Wednesday, July 25, 2018

பல்லத்தி (polyester)

என் பணிக்காலத்தில் சில ஆண்டுகள், ”எதிர்த்தாரியக் காடி ஆலை (Terephthalic acid plant) ” உருவாக்கத்திலும், அதற்குமுன் ”பாராசைலீன் ஆலை (paraxylene plant) ” உருவாக்கத்திலும் ஈடுபட்டிருந்தேன். பின்னால், பல்லத்தி ஆலை (polyester factory) ஒன்றை நிறுவிக் கொண்டிருந்த  பணிக் காலத்தில் ஈரோடு, சேலம் பகுதிகளில் மாறகைப்பு (marketing) தொடர்பாய்க் கைத்தறி, புயவுத் தறியாளரோடு (power loom) ”துகலியற் தொழிலின் நடைமுறைச் சிக்கல்கள் (practical problems in textile industry)” பற்றியும் உரையாடியுள்ளேன். என் பணியை ஆங்கிலவழி செய்தபோதே, ஒருகாலம் தமிழிலும் இவற்றைச் சொல்ல வேண்டுமென்று சொற்களை அலசிக்கொண்டிருந்தேன். அப்போது அலங்க வேதியலில் உருவான சொல் தான் ”பல்லத்தி” ஆகும். இந்த இடுகையில் பல்லத்தி பற்றியும், நூலாக்கல், துணியாக்கல் பற்றியுஞ் சொல்கிறேன். வேதியியலில் இல்லாதவரும் இதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும். சற்று முயலுங்கள்.
 
ஒரு வெறியமும் (alcohol), ஓர் அலங்கக் காடியும் (organic acid. அங்கம் தமிழில்லையென ஒருகாலங் கருதி கரிமக் காடி என்று சொல்லிவந்தேன். அண்மையில் இக்குழப்பம் தீர்ந்தது. வலைப்பதிவில் இந்தப் பதிவிற்கு முந்தைய ”அலங்கம்” என்ற பதிவைப் படியுங்கள்) வினைபுரிந்து, அதனால் நீர்பிரிந்து அமையும் பூண்டை (compound; இதைக் கூட்டென்றுஞ் சொல்லலாம்) ஆங்கிலத்தில், ester என்பார்.

compound formed by an acid joined to an alcohol, 1852, coined in German in 1848 by German chemist Leopold Gmelin (1788-1853), professor at Heidelberg. The name is "apparently a pure invention" [Flood], perhaps a contraction of or abstraction from Essigäther, the German name for ethyl acetate, from Essig "vinegar" + Äther "ether" (see ether). Essig is from Old High German ezzih, from a metathesis of Latin acetum (see vinegar) என்பது இதன் வரையறை. Essig அன்றி வேறு காடிகளை வைத்தும் வெறியக்காடிப் பூண்டுகளை உருவாக்கலாம். ester க்குத் தமிழில் பொதுப்பெயர் வேண்டும் என உருவாக்கியது தான் அத்து/அத்தி என்பதாகும்.

’உ’வெனும் வேர்ச் சொல்லில் பிறந்தது உம். ”அவனும் நானும்” என்பதில் வரும் உம் ஒலிக்குறிப்பு சேர்தலை உணர்த்தும். அதே ’உ’வில் பிறந்தது உத்து> உத்தம். உத்தல்= பொருந்துதல். உத்தி= பொருந்தும் முறை. உடுதலும், உடுத்தலும், உருதலும், உருத்தலும், உறுதலும், உறுத்தலும், உவத்தலும், உன்னலும், உன்னித்தலும், ஒக்கலும், ஒட்டலும், ஒடுவலும், ஒண்டலும், ஒண்ணலும், ஒத்தலும், ஒப்பலும், ஒருங்கலும், ஒருதலும், ஒருத்தலும், ஒருவுதலும், ஒல்லலும், ஒவ்வலும், ஒன்றலும், ஓடலும், ஓர்தலும் தொடர்புடைய சொற்கள். உகர/அகரத் திரிவில் உத்தல் என்பது,  அட்டல்/அத்தல் என்றுமாகும். அதிலுங்கூட ஏராளஞ் சொற்கள் பிறக்கும்.

அத்தலோடு தொடர்புற்ற அதிகம், அதிகரித்தல் சொற்களும் என்பவையும் தமிழே. ஆங்கிலத்தில் அட்டம்= addition என்ற சொல் பிறக்கும். இந்தை யிரோப்பியனில் நான் இப்படிச் சொன்னால் பலரும் நம்பமறுக்கிறார். உத்தல்> அத்தல்= சேர்த்தல். அத்தலிற் பிறந்த இன்னொரு பெயர்ச்சொல் அத்தி என்பதாகும். பல்வேறுவகைக் காடிகளும் (acids), வெறியங்களும் (alcohols) ஒன்றோடொன்று வினைபுரிந்து எழும் பூண்டுகளைக் அலங்க வேதியலில் (organic chemistry) அத்திகள் (esters) என்பர். எல்லாவித அலங்கப் பூண்டுகளையும் அத்திகள் என்றழைக்கக் கூடாது. சில குறிப்பிட்ட வகைகளே அத்திகளாகும்.

அலங்கக் காடிகளிலும் பலவகை உண்டு. எளியவகையில் ஒருபக்கம் நீரகங் (hydrogen) கொண்ட கரிமஃகக் (carboxyl - COO) கூறும், இன்னொரு பக்கம் அலங்க அடிக்கூறும் (organic base groups) இருக்கும். அலங்க அடிக்கூற்றில் கொழுவகை (aliphatic type), மணவகை (aromatic type) என 2 வகைகளுண்டு. கொழுவகையில் ஏற்றல் (ethyl), புறப்பல் (propyl; (from prop(ionic acid) Greek pro "in front" + piōn "fat", because it's first in order of the fatty acids), பொலிதயில் (butyl; "butyric acid" comes from Latin butyrum, butter) போன்ற கூறுகளும், மணவகையில் பெஞ்சாவியல் (Benzyl; சாவாத் தீவிற் பெற்ற கருப்பூரம் இதனடிப்படை), தோலுவியல் (tolyl; கொலம்பியாத் தோலுமரத்திற் பெற்ற மணச்சாறு), தாரியல் (phthalic; பாறைநெய்த் தாரிற்பெற்ற naphthalene கருப்பூரம்) போன்ற கூறுகளுமுண்டு.

ஒரு நீரகக் கரிமஃகக் கூறு கொண்ட எளியவகை அலங்கக் காடியை ஒற்றை கரிமஃகக் காடி (monocarboxylic acid) என்பார். சற்று பலக்கியதாய் இரட்டைக் கரிமஃகக் காடிகளும் ((dicarboxylic acids) முவ்வைக் கரிமஃகக் காடிகளும் (tricarboxylic acids) அதற்கு மேலும் உண்டு. இரு பக்கம் நீரகக் கரிமஃகம் (-COOH), நடுவில் அலங்க அடிக்கூறு கொண்டது இரட்டைக் கரிமஃகக் காடியென்று சொல்லப்படும். இவற்றை இருகை கொண்ட அலங்க அடிக்கூறாய் உருவகிக்கலாம். அடுத்து மூன்று கை கொண்ட அலங்க அடிக்கூறுகளை உருவகிக்கலாம். ஒவ்வொரு கையிலும் நீரகக் கரிமஃகம் இருந்தால் அது முவ்வைக் கரிமஃகக் காடியாகும். வெறியம் தவிர்த்த களியம்/ களிச்செறியம் போன்றவற்றிலும் ஒன்றிற்கு மேற்பட்ட கைகளுண்டு. ஒரு நீரஃகக் கை (1 -OH) உள்ளது வெறியமென்றும், இரு நீரஃகக் கை ( 2 -OH) கொண்டது களியம் என்றும், 3 நீரஃகக் கை கொண்டது (3 -OH) களிச்செறியமென்றும் சொல்லப் படும். வெவ்வேறு வகைக் காடிகளும், வெறியம்/ களியம்/ களிச்செறியம் ஆகியவையும் சேர்ந்து வினைநடக்கையில் காடியானது, நீரகம், வெறியம்/ களியம்/ களிச்செறியங்களில் உள்ள ”நீரஃகத்தோடு” புணர்ந்து அதன்வழி நீரை வெளிப்படுத்தும்.

இனி எல்லோர்க்கும் தெரிந்த பல்லத்துப் பஞ்சு என்பதைக் கொங்கு மண்டலத்தில், பருத்திப் பஞ்சைப் போலவே,  பாலியெசுட்டர் பஞ்சென்று (polyester staple fibre ஐ) தறியாளர் பேச்சுவழக்கிற் சொல்வர்.) ஏற்றலியக் களியமும் (ethylene glycol), எதிர்த்தாரியக் காடியும் (terephthalic acid) வினை புரிந்து பல் ஏற்றலிய எதிர்த்தாரிய அத்தைப் (polyethylene terephthalate) பெறுவதாகும். பலமரேற்றலின் (polymerization) பன்மை கூடக் கூட நீர் மேலும் மேலும் வெளிப்பட்டு, பலமரின் (polymer) எடை கூடிவரும். குறிப்பிட்ட எடைக்குள் பலமரை வைத்திருப்பது வெவ்வேறு பயன்பாடுகளுக்கு வழி வகுக்கும்.

[இங்கே இயல்பருத்தி பற்றிய வேதி விளக்கம் சொல்லவேண்டும். பருத்திக் காய்க்குள் பலமரேற்றங் (polymerization) கூடக் கூட பருத்திக் கொட்டையைச் சுற்றிப் பருத்தி இள்ளிகள் (fibre. இள்ளுதல்= மெல்லியதாதல்) தோன்றத் தொடங்கும். இள்ளிகள் நீண்டு இழைகளாகவும் ஆகலாம் ((filament)) அறிவியல் வரிதியாய் நீட்சி குறைந்ததை இள்ளியென்றும் பட்டுப்போல் நீட்சி கூடியதை இழையென்றுஞ் சொல்வது நல்லது. பருத்திக் காய்க்குள் இள்ளிகளும், இழைகளும் நிறைய உள்ளன. ஒருவகையிற் பார்த்தால் இள்ளியைக் குற்றிழை எனலாம். பேச்சு வழக்கில் இள்ளிகளுக்கும் இழைகளுக்கும் வேறுபாடு காட்டார். (fibre, fila விற்கு மூலந்தெரியாதென்றே மேலைச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் கூறும். தமிழ் மூலம் அவர் அறியார். நானறிந்தவரை பருத்தி தொடரான சொற்கள் எல்லாமே தமிழ் மூலங் காட்டும்.) இயற்கைச் செடியில் கிடைக்கும் இள்ளித் தொகுதி எடைகுறைந்து பருமன்கூடிப் பருத்துக் கிடந்ததால் அது பருத்தியாயிற்று. கொட்டைக்குள் பன்னூறு இள்ளிகளிருந்ததால் அது பல்ஞ்சு>பன்ஞ்சு> பஞ்சு என்றுஞ் சொல்லப்பட்டது. (பருமையால் பருத்தி; பன்மையாற் பஞ்சு. முன்னது செடிக்கும், விளைவின் காழுக்கும் (content); பின்னது விளைவின் எண்ணிக்கையாலும் ஏற்பட்ட பெயர்களாகும்.) பஞ்சிற்கு ஆங்கிலத்தில் staple fibre என்று பெயர்.

இயற்கைப் பருத்திப் பஞ்சோடு பயனுறுத்தும் இன்னொரு வகைச் செயற்கைக் குச்சிலப் (cellulose) பஞ்சும் பருத்தி போல் தோற்றமளிக்கும். [வேதியியலின் (chemical) படி இயற்கை, செயற்கை ஆன இரண்டுமே குச்சிலங்கள் தாம். பூதியலின் (physical) படி  வேறு தோற்றங்கள் காட்டும்.]

நாருக்கும், இள்ளி/இழைக்கும் கூடக் குறிப்பிட்ட வேறுபாடுண்டு. நாரென்பது (புடலங்காயுள் துளை போல) உள்ளே நீளமான துளையுள்ளது. (நாளம், நார், நரம்பு போன்றவை தொடர்புள்ளவை.) இது புல்லில் புறக்காழ் வகை போன்றது. இள்ளி/இழை என்பது நடுவில் துளையில்லா அகக்காழ் கொண்டது. பருத்தி இள்ளிகள் பட்டிழைகளைப் போல நீளமானவையல்ல. அவற்றை வைத்து நூற்பது, தேங்காய் நாரைத்திரித்து முறுக்கேற்றி நீண்ட புரிகளைச் செய்து புரிகளை மேலும்பிணைத்துக் கயிறாக்குவதைப் போலாகும். பருத்தி நூலில் இள்ளிகள் -> நூலென்று நேரே போய்விடும். புரிகளிருக்கா. அதிகமான வலிமை கூடிய நுட்பியல் உருளிக் கயிறு (technical tyre cord) செய்யும் போது இழை -> புரி-> கயிறு என்றாகும்.

சரி நூலென்ற பெயர் எப்படி வந்தது? பஞ்சைத்திரித்து இழுத்து முறுக்கும் போது ஒரே சமயத்தில் 1 பரிமானத்தில் பருமனானது நுல்லிக் கொண்டு (மெலிந்து) இன்னொரு பரிமானத்தில் நூலிக் கொண்டு (நீண்டு) வருவதால் நூலாயிற்று. (நுல்லென்ற வேரிலிருந்து நுல்>நெல்>நெள்>நெள்கு> நெகு> நெகிழ்>நெகிள்>நீள் என்ற வளர்ச்சியில் ஏராளம் தமிழ்ச் சொற்களுண்டு. அவற்றை இங்கு சொல்லின் விரியும்.) பல்கிய இள்ளிகளைச் சேர்த்து நூலாக்குவதால் பன்னுதலென்றுஞ் சொல்லப்பட்டது. (பன்னுதல்= பல இள்ளிகளைச் சேர்த்தல்). பன்னல்>பனுவல், பன்னின் எண்ணிக்கையால் ஆடை நூலுக்குப் பெயராயிற்று. பன்னல், பனுவுதல் (staple fibre spinning) என்பவை தொழிற் பெயராயின. ஆங்கிலத்தில் இருக்கும் spinning என்ற சொல் கூட நம் பன்னலுக்கு இணைகாட்டும்.

இன்னொரு விதமான நூலாக்குதலில் நூற்காழ் அல்லது பாகுப்பிசின் (viscous resin) ஒரு குறிப்பிட்ட குறுக்குவெட்டோடு நீண்டுவந்து ஓர் இழையாகவே தொடர்ந்து பின்வெளியே (பல்லத்தி இழையிற்) குளிர்ந்தோ, (பட்டிழையிலும், குச்சில இழையிலும்) வேதிமாற்றம் பெற்றோ நூலாகும் இழை நூலாக்கலுக்கு (filament yarn formation) பேச்சுவழக்கில் பன்னல், பனுவுதல் என்றுஞ் சொல்வது உண்டு தான். ஏனெனில் பருத்திப் பஞ்சு பன்னூறாண்டுகளாய் நம்மைப் பிணைத்திருக்கிறது. பட்டுப்பூச்சியின் ஆக்கம் நமக்குச் சீனத்திலிருந்து பெறப் பட்டது. நம்மூர் முறையிலே வெளியார் நுட்பம் உள்வாங்கப் பட்டதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் நுட்பியல் அடிப்படையில் இழைநூல் ஆக்கலும், பன்னுதலும் வேறுபட்டவை. விவரமறிந்தோர் குழம்ப மாட்டார். நூற்றலென்ற சொல் இரண்டிற்குமே பொதுவானது.

தச்சுத்தொழிலுக்கும் துகில்தொழிலுக்கும் சில ஒப்புமைகளுண்டு. இரண்டும் பொருத்தல் கருத்தில் உருவானவை. ஆங்கிலத்தில் வரும் text, texture, textile, technician, technic, technology எனும் பல்வேறு சொற்கள் தச்சு, துகில், தையல் போன்ற பிணைப்பு வினை ஒட்டியே ஏற்பட்டன. இவற்றில் பல சொற்களின் வேர் தமிழ்மூலங் காட்டுகிறது. இவற்றைச் சொல்லப்போனால் அனுமார் வாலாய் நீளும். மொத்தத்தில் தமிழ்மொழி வளத்தை நாம் அறிந்தோமில்லை. இப்பின்புலத்தோடு படிப்பது தொடர்பான ”நூலுக்கு” வருவோம்.

நண்பர் வேந்தன் அரசின் குசும்பைக் கண்டு கோவமுற்று நான் முதலில் மறுமொழித்தாலும். ”பருத்திப்பெண்டின் பனுவலன்ன” என்ற புறம் 125 குறிப்பையும், ”ஆளில்பெண்டிர் தாளின்செய்த நுணங்கு நுண்பனுவல் போல”  என்ற நற்றிணை 353 குறிப்பையும், ”செவிமுதல் வித்திய பனுவல்” என்ற புறம் 237 குறிப்பையும் கொடுத்துப் ”பனுவலென்றால் பஞ்சு மற்றும் பாட்டு. ஆங்கிலத்தின் டெக்ஸ்ட்டுக்கு பொருத்தமான சொல். ஏற்கனவே இரு பொருளிலும் பழகுதமிழில் புழக்கத்திலுள்ள சொல்” என்ற வேந்தனரசின் 2 ஆம் மொழிக்கு, என் கோவத்தைக் குறைத்து என்மறுப்பின் உரிய விளக்கத்தை அளிக்கத்தான் வேண்டும். இல்லெனில் பனுவல் பற்றிய தவறான புரிதல் மடற்குழுக்களில் நிலைத்துப் போகலாம்.

textக்கு இணையான தமிழ்ச்சொல்லை விளக்குமுன், பருத்தி, பஞ்சு, பன், பன்னல், பன்னுதல், பனுவுதல், பனுவல் போன்ற பல்வேறு துகில்துறைச் (textile) சொற்கள் தமிழில் எழுந்த வகையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டிற்குமிடை தொடர்பும், தொடர்பற்றதுமுண்டு. கீழே நான் நீளமாய்ச் சொல்வதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். முதலில் பருத்தி பற்றிப் பேசி விடுகிறேன். பருத்தியை நூலாகவும், ஆடையாகவும் பயன்படுத்தலாம் என உலகிற்குரைத்தவர் எகிப்தியரா, இந்தியரா? - தெரியாது. ஆனால் சிந்து சமவெளியில் ஆதாரங் கிடைப்பதாய்ச் சொல்வதைப் படித்திருக்கிறேன். அதேபொழுது, இன்றைக்கு மேலைநாடுகளிற் பருத்தியையொட்டிப் பரவிய பலசொற்களும் தமிழ்மூலங் காட்டுவதை. விவரமாய்ச் சொல்லவேண்டும்.
 .
இனிப் பஞ்சென்ற சொல்லை இள்ளித்தொகுதிக்கு வைத்துப் பழங்காலத்திற் பருத்தியைச் செடியோடு சேர்த்தார். (ஒருநாளும் தமிழர் பஞ்சுச் செடியெனச் சொல்லார். பருத்திச் செடி என்பதே பாடம்.) கொட்டையும் இள்ளிகளும் நிறைந்து, உலர்ந்து வறண்டுபோன பருத்திக் காய்களையே இங்கிருந்து அக் காலத்தில் ஏற்றுமதி செய்ததால் ”பருத்திக்கொட்டையில் பெற்றது” எனும்படிக் கொட்டை (cotton) என்ற சுருக்கப்பெயரே மேலைநாடுகளிற் பருத்தியைக் குறிக்கலாயிற்று. (செடியை அங்கு விளைவிப்பது குறித்து முதலில் யாரும் எண்ணவில்லை போலும். எகிப்தியம், சுமேரியம், பாபிலோனியம், அக்கேடியம் போன்றவற்றில் பருத்திக்கு என்ன பெயரென நான் ஆய்ந்தேனில்லை. அவற்றை ஆய்வது சுவையாய் இருக்கலாம்.)

நூலென்ற பொருளிருந்தும், yarn என்ற மேலைச்சொல் கயில்>கயிறோடும், யாண்>ஞாண்>நாணோடும் தொடர்புற்றது. அதை விளக்கினால் நேரங் கூடும். எனவே தவிர்க்கிறேன். [முடிந்தால் அருளியின் “யா” பொத்தகத்தைப் படியுங்கள். அவருக்குமேல் நான் ஒன்றுஞ் சொல்வதற்கில்லை. சணல் (sunn-hemp, Crotalaria juncea) என்ற சொல்லும் யாணோடு தொடர்புற்றதே]. ஆடைப் பயன்பாட்டைப் பொறுத்தவரை பனுவலென்பது நூல் போன்றவற்றைக் குறிக்கும். நெய்தல்= weaving. நுள்>நெள்>நெய் என்று இச்சொல் வளர்ந்து நூலை நெருக்கித் துணியாய் முடைதலைக் குறிக்கும். இதில் பாவு (warp) நூல், ஊடு (weft) நூல் என 2 வகையுண்டு. பாவுநூல்களின் நீளம் துணி நீளத்தையும், பாவுநூல்களின் குறுக்குவெட்டும் எண்ணிக்கையும் துணியகலத்தையும் நிருணயிக்கின்றன. பாவு நூல்களின் ஊடே ஒன்று மாற்றி ஒன்றாய் ஊடு நூல் வலைத்து வலைத்துத் துணியை நிறைக்கிறது. (வல்வுதல்>வவ்வுதல் = வலைத்துப்/வளைத்துப் பற்றுதல்; வவ்வுதலே weaving ற்கு இணையான தமிழ்ச் சொல். வலைத்துப் பற்றுதலை மேலைச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் சொல்லா. இன்னொரு எடுத்துக்காட்டுஞ் சொல்லலாம். நூலை வலைத்துச் செய்யப்படுவது வலையாகும். வலயத்தின் அளவிற்கேற்பத் துணியின் அடர்த்தி மாறும். வலை நெருக்கமாய்ச் செய்யப்பட்டதா? கலக்கச் செய்யப் பட்டதா? - என்பதைப்பொறுத்து வலையின்/துணியின் பயன்பாடு மாறும்.

இதேபோல், ”என்ன நூல் பாவாகிறது? எது ஊடாகிறது? எப்படி நூற்செறிவு பெறுகிறது? எவ்வளவு நெருக்கமாய் நெய்கிறோம்?” என்பவற்றைப் பொறுத்தே நெய்யப்படுந் துகிலின் தன்மை உருவாகும். இங்கே பாவுதல் என்பது முதற் பொருளில் பரவுதலைக் குறிக்கும். பரவுகின்ற/பாவுகின்ற  ஆடை, பாவாடை. இதைச் சிறுமியர் அணிவார். இங்கே warp பொருள் அமைவதில்லை. வீட்டுத் தரைகளின் மேற்பரப்பிப் பொருத்தும் தட்டைக் கல்லைக் (tiles) பாவுகல் (paving stone) என்பார். இற்றைக் காலத்தில் பாவு என்றவுடன் பரப்பை மறந்து warp எனும் வழிப்பொருளையே பலரும் நினைவு கொள்கிறார். அது ஒருபக்கப் பார்வை. அதேபொழுது, ஆங்கிலத்திலுள்ள warp ம், weft -ம், தமிழ்ச்சொற்களோடு தொடர்புள்ளவைதாம்.

துணி, பேச்சுவழக்கில் cloth ஐக் குறிப்பதால், அறிவியற் கலைச்சொல்லாய் பாவலைப் (fabric) பழகுவது நல்லது. பருத்திப் பாவல் (cotton fabric). பல்லத்துப் பாவல் (polyester fabric), நைலான் பாவல் [Nylon fabric, நியூயார்க் (ny) சுருக்கெழுத்தையும், இலண்டன் (lon) சுருக்கெழுத்தையுஞ் சேர்த்த பெயர்.), பல்புறப்பலின் பாவல் (polypropylene fabric), நூகிழைப் பாவல் (micro filament fabric; கழுத்துப்பட்டையையும், (neck tie), சில சேலைகளையும் தொட்டுப்பார்த்தால் வழுவழுப்பு உணர்வுகாட்டும் பாவலுக்கு இப் பெயருண்டு.) என வெவ்வேறு பாவற் கட்டுமானங்கள் (fabric constructions) உண்டு.

அடுத்தது பின்னல்= knitting. ஆங்கிலத்தில் இதை knot - முடிச்சுப்போடலோடு தொடர்புறுத்துவர். பாவு, ஊடு என்று 2 நூல்களன்றி ஒரே நூலால் வெவ்வேறு பட்டவங்களில் (pattern) முடிச்சுப்போட்டு துணியை உருவாக்கலாம். இதுவே திருப்பூரில் நடக்கிறது. பின் எப்படி knitting என்ற ஆங்கிலச் சொல் ஏற்பட்டது? வேறொன்றுமில்லை. ஒவ்வொரு knot க்கும் நடுவே ஒரு கண் உண்டு. கண்> கண்டு. தமிழிற் கண்டென்பது முடிச்சைக் குறிக்கும். நூற்கண்டென்பது முடிச்சுப்போட்ட நூற் சுருள். கண்டுதல் = முடிச்சுப்போடல். முடிச்சிட்டுத் துணி உருவாக்கும் நுட்பியல் நம்மூரில் வந்தபோது, ”கண்டுதல்” வினை பரவாது, ”பின்னலே” பழகியது. (கண்டுதல் என்பது knitting ஓடு நேரடித் தொடர்பு கொண்டது.) முடிச்சின் தொழிற்பெயரான முடைதல், ஓலைகளை வைத்துக் கூடை, கொட்டான், கீற்று, தடுக்கு போன்றவை செய்யப் பயன்படுத்தும் சொல்லாகும். இங்கும் ஒரணி ஓலைவைத்து முடைவதும், ஈரணி ஓலைகள் வைத்து முடைவதும் என இருவேறு செயலாக்கங்கள் உண்டு.

மூன்றாவது வகை கடந்த 15/20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு வந்த non-woven spunbond ஆகும். ஒரு மாகனத்தின் (machine) மூலம் பல்லத்திப் பஞ்சைத் தட்டையாகப் பரப்பி, பஞ்சுத் தகட்டின் வெம்மையைக் (temperature) கூட்டி, பல்லாயிரம் நுணுகிய சம்மட்டிகளால் மென்மேலும் குத்தியடித்து, எவ்வித நூற்பு, நெய்ப்பு, பின்னல் வேலைகளின்றித் தகட்டின் தடிமனைக் குறைத்து பின் ஆறவைத்து ஆக்கும் துணியையே நெய்யாத பன்னபந்தப் பாவல் (non-woven spunbond fabric) என்கிறார். பல்லத்திப் பஞ்சில் மட்டுமின்றிப் பல்புறப்பலின் பஞ்சிலும் இதை உருவாக்க முடியும். பின்னது முன்னதை விட மலிவானது. பல்லங்காடிப் பொருளடைப்புப் (packing) பைகளும், திருமண வரவேற்புத் தாம்பூலப் பைகளும் இப்போது பன்னபந்தப் பைகளாகவே உள்ளன. சில அழைப்பிதழ் கூடுகளைக் (covers) கூட இப்போது இதே பாவலாற் செய்துவிடுகிறார். காலம் மாறிக்கொண்டுள்ளது..

இன்னுமுள்ள வேறுவகைப் பயன்பாடு பல்லேற்றலின் (polyethylene) பைகள், விரிப்புகள் போன்றவையாகும். இவையும் பல்புறப்பலின் போன்றே செய்யப் படுகின்றன.

அன்புடன்,
இராம.கி.



No comments: