Sunday, January 10, 2021

முலை - 1

 குத்து விளக்கெறியக் கோட்டுக்கால் கட்டில்மேல் 

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் 

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்  

வைத்துக் கிடந்த மலர்மார்பா ! வாய்திறவாய் ;  

மைத்தடங் கண்ணினாய் ! நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் ; 

எத்தனை ஏலும் பிரிவாற்ற இல்லாயேல் 

தத்துவ மன்று தகவேல் ஓர் எம்பாவாய் 

என்ற ”திருப்பாவை 19 இன் பொருள் புரிகிறதா? பெண் பக்தியாளரும், புலவருமான  "ஆண்டாள் "   பாடியது. எவ்வளவு SEXY யாகயுள்ளது !!! மார்கழியில் இப்பாடலையே கடவுளுக்காகப் பாடுகிறார் !!!!!” என்று ஒரு முகநூல் இடுகையில்  பகுத்தறிவுத் திராவிடர் ஒருவர் கேலிபேசினார். அதிர்ந்துபோனேன்.  ஒருவேளை இவர் ”கவிதைக்கு வீசை விலை?” கேட்பவரோ? - என்று கூடத் தோன்றியது.  காலமெலாம் அகம், புறம், பேசிய தமிழரிடை,  இன்னுஞ் சொன்னால் தமக்கும் இறைவனுக்கும் நடுவே நாயகநாயகி பாவத்தைப் பொருத்திப் பற்றியியக்கம் வளர்த்த தமிழரிடை, ”உடல் வருணணையே செய்யக் கூடாது, கட்டுப் பெட்டியாய்த் தோத்திரம்  மட்டுமே பாடு” என்கிறாரா? - என்றும் தோன்றியது. வேறொரு நண்பர் கேட்டு இங்கு முலைத்தொடர் எழுத முற்படும் நானும் இவருக்குச் “செகையாளாய்த் (sexist)" தெரிவேனோ? - என்று விதவிதமாய்ச் சிந்தனை என்னுள் எழுந்தது.

ஆண்டாள் ஆபாசமெனில், (ஆப+ஆச= ஆபாச= முறையற்றது. சங்கதத்தில், “ஆப்”= அற்று. ஆச= ஆனது= முறை.)  நாமெங்கு போகிறோம்?  ”எது காதல்? எது காமம்? எது முறையற்றது?” என்பது இவர்க்கு கொஞ்சமேனும் விளங்கி யிருக்குமா? தெரியவில்லை. (எல்லா முறையற்ற செயல்களுக்கும் ”உரிமம் (licence)"வேண்டி நான் முழங்கவில்லை.) வாழ்வு முழுக்க வறட்டுப் பகுத்தறிவு பேசி  இலக்கியம் மறந்தவர்க்கு என்னதான் சொல்வது? வெறுமே நகர வேண்டியது தான், ஆணடாளைப் பார்ப்பனரென வையக் ”கொங்கைமேல் வைத்துக் கிடந்தது” ஒரு சாக்காய் அமைந்தது போலும்,  ”கொங்கைமேல் கிடந்தது எது? ஓர்ந்து பார்த்தாரோ? பஞ்ச சயனமென்றது தவறா? நப்பின்னை யாரென இவர்க்குத் தெரியுமா? இயல்பு இல்வாழ்க்கை பேசும் இப்பாட்டு ”சிறுபிள்ளைகளுக்குச் சொன்னதெனத் தவறாய் எண்ணிக் கொண்டாரோ?” புரியவில்லை.   

இப்போதெலாம் ”விக்டோரியத் தூயவியம்” வலிந்து இங்கு பரப்பப் படுகிறதோ?- என்ற ஐயமும் என்னுள் எழுந்தது. ”குலப்பெருமைக் (honor) கொலைகள், வெவ்வேறு சாதியார் மோதல், சாமியார் பின்னோடல்” எனக் குமுகாயம் சீரழிவதைக் காணுகையில், தமிழ்க்குமுகத்தில் அடித்தானவியம் ( fundmentalism) விரவிக்கொண்டு வருவதும் புலப்பட்டது. (வரலாற்றைப் பார்த்தால் 300, 400 ஆண்டுகள் இதில் ஆழ்ந்து தோய்ந்து தமிழ்க் குமுகம் சீரழிந்தது புலப்படும்.) இதேபோக்கு எதிர்காலத்தில்  நீடிக்குமெனில், சங்க இலக்கியத்தையே தூக்கி நாம் கடாசவேண்டுமோ என்றுதோன்றும். இந்நிலை தூண்டுவதில் தூயவிய இந்துத்துவரும், பகுத்தறிவுத் திராவிடரும் இப்புலனத்தில் ஒரேமாதிரி இயங்குகிறார் என்றே எண்ணவேண்டி உள்ளது,  இந்துத்துவர் கவிஞர் வைரமுத்தைச் சாடியதற்கும், பகுத்தறிவர் ஆண்டாளைச் சாடுவதற்கும் என்ன வேறுபாடு? 

”முலை”ப் புரிதலென்பது இன்றுநேற்று எழுந்ததல்ல. ஆகப் பழஞ்சொல். (பெண்ணோடு ஆணுக்கும் முலையிருப்பினும் (பருத்தது breast), இரு பாலருக்கும் பல்வகை உடற்கூற்று வேறுபாடுகளுண்டு, பெண்முலை சற்று விதப்பானது. ”கண்ணும் தோளும் முலையும் பிறவும்”- தொல்காப்பியம் சொல். கிளவி: 62/1; ”முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்” என்பது அதேநூலில்- பொருள். புறத்: 24/16. எட்டுத்தொகை, பத்துப்பாட்டிலும் 189 இடங்களில் ”முலை” பேசப்படும். முலைபற்றிப் பேசியவரெலாம் செகையாளரா? காப்பியங்கள், தேவாரம், நாலாயிரப் பனுவல், இராமகாதை, இற்றைக் கவிஞர், எழுத்தாளர் வரை நம்மூரில் முலை தொடர்ந்து பேசப்பட்டது. கீழே சொல் விளக்கம் பார்த்தால் புரியும். ஆயினும் ”ஆண்டாள் சொல் SEXY” என்று சொல்ல முற்படுவது விந்தையான குற்றச்சாட்டு, இரோப்பா போய்வந்த பின் பெரியார் வெளியிட்ட திருமணக் கருத்துகளை எல்லாம் திராவிட நண்பர் மறந்தார் போலும்.  

சரி, முலையின் சொற்பிறப்பிற்கு வருவோம். முல்லி, முன்வந்தது முலை. நகிலமும் நுல்>நுகு>நுகில்>நகிலம்= முன்வந்தது என்றாகும். குல்> குள்> கொள்> கொண்+கை= கொங்கை, இது மேட்டைக் குறிக்கும். குல்> குள்> கொள்> கொண் +மை= கொண்மை> கொம்மை. இதுவும் மேட்டுப்பொருளில் எழுந்ததே. பறம்பு= மலை போன்றது.  ஆண்முலைக்கிலாத பெண்முலையின் விதப்பான துளையை ஒட்டிச் சொற்கள் அடுத்தெழும்பும். குள்>குய்>குயம்= துளையுள்ளது,  முலைத்துளை வழியே குழவிக்குத் தாய் பால்கொடுக்கிறாள் குல்> குரு> குருக்கண் என்பதும் ”துளையுள்ளதே”. சுல்> சொல்> சொள்> சொட்கு> சொக்கு> சொக்கம்> சொர்க்கம் = பால் சொட்டும் துளை. துல்>துன்>துனம்>தனம் = துளையுள்ளது, 

இன்னொரு வழியில் குல்> குள்> கொள்> கொண்> கொண்+கை = கொங்கை, = பால்கொண்டது என்றும் பொருளுண்டு. அதேபோல் கொம்மையும் ”பால் கொண்டதே”. நகிலமும் “பால் கொண்டதெனும்” பொருள் காட்டும்.. இன்னொரு கூட்டுச்சொல்லுமுண்டு. பயம் = பால். உதரம்= உதிக்குமிடம், வயிறு போன்றது. பயம்+உதரம்= பயோதரம்= பாலிருக்கும், உதிக்கும் இடம். பயம்தரும் மாடு பய மாடு. பயு>பசு என்பது தமிழே. அறியாதோர் இதைச் சங்கதமென்பார். பயசெனினும்  பாலே. முலைக்கோள= முலையைக் கொள்ளல்= பால் குடித்தல்; முலைக்கொள் = பால்குடி. நம் முலைக்கொள்ளும் இந்தையிரோப்பியனின் milk உம் தொடர்பு காட்டுகின்றன. மேலையர் milk இன் சொற்பிறப்பைச் சரியாக விளக்கார், முலை sexy உறுப்பா? தாயை உணர்த்தும் சினையுறுப்பா? இரண்டும் தான். பாலுட்டிகளான மாந்தரின் பிறப்பையும், உடலமைப்பையும் நாமே கேலிசெய்யமுடியுமா?  Why do we feel ashamed about breast? கொஞ்சம் உரியல் (real) நிலையை உணர்வோமே? முலையால் நாம் ஏராளம் சொற்களைப் பெற்றுள்ளோம்.  

அன்புடன்,

இராம.கி.


No comments: