Thursday, August 29, 2019

சிலம்பு ஐயங்கள் - 7

திங்கட் செல்வம் திருக்குலம் விளங்க
செங்கண் ஆயிரத்தோன் திறல்விளங்கு ஆரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி

என்று காடுகாண்காதையில் வரும் இந்த 23-25 ஆம் வரிகள் முற்றிலும் தொன்மங்களையே குறிக்கின்றன. பாண்டியர் திங்கட் குலமென்றும், சோழர் ஞாயிற்றுக் குலமென்றும், சேரர் நெருப்புக் குலமென்றும் பலருஞ் சொல்வர். முன்னது இரண்டிற்கும் ஆதாரம் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நெருப்புக் குலத்திற்கு ஆதாரங் கண்டேனில்லை. இந்திரனை ஆயிரங் கண்ணோன் என்பதற்கும் இழிவுக் கதையையே கேள்விப்பட்டுள்ளேன். இங்கே ஆரம் பற்றிச் சொல்கையில் ஆயிரங்கண்ணோன் என்பதால் வேறேதோ நற் பொருள் ஆயிரங்கண்ணோனுக்கு இருக்கலாம். ஆனால் எங்குஞ் சொல்லப் பட வில்லை. ஒருவேளை ஆயிரக்கணக்கில் செந்தழும்புகளை உடல் முழுக்கப் பெற்றானோ என்னவோ? மொத்தத்தில் நற்பொருளை எந்த உரையாசிரியரும் தரவில்லை. எனவே இது விளக்காத கூற்று. இந்திரன் ஆரம் பாண்டியனிடம் சேர்ந்ததும் தொன்மக் கதையால் தெரியவரும். இக் கதைகளால் நாமொன்றும் வரலாறு அறியப்போவதில்லை. எனவே ஒதுக்குகிறேன். அடுத்து,:

முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னி என்று
இடியுடைப் பெருமழை எய்தாது ஏகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க எனத்

என்ற 26-29 ஆம் வரிகள் ஆழத் தோயவேண்டியவை. ஒன்று பாண்டிய அரசரின் அடையாளம். இன்னொன்று நாட்டின் வெதணம் (Climate). [தவிரப் ”பஞ்சகாலமென எப்படிச்சொல்வீர்?” என்று நண்பர் சிங்கநெஞ்சன் ஒரு முறை கேட்டிருந்தார். பலவிடங்களில் குறிப்புகளுள்ளன. ஒருகுறிப்பு இங்குள்ளது.] முதலிற் பாண்டியர் அடையாளத்திற்கு வருவோம். சென்னி= சிறப்பு. பாண்டிய முதல்வன் சிறப்பு, முடியில் வளையுடன் இருத்தலே. வளை= சங்கு. அதாவது இவன் தன்முடியிற் சங்கு பதித்துள்ளான். அடிப்படையிற் பாண்டியர் கொற்கையிற் தோன்றியவர். மாறோக்கமென அப்பகுதியைச் சொல்வர். கொற்கைப் பரதவர் வழியினரே பின்னாளிற் பாண்டியரானார். பழந்தலைநகர்களான தென்மதுரையும், கவாடபுரமும் நெய்தல் நிலங்களில் இருந்தன. அவற்றை இழந்தபிறகே வைகை மதிரைக்கு வந்துசேர்ந்தார். [இற்றை மதுரைகூடச் சங்ககால மதுரையில்லை. ஒருவேளை அண்மையில் கண்டுபிடித்த கீழடித் தோண்டலுக்குள் இருக்கும் நகரமோ என்பது சுவையார ஊகம்.]

70000 ஆண்டுகளுக்குமுன் M130 வகை மாந்தன் இந்தியவினுள் நுழைந்தபோது (A Journy of Man - A Genetic  Odyssey by Spencer Wells) கடற்கரையை ஒட்டிப் பரவியதாய் இற்றை அறிவியல் சொல்லும். இவரை நெய்தலாரென்றே (Coastal peolple) ஈனியல் கூறும். பாண்டிய இனக்குழு இந்நெய்தலாரிலிருந்து நெடுங்காலம் முன்னே தெற்கே கிளைத்த இனக்குழுவாகும். குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் என்ற திணைவரிசை பின்னாலெழுந்த அணி வரிசையாகும். (தமிழர் குறிஞ்சியில் தொடங்கியதாகவே பலரும் நினைக்கிறார். அப்படித் தேவையில்லை) பாண்டியரின் முடிவளை, மீன்கொடி, கவரி/சோழிகளின் நாணயமரபு, முத்துவிழைவு, நித்திலின்(> நித்தி>நிதி; முத்து) செல்வ வளர்ச்சி, முத்துவழி மாந்தப்பெயர்கள், முத்துவழி ஊர்ப்பெயர்கள், கோரை ஊர்ப்பெயர்கள் (கொற்கை-மாறோக்கம் என்ற சொற்கள் கோரையாற் தோன்றின), [புனை நாவாய், கோரைப்பாய், கோரைப் படியாற்றங்கள் (applications), கோரைப் பயன்பாடுகள், சுறா எலும்பு / கற்றாழை நார் சேர்ந்த இசைக்கருவி எனக் கணக்கற்ற செய்திகளைப் பார்த்தால் நெய்தலார் வழித் தோற்றம் நமக்கு உறுதிப்படும். வேறொரு கட்டுரையில் விரித்துரைப்பேன்.   

அடுத்துப் பாண்டிய நாடு,  அடிப்படையில் மழைவளங் குன்றியது. (இன்றும் குமரிமாவட்டம் தவிர்த்து திருச்சிக்குத் தெற்கே தென்றமிழ்நாடு வறட்சிப் பகுதியே. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இன்றும் கடும்பஞ்சமுண்டு. அன்றும் அப்படியே.) பாண்டியரின் இனவாழ்க்கை கடலைச் சார்ந்தது. கடலிற் போகிறவர், கடலை நம்பியோர் மழைவேண்டாமென நினைப்பார். இதை மாங்காட்டுப் பார்ப்பான்  உருவகத்தால் உணர்த்துகிறான். இடியுடைய பெரு மழை பாண்டியனைப் பார்த்து ”இவன்முடியில் சங்கு பதித்திருக்கிறான். இவன் எனை விரும்பான். நான் இங்கு ஏன் பெய்யவேண்டும்?” என்று எய்யாது ஏகுகிறதாம். பரதவனாய்த் தொடங்கிய பாண்டியன் இப்பொழுது குறிஞ்சி, முல்லை, மருத நில மக்களுக்கும் மன்னவன் ஆகியதால், ”பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்பதற்காக” மழையைப் பிணித்துக் கட்டிப் போட்டானாம். குறிப்பு இதுதான்; மழையைப் பிணித்துக் கட்டிப்போடுவது பாண்டியனுக்குக் கடமையாகிறது. எந்நாட்டில் மழையைக் கட்டிப்போட நினைப்பார்? மழையிலாப் பஞ்சநாட்டிலே தானே? ஆகப் பாண்டி நாடு வறள்நாடு என்பது இங்கே குறிப்பாற் பெறப்படுகிறது. வறழ்ச்சி குறிக்கும் வேறிடங்களைப் பின்னாற் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் பாணர்
____________________________________

பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

வில்லவர் குலங்கள்

1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்

வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

4. மீனவர்

பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

வில்லவர் பட்டங்கள்
______________________________________

வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்

அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

முக்கியத்துவத்தின் ஒழுங்கு

1. சேர இராச்சியம்

வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்

2. பாண்டியன் பேரரசு

வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்

3. சோழப் பேரரசு

வானவர்
வில்லவர்
மலையர்

பாணா மற்றும் மீனா
_____________________________________

வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

அசாம்

சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

மஹாபலி

பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

ஹிரண்யகர்பா சடங்கு

வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் பாணர்


நாகர்களுக்கு எதிராக போர்
__________________________________________

கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்

இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

கர்நாடகாவின் பாணர்களின் பகை
_________________________________________

பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

வில்லவர்களின் முடிவு

1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
__________________________________________

கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

ஆந்திரபிரதேச பாணர்கள்

ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.

பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

பாண வம்சத்தின் கொடிகள்
_________________________________________

முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு

பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு

VILMEENKODI said...

திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.


வில்லவர் மற்றும் பாணர்

வட இந்திய பாண குலங்கள்

வட இந்திய பாணர்களுக்கு பாண, பாணிய, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

பல்லவ பாணர்

பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.

பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

மீனா வம்சம்
___________________________________

ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

சத்தீஸ்கர் பாண இராச்சியம்

பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

திக்கம்கரின் பாண்டிய வம்சம்

பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

பாண வர்த்தகர்கள்

இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

முடிவுரை
____________________________________________

இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.

________________________________________________

வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்

https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png