Monday, December 09, 2019

கம்மம்>காமம்>க்ராமம்

”கிராமம் என்பதற்கான நேரடி தமிழ்ச்சொல் என்ன?” என்று நண்பர் கௌதம சன்னா அண்மையில் கேட்டார். வேறு வேலையில் ஆழ்ந்ததால் உடன் மறுமொழிக்க முடியவில்லை. ”கூடிய விரைவில் வருவேன்” என்றேன். இப்போது நேரங் கிடைத்தது. விளக்க முற்படுகிறேன்.

’க்ராம’வெனும் சங்கதச் சொல்லின் தமிழ் வடிவம் 'கிராமம்’ ஆகும். ’க்ராம’விற்கும் முந்தையது காம எனும் பாகதச் சொல்லாகும். வெவ்வேறு வட்டாரங்களில் பாகத மொழி வெவ்வேறு மாதிரிப் பலுக்கப்பட்டது. பாணினி கால வடமேற்கு வட்டாரமொழிக்குப் பாஷா (தமிழின் ’பேச்சும்’, ’பாஷாவும்’ ஒருபொருட் சொற்கள்) என்று பெயர். இதில்  பல சொற்களைப் பலுக்கையில், முதல் உயிர் மெய்யின் ஊடே ரகர ஒலிப்பு வந்துசேரும். எனவே மற்ற நிலங்களில் ”காம” என்பது இங்கு, ”க்ராம” ஆகும்.   பிற்காலத்து எழுந்த கலப்புப் பேச்சான சங்கதத்திற்கு பாஷாவே அடிப்படை. பொ.உ.. 300 க்கு அப்புறம், சங்கதமே வடபுல ஆட்சியரால் ஆதரிக்கப் பட்டதால், க்ராம என்ற சொல் இந்தியாவின் பலவிடங்களில் பரவியது. இனி க்ராமத்திற்கு முந்தைய காமத்திற்கு வருவோம். (தமிழில் வேறொரு காமமும் உண்டு. அதை இங்கு எண்ணிக் குழம்பக் கூடாது)

பொ.உ.மு.1000-600 களில் இந்தியாவின்  பெருத்துப் புழங்கியவை தமிழும் பாகதமுமே. (அப்போது சங்கதம் பிறக்கவில்லை. வேதமொழி இருந்தது.) அக்கால இந்தியர் தொகை 1, 2 கோடியிலும், தமிழர் தொகை 20-35 இலக்கங்களிலும் இருக்கலாம். பொ.உ.மு.1000-100 இல்  விண்டு>விண்டிய> விந்திய மலை வரை பரவிய பாகதம் வட இந்தியாவின் பரவலான பேச்சு.  தெற்கிருந்து விண்டுமலை வரை, அக்காலங்களில், தெற்கில் தமிழ் இருந்ததோ? - என்ற ஐயமுண்டு. ஒரு வேளை தொல்காப்பியர் கால வட வேங்கடம், விண்டுமலையோ? - என்றும் எண்ணியதுண்டு. தமிழக- மகத ஊடாட்டத்தில் நாம் பல பாகதச் சொற்களையும் (காட்டு: பகவன்) அவர் பல தமிழ்ச்சொற்களையும் (காட்டு: கம்மம் = ஊர்.) புழங்கினார். கம்மம்>காம என அவரால் பலுக்கப் பட்டது. இன்றும் பாகத வழிச் சிங்களத்தில் ’காம’வுக்கு அதே பொருள்தான். (காட்டு: கதிர்காம).   இன்றும் வடபுல மொழிகளில் gaon என ஊர்ப்பெயர் சொல்வார். (தில்லிக்கு அருகில் gurgaon ஐ இந்துத்துவர் gurugram என்று மாற்றினார்.)

’க்ராம’ என்ற சங்கதச் சொல்லிற்கு inhabited place, village, hamlet என்று பொருள் கொடுப்பர். இருக்கு, அதர்வணம்,  வாஜசனேயி சம்ஹிதா போன்றவற்றில் பயின்றதாய் மோனியர் வில்லிம்சு சொல்லும். ’க்ராம’விற்கு வேர் ஏதென இந்த அகரமுதலி சொல்லாது. ஓரிடம் நிலைக்காது, அலைந்திருந்த நாடோடிகள், ’க்ராம’ என்ற சொல்லைக் கண்டார் என்பது நம்புதற்கு ஐயமான ஒன்று.  “இயற்கை நிலை சரியில்லை” எனில் ஆடுமாடுகளைக் கூட்டி, வண்டிகளைப் பூட்டி இன்னோர் இடத்திற்கே முல்லையார் பெயர்வார். இவருக்கு நிலைத்த ஊர் என்பது தொடக்கத்தில் கிடையாது. நெடுநாள் ஓரிடத்தில் தங்கி, தம் விலங்குகளுக்கும், தமக்குமாய்ப் பயிர்செய்யத் தொடங்குவோரே, ’க்ராம’ எனுங் கருத்தீட்டிற்கு வரமுடியும். ஓர்ந்து பார்த்தால், இச்சொல் மருதநிலத்தில் எழவே வாய்ப்பதிகம்.

இயற்கையில் உயிருள்ள நிலத்திணைகள், விலங்குகள் பலவும் வளர்கின்றன. (இது ஒரு பரிமானத்திலோ, இரு பரிமானத்திலோ, முப் பரிமானத்திலோ, அன்றேல் எண்ணிக்கையிலோ நடக்கலாம். மொத்தத்தில் இது முன்னதைவிட இப்போதையது மிகுதல், பெருகுதல் என்று பொருள்படும். ) அவ்வளர்ப்பில் நீர், குறிப்பிடத்தக்க மண்சத்து, காற்று, போன்ற வளங்கள் இருந்தால் தான் உயிரிகளின் அலங்கல் வளர்ச்சி (organic growth) அமையும். பல்வேறு  வளங்களை இவற்றிற்கு அருகில் கொண்டுவந்து இட்டு அவற்றின் வளர்ச்சிக்கு நாம் துணைபோவதையே வளர்த்தல் என்கிறோம். வளர்தல் தன்வினை. வளர்த்தல் பிறவினை. வளர்=தலுக்கு இன்னொரு தமிழ்ச்சொல் குரு-தல். வளர்த்தலுக்கு இணையானது குருத்தல்.

குல்>குரு என்று இச்சொல் வரும்.  பேச்சுவழக்கில் குருத்தல் கருத்தலென்றும் திரியும். உயிர்க்கரு என்பதும் அதே பொருள் தான். அது மையமாவதால் கருவிற்கு மையம் என்று பொருள் உண்டு. குழவி கருவிலிருந்து வளர்கிறது. வேறுவகையில் உயிருக்கு உதவும் கருத்தல் தொழிலில் நம் உடம்புறுப்புகள் பலவும் வேலை செய்தாலும்  ஓர் உறுப்பு மட்டும் மிக அதிகமாய் வேலை செய்யும். அதைக் கரம் என்றார்.  கருத்தது கரம். கருத்தலில் விளைந்த பெயர்ச்சொல் கருமம்.  வளரும் பொருள் கொள்ளும்>கள்ளும் (கூடும், பெருகும்) கள்.கய்>கை என்பதும் கரத்தைக் குறிக்கும். கை, செய் என்பது இயல்பான பேச்சுத்திரிவு, கையால் செய்கிறோம். கருத்தலும் செய்தலும் ஒரே பொருட் சொற்கள்.   குல்>குரு>கரு>கருத்தல் = செய்தல்

யாரெல்லாம் கையால் கருமஞ் செய்கிறாரோ, அவரெல்லாம் கருமர். கருமம் மெய்ம்மயங்கி கம்மமாகும்.  (பாலியில் தருமம்>தம்மம் ஆகும். தமிழில்  இருமம் இம்மம் ஆகி இம்மையைக் குறிக்கும். எருமை கன்னடத்தில் எம்மெ ஆகும். உருநம் = உச்சிவேளை என்பது உண்ணமாகும். உண்ணத்தைச் சங்கதம் உஷ்ணமாக்கும். உருநத்தை நெல்லையார் உருமம் என்றுஞ் சொல்வார். பருமுவது பம்மும்; பின் பொம்மும். மருமம் மம்மாகும். இன்னும் பல சொற்களை இங்கு எடுத்துக் காட்டலாம்.)

கருமகாரர்>கம்ம காரர் = வினைஞர், கைத் தொழிலாளர்; கம்மத்தம் = வேளாண்பண்ணை; கம்மம் = பயிர்த்தொழில்; கம்மம் = கருமியர் தொழில் (இரும்புக்கொல்லர், தச்சர் போன்ற பல்வேறு craftsmen); கம்மம் = தொழில்; கம்மவாள்>கம்மவார் = தெலுங்கு மொழி பேசும் உழவருள் ஒரு பிரிவினர்; கம்மாக்காரர் = மீனவர்; கம்மாளன் = பொன்வேலை செய்பவன்; கம்மாளத்தி; கம்மி = தொழிலாளி; கம்மியநூல் = சிற்பநூல்; கம்மியம் = கைத்தொழில், கம்மாளத்தொழில்; கம்மியன் = தொழிலாளி;  கம்மாளன்= நெய்பவன்; கருமம் ஆளா மட்டி = கம்மம் ஆளா மட்டி> கம்மாளாமட்டி> கம்மணாம்ட்டி>கம்மணாட்டி= வேலைசெய்யத் தெரியாதவன்; கமக்காரன் = உழவன் (கம்மம் தொகுத்துக் கமம் ஆனது); கமங்கட்டுதல் = உரிமை நிலத்தில் வேளாண்மை செய்தல்; கமத்தொழில் = பயிர்த்தொழில்; கமம் = நிறைவு; கமம் = வேளாண்மை. நன்செய்

இத்தனை பேரும் இருக்குமிடம் கம்மம் = ஊர், சிற்றூர். கம்மம் பாகதத்தில் காம ஆகும். இதுவே பாஷா>சங்கதத்தில் க்ராம ஆகும். எப்படிச் சுற்றினாலும், இந்தியாவின் பல நாட்பட்ட சொற்களை அடையாளங் காணத் தமிழுக்கு வாராது போக முடியாது ஐயா. இதை நான் சொல்வதால் தான் ”தமிழ் வெறியன்” என்பார். க்ராமத்தின் உருப்படியான விளக்கத்தை வேறு மொழி வழியே யாரையேனும் சொல்லச் சொல்லுங்கள், பார்ப்போம்!


2 comments:

அருண் said...

அருமை

rajendran said...

'உச்சி உருமத்தில புள்ளையை தூக்கிக்கிட்டு போகாதே' என்ற சொல்வழக்கு தென்தமிழக ஊர்களில் இருந்தது.