Wednesday, June 30, 2021

முதல்வராய் நானிருந்தால் - 2

இய்யதாகு முதலமைச்சன்


அரசொன்றில் முதலமைச்சாய் ஆவதெனில் எளிதாமோ?

அரசியலில் மற்றவரை அழிக்காமல் ஆளாமோ?

ஆளுவதும் பொருதுவதும் அடுத்தடுத்த நடைமுறைகள்;

நீளனைத்தும் செய்தபின்தான் நெடுங்கட்சித் தலையானேன்;

பார்ப்பதற்கோ நான்எளிமை; பலக்குறுத்தல்(1) அடிப்புறத்தில்;

வேர்த்துவிட மற்றவரை விரட்டுவதில் மேலாளன்;

தடந்தகை(2)யும், வழிதகை(3)யும், தரவுகளின் செயல்தகை(4)யும்

உடன்தெரிந்து உழுவதிலோ உள்ளார்ந்த கோடலன்(5)நான்;

எனைமிகுத்து எவனுமிங்கே அதிகாரி, அமைச்சனிலை;

எனைத்தவிர்த்து எவனுமிங்கே எழுந்திருக்க முடியாது;

எனைவிடுத்து ஒருபயலும் இடைநுழைந்து செயலாற்றான்;

எனைவிடுத்த எல்லோரும் தொண்டரெனப் படுவார்கள்;

இந்தநிலை கொண்டபின்தான் இந்நிலத்தில் முதலமைச்சாய்

எந்தவொரு தலைவனுமே இருந்திடுவான் இயல்பாக!

நானென்ன விதிவிலக்கா? நான்சிங்கச் சொப்பனம்தான்;

நான்விழிக்க மறந்தாலோ, நட்டாற்றில் கவிழுதற்கு,

இரண்டே நுணுத்தம்(6)தான்; இப்புலத்தில் இதுநியதி;

அரண்டுவதும் அரட்டுவதும் அன்றாடம் செய்பணிகள்;

அரசியலில் இதுவெல்லாம் அமைவதுதான் விளையாட்டு;

அரசியலில் அதனால்தான் அத்தனைபேர் நுழைகின்றார்;

முதலமைச்சாய் ஆனமுதல், மும்முனைப்பாய் வரும்தேர்தல்

விதப்புகளில் வென்றிடவே வினைகின்ற பரபரப்பை,

நானுலகில் இருக்குமட்டும் நாளும்தான் மறப்பேனோ?

நானிலத்தில் நல்லரசை நாடுவதும் அப்புறம்தான்;

இத்தனையும் சொன்னதனால் இவன்”தன்னைப் பேணி”யென

வித்தகமாய் நினைப்பீர்கள்; இருந்தாலும் வெள்ளந்தி

நிலையாளன் நானல்லன்; நீளுலகில் தற்பேணல்

குலையாது கொள்ளுவதும் குமுகத்தில் தவறாமோ?

சொந்தநலம் பார்ப்பவனும், சூழ்தேர்வில் வெல்லுதற்காய்,

அந்தந்தப் போதுகளில் அளவாகச் செய்வதுதான்;

குமுகத்தில் ”அதுநலமா? கொள்கேடா?” எனக்கேட்டால்,

"அமைவதெலாம் ஊழ்வினையால் ஆழ்த்துவந்து உருட்டாதோ?"

"அரசியலில் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆகாதோ?"

அரசியலின் அடிப்படையே இதுவறிந்த பின்னேதான்

"கல்லென்ற நெஞ்சமிது கனியாது" எனநீவீர்

சொல்லிடவே எழுந்தாலும் சொல்லுவது என்கடமை;

நான்கடுசு; இருந்தாலும் நான்மனிதன்; எனக்குள்ளும்

தேன்சுரக்கும்; சிலபோது திருவினைகள் செய்வேன்தான்;

நீர்வளமா? வேளாண்மை? மரம்வளர்ப்பா? கட்டுமானச்

சீரமைப்பா? செழுங்கல்வி? மருத்துவமா? சிறுசிறிதாய்

அரசினுடை நிர்வாக அமைப்புச்சீர் நடவடிக்கை?

உரசிவிட என்தடங்கள் ஊன்றிடுவேன்; வியந்தீரோ?

இப்படியாய் இருகலவை இயன்றவன்தான் முதலமைச்சன்;

தப்படியைப் போடாமல், தடுமாற்றம் அடையாமல்

செப்புவது ஐந்தாண்டில் செய்யநினைக் கும்செயல்கள்;

இப்புலத்தில் இவைசெய்தால் எம்பருவம் பத்தாண்டு.


அன்புடன்,

இராம.கி.


1. பலக்குறுத்தல் = complication

2. தடந்தகை = strategy

3. வழிதகை = tactics

4. செயல்தகை = operationality

5. கோடலன்>கௌடில்யன் = சாணக்கியன்

6. நுணுத்தம் = minute


No comments: