Saturday, August 24, 2019

சிலம்பு ஐயங்கள் - 2

 அடுத்து மனையறம்படுத்த காதைக்கு வருவோம்.

”தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து--நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.:

\                                                                       - வெண்பா

இப்பாவில் ”நாமம் தொலையாத இன்பம்” என்பது ”அழகு கெடாத இன்பம்” அல்ல. 

நாமம் என்பதற்கு நிறைவு என்ற பொருளுமுண்டு. அதுதான் இங்கு சரிவரும். கொஞ்சங்கூட நிறைவு அடையாத கலவியின்பத்தை இருவரும் பெறுகிறார் என்று இவ் வெண்பா கூறுகிறது. 

இது சற்று நளினமான பாட்டு. திறந்த அவையில் இதை விவரித்துச் சொல்ல எனக்குத் தயக்கமாயுள்ளது. இவ் வெண்பா இளங்கோ எழுதியதாவென்றும் எனக்குத் தெரியாது. 

பொதுவாகக் காதைகளின் முடிவில் வரும் வெண்பாக்களை இளங்கோ எழுதியதாய் நான் கொள்வதில்லை. நாலாயிரப் பனுவலிலும், பன்னிரு ஆழ்வார்களின் பாசுரத் தொகுதிகளின் பின்னே இது போன்று "போற்றி வெண்பாக்கள்" வரும். 

அவையெல்லாம் நாலாயிரப்பனுவலைச் சேர்ந்தவையல்ல. ஆனால் பாடஞ் சொல்லிக் கொடுக்கும் போது அவற்றையும் சேர்த்தே சொல்லித் தருவார். சிலம்பில் இப்படி வரும் வெண்பாக்களை ”பொருள் சுருக்கும் வெண்பாக்கள்; வேறு யாரோ எழுதியவை” என்று கொண்டு நகர வேண்டும்.

மூன்றாவதாய்க் கடலாடு காதையில் வசந்தமாலை பற்றிய கேள்விக்கு வருவோம். இதை நான் விளக்குவதைக் காட்டிலும், திரு. ஆ. பழநி எழுதிய “சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு” என்ற நூலை (தமிழினி வெளியீடு, முதற்பதிப்பு 2007) tamizhininool@yahoo.co.in என்ற முகவரிக்குக் கேட்டெழுதி வாங்கிப் படியுங்கள். மிக மிக அருமையான நூல். 

சிலம்பினுள் ஆழ்ந்து பலரும் அறியாத ஓர் முகன உண்மையை திரு. பழநி எடுத்தோதுகிறார். அவர் நூலை அறியாதோர் அதைக் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டும். அதைப் படியாதோர் பெரும் இழப்பை அடைகிறார் என்றே நான் சொல்வேன்.

கண்ணகியை விட்டு வந்த கோவலனுக்கு மாதவியோடு மட்டும் தொடர்பு ஏற்படவில்லை. நேரடியாய்ச் சொல்லாவிடினும் பூடகமாய் அங்கங்கே குறிப்போடு இளங்கோ சொல்வார். 

அவனுக்கு வசந்தமாலையோடும் தொடுப்பு ஏற்படுகிறது. 

அதை நாள்கழித்து எப்படியோ இலேசு பாசாய் மாதவி அறிந்துகொள்கிறாள். கடலாடுகாதையில் வசந்தமாலை வருந்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ”கோவலன் - வசந்தமாலை உறவு தகாதது, முறையற்றது” என்று கோவலனுக்கு உணர்த்துவதற்காகத் தான் கானல்வரிப் பாட்டே எழுகிறது. 

”காவிரியை மட்டுமா சோழன் கொண்டான்?, கன்னியையும் கொண்டான்?” என்று தொனிக்க கோவலன் ஒரு மாற்றுப் பாட்டைப் பாடுகிறான். இங்கே மாதவி காவிரிக்கு ஒப்பாகிறாள்; வசந்த மாலை கன்னிக்கு ஒப்பீடாகிறாள். 

(கன்னி அல்லது குமரியாறு இற்றை வைகையும் இன்றைப் பொருநையும் ஒன்று சேர்ந்து (இற்றைக் கடலுக்கு அடியில் அற்றைப் பாண்டிய நிலத்தில் வட, தெற்காய் ஓடிப் பின் கிழக்கு நோக்கித் திரும்பி இலங்கைத் தீவின் இன்று தேனுவரை என்று சொல்லப்படும் அற்றைத் தொண்டிக்கு அருகே கடலில் கலக்கிறது. கன்னி/ குமரி ஆற்றின் இருப்பை பாரதிதாசன் பல்கலைக் கழகப் பேரா. சோம. இராமசாமி வெளிப்படுத்துவார்.அந்தக் கட்டுரையைத் தேடிப் படியுங்கள்.  கன்னி எனும் தொல்லாறு உண்மையாய் இருந்த புரிதலை அவர் மூலம் அறிகிறோம்.

கோவலன் புகாரை விட்டுப் பிரிந்தது மாதவியாலும் அல்ல; கண்ணகியாலும் அல்ல. மாதவின் முன்னேயே கோவலனின் குட்டு வெளிப்பட்டு விட்டது. மாதவி தன் குறிப்பால் அதுபற்றிக் கேட்கிறாள். கோவலனால் நேரடியாய் அதற்கு விடைசொல்ல முடிய வில்லை. தன்னைத் திருத்திக்கொள்ளவும் முடியவில்லை. 

அவனுக்குச் சினமெழுகிறது தான் ஊர் மேய்வதைத் தன் காமக்கிழத்தி நேரே கேட்டுவிட்டாளே எனக் கோவங்கொண்டு புகாரைவிட்டு ஒரேயடியாய் விலகுகிறான். அதே பொழுது ”இவ்வளவு தவறுகள் நடந்தும் தன் மனைவி தன்னை மன்னித்து ஏற்றுக்கொண்டாளே?” என்று மனந்திருந்தி அவளோடு மதுரைக்கு வருகிறான். மதுரைக்கோட்டைக்குள் வந்ததுமே அவன் பார்வை கணிகையர் வீதியையே நாடுகிறது. நாய் வாலை நிமிர்த்தவா முடியும்?

திரு. ஆ. பழநி சொன்ன எல்லாக் கருத்துக்களை நான் ஏற்காவிடினும், கானல் வரி பற்றி அவர் காட்டிய கோணம் ஒரு புதிய புரிதலை எனக்கு அளித்தது. இன்னும் ஆய்ந்து பார்க்க வேண்டும். அவர் சொல்வது பெரும்பாலும் சரியாய் இருக்குமென்றே இப்போதெல்லாம் எண்ணுகிறேன். இதைக் காடுகாண் காதையிலும் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: