Thursday, October 18, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 11

அடுத்து, காலவரிசைப்படி, புறம் 217 ஐ விட, 219 ஐயே முதலிற் பார்க்க வேண்டும். இதுவும் பொதுவியற் திணைதான். ”சோழன் வடக்கிருந்து பல நாட்களாகியதால் அவனுடம்பு துரும்பாய் வற்றிப் போனது. இனி யார் சொல்லியும் கேட்கப்போவதில்லை”, என்பதாற் கையறுநிலைத் துறையானது. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் பாடிய இக்குறும்பாட்டிற் சோழன் வடக்கிருந்த இடத்தின் அடையாளமும், உயிர்துறப்பது நெருங்கியதுந் தெரிகிறது. சதுக்கமென்பது ஒரு quadrangle or crossroad, 4 சாலைகள் சேரும் இடத்தின் அகன்றவெளி. சதுக்கங்களே பெருநகரங்களின் அடையாளம் ஆனதாய்ச் சிந்துவெளிக் கீற்றுகளைப் படிக்கமுற்படும் ஐராவதம் மகாதேவன் கூறுவார். இக்கால முச்சந்தி நாற்சந்திகளிற் பிள்ளையார் சிலைகள் இருப்பது போல் அக்காலப் பெருநகரச் சதுக்கங்களில் பூதத் திருமேனிகள் இருந்திருக்கலாம். (புகாரிலும், வஞ்சியிலும் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. மதுரையில் இருந்ததற்கு இன்னும் ஆய்ந்து பார்க்கவேண்டும்.) 

தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறை போகு அமைச்சர் பிறர் மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர் என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர் எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும்,

என்று சிலப்பதிகாரம் இந்திரவிழவு ஊரெடுத்த காதை 128-134 வரிகளிற் சொல்லப்பெறும். இதைத் தொடர்ந்து வரலாற்றாசிரியர் ந. சுப்பிரமணியன், "Sangam Polity" என்ற தனது நூலின் பக்கம் 383-384 இல் ஓர் அருமையான கருது கோளைச் சொல்லியிருப்பார்.

The Ganesa cult has been considered by some scholars to be of Mahratta origin. V.R.Ramachandra Dikshitar says," While (S)kanda is a Tamilian deity identified later on with Kaartikeya, Ganesa must have been imported from Western India." While it is true that the Skanda cult and Subrahmanya worship branch off from the original Murugan worship of Tamilaham, it is doubtful if the Ganesa cult had an exclusively West Indian origin. For it seems, on close scrutiny, to be a South Indian Deity; at least the evolution of the elephant God worship in Tamilaham seems to have been purely local and native process. It is true that 'Ganesa' is not particularly mentioned either by that name or any of its modern equivalents in the Sangam literature; but it seems quite proper to trace him back to the Prum Chadukkattu Bhutam of Puhar or Vanji. In Puhar there was the Chadukka Bhutam which punished all offenders and had a paasam or rope in its hand; it gave 'Vigna' to those who offended and protected from 'Vigna' those who behaved; so it had 'paasahasta' and was 'Vignaraja; it was the demon at the crossroad distinguished from Gods who were housed in temples. Vignesvara, too, punished the offenders and protected the good; he has a paasam in HIs hands and He is generally on the cross-road. The Demon on the cross-road was 'Bhuutha-Naathan', a literal equivalent of 'Bhuutha' or 'Gana Naathan' or 'Ganapati'. The elephant face in fact indicates a South Indian orgin, and the pot-belly suggests an ancestry traceable back to the Demons. There was a Sangam poet called 'Perchadukkattu Bhuutha Nathanar' and it is known that Chera king Ilam Cheral Irumporai instituted the worship of the "Chadukkattu Bhuutham" in Vanji (the Chera capital) and also introduced the mantric form of worship distinguished from the primitive form of worship. That was perhaps the beginning of the spread of the Ganesa cult. Even as Murugan of the hills became the Son of Sivan, the Bhuutha Naathan on the cross-road also became the Son of Sivan, for it was necessary for the Great Gods to be very closely related to the very Great God, Sivan, who was considered to be God par excellence of the Tamils. The worshio of the Chadukkattu Bhuutha was accompanied by offering fermented toddy or honey; it is, in the modern day, substituted by the unfermented sweet coconut juice, which is an absolutely necessary offering to 'Ganesa'.

பேரா. ந,சு.வின் இக்கூற்று நம்மை வியப்போடு ஓர்ந்துபார்க்க வைக்கிறது. கருவூரென்பது கொங்குக் கருவூரா, குடகுக் கருவூரா என்பதில் இன்னுங் குழப்பமுண்டு. இந்த 4 வரிக் குறும்பாட்டு படிக்க எளியதுதான். கூடவே செயின, அற்றுவிகப் பார்வையிற் படிப்பதும் நல்லது.
 
உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளுர முணக்கு மள்ள
புலவுதி மாதோ நீயே
பலரா லத்தைநின் குறியிருந் தோரே.

                        - புறம் 219
இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
ஆற்றுக் கவலை உள் புள்ளி நீழல்
நின் குறியிருந்தோரே பலரால்
நீயே அத்தை புலவுதி மாதோ

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.
 .
மாந்தவுடம்பென்பது இற்றைப் புரிதலின்படி, கழியுடற் கட்டகம் (skeletal system), தசையுடற் கட்டகம் (Muscular system), குருதயநாளக் கட்டகம் (Cardiovascular system), செரிமக் கட்டகம் (Digestive system), சுரப்புநீர்க் கட்டகம் (Endocrine system), நரம்புக் கட்டகம் (Nervous system), உயிர்மூச்சுக் கட்டகம் (Respiratory system), நோயெதிர்க் கட்டகம், (Immune system), ஊறுநீர்க் கட்டகம் (Lymphatic system), அமுரிநீர்க் கட்டகம் (Urinary system), உயிர்புதுக்குக் கட்டகம் (Reproductive system), தொகுமக் கட்டகம் (Integumentary System) என்று பல்வேறு கட்டகங்களால் ஆனது. வடக்கு இருக்கும் நோன்புநாட்கள் கூடக்கூட இக்கட்டகங்களில் ஒவ்வொன்றும் நோற்பாளரின் உடல்வேதியலுக்குத் தக்கக் கொஞ்சங்கொஞ்சமாய்ச் செயலிழக்கும்.

வடக்கிருத்தலைப் ”பட்டினிகிடந்து தன்னைக் கொல்லுதல்” என மேலையர் பார்வையில் முடிவுசெய்வது மேலோட்டமான கொச்சைக் கூற்றாகும். உண்மையில் வடக்கிருப்பவர், உணர்ச்சிவயப்பட்டு இம்முடிவு எடுப்பதில்லை. தன்வாழ்விற் செய்யவேண்டியவற்றைச் செவ்வனே முடித்து, இனி வாழ்வைத் தொடர்வதிற் பொருளில்லை என்றெண்ண மேலீட்டால், பிறவிச் சுழற்சியை ஏதோவகையில் ஊக்கி விட நினைப்பதே வடக்கிருத்தல் ஆகும். செயினப்புரிதலின்படி தீவினையைக் கூட்டாது நல்வினை தேடுவதே சல்லேகனையாகும். அற்றுவிகப் புரிதலின்படி 8,40,000 பிறவிகளின் (இவ் வெண் எப்படி வந்ததென்று எனக்குத் தெரியாது. ஆனால் அற்றுவிகக் குறிப்புநூல்களில் இந்த எண் இருக்கிறது. செயினம், சிவம், விண்ணவம் போன்றவையும் இவற்றை ஏற்றுள்ளன. புத்தம் முதலில் ஏற்றுப் பின் மறுத்திருக்கிறது.)

[இந்த எண்ணின் இயலுமை எப்படி வந்ததென்ற என் ஊகத்தை இங்கே சொல்வதில் தவறில்லை. பழம்மாந்தரின் பட்டறிவும் சமய நம்பிக்கையுங் கூடக்கூடக் கற்பிதங் கொஞ்சங்கொஞ்சமாய் விரிந்தது போலும். முதலில் தாமிருக்கும் உலகத்தை நடுவண் உலகென்றும் (மத்ய லோகம்), தமக்கு மேலுள்ள உலகத்தை மேலோர்/உயர்ந்தோர் உலகென்றும் (ஊர்த்வ லோகம்), தமக்குக் கீழ்ப்பட்ட உலகைப் பாதல உலகென்றும் (அதோ லோகம்) உருவகித்தவர், கற்பிதங் கூடியபோது அரும்பெறல் (சித்தம்) உலகு, உயர்ந்தோர் உலகு, நடுவண் உலகு, 4 வகைப் பாதல உலகங்கள் என ஏழு ஆக்கியிருக்கிறார்.. இன்னும் கற்பிதம் விரிந்தபோது, நடுவணுக்குமேல் அரும்பெறலும், 5 வித உயர்ந்தோர் உலகங்களும், நடுவணுக்குக் கீழே 7 வித பாதல உலகங்களும் இருபதாய்ச் சொல்லப்படுகின்றன. இதுவே ஈரேழு பதினாலு உலகமாகிறது. ஒவ்வோரு உலகிலும் 1, 2, 3, 4, 5, 6 அறிவுகொண்ட உயிரிகள் கற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு உயிரிவகையிலும் ஓரிலக்க விதப்பு உயிரிகள் என்று கொண்டால், 14*6*1,00,000 = 84,00,000 உயிரிகள் (அல்லது பிறவிகள்) என்றாகும். மறந்துவிடாதீர்கள் இது என் ஊக விளக்கம். இதை நான் எந்த நூலிலும் காணவில்லை.]

84,00,0000 இலக்கம் பிறவிகளை வாழ்ந்தே தீரவேண்டுமென்று அற்றுவிகஞ் சொல்லும். ஆனால் ஒவ்வொரு பிறவியின் நடப்புக்காலத்தை (ஆயுளை) விரைவுபடுத்தலாமென அற்றுவிகம் சொன்னதால், அதற்கொரு வழியாய் வடக்கிருத்தலாகும். செயினநெறியோ தீவினை குறைத்து நல்வினை கூட்டுவதாற் பிறவிக்காலம் குறைப்பதோடு, பிறவி எண்ணிக்கைகளையுங் குறைக்கலாமென நம்பும். எனவே இவ்விரு நெறிகளும் வடக்கிருந்தலை ஏற்கும். அதேபொழுது செயினமரபில் எல்லோரும் சல்லேகனையைக் கைக் கொள்ள முடியாது. குறிப்பாகச் சாவகவழியினர் பின்பற்றப் பல கட்டுப்பாடுகள் உண்டு.

”இடையூறு ஒழிவில்நோய் மூப்பிவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை.”

என்று 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அருங்கலச்செப்பு சொல்லும். இடையூறு (=பொறுக்கவியலாது பிறரால் வருந் தொல்லை) என்ற காரணத்திற்றான் சோழனின் வடக்கிருத்தலை வகைப்படுத்தலாம்.  உண்ணாநோன்பின் விளைவுகளை தோல், மயிர், நகம், வியர்வை நாளங்கள் அடங்கிய தொகுமக் கட்டகமும், அதன்கீழ் உடம்பிற்கு உரங்(=வலிமை) கொடுக்குந் தசையுடற் கட்டகமும் நம் கண்ணிற் தோற்றச் செய்கின்றன. உள்ளுரமென்பது தோலுக்கு அடியில் எலும்போடொட்டிய தசைத்தொகுதியாகும். சூடாமணி நிகண்டு, தசையின் இணைச்சொற்களை “ஊன், புலால், புலவு, புண், தடி, புளிதம், தூ, பிசிதம், உள்ளுரம், விடக்கு” என்று காட்டும். ”முழூஉ உள்ளுரம்” என்று இப்பாட்டில் வருவது உடம்பின் முழுத் தசைத்தொகுதியைக் குறிக்கிறது. உலருந் தசையின் நீர்ச்சத்துக் குறைந்து, உடம்பின் இயற்றோற்றம் சுருங்குவதாற் கழியுடற் கட்டகம் தெரியத்தொடங்கும். தொடர்ந்து செரிமக் கட்டகமும், சுரப்புநீர்க் கட்டகமும் சுருங்குவதால், வயிற்றிற் குழிவுகூட ஏற்படலாம். சிறிதுசிறிதாக நீர்நிறுத்தி, வேறெதுவும் உட்கொள்ளாக் காரணத்தால், உடம்புலர்தலே முன்தெரியும் விளைவாகும். உள்>உண்>உண> உணத்தல்>உணங்குதல் என்பது, உலர்தலையுணர்த்தும். உணக்கென்பது உணங்கின் பிறவினைச் சொல்லாகும். தென்பாண்டி நாட்டில் வற்றலையும், கருவாட்டையும் வெய்யிலிற் பரப்பி உலர்த்தலை இன்றும் உணத்தலென்பர். உணக்கும் நிலைக்கு சோழன் வந்துற்றதால் நீர்குடிப்பதை நிறுத்திப் பல நாட்கள் ஆகியிருக்க வேண்டும்.

நாலாவது சொல்லான மள்ளன் என்பது வலிமையுடையவனை, படைத் தலைவனைக் குறிக்கும் பெயராகும், மல்>மள்>மள்ளன். இங்கு அரசன் கோப்பெருஞ்சோழனை அது சுட்டுகிறது. ”முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!” என்பது ”முழு(வுடம்பு)த் தசையும்வற்றி உலர்ந்துகிடக்கும் மள்ளனே!” என்று பொருள்கொள்ளூம். அதாவது உயிர்துறப்பை நெருங்கிச் சோழன் வந்துவிட்டான். 

அடுத்துக் கவலை என்பது பாதைகளைப் பொறுத்த கலைச்சொல்லாகும். வாயின் ஈரிதழ்களால் ஒரு பொருளைப் பற்றுதலைக் கவ்வுதலென்பர். [பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்-தொல். எழுத் .98]. கவ்வதலிலிருந்து கவட்டி, கவட்டை, கவடி, கவடு, கவண், கவர், கவை எனப் பல தனிச் சொற்களும், அவற்றிலிருந்து கூட்டுச்சொற்களும் கிளைக்கும். ஒரு பாதை இரண்டாய்ப் பிரிவதைக் கவல்கிறது என்பார். இடுப்பு வரை ஓருடம்பாகி, அதன் கீழே 2 கால்கள் பிரிவதைக் கவட்டையென்கிறோம். பாட்டுப் பாடி ஏறி வந்தவனை ஓரணி பிடித்துப்போடும் கவடி (>கபடி) விளையாட்டையும் நாமறிவோம். ஆறொன்று இரண்டாய்ப்பிரிவதை ஆற்றுக்கவலை என்பார். இன்னும் கருத்துச்சிந்தனை கிளைத்து அதைக்கொள்வதா, இதைக்கொள்வதா என மனத்திற் தடுமாறுவதையுங்கூட கவலை என்ற சொல்லால் ஒப்புமை காட்டிச் சொல்கிறோம். இனி சோழன் வடக்கிருந்த இடத்திற்கு வருவோம்.

தலைக்காவிரியிற் பிறந்த பொன்னியாறு உறையூருக்கருகில் திருப்பராய்த் துறை, முக்கொம்புவரை கிளைபிரியாமலே வரும். அதற்கு முன் துணை யாறுகள் மட்டுமே வந்துசேரும்; ஆனால் எதுவும் பிரிவதில்லை. பொன்னி யாற்றுக்கு நடுவில் எத்தனையோ அரங்கங்களுண்டு. (காட்டாக கருநாடகச் சீரங்கப்பட்டினம். இங்குமோர் கோயிலுண்டு. அருத்தது>அறுத்தது அரங்கம்) முக்கொம்பிற்றான் ஒருபக்கம் காவிரியாயும், இன்னொருபக்கம் கொள்ளிடம் ஆயும் முதற்கிளை அல்லது முதற்கவலை விடுகிறது. கூகுள்முகப்பைப் (map) பார்த்தால், நான்சொல்வது புரியும். இங்கே இரண்டாய்ப் பிரிந்து ஒரு அரங்கத்தை எழுப்பிப் பின் கல்லணைக்கருகில் ஒன்றித்து மீண்டும் வெண்ணாறு, காவிரி, கொள்ளிடமெனப் பிரியும். அதற்கப்புறம் பொன்னியாறு தொடர்ந்து 10, 15 கவர்களும், கால்களுமாய் (கவல்>கால்) கவல்ந்துகொண்டே போகிறது. இவ்வளவு கவல்ந்த ஆறு இந்தியாவிலேயே கிடையாதோவெனத் தோற்றுகிறது. பல்வேறு கவர்களைக் .கொண்ட பொன்னியாறு ஒரு மருத நிலத்தானுக்கு கவர்>கவரி>காவரி>காவிரி ஆயிற்று. காவிரி (= காவுகளாய் விரிந்துசெல்லும் ஆறு), காவேரி என்றுசொல்வதெல்லாம் பட்டகையில் (fact) விளையாத பாட்டுக் கற்பனையேயாகும். 

“ஆற்றுக் கவலை உள்” என்பது ஆற்றுக் கவலைக்குள் இருக்கும் நிலப் பகுதியைக் குறிக்கும். இப்பாட்டைப் பாடிய கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார் கூற்றை எடுத்துக்கொண்டால், உறுதியாக இது சிராப்பள்ளிக்கு வடக்கிலுள்ள திருவரங்கத்தையே சுட்டுகிறது. பேரா.க.நெடுஞ்செழியன் இதையென்னிடம் முதலிற் கூறியபோது ”இம்முடிவுக்கு அவர் எப்படிவந்தார்?” என்று கூறவில்லை. ஆனாற் புறம் 219 ஆம் பாட்டை ஒழுங்காகப் புரிந்து கொண்டால் இம்முடிவைத் தவிர வேறெதையும் பெறமுடியாது. பேராசிரியரின் (இடம் பற்றிய) இக்கருத்தை முழுதும் நான் ஒப்புவேன்.  தந்தை-மக்களிடை போர்நடந்த களம் உறையூர்க்கோட்டைக்கு வெளியே தான் இருந்திருக்கவேண்டும். புள்ளி என்பது இங்கு அடையாளமெனப் பொருள் கொள்ளூம். அடுத்துவரும் ”நீழலை”யொட்டி, ஊகித்தால், ”ஆற்றுக்கவலை அடையாளம்” ஒரு மரமாயிருக்கவே வாய்ப்புண்டு.

எல்லோரும் திருவரங்கத்திற் கூடும் ஓர் அடையாள (மரத்து) நிழலில் சோழன் வடக்கிருந்தான். புன்னையும் வெண்நாவலும் பரந்துகிடந்த ஆற்றுத்தீவு அது. (புன்னை திருவரங்கக் கோயிலின் தலமரம். வெண்நாவல் திருநாவற்காவின் (திருவெண்ணாவக்கா>திருவண்ணாக்கா>திருவணாக்கா>திருவானைக்கா ஆகும்) தலமரம். கோப்பெருஞ்சோழன் காலம் என்னவென்று எனக்கு இன்னுந் தெரியவில்லை. ஆனால் ”சிலம்பின் காலம்” நூல்வழியே அரங்கன்கோயில் குறைந்தது கி.மு.80க்கு முற்பட்டது என்றெண்ண வாய்ப்புண்டு. கோப்பெருஞ் சோழன் இதற்குமுன்னே வாழ்ந்திருக்கவேண்டும். பாண்டியன் அறிவுடை நம்பியும் இவன்காலத்தைச் சேர்ந்தவனாவான்.         . 

சோழன் வடக்கிருந்தபோது அவன் குறிக்கோள் தன் பிறவிச்சுழற்சியைக் குறைப்பதேயாகும். ”(காவிரி)யாற்றுக்கவலையின் உள்ளே அடையாள (மர) நிழலில் உன் குறிக்கோளோடு (உடன்) இருந்தவர் பலர் ஆதலால்” என்பது அடுத்த செய்தி. அப்படியெனிற் சோழன்மட்டும் வடக்கிருக்கவில்லையா? இன்னும்பல சாவக வழியார் நோன்பு மேற்கொண்டாரா? - என்ற கேள்விகள் எழுகின்றன. இவ்வளவு சாவகவழியினர் ஒரேநேரத்தில் நோன்பிருப்பதை, ஏறத்தாழ mass suicide போன்றதை, செயினமோ அற்றுவிகமோ கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளா. (ஆனால் உரையாசிரியர்பலரும் ஏற்றெழுதியிருக்கிறார். தவிர, கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தை நட்பை அழுத்தும் பேராசிரியர் வடக்கிருத்தல், உண்ணாநோன்பு என்பதை அழுத்தத் தயங்குகிறார். பல்வேறு செய்திகளும் பதிவுசெய்யாது போயிருக்கின்றன. இப்பொழுது நம் ஆய்வும் குறைப்பட்டிருக்கிறது) எனவே, ”சோழன் வடக்கிருந்த குறிக்கோளுக்கு உடன்போகி, அணுக்கத் தொண்டர் இருந்தாரெ”னக் கொள்வதே பொருத்தமாகும். No mass suicide. 

”நீ அதை வெறுக்கிறாயோ?- தெரியவில்லையே?” என்ற பொருள்கொள்ளும் அடுத்த வரி இன்னொரு கேள்வியை எழுப்புகிறது  அத்தை= அதை; (இன்றும் சென்னைப்பக்கத்துப் பேச்சுவழக்குச் சொல்); புலவுதல்= வெறுத்தல். மாதோ என்பது ஐயப்படும் கேள்வியுணர்வைக் குறிக்கும் அசைச்சொல். வடக்கிருந்த இடத்தில் கூடியிருந்தவரைப் பார்த்து புலவுவதாய்ப் புலவர் கொள்வது ஒரு விதப் பார்வை. சோழன்பக்கத்து உண்மையல்ல. ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்லலாம். அளவிற்கு அதிகமான கூட்டம் வடக்கிருக்குஞ் சோழனைச் சுற்றிக் iகூடிவிட்டது. கூடியிருப்பவர் ஏதேதோ தமக்குள்ளே பேசிக் கொள்கிறார். சோழனோ கிட்டத்தட்ட முற்றாகப்பேச்சை நிறுத்திவிட்டான் போலும். அதுகண்டு, ”பலரும் கூடியிருப்பதை அவன் வெறுக்கிறானோ?” என்று புலவர் தன்னுள் எண்ணிக்கொள்கிறார். அங்கிருக்கும் உள்ளமைச் சூழ்நிலை கனத்துப் போயிற்று. The situation has become really grim.

பாடலின் மொத்தப் பொருள்
------------------------------------------
முழு(வுடம்பு)த் தசையும் வற்றி உலர்ந்து கிடக்கும் மள்ளனே! (காவிரி) யாற்றுக் கவலையின் உள்ளே அடையாள (மர) நிழலில் உன் குறிக்கோளோடு (உடன்) இருந்தவர் பலராதாலால் நீ அதை (= கூட்டங் கூடுவதை) வெறுக்கிறாயோ? - தெரியவில்லையே?
-----------------------------------------
அன்புடன்,
இராம.கி.

No comments: