Thursday, May 11, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 6

அடுத்தது பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்துப் பதிகம். இரண்டாம் பத்தைப் பாடியவர் குமிட்டூர்க் கண்ணனார். பாடப் பட்டவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன். பதிகம் பாடியது யாரென்று தெரியவில்லை. பதிகங்கள் மூலத்தோடு அன்றி உரைச்சுவடிகளில் மட்டும் உள்ளதால், பதிற்றுப் பத்தைத் தொகுத்தவர் இவற்றை இயற்றியிருக்கலாம் என்பர். 

கடைசிப் பத்தின் தலைவனான யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குப் பின்னிருந்த ஆதன்களும், இரும்பொறைகளும் பதிற்றுப் பத்தில் இடம் பெறாததால், கடைசிப் பத்து எழுந்த சில ஆண்டுகளில் (பொ.உ.மு. இறுதிகளில்) தொகுப்பு நடந்திருக்கலாமோ என எண்ணுகிறோம். இப்பதிகம் சிறியதாயினும் நெடுஞ்சேரலாதனின் பெற்றோரில் தொடங்கி, முகன (main) வாழ்க்கை நிகழ்ச்சிகளை கால வரிசையிற் கூறுவதால் என் விளக்கமும் சற்று பெரிதாகிறது. ஊடே மண்ணு மங்கலம், வாள் மங்கலம், நெய்யிடுதல் போன்ற சில விதப்பான மரபுகளையுஞ் சொல்லவேண்டியுள்ளது. 

-------------------------------- 

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி

இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு

வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற 

மகன்

அமைவரல் அருவி இமையவில் பொறித்து

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்

தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து

நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ

அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு

பெருவிறல் மூதூர்த் தந்துபிறர்க் குதவி

அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்.

இமையவரம்ப நெடுஞ்சேரலாதனைக் 

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு. 

அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பலபுகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன், இவை பாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தெண்ணாட்டுள் வருவதனிற் பாகம் கொத்தான் அக்கோ.. இமையவரம்ப நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்    

------------------------------

என்பது பாட்டும் அதன் பின்குறிப்பும் ஆகும். பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

---------------------------

மன்னிய பெரும்புகழ் மறு இல் வாய்மொழி

இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு,

வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்

அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து,

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇ, 

தகைசால் சிறப்பொடு பேர்இசை மரபின் ஆரியர் வணக்கி,

நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து,

நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ,

அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு,

பெருவிறல் மூதூர்த் தந்து, 

பிறர்க்கு உதவி,

அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்தாள் 

இமையவரம்ப நெடுஞ்சேரலாதனைக் 

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு. 

அவை தாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பலபுகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன், இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில்: உம்பற் காட்டு ஐந்நூறூர் பிரம தாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தெள் நாட்டுள் வருவதனிற் பாகம் கொத்தான் அக்கோ. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்  

-------------------------------------

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். மன்னிய பெரும்புகழ் = நிலைத்த பெரும்புகழும்; மறுஇல் வாய்மொழி = குற்றமிலா வாய்மொழியும்; இன்னிசை முரசின் = இனிது இசைக்கும் முரசுங் கொண்ட; உதியஞ் சேரற்கு = வானவரம்பன் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனுக்கு; இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-143 ஆகும். முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் இவனைப் பாடுவார். அதில் வரும் ஈரைம்பதின்மர் என்பார் நூற்றுவர் கன்னரே (சதகர்ணிகள்) ஆகும். 

பலருஞ் சொல்வது போல் இப்பாட்டில் சொல்லப் படுவது பாரதப் போர் அல்ல. புறம் 2 இன் செய்தியைக் கௌரவ - பாண்டவப் போராய்ச் சித்தரிப்பது தேவையற்ற ”பௌராணிகப்” பார்வை. (இந்தப் பார்வையால் தப்பான புரிதலும் ஏற்படுகிறது.) உதியஞ் சேரல் காலத்திலேயே அசோகனின் ஆட்சிமுறைத் தாக்கம் சேரர் மேல் தொடங்கி விட்டது. கூடவே மோரியருக்கு அடுத்து வந்த சுங்கரின் மேல் சேரருக்குக் கடுப்பிருந்ததும் நாட்பட்ட கதையாகும். 

(ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடை நடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரர் இருந்தார். உதியன் சேரல் காலத்தில் இருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்தது. சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலப்பதிகாரத்தால் விளங்கும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத் தொடரையும் படியுங்கள். 

http://valavu.blogspot.in/2010/08/2-1.htmlம்

http://valavu.blogspot.in/2010/08/2-2.html

http://valavu.blogspot.in/2010/08/2-3.html

http://valavu.blogspot.in/2010/08/2-4.html

http://valavu.blogspot.in/2010/08/2-5.html

வெளியன் வேண்மாள் நல்லினி = வெளியன் வேளின் மகளாகிய நல்லினி; வெளியன் வேள் பெரும்பாலும் பொதினியின் ஆவியர் குலத்தைச் சேர்ந்திருக்கலாம். (இற்றைப் பழனியே பழம் பொதினி. அதன் அடிவாரத்தில் தான் ஆவினன்குடி எனும் ஊர் உள்ளது.) ஆவியர் குடியோடு சேரர் குடிக்குக் கொடிவழி தோறும் மணத் தொடர்பு இருந்துள்ளது. 

உதியனின் மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குடக்கோ நெடுஞ் சேரலாதன் என்பர். இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 166 - 109. அக்காலத் தமிழகத்தில் 16/18 அகவையில் ஆண்மகனுக்குத் திருமணம் நடந்து விடும். 20/25 இல் இளவரசுப் பட்டஞ் சூட்டிவிடுவர். ஆட்சியாண்டுகள், இளவரசுப் பட்டம் கட்டியதிலிருந்தே கணக்கிடப் படும். இல்லாவிடில், ”58 ஆண்டு நெடுஞ்சேரலாதனாட்சி”, ”55 ஆண்டு செங்குட்டுவனாட்சி” என்ற தொடர்களுக்குப் பொருள் இராது. அரசுப் பட்டமளிப்பு யாருக்கும் தனித்து நடந்ததாய் பதிற்றுப்பத்துக் குறிப்புகள் தெரிவிப்பதில்லை.   

நெடுஞ்சேரலாதனுக்கு 2 மனைவியருண்டு. நெடுஞ்சேரலதனின் தாய் நல்லினியின் சோதரன் தான் வேளாவிக் கோமான் (இவன் மன்னன் இல்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன், ஊர்ப் பெரியவன்.) ஆவான். நெடுஞ்சேரலாதன்,  வேளாவிக் கோமானின் முத்த மகள் பதுமன் தேவியை, தன் முதல் மனைவியாய்ப் பெற்றான். அவள் மூலம் இவனுக்குப் பிறந்தவர் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆவர். சேரலாதனின் அடுத்த மனைவி ஞாயிற்றுச் சோழனின் மகளான நற்சோணை. இவளுக்குப் பிறந்தவனான  செங்குட்டுவன் முந்தை இருவருக்கும் இடைப்பட்டவன் ஆவான். 

நெடுஞ் சேரலாதனின் மகனாய்ப் பலருஞ் சொல்லும் இளங்கோவின் இருப்பு சிலம்பின் வரந்தரு காதை 171-183 வரிகளில் மட்டுமே அன்றி வேறெங்கும் தென்படுவதில்லை. அக்காதையை இடைச் செருகல் என நான் ஐயுறுவதால் இளங்கோ என்பவர் செங்குட்டுவனின் தம்பி என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் சிலம்பின் ஆசிரியர். அவ்வளவு தான். அவர் பற்றிய செய்திகள் வேறெங்குமோ, பதிற்றுப் பத்திலோ வரவில்லை. வரந்தரு காதையில் உள்ள பெரும் முரண்களைப் பற்றி  என் ”சிலம்பின் காலம்” நூலில் தெரிவித்துள்ளேன். 

குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்குப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற தம்பியுண்டு. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 156 - 132. இவன் வேந்தன் ஆகாததால், வானவரம்பன் எனும் பட்டத்தைச் சூடான். அடுத்தது களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். இவன் காலம் பொ.உ.மு. 131-107. இவனின் இயற் பெயர் தெரியவில்லை. இவன் பெயரின் முன்னொட்டு ஒருவகை மகுடத்தைக் குறிக்கும். நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இறந்த பின், தன் மூத்தாள் மகனுக்கும், இளையாள் மகனுக்கும் சம காலத்தில் நெடுஞ்சேரலாதனே இளவரசுப் பட்டஞ் சூட்டியிருக்கலாம். நெடுஞ்சேரலாதனுக்குப் பின்  நார்முடிச் சேரல் வானவரம்பன் ஆகி அரசுகட்டில் ஏறினான். இவனுக்கு இன்னொரு பெயரும் இருந்திருக்கலாமென்று ஊகிக்கிறோம்.    

புறம் 62 இல் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வளநாட்டு வேற்பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும் (நெடுஞ்சேரலாதனின் மைத்துனன்; நற்சோணையின் சோதரன்) பொருதுகையில் இருவரும் இறந்து பட்டதாய்க் கழாத்தலையார் சொல்வார். அதே பொழுது புறம் 65 இல் நாக நாட்டுக் கரிகால் வளவன் [பெரும்பாலும் இவன் 2 ஆம் கரிகாலன் ஆகலாம். முதற் கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின் மேல் படையெடுத்ததைச் சிலம்பால் அறிவோம். முதற் கரிகாலனையும், அடுத்தவனையும் பல ஆய்வாளர்  குழம்பித் தடுமாறுவார்.] வெற்றி பெற்றதையும், பெருஞ் சேரலாதன் வடக்கு இருந்ததையும் சொல்வார். எனவே நெடுஞ்சேரலாதன் வேறு, பெருஞ்சேரலாதன் வேறு என்பது புரியும். ஆழ ஆய்ந்தால் புறம் 62 இல் விவரிக்கப் படுபவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று விளங்கும். அப்படியெனில் 65 ஆம் பாட்டில் வரும் பெருஞ்சேரலாதன் யார்? . 

நார்முடிச் சேரல், வாகைப் பெருந்துறையில் நன்னனை வெற்றி கொண்டது பதிற்றுப்பத்தில் பெருஞ் செயலாய்ச் சொல்லப் பெறும். ”வாகைப் பெருந்துறைச் சேரலாதன்” என்று வருங் கூற்றே, ”பெருஞ்சேரலாதன்” பெயருக்கு விளி கொடுத்தது ஆகலாம். அதை வைத்துப் பார்த்தால், கி.மு.131-107 என்ற இடைப் பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதன் என்றும் நடுத்தம்பியைக் குட்டுவச்(=சிறிய) சேரலாதன் என்றும், கடைத் தம்பியை ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச் சேரலே பெருஞ்சேரலாதனாக இருந்திருக்க வாய்ப்புண்டு. இவ்விளக்கத்தோடு புறநானூற்றில் சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடிய 66ஆம் பாட்டைப் பார்க்கலாம். இப்பாட்டில் கரிகால் வளவனின் பெயர் வெளிப்பட வரும். பெருஞ்சேரலாதனைப் பெயர் சொல்லாமற் குறிப்பார்,   

இனிக்  கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவன் என முதலிலும் கங்கைப் பேர்யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன் எனப் பின்னும், பெயர் பெற்றவனைப் பார்ப்போம். இவன் காலம் பொ.உ.மு.131-77 ஆகும். வெல்கெழு குட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறென்று பல காலம் தமிழறிஞர் பிளவு பட்டார். இதில் வேடிக்கை என்ன தெரியுமோ? இவனுடைய இயற்பெயர் என்னவென இன்றும் கூட யாருக்கும் தெரியாது. 

இன்றுங் குட்டுவனைக் குட்டனென மலையாளத்தில் சொல்வார். சிறியவன் என்று பொருள்படும். அகவை, அளவு, முறை இப்படி எத்தனையோ வகையில் குட்டனாகலாம். ஈழப் பெருந்தலைவரான பிறகும், பிரபாகரனைத் ”தம்பி” என அழைத்தவர் மிகுதி. அவர் பெயர் தம்பியா? இல்லையே? விளிப் பெயரே எல்லோருக்கும் பரவலாய்ப் பழகிப் போயிற்று. குட்டுவனும் அப்படித் தான். வெல்கெழு குட்டுவன் = வெல்லுங் குணங் கொண்ட குட்டுவன்;. செங்குட்டுவன் = செந் நிறக் குட்டுவன். அவ்வளவு தான் தமிழரில் இப்படிப் பெயர்கள் அமைவது கொஞ்சமும் வியப்பேயில்லை. இப்படிச் சில பெயர்கள் சட்டென்று பொருந்திக் கொள்ளும். 

செங்குட்டுவன் கங்கைக்கரை போகிய செயல் பதிற்றுப்பத்தின் 4ஆம் பத்தில் வராது  பதிகத்தில் மட்டுமே வரும். கண்ணகிக்குக் கல்லெடுத்தது குட்டுவனின் கடைசிக் காலத்தில் என்றே கொள்ள வேண்டியுள்ளது. குட்டுவன் 55 ஆண்டு காலம் ஆட்சி செய்தான். அவன் விறல் வெளிப்பட வெளிப்பட விதம் விதமாய்ப் பாடியோர்அழைத்திருப்பார். 25 வயதிற் குட்டுவன் இளங்கோ ஆகையில் பரணருக்கு 50 வயதென வையுங்கள். கடல் பிறக்கோட்டிய செயல் அடுத்த சில ஆண்டுகளில் நடந்தால், பரணர் அதைச் சொல்வார். அதன்பின் செங்குட்டுவன் நடு அகவை ஆகையில் முதல் முறை வடக்கே படையெடுத்துப் போனான். (பரணர் உயிரோடிருந்தால் தானே இதைச் சொல்வார்? இயலுமையை எண்ணிப் பாருங்கள்.) இது சேரரின் இரண்டாம் வடபடையெடுப்பு. (முதற்படையெடுப்பு குடக்கோ நெடுஞ்சேரலாதனின் இளமைக் காலத்தில் நடந்தது.)  

வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்

கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது

கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்

எங்கோ மகளை ஆட்டிய அந்நாள் 

ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு

ஒருநீ யாகிய செருவெங் கோலம்

கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்

என்பது சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தின் காட்சிக் காதை 158-164 வரிகளாகும். இது அமைச்சன் வில்லவன் கோதையின் கூற்று. இங்கே கோமகள் என்றது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இரண்டாம் மனைவி நற்சோணையை. அவள் கங்கையில் ஆடியது பெரும்பாலும் வாரணாசியாகலாம். பொதுவாய்ப் பலரும் ஒரு முறையே செங்குட்டுவன் வடக்கே போனதாய் எண்ணிக் கொள்கிறார். கிடையாது. சிலம்பின் படி அவன் இரு முறை போயுள்ளான். முதல் முறையில் பெரும்பாலும் சுங்கன் வஜ்ரமித்ர பாகபத்ரனோடு சண்டையிட்டிருக்கலாம். இரண்டாம் முறை பாகபத்ரனின் மகன் தேவபூதியோடும், அவன் அமைச்சன் விசய கனகனோடும் சண்டை இட்டிருக்கலாம். செங்குட்டுவனின் முதல் படையெடுப்பின் பின்புலம் தேடுவோம். 

சுங்கன் வஜ்ரமித்ர பாகபத்ரன் காலத்தில் (பொ.உ.மு. 119-83) மகதம் ஆட்டங் கொள்ளத் தொடங்கியது. பாடலி புத்தத்திற்கு மாறாய் விதிசாவுக்கு (இதை Beznagar என்பார். இற்றை ம.பி. மாநிலத்தில் உள்ளது. இங்கு தான் அசோகன் முதற்கொண்டு பல்வேறு மகத இளவரசர் ஆட்சி புரிந்துள்ளார்.) தலைநகரும் மாற்றப்பட்டது.  கொஞ்சங் கொஞ்சமாய் மகதம்  சுருங்கியது. 

கலிங்கர், நூற்றுவர் கன்னர், இந்தோ-சித்திய “சக” அரசர் என மகதத்தைக் கவரமுயன்ற பலரோடும் சண்டைகள் தொடங்கின. இக்காலத்தில் தான் பாணினியின் ”அட்ட அத்தியாயிக்கு” பதஞ்சலியார்  மாபாடிய (மகாபாஷ்ய) விரிவுரை எழுதினார். பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சூற்றம் (சந்தசூத்ரம்) சுங்கர் கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம். 

பாகபத்ரனின் ஆட்சி முடிவில் நூற்றுவர் கன்னர் மகதத்தைத் தாமே பிடித்துக் கொள்ள முயன்றார். மகதம் வலி இழந்தது இந்தியா எங்கணும் தெரிந்திருக்கும். இந்நேரத்தில் சேரன் செங்குட்டுவனும் வடக்கே படையெடுத்துப் போகத் துறுதுறுத்தது இயற்கையே. இக்காலத்தில் செங்குட்டுவன் தன் தந்தையின் சார்பாக முதல்முறையாக வடக்கே சென்றுள்ளான். அவன் தாய் கங்கையில் முழுக்காட வந்ததாய்ச் சிலம்பின் காட்சிக்காதை 160-161 வரிகள் தெரிவிக்கும். 

2 ஆம் முறை கங்கைக்கரை போகையில் செங்குட்டுவனுக்கு அகவை 78/80 ஆயிருக்கலாம். மகதக் குழப்பத்திற் தானும் புகுந்து இன்னொரு முறை விளையாட முடியுமென்று சேரனுக்குத் தெரிந்த காரணத்தால் கண்ணகி கதையைத்  தன் அரச முயற்சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறான். செங்குட்டுவன் 2 ஆம் படையெடுப்பு நடக்கும்போது இருந்த சுங்க அரசன் தேவபூதி ஆகலாம். இவன் காலம் பொ.உ.மு. 83-73 (இக் கடைசிச் சுங்கன். அளவு மீறிய காமத்திலும், கேளிக்கையிலும் ஈடுபட்டதால், இவன் முதலமைச்சனான வாசுதேவக் கனகனே பின்னாற் கொன்று விடுவான். விசயன் என்பது வாசு தேவனின் மறு பெயரோ, அன்றி வாசு தேவனின் தந்தையோ எனத் தெரிய வில்லை.).

அதற்கு அப்புறம் கனகரே மகதத்தை ஆட்சி செய்வார். தேவபூதிக்குத் தனுத்ர பூதியென்ற பெயரும் இருக்கலாம். பாகதச் சான்றுகள் கொண்டு இம்முடிவை உறுதிசெய்ய வேண்டும். ”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்ரன் சிவேதன்” என ஆரியவரசர் பெயர்களைச் சிலப்பதிகாரஞ் சொல்லும். ”இவற்றில் எவை இனக்குழுப் பெயர், எவை இயற்பெயர்?” என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ”சிங்கன் தனுத்ரன்” என்பது ”சுங்கன் தனுத்ரனாய் இருக்குமோ?” என்ற ஐயம் கட்டாயம் எழுகிறது. இது சேரரின் 3 ஆம்  படையெடுப்பு. மயிலை சீனி வேங்கடசாமியாரும் சேரர் 3 முறை வடக்கே படையெடுத்ததாய்ச் சொல்வார். 

செங்குட்டுவனுக்குப் பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பட்டமேறினான். 6 ஆம் பத்தின் பதிகம் ”நெடுந்தொலை உள்ள தொண்டகக் காட்டுள் பகைவர் கொண்டுபோன வருடைக் (ஆடு) கூட்டத்தைப் பெருமுயற்சியால் தொண்டித் துறைக்குத் திரும்பக் கொணர்ந்தவன்” என ஆடுகோட்பாட்டிற்குப் பொருள் சொல்லும். பழம்போரில் ஆக்களைக்  கவர்வதை வெட்சியென்றும், மீட்டுவதைக் கரந்தை என்றுஞ் சொல்வர். தொல்காப்பியர் கரந்தையை வெட்சியின் ஒரு பகுதியாகவே சொல்வார். தவிர, இரண்டுஞ் சேர்ந்தது ஆகோட் பூசலாகும். அதேபோல் ஆடுகோட் பூசலுமுண்டு. 

பெரும்பாலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் காலம் பொ.உ.மு. 106-75 ஆகும். செங்குட்டுவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்து வானவரம்பன் எனும் பெயருங் கொள்வான். இவன் வேந்தனானதற்கு இதுவே அடையாளம். இவனுக்கு ஆட்டனத்தி எனும் இன்னொரு பாகமும் உண்டு. ஆடுவதில் பெருந்திறன் பெற்றவன்; செந்நிறத்தால் அத்தியெனும் (=சிவப்பு) விளிப்பெயர் உற்றான். நெடுஞ்சேரலாதன் வள நாட்டிற் பெண்ணெடுத்தான். அவன் மகன் நாக நாட்டில் மணந்து கொண்டான். 

(பெண் கொடுப்பதும், சண்டை போடுவதும் மூவேந்தரிடை தொடர்ந்து நடந்த கூத்துகள்.) பெரும்பாலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனே 2 ஆம் கரிகாலன் மகள் ஆதிமந்தியை மணந்திருக்கலாம். சிலப்பதிகாரம் இவன் அரசவையில் அரங்கு ஏறியிருக்கலாம். இதன் காரணத்தைச் “சிலம்பின் காலம்” நூலில் விளக்கியிருப்பேன். செங்குட்டுவனின் மகன் குட்டுவன் சேரல் (இயற்பெயர் தெரியாது) பற்றிய விவரம் நமக்குத் தெரியவில்லை. 

இப்போது 2ஆம் பத்தின் பதிகத்திற்கு வருவோம். அமைவரல் அருவி = நெஞ்சையள்ளும் அருவியுள்ள; இமையம் வில்பொறித்து =இமையத்தில் விற்சின்னம் பொறித்து; இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க = ஓசுங் கடல்வேலி கொண்ட தமிழகம் விளங்கும்படி; தன்கோல் நிறீஇ = தன் செங்கோலை (அங்கு) நிறுவி; தகைசால் சிறப்பொடு = தகுதிநிறைச் சிறப்பொடு; பேரிசை மரபின் ஆரியர் வணக்கி = பெரும்புகழ் மரபு கொண்ட ஆரியரை அடக்கி; 

ஆரியரென்போர் இங்கு எதிரியாகவே மதிப்புடன் சிறப்பித்துச் சொல்லப் படுகிறார். அவருக்கும் தனி மரபுண்டு என்று ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அப்படி ஆவதாலேயே தமிழர் மரபும், ஆரியர் மரபும் சில வகைகளில் வேறு படலாம் என்பது வெள்ளிடைமலை; இப்படையெடுப்பு நெடுஞ்சேரலாதன் பட்டமேறிய சில ஆண்டுகளுள், பெரும்பாலும் பொ.உ.மு 160 க்கு அருகில் நடந்திருக்கலாம். அப்போது மோரியரரசைத் தொலைத்து புஷ்யமித்திரன் (பொ/உ/மு.165-149) வந்து விட்டான். 

[இங்கே ஒரு போகூழைச் சொல்லித் தான் ஆகவேண்டும். வில்லும், புலியும், கயலும் இமையத்தில் பொறித்ததை இலக்கியத்திற் பலகாலம் நாம் படித்தாலும், அவை எந்த இடங்கள் என்று நமக்குத் தெரியாது. குத்து மதிப்பாய், காசிக்கும், பாட்னாவிற்கும் வடக்கிருக்கலாமென ஊகஞ் செய்கிறோம். சான்றுகளுடன் இவற்றை நிறுவ ஒரு செய்தியும் நமக்கு இதுவரை கிட்டவில்லை. தொல்லோவியர், கல்வெட்டாளர் போன்றோர் வட நில ஆய்வாளருடன் சேர்ந்து தேட வேண்டும். பதிற்றுப் பத்து அரசருக்கு இணையான சுங்கர், கனகர் பற்றிய வட தரவுகள் நமக்கு வேண்டும். சேரலாதனும் செங்குட்டுவனும் வடக்கே போனாரா என்பதை நம் பக்கச் சான்றைக் கொண்டு சொல்வது ஒரு வகை. எதிரிகள் பக்கம் இருந்து காண்பது இன்னொரு வகை. பல்லாசிரியரும் அசோக மோரியனுக்கு அப்புறம் குத்தருக்குத் (குப்தர்) தாவிவிடுவார். கிட்டத்தட்ட 400 ஆண்டு காலம் அங்கும் ஒரு பெரிய வரலாற்று இடைவெளி இருக்கும். தவிர வடபகுதிகளின் மாகத (புத்த), அர்த்த மாகத (செயின) நூல்களைப் பார்க்க வேண்டும். 

நம்மூர் ஆய்வாளர் பாலி, பாகத மொழிகளை அறிவது மிக இன்றியமையாதது. சங்கதம் வைத்தே எல்லாஞ் செய்து விடலாம் என்பது கானல் நீர். சங்ககால வரலாற்றை அறியச் சங்கத நூல்கள் இதுவரை உதவவில்லை. சங்க காலத்தை முன் சொன்னது போல் பொ.உ.மு.600-பொ.உ.150 இல் தேடவேண்டும். பொ.உ.மு.300-பொ,உ. 300 என்பது வரலாற்றாய்வில்  நாம் இதுவரை செய்த பெரும்பிழை. அதை அப்படியே புளியங்கொம்பாய்ப் பிடித்துக் கொண்டு  ”அவர் சொன்னார், இவர் சொன்னார்” என. 20ஆம் நூற்றாண்டு ஆய்வாளர் வழி நூறாண்டு காலம் தவறாய்த் தேடி முட்டுச்சந்துக்குள் வந்து விட்டோம். 

இன்னுந் தள்ளி பொ.உ.500 வரை சிலம்பைத் தள்ளுவது முற்றிலும் வறட்டுத் தனமானது, போகாத ஊருக்கு வழி தேடுவதாகும். Status quo doesn't take us anywhere. பல்லாண்டு ஆய்வின் பின் தான் இதைச் சொல்கிறேன். சங்க கால மகதத்தில் பாகதமே பேராட்சி பெற்றது. சங்கதம் வடமேற்கிருந்து கொஞ்சங் கொஞ்சமாய் எழுந்து படித்தோரிடையே பரவியது. குத்தருக்கு அப்புறமே வடக்கிலும் (பல்லவருக்கு அப்புறமே தெற்கிலும்) சங்கதம் மேலோங்கியது.] 

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து = நயமிலா வன்சொல் பேசும் யவனரைச் சிறைப்படுத்தி; ஆரியரைச் சொன்னவுடன் யவனரைச் சொல்வதால் இது இந்தோ-சித்தியரை/ சத்ரபரை/ சகரை என்று புரிந்துகொள்ள வேண்டும். அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் வந்து வெளிச்சென்ற போது அவர் படையும், ஆளுநரும் இங்கே இருத்தி வைக்கப்பட்டார். பின்னால் இந்த ஆளுநர் தனித்தியங்கும் மன்னராய் மாறி மதிப்புடன் இந்தியாவிற்குள் விரிய நுழைந்தார். 

அவந்தி நாட்டின் உச்செயினி வரை அவர் வந்தார். அவந்தி நாட்டோடு தமிழர்க்கு இருந்த தொடர்பு சிலப்பதிகாரத்தால் வெளிப்படும். முதலாங் கரிகாலன் காலத்தில் (கிட்டத்தட்ட பொ.உ.மு.462) தமிழகத்தோடு நட்பாக இருந்த அவந்தி நாடு பின் காலங்களில் நட்பாகவும் பகையாகவும் ஆட்சியாளருக்குத் தக்க மாறி மாறி இருந்தது. படித்தானம் தொடங்கி மகதம் வரை செல்லும் தக்கணப் பாதைக்கு உச்செயினி மிக அருகில் தான் இருந்தது. இந்தோ - சித்திய யவனரை பொ.உ.மு.160 இல் தெற்கிருந்து வடக்கே போன சேரர் சிறைப்படுத்துவது நடக்கக் கூடியது தான் 

நெய்தலைப் பெய்து = (வாளின்) தலையில் நெய்யிடுஞ் சடங்கு செய்து; கைபின் கொளீஇ = பின் அதைக் கையிற் கொண்டு;

இங்கோர் இடைவிலகல். ”நெய்யிடுதல் ஏதோ கப்பலில் வந்த யவனருக்கு அளித்த தண்டனை என்றே” உரையாசிரியரும், தமிழாசிரியரும் தவறாய்ப் பொருள் சொல்வர். மாறாக ”இது மங்கலமானது; சேரன் பக்கஞ் சொல்வது; யவனர் பக்கமல்ல” என்பதை இன்றும் மிஞ்சிக் கிடக்கும் மரபுகள் சொல்லும். பட்டமேறல் (அரசர், சமய ஆதீனங்கள் பட்டம் ஏறுவது, ஆண்டு தோறும் அதைக் கொண்டாடுவது), நல்ல நாள், பெரிய நாட்களில் வீட்டுப் பெரியவர் தலைவருக்குச் செய்வது, கோயில் குடமுழுக்கிற் செய்வது, இறைப் படிமத்திற்குத் திருமஞ்சனம் ஆட்டுவது எனப் பல்வேறு விழவுகளில் நெய் தலைப்பெய்தல் இன்றும் கூட நடக்கிறது. இவ்வளவு ஏன்? மணம்முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் பிள்ளை வீட்டிற்குச் செல்லுமுன் பெண்வீட்டில் மஞ்சள்நீராட்டின் முன் ஒவ்வொரு பெரியவரும் இவர் தலையில் நெய்யைச் சிறிதேயிட்டுப் மஞ்சளுந் தடவி சிகைக்காயும் பூசி நீராடலாகும். மாப்பிள்ளையும், பெண்ணும் புதுக் குடித்தனம் போகிறாரல்லவா? புது வாழ்க்கைக்கு வாழ்த்துக் கூறி நெய் தலைப்பெய்தல் இன்றும் நடைபெறுகிறது. 

இப் பழக்கம் சீவக சிந்தாமணி கோவிந்தையார் இலம்பகத்திலும் (487 ஆம் பாட்டு) குறிக்கப்படும். 

நாழியுள் இழுது நாகுஆன் கன்றுதின்று ஒழிந்த புல் தோய்த்து

ஊழுதொறு ஆவும் தோழும் போன்றுடன் மூக்க என்று

தாழிருங் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி 

மூழைநீர் சொரிந்து மொய்கொள் ஆயத்தியர் ஆட்டினாரே

நெய்யிடும் இப் பழக்கம் இன்று தீபாவளிப்பண்டிகையின் போதும் தொடர்கிறது. (நான் தீபாவளிப்பண்டிகையின் தோற்றத்துள் போகவில்லை. அதனுள் நடக்கும் ஒரு சடங்கை மட்டுமே சொல்கிறேன்.) தீபாவளியின் தொடக்கமாய்த் தலையில் எண்ணெய் தேய்த்து நீராடும் வழக்கம் மண்ணுமங்கலத்தில் தொடங்கியது.  

ஆங்கிலத்தில் இச் சடங்கை anointing என்பர். unction என்றொரு பெயருமுண்டு. உலகமெங்கும் நெய் தலைப்பெய்தல் வெவ்வேறு நாகரிகங்களில் நடந்துள்ளது. http://biblehub.com/topical/a/anointing.htm என்ற வலைத்தளம் பாருங்கள். விவிலியத்திற்கூட ஆசிகூறித் தலையில் நெய்யிடும் பழக்கமுண்டு. இதைக் குறிக்கும் பலமொழிச் சொற்களிலும் நெய் உள்ளே அடங்கிக் கிடக்கும். தமிழன் நாகரிக முன்னோடி என்றால் நம்ப ஆளில்லாது இருக்கலாம். ஆனால் anointing என்பதற்குள் ”நெய்” என்ற சொல் கட்டாயமுண்டு. [Pun intended] unguent (n.) Look up unguent at Dictionary.com. "ointment," early 15c., from Latin unguentem "ointment," from stem of unguere "to anoint or smear with ointment," from PIE root *ongw- "to salve, anoint" (source also of Sanskrit anakti "anoints, smears," Armenian aucanem "I anoint," Old Prussian anctan "butter," Old High German ancho, German anke "butter," Old Irish imb, Welsh ymenyn "butter")

நெய்யிடல் சேர்ந்த நீராட்டு வழக்கம் மண்ணனம் என்றும்,. மண்ணுமங்கலம் என்றும் பழந்தமிழ் வழக்கிற் சொல்லப்படும். (மண்ணுதல் = நீராடுதல், மூழ்குதல், கழுவுதல், பூசுதல், செய்தல், அலங்கரித்தல், செப்பமிடுதல். மண்ணனம்>மஞ்ஞனம்>மஞ்சனம் என்றும் இது திரியும். மங்கலத்தை திருவென்ற வேறு சொல்லாக்கி இன்று திருமஞ்சனம் என்கிறோம். இந்த விண்ணவச் சொல் மண்ணுமங்கலத்தில் எழுந்தது. பொதுவாய் விண்ணவ, சிவ ஆகமங்களில் உள்ள பல்வேறு பழக்கங்களும் பழங்குடிப் பழக்கங்களாய் ஆகின்றன. சமயங்களுக்கும் இதற்கும் மெய்யியல் வரிதியாய்ப் பெரிதும் உறவைக் காணோம்.) தொல்காப்பியம் பொருளதிகாரம், புறத்திணை இயலில் பாடாண் திணையை விவரிக்கையில் 1037 ஆம் நூற்பாவில் “சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம்” என்று வரும். 

சேரன் பட்டமேறிய போதும் ஓவ்வோராண்டும் இது நடைபெற்றிருக்கும். இங்கே இன்னும் விதந்து வேறொன்று சொல்லப் படுகிறது. ஒரு பெரிய போரில் வெற்றி பெற்று வந்த பின்னால் வாள், வேல், முரசு போன்றவற்றிற்குப் படையல் நடக்கும். அதிலும் இந் நெய்யிடுதற் சடங்கு நடைபெறும். அந்நிகழ்வை பழங்காலத்தில் வாள்மங்கலம் என்பர். இதுவும் மேற்சொன்ன நூற்பாவில், மாணார்ச் சுட்டிய வாள்மங்கலம்” என்று குறிப்பிடப்பெறும். (மாணார் = பகைவர்)     . .

அருவிலை நன்கலம் = அருவிலையுள்ள நல்ல அணிகலன்களை வயிரமொடு = (அதிற் பொருத்திய) வயிரத்தோடு கொண்டு; பெருவிறல் மூதூர்த் தந்து = பெருவல்லமையோடு தலைநகர்க்குத் தந்து; பிறர்க்கு உதவி = பிறருக்கு உதவி; அமையார்த் தேய்த்த = அடங்காதாவரை அழித்த அணங்குடை நோன் தாள் = அணங்குடைய வலியகால் கொண்ட; இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை =  இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை;     

இனிப் பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

நிலைத்த பெரும்புகழும், மறுவிலா வாய்மொழியும், 

இனிதேயிசைக்கும் முரசுங் கொண்ட 

வானவரம்பன் உதியஞ்சேரலாதனுக்கு, 

வெளியன்வேள் மகளாகிய நல்லினி ஈன்ற மகன்

நெஞ்சையள்ளும் அருவியுள்ள இமையத்தில் வில்பொறித்து, 

ஓசுங்கடல்வேலி கொண்ட தமிழகம் விளங்கும்படி தன் செங்கோல் நிறுவி, 

தகுதிநிறைச் சிறப்பொடு பெரும்புகழ் மரபுகொண்ட ஆரியரை அடக்கி, 

நயமிலா வன்சொல்பேசும் யவனரின் பொருளைச் சிறைப்படுத்தி, 

அவ்வெற்றியின் பின், 

(வாளின்) தலையில் நெய்யிடுஞ் சடங்கு செய்து 

பின் வாளைக் கையிற்கொண்டு,, 

அருவிலையுள்ள நல்ல அணிகலன்களை, 

(அதிற்பொருந்திய) வயிரத்தோடு கொண்டு, 

பெருவல்லமையோடு தலைநகர்க்குத் தந்து, 

பிறருக்கு உதவி, 

அடங்காதாவரை அழித்த, 

அணங்குடைய வலியகால் கொண்ட, 

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை;     

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு. 

அன்புடன்,

இராம.கி.


No comments: