Friday, February 22, 2008

சிலம்பில் வரலாறு - 1

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் ஆகும். "சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் ஆய்வாளர்கள் வையாபுரியாரில் இருந்து, இந்தக் கால இடது சாரிகள் வரை உண்டு. மதிப்பிற்குரிய பேரா. ரொமிலா தாப்பர் போன்றோரும் சிலம்பின் காலத்தைப் பெரிதும் பின் தள்ளுகிறார்கள். இதற்கு மாறாக, இலங்கைக் கயவாகுவுக்குச் சமகாலம் என்ற கருதுகோளில் கி.பி. 150 க்கு அருகில் செங்குட்டுவனின் காலத்தை வைக்கும் வழக்காறும் நம்மிடையே உண்டு.)

செங்குட்டுவன் வென்றதாகச் சொல்லப்படும் கனக விசயர் யார்? வடபுலத்து மன்னர்கள் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார்? சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் அப்போது மகதத்தை ஆண்டார்கள்? அந்தக் காலத்தில் பெரும்நகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் செங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா? இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல் எடுத்தான் என்றால், கிட்டத்தட்ட அந்த இடம் எங்கிருக்கலாம்? வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர் கன்னர் என்பவர் யார்? நூற்றுவர் கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது? செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள்?" - இது போன்ற பல கேள்விகள் வஞ்சிக் காண்டம் படிக்கும் நமக்கு எழுகின்றன. ஒரு சில கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை காண முயல்கிறேன் (எல்லாக் கேள்விகளுக்கும் அல்ல.)

நாவலந்தீவின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய மன்னனான சேரலன் (நமக்கு நம் நாடு பெரிதென்றாலும், நாவலந்தீவில் சேர நாடு சின்னது தானே?) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் "நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான்? அவர் தவிர்க்க முடியாதவரா?" என்ற கேள்வி எண்ணிப் பார்க்க வேண்டியது. [சிலம்பில் ஏற்பட்ட வரலாற்று வேட்கையும் எனக்கு நூற்றுவர் கன்னரில் தான் தொடங்கியது.]

[இந்தத் தொடர் கொஞ்சம் விட்டு விட்டு வரக் கூடும். தொடர்ச்சியாய் வராமைக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆய்வு பற்றிய ஒரு சுருக்கத்தை, 3 மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்குச் சென்றிருந்த போது, தெற்குக் கரோலினா மாநிலத்தின் தலைநகரான சார்லசுடனில் ஒரு நாள் மாலையில் நூலகம் ஒன்றில் எனக்காகக் கூடியிருந்த சில தமிழன்பர்களிடையே உரையாட்டில் சொல்லியிருந்தேன். அந்த உரையாடலை ஏற்பாடு செய்த நண்பர் சுந்தரவடிவேலுக்கும், உரையாடலில் பங்கு கொண்டோருக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். அங்கு சொன்னதற்கும் மேல் விரித்து, கூடிய மட்டும் சான்றுகளுடன் இங்கு சொல்ல முற்படுகிறேன்.]

1. வடபுலத்து வரலாற்றுக் களன்.

கேள்விகளை அலசுவதற்கு முன்னால், பழங்காலத்து, கிட்டத்தட்ட கி.மு. 200/100 அளவில் வடபுலத்து வரலாற்றுக் களனைப் புரிந்து கொள்ளுவது நல்லது.

சங்க காலம் தொடங்கியது, மோரியருக்கு முன்னால் மகதத்தில் ஆட்சி செய்த நந்தரின் சம காலமாகும். (இனிமேலும் கி.மு.300 ல் இருந்து கி.பி.300 என்று சங்க காலத்தைச் சுருக்க முடியாது. அதை கி.மு. 600/500 க்காவது நீள வைக்கும் சான்றுகள் இப்பொழுது கிடைத்துள்ளன.) சங்கப் பாடல்கள் ஒருசிலவற்றால் (மாமூலனார் பாடல் அகம் 251: 5, மாமூலனார் பாடல் அகம் 265: 4-6), தமிழ் மன்னரோடு நந்தர்கள் நல்ல உறவு கொண்டிருந்தார்கள் என்று அறிகிறோம்.

இந்த உறவு நந்தர்களுக்குப் பிறகு வந்த வம்ப மோரியரோடு தொடராமல், பகை ஏற்பட்டது. அசோகனின் தந்தையாகிய பிந்து சார மோரியன் தமிழர் எல்லை வரைக்கும் படையெடுத்து வந்திருப்பதும், நேரடி இல்லாத முறையில், சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது (மாமூலனர் - அகம் 251: 12, அகம் 281:8; கள்ளில் ஆத்திரையனார் புறம் 175: 6-7, உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் அகம் 69:10). அந்தப் படையெடுப்பு எல்லையிலேயே தடுக்கப் பட்டதால், அந்தத் தடுப்பு வலுவாக இருந்ததால், பின்னால் அசோகன், தெற்கே, அதற்கு மேல் வராமல் இருந்திருக்கிறான். இதன் விளைவால், தன் கல்வெட்டுக்களில் சேர, சோழ, பாண்டியர் மற்றும் அதிகரின் நாடுகளை எல்லையில் இருந்ததாய் அசோகன் குறித்திருக்கிறான். [மகதப் பேரரசு வென்றெடுத்த முந்நாளைய மக்களாட்சி (=சனபதம்), முடியாட்சி நாடுகள் பற்றியும் ஒருசில நுணவக் (minor) குறிப்புகளும் தமிழிலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.]

மோரியரை வம்பர் என்று குறிப்பிட்டிருப்பதை இங்கு நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேண்டும். வம்பர் என்பவர் வம்புடையவர் அல்ல; பழைய பொருளின் படி, அவர் புதியவர்; வம்பர் என்று சொன்னதாலேயே, சங்க காலம் என்பது மோரியருக்கு அருகில் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியும். "இப்பத் தான் புதுசா வந்தவங்க" என்று நாம் எப்போது சொல்லுவோம்? நாம் முன்னவராய் இருந்து, மற்றவர் புதிதாய் வந்தவராய் இருந்தால் தானே? அதோடு, நாமும் புதியவரும் குறிப்பிட்ட சம காலத்தில் இருந்தோம் என்பதால் தானே?

இந்த மோரியர் காலத்துச் சான்றுகளை மறுதலித்து, தமிழர் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளியவர்களே, ரொமிலா தாப்பர் முதற்கொண்டு, இந்திய, மேலை ஆய்வாளர்களில் மிகுதி. நாவலந் தீவின் தெற்குக் கோடியில் இருக்கும் தமிழர்கள் மோரியருக்கும் முந்து பட்டவர்கள் என்பதை ஏற்பதிலும், சொல்லுவதிலும், ஏனோ பல வரலாற்றாளருக்கும் தொண்டைக்குள் அடைத்துக் கொண்டுவிடுகிறது. [இல்லாவிட்டால் குறைந்தது கி.மு.500 அளவில் தமிழி எழுத்திற்குத் தொல்லியற் சான்று அண்மையிற் கிடைத்த பின்னும், "அசோகன் பிரம்மி, அதிலிருந்து வந்த தமிழ் பிரம்மி" என்று சல்லியடித்துக் கொண்டிருப்பார்களா, என்ன?]

இது தவிர, ஆசீவகம் பற்றிய தொடர்பும் சங்க காலத் தொடக்கத்தை நந்தருக்கு அருகில் கொண்டு போகும். புத்த நெறி, செயின நெறிக்குச் சம காலத்தில் தோன்றி, பின் அந்த இரு நெறிகளிலும், (ஏன், நம்மூர் சிவ, விண்ணவ நெறிகளிலும் கூடச்) செரித்துக் கொள்ளப் பட்ட ஆசீவக நெறியின் தோற்றம் கி.மு 600க்கும் பிறகு என்றே இந்திய வரலாற்றில் புலப்படுகிறது. கிட்டத் தட்ட மற்ற நெறிகளுக்குள் ஆசீவகம் செரித்துக் கொள்ளப்பட்ட காலம். கி.பி. 400 ஆகும். ஆசீவக நெறி பற்றிய பரபற்றி(பரபக்தி)யாய் இல்லாமல், நேரடிப் பங்களிப்பான பாடல்கள் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே, அதுவும் சங்க இலக்கியத்தில், புறநானூற்றில் மட்டுமே, கிடைக்கின்றன. (பெரிதும் பேர்பெற்ற யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடலும் ஓர் ஆசீவகப் பாடலே. சங்க இலக்கியத்தில் கிடக்கும் ஆசீவகப் பாடல்களைத் தொகுத்து விளக்கத்துடன் ஒரு கட்டுரை வரைய வேண்டும்.) ஆசீவக நெறி தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கப் பெருத்த வாய்ப்பு உண்டு என்றே ஆசீவகம் - தமிழர் தொடர்பு பற்றி மிக ஆழமாகப் பேசிய பேரா. க.நெடுஞ்செழியனும், வெங்காலூர் குணாவும் தங்கள் நூல்களில் சொல்லுகிறார்கள்.

அவர்களின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டால், சங்க இலக்கியம் என்பது ஆசீவக நெறியின் உச்ச காலத்திற்கு (நந்தர்-மோரியர் காலம்) சம காலத்தில் தொடங்கி இருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (இன்றைக்கோ ஆசீவக நெறி என்று ஒன்று தமிழ்கத்தில் இருந்தது என்றே அறியாமல், அதைச் செயின நெறிக்குள்ளேயே பொருத்திச் சொல்லுவதும், அதன் கருத்துக்களைச் செரித்துக் கொண்ட சிவ, விண்ணவ நெறிகளுக்குள் தேடுவதுமாய், மாறிப் போனது. மெய்யியல் உலகில் நம்முடைய பெருமை நமக்கே தெரியவில்லை. :-) ஊழ் பற்றி இன்றும் நிலவும் இந்திய அடிப்படைக் கருத்து ஆசீவக நெறிக்குச் சொந்தமானதே!)

மூன்றாவதான செய்தி, கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேந்த கலிங்க அரசன் காரவேலன் என்பவன் தன்னுடைய அத்திகும்பாக் கல்வெட்டில் குறிப்பிட்டிருப்பதாகும். பதினேழு வரிகளைக் கொண்ட காரவேலன் கல்வெட்டில், 11-13 வது வரிகள் கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் தமிழ் மூவேந்தர்கள் யாராலும் உடைக்க முடியாத ஒரு கூட்டு முன்னணி வைத்திருந்ததையும், அந்தக் கூட்டணியை அந்துவன் என்ற அரசன் முறியடித்துக் கொண்டு கொங்கு நாட்டைக் கைப்பற்றி, கழுதை கொண்டு மாற்றார் நிலத்தை உழுது அவமதித்ததையும், பின்னால் அந்த நாட்டை ஆவிக் குடியினரிடம் திருப்பிக் கொடுக்காமல், தானே வைத்துக் கொண்டு அங்கு வணிக நகரமாக pithumda (egg city; கருவூர்) என்பதை ஏற்படுத்தியதையும், பேசுகின்றன. அந்த நாட்டைப் பின்னால் காரவேலனும் பிடித்துச் சிறிது காலம் ஆட்சிசெய்ததையும் அந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. மாற்றார் யாரும் 1300 ஆண்டுகள் நுழையமுடியாத தமிழர் எல்லைக்குள் தான் நுழைய முடிந்ததை ஒரு பெரிய சாதனையாகக் கலிங்க அரசன் கருதியதாலேயே, அதைப் பதிவு செய்திருக்கிறான். [இந்த அந்துவன் என்பவன் இரும்பொறை என்னும் சேரக் கிளையின் முதல் அரசனான அந்துவன் சேரல் இரும்பொறையாக இருக்க முடியும். இரும்பொறை மரபினர் இன்று ஆன்பொருநை - அமராவதி - ஆற்றங்கரையில் இருக்கும் கருவூரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டவர்கள்.]

கலிங்க அரசன் குறித்திருந்த 1300 என்ற சொற்தொகுதியைப் பார்த்து "அப்படி ஒரு நீண்ட காலத்திற்கு ஒரு கூட்டணி இருந்திருக்க முடியாது" என்ற தற்சார்பு அவநம்பிக்கையில் அதை 113 என்று திருத்திப் படித்ததாக, காரவேலனின் கல்வெட்டைப் படியெடுத்துப் பின் படித்து விவரித்த காசி இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, வடபுலத்து ஆய்வாளர்கள் ஆன கே.பி. ஜெய்ஸ்வாலும், பேரா. ஆர்.டி. பானர்ஜியும் கூறியிருக்கிறார்கள். இவர்களின் திருத்திய தற்சார்பு வாசிப்பிற்குப் பின்னால், 1300 ஆண்டுகள் என்ற கல்வெட்டில் இருந்த முதற் கூற்றை வரலாற்று ஆய்வாளர் மிகப் பலரும் மறந்து போனார்கள்; ஜெய்ஸ்வாலையும் பானர்ஜியையும் அப்படியே கிடுக்கின்றிப் (without criticism) பின்பற்றி கிளிப்பிள்ளை போல 113 ஆண்டுகள் என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். உண்மையில் ஓர்ந்து பார்த்தால், காரவேலனுக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் மூவேந்தரின் ஆட்சி இருந்திருக்கப் பெருத்த வாய்ப்புண்டு.

இனி மோரியருக்குப் பின் உள்ள நிலையை அவதானிப்போம். அசோகரின் பேரனுக்குப் பின்னால், மகதப்பேரரசு சுருங்கி, சுங்கர்களின் ஆட்சிக்கு வந்து, வேத நெறி மீண்டும் தழைத்து, பிறகு அவர்களின் ஆட்சியும் கவிழ்ந்து, கன்வர்களின் ஆட்சி ஏற்பட்டது. கன்வர் ஆட்சியில் மகதம் என்பது அளவில் மிகச் சுருங்கி பாடலிக்கு அருகில் குறுகிய விரிவு கொண்டதாய் ஆகிப் போனது. இருந்தாலும் அவர்கள் அரசு, இமைய எல்லைக்கு அடியில் இருந்து, இமயத்தைக் காத்துக் கொண்டு தான் இருந்தது. அதே பொழுது, மகத அரசின் மாதண்ட நாயகர்கள் பலர் நடுவண் அரசின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து, தனித் தனியே தம் அரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

அப்படி ஒரு மாதண்ட நாயகர் தான் இன்றைய மாராட்டியத்தில் கோதாவரி ஆற்றங்கரையில் இருக்கும் paithan (தமிழில் படித்தானம்) என்ற ஊரைத் தலைநகராய்க் கொண்ட சாதவா கன்னர் ஆவர். [சாதவா கன்னர், எல்லோரும் நினைப்பது போல ஆந்திரத்தில் தோன்றியவர் இல்லை. அந்தக் காலத்தில் ஆந்திர நாடு என்பது கிடையாது. அவர் மாராட்டியத்தில் தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாய் தம் அரசை விரித்து இன்றைக்கு 1800/2000 ஆண்டுகள் அளவில் தான் ஆந்திரத்திற்குள் ஊடுருவினர்.] கன்வரின் ஆட்சியைக் கவிழ்த்து மகத அரசையே தங்கள் கைக்குள் சாதவா கன்னர் கொண்டு வந்த நிலை கி.பி. 100 அளவிலேயே ஏற்பட்டது.

அதே காலத்தில், கலிங்கம் என்ற நாடு பாலூரைத் (இந்தக் கால ஒரியா மாநிலத்துப் பாரதீப்பைத்) தலைநகராய்க் கொண்டு இருந்தது. கலிங்க நாடு கடற்கரையை ஒட்டியது. அதன் மேற்கு எல்லைகள் காடுகளால் நிறைந்தது. அதன் தெற்கு (இன்றைய ஆந்திர மாநிலத்தின் நெய்தல் நிலம் தவிர மற்றவை எல்லாமே) முல்லையும் பாலையுமாய் இருந்ததால், தமிழர்களின் வடநாட்டுத் தொடர்பே பெரும்பாலும் கருநாடகம் வழியாகத்தான் இருந்தது. கருநாடகமும் சாதவா கன்னரின் அரசிற்குள் அடங்கியதே. கருநாடக மக்கள் கொடுங் கருநாடராய்ச் சிலம்பிலும் அதற்குப் பின்வந்த நூல்களிலும் சொல்லப் படுகின்றனர். கொடுமை என்பதற்கு இந்தக் காலப் பொருள் கொள்ளக் கூடாது. அவர் மொழி கொடுந்தமிழாய் இருந்ததையே அந்தச் சொற்றொடர் குறிக்கிறது. பழங் கன்னடம் என்பது பழந்தமிழுக்கு நெருங்கி, கொடுந்தமிழாய் இருந்தது. கன்னடத்தின் இப் பழநிலையை மறுப்பது தமிழருக்கும் வடபுலத்தாருக்கும் இருந்த தொடர்பையே மறுப்பதாகும்.

கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள் என்பவை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தையும், ஒரிசாவையும், சத்திசுகாரையும், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களை முழுதும் ஆட்கொள்ளவில்லை. இந்த இடங்கள் எல்லாம் பெருங்காடுகளாய் இருந்தன. காடுகள் குறைந்திருந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மாராட்டியம் போன்றவை வழியாகத்தான் வடக்கு/தெற்கு வணிகம் நடந்தது.

இந்தப் பாதைகள் வணிகத்துக்கு மட்டுமல்லாது, அரணம் (army) நகர்வதற்கும், கோட்டைகள் அமைத்துக் காவல் செய்வதற்கும் முகன்மையானவை. இந்தப் பாதைகளைக் கைக்குள் வைத்துக் கொள்ளாத எந்த்தப் பேரரசும் மிக எளிதில் குலைந்து போகும். அதே போல எந்த எதிரியும், இந்தப் பாதைகளைத்தான் முதலில் கைக்கொள்ளத் துடிப்பான். மாதண்ட நாயகர்கள் இந்தப் பாதைகளின் விளிம்புகளில் தான் பேரரசால் பணிக்கு அமர்த்தப் படுவார்கள். இந்தப் பாதைகள் பெருவழிகள் என்று வரலாற்றில் சொல்லப்படும். அப்படி அமைந்த பாதைகளில், உத்தர, தக்கணப் பாதைகள் பெரிதும் முகன்மையானவை.

வடமேற்கில் தக்கசீலம் தொடங்கி, நான்கு ஆறுகளைக் கடந்து (ஜீலம், செனாப், ராவி, சட்லஜ்) கங்கைக் கரை கடந்து அத்தினாபுரம் வழி, சாவத்தி, கபிலவாய்த்து, குசினாரா, வேசாலி, பாடலி வழியாக அரசகம் (முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகம் - Rajgir) வரை வந்து சேருவதை உத்தர பாதை என்று சொல்லுவார்கள்.

இதே போல, கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானம் (prathisthana>paithan; இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் உள்ளது) தொடங்கி அசந்தா, எல்லோரா வழியாக வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா(Bhilsa) வந்து நேர்வடக்கே திரும்பி தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி என்ற சாகேதம் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேருவது தக்கணப் பாதையாகும். (சாவத்தி கோசலத்தின் தலைநகர் கிட்டத்தட்ட நேபாள எல்லை. கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள்.)

உத்தர, தக்கணப் பாதைகள் போக, கங்கையை ஒட்டியே மேற்கே சென்றால் பாடலியில் இருந்து வாரணசி வழி, கோசாம்பியை அடையும் பெருவழியும் அந்தக் காலத்தில் முகன்மையான ஒன்றாகும்.

எந்த வடநாட்டுப் படையெடுப்பும் இந்த மூன்று பாதைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நடக்க முடியாது.

சாதவா கன்னரைத் தான் சிலம்பு ஆசிரியர் நூற்றுவர் கன்னர் என்று குறிப்பிடுகிறார். சிலம்பில் நூற்றுவர் கன்னர் பற்றிய செய்தி கொஞ்சம் விதப்பானது. சாதவா கன்னரின் முகன்மை, அவர்கள் தக்கணப்பாதையின் வாயிலைக் காத்த மாதண்ட நாயகராய் இருந்ததாலே தான் ஏற்பட்டது. தவிர, அதே காரணத்தால், நூற்றுவர் கன்னரைத் தொடர்பு கொள்ளாமல், எந்தத் தமிழரசரும் வடக்கே படையெடுக்க முடியாத நிலை அந்தக் காலத்தில் இருந்தது. தமிழக வரலாற்றை இந்திய வரலாற்றோடு பொருத்திக் காட்ட முன்வந்து நிற்பது சாதவா கன்னர் என்னும் நூற்றுவர் கன்னர் பற்றிய செய்தியே.

வடமொழியில் சாதவாகன என்று எழுதும் போது நம்மை அறியாமல் சாத வாகன என்று பிரித்தே படிக்கிறோம். ஆனால், தமிழ் வழியே பார்த்தால், சாதவா கன்ன என்று படிப்பதே சரியாக இருக்கும். சதம் என்பது நூறு என்ற எண்ணைக் குறிக்கும் வடமொழிச் சொல் (அதே பொழுது, அந்தச் சொல்லின் வேரைத் தமிழிலேயே இனம் காணமுடியும். சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடு கொண்ட சொற்கள். "அவனைப் போட்டுச் சாத்திட்டான்" என்று இன்றைய வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா? அந்தச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்குதல் என்னும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற சொல்லும் பொடி என்ற பொருளில் எழுந்தது தான். அதை வேறு ஒரு இடத்தில் பார்க்கலாம்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான். ஆக உட்கருத்து தமிழே. சதம்>சதவர்>சாதவர்>சாதவா = நூற்றுவர்.

கன்னர் என்பது கர்ணி என்று திரிகிறது. இங்கே காது, கன்னக்குழி போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்ன அரசன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் என விதப்பாகச் சொல்லப்படுகிறான். பாகத மொழியில் கிருஷ்ண என்பது கன்ன என்றே வரும். கன்னன் என்பது சோழன், பாண்டியன், சேரன் என்பது போல ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும்.

சந்தனம்/சாரல் பூசிய இனக்குழு சாரல் குலம்>சாரலன்>சேரலன் என்று ஆனது போல, சாம்பல் = பாண்டில் பூசிய இனக்குழு பாண்டிய குலம்>பாண்டியன் என்று ஆனது போல, கோழி நிறம் (= சிவந்த பொன்னிறம் அமிலச்செறிவைப் பொருத்து மஞ்சளும்/சிவப்புமாய் மாறும் வேதிப்பொருளின் நிறம்) பூசிய இனக்குழு கோழி>சோழிய குலம்>சோழியன் என்று ஆனது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநன்>கன்னன் என்று ஆகியிருக்க வாய்ப்பு உண்டு.

[சேர, சோழ, பாண்டியர்களின் வெவ்வேறு குலப்பெயர்கள் எப்படி இனக்குழுப் பண்பை உணர்த்துகின்றன என்ற என் கட்டுரை இன்னும் முடியாது இருக்கிறது. பிறிதொரு நாள் பார்க்க வேண்டும். இன்றைக்கும் சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் ஆகியவற்றின் தாக்கம் தமிழர்/மலையாளிகளிடையே இருப்பதை உணர்ந்தால் இனக்குழுப் பழக்கம் எங்கே இருந்து பிறந்தது என்று உணர முடியும். உறுதியாக சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் என்ற கருத்து சமய நெறி சார்ந்த கருத்து அல்ல. அது இனக்குழு (tribal) சார்ந்த வழக்கம். இன்றைக்கும் ஆத்திரேலியப் பழங்குடிகள் பல்வேறு வண்னம் பூசித் தங்களை அடையாளம் காண்பிப்பதை ஓர்ந்து பார்க்கலாம். ஆத்திரேலியப் பழங்குடியினரும், பழந்தமிழரும் ஈனியல் முறையில் உறவு கொண்டவர் என்ற ஆய்வு முடிபை இங்கு ஒருசேரப் பார்க்கலாம்.]

நூற்றுவர் கன்னரின் முதல் தலைநகர் இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் கோதாவரி ஆற்றின் வடகரையில் உள்ள படித்தானம்(>பயித்தானம்>பைத்தான்) என்று பார்த்தோம். நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை படித்துறை என்று சொல்வதில்லையா? படித்தானம் என்பதும் படித்துறை என்பதைப் போலத்தான். படித்தானத்திற்கு மேற்கில் விரைந்தால் இந்தக் கால லோனாவாலாவும், அந்தக் காலக் கார்லே குகைகளும் வந்துசேரும். (கார்லே குகையில் தான், இந்தியாவின் மிகப் பழமையான புத்த சேத்தியங்களில் ஒன்று (கி.மு.280) உள்ளது.)

கார்லேயில் இருந்து இன்னும் மேற்கே போனால் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சோபாரா துறைமுகம் வந்து சேரும். (இது இன்றைய மும்பைக்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கால இந்தியத் துறைமுகங்களில் பலவும் பழைய துறைமுகங்களுக்கு அருகில் எழுந்தவை தான்; காட்டாக முசிறி/கொச்சின், கொற்கை/காயல்பட்டினம்/தூத்துக்குடி, புகார்/நாகப்பட்டினம், பாலூர்/பாரதீப், தாமலித்தி/ஆல்தியா, சோபாரா/மும்பை, பாருகச்சா/பரூச்). சோபாரா துறைமுகம் (சோபாராவுக்குச் சற்று முன்னே கன்னேரிக் குகைகள்) நூற்றுவர் கன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. நூற்றுவர் கன்னருக்கும் முன்னால், மகத அரசிற்கு முகன்மையாக சோபாராவும், நர்மதையின் கழிமுகத்தில் இருந்த பாரகச்சா(இந்தக் கால பரூச் Bhaarukaccha>Broach)வும் துறைமுகமாய் இருந்திருக்கிறன. இந்தத் துறைமுகங்கள் அரேபிய, உரோம வாணிகத்திற்கு உறுதுணையாய் இருந்தவை. இதே போல வங்க விரிகுடாவில் தாமலித்தி இருந்திருக்கிறது. அது கீழைக் கடல் வாணிகத்திற்குத் துணையாக இருந்திருக்கிறது.

சேரன் படையெடுப்பை விவரிக்கத் தேவையான களனை விவரித்த கையோடு, (நேரம் கிடைக்கும் போது உத்தர, தக்கணப்பாதைகளை வரைபடம் கொண்டு காட்ட முயல்வேன். இப்பொழுது படிப்போர் பொறுத்துக் கொள்ளுங்கள்.) சிலம்பிற்குள் செல்லுவோம். அதில் வரலாற்றுப் பின்புலம் கொண்ட செய்திகளை மட்டும் பார்ப்போம்.

பொதுவாய் சிலம்பில் இன்று நாம் காணும் எல்லாமே இளங்கோ எழுதியதல்ல. சிலம்பில் முன்பின்னாக ஓரிமை இல்லாமல் இருக்கும் பகுதிகளைக் கவனித்துப் பார்த்தால் ஒழிய நமக்கு எது இளங்கோ எழுதியது, எது அவர் எழுதாது என்று புரிபடாது போகலாம்.

முதலில் பதிகத்துக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, February 20, 2008

நாளும் கூடும் ஆங்கிலத் தாக்கம்

இந்த வாரம் (21/2/2008) வெளிவந்த குங்குமம் தாளிகையில் "ஆதலினால்..." என்ற தொடரில் "முகத் திருத்தம்" பற்றிப் பேசவந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த செய்தியைச் சொல்லுகிறார். அதை இங்கு கீழே கொடுத்திருக்கிறேன்.
-------------------------
வயதானவர், தயக்கத்துடன் "தம்பி சொன்னது புரியலை" என்றார். "இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று அவன் கோபம் அதிகமானது. வயதானவர், தான் நாற்பது வருஷத்துக்கும் மேலாக இதே தொழிலை மானாமதுரையில் செய்து வந்ததாகச் சொன்னார். அவரது குரலை யாரும் மதிக்கவேயில்லை. மாறாக "ஆங்கிலம் தெரியாதவர்கள் ஏன் இந்த வேலைக்கு வருகிறார்கள்?" என்ற கேலியே எழுந்தது.

தனக்குத் தெரிந்த தொழிலை நாற்பது வருடங்களுக்குச் செய்து வந்த ஒரு மனிதன், பிழைக்க வழியின்றி பெருநகரத்துக்கு வந்து, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவமானப்படுத்தப்படும் கொடுமை வேறு எங்காவது நடக்குமா என்று தெரியவில்லை. சவரம் செய்து கொள்ளும் இடத்திலும் ஆங்கிலம் அறியாதவர்கள் வாழ முடியாது என்ற நிலை நம்மிடையே மட்டுமே இருக்கிறது.

மேலாளர் வயதை மறந்து அவரைத் திட்டிக் கொண்டிருந்தான். தலைகவிழ்ந்து நின்ற அவரது தோற்றம் அத்தனை கண்ணாடிகளிலும் பிரதிபலித்தது. ஆள் உயரக் கண்ணாடிகள் இருந்த போதும் எதையும் அந்த மனிதர் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

அவர் தனது வலியை மறைக்கத் தெரியாமல். "இந்த தலைமசிரை நேத்துவரைக்கும் சீவிச் சிங்காரிச்சிட்டு, வெட்டிப்போட்ட மறுநிமிஷம் குப்பைனு தூக்கி எறியுற மாதிரி நம்ம பொழப்பும் ஆகிப்போச்சுல்ல" என்றார். அலங்கார நிலையத்தின் மேலாளர், "இனிமே குப்பை அள்ளுற வேலை தான் உனக்கு, புரியுதா? போயி அந்த வேலையை ஒழுங்காப் பாரு" என்றான். வயதானவர் கோபத்துடன் விடுவிடுவென அந்த இடத்திலிருந்து வெளியேறிப் போனார்.

அந்த மனிதன் அவமதிக்கப்பட்ட வலி ஆறாமலே இருக்கிறது. இவரைப் போல மாநகரில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சொல்லும் ஆட்டோ ஓட்டுநர், ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒவ்வொரு நாளும் அவமானப் படுத்தப் படுகிறார். அடுக்குமாடிக் குடியிருப்பின் துணி தேய்க்கிறவன், ஆங்கிலம் பேசத் தெரியாத காரணத்தால் முட்டாளாக்கப் படுகிறான். லண்டனில் கூட இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் தமிழில் உரையாடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் நேர் எதிரான சூழலே உள்ளது.
------------------------------------

இனி நாம் சற்று அவதானிக்கலாம் வாருங்கள்.

மேலே கூறும் "அவமதிக்கப் பட்ட வலிகள்" இன்று நேற்றா ஏற்பட்டன? ஒரு 25, 30 ஆண்டுகளாய் நடந்து கொண்டு தானே இருக்கின்றன? (நாடு விடுதலை பெற்றவுடனேயே கூட இந்த அவமதிப்புத் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.)

"இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று கோபப் பட்ட இளைஞரைப் போன்றோர் இன்று இலக்கக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களைத் தான் தமிங்கிலர் என்று சொல்லுகிறோம். அவர்கள் தான் இன்று பல இடங்களிலும் முகன்மையான ஆட்களாய் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் பொள்ளிகைகளைத் (policies) தலைமேல் எடுத்துக் கொண்டு நடத்தும் அடியாட்களாக, இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். கூர்ந்து நோக்கினால், தமிங்கிலர் தமிழரை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.

தமிங்கிலர் உருவான கதை ஒரு தனிக்கதை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது, எழுபதுகளில் பல நாளிதழ்களில், தாளிகைகளில், கதைகளில், தமிழ்த் திரைப்படங்களில், ஒரு ஏக்கம் தொடர்ச்சியாய் வெளிப்பட்டு வந்தது. காட்டாக, தமிழ்த் திரைப்படங்களில், கதைநாயகி என்பவள் ஆங்கிலப் பள்ளி (convent)யிலிருந்து படித்தவளாயும், கதைநாயகன் ஆங்கிலம் தெரியாத, வெகுளியானதொரு பட்டிக்காட்டானாகவும் உருவகிக்கப் பட்டு, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவனைக் கேலி செய்கிற காட்சியையும் காட்டி, அதற்குப் பின்னால், எப்படியோ ஆங்கிலத்தில் தேறி, வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்து, விளையனிடம் (villain) இருந்து கதைநாயகியைக் காப்பாற்றி, அவளையே அடைவதாகக் கதை நகரும். பார்க்கும் பலருக்கும் வாழ்விற் செய்யவேண்டியது என்று சில அடிப்படைக் கருத்துக்கள் ஊசியேற்றுவது போல் உறுத்தப்படும். அதில் ஒன்று "ஆங்கிலம் தெரிந்தால் தான் வாழ்க்கையிற் கடைத்தேறலாம்" என்ற ஏக்கமும் ஆகும். இந்த ஏக்கத்தை இன்று நேற்றல்ல; ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளாகவே தமிழ்மக்களிடையே உருவேற்றியிருக்கிறார்கள். இந்த ஏக்கத்தின் விளைவு தமிழரில் மேல்வருக்கத்தார் தமிங்கிலராய் மாறிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த ஏக்கத்தின் வடிகாலாய், சென்னை போன்ற பெருநகரங்களில், ஒன்றிரண்டு ஆங்கிலோ இந்தியர் பள்ளிகளும், மிகமிகக் குறைந்த வகையில் தென்னிந்தியக் கிறித்தவ சபையினர் (Church of South India) பள்ளிகளும், மற்றும் ஏசு குமுகத்தினரின் (Society of Jesus) கத்தோலிக்கப் பள்ளிகளுமாய் ஆங்கிலப் பள்ளிகள் அமைந்திருந்தன. வணிக நோக்கில் நடத்தப்பெறும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் அப்போது கிடையா. பொதுவாய் பழைய, புதிய பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த மடலாயப் பள்ளிப் (convent school) படிப்புக்கு அனுப்பி வைத்து அந்தக் காலத்தில் ஊருக்குள் பெருமை கொண்டார்கள்.

பின்னால், மேட்டுக்குடியைப் பின்பற்றி அப்படியே ஈயடிச்சான் படி(copy)யெடுக்கும் உயர் நடுத்தர வருக்கமும், அதையடுத்து நடுத்தர வருக்கமும், இன்னும் கீழே உள்ளவரும் எனக் கொஞ்சம் கொஞ்சமாய் கூம்பின் உச்சியிலிருந்து ஆர்வம் கீழாய்ப் பெருகி, பொல்லாத ஏக்கம் கொண்டு, ஆங்கிலப் பள்ளிப் படிப்பிற்கு மாற முற்பட்டனர். கூடிப் போன இந்த ஏக்கத்தை நிறைவு செய்யுமாப் போல மடிக்குழைப் பள்ளிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒருசிலர் வளர்த்தனர். ஒரு கட்டத்தில், இந்தக் கூடுதற் தேவையை ஈடு செய்ய மடலாயப் பள்ளிகளால் முடியவில்லை.

இந்தப் பள்ளிகளில் இருந்து வெளிவந்த ஒரு சிலர், தனியார் பள்ளிகளாய், "மடலாயப் பள்ளிகள் போலவே தாங்களும் நடத்த முடியும்" என்ற முன்மொழிவில், மடிக்குழைப் பள்ளிகளைத் தொடங்கினர். அந்த நிலையில் தான், பள்ளி தொடங்குவதற்கு அனுமதி வழங்கும் போது இடையாளராய் இருந்து ஏகப்பட்ட பணம் பண்ண முடியும் என்று யாரோ சில சூழ்க்குமதாரிகள் சொல்லிக் கொடுக்க, அதைத் தாரக மந்திரமாய் எடுத்துக் கொண்டு, இரண்டு கழகத்தாரும் ஒன்றிற்கு ஒன்று போட்டியாய், அடுத்தடுத்து தங்கள் ஆட்சியில் காசுக்கு அனுமதி வழங்கினார்கள். இதன் விளைவாய், "சடசட"வென, "படபட"வெனப் புற்றீசலாய், மடக்கை (exponential) வேகத்தில், பணம் ஒன்றே குறியாய், தேவையை நிறைவு செய்யும் அளிப்பாக மடிக்குழைப் பள்ளிகள் பெருகின. மாநிலத்தின் கல்வித்துறை, கையூட்டு மல்கிய துறையாக, மாற்றம் பெற்றது. தலையில் இருந்து கால்வரை பணம் ஏராளமாய்ப் புரண்டது. மேடையில் முழங்குவது மட்டும் தமிழாகவும், அன்றாட நடைமுறையில் புரந்தருவது ஆங்கிலமாகவும் கல்வி வணிகர்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரிகள் ஆகியோரின் கூட்டுறவில் ஆகிப் போனது. தமிழக அவலத்தின் ஊற்றுக்கண் மடிக்குழைப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் தான் இருந்தது.

இந்த வேகம் ஓர் அசுர வேகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் அரசு வாரியம் வழிநடத்திய தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 99 விழுக்காடு தமிழகத்தில் இருந்தன. தவிர, அப்போது ஆட்சியில் இருந்த பேராயக் கட்சியும் பெரிதும் விடுதலை உணர்வால் உந்தப்பட்டுத் தமிழை முன்னெடுத்துச் செல்லுவதாய்த் தான் செயற்பட்டு வந்தது. அதனால் 67 தொடங்கும் வரை, இன்னுஞ் சொன்னால், எழுபதுகளின் முடிவு வரை கூட நிலை ஒன்றும் பெரிதாய் மாறவில்லை; மாநிலமெங்கும் 80 மடிக்குழைப் பள்ளிகளே இருந்தன. இன்றோ, மாநிலமெங்கும் 2500 மடிக்குழைப் பள்ளிகளுக்கும் மேல் இருக்கின்றன. தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 50 மேனி இருக்குமா என்பது கேள்விக் குறியே! (அதோடு, இன்றைக்கு மடிக்குழைப் பள்ளி நடத்துவோரின் கூட்டமைப்பு பணமும் வலியும் கொண்ட அமைப்பாக, வழக்குமன்றம், சட்டப் பேரவை போன்றவற்றை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இவர்களைச் சாய்க்காமல், ஒரு மண்ணும் தமிழகத்தில் செய்யமுடியாது; தமிங்கிலர்களைத் தொடர்ந்து உருவாக்குவதே இவர்களின் பணி.)

தமிழ் மாநிலத்தில் தமிழில் படிப்பது தொலைந்தது மட்டுமல்லாமல், தமிழே படிக்காமல் (அதாவது மொழியாய்க் கூடப் படிக்காமல்) பிரஞ்சு, சங்கதம் என்று வெறும் மதிப்பெண்ணிற்காகப் மட்டுமே படிக்கும் தற்குறிகளாய் மாறிப் போன தமிழ் இளைஞர் 20, 30 இலக்கத்தை நெருங்குவர். தம் வீட்டு வேலைக்காரர், தம் அடுக்குவீட்டுக்கு அருகில் உள்ள துணிதேய்ப்பவர், தம்மைப் பள்ளிக்கு இட்டுச்செல்லும் தானி ஓட்டுநர், எனத் தாழ்நிலை வேலையாளருடன் பேசுவதற்கு மட்டுமே தமிழைப் பயன்படுத்தும் இவர்கள் தமிங்கிலராய் ஆகாமல் வேறு எப்படி ஆவர்? மேலே முடிதிருத்தகத்தில் கோவப் பட்ட இளைஞரும் இந்தத் தமிங்கிலரில் ஓர் உறுப்பினர் தான்.

பணம் சம்பாரிப்பதற்காக தமிழ்நாட்டுக் கல்விப் பொள்ளிகையைக் காற்றில் பறக்கவிட்ட கழக அரசுகளே தமிங்கிலரை உருவாக்கியதில் பெருங்காரணம் என்பதை வேதனையோடு சொல்ல வேண்டியிருக்கிறது. (67- ல் கழக அரசு ஏற்படவேண்டும் என்று பெரிதும் பாடுபட்ட என்னைப் போன்றவர்கள் மனம் வெதும்பி இப்பொழுது நிற்க வேண்டியிருக்கிறது. உண்மையான திராவிடக் கொள்கையில் ஒரு பிடிப்பு இருந்திருக்குமானால், இப்படி இவர்கள் சோரம் போவார்களா?)

இன்னொரு சிந்தனையும் எழுகிறது. அந்த முடிதிருத்தகத்தில் நடந்தது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் தமிழ்நாடெங்கணும் நடக்கின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை நிறுத்த முயற்சிகள் செய்திருக்கிறோம்? கூடிவரும் ஆங்கிலத் தாக்கத்தை அப்படியே அடிமையாய் ஏற்றுக் கொள்ளுவதைத் தவிர, அதனால் விளையும் தமிங்கில நோய் எங்கணும் பரவ நாம் தரும் பங்களிப்பையும் தவிர, நம்மைப் போன்றோர் என்ன செய்திருக்கிறோம்?

வெள்ளைக்காரன் ஆண்டிருந்த காலத்தில் மகிழ் குழும்புகளின் (ஜிம்கானா, காசுமாபாலிடன் போன்றவை) நுழைவாயிலில் "Indians and dogs are not allowed" என்று எழுதிப் போட்டிருந்ததாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த நிலை மீண்டும் இப்பொழுது வருகிறது அல்லவா? "Tamils and dogs are not allowed" என்று அந்த முடிதிருத்துக் கடையில் நேரடியாய் எழுதிப்போடவில்லை தான்; ஆனாலும் நடைமுறையில் அதுதானே இருக்கிறது?

இன்றையத் தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாகச் சென்னை போன்ற பெருநகரங்களில், எந்தவொரு அலுவத்திலும் (அது தனியாராய் இருந்தாலும் சரி, அரசினராய் இருந்தாலும் சரி) தமிழில் கேள்வி கேட்டால், நம்மைத் தள்ளித்தான் வைக்கிறார்கள். ஆங்கிலத்தில் கேட்டால் ஏதோ ஒரு மறுமொழி, இணங்கியோ, இணங்காமலோ கிடைக்கிறது. இதே போல சென்னை அடையாற்றில் உள்ள ஒரு மடிக்குழைப் பள்ளியில் ஒருமுறையும், மதுரையில் ஒரு பள்ளிக்கூடத்திலும் தமிழில் தங்களுக்குள் உரையாடிக் கொண்ட சிறுவர் தண்டனை பெறத்தான் செய்தனர். அங்கும் "Tamils and dogs are not allowed" என்பது தானே நடைமுறைப் பொள்ளிகையாய் (policy) இருந்திருக்கிறது? அப்புறம் என்ன, வேண்டிப் பெற்ற விடுதலை? "சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்?"என்ற மன்றாட்டு?

நன்றாக நினைவுக்கு வருகிறது நான் பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் (1965 - 70) விடுதிகளுக்கு வரும் நாட்டுப்புற மாணவர்களில் பலர், தமிழ் மட்டுமே தெரிந்த தங்கள் பெற்றோரை மற்றோரிடம் அறிமுகம் செய்ய வெட்கப்பட்டு ஒதுக்கித் தள்ளிய பழக்கம் இன்றளவும் மாறவில்லையே?

ஒரு காலத்தில் அய்யா என்று மரியாதையுடன் அழைக்கப் பட்ட தமிழாசிரியர் இன்றைக்கு தாளிகை, திரைப்படம், தொலைக் காட்சி எல்லாவற்றிலும் கேலிக்கு ஆளாகும் மாந்தராகத்தானே காட்டப் படுகிறார்? தமிழாசிரியர் கேலிக்குரிய மாந்தனானால், அப்புறம் தமிழும் கேலிப்பொருளாய் மாணவரிடையே ஆகிவிடாதோ?

விடுதலைக்கு முன்னால் வெள்ளைக்காரத் துரைக்கு எழுத்தராய் (clerk) தமிழர் வேலை செய்தது போல, தேயிலையைத் தவிர வேறு எதுவும் பெரிதாய் விளைவிக்காமல், வாழ்க்கைத் தேவையான பலவற்றையும் இறக்குமதி செய்துகொண்டு, அதற்கு ஏந்தாக ஏராளமான எழுத்தர்கள், அரசதிகாரிகள், இலடண்டனுக்கான முகவர்கள் எனப் பழகிய குடியேற்ற காலத்து இலங்கைத் தீவுப் பொருளாதாரம் போல, எங்கோ இருக்கிற புத்தாக்கத்திற்கு, இங்கிருந்து சேவை செய்யும் பொதினச் செலுத்த வெளியூற்று (business process outsourcing) புற்றீசல் போலத் தமிழகத்தில் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் "எந்தத் தொழில் துறை அறிவும் தேவையில்லை, வெறுமே ஆங்கில பேசத் தெரிந்தால் போதும், நீங்கள் கூலி எழுத்தராய் ஆகிச் சம்பாரிக்கலாம்" என்று ஆசைகாட்டி, நுனிநாக்கு ஆங்கிலம் பேச வைக்கும் அளவுக்கு உள்ளூர் மனவியலை மாற்றியதை என்ன சொல்லுவது?

ஆங்கிலத் தாக்கத்துக்குக் கொடிபிடிக்கும் தமிங்கிலகம் என்ற நாட்டிற்குக் கீழ் தமிழகம் என்ற நிலம் குடியேற்ற நாடாகத் தானே இருக்கிறது? வெள்ளைக்காரன் காலத்தில் நாடு அடிமைப் பட்டிருந்ததற்கு என்னென்ன அடையாளங்கள் இருந்தனவோ, அவை அத்தனையும் மீண்டும் வந்தாயிற்று அல்லவா? என்ன, இந்த முறை தமிழரை ஆள்பவர், தமிழரே போலும் இருக்கிறார். அதன் காரணமாகவே, அவர் ஆட்சி இன்னும் முற்றாளுமையோடு இருக்கிறது. "மக்களே போல்வர் கயவர்" என்றார் வள்ளுவர். தமிங்கிலருக்கும் தமிழருக்கும் வேறுபாடு தெரியாத வகையில் பல இடத்தும் நாம் தடுமாறுகிறோம்.

"தமிழில் தலைப்பு வையுங்கள்; கேளிக்கை வரி விலக்குத் தருகிறோம்" என்ற அளவுக்கு ஓர் அரசு போகுமானால், இங்கே ஆங்கில, தமிங்கிலத் தாக்கங்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?

"தமிழில் பேசு; தங்கக் காசு தருகிறோம்" என்று ஒரு தொலைக்காட்சியினர் சொல்லும் அளவுக்குத் தமிங்கிலம் இங்கு இயல்பாகிப் போனதே? அந்தத் தொலைக்காட்சி தவிர மற்றெல்லாத் தொலைக்காட்சி, பருவெண் மட்டுழைத்த (frequency modulated) வானொலி நிலையங்கள் என எல்லாவற்றிலும் தமிங்கிலம் தடையின்றிப் புழங்குகிறதே?

இதற்கிடையில் முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்கும் வகையில் 12/06/2006ல் கொண்டுவரப்பட்ட தமிழகச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட (petition) ஆகஸ்டு 23ம் தேதி உயர்நய மன்றம் கூறிய தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நயமன்றம் தள்ளிவைத்தது.

முதல்வர் பெருமைப் பட்டுக் கொள்ளுகிறார். முன்னே 20 ஆண்டுகள் இரு கழக ஆட்சியில் கல்வியில் நடந்த அவலங்களை அவர் எண்ணிப் பார்ப்பாரோ?

தமிங்கிலம் என்று சொன்னவுடன், தேனிசைச் செல்லப்பா பாடிய இன்னொரு பாடலின் தொடுப்பு நினைவிற்கு வருகிறது.

வணக்கம் என்று சொன்னால் வாய் நோகுமோ? - நல்
இணக்கம் தரு தமிழில் இருகை கூப்பிநின்று (வணக்கம்)

- தேனிசைச் செல்லப்பாவின் பாடல் வரிகள்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, February 19, 2008

அளவுச் சொற்கள் - 4

ஏற்கனவே மூன்று பகுதிகளோடு இந்தத் தொடர் அப்படியே நின்று போயிற்று. அவை வருமாறு:

அளவுச் சொற்கள் - 1
அளவுச் சொற்கள் - 2
அளவுச் சொற்கள் - 3

இனித் தொடர்ச்சி. இந்தப் பகுதியில் முதலில் ஒருசேர நான்கு சொற்களைப் பார்க்கப் போகிறோம். அவை minimum, minor, minority, minute ஆகியவை ஆகும். இந்தச் சொற்களில் வரும் min என்ற பகுதியும் நுண் என்பதோடு தொடர்பு கொண்டது. நுண் என்பதும் முன்னால் சொன்னது போல் நுல் என்னும் வேரில் இருந்து கிளைத்த அடிச்சொல்லாகும்.

முதலில் முப்பத்தி ஆறாவது அளவுச் சொல்லான minute என்பதைப் பார்ப்போம். தமிழில் நுணுக்கு என்பது ஒரு பெரிய பகுதியின், ஆகக் குறுகிய பகுதியைக் குறிக்கும் சொல். மிகச் சிறியது என்று அதற்குப் பொருள். நுணுக்கின் போலியான முணுக்கு என்ற சொல்லை நாம் இன்றும் கூடப் பயன்படுத்துகிறோம். (அவன் முணுக்கென்று போனான்.) நுணுக்கு என்பது நுணுத்து என்றும் வேறு ஒரு ஈற்றிலும் முடியலாம். நுணுத்தல் என்பது குறுகுதல் என்ற பொருள் கொள்ளும். ஆங்கிலத்திலும் minute என்ற சொல் குறுகிய பகுதியையே குறிக்கும். அது காலத்தின் பகுதியை மட்டுமல்லாது பொருள், இடம் என எல்லாவற்றின் சிறுமையையும் குறிக்கும். நாம் இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கும் மணித்துளி போன்றவை கால அளவை மட்டுமே குறிக்கும் சொற்கள். தவிர, மணித்துளி என்ற சொல் நீர்வீழ்ச்சி போல ஒரு செயற்கையான அலங்காரச் சொல். அதைக்காட்டிலும் நுணுத்து அல்லது நுணுத்தம் என்ற சொல் சிறப்பாக இருக்கும். வடமொழி வழியே பெறப்பட்ட நிமிடத்திலும் கூடத் தமிழ்வேர் உள்நின்று அடையாளம் காட்டும். தமிழில் ஏற்படும் முகர/னகர/ணகரப் போலியையும், தமிழில் வரும் டகர/தகர ஈற்றுக்கள் வடமொழியில் ஷகர ஒலியாய் மாறுவதையும் ஓர்ந்து பார்த்தால் நுணுத்தத்தில் இருந்து நுணுஷம்>முநுஷம்>நுமுஷம்>நிமுஷம்>நிமிஷம் என்ற திரிவு புலப்படும். (இதே போன்ற திரிவுக்கு இன்னொரு காட்டு: வருடு>வருடை = ஆடு; வருடு+அம் = வருடம்>வருஷம் = மேய இராசியில் தொடங்கும் ஆண்டு; ஆடு>ஆட்டை, ஆடு>ஆண்டு என்ற சொற்கள் அமைந்த முறையையும் இங்கு கவனிக்கலாம்.) நுணுத்தம் என்ற சொல்லைப் புழங்கினால், உள்ளே ஆழத்தில் இருக்கும் நுணுத்தல் என்னும் வினைச்சொல்லும் நமக்கு விளங்கும். பொதுவாய் வினைச்சொல் தெரிபடத் துலங்கும் பெயர்ச்சொற்கள் சிந்தனையைத் தூண்டுபவை. [நுணுத்தத்தின் சிறு பகுதியான second என்பதை செகுத்தம் என்று சொல்லலாம். கூடவே அதன் இன்னொரு பெயரான நொடியையும் புழங்கலாம். செகுத்தம் பற்றி முன்னால் செகை (sex) என்ற கட்டுரையில் விவரித்துள்ளேன்.]

இனி முப்பத்தி ஏழாவது சொல் minimum. நுணுகிக் குறுகிப் போன நிலையைக் குறிக்கும் சொல். நுணுகுதல் என்ற வினையை நுணுதல் என்றும் சொல்லலாம். இதே கருத்தில், நுணுகிய தன்மையை minimum = நுணுமம் என்று சொல்லுவதின் மூலம் கொண்டு வரலாம். அதன் மூலம் மிகக் குறைந்ததென்ற பொருளையும் கொண்டு வரலாம். maximum = மீகுமம் என்பதற்கு எதிர்ச்சொல்லாயும் நுணுமம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளப் பொருத்தமாய் இருக்கும்.

இதற்கும் அடுத்தது முப்பத்தெட்டாவது சொல் minor என்னும் சொல்லாகும். அகவையில் குறைந்தவர்; பங்களிப்பில் குரைந்தவர் என்ற பொருளில் minor = நுணுவர் என்றே சொல்லலாம். சிறுவர் என்பது போல நுணுவர் என்பது பொருளாழம் காட்டும். major = மேவு, மேவிய, மேவர் என்பதற்கு இணையாக minor = நுணுவிய, நுணுவர் என்ற சொற்கள் அமையும். மேவிய பங்கு, நுணுவிய பங்கு என்ற சொற்கள் major share, minor share என்பதைத் தெளிவாகக் குறிக்கும். பங்கிற்கு இணையாகக் கூறு என்பதையும் ஆளமுடியும்.

முப்பத்தொன்பதாவது சொல் minority. நுணுதல் என்னும் வினையில் இருந்து நுணதி என்ற சொல்லை உருவாக்க முடியும். majority = மேவுதி என்பதற்கு எதிராக நுணதி என்ற சொல் அமையமுடியும். "எங்குமே மேவுதியார் பேச்சு நுணதியார் பேச்சைக் காட்டிலும் எடுபடும்", "அவர் நுணதியாகித் தோற்றுப் போனார்" என்று வாக்கியங்களை எண்ணிப் பார்க்கலாம்.

மேலே சொன்ன நான்கு சொற்களுக்கு அப்பால் நாம் பார்க்கும் நாற்பதாவது அளவுச் சொல் mode. எந்த ஓர் உயர்ச்சிக்கு முன்னாலும் பின்னாலும் ஒரு தாழ்ச்சி உண்டு. அது மலையானாலும், அலையானாலும் அமைவது தான். மலை, அலை போன்றவற்றின் உச்சி mode என்று சொல்லப்படும். தமிழில் அதை முகடு என்று குறிக்கிறோம். முக>மோ என்ற பலுக்கத் திரிவை ஓர்ந்து பார்த்தால், முகடு = mode என்பதன் சொல்லிணை சட்டென்று விளங்கும். வீட்டு கூரையில் மேலே இருக்கும் உச்சியை, மோட்டு வளை என்றே நாட்டுப் புறத்தில் கூறகிறார்கள்.அந்த மோடும் இந்த முகட்டின் திரிவுதான். (இது போன்ற ஒப்புமைகளைப் பார்க்கும் போது, தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளும் ஏதோ ஒரு தொடர்பு அறதப் பழங்காலத்தில் இருந்திருக்க வேண்டுமென்றே நான் கருதுகிறேன். இது வரை செய்த சொல்லாய்வுகள் அதை நாளும் உறுதி செய்து வருகின்றன.)

இனி அடுத்து more, most, much என்னும் மூன்று சொற் தொகுதியைப் பார்ப்போம்.

நாற்பத்தொன்றாவது அளவுச் சொல் more. மேலும் மேலும் ஓர் எண்ணுதி (quantity) சேருகின்ற கருத்தை "மேல்" என்றே சொல்லலாம். அது அப்படியே more என்பதற்குப் பொருந்தும். மேலும் மேலும் = more and more.

நாற்பத்திரண்டாவது சொல் most. more என்பதன் உயருறவு நிலை (superlative). மேலும் மேலும் ஏறும் இந்த நிலையை மேலேற்று என்றே சொல்லலாம்.

நாற்பத்தி மூன்றாவது சொல் much. நீரை ஒரு கலத்தில் ஊற்றிக் கொண்டே வரும் பொழுது அது விளிம்பில் இருந்து கொட்டுகிறது பாருங்கள் அதை மகுதல்>மகுருதல் என்று எங்கள் பக்கத்தில் சொல்லுவார்கள். இந்த மகுவும் மிகுவும் தொடர்புள்ள சொற்கள் தான். இருந்தாலும் மிகுதல் = to exceed என்ற பொருளைச் சட்டென்று குறிப்பதால், மகுதல் என்றும் அதன் முன் திரிபான மொகுதலையும் உரிய வினையாகக் கையாளலாம். multiply என்பதைக் குறிக்கும் மல்குதல் என்ற சொல்லும் மகுதல் என்று பேச்சுவழக்கில் ஆவதால், மொகு என்பதே much ற்கான என் பரிந்துரை. much என்பதற்கும் more என்பதற்கும் நுணுகிய வேறுபாட்டை ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். Much water has flown through the river = மொகுந்த நீர் ஆற்றின் வழியே பெருகியிருக்கிறது / விளவியிருக்கிறது.

இதற்கு அடுத்து மல் என்னும் வேரில் கிளைக்கும் மூன்று சொல் தொகுதியைப் பார்க்கலாம்.

நாற்பத்தி நான்காவது சொல் multi இதை மிகச் சுருக்கமாய் மல், மல்கு>மகு என்றே சொல்லலாம். மல்கிப் பெருகுதல் என்ற வழக்குத் தமிழில் கால காலமாய் உண்டு.

நாற்பத்தி ஐந்தாவது சொல் multiply. இந்தக் காலப் பேச்சுவழக்கில் பெருக்குதல் என்றே சொல்லிவருகிறோம். இருந்தாலும் இலக்கிய வழக்கில் மல்குதல் என்ற வினை இருந்திருக்கிறது. மல்குதல் என்று சொல்வதைத் திரித்துப் பேச்சுவழக்கில் மலிதல் என்று சொன்னாலும் பெருகுதல் என்ற பொருளைத் தரும். மல்குதல்/மலிதல் என்பவை தன்வினையில் வரும் சொற்கள். அதே சொல்லை மலித்தல் என்று சொன்னால் அது பிறவினையாகிவிடும். Please multiply two by five = இரண்டை ஐந்தால் பெருக்குக/மலிக்குக. பெருக்குதல் என்பது "கணக்கதிகாரம்" போன்ற தமிழ் நூலில் பேச்சு வழக்குச் சொல்லாகத் திரிந்த முறையில் பருக்குதல்>பழுக்குதல் என்றும் குறிக்கப் பட்டிருக்கிறது. இது போக மல்தல் என்னும் வினை, மால்தல் என்று நீண்டு, பின் புணர்ச்சியில் மாறல் என்று ஆகி, பெருக்கல் வினையைக் குறிக்கிறது. மாறல் என்ற இந்தச் சொல்லும் "கணக்கதிகாரம், கணித நூல்" போன்றவற்றில் multiplication என்பதற்கு இணையாகப் பெரிதும் ஆளப் பட்டிருக்கிறது. இந்த நூல்களில், ஓர் இழுனை அளவைக் (linear measure) கொடுத்து, அவற்றால் ஏற்படும் சதுரங்களின் பரப்பு அளவை (area measure) கண்டு பிடிக்கும் வேலைக்கு "பெருங்குழி மாற்று, சிறுகுழி மாற்று" என்ற சொற்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்றைக்கு மாற்றுதல்/மாறல் என்ற சொற்கள் வேறு பொருள் கொள்ளப் படும் என்பதால், முந்தைய வடிவமான மலித்தல் என்பதையே நான் பெருக்குதலோடு சேர்ந்து இங்கு பரிந்துரைக்கிறேன். பெருக்குதல், மலித்தல் என்பவை போக இன்னொரு சொல்லும் அகரமுதலிகளில் இருக்கிறது. அது குணித்தல்/குணத்தல் என்று சொல்லப்படும். பெருக்கல் என்பது ஒரு விரிந்த கூட்டல் (extended addition) என்ற முறையில் குணித்தல் என்பது கணித்தல் என்பதோடு தொடர்புள்ளது; கணித்தல் கூட்டலோடு முதலிலும், நாளடைவில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்னும் நான்கு செயற்பாடுகளையும் குறிக்கத் தொடங்கியது. இன்றைக்கு கணித்தல் என்ற சொல்லின் பொருட்பாடு இன்னும் விரிந்திருக்கிறது. ஆகப் பெருக்கல், மலித்தல், குணித்தல் என மூன்று சொற்கள் தமிழில் பெருக்கற் கருத்தைச் சொல்ல வாகாக உள்ளன. அந்த வகையில் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும் குறிக்கப்படும் குணகாரம், குணனம் = பெருக்கல், குணித்தல் = பெருக்குதல், குணகம் = பெருக்கும் எண், குண்ணியம், குணனீயம் = பெருக்கப்படும் எண், குணிதம் = பெருக்கிவந்த தொகை என்ற சொற்களையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

நாற்பத்தி ஆறாவது சொல் multitude; இது மல்குதல்/மலிதல் என்ற வினையில் இருந்து உருவானதொரு பெயர்ச்சொல். மல்கிக் கிடப்பதால் இதை மல்கணம் என்றே அழைக்கலாம்.

நாற்பத்தி ஏழாவது சொல் number = எண்; இப்பொழுது விளக்கத் தேவையில்லை. பின்னொரு நாள் இதன் சொற்பிறப்பை விளக்க முயலுவேன். (அது ஒரு நீண்ட ஆய்வு. எல்லோரும் எள்ளோடு தொடர்புடையது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்; அப்படிச் சட்டென்று சொல்லிவிடமுடியாது. எண்ணின் சொற்பிறப்பு நம்மைத் தமிழ்க் கணிதவியலின் ஆழத்திற்குக் கொண்டு போகும். கணிதவியலிலும் நமக்கு ஒரு கொடிவழி இருக்கிறது. அதை விரிவாய் ஆய்வதற்குத் தான் ஆட்களைக் காணோம்.)

நாற்பத்தி எட்டாவது சொல் nano = நூணு. அண்மையில் டாடா நிறுவனத்தினர் மிகக் குறைந்த விலையில் ஒரு சீருந்தை வடிவமைத்து அதற்கு nano என்று பெயரிட்டு அழைத்தார்கள். தவிர 10^-9 என்ற எண்ணை nano என்று கணிதத்தில் அழைப்பார்கள். நுண் என்னும் அடிச்சொல்லின் நீட்சியாய் நூணு என்றே நாம் அழைக்கலாம்.

நாற்பத்தி ஒன்பதாவது சொல் narrow. இதையும் நுல் என்னும் வேரில் இருந்து நுறு என்று சொல்லின் வழியாக நுறுவு என்ற சொல்லால் குறிக்க முடியும். narrow path = நுறுவிய பாதை; அதாவது ஆகக் குறுகிய பாதை.

இனி, ஐம்பதாவது அளவுச் சொல்லான nice என்பதைப் பார்ப்போம். "போட்டு நொய்ச்சு எடுத்துட்டாண்டா" என்றும், "அரிசியை நொய்யாகத் திரித்துக் கொள்" என்ற பேச்சிலும் வரும் நொய் என்பது nice மற்றும் powdery என்பதையே குறிக்கும். ஒரு குறுணை (grainy) இல்லாமல் வழவழப்பாக இருப்பது நொய். நொய்யும் வினை நொய்தல். யகர/சகரப் போலியில் நொய்வு என்பது நொசிவு என்றும் பேச்சுவழக்கில் வரும். கரடு முரடாக இல்லாமல் இருக்கும் பொருளையும், மாந்தரையும் nice என்ற கருத்தால் குறிக்கிறோம். தமிழில் அதற்கு இணையான சொல் நொசிவு என்பதே.

அடுத்துவரும் ஐம்பத்து ஒன்றாவது சொல்லான plenty = பலவாறு, ஐம்பத்து இரண்டாவது சொல்லான short = குறு, ஐம்பத்து மூன்றாவது சொல்லான size = அளவு, ஐம்பத்து நான்காவது சொல்லான small = சிறு, ஐம்பத்து ஐந்தாவது சொல்லான spread = பரத்திய, ஐம்பத்து ஆறாவது சொல்லான thin = சன்ன ஆகியவற்றிற்கு விளக்கம் சொல்ல வேண்டியதில்லை

ஐம்பத்து ஏழாவது சொல்லான volume என்பதைக் கன அளவு என்றே சொல்லிவந்திருக்கிறோம். உண்மையில் கன என்பது எடை தொடர்பான சொல்; கனமாக இருக்கிறது என்பது எடையாய் இருக்கிறது என்றே பொருள்படும். முப்பரிமான அகற்சிச் சொல்லான volume என்பதைக் குறிக்க வெளியை நிரப்பும் வினைச்சொல்லை நாட வேண்டும். வெள்ளுதல் என்பது வள்ளுதலில் இருந்து பிறந்த சொல். வள்ளுதலும் பெருத்தலே. வள்ளுதலில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் வளம் (=பெருமை, செழுமை, மிகுதி, prosperity) எப்படிப் பலம் பெலம் என்று பேச்சுவழக்கில் சொல்லப் படுகிறதோ அது போல, கட்டினான் என்பது கெட்டினான் என்று ஆவது போல, அகரவொலி எகரவொலியாகப் பலுக்கப் படுவது தமிழில் பல இடத்தும் நடக்கிறது. பெருத்தல் என்னும் பொருள் கொண்ட வள்ளுதல் வெள்ளுதல் என்றாவது இயற்கையே. ஆனால் வியப்பு என்னவென்றால், பெயர்ச்சொல் மட்டுமே இன்றையத் தமிழில் இருக்கிறது. வினைச்சொல்லைக் காணோம். பொதுவாய் பெருக்கு என்பது flow வைக் குறிப்பதால், ஒரு வேற்றுமை கட்டுவதற்காக, அளவில் பெருகுவதை வெள்ளம் என்று சொல்லலாம். அதே பொழுது வெள்ளம் என்ற சொல் flow என்னும் கருத்தீட்டை ஒரு சில போதுகளில் குறிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுவது நல்லது. அறிவியற் சிந்தனை பெருக வேண்டுமானால், volume என்பதற்கும் flow என்பதற்கும் தமிழில் சரியான சொல்வேறுபாடு காட்டத்தான் வேண்டும். அதே பொழுது அதை எடையோடு தொடர்புறுத்தக் கூடாது.

என் பரிந்துரை `volume = வெள்ளம்; flow = பெருக்கு என்பதே.

ஐம்பத்து எட்டாவது சொல்லான weighty என்பதை எடையான, நிறையான என்ற சொற்களால் சொல்லலாம்.

இந்தப் பகுதியில் உரைத்த அளவுச் சொற்களும், மற்ற சொற்களும் வருமாறு:

minute = நுணுத்து, நுணுத்தம்
minimum = நுணுமம்
minor = நுணுவிய, நுணுவர்
minority = நுணதி
mode = முகடு, மோடு
more = மேல்
most = மேலேற்று
much = மொகு
multi = மல்
multiply = மல்குதல், மலித்தல், பெருக்குதல், குணித்தல்/குணத்தல்
multiplication = மலிக்கல், பெருக்கல், குணகாரம், குணனம்
multiplying number = குணகம்
multiplicant = குண்ணியம், குணனியம்
product after multiplication = குணிதம்
multitude = மல்கணம்
number = எண்
nano = நூணு
narrow = நுறுவு
nice = நொசிவு
plenty = பலவாறு
short = குறு
share = கூறு, பங்கு
size = அளவை
small = சிறு
superlative = உயருறவு
spread = பரத்திய
thin = சன்ன
volume = வெள்ளம்
weighty = எடையான
density = திணிவு, அடர்த்தி
second = செகுத்தம், நொடி

இனி அடுத்த வரிசைகளுக்குப் போவோமா?

அன்புடன்,
இராம.கி.

Monday, February 18, 2008

மீட்டும் ஒரு நாள்காட்டு

இரண்டே முக்கால் ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு கிழமை (= வாரம்) முழுதும் நாள்காட்டச் சொல்லி தமிழ்மணத்தில் கேட்டுக் கொண்டார்கள். (அப்படி நாள்காட்டியது 11/4/2005 பங்குனித் திங்கள் பரணி நாள் திங்கட்கிழமை.) இப்பொழுது, மீண்டும் நாள் காட்டுவது 18/2/2008 மாசித் திங்கள் 6 ஆம் திகதி கும்ப ஞாயிறு புனர்பூச நாள் திங்கட்கிழமை. இன்னும் மூன்று நாட்களில் மாசி மகம். தமிழ்நாடெங்கணும் சிவம், விண்ணவம் ஆகிய சமய நெறிகளோடு சேர்ந்து அந்த நாளில் ஒரே நீராடல் தான். (ஆனாலும் இந்த நீராடல்களுக்குக் காரணம் சமய நெறிகள் தானா என்ற கேள்வி எனக்குள் நெடுநாளாய் எழுந்தது உண்டு. இன்னும் விடை கண்டேன் இல்லை.)

இப்பொழுது நாள்காட்டிற்கு வருவோம். காலங்கள் என்னும் தொடரில் திங்கள் என்னும் சொல், நிலவை ஒட்டிவந்த மாதப் பெயர் என்று சொல்லியிருந்தேன். ஓர் அமையுவாவில் இருந்து (அமாவாசையில் இருந்து) இன்னோர் அமையுவா வரைக்குமான காலத் தொடர்ச்சியைத் திங்கள் என்று தமிழர் வானியலில் சொல்லுவார்கள். (தமிழர் வானியலை ஏதோ வடமொழியில் இருந்து கடன் வாங்கியதாகவே இந்தியரில் பலரும் மேலையரில் ஒரு சிலரும் பார்க்கிறார்கள். அது முற்றிலும் தவறான பார்வை. நாவலந்தீவினுள் அறிவு உறவாடல் என்பது வடக்கிலும் தெற்கிலுமாய்ச் சேர்ந்துதான் இருந்தது. தமிழர் பங்களிப்பைக் குறைப்பதில் ஒருசிலர் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்களோ?) வெறுமே நிலவு புவியைச் சுற்றி வரும் காலத் தொடர்ச்சியைப் பார்த்தால், 27.3216615 நாட்கள் எடுக்கும். இந்தத் தொடர்ச்சியை ஒரு சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள். (அதாவது, சந்திரன், புவி ஆகியவற்றின் இயக்கத்தை மட்டும் அளவிட்டுச் சொல்லப்படும் காலத் தொடர்ச்சி இந்தத் திங்கள் ஆகும்.)

அதற்கு மாறாக, ஒவ்வோர் அமையுவாவிலும் (அல்லது பூரணையுவாவிலும்) சூரியன், புவி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்குமாப் போலப் பார்த்தால், 29.5305888 நாட்கள் பிடிக்கும். இப்படிச் சூரியன், புவி, நிலா மூன்றும் ஒன்றுபோல் சேர்ந்திருக்கும் காலத் தொடர்ச்சியைச் சூரியச் சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள். (சூரியன், சந்திரன், புவி என் மூன்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத் தொடர்ச்சி.) இப்படி அமையும் 12 சூரியச் சந்திரமானத் திங்கள்கள் சேர்ந்தால் 29.5305888*12 = 354.367056 நாட்கள் கொண்ட ஓர் ஆண்டு கிடைக்கும். ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்தச் சூரிய சந்தமான ஆண்டே புழக்கத்தில் இருக்கிறது. இசுலாமிய ஆண்டும் ஒரு சூரியச் சந்திரமான ஆண்டே! அதே பொழுது, இசுலாமிய ஆண்டுபோல இல்லாமல், ஆந்திர மாநிலத்தில் சூரிய ஆண்டிற்கு இணங்கச் சில மாற்றங்களைச் செய்து கொண்டு சூரியச் சந்திரமான ஆண்டுத் தொடக்கத்தை (அதாவது உகாதியை) பெரிதும் நகரவிடாமல் பார்த்துக் கொள்ளுவார்கள். இசுலாமிய ஆண்டின் தொடக்கமோ ஒவ்வோர் ஆண்டும் 11 நாள் முன் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்; ஏனென்றால் அவர்கள் நிலவின் இயக்கத்திற்கு அவ்வளவு முகன்மை கொடுப்பவர்கள்.

சந்திர மாதங்களையும், சூரியச் சந்திரமான மாதங்களையும் தான், சித்திரை, வைகாசி, ......... மாசி, பங்குனி என்று நாம் அழைக்கிறோம். இந்தப் பெயர்கள் எல்லாம் 27 நாள்காட்டுக்களில் 12 நாள்காட்டுக்களை மட்டுமே குறிப்பவை. பொதுவாய், பூரணையன்று எந்த நாள்காட்டு நிலவோடு பொருந்தி வருகிறதோ அதே பெயரையே அந்தத் திங்களுக்கும் முன்னோர் பொருத்திச் சொன்னார்கள். காட்டாகச் சித்திரை நாள்காட்டு, பூரணை நிலவோடு சேர்ந்து வரும் மாதம் சித்திரை மாதம். அதே வகையில், மக நாள்காட்டு பூரணையோடு பொருந்திவரும் மாதம் மாசியாகும். சித்திரை, வைகாசி என்ற பெயர்களில் ஒரு சில திங்கட் பெயர்கள் திரிவு கொண்டு சங்கதத் தோற்றங்களை வெளியே காட்டினாலும், அவை ஒவ்வொன்றின் உள்ளேயும் தமிழ்க் கூறுகள் அடங்கியிருக்கின்றன; அவை முற்றிலும் சங்கதப் பெயர்கள் அல்ல.

மாசி என்ற ஒலிப்பும், மகம் என்ற ஒலிப்பும் என்ன பொருள் கட்டுகின்றன, எப்படி அவை இணை கொண்டன, தமிழ் வேர் எங்குள்ளது என்பதை உன்னித்து பார்த்தால், அறியலாம். மக நாள்காட்டு என்பது ஒரு தனி நாள்காட்டு அல்ல. அதுவும் ஒரு நாள்காட்டுக் கூட்டம் தான்; ஐந்த நாள்காட்டு அடங்கிய கூட்டம். அந்தக் கூட்டம் இரவில் பார்க்கும் போது ஒரு கலப்பையின் வளைந்த நுகத்தடி போன்று காட்சியளிக்கும். காளையின் கழுத்தில் கட்டப்படும் மரமும் கூட நுகத்தடி என்றே தமிழில் அழைக்கப் படும். [தற்பொழுது மரு. செயபாரதி அகத்தியர் மடற்குழுவில் மகவோட்டம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். அதை விளக்கும் முகமாக மடங்கல் இராசியைப் (சிம்ம இராசியைப்) படம் போட்டுக் காண்பித்திருக்கிறார். அதற்கான சுட்டி கீழே.

http://www.geocities.com/jaybee4127/magam_simmaraasi.html

இந்த இராசிக்குள் ஐந்து நாள்காட்டுக்கள் கொண்ட மக நாள்காட்டுக் கூட்டமும் காணப் படும். அந்தக் கூட்டத்தை மட்டும் பார்த்தால், அது ஒரு வளைந்த நுகத்தடி போல் இருப்பது புலப்படும்; அதே பொழுது. முழு இராசியையும் பார்த்தால் சிகைமா - சிங்கம் - என்ற உருவம் புலப்படும். சிகைமா - சிங்கம் என்ற சொற்பிறப்பை காலங்கள் என்ற என் தொடரில் கூறியிருக்கிறேன்.] வளைந்த நுகம் என்பதால் கொடுநுகம் என்று இந்தக் கூட்டம் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. நகரமும் மகரமும் தமிழில் போலியானவை. நுடம் முடம் ஆகும்; முப்பது நுப்பது ஆகும். அந்த வகையில் நுகம் முகம் என்று ஆகும். அடுத்து உகரத்தை அகரமாயும், அகரத்தை உகரமாயும்/ஒகரமாயும் சிலபோது பேச்சில் பலுக்குவது தமிழில் பலரும் செய்வது தான் (மகளே என்பதை முகளே>மோளே என்று மலையாளத்தில் பலுக்குவதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புலப்படும்.) நுகம்>முகம்>மகம் என்ற திரிவில் நாள்காட்டின் பெயர் அமைந்தாலும் உருவம் நுகத்தடி என்பதை மறந்து விடாது பார்த்தால் பெயரின் உள்ளே இருக்கும் தமிழ்மூலம் புலப்படும்.

இனி மக நாள்காட்டுப் பொருந்திய மாதம் மகயி. எப்படித் துகள் பொருந்திய கூட்டம் துகயி>துகசி>தூசி என்று ஆகிறதோ, அதே போல மகம் நிறைந்தது மகயி>மகசி>மாசி என்று ஆகும். யகரம் சகரமாவதும் தமிழ்த் திரிவு தான். உயிர்>உசிர் என்று திரிவை எண்ணிப் பாருங்கள். இனி, மக என்னும் ஒலி மா என்று நீண்டொலிப்பதற்கும் காட்டுக் கூறமுடியும். மகன்>மான் (அதியமான்), மகள்>மாள் (வேள் மகள்>வேண்மாள்) என்று ஆவதைப் போல, மகசி மாசியாகும்.

சூரியச் சந்திரமான மாதத்திற்கு மாறாக, மூன்றாவது முறையில் நிலாவை முற்றிலும் ஒதுக்கிட்டு, புவி சூரியனைச் சுற்றி வரும் ஓராண்டுக் காலத்துக்குள் எத்தனை முறை தன்னுருட்டு (self rotation) செய்கிறது என்று பார்த்தால், 365.256364 தன்னுருட்டுக்கள் (அதாவது 365.256364 நாட்கள்) என்று புலப்படும். இந்தக் கணக்கைச் சூரிய மானம் என்று சொல்லுவார்கள். (சூரியன், புவி ஆகியவற்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத்தொடர்ச்சி ஒரு சூரிய ஆண்டு.) இதில் ஒவ்வோர் ஆண்டையும் அறவட்டாக (arbitrary) 12 மாதங்கள் என்று பிரித்தால், ஒரு சூரிய மாதம் அல்லது ஞாயிறு என்பது 365.256364 / 12 = 30.43803 நாட்கள் கொண்ட காலத் தொடர்ச்சியாகும். (மாதம் என்ற சொல் முதலில் மதியை ஒட்டி எழுந்திருந்தாலும் இன்று பொதுமைப் பொருளையையே குறிக்கும் சொல்லாக இதைப் பழகியிருக்கிறோம். அதே பொழுது திங்கள், ஞாயிறு என்ற சொற்கள் விதப்பான பொருளையே காட்டுகின்றன.)

சூரியச் சந்திர மானக் கணக்கில் மாதம் என்னும் காலத் தொடச்சி பெருமிதி (primitive)யானது; ஆண்டு என்பது அடுத்து வருவது; மாதத்தில் இருந்து பெறப்படுவது. அதே பொழுது, சூரிய மானக் கணக்கில் புவி சூரியனைச் சுற்றிவரும் சூரிய ஆண்டு என்பதே பெருமிதியானது; மாதம் என்பது பின்வருவது; ஆண்டில் இருந்து பெறப்படுவது. இந்த அடிப்படையைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.

ஞாயிற்று மாதங்கள் மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துளை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்று சொல்லப் படும். இவை அத்தனையும் நல்ல தமிழ்ப்பெயர்கள். [ஒருசிலர் புரியாமல் கும்பம், மீனம் போன்றவை வடமொழி என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். இன்னும் சிலர் வடமொழித் திரிவையும், மொழிபெயர்ப்பகளையும் பெருமிதியாக எண்ணிக் கொண்டு தமிழ்ச்சொற்களை வழிப்பட்டதாகச் சொல்லுவது உண்டு. வடசொற் தோற்றமுள்ள சொற்களின் பிறப்பை ஆய்ந்துபார்க்கும் போதுதான், தமிழ் வேர் சரியாகப் புலப்படுகிறது.] தற்போது காலங்கள் என்ற என் தொடரில் இந்தப் பெயர்கள், மற்றும் நாள்காட்டுகளின் சொற்பிறப்புகளை என்னால் முயன்றவரை தெரியப் படுத்திக் கொண்டிருக்கிறேன். முதல் ஆறு மாதங்களின் பெயர்களை இதுவரை விளக்கியிருக்கிறேன். மீதம் ஆறுமாதங்களின் பெயரை இனி வரும் பகுதிகளில் விளக்க வேண்டும். (மேலே, மேழத்தில் இருந்து மாத வரிசையை எழுதியதால், மேழத்தில் தான் தமிழ் ஆண்டு தொடங்க வேண்டுமா, அன்றிச் சுறவத்தில் இருந்து தொடங்கலாமா என்ற கேள்விக்குள் இப்பொழுது நான் போகவில்லை; அதற்கான மறுமொழியைக் காலங்கள் தொடரில் உறுதியாகச் சொல்லுவேன். கூடவே, இந்த மறுமொழி, தினமணி நாளிதழில் தொல்லியல் ஆராய்ச்சியாளர் திரு. எஸ். ராமச்சந்திரன் அண்மையில் வெளியிட்டிருந்த "சித்திரையில் தான் புத்தாண்டு" என்ற நீண்ட கட்டுரைக்கும் முன்னிகையாக இருக்கும்.)

தமிழ்நாடு, மலையாளம் போன்றவற்றில் சூரியமானக் கணக்கே பின்பற்றப் படுகிறது. ஒரு காலத்தில் திங்கள் மாதமும், ஞாயிற்று மாதமும் அருகருகே சேர்த்துத் தான் சொல்லப் படும். பல சோழர் காலக் கல்வெட்டுக்களில் அப்படி சேர்த்துச் சொல்வது பதிவு செய்யப் பட்டிருக்கிறது. பின்னால், இந்தப் பழக்கம் பழைய சேரலத்தில் (இன்றையக் கேரளத்தில்) மட்டுமே இன்று நிலைத்து, இன்றையத் தமிழகத்தில் மறைந்து போனது; (அது என்னவோ தெரியவில்லை, பழைய தமிழ் வழக்கங்கள் பலவும் இன்று கேரளத்தில் மட்டுமே மீந்துள்ளன. தமிழகத்தில் அவை மாறிப் போய்க் கிடக்கின்றன. காட்டாக தொல்காப்பியத்தில் சொல்லப்படும் படி, ஆவணியில் ஆண்டைத் தொடங்கும் வழக்கம் தென்கேரளத்தில் இன்றும் உள்ளது.) கூடவே சூரிய மாதங்களைத் திங்கள் பெயரை வைத்தே போலியாய் அழைக்கும் குழப்பமும் இன்றையத் தமிழகத்தில் ஏற்பட்டது. அதன்படி மேழ ஞாயிற்றைச் சித்திரை என்றும், விடை - வைகாசி, ஆடவை - ஆனி, கடகம் - ஆடி, மடங்கல் - ஆவணி, கன்னி - புரட்டாசி, துலை - ஐப்பசி, நளி - கார்த்திகை, சிலை - மார்கழி, சுறவம் - தை, கும்பம் - மாசி, மீனம் - பங்குனி என்றும் போலியாய் அழைக்கப் பட்டன.

ஒரு வேடிக்கையைப் பாருங்கள். முதலில் வெறும் சந்திர மான மாதத்திற்கு அழைத்த பெயர்கள், கொஞ்சம் நீண்டு சூரியச் சந்திர மான மாதங்களைக் குறித்து பிறகு இன்னும் நீண்டு முற்றிலும் சூரிய மான மாதங்களைக் கூடக் குறிக்கத் தொடங்கின. குழப்பம் வராதா? இல்லையா? வானியலில் துல்லியமாய்க் குறிக்க வேண்டுமானால் (நாள்காட்டி என்பதில் துல்லியம் காட்டாமல் எப்படி?) சூரிய மானப் பெயர்களை போலிப்பெயர் சொல்லாது மேழம் ...... மீனம் என்றே குறிப்பதே நல்லது. இன்னமும் சேரலத்தார் அப்படித்தான் குறிக்கிறார்கள். (தனித்தமிழ் இயக்கத்தார் மட்டும் பாவாணர், பெருஞ்சித்திரனாரின் முயற்சியால் சூரிய மானப் பெயர்களையே இப்பொழுது பயிலுகிறார்கள்.)

மக நாள்காட்டை வைத்துப் பல பழமொழிகளை நாட்டுப்புறத்தில் சொல்லுவார்கள். அரசியலில் கழக அம்மாவுக்கும் கூட ஒரு மக நாள்காட்டுப் பழமொழி சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் இங்கு விவரிக்கப் புகவில்லை.

மக நாள் இந்த ஆண்டு பெப்ருவரி 21, மாசி 9- ல் நடைபெறும். மாசி மகம் என்னும் இந்தப் பண்டிகை சிவ, விண்ணவ நெறிகளில் தீர்த்தவாரியோடு - அதாவது கடலாடல், ஆறு, குளம் போன்றவற்றில் நீராடல் - சேர்த்துச் சொல்லப்படும். தீத்தம்/தீர்த்தம் என்ற வடமொழிச் சொல் துளித்தம் என்னும் தென்சொல்லோடு தொடர்பு கொண்டது. (எப்படிச் சிந்து என்ற சொல் சிந்துகின்ற நீரைக் குறிக்கிறதோ, அது போலத் துளிக்கின்ற நீர் துளித்தம்.) சமய நெறிகளில் மாசி மகத்திற்கு இருக்கும் தொடர்பையும் நான் இங்கு எடுத்துரைக்க முற்படவில்லை. [மார்கழி நீராடல், தைந் நீராடல், தீர்த்த வாரி என குளிர்காலத்தில் அடுத்தடுத்த மாதங்களில் அதிகாலை நீராடலை அழுந்திச் சொல்லும் சூழ்க்குமம் தான் என்ன? இது சமய நெறிகளின் வழிகாட்டலா? அல்லது பண்பாட்டு வழக்கின் தாக்கமா? ஓர் ஆய்வுக் கேள்வி நம்மை அழைக்கிறது.]

அடுத்து, வேறொரு புலனத்துக்கு நகரலாங்களா?

அன்புடன்,
இராம.கி.

மீள்தொடங்கல்

தமிழகத்தில் தெரியும் அரசியல் தடுமாற்றம், ஈழம் பற்றிப் பேசுவதில் விரவிக் கிடக்கும் அச்சப் போக்கு, "என்னை ஒட்டாது இருந்தால் போதும்" என்னும் தாமரையிலைத் தண்ணீர்மை, தமிழகம் - ஈழம் பற்றிய வரலாற்றுத் தெளிவில்லாமை - இது போன்ற கருத்துகள் குறித்துத் துண்டும் துணுக்குமாய் நான் கேட்ட ஒரு உரையாடலும், இதன் முடிவில் தமிழர்போக்கு பற்றியிருந்த சில முன்னிகை(comment)களும் என் மனத்தை உறுத்திக் கொண்டு இருப்பவை.

முதலில் உரையாடலைப் படிப்போம். [உரையாடல் அதே சொற்களில் கீழே இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அமையுமாறும், அதே பொழுது படிக்கச் சுவை கருதியும், கொஞ்சம் எடுவித்துக் (edit) காட்டியிருக்கிறேன்.]
----------------------------------------------
இங்கே பாருங்க தம்பி, பாலைலே வானம் பார்க்குறது ..... மழைக்காகவும் இருக்கலாம், நாள்காட்டு, கோளுன்னு ராத்திரி வெளிச்சத்துக்காகவும் இருக்கலாம். நல்ல வேளையா, மழைக்கு வானம் பார்க்குற சோகம் இந்த வருசம் இல்லை; கொட்டோ கொட்டுன்னு கொட்டி, குளம், கம்மாய்ன்னு வெள்ளமாக் கிடக்கு. இருந்தாலும் வெல வாசிதான் கன்னாப் பின்னான்னு ஏறிக் கிடக்கு.

ஆமாண்ணே! பொன்னி வெல கிலோ இருவத்தஞ்சு சொல்றான். ஒரு நாளைக்கு நூறு ரூவா இருந்தாலும் ஒரு குடும்பம் ஒழுங்காச் சாப்பிட முடியாது போலெ. பக்கத்துலே ஏதாச்சும் வாங்கிவருவோம்னு பார்த்தா, பேருந்துக் காசு 4 ரூவா, 5 ரூவா இருக்கு. ஓர் இளநீ 8 ரூவா, 10 ரூவா விக்குது. நன்னாரி "சர்பத்" கூட, அஞ்சு ரூபாய்க்குக் குறையமாட்டேங்குறான். எங்கேயும் குடிக்கிறதுக்கு நல்ல தண்ணியை காணோம். தவிச்ச வாய்க்குத் தண்ணீர், மோர் குடுக்க, இப்ப யார் பந்தல் வைக்குறா, சொல்லுங்க? கடைசிலே எல்லாப் பயலுகளும் ஆளுக்கு ஒரு புட்டில் (bottle) தண்ணியைக் கையிலே தூக்கிட்டே அலையுறாய்ங்க..... "கலி காலத்துலே, காசுக்கு தண்ணி விப்பாக"ன்னு கேள்விப் பட்டிருக்கேன்; இப்ப அது உண்மையாப் போச்சு.

என்ன தம்பி, நாமளாவது அன்னாட வாழ்க்கையிலே அல்லாடறதைப் பத்திப் பேசிட்டிருக்கோம். தெற்கிலும் தெற்கே (புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.) உசிருக்குல்லே அல்லாடுறாக. அதப் பேச மாட்டேங்குறீயேப்பா?

பேசப் படாதுன்னு இல்லைண்ணே! நம்மளை யாரு பேச விடறாக? வேரோடே அவுகளை அழிச்சுப்புடத்தான் ஒரு கூட்டமே கருவங் கட்டிக்குனு அலையுதே! நம்மூர்க்காரவுகளும் இதுக்கு தொணையாயில்லெ போறாக! கத்தி, கபடா, தளவாடம்னு எல்லாம் இங்கேர்ந்து தான் போகுதுன்னு பரவலாச் சொல்லிக்கிடறாக.

என்னப்பா நாயம்? நம்ம பங்காளிகளைக் கொல்ல நாமளே துணை போகலாமா? கேக்க ஒரு நாதியில்லையா?

ஆமாண்ணே! தெக்கத்திகாரவுகளைப் பத்தி வெளிப்படையா யாருண்ணே நம்மூர்லே பேச முடியுது, சொல்லுங்க? ஒரு நாளிதழ், ஒரு தாளிகை, ஒரு தொலைக்காட்சி இப்படி ஏதாவது ஒண்ணு வெளிப்படையா நம்மூர்லே ஆதரிச்சுப் பேச முடியுதா? உடனே "தேசத் துரோகம்"னு சொல்லி அமத்தியர்றாய்ங்க. (எந்த அரபு நாட்டுலேயாவது பாலத்தீனியனைப் பத்திப் பேசமுடியாமல் இருக்க முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க. வடக்கு அயர்லாந்து பத்தி தெற்கு ஐரிசுக்கார பேசாம இருந்திருக்காகளா? போசுனியா பத்தி யுகோசுலாவுக்கார? ஏன் நம்ம மட்டும் இப்படிப் பேசமுடியாம இருக்கு?) தெற்கத்தியாட்கள் பேரைச் சொன்னாலே, அவுக நாட்டுப் பேரை எடுத்தாலே, ஒரு மாதிரியா இங்கே பார்க்குறாய்ங்களே? அது ஏன்? ஒரு விலங்கு பேரைச் சொன்னாலே "உள்ளே போடுறா"ன்னு பயமுறுத்துற அளவுக்கு, நம்முரைக் கெடுத்து வச்சிருக்காய்ங்களே, அது ஏன்?. இதுலே பேராயம், பாரதிய சனதா, அய்யா கழகம், அம்மா கழகம், மத்த கழகங்கள்னு பேருகள் தான் வேறேயெ தவிர, எல்லாரும் ஒரே குட்டையிலே ஊறுன மட்டைகளாட்டம் தான் நடந்துக்குறாய்ங்க. தமிழ், தமிழன்னு சொல்றதெல்லாம் ஒரு பாவலாத் தான். மனசுலே இருக்குறதை வெளியிலே சொல்ல முடியாம, மருகிக்கினே பயந்து சாகுறாய்ங்க. அவனவன் சம்பாதிச்சதைக் காப்பாத்திக்கோணுமில்லெ. இவுனுக போடுற கட்டியத்துலே (condition), அண்ணன், தம்பி, தவறிப் போனா, ஒப்பாரி வச்சு பாடப்புடாதாமே? "என்னடா இது, வாழ்றது நம்முர்லே தானா?"ன்னு சந்தேகம் நமக்கு அப்பப்ப வந்துருது; மொத்தத்துலே, நாடு போற போக்குச் சரியில்லெண்ணே.

ஆமா தம்பி, உடுத்துன துணியோடு எல்லாத்தையும் இழந்து ஓடியாரவுகளையும் "ஊடுருவல்"ன்னு சொல்லிடுறாய்ங்க. என்னய்யா இது, பொழைப்புக்கா ஓடியார்றாக, உசிரு நாளைக்கு நிலையில்லெ, "வானத்துலேர்ந்து குண்டு போட்டுக்குணே இருக்கான்"னு பதறியடிச்சு ஓடியார்றாக - அப்படின்னாலும் அவுகளை ஆதரிக்குறவுகளுக்கு இங்கே தடா, பொடா தான். சரி, ஓடியாறத்தான் வழி விடலை. கொல்லுறதுக்கு வழிபண்ணாம இருக்கலாமில்லியா? அதுவுமில்லியே? "இந்தாடா, மாப்புளே, இதையும் வச்சுக்க, எங்க பங்காளிகளை நீயே வெட்டிச் சாய்ச்சுரு, அப்பத்தான் ஒழுங்கா இருப்பாய்ங்க"ன்னு அரிவாள், கத்தியை எதிரிக்கு அணுக்கம் பண்ணிக் குடுத்தா எப்படி?

அண்ணே சரியாச் சொல்றீக! நம்மூர்லேர்ந்து சிங்களக்காரனுக்கு ஆயுதம் கொடுக்குறது கொஞ்சம் கூடச் சரியில்லேண்ணே. உடம்பிறந்தானுக்கு நாமளே உலை வெக்கலாமா?

நல்லாக் கேட்டுக்க தம்பி, சிங்களக்காரனுக்கு ஆயுதம் கொடுக்கறதை மட்டும் பார்த்தா நமக்கு நிலைமை புரியாது; இன்னும் ஆழப் போனாத்தான், சிக்கல்லே இருக்குற சூழ்க்குமம் புரியும். சிங்களத்துக்கும் இங்கேயும் ஏதோ ஒரு விட்ட குறை தொட்ட குறை இருக்கு போலிருக்கு. அங்கே தமிழரசு ஒண்ணு ஏற்படப்படாதுண்ணு தடுக்குறதுலே, நம்ம நடுவணரசு உறுதியாவே இருக்கு. நம்மளைப் போன்ற தமிழ்க்காரவுக மனசு நடுவணரசுக்கு மாறியிருக்குன்னு கூட அது உணர்ந்ததாத் தெரியலை.

அதெப்படிண்ணே! தமிழராகிய நாமளும் சேர்ந்தது தானே நம்ம நடுவணரசு? நம்ம உணர்வை உதறித் தள்ளிருமா?

பாக்குறதுக்கு நடுவணரசில் நாம சேர்ந்து இருக்குறோம்குறது ஒரு தோற்றம் தம்பி, உண்மையிலே நம்ம ஆட்கள் அங்கே எதுவும் மாறிச் சொல்லலை; நடுவணரசு கேட்கவும் இல்லை. இவய்ங்க ஒரு பக்கம் சில அமைச்சுகள்லெ பரிபாலனம் பண்ண, இன்னொரு பக்கம் நடுவணரசு எடுக்குற முடிவுகள் நம்ம எண்ணத்துக்கு மாறித்தான் இருக்கு. அதோட மட்டுமில்லை; இன்னொரு பக்கமும் பாரு, படகு எடுத்துக்கினு நம்மூர்க்கரவுக கடலுக்கு மீன்பிடிக்கப் போனா, "அங்கே புடி, இங்கே புடி"ன்னுனு சிங்களத்தான் தென் கடல்லேயும், கீழக் கடல்லேயும் குண்டு போடுறான். இந்தக் குண்டுமாரிலே மாட்டிக்கிணு கொஞ்சம் கொஞ்சமா நம்ம ஆளுகளும் செத்துப் போறாக. போனவாரம் கூட இப்படித்தான் ஓராளு போயிட்டாரு; என்னாச்சு, ஏதாச்சுன்னு கேக்கக் கூட தமிழக அரசலே யாரையும் காணோம். செய்தித்தாள்லேயும் எங்கேயோ ஒருமூலையிலே பத்தி போடுறான். கடைசிலே, "இந்தாங்கப்பா, ஒரு லெச்ச ரூவா வச்சுக்குங்க, இனிமே அந்தப்பக்கம் படகுலெ மீன்புடிக்கப் போகாதீக"ன்னு போதனை மட்டும் கொடுத்தர்றாக. "என்னய்யா இது, தெரிஞ்ச தொழில் மீன்புடிக்குறது மட்டும் தானே! அங்கே போகாதேன்னா, எப்படி? நம்மூருக்கும் அந்தக் கடல் உரிமைதானே? மீன்புடிக்காம, நாங்க உயிர்வாழ்றது எப்படி? ஆக, ஒண்ணும் நமக்குப் புரிய மாட்டேங்குது. எந்த நாட்டுலே நாம இருக்கோம்? நாம தமிழ் தான் பேசுறமா, இல்ல, சிங்களம் பேசுறமா?"

சரியாச் சொன்னீக அண்ணே! வணிகம் அது இதுன்னு சொல்லி நம்மூர்க் கப்பல் நம்முர்த் துறைகள்லே அணையலாம்னு, கடலுக்குள்ளே நம்ம அரசே வாய்க்கால் வெட்டப் போனா, "அய்யோ, எங்க சாமி போட்ட பாலத்தை வெட்டுறாய்ங்களேன்னு" முட்டாப் பயக சிலர் நம்மூர்லேயே ஒப்பாரி வைக்குறாய்ங்களே? அதையும் கவனிங்க.

அதே ஏன் கேக்குறே, தம்பி, வெவரங் கெட்ட பயலுகளுக்குச் சேதுன்னா என்ன பொருள்னு கூட வெளங்கலெ! வடக்கத்திக்காரன் இராமர் அது இதுன்னு சொன்னான்னா, இவய்ங்களும் ஆமாஞ்சாமியா? நம்மூர் இயற்கை நமக்குல்லே புரிபடோணும். "சேதுன்னா தமிழ்லே பாலமில்லைப்பா; கரை; சேற்றாலே சேர்த்தது சேது. கம்மாய்க்கரை மாதிரி கிழக்குக் கடலுக்குச் சேது ஒரு கரை; சேதுக்கரைக்குத் தெக்கெ இருக்குறது தென்கடல்"னு சொல்லியும் விளங்கலே. அந்தக் கரை வழியா பத்தாயிரம் வருசத்துக்கும் முன்னாடி, விலங்கு, மனுசனெல்லாம் ஊர்ந்து, நடந்து போய் தெற்கே இருக்குற தீவை ரொப்பியிருக்காய்ங்கப்பா, ஒரு காலத்துலே அது பழந்தமிழ் நாடுய்யா. அதுலே ஒரு பகுதி ஏழ்பனை நாடு, இன்னைய யாழ்ப்பாணம். எப்படிப் பார்த்தாலும் அந்தத் தீவு நம்ம ஊருக்கு நெருக்கமய்யா. இன்னைக்கி எப்படியோ அது மாறிப் போயிருச்சு. சிங்களனும் தமிழனும் சேர்ந்திருக்குறாப்புலே ஆயிப் போச்சு. பின்னாடிச் சண்டையும் ஆயிப்போச்சு. இதெயெல்லாம் விளங்கிக்காம, இராமர்தான் பாலங் கட்டுனார்னா, தீவுக்குள்ளே அவருக்கு முன்னாடி விலங்குகளும், மக்களும் எப்படிப் போனாங்க, பாலம் கட்டியா? - ன்னு ஒரு பய கேக்க மாட்டேங்குறான். இல்லெ, யானை, பூனையெல்லாம் பத்தாயிரம், இருபதாயிரம் வருசத்துக்கு முன்னாடி, உப்புத் தண்ணியிலே நீச்சலடிச்சுப் போய்ச் சேர்ந்துதா?

சேதுங்குறது ஒரு இயற்கை மேடுய்யா; நீரோட போக்குக்குத் தக்க மாதிரி அதன் மட்டம் கூடும், குறையும். கால மாற்றத்துலே ஏற்கனவே இருந்த கரையையும் (=சேதுவையும்) மீறி கொஞ்சங் கொஞ்சமா கடல் மட்டம் இப்ப உயர்ந்து போச்சு; இயற்கையான மேடும் (=சேதுவும்) கூட இப்பக் கடலுக்குள்ளே முழுகிப் போச்சு. "சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்" னு அந்தக் கடல்மேட்டுக்கு மேலே இன்னும் கரையை உயர்த்தி வீதி போடுங்கப்பான்னு பாரதி பாடினானே? இந்தப் பயலுகளுக்கு அதாவது புரியுதா? "ஆகா, பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி"ன்னு மேடையிலே பேசுனா மட்டும் போதுமா? அடப் புரியாத பயலுகளா, இராமயணக் கதைக்கும் இந்தச் சேதுவுக்கும் தொடர்பில்லைன்னு தலைலே அடிச்சிக்கினு சொன்னாலும் கேக்குறாப்புலே தெரியலையே. வேணுமின்னாச் சாமியை நல்லாக் கும்பிடுங்கப்பா! அதுக்காக, இல்லாத கதையெல்லாம் சாமி மேலே இட்டுக் கட்டாதீக.

ஆமாண்ணே! இந்த அடிப்படையைப் புரிஞ்சுக்காம, உச்ச நய மன்றம் (supreme court) வரைக்கும் வழக்குப் போடுறாய்ங்க! முட்டாப் பயலுகன்னு இவய்ங்களைச் சொல்லாம, வேறே யாரைச் சொல்லுறது போங்க? தேர்தலுக்காகப் பயந்துக்குணு பேராயக் கட்சிக்காரங்களும் உண்மையை இழுத்து மூடிருவாய்ங்க போலேருக்கே; மருத்துவரய்யா வேறெ, கூட இப்பச் சேர்ந்துக் கிட்டாரு.

ஆமா தம்பி, யாரோ சொன்னாய்ங்க! அவரவருக்கு அவரவர் அரசியல்னு. இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இதுதான் சாக்குன்னு சிங்களக்காரன் தன்னூர்லேர்ந்து 30 இடங்களைப் பட்டியல் போட்டு "இதெல்லாம் இராமாயணத்தோட தொடர்புள்ள இடங்கள்"னு குழம்புன குட்டையில மீன்புடிக்கிறான். இங்கெ சில கேணப்பயல்களும் அதெ எடுத்துக்கிட்டு கேக்காய்ங்க: "பார்த்தீகளா, நாங்க சொன்னது சரியாப் போச்சு, இராமர், சீதையோட பாதங்கள் இங்கெல்லாம் பட்டிருக்கு; அப்பேர்க்கொத்த பாலத்தை வெட்டலாமா?" கூறு கெட்ட நம்ம பயல்களும் இதெக் கேட்டுக்கிட்டு இருக்காய்ங்க. அட மடப்பயலுகளா! சிங்களனுக்குத் தேவை - வாய்க்கால் அமையக் கூடாது; அப்படி அமைஞ்சா, கொழும்புத் துறைமுகம் சுத்தமாப் படுத்துரும்; அவன் பொருளாதாரம் பெரிசா அடிபட்டுரும்; தூத்துக்குடித் துறைமுகம் இதுக்கு மாறா ஓங்கி எழுந்திரும்; அதனாலெ, அதெ நிறுத்தணும்னு சொல்லி "போடுறா அனுமாரு"ன்னு குட்டிக் கரணமே அடிக்குறான். அவன் சூழ்ச்சி இவய்ங்களுக்குப் புரியலை. பொருளாதாரம் பேசுறாய்ங்க பொருளாதாரம், ரொம்ப வக்கணையா.....

ஆமாண்ணே, போற போக்கைப் பார்த்தால், மொத்தத்துலே சேதுக் கால்வாய்த் திட்டம் இனிமேப் பிசிபிசுத்துரும் போலேருக்கு. ஒருபய கண்டுக்க மாட்டான்னு நினைக்கேன்.

ஆமா தம்பி, தமிழன் தான் ஏமாளியாச்சே. "ஊரு ரெண்டானாக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"னு சொல்லுவாக. இந்தக் கழகங்கள் தான் இங்கே ரெண்டாகிக் கிடக்கே, அய்யா சொன்னா, அம்மாவுக்கு ஆகலை; அம்மா சொன்னா அய்யாவுக்கு ஆகலை. அப்புறம் என்ன? எல்லாக் கூத்தாடிகளும் தனக்கு என்ன தேறும்னு கும்பல் போட்டு கூடி வர்றானுக. இவுக சண்டை என்னைக்கி நிக்குதோ, அன்னைக்குத் தான் நமக்கு விடியல்னு ஆகிப் போச்சு. அதுக்குப் பொறவுதான் ஊருலகமும் நம்ம மதிக்கும். 

பொதுவா, தமிழ், தமிழன்னாலே இந்தியாவுலே, உலகத்துலே, ஏகப்பட்ட பேருக்கு இளக்காரமாய்த்தான் இருக்கு. அதுக்கு முதற் காரணம் நமக்குப் பெருமிதமில்லே; நம்ம வரலாறு நமக்கே தெரியலை; எதுக்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுறோம். கட்சி அரசியல்லே வெட்டுக் குத்துன்னு ரொம்பவே சண்டையடிச்சுக்குறோம். 

இத்தனை நாள் பெரியாருக்கு அப்புறமும் எது மூட நம்பிக்கை, எது பின்பற்ற வேண்டியதுன்னு தெரிஞ்சுக்கிறதில்லெ. பாழாப் போன திரையுலகுலே தெரியுற நிழழை எல்லாம் நிலைன்னு நினச்சு, ஆகா, ஓகோன்னு குதிக்குறோம். 

நம்மில் பலருக்கும் ஊறிப்போன சாதியுணர்வும் தடுக்குது. தமிழன்குற உணர்வாக்கம் இன்னும் சரியா அமையலெ. இந்தியன்குற அடையாளத்துக்கும், தமிழ்ன்குற அடையாளத்துக்கும் உள்ள உறவைப் புரிஞ்சுக்கலே; ஒண்ணைப் பேசுனா, இன்னொண்ணு அதுக்கு எதிருன்னு ஊரெல்லாம் பரப்புரை நடக்குது. மொத்தத்துலே தமிழன்குற முகவரியை மறந்துருங்கிறாக.
-------------------------

இந்த உரையாடலின் கடைசியில் வரும் முன்னிகைகள் என்னுள்ளும் ஆழ்ந்து இருப்பவையே. தமிழரின் தற்போதைய நிலைக்கு உள்ளிருக்கும் முரண்பாடுகளே காரணம் என்று நான் எண்ணுகிறேன். அதோடு, வெளிமுரணைக் காட்டிலும் உள்முரண் ஆழ்ந்து கவனிக்கப் பட வேண்டியது என்று இயங்கியலில் (dialectics) சொல்லுவார்கள். தமிழரின் இன்றைய அவலம் பற்றிய சிந்தனைகள் எழும்போதெல்லாம், தமிழ் - தமிழர் என்ற பெருமிதத்தைக் கூட்டும் வகையில் எனக்குத் தெரிந்ததை அவ்வப்போது என் பதிவில் எழுதிக் கொண்டுதான் வருகிறேன். எது மூட நம்பிக்கை, எது பின்பற்ற வேண்டியது என்றும் எனக்குத் தெரிந்த வகையில் தெளிவுறுத்தி வருகிறேன். கூடவே நம் வரலாறு பற்றியும் சொல்லி வருகிறேன். இருந்தாலும் இப்படிச் சொல்லுவதைத் தடுத்த நிறுத்தும் முயற்சி, ஒரு சிலரால் தொடர்ந்து வலைப்பதிவுலகில் செய்யப் பட்டே வருகிறது.

நடுவில் கொஞ்ச காலம் ஒரு மாதிரி சலிப்பு வந்ததிலும், ஊர்சுற்றியதிலும், என் பதிவு தொய்ந்து போனது. அப்படித் தொய்ந்தது சரியில்லை என்ற எழுச்சியாலும், "செய்தக்க செய்யாமையானும் கெடும்" என்ற எண்ணத்தாலும், கிளர்ந்து, மீண்டும் ஒருமித்து எழுத வேண்டும் என்று முனைந்த போது, தமிழ்மண நிர்வாகத்திடமிருந்து நாள் காட்டச் சொல்லி ஓர் அழைப்பு வந்தது. அதையே ஒரு தூண்டுகோலாய் எடுத்துக் கொண்டு மீண்டும் இப்பொழுது எழுதத் தொடங்குகிறேன்.

சென்ற காரிக்கிழமை (= சனிக்கிழமை) மாலை நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தேனிசைச் செல்லப்பாவின் இசை நிகழ்ச்சியைத் தற்செயலாகக் கொஞ்ச நேரம் கேட்டேன். பிடித்திருந்தது. அவரைப் போன்ற பாடகர்கள் பெருகவேண்டும். அந்தப் பாடல்வரிகளாவது நமக்கு உறைக்கட்டும்.

உலகத் தமிழினமே எண்ணிப்பார் - நீ
உறங்கினால் வரலாற்றில்
யாருன்னை மன்னிப்பார்?
................

- தேனிசைச் செல்லாப்பா பாடிய ஒரு பாடலின் தொடக்க வரிகள்.. (இந்தப் பாடலை முழுக்கவும் mp3 வடிவில் யாரேனும் வலையில் ஏற்ற முடியுமோ?)

அன்புடன்,
இராம.கி.

Tuesday, January 29, 2008

காலங்கள் - 7

சூரிய மானத்து ஞாயிறுகள்

இராசிப் பெயர்களை ஆய்ந்து பார்க்கத் தொடங்கி, இதுவரை மூன்று பெயர்களைப் பாத்த்தோம். இந்த இராசிப் பெயர்கள் சூரிய மான வழக்கத்தில் ஞாயிற்று மாதப் பெயர்களாகக் குறிக்கப் படும். இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுகளாகும். அவற்றில், தைத் திங்கள், சுறவ ஞாயிறு என்று திங்கள் மாதப் பெயர்களும், ஞாயிறு மாதப் பெயர்களும் சேர்த்துக் குறிக்கப்படும்.

[இந்தக் கல்வெட்டுக்களில், பல காட்டுகளில், இங்கு நான் எழுதுவது போலத் தனித்தமிழில் அமையாமல், சங்கத மொழிபெயர்ப்பே மணிப் பவளமாய்ப் பயிலப் படும். அப்படிச் சங்கதம் பயின்றதற்கு காரணம் அன்று பெருமானருக்கு அரசர் கொடுத்த முகன்மையும், அதன் வழியாய் வேதநெறி பெற்ற பலன்களுமே காரணமாகும். காரணமில்லாமல் பிற்கால அரசர்கள் சதுர்வேதி மங்கலங்களைப் பெருமானருக்குத் தானமாய்க் கொடுக்கவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ சென்ற 1800 ஆண்டு காலத் தமிழக வரலாறு கிழாரிய வரலாறு - feudal history ஆகவே இருக்கிறது. அதில் பெருமானர் குமுகாய அறிவுய்திகளாய் - societal intelligentia - இருந்து குமுகாய நடைமுறையைச் சரியென்று சொல்லும் இடைப்பரலியராய் - interpreters - இருந்தனர். முடிவில் சோழராட்சியில் நடந்த இடங்கை, வலங்கைப் போராட்டங்கள், பழக்கங்களுக்கும், இவர்கள் ஆயக்காலாய் இருந்தனர். (கோயிலில் உள்ள ஊருலவுத் திருமேனிகளை வெளியே தூக்கி வரும் போது முட்டுக் கொடுத்து ஆங்காங்கே நிறுத்தும் கால்களுக்கு ஆயக் கால்கள் என்று எங்கள் பக்கம் சொல்வார்.) இந்த 1800 கால வரலாற்றைப் புரியாமல், இன்றையப் பெருமானோர் அல்லாதாரின் எதிர்வினைகளை விளங்கிக் கொள்ளவும் முடியாது.]

இனி அடுத்து இன்னும் மூன்று பெயர் விளக்கங்களைப் பார்ப்போம்.,

கடகம்:

வலயச் சுற்றின் நான்காம் பகுதி கடகம், அதாவது நண்டு; பார்ப்பதற்கு நண்டு போல் இந்தத் தொகுதி பழந்தமிழனுக்குக் காட்சி அளித்திருக்கிறது. அதுவும் ஓர் உருவகம் தான். இந்தச் சொல்லின் வரலாற்றைப் பார்ப்போம். குணவுதல், குடவுதல் என்பன தமிழில் குல் என்னும் வேரில் வளைதல் என்ற பொருளில் பிறந்த வினைச் சொற்கள். குடவிக் கிடக்கும் கடல் குடா என்று ஆகும். குடவிக் கிடக்கும் கலம் குடம். குடவுதல் என்ற சொல் திரிந்து குடகுதலும் ஆகும். குடகம் என்பதும் வளைந்து கிடப்பதே. குடகம் கடகம் என்று திரிந்து பெட்டியைக் குறிக்கும். பனையோலைக் கடகம் சிவகங்கைப் பக்கத்தில் பேர் பெற்றது. (அதைப் பேச்சு வழக்கில் கடகாம் என்று அழைப்பர்) கடகம் என்ற சொல், வளைந்த மதில் கொண்ட கோட்டை (இதுவும் வளைந்ததுதான்) என்ற பொருளும் கொள்ளும். அந்தக் கால ஒட்டர நாட்டுத் (ஒரிசாத்) தலைநகரம் கடகம் (இன்று கட்டாக் என்று சொல்லப் படுகிறது.) வாள்சண்டை போடுவாரின் மெய்யைக் காப்பாற்றுதற்கான வளைந்த கேடயமும், கடகத்தில் இருந்து பிறந்த சொல் தான். வளைந்த, வட்டமான, கையில் போட்டுக்கொள்ளும் கங்கணத்திற்கும், வளையலுக்கும், அரைஞாணுக்கும் கூடக் கடகம் என்ற பெயர் உண்டு. குடகிக் கிடக்கும் வால் கொடுக்கு என்று ஆகும். நண்டு தன் கால்களையும், கைகளையும் எப்பொழுதும் வளைத்து நிற்பதால் அதற்கும் கடகம் என்றே பெயர். நண்டைப் போல உருவம் காட்டி கையில் உள்ள பெருவிரலைச் சுட்டுவிரல் தொட, மற்ற விரல்கள் உள்நோக்கி வளைந்து நிற்கும் நாட்டிய முத்திரையைக் கடக முத்திரை என்று சொல்வர். நண்டு என்ற அடிப்படைச் சொல்லோ தோண்டுதல் என்ற பொருளில் நெண்டுதல் என்ற வினையின் கீழ் பிறக்கும். கடகிய கால்களையும், கைகளையும் கொண்டு மற்றவற்றை கவ்விக் கொள்ளும் உயிரியானதால் கப்பு என்ற பெயரையும் நண்டிற்கு இடலாம். "கப்பித்த காலையுடைய ஞெண்டினது" என்று பெரும்பாணாற்று 208 ம் வரிக்கு உரைகாரார் பொருள்கூறுவார். மேலும் கப்புதல் என்பது தோண்டுதல் என்ற பொருளையும் கொள்ளும். கப்புக் கால் என்பது வளைந்த காலை உணர்த்தும். கப்பு என்ற சொல் மேலை மொழிகளில், வழக்கம் போல் ரகரம் நுழைந்து, crab என்று திரிவுகொள்ளும்.

மடங்கல்:

வலையச் சுற்றின் ஐந்தாம் பகுதி மடங்கல் என்ற சிகையம் அல்லது சிங்கம்; இந்த உருவகத்தை ஏன் கொண்டார்கள் என்று கேட்டால் எனக்குக் காரணம் தெரியாது. செங்கண் மா> சிங்க மா> சிங்கம் = அங்கும் இங்கும் அலைபாயாது நேரிய செம்மாந்தப் பார்வை கொண்ட விலங்கு.செம்மாத்தல் >சிம்மாத்தல் = இறுமாத்தல் செம்மம்> சிம்மம்; செங்கம்> சிங்கம் 

ஆனால் மடங்கல்/சிகையம் என்ற சொற்களின் வரலாற்றைக் கோடி காட்டத் தெரியும்; பழந்தமிழன் பார்த்த விலங்குகளில் ஆண்விலங்கு ஒன்று தலையில் முடியோடு, சிகையோடு சிறந்து காட்சியளித்தது. அந்த விலங்கிற்குச் சிகை விதப்பாகத் தெரிந்ததால் அதுவே பெயராயிற்று.; சிகை மா; சிகைமா>சிகமா>சிம்ஹா (metathesis) >சிம்ஹம்>சிம்மம். சிகை மா என்ற விலங்கு நாவலந்தீவில் பெரிதும் பரவியிருந்த விலங்கே. [இருப்பினும் சிந்தாற்றங்கரை (சிந்து நதி) நாகரிகத்தினருக்கு சிகை மாவைப் பற்றியே தெரியாது என்று சொல்லுவாரும் உளர்.] சிகைமா (சிகைக்காய் சீயக்காய் ஆவது போல) சீயமா ஆகிச் சீயம் என்றுஞ் சுருங்கும்; சிகைமாவுக்கு வேறுபல சொற்களும் தமிழில் உள. நீண்டு வளர்ந்த சிகை முடங்கிய குழலாகத் தொங்கும். சிகையைக் குறிக்க இன்னொரு சொல் குழல்/குழை என்பதாகும். இந்தச் சொல் குளை என்றும் திரியும். முடங்கிய குலை முடங்குலை>முடங்குளை என்று இணைந்து பிடரி மயிரையும் பிடரி மயிர் உள்ள சிகைமாவையும் குறிக்கும். முடங்குலை மா >முடங்கல் மா> மடங்கல் மா என்றாகும். இதே போல சிகையின் இன்னொரு பெயரான கேசத்தை முன்னொட்டாக்கி கேச அரிமா>கேசரி மா என்றாகும். சிகைமாவிற்கு இன்னொரு பெயரான அரிமா கொல்லுந் தொழிலாகிற அரிதலை ஒட்டி எழுந்த சொல். வயமா என்பது சிகை மாவின் வலிமை பற்றி வந்த சொல். சிகை மாவின் குடும்பத்தைச் சேர்ந்த புலி, சிறுத்தை, பூனை போன்றவற்றின் சொற்பிறப்புகள் இன்னொரு இடத்தில் பேசவேண்டியவை; எனவே தவிர்க்கிறேன்.

கன்னி:

வலையச் சுற்றின் ஆறாம் பகுதி கன்னி; இந்த விண்மீன் தொகுதி ஏன் கன்னியாக உருவகிக்கப் பட்டது என்றும் எனக்குத் தெரியாது. ஆனால், கன்னி, கன்னிமை என்ற கருத்துக்கள் அந்தக் கால மாந்தனைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. கன்னுதல் என்பது பழுத்தல், முதிர்தல் என்று பொருள்படும்; ஒரு செடியில் இருக்கும் காய் பழுக்கும் போது அந்தக் காய்க்கு கொஞ்சம் மஞ்சள், சிவப்பு போன்ற பொலிவான நிறம் சேர்ந்துவிடுகிறது. காய் என்பது இயல்பாக, "அடர்ந்தது" என்ற பொருளில் கருத்த பச்சையைக் குறிக்கும். இளங்காய் இளம்பச்சையையும், முற்றிய காய் கரும் பச்சையையும் குறிக்கும். கருத்த பச்சை நிறக் காய் சிவந்து போவதை, அல்லது பொலிந்து போவதைப் பழுத்தல் என்று சொல்லுகிறோம். உள்ளங்கை அழுத்தப் பட்டோ , வெப்பங் கண்டோ , சிவந்து போவதைக் கன்னிப் போயிற்று என்று சொல்லுவதில்லையா? அது போலத்தான் பழம் பழுத்தலும் புரிந்து கொள்ளப் பட்டது. கன்னித்து பழுத்த பொருள் கனி என்று சொல்லப் பட்டது. கனியைப் போலவே உடலால் ஒரு சில மாற்றம் பெற்றுப் பொலிவடைந்து, மகப்பேறு பெறுதற்குரிய முதிர்ச்சியைப் பெறுகிற சிறுமி, கன்னி எனப் பெயர் பெறுகிறாள். கன்னிக்குப் பொலிவு (இங்கு விண்மீனின் வெளிச்சப் பொலிவு - brightness of the star சொல்லப் படுகிறதோ என்ற ஐயப்பாடு உண்டு. விண்ணியலாளர்கள் தான் சொல்ல வேண்டும்.) கணிசமாகவே உண்டு.

பிங்கலம் என்பது தமிழில் உள்ள நிகண்டுகளில் திவாகரத்திற்கு அடுத்துள்ள நிகண்டு. இதன் காலம் 9-ஆம் நூற்றாண்டு என்று சொல்லுவார்கள்; அதில் இராசிப் பெயர்கள் பற்றிச் சொல்லியதைக் கீழே தந்துள்ளேன். தமிழ்ச் சொற்கள் வடமொழி முலாம் பூசிக் காட்சியளிப்பதைப் பார்க்கலாம். அந்த முலாமை விலக்கித் தமிழை அடையாளம் காண்பது தஞ்சைப் பெரிய கோயிலில் நாயக்கர் காலத்து ஓவியங்கலை விலக்கிச் சோழர் காலத்து ஓவியங்களை இனங் காண்பது போல என்றே சொல்ல வேண்டும்.

மேட வீதி, இடபவீதி, மிதுனவீதி ஒரு மூன்றே,
அவை தாம் இரு சுடர் முதலிய இயங்கு நெறியே (பிங்.2:182)
இடபம், சிங்கம், மிதுனம், கடகம்
இணைய நான்கும் மேடவீதி (பிங்.2:183)
மீனம், மேடம், கன்னி, துலாமும்
ஆன இடபவீதிக்கு அமைந்தன (பிங்.2:184)
வில்லு, மகரம், குடமே, விருச்சிகம்
சொல்லிய மிதுன வீதித் துறையே (பிங்.2:185)

அடுத்த அதிகாரத்தில் இன்னும் மூன்று இராசிப் பெயர்களைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, January 25, 2008

காலங்கள் - 6

இராசிச் சிதறலும் உருவகப் பெயர்களும்

(முன்னே சிங்கை இணையம் வலையிதழில் நான் எழுதிவந்த காலங்கள் தொடரின் ஐந்தாம் அதிகாரத்தை சில மாதங்கள் முன் இங்கு வெளியிட்டேன். வானியலோடு தொடர்பு உள்ள இந்தத் தொடரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தொடருவதாகச் சொன்னேன். இப்பொழுது ஆறாம் அதிகாரம்.)

கோள்களின் நகர்வைக் கண்டும், அது நம் வாழ்வை என்ன செய்யும் என்றும், படபடத்துத் தவிக்கும் ஒரு குமுகாயம் நம்மூரைப் போல வேறெங்கேனும் உலகில் இருக்குமா என்பது ஒரு பெருங்கேள்வியே! ஆண்டு முழுக்கக் காரி (சனி)ப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ஏறகை (இராகு) - கீழதை (கேது)ப் பெயர்ச்சி, ஏறகைக் காலம் (இராகு காலம்), யம கண்டம், புறத்தோயக் காலம் (ப்ரதோஷ காலம்), செவ்வாய்த் தோயம் (செவ்வாய் தோஷம்) என ஒவ்வொன்றிலும் நமக்கு நடக்கக் கூடிய நல்லது கெட்டது என்ன என்று விளைவு அறியத் துடித்துத் தடுமாறிக் கொண்டே இருக்கிறோம்.

இத்தனைக்கும் "இறைவன் நம் உளம் புகுந்த பின்பு கோள்ப் பெயர்ச்சிகள் நம்மை என்னப்பா செய்யமுடியும்? அவற்றை எல்லாம் நல்லாக வையுங்கள்" என்று திருஞான சம்பந்தர் கோளறு பதிகம் பாடுகிறார். (நல்லுதல் என்பது இங்கே நல்லது அல்ல; விளக்கை நல்லாய் வை என்றால் அணைத்து வை என்று பொருள்; சிவகங்கை/புதுக்கோட்டைப் பக்கம் அப்படிச் சொல்லுவார்கள். இந்த வினையை தெலுங்கு மொழி கூடத் தொடர்ச்சியாய்க் கையாளுகிறது; நாம் தொலைத்து விட்டு நிற்கிறோம்; நல்லுதலின் திரிபான நல்லித்தல்> நலித்தல்> நலிதல் மட்டும் இன்றும் தமிழில் இருக்கிறது. நல்லுதல் என்ற பழைய வினை அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில வட்டார வழக்குகளில் மட்டும் நிற்கிறது. நல்ல மரம் என்ற சொல் கருப்பு நிற மரம் என்று ஒரு சில இடங்களில் பொருள் கொள்ளும். இங்கே "கோள்களை ஒதுக்கி அந்தச் சிந்தனையை அறுத்து அணைத்து வையுங்கள்" என்றே பொருள் கொள்ள வேண்டும்).

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!

இந்தப் பாடலைக் கேட்ட பிறகும், ஓதிய பிறகும், கூடச் சோதியரை நம்மில் பலர் நாடிக் கொண்டே இருக்கிறோம்; ஊரெங்கும் சோதியர்கள் பலன் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்; முடிவில் சோதியம் என்பது நல்ல வருமானம் உள்ள ஒரு தொழிலாக இந்தக் காலத்தில் மாறிவிட்டது; இப்படி நான் சொல்லுவதற்கு நண்பர்கள் அதிர வேண்டாம்; சோதியத்திற்குள் நான் நுழையவில்லை. ஆனால் வானியலுக்கும் சோதியத்திற்கும் இடையில் உள்ள விளிம்பு வரை வந்து உங்களோடு உரையாட முற்படுகிறேன்.

இன்று நேற்று இல்லாமல் எல்லா நாகரிகங்களும், ஏன் தமிழ் நாகரிகமும் கூட, விடிய விடிய விண்ணை உற்றுப் பார்த்தே வந்திருக்கின்றன. கோள்களின் நகர்வுகளும் அவற்றின் பின்புலங்களும் தமிழனை எப்பொழுதும் ஈர்த்திருக்கின்றன. இந்தக் கோள்ப் பெயர்ச்சிகள் எல்லாம் கிட்டத்தட்ட அசையாமல் இருக்கும் (?) பின்புலங்களை வைத்தே அளக்கப் படுகின்றன. அப்படி அளக்கும் போது ஒரு குறிப்பிட்ட விண்மீனைப் பற்றுகோளாக்கி மற்ற கோள்களின் நகர்வுகளைப் பார்க்கிறோம். புவியின் தன்னுருட்டிலும் வலையத்திலும் பல்லாயிரக் கணக்கான விண்மீன்களை நாம் 360 பாகைச் சுற்றில் பின்புலங்களாகப் பார்க்கிறோம். இந்த 360 பாகைச் சுற்றை 12 பகுதிகளாய்ப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் 30 பாகையாக்கி. அந்த 30 பாகைக்குள் முன்னின்று தெரிந்து அடையாளம் காண வைப்பது போல ஒரு சில விண்மீன் கூட்டங்களை மட்டும் உருவகம் செய்து வானை நம் வசப் படுத்திக் கொள்ளுகிறோம். நாகரிகத்திற்கு நாகரிகம் இந்த உருவகங்கள் மாறுபடலாம்; ஆனாலும் என்னவோ, நம்மூர் உருவகம் நாவலந்தீவு எங்கணும் பரவி மேலைநாடுகள் வரை சென்று கிடப்பது ஒரு வியப்புத்தான்.

முதலில் வரும் இராசி "மேயம்" என்று சொல்லப் படுகிறது.

இந்த 360 பாகைச் சுற்றின் முதற் பகுதி மேய இராசி; இதைத் தமிழில் இன்றைக்கு மேழம் என்றும், வடமொழியில் மேஷம் என்றும் சொல்லுகிறோம். மேயத்தை ஒட்டிய சொற்களுக்கு எல்லாம் அடித்தளமும் தமிழே தான். இருந்தாலும் பலருக்கு இது புரிவதில்லை; இது போன்ற சொற்களை வடமொழியோ என்று நம்மில் பலர் விவரம் புரியாமல் தடுமாறி எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

"மேஏஏஎ......" என்ற ஆட்டின் கனைப்பு ஒலியை, விலங்காண்டி மாந்தன் தன் காதில் கேட்டுக் கேட்டு, அதையே தானும் குரைத்துக் காட்டி, அந்த ஒலியையே அந்த விலங்கின் பெயராகவும் சூட்டித் தன் எண்ணத்தில் அவன் ஏற்றி இருக்க வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு இருக்கும் ஒரு சில சொற்கள் அப்படி ஒரு வேரை நமக்கு உணர்த்துகின்றன. அதே போல ம்........யே>ஞ்.......யே என்ற சற்று மூக்கொலி கலந்த கனைப்பு ஒலியும் ஆட்டையே குறித்திருக்க வேண்டும். அந்த மூக்கொலி கலந்த கனைப்பு ஒலியையையும் அப்படியே இயம்பிக் காட்டி நாளடைவில் அதே ஒலியாலே யேடு/யாடு/ஆடு என்ற சொல்லாலும் தமிழ் மாந்தன் இந்த விலங்கைக் குறிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ஏற்கனவே என் கட்டுரைகளில் முன்னர் சொன்ன மாடும், மானும் போல, ஆடும் தன் ஊன் காரணமாய் தமிழ் மாந்தன் வாழ்வில் தனியிடம் பெற்றது. ஊன்களின் தாக்கம் ஆதி மனிதன் வாழ்வில் மிக அதிகம். அதை மறுப்பதும், மரக்கறித் தாக்கத்தை அழுத்திச் சொல்வதும், நம்மை மாந்தவியற் புரிதலில் வெகுதூரம் கொண்டு செல்லாது.

மேய்>மை>மய் என்பது இன்றும் ஆட்டைக் குறிக்கும் சொற்கள். ஆட்டின் நிறம் கூடப் பின்னாளில் யே>யா என்றே குறிக்கப் பட்டது. மொழி ஓரளவு வளர்ச்சியடைந்த நிலையில் "மா" வென ஒலிக்கும் விலங்கை மாடு என்றது போல், யே>யா வென ஒலிக்கும் விலங்கும் யாடு என்று பின்னாளில் அழைக்கப் பட்டது போலும். மாட்டூன் என்பது மாட்டு இறைச்சியைக் குறிப்பது போல், மையூன் என்பதும் மைந்நிணம் என்பதும் ஆட்டிறைச்சியைக் குறிக்கும். மைவிடை என்பது ஆட்டை மாட்டோ டு பொருத்திக் கருவிலங்கு என்று ஏற்றிச் சொன்ன சொல். மேய் எனும் விலங்கு செய்யும் தொழில் மேய்கை அல்லது மேயம் அல்லது மேயல். மேய்கின்ற புல்லும் தமிழில் மேயல் என்றே கூட அழைக்கப் பட்டது. மேய்கை என்னும் தொழிற் பெயரை மேய்தல் என்றும் சொல்லுவது உண்டு. தானாய் மேயாத ஆடுகளை மேய வைக்கும் செயல் மேய்த்தல்; இந்தப் பிறவினைச் சொல் ஆடு எனும் விலங்கைத் தமிழ் மாந்தன் உடமித்தவுடன் (domestication) வந்திருக்கக் கூடிய சொல்; மேய்த்தலைச் செய்ய வைப்பவன் மேய்ப்பன் (கிறித்தவத்தில் பெரிதும் அழுத்தப்படும் சொல்.); மேய்த்தல் என்பதின் பேச்சு வழக்கு மேய்ச்சல்; ஆட்டிற்கு இன்னொரு பெயர் மேய்த்தம்; அது இயல்பான விதிகளின் படி மேய்த்திரம் என்று வடமொழிக்குப் பாய்ந்து ஆட்டுக்கடாவைக் குறிக்கும்.

மேய்த்தம் மேய்ச்சம் என்று திரிந்து (பேச்சு என்ற சொல் பாஷையாய் ஆனது போல்) ஷகரம் பெற்று மேஷமும் ஆகி வடமொழிக்குள் நிலைக்கும்; மேய்ந்தம்>மேண்டம் என்று திரிந்த சொல்லும் ஆட்டையே குறிக்கும். மேய்த்தை>மோத்தை என்பதும் ஆட்டுக்கடா, வெள்ளாட்டுக் கடாவைக் குறிக்கும். (கடா என்பது கூட goat என்ற திரிவில் ஆட்டையே ஆங்கிலத்தில் குறிக்கிறது.) ஆடு என்பது கருப்பாக இருந்து முதலில் விதப்புப் பொருளைக் குறித்து பின் பொதுமையான பின்னர் வெள்ளாடு என்ற முரண் சொல்லும் (கடலை எண்ணெய் போல) ஏற்றுக் கொள்ளப் படுகிறது. மேய்த்தம்>மேத்தம்>மேதம் என்பது கொழுகொழு என்ற ஆட்டிறைச்சியைக் குறிக்கும். [மேத்தம்>மேதம் என்பது mutton என்று மேலை மொழிகளில் திரியும். மேயைப் போல இன்னொரு விலங்கொலி "குக் குக்" என்னும் கோழியொலி. குக்கிடும் ஒலியால் குக்கம் என்றும் குக்குடம் என்றும் கோழியைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் எழுந்தன. குக்குகின்ற பறவை குக்கம் என்றே குறிக்கப் பெற்று இன்று மேலை மொழியில் chicken என்று சொல்லப் படுகிறது. (கோழிக்கறி சாப்பிடும் பழக்கம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்தே உலகெங்கும் பரவியிருக்க வேண்டும் என்று விலங்கு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.) இப்படி ஊனைக் குறிக்கும் சொற்களான மேத்தமும், குக்கமும் எழுந்த கதை மிக இயற்கையானது]. வாயைப்பயம் வாழைப்பழம் ஆனது போல (நம்மில் பலரும் என்னவோ இதைத் தலை கீழாய் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.) மேயம் என்பது மேழம் என்று மீத் திருத்தமும் பெறும். முடிவில் மற்ற தமிழிய மொழிகளில் ழகரம் டகரமாய் ஒலிக்கப் பெறும்போது மேடம் என்றும் விரிவு கொள்ளும்.

இவ்வளவு விரிவான சொல் விளக்கம் ஏன் சொல்லுகிறேன் என்றால் மேயம் என்ற சொல்லுக்கு தமிழ் அடிப்படை இருந்தால் மட்டுமே இத்துணை பொருட்பாட்டு அகலத்தைக் காட்ட முடியும் என்பதை உணர்த்துவதற்குத் தான். நம்மில் ஏனோ பலரும் இதைப் புரிந்து கொள்ள மறுத்து வடமொழியிலேயே விளக்கம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அந்த அளவிற்கு நம்மொழியின் வேரை நம்மிடையே காண மறுத்து, மனத்தால் அடிமைப் பட்டிருக்கிறோம்.

மேய் என்ற கனைப்பு ஒலியைப் போல யே>யா என்ற கனைப்பு ஒலியில் இருந்த பிறந்த சொல்லே யேடு>யாடு>ஆடு என்ற வளர்ச்சி; மற்ற தமிழிய மொழிகளில் யேடு>ஏடு>ஏடி என்றெல்லாம் இந்தச் சொல் விரியும். ஏடு என்ற அடியில் இருந்து பிறந்த சொல்லே ஏடையன்>எடையன்>இடையன் என்ற சொல். இது போல யாட்டில் இருந்து பிறந்த சொல்லே யாதவன் என்ற வடசொல்லும். தமிழகத்திலும், நாவலந்தீவிலும் வேறு இடங்களில் இருக்கும் பல்வேறு குடிமக்களின் முன்னாள் தொழிற்பெயர்கள் தமிழ் மூலம் கொண்டவையாகவே இருக்கின்றன. (அதையெல்லாம் சொன்னால் கேட்கப் பொறுமை இருக்குமோ? நாவலந்தீவின் இன்னொரு அடிப்படையைக் காண எத்தனை பேர் முன்வருகிறோம்? :-))

இந்த மேய இராசி தமிழன் பார்வையில் நம்மைச் சுற்றியுள்ள பின்புலத்தின் முதல் இராசி; விண்ணில் தெரியும் இந்தக் குறிப்பிட்ட பகுதிக்குள் முன்னொளிரும் சில விண்மீன்களின் தொகுதி தமிழ் மாந்தனுக்கு ஆடு என்னும் விலங்கை நினைவுறுத்தி இருக்கிறது. எனவே இதை மேய இராசி என்றான். இதெல்லாம் ஒரு அடையாளம் என்ற அளவில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். முன்பு உள்ள அதிகாரங்களில் மேழ விழு பற்றிச் சொன்னதை இங்கு நினைவு கூருங்கள். மேழத்தில் ஒவ்வொரு ஆண்டையும் தொடங்கும் முறையில் அது ஆட்டை என்றும் சங்க இலக்கியங்களில் சொல்லப் பட்டது; ஆட்டு என்ற சொல்லுள் முக்கொலி நுழைந்து ஆண்டு என்றும் நம் வழக்கில் ஆனது; மேலை மொழிகளில் மூக்கொலி இன்னும் கூடி annum என்று சொல்லுவதும் இதே பொருளில் தான். (உடனே தமிழ் ஆண்டுத் தொடக்கம் சித்திரையா, தையா என்ற புதிருக்குள் போகவேண்டாம். அதைப் பற்றி இன்னொரு முறை பார்க்கலாம்.) மேலை மொழிகளில் இருக்கும் வானியற் சொற்கள் பலவும் நம் நாகரிகத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. ஆழப் பயின்றால் அவற்றை நாம் அடையாளம் காணலாம்.

அடுத்தது விடை:

வலயச் சுற்றில் அடுத்த பகுதி விடை இராசி; இதை விடவ/இடப இராசி என்று தமிழிலும், வடமொழிப் படுத்தி (வ்)ரிஷப இராசி என்றும் சொல்லுகிறோம். விடை என்பது எருது. எப்படிக் காளை என்பது மாட்டின் ஆணைக் குறிக்கிறதோ, அது போல எருது என்பதும் மாட்டின் ஆணையே குறிக்கிறது. எருது என்பதை ஏறு என்றும் குறிக்கிறோம்; ஏலுதல் என்பது உயர்தல்; ஏலேலோ ஐலசா என்று கூறுகிறோம் இல்லையா? எருதின் கழுத்தின் மேல் உயர்ந்து கிடக்கும் உறுப்பு எருத்து என்றும், பிடரி (பிடிக்க முடியாதது) என்றும், அது திமிரிக் கிடப்பதால் திமில் என்றும் அழைக்கப் படுகிறது. உயர்ந்து, ஏல்ந்து கிடக்கும் அந்த உறுப்பே இந்தியக் காளைக்கு இன்னும் ஒரு சிறப்புப் பெயரைக் கொடுக்கிறது. ஏல்து>ஏர்து>எருது. இந்தப் பெயரும் விதப்பில் இருந்து பொதுமைக்கு வந்த பெயர்தான். எருது வேளாண்மைக்குப் பெரிதும் பயன்பட்ட பிறகு, குறிஞ்சி மற்றும் முல்லை நிலையைக் குறிப்பதற்கு காட்டெருது என்றே சொல்லுகிறோம். (எழுந்து, உயர்ந்து முன்வந்து முதலில் இருக்கும் கலிப்பாவின் ஓர் உறுப்புக்கு எருத்து என்றே பெயர். அந்த எருத்து பின்னால் தொகையறா, பல்லவி என்ற பெயரில் மாறி இன்றைய சீர்த்தனைப் பாடல்களிலும் திரைப்பாடல்களிலும் இருக்கிறது. சீர்த்தனை, திரைப்பாடல் வடிவங்களின் அடியூற்று கலிப்பாவில் இருக்கிறது.)

விலங்கினங்களில் ஆண் உயிரி பெண்ணுயிரியைக் காட்டிலும் விடைத்துப் பெருத்து இருப்பதாலேயே விடை என்ற சொல் காளையைக் குறிக்க எழுந்தது. வேட்டைக் குமுகாயத்தில் விடைத்திருக்கும் விலங்குகள், குறிப்பாக ஆண் விலங்குகள், அவற்றின் ஊன் பெருக்கிற்காகவே கொல்லப் பட்டன. பொலிந்து இருந்த காளை பொலி காளை, அதாவது பருத்த காளை; இப்படி காளைகளுக்கு பருத்த என்ற பொருள்படும் அடைகள் தமிழில் பெரிதும் உள்ளன. விடை என்பது அப்படி ஒரு பெயரடை; விடை மா என்ற பெயருக்கு, பருத்த விலங்கு என்ற பொருள்; பழந் தமிழ்மாந்தனின் ஊன்விலங்குகளில் தலையாயது விடை மா; எனவே தான் மாட்டு மந்தைகளை அவன் வளர்த்தான். விடை மா என்ற தமிழ்ச் சொல் தமிழிய மொழிகளில் விடைமா> விடமா> விடமம்>விடவம்>விடபம் என்று ஆகும்; வடமொழியில் வழக்கம் போல் ரகரம் உள்வந்து ஷகரத் திரிபு பெற்று (வ்)ரிஷபம் என்றும் ஆகும்.

மூன்றாவது ஆடவை:

வலயச் சுற்றின் மூன்றாம் பகுதி ஆடவை; இது ஆடு+அவ்வை>ஆடவ்வை>ஆடவை என்று பிரியும். ஆடூஉவும் (ஆணும்) மகடூஉவும் (பெண்ணும்) புணர்ந்திருக்கும் இரட்டை உருவகம் ஆடவை. இந்தப் பகுதியில் பழந் தமிழ் மாந்தன் பார்த்த சில குறிப்பிட்ட விண்மீன்களின் தொகுதி ஒரு ஆணும் பெண்ணும் புணர்ந்திருப்பது போல் தோற்றம் அளித்திருக்கின்றன. புணருதல் என்ற பொருளை உணர்த்தும் இன்னொரு தமிழ்ச் சொல் முயவுதல்/ முயக்குதல் /முயத்துதல் என்று வரும்; இந்தச் சொல்லுக்குத் தழுவுதல் என்ற பொருள் உண்டு. "போழப்படா முயக்கு" என்ற வள்ளுவர் அடி பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன். முயத்துதலின் பெயர்ச்சொல் ஆன முயத்துனம் என்பது புணர்ச்சி என்ற பொருளைக் கொள்ளும். முயத்துனத்தை மைத்துனம் ஆக்கி மிதுனம் என்று வடமொழி திரிக்கும். முயத்தன் மைத்தன் ஆகிப் பின் பேச்சு வழக்கில் மச்சானும் ஆவான் (முயத்துதற்கு/புணருதற்கு உரியவன் மச்சான், அவ்வளவு தான்). இது போலவே மைத்துனி/மச்சினி போன்ற சொற்கள் எழும்; மயலுதல் என்பதும் கலவிக்கு இணங்குதலே. (புணர்ச்சி செய்யும் ஆண்/பெண் உறுப்புக்களும் புள் என்னும் வேரால் உருவாகிப் புகர மெய்யிலேயே குறிக்கப் படுவதுண்டு. ஆனால் பெரும்பாலான தமிழ் அகரமுதலிகளில் தான் அவை பதிவு செய்யப் படாமலே போயின. :-))

மேலே ஆள் அல்லது ஆணைக் குறிக்கும் ஆடு என்ற சொல் இன்றைக்கும் தெலுங்கில் வழக்கில் இருக்கிறது. ஆள்+து>ஆடு. இது போல அவ்வை என்பது பொதுவாகப் பெண்ணைக் குறிக்கும் சொல். இது கன்னடத்தில் விரவியது. அவ்வை என்ற பாடினியைப் பற்றி நமக்கு எல்லாம் தெரியும்; அவள் இயற்பெயர் நமக்கு எங்கு தேடினும் தெரியாமற் போயிற்று. அவ்வை என்ற சொல்லை "அவை" என்று தொகுத்து பெண்பாற் பெயர்களில் ஈற்றாகப் பயன்படுத்துவதும் உண்டு. காட்டு: குந்தவை;

இன்னும் உள்ள ஒன்பது பகுதிகளின் பெயர்கள் பற்றி அடுத்துப் பார்ப்பதற்கு முன் கோள்கள் இராசிகளில் வந்து சேருகிற நிலையும் கார்காலம் தொடங்கும் காலத்தையும் பற்றிய பரிபாடலின் ஒரு பகுதியைப் பார்ப்போமா? ஓவ்வொரு முறையும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடலைக் கொடுத்து இந்தத் தொடரில் ஒரு அதிகாரத்தை முடிப்பது எனக்கு வழக்கம்; இந்த முறை மாறுபட்டுத் தருகிறேன்.

"விரி கதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப,
எரி, சடை, எழில்வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர்விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்"

இந்தப் பாடலில் வரும் வானியல் நிகழ்வு கி.மு.161 ஆம் ஆண்டு, கலியாண்டு 2941, பிரமாதி ஆவணித்திங்கள் 12 ஆம் நா: வியாழக்கிழமை, சதுர்த்தசி திதி அவிட்ட நாள்காட்டு கூடிய நாள் என்று சொல்லுவதாக 1969 ல் வெளிவந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக பரிபாடற் பதிப்பு கூறுகிறது. நாம் வேறொரு நாளில் இதைப் பற்றிப் பேசுவோம்.

இப்போதைக்கு வரட்டுங்களா!

அன்புடன்,
இராம.கி.

Saturday, December 01, 2007

பண அட்டைகள்

பல்வேறு பண அட்டைகள் குறித்து ஓர் உரையாடல் தமிழுலகம் மடற்குழுவில் முன்பு ஒருமுறை எழுந்தது. சில விளக்கங்கள் கொடுத்து அங்கு தந்த சொல்லாக்கங்களை இங்கு தருகிறேன்.

swipe card:- வயப்பு அட்டை; வயப்படுத்தல் = தனதாக்கிக் கொள்ளல், தன்பக்கம் சாரவைத்தல்; வயம்>வசம். வயம் என்பதன் வேர்ப்பொருள் வளைத்தலே; "என்ன, அவுங்களை வளைச்சுப் போட்டாச்சா?" என்பது வயப்படுத்தியதையே குறிக்கும். [The old English word for sweep was swaapan, which evolved into Middle English swope. Modern English sweep, which began to emerge in the 13th century, probably came from the old past tense swepe, a descendent of old English sweop. Swaapan itself came from the prehistoric Germanic base *swei 'swing, bend' which also produced German schweifen 'wander' and English swift. Swipe probably originated as a dialectal variant of sweep.]

affinity card:- a credit card where a certain amount of money is given by the credit card company to a charity everytime the card is used
பயன்கொடை அட்டை (இன்னும் ஓர்ந்து பார்த்தால் இதைவிட நல்ல சொல் ஒன்று கிடைக்கலாம்.)

cash card:- காசு அட்டை

charge card:- பற்று அட்டை

cheque guarantee card:- காசுறுதி அட்டை

credit card:- கிட்டிப்பு அட்டை (Creed was the first of a wide range of English words borrowed from Latin credere 'believe'. Others include credible, credence, credential, credit, credulous.); நம்புதல் என்பது நெருக்கத்தை ஓட்டியது. "நமக்கு வேண்டப் பட்டவருங்க, பணங் கொடுங்க, ஒண்ணும் ஆகாது.!" "நம்ம பக்கம் தான்; எங்கூர்க்காரர் தான்; கடன் கொடுக்கலாம். திருப்பி வந்துரும்." "நமக்கு நெருக்கம்." "நமக்கு அண்மை;" அண்ணுதல் = நெருங்குதல்; அண்ணுதலில் இருந்து பிறந்த சொல்லே அண்பு>அன்பு. அவனோடு அன்பாக இருக்கிறேன் என்றால் நெருக்கமாக இருக்கிறேன் என்று தான் பொருள். நண்ணுதல் என்பதும் நெருங்குதலே. நள் என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது நண்ணுதலாகும். நள்>நட்பு. நள்ளில் இருந்து பிறந்த இன்னொரு சொல் நண்பு>நம்பு; நம்புதல் என்பதும் நெருங்குதலே. நம்பிக்கை = நெருக்க நிலை. இந்த நெருக்க நிலைக்கு இன்னொரு சொல் கிட்ட நிலை. "கிட்டக்கவே இருந்துட்டு நம்பாமல் இருந்தா எப்படி?" நெருக்கத்தில் பிறப்பது நண்பிக்கை>நம்பிக்கை. கிட்டித்தல் என்பதும் நெருங்குதலே. இந்தையிரோப்பியச் சொற்களுக்கே ஆன ரகரப் பலுக்கத்தை முதல் எழுத்தில் நுழைத்தால் credit வந்துவிடும். [சொல் பிறந்திருக்கக் கூடிய கதையைச் சொன்னேன்.] உனக்கு எவ்வளவு கிட்டியது என்ற கேள்வி உனக்கு எவ்வளவு credit வந்தது என்றே பொருள்படும். கிட்டக் கூடியது பொன்னா, பொருளா, பணமா என்பது முகமையில்லை. அது இன்னொருவரிடம் இருந்து வருவதாய் இருக்கவேண்டும். கிட்டியதின் நீட்டமே கிடைப்பு. கிடைப்பின் இன்னொரு தோற்றம் get/got போன்றவை.

debit card:- கடவிப்பு அட்டை (debt originated as debita, the plural of Latin debitum 'that which is owed', a noun formed from the past participle of the verb debere, 'owe') கள்>கழு கழுக்கப் பட்டது கட்டப் பட்டது என்ற பொருள் கொள்ளும். கட்டுதல் என்பது பிணைக்கப் படுதலாகும். இன்னொருவோரோடு பணத்தால் பிணைக்கப் பட்ட நிலை கட்டம் பட்ட நிலை. கட்டம்>கடம்>கடன் என்று விரியும். கழுவோடு இகரம் சேர்ந்தால் அதன் பொருள் எதிர்மறையாக மாறிவிடும் இழு என்ற வினையில் இரண்டு பொருள்களுக்கு இடையே தொடர்பு இருக்கிறது என்று புரிபடும். ஒன்று இன்னொன்றை நகர்த்துகிறது என்று இங்கே பொருள். இழி என்றானால், ஒன்று இன்னொன்றில் இருந்து பிரிந்தது என்று பொருள் வரும். இது போன்ற சொற்களில் வரும் இகரத்தின் தாக்கம் அவ்வளவு. எதிர்மறைப் பொருளைக் கொண்டு வந்துவிடுகிறது. இன்னும் இதுபோன்ற காட்டுக்களைக் காட்ட முடியும். நீக்குதலுக்கான வேரடி கழி என்ற சொல்லில் இப்படி வருகிறது. கழு+இ>கழி = எடு என்னும் பொருள். ஐந்தில் இருந்து இரண்டைக் கழிக்க மூன்று கிடைக்கும். கடவுதல் என்றாலும் இழுத்தல் என்றே பொருள் கொள்ளும்; அங்கே வகர உகரம் போய்விட்டால், கடத்தல் என்பதும் நீங்குதல், கழிதல் என்ற பொருளே கொள்ளுகிறது. வகரம் பகரமாவுதும் தமிழிய மொழிகளிலும், இந்தையிரோப்பிய மொழிகளில் இயற்கையே. கடவித்தல் என்பது கடத்தல் என்ற தன்வினைச் சொல்லில் இருந்து பிணைக்கச் செய்தல் என்ற பொருள் கொண்ட பிறவினைச் சொல்லை உருவாக்கும். நீங்கள் ஒரு பொருளை வாங்கும் போது அதற்கான பணத்தை உங்கள் வங்கிக் கணக்கோடு கடவித்துக் கொடுக்கும் அட்டை கடவிப்பு அட்டை.

gold card:- பொன்னட்டை

store card:- கடையட்டை

அன்புடன்,
இராம.கி.

Monday, October 01, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 5

இராமர் சேது என்று இன்று தவறாகச் சொல்லப்படும் மண்திட்டு ஒரு பக்கம் இராமேசுரத்தையும் (1964 புயலில் நம் கண்ணறிய அழிந்து போன பழைய தனுக்கோடி) இன்னொரு பக்கம் தலைமன்னாரையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. இதே போல இன்னொரு திட்டும் அந்தப் பக்கம் கோடிக்கரையில் இருந்து யாழ்ப்பாணம், நயினார் தீவு வரை இருக்கிறது. அந்தத் திட்டும் தான் உயர்ந்து கிடக்கிறது. இந்தப் பக்கம் இராமேசுவரத்திற்கு அருகில் இருப்பதை மட்டும் இராமர் கட்டியதாகச் சொல்லும் கூட்டம், அந்தப் பக்கத்தில் கிடக்கும் இன்னொரு சேதுவை (அதை ஆதி சேது என்பார்கள்.) யார் கட்டியதாகச் சொல்லுவார்கள்? கடல்மட்டம், கடலியல் வரைவு தெரிந்தவர்கள் "இந்த இரண்டு சேதுக்களும் இரட்டையானவை" என்றே சொல்லுவார்கள். ஒன்றை மட்டும் உயர்த்தி, இன்னொன்றைக் கண்டுகொள்ளாமல் விடுவது எப்படி? அப்படி என்ன ஓரவஞ்சனை? வலது கண்ணுக்கு மையும், இடது கண்ணுக்குச் சுண்ணாம்புமா உங்கள் ஊரில் அப்புவார்கள்?

அடுத்தது அகம் 70 இல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடிய நெய்தல் திணைப் பாடலில் இராமன் திருவணைக் கரைக்கு வந்து இருந்ததாய் ஒரு செய்தியைப் பார்ப்போம். தலைவியிடன் காதல் தொடர்பாக ஊரார் பேசுவதைப் பற்றித் தலைவியிடம் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவதாகப் புலவர் பாடுவார்:

கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென
இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புகுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானலம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே. (அகநானூறு:70:5-17)

இந்தப் பாடலில் வரும் பரதவர் என்ற இனக் குழுவினர் தொடக்க காலத்தில் சோழநாட்டுக் கடற்கரையிலேயே இருந்தவர். (என் இடுகையின் முதற்பகுதியில் இளஞ்சேட்சென்னி பரதவரை வெற்றி கொண்ட செய்தியைக் குறிப்பிட்டு இருப்பேன்.) பாண்டிய நாட்டில் பரதவர் அவ்வளவாக விரிந்து இருந்தது இல்லை. பாக்கம் என்று முடியும் நெய்தல் ஊர்ப் பெயர் சோழநாட்டிலும், பின்னால் அதனின்றும் விலகிய தொண்டை நாட்டிலுமே உள்ள பெயராகும். பாண்டிய நாட்டில் இது போன்ற பெயர்கள் மிகவும் அரிது. ஞாழல், புன்னை ஆகிய மரங்கள் விரவிய கானலம் பெருந்துறை (காடு பின்புலமாக இருக்கும் பெருந்துறை) என்ற குறிப்பு கோடிக்கரையையே உணர்த்துகின்றது. இன்றும் இங்கு ஞாழலும், புன்னையும் நிறைந்து கிடக்கின்றன. கோடிக்கரைக் காடு என்றுதான் இந்தப் பக்கம் சொல்லுகிறார்கள். இது போன்ற விவரிப்பு இராமேசுவரத்துக்கோ, இராமநாதபுரத்துக்கோ ஒத்து வராது. அவை பாலை நிலத்தின் கூறுகள் என்பது அங்கே வசிக்கிறவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது போகத் தொல்முது கோடி என்பது ஆதி சேது என்ற குறிப்பையும் உணர்த்துகிறது.

அதையும் மீறி வென்வேல் கவுரியர் என்று பாண்டியரைச் சுட்டுவதால் பாண்டிநாட்டுத் தலத்தைக் குறிக்க முடியுமா என்றால் "சற்றுப் பொறுங்கள்" என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கு தொண்டி, மீமிசல் எனக் கிழக்குக் கடற்கரை ஊர்களைக் கடந்து முத்துப் பேட்டை வரை போனால் கோடிக்கரை வந்துவிடும். இந்த ஊர்களுக்கு உட்பரப்பில் இருக்கும் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஆவுடையார் கோயில் ஆகிய ஊர்கள் எல்லாம் ஒரு காலத்தில் முத்தூர்க் கூற்றத்திற்கு அண்மையும் சேர்ந்தவையுமே. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைக்கும் இருக்கும் இந்தப் பகுதிகள் காலம் காலமாய் சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே பந்தாடப் பட்ட பகுதிகள். இம்மென்றால் சோழன் பாண்டியனிடமிருந்து இவற்றைப் பிடுங்கிக் கொள்ளுவான்; இல்லையென்றால் சோழனிடமிருந்து பாண்டியன் பிடுங்கிக் கொள்ளுவான். கடைசிக் கடற்கோளில் தன் நாடு கணிசமாகக் குறைந்ததால் சோழனிடமிருந்து முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடமிருந்து குண்டூர்க் கூற்றத்தையும் பாண்டியன் பறித்துக் கொண்ட கதை கலித்தொகை 104.4 ல் கீழ்வருமாறு சொல்லப்படும்.

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவு ௾ன்றி, மேல்சென்று, மேவார் நாடு ௾டம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

இந்த இரு கூற்றங்களின் பெயரை உரையாசிரியர் வழியாகவே நாம் அறிகிறோம். தவிர மணிவாசகர் காலத்தில் பரி வாங்கப் போகும் திருப்பெருந்துறையும் (ஆவுடையார் கோயிலும்) இந்தக் கூற்றத்தில் தான் உள்ளது. (பரிவாங்கிய போது இது பாண்டியர் கூற்றமாகவே இருந்திருக்கிறது.) இன்றும் கூட இந்தப் பகுதிகளில் சோழ, பாண்டிய நாடுகளின் இரண்டு பக்கத் தாக்கங்களின் மிச்சம் கணிசமாகவே இருக்கிறது. அதனால், கோடிக்கரை ஓரோர் சமயம் பாண்டியரின் ஆட்சிக்கு வந்ததில் வியப்பு இல்லை. (அகம் 70 ஆம் பாடல் தனுக்கோடியைக் குறிக்கிறது என்று சொல்லுவாரும் உண்டு. என்னால் மேலே சொன்ன காரணங்களுக்காக ஏற்க முடியவில்லை.)

இனி அகம் 70 ஆம் பாடலில், வரும் செய்தியைப் பார்ப்போம். தோழி சொல்லுகிறாள்: (இங்கே அட்லாண்டா பெ.சந்திரசேகரனின் சொற்களை அப்படியே பயனாக்கி "கோடிக்கரை" என்று ஊர்ப்பெயரை மட்டும் மாற்றித் தருகிறேன். அவர் தனுக்கோடி என்ற கருத்தாளர்.)

"உன்னைத் திருமணம் செய்துகொள்ளுமுன் அவருக்கும் உனக்கும் இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் ஊரார் பலரும் அறியுமாறு அலர் (கிசுகிசு!) பேசிச் செய்தியைப் பரப்பினர். ஆனால், திருமணம் ஆன பின்னரோ [நிலைமை வேறு]; வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் குலத்துப் பாண்டியருக்குரிய மிகப் பழமையான கோடிக்கரையில் முழங்கும் பெருங் கடல் அலைவீசும் துறையில் வெற்றியன்றி வேறேதும் அறியாத இராமன் தன் இலங்கைப் படையெடுப்புப் பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆல மரத்தடியின் அடியில் அமர்ந்திருந்தான்; அப்போது அமைதியை வேண்டி ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல், ஊர் அமைதியாகிவிட்டது!" என்றாள்.

ஆலமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை இராமன் கையுயர்த்தி ஒலி எழுக்காமல் இருக்கச் செய்தது கம்பனில் கிடையாது; வான்மீகியிலும் கிடையாது. இப்படி ஒரு செய்தி கோடிக்கரையில் சொல்லப் படுவதில் இருந்தே, கடைச் சங்க காலத்திலேயே இன்றைய இலங்கைக்கும் இராம காதையில் சொல்லப்படும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிதல் குழப்பம் ஏற்படத் தொடங்கிவிட்டது என்று அறியலாம். ஆனாலும் ஒருசிலர் இராமர் சேது என்று தங்களுக்குத் தோன்றியபடி கற்பனை வாதம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

"இராவணன் ஆண்ட ௾லங்கை எது?" என்ற தலைப்பில் சைவசித்தாந்த வெளியீட்டுக் கழகத்தின் செந்தமிழ்ச் செல்வி இதழில் "சிலம்பு 23" (volume 23) ல் மயிலை. சீனி வேங்கடசாமியார் மற்ற ஆய்வாளர்களின் முடிவுகளைத் தெரிவித்திருப்பார். ஏகப்பட்ட வட இந்திய ஆய்வாளர்கள் இராவணனின் இலங்கையை இன்றைய சத்திஸ்கர், ஜார்க்கண்ட் பகுதியில் ஒரு ஏரிக்கு நடுவில் காட்டுவார்கள். தவிர இன்றைய இலங்கையின் மகாவம்சத்தில் பழஞ்செய்தியாக, தொன்மக் கதையாகக் கூட, இராவணன், இலங்கை என்னும் பெயர்கள் கூறப்படவில்லை.

இனி அடுத்து இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் நடுவே பாம்பன் வாய்க்கால் ஏற்பட்டது பற்றிப் பார்க்கலாம். இதை நான் சொல்லுவதைக் காட்டிலும், இராமநாத சுவாமி கோவில் கும்பாபிசேக மலர் 1975ல் "இராமேசுவரத் தீவு" என்னும் தலைப்பில் மயிலையார் எழுதிய ஒரு கட்டுரையை அப்படியே தட்டச்சித் தருகிறேன்.
------------------------------
இராமேசுவரம் என்னும் இச்சிறு தீவு முற்காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்த ஒரு நிலமாக இருந்து பிறகு சிறு தீவாக மாறிற்று என்னும் வரலாறு பலருக்குத் தெரியாது. இச்செய்தி பலருக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இராமேசுவரம் தீவும் இராமநாதபுரமும் ஒரு காலத்தில் இணைந்திருந்தன என்பது உண்மை.

தென்னிந்தியாவின் கடற்கரை ஓரங்கள் எக்காலத்திலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. கடற்கோள்களினாலும், கடல் அரிப்பினாலும் நமது நாட்டுக் கடற்கரைப் பக்கங்களில் எத்தனையோ மாற்றங்கள் நெடுங் காலமாக நடந்துள்ளன. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது பாண்டிய நாட்டுக்கு அருகில் இருக்கிற இலங்கைத் தீவு முன்னொரு காலத்தில், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலமாக இருந்தது. இந்தப் பெரிய நிலப்பரப்பு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கடற்கோளினாலும், கடல் அரிப்பினாலும் சிறிது சிறிதாகச் சிதைந்து போய்க் கடைசியில் தனித் தீவாகப் பிரிந்து போய், பிற்காலத்தில் இலங்கைத் தீவாக மாறிப் போயிற்று. நில ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் இந்த வரலாற்றுச் செய்தியைக் கூறுகிறார்கள். இலங்கை, தனித் தீவாகப் பிரிந்து போன பிறகுங் கூட, கொழும்புக்குத் தெற்கேயுள்ள கடலோரங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதி நிலங்கள் கடலில் முழுகிப் போயுள்ளன என்று மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது.

கன்னியாகுமரி இப்போது தமிழகத்தின் தெற்கெல்லையாக அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒரு நிலப்பரப்பு தமிழகத்தோடு இணைந்திருந்தது. அந்த நிலப்பரப்பு ஏறத்தாழ இரண்டு மாவட்டங்கள் (ஜில்லாக்கள்) அளவு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த நிலப்பரப்பு பிற்காலத்தில் கடற்பெருக்கினாலும், கடல் அரிப்பினாலும், பையப் பைய கடலில் மூழுகிப் போய்விட்டது. அந்த நிலப்பரப்பு முதல்தடவை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் ஒரு பகுதி மறைந்து போய் எஞ்சியிருந்த இன்னொரு பகுதி நிலம் மற்றுமொரு கடற்பெருக்கினால் மறைந்து போயிற்று, இந்த வரலாற்றுச் செய்தியைச் சிலப்பதிகாரமும், கலித்தொகையும் கூறுகின்றன. இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரமும், கடற்கோளினால் முழுகிப் போன இந்த நிலங்களைக் கூறுகிறது.

திருப்பதி என்னும் திருவேங்கடமலையை எல்லோரும் அறிவார்கள். வேங்கடமலையைச் சூழ்ந்திருக்கும் நாடுகளுக்கு வேங்கடக் கோட்டம் என்பது பழைய பெயர். இந்த வேங்கடக் கோட்டத்துக்குக் கிழக்கே கடற்கரையோரமாகப் பவத்திரிக் கோட்டம் என்னும் ஒரு நிலப்பரப்பு இருந்தது. பவத்திரிக் கோட்டம் ஒரு ஜில்லா (மாவட்டம்) அளவுள்ள நிலம். இந்தப் பவத்திரி நாட்டை 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நக்கீரர் அகநானூறு 340ம் செய்யுளில் கூறுகிறார். இந்தப் பவத்திரிக் கோட்டம் கி.பி.11ம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிப் போயிற்று. கடலில் முழுகிப் போன பவத்திரிக் கோட்டம் இப்போது திருவேற்காடு ஏரி (பழவேற்காடு ஏரி - இராம.கி) என்று பெயர் பெற்று பெரும் நீர்ப்பரப்பாக இருக்கிறது. பவத்திரிக் கோட்டம் இருந்ததையும், அது கடலில் முழுகிப் போனதையும் பிற்காலத்துச் சோழ அரசர்களின் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பவத்திரிக் கோட்டத்தில் இருந்த ஊர்களில் ஒன்று காகந்தி என்பது. "கடல்கொண்ட காகந்தி" என்று சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. நெடுங்காலமாகத் தொண்டைநாடின் கடற்கரையொரமாக இருந்த பவத்திரிக் கோட்டம் கடலில் முழுகிப் போய் இப்போது திருவேற்காடு ஏரியாய் மாறிப் போய்விட்டது. இந்த ஏரியின் தென்பகுதி இப்போது தமிழக அரசாட்சிக்கு உட்பட்டும், வடபகுதி ஆந்திர அரசுக்கு உட்பட்டும் இருக்கின்றன. (ஸ்ரீஹரிக் கோட்டா என்று இன்று சொல்லப்படும் விண்வெளி ஏவுகணைத் தளத்தின் பெயரில் பின்னுள்ள "கோட்டா" இந்தக் கோட்டமாய் இருக்க வாய்ப்பு உண்டு. ஸ்ரீஹரி என்னும் திரிவு எப்படி வந்தது, பவத்திரிக்கும் அதற்கும் உள்ள ஓசைத் தொடர்பு என்ன, என்று இன்னும் அறிந்தேன் இல்லை; தேடுகிறேன் - ௾ராம.கி)

தமிழகத்தின் தெற்கே பாண்டிநாட்டிலே கிழக்குக் கடற்கரையையடுத்து கொற்கைக்குடாக் கடல் இருந்தது. கொற்கைக் குடாக் கடல் நிலத்தில் புகுந்து உள்கடலாக அமைந்திருந்தது. கொற்கைக் குடாக் கடலின் மேற்கே கொற்கைப் பட்டினம் இருந்தது. இது துறைமுகப் பட்டினமாகவும் முத்துக் குளிக்கும் இடமாகவும் இருந்தது. கொற்கை நகரத்தைப் பற்றிச் சங்கப் பாடல்கள் சிறப்பாகக் கூறுகின்றன. தாமிரபரணி ஆறு அக்காலத்தில் கொற்கைக் குடாக் கடலில் சென்று விழுந்தது. கடற்கரையில் இருந்து ஐந்து மைல் தூரம் உள்புகுந்து உள்நாட்டுக் கடலாக இருந்த கொற்கைக் குடாக் கடல் பிற்காலத்தில் ஏறத்தாழ 10 ஆம் நூற்றாண்டில் மண்மூடி மறைந்து போய்விட்டது. கடற்கரைப் பக்கமாகக் கடல் அலைகள் மணலைக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் ஒரு புறத்தைத் தூர்த்து விட்டன. தாமிரபரணி ஆறு மணலை அடித்துக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் இன்னொரு புறத்தைத் தூர்த்துவிட்டது. இவ்வாறு இருபுறமும் மணல் தூர்ந்து கொற்கைக் குடாக்கடல் அடியோடு மறைந்து போய் இப்போது அது இருந்த இடம் நிலமாக மாறிவிட்டது. தாமிரபரணி ஆறும் இடம் மாறிவிட்டது. இவ்வாறு கடற்கரையோரங்களில் கடல் அரிப்பினாலும், கடல்பெருக்கினாலும் பல இடம் கடல்மாறிப் போனதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். (மாமல்ல புரத்திற்கு அருகில் ஏற்பட்ட மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். - இராம.கி.)

இராமேசுவரம் ஒரு காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்திருந்ததென்றும், அது பிற்காலத்தில் தீவாகப் பிரிந்து தாய்நாட்டில் இருந்து பிரிந்து போய்விட்டதென்றும் கூறுகிறோம். அதனை விளக்குவோம். இராமேசுரம் இராமநாதபுரத்துடன் இணைந்திருந்த காலத்தில் இராமேசுவரக் கோயிலில் இருந்து இராமலிங்கப் பெருமானை இராமநாதபுரத்துக்கு எழுந்தருளிவித்து ஒரு வாரம் தங்கிப் பிறகு மீண்டும் இராமேசுவரத்துக்குக் கொண்டு போவது வழக்கமாய் இருந்தது. இவ்வாறு இராமேசுவரம் தீவாக மாறுவதற்கு முன்பு வரையில் இது நடந்து வந்தது. தீவாக மாறிப் போனபிறகு இராமேசுவரர் இராமநாதபுரத்துக்கு எழுந்தருளுவது நின்றுவிட்டது. ஏறத்தாழ கி.பி.12ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட சிங்கள அரசன் தமிழ்நாட்டின் மேல் படையெடுத்துப் போர் செய்ய வந்தபோது, அவனுடைய சேனையைக் கப்பல்களில் ஏற்றிக் கொண்டுவந்து இராமேசுவரத்தில் இறங்கிப் பிறகு அந்தச் சேனையை இராமநாதபுரத்துக்கு அழைத்து வந்தான் என்று சுல்லவம்சம் (=சூளவம்சம் - இராம.கி) என்னும் இலங்கைநூல் கூறுகிறது. இதனாலும் இராமநாதபுரமும் இராமேசுவரமும் முற்காலத்தில் ஒன்றாக இணைந்திருந்தன என்பதை அறிகிறோம்.

ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுர வட்டத்தில் போர்ச்சுகீசியர் வந்து கப்பல் வணிகம் செய்தார்கள். அக்காலத்தில் பெரும் புயலடித்துக் கடல் கொந்தளித்துக் கடலில் நீண்டுகிடந்த இராமேசுவரத்தைத் தீவாகப் பிரித்துவிட்டதும், கடல்நீர், சிறு கால்வாய் போலப் பாய்ந்து இராமநாதபுரத்தையும், இராமேசுவரத்தையும் பிரித்துவிட்டது. சிலகாலம் வரையில் இந்தச் சிறு கால்வாயைக் கடந்து இராமநாதபுரத்துக்குப் போக்குவரத்து இருந்தது. பிறகு இந்தக் குறுகலான கால்வாயில் கடல்நீர் புகுந்து அதை அகலமாக்கி விட்டது. அப்போது போர்த்துகீசிய வாணிகர் தங்களுடைய வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காக இந்தக் கால்வாயை ஆழமாகவும் அகலமாகவும் செய்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான வராகன்களைச் செலவு செய்தார்கள்.

புயல் அடித்து காற்று மழையினாலும் கடல் கொந்தளிப்பினாலும் இயற்கையாக உடைப்புண்ட இராமேசுவரம் பிறகு பையப் பைய உடைப்பு அகலமாகிக் கால்வாய் ஆகிவிட்டது. அந்தக் கால்வாயை போர்த்துகீசிய வாணிகர் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக அகலமும் ஆழமுமாகச் செய்து விட்டனர், இவ்வாறு இராமேசுவரம் தனித்தீவாகப் பிரிந்து போயிற்று. இராமநாதபுரத்துக்கும், இராமேசுவரத்துக்கும் உள்ள கால்வாய் இப்போது பாம்பன் கால்வாய் என்று பெயர் கூறப்படுகிறது. இராமேசுவரமும், இராமநாதபுரமும் முன்னொரு காலத்தில் இணைந்து ஒரே நிலமாக இருந்தது என்பதைப் பிற்காலத்தவர் மறந்து விட்டார்கள்.
----------------------------------

இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் இடையில் பாம்பன் கால்வாயை போர்த்துகீசியர் வெட்டிய போதும், பின்னால் ஆங்கிலேயர்கள் அதை அகலப் படுத்திய போதும், இராமர் சேது என்று சொல்லி அதை நிறுத்த ஆட்கள் இல்லை. இன்றோ, சேதுக் கால்வாய் வெட்டுவதை நிறுத்துவதற்கு இராமனைக் காரணம் காட்டுகிறார்கள்.

இனி ஆதி சேதுவுக்கும், இப்பொழுது பேசப்படும் இராமர் சேதுவுக்கும் இடையிலான நிலம் கடற்கோளில் அழிந்த செய்தியை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 4

"அரக்கனும் தமிழும்" என்ற முன்பாதித் தலைப்பைப் பற்றி இதுகாறும் பேசிய நாம், "தமிழும், இராமர் சேதுவும்" என்ற பின்பாதித் தலைப்பிற்குள் சென்று பார்த்துவிட்டு, மீண்டும் முன்பாதித் தலைப்பிற்குப் போகலாம். (வான்மீகியையோ, அல்லது கம்பனையோ, ஒழுங்காகப் படித்தாலே, சேது பற்றி விளங்கிப் போகும் என்றாலும் திருகு வாதங்களையும், சூழ்ச்சிகளையும் சேர்த்து வைத்து, ஓர் இயற்கை மண்திட்டை இராமர் சேது என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று இருப்பவர்களுக்கு நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நொதுமலாய் இருக்கும் பொதுவானவர்களுக்கு நிலையை ஓரளவாவது புரிய வைக்க வேண்டும் என்றே இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடங்கினேன்.)

"இராவணன் எங்கே சீதையைத் தூக்கிக் கொண்டு போனான்?" என்று தேட முற்பட்ட வானரர்களை நான்கு திசைகளுக்கும் பிரித்து அனுப்பும் சுக்ரீவன், தென்திசைக்கு அனுமனையும், அங்கதனையும், சாம்பவனையும் இன்னும் சிலரையும் அனுப்புவான். அவர்களுக்கு, எங்கு தேடவேண்டும் என்றும், எப்படி போக வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கும் சுக்ரீவன் தென்கடல் வரைக்கும் அவர்களைப் போகச் சொல்லியிருப்பான். இங்கு வான்மீகியை எடுத்துரைக்காமல், அவரைப் பெரும்பாலும் ஒட்டிச் சென்ற, நமக்கு நன்கு தெரிந்த கம்பனில் இருந்தே, குறிப்புத் தருகிறேன். கிட்கிந்தா படலம் நாடவிட்ட படலத்தில்

தென்தமிழ் நாட்டு அகன்பொதியின் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்
சேர்கிற் பீரேல்
என்றுமவன் உறைவிடமாம் ஆதலினால் அம்மலையை
இறைஞ்சி ஏகி
பொன்திணிந்த புனல்பெருகும் பொருநையெனும் திருநதிபின்
பொழிய நாகக்
கன்றுவளர் தடஞ்சாரல் மயேந்திரமா நெடுவரையும்
கடலும் காண்டிர்

என்ற பாடல் வரும். இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய செய்தி "பொதிகை மலையைத் தாண்டி, பொருநையையும் (தாம்பர பெருநையும்) தாண்டிச் சென்றால், மகேந்திர மலையடுக்கையும், அதன் அருகில் கடலையும், காண்பீர்கள்" என்று சுக்கிரீவன் கூற்று மட்டுமே. இதே கூற்றின் படி அனுமனும் மற்றவரும் மகேந்திர மலை போய்ச் சேர்ந்ததை, ஆறுசெல் படலத்தின் கடைசிப் பாடலில் கம்பன் சொல்லுவான்.

வன்திசைக் களிறு அன்ன மயேந்திரக்
குன்று இசைத்தது வல்லையில் கூடினார்
தென்திசைக் கடற்சீகர மாருதம்
நின்றிசைக்கும் நெடுநெறி நீங்கினார்

தென்திசைக் கடலில் இருந்து வரும் ஈரக்காற்று, நின்று ஒலிக்கும் வழிகளைக் கடந்து, தென் திசையைத் தாங்கும் யானை போன்ற மகேந்திர மலையை அடைந்த அனுமனும் மற்றவர்களும், அடுத்து சம்பாதியோடு உரையாடி இலங்கை பற்றி அறிகின்றனர். அதற்குப் போகுமுன் தென் கடல் பற்றிய செய்தியைப் புரிந்து கொள்ளுவோம்.

ஒரு 300/400 ஆண்டுகளாய், வங்காள விரிகுடா என்று சொல்லப்படும் கடல், தமிழ் இலக்கியம் நெடுகிலும் குணகடல் அல்லது கிழக்குக் கடல் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதை ஒருநாளும் தென் கடல் என்று யாரும் அழைத்ததில்லை. அப்படி அழைத்ததற்கு தமிழில் ஆவணப் பதிவும் கிடையாது. அதே போல அரபிக்கடல் என்று வாஸ்கோட காமா காலத்தில் இருந்து சொல்லப்படும் கடல், குட கடல் அல்லது மேற்குக் கடல் என்றே தமிழ் இலக்கியம் நெடுகிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

தென் கடல் என்பது இன்றைக்கு இந்துமாக் கடல் என்று சொல்லப் படுகிறது. வேத காலத்துச் சில வடபால் நூல்களிலும், பிராமணங்கள், ஆரண்யங்கள் போன்றவற்றில், தென்கடல் என்ற கருத்து அரபிக் கடலைக் குறிப்பதாகவும் சில வடமொழி அறிஞர்கள் கருத்துச் சொல்லுகிறார்கள். (ஏனென்றால் சப்த சிந்துவுக்கு அது தென்பகுதி.) அந்த ஆதாரங்கள் வடமொழி இலக்கியங்களைத் தேடினால் கிடைக்கும். வடமொழி இலக்கியத்தில் கிழக்குக் கடல் என்பது "சகரனின் மைந்தர்கள் தோண்டிய செயற்கைக் கடல்" என்றும், அதனால் சாகரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ஒரு தொன்மக் கதை உண்டு. (பின்னால் சாகரம் என்ற சொல் பொதுமைப் பெயராகி மற்ற கடல்களுக்கும் பயன்பட்டது.) ஆனால் வடமொழி இலக்கியங்களிலும் கூடக் கிழக்குக் கடல் ஒரு காலத்தும் தென் கடல் என்று சொல்லப் பட்டது இல்லை.

அடுத்து மகேந்திர மலை என்பது இன்றைக்குக் குமரி மாவட்டத்தில் மகேந்திர கிரி என்ற சொல்லப்படும் இடத்திற்கு (Liquid propulsion centre இருக்கும் இடத்திற்கு) அருகில் உள்ள மலையடுக்கு என்று சொல்லுவார்கள். பின்னால் இந்த மகேந்திர மலையில் இருந்து தான் அனுமன் இலங்கைக்குத் தாவிப் போனதாக இராம காதை சொல்லும். (நெடுங்காலம் கழித்து வந்த மாணிக்க வாசகரும் கூட மகேந்திர மலையை சிவனின் இருப்பிடமாகக் கீர்த்தித் திரு அகவலில் "மன்னும் மாமலை மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்று குறிப்பிட்டுச் சொல்லுவார். ஏதோ ஒருவகையில் மகேந்திரம் என்பது தமிழருக்குச் சிறப்பானதாக இருந்ததோ, என்னவோ? மகேந்திர மலை பற்றிய இலக்கியச் செய்திகளும், மற்ற தரவுகளும் ஆய்வு செய்யப் படவேண்டியவை.)

அடுத்து நெடுங்காலத்திற்கு முன்னால் அழிந்த குமரி நிலம் பற்றிப் பேசவேண்டும். தெற்கே கடற்கோளால் நிலம் அழிந்தது உண்மை. "அது கண்டமா? குறுநிலமா?" என்பதில் தமிழ் அறிஞர்களிடையே பெருத்த வேறுபாடுகள் உண்டு. அந்தக் கருத்தாடலுக்குள் நான் இப்பொழுது போகாமல் அதைத் திரு. சு.கி.ஜெயகரன் (குமரிநில நீட்சி, காலச்சுவடு பதிப்பகம், திசம்பர் 2002. இந்தப் பொத்தகத்தோடு நான் வேறுபட்டாலும், அதே பொழுது, படிக்கவேண்டிய பொத்தகம் என்று சொல்லுவேன்.) சொல்வது போலக் குறுநிலம் என்றே இப்போதைக்கு எடுத்துக் கொண்டு பார்த்தால், இன்றுள்ள குமரிமுனைக்கும் தெற்கே கிட்டத் தட்ட 80 கி.மீ அளவுக்கு கணிசமான நிலம் (குமரிக் கண்டம் என்ற கருத்தைக் காட்டிலும் குமரிநிலம் என்ற சொல்லைப் பயனாக்குவது நல்லது.) அழிந்து போயிருக்கலாம் என்று கொள்ளலாம். (இந்த நீளத்தை சட்டென்று நான் ஒப்ப முடியவில்லை. இன்னும் நீண்டு இருக்கக் கூடும் என்றே எண்ணுகிறேன். அது பற்றிய கடல் ஆய்வு தொடர வேண்டும்.) ஜெயகரன் சொல்லும் இன்னொரு கருத்து (இதில் பெரும்பாலும் யாருமே வேறுபட மாட்டார்கள்.) தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலுமான நிலப்பரப்பும் கூட கடல்மட்ட உயர்ச்சியால் அழிந்து போனது. இதைப் பற்றி விரிவாகக் கீழே பார்ப்போம். இந்த இரு அழிவுகளும் கடல் மட்டம் உயர்ந்ததனால் நடந்திருக்கின்றன.

இற்றைக்குப் 15000 - 12000 ஆண்டுகளூக்கு முன்னால் இருந்த பனியுகத்தில் (ice age) கடலின் மட்டம் இன்று இருப்பதைக் காட்டிலும் 80-100 மீ. குறைந்து இருந்தது. அதனால் நீரின் அடியில் இன்று இருக்கும் பல நிலங்கள் (பெரும்பாலும் பெருநிலக் கடற்கரை, தீவுகள் ஆகியவற்றை ஒட்டியவை) அன்று வெளிப்பட்டு நிலமாகவே இருந்தன. இத்தகைய நிலை இந்தியத் துணைக் கண்டத்திலும் இருந்தது. அப்படிக் கடற்கரை பெரியதாக இருந்த போது, M130 ஆட்களும் (நாகர், இயக்கர் போன்ற பல்வேறு கருப்பு இனத்தவரும்), பொதுவாக இந்தியர் என்று சொல்லப்பெறும் (என்னைப் போன்ற ஒரு சிலர் திராவிடர் என்றே சொல்ல விழையும்) M20 ஆட்களும் (The Journey of Man - A Genetic Odyssey by Spencer Wells, Penguin Books. M20 ஆட்கள் உலகில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தான் மிகுந்து இருக்கிறார்கள் என்றும், இவர்களில் 50% தென்னிந்தியாவிலே இருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.), இவர்களுக்கு இடையே கலந்து உருவான ஆட்களும், ஆகப் பெரும் கூட்டமே இந்த அழிந்து போன கடற்பரப்பு நிலங்களில் வாழ்ந்து இருப்பார்கள். (இந்த ஆட்களின் வாழ்க்கை எச்சங்கள் தான் சென்னையில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருக்கும் அச்சரப் பாக்கத்தில் கிடைக்கின்றன.)

பின்னால் வெவ்வேறு காரணங்களில் தூண்டப்பட்டு பனியுகம் முடிந்து, பனிப் பாறைகள் உருகி, கடல் மட்டம் உயரத் தொடங்கி இருக்கிறது. பொதுவாகக் கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் உயரும் போது அது அங்கு வாழும் மாந்தரின் மரபில் கதைகளை உண்டு பண்ணாது. மாறாகச் சில இலக்குச் சார்ந்த புவியியல் அமைப்புகளால் (localized geographical formations) திடீரென்று நீர் பிளந்து கொண்டு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்துக் கொட்டும் போது, அது மாந்தர்களின் குமிந்த மரபில் (common traditions) அழிக்கமுடியாத தொன்மத்தை உருவாக்கும். அப்படி ஒரு காலம் கி.மு. 5600 ஆகும்.

இந்தப் பொழுது திடீரென்று துருக்கிக்கு அருகில் உள்ள பாஸ்பரஸ் நீரிணை பிளந்து, மத்திய தரைக் கடலின் நீர், வெள்ளமாய், ஒரு பெரும் அருவி போல, கருங்கடலுக்குள் கொட்டி கருங்கடலின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம் என்று பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் William Ryan என்பவரும், Waltar Pitman என்பவரும் சேர்ந்து ஒரு தேற்றை (theory) 1998 அளவில் வெளியிட்டார்கள். (அவர்களுடைய பொத்தகம் Noah's Flood, Simon& Schister, Rockefeller Centre, 1230 Avenue of the Americas, New York NY 10020 - கட்டாயமாகப் படிக்க வேண்டிய ஒன்று.) மற்ற ஆய்வாளர்கள் இந்தத் தேற்றின் ஒரு சில விவரங்களையும் முடிவுகளையும் மறுத்தாலும், முற்றிலும் ஒதுக்கி விடவில்லை. இவர்களின் முன்னீடு, ஆய்வாளர்கள் மனத்தில் ஒரு புதிய பார்வையைக் கொண்டு வந்திருக்கிறது.

இது போன்ற ஒரு நில அழிப்பு தமிழகக் கடற்கரையிலும், குறிப்பாக இன்றையக் குமரிமனைக்குத் தெற்கிலும் நடந்திருக்கலாம். இந்த நிலங்கள் அழிந்ததை ஒரு இயக்கப் படமாக வலையில் போட்டிருந்தார்கள். அதன் சுட்டி கீழே.

http://www.grahamhancock.com/underworld/AshCF1.php?p=1

(மேலே உள்ள தளத்தில் அடுத்தடுத்து 5 பக்கங்கள் இருக்கும். வலைத்தளத்தில் சொல்லுவதை நான் ஏற்கிறேன் என்று பொருள் கொள்ளாதீர்கள். நான் சுட்டி கொடுத்தது அதில் வரும் இயக்கப் படத்திற்காகவே.)

அந்தப் படத்தில் பார்க்கும் போது குமரிமனைக்குக் கீழே தீவு ஒன்றும் தெரியும். அது தான் இராமாயணத்தில் சொல்லப் படும் இலங்கையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கம்பனில் சொல்லப்படும் அடையாளங்கள் குமரி முனைக்கும் தெற்கேதான் கொண்டு போகின்றன. தவிர "குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை" என்று சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையிலும் கூறியிருக்கிறார்.

இனி மீண்டும் கம்பனுக்கே வருவோம். மகேந்திர மலைக்கு வந்து சேரும் அனுமனும் மற்றவர்களும் சீதையைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் தங்கள் இயலாமையைப் பேசிக் கொண்டிருப்பதைச் சம்பாதிக் கழுகு கேட்கிறது. அப்பொழுது தன் உடன்பிறந்தான் சடாயு இறந்ததை அறிந்து மிகுந்த வருத்தம் உறுகிறது. பின்னால் இராவணன் சீதையை இலங்கைத் தீவுக்குக் கொண்டு போன செய்தியை வாணரருக்குச் சம்பாதிக் கழுகு சொல்லுகிறது. இலங்கையின் இருப்பிடத்தையும் அதன் தொலைவையும், இராவணனின் நகர் பற்றியும் கூடச் சொல்லுகிறது. இதைத் தொடர்ந்து, கிட்கிந்தா காண்டம், சம்பாதிப் படலத்தில் "ஓசனை ஒருநூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை" என்ற வாசகமும், கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலத்தில் "ஓசனை ஒன்று நூறும்" என்ற குறிப்பும் கம்பனால் சொல்லப் பெறும்.
ஆக மகேந்திரமலையில் இருந்து இலங்கைநகரம் 100 யோசனைத் தொலைவு இருந்தது. இந்தத் தொலைவை அனுமன் தாவிக் கடந்ததாக இராம காதை கூறும். சரி, யோசனை என்ற தொலைவு இன்றையக் கணக்கில் எவ்வளவு ஆகும்?

பொறிஞர் கொடுமுடி சண்முகம் "பழந்தமிழர் பொறியியல் நுட்பத் திறன்" என்ற ஆய்வுப் பொத்தகத்தில் (படிக்க வேண்டிய இரு பொத்தகங்கள்; மீனா கோபால் பதிப்பகம், மனை எண் 9, புதிய கதவு எண் 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை -88, தொலை பேசி: 22533667)

1 விரல் = =1 3/8 inch = 3.5 cm (3.48958 cm)
6 விரல் = 1 சாண் =8 1/4 inch = 21 cm
2 சாண் = 1 முழம் =16 1/2 inch = 42 cm
2 முழம் = 1 கோல் =33 inch = 84 cm
4 கோல் = 1 தண்டம் =11 ft = 3.35 m
500 தண்டம் = 1 கூப்பீடு= 1 mile 220 ft = 1.675 Km
4 கூப்பீடு = 1 காதம் = 4 mile 1 furlong 220 ft = 6.7 Km
4 காதம் = 1 யோசனை =16 mile 5 furlong 220 ft = 26.82 Km

இந்த அளவீடுகள் கிட்டத்தட்ட சிற்சில மாற்றங்களுடன் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து நாவலந்தீவு எங்கணும் (தமிழகமும் சேர்த்து) இருந்ததாகத்தான் பல ஆவணங்களும் (கௌடில்யரின் அர்த்த சாத்திரம் கூட) சொல்லுகின்றன.

100 யோசனை என்பது 2682 கி.மீ. ஆகும். அதாவது மகேந்திர மலையில் இருந்து இலங்கை நகரம் 2682 கி.மீ தொலைவில் இருக்க வேண்டும். சரி கம்பன் காதத்திற்கு மாறாக யோசனை என்று தவறாகச் சொல்லிவிட்டான் என்றால் 670 கி.மீ. தொலைவில் இலங்கை இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றாகக் கம்பனின் அறிவைக் குறைசொல்லி நாம் குறைத்துக் கணக்கிட்டுக் கொண்டே போகலாம்.

எப்படி முட்டிப் பார்த்தாலும், இன்றைய இலங்கை பற்றிய கணக்கே ஒட்டிவராது. வால்மீகியோ, கம்பரோ தாங்கள் என்ன சொல்கிறோம் என்று தெரியாதவர்களா?

அடுத்த செய்திகளுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.