Friday, January 10, 2020

பாசண்டச் சாத்தன் - 3

இதுவரை சாத்தனுக்கு வாணிகன், பொதுப்பெயர் என 2 வேறு பொருள்களைப் பார்த்தோம். இனி அடுத்த பொருள் வளர்ச்சிக்கு வருவோம். ஒவ்வொரு சாத்திலும், கூட்டங் கூட்டமாய்த் தத்தம் பண்டங்களை பல வண்டிகள், வையங்களில் (வாகனங்களில்) வணிகர் ஏற்றிச் செல்வர். ஒவ்வொரு சாத்தும் நீள்தொலைவு சென்று வருவதால், பயணங்கள் முடியப் பல மாதங்களாகலாம். வணிகர் போகும் பாதையில் வழிப்பறிக் கொள்ளையில் சிக்கி விடாது அதே பொழுது தத்தம் பொருள்களைக் காப்பாற்றவும் வேண்டும். நாடு விட்டு நாடு ஏகுகையில் சுங்கம் (customs), உல்கு (excise) எனச் சிக்கிவிடவுங் கூடாது. இத்தனையும் செய்வதற்குச் சாத்திற்கு எனத் தனியே இயங்கும் காவல்படை என ஒன்று இருக்கவேண்டும். ஒவ்வொரு சாத்தும், தம் ஊரில் பயணத்தைத் தொடங்கி, எல்லா வாங்கல்- விற்றலையும்  முடித்துத் திரும்பி வரும் வரை சாத்துடன் கூட வர காவல்வீரரை ஏற்பாடு செய்யவும் வேண்டும்.

இவ்வீரரின் தலைவனைச் சாத்துவாகன் என்பர். (இது சாதவாகன்> சாத வாகனன் என வடக்கே பரவி மீள வரும். நாமும்  அதை வைத்துத் தமிழ் முன்மையை மறந்துவிட்டோம். 

தலைவனைக் குறிக்கும்  ஆத்தன்>ஆதன் = பெரியோன், மேலோன், தலைவன் என்ற சொல் ஆ-தல் (=தோன்றல், வளர்தல், செழித்தல்) வினையில் கிளைத்தது. ஆ-தல், ஆகு=தல்>ஆகல் (augment = to increase) என்றும் திரியும். ஆத்தன், ஆதன், ஆகன், ஐயன் என்பவை ஒரே பொருள் கொண்ட சொற்களாகும், சாத்து+ஆகன் = சாத்துவாகன்> சாதவாகனன். நாட்டுப் புறங்களின் ஐயனாருக்கு சாத்துவாகன் என்ற பெயரும் உண்டு.  பேச்சு வழக்கில் இது சாத்தையா என்றும் ஆகும். தமிழர் பலருக்கும் சாத்தையா என்ற பெயருண்டு. ஐயனார் ஈடுபாட்டால் அமையும் பெயர் இதுவாகும். நகரத்தார்/வணிகரில் சாத்தப்பன் என்றும் பெயரிடுவார்.

”சாத்துக் காவலன்” என்ற பொருளை ஒட்டி, 4 ஆம் பொருளும் வரலாற்றில் விதப்பாய் ஏற்பட்டது.. அதை அறியுமுன், சாத்துகளின் தொடர்பான உத்தர, தக்கணப் பாதைகளை இங்கு நினைவு கொள்வோம். வடமேற்கில் தக்கசீலம் தொடங்கி, (ஜீலம், செனாப், ராவி, சட்லஜ் எனும்) 4 ஆறுகளையும், பென்னம் பெரிய கங்கையையும் கடந்து அத்தினாபுரம் வழியாக, சாவத்தி, கபில வாய்த்து, குசினாரா, வேசாலி, பாடலிப் பட்டணம் வழியே போய் முடிவில் அரசகம் (முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகம் - Rajgir) வரை வந்து சேரும் பாதையை உத்தர பாதை என்பார்.

இதேபோல், கோதாவரி வடகரையின் படித்தானம் (patiththaana> prathisthana; patiththaana> payiththaana> paithan; இற்றை அவுரங்காபாத் அருகிலுள்ளது) தொடங்கி அசந்தா, எல்லோரா வழி வடக்கில் ஏகி, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையிலுள்ள மகேசருக்கு வந்து, மீண்டும் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) கோனாதா வந்து, உஞ்சை (Ujjain) போய், பில்சா(Bhilsa) வந்து,  நேர்வடக்கே திரும்பி, தொழுனை (=யமுனை) ஆற்றங் கரையின் கோசாம்பிக்கு (kosam) வந்து, அயோத்தி/சாகேதம் (Fyzaabaad) வந்து, முடிவில் சாவத்தியில் சேர்வதே தக்கணப் பாதையாகும். (நேபாள எல்லையில் உள்ள சாவத்தி கோசலத் தலைநகராகும். கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டியிட்ட நாடுகள்.) உத்தர, தக்கணப் பாதைகள் போக, கங்கையை ஒட்டியே பாடலியிலிருந்து மேற்கே வாரணசி வழி, கோசாம்பி அடையும் பெருவழியும் அக்காலம் முகன்மையானதே.



மேலுள்ள படம் -2 இல் காணும் தக்கண, உத்தரப் பாதைகள் துணைக்கண்ட வரலாற்றை நிருணயித்தன. [[படித்தானத்தில் இருந்து தகடூர் வரையுள்ள பாதையைக் கோடிட்டுக் காட்டியுள்ளேன். தகடூரிலிருந்து குடவஞ்சிக்கான பாதையும் படத்தில் காட்டப்படுகிறது. அதுபோல் தகடூரிலிருந்து மதுரை, உறையூருக்கும்  பாதைகள் உண்டு.  உறையூரிலிருந்து புகாருக்கும் பாதை உண்டு.]

மோரியர் காலத்தில் நூற்றுவர் கன்னர், தக்கணப் பாதையின் (Dakshinapaatha) தொடக்கில் கோதாவரி வடகரைப் படித்தானத்தைத் (ஆற்றுத்துறையை படித்துறை என்போமே? படித்தானமும் படித்துறையே.) தலைநகராய்க் கொண்ட அரசராயும், மோரியரின் மாதண்ட நாயகராகவும் இருந்தார். மோரியருக்குப் பின் நடுவணரசுப் பிடியிலிருந்து விடுபட்டு தனியாட்சியை நிறுவினார். தமிழர் போலவே கன்னரும் முறைப்பெண்களை மணமெடுக்கும் மரபு கொண்டவர். தமிழ், பாகதம் என 2 ஆட்சிமொழி நாணயம் வெளியிட்டார். (அவரரசில் 2 மொழியும் அருகருகே புழங்கின. மாமூலரின் ”மொழிபெயர் தேயம்” என்ற தொடரை இங்கு நினைவு கொள்க.) நம் அகநானூற்றைப் போலவே அகமரபு கொண்ட ”காதா சத்தசதி” எனும் பாகத நூலுக்கு அவர் காரணமானார். கன்னர் மரபுகளைக் காணில், அவை தமிழருக்கு முரண் பட்டதாய்ச் சொல்லமுடியாது.

சாதவா கன்ன எனும் பாகதப் பெயரைப் பலரும்  பலவிதமாய் அடையாளங் காணுவர். ”சாதவா கன்ன என்ற பெயர் Indo-Austric முண்டா மொழிகளில் சாத = குதிரை; கன்னா = மகன்  எனவெழுந்ததாகச் சொல்வர். ஆனால் சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால், ”நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப் படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்ல முடியும். சிலம்பும் அப்படியே தான் மொழிபெயர்க்கிறது. சடைத்தல்/சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் பொருட்பாட்டைக் குறிக்கும். "அவனைப் போட்டுச் சாத்திட்டான்" என்று இன்றைய வழக்கில் சொல்கிறோம் அல்லவா? சாற்றுதல்/சாத்துதல் என்பதற்கு நொறுக்குதல் எனும் பொருட்பாடுண்டு.

நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல், பொடியாக்கலென்று பொருள்படும். (hundred-நூறு என்ற ஆங்கிலச்சொல்லும் பொடிப்பொருளில் எழுந்ததே.) சதைக்கப்பட்டதும் (பொடி எனும்) சதமே. ஆக சதவா-வின் உட்கருத்து தமிழே. பலர் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (=சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னருருக்கு ஓர் அடைமொழி, அவ்வளவு தான். இன்னும் சிலர் சாதவா கன்னரெனப் படிக்காது சாத வாக(ன்)னர் என்றுபடிப்பார். அப்படிப் பிரிப்பது தவறு. சதம்>சதவர்>சாதவர்> சாதவா = நூற்றுவர். ”சாத்துவரின்” 4 ஆம் பொருள் இது தான். தக்கணப் பாதைக் காவலர். சாதவா கன்ன என்ற பெயர் ”Indo-Austric முண்டா மொழிகளில் சாத = குதிரை; கன்னா = மகன்” என்பது இதனால் வழிப் பொருள் பெற்றது போலும்.

[கன்னரென்பது கர்ணி என்றும் திரியும். ”காது, கன்னக்குழி” போன்றவை இங்கு பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்னன் சீமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் விதப்பாகச் சொல்லப் படுவான். பாகதத்தில் கிருஷ்ண என்பது கன்ன என்றாகும். கன்னன் என்பது சேரன், சோழன், பாண்டியன், போலக் குடிப்பெயராக முடியும். சேர, சோழ, பாண்டியருக்கு முன்னால் இன அடையாளம் சொன்னது போல், கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநர்>கன்னர் என ஆகியிருக்க வாய்ப்புண்டு. கன்னரின் ஆட்சிக்காலம் கி.மு.230 - கி.பி.220 ஆகும்.

கன்னரின் முதற் பேரரசன் சதகர்ணி I (கி.மு. 180-124) சுங்கரைக் கட்டுப் படுத்தி மாளுவம்/ அவந்தியைப் பிடித்தான். அத்திகும்பா கல்வெட்டும் (கி.மு.172) சதகர்ணி I பற்றிப் பேசும். அச் சதகர்ணிக்குப் பின்னால் ஒரு பெருவீழ்ச்சி கன்னருக்கு ஏற்பட்டது. பிடித்த நிலங்களிற் பெருவாரியை அவர் இழந்தார். மாளுவ நாடு இவர் கையை விட்டுப் போனது. அவ்வீழ்ச்சியால் கி.மு.87-69 இல் இலம்போதரக் கன்னன் காலத்தில், கன்னரின் அரச எல்லை பெரிதும் சுருங்கியது. இக்காலத்திற் சுங்கருக்கு இவர் இறை செலுத்தியிருக்கலாம். இலம்போதரனுக்குப் பின் அபிலகனும் மற்ற அறுவரும் கனகரின் கீழ் வெறும் சிற்றரசராகவே இருந்தார். ஆனாலும் சுங்கர்/கனகரிடமிருந்து மீளூம் வாய்ப்பாய் எதிர்பார்த்துக் கருவிக்கொண்டே இருந்திருக்கலாம். மீண்டும்  வீறு கொண்டு எழுந்து கி.மு. 26-இல் கனகர் அரசை முற்றிலும் வீழ்த்தினார். விதப்பாகக் கன்னன் புலிமாவியின் ஆட்சியில் வலியுற்று, மகதத்தைப் பிடித்தார். அதன் பின் கன்னரரசு மிகப் பெரிதாக விரிவடைந்தது.

சாதவா கன்னரின் முகன்மை, அவர் தக்கணப்பாதையின் வாயிலைக் காத்த மாதண்டநாயகராய் இருந்ததால் ஏற்பட்டது. அதே காரணத்தால், நூற்றுவர் கன்னரைத் தொடர்பு கொள்ளாமல், எந்தத் தமிழரசராலும் வடக்கே படை எடுக்க முடியாத நிலை அக்காலத்தில் இருந்தது. தமிழக வரலாற்றை இந்திய வரலாற்றோடு பொருத்திக் காட்டுவது சாதவா கன்னர் பற்றிய செய்தியே. ]

அன்புடன்,
இராம.கி.


No comments: