து> கட்டு = கூட்டம், சேர்ப்பு, இணைத்தது, பெருத்தது
கட்டு+ஐ>கட்டை = பெருத்த தண்டு
கட்டு>கண்டு=திரண்டது, வெட்டப் பட்டது (கண்டம் துண்டமாக என்பது இரட்டைக் கிளவி. உப்புக் கண்டம் என்பது உப்புப் போட்டு உலரவைக்கப் பட்ட கறித் துண்டு; கற்கண்டு = திரண்டு, கண்டு கண்டாய் வெட்டப் பட்ட வெள்ளைச் சருக்கரை.)
கட்டு>கடு>கடு+அப்பு>கடப்பு = பெருத்த மரம். (மதுரையை அடுத்தவனம் கடம்ப வனம். ஒரு வேளை மிகப் பழங் காலத்தில் வெண்கடம்பு தமிழகத்தில் மிகவும் கூடுதலாய் இருந்ததோ, என்னவோ? இல்லாவிட்டால் இந்த அளவு சிவநெறியிலும், சங்க இலக்கியத்திலும் கடம்பு இவ்வளவு பேசப் படவேண்டிய காரணம் என்ன?)
கடப்பு>கடம்பு>கதம்பு = கடம்ப மரம்
கடு>கடுவு>கதுவு = பெருத்த தடியால் அடி, தாக்கு

கடு என்ற கடம்ப மரம் விதப்பில் இருந்து பொதுமையாகி காட்டையே குறித்தது. பொதுமைப் பொருளில் நிலைத்தது. இதே போல கடு என்பது காட்டிற்கு மட்டும் அல்லாது கூடிக் கிடந்த மலைத் தொகுதியையும் குறித்தது.
கடு>கடம் = காடு,மலை

கடம் ஆர்ந்து (நிறைந்து) கிடந்தது கடாரம்; இன்றைய மலேசிய நாட்டின் கெடா மாநிலம். தமிழன் நாகரிகம் அடைந்து வரலாற்றுக் காலத்தில் சில குறிப்பிட்ட ஆண்டுகள் ஆட்கொண்ட நாடு. இதே போல யா மரம் அடர்ந்து கிடந்த நாடு யாவகம்>ஜாவகம்= Java. இந்தோனேசியாவின் முகன்மையான தீவு. இதைச் சாலித் தீவு என்றும் சொல்வது உண்டு. மேலே சொன்னது போல் யா மரம், சால மரம் என்றும் அழைக்கப் பட்டது. இரண்டு பெயர்கள் அந்தத் தீவிற்கு; இரண்டிற்குமே தமிழ் மூலம் தான். ஆனாலும் "இங்கெல்லாம் வடமொழியே பரவியது; தமிழா, அது எங்கே?" என்று கேட்பவர்களும் உண்டு.

கடு>கடினம்
கடிதல் = காலால் உதைத்தல்
கடு>கடவுதல், கடாவுதல், கடத்துதல் = அடித்தல், ஒரு விலங்கை அடிக்க முற்பட்டு ஓங்கிக் கொண்டே போக அது ஓடத் தொடங்குகிறது. எனவே செலுத்துகிற கருத்து அடிக்கிற கருத்தில் இருந்து பிறக்கிறது. இங்குதான் கடாவுதலில் உள்ள நெட்டொலியின் பொருட்பாடு புரிய வேண்டும். ஒரு கருத்தில் இருந்து இன்னொரு கருத்துப் பிறக்கும் நேரத்தில் நெட்டொலி துணைக்கு வரும். அதை நீட்டிப் பாருங்கள்; அடிக்கப் போனது விலங்கைச் செலுத்துவதில் கொண்டுவந்து சேர்ப்பதைக் காட்சியில் பார்ப்பீர்கள்.

கதுவு>கதவு>கதா = பெருத்த தண்டு
கது+ஐ>கதை = பெருத்த தண்டு (வீமனின் ஆயுதம்)
கதா>கதாவு>காது = பெருத்த தண்டால் அடி, தாக்கு

கது>கந்து = மரத்தூண், தெய்வத்தூண் (மரத்தில் தெய்வப் படிமத்தைச் சிறிதாகக் கீறி குறிஞ்சி மாந்தன் வழிபட்டிருக்க வேண்டும். "கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்து" என்பது மணிமேகலை.)
கந்து>கந்தன் = முருகன் (கந்திற்கும், கடம்பிற்கும் உள்ள தொடர்பைப் போல இன்னொரு சொல்லான மரா = கடம்பு என்பதில் இருந்து பிறந்த சொல் மராகன்>மருகன்>முருகன்; முருகு= அழகு என்பது முதற்பொருள் அல்ல; வழிப் பொருள். கந்தைச் சுற்றிப் படர்ந்த கொடி வள்ளி. கொடியைப் பெண்ணாகவும், கந்தை ஆணாகவும் உருவகம் செய்திருக்கிறார்கள். முருகன் தமிழ்க் கடவுள் என்று சொல்லுவது, இந்த நாகரிகம் புரியாக் காலத்தில் எழுந்த இறையுணர்வால் தான்.)
கந்து = பற்றுக் கோடான தூண்
கந்து+அழி = கந்தழி = தனக்குப் பற்றுக் கோடானதையே அழிக்கும் நெருப்பு

[கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன முன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

என்று தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியலில் சொற்றம் (சூத்திரம்) 1034-ல் வரும் கந்தழி நெருப்பையே குறிக்கிறது. கொடிநிலை மாறாது என்பது நிலைத்து நிற்கும் சூரியனையும் வள்ளி என்பது வளர்ந்து குறையும் நிலவையும் குறிக்கிறது. சூரியன், நெருப்பு, திங்கள் மூன்றும் கடவுள் வாழ்த்தைப் பாடும் போது வரவேண்டியவை என்று தொல்காப்பியர் சொல்கிறார். இவை முதலானவை என்பதால் தான் சோழர் குலம் சூரிய குலம் என்றும், பாண்டிய குலம் திங்கட்குலம் என்றும் சேரர்குலம் அழற் குலம் (அழல்= நெருப்பு; அழனி>அக்னி) என்றும் கருதப் பட்டது.]

கல்>கள்ளில் இருந்து திரட்சிப் பொருளில் பிறந்த மற்றொரு சொல் கம்பு

நாலாவது சொல் கோறல்:

அகத்தியத்தில் நண்பர் அரி சிலம்பில் உள்ள "கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று" என்ற வரியை எடுத்துக் காட்டினார் குல்>கோல் (குல்லில் இருந்து பிறந்தது தான் குத்து) கோல் வளைந்தது. கோலைக் கொண்டவன் கோன். செங்கோல் நேரான, வளையாத கோல்.

கோல் என்பது ஆட்சியையே குறித்தது. கடுங்கோல் என்பது வளைந்த ஆட்சி. "தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?" என்ற சொலவடையில் தண்டல்காரன் தடி வைத்திருத்தலை உணர்த்துவதைக் காணலாம். கோல் என்பது காட்டு விலங்காண்டி காலத்தில் உயிரைக் காக்கும் ஆயுதம் அல்லவா?

கோல்>கொல்
கோல்+து>கோறு = தண்டால் அடி

கொல்லுக்கும் kill க்கும் உள்ள இணையை நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஐந்தாவது சவட்டல்

சவளி என்ற தலைப்பில் உள்ள புலவர் இளங்குமரன் கட்டுரையை தமிழ் உலகத்தில் முன்பு இட்டிருந்தேன். மறுபடியும் அதைச் சொல்வதில் இந்தக் கட்டுரை நீண்டுவிடும். சவள்/சவளம் என்பதெல்லாம் தண்டாயுதங்களைக் குறிக்கும். தண்டாயுதத்தால் அடிப்பது சவட்டுதல்.

ஆறாவது படுத்தல்:

அடி, தாள், கால் போல படுவது என்பது படிவது, பதிவது, பாதம் என்றெல்லாம் பொருள் நீளும். படுத்துவது என்பது ஒருவனை கீழே வீழ்த்துவது. பட்டுவது படுவாகும். படு+ஐ = படை எனக் கிளரும். படை என்பது முதலில் தண்டாயுதம் தான். பிறகுதான் மற்றவை எல்லாம்.

மடிவித்தல்

சாய்வித்தல் மடிவித்தலாகும். இது எளிதாகப் புரியும் என்பதால் விடுக்கிறேன்.

மாய்த்தல்

மாய் = இருள்; மாயோன் = இருளன்; திருமால், இறப்பு என்பது அசைவைக் குறித்துப் பின் மறைவையும் குறிக்கிறது. மாய்த்தல் என்பது இருளுக்குள் போகச் செய்வது. இது கொஞ்சம் நாகரிகம் வந்த காலத்தில் தான் பொருள் நீட்சியில் ஏற்பட்டிருக்கக் கூடிய சொல்.

முருக்கல்

கடுவில் இருந்து காதுதல் பிறந்தது போல மராவில் இருந்து பிறந்த சொல் முருக்கல். இன்னொரு மரத்திற்கும் முள் முருக்கு, புனைமுருக்கு, புரச மரம், பலாச மரம் என்றெல்லாம் பொருள். புரசைவாக்கத்தின் பெயர்க் காரணத்தை முன்பு தமிழ் உலகத்திலோ, அகத்தியரிலோ சொல்லியிருந்தேன்.

வீட்டுதல்

வீழ்த்துதல் வீடுதல் என்றும் ஒலிக்கப் பெறும் பொருள் வெள்ளிடை மலை எனத் தெரிகிறது.

இன்னும் விரிவாகச் சொல்லலாம். இத்தோடு தவிர்க்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, December 23, 2008

குடும்பம் - 2

இனிக் குடும்பம் என்ற சொல்லின் தமிழ்மைக்கு வருவோம்.

நண்பர் நாக. கணேசன், ”குடிசெயல் வகை” என்னும் திருக்குறள் 103 ஆம் அதிகாரத்தில் இருந்தே

இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.

என்ற 1029 ஆம் குறளை எடுத்துக் காட்டி திருக்குறளுக்கும் முற்பட்டுக் குடும்பம் என்ற சொல் இருந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்தினார். இக் குறளை திரு.ரெ.கா. கவனிக்க மறந்தார் போலும்! குடிசெயல்வகை எனும் அதிகாரமே, குடும்பம் நடத்தும் வகையைச் சொல்லும் அதிகாரம் தான். அந்த அதிகாரம் முழுதிலும் குடி என்ற சொல் அகன்ற குடும்பத்தையே குறிக்கிறது. இக்கால நெற்றுக் குடும்பத்தையே பார்த்துப் பழகிப்போன நமக்கு (நெற்றுக் குடும்பம் = nuclear family; நெற்று = nut; nuct>nuclear என்ற இந்தையிரோப்பிய வளர்ச்சியைப் புரிந்து கொண்டால் நெற்றை எப்படியெலாம் இக்காலத்தில் தமிழ்வழி நெற்றுப் பூதியலைச் (nuclear physics) சொல்லிக் கொடுக்கும் போது புழங்கிக்கொள்ளலாம் என்பது விளங்கும். நாம்தான் இருப்பது தொலைத்துச் ”சங்கரா, சம்போ” என்று தவிப்பவர் ஆயிற்றே? நுக்லியர் குடும்பம் என்று தமிங்கிலம் பழகிக் கொண்டிருந்தால் எப்படி?) அக்காலக் கூட்டுக் குடும்பம் புரிவதில்லை. குலம், குடும்பு, குடி, குடும்பம் போன்றவை குல் என்னும் வேரில் இருந்து கூட்டப் பொருளில் எழுந்த சொற்கள்.

குல்>குலம்;

குல் என்னும் வேர், லகர/ழகரப் போலியொடு, பலுக்க எளிமை கருதி உகரம் சேர்ந்து, குல்>குழு எனவாகிக் கூட்டத்தைக் குறிக்கும். குழுதல்> குழுவுதல்> குழுமுதல்> குழும்புதல் என்ற வினைச்சொல் வளர்ச்சியை இங்கு எண்ணிப் பார்க்கலாம். குழும்பு என்ற பெயர்ச்சொல்லும் கூட்டப் பொருளையே உணர்த்தும். [ராயர் காப்பிக் கிளப் என்னும் மடற்குழுவை, ஒருமுறை அரையர் குழும்பு என்று நான் சொல்லப் போக, அடித்துக் கிளம்பி, குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டவர் உண்டு. என்ன செய்வது, கிளப் என்று தமிங்கிலம் பழகலாமாம்; குழும்பு என்று சொல்லக் கூடாதாம் :-)).] குழாம் என்ற சொல் கூட குழுமுதலின் வளர்ச்சி தான். கோடைக்கானல் ஏரிக்கரையில் படகுக் குழாம் என்று போட்டிருப்பார்.

பொதுவாக, வினைச் சொல் வளர்ச்சியில் X-தல்> X-வுதல்> X-முதல்> X-ம்புதல் என்னும் வளர்ச்சி தமிழில் பல சொற்களுக்கு ஏற்பட்டிருக்கிறது; இந்த வினைச்சொல் உருவாகும் முறை தமிழுக்கே உரிய ஒருமுறை. இந்த வினைச்சொல் உருவாக்க முறையில், சில சொற்களில் குறை வளர்ச்சியும், சில சொற்களில் மிகுவளர்ச்சியும், ஏற்பட்டது. காட்டாகச் சில சொற்களைப் பார்ப்போம்.

அள்ளுதல்>அழுதல்>..........>அழும்புதல் = செறியக் கலத்தல்; அழும்பு என்ற பெயர்ச்சொல்லும் கூட உண்டு.

எழுதல்> எழுவுதல்> எழுமுதல்> எழும்புதல்; எழுமூர் என்ற பழைய பெயர் இன்றைக்கு எழும்பூர் என்றே சென்னையிற் சொல்லப் படுகிறது..

கெழுதல்> கெழுவுதல்> கெழுமுதல். இது நிறைதல், பொருந்துதல் பொருளை உணர்த்தும். அன்பு கெழுமிய என்று சொல்லுகிறோமே, அது அன்பு நிறைந்த என்ற பொருளை உணர்த்தும். கெழு என்ற சொல் இன்னும் ஆழ்ந்து, நிறத்தை உணர்த்தும். இந்தையிரோப்பிய colour என்ற சொல்லுக்கு அது அப்படியே நிகரானது. கெழிறு என்றாலும் கூடக் colour தான். “பால் வார்பு கெழீஇ” என்ற தொடர் மலைபடு கடாம் 114 ஆம் வரியில் வரும். அதற்கு வரும் உரையில் “கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யணர்த்திற்று” என்று சொல்வார். “தேரோடத் துகள் கெழுமி” என்பது பட்டினப்பாலை 47ஆம் வரியில் வரும்.

இதே போல,
சிலுதல்> ....................................> சிலும்புதல்
செழுதல்>....................................> செழும்புதல்

என்ற சொற்களும்,

துள்> ........தழு> தழுவு> தழும்பு என்பதும் மேற்சொன்ன வினையாக்க முறையை உணர்த்தும்,

இனித் துள்> துளுவுதல் (= துள்ளுதல், துளித்தல் என்ற சொற்கள் இதனோடு தொடர்புடையவை) > துளுமுதல்> துளும்புதல்> தளும்புதல்> தளம்புதல் என்ற வினைச்சொல் நீர் தளும்புதலைக் குறிக்கும். இன்னும் வடபால் ஒலிப்பில் தடும்புதல்>ததும்புதல் என்று கூடத் திரியும். ளகரம் டகரமாகிப் பின் வடக்கே தகரமாகும். மூக்கில் நீர்க் கோத்துக் கொண்டு இருக்கும் நிiீக் கோவையை தடுமன் என்று சிவகங்கைப் பக்கம் சொல்வார். நீர்த்திரட்சியைக் குறிக்கும் சொல்; இதிலும் கூட்டப் பொருள் தான்.

அடுத்து, துல்>துள்>தொள்>தொழுதல்>...................................>தொழும்பு = வணக்கம். (வணங்குதலும் தொழுதலும் ஒன்றுதான். நிலவுடைமை ஆதிக்கத்தில் நில அடிமைகள் தொழும்பர் என்றே சொல்லப் படுவார். தொழும்பரும் தொண்டரும் ஒரே பொருள் தான். அடிமையாய் இருப்பவர் என்று பொருள். ழகரம் மூக்கொலியோடு சேர்ந்து வரும் டகரமாய்த் திரிந்து, தொண்டு என்ற பெயர்ச்சொல் ஏற்படுகிறது..

இதே போன்ற வளர்ச்சி புள்>(பிள்)>பிழு>பிழம்பு பிழம்பு = திரட்சி; பிண்டு> பிண்டம் = திரட்சி, என்பதிலும் உண்டு. பிண்டத்தைப் பிழையாக வடமொழி என்பாருண்டு. [எத்தனை சொற்களைத் தான் வடசொல்லெனச் சொல்வாரோ? எத்தனை எடுத்துக் காட்டுகளைக் காட்டினாலும், மீண்டும் மீண்டும் தம் நம்பிக்கையின் பாற்பட்டே பேசிக் கொண்டு இருப்பவரை என்ன சொல்லி அறிவுறுத்த இயலும்?] .

இதேபோல கூர்ந்த குழாய் கொண்டு கொத்தும் கொதுகு (=கொசுகு; கொசு என்றே இக்காலஞ் சொல்கிறோம்.), மாட்டு ஈ போன்றவற்றிற்கு நுளம்பு என்ற பெயர் உண்டு. அது நுள்>நுளுவுதல்> நுளுமுதல்> நுளும்புதல்> நுளம்புதல் = கூர்த்துக் கொத்துதல் என்ற வினையில் இருந்து கிளம்பும் சொல். [கிளம்புதல் கூட கிளுதல் என்னும் கிளைவிடுத்தலைக் குறிக்கும் சொல்லே.]

...ம்புதல் என்ற சொற்களெல்லாம் உணர்த்தும் வினைமுறை நமக்குப் புரிபடவில்லையா?]

பாறையில் துளைப்பட்ட இடத்தைப் புழை என்கிறோமே அதைப் புழம்பு என்றும் சொல்வார். (குகையைக் குறிக்கும் சொல்.) ழகரம் திரிந்து டகரமாகிப் புடம்பு என்றாகி மீண்டும் குகையைக் குறிக்கும். [உயிரை உள்ளே கொண்டது உடல் எனும் உடம்பு. குடம்பை என்பது கூட்டைக் குறிக்கும் சொல். இங்கு ம்பு என்றுமுடியும் ஈற்றைப் பாருங்கள்.]

ழகரம் டகரமாவதற்கு மேலும் சான்று வேண்டுமெனில் புடலங்காய்க் கூட்டு பற்றாதா? புழல்>புடல் ஆகி புடலங்காய் ஆகும். உள்ளே புழை (=ஓட்டை) இருக்கும் காய் புடலங்காய்.

யாரோ கேட்கிறார், ஏன் இப்படித் தமிழ், தமிழ் என்று புலம்புகிறீர்? வேறு ஒன்றுமில்லை “புலு புலு” என்று ஒலித்தலால், பிதற்றுதலால், அழுதலால், புல்>புலுவு>புலுமு>புலம்பு என்றாயிற்று..

நான் சொல்லிப் போகலாம். ”இன்றைக்கு உங்கள் வீட்டில் என்ன குழம்பு?” என்னும் போது, மசலைப் (மசிக்கப் பட்ட வாசனைப் பொருள் மசலைப் பொருள். அதை மசாலையெனச் சொல்லிக் கொண்டுள்ளோம்.) பொருள் ஒன்றுசேர்ந்து கலங்கிக்கிடக்கும் சாறைச் சொல்கிறோம், இல்லையா?

குழு என்ற சொல்லின் கூட்டப் பொருள், திரட்சிப் பொருளுக்கு இன்னொரு சான்று குழியம் என்ற சொல்லாகும். அது கூடித் திரண்ட உருண்டை அல்லது கோளத்தைக் குறிக்கும். கோளம் கூடக் குல் எனும் வேரில் பிறந்ததே. குழுவல் = கூடுகை, குழூஉக் குறி = கூட்டத்தினரிடை விதப்பாகக் கையாளும் குறி. குளிகை = உருண்டை எனப் பலசொற்களை கூட்டப்பொருளுக்கு வாகாகச் சொல்லமுடியும்.

குல்> குழு> குழுமு> குழும்பு> குடும்பு> குடும்பம் என்னும் வளர்ச்சியில் மகர ஈற்றுச் சொற்கள் மகரம்/பகரம் சேர்ந்த ஈறாக மாறுவது தமிழில் பெரிதும் உள்ள பழக்கம்[குல்>கொல்(yellow)> கொழு> கொழுது>கொழுதுமை>கோதுமை என்ற சொல்கூடக் கோதம்பை என்று தென்பாண்டி நாட்டில் முதுபெண்டிர் வாயில் இன்றும் பலுக்கப் படும். இதே போலத் தேங்காய்க் குடுமியைத் தேங்காய்க் குடும்பி என்று பலுக்குவார்.] தவிர மகர/பகர இணையீறு தமிழுக்கே விதப்பாக உள்ள ஓர் ஈறு. வடமொழியில் அது மிகமிக அரிதாகவே காணப் படும். மற்ற இந்தை யிரொப்பிய மொழிகளில் காணப் படாதது. {ஏதொன்றையும் வடசொல் என்பார் மற்ற இணையான இந்தையிரோப்பிய மொழிச் சொற்களை, வழக்குகளை உடன்காட்ட முயலாதுள்ளார். நாமோ மற்ற தமிழிய மொழிச் சொற்களைக் காட்டிக் கொண்டு உள்ளோம். வடபுலச் சொற்களையும் முடிந்தவரை இணைகாட்டுகிறோம். வெறும் நம்பிக்கையே போதுமென்ற அளவில் ”வசுதெய்வ குடும்பகம்” என்று சங்கதச் சொற்றொடரை எடுத்துக்காட்டும் போக்கு இனியாவது மறைய வேண்டும். Let us do the linguistic analysis properly instead of just quoting this or that saying to support our assertions.}

இனி குளம்>குளம்பு> குடும்பு> கொடும்பு> கொடும்பை = குளம் என்றபொருளில் வரும் கொடும்பை ஆளூர் >கொடும்பாளூர் என்ற ஊர்ப்பெயரையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

குடும்பின் திரிவான கடும்பு, சுற்றம் என்ற பொருளைச் சுட்டும் வகையை “கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது” என்ற புறம் 68 ஆம் பாட்டின் (சோழன் நலங் கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது) 2 ஆம் வரியில் காணலாம். சங்க காலத்திலேயே குடும்பு இருந்திருக்க வேண்டும், இல்லெனில் கடும்பு என்ற சொல் ஆள முடியாது. சுற்றம் என்ற பொருளின் நீட்சி குடும்பம் தானே?

அவர்கள், இவர்கள் என்று சொல்லுகிறோமே, அந்தக் கள் எனும் விகுதி செறிவு, திரட்சி, கூட்டம் ஆகியவற்றைத் தான் குறிக்கிறது “மீனினங்கள் ஓர் கடும்பாய்” என்று பாகவத புராணத்தில் 9 ஆம் அதிகாரத்தில் .இக்குவாகு 6 -இல் மீன்கள் திரட்சியாய்ப் போவதைக் குறிக்கும்.

புறம் 183 ல் ஆரியப் படை கடந்தநெடுஞ்செழியன் “ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்” எனும் போது ”ஒரு குடும்பத்தில் பிறந்த” என்ற பொருளைத்தான் சொல்கிறான். கொடிவழி என்ற சொல்லைப் பரம்பரை என்ற பொருளில் பிங்கலம் காட்டும். குடிமை என்ற சொல்லால், வள்ளுவரும் ”ஒரு குலத்து ஒழுக்கம்” என்ற பொருளை உணர்த்துகிறார். குடும்பத்தை உணர்த்தும் குடி என்ற சொல் இன்று பொருள் விரிந்து குடியரசு வரை வந்து விட்டது. ஆனாலும் தொடக்கப்பொருள் குடும்பமே. குடும்பு என்ற சொல் பூங்கொத்து, காய்க்குலை ஆகியவற்றையும் குறிக்கும். family பொருளில் பேரரசுச்சோழர்காலக் கல்வெட்டில் “இவ்வாட்டை குடும்பு வாரிய பெரு மக்களும்” [தெ. கல்.தொ.19, கல் 179] என்ற சொற்றொடர் குறிக்கப்பட்டது.

இது போகக் குடும்பு என்றசொல் ஒரு குடும்பம் பயிர் செய்து வாழ்வதற்குப் போதுமானதாகக் கருதப்பட்ட உழவுநிலப் பரப்பை வழிப்பொருளாய்க் குறித்தது. ஒரு குடும்பு = 80 சதுரக் கயிறு. (= 320 காணி = 3.5 ஏக்கர்.)

குடும்பின் முந்தைய நிலையான குழும்பு என்றசொல் களிற்றுக் கூட்டம் அல்லது திரள் (யானை தன் குடும்பத்தைத் தவிர மற்ற யானைகளைக் கூட்டமாய் சேர்க்காது என்பதை நினைவிற் கொள்க.) பொருளில் மதுரைக் காஞ்சி 24 ஆம் அடியில் பிணக்கோட்ட களிற்றுக் குழும்பு என்ற சொற்றொடர் களிற்றுக் குடும்பத்தைக் குறிக்கிறது. ஆகக் குடும்பின் முந்தை வளர்ச்சி சங்க இலக்கியத்தில் காண்கிறது. ழகரம் டகரமாவது தமிழியப் பழக்கம் தான் கோழி தெலுங்கில் கோடியாகும் துளுவில் கோரியும் ஆகும் சோழ மண்டலம் சோர மண்டலம்/ கோர மண்டலம் ஆகவில்லையா? அழிம்பு> அழும்பு> அடிம்பு என்று பலுக்கப் படுவதில்லையா? இதே போல குழி தாழி >குழுதாழி> குழுதாடி (= மாட்டுத் தொட்டி) என்று சொல்லப் படுவது இல்லையா? துளைப் பொருளில் குழி என்ற சொல் குழும்பு என்ற மாற்று வடிவில் ஆளப் பட்டுள்ளது. [“ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர” மதுரைக் 273]

இவை தவிரக் குலை, கலவை, கலம்பம்>கதம்பம், கள், களம், களரி, கழகம், கணம், கட்டு, கருவி, கூளம், கூடல், கூட்டம், கோட்டி, கோடு, கோடி போன்ற பிற சொற்களும் கூட்டற் பொருளைச் சுட்டும். இவை ஒவ்வொன்றிற்கும் விளக்கம் தரலாம் விரிவஞ்சி விடுக்கிறேன்.

அக்காலத்தில் குடும்பம்/குடி என்பது ஏழு தலைமுறை சேர்ந்தது என்பதை நினைவு கொள்ளவேண்டும். [சேயோன், பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன் என்ற ஒன்பது தலைமுறைப் பெயரில், சேயோனையும், எள்ளுப் பெயரனையும் தவிர்த்தால் ஏழு தலைமுறையாகும். இந்த அளவிற்கு விரிவாகக் குழப்பம் இல்லாது உறவு முறைப் பெயர்களைக் குறித்திருக்கும் ஒரு பழம் இனமாகத் தமிழினம் தெரிந்ததால், The origin of family, private property and State என்ற பெடரிக் எங்கல்சு (Frederic Engels)  நூலில் தமிழர் உறவுமுறை பற்றிய வியப்புக் குறிப்பு வரும்.]

அக்காலத்தில் ஒரு குடும்பத்தினர் கூடிவாழ்ந்த ஊர் ”குடி” எனப் பட்டது. அக் குடியில் மற்ற குடும்பத்தினரும் பின்னால் கூடிவாழத் தலைப்பட்டனர். நாளடைவில் அரசகட்டளையால் மக்கள் கூடிவாழத் தலைப்பட்ட colony யும் குடி எனப்பட்டது. இந்தையிரோப்பியக் colony யும் தொடக்கத்தில் குலந் தொடர்பான சொல்லே. தமிழ்நாடெங்கணும் விரிந்துகிடக்கும் ’குடி”களைப் பார்த்தால், குடிப்பொருள் விளங்கும். குடியேறுதல் என்பது ஓர் அகன்ற குடும்பம் இடம்விட்டு இடம்புகுந்து வாழ முற்படுவதைக் குறிக்கும்.

[சோழநாட்டிலிருந்து அகதியாய் ஓடிவந்து பாண்டிய நாட்டில் குடியேறிய நாட்டுக்கோட்டை நகரத்தார் முதலில் இளையாற்றங்குடியில் தங்கிப் பின் அரசாணையால், இளையாற்றங்குடி, மாற்றூர், வைரவன்பட்டி, இரணியூர், சூரைக்குடி, இலுப்பைக்குடி, வேலங்குடி என்ற ஏழு ஊர்களில் குடியேறினர். பின்னால் இளையாற்றங்குடியாரில் இருந்து நேமம், பிள்ளையார்பட்டி என்ற இரு குடியினர் பிரிந்தனர். இன்றைக்கு ஒன்பது குடியினரும் ஒன்பது அகன்ற குடும்பத்தார் தான். இவர் ஒன்பது கோயிற் பங்காளிகள் என்றே சொல்லப் படுவர். குடும்பச் சொத்தில் பங்கிருக்கும் தந்தை வழி உறவினரைப் பங்காளிகள் என்றே அழைப்பார்.] குடும்பு/குடும்பம் என்பதும் குடி என்பதும் ஒன்று தான் என்பதற்கு இவ்விவரத்தைச் சொன்னேன்.

குடும்பம் என்பதைத் தமிழில்லை எனில், அப்புறம் மேலேகூறிய பெயர்ச் சொற்களையும், அவற்றோடு தொடுகும் வினைச்சொற்களையும் தமிழில்லை என்று சொல்ல வேண்டும். ”அப்புறம் முடிவெங்கே இருக்கிறது?” என்று எண்ணிப் பாருங்கள். கூட்டப் பொருள் என்பது அடிப்படைப் பொருள். அது இல்லாமல் ஓர் இயல்மொழி இருக்க முடியுமா?

குல் என்னும் வேரில் இருந்து கூட்டப்பொருள் அல்லாமல், வளைவுப் பொருளிலும் சொற்கள் (குடி, குடிகை, குடிசை, குடில் போன்றவை) உண்டு. இது தவிர, இல், மனை போன்றவை துளைப் பொருளில் மாந்தர் வாழும் இடத்தைக் குறிக்கும் சொற்களாகும். [வடமொழி வேர்ப்பொருளாக வளைவுப் பொருள் மட்டுமே மோனியர் வில்லிம்சில் காட்டப்பெறும். கூட்டப் பொருள் வளைவுப்பொருளிலிருந்து எப்படி வந்ததென்று அங்கு விளக்கப் படவில்லை.].

முடிவாகச் சங்க இலக்கியத்தில் குடி என்ற சொல் பெரிதும் பயில்கிறது. [அதன் பொருளை இன்றையப் புரிதல் கொண்டு பார்க்க முடியாது.] “குடும்பம் என்ற சொல்லும் சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும்” என்று மற்ற சூழ்நிலைச் சான்றுகளால் உணருகிறோம். அதே பொழுது ”குடும்பம்” என்ற வடிவிற்குச் சங்க இலக்கியத்தில் நேரடிச்சான்று இல்லை தான். என் செய்வது? எப்போதும் நான்சொல்வது போல ”சங்க இலக்கியம், ஓர் அகர முதலி அல்ல. அது நமக்குக்கிடைத்த இலக்கியப்பகுதி. அது காட்டும் சொல்லாட்சிகள் ஒரு சிலவே. தருக்கவழி உய்த்துணர வேண்டியது ஏராளம்.”

அன்புடன்,
இராம.கி.

குடும்பம் - 1

2008 திசம்பரில் மின் தமிழ் மடற்குழுமத்தில் மலேசிய எழுத்தாளர் திரு.ரெ.கா. "திருக்குறளில் குடும்பம் என்ற சொல் இல்லை. இது வள்ளுவருக்குப் பிற்காலத்திய சொல்லாக இருக்கலாம். 'இல்வாழ்க்கை', 'மனை மாட்சி' என்றே குறளில் ஆளப் பெறுகிறது. குடும்பம் என்ற சொல்லின் மூலம் என்ன? அறிந்தவர் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தார். தவிர, அச்சொல் “தமிழில் இருந்து வடமொழிக்குப் போனதா, வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்ததா?” என்றும் கேட்டிருந்தார். உடனே, “குடும்பம், குடும்பகம் - இரண்டும் வட சொற்களே. ‘உதார சரிதாநாம் து வஸுதைவ குடும்பகம்’ என்று மனுவும், யாக்ஞவல்கியரும் சொல்கிறார். ’பரந்த மனமுடையோர்க்கு உலகம் முழுவதும் ஒரே குடும்பம்’ என்று பொருள் கொள்ளலாம். உறவினர், மக்கள், வம்சம் போன்றவற்றைக் குறிக்கவும் இச்சொல் பயனாகிறது" என்று திரு.தேவு சொல்லியிருந்தார். ஆனால்,

ayaM nijaH paroveti gaNanA laghu-chetasAm
udAra charitAnAM tu vasudhaiva kuTumbhakam ||

""This is my own and that a stranger" - is the calculation of the narrow-minded,
For the magnanimous-hearts however, the entire earth is but a family"

என்ற சொற்றொடர் மனு ஸ்மிர்தியில் ஆளப்படவேயில்லை என்று சர்வேஷ் திவாரி என்பவர் அழுத்தந்திருத்தமாகச் சொல்லுகிறார். (http://www.blogs.ivarta.com/Hoax-Called-Vasudhaiva-Kutumbakam-I-Hitopadesha/blog-148.htm). {மேலும், இவ்வாசகம் வரும் நூலாக யஞ்யவல்கிய ஸ்மிர்தியை திரு. திவாரி குறிப்பிடவில்லை. அதேபொழுது இச்சொற்றொடர் பல வடமொழி நூல்களில் ஆளப் பட்டிருப்பது உண்மை தான் என்று சில காட்டுக்களைத் தருகிறார். அவர் கட்டுரைகளைப் படித்தால், ஒரு பருந்துப் பார்வை கிடைக்கக்கூடும். பின், மூலங்களுக்குப் போய் முழு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். ”வசுதெய்வ குடும்பகம்” என்ற சொற்றொடர் குறிக்கப் படும் நூல் விதப்பாக ஹிதோபதேசம் என்றும், அதற்குமுன் பஞ்ச தந்திரக் கதைகளிலும், அதற்கும் முன்னால் [இராமனுசரின் ஸ்ரீ பாஷ்யத்தின் இரண்டாம் அதிகாரத்தில் ஏழாம்  அதிகரணத்தில் கூறும் விளக்கங்கள் வழியாக, அரிதில் அறியப் பட்ட] மகா உபநிடதம் 6- ஆம் அதிகாரத்தில் வரும் 70-73 ஆம் வரிச் சொலவங்களிலும் இச் சொற்றொடர் ஆளப்பட்டதாக திவாரியின் கட்டுரைகள் சொல்கின்றன.} மனு ஸ்மிர்தியிலும், யஞ்யவல்கிய ஸ்மிர்தியிலும் எவ்விடத்தில் இச்சொற்றொடர் ஆளப்பட்டுள்ளதென அதிகாரம், வரிக்குறிப்புகளோடு திரு. தேவு கொடுத்தால் எடுகோளைப் பார்க்க ஏந்தாக இருக்கும்.

பொதுவாக இரண்டாம் வழிப்பட்ட பரப்புரைக் கட்டுரைகளைக் கொண்டு அடித்துச் சொல்லுவது நம்மை வழுக்கிவிடும். [அதே பொழுது, குடும்ப என்ற சொல் சந்தோக்ய உபநிடதம் தொடங்கி, பின் ஆபஸ்தம்ப தர்மசூத்ரம், மனுஸ்மிர்தி ஆகியவற்றில் ஆளப் படுவதாகத்தான் மோனியர் வில்லியம்சு அகரமுதலி குறிப்பிடுகிறது.]

மனு ஸ்மிர்தி முதல் நூற்றாண்டு நூலென்றே பெரும்பாலோர் கருதுகிறார்.  ஹிதோபதேசம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அளவில் எழுந்த, கதைகள் நிரம்பிய, நூல். பஞ்சதந்திரம் பல்வேறு காலப்பட்டது. அதன் தொடக்கம் புத்தருக்கும் முற்பட்டது என்பார். வேதநெறி பயிலாத (ஆசீவகம், சைனம், புத்தம் போன்ற) மாற்று நெறியாளரிடம் பெரிதும் புழங்கியவை பஞ்சதந்திரக் கதைகள். தொடக்ககாலத்தில் அவற்றைப் பயன்படுத்த வேதநெறி தயங்கியது. பின், நெடுங்காலம் கழித்தே, வேதநெறி தன் பரப்புரைகளில் ஒருசில பஞ்சதந்திரக் கதைகளைப் பயன்படுத்தியது. உபநிடதங்கள் கி.மு.800 தொடங்கி புத்தருக்கும் அப்புறம் கி.மு.400 வரைக்கும் எழுதப் பட்டிருக்கலாம் என்றே வரலாற்று ஆய்வாளர் சொல்கிறார்.

குடும்பம் என்ற சொல் சில வடநூல்களில் ஆளப்படுவதாலேயே அதை வடசொல்லென அறுதியிட்டுச் சொல்லமுடியாது. குடும்பம் என்ற சொல்லின் வேர், அந்த வேரடியில் பிறந்த மற்ற சொற்கள், அச்சொற்களின் வளர்ச்சி, அவற்றின் சொற்கூறுகள், சொற்கள் அமையும் பாங்கு போன்றவற்றைக் கருத்தில் கொண்டால், அப்படி அறுதியாய்ச் சொல்ல முடியாது. [குடும்பம் என்ற சொல்லின் தமிழ்மையைக் கீழே நிறுவுவேன்.]

பொதுவாக, நாவலந்தீவு தழுவிய பழந்தமிழின் விரிவை ஏதோ காரணங் கருதி மறுத்து (குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட காலமும் ஒன்று இருந்தது, அது பல்வேறு காரணங்களால் மாலவன் குன்றத்திற்கும் கீழே சுருங்கியது.), ”வேதநெறிக்கும், மாற்று நெறிகளுக்கும் இடையே நடந்த தருக்கப் போராட்டத்தில் பல்வேறு சமய நெறியாளரும் அங்கும் இங்குமாய் ஓடி, முடிவில் தற்காப்பிற்காகத் தெற்கு நோக்கி பெருமளவில் வந்ததையும், குறிப்பாக வேதநெறியாளர் இரண்டு மூன்று அலைகளாய் ஓடி வந்ததையும் புறந்தள்ளி, [காண்க: பார்ப்பனரில் உள்ள பெருங்கணம் (ப்ருஹச்சரணம்), வடமர் போன்ற கூட்ட உட்பிரிவுகள்; தமிழக, இந்தியவரலாற்றில் ஒரு குறித்த பகுதி; ஆய்வுசெய்யாமல் அழிந்து கொண்டு உள்ளது. ”வரலாற்றுத் திருத்தங்கள்” தங்களுக்கு இடைஞ்சலானவற்றை மறைத்து அழித்துக் கொண்டுள்ளன.], பல சங்கத நூல்கள் தெற்கிருந்தே எழுதப் பட்டன என்பதையும் புரிந்து கொள்ள மறுத்து, வன்கண் வழக்குச் செய்வதாலேயே, பலரும் வேதகாலத்தில் சிறிதளவும், உபநிடதக் காலத்தில் பேரளவும் தமிழ்ச் சொற்கள் சங்கதத்துள் நுழைந்து ஆட்சி செய்திருக்க வாய்ப்புக்களுண்டு என்பதை மறுக்கிறார். [அப்புறம் காழ்ப்பு காழ்ப்பு என்று சொல்லுவதில் பொருளென்ன உள்ளது?] சிந்தனை மாற்றங்கள் ஏற்படாமல், ஒருபக்கமாகவே எண்ணிக் கொண்டிருந்தால், மொழியாய்விற்கு வடக்கு மட்டுமே வாசலென முட்டிக்கொள்ள வேண்டியது தான். மற்ற வாசல்களைத் திறந்தால் என்ன, குடி முழுகியா போய்விடும்? புதுக் காற்று தென்றலாய் வந்து அடிக்கட்டுமே?

அன்புடன்,
இராம.கி.