Thursday, November 01, 2018

தூங்கெயில் - 4

இதுதவிர, முன்னே சொன்னதுபோல், தொல்காப்பியம் பொருளதிகாரம் களவியலில் ”மெய்தொட்டுப் பயிறல் பொய்பாராட்டல்” என்று தொடங்கும் 11 ஆம் சொற்றத்தில் (சூத்திரத்தில்) ”என்னென்ன விதமாய்த் தலைவன் கூற்று உண்டெ?”ன்பதில் தலைவனின் ஆற்றாமையை நீக்கத் (”குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்”) தலைவனுக்கு நடக்கும் குற்றங்களைப் பாங்கன் வெளிப் படுத்தலும், தலைவன் மறுமொழித்தலும் அடங்கும். இதற்கு நச்சினார்க் கினியர் காட்டும் எடுத்துக்காட்டுகளில் ”குறவமக்கள் தலைவியின்சிறப்பைத் தாம் பயந்ததாய்ச் சொல்வார்” எனும் அகப்பாட்டு தூங்கெயில் எறிந்ததைப் பேசும் இப்பாட்டு நச்சினார்க்கினியர் உரையாலே நமக்குத் தெரிகிறது. இதை ”யார் பாடினார்? எவ்விலக்கியஞ் சார்ந்தது?” என்று நமக்குத் தெரியவில்லை. [கீழே நச்சினார்க்கினியார் கொடுத்த பாட்டை முழுதுங் கொடுத்துள்ளேன். படியுங்கள். ஏதோவொரு வரலாற்றுச் செய்தி உள்ளேயிருக்கிறது.]

கண்ணே,
கண்ணயற் பிறந்த கவுளழி கடாஅத்த
அண்ணல் யானை யாரியர்ப் பிணித்த
விறற்போர் வானவன் கொல்லி மீமிசை
அறைக்கான் மாச்சுனை யவிழ்த்த நீலம்

பல்லே,
பல்லரண் கடந்த பசும்பூண் பாண்டியன்
மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்துறை
ஊதை யீட்டிய வுயர்மண லடைகரை
ஓத வெண்டிரை யுதைத்த முத்தம்

நிறனே,
திறல்விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த
விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்
நலனணி யரங்கிற் போகிய மாவின்
உருவ நீள்சினை யொழுகிய தளிரே

என்றவை பயந்தமை யறியார் நன்று
மறவர் மன்றவிக் குறவர் மக்கள்
தேம்பொதி கிளவி யிவளை
யாம்பயந் தேமெம் மகளென் போரே

இப்பாட்டில், தலைவியின் கண்ணும், பல்லும், நிறமும் முறையே வான வரம்பன் உதியஞ்சேரல் (அன்றி அவன் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரல்) ஆதனின் கொல்லிச்சுனையில் மலர்ந்த குவளைக்கும், பசும்பூண் பாண்டியனின் கொற்கைத்துறை மணற்கரையை அடைந்த முத்திற்கும், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியனின் போர்ச் செங்களத்து நீள்மாமரத்தின் இளந்தளிர் நிறத்திற்கும் ஒப்பிடப் படுகின்றன. ஆரியரைப் பிணித்த சேரலாதன், பசும்பூண் பாண்டியன் என்ற முந்நாள் வேந்தரை இப்பாட்டு குறிப்பதால் பாட்டின் காலம் பெரும்பாலும் கி.மு.120/150 க்கும் முன்னதென்றே தோன்றுகிறது

[கட்டுரைக்கு இடைவிலகலாய், பாட்டின் பொருளை இங்கு கொடுக்கிறேன். ”அவள் கண்ணோ, தூக்கமிழந்து, கன்னந்தடவிப் பார்வைசெலுத்தும் பெரும் யானைகளால் ஆரியரைப் பணித்த, போர்த்திறங் கொண்ட, சேரலாதனின் கொல்லி மலைக்குகையிலுள்ள பெருஞ்சுனையில் மலர்ந்த குவளை போன்றது; அவள் பல்லோ, பல்லரண்களைக் கடந்த பசும்பூண் பாண்டியனின் பெருங்கடலிலுள்ள கொற்கை முன்துறையில், உயர்ந்து பொங்கிவரும் வெள்ளோத அலையால், மணற்கரையை வந்தடையும் முத்தைப் போன்றது; அவள் நிறமோ, திறம் வெளிப்பட்ட உவணரின் தூங்கெயிலை எறிந்த விறல் மிகுந்த முரசோடு போர்வெல்லும் சோழனின் செம்மைசார்த்திய போர்க்களத்தில் இருந்த நீண்ட மாமரக்கொம்பின் தளிர் போன்றது” என்றபடி, அவைகிடைத்தமை அறியாதவர், நன்று, மறவர்மன்றத்தில் இக்குறவர் மக்கள் இன்சொற்களைப் பேசி, ”இவளை நாங்களே பயந்தோம்; இவள் எம் மகள்” என்று சொல்வாரே]

தூங்கெயில் என்ற சொல்லின் பொருளறிய இப்பாட்டில் முகன்மையான குறிப்பொன்று நமக்குக் கிட்டுகிறது. அதாவது தூங்கெயிற்கான போர்ச் செங்களத்தில் மாமரம் ஒன்றிருந்தைக் குறிப்பதால், தூங்கெயில் உறுதியாக அந்தர ஆகாயத்திலில்லை என்பது பெறப்படும்.; அது மண்ணிற்றான் இருந்தது என்பது ஆணித்தரமாய் விளங்கும். எனவே தூங்கெயிலை விண்ணிற் காண முயலும் தமிழறிஞர் அதைவிட்டு மண்ணுக்கு வருவதே நல்லது. சங்க காலத்திற்கு அப்புறமும் சோழன் தூங்கெயிலெறிந்த கருத்து தொடர்ந்து வந்ததையும், ”முயன்றால் முடியாததில்லை; கூரம்பின் அடியை இழுத்து எய்துவிட்டால் எவ்வரணையும் காப்பாற்ற முடியாது” என்று அதற்கு விளக்கந் தருவதாயும், பழமொழி நானூற்றின் 155 ஆம் பாட்டு வெளிப்படுத்தும்

வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம் 'கூரம்பு
அடியிழுப்பின் இல்லை அரண்'.

இப்படிப் பழவிலக்கியத்தில் மட்டுமின்றி, பிற்காலத்தில் குலோத்துங்கசோழன் பெருமைபேசும் குலோத்துங்கசோழன் உலாவும்,

தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா
மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக்
கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும்
பதுமக் கடவுள் படைப்படையக் காத்த
முதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க
வாங்கெயி னேமி வரையாக மண்ணாண்டு
தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய
மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து
மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன்
றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு
மலையெறிய மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத்

என்று பதிவுசெய்யும். இன்னும் கலிங்கத்துப்பரணி (இராச 17, “தேங்கு தூங்கெயி லெறிந்த வவனும்”) , இராசராச சோழனுலா (வரி 13; “வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத், தூங்கும் புரிசை துணித்த கோன்”), விக்கிரம சோழனுலா (வரி 16, 17; “கூடார்தந், தூங்குமெயிலெறிந்த சோழனும்” ) போன்றவையும் பேசும்.

இத்தனை எடுத்துக்காட்டுகளுக்கு அப்புறமும், மேற்கூறிய தூங்கெயிலை, ”ஆகாயக் கோட்டையாய்” கற்பனை கலந்த மீமாந்தக் (அமானுஷ்யக்) குறிப்போடு உரைகாரரைப் பின்பற்றிப் பெரும்பாலோர் நவில்வது வியப்புத் தான். அறிவியற் குறுகுறுப்பும், ஏனெனும் தருக்கும் உள்ள இக்காலத்தில், உரைவழி பாராது, நேரேயே சங்ககாலத்தைப் புரிந்துகொண்டாலென்ன?- என்று நான் கேட்பேன். மேகலை படித்துப் புரியாக்காலத்தில், மீமாந்த விவரிப்புள்ள அதன் காப்பியப்போக்கை நானுங் கேள்வி கேட்டதில்லைதான். ஆயினும், மீமாந்தங் குறைந்த சிலம்பைப் படித்தபின் (அதிலும் கண்ணகி முலைதிருகி எறிய மதுரையெரிந்தது போன்றவை மீமாந்தச் செயல்களே. அவற்றின் நேர்விளக்கமும் என்னிடமில்லை.) மீமாந்த விவரிப்பின்றி தூங்கெயில் எறிந்ததை இயல்பாய் நவில வாய்ப்பில்லையா? தூங்கெயில் என்பது புவியின் குருவிசை (gravity force) மறுத்தசைந்த ஆகாயக் கோட்டையா? அன்றி நிலத்திற் பதிந்த, விதப்பு அடவுள்ள (specialized design) கோட்டைப்பகுதியா? யாருடையது இத் தூங்கெயில்? அரசன் விறல்வியந்து பெயரடை தரும் அளவிற்குத் தூங்கெயிலெறிவது கடினமா?- என்ற கேள்விகளெழும். தூங்கெயிலைப் புரிந்துகொள்ள, கோட்டையையும் அதன் பகுதிகளையும் விரிந்து காண்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: