Friday, May 05, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 4

அடுத்தது நற்றிணை 170 ஆம் பாட்டு.. பாடியவர் பெயர் தெரியவில்லை. மருதத் திணை அழகியொருத்தி விழவுக் களம் வர, அவளழகு கண்டு அதிர்ந்து போய், வேறு சிலர் தம்முள் பேசிக்கொண்டது. உரையாசிரியரின் சுவடிக் குறிப்பு ”தோழி. விறலிக்கு வாயில் மறுத்தது” என்றே சொல்கிறது. பாட்டில் வரும் ”வன்மை” என்ற சொல்லாட்சி கண்டு விறலியென்று சொன்னாரா, தெரியவில்லை. விறல் = வன்மை, வல்லமை. முன்பகுதியிற் சொன்னது போல் இங்கும் ஆரியரின் தோற்றச் செய்தியே சொல்லப்படுகிறது. 

மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,

வார்ந்த வால் எயிற்று சேர்ந்து, செறி குறங்கின்

பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்

விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;

எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;

ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்,

பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது

ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்

பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?

என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

மடக்கண், தகரக்கூந்தல், பணைத்தோள், 

வார்ந்த வால் எயிற்று சேர்ந்து, 

செறி குறங்கின் பிணையல் அம் தழை தைஇ, 

துணையிலள் விழவுக்களம் பொலிய வந்துநின்றனளே;

எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;

பேர் இசை முள்ளூர் ஒள் வாள் மலையனது

ஒரு வேற்கு ஓடியாங்கு, 

பலர் உடன் கழித்த ஆரியர் துவன்றிய 

இவள் வன்மை தலைப்படினே,

நம் பன்மையது எவனோ?

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். 

மடக்கண் = இளங்கண்; முதிர்ந்த கண் சுருக்கம் விழுந்து அகவையைக் கூட்டிக் காட்டும். இன்னொரு விதத்திற் பார்த்தால், ”வளைந்த கண்” எனலாம்; மடங்குதல் = வளைதல்; அழகுற வளைந்த கண் என்றுமே மாற்றாரை ஈர்க்கும். தகரக் கூந்தல் = மயிர்ச் சாந்து பூசிய கூந்தல்; தகர்= பொடி; தகரம்= விதப்புப் பொடி; தலை மயிர்க்கு இடும் ஒருவகைச் சாந்து. (சந்தனம் மட்டுமே சாந்தல்ல. பூசும் எல்லாப் paste களுமே சாந்துகள் தான். சிமிட்டிச் சாந்து. சுண்ணாம்புச் சாந்து என்று சுவரிற் பூசுவதுஞ் சாந்து தான். ”சாந்தின்” பொருண்மையை நாம் உணர வில்லை.) இக் காலத்தில் இந்துலேகா, கேசவர்த்தினி போன்ற பொரிம்புத் (branded) தைலங்களைப் பூசிக் கொஞ்ச நேரm இருந்து, அதன்பின் பெண்கள் குளிக்கிறாரே, அதேபோல சங்க காலப் பெண்கள் தகரச் சாந்தைத் தலையிற் பூசி நீராடியிருக்கிறார். இத் தைலங்கள் முடி நிறத்தை மாற்றா. மாறாக, முடியின் அடர்த்தியையும், நீளத்தையுங் கூட்டும்.. 

(எங்கள் வீட்டிலேயே 50/55 ஆண்டுகளுக்கு முன் ஆண்களும், பெண்களும் செம்பருத்திச் சாறு கலந்த தைலத்தைக் காய்ச்சி வடிகட்டித் தலையிற் பூசிக் குளித்திருக்கிறோம். இத் தைலம் செய்வதற்காக மதுரையில் இருந்து ஒருவர் எங்கள் வீட்டிற்கு வருவார். சாறு பிழிந்து எண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சுவது 2,3 நாட்கள் நடக்கும். எம் வீட்டிலிருந்து ஒவ்வொரு சொந்தக்காரருக்கும் தாத்தாவின் மேற்பார்வையில் புட்டில் (bottle) புட்டிலாய் இத் தைலம் போகும். இளம் அகவை நினைவுகள் இப்போது மங்கலாய்த் தோன்றுகின்றன. 

இச் செய்முறையைக் கற்காது போனேன். பொன்னாங் கண்ணி, கரிசலாங் கண்ணி, கறி வேப்பிலை, செம்பருத்தி இலை, வெட்டி வேர், அதி மதுரம், நெல்லிக் காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப் பால் சேர்த்து எண்ணெய் காய்ச்சுங் குறிப்பை எங்கோ குறித்து வைத்தேன். இப்போது கிடைக்கவில்லை. ”மயிர்ச் சாந்து செய்ய வழி என்ன?” என்றும் தெரிய வில்லை. நம் மரபு அறிவுகளை பலரும் இப்படித் தான் கொஞ்சங் கொஞ்சமாய்த் தொலைக்கிறோம்.)

பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; வார்த்த வால் எயிற்று சேர்ந்து = அச்சு வார்த்தது போல் வெண்பற்கள் சேர்ந்து; செறி குறங்கின் = செறிந்த தொடைகள்; 

”குறங்கின்” விதப்பை (speciality) இங்கு சொல்லியே ஆகவேண்டும். குறங்குதல் = ஒரு தண்டு/கயிற்றின் மூலம் உருளையைச் சுழற்றுதல். பம்பரத்திற் கயிறிட்டு அதை இழுத்துச் சுழற்றுகிறோமே, அது எப்படி?. மிதி வண்டி பயிலும் சிறார், வண்டியின் உயரம் கூடின், முக்கோணச் சட்டத்துள் கால் கொடுத்துக் குறங்கு மிதி போடுவாரே (crank pedal), அது எப்படி? இடுப்பெலும்பின் கீழே மூட்டிச் சேரும் தொடையெலும்பைத் தசையாற் புரட்டித் திருக (turn) முடிகிறதே? தோளோடு மேற்கை சேரும் மூட்டிலும் திருக்கை (torsion) ஏற்படுத்த முடிகிறதே? அது எப்படி? 

ஊர்க் கேணிகளில் இராட்டினக் கயிற்றின் ஒரு பக்கத்தில் நீர்வாளியும்,  இன்னொரு பக்கத்தில் கையிழுப்பும் சேர்கையில், ஒவ்வோர் இழுப்பிலும் இராட்டின உருள், அதன் வழி, குறிப்பிட்ட உயரத்திற்கு நீர்வாளி  எழுவது எப்படி?.கை மாற்றி அடுத்த கையால் கயிற்றைக் குறுக்கி இச்செயலைத் தொடர்வது எப்படி? ஒரு பக்கம் நேர் விசையை கொண்டு இன்னொரு பக்கம் சுழற்றுவதை பழந்தமிழர் குறங்குதல் என்பார். (linear motion is converted to circular motion).குறுதல் = மேலிழுத்து வாங்குதல் to pull up. 'கயிறு குறு முகவை” (பதிற்றுப் பத்து. 22:14) 

[குறுதல், குறங்குதல் என்பது 2000 ஆண்டுச் சிந்தனை. குறங்கு என்ற சொல் crank எனச் செருமானிய மொழிகளிற் பயில்வதை ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலிகள் crank (n.) "handle for turning a revolving axis," from Proto-Germanic base *krank-, and related to crincan "to bend, yield" என்று பட்டறிவு தெரியாமற் கூறும். 

நாமோ குறங்கைத் தொலைத்து கிராங்சாவ்ப்ட்டு என்று எழுதுகிறோம். தொடையியக்கம், தோளியக்கம், பம்பரம், குடைராட்டினம் போன்ற பட்டறிவுகளை எல்லாம் மறந்து, இது ஏதோ மேலையறிவியல் புதிதாய்ச் சொல்லியது என மருள்கிறோம். மாறாகக் குறங்குத் தண்டு= crankshaft என எளிதாய் நம்மூர்ச் சிந்தனை வழி சொல்லிப் போகலாம்.] 

பிணையல் = (என எல்லாம்) பிணைந்தவள்; அம் தழை தைஇ = அழகியதழையை தைத்தணிந்தவள்; இப்படிப் பிணைத்து அமைந்தவள் பெருநகரத்தவளோ, பெருஞ்செல்வக்காரியோ அல்லள். நாட்டுப் புறத்தாள். பருத்தி ஆடையோடு, தழையாடையும் கலந்தே அன்றணிந்தார். நாட்டுப் புறங்களில் ”இலைகளால் ஆன தொன்னையைத் தைத்தல், தாமரை இலையைத் தைத்தல்” போன்ற சொல்லாட்சிகளின் வழி தழை தைத்தலை உணரலாம். துணை இலள் = துணையில்லாது; விழவுக்களம் பொலிய வந்து நின்றனளே = விழாக்களம் பொலிய வந்துநின்று விட்டாள்; எழுமினோ எழுமின் = எழுந்திருங்கள், எழுந்திருங்கள்; எம் கொழுநற் காக்கம் = எம் கணவரைக் காப்போம்

பேர் இசை முள்ளூர் = பெரிதும் புகழ்பெற்ற முள்ளூரில்; திருக்கோவலூருக்கு NNE திசையில் கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவில் முள்ளூர் மலை (இன்று இது பக்கமலையென்றே அழைக்கப்படுகிறது.) வழி முள்ளூர் உள்ளது. தென் பெண்னை ஆற்றங்கரைத் திருக்கோவலூரை மலையர் ஏன் தலைநகr ஆக்கினார் என்பது தெரியவில்லை. திருக்கோவலூருக்கு  அருகிலுள்ள மலை என்பது (முள்ளூர்ப்) பக்க மலை தான். 

மலையை விட்டு வெளியே வந்தால் 4 கி.மீட்டரில் இன்றுள்ள முள்ளூர் எனுஞ் சிற்றூர் வரும். இதில் இன்று வாழும் குடும்பங்கள் 100 க்கும் குறைவே. இது தான் பழைய முள்ளூரா? அன்றி மலைக்குள் வேறொரு முள்ளூர் இருந்ததா? முள்ளூரில் கோட்டையிருந்ததா? இங்கே சண்டை போடவேண்டிய காரணமென்ன?- என்பனவெல்லாம்  தெரியாது. மலையன் படைகளோடு ஆரியர் படை சண்டையிட்டது இப்பாடலாற் தெரிகிறது. தொல்லாய்வர் தான் முள்ளூரின் எச்சங்களை அகழ்ந்து பார்த்துச் சொல்ல வேண்டும். 

சிற்றூரான முள்ளூர் தகடூரில் இருந்து ஏறத்தாழ 172 கி.மீ. தொலைவு கொண்டது. முள்ளூரிலிருந்து திருக்கோவலூர் வரை அன்று காடுகளே இருந்தன. அன்று (முள்ளூர்ப்) பக்கமலை மட்டுமே மலையமான் நாட்டிற் சேர்ந்ததல்ல. திருக்கோவலூருக்கு மேற்கே 50, 60 கி.மீட்டரில் இன்னும் பெரிய கல்வராயன் மலையுள்ளது. அது இன்னும் அடர்ந்து அப்பக்கம் சேலம் வரை பரவியிருந்தது. மலையமான் நாடென்பது மலைகளால் ஆனதே. சங்க காலத்தில் தகடூர் வழி தமிழகம் புகுவதே வடக்கிருந்து வரும் படையினருக்கு உகந்ததாகும். தக்கணப் பாதையின் முடிவில் கோதாவரிக் கரையில் நூற்றுவர் கன்னரின் படித்தானத்தில் இருந்து தகடூருக்கு வர நேர்வழி உண்டு. 

இற்றை ஆந்திர வழியாகத் தமிழகத்துள் நுழையும் பாதைகள் சங்க காலத்திற் கிடையா. தகடூரிலிருந்து நேர்கிழக்கே வந்தால் மலையமான் நாட்டினுள்  வராது முடியாது. அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் மலையமான் திருமுடிக் காரிக்கும் சங்க காலத்தில் போர் ஏற்பட்டதும் இயற்கையே. அடுத்தடுத்த நாடுகள் பகைமையில் இருப்பது பல போதுகளில் நடந்துள்ளது. 

அது ஒரு வகையில் இனக்குழுப் பகையின் மிச்ச சொச்சம். இப்பாடலில் சொல்லப்படும் மலையன் திருமுடிக்காரியா? அன்றி அவன் மகனா? - என்றுஞ் சொல்ல முடியவில்லை. கடையெழு வள்ளல்களின் காலத்தை இன்னும் துல்லியமாய் நான் கணித்தேன் இல்லை. ஆனால் பாடலிற் சொல்லப்படும் மலையன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் காலத்தவனே என்பதில்  ஐயமுமில்லை. 

ஆரியர் படை தமிழகம் வந்தது வரலாற்றுக் காலத்தில் 4,5 முறைகள் என்று சொல்ல முடியாது. அசோகனின் தந்தை பிந்துசாரன் காலத்திலும், அடுத்து முந்தையைப் பாடல் விளக்கத்தில் சொன்ன மாதிரி பொ.உ.மு. 120க்கு அருகிலும் தான் இருமுறை வடபுலத்திலிருந்து படையெடுப்பு நடந்திருக்கிறது.. 

இதேபோற் சங்க காலத்தில் தமிழர் வடக்கே படையெடுத்துப்போனது பொ.உ.மு.460க்கு அருகில் முதற் கரிகாலன் காலத்திலும், இரண்டாவதாய் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெயரில் செங்குட்டுவன் படையெடுத்துப் போனதும் (இது பொ.உ.மு.120 க்கு முன்னோ, பின்னோ), மூன்றாவதாய்ச் செங்குட்டுவனின் இரண்டாம் படையெடுப்பும் (கண்ணகிக்குக் கல்லெடுக்கப் போனது) என்றும் அமையும். பாண்டியர் படையெடுப்பு வடக்கே போனதா? - என்பது இன்னும் எனக்குத் தெரியாது.       . 

ஒள்வாள் மலையனது = ஒளிரும் வாள் கொண்ட மலையனின்; ஒரு வேற்கு ஓடியாங்கு = ஒரு வேலுக்கு ஓடியது போல்; பலர் உடன் கழித்த = பலருடன் கூடி வந்த; ஆரியர் துவன்றிய = ஆரியர் தோற்றுப் போனார்; துவலுதல்> துவளுதல் = சோர்ந்து போதல், தோற்றுப் போதல். அழிதல், சாதல். இவள் வன்மை தலைப் படினே? = இவளுடைய வல்லமைக்குத் தலைப்பட்டால்; நம் பன்மையது எவனோ = நம்முடைய பன்மை எந்த மூலைக்கு வரும்? (இத்தனை பேரிருந்தாலும், இவள் வல்லமைக்கு முன் நாம் எந்த மூலைக்கு வருவோம்?)

பாட்டின் மொத்தப் பொருள்; மிகச் சிறியது தான்.

இளங்கண், மயிர்ச்சாந்து பூசிய கூந்தல், மூங்கில்போன்ற தோள், அச்சுவார்த்தது போல் வெண்பற்கள், ஆகியவை சேர்ந்து செறிந்த தொடையோடு பிணைந்து, அழகிய தழையைத் தைத்தணிந்து, துணையில்லாது தனியே விழவுக் களம் பொலியும் படி வந்து நிற்கிறாளே? இவள் எப்பேர்ப் பட்டவள்? எல்லோரும் எழுக; எம் கணவன்மாரைக் காப்போம். பெரிதும் புகழ் பெற்ற முள்ளூரில் ஒளிரும் வாள் கொண்ட மலையனின் ஒரு வேலுக்கு ஓடியது போல் பலருடன் கூடி வந்த ஆரியர் தோற்றுப் போனார்.  இவள் வல்லமைக்குத் தலைப்பட்டால் நம் பன்மை எந்த மூலைக்கு வரும்? 

----------------------------

விளக்கத்தை முடிக்கு முன் வாசிப்போருக்கு ஒரு வேண்டுகோள். அருள் கூர்ந்து “ஆரியர்” எனுஞ் சொல்லின் பொருளைக் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பாடல் வழிப் புரிந்துகொள்க. அவர் ”அத்தகையார், இத்தகையார்” என்று நீங்கள் நினைக்கும் பொருளை வலிந்து என்னிடம் பெற முயல வேண்டாம். சற்றே பொறுமை கொள்க. ஆரியர் என்ற சொல் பயிலும் சங்கப் பாடல்களை விளக்கி முடித்து விடுகிறேன். அப்புறம் அலசலாம். தெளிவு பிறக்கும்.  

அன்புடன்,

இராம.கி. 


No comments: