Wednesday, July 25, 2018

பனுவலும் text உம் ஒன்றா? - 1

2016 இல் “பேச்சிலிருந்து தடவரை (Speech to text), தடவரையிலிருந்து பேச்சு (Text to speech), எந்திர மொழிபெயர்ப்பு (machine translation)” என்ற 3 தமிழ்க்கணிமை வேலைகளைத் தொட்டு, இந்தையிரோப்பிய, தமிழிய மொழிக் குடும்பங்களின் வாக்கியவொழுங்கு வேறுபாட்டை மடற்குழுக்களிற் சுட்டிக் காட்டினேன். அதற்கு நேராக மறுமொழி தராது, பகடி நடையோடு, ”தடவரை போன்ற சொற்களைப் பழகுதமிழில் மாற்றக் கருவியுண்டா?” என்று திரு.வேந்தனரசு கேட்டார். அவர் குசும்பைக் கண்டு கோவமுற்று நான் முதலில் மறுமொழித்தாலும். ”பருத்திப்பெண்டின் பனுவலன்ன” என்ற புறம் 125 குறிப்பையும், ”ஆளில்பெண்டிர் தாளின்செய்த நுணங்குநுண் பனுவல் போல” என்ற நற்றிணை 353 குறிப்பையும், ”செவிமுதல் வித்திய பனுவல்” என்ற புறம் 237 குறிப்பையும் கொடுத்துப் ”பனுவலென்றால் பஞ்சு மற்றும் பாட்டு. ஆங்கிலத்தின் டெக்ஸ்ட்டுக்கு பொருத்தமான சொல். ஏற்கனவே இரு பொருளிலும் பழகுதமிழில் புழக்கத்திலுள்ள சொல்” என்ற வேந்தனரசின் 2 ஆம் மொழிக்கு, கோவத்தைக் குறைத்து என் மறுப்பின் உரியவிளக்கத்தை அளிக்கத்தான் வேண்டும். இல்லெனில் பனுவல் பற்றிய தவறான புரிதல் மடற்குழுக்களில் நிலைத்துப் போகலாம்.

textக்கு இணையான தமிழ்ச்சொல்லை விளக்குமுன், பருத்தி, பஞ்சு, பன், பன்னல், பன்னுதல், பனுவுதல், பனுவல் போன்ற பல்வேறு துகில் துறைச் (textile) சொற்கள் தமிழில் எழுந்த வகையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டிற்குமிடையே தொடர்பும், அற்றதும் உண்டு. கீழே நான் நீளமாய்ச் சொல்வதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். முதலில் பருத்தி பற்றிப் பேசிவிடுகிறேன். பருத்தியை நூலாகவும், ஆடையாகவும் பயன்படுத்தலாம் என உலகிற்குரைத்தவர் எகிப்தியரா, இந்தியரா? - தெரியாது. ஆனால் சிந்து சமவெளியில் ஆதாரங் கிடைப்பதாய்ச் சொல்வதைப் படித்திருக்கிறேன். அதே பொழுது, இன்றைக்கு மேலை நாடுகளிற் பருத்தியையொட்டிப் பரவிய பல சொற்களும் தமிழ்மூலம் காட்டுவதை. விவரமாய்ச் சொல்லவேண்டும்.

பருத்திக்காயினுள்ளே கொட்டையை ஒட்டிக்கிடக்கும் இள்ளிகள் (fibre. இள்ளுதல் = மெல்லியதாதல்)- நீட்சி கருதி இழைகள் (filament) என்றும் பேச்சுவழக்கிற் சொல்லப்பட்டன. (fibre, fila விற்கு மூலந் தெரியாதென்றே மேலைச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் கூறும்.) ஆயினும் அறிவியல் வரிதியாய் நீட்சி குறைந்ததை இள்ளியென்றும் பட்டுப்போல் நீட்சி கூடியதை இழையென்றுஞ் சொன்னால் தெளிவு கூடும். (இள்ளியை ஒரு வகையிற் குற்றிழை எனலாம்.) இள்ளித் தொகுதி எடை குறைந்து பருமன் கூடிப் பருத்துக் கிடந்ததால் அது பருத்தியாயிற்று. இன்னொரு வகையில் கொட்டைக்குள் பன்னூறு இள்ளிகள் இருந்ததால் பல்ஞ்சு>பன்ஞ்சு>பஞ்சு என்றுஞ் சொல்லப் பட்டது. (பருமையால் பருத்தி; பன்மையாற் பஞ்சு. முன்னது செடிக்கும், விளைவின் காழுக்கும் (content); பின்னது விளைவின் எண்ணிக்கையாலும் ஆன பெயராகும்.) பஞ்சிற்கு ஆங்கிலத்தில் staple fibre என்று பெயர். பல்லத்தாலை (polyester factory) ஒன்றை நிறுவிய என் பணிக் காலத்தில் ஈரோடு, சேலம் பகுதிகளில் மாறகைப்புத் (marketing) தொடர்பாய்க் கைத்தறி, புயவுத்தறியாளரோடு (power loom) ”துகலியற் தொழிலின் நடைமுறைச் சிக்கல்கள் (practical problems in textile industry)” பற்றிப் பேசி யுள்ளேன்

[வேதிப்பொறியாளனாய் இங்கேயோர் இடைவிலகல். பல்வேறு காடிகளும் (acids), வெறியங்களும் (alcohols), களியங்களும் (glycols), களிச்செறியங்களும் (glycerols) ஒன்றோடொன்று வினைபுரிந்தெழும் கூடுகைகளைக் (compounds) அலங்க வேதியலில் (organic chemistry) அத்துகள் (esters) என்பர். அலங்கக் காடியின் ஒருபக்கம் நீரகங் (hydrogen) கொண்ட கரிமஃகக் (carboxyl) கூறும், இன்னொரு பக்கம் அலங்க அடிக்கூறும் (organic base groups) உண்டு. அலங்க அடிக்கூற்றில் கொழுவகை (aliphatic type), மணவகை (aromatic type) என 2 வகைகளுண்டு. கொழுவகையில் ஏற்றல் (ethyl), புறப்பல் (propyl; (from prop(ionic acid) Greek pro "in front" + piōn "fat", because it's first in order of the fatty acids), பொலிதயில் (butyl; "butyric acid" comes from Latin butyrum, butter) போன்ற கூறுகளும், மண வகையில் பெஞ்சாவியல் (Benzyl; சாவாத் தீவிற் பெற்ற கருப்பூரம் இதற்கு அடிப்படை), தோலுவியல் (tolyl; கொலம்பியாநாட்டு தோலுமரத்திற் பெற்ற மணச்சாறு), தாரியல் (phthalic; பாறைநெய்த் தாரிற் பெற்ற naphthalene கருப்பூரம்) போன்ற கூறுகளும் உண்டு. வெறியம்/களியம்/களிச்செறியம் போன்றவற்றிலும் காடிகளைப்போல் இரு பக்கமுண்டு. ஒரு பக்கத்தில் (வெறியம் - ஒரு OH; களியம் - இரு OH; களிச்செறியம் - 3 OH என்றபடி) நீரகஃகக் கூறுகளும், இன்னொரு பக்கத்தில் அலங்க அடிக்கூறுகளும் இருக்கும். காடிக்கும், வெறியம்/களியம்/களிச்செறியம் ஆகியவற்றிற்கும் வினைநடக்கும் போது காடியின் நீரகமும், வெறியம்/களியம்/களிச்செறியம் ஆகியவற்றின் ”நீரஃகதோடு” புணர்ந்து நீர் மூலக்கூற்றை வெளிப்படுத்தும்].

மேலே கூறப்பட்ட எல்லோர்க்கும் தெரிந்த பல்லத்துப் பஞ்சு ஏற்றலியக் களியமும் (ethylene glycol), எதிர்த்தாரியக் காடியும் (terephthalic acid) வினை புரிந்து polyethylene terephthalate பெறுவதாகும். பல்லத்தின் பன்மை கூடக்கூட மேலும் நீர் வெளிப்பட்டு, பலமரின் (polymer) எடையுங் கூடும். குறிப்பிட்ட எடைக்குள் ஒரு பலமரை வைத்திருப்பது வெவ்வேறு பயன்பாடுகளுக்கு வழி வகுக்கும். பருத்திப் பஞ்சைப் போலவே polyester staple fibre ஐப் பாலியெசுட்டர் பஞ்சென்று தறியாளர் சொல்வர். இயற்கைப் பருத்திப் பஞ்சோடு பயனுறுத்தும் இன்னொரு வகைச் செயற்கைக் குச்சிலப் (cellulose) பஞ்சும் பருத்தி போலவே தோற்றமளிக்கும். வேதியியலின் (chemical) படி இயற்கையும், செயற்கையுமான இவ்விரண்டுமே குச்சிலங்கள் தான். ஆனாற் பூதியலின் (physical) படி வெவ்வேறு தோற்றங்கள் காட்டும்.

இனிப் பஞ்சென்ற சொல்லை இள்ளித்தொகுதிக்கு வைத்துப் பழங்காலத்திற் பருத்தியைச் செடியோடு சேர்த்தார். (ஒரு நாளும் தமிழர் பஞ்சுச் செடியெனச் சொல்லார். பருத்திச் செடி என்பதே பாடம்.) கொட்டையும் இள்ளிகளும் நிறைந்து, உலர்ந்து வறண்டுபோன பருத்திக் காய்களையே இங்கிருந்து அக் காலத்தில் ஏற்றுமதி செய்ததால் ”பருத்திக்கொட்டையில் பெற்றது” எனும் படிக் கொட்டை (cotton) என்ற சுருக்கப் பெயரே மேலைநாடுகளிற் பருத்தியைக் குறிக்கலாயிற்று. (செடியை அங்கு விளைவிப்பது குறித்து முதலில் அவர்கள் எண்ணவில்லை போலும். எகிப்தியம், சுமேரியம், பாபிலோனியம், அக்கேடியம் போன்றவற்றில் பருத்திக்கு என்ன பெயரென்று நான் ஆய்ந்தேனில்லை. அவற்றை ஆய்வது சுவையாகலாம்.)

நாருக்கும், இள்ளி/இழைக்கும் குறிப்பிட்ட வேறுபாடுண்டு. நாரென்பது (புடலங்காயுள் துளைபோல) உள்ளே நீளமான துளையுள்ளது. (நாளம், நார், நரம்பு போன்றவை தொடர்புள்ளவை.) இது புல்லில் புறக்காழ் வகை போன்றது. இள்ளி/இழை என்பது நடுவில் துளையில்லா அகக்காழ் கொண்டது. பருத்தியிள்ளிகள் பட்டிழைகளைப் போல நீளமானவையல்ல. அவற்றை வைத்து நூற்பது, தேங்காய் நாரைத் திரித்து முறுக்கேற்றி நீண்ட புரிகளைச் செய்து புரிகளை மேலும் பிணைத்துக் கயிறாக்குவதைப் போல் ஆகும். பருத்தி நூலில் இள்ளிகள் -> நூல் என்று நேரே போய்விடும். புரிகள் இருக்கா. அதிகமான வலிமை கூடிய நுட்பியல் உருளிக் கயிறு (technical tyre cord) செய்யும் போது இழை -> புரி-> கயிறு என்றாகும்.

சரி நூலென்ற பெயர் எப்படி வந்தது? பஞ்சைத் திரித்து இழுத்து முறுக்கும் போது ஒரே சமயத்தில் 1 பரிமானத்தில் பருமனானது நுல்லிக்கொண்டு (மெலிந்து) இன்னொரு பரிமானத்தில் நூலிக்கொண்டு (நீண்டு) வருவதால் நூலாயிற்று. (நுல்லென்ற வேரில் இருந்து நுல்>நெல்>நெள்>நெள்கு> நெகு> நெகிழ்>நெகிள்>நீள் என்ற வளர்ச்சியில் ஏராளமாய்த் தமிழ்ச் சொற்களுண்டு. அவற்றை இங்குசொன்னால் விரியும்.) பல்கிய இள்ளிகளைச் சேர்த்து நூல் ஆக்குவதால் பன்னுதல் என்றுஞ் சொல்லப்பட்டது. (பன்னுதல் = பல இள்ளிகளைச் சேர்த்தல்). பன்னல்>பனுவல் என்றசொல் பன் எனும் எண்ணிக்கையால் ஆடைநூலுக்குப் பெயராயிற்று. பன்னல், பனுவுதல் (staple fibre spinning) என்பவை தொழிற்பெயராயின. ஆங்கிலத்தில் இருக்கும் spinning என்ற சொல் கூட நம் பன்னலுக்கு இணைகாட்டும்.

இன்னொரு விதமான நூலாக்குதலில் நூற்காழ் அல்லது பாகுப்பிசின் (viscous resin) ஒரு குறிப்பிட்ட குறுக்குவெட்டோடு நீண்டுவந்து ஓர் இழையாகவே தொடர்ந்து பின் வெளியே (பல்லத்திழையிற்) குளிர்ந்தோ, (பட்டிழையிலும், குச்சில இழையிலும்) வேதிமாற்றம் பெற்றோ நூலாகும் இழை நூலாக்கலுக்கு (filament yarn formation) பேச்சுவழக்கில் பன்னல், பனுவுதல் என்றுஞ் சொல்வது உண்டு தான். ஏனெனில் பருத்திப்பஞ்சு பன்னூறாண்டுகளாய் நம்மைப் பிணைத்திருக்கிறது. பட்டுப்பூச்சியின் ஆக்கம் நமக்குச் சீனத்திலிருந்து பெறப்பட்டது. நம்மூர் முறையிலேயே வெளியார் நுட்பம் உள்வாங்கப் பட்டதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் நுட்பியல் அடிப்படையில் இழைநூல் ஆக்கலும், பன்னுதலும் வேறுபட்டவை. விவரமறிந்தோர் குழம்ப மாட்டார். நூற்றலென்ற சொல் இரண்டிற்குமே பொதுவானது.

நூலென்ற பொருளிருந்தும், yarn என்ற மேலைச்சொல் கயில்>கயிறோடும், யாண்>ஞாண்>நாணோடும் தொடர்புற்றது. அதை விளக்கினால் நேரங் கூடும். எனவே தவிர்க்கிறேன். [முடிந்தால் அருளியின் “யா” பொத்தகத்தைப் படியுங்கள். அவருக்குமேல் நான் ஒன்றுஞ் சொல்வதற்கில்லை. சணல் (sunn - hemp, Crotalaria juncea) என்றசொல்லும் யாணோடு தொடர்புற்றதே.] ஆடைப் பயன்பாட்டைப் பொறுத்தவரை பனுவலென்பது நூல், தந்து போன்ற வற்றைக் குறிக்கும். ”தந்து” பற்றி என் முந்தைக் கட்டுரைகளில் குறித்து உள்ளேன். பனுவலோடு நிறுத்துவதே இங்கு குறிக்கோளெனினும், அடுத்த நிலைச் செயலாக்கங்களையும் சொல்லவேண்டியது முறையல்லவா?

நெய்தல் = weaving. நுள்>நெள்>நெய் என்று இச்சொல் வளர்ந்து நூலை நெருக்கித் துணியாய் முடைதலைக் குறிக்கும். இதில் பாவு (warp) நூல், ஊடு (weft) நூல் என்ற இருவகையுண்டு. பாவுநூல்களின் நீளம் துணிநீளத்தையும், பாவுநூல்களின் குறுக்குவெட்டும் எண்ணிக்கையும் துணியகலத்தையும் நிருணயிக்கின்றன. பாவுநூல்களின் ஊடே ஒன்றுமாறி ஒன்றாய் ஊடுநூல் வலைத்துவலைத்துத் துணியை நிறைக்கிறது. (வல்வுதல் = வலைத்துப்/வளைத்துப் பற்றுதல்; வவ்வுதல் என்பதே weaving ற்கு இணையான தமிழ்ச் சொல். வலைத்துப்பற்றுதலை மேலைச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் சொல்லா. இன்னொரு எடுத்துக்காட்டுஞ் சொல்லலாம். நூலை வலைத்துச் செய்யப்படுவது வலையாகும். வலயத்தின் அளவிற்கேற்பத் துணியின் அடர்த்தி மாறும். வலை நெருக்கமாய்ச் செய்யப்பட்டதா? கலக்கச் செய்யப் பட்டதா? - என்பதைப்பொறுத்து வலையின்/துணியின் பயன்பாடு மாறும்.

இதேபோல், ”என்ன நூல் பாவாகிறது? எது ஊடாகிறது? எப்படி நூற்செறிவு பெறுகிறது? எவ்வளவு நெருக்கமாய் நெய்கிறோம்?” என்பவற்றைப் பொறுத்தே நெய்யப்படுந் துகிலின் தன்மை உருவாகும்.. இங்கே பாவுதல் என்பது முதற் பொருளில் பரவுதலையே குறிக்கும். பரவுகின்ற - பாவுகின்ற - ஆடை பாவாடை. இதைச் சிறுமியர் அணிவார். இங்கே warp பொருள் அமைவதில்லை. வீட்டுத்தரைகளின் மேற் பரப்பிப்பொருத்தும் தட்டைக் கல்லைக் (tiles) பாவுகல் (paving stone) என்பார். இற்றைக்காலத்தில் பாவு என்றவுடன் பரப்பை மறந்து warp எனும் வழிப்பொருளையே பலரும் நினைவு கொள்கிறார். அது ஒருபக்கப் பார்வை. அதேபொழுது, ஆங்கிலத்திலுள்ள warp ம், weft -ம், தமிழ்ச் சொற்களோடு தொடர்புள்ளவைதாம்.

துணி என்பது பேச்சுவழக்கில் cloth ஐக் குறிப்பதால், அறிவியற் கலைச் சொல்லாய் பாவலைப் (fabric) பழகுவது நல்லது. பருத்திப் பாவல் (cotton fabric). பல்லத்துப் பாவல் (polyester fabric), நைலான் பாவல் [Nylon fabric, நியூயார்க் (ny) சுருக்கெழுத்தையும், இலண்டன் (lon) சுருக்கெழுத்தையுஞ் சேர்த்த பெயர்.), பல்புறப்பலின் பாவல் (polypropylene fabric), நூகிழைப் பாவல் (micro filament fabric; கழுத்துப்பட்டை (neck tie)கள், சில சேலைகள் ஆகியவற்றைளைத் தொட்டுப் பார்த்தால் வழுவழுப்பு உணர்வு காட்டும் பாவல்.) என வெவ்வேறு பாவற் கட்டுமானங்கள் (fabric constructions) உண்டு.

அடுத்தது பின்னல் = knitting. ஆங்கிலத்தில் இதை knot - முடிச்சுப் போடுதல் என்பதோடு தொடர்புறுத்துவர். பாவு, ஊடு என்று 2 நூல்களல்லாது ஒரே நூலை வைத்து வெவ்வேறு பட்டவங்களில் (pattern) முடிச்சுப்போட்டு ஒரு துணியை உருவாக்கமுடியும். இதுதான் திருப்பூரில் நடக்கிறது. பின் எப்படி knitting என்ற ஆங்கிலச்சொல் ஏற்பட்டது? வேறொன்றுமில்லை. ஒவ்வொரு knot க்கும் நடுவே ஒரு கண் உண்டு. கண்>கண்டு. தமிழிற் கண்டென்பது முடிச்சைக் குறிக்கும். நூற்கண்டு என்பது முடிச்சுப்போட்ட நூற்சுருள். கண்டுதல் = முடிச்சுப்போடுதல். முடிச்சுப்போட்டு துணியுருவாக்கும் நுட்பியல் நம்மூரில் வந்தபோது, ”கண்டுதல்” என்ற சொல் பரவாது, ”பின்னலே” பழகியது. முடிச்சின் தொழிற்பெயரான முடைதல், ஓலைகளை வைத்துக் கூடை, கொட்டான், கீற்று, தடுக்கு போன்றவை செய்யப் பயன் படுத்துச் சொல்லாகும். இங்கும் ஒரணியில் ஓலைவைத்து முடைவதும், ஈரணியில் ஓலைகள்வைத்து முடைவதும் என இருவேறு செயலாக்கங்கள் உண்டு.

மூன்றாவது வகை அண்மையில் இந்தியாவிற்கு வந்த non-woven spunbond ஆகும். ஒரு மாகனத்தின் (machine) மூலம் பல்லத்துப் பஞ்சைத் தட்டையாகப் பரப்பி, பஞ்சுத் தகட்டின் வெம்மையைக் (temperature) கூட்டி, பல்லாயிரம் நுணுகிய சம்மட்டிகளால் மென்மேலும் அதைக் குத்தியடித்து, எவ்வித நூற்பு, நெய்ப்பு, பின்னல் வேலைகளும் இல்லாது தகட்டின் தடிமனைக் குறைத்து பின் ஒன்றோடு ஒன்று பிணைந்தபின் ஆற வைத்து ஆக்கும் துணியைத்தான் நெய்யாத பன்னபந்தப் பாவல் (non-woven spunbond fabric) என்கிறார். இதைப் பல்லத்துப் பஞ்சில் மட்டுமின்றிப் பல்புறப்பலின் பஞ்சிலும் உருவாக்க முடியும். பின்னது முன்னதை விட மலிவானது. பல்லங்காடிப் பொருளடைப்பு/பொத்தகைப் (packing) பைகளும், திருமண வரவேற்புத் தாம்பூலப் பைகளும் இப்போது பன்னபந்தப் பைகளாகவேயுள்ளன. சில அழைப்பிதழ் கூடுகளைக் (covers) கூட இதே பாவலாற் செய்து விடுகிறார். காலம் மாறிக்கொண்டுள்ளது.

தச்சுத் தொழிலுக்கும் துகில் தொழிலுக்கும் சில ஒப்புமைகள் உண்டு. இரண்டுமே பொருத்தல் கருத்தில் உருவானவை. ஆங்கிலத்தில் வரும் text, texture, textile, technician, technic, technology இன்னும் பல்வேறு சொற்களெலாம் தச்சு, துகில், தையல் போன்ற பிணைப்பு வினையை ஒட்டியே ஏற்பட்டன. இவற்றில் பல சொற்களின் வேர் தமிழ்மூலங் காட்டுகிறது. இவற்றைச் சொல்லப் போனால் அனுமார் வாலாய் நீளும். மொத்தத்தில் தமிழ்மொழியின் வளத்தை நாம் அறிந்தோமில்லை. இப்பின்புலத்தோடு படிப்பது தொடர்பான ”நூலுக்கு” வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: