Saturday, September 25, 2021

ஆதன் அவனி

 இந்தத் தலைப்பில் கூகுளில் தேடிக்கொண்டிருந்தேன். 

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF

என்பது கிடைத்தது. அதில், “வெளிவிடும் காற்று, அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது” என்று எழுதியிருந்தது. இதுபோல் எங்கு குறிப்பிட்டுள்ளார்? - என்பதற்கு அங்கு ஆதாரம் தர வில்லை. பெரும்பாலான அகராதிகளில் தேடிப் பார்த்துவிட்டேன். எங்கும் இச்சொல் தனிப்படக் கொடுக்கப்படவில்லை. மீறினால் அபின் என்பதோடு தொடர்பு உறுத்தப் படுகிறது. தமிழ் விக்கிப் பீடியாவில் இருக்கும் விளக்கத்திற்கு சான்று கொடுக்க மறந்தாரா? அன்றேல் அங்கு கொடுத்துள்ளது,  இடுகை இட்டவரின் சொந்த விளக்கமா? - என்று தெரியவில்லை.

அதைப் படித்தபோது இன்னொன்றும் எனக்கு விளங்கவில்லை. ”ஆதன் அவினி” என்று இடுகை இட்டவர் எப்படி இப்பெயரை முறைப்படுத்திக் கொண்டார்? ”வாழி ஆதன் வாழி அவினி” என்று தான் அங்கு ஓர் அடி இருக்கிறது. ஐங்குறு நூற்றின் முதல் பத்தில் ஆதன் முதலில் வருவதைக் கொண்டு ஆதன் அவினி என்றாரா? அவன் சேர அரசன் எனும் போது ”அவினியாதன்” என்ற பெயராயும் அது இருக்கலாமே? ஏன் ”ஆதன் அவினி”?- என்பதற்கு =விளக்கமில்லை. ஐங்குறுநூறு எனும் நூல் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் பாடப்பட்டுத் தொகுக்கப் பெற்றது என்பார். இதில் வரும் பாட்டுத் தலைவர் எல்லோருமே அரசகுலத்தைச் சேர்ந்தவரே! அப்படியெனின் அவினியாதன் என்பான் பெரும்பாலும் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் காலத்தைச் சேர்ந்த ஓர் அரச குலத்தான் என்று ஆகமுடியும். (என் கணக்குப் படி ஐங்குறு நூற்றை கி.மு.75-50 அருகில் சேர்ப்பேன்.)

மூன்றாவதாய் ஒன்றும் விளங்கவில்லை. “அவனி என்ற சொல் தமிழில்லை” என்று செந்தமிழ்ச் பேரகரமுதலி தவிர்த்துள்ளது. மோனியர் வில்லியம்சோ ”அவனி என்ற சொல் ஆற்றுப்படுகை, ஆறு ஆகிய வற்றைக் குறிப்பதாய் இருக்கு வேதம் வழியும், பூமி, பூமியிலுள்ள இடங்கள் என்று குறிப்பதாய் சங்கத நிகண்டு வழியும், வால்மீகி இராமாயணம் வழியும், பஞ்சராத்திர ஆகமம் வழியும்” சொல்வது கண்டு, சற்று தடுமாறிப் போகிறோம். அவல் என்பது தமிழ் தான். ”அவலா கொன்றோ. மிசையா கொன்றோ” என்று புறம் 187 இல் கி.மு. 150  ஐச் சேர்ந்த ஔவை பாடுவாள். மூவுலகுத் தொன்மத்தில், சொக்கம் என்பது மேலுலகம் என்றும். பூமி என்பது கீழுலகம் என்றும். பாழ்தலம் என்பது பூமிக்கும் கீழ் என்றும் கொள்ளப் பெறும். அப்படியாகின், அவல்நன் = பூமியை ஆளும் தலைவன். அவல்நி = பூமி என்பதும் இயல்பான தமிழ்ச்சொற்களாகவே சொல் எழ முடியும். ஐங்குறுநூற்றின் முதல் நூற்றுத் தலைவன் ”அவனியாதன்” என்றே கொண்டால் அதில் என்ன பிழை ஏற்படும்? ”அவனிக்குத் தலைவன்” என்று, தமிழில் ஒழுங்கான பொருள் வருகிறதே? 

இதை ஏற்பதற்கு முன் 2 கேள்விகள் நம்முன் எழுகின்றன.

1. அவினியா? அவனியா? பாடவேறுபாடுகள் எங்கேணும் ஐங்குறு நூற்றிற்குக் கொடுக்கப் பட்டுள்ளனவா? அல்லது இதுவும் சுவடியின் படியெடுப்புப் பிழையா?

2. செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் ”அவலை” ஏற்றவர், “அவல்நம்>அவனம், அவல்நி> அவனி” போன்றவற்றை ஏன் ஒதுக்கினார்?

அன்புடன்,

இராம.கி.

No comments: