Saturday, July 07, 2018

அணில்

இந்த இடுகையில் அணிலின் கதையை விளக்கப்போகிறேன் ஒருமுறை அணிலின் சொற்பிறப்பை விளக்குவதாய்ச் செள்>செண்> செணி>செணில்> சணில்>அணில் என்று திரு.நாக.கணேசன் இட்ட முன்னீட்டை அசை போட்டபோது இந்த எடுகை எழுந்தது. தான்கொண்ட தேற்றத்திற்குத் தக்க விந்தையாய்ச் சொற்களை வளைப்பது திரு.கணேசனின் வழக்கம். இவருக்கு எப்போதும் தான்சொல்லும் தேற்றங்களே முக்கியம்; சிக்கல்தரும் பட்டகைகளைத் (facts) தூக்கி வெளியேகடாச என்றுந் தயங்கமாட்டார். இப்படி இவர் தொடர்ந்துசெய்வதைப் பல்லாண்டுகள் பார்த்துவருகிறேன். முதலில் சில தமிழ் மடற்குழுக்களிலும், பின் ஆங்கில மடற்குழுக்களிலும் தன் ”கண்டுபிடிப்புக்களைப்” போடுவார். எக்கச்சக்க இணைய இணைப்புக்களை எப்போதும் தன்மடல்களில் இவர் விரவித் தெளிப்பதால், “படிக்கக் கிடைக்கிறதே? இவரில்லாவிடில் நாமெங்கே இவற்றைத் தெரிந்து கொள்வோம்?” என்ற சோம்பலிற் பலரும் இவரைக் கேள்வி கேட்பதில்லை. தவிர, கூறியது கூறலை இவர் விடாது செய்வார்.

நாலுந்தெரிந்த தமிழாய்வரென்று இவரைப் பலரும் எண்ணிக்கொள்வதால், இவர் பாடு கொண்டாட்டம். அந்நாளைய ஆய்வர் பெயர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பதிந்து, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இவர் சமைத்த விந்தைத் தேற்றங்களை அள்ளித் தெளிப்பார். ”எது பழையவருடையது, எது இவருடையது?” என்று நாம் பிரித்தறிவது பெரிதுங் கடினம். எப்பொழுதும் கழுவும் மீனில் நழுவும் மீனாய்த் திகழ்வார். இவர் கூற்றுக்களின் முறைமை, சரித்தன்மையைக் கேள்வி கேட்கப் பலரும் அணியமாவதில்லை. எங்களூர்ப் பக்கம் ”ஆலையிலா ஊருக்கு இலுப்பைப்பூச் சருக்கரை” என்பர். அப்படித்தான் ஆகிறது. (எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இலுப்பைக்குடி இருக்கிறது.) ஆழமான தமிழாய்வர் குறைந்து போன இந்நாளில் இவர்போன்றவர் ஆடுவது ஒய்யாரத் தாண்டவமாய்ப் பலருக்குத் தோன்றிவிடுகிறது.

(1 காதம் = 12மைல் என்பது இவரது கண்டுபிடிப்பு! கண்டுபிடிப்போடு மட்டுமின்றி கவுந்தியை அலாக்காய்த் தூக்கிக் கர்நாடகாவில் வைப்பார். பாவம் அந்த சமண மூதாட்டி! திருச்சித் திருவரங்கத்தை உருமாற்றிக் கர்நாடகச் சீரங்கப் பட்டினம் ஆக்குவார். சோழநாட்டு உறையூரை ”சூ, மந்திரக்காளி”யென இல்லாதது போல் ஆக்குவார். முடிவிற் சிலம்பைப் புதினமென அடித்துச் சொல்வார். உண்மையில் தென்புல அடிப்படையில் 1 காதமென்பது 4.167 மைல். வடபுல அடிப்படையில் 2.089 மைல். நண்பர் கணேசன் பெரும்பாலும் அருத்த சாற்றம் படித்ததில்லையென்றே தோன்றுகிறது. என்றுமே மூலம் (அர்த்த சாஸ்திரம், 2 ஆம் பாகம், 20 ஆம் அத்யாயம் “மாநாத்யக்ஷோ தேசகாலமானம்” என்று தொடங்கும் பகுதி) படிக்காதவரான இவர் குறைந்தது திரு. L.N.Rangarajan மொழிபெயர்த்து Penguin 1992 இல் வெளியிட்ட Kautilya - The Arthashastra என்ற நூலையாவது - பக்கம் 763/764 - படித்தால் காதம் பற்றிய தவற்றைப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. பரிந்துரைக்கிறேன்.)

இவருடைய சொற்பிறப்பு முறையை மறுக்கவேண்டுமெனில் ”உயிரொலிகள் எப்படி வாய்வழி பிறக்கும்? அவை திரிவதற்கான இயலுமைகளென்ன?” என்றுநாம் அறியவேண்டும். இவர் சொல்வதுபோல் ஏதொன்றும் கண்ட மேனிக்குத் தான்தோன்றியாய்த் திரிந்துவிடாது. எல்லாவற்றிற்கும் ஓர் ஒழுங்குமுறை, ஏரணம் வேண்டும். இம்மடலில் மெய்யொலிகளைப் பேசாது உயிரொலிகளை மட்டுமே பேச விழைகிறேன். ”பேச்சொலியியல்” என்று சி. சுப்பிரமணியன் எழுதி பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்ட நூலிலிருந்து 4 படங்களை இணைப்புக் கொடுக்கிறேன். வாசிப்போர் ஆழ்ந்து படங்களைக் கவனியுங்கள்.





இப்போது காற்றால் ஒலி எப்படி ஏற்படுகிறதென்று பார்ப்போம். ஒரு குழாயின்வழி காற்றோட்டம் செல்கிறதென வையுங்கள். குழாயின் குறுக்குச் செகுத்தம் (cross section), உட்பரப்பின் மேடுபள்ளம், சுவரின் சுரசுரப்பு ஆகியவை பொறுத்துக் காற்று, குழாயில் உராய்வதாலேயே ஒலியேற்படுகிறது. உராய்வு கூடின், ஒலி வெள்ளங் (volume) கூடும். குழாயின் தொடக்கத்திலிருந்து எந்தெந்த இடங்களில் குழாயோடு உராய்வு ஏற்படுகிறதென்பதைப் பொறுத்து ஒலி, பட்டிகை (pitch) போன்றவை மாறும். பொதுவாக வழவழப்பான குழாயில் ஒலி குறைந்தே எழும். இப்போது வாயொலிகளுக்கு வருவோம்.

பொதுவாய் நுரையீரலிலிருந்து மூக்கின் வழி வெளிப்படுங் காற்றை, வாய் வழியும் வெளியேற்ற முடியும். தொண்டையிலிருந்து வாய்க்குக் காற்று வருகையில், நாவின் தசைத்திரட்சி, உருட்சி, வளைவு ஆகியவற்றையும், மேலண்ணத்தையும் பொறுத்து வாயின் குறுக்குச்செகுத்தம் மாறுபடலாம். இம்மடலோடு கொடுத்துள்ள 4 படங்களில் முதற்படத்தில் வாய், நாக்கு, அண்ணம் ஆகியவற்றின் பெயர்விளக்கம் இருக்கிறது. இரண்டாவது படத்திலுள்ள தோற்றங்கள் முன்னுயிர் (front vowels), பின்னுயிர்களைப் (back vowels) பலுக்கையில் நாவளைவு எப்படி மேலண்ணத்தை நெருங்குமென்பதை விளக்குவதைக் காணலாம். ”நா எப்படி வளைகிறது? மேலண்ணத்தின் எப்பகுதியை நாவளைவு நெருங்குகிறது?. வாயிதழ்கள் எப்படி அமைகின்றன?” என்பவற்றைப் பொறுத்தே இவ்வுயிர்கள் அமையும். மூன்றாவது படம் ஒரு பட்டியலைத் தருகிறது. நாலாவது படம் இரண்டாம் படத்தை வேறுமுறையில் விளக்குகிறது.

மேலண்ண முன்பகுதியை (மண்டையோட்டின் மேல்தாடை எலும்பின் காரணமாய்) வல்லண்ணமென்றும் பின்பகுதியை (தொண்டையின் மேல்தசைப் பகுதியாதலால்) மெல்லண்ணமென்றுஞ் சொல்வர். இந்த அண்ணத்தில் மேல்தாடை எலும்பை ஒட்டிய பகுதியைத் தலையண்ணம் என்றும் அடுத்து வாய்க்குள் சற்று உள்தள்ளிய இடத்தை முன்னண்ணம் என்றும், மேலண்ண உச்சியை நடுவண்ணமென்றும், அடுத்து வாய்க்குள் உள்தள்ளியதைப் பின்னண்ணமென்றும், அதற்குந்தள்ளித் தொண்டையின் மேல்தசைப் பகுதியை ஒட்டியதைக் கடையண்ணமென்றும் ஐந்து வகையாய்க் குறிப்பர் (அதாவது தலை, முன், நடு, பின், கடை அண்ணங்கள்). இதேபோல நாவிலும், நுனிநா, முன்நா, நடுநா, பின்நா, கடைநா என்று 5 பகுதிகளுண்டு.

வளையக்கூடிய நாவை முற்றிலும் கிடையாக்கி, எந்த அண்ணத்தையும் தொடாது காற்றை வெளித்தள்ளுவதை அங்காத்தலென்பர். அடிப்படையான அகரவொலி என்பது அங்காத்தலிற் பிறக்கும். அடுத்து மேற்கூறிய நுனிநா, முன்நா, நடுநா, பின்நா, கடைநா ஆகியவற்றை பொருத்தினாற்போல் வளைவாக்கி, மேலண்ணத்தின் எப்பகுதியில் நாவுச்சி நெருங்குகிறதோ, அங்கு காற்றோட்டப் பரப்பு (இதைத் திறவை opening என்று சொல்லலாம்.) குறுகினால் (constricted), காற்றோட்டத்திற்குத் தடையேற்படும். இக்குறுக்கம் பின் அண்ணமும் பின்நாவும் பொருந்தும்படி அமைந்து, இதழ்கள் குவிந்தால் உகரவொலி தோன்றும். இக்குறுக்கம் முன்னண்ணமும் முன்நாவும் பொருந்தும்படியமைந்து இதழ்கள் விரிந்தால் இகரந்தோன்றும். உகரத்திற்கும் அகரத்திற்கும் நடுவே பின்நா எழுந்தால் ஒகரமும், குற்றியலுகரமும் பிறக்கும், இகரத்திற்கும் அகரத்திற்கும் நடுவே, முன்நா எழுந்தால் எகரமும், குற்றியலிகரமும் பிறக்கும். (2 ஆம் 4 ஆம் படங்களை நன்கு கூர்ந்து கவனியுங்கள்.)     

இவ்விதப் பலுக்கல் முறையால் தமிழில் உயிரினத் திரிவில் உகர முதலெழுத்து அகரமாயும், இன்னுந் திரிந்து இகரமாயும் திரிவதே பெரு வழக்காகும். அதேபோல ஊகாரம் ஆகாரமாயும், ஈகாரமாயும் திரியலாம். சில இடங்களில் உயிரினத் திரிவோடு மோனைத்திரிவும் ஏற்பட்டு, அகரம் எகரமாயும், ஒகரமாயும் திரிவதுண்டு. ஆனால் அங்காத்துப் பிறக்கும் அகரம் குறுக்குச் செகுத்த உகரமாயோ, இகரமாயோ ஆவது பெரிதுமரிது. இதே போல நடுவிலெழும் எகரம் அகரமாவதும், நடுவிலெழும் ஒகரம், அகரமாவதும் மிக அரிது. காட்டாகப் பருக்குதல் என்றசொல்லை எடுத்துக்கொள்ளுங்கள், இது பேச்சுவழக்கில் பெருக்குதலாகலாம். அதே போல திருநெல்வேலிப்பக்கம் கட்டுதல் என்பது கெட்டுதலாகும்; பலம் பெலமாகும். ஆனால் தலைகீழ் முறையாய் எகரம் அகரமாகிப் பெருக்குதல்> பருக்குதல் ஆனதாயும், கெட்டுதல்>கட்டுதல் என்றும், பெலம்>பலம் என்றும் அமைந்ததாய் யாருஞ் சொல்லி நான் எங்கும் கேள்விப்பட்டதில்லை. தமிழரின் சொற்பலுக்கலுக்கு மாறாய், செணில்>சணில் என்று நா.கணேசன் கூறுவது பேச்சொலியியலுக்கே புறம்பானது. இயல்பான முறையில் அப்படித் தமிழ்ச்சொற்கள் எழுவதை நான் பார்த்ததில்லை.

இன்னொரு விதியையும் திரு.கணேசன் சொல்லிப்போவார். ச், ந், ம் ஆகிய மெய்யொலிகள் முதலிலிருந்தால் அவை மறைந்து உயிரொலிகளாய்ப் பலுக்குவது தமிழருக்கு இயற்கை என்பார். இவர் சொல்வதுபோல் முதற்குறை மட்டுமே சொல்லாக்க வழியென்பது ஒருபக்கப் பார்வை. இதற்குக் காட்டாய் இங்கே சணிலென்ற சொல்லின் முதற் சகர மெய்யெழுத்து அழிந்து அணில் என்ற சொல் ஏற்பட்டதென்பார். ஆனால் சணிலு என்று இவர்காட்டும் சொல்மட்டும் துளுவிலில்லை தணிலு என்ற சொலொன்றும் அங்கே அணிலுக்குச் சொல்லப்படும். சணிலை முதற்சொல்லாய்க் காட்டினால் பின் துளுவின் தணிலுக்கு என்னசெய்வது? ஒருவேளை சகரம் தகரமாகுமோ? பொதுவாய்த் தகரம் சகரமாவதையே நான் கேள்விப்பட்டுள்ளேன். மிகவும் வாய்ப்பாகத் தணிலு என்ற சொல்லின் பட்டகையை திரு. நா.க. தன் முன்மொழிவில் மறைத்துவிட்டார். இடைஞ்சலான பட்டகைகளை மூடிமறைப்பது அவருக்கு எப்போதுமே வாடிக்கை. தவிர, பழங்கன்னடத்தில் சணில் உள்ளதென இவர் சொல்கிறார். ஆனாற் சான்றெதுவும் காட்டவில்லை. சணிலு என்ற சொல்லும் துளு, கன்னடத்தில் எப்பொழுதிலிருந்து புழக்கத்திலிருக்கிறதென்றும் இவர் விளக்கவில்லை. எல்லாமே ஒரு வகையான “குண்ட்ஸாகவே” இவருக்கு ஆகிறது. இவருக்குத் தோன்றியதைப் பந்தெனக் கருதி அடித்துவிட்டார். நாம்தான் இனிப் பந்தைத் தேடிப்போய் மறுபக்கஞ் செலுத்தவேண்டும்.

இதற்குமாறாய் முதல்மிகை என்பதும் சொல்லாக்கத்தில் ஒரு வழியே. தமிழ் அணிலிருந்து சகரஞ்சேர்த்து துளுவில் சணிலு என்று சொல்லக்கூடாதோ? (இத்தனைக்கும் ’அணில்’ பெரும்பாணாற்றுப்படை 85, குறுந்தொகை 41-4, 49-1, புறநானூறு 307-4 என்ற வரிகளிலுண்டு. மேலும் வரிப்புறம், வெளில் என்ற சொற்களும் தமிழிலுண்டு. அணிலைக் குறித்த வெளில் என்ற சொல் (பட்.172, மலை.326, நற் 12-3, பதி.84-3, கலி 97-16, அக.12-7, 109,6, புற.44-3, 127-3, 220-4.) போன்றவற்றிலுண்டு. வெளில் கன்னடம், துளுவில் வருகின்றதா, என்ன? வெளிலென்ற தமிழ்ச்சொல் இங்கேயே இருக்கும்போது சணிலு என்ற துளுச்சொல்லைத் தமிழிற் கடன்வாங்கிச் சகரந்தொலைத்து ஏன் அணிலாக்க வேண்டும்? உறுத்தை என்ற இன்னொரு சொல்கூடத் தமிழிலுண்டு. (இதன் இணைச்சொற்கள் தெலுங்கு, கன்னடத்திலுண்டு.) ஆனால் இது சங்க இலக்கியத்தில் பயிலவில்லை. ஆய்வுசெய்வோர் இத்தனை அணிற் சொற்களையும் ஒருசேரப் பார்க்கவேண்டாமா? வெறுமே சணிலு> அணில் என்று ஓசையைப் பார்த்து தேற்றஞ் சொல்வதில் என்ன ஞாயம் இருக்கிறது?

அதுவென்னவோ தெரியவில்லை. நா.கணேசன் மாதிரி ஆய்வாளர் ஒன்றை ஞாயமென்றும் இன்னொன்றை மறுப்பதற்கும் என்றுமே காரணஞ் சொல்வதில்லை. இன்னொரு சிக்கலும் திரு. நா.கணேசன் முறையிலுண்டு. பெயர்ச்சொற்கள் தங்களின் பொருண்மையால் எப்படி எழுகின்றன? செய்பொருள் என்பதாலா? செயப்படு பொருளாலா? செய்கருவியாலா? செய்தொழிலாலா? செய்யும் வினையென்ன? - என்று எதையும் விளக்காது, திரு.நா.கணேசன் போன்றோர் ”முதலில் இந்தவொலி, பிறகு இன்னொரு ஒலி, அப்புறம் வேறொருவொலி” என “அத்தரி பாச்சா” வேலைகாட்டுகிறாரே ஒழிய, பொருட் தொடர்பைச் காட்டுவதில்லை. பாவாணர்வழி வந்தோருக்கு பொருளே முதற் கைகாட்டி.பொருளைக் கைப்பிடித்துச் செல்லாததாற்றான், இந்தாலசிக்காரர் (Indologists) பெரும்பாலும் தடுமாறுகிறார். திரு.நா.க அடிப்படையில் பாதி இந்தாலசிக்காராரே.. வேண்டும் என்கிறபோது பாவாணர் பக்கம் வேண்டாதபோது இந்தாலசி பக்கமெனத் தடுமாறுவார். 

சரி அணில் என்ற சொல் எப்படியெழுந்திருக்கலாம்? அணிலைப்போல் மயில், குயில் (>குகில்>கொகில்>கோகிலம்) குக்கில் (= செம்போத்து) என்ற சொற்களுமுண்டு. இல்லெனும் ஈற்றிற்கு பெரும்பாலும் இருப்பது (being) என்றே பொருளுண்டு. மையாய் (கருப்பாய்) இருப்பது மயில். குய்யிக் கூவுவது குயில்; குக்கி குரலெழுப்புவது குக்கில். இதே போக்கிற்றான் அணிலுக்குப் பொருள்காண முடியும். அண்டுதலென்பது ஒட்டுதல். அண்டி/அண்டு என்பது ஒட்டிக்கிடக்கும் வால். முந்திரிப்பழத்தின் கீழே ஒட்டியிருக்கும் பருப்பு அண்டிப்பருப்பு. மர முந்திரிக் கொட்டைக்கு அண்டிமாங் கொட்டை என்று பெயர். அண்டியென்பது மலையாளத்தில் பொருள் நீட்சி பெற்று, வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான நிலக்கடலையைக் கப்பலண்டி என்பர். அண்டி/அண்டு தள்ளுகை என்பது ஆசனவாயின் உட்பகுதி வெளித்தள்ளி குறுவால் போல் நீட்டிக் கொண்டிருத்தல். பெண்ணுறுப்பின் சதை நழுவி வெளியே வந்தாலும் அதையும் அண்டு தள்ளுகை என்றே சொல்வர். அண்டின் முழு மெல்லின ஆக்கம் அண்ணு. அதன் பொருளும் வால் தான். அண்ணு+இல்= அண்ணில்>அணில்= வாலுயிரி. அவ்வளவுதான் அணிலின் பெயர்
   .   
அணிலுக்கு இன்னொரு பெயர் வெளில். இங்கேயும் வெளியே தொங்குவதால் வாலுக்கு ’வெள்’ ஆகுபெயராயிற்று. வெள்+இல்= வெள்ளில்>வெளில். சூடாமணி நிகண்டின் படி விலங்கின் வாலுக்கு உள்ள மற்ற பெயர்கள் கூலம், வேசகம், தோகை, இலாங்கூலம், வாலதி என்பதாகும் (இவற்றோடு நா,க. சொல்லும் செண் என்ற சொல் பட்டியல் இடப்படவில்லை.) தோகையைக் குறிக்கும் மற்ற சொற்களும் வாலைக் குறிக்கலாம். இன்னொரு சொல் உறுத்தை. இதன் விளக்கம் நீளமானது. உறுதல் = தொடுதல், ஒட்டுதல். உறுத்தல்= தொடுவித்தல். ஒட்டுவித்தல். உறு= மிகுதி; உறுத்து= ஒட்டிய பகுதி எனவே சுற்றிவளைத்து இதுவும் வாலையே குறித்தது. உறுத்தை= வாலுள்ள உயிரி. அடுத்த சொல் வரிப்புறம்= புறத்தே வரிகொண்ட உயிரி. இங்கே அணிலின் பல்வேறு வகைகளைக் குறிப்பிடவேண்டும். இந்தியாவில் அணில் தெற்குப்பக்கத்தில் கிளைத்ததாகவே விலங்கியலார் குறிப்பிடுகிறார். தெற்கு அணிலுக்கு மட்டுமே 3 கோடுகள் முதுகிலுண்டு. வடக்கு அணில்களுக்கு கோடுகள் இல்லாமலும், 5 கோடுகள் உள்ளதும் உண்டு. அணில்கள் பெரிதும் குளிருள்ள நாடுகளில் தோன்றியவையல்ல. அவை வெப்பநாடுகளிற் தோன்றிச் சற்று குளிருள்ள நாடுகளுக்கு போனவையென்றே இற்றை அறிவியல் சொல்கிறது. இந்த உயிரிகள் எந்த நாட்டில் முதலிற்றோன்றின எனபதில் இன்றும் தீர்வு ஏற்படவில்லை.

அப்புறம் அணில் சங்கதப்பெயர்களைச் சொல்லாவிட்டால் சிலருக்கு இருப்புக் கொள்ளாது. சங்கதத்தில் விருட்சசாயிகா, ரோமாஸி, விருட்சமார்க்கடிகா, சாகாம்ருகா, கலாந்தகா என்று 5 பெயர்களைச் சொல்வார். இவற்றில் ஒன்றுகூட முதற்பெயரில்லை. குளிர்நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவருக்கு இவ்வுயிரிகளைப் பார்த்த மாத்திரத்தில் நீண்ட பெயராகவே சொல்லத்தெரிந்தது. மரஞ் சார்ந்த உயிரி, ரோமங்கொண்ட உயிரி, மரக்குரங்கு போன்ற உயிரி என்பவை அணிலின் முதற்பெயர்களாய் இருக்க வழியில்லை. கலாந்தகா என்பது பாகதம், பாலியில் உள்ள சொல்லாகும். சிங்களத்திற் கூட கலாதயா என்று இச்சொல் அமையும். கலவம்>கலாம் என்ற சொல் தமிழில் தோகையைக் குறிக்கும். தோகையும், வாலைக் குறிக்குமென்பது மேலே சூடாமணி நிகண்டால் புலப்படும். தோகையைத் தன் அந்தகத்தில் உடைய உயிரி கலாந்தகா என்றாகும். (மயிலும் ஓர் இந்தியப் பறவை தான். அதன் சங்கதப் பெயர்களும் மொழிபெயர்ப்புக்கள் தான்.) கீழே சங்கதப்பெயர்களை நாகரி எழுத்திலும், எழுத்துபெயர்ப்பிலும் தந்துள்ளேன்.
   , 
वृक्षशायिका vRkSazAyikA   f..         squirrel மரத்திலிருக்கும் உயிரி
रोमशी          romazI         . f.         squirrel ரோமங் கொண்ட உயிரி
वृक्षमर्कटिका vRkSamarkaTikA f. squirrel மரக்குரங்கு போன்ற உயிரி
शाखामृग         zAkhAmRga m.         squirrel கிளைமிருக உயிரி
कलन्दक          kalandaka m.          squirrel
kaladayA - singalese
gilaharee, gilahari in Hindi, chikura, Chamarapuchchha, camarapuccha

இன்னும் ஒரு கருத்துண்டு. அதை ஏற்கப் பலருந் தயங்குவர். ஆங்கிலத்தில் squirrel என்ற சொல்லிற்குச் சொற்பிறப்பு சொல்லும் போது ”The name squirrel comes from the Greek skiouros, which means shadow-tailed, because the tail is big enough to shade the rest of the animal.”. That word "squirrel", first attested in 1327, comes from the Anglo-Norman esquirel which is from the Old French escurel, the reflex of a Latin word sciurus. This Latin word was borrowed from the Ancient Greek word σκίουρος, skiouros, which means shadow-tailed, referring to the bushy appendage possessed by many of its members.]. The native Old English word for the squirrel, ācweorna, survived only into Middle English (as aquerne) before being replaced. The Old English word is of Common Germanic origin, cognates of which are still used in other Germanic languages, including the German Eichhörnchen (diminutive of Eichhorn, which is not as frequently used), the Norwegian ikorn/ekorn, the Dutch eekhoorn, the Swedish ekorre and the Danish egern” என்று ஆங்கில விக்கிப்பீடியா சொல்லும்.

அணிலின் பின்னால் வாலிருந்தது அது உயர்ந்திருந்தால் அணிலுக்கே நிழல் கொடுத்தது. அப்படியொரு காரணத்தால் squirrel என்ற பெயர் ஏற்பட்டதென்று மேலே சொல்வது எனக்கு வேடிக்கையாயும் பொருந்தக் கூறுவதாயும் உள்ளது. எந்த அணிலின் வால் நிழல்தரும் அளவிற்குநீண்டு பின் தூக்கி நின்றது? கண்ணாற்பார்த்தால் அணில்வால் அழகாயிருப்பதையும், அதையொட்டிப் பெயர் அமையலாம் என்பதையும் நான் ஏற்கிறேன். (சிகையையொட்டிச் சிங்கப்பெயர் அமைந்ததே?). ஆனால் ஏற்கனவே குறுகிய சொல்லை இப்படி இன்னும் உடைத்துச் சுற்றிவளைத்துப் பொருள் சொல்வதைக் காட்டிலும். squirrel என்ற சொல் அற்றை இந்தியாவிலிருந்து அப்படியே கடன்வாங்கி ஸகரவொட்டுப் பெற்ற சொல் என்பதே எனக்குப் பொருத்தமாயுள்ளது.

ஒருவேளை கிரேக்கர் இவ்வுயிரியைத் தென்னிந்தியத் (தமிழகத்) துறைகலில் இருந்து தம் கலங்களில் பயணஞ்செய்யும் உயிரியாய்க் (stowaway) கொண்டு போயிருக்கலாம். பின் இரோப் எங்கும் இது பரவியிருக்கலாம் என்பது என்னால் நம்பக்கூடிய கதையாய்த் தெரிகிறது. ஏனெனில் குரலென்பது தமிழில் தோகையைக் குறிக்குஞ் சொல்லாகும். நெற்கதிற்றோகை கூடக் குரலென்று சொல்லப்படும். எல்லாக் கதிர்களும் குரல்களே. வாலுக்கும் குரலென்று உவமப்பெயர் சொல்லலாம். கிரேக்கமுறைப்படி ஸகரஞ் சேர்த்து squirrel என்றாயிற்று என்பது எனக்கு நம்புங்கதையாய்த் தெரிகிறது. குறிப்பாகக் qui என்ற எழுத்துவரிசை, rrel/ரல் என்றொலித்து இரு irr போட்டு எழுதும் முறை எனக்கு வியப்பைத் தருகிறது. எங்கோவொரு தொடர்புள்ளது? ஆனால் என்னால் அழுந்தச் சொல்லமுடியவில்லை. என்றை வியக்கமட்டும் வைக்கிறது.

அணிலின் கதை அவ்வளவு தான்..
             .
அன்புடன்,
இராம.கி.

No comments: