Friday, January 24, 2020

பாசண்டச் சாத்தன் - 16

2 ஆம் இராசராசன் காலத்தில் (கி.பி.1153) 11 ஆம் கல்வெட்டில் (ARE 597/1908; முதற் சுற்றாலைத் தென்சுவரில் உள்ளது) ”திருப்பிடவூர் திருமண்டபம் உடையாருக்கும், பிள்ளையார் திரு வேப்பந் தெற்றி உடையாருக்கும்” என 2 திருமேனிகள் சொல்லப் படும். ”ஐயனாருக்கு இருவேறு படிமங்கள் பிடவூரில் இருந்தன” என்பதே இக்கல்வெட்டினால் தெரிய வருகிறது. தெற்றி யுடையார் என்றும், கூத்தாடும் தேவனென்றும் சொல்லப்படும் 2 ஆம் திருமேனி ”ஐயனார் கருவறையில் இருந்தது” என முன்பார்த்த கல்வெட்டுகள் தெரிவித்தன. முதல் திருமேனியின் இருப்பிடம் இப்போது எங்குள்ளது என்பது தெரியவில்லை. ”ஒருவேளை அரங்கேற்ற மண்டபத்தில் இருந்ததோ?” என்றும் தோன்றுகிறது. இப்போது அங்கே விநாயகர் சிலையே உண்டு.

”திருமண்டபம் உடையார்” என்ற பெயரில் புரிதற் குழப்பமுண்டு. ஏனெனில் பிந்தைக் கல்வெட்டுகளில் ”திருமண் தவஞ்செய்த நாயனார்” என்றும் “திருமண் தவம் உடைய நாயனார்” என்றும் வருகின்றன. எந்தப் பெயர் சரி? தெரியவில்லை  ஆழ்ந்துகாணின், தவம், சங்கத ஒலிப்பில் தபமாகலாம். “திருமண்தபம் உடையார்” என்பது எழுத்துப்பிழையில் ”திருமண்டபம் உடையார்” ஆகலாம். பொதுவாகக் ”கோயில் மண்டப இருப்பு ”, ஒரு சிலைப் பெயருக்குக் காரணமாகுமென இதுவரை காணாதால் (எல்லா முகன மேனிகளுக்கும் மண்டபம் உண்டே?), ”திருமண் தவமுடையார்” என்பதே எனக்குச் சரியாகப் படுகிறது. தவிர, ”அறப்பெயர்ச் சாத்தன் பிடவூரில் பிறந்தான் ” என்ற கூற்றிற்கும் அது வலு சேர்க்கிறது.

“திருமண் தவமுடைய நாயனார்” எனும் திருமேனி முன் எங்கிருந்தது? - என்பதும் தெரியாது. ஒருவேளை முதலில் அரங்கேற்ற மண்டபத்திலிருந்து, பின் விசயநகர காலத்தில் ஐயனார் கருவறைக்கு நகர்ந்ததா?- என்பதும் தெரியாது.  சிலைகள் தொடர்பாக, விடைதெரியாது, நம்மிடம் மொத்தம் 3 கேள்விகள் உள்ளன. 1. இற்றைப் பிரமன் சிலை எங்கிருந்து இங்கு வந்தது? 2. அரங்கேற்ற மண்டபத்தில் இப்போதுள்ள விநாயகருக்கு முந்தைச் சிலை எது? 3.  ஐயனார் கருவறையில் இப்போதுள்ள ”தேவியர் இணைந்த ஐயனார் சிலை” எக்காலம் பதிக்கப் பெற்றது? இன்னும் கொஞ்சம் ஆழம்போய் மேலே தேடுவோம்.

முதற் சுற்றாலைத் தென்சுவரில் இருக்கும் 12 ஆம் கல்வெட்டில் (ARE 596/1908) மேற்கூறிய ”திருமண்டபம் உடையார்,  பிள்ளையார் திருவேப்பந் தெற்றி யுடையார்” என்ற 2  ஐயனார் பெயர்களின் இருவேறு பண்டாரங்கள் (treasuries) குறிக்கப்படுகின்றன. இதனால் ஐயனாருக்கு  இருவேறு திருமேனிகள் இருந்தமை உறுதி. 13 ஆம் கல்வெட்டில் ஐயனார் பெயர் ஏதும் அறியமுடிய வில்லை. 14 ஆம் கல்வெட்டில்  பிள்ளையார் திருவேப்பந் தெற்றியுடையார் மட்டும் குறிக்கப்படுகிறார். 15 ஆம் கல்வெட்டில் ”திருமண்டப உடையான்” என்றபெயர் “அறிவேன்” என ஒப்புக் கொடுத்த ஒரு பெருமானருக்கு இருந்தது சற்று வியக்க வைக்கிறது. ஆக, அக்காலத்தில் ஐயனார் பெயரை சிவப் பெருமானரும் வயப்படுத்தியுள்ளார். இக்காலத்திலோ, ஐயன் வழிபாட்டில் பெரும்பாலான பெருமானர் சேர்ந்துகொள்வதேயில்லை. காலம் எப்படி மாறிவிட்டது? (நினைவு கொள்க! அற்றுவிகத் தொடக்கத்தில் பெருமானரும் பங்குபெற்றார்.)

[சபரிமலை ஐயப்பன் மட்டும் விலக்கு. பெருமானர் அவனைச் சேர்ந்து கொள்வார். பிடவூரும் அப்படி ஒரு விலக்குப் போலும். இன்று குயவர் பூசாரியாய் இங்கிருப்பதில்லை. பெருமானப் பூசகரேயுண்டு, ஒருவேளை பிடவூர் ஒருகாலத்தில் பிரமதேயம் ஆனதால்,  இம்மாற்றம் நிகழ்ந்தது போலும். தவிர, எல்லா ஐயனார் கோயில்களில் நாம் கட்டாயம் காணும் குதிரை, யானைப் பொம்மைகளும் பிடவூரில் இல்லை. ஐயனாருக்கு முன் நடுத்தர அளவில் ஒரு யானைச்சிலையும், அதன்மேல் ஒரு மண்டபமும் உள்ளன. முழுக்கோயிலும் எல்லாச் சிவன்கோயிலில் காணும் பெருமான நடைமுறைகளுக்கு (brahminized practices) மாறிப்போயுள்ளது, பொற்கலை என்பது கூடப் ”புஷ்கலாம்பிகை” என்று மாறிக் குறிக்கப்படுகிறது.

ஐயனார் கோயிலின், முன்மண்டபக் கிழக்குச்சுவர் சாளர வடப்பக்கலில், அமைந்த 16 ஆம் கல்வெட்டில்   (ARE 586/1908 3ஆம்  இராசராசன் கி..பி.1240), திருப்பிடவூர் உடையார் திருமண் தவஞ்செய்த நாயனாரென்றும், பிள்ளையார் திருவேப்பந் தெற்றியுடைய நாயனாரென்றும் தெளிவாக 2 திருமேனிகள் இருந்தமை சொல்லப்பெறும். இக்கல்வெட்டில் உள்ளூர் விநாயகப் பிள்ளையாரும் குறிக்கப்படுவார்.  முன்மண்டபத் தென்சுவரில் வாயில் இடப்பக்கலிலுள்ள 17 ஆம் கல்வெட்டில் (ARE 592/1908; 3ஆம் இராச ராசன் கி.பி.1248 ) திருப்பிடவூர் உடையார் கோயிலுக்கும், ”அநபாய ஈஸ்வரம் முடைய நாயனார்” கோயிலுக்குமான தானம் சொல்லப்படும். ஆக அனந்தீசர் கோயிலென 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெயர்,  அநபாயச் சோழன் குலோத்துங்கன் காலத்தில் அநபாய ஈச்சுரமாய் மாறிவிட்டது. இதுவே பிற்காலத்தில் பிரமபுரீச்சூரமாய் மாறியதோவென ஊகிக்கிறோம். அநபாய ஈச்சுரப் பெயர் 18 ஆம் கல்வெட்டிலும் உண்டு. 18 என்று தவறாய் எண் குறித்த போசள வீர இராமனாதன் கல்வெட்டில் (ARE 590/1908 கி.பி.1262.) பிள்ளையார் திருவேப்பந் தெற்றியுடையார் மட்டும் பேசப்படுகிறார்.

அடுத்து, ஐயனார் கோயில் முதற் சுற்றாலையிலுள்ள, ஜடாவர்மன் வீர பாண்டியன் காலத்தில் (கி.பி. 1277) எழுந்த 19 ஆம் கல்வெட்டில் (ARE 589/1908) உடையார் திருமண் தவமுடைய நாயனாரும், பிள்ளையார் ஸுப்ரமண்ய பிள்ளையாரும், திருவேப்பந்தெற்றி உடைய பிள்ளையாரும் பேசப்படுகிறார். கொஞ்சங் கொஞ்சமாய்  ஐயனார் என்பார், சிவனின் பிள்ளையாய் ஆக்கப்பட்டு விட்டார்.  இக்கல்வெட்டின் தானத்திற்கு ஒப்புக் கொடுத்தவர் பெயரில் ஒருவராய் “சாத்தனூர் உடையான் குருகுலராயன்” என்று வருகிறது. பிடவூருக்கு சாத்தனூர் என்ற பெயரும் இருந்தது போலும். சாத்தன் பெயர் ஐயனாருக்கிருந்ததும் கல்வெட்டில் வெளிப்படுகிறது. தவிரப் பிடவூர்நாடு பிடந்தைநாடென்றும் சொல்லப்படுகிறது. இன்னொரூ ஒப்புகையான் மேலை சூருடையான் சேரமான்தோழன் எனப்படுகிறான். ”சேரமான் தோழன்” என்பது சுந்தரநாயனாரின் பெயர். அவர்பெயர் இம் மேலைசூருடை யானுக்கும் வைக்கப்பட்டுள்ளது. ”சாத்தனுடையான் பிச்சாண்டான், சாத்தன் உடையான் சம்பந்தப் பெருமாள், சாத்தனூருடையான் தேவப் பெருமாள் ” என் இன்னும் 3 பெயர்கள் ஒப்புக்கொடுத்தவராய்ச் சொல்லப் பெறும்.

அடுத்து முன்மண்டபம் வடச்சுவரில் , ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திய (கி.பி.1308) 20 ஆம் கல்வெட்டில் (ARE 594/1908), திருமண் தவமுடைய நாயனாரும், அநபாய ஈஸ்வரம் உடைய நாயனாரும், பிள்ளையார் திரு வேப்பம் தெற்றியுடையாரும் பேசப்படுவார். இக்கல்வெட்டை எழுப்பித்தவன் திருப்பிடவூர் கவுஸியன் மஹாதேவப் பட்டனென்ற பெருமானனாவான்.  எனவே ஐயனார் வழிபாடு அன்றை வரைக்கும் பெருமானரிடத்தும் கூடப் பரவியிருந்துள்ளது. இன்றுதான் பெருமானரிடம் ஐயனார் வழிபாடு பெரிதும் அறுந்துபோனது. பெருந்தெய்வம் சிறுதெய்வம் என்ற பரப்புரையில் பெருமானர் முற்றிலுங் கரைந்து பெருந்தெய்வ வழிபாடு மட்டுமே தாம் செய்யவேண்டுமென விலகிக்கொண்டார் போலும். இனிப் பிரமதேயம் அழிந்த விசயநகரக் காலத்திற்கு வருவோம். 

ஐயனார் கோயில் முதற் சுற்றாலையில் கெம்பமாயண நாயக்கர் காலத்தில் (கி.பி.16-17 ஆம் நூற்றாண்டில்) எழுந்த 21 ஆம் கல்வெட்டில் (ARE 599/1908), சிவ ராத்திரி நாள் புண்ணிய காலத்தில் இந்த நாயக்கர் கொடுத்த தானம் பேசப் படுகிறது. இதைப் படிக்கும் போது, பிடவூர்ப் பிரமதேயம் என்ற கட்டுமானம் விசயநகர நாயக்கர் காலத்தில் முடிவிற்கு வந்துவிட்டது என்று புரிகிறது. சோழர் காலத்தில் குலோத்துங்கனுக்கு அப்புறம் தொடங்கிய தெலுங்குப் பெருமானர் நுழைவு தமிழ்ப்பெருமானரின் இருப்பைக் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைத்தது. விசயநகரக் காலத்தில் இந்த மாற்றம் இன்னும் விரிந்தது. தமிழ்ப் பெருமானருக்கும் தெலுங்குப் பெருமானருக்கும் இடையே ஒரு நுணுகிய முரண் இன்றுமுண்டு. பிரமதேயங்கள் சிச் சிறிதாய் நலிவு உற்றன. பாளையப்பட்டுகள் என்ற புதுக்கட்டுமானங்கள் விரிவடையத் தொடங்கின. பிடவூரைச் சுற்றியும் இத் தாக்கம் தெரிகிறது.

அதேபொழுது ஐயனாரின் நாளாய்ச் சொல்லப்படும் மாசிமாதச் சிவ ராத்திரிப் பண்டிகை, இந்தக் குமுக மாற்றத்தின் இடையிலும் தொடர்ந்து வந்துள்ளது, இன்றும் தமிழ்நாடு எங்கணும் ஐயனார் கோயில்களில் சிவ ராத்திரி என்பது முகன்மையானது. ஐயனின் அருள்வேண்டிப் பூக்குழி ஏறுதல்,  சிறாருக்குத் தொட்டில் கட்டுதல், படையலிடுதல், சிவராத்திரி முழுக்க விழித்து இருத்தல், ஐயனாருக்கும், கருப்பருக்கும் விதவிதமாய் அலங்காரம் செய்து அழகுபார்த்தல் எனக் கூட்டம் அந்நாளைக் கொண்டாடிப் பெருக்கெடுக்கும்.  வரும் மாசி 9 ஆம் நாள் (பிப்ரவரி 21) இந்த ஆண்டு சிவராத்திரி வருகிறது அது அற்றுவிகம் ”தன் தோற்றுநன் கலியனின் பிறந்தநாளாய்ச்” சொல்லும். பிறந்த பிள்ளைகளுக்குத் தொட்டில் கட்டி ஐயனார் கோயிலை மூன்று முறை சுற்றிவருவதும், பிள்ளையின் முதல் மொட்டையை ஐயன் கோயில் வளாகத்தில் செய்வதும் இன்றும் தென் பாண்டிப் பழக்கம். பிடவூரில் நடக்கிறதா என்று அறியேன். எங்கள் சிவ கங்கை மாவட்டத்தில் அது பெருவழக்கு. எங்கள் குடும்பத்திலும் உண்டு.

அன்புடன்,
இராம.கி. 

 பி.கு. முன்கூறிய சில கல்வெட்டுக்களை கல்வெட்டு ஆய்வாளர் கோவை துரை சுந்தரம், http://mymintamil.blogspot.com/2018/07/blog-post_33.html என்ற ஆவணத்திலும் கொடுத்துள்ளார்.  அவர் தொடர்புக்கு doraisundaram18@gmail.com. அவருடைய  அலைபேசி :  9444939156.


No comments: