Friday, August 23, 2019

சிலம்பு ஐயங்கள் - 1

ஒருமுறை ஈழத்தைச் சேர்ந்த முகுந்தன் என்பவர் சிலப்பதிகாரம் பற்றிய 6 ஐயங்களை மின் தமிழ்க் குழுமத்தில் எழுப்பியிருந்தார். அவர் கேட்டிருந்த ஐயங்களுக்கு முழுக்க விடையிறுக்க வேண்டுமெனில் மிகுந்த நேரம் பிடிக்கும். வேறு பணிகள் அப்போது இருந்தாலும், ஆர்வத்தோடு ஒருவர் சிலப்பதிகாரம் பற்றிக் கேட்கும்போது விடையிறுக்காது நகரமுடியவில்லை. சிலம்பை ஆர்வமாய்ப் படித்தவன் நான். அதன்காலம் பற்றியும் ஒரு தனி நூலே எழுதியிருக்கிறேன். இங்கே விடைகள் கொஞ்சம் முன்பின்னாய் இருக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள். முதலில் அவர்கேட்ட கேள்விகள்:
------------------------------------------------------
1. காடுகாண் காதை (196)

”கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்” ....

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557. இங்கே பாய்கலைப் பாவை எனப்படுவது கொற்றவையா? வேட்டுவ வரி (70) யிலும் பாய்கலைப் பாவை என வருகிறது. கோவலன் சமண மதத்தவர் என்பது பொதுவான கருத்து . அவர் ஏன் கொற்றவை மந்திரத்தைக் கூறவேண்டும் ?

2. பூங்கண் இயக்கிக்குப் (சமண தெய்வம்??) பான்மடை கொடுத்த மாதரி பின்பு ஆய்ச்சியர் குரவையில் மாயவனையும் ஆயவனையும் போற்றிப் பாடுகிறார்... அக்காலத்தில் எம்மதமும் சம்மதம் என்று எல்லாத் தெய்வங்களையும் வழிபடும் முறை இருந்திருக்கின்றதா ?

3. கொலைக்களக் காதை (18)

”சாவக நோன்பிக ளடிக ளாதலின்” எனக் கோவலன் விளிக்கப்படுகின்றார். சாவக நோன்பிகள் என்பவர்களுக்கென்று ஏதாவது வெளியடையாளம் உள்ளதா? (தலைப்பாகை, மாலை , உடையின் நிறம் இதுபோல) ஏனெனின் , மதுராபதி தெய்வம் கூறும் முற்பிறப்புக் கதையில்

கட்டுரை காதை (155)

”விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு”

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994. இங்கே, வேறு மதம் ஆதலால் ஒற்றன் எனக் கொலைசெய்யப்படுகிறான்..வேறு மதத்தவன் என எவ்வாறு அறியப்படுகிறான்? இதுவே கோவலன் கொலைக்கு ஒரு  காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )

4. இது வசந்தமாலை பற்றியது. கடலாடு காதை (171)

”வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்..”

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=324
கோவலன் மாதவியுடன் இருக்கும்போது , வசந்தமாலை ஏன் வருந்தி நின்றாள் ?

5. மனையறம்படுத்த காதை

”தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து--நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.:

 (உரை : அழகு கெடாத இன்பத்தையெல்லாம் துய்த்தனர்) http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=110 (வெண்பா இளங்கோவடிகளால் பாடப்படவில்லையென்பது ஒருசாரார் கருத்து. ) இங்கே நாமந் தொலையாத இன்பம் (அழகு கெடாத இன்பம் ) என ஏன் கூறப்படுகின்றது ?

6. உரைபெறு கட்டுரை

”கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று.......

கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து
நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ....

கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு.....

சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும்  வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகு மென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து...”.

(http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=63) இங்கே, கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு எனப்படுவதற்கு , கொங்கிளங்  கோசர் நாட்டின் நங்கை எனப் பொருள்கூற முடியுமா?  அதாவது கண்ணகி கொங்கு நாட்டிலிருந்து வந்தவரெனக் கூறமுடியுமா? இதற்கும் வேட்டுவ வரி (47) யில் வரும் “ கொங்கச் செல்வி குடமலை யாட்டி” என்பதற்கும் தொடர்பு இருக்குமா?

--------------------------------------------------
இதற்கான என் மறுமொழிகள்:

முதலில் உரைபெறு கட்டுரைக்கு வருவோம். (உங்களுடைய 6 வது கேள்வி) உரைபெறு கட்டுரையில் முதலில் வருவது, வெற்றிவேற் செழியன் செய்ததைக் குறித்தாகும். சிலம்பை முழுதும் படித்தால் கதை பஞ்ச காலத்தில் நடந்தது புரியும். கதைநடந்த காலத்தில் தென்னிந்தியா முழுக்க வற்கடம் வந்திருக்கக் கூடுமென்று ஊகிக்கிறோம். மழையிலாக் காலம். அப்பொழுது மதுரை எரிபட்டது ”பெரியாரின் கூற்றைக் கொண்டுவந்து” நா. கணேசன் கேலிசெய்கிறாரே, அதுபோல் கண்ணகியின் கொங்கைப் ”பாசுபரசால்” அல்ல. அப்படி இளங்கோ புனைவு கலந்து சொல்கிறாரென்று வேண்டுமானாற் சொல்லலாம். பெரும்பாலும் நெடுஞ்செழியன் மேலிருந்த பஞ்சகாலக் கோபத்தில் மக்கள் கூடி “இதுதான் சாக்கென்று” அரண்மனைக்கும் சுற்றியுள்ள மாளிகைகளுக்கும் தீ வைத்ததாகவே அறிவியல் பூர்வமாய்ச் சொல்லலாம். pure arson.

இக்கலவரம் கேள்விப்பட்டு கொற்கையிலிருந்து வெற்றிச்செழியன் மதுரைக்கு ஓடிவருகிறான். வெற்றிச்செழியன் பெரும்பாலும் நெடுஞ்செழியனின் தம்பியாக இருக்கவேண்டும். நெடுஞ்செழியனின் மகன் அரண்மனைத் தீயில் கருகியது சிலம்பிலேயே சொல்லப்படுகிறது. ஒரு பொற்கொல்லன் செய்த பிழைக்கு, வெற்றிவேற்செழியன் 1000 பொற்கொல்லரை கொன்றது பெரும் முட்டாள் தனம். கண்ணிற்குக் கண்ணென்றாலும், பழிக்குப் பழியென்றாலும் இது ஏற்கமுடியாத கொடுங்கோன்மை. மதுரை எரிந்ததற்குப் பின் நடந்தது இதுவே. இதுபோன்ற பிழைகள் இன்றும் நடைபெறுகின்றன. யாரோவொரு சீக்கியன் இந்திராகாந்தி கொலைக்குக் காரணமானானென்று தில்லி முழுக்க 1000 பேருக்குமேல் சீக்கியரைப் பேராயக் கட்சியின் அரம்பர்கள் கொன்றது இந்தக் காலத்திலும் நடந்திருக்கிறது. இதுபோல் உங்கள் நாட்டிலும் சொல்லமுடியும்.

இவ்வளவு எரிப்புநடந்தால் கணக்கற்ற புகையும் துகளும் வானத்தில் பரவி ஏறும். அது உறுதியாய் மழையை வருவிக்கும். இன்றும் யாகம் நடத்தி மழை வருவிக்கிறார்களே? அதே சூழ்க்குமம் தான். what you need are suspended particles among the moist clouds. Boom..... Rain starts pouring. How long it lasts depends on the humidity of the clouds.

பாண்டிய நாட்டைப் போலவே மழையே காணாத கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்தும், நங்கைக்கு விழாவோடு சாந்திசெய்ய, மழை அங்கும் பொழிகிறது. அருள்கூர்ந்து முன் வாக்கியத்திற் போட்டிருக்கும் கால்குறியைக் கவனியுங்கள். பாக்களில் கால்குறி இருக்காது. நாம்தாம் பொருள்பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். கண்ணகி  சோழநாட்டுக்காரி, எரிந்தது பாண்டித் தலைநகர். கொங்கு என்பது இன்றுள்ள கொங்கு மண்டலம் அல்ல. முந்தையக் கொங்கு என்பது இன்றையக் கொங்கும் தென்கன்னடமும் சேர்ந்த ஒரு பெரியபகுதி. தென் கன்னடத்திற்கு வட கொங்கு என்றும் பெயர். அந்தக் கொங்கின் அரசர்கள் தான் கங்கர்கள் என்று பின்னால் அழைக்கப்பட்டனர். வடகொங்கர் நாட்டில் மைசூர்ப்பகுதி அடங்கும். மங்களுருக்குச் சற்றுகிழக்கே இருக்கும் நிலம்தான் கோசரின் நாடு. அவரை வலிந்து கோயம்புத்தூருக்கு இழுப்பதெல்லாம் சிலரின் வெற்றுமுயற்சி.

அவ்வளவு பெரியகொங்கில் கோசர்நாடு ஒருபகுதி. (கோசர் நாட்டில் குடமலை என்ற கூர்க் பகுதியும் அடக்கம்.) அதுவே முழுக்கொங்கு அல்ல. தமிழகத்தில் பாண்டிநாடு ஒரு பகுதி என்பதைப் போல இதைப் புரிந்து கொள்ளுங்கள். கோசர் நாட்டில் விழவெடுத்தது வெற்றிவேற் செழியனின் செயலுக்கு அடுத்து ஒருசில மாதங்களுக்குள் நடந்திருக்க வேண்டும். அதனாற்றான். அச்செய்தி அறிந்த இளங்கோ (இந்த நூல் எழுதியது கண்ணகிக்கு வஞ்சியில் கோயிலெடுத்த பொழுது நடந்திருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.) அதைப் புனைவாய் சாலினிமேல் வைத்து வேட்டுவ வரியிற் கூறுகிறார்.

வெற்றிவேற் செழியன் செய்தது, கோசர் செய்ததெல்லாம் இளங்கோவிற்கு நூலெழுதுவதற்கு முன்பே தெரிந்திருக்கவேண்டும். ஆனால் கயவாகு என்பான் செய்தது அவருக்குத் தெரிந்திருக்க வழியில்லை. தெரிந்திருந்தால் இன்னும் வேட்டுவரியில் இருவரிகள் சேர்த்துக் கூறியிருப்பாரே? கூறவில்லையே?

என் “சிலம்பின் காலம் நூலில்” வருந்தரு காதை என்பது இளங்கோ எழுதியிருக்க வழியில்லை என்று நிறுவியிருப்பேன். அந்த வாதத்தை அங்கு படித்துப்பாருங்கள். கயவாகு என்பான் விழாவிடுத்தது உரைபெறு கட்டுரையில் சொல்லப்படும். “அதுகேட்டு.....” என்று அது தொடங்கும். அதாவது கொங்கிளங்கோசர் விழாவெடுத்தது கேட்டு என்று பொருள். இது எத்தனை ஆண்டுகள் கழித்து என்பது யாருக்கும் தெரியாது. 100 ஆண்டுகளுக்கு அப்புறமும் ஆகியிருக்கலாம்.

பொதுவாக நாட்டுப்புறங்களில் பஞ்சகாலங்களில் கண்ணகி கூத்து நடைபெறும். அதை நடத்துவதால் மழை பொழியும் என்பது மக்கள் நம்பிக்கை மாரியம்மாவையும், கண்ணகியையும் தொடர்புறுத்துவார்கள்.     
”கொங்கச் செல்வி, குடமலையாட்டி” என்பது கொங்கிளங்கோசர் விழவெடுத்ததைக் குறிப்பால் உணர்த்துகிறது.

இனி அடுத்த கேள்விக்கு வருகிறேன். இந்த மடல் நீளம்

அன்புடன்,
இராம.கி.

No comments: