Sunday, September 26, 2021

வீரம்

 வீரம் என்ற சொல் நான் புரிந்துகொண்டவரை தமிழே. எல்லாவற்றையும் சங்கதமென்று சொல்லி ஏன் இப்படித் தொலைக்கிறோமோ தெரியவில்லை. அந்த அளவிற்கு மேலையரும், 19 ஆம் நூற்றாண்டுத் துபாசிகளின் ஆய்வும் நம்மை வழிகாட்டிக்கொண்டா இருக்கின்றார்/றன? சங்கத வழிபாட்டை நாம் என்று தான் நிறுத்துவோம்?

வல்லென்ற வேர்வழிப் பிறந்த பலசொற்களுக்கு strength, power என்ற பொருட்பாடுகளும் ability, capacity, talent, skill என்ற பொருட்பாடுகளுமுண்டு. ஓர் உயிரி இன்னோர் உயிரியோடு (விலங்கோ, மாந்தனோ) மோதும் போது, ஒருவர் தன் வலிமையால் இன்னொரு வலிமையோடு பொருதுகிறார். இதைப் போரில் வலி காட்டுதலெனச் சொல்கிறோம். ஆங்கிலத்தில் வலியை valour/valor என்பார். etymonline.com என்ற வலைத்தளத்தில் valor (n.) c. 1300, "value, worth," from Old French valor, valour "valor, moral worth, merit, courage, virtue" (12c.), from Late Latin valorem (nominative valor) "value, worth" (in Medieval Latin "strength, valor"), from stem of Latin valere "be strong, be worth" (from PIE root *wal- "to be strong"). The meaning "courage" is first recorded 1580s, from Italian valore, from the same Late Latin word. (The Middle English word also had a sense of "worth or worthiness in respect of manly qualities"). என்று போட்டிருப்பர். மேலை மொழிகளுக்கும் தமிழுக்குமான இணையை இதைப் படித்த பிறகாவது சரியாக உணரலாம்.
போர்வலியிற் கூடவருவது ஒருவிதமான பரபரப்பு, விருவிருப்பு (விறுவிறுப்பு). இதை நம் உடம்பினுள் நடக்கும் விரைவுச் செயலாயும் கொள்ளமுடியும். பர்பர்>பரபர= உடம்பை அரித்தற் குறிப்பு, பரபரத்தல், விர்>விரு>விருவிருத்தல், விர்>விரு>விருட்டு, விர்> விரு>விர>விரை, விரைதல், விரைத்தல், விரசுதல், விறுவிறெனல் ஆகிய சொற்களை போர்வலி காட்டும் போது உணர்வோம். இந்த விர்>விரு எனும் ஒலிக் குறிப்பில் தோன்றியதே வீர்>வீரம் என்னும் சொல். விறல், விறலோன் என்ற சொற்கள் கூட வீரத்திற்கு இணையாக உண்டு. விறல் மிண்ட நாயனார் என்பாரும் இருந்தார். இதேபோல் சுர்>சுரு, சரேல், சுர்> சுர> சுரணை= குத்தும் மானவுணர்ச்சி, சுர்>சுரி>சூரி= குத்துங் கத்தி, சுர்>சூர்>சூரன், துர்>துரு>துர>துரத்தல் போன்ற சொற்களெல்லாம் போர்வலி காட்டும்போது வெளிப்படும் ஒலிக்குறிப்புகளும் அவற்றால் எழுந்த செயற்பாடுகளும் ஆகும். இவ்வளவு சொற்கள் இருக்கின்ற போது நாம் வீரத்தைக் கடன்வாங்க வேண்டிய தேவையென்ன?
ஆனாலும் வீரம் நம்மிடம் உள்ளது. அதன் பொருள் என்ன? வீரம் தமிழ்ச்சொல் என்று தானே பொருள்?. அதே பொழுது சங்கதத்திலும் வீர் என்ற சொல்லுண்டு. பாணினியின் தாது பாடத்தில் (DhAtup. 35 49) to be powerful or valiant, display heroism என்ற பொருளில் இச்சொல்லைக் காட்டுவர். இச்சொல் இருக்கு வேதத்திற் பயின்றதாகவுஞ் சொல்வர். இரு மொழிகளில் இருப்பதால் சங்கத வேர் தமிழுக்குக் கடன்வந்தது என்று சொல்வதிற் பொருளில்லை. அதற்கான சான்றுகள் இல்லை. வேண்டுமெனில் இரண்டிலும் இந்த வேர் உள்ளதென்று மட்டுமே சொல்ல முடியும். தவிர இன்னொரு பொருளிலும் வீர் என்ற பயன்பாடு இரு மொழிகளிலும் வரும். தமிழில் பிள்>பீள்>பீர்>பீறுதல்= கிழித்தல், பிளத்தல், பிராண்டுதல் என்ற பொருளில் ஒரு சொல்லும், வகர வழக்கில் விள்>வீள்>வீர்>வீறுதல்= கிழித்தல், கீறுதல், பிளத்தல் என்ற பொருளிலும் வரும். இதே பொருளில் மோனியர் வில்லியம்சில், சங்கதச் சொல்லான viir என்பதற்கு to split, break into pieces, tear open, divide asunder என்ற பொருள் போட்டிருப்பர்.
மொழித் தோற்றம் வியப்பானது. இப்போதைக்கு இரு மொழிகளுக்கும் பொதுவான சொற்கள் என்று வேண்டுமானால் சிலவற்றைக் குறிக்கலாம். 10, 15 ஆண்டுகளாகவே திராவிடமொழிக் குடும்பிற்கும், இந்தையிரொப்பிய மொழிக் குடும்பிற்கும் ஏதோ வொரு உறவிருப்பதை நான் விடாது சொல்லி வருகிறேன். நம்புவதற்குத் தான் இன்னும் பலர் தயங்குகிறார். என்ன இருந்தாலும், வில்லியம் சோன்சும், மாக்சுமுல்லரும், மோனியர் வில்லிம்சும், கால்டுவெல்லும், எமெனோவும், பர்ரோவும் இந்திய அறிஞரை விடப் பெரியவர்களல்லவா? என்ன நான் சொல்லுவது :-00000000
ஆமாம், எத்தனை காலம் மாற்றார் பாவாணரைத் தூக்கிக் கடாசிக்கொண்டே இருப்பார்? நாமும் வாய்மூடி மோனிகளாய் இருப்போம்?
அன்புடன்,
இராம.கி.

2 comments:

Magesh said...

வல் வில் ஓரி என்றால் வில்லில் வல்லமை மிக்க ஓரி என்றுதானே பொருள்

கு.முத்துக்குமார் said...

அருமையான விளக்கம் ஐயா..