Thursday, September 23, 2021

தமணி

" தமனி ( = blood vessel) எனுஞ் சொல்லின் சொற்பிறப்பென்ன? தமிழின் தும்பு, வடமொழி தமணி என்ற சொற்களோடு தொடர்பிருக்கலாமா?" என்று தமிழ்ச் சொல்லாய்வுத் தளத்தில் கேள்வி எழுந்தது. இதற்கு விடைதருமுன்,  ”குருதயமும் (heart) குருதியும் (blood)” என்ற தொடரைப் படியுங்கள்.  முழுதும் முடியவில்லை எனில், நாலாம் பகுதியையாவது படியுங்கள். 

https://valavu.blogspot.com/2020/12/heart-blood-1.html

https://valavu.blogspot.com/2020/12/heart-blood-2.html

https://valavu.blogspot.com/2020/12/heart-blood-3.html

https://valavu.blogspot.com/2021/01/heart-blood-4.html

குருதய இயக்கம் என்பது ஓர் 2 தகை (stage) இறைப்பியின் (pump) இயக்கம் போன்றது. இதன் முதல் தகையில். உடலின் பாகங்களிலிருந்து வரும் கெட்ட (அதாவது அஃககம்/oxygen குறைந்த) குருதி, உள்ளகக் குவி வழிநத்தின் (interior vena cava) மூலமும், உம்பர்க் குவி வழிநத்தின் (Superior Vena cava) மூலமுமாய்,  குருதயத்தின்  வலது அட்டத்துள் (right atrium. அட்டம்= மேல்/முன் அறை) நுழைந்து,  முக்குயப்பு வாவி (Tricuspid valve) மூலம், வலது வளைக்குள்  ( right ventricle) நுழைந்து, குருதியழுத்தம் கூடியபின், புழைமுறு வாவி (pulmonary valve) வழியாகப் புழைமுறு எழுதைக்குள் (Pulmonary Artery) புகுந்து, நுரையீரலை அடையும். நுரையீரலில் அஃககம் ஏறிய குருதி, 2 ஆம் தகையில், புழைமுறு வழிநம் (Pulmonary vein) மூலம்  இடது அட்டத்துள் (Left Atrium) நுழைந்து, மிடை வாவி (Mitral valve) மூலம் இடது வளைக்குள் (Left venticle) நுழைந்து, முடிவில் குருதியழுத்தங் கூடி, எழுதை வாவி (Aortic valve) மூலம், எழுதத்துள் (Aorta) நுழைந்து, வெவ்வேறு உடற்பாகங்களுக்கு நாளங்கள் வழி இறைக்கப் படும்.  (மேற்சொன்ன 4 ஆம் பகுதியில் இதயப்படம் இருக்கிறது. அதையும் சேர்த்துப் பார்த்தால், இந்தப் பத்தி புரியும்.) 

மேலே உயிரியல் பார்வையில் இதய இறைப்பி பற்றிச் சொன்னதைப் பொறியியல் பார்வையிலும் விவரிக்கலாம். பொதுவாய் எல்லா இறைப்பிகளுக்கும் உறிஞ்சு தூம்பு (suction tube), வெளித்தள்ளு தூம்பு (discharge tube) என 2 நாளங்கள் உண்டு.   முதல் தகையில்,  சேரை (பேச்சுவழக்கில் சிரை) எனும் உறிஞ்சு  (suction) தூம்பின் வழியாக, வலது வளைக்குள் கெட்ட குருதி நுழைந்து, அங்கு அழுத்தம் கூடிய பின், தமணி எனும் வெளித்தள்ளு (discharge) தூம்பின் வழியாக, நுரையீரலுக்குப் போகும். இரண்டாம் தகையில். நல்ல குருதி சிரையின் வழி இடது வளைக்குள் நுழைந்து, குருதியழுத்தம் கூடியபின் வெவ்வேறு உடற்பாகங்களுக்குத் தமணி (discharge) வழியே போகும். 

ஆக, வெளித்தள்ளும் தூம்பைத் தமணி என்றும், உறிஞ்சு தூம்பைச் சிரை என்றும் அழைக்கிறோம். இனி சொற்பிறப்பிற்குள் போவோம். தமிழில்  தருதல் என்பது கொடையைக் குறிக்கும். (ஈ,தா, கொடு) இதயத்திலிருந்து கூடிய அழுத்தத்தில், வெளித்தள்ளுதல் என்பதும் அதுவே.  தேவையான அழுத்தம் இருந்தால் தான், உடலின் எல்லா இடங்களுக்கும் குருதி போகும்.  தரு/தா எனும் வினையடி, தள் எனும் வேரில் கிளைத்தது. இதயத்திற்கே கூடத் ”தருபொறி” என்ற சொல்லை சூடாமணி நிகண்டு காட்டும். அதாவது உடம்பின் எல்லா இடங்களுக்கும் குருதியைத் ”தரும் பொறி” இதயமாகும். வரை, இறை என்ற சொற்களும் கூட இதயத்திற்குண்டு.  அணி என்பது, வெவ்வேறு உடலுறுப்புகளுக்கு குருதியைக் கொண்டுசேர்க்கும் நாளக் கட்டுமானம். ”தரும் அணி” என்பது ஒருபக்கம் இதயத்திலும், இன்னொரு பக்கம் குருதி வேண்டும் உடலுறுப்பிலும் இணைக்கும் அணி. (அணிவகுப்பு என்று படைகளின் களப் அமைப்பைச் சொல்கிறோமே, அதையும் இங்கு எண்ணிப் பாருங்கள்.) உடலுறுப்பில் பயன்பட்டு இதயத்திற்கு மீண்டும் கொண்டு சேர்க்கும் கட்டுமானம் சேரை அல்லது சிரை எனப்படும்.  

இனித் தருமணி என்பது பேச்சுவழக்கில் தம்மணி>தமணி>தமனி என்றமையும். வடபால் மொழிகளில் தமணி (வடக்கே டண்ணகரமே பயில்வர். றன்னகரம் பயில்வது தவறான பலுக்கல்.)  

என்றே சொற்பிறப்பு அறியாமல் பயிலுவர். ரும என்பது ம்ம என்றாவது தமிழிலும் உண்டு. (கருமம்>கம்மம்>கம்மாளர், மருமம்> மம்மம், உருநம்>உண்ணம், கருநன்>கண்ணன் இப்படிப் பல சொற்களைச் சொல்லலாம். புள்ளி மயங்கிய பலுக்கலே பாகதம், பாலி மொழிகளில் பயிலும். இந்தப் பாகதச் சொல் தான் சங்கதம்  போனது. 

Dhamanī (धमनी, “arteries”) are the channels which carry blood forcefully (pulsating) from heart to different organs. Sirā (‘veins’) are those which bring blood back to heart slowly. Between these two are keśikā (‘capillaries’) which spread like minute webs and through which, rasa (‘nutrient material or serum’) oozes to the tissues என்று பாகத வழிப் பொருள் சொல்வர். அடுத்து சங்கத வீளக்கத்திற்கு, மோனியர் வில்லியம்சு போகலாம்

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Dhamani (धमनि):—[from dhmā] f. the act of blowing or piping, [Ṛg-veda ii, 11, 8]

2) [v.s. ...] (also nī) a pipe or tube, ([especially]) a canal of the human body, any tubular vessel, as a vein, nerve etc., [Atharva-veda; Chāndogya-upaniṣad; Mahābhārata; Suśruta] etc. (24 t° vessels starting from the heart or from the navel are supposed to carry the raca or chyle through the body)

3) [v.s. ...] the throat, neck, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

4) [v.s. ...] Name of Hrāda’s wife (the mother of Vātāpi and Ilvala), [Bhāgavata-purāṇa]

5) Dhamanī (धमनी):—[from dhamani > dhmā] f. a sort of perfume, [Bhāvaprakāśa]

6) [v.s. ...] turmeric or Hemionitis Cordifolia, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

7) Dhāmanī (धामनी):—[from dhāmanikā] f. Hemionitis Cordifolia, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

8) [v.s. ...] any tubular vessel of the body (= dhamani), [ib.]

தமணியின் சொற்பிறப்புத் தமிழ் வழியிலேயே எந்தச் சிக்கலுமின்றிக் காணமுடிகிறது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் கூறப்படுவது தவறான விளக்கம். அந்தப்  பேரகரமுதலியில் சரி செய்யவேண்டியது நிறைய உள்ளது.

அன்புடன், 

இராம.கி.

பி கு: குருதித் தூம்புகளாயன்றி நரம்பிற்கும் கூடச் சிரை. நாடி என்ற பெயருண்டு.          


No comments: