Saturday, January 18, 2020

பாசண்டச் சாத்தன் - 11

அடுத்தது. கோசாளரின் தோற்றம். புத்தத்துறவியர் தலைமுடி மழித்தது போலவும், செயினத்துறவியர் தலைமுடி பறித்தது போலவும், எந்த ஆசீவிக அறிவரும் இருந்ததாகத் தெரியவில்லை. தலைமுடி, சடைத்தபடி, இவர் இருந்தார் போலும். ஐயனார் திருமேனிகளும் அப்படித் தோற்றவில்லை.  ஒருவேளை சில அறிவர் நக்கனம்/ அம்மணம் கைப்பிடித்திருக்கலாம். அதேபோது இந்தோனேசியாவிலும், வடக்கே சாஞ்சியிலுமுள்ள சிற்பங்களில் ஆசீவிகர் கோவணத்தொடு ஆண்டிபோற் காட்டப்படுவார். ஆனால், செயின, புத்த ஆவணங்கள் மற்கலி அம்மணமாய் இருந்தாரென்றே சொல்கின்றன. நம்மூர் ஐயனார் சிலைகளிலோ, ஒன்றுகூட அம்மணத் தோற்றங் காட்ட வில்லை.. இருவேறு தோற்றங்களில் எதுசரி? அம்மணம் உண்டா? இல்லையா? அன்றி 2 தோற்றங்களும் வெவ்வேறு காலங்களில் இருந்தனவா?  தெரியாது.  முருகனுக்குப் பழனியில் ஆண்டித் தோற்றம். மற்ற இடங்களில் வீரத் தோற்றம் காண்பதில்லையா?   
 
கோசாளரின் விதப்பைப் பார்த்த நாம், மற்கலி எனும் முதற்பெயரை 3 வகையில் புரிந்துகொள்ளலாம். முதல்பொருள் அது இயற்பெயரெனக் கொண்டமைவது.  கலித்தல், போரிடுவதைக் குறிக்கும். கலியன்= போர் இடுவோன். மற்கலி= மற்போரிடுவோன். கலியனென்ற இயற்பெயர் பிற்காலத்தில் ”மல்” அடைமொழி பெறலாம். வீரஞ்செறிந்த குடும்பத்தில்  பிறந்தவனுக்குக் ”கலியன்” பெயரிடுவது வியப்பில்லை. [அகரமுதலிகளில் கலியனுக்கு படைவீரன் (திவா.), திருமங்கையாழ்வார் (திவ். பெரியதி. 5, 2, 10.), இரட்டைப்பிள்ளைகளுள் ஆண் (W.),கலிபுருஷன் (எ. கா.) தணந்த வெந்திறற் கலியனை (நைடத. கலிநீ. 16), சனி (W.), பசித்தவன் (எ. கா.) கலியர் சோற்றின் மேலே மனம் என்னுமாபோலே (ஈடு. 4, 3, 7). தரித்திரன் (எ. கா.) மூதேவி மூடிய கலியனை (திருப்பு.) என்று பொருள்சொல்வர். திருங்கையாழ்வார்க்கு கலியன் என்ற இயற்பெயர் இருந்தது இவ்விடத்தில் ஆழ்ந்து நினைவுகூரக் கூடிய செய்தி.]

2 ஆம் வகையில் சாவத்தியில் மற்கலி தொடர்ந்து வேதத்தை மறுத்த காரணத்தால் மறுக்காளி என்ற வழக்குப்பெயர் பெற்றிருக்கலாம். வடவர் பேச்சுவழக்கில் மறுக்காளி> மறுக்காலி> மற்கலி> மக்கலி என்று திரியலாம். மீண்டும் அப்பெயரைத் தமிழில் கடன்வாங்கையில் (கி.மு. 600 களில் இருந்தவரை கி.பி. 370-450 ஐச் சேர்ந்த மணிமேகலைக் காப்பியம், தமிழ்த் தோற்றம் அறியாது) மற்கலி என அழைத்திருக்கலாம். ஆனாலும் ஐயனார் எனும் முந்தைத் தலைமைப் பெயரே நம்மூர் வழிபாட்டில் நிலைத்தது. போலும். ஊருக்குள் பெரியவரின் இயற்பெயரை இன்றுஞ் சொல்லார். ஐயன், ஐயா என்றே சொல்வார்.

3 ஆம் வகையில் குறுந்தொகை 156 இல் பார்ப்பனச் சிறுவன் துறவியான பிறகு, செம்முருக்குத் தண்டத்தைக் கையில் பிடித்திருப்பது பற்றிச் சொல்லும்.
   
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே!

இப்படி (செம்) முருக்குக் கழியைக் கையில் பிடித்திருப்பது அக்காலத் துறவிகள் எல்லோர்க்கும் பழக்கம். இது பார்ப்பனருக்கு மட்டுமில்லை. இன்ன நெறி, இன்ன பகுதியினர் என்னாது காடு, மலை, சுரமென்று தொடர்ந்து அலைந்து திரிந்த பரிவிராயர் (>பரிவ்ராஜக) கூடக் கையில் முருக்கங்கழி பிடித் திருந்தார். அதை மூங்கில்கழி என்று விவரந்தெரியாத வடபுல ஆய்வர் சொல்வார். (செம்முருக்கைத் தெரியாத சில தமிழரும் முருங்கை யுடன் குழம்புவர். முருக்கம் = பலாசு/புரசு. (Indian Coral Tree; Erythrina variegata) இம்மரம் முருகனுக்கு விழைவாயும் சொல்லப்படும். சென்னைப் புரசை வாக்கம் கங்காதீசர் கோயில் தலமரம் இந்தச் செம்முருக்கே. சென்னைப் புரசை வாக்கத்தின் பெயர்கூட இம்மரத்தால் தான் ஏற்பட்டது. அக் கோயிலுக்குப் போனால்  பூக்கும் காலத்தில் செக்கச்செவேலென மரத்தைக் காணலாம்.)

சங்கதத்தில் ’மஸ்கரினுக்கு’ மூங்கில்/பிரப்பம் பொருளிருந்ததாய்ச் சொல்லும் ஏ. எல். பாஷத்திற்கு [History and Doctrines of the Ajivikas- A vanished Indian Religion] தமிழ் மூலம் தெரிந்திருந்தால், முருக்(குக்) கழியைச் சொல்லி யிருப்பார். கையில் பிடித்த முருக்குக் கழியில் 3 கிளை பிரிந்தது (>திரி தண்டி) ஒரு வகையாகவும், ஒரு கிளை கொண்டது (ஏக தண்டி) இன்னொரு வகையாயும் துறவியரில் சொல்லப்படும். ஏ.எல்.பாஷம் அற்றுவிகரை, ’ஏக தண்டி’என்பார். முருக்(குக்)கழி வடபுலத்தில் மற்கலியாகி நமக்குத் திரும்பியபோது, நாமும் நம் சொல்லை விட்டு வடவர் பலுக்கைப் பிடித்துக் கொண்டோம் போலும்.

இவ்விடுகையில் மற்கலியை 3 வகைகளில் புரிந்துகொண்டோம். எது சரி என்று அறுதியாகச் சொல்ல நம்மிடம் தரவுகளில்லை. எனவே 3 இயலுமைகளைச் சொன்னேன். மற்கலி கோசாளன் சாத்துகளின் காவலனாய் வடக்கே சாவத்தி நகர்வரை, பலமுறை  போய்வந்துள்ளான். எத்தனைமுறை பயணங்கள் நடந்தன என்பது நமக்குத் தெரியாது, செயின, புத்த ஆவணங்களின் வழி பார்த்தால், மற்கலி கதை ஒரு தொடர்ச்சியின்றி பிய்த்துப் பிய்த்துத் தெரிவது கூட வடக்கிலும் தெற்கிலும் அவன் சாத்துக்களோடு அலைந்து திரிந்தது காரணமாகலாம். பெரும்பாலும் அவன் துறவியில்லை என்றே ஆழமான ஆய்வில் தோன்றுகிறது. அதேபொழுது,  முனிவனாக, பரிவிராயன்>பரிவ்ராஜன் (பரிந்து விரவுகிறவன் பரிவிராயன். பரிதல் = அலைந்து திரிதல்.) ஆக, மெய்யியலாளனாக, சமயத்தலைவனாக  இருந்திருக்கலாம்.

போன இடத்தில் பெரும்பாலும் குயவரோடு தங்கி அறிவுய்தி (intelligentia) உலகில் இயங்கியுள்ளான். வேதநெறிக்கு எதிரியக்கத்தில் இவனும் பங்காற்றியுள்ளான். செயின, புத்த சங்கங்கள் போல் இவனும் ஒரு சங்கம் எழுப்பியிருக்கலாம். மகாவீரரோடு சிலகாலம் (6 ஆண்டு) இணைந்தும் சில காலம் முரணியும் (16 ஆண்டுகள்) இருந்துள்ளான். புத்தனோடு பழகா விடினும், புத்தன் இவன்கூட்டத்தை எதிரியாகக் கருதினான். செயின, புத்த ஆவணங்களின் படி, பூரணன், நன்கணி ஆகியாரோடு சேர்ந்து ஒரு சமய நெறி உருவாக்கி இலக்கக்கணக்கில் கூட்டந் திரட்டியுள்ளான் ”அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம் ஆனோம்” என நக்கீரர் மட்டும் சொல்லவில்லை.

மற்கலி கோசாளர் போல்  அவருடைய இரட்டையரான பூரண காயவரைத் தமிழரென்று சொல்லவும் நம்மிடம் சரியான தரவுகளில்லை. (பூரணர் காஷ்யப கோத்திரப் பெருமானர் என்ற சங்கத முன்னீட்டிற்கும் இதுவரை சான்றில்லை. தமிழ்ச்சான்றும் தேடிக்கொண்டுள்ளேன்.) அற்றுவிகத்தின் 3 ஆம் தோற்றுநரான பக்கடுக்கை (நன்)கணியார்  பெயரைப் பக்குடுக்கை + நன்கணியார் என்று பிரித்துணரலாம்..  பக்குடுக்கை = பக்கு+உடுக்கை = கிழிந்துபோன உடுப்பு. கணியார் = சோதியர். சிலம்பிற்கூட வேந்தரவையில்  பெருங்கணியரின் இருப்பு சொல்லப் படும். ”பக்குடுக்கைக் கணியார்” என்ற  பெயரைப் ”பக்குடுக்க அக்ஷயனார்” என மொழிபெயர்த்து பின் வடபுல வழக்கில் பக்குடக்காக்ஷயனார் என்று புணர்த்தியது புரிகிறது.

அன்புடன்,
இராம.கி.

No comments: