Sunday, October 28, 2018

தூங்கெயில் - 3

அவலோகிதனை இப்படி ஐயுறத்தொடங்கிய நாம், இத்தொடரில் மணிமேகலை வாழ்வையும் துறவையும் பேசாது (அது பென்னம் பெரிய வேலை; வேறோரிடத்திற் செய்யவேண்டும்). ”தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன்” பற்றி அலசப் போகிறோம். என் இப்போதையப் புரிதலில் இப்பெயர் விதப்புக் குறிப்பும், குடிப்பெயருஞ் சேர்ந்தது. அக் காலத்தில் தோளுக்கடுத்த மேற்கையில் இரு பாலரும் அணியும் தொடிவளை இங்கு விதப்பான அடையானது ஏனெனப் புரியவில்லை. அதற்கான விவரம் எங்குங் கிட்டவில்லை. யாரோவொரு சோழ முன்னவன் தூங்கெயிலெறிந்த விவரிப்பு இன்னுஞ் சில நூல்களிலும் பேசப்படுகிறது. முதலில் நாம் காண்பது இதையும், புறாவிற்கென செம்பியன் உடம்புத் தசையை அரிந்து கொடுத்ததையுங் குறிக்கும் சிலம்பு 27, 164-171 வரிகளாகும். கீழே படியுங்கள்.

வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன்று எறிந்த இகல்வேற் கொற்றமும்
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்துவே றாகுங் காலமு முண்டோ
தீதோ இல்லைச் செல்லற் காலையுங்
காவிரி புரக்கும் நாடுகிழவோ னென்று
அருமறை முதல்வன் சொல்லக்கேட்டே

இதில் இந்திரன் அரணத்தைக் காத்து, உயர்விசும்பின் 3 தூங்கெயில்களை சோழனெறிந்தது பேசப்படுகிறது. இதையும், "திறல்விளங்கு அவுணர் தூங்கெயில் எறிந்த, விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்” (தொல்.கள. சூ.11. நச்.மேற். இதைப்பற்றிக் கீழே விரிவாய்ப் பேசுகிறேன்.) எனக் குறித்ததையும் பொருத்தினால், அவுணர்/அசுரர் விண்ணிலமைத்த 3 மாய அரண்களையும், செஞ்சடைக்கடவுள் எரித்த திரிபுரங்களையும், சோழன் தூங்கெயில் எறித்ததோடு போட்டு வேதநெறி சார்ந்து உரையாசிரியர்கள் குழப்புவது புரியும்.

அவுணரென்பார் உண்மையிலேயே அசுரரா? அல்லது உவணரெனும் மலைக் குடியாரா?- என்று புரியவில்லை. (மறந்துவிடாதீர்கள். உவணம்= உயரத்தில் உள்ள இடம், எனவே மலை. வானப் பொருளும் உவணத்திற்கு உண்டு. உவணர்>ஊணர்>ஔணர்>அவுணர் என்ற திரிவையும் எண்ணிப்பாருங்கள். வரலாற்று மிலேச்சரான ஹூணராய் இவரிருக்க வழியில்லை. அவர்காலம் பொ.உ.5 ஆம் நூற்றாண்டு.) பொதுவாக வெளியாரைக் குறிக்குஞ் சொற்கள் நம்மிடந்திரிவது இயற்கை. ”கன்வ” எனும் மகதகுலச் சொல் கனகவென நம்மவர் வாயில் திரிந்ததே?.(செங்குட்டுவன் தோற்கடித்த கனகவிசயன் ஒரு மகத அரசனாக இருக்கலாமென என் ”சிலம்பின் காலத்திற்” சொன்னேன். அம்முகன்மையை நம்மிற்பலரும் இன்னும் உணரவில்லை.) அயொனியர் நமக்கு யவனரானாரே? விண்ணெனில் அது அந்தர ஆகாயமா? மேலும், விண்தொடுங் கட்டிடம் ஆகாயந் தொடுமா? தடுமாறுகிறதல்லவா? ஒரே கதை; 3 வடிவில் தோற்றுவதால், தொன்மமெது; வரலாறெது?- என்று நமக்குப் புரியவில்லை. 

இதே சிலம்பின் 29ஆம் காதை 16ஆம் பாட்டு- அம்மானை வரியும் சோழன் தூங்கெயிலெறிந்ததை விவரிக்கும். [2 வேந்தர், 7 மன்னரோடு போரிட்டு சோழ வளநாட்டைச் செங்குட்டுவன் கைப்பற்றித் தன் மாமன்மகனான கிள்ளி வளவனைப் பட்டமேற்றியது சிலம்பின் வஞ்சிக்காண்டத்திற் பெறப்படும்.[வஞ்சிக்காண்டம் புரியாமற்றான், தமிழர் வரலாறு நமக்கெல்லாந் தடுமாறுகிறது. சிலம்பைக் கற்பனை நூல் என்னுமளவிற்குச் தொல்லாய்வர் நாகசாமி போன்றோர் போவார். இன்னொரு பக்கம் சந்து கிடைக்கும் இடம் எலாம் ஊடு வந்து சேரரின் குடவஞ்சியைக் கொங்கு வஞ்சியோடு (கரூரோடு) குழப்பி அதனால் கொங்கு நாட்டிற்குப் பெருமைசேர்க்க திரு. நா.கணேசன் போன்றோர் முயல்வார். 2,3 ஊர்களுக்கு ஒரேபெயர் அமைவது தமிழரிடை மிகச்சாத்தாரம். கொங்கின் பெருமையை வேறுவகையில் உணர்வதல்லவா தமிழர்க்கு நல்லது? பார்க்க: இராம.கி.யின் “சிலம்பின் காலம்”, தமிழினிப் பதிப்பகம்.]

[ஒரு பேச்சிற்குக் கேட்பேன். தெற்கத்தியாகிய நான் என் வட்டாரப் பற்றால் ”எல்லாமே தெற்குச்சீமை” என முழங்கித் தள்ளினாற் சரியாகுமோ? அவரவர் வட்டாரம் அவரவர்க்கு உயர்த்தியன்றோ? மீண்டும் சேர, சோழ, பாண்டியர் ஆகித் தமிழராகிய நாம் மீண்டுங் கொங்கிற்காக அடித்துக் கொள்வோமா, என்ன? பாழாய்ப்போன குறுங்குழுப் பெருமையும் ஓற்றுமைக் குலைவும் தானே வரலாற்றில் தமிழர்க்கு பேருலை வைத்தன? சேர, சோழ, பாண்டியர் சண்டைகளை விட்டால் தமிழர்க்குத் துளி வரலாறாவது மிஞ்சுமா? பங்காளித் தகறாறிலும் மாமன்/மச்சான் சண்டையிலும் பேரளவிற்கு ஓய்ந்து போன கூட்டம் வேறெங்கேனும் உண்டா? “தேவர்மகன்” திரைப்படம் அப்படியே தமிழரை உரித்துக் காட்டுவதாய் நான் சொல்வதுண்டு. உட்பகை தமிழரை அழித்ததுபோல் வெளிப்பகை, சேதம்விளைத்து இருக்கிறதா? இன்றும் ”ஐயா, அம்மா” என்று சொல்லி இரு பெருங் கட்சிகளைக் கட்டிச் சீரழிகிறோமே? இதுவும் ஒருவகைச் சோழ, பாண்டியத் தகறாறு தானே? யாரார் எதுவென்று உங்களுக்கே புரியும். இத்தகராறுகளை ஒதுக்கித் தமிழருக்கு நல்லது தேடினாலென்ன?] சரி, தூங்கெயிலுக்கு வருவோம். சிலம்பின் வாழ்த்துக் காதையில் அம்மானை வரியின் முதற்பாட்டில்,

வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத்த உரவோன் யார் அம்மானை?
ஓங்கரணங் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை

என்றுவரும். தூங்கெயில் எறிந்ததற்கு இன்னுஞ்சில மேற்கோள்களுண்டு. கீழேவருவன சிறுபாணாற்றுப்படை  79-83 ஆம் வரிகள்.

...................................................ஒன்னார்
ஓங்கெயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்
தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நல்தேர்ச் செம்பியன்
ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே......

அடுத்து வருவன குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடும் மாறோக்கத்து நப்பசலையாரின் புறம் 39, 46-47 ஆம் வரிகளாகும்.

------------------------------சார்தல்
ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்  நினைப்பின்
அடுதல் நின்புகழும் அன்றே ..........

அப்புறம் பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து 31 ஆம் பாடலில் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார்,

கடவுள் அஞ்சி வானத் திழைத்த
தூங்கெயிற் கதவங் காவல் கொண்ட
எழூஉ நிவந்தன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்

என்றவரிகளால் தூங்கெயிற் கதவத்தின் காப்பாய், தலைவன் அஞ்சியின் ஆணையால் உலர்ந்த அடிமரத்தை இழைத்துச்செய்த கணையம் உயர்ந்து நிற்பதுபோல் நார்முடிச்சேரலின் தோளைச் சொல்வார். வானமென்பதை அகர முதலியிற் பார்த்தால் உலர்ந்தமரம் என்ற பொருளுமுண்டு.. அது இழைக்க முடியாத ஆகாயமல்ல. (ஆகாயமென்று புரிந்து கொண்டோரே தமிழறிஞரில் மிக அதிகம்.) இம் முகனை வரிகளால் ”செம்பியன் யாருடைய தூங்கெயிலை எறிந்தான்?” என்ற கேள்விக்கு ஆகாயத்திலன்றி, மண்ணிலேயே நல்ல விடை கிடைக்கலாமென்று புரிகிறது. இங்கே குறிப்பிடப்படுவோன் அதியமான் நெடுமான் அஞ்சியோ, அன்றி அவன் முன்னோனோ ஆகலாம். கடவுள்/பகவான் என்றாலே எல்லாம்வல்ல இறைவன்-தேவர் என்பது இக்காலப் புரிதல். சங்ககாலத்தில் அப்படியல்ல. அன்று ’கடவுள்’ என்பது தலைவன்/பெரியவனையே குறித்தது. கோதமபுத்தரும், வர்த்தமானருங்கூட அற்றைப் புரிதலிற் கடவுளரே. (பகவான் புத்தர், பகவான் மகாவீரர் என்கிறோமே?) வேதநெறி சாராது பலவிடங்களிற் தமிழிலக்கியத்தைக் காணமுடியும். வெவ்வேறு காலங்களிற் சொற்பொருள் மாறுபடும் என்பதை மறக்க வேண்டாம். .

அன்புடன்,
இராம.கி.

No comments: