Wednesday, July 25, 2018

பளிங்கு/படிகம் என்பது கட்டி (crystal) அல்ல

”படிகம்” 1600 ஆண்டுகளுக்கு முந்தைய சொல்லென்று முகநூல் சொல்லாய்வுக் குழுவில் திரு இரவீந்திரன் வெங்கடாசலம் தெரிவித்தார். ஆண்டு, பொருள் அனைத்திலும் அவருக்குக் குழப்பம் போலும். அவர் சொல்லும் காலம் தேவார, நாலாயிரப் பனுவலுக்கும் முந்தைய கி.பி, 5 ஆம் நூற்றாண்டாகும். கம்பன் காலம் 12 ஆம் நூற்றாண்டென்றே கேள்விப் பட்டுள்ளேன். 9/10 ஆம் நூற்றாண்டிற்குக் கம்பனைக் கொண்டு செல்லச் சிலர் முயல்வர். 5 ஆம் நூற்றாண்டிற்குக்.கொணர முயல்வதை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன். பண்டிதரின் முயற்சி வெல்லட்டும்!!! என் கருத்தைச் சொல்கிறேன். முதலிற் கம்பன் காலத்தைக் காண்போம்.

விக்கிரமச் சோழன் (கி.பி.1118-1135), 2 ஆம் குலோத்துங்கன் (கி.பி.1133-1150), 2 ஆம் இராசராசன் (கி.பி.1146-1163) ஆகியோரின் அரசவைகளை அலங்கரித்தவர் ஒட்டக்கூத்தர். விண்ணவ மரபு சார்ந்த விக்கிரமச்சோழன் திருவரங்கக் கோயிலுக்கு நிறையப் பணிகள் செய்தான். அவன் காலத்திற்கு முன்னேதான், (120 அகவை வாழ்ந்த) இராமானுசர் திருவரங்கத்தில் பணிசெய்யத் தொடங்கினார். அவர் பணிகளூடே கம்பராமாயணம் எழுந்திருப்பின், இராமானுசர் கம்பனை ”கம்பநாட்டாழ்வார்” என மிக்குயர்ந்து புகழ்ந்திருப்பார். குருபரம்பரைச் செய்திகள் அப்படியேதுஞ் சொல்லவில்லை. 2 ஆம் குலோத்துங்கன் முற்றிலும் சிவநெறி சார்ந்து அவ்வெறியில் இராமானுசருக்கு ஏராளஞ் சிக்கல் கொடுத்தான். அதன் விளைவாய், 12/13 ஆண்டுகள் கருநாடகம் மண்டியா மாவட்டம் மேற்கோட்டையில் இராமானுசர் தங்கவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. எனவே குலோத்துங்கன் காலத்திலும் களையிழந்த திருவரங்கத்தில் இராமாயணம் அரங்கேறியிருக்க வழியில்லை.

2 ஆம் இராசராசன் காலத்தில் சிவநெறி / விண்ணவநெறிக் குழப்பங்கள் சோழ நாட்டிற் சரிசெய்யப்பட்டன. இவன்காலத்திற்றான் இராமானுசர் நிற்றசூரி ஆனார். இராமானுசருக்குப் பின்னரே கம்பன் இராமாயணம் பாடியிருக்க வாய்ப்புண்டு. கம்பன் உத்தர ராமாயணம் பாடாததால், ஒட்டக்கூத்தர் அதைப் பாடினார். உத்தர ராமாயணம் 1163 க்குச் சிலவாண்டுகள் முன்னெழுந்தது எனில், கம்பராமாயண எழுச்சி அதற்குஞ் சிலவாண்டுகள் முன்னராகலாம். எனவே கம்பராமாயணம் ~ கி.பி. 1150க்கு அருகில் எழுந்ததாகவே கொள்ள முடியும். எனவே படிகச் சொல்லாட்சி என்பது கி.பி. 1150 க்கு அருகில் தான் எழமுடியும். அதாவது இற்றைக்கு ஏறத்தாழ 868 ஆண்டுகள் முந்தையது. 1600 ஆண்டுகள் என்பது நண்பரின் வரலாற்றுத் தெளிவில்லாப் பேச்சு. .

சரி ’படிகத்தின்’ பொருளைப் பார்க்கலாம். அகர முதலிகள் என்பவை பொருள் அறியுந் தொடக்கம் தரலாமே தவிரச் சான்றுகளாகா. குறிப்பிட்ட ஒரு சில அகரமுதலிகள் தவிர, மற்றவை எந்தப் பொருள், எந்த இடத்தில், எந்தக் காலத்தில் தோன்றியதென்று சொல்லா. படிகப் பொருளாய்ப் பளிங்கு, கூத்து (அக.நிகண்டு), விளாம்பட்டை (சூடாமணி நிகண்டு), இரப்பு (பிங்கலம்) ஆகியன குறிப்பிடப்படும். கடைசி 3 பற்றி இங்கு பேச்சில்லை. பளிங்கின் ஆங்கிலப் பொருளாய் crystal போட்டிருப்பதிற்றான் சிக்கலே. பளிங்கைக் crystal க்குச் சமங்கொண்டது எக்காலம்? பண்டிதர் தேடட்டும். நானறிந்தவரை பொதுப் பயன்பாட்டிற்கு இப்புரிதல் 70 ஆண்டுகளுக்கு முன்னரே வந்தது. பளிங்கின் பொருளறியக் கம்பனுள் வருவோம். பாலகாண்டம். வரைக்காட்சிப் படலத்தில் 809 ஆம் பாட்டில் வரும்.

படிகத்தின் தலமென் றெண்ணிப் படர்சுனை முடுகிப் புக்க
கடிகைப்பூங் கமல மன்ன சுடர்மதி முகத்தி னர்தம்
வடகத்தோ டுடுத்த தூசை மாசில்நீர் நனைப்பு நோக்கி
கடகக்கை எறிந்து தம்மில் கருங்குழல் வீரர் நக்கார்.

என்ற வரிகளின் பொருளாய் “தாமரைபோற் சுடர்மதி முகங்கொண்ட பெண்களின் மேலாடையும் கீழாடையும் படர் சுனையில் முடுகிவிழ, ’பளிங்குத் தலத்தை அவை நாடுவனவோ?’ என்றபடி மாசற்ற நீர் அவற்றை நனைத்துவிட்டது. பெருவீரக் கழலணிந்த, தோள்வளை அணிந்த, வீர இளைஞரோ, அக்காட்சி கண்டு தம்மிடத்தில் மாசற்ற நீர் இருந்தபடி, கைகளைத் தட்டிச் சிரித்தார்.” என்று பொருள் சொல்வர்.. இச்சுனை மட்பாங்கான இடத்திலில்லாது (குற்றாலம் செண்பகாதேவி அருவியின் கீழமைந்த) பளபளப்புக் காட்டும் கற்பாறைச் சுனை போன்றது. இதைக் crystal என்பது சரியெனத் தோன்ற வில்லை. இதே சுனையை 801 ஆம் பாட்டில் “தெள்ளிய பளிக்குப் பாறைத் தெளிசுனை மணியில் செய்த” என்பார். ஆக இச்சுனை பளிங்குப் பாறையால் ஆனது. பளிங்கு என்றாலென்ன?

பளபள என்பது ஒளிபடத்தெறிக்கும், வழுவழுத்துத் தோற்றும். ஆங்கிலத்தில் shining glittering என்பார். ”தங்கத் (வெள்ளித், செம்புத்) தட்டு பளபளவென்று இருந்தது” என்போமல்லவா?. பளபள-த்தல் என்ற செ.கு.வினைச்சொல்லும் உண்டு, பளபள என்பது ஒளிக்குறிப்பு. பளிங்கு-தலும்/பளிக்கு-தலும் shining glittering. ”பளிக்கறை புக்க காதை” மணிமேகலையிலுண்டு. பளிங்காலான அறை பளிக்கறை/ பளிங்கறை. ஒருபொருளின் மீது ஒளிபடும்போது  3 வகையிற் பிரியும், ஒளி ஊடுறுவலாம், ஈர்க்கப்படலாம், மறுபளிக்கவுஞ் செய்யலாம். இம்மூன்றும். எவ்வளவு நடக்குமென்பது குறிப்பிட்ட பொருளின் பரப்பைப் பொறுத்தது. நுணுகிய மேடுபள்ளமின்றி எவ்வளவு வழவழப்பான தட்டையாகுமோ, அவ்வளவு கூறுபாடு நடக்கும். எந்தெந்தப் பொருளெல்லாம் மறுபளிப்பைக் கூடக் காட்டுமோ, அதெல்லாம் பளிங்கு தான். அது crystal ஆய் மட்டுமே இருக்கத் தேவையில்லை. காட்டாக கண்ணாடியில்லாக் காலம் ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள். பழங்காலத்தில் செப்புத் தகடு இருந்தது. நாட்பட நாட்பட தகட்டின் மறுபளிப்புக் குன்றினால் என்ன செய்திருப்பார்? எலுமிச்சை/ புளிச்சாறு கொண்டு ஒருமுறை விளக்கி, பின் திருநீற்றுப் பொடியும், துணியுங் கொண்டு தேய்த்துப் பளிச்சூட்டுவார் அல்லவா? நன்றாகப் பளிச்சூட்டிய பிறகு, முகங் கூடப் பார்க்க முடியுமே? மங்கிப்போன கண்ணாடிக்கும் திருநீறு கொண்டு இற்றை நாளில் பளிச்சூட்டுகிறோமே? பளிங்கெல்லாம் crystal என்றால், உம்பர்க் குளிரூட்டிய நீர்மமான கிளர்த்தி (glass) ஒரு crystal ஆ?

சுனைக்கரையிலிருந்து பார்க்கையில் சிலவகைப் பாறைக்கற்கள் மறுபளிப்புத் தன்மை கூடிக்காட்டும். அவற்றையே பளிங்குப்பாறைகள் என்பார். அறிவியல் வளராக் காலத்தில் பட்டறிவால் பெற்ற சொல் பளிங்காகும். பளிங்குக்கல், பளிங்குக் கீச்சான் (இதுவொரு மீன்), பளிங்குக் குருவங்கம் (சித்த மருத்துவம்), பளிங்குச் செய்ந்நஞ்சு (சித்தமருத்துவம்), பளிங்குச் சாம்பாணி (மறுபளிப்பு கூடக் காட்டும் சாம்பிராணி), பளிங்கு ஏனங்கள், பளிங்கு உப்பு, பளிங்குப் புட்டில் (கண்ணாடிப் புட்டி), பளிங்கு மத்து, பளிங்கு மாசிக் கட்டி, பளிங்கு வடம் எனப் பல பயன்பாடுகள் உண்டு. திரு இரவீந்திரன் காட்டிய சரசுவதி அந்தாதியும் படிக/பளிங்கு நிறத்தைக் (ஒளியை மறுபளிக்கும் நிறம். கலைமகளுக்கு வெள்ளை நிறமென்பது இங்கு குறிப்பல்ல, கருகரு நிறத்தாளுக்கும் பளிங்குமை காட்டலாம்) குறிக்கும்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

இது தவிர, பளிங்குக் குறிப்பு

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தி னுள்ளே
இருப்பள்இங்கு வாரா திடர்.

என்ற கம்பர் பாட்டிலும் வரும். பளிங்கு, பளிகென்று சில வட தமிழக வட்டாரங்களில் பலுக்கப்படும். இன்றும் ஆந்திரத்திலுண்டு. நாம் தெலுங்கு என்போம். அவர் தெலுகென்பார். (தென் தமிழகத்தில் கிடையாதென்று சொல்ல முடியாது. ”அவுங்க வந்தாங்க” என்பது புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் “அவுக வந்தாக” எனப்படும். இதுபோற் பழக்கம் நிறைய மாவட்டங்களிலுண்டு. தவிரச் சோழர் என்பது நெல்லூர், சித்தூர் பக்கத்தில் சோடராகும். தெலுங்குச் சோழர் = தெலுகுச் சோடர் பொதுவாகப் பல தமிழ்ச் சொற்களின் பாதை தமிழ்- தெலுங்கு- பாகதம்- சங்கதம் என்றே போகும். அப்படியே ஒடிசா, வங்கம் மகதம் போன்றவற்றின் பாகதத்திற்கும் ’படிகு’ பரவும். (பாகத, பாலி அகர முதலிகளைப் பாருங்கள்). பின் படிகு படிகமுமாகும். சங்கதம் இதைக் கடன் வாங்கி முன்னால் ஸகரம் சேர்த்து ஸ்படிகமாக்கும். நம்மூர் பளிங்கு எப்படியெல்லாம் திரிகிறது? வியப்பு வருகிறதல்லவா? ’ஸ்படிக லிங்கத்தின்’ மேல்படும் ஒளி பெரிதும் மறுபளிக்கப் பட்டு நமக்கொரு பரவசத்தைக் கொடுக்கும். ஸ்படிக லிங்கம் என்பது crystal ஆய் மட்டுமே இருக்கத் தேவையில்லை.

crystal இன் அடிப்படைப் பொருள், நீர்மத்திலிருந்து மூலக்கூறு மூலக்கூறாய்ப் பிரிந்து பின் ஒன்றுசேர்ந்து தனிக் கட்டுமானம் உருவாக்குவதே. இக் கட்டுமானம் பளிங்காய் இருங்கத் தேவையில்லை. உருகிய கந்தகத்தைக் குளிர்விக்கிறோம். கொஞ்சங் கொஞ்சமாய் கந்தகக் crystal உருவாகிறது. வேதிப் பொறியியலில் கட்டியாக்கல் (crystallization) என்போம். கட்டியை உருக்கினால் கந்தக நீர்மமாகும். கந்தக நீர்மத்தைக் குளிரூட்டினால் கட்டியாகும். இது என்ன பளிங்கா? அல்ல; வெறுங் கட்டி. கட்டிக்கும் crystal க்கும் மட்டுமே தொடர்புண்டு. பளிங்கிற்கும் crystal க்கும் தொடர்பில்லை. பளிங்கு/படிகத்திற்கும் crystal க்கும் தொடர்பேற்படுத்தியது 70 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தவறான புரிதலால். பூதியல், வேதியல் தெரியாதவர்களால் இது ஏற்படுத்தப்பட்டது. இதைப் புரிந்துகொண்ட நாமினியும் தவறான இணைப்பை தொடரக்கூடாது. (ஐயா, வேதிப்பொறியியல், என் ஓதம். இதிற்றான் 55 ஆண்டுகள் குப்பை கொட்டினேன்.) எத்தனைநாள் இத்தவறை தூக்கிச் சுமக்கவேண்டும்?   

படிகமும் பளிங்கும் பளபளப்புத் தன்மையால் ஏற்பட்டவை. எல்லாக் crystalகளும் பளபளப்புக் காட்டவேண்டியதில்லை. விக்கிப்பீடியாவில் A crystal or crystalline solid is a solid material whose constituents (such as atoms, molecules, or ions) are arranged in a highly ordered microscopic structure, forming a crystal lattice that extends in all directions.[1][2] In addition, macroscopic single crystals are usually identifiable by their geometrical shape, consisting of flat faces with specific, characteristic orientations என்று வரையறை கொடுத்திருப்பர். அதையேற்றால், அணுக்கள்/. மூலக்கூறுகள்/ அயனிகள் ஒன்றுசேர்ந்து (வடிவியல் முறையில்) கட்டியமைத்துக் கட்டுமானஞ் செய்தது கட்டி என்று கொள்ளலாம்.இதைக் கட்டியென்று சொல்லாது வேறெப்படிச் சொல்வது? ஒருவேளை திண்மங்களையும் கட்டிகளையும் சிலர் குழப்பிக் கொள்ளலாம். எல்லாத் திண்மங்களும் கட்டிகளல்லவே?.

அன்புடன்,
இராம.கி.


No comments: