Friday, May 05, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 3

அடுத்தது அகநானூறு 336, பாவைக் கொட்டிலார் பாடியது. இவர் பெயர் சற்று விதப்பானது. கொட்டுதல்= வளைத்தல். குழல், குடல், கூடு, கூடையென வளைபொருளில் தமிழில் ஏராளம் சொற்களுண்டு. கொட்டு = பிரப்பந் தண்டை வளைத்துச் செய்த கூடை. கொட்டில் = சிறிய பிரப்பங் கூடை. நெற்கொட்டில் = நெல்லிடுங்கூடை. பாவைக்கொட்டில் = பொம்மைகளைப் போட்டுவைக்கும் பிரப்பங்கூடை. 

இக் காலத்தில் எல்லா வீடுகளிலும் பொத்திகைக் (plastic) கூடையில் தான் பொம்மைகளைப் போட்டுவைக்கிறார். (elastic-ற்கு மட்டுமே ”நெகிழியைப்” பயன்படுத்துவது நல்லது. பொத்திகை (plastic) ஐயும் நெகிழியயும் (elastic) ஐயும் பிரித்துக் கையாள வேண்டாமோ?) 

அக் காலத்தில் பிரப்பம் புல் (இதைக் கொடி என்பாரும் உண்டு.) தமிழக மருத நிலங்களில் ஆற்றங் கரைகளிலும், ஈரஞ் செறிந்த ஏரிக் கரைகளிலும் பெரிதும் வளர்ந்தது. இன்றுங் கூடச் சீர்காழி-புகார்ப் பாதையில் பிரம்புப் பொருட்களுக்கும், கோரைப் பொருட்களுக்கும் பேர்பெற்ற தைக்காலைக் காணலாம். (பிரம்பும் கோரையும் வேறு பட்டவை.) அவ்வழி போகும் சுற்றுலாக்காரர் ஏதேனும் ஒரு பிரம்பு/கோரைப் பொருளை அங்கிருந்து வாங்காது போகார். http://www.kadalpayanangal.com/2014/07/1.html 

பிரம்பும் மூங்கிலைப் போன்றது; ஆனாற் சற்று வேறுபட்டது. மிகப் பெரிதாகவும், மெல்லிதாகவும் அன்றி, நடுத்தர விட்டங் கொண்ட பிரப்பந் தண்டின் முள்களைச் சீவி, தண்டை நெருப்பிற் காட்டிக் கொஞ்சஞ் கொஞ்சமாய் அதை வளைத்துப் பல்வேறு அறைகலன்கள் (furnitures), அணிபொருட்களைச் (ornamental goods) செய்வர். இதில் பாவைக் கொட்டிலும் ஒன்று. 

கும்பகோணம்-கதிராமங்கலம் சாலையிற் சென்றால் ஊடுவரும் திருக்கோடிகாவில் பிரம்பே தல மரமாகும். சென்னைப் பெரம்பூர் என்பது கூடப் பிரம்பூர் தான். இக்காலத்தில் பிரம்பு தமிழகத்தில் அருகி விட்டது. எல்லோரும் செயற்கைப் பொருள்களுக்கே ஆலாய்ப் பறக்கிறார். பெரும்பாலும் பீகார், இராசசுத்தான், ஆசியத் தென்கிழக்கு போன்ற இடங்களிலிருந்து தான் பிரம்பும், பிரப்பம் பொருட்களும் இன்று நம்மூருக்குக் கொண்டுவரப் படுகின்றன. பிரப்பங் கொட்டில் என்பது மிகச் சரியான மருதத் திணைப் பொருள். பாவைக்கொட்டிலார் ஒரு வேளை சோழநாட்டுத் தைக்காலுக்கு அருகில் இருந்தாரோ, என்னவோ? எண்ணிப் பார்க்க மனம் குறுகுறுக்கிறது. 

பாடல் மருதத் திணை. நயப்புப் பரத்தை (விருப்பமானவள்; hero's current lover) இற்பரத்தைக்குப் (concubine; சின்னவீடு...:-)) பாங்காயினார் கேட்பச் சொல்கிறாள். பாட்டிற் பேசப் படுவோர் பரத்தைகள் என்பதைச் சுற்றி வளைத்த உணர்கிறோம். 

”என்னாங்கடி, சக்களத்திகளா? என்னிடமா விளையாட்டு? இவ்வூர்த் தலைவன் என்னைச் சுற்றி வரும்படி ஆக்க வில்லை எனில், சோழரின் வல்லக் கோட்டையில் ஆரியர் படை மண்ணைக் கவ்வியது போல், நானுங் கவிழ்ந்து என் வளையை உடைத்துக் கொள்வேனடி” என்று சூளுரைக்கிறாள். சென்னை நகரத் தண்ணீர்க் குழாயடியில் பெண்கள் சண்டையடிப்பது போல் இவளின் சண்டை தெரிகிறதோ? படியுங்கள். சற்று நீளமான பாட்டு. இதன் விளக்கமும் நீளந் தான். என்னைப் பொறுத்துக் கொள்க.

குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்

பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த

உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய

நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய்

வாளையொ டுழப்பத் துறைகலுழ்ந் தமையின்

தெங்கட் தேறல் மாந்தி மகளிர்

நுண்செயல் அங்குடம் இரீஇப் பண்பின்

மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழிணர்க்

காஞ்சி நீழல் குரவை அயரும்

தீம்பெரு பொய்கைத் துறைகேழ் ஊரன்

தேர்தர வந்த நேரிழை மகளிர்

ஏசுப என்பவென் நலனே அதுவே

பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக்

கொல்களிற் றியானை நல்கல் மாறே

தாமும் பிறரும் உளர்போற் சேறல்

முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்

யானவண் வாரா மாறே வரினே 

வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சிபோல்

என்னொடு திரியா னாயின் வென்வேல்

மாரியம்பின் மழைத்தோற் சோழர்

வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை

ஆரியர் படையின் உடைகவென்

நேரிறை முன்கை வீங்கிய வளையே.

என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

குழல்கால் சேம்பின் கொழுமடல் அகல்இலைப் 

பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த 

உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,

நாள்இரை தரீஇய, எழுந்த நீர்நாய்

வாளையொடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின்,

தெங்கள் தேறல் மாந்தி,

மகளிர் நுண்செயல் அம்குடம் இரீஇப் 

பண்பில் மகிழ்நன் பரத்தைமை பாடி, 

அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்

தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன்,

தேர் தர வந்த நேரிழை மகளிர்

ஏசுப என்ப என் நலனே அதுவே

பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்

கொல் களிற்று யானை நல்கல் மாறே

தாமும் பிறரும் உளர் போல் சேறல்

முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்

யானவண் வாராமாறே 

வரினே 

வான் இடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல்

என்னொடு திரியான் ஆயின் 

வென்வேல் மாரியம்பின் மழைத்தோற் சோழர்

வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை

ஆரியர் படையின் உடைகவென்

நேரிறை முன்கை வீங்கிய வளையே.

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். கொழகொழ என்ற சேப்பங் கிழங்கிற் செய்த மோர்க்குழம்பை நீர் சுவைத்ததுண்டோ? சேப்பங் கிழங்குப் பொரியல்? வறுவல்? இதைச் சாப்பிடுவதில் நல்லது, கெட்டது இரண்டுமே  உண்டு. 

ஒரு பக்கம் குருதிப் பெருக்கு அடக்கி, மலத்தை இளக்கி, உடலுக்குக் குளிர்ச்சி தரும் சேம்பு, இன்னொரு பக்கம் வெப்பு, தடிப்பு, கோழைக் கட்டு என்று கெடுதலையும் உண்டாக்கலாம். உடலுக்குள் வாயுவையும் பெருக்கலாம். நீர்ப் பாங்கான மண்ணில் பயிர் விளைந்தும், கிழங்கு சாம்பி (நீர்வற்றி)க் காண்பதால் சாம்ப/சாம்பைக் கிழங்கு என்றாயிற்று. 

சாமம்/சாமை, சேம்பு/சேம்பை, சேமம்/சேமை, சேப்பு/சேப்பை எனப் பல்வேறு திரிபுகளில் இன்று இது சொல்லப் படுகிறது. வட மொழியிற் கேமுக என்று திரியும். ஆங்கிலத்தில் Indian Kales Root என்பர். Colacasia esculenta என்பது இதன் புதலியற் பெயர். பென்னம் பெரிய சேம்பிலையில் நீர்நாய் தங்கும் விவரிப்போடு இப்பாடல் தொடங்குகிறது. சேம்பு, நீர்நாய் என இரண்டுமே மருதத் தொடர்புடையவை. 

குழல்கால்- குழல் போன்ற சேம்புத் தண்டு; கொழுமடல் அகலிலை-அகண்ட சேம்பு இலை. சிலபோது இது யானைக் காதளவிற்கு வளரும் என்பர். (இலையை/ தண்டைப் புளி சேர்த்துச் சாப்பிட்டால், மூலம் நீங்குமாம். பொதுவாகச் சேம்பிற்குப் புளி சேர்த்து உண்பது நாட்டு வழக்கம். ”சிறியார்க்கு இனியதைக் காட்டாதே, சேம்பிற்குப் புளியிட மறவாதே” என்பது சொலவடை. மோர்க் குழம்பின் புளிப்பு புரிகிறதா?) பாசிப் பரப்பு = பசும் பரப்பு. பறழ் = குட்டி, உண்ணாப் பிணவு = உண்ணாதிருக்கும் பெண் நீர்நாய்; உயக்கம் சொலிய = வருத்தம் போக்கவேண்டி, நாள் இரை தரீஇய எழுந்த நீர்நாய் = அன்றாட உணவைத் தர எழுந்த நீர்நாய் (Otter); 

[இக் காலத்தில் நீர்நாய் நம்மூரிற் கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது. இரோப்பாவில் ஓரளவாவது வளர்கிறது. மக்கள் வாழ்வில் உரையாட்டுகளும் உள்ளன. சிறார்க்கு அதை அடையாளங் காட்டி, அதன் வாழுமை போற்றப் படுகிறது. வேதிப் பொறியியல் ஆய்விற்காக சில ஆண்டுகள் நெதர்லாந்தில் நான் வாழ்ந்த போது தெல்வ்ட் (Delft) என்ற நகரின் தாந்தாவ் (Tanthof) பகுதியில் எங்கள் வீடு நீர்நாய்ச் சந்தில் (Otter laan) இருந்தது. 

இத் தெருப் பெயரின் அழகைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். நீர்நாய் போன்ற சொற்களையும், இயற்கையையும் சேர்த்தே நம்மூரில் முற்றிலும் இழந்திருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கு ஆண்டாள் சொல்லும் ஆனைச் சாத்தான் குருவியை இந்தக் காலத்தில் நமக்கு அடையாளங் காட்டத் தெரியுமா? கைபேசி வந்ததிலிருந்து சிறு குருவிகள் கூட நம் நகரங்களை விட்டு ஓடியே போயினவே? குருவிச் சத்தம் உங்களுக்குக் கேட்கிறதோ?] 

வாளையொடு உழப்ப - நீரிற் கிடக்கும் வாளை மீனோடு போராடி அதைச் சாய்த்துக் கவ்வும் செயலால்; துறை கலுழ்ந்தமையின் = நீர்த்துறை கலங்கியதால். 

[இனிக் கள். தென்னை பற்றியதோர் இடைவிலகலைப் பார்ப்போம். கள்/மது போன்றவை உணர்வு கலங்குதல்/ மலங்குதற் பயன்பாட்டின் வழி எழுந்த பெயர்களாகும். இன்னொரு விதமாய், சருக்கரைப் பொருளையும், சுவைப் பொருள்களையும் சேர்த்து நொதிக்க விட்டுப் (fermented) பின் தெளிவித்துச் (clarified) வடித்துக் கள்/மது செய்வதால், உருவாக்க வழிப் பெயர்களும் உண்டு  

துல் எனும் வேர்ச்சொல் துலங்குவதைக் (clear) குறிக்கும் துல்>தெல்>தெல்லல் வினையிலிருந்து தெள்ளல், தெளிதல், தெரிதல், தெளிவித்தல், தேறல், தேற்றம், தெற்று போன்ற சொற்கள் பிறந்தன. நொதித்துத் தெளியும் பொருளைத் தெளிவென்றும், தேறலென்றும் அழைத்தார். நொதித்தல் குறைந்தது தேனென்றும் தேமென்றுஞ், தீமென்றும் சொல்லப் பட்டது. துல்>தில்லில்  இருந்து தித்திப்பென்ற சொல் கூட எழுந்தது. கள்ளிற்கு இன்னொரு பெயராய்த் தேன், தேறல், தெளிவு போன்றவையும் ஏற்பட்டன. உங்களுக்குத் தெரியுமோ? கள்ளிற்குத் தமிழில் 48 சொற்களுக்கு மேல் உண்டு. ஆகக் ”கள்” நம்மோடு நெடுநாள் வந்தது போலும். இன்றெமக்கு அது எமனுங் கூட.  

இனித் தென்னைக்கு வருவோம். இது ஆசியத் தென்கிழக்கிலிருந்து தமிழகங் கொண்டுவரப் பட்டதென்று புதலியலார் (botanists) சொல்வார். சங்க காலத்திற்கும் முன் இது நடந்திருக்கலாம். நம்மூரைச் சேர்ந்த பனை போலவே இதிலும் தெல்>தெள்>தெளிவு இறக்க முடியும் என அறிந்த தமிழன், இதன்சுவை இன்னும் அதிகம் என்பதால் தெல்மரம் என்றே இம்மரத்திற்குப் புதுப்பெயர் இட்டான். 

பனங் கள் சற்று கடுக்கும்; தென்னங் கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பு எல்லாம் வெறியக் காடி-acetic acid செய்யும் வேலை. ”தெல்” என்பது கள்ளின் வேர் ஆனதால், தெளிவைத் தரும் தெல்ங்கு மரம் தெங்குமரம் ஆயிற்று; தெல்நை, தென்னையாயிற்று. தெங்கங் காய் நாளடைவில் தேங்காயெனச் சுருங்கிற்று. தெங்கள்=தெங்கின் கள். ”தெல்”லென்ற வேர்ச் சொல்லே இவற்றிற்கு அடிப்படை. 

ஞாவகம் வைத்துக்கொள்க.தெல் எனும் திசைக் குறிப்பும், தெல் எனும் மரக் குறிப்பும் வெவ்வேறு சொற்பிறப்பின. தென்னையென்ற பெயரின் வழி, கள்மரப் பொருள் குறிப்பதாலேயே, ”அது நம்மிடம் இயல்பாய் இருந்ததல்ல; இறக்குமதி” என்பது புரிந்து போகும். பனை நம்முடையது; தென்னை வெளியிலிருந்து உள்ளே வந்தது. விவரம் அறியாப் பலருக்கும் இது வியப்பாகலாம்

தெல்லின் நீட்சியாய், அதன் வெறியத்தைக் (ethanol) ஓரளவு கட்டுவதாய், அரை நொதிப்பு நீர்மத்தில் சுண்ணாம்பு இட்டு, நீரிய அயனிச்செறிவை (hydrogen ion concentration) மாற்றி அமில அரங்கிலிருந்து (acidic range), களரி அரங்கிற்கு (alkali range) கொணர்ந்து திண்மத் துகள் (solid particles) கீழிறங்க, மீண்டும் தெளிய/தேற (settling) வைப்பர். தெளிவு/தேறலென்று இதையுஞ் சொல்வார். 

இப் பத நீரை, தென்பாண்டி நாட்டில் விற்கவுஞ் செய்வார். பத நீரின் வெறியச் செறிவு 2-4% ஆகும். பொதுவாக நம்மூர்க்  கள்ளில் வெறியச் செறிவு 7% க்கும் மேலிருக்கும். கட்டங் கள் (கடுங் கள்) 9% க்கும் மேலிருக்கும். சப்பானிய அரிசிக் கள்ளோ (சாக்கேவோ) 15-20% அளவிருக்கும். தயக்கமின்றி, ஆண், பெண், சிறார் அனைவரும் தென்தமிழ் நாட்டில் குறைவெறியப் பதநீரைக் குடிப்பார்; இதைத் தவறென்று யாரும் அங்கு கொள்வதில்லை. 

”பதநீரு வாங்கலையோ, பதநீரு?...” வீதியிற் குரல் கேட்டாலே நமக்கு வாயில் நீரூறும். பதநீரைப் பனையிலும் இறக்கலாம், தென்னையிலும் இறக்கலாம்.] 

தெங்கள் தேறல் - இங்கே பதநீர்; மகளிரைப் பேசுகையில், இதைக் கள்ளாகக் கொள்வது பாட்டின் கட்டுகைக்குப் (context) பொருந்தாது; தெங் கள் தேறல் மாந்தி - தாகத்திற்குப் பதநீர் குடித்தபின், சேம்பின் காலுக்கு அருகில் கால்வாய் நீர் கலங்காதிருந்தால் தெளிந்த நீரையே மகளிர் குடித்திருப்பர். ஆனால் அது கலங்கிய காரணத்தால் இங்கே பதநீரைக் குடிக்கிறார். 

நுண்செயல் அம்குடம் இரீஇ = நுணுகிச் செய்த அழகுக் குடங்களைத் தம் பக்கத்தில் இருத்தி;. (அரிய வேலைப்பாடு உள்ள மண்குடங்களை ஆதிச்சநல்லூர், கொடுமணம்,பொருந்தல், தற்போது கீழடி என வித விதமாய் அறிகிறோமே?) “நுண்செயல் அங்குடம்” - ஓர் அழகான விவரிப்பு. குயவரைப் பற்றிய பாடல்களும் சங்க இலக்கியத்தில் அதிகம் தான்.          

மகிழ்நன் என்பான் கணவன் அல்லன். உடன் பழகி மகிழ்கிறவன் = consort; இக்காலத்தில் boy friend என்பாரே, அதற்கிணையாகக் கூட இதைச் சொல்லலாம். மகிழ்நன், கணவனாகலாம்; வேறொருத்தியை மணந்து இவளோடு மகிழ்வோன் ஆகலாம்; ஏன், யாரையும் மருவாது(marry) காதலனாய்க் கூட அமையலாம்; மகிழ்நன் என்றவுடன் உடலுறவு ஞாவகம் நமக்கு வந்துவிடத் தேவையில்லை. பண்பில் மகிழ்நன் = பண்பில்லாத மகிழ்நனின். (அவன் ஒரு பெண்ணோடு மட்டும் உறவு கொள்ளவில்லை. அவன் பரந்திருப்பதால் பரத்தன்.) பரத்தமை = பலரையும் பரந்து சாரும் ஒழுக்கம்.

அடுத்தது காஞ்சி மரம். இதுவும் மருத மரங்களில் ஒன்று. காஞ்சியை ஆற்றுப்பூவரசு/ ஆத்துப்பூவரசு/ ஆற்றரசு/ ஆடலரசு/ செடிப்பூவரசு, ஆயில்/ ஆயிலி/ ஆவில், கச்சி/ கஞ்சி, கடற்கேசிதம், ஆனத்துவரை/ சன்னத்துவரை, நாய்க்குமிழ், பிண்டாரம் என்றெலாம் விதம் விதமாய் அழைப்பர். பிண்டாரத்தை யொட்டி வடபுல மொழிகளிலும் பெயரிருக்கிறது. ”காஞ்சி” கன்னடத்திலும், ஆற்றுப்பூவரசு/ ஆற்றரசு மலையாளத்திலும் பயில்கிறது. பம்பரக் கும்பில் என்று கூட மலையாளத்திற் சொல்வர். 

எல்லா நீர்க் கரைகளிலும், குறிப்பாகக் அகழிக் கரைகளிலும் இம்மரம் பயிரிட்டிருக்கிறார். ஆற்றங்கரையில் வளரும் காஞ்சி மரங்கள், மண்ணை இறுக்கி, ஊருக்குள் வெள்ளம் புகாதவாறு காத்து உதவும் என்பார். (சென்னை அடையாறு, கூவம் ஆற்றுக் கரைகளில் இதை வளர்த்தால் நன்றாக இருக்குமே?) பப்பாளி, பனை. பலா போல இம் மரத்திலும் ஆண், பெண் வகைகள் உண்டு. ஆண்பூக்கள் மஞ்சளாயும், பெண்பூக்கள் பச்சை/நீலமாயும் இருக்கும். இதன் புதலியற் பெயர் trewia nudiflora. 

மாற்று நாட்டைக் கவர விரும்பி ஓர் அரசன் வலிந்து படையெடுப்பதை வல்ஞ்சி> வஞ்சித் துறை என்பார். (வஞ்சிப் போரின் அடையாளம் வஞ்சிப் பூவாகும்.) வஞ்சிப் போரின் எதிர்ப்பில் தற்காப்பாய் (defence) எழுந்தது காஞ்சிப் போராகும். (கள்>கள்வு>கவ்வு>கா என்ற திரிவில் காக்குஞ் செயல் வெளிப்படும். கள்+சு = கச்சு என்பது மெய் புதைக்கும்/ காப்பாற்றிக் கொள்ளும் ஆடையாகும். 

மூக்கொலி பெற்றுக் கச்சு கஞ்சுகம் என்றாகும். கஞ்சி>காஞ்சி என்பவை நாட்டைக் காக்கும் செயற்பாடுகள். இவற்றின் அடையாளமாய் rebus principle இன் படி தற்காப்பாளர் காஞ்சிப்பூ சூடினார். (காஞ்சி மரங்கள் மிகுந்த கச்சிப்பேடு, காஞ்சி புரமானது.) காஞ்சித் திணை, காஞ்சிப் பொதுவியல், காஞ்சித் துறை என்பவை நாடு, கருத்து, மெய்யியல் போன்றவற்றைக் குறித்துத் தற்காக்கும் நிலைப்பாடுகள் ஆயின. 

அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும் - பூ உதிர்க்கும் காஞ்சி மர நிழலடியில் குரவையாடி அயரும் மகளிர்;. காஞ்சி என்ற குறிப்பையும் பார்த்தே, கூடியோர் பரத்தை மகளிர் என்ற முடிவிற்கு நாம் வருகிறோம். ஏனெனிற் காஞ்சியை ஒட்டிப் பரத்தையர் கூடுவது ஒருவிதச் சங்க இலக்கிய மரபுக் குறிப்பு. (காஞ்சி காப்பாற்றும் மரமல்லவா?) காஞ்சியைச் சுற்றிக் குருக்கத்திக் கொடி படர்வதாய், தொண்டைமான் இளந்திரையனைப் பாடும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப் படை 375-377 ஆம் வரிகளில்  

குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்

பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ

என்ற காட்சி விரியும். காதல் மகளிரை (குறிப்பாய்ப் பரத்தைகளை) குருகிற்கு (சிலம்பு மாதவியும் குருக்கத்திப் பெயர் கொண்டவளே!) ஒப்பிடுவது தமிழ்ப் புலவருக்கு ஆகிவந்த பழக்கம். அகம் 55 ஈச்ச மரத்தைக் காதலனுக்கும் சுற்றிப் படருங் குருக்கத்திக் கொடியைக் காதலிக்கும் உவமையாகக் கொள்ளும். 

(இதே போலக் குருக்கத்திக் கொடி மாமரத்தைச் சுற்றியதாய் காளிதாசனின் சாகுந்தலத்தில் ஓர் உவமை வரும். காளிதாசனை முதலாகவும் சங்கப் புலவரைப் பின்னாகவும் காட்டும் இந்தாலசி அறிஞர்களை என்ன சொல்வது?)

இங்கே காஞ்சி நீழலில் குருக்கத்தியர் கூடிக் குரவை யாடுகிறார். குரவை என்பது 7 பேரோ, 9 பேரோ ஆடும் மகளிர் ஆட்டம். அவ்வப்பொழுது கைசேர்த்தாடும் ஆட்டம். குரவை பற்றித் தனிக்கட்டுரையே எழுத முடியும். இங்கு தவிர்க்கிறேன்.

தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன் = ஊரார் கூடி நீராடும் இனிய துறை நிறைந்த ஊர்த்தலைவன்; தேர் தர வந்த = தேரில் வந்தது கண்டு; நேரிழை மகளிர் ஏசுப என்ப = அழகிய இழை (சங்கிலி) அணிந்த மகளிர் கேலி பேசி ஏசினாரோ? என் நலனே அதுவே = அதுவும் எனக்கு நல்லது தான். (காஞ்சிமர நிழலில் கூடியவர் குரவையாடி ஊரனைப் பற்றி வம்பு பேசி ஏசுகிறார். ”பேசட்டும், எனக்கும் அது நல்லது தான்”.என்கிறாள் நயப்புப் பரத்தை.)

பாகன் நெடிது உயிர் வாழ்தல் = (ஞாவகம் வச்சுக்குங்கடி) யானைப் பாகன் நெடுநாள் உயிர் வாழ்தல் என்பது; காய்சினக் கொல்களிற்று யானை நல்கல் மாறே = கோவம் வரின் இழுத்துப் போட்டு மிதிக்கும் யானையின் நல்கை எனத் தெரிந்து கொள்ளுங்கள். (இடைவிடாது துன்புறுத்தும் பாகனை கோயில் யானைகள் அடித்து மிதித்து விடும். பாகனின் கொடுமை/குசும்பிற்கும் ஓர் அளவுண்டு). 

தாமும் பிறரும் உளர் போல் சேறல் = தாமும் மற்றவரும் மட்டுமே உலகிலுள்ளது போற் செல்லுதல்; முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் = முழவடிக்கத் துணங்கை தூக்கி ஆடும் விழாவில் (துணங்கை என்பது குரவையின் இன்னொரு வேற்றம். குரவை பற்றி எழுதும் போது இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்); யானவண் வாராமாறே = நான் அங்கே வரா வரைக்குந் தான். வரினே = அப்படி வந்து, வான் இடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல் = வான்படு சூரியனுக்குத் தக்கத் தன்னைத் திரித்துக் கொள்ளும் நெருஞ்சி போல். 

நெருஞ்சி (நுள்> நெள்> நெரி> நெரிஞ்சி> நெருஞ்சி) எனும் புல் (Tribulus terrestris) சூரியனைப் பார்த்தாற் போல் கிடையாகப் பல கிளைகள் விட்டுப் படரும் நிலத்திணையாகும். நெருஞ்சங் காய்/பழம் போன்றவற்றின் முள்ளாலே இப்பெயர் ஏற்பட்டது. முள் பற்றிய கதைகள் தமிழில் நிறையவுண்டு. அத்துணை சிறிய நிலத்திணைக்கு இங்கேயோர் அரிய புதலியல் அவதானம் சுட்டப்படுகிறது. 

நெருஞ்சியின் ஒரு கணுவில் வளரும் கூட்டிலைகளில் ஒன்று பெரிதாகவும், மற்றொன்று சிறிதாகவுமிருக்கும். அடுத்த கணுவில் பேரிலை இருந்த பக்கம் சீரிலையும், சீரிலை இருந்த பக்கம் பேரிலையாகவும் மாறியிருக்கும். இப்படிக் கிளை நெடுகிலும் ஒன்றையொன்று மறைக்காமல் எல்லா இலைகளும் ஞாயிற்றொளியைப் பெறும் வகையில் புல் வளரும். மொத்தத்தில் சூரியவொளி தனக்கு முற்றிலும் கிடைக்கும்படி ஆண்டு முழுக்க இப்புல் திரிந்து கொண்டே இருக்கும். மேற்கூறிய வரி இப்பொழுது விளங்குகிறதா? 

இங்கே ஞாயிறு என்பது நயப்புப் பரத்தைக்கும், நெருஞ்சி என்பது மகிழ்நனுக்கும் உவமையாகின்றன. உவமையில் என்னவொரு மமதையும் இளக்காரமும் வருகின்றன? - பாருங்கள் அதே பொழுதில் என்னவொரு பொருத்தம்? சங்க இலக்கியச் சிறப்பே இது தான். இயற்கை பற்றிய கூர்த்த அவதானம்; அதை மாந்த வாழ்க்கைக்குப் பொருத்தும் பட்டறிவு. இயற்கையோடு இணையும் போக்கு. இற்றை வாழ்க்கையின் அவலமே இதற்கு மாற்றாய் நடப்பது தான். இயற்கையை விட்டு நாம் நெடுந்தொலைவு வந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. சூழலியற்காரர் மீள மீள இதைத் தான் சொல்கிறார்.    . 

என்னொடு திரியான் ஆயின் = என்னைச் சுற்றித் திரியானெனில்; வென்வேல் மாரி அம்பின் மழைத்தோல் சோழர் = வெல்லும் வேலும், மாரி போல் அம்பும், மேகம் போல் கிடுகும் உடைய சோழரின்; வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை = வில் பொருந்திய வல்லக் கோட்டையின் வெளிக் காவற்காட்டில்; ஆரியர் படையின் உடைக என் = ஆரியர் படை சுக்குநூறு ஆனது போல்; நேரிறை முன்கை வீங்கிய வளையே. = நேரே தாழ்ந்திருக்கும் முன் கையில் திரண்டுள்ள என் வளைகள் உடையட்டும்.

கடைசி 4 வரிகளில் ஆரியருக்கும் சோழருக்கும் இடை நடந்த போர்ச் செய்தி சொல்லப் படுகிறது  இதைப் புரிந்து கொள்ளச் சற்று மெனக்கெட வேண்டும். நந்தரிலிருந்து, மோரியர், சுங்கர், கனகர் வரை அவரவர் பெயரிற் சொல்லியது போக பொத்தாம் படையாயும் சங்க இலக்கியத்தில் ஆரியர் பற்றிச் சில செய்திகள் உண்டு. அப்படி ஒரு செய்தி இது 

அடுத்து வரும் நற்றினை 170 இலும், இதே செய்தியுண்டு. தவிரச் சிலம்பின் மதுரைக்காண்டத்தில்  ”வடவாரியர் படை கடந்து, தென்றமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலிற் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று” என்றும் கூறப்படும். (அரைசு கட்டிலிற் துஞ்சிய நெடுஞ்செழியன் வடக்கே போகவில்லை. வடக்கிருந்த வந்த படையைக் கடந்தான். அவ்வளவு  தான். அதே பொழுது இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் வடக்கே போனதற்குச் சிலம்பிலேயே சான்று உள்ளது.) 

வடக்கே மோரியரின் பின் மகதர் ஆட்சிப் பரப்பு சிச்சிறிதாய்க் குறைந்தது. அலெக்சாந்தரின் மிச்சப் படைகள் வழி வடமேற்கில் எழுந்த இந்தோ-கிரேக்கர் (கிரேக்கம், உரோமானியர் என நேரே வந்தவரையும், இந்தோ-கிரேக்கரையும் சேர்த்தே தமிழர் யவனர் என்பர்), சகர் போன்றோர் மகதராட்சி குன்றிய வட பகுதிகளைத் தாமே ஆளத் தொடங்கினர். உச்செயினிக்கு மேற்கிருந்த சத்ரபரும் சகர் வழி வந்தவரே. பின் இவரெல்லாம் விந்தியம் தாண்டித் தெற்கே வரத் தொடங்கினார். தங்களைச் சத்திரியர் என்றே சொல்லிக் கொண்ட இவர் எங்கெல்லாம் வலுக் குறைந்ததோ, அங்கெல்லாம் நுழைந்தார். 

அவரிலொரு பகுதியார் உத்தேய (>யுத்தேயே>யௌதேய) கணம் என்றும் ஆயுத கணம் என்றும் சொல்லப் பட்டார். முடியரசு இல்லாது குடியரசாயும் இனக்குழு ஆட்சியும் இவர் கொண்டிருந்தார். போர் மூலம் பொருள் திரட்டி நகர்ந்து கொண்டிருந்தார். அகண்ட அரசை அவர் எங்கும் ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே கூட்டங் கூட்டமாய்ச் சில காலம் வாழ்த்து பின் பிரிந்து வேறிடஞ் சென்று விரிந்துகொண்டு இருந்தார். 

அக்கால robber - barons, mercenaries என இவரைச் சொல்லலாம். எங்கெலாம் வளம் இருந்ததோ, அங்கெலாம் உழிஞை, வஞ்சிப் போர் நடத்துவார். கொள்ளை அடிப்பார்; நகர்ந்து போவார். தென்னாடு நோக்கி இவர் படையெடுத்ததை இவர் நாணயங்கள்  தெற்கே கிடைத்ததனாலும், இவருடைய ”கார்த்திகேயன், சுப்ரமண்யன், சண்முகன்” என்ற வழிபாடும், நம்மூர் குறிஞ்சி முருகன் வழிபாடும் இரண்டறக் கலந்து போனதாலும் அறிகிறோம். இவற்றைப் பின்னிப் பிணைந்து நம் திருமுருகாற்றுப் படையும், பரி பாடலும் சொல்லுங் கதைகள் பற்பல. (இந்த வழிபாட்டுக் கலப்பு ஒரு தனியாய்வு. யாராவது செய்யவேண்டும்.)

இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி செந்தமிழ்ச் செல்வியின் சிலம்பு 46 ஆம் இதழில் ”ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய, பாண்டியன் நெடுஞ்செழியன்” என்ற கட்டுரையும், கல்வெட்டுக் கருத்தரங்கம் 1966 ஆம் இதழில் ”ஆரியப்படையும் யௌதேய கணமும்” என்ற கட்டுரையும் உத்தேய கணம் பற்றி வெளியிட்டார். 

இவற்றின் மறுபதிப்பு: ”மயிலை சீனி வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை - பாகம் 1” என்று சென்னைத் தமிழ்வளர்ச்சிப் பேரவை வெளியிட்ட நூலில் உள்ளது. தவிர, https://en.wikipedia.org/wiki/Yaudheya, https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D போன்ற தளங்களிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் யௌதேய எனக்  கூகுளித்தால் செய்திகள் கிடைக்கும். ”தமிழருக்கும் உத்தேயருக்கும் இடையாட்டம்” பற்றிய ஆய்வு இன்னும் நிறைவு பெறவில்லை. இதுநாள் வரை தொட்டும் தொடாமலுமே சிற்சில செய்திகள் தெரிந்துள்ளன. 

உத்தேயரெனும் ஆரியரின் தாக்கம் நூற்றுவர் கன்னர் (சத கர்ணிகள்) மீதும் இருந்தது. சகரை முற்றிலும் தொலைத்துப் பின்னாளில் நூற்றுவர் கன்னர் வடக்கேயும் எழுந்தார். நூற்றுவர் கன்னரைத் தாக்கியவர் தகடூர் வரை வந்து தமிழரைத் தாக்குவது எளிது. மலையமான் திருமுடிக்காரியை முள்ளூருக்கருகிலும், சோழரை வல்லத்திலும், பாண்டியரை மதுரைக்கருகிலேயேயும் உத்தேயர் தாக்கியுள்ளார். 

மொத்தத்தில் இது அடுத்தடுத்து ஏற்பட்ட படையெடுப்பு (expedition). இதன் இயலுமையை அறியுமுன் சங்க கால மக்கள் தொகையைக் கருத்துமூலம் ஆகவாவது நாம் உணரவேண்டும். இப்படியொரு படை அக்காலத்தில் எவ்வளவு பெரிதாய் இருந்திருக்கும்? 3000, 30000, 100000 - இதில் எது சரி? வல்லக் கோட்டைக்குள் (வல்லத்தின் கோட்டை; இதன் நினைவாகவே சென்னைக்கு அருகில் வல்லக்கோட்டை என்ற ஊர் எழுந்திருக்கலாம். அதன் முருக வழிபாட்டுச் சிறப்பும் உத்தேயக் கணத்துள் எழுந்திருக்கலாம்.) எத்தனை பேர் இருந்தார்? 3000, 30000, 100000? 

இற்றைத்தமிழகத்தில் 7 3/4 - 8 கோடிக்குத் தமிழர் உள்ளோம். மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் உள்ள தமிழர் தொகையைக் கணக்கிட்டால் சிலர் ஒன்றரைக் கோடியென்றும், இன்னுஞ் சிலர் 2 கோடியென்றும் சொல்வார். எது உண்மையோ நமக்குத் தெரியாது. மொத்தத் தமிழர் குறைந்தது 9 1/2 கோடியாவது தேருவோம். பொருத்தமான, தோராயமான கணக்குகளை இட்டால் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர் தொகையென்பது கிட்டத்தட்ட 5/6 இலக்கமே தேறும். சங்க காலத்தின் போது மூவேந்தர் நாடுகள் ஒவ்வொன்றிலும் நிரவலாய் 2 இலக்கத்திற்கும் குறைவாகவே மக்கள் இருந்திருப்பர்.  

[இப்படியொரு கணக்கை 1999 - 2000 களில் ஒருமுறை செய்தேன். மலேசியாவில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் இதற்கான கட்டுரையொன்று வெளிவந்தது. என் தந்தையார் நூலகத்திலிருந்து அந்த ஆங்கிலக் கட்டுரை எனக்குப் படிக்கக் கிடைத்தது. ஏசு கிறித்து காலத்தில் இருந்த பாலத்தீன மக்கள் தொகை, அன்றைய மக்கள் தொகைப் பெருக்க வீதம் போன்றவற்றை மேலையர் சான்றுகளிலிருந்து அவ்வாசிரியர் கொடுத்திருந்தார். 

ஆசிரியர் பெயர் இப்பொழுது எனக்கு நினைவில்லை. இதோடு, இந்தியா விடுதலை பெற்றபின் தமிழரின் பெருக்க வீதம். பெருக்க வீதங்கள் எப்படி உயர்ந்து குறைந்தன என்றெல்லாம் இயன்றமை ஊன்றுகோள்களைக் கொண்டு, குத்து மதிப்பான கணக்கைப் பாலாப்பிளையின் தமிழிணையம் மடற்குழுவில் கட்டுரையாய் வெளியிட்டேன். ”அகத்தியரிலும்” பின்னாற் படியிட்ட நினைவு எனக்குண்டு. இப்பொழுது அம்மடல்கள்  என் கணியிற் கிடையாது. அதை இணையத்தில் எப்படித் தேடியெடுக்க வேண்டுமென்றுந் தெரியவில்லை. ஆனால் 5/6 இலக்கம் என்ற முடிவு  மட்டும் நினைவில் உள்ளது. இக்கணக்கை யாராவது திருப்பிப் போட வேண்டும்.] 

அதை ஒரு பக்கம் வைத்து இன்னொரு பக்கம் விளைவுகளைப் பார்ப்போம். 4, 5 பெருநகரங்களுக்கு மேலின்றி, மற்றபடி சிறுநகரங்கள், சிற்றூர்களுடன் பெரும்பாலும் வயல்கள், காடுகள் ஊடிருந்த காலம் அது. உறையூர், புகார் ஆகிய பெரு நகரங்கள் தவிர்த்து ஆவூர், வல்லம் போன்ற கோட்டைகளுள்ள சிறு நகரங்கள் சோழ நாட்டில் அன்றிருந்தன. 

சிலப்பதிகாரத்தில் புகாரின் கிழக்கு மேற்கு அகலத்தை 1 காதமென இளங்கோ நாடுகாண் காதையிற் சொல்வார். பெரும்பாலும் ஊடே ஆறுபோகும் பெருநகரங்கள் 1:2 என்ற மடங்கிலிருப்பதால் புகாரின் நீளம் 2 மடங்கென்று கொண்டால், நகரப் பரப்பளவு 2 சதுரக்காதம். = 90 சதுரக் கிலோமீட்டர் என்றாகும். (என் கணக்கில் தென்புல வாய்பாட்டின் படி 1 காதம் = 6.70503 கி.மீ. இதேநகரம் வடபுல வாய்ப்பாட்டின் படி 4 மடங்கு சிறிதாயிருக்கும்.) 

2011 இல் இந்திய மக்கள் தொகை அடர்த்தி 382 என்பர். 2000 ஆண்டுகளுக்குமுன், புகார் நகர அடர்த்தியை 100 எனக் கொண்டால், அதன் மக்கள் தொகை 10000 க்கும் குறைவாயிருக்கும். (இற்றைச் சென்னையும் சென்னையைச் சுற்றிலும் கணக்கிட்டால் மக்கள் தொகை 1.5 கோடிக்குத் தேரும்.) வல்லம் போன்ற கோட்டைகளில் 3000, 4000 பேருக்கும் மேலிருந்தால் அதிகமென்றே தோன்றுகிறது. 

வல்லம் உறையூர்ச் சோழனுக்கு ஆட்பட்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பான் செங்குட்டுவன் காலத்தவன். என் ’சிலம்பின் காலம்’ நூலில் செங்குட்டுவன் வடக்கே இரண்டாம் முறை படையெடுத்துப் போன காலம் பெரும்பாலும் பொ.உ.மு.80 க்கு அருகில் என்று சொல்லியிருப்பேன். செங்குட்டுவன் ஆட்சி துறந்த காலம் பொ.உ.மு. 76 என்று கொண்டால் பட்டஞ் சூடியது (பதிற்றுப்பத்துப் பதிகத்தின் படி) பொ.உ.மு.131 ஆகும். 

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இறந்தபோது பெண்காமத்தில் அவனுக்கு ஈடுபாடு இருந்ததென்று சிலம்பு கூறும். எனவே இறக்கும் போது அவன் அகவை 60க்கு மீறாது. 25 அகவையில் அவன் பட்டமேறியதாய்க் கொண்டால், 35 ஆண்டுகள் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி செய்ததாய்க் கொள்ளலாம். அப்படி எனின் அவன் பட்டமேறியது பொ.உ.மு. 115. 

பட்டம் ஏறிய சில ஆண்டுகளில் ஆரியப்படை கடந்தான் எனில் உத்தேயர் படையெடுப்பு பெரும்பாலும் பொ.உ.மு 120 க்கு அருகில் நிகழ்ந்திருக்கலாம். (http://valavu.blogspot.in/2010/05/8.html) இது செங்குட்டுவனின் முதற்படை எடுப்பிற்குப் பிந்தியதென்றே இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இந்த நெடுஞ்செழியன் இமையம் போக வில்லை, நெடுஞ்சேரலாதன் வடசெலவில் வெற்றிபெற்ற காரணத்தால் பாண்டியன் இப்படியோர் பெயரைச்சேரனுக்குப் போட்டியாய்த் தனக்குச் சூட்டிக் கொண்டான் போலும். 

இனி வல்லம் எந்தச் சோழனின் ஆளுகைக்கு உடபட்டது?- என்று பார்ப்போம்.

.      

செங்குட்டுவனின் தாய் நற்சோணை என்பாள் ஞாயிற்றுச் சோழனின் மகள் என்று என் நூலில் சொல்லியிருப்பேன். ஞாயிற்றுச் சோழனுக்குத் (ஆ)தித்தன் என்ற பெயருமுண்டு. அவன் சேரரோடு (மணவுறவு) கொண்ட காரணத்தால் மணக் கிள்ளி (கிள்ளிச் சம்பந்தியென்றே இதற்குப் பொருள் என்று சிலம்பில் அழைக்கப்பட்டுள்ளான். இவன் மகன் தித்தன் வெளியன். இவன் தந்தையோடு முரணி வளநாட்டின் (சோழ நாடு வள நாடு, நாக நாடு என 2 பகுதிகள் கொண்டது.) துறைமுகமான கோடிக்கரையில் (நாக நாட்டிற்கு புகாரே தலைநகரும் துறைமுகமும் ஆகும்.) இருந்து கொண்டு ஆட்சி செய்ததும் சங்க இலக்கியத்திற் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தித்தன் வெளியன் வீர விளையாட்டு, இசை, நடனக் கூத்து என்றே சிலகாலங் கோடிக்கரையிற் கழித்தான். தித்தனுக்குப் பின், வேற்பல் தடக்கை பெருவிறற் கிள்ளி (பல்வேறு தடங்களில் - வழிகளில் - வேல் வீசுந் திறன் கொண்ட கிள்ளி) என்றும், போர்வைக்கோப் பெருநற் கிள்ளி (போர்வையெனும் ஊரின் அரசன்; இற்றை உறையூருக்கு அருகிலுள்ள பேட்டைவாய்த் தலை, போர்வை எனப்பட்டதாம்.) என்றும் அழைக்கப்பட்டு, தித்தன் வெளியன் அவன் தந்தைக்கு அப்புறம் உறையூரிலிருந்து ஆண்டிருக்கிறான். 

நெடுஞ்சேரலாதனின் மைத்துனன் தித்தன் வெளியனே. பின் சேரலாதன், தித்தன் வெளியன் என்ற இருவருக்கும் சண்டை ஏற்பட்டு போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார், புறம் 62, 368 பாக்களால் உறுதி செய்வார். இவனுக்குப் பின் இவனுடைய இளம் அகவை மகனோடு (பெரும்பாலும் இவன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் ஆகலாம் என உய்த்து உணர்கிறோம்.) பகை கொண்ட 9 அரசருடன் செங்குட்டுவனே போரிட்டு உறையூரை நிலைநிறுத்த உதவினான். இச்செய்திகளெல்லாம் சிலம்பின் வஞ்சிக் காண்டத்தில் வருவதை அறிய முடியும். 

இச்செய்திகளை தமிழுலகம், தமிழ்மன்ற, தமிழாயம் மடற்குழுக்களில் அகம் 152 பற்றி நானெழுதிய கட்டுரைத் தொடரில் பேசியுள்ளேன். எனவே உத்தேயர் வல்லத்தின்மேற் படையெடுக்கையில், வேற்பல் தடக்கை பெருவிறற் கிள்ளியின் ஆட்சிக்கு வல்லம் உட்பட்டிருந்திருக்கலாம் என்று முடிவு செய்கிறோம். இன்றைக்கு திருச்சிராப் பள்ளியிலிருந்து தஞ்சாவூர் போகும் பாதையில் தஞ்சைக்கு வெகு அருகில் 8/9 கி.மீட்டரில், வல்லம் இருக்கிறது. அங்கே பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், சற்று தொலைவில் தமிழ்ப்பல்கலைக் கழகமும் இருக்கின்றன.   

 அகம் 336 ஆம் பாட்டின் மொத்தப் பொருள்:

குழல்தண்டிற் பொருந்திய அகண்ட சேம்பிலையின் பசும்பரப்பில், குட்டியொடு தானும் உண்ணாதிருக்கும் பெண் நீர்நாயின் வருத்தம் போக்க வேண்டி, அன்றாட உணவுதர எழுந்த நீர்நாய் நீரிற் கிடக்கும் வாளையொடு போராடி, அதைச் சாய்த்துக் கவ்வுஞ் செயலால் நீர்த்துறை கலங்கியதால். தாகத்திற்குப் பதநீர் குடித்த பின், நுணுகிச் செய்த அழகுக் குடங்களைத் தம் பக்கத்தில் இருத்தி. பண்பிலா மகிழ்நனின் பரத்தமையை பற்றிப் பேசிக் கொண்டும். பூவுதிர்க்கும் காஞ்சி மர நிழலடியில் குரவையாடியும், அயரும் மகளிர் கூடி நீராடும் இனிய துறை நிறைந்த ஊர்த் தலைவன் தேரில் வந்தது கண்டு கேலி பேசி ஏசினாரோ? அதுவும் எனக்கு நல்லது தான். 

(ஞாவகம் கொள்ளுங்கள்;) யானைப் பாகன் நெடுநாள் உயிர்வாழ்தல் என்பது கோவம் வரின் இழுத்துப்போட்டு மிதிக்கும் யானையின் நல்கையெனத் தெரிந்து கொள்ளுங்கள். தாமும் மற்றவரும் மட்டுமே உலகிலுள்ளது போற் செல்லுதல் என்பதும், முழவடிக்கத் துணங்கை தூக்கி ஆடும் விழாவிற்கு நான் அங்கே வராத வரைக்குந் தான். அப்படி வந்து, வான்படு சூரியனுக்குத் தக்கத் தன்னைத் திரித்துக் கொள்ளும் நெருஞ்சி போல் அவன் என்னைச் சுற்றித் திரியான் எனில், வெல்லும் வேலும், மாரி போல் அம்பும், மேகம் போற் கிடுகுமுடைய சோழரின் வில் பொருந்திய வல்லக் கோட்டையின் வெளிக் காவற் காட்டில், ஆரியர் படை சுக்கு நூறானது போல், நேரே தாழ்ந்திருக்கும் முன்கையில் திரண்டுள்ள என் வளைகள் உடையட்டும்.

அன்புடன்,

இராம.கி.


No comments: