Saturday, March 07, 2020

தூது

”தூது எனும் சொல் தமிழ் சொல் அல்ல, சமசுகிருதம் என கவிஞர் யுகபாரதி சொல்கிறார். சங்க இலக்கியத்தில் தூது எனும் சொல்லே அல்ல எனச் சொல்கிறார். இது சரிங்களா ? தூது என்பதற்கு இணையான தமிழ் சொல் என்னவென்று சொல்ல முடியுங்களா ?” என்று திசம்பர் 20, 2019 இல்
Subash VN என்பார் தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்டிருந்தார், அவருக்கு நானெழுதிய விடை இது

---------------------------------

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற 7 சுரங்களில் துத்தமென்ற சொல்லுக்கு உயர்ந்ததென்ற பொருளையே தமிழிசை வித்தகர் வீ.பா.க.சு காட்டுவார் (துல்லெனும் வேரில் பிறந்த துத்தல், உயர்த்துதலைக் குறிக்கும்.) துத்தியது துத்தம். துத்தின் விரிவான துருத்து என்பதும் உயர்ந்ததை, வெளிவந்ததைக் குறிப்பதே. துத்து, துருத்து என்பதில் இருந்து பல்வேறு சொற்கள் கிளைக்கும். துருத்தி (bellows) துத்திய குரல் = உயர்ந்த குரல் என்பதில் குரலை உள்ளார்ந்து வைத்து வெறுமே துத்தம் என்பது ஏற்புடைத்தே. உயர்ந்தது என்பதோடு 'முன்தள்ளிப் பெருத்தது' என்றும் துத்தத்திற்குப் பொருளுண்டு. துத்துக் கோல் = என்பது நெசவுப்பா தளராது இருக்கும்பொருட்டு நூற் பிணையல்களிடையே நெய்வோர் செலுத்துங் கழியாகும். (rod used by the weavers to press the weft compactly)

துதம் = துதி = துருத்தி; தமிழில் துதி, நுதி, நுனி, முனி என்பன முன் இருப்பவற்றைக் குறிக்கும். யானையில் துதிக்கை ஒரு முன்னிருக்கும் கை தான். துதுத்தல் = முன்னிருத்தல். துதுத்தது துதியாகும். துதி என்பது முள்ளையும் குறிக்கும். துது>தூதுளை. தூதுவளை/தூதுளம்>தூதுளை = முள் உள்ள இலைகளைக் கொண்ட கொடிவகை. துதி= இறைவனை முன்வைத்துப் போற்றும் பாட்டு. துந்தி = முன்வந்த வயிறு. துந்தி> தொந்தியும் ஆகும். துங்கம் = உயர்ச்சி, நுனி.அரசனுக்காக முன்வந்து செய்தி அறிவிப்போனும், அரசனை நிகராளுபவனும், அரசனின் ஏவலாளனும், அரசனின் ஒற்றனும் தூதன் எனப்படுவார். தூது என்பது குறைந்தது 2700 ஆண்டுகள் பழகிய சொல். இதைப்போய்ச் சங்கதம் என்பது தவறு.

ஓதல் பகையே தூது இவை பிரிவே - பொருள். அகத்:25
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன - பொருள். அகத்:26
தூது இடையிட்ட வகையினானும் - பொருள். அகத்:41/15
தூது முனிவு இன்மை துஞ்சி சேர்தல் - பொருள். மெய்ப்:23/3
தாமே தூதுவர் ஆகலும் உரித்தே - பொருள். கள:28/2
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. - குறள் 681
நாடி நின் தூது ஆடி, துறை செல்லாள், ஊரவர்
ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ கலித்தொகை 72, 13-14
தொட்டுவிடுத் தேன்அவனைத் தூதுபிற சொல்லி - சீவக 1876

சங்கதம் தூதைப் பழகியதால் அது சங்கதச்சொல் ஆகிவிடாது. முன்வருதல் பொருள் அங்கு சொல்லப்படவில்லை. தவிர, ஒருவேளை தூ என்ற தாதுவிலிருந்து எழுந்திருக்கலாம் என்று இரண்டுங் கெட்டானாய்த் தான் சொல்லியிருப்பர்.

http://sanskritdictionary.com/?q=d%C5%ABta என்ற பதிவிலிருந்து கீழே கொடுத்துள்ளேன்.
dūta m. (prob. fr.1. du-; see dūr/a-) a messenger, envoy, ambassador, negotiator etc. (taya- Nom. P. yati-,to employ as messenger or ambassador, ) View this entry on the original dictionary page scan.

நம்மூரில் சிந்தையிலேயே அடிமைத்தனம் கலந்துவிட்டது போலும். எதையும் ஆழப் படிக்காது வெறுமே கேள்வியை (hearsay) வைத்துக் கருத்துச் சொல்வது நம்மூரில் அதிகரித்து விட்டது. படிப்பு மிகக் குறைந்துவிட்டது.

2 comments:

Anonymous said...

அரிய விளக்கம் ஐயா.மிக்க நன்றி.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

வழக்கம் போல அடித்துப் பிரித்து விட்டீர்கள் ஐயா! மிக்க நன்றி! இப்படி ஒரு விளக்கத்தை உங்களிடமிருந்து பெறக் காரணமாய் அமைந்த அருமை நண்பர் சுபாஷ் அவர்களுக்கும் நன்றி!