Thursday, January 09, 2020

பாசண்டச் சாத்தன் - 1

சிலப்பதிகாரக் காப்பியம் என்பது சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தது என்று கால காலமாய் நமக்குப் பல தமிழாசிரியர் சொல்லி வந்துள்ளார். அந்த வாசிப்பின் காரணமாய்ப் பல வரலாற்றாசிரியரும் அப்படியே எடுத்துக் கொள்கிறார். இருவர் கூற்றையும் மறுத்து,  ”சிலப்பதிகாரம் என்பது சங்க காலத்தைச் சேர்ந்ததே” என்று என் “சிலமபின் காலம்” நூலில் நிறுவி யிருப்பேன். முடிந்தால் இத்தொடரைப் படிக்குமுன் அதை வாங்கிப் படியுங்கள். இப்போது சிலப்பதிகாரத்தை ஒட்டிப்  ”பாசாண்டச் சாத்தன் என்பவன் யார்?” எனும் கேள்வியை ஆய முற்படுகிறேன். பாசண்டச் சாத்தன் தொடர்பாய் ஐயனார் கோயில் பற்றியும் இத்தொடரில் பேசுகிறேன்.  சிவ, விண்ணவ நெறிகளின் இன்னொரு மருங்கில் ஐயனார் வழிபாடு தமிழகத்தில் இன்றும் இருந்துகொண்டு தான் வருகிறது.

இன்னொரு பக்கம், கீழடி ஆய்வில் இதுவரை எந்தச் சமயச் சின்னங்களும் கிடைக்கவில்லை என்ற பட்டகையை (fact) வைத்துக்கொண்டு ஏதோவொரு முன்முடிவால் உந்தப்பட்டு, பொ.உ.மு. 600- பொ.உ. 250 க்கு இடையில் சங்க காலத் தமிழகத்தில்  சமயநெறிகளே இல்லெனச் சில திராவிடச் சிந்தனையர் சொல்ல முற்படுகிறார்,  ஆழ்ந்த ஆய்வாளர் அப்படிச் சொல்ல மாட்டார். சம காலத்து வடபுலம் போலவே தமிழ்க் குமுகாயத்திலும் சங்க காலத்தில் பல்வேறு சிந்தனைகள், குறிப்பாக உலகாய்தம், வேதநெறி,  (அற்றுவிகம்/ஆசீவிகம், செயினம், புத்தம் என்ற) வேதமறுப்புச் சமண நெறிகள் எனப் பலவும் விரவியிருந்தன.  நம்மூரைச் சேர்ந்த சிவ, விண்ணவ (இதில் கண்ணன், வாலியோன் வழிபாடுகள் உண்டு) இந்திர/வேந்தன் வழிபாடுகளும் பெருத்த அளவில் இருந்தன.

இந்நெறிகளின் தனித்த விரவல்க:ள் எவ்வளவு என்று குறிப்பிட்டுச் சொல்வது கடினம். (சங்க காலத்தில் நம்மூர்ச் சமயங்கள் வேதநெறியோடு சமதானம் செய்துகொள்ளாது, தனித்தே தம்நிலைகளை இருத்திக் கொண்டன.) சிலம்பில் பல்வேறு கோட்டங்கள், கோயில்களும், கூடவே பள்ளி, அடை, தானம் போன்றவையும் சொல்லப்படும்.  புகார்க் காண்டம் இந்திரவிழவு ஊரெடுத்த காதையில்  (141-  145) ஆன் வரிகள் இந்திரன் சார்ந்த வச்சிரம், வெள்யானை, கற்பகத்தரு  என்ற 3 கோட்டங்களையும் சொல்லும்.  அதே காதை 169-173 ஆம் வரிகளில் பிறவா யாக்கைப் பெரியோன் (சிவன்), செவ்வேள் (முருகன்), வாலியோன், நீலமேனி நெடியோன் (கண்ணன்), இந்திரன் ஆகியோரின் கோயில்களும் சொல்லப்படும். 

இவற்றை அடுத்து 179-180 ஆம் வரிகளில் ”அறவோர் பள்ளி” எனச் செயினப் பள்ளியும் (இதைப் புத்தப் பள்ளி என்பாருமுண்டு.), ”அறன் ஓம்பு அடை” எனப் புத்த தருமம் ஓம்பும் மடமும் (இதைச் செயின மடம் என்பாருமுண்டு), ”புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானம்” என  அற்றுவிகத் (ஆசீவிகத்) தானமும் குறிக்கப்படும். புண்ணியம் = அறத்தால் மேவும் நிலை.  (இச்சொல்  வடபால் மொழிகளிலும் உண்டு. அதேபோது வேறு இந்தையிரோப்பிய மொழிகளில் இச்சொல் கிடையாது. பெரும்பாலும் ”புண்ணியம்” என்ற சொல் தெற்கில் தொடங்கி வடக்கு சென்றதாகவே கருதமுடியும்.) இதுபோக, வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கால் நின்ற மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம் எனும் 5 மன்றங்களும் புகாரில் இருந்ததை இந்திரவிழவு ஊரெடுத்த காதை சொல்லும்.
   
[சதுக்கபூதம் பற்றி வரலாற்றாசிரியர் திரு. ந.சுப்பிரமணியன், தன் "Sangam Polity" நூலில், (Ennes Publications, Udmalpet 642128, Third ed 1996.) ஓர் அரிய ஊகத்தைக் கூறுவார்: "It is true that 'Ganesa' is not particularly mentioned either by that name or any of its modern equivalents in the Sangam Literature; but it seems quite proper to trace him back to Perum Chadukka bhUtham which punished all offenders and had a pAsam or rope in its hand; it gave 'Vigna' to those who offended and protected from ' Vigna' those who behaved; so it had 'pAsahasta' and 'Vignaraja'; it was the demon on the cross-road distinguished from the gods who were housed in temples. Vignesvara, too, punished the offenders and protected the good; he has a pAsam in His hands and He is generally on the cross-road. The Demon on the cross-road was ;'BhUta nAtan', a literal equivalent of 'Bhuta' or 'GaNa' nAtan or 'Ganapati'. The elephant face in fact indicates a South Indian origin, and the pot-belly suggests an ancestry traceable back to Demons."]

மேற்சொன்னவை போக, கனாத்திறமுரைத்த காதையில்  தேவந்தி கதை சொல்லுமிடத்திலும் பல்வேறு கோட்டங்கள் சொல்லப்படும். முதலில் கனாத்திறமுரைத்த காதையில் வரும் குறுங்கதையைப் பார்ப்போம். மாலதி என்ற பார்ப்பனி  தன் மாற்றாள் மகவுக்கு  பாலலளிக்கையில், பால் விக்கிப் பாலகன் சோர்ந்துவிட, “என்மேல் படாத சொற்களை மாற்றாள் வீசி, ஏற்பவற்றைக் கூறாள்” என மாலதி ஏங்கி சோர்ந்த மகவை எடுத்துக் கொண்டு, பல்வேறு கோட்டங்களில் பார்ப்பானோடு ஏறியிறங்கி. ”தெய்வங்களே! எம்முறும் நோய் தீர்ம்” என  எல்லாக் கோட்டங்களிலும் மேவிப் புகுந்து, முடிவில், பாசாண்டச் சாத்தனின் கீழ் பாடு கிடப்பாள்.   பாடு = நோன்பில் படுதல்.. பாடு கிடத்தல் = நோன்பில் பட்டுக்கிடத்தல்.

”அமரர்தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம்,
புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம், பகல்வாயில்
உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க்கோட்டம். .வேற்கோட்டம்,
வச்சிரக் கோட்டம், புறம்பனையான் வாழ் கோட்டம்,
நிக்கந்தன் கோட்டம் , நிலாக் கோட்டம், புக்கு எங்கும் 
தேவிர்காள் எம்முறுநோய் தீர்மென்று மேவியோர்
பாசண்ட சாத்தற்கு பாடுகிடந்தாளுக்கு"

என்று சிலம்பு புகார் 9/9-15 இல் வெவ்வேறு கோட்டங்களை விவரிக்கும்.  இவற்றில் தருக் கோட்டம்,, வச்சிரக் கோட்டம், வெள்யானைக் கோட்டம் என்பவை முன் சொன்னவையே.   வெள்ளை நாகர் கோட்டம் என்பது வாலியோன் கோட்டம். (வாலியோன் வழிபாடு தமிழகத்தில் இன்றில்லை. ஆனால் ஒடியாவில் தொடர்கிறது.) ஊர்க்கோட்டம் = ஊரின் நடுநாயகச் சிவன் கோட்டம், வேற்கோட்டம் = முருகன் கோட்டம். பெரும்பாலும் இங்கு வேல் குத்திட்டு நிற்கும். அண்மைக் காலத்தில் இன்றிலிருந்து 50/70 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு அருகிலுள்ள பழமுதிர் சோலையும் இப்படியே தான் ஒரு வேற்கோட்டமாய் இருக்கும். நிக்கந்தன் கோட்டம் = அறவோர் பள்ளி. மகாவீரருக்கு முன்,  பார்சுவரைப் பின்பற்றியவர் நிக்கந்தராவர். அற்றுவிகரும் கூட நிக்கந்தரில் உருவானவரே. கந்து = பிறப்பு இறப்புச் சுழற்சியில் கட்டுண்டிருப்பது. இச் சுழற்சியை நிறுத்த வைக்கும் நெறி நிக்கந்த நெறியாம்.   
அடுத்து, புறம்பு என்பது ஊரின் வெளிப்புறத்தைக் குறிக்கும். இன்றும் ஊருக்கு வெளியே, பெரும்பாலும் கண்மாய்க் கரையில், ஐயனார் கோயில் கொள்வார். (சிலவூர்களில் மடைகளுக்கு அருகிலும்,  நீர்நிலைகளுக்கு அருகிலும் உண்டு,) தவிர பிறப்பு இறப்புச் சுழற்சியை புறங்கண்ட நிலை புறம்பாகும். அதை அணைவோன் புறம்பனையான் (= ஐயனார்) எனப் படுவான். பெரும்பாலும்  இதை அற்றுவிகக் கோட்டம் என்பதே சரியாகத் தோன்றுகிறது. அற்றுவிகம்= பிறப்பிறப்பு சுழற்சியை அற்றுவிக்கும் (= இல்லாது செய்விக்கும்) நெறி. (நான் ஆசு + ஈவு + அகம் = ஆசீவகம் என்ற விளக்கத்தை ஏற்பவனில்லை.) கனாத்திறமுரைத்த காதையில் புத்த கோட்டமும், மணிவண்ணன் கோட்டமும் சொல்லப்படாது, நிலவு, சூரியக் கோட்டங்கள் குறிக்கப்படும். இக்கோட்ட விவரிப்புகளைக் காண்கையில்  ஐயனார் தான் பாசண்டச் சாத்தனா? ஐயனார் யார்? - என்ற கேள்விகள் எழும்.  சாத்தன் என்ற தொடரை 2018 இல் என் வலைப்பதிவில் எழுதினேன். அவற்றின்  சுட்டிகள் கீழ்வருமாறு. 

https://valavu.blogspot.com/2018/07/1.html
https://valavu.blogspot.com/2018/07/2.html
https://valavu.blogspot.com/2018/09/3.html
https://valavu.blogspot.com/2018/09/4_14.html
https://valavu.blogspot.com/2018/09/5.html
https://valavu.blogspot.com/2018/09/6.html

இந்த இடுகையைப் புரிந்துகொள்ள வாய்ப்பாக மேலுள்ளவற்றையும் படித்துவிடுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

No comments: