Saturday, October 27, 2018

தூங்கெயில் - 2

அவலோகிதன் யார்? தமிழில் அவன் பெயரென்ன? என்பது அடுத்தகேள்வி. உல்>ஊல்>ஊள்>ஊளை= ஆந்தையோசை. உல்லுகம்>உலூகம், பாலியில் ஆந்தையைக் குறிக்கும். ஊளை, ஊளி, உலூக, owl- என்பவை தொடர்புள்ளவை. (இரவில் உணவுதேடுந் துறவியை வேதமறுப்பாளர் ஆந்தையரென்பார். இன்றும் இரவில் அலைவோரை தமிழரும் ஆந்தை என்போம். அதேபொழுது, இரவுணவைச் செயினநெறி ஏற்காது. ’அந்தை’க்கு அச்சனென்றும் ”அந்தன்> அந்தனர்>அந்தணர்= பெரியவர்” என்றும் இரா.இளங்குமரன் சொல்வார்.) உலூக>உலூகித என்பது ஔலோகித>அவலோகித என்று வட மொழியில் திரியும். தமிழ்ச் சொல்லான உதாரம் சங்கதத்தில் ஔதார்யம் ஆனது போல், உயர்ந்த மலையனைக் குறிக்கும் சொல், உவணன்>ஊணன்>ஔணன்> அவுணன் என்றானது போல், இதைக் கொள்ளுங்கள். உங்களுக்கு நேரமும் பொழுதும் இருந்தால் ஓர் அகரமுதலியின் ஔகாரச் சொற்களை எடுத்து வைத்துத் துழாவுங்கள். சங்கத இடையூற்றாற் பலவும் நம்மிடங் கண்ணா மூச்சி காட்டும். வியந்துபோவீர்கள். ஆயினும் ’சங்கதம் தமிழிடமிருந்து சொல் கடன்பெற்றது என்பதைச் சங்கத அபிமானி’கள் ஏற்கவே மாட்டார்’:-)) )

{அந்தணர் என்பது பார்ப்பாரைக் குறித்தது மிகப்பிந்தைப் புரிதல். பெருமான்> பெருமானர்>ப்ராமணர் என்பது தமிழ்வழிப் பிறந்ததே. இதை வடசொல்லாய்க் காண்பது சொற்பிறப்பியல் அறியாப் பேச்சு. ’சிவபெருமான்’ என்பது ’சுப்ரமண்ய’ என்றாவதைக் கண்டால் பெருமான்>ப்ரமண் திரிவு சட்டென விளங்கும். வெள்ளமாய்க்கூடிய தொன்மப்பெருக்கில், தொல்காப்பியச் சேயோனே தந்தையும் மகனுமாய்ப் பிற்காலத்தில் பிரித்தறியப் பட்டார். ’சிவ’ எனுந் தமிழ்ச்சொல்லே சு எனுஞ் சங்கத முன்னொட்டாகி, ’நல்ல’வெனும் பொருள் கொள்ளும். சிவ மங்கலியே சுமங்கலியானாள். சங்கவிலக்கியம் படித்து இந்தியவியல் ஆய்வில் ஈடுபடும் பல மேலையரும், ஏன் பல தமிழறிஞருங்கூடத் தமிழ்ச்சிந்தனைகளை வடவர் தொன்மங்கள்/பழனங்களைக் கொண்டே விளக்குவார். அந்த அளவிற்குச் சங்கதம்->தமிழ் எனும் ஓரப்பார்வை இருக்கும்வரை தமிழரின் மரபுத்தொடக்கம் புரியாது. அண்மையில் ஓராய்வாளர் கீறல் விழுந்த இசைத்தட்டுப் போல், சிவனெனும் மழுவாள் நெடியோனை வருணனின் திரிவாய்த் தொடர்ந்து காட்டிவருகிறார். அவரை வேறிடத்தில் இதுபற்றிக் கட்டாயம் மறுப்பேன்.} 

இளங்கீரந்தை, பொதுக்கயத்துக் கீரந்தை, எயினந்தை, கோட்டியூர் நல்லந்தை, சாத்தந்தை என்ற சங்ககால அந்தைப் பெயர்களையும், அஞ்சிலாந்தை, ஓதலாந்தை, சிறைக்குடியாந்தை, பிசிராந்தை எனும் ஆந்தைப்பெயர்களையும் பார்த்தால், அந்தை>ஆந்தையென்ற இயற்சொல்வளர்ச்சி ஆதன்+தந்தை= ஆந்தை என்பதைவிடப் பொருந்துவதாய்த் தோன்றுகிறது. இன்றுங்கூடக் கிறித்துவப்பாதிரியை அச்சன் என்றே மலையாளத்தில் சொல்வர். அதே மரபில், பிசிராந்தையார் ஏன் பிசிரைச் சேர்ந்த  ஐயனார் கோயிலின் ஆன்மத் தந்தையாய், அற்றுவிக அறிவராய், ஆகக்கூடாது? ஓர்ந்துபாருங்கள். ஆந்தையார் என்பது இயற்பெயர், தொழிற்பெயர் என்பதுபோற் தெரிய வில்லை. இது ஒரு வேளை உறவுப்பெயராய், மதிப்புப்பெயராய் இருக்கலாமே? ஒருமுறை அப்படி எண்ணிப்பார்ப்போமே? பார்வை மாறுமே? 
[ஆந்தைப்பெயர் கொண்ட புலவர்களின் சங்கப்பாடல்களில் அற்றுவிகப் பார்வை தொனிப்பதை நான் காண்பதை இன்னொரு தொடரில் விளக்குவேன்.]

பிள்ளைகளோடு தனக்கேற்பட்ட மோதலில் மனங்கலங்கி இனிமேலும் இவ்வாழ்விற் பொருளில்லையென நோன்பேற்றுத் தன்வாழ்வை அற்றுவித்துத் (முடிப்பித்துத்) திருவரங்கத்திற் பள்ளிகொண்ட (?!:-)) கோப்பெருங்கிள்ளிச் சோழன் பிசிராந்தையார் மேல் மதிப்புக்கொண்டது புறநானூற்றால் நமக்குத் தெரியும் (புறநானூற்றை ஆழ்ந்துபடித்தால் கோப்பெருங்கிள்ளியின் பின் திருவரங்கம் உள்ளது நமக்குப் புரியும்.) திருவரங்கக் கோயிலொழுகை இதோடு பொருத்தினால், அற்றுவ>அறுவ> அறவச் சோழனைச் சங்கதவழி, ’தருமவர்மா’ என்றாக்கி, அவன்வழிவந்த கிள்ளிச்சோழரைக் கிளிச்சோழர் என்றாக்கிய தொன்மமும் நமக்கு நன்கு புரியும். திருவரங்கக் கோயிலொழுகை எந்தத் தமிழறிஞர் படிக்கிறார்? சொல்லுங்கள். அது “வைணவாளுக்கு அல்லவா ஆனது?” - ஏன்று ஒதுக்குவாரே மிகுதி.)

அதேபோது, கிள்ளிகள் காலத்திலேயே திருவரங்கன் கோயிலிருந்ததற்குச் சிலம்பே சான்று பகரும். [ஆயினும் திருவிண்ணவரோ அதைக் கொஞ்சமும் எடுத்துக் காட்டமாட்டார். கிள்ளிகளுக்குப் பின் ஆழ்வார் (குறிப்பாய் நம்மாழ்வார்), நாதமுனி, யமுனாச்சாரியார், இராமனுசர், பின் குரு பரம்பரை யென ஒரேயடியாய்த் தாவிவிடுவார். வரலாற்றில் ஒரு பேரிடைவெளி நமக்குச் சொல்லப்படாமலே உள்ளது. இன்று நாம்காணும் திருவிண்ணவம் எப்படியெழுந்தது? வடக்கிருந்த பாகவதமே இதனூற்றா? ஆழ்ந்துபார்த்தால் எனக்கப்படித் தோன்றவில்லை. விண்ணவக் குருக்களின் கொடிவழியை தமிழ் விண்ணவர் கொண்டாடுவது போல் வட விண்ணவர் கொண்டாடுவாரோ? எனக்கப்படித் தெரியவில்லை. இத்தனை ஏன்? நம் ஆழ்வார்களை (அதுபோல் நாயன்மாரை) அவர் கொன்டாடுவாரோ?

8400000 கல்பங்களில் ஓர் ஆன்மாவிற்கு நடப்பதாய்ப் பலராலுஞ் சொல்லப் படும் பிறவிச்சுழற்சியை (உங்களுக்குத் தெரியுமா? திருமூலரும் இதையே சொல்வார். இந்திய மெய்யியற் சிந்தனையாளரை ’8400000’ என்ற எண் பெரிதும் மயக்கியது.) அற்றுவிக்க வழிசொல்லும் நெறியே அற்றுவிகமாகும். தமிழில் அற்றுவிக>அத்துவிக என்று பலுக்கப்பட்டு, பாகதத்தில் அஜ்ஜுவிக> அஜ்ஜீவிக>ஆஜீவிக என்றாகி மீளத்தமிழில் ஆசீவிகம்>ஆசீவகமாகி அது நிலைத்தது. அற்றுவிகத்தை ஒருபக்கமுணர்த்தும் சிலம்புகூட ஆசீவிகம் என்றே பெயரைப் பதிவுசெய்யும். (நானும் ஒரு காலத்தில் ஆசீவிகம் என்ற சொல்லைத் தமிழென எண்ணினேன். அண்மையிற்றான் ஆழ்ந்து ஓர்ந்தபின் வரலாறு எனக்குப் புரிந்தது) ஆயினும் மதுரையருகுள்ள ஆனைமலைக் கல்வெட்டு அற்றுவி என்றே இவரை அடையாளங் காட்டும். ஆசீவகம்பேசும் தமிழாய்வர் ஆசீவகத்தை ஆசு+ ஈவு+ அகம் என்று செயற்கையாய்ப் பிரித்து, உலகவழக்குச் சொற்பிறப்பு (folk etymology) சொல்வதை நான் இன்றேற்கத் தயங்குவேன். அற்றுவிகச் செய்திகளைக் கட்டாயம் வேறுதொடரில் விரியச் சொல்ல எண்ணியுள்ளேன்.

அற்றுவிகக் கோப்பெருங்கிள்ளிச் சோழன் சிலப்பதிகாரத்திற்கும் முந்தியவனாகவே எனக்குத் தோற்றுகிறான். தமிழக அற்றுவிக நெறியாளர் காலக் கட்டாயத்தால் சமய நெருக்கடியால் விண்ணவம், சிவம், புத்தம், செயினமாகிய மற்ற நெறிகளுக்குள் சிறிதுசிறிதாய்க் கரைந்தார். பொ.உ. 600 களுக்கு அப்புறம் அவரைக் காண்பது மிக அரிது. சமயமாற்றப் புரட்சியில் முற்றிலும் மறைந்துபோனவரில் அற்ருவிகர் ஒருவர். ஆயினும் அவரின் ஊழ்/விதி”க் கருத்து தமிழ்ச்சிந்தனையில் இன்றுவரை நிலைப்பதைப் பார்த்தால், கிழக்குப் பார்த்த சிவன்கோயில்களில் வடமேற்கு மூலையில் திருமகள் 2 பக்கம் யானைகள் நீரைத்தூவ, நடுவே தாமரையில் வீற்றிருந்து, திருவுருவங் கொள்வதையும், அதே வடிவில் பெரும்பாலான தமிழர்வீட்டு நுழைகதவு நிலைகளிலும் அணைவதையும் பார்த்தால், நீறு பூத்த நெருப்பாய் அற்றுவிகம் தமிழருள் கரந்துநிற்பது புரியும். பெரும்பாலான தமிழரின் சிற்சில வாழ்வு மரபுகளும் (குறிப்பாய் பறை, உடுக்கு, ஆட்டம், மாலை, பூவுதிர்ப்பு என்றுபடி வடதமிழகத்தில் இறப்பைக் கொண்டாடுவதும்) அற்றுவிக எச்சத்தை இன்றும் நமக்குக் காட்டிக்கொடுக்கும்.

மேற்சொன்ன அந்தை / ஆந்தைகளுக்கும் வெவ்வேறு வகைகளில் பெருமைத் தொடர்புகள் இருக்கலாம். இன்று, சிவ, விண்ணவக் கோயில்களிற் பார்ப்பனக் குருக்களைப் பலருஞ் சாமி என்கிறாரே? சிவ, விண்ணவக் குருக்கள் மெய்யாகவே இறைவரா? இல்லையே? ”இறைவன்” என்றசொல், முதற் கொண்டு, தலைவனுக்கும் கடவுளுக்கும் எப்போதுமே தமிழிற் சொற்குழப்பம் உண்டு. பல ஆய்வாளரும் இதை உணர்வதில்லை. கடவுளென்று குறளில் வந்துவிட்டால் அது எல்லாம்வல்ல இறைவனைக் குறிப்பதாய்க் கொள்வாரே நம்மில் மிகுதி. ”ஒருவேளை அறிவுத்தந்தையான தமிழ் ஆந்தையே சுற்றி வளைத்துப் பாலியில் அவலோகிதனானதோ?” என்று ஏன் எடுத்துக்கொளல் ஆகாது? ”போதிசத்வ” என்பது யாரோவொரு அறிவார்ந்தவனைக் குறித்தால், ”தெற்கு அவலோகிதனெ”ன்ற பெயர்க்குறிப்பும், தமிழ்முறைப்படி ஏதோவொரு ”ஆந்தையாரைக்” குறிக்கலாமே? அப்படியெனில் அவர் எந்த ஆந்தையார்? பார்த்தீர்களா? கேள்வி சற்றுச் சுவையாரம் (= சுவாரசியம்) ஆகிப் போனது. 

[மேற்சொன்ன தமிழ்-பாலி/பாகதம்-சங்கதப் பெருவட்டம் என்றபார்வை எப்படியெலாம் நம் சிந்தனையை மாற்றுகிறதென்று பார்த்தீர்களா? பாலி/பாகதத்திற்கும் தமிழுக்குமிடையே இதுபோல் பல்வேறு ஊடாட்டங்கள் சங்க காலத்தில் இருந்தன. ”வடமொழி” என்றசொல் அன்று சங்கதம் மட்டுமின்றிப் பாலி/பாகதம்/சங்கதம் என்ற பொதுக்கட்டைக் குறித்தது. வேதமறுப்புச் சமயங்கள் பலகாலம் நம்மிடை புழங்கியதால் (இன்று அவை குறைந்து வேத நெறி விரவும் சிவ, விண்ணவ நெறிகளைத் தமிழர் கைக்கொள்ளினும்). என்னைக் கேட்பின் சங்கதப் பிடிக்குள் சிலர் வலியச் சிக்குவதும், அதற்கு எதிராய் வேறு பலர் மல்லுக்கட்டுவதுமான வடம்பிடிப்பை விட்டுத் தமிழர் ஒரேயடியாய் வெளிவரலாம். சங்கதத்தைச் ”சக்கதோ” என்றே பாலி பாவிக்கும். நம்மிற் பலரும் ”ஸம்ஸ்க்ருதத்தையே” பெருமையாய்க் கொள்கிறார். பொதுவழக்கில் ஏனிப்படி தாழ்வு மனப்பாங்கில் நாம் உழள்கிறோம்? தமிழ் ஞானசம்பந்தனின் சொற்படி அம்மொழியைச் சங்கதமென்று உரக்கச் சொன்னாற் குறைந்தா போவோம்? ஓர்ந்து பார்த்து இச் ”சம்ஸ்க்ருதத்தைத்” தூக்கியெறியுங்களேன்? அதே போல் ப்ராகிருதத்தைப் பழைய வழக்கத்தின்படி, பாகதமெனில் தவறா? Too long our agenda has been dictated by others. We don't act; but always seem to react, that too belatedly.] 

சோழனென்பது இனக்குழுப்பெயர்; சென்னி, செம்பியன் என்பன குடிப் பெயர்கள்; கிள்ளி, வளவன் என்பன இயற்பெயர் முடிபுகள். இதேபோல பாண்டியன் - இனக்குழுப்பெயர்; மாறன், செழியன் என்பன குடிப்பெயர்கள்; வேல், வழுதி - இயற்பெயர் முடிபுகள். (ஐராவதம் மகாதேவன் சிந்துநாகரிக வணிகரை வைத்துப் பாண்டியர்பெயருக்குத் தோற்றஞ்சொல்வது எனக்குச் சரியாய்த் தோற்றவில்லை. ”சிந்து வெளி முந்தையது. அங்கிருந்தே தமிழர் தெற்குவந்தார்” என்பதைக் கேள்விகேட்பேன். இப்போதெல்லாம் ஒரு மோகத்தில் தமிழர் சிந்துவெளியிலிருந்து தெற்கு வந்தார் என்ற பட்டவப் பரப்புரைக்குத் (fashionable propaganda) தமிழர் பலரும் ஆட்படுகிறார். அது வேறு நீண்ட iகதை. சிந்துசமவெளியில் இருந்து ஊர்ர்ப்பெயர்களை நாம் தமிழகத்தில் இட்டோமாம். தமிழர் சிந்து சமவெளியிலிருந்து பெயர்ந்தவராம். அப்படி ஒரு கதை அண்மையில் பெரிதும் பேசப்படுகிறது. அதற்கும் என் மறுப்புண்டு. ஆனால் இங்கு அதைப் பேசமுடியாது.]

சேரருக்கும் வானவரம்பன், இமையவரம்பன், ஆதன், இரும்பொறை, கோதை ஆகிய பெயர்களில் ஓர் ஒழுங்குமுறை இருக்கக்கூடும். இன்னும் எனக்குத் தெளிவேற்படவில்லை. இப்பெயர்கள் எல்லா அரசருக்கும் பொருந்தும்படி சங்கப்பாக்களுமில்லை. சிலவற்றில் இனக்குழுப்பெயர் மட்டுமேயும், சிலவற்றில் குடிப்பெயரும் இனக்குழுப்பெயரும், சிலவற்றில் இயற்பெயரும், இனக்குழுப்பெயரும் என அவற்றிற் பல்வேறு தோற்றங்களுண்டு. இதுபோக உருவப் பஃறேர், குளமுற்றத்துத் துஞ்சிய, ஆரியப்படை கடந்த, தலையாலங் கானத்துச் செருவென்ற, கடல்பிறக்கோட்டிய, பெருஞ்சோறு, குட்டுவன், இளஞ்சேள், செம், நெடு போன்ற விதப்புக் குறிப்புகளும் பெயர்களில் முன்னொட்டாய் உண்டு. மொத்தத்தில் தமிழரசர் பெயராய்வு பென்னம் பெரிய புலனம். யாரேனும் ஈடுபட்டால் நல்லது. (ஒருவரும் அப்படி ஈடுபட்டது போல் தெரியவில்லை.)

உண்மையிற்சொன்னால் எத்தனை தமிழரசர் இயற்பெயர் நமக்குத்தெரிந்தது? விரல்விட்டெண்ணலாம். பாண்டியரைமட்டும் ஒருகுறிப்பால் காட்டுவேன். வெற்றிவேற்செழியன் என்றபெயர் நமக்கு நன்றாகத் தெரியும். இதில் வேல் என்பது இயற்பெயர் முடிபு. ஆழ்ந்துபார்த்தால், கொற்கை, திருச்செந்தூர்ப் பக்கத்துத் தெற்கத்தி மாறருக்கும், செழியருக்கும் வழுதி, பாண்டியர் என்று இனக்குழுப்பெயர்கள் (இவற்றின் விளக்கம் இன்னொரு சுவையாரம்.) போலவே ஒரு இயற்பெயராய் வேல் முடிவதில் வியப்பேயில்லை :-). செழியன், மாறன் என்ற குடிப்பெயர்களை பாண்டியக் கொடிவழியார் மாறி மாறி வைத்துக்கொள்வார். (அப்பன் செழியன் எனில், மகன் மாறனாவான். செழி>செடி>சடை என்றும் மாறும் (பிற்காலச் சடையரும் முற்காலச் செழியரும் ஒன்றே), கொற்கைப் பக்கம் போய்ப்பேருங்கள் அதன் கோரைத் தன்மையை இன்றுங் காணலாம். பாண்டியர், சோழர், சேரலர் பெயர் விளக்கத்தை “சிலம்பின் காலம்” என்ற என்நூலிற் சொன்னேன். பலரும் அதைக் கண்டுகொள்ளவே மாட்டேம் என்கிறார். ஒருமுறை என் நூலை வாங்கிப் படியுங்களேன் ?!! (என் நூலுக்கான மாறுகடை வேலையை நான் பார்க்கவேண்டாமா?)

பெரும்பற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் புராணத்தில் ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் 2 ஆம் பாடலின்படி மாணிக்க வாசகர் ”தானைவேல் வாகைமாறனிடம்” அமைச்சராய் இருந்தாராம். 18 ஆம் நூற்றாண்டுத் திருவிளையாடற் புராணம் காலக் குழறுபடியில் தானைவேல் மாறனின் பெயரை மாற்றி அரிமர்த்தனன் (= சிங்கத்தைக் கொன்றவன், பல்லவரை அழித்தவன்) என்று சொல்லும். சாலச் சிறந்த ஆலவாயுடையார் புராணத்தைத் துணைக்கொள்ளாது வரலாற்று வழுவுடைய, புனைவுமிகுந்த, திருவிளையாடற் புராணத்தைத் தமிழறிஞர் பாராயணஞ் செய்ததே 3/4 ஆம் நூற்றாண்டு மாணிக்கவாசகரை 9 ஆம் நூற்றாண்டிற்கு இழுத்துப்போன காலப் பிறழ்ச்சிக்குக் காரணமாகும். யாரைக் கேட்டாலும் அரிமர்த்தனன் என்பார். போதாக்குறைக்குத் ”திருவிளையாடல்” படம் வேறு, பலபேர் கண்களை மூடிமறைக்கிறது. அருள்கூர்ந்து திருவிளையாடற் புராணத்தைப் படிப்பதை விடத் திருவாலவாயுடையார் புராணம் படியுங்கள். உங்களுக்கு பல உண்மைகள் சரியாய் விளங்கும்.

இத்தனையும் பேசியது அவலோகிதனின் பின்னால் ஒளிந்துநிற்கும் ஆந்தையார் பற்றிச் சொல்லவே.

அன்புடன்,
இராம.கி.

No comments: