Tuesday, July 17, 2018

தமிழராண்டு

சிறகு இதழில் Jan 1, 2012 இல் ஆச்சாரி என்பாரெழுதிய “தமிழாண்டு திருவள்ளுவராண்டு)” என்ற கட்டுரையைத் (http://siragu.com/தமிழ்-ஆண்டு-திருவள்ளுவர/சிறகு) திருவாட்டி தேமொழி மின்தமிழ் மடற்குழுவில் முன்வரித்திருந்தார். அக்கட்டுரையில் வரும் கருத்துகள் சற்று பழமை யானவை; திருவள்ளுவராண்டு பற்றி வேறொரு மடலில் சொல்லுகிறேன். ஆனால் 60 ஆண்டு வட்டத்தைக் குறை சொல்லி 1921 பார்வையை இன்றுஞ் சொல்லுவது எவ்வளவு சரியாகும்? - என்று எனக்குத் தோன்றுகிறது.

”பிரபவமுதல் அட்சயவரை”யுள்ள 60 ஆண்டுப்பெயர்கள் ஆய்ந்துபார்த்தால் முற்றிலுஞ் சங்கதமில்லை. பெரும்பாலும் அவை பாகதமாகலாம். (அவற்றைச் ஸம்வத்ஸரங்கள் என்று அறியாதார் சொல்லியதும் ஆய்வில்லாத பேச்சு. வத்ஸரத்தின் மூலம் தெரியாது பேசுகிறார்.) தமிழரின் கால அளவைக்குள் இவை என்று நுழைந்தன என்றும் இதுகாலம் ஆயப்படவில்லை. ஆனால் பல்லவர் கல்வெட்டுக்களிலேயே இவை இருக்கின்றன. அதற்குமுன் எப்பொழுதெழுந்தன? - தெரியாது. அதேபொழுது 60 ஆண்டுவட்டம் தமிழருடையதல்ல என்பதும் சரியல்ல. வள்ளுவர் பெயரால் அமையும் தொடராண்டையும் 60 ஆண்டு வட்டத்தையும் ஏன் சிலர் குழப்பிக்கொள்கிறாரென்றும் தெரியவில்லை. தொடராண்டென்பது வரலாற்றுத் தேவை. 60 ஆண்டு வட்டமென்பது வானியற்கணக்கு. இரண்டின் பயன்பாடுகளும் வெவ்வேறு. வரலாற்றை வேண்டுவோர் வானியலைப் பழிக்கவேண்டியதில்லை. முதலில் வானியற் கணக்கைப் புரிந்து கொள்வோம்.

நாளென்பது புவியின் தன்னுருட்டுக் காலம். திங்களென்பது நிலவு புவியைச் சுற்றிவருங் காலம். (சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என்ற மாதங்கள் திங்கள் என்றே பயன்பாட்டில் வரும். இவற்றில் எவை தமிழ், எவை வடமொழி என்பது வேறு புலனம். இன்னோரிடத்திற் பார்ப்போம்.) ஞாயிறென்பது புவிச்சுற்று வலயத்தில் பன்னிரண்டில் ஒருபகுதி (மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்னும் ஞாயிற்று மாதங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்ஹம், கன்யா, துலா, விருச்சிகா, தனுஷ், மகர, கும்ப, மீன என வடமொழியில் வரும். ஓரைப்பெயர்களையே ஞாயிற்று மாதங்களாய்க் கொள்வர். கல்வெட்டுகலில் மேழ ஞாயிறு, சுறவ ஞாயிறென்றே வரும்.). ஆண்டென்பது புவியின் சுற்றுவலயக் காலம். இவற்றை ஏற்றுக்கொண்ட நாம் புவிவலயத்திற்குமேல் கால அளவைகள் இருக்கலாமென்பதை எப்பொழுது உணருவோம்? இற்றை வானியற்புரிதலின் படி

அறிவனின் (புதனின்) வலயக் காலம் = 0.24085 ஆண்டு
வெள்ளியின் வலயக் காலம் = 0.61521 ஆண்டு
செவ்வாயின் வலயக் காலம் = 1.88089 ஆண்டு
சீரசு (Cerus) குறுங்கோளின் வலயக் காலம் = 4.60200 ஆண்டு (செவ்வாய்-வியாழனுக்கிடையே சீரசின் இடத்தில் 1 கோள் என்றோ இருந்திருக்கலாம்; அன்றேல் உருவாகாது போயிருக்கலாம்.)
வியாழனின் வலயக் காலம் = 11.86223 ஆண்டு
காரியின் (சனியின்) வலயக் காலம் = 29.45772 ஆண்டு
உரானசின் வலயக் காலம் = 84.013 ஆண்டு.

இவ்வளவு நுணுகி கோள்களின் வலயக் காலங்களைப் பழந்தமிழர் வரையறுக்கவில்லை தான். ஆயினும் வியாழச்சுற்று ஏறத்தாழ 12 ஆண்டுகள் என்றும் காரிச்சுற்று ஏறத்தாழ 30 ஆண்டுகளென்றும், 5 வியாழவட்டம் 2 காரிவட்டங்களை ஒக்குமென்றும் புரிந்திருந்தார். ஏறத்தாழ 60 ஆண்டுகள் முடிந்தால் எல்லாக் கோள்களும் தொடக்கத்திலிருந்த உடு/விண்மீன் பின்புலத்திலேயே வந்துசேரும். இதைத் தான் இக்காலத்தில் 60 ஆம் ஆண்டு மணிவிழாக் கொண்டாட்டத்திற் தெரிவிக்கிறார். ஒருவர் பிறக்கும்பொழுது எந்தக் கோள்கள் எந்த வீட்டில் (வீடென்பது உடுப் பின்புலங் குறிக்கும்.) இருந்தனவோ, அதேநிலைக்கு ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப்பின் வந்துசேரும். இதை 2ஆம் முறை பிறந்ததுபோற் கருதி மணிவிழாக் கொண்டாடுவார். Getting back to the same recognized starry background. இது சிறந்த அவதானிப்பில்லையா? இதைக் குறைசொன்னால் எப்படி? 60 இன் முகன்மையை சுமேரியரும் பெரிதாய்க் கருதினார். அவர்செய்தது சரியெனில் நாம்செய்ததும் சரியே. (60 ஆண்டுகளை ஒட்டிய நாரதர் கதையைத் தூக்கியெறியுங்கள். நானும் ஒப்புவேன். ஆனால் 60 ஆண்டு கோள்நிலையைக் குறைசொல்வது குளித்து எஞ்சிய தொட்டிநீரோடு குட்டிப்பிள்ளையைச் சேர்த்தெறிவதை ஒக்கும்.)

60 ஆண்டை இன்னொரு விதமாயும் புரிந்துகொள்ள முடியும். புவிச்சுற்றை 12ஆல் வகுத்துவருவது 1 ஞாயிற்று மாதம். அதேபோல வியாழ வட்டத்தை 12ஆல் வகுத்துவருவது 1 புவியாண்டு. காரி வட்டத்தை 12ஆல் வகுத்து வருவது 2.5 புவியாண்டுகள். இதை முழு எண்ணாக்க வேண்டுமெனில் காரிவலய விட்டம்போல் இருமடங்கில் ஒரு கோள்: இன்னுந்தள்ளி இருப்பதாய் கொள்ளவேண்டும். (இது உரானசுக்கும் உட்பட்டதென்று உருவகிக்கலாம்.) இக் கற்பனைக்கோளை வட்டரை என்கலாம். (வட்டரை> வத்தரை>vaththara>vathsara. வடமொழிச் சொற்பிறப்பு இப்படித்தான் உள்ளது. வட்டாரம் என்ற சொற்பிறப்பைப் போன்றது வட்டரை.) கற்பனைக் கோடுகளைக் கருதுவது வானியலில் ஒன்றும் வியப்பல்ல.

இன்றைக்குப் புவிநடுவக்கோடு (பூமத்தியரேகை) என்கிறாரே, அதுவும் கற்பனைக்கோடே. வானியலறிந்த பழந்தமிழர் அதை இலங்கைக்கோடு என்றார். இற்றை இலங்கைத்தீவை அது குறிக்கவில்லை. புவியை இரண்டாய் ஈலுங்கோடு, இலக்குங்கோடு, பிரிக்குங்கோடு என்ற முறையில் அது இலங்கைக்கோடென அழைக்கப்பட்டது. இற்றை இலங்கைத்தீவிற்குந் தெற்கே அது இருக்கிறது. ஈழம்/இலங்கை என்ற 2 சொற்களுங்கூடத் தமிழ் தான். (ஈழம் தமிழ்; இலங்கை தமிழல்ல என்று பலர் எண்ணுகிறார்.) உண்மையில் நாவலந்தீவெனும் முகனைநிலத்திலிருந்து ஈல்ந்த, இல்ந்த/இலங்கிய/பிரிந்த, தீவு என்பதால் அது ஈழம்/இலங்கை என்ற பெயர்கொண்டது. இல்தல்/ஈல்தல் = பிரிதல் வினையைக் குறிக்கும்.) மாந்தவரலாற்றில் நம்மிலிருந்து பிரிந்தநிலத்தை எப்படியழைப்பர்? ஆங்கிலத்தில் எல்லாத் தீவுகளையும் குறிப்பதுபோல் island என்றெழுதி eeland என்று பலுக்குகிறாரே, அதனுள் நம்முடைய ஈழப் பொதுமைப் பொருள் அடங்கியுள்ளது. 

காரிக்கோளின் வேகத்திலேயே வட்டரைக்கோளுஞ் சுற்றுமானால், அச்சுற்றின் 12 இல் ஒரு பகுதி 5 ஆண்டுகள் எடுக்கும். வட்டரையின் முழு வலயக்காலம் 60 ஆண்டுகளாகும். இதேபோல் சீரசின் இடத்தில் ஒருகோள் இருந்திருக்குமானால் அது கதிரவனைச் சுற்றிவர எடுக்குங்காலமும் 5 ஆண்டுகளே. ஆக 12 சீரசாண்டுகளில் ஒரு வட்டரைக் காலம் முடிந்துவிடும். இப்பொழுது புவியாண்டிற்கு மேற்பட்ட கால அளவைகளைப் பார்ப்போம்.

5 புவியாண்டு = 1 சீரசு வட்டம்
12 புவியாண்டு = 1 வியாழ வட்டம்
60 புவியாண்டு = 1 வட்டரை = 2 காரி வட்டம் = 5 வியாழ வட்டம் = 12 சீரசு வட்டம்.

இவையெல்லாம் பக்கமடை (approximate) மதிப்புக்களே. approximate இலிருந்து விடாமுயற்சியில் accurate நோக்கி அறிவியல் நகர்ந்துகொண்டிருக்கிறதே? இந்த 60 ஆண்டுகளையும் தமிழிலழைக்க வழியுண்டு. [நான் அப்படி அழைக்கச் சொல்லவில்லை. முயன்றால் முடியுமென்று சொல்கிறேன்.] சேரலத்திலும் நம்மூர்த் தமிழ்க்கல்வெட்டிலும் வியாழன் எந்த ஓரையின் பின்புலத்தில் உள்ளது என்பதைக் கொண்டு மேழ வியாழம், மடங்கல் வியாழம், மீன வியாழம் என்றழைக்கும் முறை இருந்தது. இதேமுறையில் மேழ வட்டரை, மடங்கல் வட்டரை, மீன வட்டரை என்று இங்கே அழைக்கமுடியும். இந்த ஒவ்வொன்றிலும் (காட்டாக மேழவட்டரை) 5 புவியாண்டுகள் உள்ளன. அவற்றை முதலாம் மேழவட்டரை, 2-ஆம் மேழவட்டரை, 3-ஆம் மேழ வட்டரை, 4-ஆம் மேழவட்டரை, 5-ஆம் மேழவட்டரை என்றோ, அன்றேல் வட்டரை மாதங்களோடு (தொடக்கம், தொடர்ச்சி, நடுவம், நெருக்கம், இறுதி என்று பொருள்வரும்) குவி, பரி, இடை, அணு, இறு என்ற தமிழ் முன்னொட்டுக்களைச் சேர்த்தோ, 60 ஆண்டுத் தமிழ்ப்பெயரைச் சொல்லமுடியும். சங்கதத்திலும் இம்முறையுண்டு. தமிழ் முன்னொட்டுகளுக்கு இணையாய் அவர் ஸம், பரி, இடா, அநு, இட் என வைத்துக்கொண்டு ஸம் மேஷவத்ஸர, பரி மேஷவத்ஸர, இடா மேஷவத்ஸர, அணு மேஷவத்ஸர, இட் மேஷவத்சர என்றழைப்பார். இந்த ஸம்வத்ஸரங்களை ஆய்வில்லாதோர் தவறாய்ப் புரிந்துகொள்கிறார். ப்ரபவ...... அட்சய என்பவை இவை ஒவ்வொன்றிற்குமான பாகத/சங்கத விதப்புப்பெயர்கள் (சித்திரை,......பங்குனி போல.). அவற்றை விட்டுவிடுவது அப்படியொன்றுஞ் சரவலில்லை.                 

இனித் திருவள்ளுவராண்டிற்கு வருவோம். ஆச்சாரியின் கட்டுரை கீழ்க்கண்ட வரலாற்றுச் செய்திகளைச் சொல்கிறது.  "1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையிற்கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள். இவர்கள், “திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042)” என்று அந்நாளில் முடிவுசெய்தனர். தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.”

அறிஞர்களும் சான்றோர்களும் தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒருசாரார் இதைமறுத்து வழக்கமான சித்திரை முதல்நாளையே தமிழ்ப்புத்தாண்டாகப் பாவித்து வருகிறார். இது மொழிசார்ந்த புத்தாண்டல்ல. சமயஞ்சார்ந்த பழக்கமாய் இருக்கலாமென்று ”பொங்கலோ பொங்கல்” என்றதலைப்பில் http://valavu.blogspot.in/2007/01/blog-post.html இல் ஒரு கட்டுரை எழுதினேன். இதைத்தொடர்ந்து "தமிழ்ப் புத்தாண்டு" ங்கிற ஒன்னே கிடையாது!” என்ற தலைப்பில் நண்பர் KRS அவருடைய மாதவிப்பந்தல் வலைப்பதிவில் கட்டுரை எழுதினார். அதையும் படித்துப் பாருங்கள். ( http://madhavipanthal.blogspot.com/2012/04/tamilnewyear.html) சித்திரைப் பழக்கம் கி.பி.285க்கு அருகிற்றான் பெரும்பாலும் எழுந்திருக்கமுடியும். அதேபொழுது சித்திரை என்பது ஓரைகளின் முதல் விண்மீனாக இந்தக் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ள முடியும். வெவ்வேறு விண்மீன்கள் வெவ்வேறுய் காலங்களில் முதல்மீனாக இருந்துள்ளன. அவையெல்லாம் புத்தாண்டுத் தொடக்கக் குறிப்பென்று சொல்ல வாய்ப்பில்லை. தைத்திங்களின் சிறப்பு மக்கள்வாழ்வில் இன்றுமுள்ளது; சமயங் கலவாதும் உள்ளது. காலகாலமாய் அதைச்செய்துவந்து பண்பாட்டு எச்சங்களும் உண்டு.

தமிழன் என்ற முறையில் தைத்திங்களைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதில் எந்தத் தயக்கமும் வேண்டியதில்லை. இனித் திருவள்ளுவராண்டிற்கு அடுத்து வருவேன். 

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Bala G Thevar said...

Thank you, sir! I needed these information for a mathematical article about Unit circle.